Monday, June 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 478

நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !

4

(வினவு இணைய தளத்தில் வெளியான ”நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய காணொளி உரை சுருக்கமாக வெளியிடப்படுகிறது.)

ருவேளை அனிதா தற்கொலை செய்யாமல் உயிரோடு இருந்து, ஏதாவது தொலைக்காட்சி நிலையத்துக்கு விவாதத்துக்கு வந்திருந்தால், என்ன நடந்திருக்கும். ”1176 மார்க் வாங்கிய நீ, நீட் தேர்வில் பாஸ் செய்யவில்லை என்பதால், அந்த மார்க் எப்படி வாங்கினாய் என்பதே சந்தேகமாக இருக்கிறது. நீ அன்ஃபிட்” என்று பேசி இருப்பார்கள்.

இப்படிப்பட்ட கொலைகாரர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் உட்கார வைத்துத்தான் தொலைக்காட்சியில் விவாதம் நடத்துகிறார்கள். நீட் ஒரு தவிர்க்க இயலாத எதார்த்தம் என்ற கருத்தைத் திட்டமிட்டு பரப்புகிறார்கள். திணிக்கப்படுவதையெல்லாம் ஏற்றுக் கொள்வதென்றால், காவிரி முதல் இந்தி வரை அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று அனிதாவுக்காக வாதாடுகிறவர்கள், நிர்மலா சீதாராமன் இப்படி ஏமாற்றிவிட்டாரே என்கிறார்கள். முதல்முறையாகவா ஏமாற்றுகிறார்கள்? காவேரி பிரச்சனையில், பணமதிப்பழிப்பில், பாபர் மசூதி இடிப்பில், ஆதார் வழக்கில் எல்லாவற்றிலும் இதைத்தான் செய்தார்கள்.

இந்தத் தேர்வைத் திணிப்பதற்கு இவர்கள் கையாண்ட முறையே இவர்களுடைய தீய உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறது. மோடி அரசு மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் ஒரு வழிமுறையை முன்வைக்குமாறு தமிழக அரசிடம் கூறியது. ஆனால், அடுத்த விசாரணையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் சலுகை காட்டமுடியாது  என்று மாற்றிப் பேசியது. இதை, ஏன் என்று கூடக் கேட்கவில்லை எடப்பாடி அரசு. இவர்களெல்லாம் சேர்ந்துதான் அனிதாவை நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறார்கள்.

ஆரம்பம் முதலே இதில் நடப்பது முறைகேடு மட்டும்தான். ஐ.மு.கூ. அரசு கொண்டு வந்த நீட் தேர்வை அல் தாமஸ் கபீர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு நிராகரித்தது. அதை எதிர்த்த சீராய்வு மனுவை மோடி அரசு தீவிரமாக நடத்தியது. அல் தாமஸ் கபீரின் அமர்வில், நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர் தவே என்ற நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.

அந்த அமர்வு, முந்தைய தீர்ப்பு தவறானது என்றும் அதனைத் திரும்ப விசாரிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. விசாரிக்க வேண்டும் என்றாலும், அப்படி விசாரித்து முடிக்கும் வரை முந்தைய தீர்ப்புதான் அமலில் இருந்திருக்க வேண்டும். ஆனால், இடைக்காலமாக என்று சொல்லி நீட்டைத் திணிக்கிறது தவே தலைமையிலான அமர்வு.

இது அப்பட்டமான சட்டவிரோதம். பாபர் மசூதி விசயத்திலும் இப்படித்தான் நடந்தது. மசூதிக்குள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டிருந்தது. மசூதியை இடித்துச் சிலையை வைத்து ஒரு கொட்டகை போட்டு, அதுதான் கோயில் என்றார்கள். அதில் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதிக்கிறது.

பிறகு அந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்று இந்துக்கள் நம்புவதால், மசூதியில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறுகிறது. பாபர் மசூதி இடிப்பில் இசுலாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்னவோ, அதுதான் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இழைக்கப் பட்டிருக்கிறது.

நோக்கம் கேடு, அமலாக்கம் முறைகேடு

நீட் தேர்வென்பது தவிர்க்க இயலாததென்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகு, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சார்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. நாங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து வந்திருக்கிறோம். சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாள் கேட்டால் எங்களால் எப்படி எழுத முடியும் என்றும் அனிதாவைப் போல, அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்கு மதிப்பே கிடையாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த இரண்டு கேள்விகளின் நியாயத்தையும் ஏற்றுக்கொண்ட மதுரை உயர் நீதிமன்றம் சி.பி.எஸ்.சி.யும் மத்திய அரசும் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுகிறது. இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை கோருகிறது சி.பி.எஸ்.இ. மேற்கண்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்லாமலேயே மதுரை நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறது உச்ச நீதிமன்றம். தடை விதித்தது மட்டுமல்ல. இனி நீட் தொடர்பாக என்னைத் தவிர யாரும் விசாரிக்கக் கூடாது என்று சட்டவிரோதமாக உத்தரவும் போடுகிறது.

நீதிமன்றத்தின் இந்த முறைகேட்டை மத்திய அரசோ, மாநில அரசோ கேள்விக்குள்ளாக்கவில்லை. இதற்கு விளக்கம் கேட்டால், இந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ”எங்களை ஏன் விமரிசிக்கிறீர்கள், உச்ச நீதிமன்றத்தை விமரிசிக்க வேண்டியதுதானே” என்கிறார்கள் பா.ஜ.க. வினர். நாம் உச்ச நீதிமன்றத்தையும்தான் விமரிசிக்கிறோம். உடனே, உச்ச நீதிமன்றத்தையே விமரிசிக்கிறான், தேசத்துரோகி என்பார்கள்.

இவர்கள் எல்லா முறைகேடுகளையும் செய்வார்கள். அந்த முறைகேடுகளைப் பற்றி கேள்வி எழுப்பினால், உடனே தேசத்துரோகி  என்பார்கள். இதுதான் காஷ்மீரில் நடந்தது. குறைந்தது 10 காஷ்மீரையாவது இந்தியாவில் உருவாக்காமல் இவர்கள் ஓயப்போவதில்லை.

நீட் எதற்காக வந்தது தெரியுமா?

அனிதாவின் மரணத்தை பற்றி பேசும் போது,  இந்த நீட் என்ற தேர்வு எதற்காக வந்தது என்ற பின்புலத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுங்காகப் படித்து மதிப்பெண் பெறாத,  தகுதி இல்லாத பணக்கார மாணவர்கள் லட்சம், கோடி என்று பணம் கொடுத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் ஆகி விடுகிறார்கள். சுயநிதிக் கல்லூரிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதனால் மருத்துவர்களின் தரம் வீழ்கிறது. அதைக் காப்பாற்றுவதற்கு  இப்படி ஒரு தேர்வு தேவை என்று சொல்லித்தான் இது அறிமுகப் படுத்தப்பட்டது.

கொசுவை ஒழிக்க வேண்டும் என்றால், சாக்கடையை ஒழித்திருக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மெடிக்கல் சீட்டை விற்பதற்கு ஒரு தனியார் கல்லூரி இருப்பதால்தானே பணக்காரன் அதை வாங்க முடிகிறது. அதைத் தடுப்பதற்கு மருத்துவக் கல்லூரிகள் தனியாரிடம் இருக்க கூடாது என்று முடிவு எடுத்திருக்கலாமே.

தனியார்மயக் கொள்கை வந்த பிறகுதான் தனியார் மருத்துவக் கல்லூரி வந்தது. அரசு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இருப்பதால் தகுதி இல்லாதவ மருத்துவர் கூட்டம் அதிகமாகிவிட்டது. தரமானவர்கள் வருவதற்கான வாய்ப்பை இந்தத் தனியார் கல்லூரிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லி, தரம் என்ற பெயரில்தான் தனியார் மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினார்கள். ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில் யோக்கியதை என்ன?

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகள் பாழுங்கிணற்றில் செத்துக் கிடந்தார்கள். மருத்துவராகவும் நோயாளியாகவும் மாணவர்களையே நடிக்க வைத்து, அங்கீகாரம் வாங்கியிருக்கிறது அந்த கல்லூரி நிர்வாகம். எம்.ஜி.ஆர். மருத்தவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க. அமைச்சர்கள்தான் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள்.

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் கேதன் தேசாயின் அறையிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் 1500 கோடி ரூபாய் பணமும் சில நூறு கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. எதற்காக அந்தப் பணம் அவருக்கு கிடைத்தது? எஸ்.வி.எஸ். கல்லூரி மாதிரி இந்தியா முழுவதும் இருக்கின்ற தகுதி இல்லாத, தரம் இல்லாத, அடிப்படைக் கட்டுமானம் இல்லாத, வாத்தியார் இல்லாத, கேவலமான தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கியதில்தான் அந்தக் காசு வந்தது. அவர் மீது சி.பி.ஐ. வழக்கு இருக்கிறது. ஆனால், என்ன நடந்தது? அவர் குஜராத் மருத்துவ கவுன்சிலின் தலைவராக, மோடி முதல்வராக இருந்த காலத்தில் 2013 – 2014 நியமிக்கப்பட்டர். பிறகு, குஜாராத் மருத்துவ கவுன்சில் அவரை அகில உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்தது.

இதுதான் இவர்களின் யோக்கியதை. இவர்கள் தரம் பற்றிப் பேசுகிறார்கள். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை கேதன் தேசாய், மோடி, கீதாலட்சுமி, விஜயபாஸ்கர் ஆகியோரை வெளியேற்றுவதிலிருந்து அல்லவா தொடங்க வேண்டும். இவர்களோ அனிதாவிற்கு மரண சீட் கொடுப்பதில் இருந்து தொடங்குகிறார்கள்.

மாணவன் தகுதியாக இல்லை என்பது பிரச்சனையே இல்லை. உங்களுடைய அமைப்பு,  அதிகாரிகள் – நீங்கள்தான் தரம் அற்றவர்கள். தகுதி அற்றவர்கள்.  எங்கள் பிள்ளைகளுக்குத் தகுதி இருக்கிறதா என்று பேசக்கூட அருகதை இல்லாதவர்கள் நீங்கள். பணக்காரர்களை ஒழுங்குபடுத்துகின்றேன் என்று தொடங்கிய இந்த சதித்திட்டம், ஏழை அனிதாக்களை வெளியேற்றுவதில் வந்து முடிந்து இருக்கிறது . காஸ் மானிய ஒழிப்பும் இப்படித்தான் நடக்கிறது. ஒப்பிட்டுப் பாருங்கள்.

தரமான மருத்துவம் – யாருக்கு?

மருத்துவத்தினுடைய தரத்தை உயர்த்த வேண்டும்  என்கிறார்கள். இது யாருடைய பிரச்சனை? நோயாளிகளின் பிரச்சனை. எங்களுக்கு நீட் தேர்வில் பாஸ் பண்ணிய தரமான மருத்துவர் வேண்டும் என்று நோயாளிகள் கேட்டார்களா?

அரசு மருத்துவமனைகளே இல்லை, இருந்தாலும் அங்கே மருத்துவர்கள் இல்லை என்பதுதான் மக்கள் சந்திக்கும் பிரச்சினை. இருக்கிற மருத்துவமனைகளையும் தனியார்மயம் ஆக்க வேண்டும் என்று கூறுகிறது மோடி அரசு. இன்சூரன்ஸ் இல்லாதவனுக்கு மருத்துவம் இல்லை என்பது தான் இந்த அரசாங்கத்தின் கொள்கை. அப்படியானால், யாருக்காக  இவர்கள் தரமான மருத்துவர்களை உருவாக்குகிறார்கள்?

அனிதா படித்து முடித்து டாக்டரானால், தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன் உண்டு. இன்று நீட் தேர்வு எழுதி சீட் கிடைத்து இருப்பவர்களால் மக்களுக்கு என்ன பயன்? இவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு போகலாமா,  அல்லது அமெரிக்கவிற்கு விமானம் ஏறலாமா என்று பார்ப்பார்கள். இதுதான் அவர்கள் நோக்கம். மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமென்ற நோக்கம் கிடையாது. இந்த மருத்துவ அமைப்பே அப்படி இல்லை. அதனால் தரம் என்பது வெற்றுப் பேச்சு.

தரமான மருத்துவமனை என்று சொல்லப்படுகின்ற கார்ப்ரேட் மருத்துவமனைகள் எப்படி நடக்கின்றன? ஒரு மருத்துவமனையில் உள்ள நியூராலாஜி, கார்டியாலஜி போன்ற துறைகள் தனித்தனியே ஏலம் விடப்படுகின்றன. பஸ்ஸ்டாண்டு கக்கூஸ் மாதிரி இவற்றை ஏலம் எடுக்கும் டாக்டர்கள், ஏலத்தொகையை கார்ப்பரேட் மருத்துவமனைக்குக் கட்டிவிட்டு,  அதற்கு மேல் சம்பாதிப்பதற்கு நோயாளிகளிடம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள். ஏழைகளை விடுங்கள், காசு கொடுத்தும் தரமான மருத்துவம் இல்லை என்று பணக்கார்களே புலம்பவில்லையா? ஐ.சி.யு.வில் பிணத்தை வைத்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் சந்தி சிரிக்கவில்லையா?

இவர்கள் உருவாக்கியிருக்கும் அமைப்பு, இவர்களுக்கே பயன்படாத அளவுக்கு, இவர்களாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இருப்பதால்தான் தரம் என்ற ஒன்று இன்னமும் இங்கே இருக்கிறது. சமூக அக்கறை உள்ள மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், இந்த நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார்கள். இந்த நீட் தேர்வுதான் விதியென்று ஆகி விட்டால், சமூக அக்கறை உள்ள மனிதர்கள் யாரும் மருத்துவத் துறையில் இருக்க மாட்டார்கள்.

அதனால்,  தர நிர்ணயம் என்பதை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம். அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அதைப் பேசும் அருகதை உனக்கு இல்லை என்று நாம் சொல்ல வேண்டும். இவர்கள் சொல்லும் வழிமுறையின் மூலமாக எந்த நாடும் மருத்துவ துறையின் உச்சத்தை எட்டியது இல்லை.

அமெரிக்காவுக்குப் பக்கத்தில இருக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. அது இன்று உலக அளவில் சுகாதாரத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடு.  அமெரிக்காவில் அறிவியல் முன்னேறி இருக்கலாம். ஆனால், அமெரிக்க ஏழைகள் கியுபாவில் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ள அலைகிறார்கள். கியூபாதான் மருத்துவத்தில் உயர்ந்து நிற்கின்றது. திறமையிலும் அதுதான் உயர்ந்து நிற்கின்றது. ஆகவே நீட் தேர்வை எதிர்க்கும் நாம் இயல்பாகவே மக்கள் பக்கம் நிற்க வேண்டும்.

நீதிபதிகளின் தரத்துக்கு நீட் உண்டா?

மருத்துவத்தின் தரம் பற்றி நீதிமன்றம் பெரிதும் கவலைப்படுகிற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தரம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? காட்டாமணக்கை அகற்றுவது,  திரையங்கில் ஜனகணமன பாடினால் எழுந்து நிற்பது முதல் நீட் தேர்வு வரை அனைத்தையும் முடிவு செய்யும் இவர்களுடைய தகுதி எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தேர்வு இருக்கிறது. இப்போது அந்தத் தேர்வையும் நீட் மாதிரி ஒரு தேசியத் தேர்வு ஆக்குகிறார்கள். அதில் நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்ணாம். இது ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நீதிபதியாக்கும் ஏற்பாடு. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகளின் குழுவால் முடிவு செய்யப்படுகின்றர்கள்.  அவர்களுடைய  தரத்தை எங்கே விசாரிப்பது?

சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சிவில், கிரிமினல் சட்டம் தெரியாது. சர்வீஸ் லா மட்டும்தான் தெரியும் என்று அவரே சொல்லியிருக்கிறார் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் ராஜிவ் தவான் என்ற மூத்த வழக்கறிஞர். நீதிபதிகளின் திறமை, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யார் பரிசீலிப்பது? குமாரசாமி, தத்து போன்றோர் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. கெஹெரின் மகன் இலஞ்சம் கேட்டதாக அருணாசால பிரதேச முதல்வர் கலிகோ புல் தனது தற்கொலை கடித்தில் எழுதி உள்ளாராம்.

இவர்களெல்லாம் சேர்ந்து அனிதாவிற்குத் தரம் நிர்ணயிக்கிறார்களா?  ம.பி. மாநிலத்தின் வியாபம் ஊழல் ஒரு பெரிய கிரிமினல் துப்பறியும் நாவல் மாதிரி போகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் வரிசையாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த பா.ஜ.க. அரசு தரம் பற்றிப் பேசுவதா?

அனைத்திந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் என்பதால், அதைக் கண்காணிக்க  நீதிமன்றம் ஒரு கமிட்டி போட்டது. அதன் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா. மெடிகல் கவுன்சிலால் தரமற்றவை என்று அனுமதி மறுக்கப்பட்ட 26 மருத்துவக் கல்லூரிகளுக்கு அவர் லைசன்ஸ் கொடுக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி, துணை நடிகர்களையே டாக்டராகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து அங்கீகாரம் கேட்டது. இதை ஊழல் மருத்துவ கவுன்சிலாலேயே பொறுக்க முடியாமல் அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், இத்தகைய மோசடி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

நாமக்கல் கொள்ளைக்குப் பதில் நீட் கொள்ளை

மேற்கண்ட பிரச்சினைகளையெல்லாம் நீட் தேர்வு தீர்த்து விடுமா? நீட் தேர்வு தரத்தைக் கொண்டு வரவில்லை. கட்டணக் கொள்ளையைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கின்றது. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரியில் 5 லட்சம் என்பது அரசு நிர்ணயித்த கட்டணம். அதை  11 லட்சமாக ஆக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்திற்குப் போனால், 11 லட்சம் கட்டு என்று சொல்கின்றது உச்ச நீதிமன்றம்.  நாடு முழுவதும் ஒரே தரத்தை கொண்டு வருகிறார்களாம். ஆனால், ஒரே கட்டணம் கிடையாதாம்.

தனியார் கல்லூரிகளின் கட்டணத்தில் அரசு தலையீடு இருக்கக்கூடாது என்பது மோடி உருவாக்கிய நிதி ஆயோக்கின் முக்கியமான பரிந்துரை. தனியார் கொள்ளைக்கு வசதி செய்து கொடுப்பதுதான் இவர்கள் நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.டி. யில் சேருவதற்கு இட்ஜீ (IIT – JEE) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அது ஆண்டுக்கு 24.000 கோடி புரளும் தொழில். இனி ஒவ்வொரு துறைக்கும் இவர்கள் கொண்டுவரக் கூடிய நுழைவுத் தேர்வுகளில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் புழங்க போகின்றது.  இது புதியதொரு தனியார் கொள்ளை.

நீட்டுக்கு முன்னால் இருந்தது நாமக்கல் கறிக்கோழிப் பள்ளி. அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தயார் செய்தார்கள். இந்த நீட் பயிற்சிப் பள்ளிகளில் ஸ்டிராய்டு ஊசி போட்டு, அதைவிடக் குறுகிய காலத்தில் பயில்வான்களைத் தயார் செய்வதாக கூறுகிறார்கள். இது நாமக்கல்லைவிட மோசமானது. நுழைவு தேர்வு என்பதே அறிவியல் பூர்வமானதல்ல.  உண்மையில் அதுதான் தரத்தை அழிக்கக்கூடியது.

மணற்கொள்ளை போல இது மருத்துவக் கொள்ளை

இவர்கள் தமிழ்நாட்டை ஏன் வட்டமிடுகிறார்கள்?  தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. தவிர, அண்ணாமலை பல்கலைக்கழக கல்லூரி.  மோடியின் குஜராத்தில் மொத்தமே 6 அரசு மருத்துவக் கல்லூரிகள்தான்.  தமிழகம் போல அரசு மருத்துவக் கல்லூரிகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.   சிறப்பு மருத்துவர்களை உருவாக்கும் உயர்கல்விக்கான இடங்களும் இங்கு தான் அதிகம் உள்ளன.  இவையனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம்.  மணல் கொள்ளையைப் போன்ற இந்த மருத்துவக் கொள்ளையை நடத்துவதற்கான கொல்லைப்புற வழிதான் நீட்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 35ஏ-வின்படி காஷ்மீரில் பிறக்காத யாரும் அங்கு சொத்து வாங்க முடியாது. இந்தத் தடையை  நீக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் சொத்து வாங்க முடியவில்லை என்பது யார் பிரச்சினை?. அதானி, அம்பானிகளின் பிரச்சினை. அதுபோலத்தான் இதுவும். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையைக் கொள்ளை அடிக்கத்தான் இந்த ஏற்பாடு.  எல்லா நாடுகளிலும் சொத்து வாங்குவதற்காக உலகமயம், உலகத்தரம் என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள். தமிழகம் போன்ற மாநிலங்களைக்  கொள்ளையிடுவதற்காக இவர்கள் தேசியம், தேசியத் தரம் பேசுகிறார்கள். இதுதான் நீட் ரகசியம்.

அனிதா ஏன் மருத்துவராக வேண்டும்?

மருத்துவர்களிடம் மக்களாகிய நாம்  எதிர்பார்ப்பது என்ன? தரமா?  ரஜினிகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் தரமான வைத்தியம் கிடைப்பதற்கா  நம் வரிப்பணத்தில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டிருக்கின்றன?  நமக்குத் தேவை மக்களுக்குத் தொண்டாற்றும்  மருத்துவர்கள் .

”நீட்”டுக்கு முன்னால் அரியலூர் மாவட்டத்திலிருந்து 15 பேர் மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள்,  நீட் வந்த பிறகு ஒருவர்கூட இல்லை என்கிறார் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கரன்.  நாம்  சேவையை அளவுகோலாக வைத்தால், அனிதாவைப் போல நூற்றுக்கணக்கானவர்களை மருத்துவர்களாக்கலாம்.  அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் இடம் என்று ஏன் சட்டம் இயற்றக் கூடாது? மக்கள் வரிப்பணத்தில் நாம் உருவாக்கும் டாக்டர் அமெரிக்காவுக்குப் போவதை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?

தரம் வேறு, சேவை மனப்பான்மை வேறு கிடையாது. காசு, காசு என்று அலைபவன் எந்த நாட்டிலும் சிறந்த விஞ்ஞானியாக இருந்ததில்லை.அரசு மருத்துவமனைகளில் பல அரிதான அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. பணத்தாகம் கொண்டவன் அரசு மருத்துவமனையில் அத்தனை அரிய முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு அறிவியல் தாகம் வேண்டும். சேவை மனப்பான்மை வேண்டும்.

நாம் ஏன் அனிதா மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறோம் ? அவள் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்.  மக்களின் துன்ப துயரங்களை நெருக்கமாக அனுபவித்து அறிந்தவள். அவள் மருத்துவரானால் அப்பகுதி மக்களுக்கு சேவை செய்வாள். இப்படிப்பட்டவர்கள் மருத்துவராகும்போதுதான் பின் தங்கிய மாவட்டங்களில் மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கும்.

இது மெடிக்கல் சீட் கிடைக்காத ஒரு சிறுமியின் பிரச்சினை மட்டுமல்ல.  பல கோடி மக்களின் மருத்துவம் பற்றிய பிரச்சனை. அம்மக்களை மருத்துவ  சேவையே கிடைக்காமல் வெளியேற்றுவது பற்றிய பிரச்சனை.

பணிய மறுப்போம்

அனிதாவின் தற்கொலைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த அநீதியைச் சகித்துக்கொண்டு அவளால் வாழ முடியவில்லை என்பதுதான்  அந்த அர்த்தம். சகித்துக்கொண்டு வாழ்வதற்கு சமீபத்திய உதாரணம் தேரா சச்சா சௌதா.

வல்லுறவு குற்றத்துக்காக 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ராம்ரகீம் சாமியாரைப் பற்றிய புகார் 2002-இலேயே வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இரண்டே பேர்தான் தைரியமாக வெளியே சொல்வதற்கு முன்வந்தார்கள், மற்ற பெண்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாகப் பாலியல் வல்லுறவை சகித்துக் கொண்டுதான் வாழ்ந்திருக்கிறார்கள்.

நீட் என்பது அப்படி ஒரு வன்முறைதான்! பிற மாநில மக்கள் இதன் பரிமாணம் புரியாமல் இருக்கிறார்கள். பண மதிப்பழிப்பு, மாடு விற்கத்தடை, மாட்டுக்கறி உண்ணத்தடை, இந்தி திணிப்பு,  ஜி.எஸ்.டி. ஆகிய அனைத்தும்  நீட் போன்ற நடவடிக்கைகள்தான். இப்படி வன்முறை மூலம் அச்சுறுத்தி நம்மைப் பணிய வைக்க முடியும் என்று மோடி அரசு கருதுகிறது.

அந்தப் பெண்களை நினைத்தபடியெல்லாம் அடக்கியாள முடியும் என்று ராம் ரகீம் எண்ணியதைப் போலத்தான் மோடி அரசும் நம்மைப் பற்றி எண்ணுகிறது. தமிழக மக்கள் அ.தி.மு.க. வினரைப் போன்ற சுயமரியாதையற்ற புழுக்கள் அல்ல என்பதைக் காட்டவேண்டும்.

குஜராத் மாடல் என்று சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். அந்த குஜராத் மாடல் என்ன?  அரசுக் கல்வி, அரசு மருத்துவம் கிடையாது என்பதும், எல்லாம் தனியார்மயம் என்பதும் உனாவிலே தலித்துகளைப் பகிரங்கமாகக் கட்டி வைத்து அடித்த பார்ப்பன பாசிச வன்முறையும்தான் குஜராத் மாடல்.

அந்த குஜராத் மாடலுக்கு எதிரானதுதான்  தமிழ்நாட்டு மாடல். குஜராத் இந்துத்துவத்தின் சோதனைச்சாலை என்றால், தமிழகம் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்துக்கும்  சோதனைச் சாலை.

எல்லா பாளையக்காரர்களும் அடிபணிந்த பிறகும்,  பணிய மறுத்த கட்டபொம்மனை நினைவுபடுத்துகிறாள் அனிதா.  தூக்குமேடையை நோக்கி நடந்து சென்ற கட்டபொம்மனின் கண்களில் எள்ளளவும் அச்சமில்லையென்றும், இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களை இகழ்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்தபடி அவன் நடந்து சென்றதாகவும் எழுதுகிறான்,  தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஆங்கிலேய அதிகாரி.

அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள்.  அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.

அது தூக்கு தண்டனை, இது தற்கொலை என்பது உண்மைதான். எனினும், சுயமரியாதையுள்ள இருவரும் நமக்கு விடுக்கும் செய்தியென்னவோ, ஒன்றுதான்.

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.
_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பாஜகவின் பதவி வெறி: இளம் பத்திரிக்கையாளர் சந்தனு படுகொலை !

0

28 வயதான இளம் பத்திரிக்கையாளர் சந்தனு பெளமிக், போலீசுக்கும், ஐ.பி.எஃப்.டி(IPFT – Indigenous People’s Front of Tripura) என்ற பிரிவினைவாதக் கட்சிக்கும் இடையே நடந்த மோதல் காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டிருந்த போது ஐ.பி.எஃப்.டி யைச் சேர்ந்தவர்களால் அடித்தே கொல்லப்பட்டார்.

சந்தனு பெளமிக் கொல்லப்பட்டத்தைக் கண்டித்து நடைப்பெற்ற போராட்டம்

சி.பி.எம் கட்சி ஆளும் மாநிலமான திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவின் புறநகர்ப்பகுதியான மண்டாய் என்ற இடத்தில் 20.09.2017 அன்று சாலையைத் தடுத்து போராட்டம் நடத்திய ஐ.பி.எஃப்.டி கட்சியினரின் மீது போலீசு தாக்குதலைக் கட்டவிழ்த்து விட, இரு தரப்புக்கும் மோதல் தீவிரமானதை சந்தனு படம்பிடித்துக் கொண்டிருந்த போது தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பெங்களூரில் இந்துத்துவா தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கெளரி லங்கேஷ் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்இரண்டு வாரம் கழித்து பத்திரிக்கையாளர் சந்தானு பெளம்விக்-கும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் 180 நாடுகளில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் பின்தங்கி உள்ளது. மோடியின் அரசு 2014-ம் ஆண்டில் பதவியேற்ற பிறகு 2015-ம் ஆண்டில் ஆசிய நாடுகளில் பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. மேலும் 2018-ல் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு இது போன்ற கலவரங்களும், கொலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்பது பாஜக-வின் மனக்கணக்கு.

1996-ல் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற பிரிவினைக் கட்சி தடை செய்யப்பட்டு அதன் உறுப்பினர்கள் காவல்துறையால் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளானார்கள். அப்போது ஆரம்பிக்கப்பட்டதுதான் ஐ.பி.எஃப்.டி கட்சி. திரிபுரா பழங்குடியினருக்கான நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி நான்கு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற மாவட்ட அளவிலான கவுன்சில் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றது.

ஐ.பி.எஃப்.டி தனி மாநிலம் கேட்டு நடத்திய போராட்டம்

ஒரு வருடம் கழித்து ஐ.பி.எஃப்.டி, டி.என்.வி(TNV-Tripura National Volunteers) என்ற கட்சியுடன் சேர்ந்து ஐ.என்.பி.டி (INPT-Indigenous Nationalist Party of Tripura ) என்ற கட்சியாக மாறியது.

ஐ.என்.பி.டி 2003, 2008 தேர்தல்களில் மிக மோசமான தோல்வியைத் தழுவியதால் மீண்டும் கட்சி உடைந்து மறுபடியும் ஐ.பி.எஃப்.டி உருவாகியது. 2016-ல் இருந்து இது மீண்டும் பெரிய கட்சியாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலையொட்டி பெங்காலிகளுக்கும், பழங்குடியினருக்கும் இடையே உருவாக்கப்பட்ட மோதல்களில் 30 நபர்கள் பலத்த காயமடைந்தது மட்டுமன்றி 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பாஜக-வின் ஆதரவோடு இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஐ.பி.எஃப்.டி இந்தத் தேர்தலில் சி.பி.எம் கட்சிக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவாகியுள்ளது.

அப்பாவிப் பழங்குடியினரிடம் இனவெறியைத் தூண்டுவதன் மூலம் கூட்டணிக் கட்சியான ஐ.பி.எஃப்.டி-யை வெற்றிபெற வைத்து ஆட்சியில் இடம்பிடிப்பது; பின்னர் மெல்ல மெல்ல காவி வெறியைத் திணித்து இந்துத்துவ ஆட்சியை அமைப்பது என்பது தான் பாஜகவின் எளிய தந்திரம். இதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் காவிக் கும்பலுக்கு சந்தனு பௌமிக்கின் மரணமெல்லாம் ஒரு பொருட்டல்ல.

மேலும் படிக்க:
In Tripura, why the IPFT is crucial for the BJP?
Political reporter beaten to death in north-east India

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !

4

குஜராத்தில் மோடி ஆட்சியின் போது நடந்த மதவெறியாட்டத்தின் ஒரு பகுதியாக 567 மசூதிகள், தர்காக்கள், பிற இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இடிக்கப்பட்ட இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் இருந்த இடத்தில் அவசர கதியில் சாலைகள் போடப்பட்டன; பல இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன.

17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதல் உருது கஜல் கவிஞர் வாலி குஜராத்தியின் நினைவுச் சின்னம் மத வெறி கும்பல்களால் இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் இரவோடு இரவாகத் தார் சாலை போடப்பட்டு விட்டது. ”அப்படி ஒரு தர்கா இருந்ததாக வருவாய்த்துறை பதிவே இல்லை” என்று மோடியின் குஜராத் அரசு சொல்லி விட்டது.

”இவ்வாறு இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களைச் செப்பனிட்டு, புதுப்பித்துப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு குஜராத் அரசு பொறுப்பேற்க வேண்டும்” என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கோத்ரா சம்பவத்தின் எதிர்வினையாக, துரதிருஷ்டவசமாக நடைபெற்ற சம்பவங்கள் என்று குஜராத் இனப்படுகொலையையும் மசூதிகள் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களையும் வியாக்கியானம் செய்தது மட்டுமின்றி, இவ்வாறு ஒரு மதத்தினை ஊக்குவிப்பதற்காக மட்டும் அரசுப்பணத்தைச் செலவிடுவது மதச்சார்பின்மைக்கு விரோதமாகும் என்றும் வக்கிரமாக வாதிட்டது, குஜராத் அரசு.

”மோடி அரசு கூறுவதைப் போல, துரதிருஷ்டவசமான சம்பவங்களாகவே அவை இருந்தாலும், தனது கடமையிலிருந்து தவறியதை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது” என்று கூறிய குஜராத் உயர் நீதிமன்றம், ”இடிக்கப்பட்ட மசூதிகள், தர்காக்கள், கல்லறைகள் பற்றிய விரிவான கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகளைச் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து, அவற்றைச் செப்பனிட அல்லது புதுப்பிக்க ஆகும் செலவைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்க வேண்டும்” என்று 2012 பிப்ரவரி மாதம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு இடைக்காலத் தடை பெறுவதற்கு மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அப்போது தீபக் மிஸ்ரா, ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு தடை விதிக்க மறுத்ததுடன், ”வெள்ளம் வந்து வீடு அழிந்தால் நிவாரணம் தருகிறீர்களே, இதற்கு ஏன் தரக்கூடாது?” என்று கேட்டுத் தடை அளிக்க மறுத்து விட்டது.

அதன் பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த குஜராத் அரசு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைத்தது.

”பொதுநல வழக்கு என்பது பிரிவு 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்குத்தான் பொருந்தும். வழிபாட்டு உரிமை அடிப்படை உரிமைகளில் இல்லை. எனவே, இந்தப் பிரச்சனைக்குப் பொதுநல வழக்கின் அடிப்படையில் பிறப்பித்த உத்தரவு செல்லாது.”

”குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவது, கடைப்பிடிப்பது, பரப்புவது என்ற உரிமையில் குறிப்பிட்ட இடத்திலிருந்து அந்த மதத்தை கடைப்பிடிப்பது, பரப்புவது என்ற உரிமை இல்லை.”

”மத உரிமை என்ற பெயரில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டி வாங்க முடியாது.”

”வழிபாட்டுத் தலங்களைக் கட்டித் தரும்படி அரசுக்குச் சொல்வது மத விஷயங்களுக்காக வரி வசூலிக்கப்படக் கூடாது என்ற அரசியல் சட்டத்தின் பிரிவு 27 -க்கு விரோதமானது.”

இவை அத்துணையும் அயோக்கியத்தனமான, வக்கிரமான வாதங்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்று கூறி, நாட்டை இரத்தக் களறியாக்கிய கும்பல் இப்படி வாதிடுவதற்குக் கூச்சப்படவில்லை. அதுமட்டுமல்ல, அரசு பணத்திலிருந்து அமர்நாத் யாத்திரை பாதையைச் செப்பனிட ரூ 10 கோடி, பல்வேறு முதல் அமைச்சர்கள் மாநில அரசுகள் சார்பாக திருப்பதி கோயிலில் காணிக்கை செலுத்துவது, ராஜஸ்தானில் கோயில்களைப் புதுப்பிக்கவும், பூசாரிகளுக்குப் பயிற்சி வழங்கவும் ரூ 26 கோடி ஒதுக்கீடு, ஆந்திராவில் பூசாரிகளின் நலனுக்காக ரூ 60 கோடி ஒதுக்கீடு, ஹஜ் யாத்திரைக்குப் பணம், மானியம் என எண்ணற்ற மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரசு, நீதிமன்றத்தில் இப்படிப் பேசுவது குறித்து சிறிதும் வெட்கப்படவில்லை.

மனுதாரர்களான பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்கள் சார்பிலான வழக்கறிஞர் கீழ்க்கண்டவாறு இதனை மறுத்துரைத்தார்.

”சமூகத்தின் பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆதிக்க குழு ஒன்று இடிப்பது அவர்களது நிலையை மேலும் பலவீனமாக்குவதாகும். அரசியல் சட்டத்தின் 14, 21, 25, 26 -ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளைத் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது, அவை அனைத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். எனவே, மசூதிகளை இடித்தது அடிப்படை உரிமைகளை மீறுகிறது” என்றும்,

”குஜராத் மாநிலத்தில் ஒட்டு மொத்த சட்ட ஒழுங்கு தோற்றுப் போனதன் விளைவாக வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தவறிய அரசின் மீது நிவாரணத்துக்கான பொறுப்பைச் சுமத்தியது சரியானதுதான்” என்றும்,

”வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்குவது, அந்தக் குற்றச் செயலுக்கான பரிகாரமே தவிர, அரசுத் தரப்பு சொல்வது போல ஒரு குறிப்பிட்ட மதத்தை பரப்புவதற்கான செலவு இல்லை” என்றும்,

”பல நபர்களின் பொதுச் சொத்துக்கு விளைவிக்கப்பட்ட சேதத்துக்கும், தனிநபர் ஒருவரின் சொத்துக்கு இழைக்கப்பட்ட சேதத்துக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அரசு தனது அரசியல் சட்டரீதியான பொறுப்பிலிருந்து தவறியிருக்கிறது என்பதுதான் அடிப்படையான விஷயம்.”

தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின் தீபக் மிஸ்ரா கையாளுகின்ற முக்கியமான வழக்கு இது. 2011-இல் குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த அமர்வில் இவரும் ஒரு நீதிபதி.

”சட்ட ஒழுங்கு நிலைமை தோல்வியடைந்தது, பேரழிவைக் கட்டுப்படுத்துவதில் நிர்வாகத் தலைமையின் பங்கு சுத்தமாக இல்லாதது போன்ற விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. கோபம் கொண்ட கும்பல்களின் காரணமாக சில இடங்களில் வழிபாட்டு தலங்கள் சேதமடைந்திருக்கின்றன” என்று அலட்சியமாக இவ்வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

2002 முசுலீம் படுகொலையின்போது ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர்; பெண்கள் மதவெறிக் கும்பல்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பத்தாயிரக்கணக்கான இசுலாமியர்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்ய மறுத்தது மோடியின் காவல் துறை.

”மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது” என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.

அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிடுவதன் மூலம், நடந்தது இசுலாமியர்கள் மீதான இந்துத்துவ கும்பல்களின் தாக்குதல் அல்ல என்பது போலவும் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் என்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது.

குஜராத் போலீஸ், நீதித்துறை ஆகியவற்றின் இந்துத்துவ சார்பு காரணமாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்படவேயில்லை. தீஸ்தா சேதல்வாத், முகுல் சின்ஹா போன்ற சமூக ஆர்வலர்களின் விடாப்பிடியான முயற்சியின் காரணமாக, காவி கும்பலின் கொலை, பாலியல் வல்லுறவு, நாசவேலைகளில் பாதிக்கப்பட்ட சிலர் நீதிமன்றங்களை நாடி வழக்கு தொடுத்தனர். பெஸ்ட் பேக்கரி வழக்கு, பில்கிஸ் பானு வழக்கு ஆகியவை மும்பைக்கு மாற்றப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட இந்து மதவெறியர்களும் அவர்களைப் பாதுகாப்பதில் உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசு மருத்துவர்களும் தண்டிக்கப்பட்டனர். நரோதா பாட்டியா படுகொலை வழக்கில் மோடியின் அமைச்சர் மாயா கோத்னானி, பஜ்ரங் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 30 பேர் தண்டிக்கப்பட்டனர்.

இந்தக் கலவரத்தை நடத்தியதிலும், காவல் துறையும் அரசு நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்க்கும்படி உத்தரவிட்டதிலும் முதல்வராக இருந்த மோடியின் பொறுப்பு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஓய்த்துக் கட்டப்பட்டு, இப்போது ஜாகியா ஜாஃப்ரியின் மனு மீதான தீர்ப்பு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நிலைமை இப்படியிருக்க, சேதப்படுத்தப்பட்ட மசூதிகளைச் சரிசெய்வதற்கான நிவாரணத்தை குஜராத் அரசே கருணைத் தொகையாக வழங்குவதாகக் கூறியிருப்பதை அங்கீகரித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

மசூதிகள் தாக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை முசுலிம்களே தம் சொந்த செலவில் திரும்பக் கட்டிவிட்டார்கள். சராசரியாக ஒரு கட்டிடத்துக்கு 85 லட்சம் செலவாகியிருக்கிறது. ஆனால், குஜராத் அரசு தருவதாகக் கூறும் கருணைத்தொகை என்ன தெரியுமா?

சேதமடைந்த, இடிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கும் நிவாரணத்துக்கு இணையாக அதிகபட்சம் ரூ 50,000 அல்லது புதுப்பிப்பதற்கு ஆன செலவு இவற்றில் எது குறைவோ அதைக் கருணை அடிப்படையில் வழங்குவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து, இந்த சொற்பத் தொகைகூட யாருக்கும் கிடைக்காமல் போகும் வகையில் நிபந்தனைகளையும் போட்டிருக்கிறது, குஜராத் அரசு.

”நாங்கள் ஒன்றும் கருணையோ சலுகையோ கோரவில்லை. நாங்கள் கேட்பது உரிமை” என்று  கூறினார் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வழக்கறிஞர்.

”அங்கீகாரம் இல்லாத மதக் கட்டிடங்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கப்படாது. பொதுப் போக்குவரத்து சாலைகளில் அல்லது அங்கீகரிக்கப்படாத இடங்களில் அமைந்துள்ள எந்த வழிபாட்டுத் தலத்துக்கும் உதவி வழங்கப்பட மாட்டாது”  என்றும் நிபந்தனை விதித்து, மத கட்டிடங்களை  இந்து மதவெறிக் கும்பல் திட்டமிட்ட வன்முறை மூலம் இடித்ததைச் சட்டபூர்வமாக்கி விட்டது குஜராத் அரசு. பாபர் மசூதியைக் காவி கிரிமினல் கும்பல் இடித்த பிறகு, அந்த நிலத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று நீதிமன்றங்கள் வழக்கு நடத்துவதைப் போன்றது இது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு அந்த நேரத்தில் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது அடுத்த நிபந்தனை.

2002 மதவெறி தாக்குதல்களில் கொலை, பாலியல் வல்லுறவு போன்ற வழக்குகளில்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்திருக்கிறது மோடியின் போலீசு. இந்த நிபந்தனையின் மூலம் எந்த மசூதிக்கும், தர்காவுக்கும் நிவாரணம் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்கிறது, குஜராத் அரசு.

”இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் நியாயமானவையாகவே உள்ளன” என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்திருக்கிறது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு.

தனது 49 பக்கத் தீர்ப்பில் குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் மறுத்துரைக்கவில்லை. அதேபோல குஜராத் அரசுக்காக வாதாடிய அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தாவின் வாதங்களை ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஆனால், தீர்ப்பு குஜராத் அரசுக்குச் சாதகமாக வழங்கப்பட்டு விட்டது.

நீட் வழக்கின்  உத்தரவைப் போலவே இருக்கிறதல்லவா? இதற்குப் பெயர் உச்ச்ச்ச நீதிமன்றமாம்!

– அழகு

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

பார்ப்பன மதவெறிக்கெதிரான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

0

பணமதிப்பழிப்பு நடவடிக்கை – மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் பிடிபட்ட கருப்புப் பணம் எவ்வளவு?” என நாடாளுமன்ற நிலைக்குழு கேட்ட கேள்விக்கு, ”எங்களிடம் தகவல் இல்லை” எனப் பதில் அளித்தது, ரிசர்வ் வங்கி. ஆனால், மோடி உள்ளிட்ட பா.ஜ.க. கும்பலோ துணிந்து பொய்களையே புள்ளிவிவரங்களாக அள்ளிவிடுகிறார்கள். பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், ”மூன்று இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் பொருளாதார நீரோட்டத்துக்குள் வந்துவிட்டது என நிபுணர்கள் கூறுவதாக”ச் சத்தியம் செய்தார். வேலிக்கு ஓணான் சாட்சியாம்!

அரசியல் தரகன் சோ ராமஸ்வாமி இறந்த பிறகு, அந்த இடத்திற்குத் துண்டு போட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ”3.35 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறதென்றும், அதன் மீது மூன்று இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரியும், அபராதமும் வசூலாகும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது” என்றொரு கணக்கைக் காட்டுகிறார். (துக்ளக், 13.09.2017)

இந்தக் கதைக்கெல்லாம் காட்டப்படும் ஒரே ஆதாரம் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் போடப்பட்ட பணம்தான். 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8 -ஆம் தேதிக்கும் டிசம்பர் 31 -ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில், 1.09 கோடி வங்கிக் கணக்குகளில் சராசரியாக 5.03 இலட்ச ரூபாய் போடப்பட்டிருப்பதையும், 1.48 இலட்சம் வங்கிக் கணக்குகளில் சராசரியாக 3.31 கோடி ரூபாய் போடப்பட்டிருப்பதையும் காட்டி, இந்த வங்கிக் கணக்குகளையெல்லாம் துருவி ஆராய்ந்து, துப்பு துலக்கி கருப்புப் பண பேர்வழிகளை அமுக்கிவிடுவோம் எனச் சவால்விடுகிறது, பா.ஜ.க.

இந்த விவரங்களெல்லாம் உண்மைதான். ஆனால், பிரச்சினை என்னவென்றால், ”இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்ட பணம் முழுவதையும் கருப்புப் பணம் என வகைப்படுத்த முடியாது. மேலும், ஏறத்தாழ ஒரு கோடியே பத்து இலட்சம் வங்கிக் கணக்குகளையும் கண்காணிக்கும் அளவிற்கு வருமான வரித்துறையிடம் ஆள்பலம் கிடையாது” என்கிறார், பேராசிரியர் அருண் குமார்.

வருமான வரித் துறை கருப்புப் பண பேர்வழிகளைப் புகைபோட்டு பிடிப்பது ஒருபுறமிருக்கட்டும். செல்லாத நோட்டு அறிவிப்புக்குப் பிறகு பிடிபட்ட தமிழகப் பிரமுகர்களின் தலையைத் துண்டித்தாவிட்டது அந்தத் துறை? வருமான வரி ரெய்டில் பணமும் கையுமாகப் பிடிபட்ட ராம மோகனராவ், இப்பொழுது சிறையில் களி திங்கவில்லை. மாறாக, மீண்டும் அரசுப் பதவியில் மோடி அரசின் ஒப்புதலோடு அமர்த்தப்பட்டிருக்கிறார்.

ராம மோகன ராவின் கூட்டாளியும் மணற் கொள்ளையனுமான சேகர் ரெட்டி பிணையில் வந்துவிட்டார். சேகர் ரெட்டிக்கு நெருக்கமான ஓ.பி.எஸ்., நினைத்த நேரத்திலெல்லாம் பிரதமர் மோடியைச் சந்தித்து உரையாடும் சலுகை பெற்றிருப்பதோடு, மோடியின் ஆசியோடு தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமர்த்தப்பட்டிருக்கிறார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வருமான வரித் துறைக்கு அலுவலகத்துக்கு விருந்தாளி போலச் சென்றுவிட்டுத் திரும்புகிறார். இந்தக் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணமெல்லாம் வருமான வரித் துறையின் பாதுகாப்பில் இருக்கிறதேயொழிய, பறிமுதல் செய்யப்படவில்லை.

இதற்கெல்லாம் அப்பால், கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது, மர்மமான முறையில் கண்டெய்னரில் கடத்தப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை நிதியமைச்சகம் என்ன செய்தது? அந்தப் பணம் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தைக் கொள்ளையடித்துச் சேர்த்த கருப்புப் பணம் என்பது ஊரே அறிந்த உண்மை. ஆனால், மோடி – அருண் ஜெட்லி – வெங்கய்யா நாயுடு கூட்டணி, அந்தப் பணத்தை ஸ்டேட் வங்கியின் பணமாகக் காட்டி, ஜெயா-சசி கும்பலைக் காப்பாற்றிவிட்டது. கருப்புப் பணத்திற்கு எதிராக சவுண்டுவிடும் மோடி கும்பலின் யோக்கியதை இதுதான்.

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை இப்படித்தான் – அதாவது புழக்கத்திலுள்ள கருப்புப் பணத்தில் ஒரு சதவீதத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் தோல்வியில்தான் – முடியும். தோல்வியின்றி, வேறு எந்த அதிசயத்தையும் நிகழ்த்தக்கூடிய அடிப்படை அந்நடவடிக்கைக்குக் கிடையாது என்பதே உண்மை. ஆனாலும், மோடியின் ஆதரவாளர்கள் கருப்புப் பணத்திற்கு எதிரான அவரது நல்ல நோக்கத்தைச் சந்தேகிக்கக் கூடாதென்று சப்பைக் கட்டுகிறார்கள்.

அப்படிப்பட்ட தூய்மையான நல்ல நோக்கமெல்லாம் மோடிக்கு இருந்ததும் கிடையாது, இருக்கப் போவதும் கிடையாது. அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்ட தனது இமேஜைத் தூக்கி நிறுத்தும் சுயநலமும், ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்கையும்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் பின்னே மறைந்திருக்கிறது. வாராக் கடனால் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற, கடன் வாங்கி ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, பொதுமக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான் இந்தப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை.

-ரஹீம்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !

1

விவசாயம் : வருமானம் இரட்டிப்பாகவில்லை! வரி இரட்டிப்பாகிறது!!

நாட்டின் முன்னுரிமைத் தொழிலாகக் கருதப்பட்டு, வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வந்த விவசாயத்தை சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டுவந்து, வரி விகிதத்தையும் அதிகரித்திருக்கிறது மைய அரசு. நாடு முழுவதும் விவசாயம் நொடித்துப் போய், விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் இன்றைய நிலையில், விவசாயத் துறையில் நடந்துள்ள இம்மாற்றம், அந்த அவலத்தை மேலும் தீவிரப்படுத்தக் கூடும்.

அனைத்து வகை உரங்களுக்கும் இதுவரை 6% (வாட்வரி 5% + கலால்வரி 1%)  ஆக  இருந்துவந்த வரி, ஜி.எஸ்.டி-யில் 12% ஆகவும், பூச்சிமருந்துகளுக்கு 12% முதல் 15% வரை இருந்த  வரி 18% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மருந்து  தெளிப்பான்களுக்கு 18% , பி.வி.சி. குழாய்களுக்கு 16%, சொட்டுநீர், தெளிப்பு நீர்க் கருவிகளுக்கு 12%, டிராக்டருக்கு 12% , அதன் உதிரி பாகங்களுக்கு 18% என ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருப்பது, ”விவசாயிகளை விவசாயத்தை விட்டு விரட்டாமல் மோடி ஓயமாட்டார்” என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது.

இதற்கு அப்பால், ஆதார் அட்டை இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும் என்ற புதிய விதியை ஜி.எஸ்.டி.க்குப்பின் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. உர விநியோகத்தை ஆதாருடன் இணைப்பது, எதிர்காலத்தில் விவசாயிகளை உரத்தைச் சந்தை விலைக்கு வாங்கிக்கொள்ள வைக்கும் சதித்தனம் கொண்டதாகும்.

இப்படியுமா நடக்கும் எனச் சந்தேகிப்பவர்கள், எரிவாயு உருளை வாங்குவதை ஆதாருடன் இணைத்த பிறகு என்ன நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள். 50 கிலோ யூரியா தற்போது 260 லிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது. இந்த ஆதார் இணைப்புக்குப் பிறகு, உரத்தைச் சந்தை விலைக்கு அதாவது, 1,800 ரூபாய்க்கு வாங்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படும்.

இதற்கு அப்பால், இதுவரை விவசாயம் என்ற வரையறைக்குள் இருந்த வேளாண் துணைத் தொழில்களான பால்பண்ணை, கால்நடைகள் வளர்ப்பு, விதைப் பண்ணை, நாற்றுப் பண்ணை, மற்றும் கால்நடை இனப்பெருக்கம், ஒப்பந்த விவசாயம் ஆகியவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஆனால், டாட்டா, பிர்லா போன்ற பெருமுதலாளிகள் ஈடுபட்டுள்ள தேயிலை எஸ்டேட்டுகள் விவசாயப் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதோடு, தேயிலைக்கு ஜி.எஸ்.டி.யிலும் முந்தைய 5% வரியைத் தொடரவும் அனுமதித்துள்ளனர்.

முன்பு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்வதற்கு 2% வாட் வரி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் 5% முதல் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, நிலத்தடி நீர் வற்றிப்போனதால் விவசாயம் செய்ய முடியாமல் போன நிலத்தில், சிறு அளவிலான ஆடு, மாடு, கோழிப் பண்ணைகள் வைத்துப் பிழைக்கும் சிறு விவசாயிகளும் இனி ஜி.எஸ்.டி. செலுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஜி.எஸ்.டி.யின் கீழ் வரி செலுத்தாமல் இருக்க வேண்டுமானால், ஆண்டுக்கு 20 இலட்சம் ரூபாய்க்குள் வருமானம் இருப்பதாக அரசுக்குக் கணக்குக் காட்ட வேண்டும். வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முதல் 10 – ஆம் தேதி கொள்முதல் கணக்கும், 20-ஆம் தேதி விற்பனைக் கணக்கும், 30-ஆம் தேதி வரி செலுத்திய கணக்கும் கட்டாயம் அனுப்ப வேண்டும். இதற்கான ரசீதுகளை 6 மாதம் வரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இது ஒவ்வொன்றுக்கும் விவசாயிகள் ஆடிட்டரிடம் ஓட வேண்டும்.

விவசாய விளைபொருள்களுக்கு ஜி.எஸ்.டி. யில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் மோடி. ஆனால், உண்மை என்ன? நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.

அச்சிடப்பட்ட பிராண்டு பெயரில் விற்பதெல்லாமே ‘மதிப்புக் கூட்டல்’ என்று வரையறை செய்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில். ஒரு ரூபாய் கடுகு, இரண்டு ரூபாய் மிளகு, 5 ரூபாய் சீரகம் என்று கிராமத்துப் பெட்டிக் கடைகளில் விற்பவை அனைத்தும் கண்மார்க் ஊறுகாய், அமிர்தா ஸ்பைசஸ், மான் மார்க் கடலைமிட்டாய் என ஏதோவொரு பெயரில் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகளில்தான் விற்கப்படுகின்றன.

இவைகளில் பெரும்பாலானவை ஒரு மாவட்ட அளவிலோ அல்லது வட்டார அளவிலோ செயல்படும் குறுந்தொழில் – குடிசைத்தொழில்கள். குடும்ப உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு, இருசக்கர வாகனங்களில் ஊர் ஊராகக் கொண்டுசென்று பெட்டிக்கடைகளுக்கு 2-3% சதவீத இலாபத்திற்கு சப்ளை செய்து பிழைக்கின்றனர். தற்போது இவர்களையும் ஆச்சி, சக்தி மசாலா நிறுவனங்களுக்கு இணையாக வரி செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கிறது ஜி.எஸ்.டி. கவுன்சில்.

ஏற்கனவே ஒரு ரூபாய்க்கு கிளினிக் பிளஸ் ஷாம்பு, 5 ரூபாய்க்கு கோல்கேட் பற்பசை எனப் பன்னாட்டுக் கம்பெனிகளின் சரக்குகள் கிராமப்புற சில்லறை வர்த்தகத்தைக் கணிசமாகக் கைப்பற்றிவிட்ட  நிலையில், அச்சந்தையில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு, குறு, குடிசைத்தொழில்களின் மீது கடைசி ஆணியை இறுக்கும் நோக்கத்தோடுதான் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி., தேசிய வேளாண் மின்னணு சந்தை, வேளாண் பொருட்கள் மற்றும் கால்நடைகள் விற்பனைக் கமிட்டி சட்டம் என மோடி அரசால் கொண்டுவரப்படும் மாற்றங்கள் அனைத்தும், பாரம்பரியமான முறையில் நடந்துவரும் வேளாண் தொழில் தொடங்கி கிராமப்புற சிறு தொழில்கள் வரையிலும் உள்ள சுயசார்பு தொழில்களை ஒழித்துவிட்டு, அச்சந்தையை இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் தூக்கிக் கொடுப்பதையே பின்புலமாகக் கொண்டுள்ளன.

ஆனால், இதனை மூடிமறைத்து, ஜி.எஸ்.டி.யால் கள்ளச்சந்தை ஒழியும், விலைவாசி குறையும் என்று கூவுகிறது மோடி கும்பல். கருப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று புளுகியதைப் போல, இதிலும் புளுகுணியாட்டம் நடக்கிறது.

இந்த உண்மை இன்று வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், எதிர்காலத்தில் வெளிச்சத்திற்கு வந்துவிடும். தனியார்மயம், தாராளமயம், உ.வ.க.வில் இந்தியா இணைந்தது ஆகியவை குறித்து உருவாக்கப்பட்ட மாயைகள் தகர்ந்து, உண்மை அம்பலத்திற்கு வந்திருப்பது போல, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மாற்றங்கள் குறித்துக் கட்டப்படும் மாயைகளும் தகர்ந்து போகும்.

– மாறன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

என்னது மறுபடியும் முதல்ல இருந்தா ?

2

பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?

500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே 11.55 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக அறிவித்தது, ரிசர்வ் வங்கி. அப்பொழுதே மோடியின் ”காவிய” நடவடிக்கை வரலாறு காணாத தோல்வியில் முடியப் போவது உறுதியாகிவிட்டதால், ஆளுங்கும்பலும், அவர்களது அடிவருடிகளும் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு வாயில் வந்த நோக்கங்களையெல்லாம் கற்பித்து, அந்நடவடிக்கையை நியாயப்படுத்தும் பித்தலாட்டத்தனத்தில் இறங்கிவிட்டார்கள்.

குறிப்பாக, ஸ்டேட் பாங்கின் ஆராய்ச்சிப் பிரிவு, ”பணத்தை எண்ணுவதில் ரிசர்வ் வங்கி தவறு செய்திருக்கலாம்” என்றொரு சந்தேகத்தை ஊதிவிட்டது. இந்த சந்தேகம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையைக் கேலிக்குள்ளாக்குவது குறித்து மோடி கும்பல் கவலை கொள்ளவில்லை. அருண் ஜெட்லி உள்ளிட்ட அதிகார வர்க்கமோ, ”பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் குறைந்து, அது டிஜிட்டல்மயமாகும்; அப்படி டிஜிட்டல்மயமாகும்போது வரி வருமானம் அதிகமாகும்” எனக் கூறி, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கப் போவதாகக் கதையளந்தார்கள்.

எவ்வளவு கருப்புப் பணம் பிடிபட்டிருக்கிறது, கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டிருக்கிறது என்ற கேள்விகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ”வருமான வரி கட்டும் நபர்களின் எண்ணிக்கை 2017 – 18 ஆம் நிதியாண்டில் 57 லட்சமாக உயர்ந்திருக்கிறது. அவர்கள் செலுத்தும் முன்வரி 42 சதவீதமும், தானாகச் செலுத்தும் வரி 34 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்த தொகை 10 இலட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதனால் தொழில்களுக்கு 60 இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் கொடுக்க முடியும். குறிப்பாக, கந்து வட்டியால் வாடும் குறுந்தொழில்களுக்கு இயல்பான வட்டியில் கடன் கொடுக்க முடியும். மக்கள் குறைந்த விலையில் இனி வீடுகள் வாங்கமுடியும்” என்றெல்லாம் அளந்துவிட்டு, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் தோல்வியை மூடிமறைத்துவிட முயலுகிறார், குருமூர்த்தி.

இந்த நியாய வாதங்கள் அனைத்தும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கயமைத்தனம் கொண்டவையாகும். ”1000, 500 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவிக்காமலேயே, இவற்றையெல்லாம் சாதித்திருக்க முடியும்” என்கிறார், பேராசிரியர் அருண் குமார்.

2015 – 16 நிதியாண்டைக் காட்டிலும், 2016 – 17 நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.4 இலட்சமாக அதிகரித்திருந்தாலும், அவர்களுள் யாரும் பெரிய பண முதலைகள் கிடையாது. அவர்கள் வரி விதிக்கக்கூடிய வருமானமாகக் காட்டிய சராசரி தொகை வெறும் 2.7 இலட்சம் ரூபாய்தான். இதனால் அரசிற்குக் கூடுதலாகக் கிடைக்கக்கூடிய கூடுதல் வருமான வரி வெறும் 10,587 கோடி ரூபாய்தான்.

”வருமான வரி வசூல் கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது என பெருமைபட்டுக் கொள்கிறார், நிதியமைச்சர். அதற்கு முந்தைய 2015 – 16 நிதியாண்டில், செலாவணி செல்லாதாக்கப்படாமலேயே, வருமான வரித் தாக்கல் 27 சதவீதம் அதிகரித்தது அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என சேம்சைடு கோல் போட்டிருக்கிறது, தினமணி.

நவம்பர் 2016-க்கும் மே 2017-க்குமான இடைப்பட்ட மாதங்களில் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கணக்குக் காட்டப்படாத வருமானத்தின் மதிப்பு 17,526 கோடி ரூபாய். இதில் கைப்பற்றப்பட்ட தொகை 1,003 கோடி ரூபாய். பினாமி பணப் பரிவர்த்தனைகளைக் கண்டுபிடித்ததில் அரசுக்குக் கிடைத்த வருமானம் 600 கோடி ரூபாய். மோடி அரசு கருப்புப் பணபேர்வழிகளுக்காக அறிவித்த பொது மன்னிப்புத் திட்டமான – பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் தானாக முன்வந்து தெரிவிக்கப்பட்ட கணக்குக் காட்டாத வருமானம் 5,000 கோடி ரூபாய். அந்த 5,000 கோடி ரூபாய் மீது விதிக்கப்பட்ட வரி மற்றும் அபராதத்தின் கீழ் அரசுக்குக் கிடைத்த வருமானம் 2,500 கோடி ரூபாய். இதையெல்லாம் கூட்டினால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அரசுக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் வருமானம் 14,690 கோடி ரூபாய். (ஆதாரம்: எக்கானமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி இணைய இதழில் வெளியான டிமானிட்டைசேஷன்-போஸ்ட் ட்ரூத்ஸ் கட்டுரை)

இதுதான் வரவு கணக்கு. செலவுகளைப் பொருத்தவரை, ”புதிய நோட்டுக்களை அச்சடித்து, அவற்றை நாடெங்கும் அனுப்பிவைப்பதற்கு ஆன செலவு, வங்கிகளுக்குள் நுழைந்த பல இலட்சம் கோடி ரூபாயைக் கணக்கெடுக்க ஆன செலவு, கார்ப்பரேட் வருமான வரி மற்றும் மறைமுக வரிகளில் ஏற்பட்ட இழப்பு – இவற்றையெல்லாம் கூட்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட கூடுதல் செலவுகளைக் கணக்கிட வேண்டும்” என்கிறது ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை.

இம்மூன்றில் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மட்டும் 7,965 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. இந்தச் செலவு கடந்த ஆண்டு நோட்டு அச்சடிக்க ஆன செலவைக் காட்டிலும் 4,544 கோடி ரூபாய் அதிகம். இதற்கு அப்பால் புதிய நோட்டுகளை நாடெங்கும் அனுப்பி வைக்க ஆன செலவு, ஏ.டி.எம். இயந்திரங்களை மாற்றியமைக்க ஆன செலவு என்பதையெல்லாம் கணக்கில் கொண்டால், புதிய நோட்டுக்காக ஆன செலவு ரூ.21,000 கோடி எனக் குறிப்பிடுகிறார், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பழைய நோட்டுக்களை ஒழித்துக் கட்டிய பிறகு அரசுக்குக் கிடைத்திருப்பதாகக் கூறப்படும் இலாபம் 16,000 கோடி ரூபாய். புதிய நோட்டுக்களை அச்சடிக்க ஆன செலவு 21,000 கோடி ரூபாய். இதுதான் மோடியின் புத்திசாலித்தனம்!

2015-16 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு வழங்கிய இலாப ஈவு 65,876 கோடி ரூபாய். ஆனால், 2016-17 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் இலாப ஈவு 30,659 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. இந்த வீழ்ச்சிக்கு பணமதிப்பழிப்பு நடவடிக்கைதான் காரணம். குறிப்பாக, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பிறகு, வங்கிகளில் குவிந்த பணத்திற்கு வட்டியாக மட்டும் ரிசர்வ் வங்கி 18,004 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறது.

இந்த நட்டங்களெல்லாம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அரைவேக்காட்டுத்தனமான, முட்டாள்தனமான நடவடிக்கை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், மோடியின் துதிபாடிகளோ டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகியிருக்கிறது, ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகமாகியிருக்கிறது என்ற ரீல்களை ஓட்டி, குப்புற விழுந்து கிடக்கும் மோடி அண்ட் கம்பெனியைத் தூக்கிவிட முயலுகிறார்கள்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் 10 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் குவிந்திருப்பதால் யாருக்கு என்ன இலாபம்? அதை எடுத்து, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய மோடி முன்வந்தாரா? நோட்டுத் தடை அறிவிப்பால் நலிவடைந்த சிறுதொழில்களுக்கு நட்ட ஈடு தர முன்வந்தாரா? மாறாக, வங்கி சேமிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 2017 முதல் மார்ச் 2017 முடியுவள்ள காலாண்டில் 6.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி, அதற்கு அடுத்த காலாண்டில் (ஏப்.-ஜூன் 2017) 5.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் (ஏப்.-ஜூன் 2016) இவ்வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்திருக்கிறது. இந்த வீழ்ச்சிக்குப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைதான் காரணம் என்பதை 2016-17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஒப்புக் கொண்டிருக்கிறது.

”அரசு வெளியிட்டுள்ள இந்த வளர்ச்சிப் புள்ளிவிவரமும்கூட நம்பகத்தன்மையற்றதுதான். ஏனென்றால், இப்புள்ளி விவரங்கள் கார்ப்பரேட் தொழில்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வீழ்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளன. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு அமைப்புசாரா சிறு, குறு தொழில்கள் மற்றும் வணிகத்தில் ஏற்பட்டுள்ள நசிவை இப்புள்ளிவிவரம் ஒதுக்கித் தள்ளியிருப்பதால், வளர்ச்சி வீதம் 5.7 சதவீதத்தைவிடக் குறைவாகவே இருக்கும்” என மதிப்பிடுகிறார், பேராசிரியர் அருண் குமார்.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருக்கிறது, 15 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள், விவசாய உற்பத்திக்குப் பாதிப்பில்லை என்றபோதும், விவசாய வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கிறது” என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படிபட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ஜி.எஸ்.டி. மூலம் வரி வருமானம் கூடியிருக்கிறது எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ஜ.க. கும்பலை வழிப்பறி கொள்ளைக்கூட்டம் என்றுதான் கூறமுடியுமே தவிர, மக்களை ஆளும் தகுதி படைத்தவர்கள் எனக் கூறுவது வெட்கக் கேடானது.

கருப்புப் பணத்தையும், இலஞ்சத்தையும், கள்ளப் பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழித்துக் கட்டும் மந்திரக் கோலாக முன்நிறுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக் கொள்ளப்பட்ட அதன் அனைத்து நோக்கங்களிலும் தோல்வியடைந்துவிட்டது. இப்பொழுது மோடி அண்ட் கம்பெனியின் கவலையெல்லாம் செல்லாது என அறிவிக்கப்பட்ட மொத்தப் பணத்திற்கு (15.44 இலட்சம் கோடி ரூபாய்) மேலான தொகை வங்கிகளுக்குள் வந்துவிடுமோ என்பதுதான். அதனால்தான், வங்கிக்குள் வராமல் வெளியில் இருக்கும் 16,000 கோடி ரூபாயை எடுத்துக் கொள்ளுவதில் பெரும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்டவர்கள், வயதானவர்களிடம் தேங்கிப் போன செல்லாத நோட்டுக்களைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கில், அதனை எடுத்துக்கொள்ளவே முடியாது என அநியாயமாக வாதிட்டு வருகிறார்கள்.

செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்திற்கு மேலான தொகை வங்கிகளுக்கு வந்துவிட்டால், அதனைவிட மானக்கேடு வேறு எதுவும் இந்த அரசுக்கு இருக்க முடியாது. கள்ளப் பணத்தையும் வெள்ளையாக மோடி அரசு மாற்றிக்கொடுத்திருக்கிறது என்றுதான் நாம் அந்த அசிங்கத்தைக் குறிப்பிட முடியும். கள்ளப் பணத்தையே கண்டுபிடிக்க முடியாத மோடி கும்பல், கருப்புப் பணத்தைக் கண்டுபிடித்து ஒழித்துக்கட்டும் என்று அப்பாவிகூட நம்ப முடியாத நிலை ஏற்படும்.

இப்படிப்பட்ட அவமான நிலையிலிருந்து தப்பிக்க, மோடி அண்ட் கம்பெனி இப்பொழுதே பொய்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக, மோடியின் துதிபாடியும் சோவின் தயாரிப்புமான தினமணி வைத்தியநாத அய்யர், ”ஒரே எண்ணுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்குள் வந்திருக்கக் கூடும். இல்லையென்றால், 98.96 சதவீத நோட்டுக்கள் திரும்ப வந்திருக்க வாய்ப்பேயில்லை. செல்லாத நோட்டுக்களை வங்கிகள் திரும்பப் பெறுவதை இன்னும் அனுமதித்தால், திரும்பி வந்த நோட்டுக்களின் எண்ணிக்கை 120 சதவீதத்தை எட்டிவிடும். எனவே, வங்கிகளில் வந்திருக்கும் நோட்டுக்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” எனத் தலையங்கம் தீட்டியிருக்கிறார். (தினமணி, 02.09.2017)

ஒரே எண்ணுள்ள நோட்டுக்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், வங்கிக்குள் வந்துள்ள 15 இலட்சம் கோடி ரூபாயையும் திரும்ப எண்ண வேண்டும். அய்யரின் இந்த அபார யோசனை, மறுபடியும் முதல்லா இருந்தா என்ற நகைச்சுவையை அல்லவா நினைவுபடுத்துகிறது.

– குப்பன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சாதி அரசியலைத் தூண்டும் பாஜகவின் நரித்தனம் !

0

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு : சாதி அரசியலுக்குத் தூண்டில் !

”இந்துத்துவ பண்டாரங்களின் கமண்டல அரசியலை மண்டல் எனும் ஆயுதம் மூலம் வீழ்த்துவோம்!” – சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இவ்வாறு முழங்கின சமூக நீதிக்கட்சிகள். அப்போது அயோத்தியை மையம் கொண்டு சூடுபிடிக்கத் தொடங்கியிருந்த பார்ப்பனிய – பனியா இந்துத்துவ அரசியலுக்கு எதிராக இடைச்சாதிகளை அணிதிரட்டி நிறுத்துவதன் மூலம் முறியடித்து விடலாம் என இக்கட்சிகள் நம்பின; இன்றளவும் நம்புகின்றன.

எண்பதுகளில் உள்ளூர் அளவில் சிறுசிறு மதக் கலவரங்களை நிகழ்த்தி, வட்டார அளவில் தேர்தல் வெற்றிகளைப் பெறத் தொடங்கியிருந்த பாரதிய ஜனதா, உள்ளூர் மோதல்களை அகில இந்தியாவுக்கும் விரிவுபடுத்தி, அயோத்தி ராமனை முன்வைத்து நாடெங்கும் மக்களை மதரீதியாகப் பிளந்து, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகள் இந்துக்களின் ஐக்கியத்தைக் குலைப்பதாகக் குற்றஞ்சாட்டிய இந்துத்துவ கும்பல், நாடெங்கும் ஆதிக்கசாதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை ஏற்படுத்தியது.

மூன்று பத்தாண்டுகளுக்குப் பின் மிருக பலத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதா, முன்பு தானே எதிர்ப்பதாகக் கூறிய சாதிவாரி பிரதிநிதித்துவத்தைக் கையிலெடுத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் முறையைப் பரிசீலனை செய்வதற்கான கமிட்டி ஒன்றை அமைப்பதற்கு கடந்த மாதம் 23 -ஆம் தேதி மோடி தலைமையில் கூடிய அமைச்சர்கள் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்து ஒற்றுமைக்கு பதிலாகச் சாதி வேற்றுமை

இட ஒதுக்கீட்டின் பலன்கள் ஏற்றத்தாழ்வான முறையில் சென்றடைவதைப் பரிசீலிப்பது, பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பொருளாதார அடிப்படையில் வகைப்படுத்துவது, உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான முறைகளை உருவாக்குவது மற்றும் சாதிகளின் உட்பிரிவுகளை முறையான பிரிவுகளில் சேர்ப்பது ஆகிய மூன்று நோக்கங்களுக்காக இந்தக் கமிட்டி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி 12 வாரங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டி அமைக்கப்பட்ட அதே சமயத்தில், பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களை ஏற்கனவே அனுபவித்த குடும்பங்களை இனம் பிரித்துக் காட்டும் கிரீமி லேயருக்கான அளவுகோலாக இருந்த ஆண்டு வருமானம் 6 இலட்சம் என்ற வரம்பை 8 இலட்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. 2011 -ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதிரீதியான தரவுகள் இன்னமும் வெளியிப்படாத நிலையில், உள்ஒதுக்கீடு செய்யப் போவதாகவும் சாதிகளின் உட்பிரிவுகளைச் சீரமைப்பதாகவும் மோடி அரசு அறிவித்திருப்பதன் நோக்கம் என்ன?

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரசின் ஊழல்களால் மக்கள் வெறுப்புற்று இருந்த சமயத்தில், தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்திக் கொண்ட மோடி, மக்களின் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்தார். அந்தக் காலகட்டத்தில் தேர்தல் மேடைகளில் மோடியின் வாயிலிருந்து வழிந்த வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினால், இந்து மகாசமுத்திரமே பொங்கி எழுந்து இமயமலையை மூழ்கடித்துவிடும். மக்கள் அசந்த நேரமாகப் பார்த்து தேர்தல் வெற்றியை ஜேப்படி செய்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்த மூன்றாண்டுகளில் நம்பிக்கைகள் தகர்ந்து போய், தமக்குத் துரோகமிழைக்கப்பட்டதைக் கண்டு பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தவர்களே திகைத்துப் போயுள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல் தொடுத்திருக்கும் மரணத் தாக்குதல், விவசாயத்தில் அழிவு, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள், அதிகரித்து வரும் பசு பயங்கரவாதத் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சுகாதாரத்துறையின் சீர்கேடுகள், குழந்தைகள் மரணம், அண்டை நாடுகளின் விரோதம்… என நீளுகிறது மோடி அரசின் தோல்விப்பட்டியல். இந்தச் சுமையோடு, இரண்டாண்டுகள் கழித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளது பாரதிய ஜனதா.

மீண்டும் வளர்ச்சி என்ற கோஷத்தை வைத்து ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்துள்ள மோடி – அமித் ஷா இணை, இழிவான சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளது. முப்பதாண்டுகளுக்கு முன் மண்டல் கமிசனை எதிர்த்தபோது இந்து ஒற்றுமை குலைக்கப்படுவதாக சங்க பரிவாரம் அலறியது. உண்மையில் இந்துத்துவாவின் ஆன்மாவே சாதி அரசியல் தான். பாரதிய ஜனதாவின் மதக் கலவர அரசியல் செயல் திட்டம் நேரடியாக பார்ப்பன, பனியா ஆதிக்க சாதி இந்துக்களுக்கே சேவை செய்தது. அக்கட்சி முன்தள்ளும் இந்துப் பண்பாடும் பார்ப்பன மற்றும் மேல்சாதிப் பண்பாடும் வேறு வேறல்ல.

புதிய சாதிய வாக்கு வங்கிகள்

இந்நிலையில் இந்து ஐக்கியம் என்கிற கிழிந்த வேட்டியை அவிழ்த்து எறிந்துள்ள பாரதிய ஜனதா, உட்சாதிப் பிரிவினை மற்றும் இடைநிலைச் சாதிகளை ஒன்றோடு ஒன்று மோத விடும் சாதி அரசியல் என்கிற நிர்வாண நிலையை எய்தியுள்ளது. காபினெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள குழுவுக்கென மோடி பீறாய்ந்து சொல்லியிருக்கும் மூன்று காரணங்களின் வாக்கியங்களிடையே வேறு நோக்கங்கள் மறைந்துள்ளன.

முதலாவதாக, ஏற்கனவே மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருந்த காங்கிரசை, அதன் உள்ளே வெற்றிகரமாக தள்ளி விட்டுள்ள பாரதிய ஜனதாவுக்கு லாலு, நிதிஷ், முலாயம், மாயாவதி உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் இன்னமும் சவாலாகவே உள்ளனர். அடுத்ததாக, பாரதிய ஜனதாவின் வாக்குவங்கிகளாக இருந்த பட்டேல், ஜாட், லிங்காயத்துகள் உள்ளிட்ட சாதியினர் பரவலாக அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இந்த இடத்தில் புதிய சாதிகளை இட்டு நிரப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது.

மேலும், கோமாதா, லவ் ஜிகாத் போன்ற இசுலாமிய வெறுப்பு இந்துத்துவ வெறியைத் தேசிய அளவில் நிரந்தரமாகப் பராமரித்து வருவதும் அதனடிப்படையில் தேர்தல் ஆதாயங்களைத் தொடர்ந்து பெறுவதும் சாத்தியமில்லை என்பதும் பாரதிய ஜனதா அறியாத இரகசியம் அல்ல. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் குறுக்கே இரத்தக் கோட்டை கிழித்த அயோத்தி ராமன் விவகாரமே நொறுங்கிச் சரிந்த மசூதியின் இடிபாடுகளின் கீழ் நசுங்கிப் போனது. அயோத்தி ராமனால் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியவில்லை என்பதால்தான், கடந்த தேர்தலில் வளர்ச்சி என்கிற கோமாளித் தொப்பியோடு  மேடையேறினார் மோடி.

சாதிரீதியிலான புதிய அணி சேர்க்கை ஒன்றை உருவாக்கி, கரைந்து கொண்டிருக்கும் தனது வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொள்வது, இதன் போக்கில் பிராந்திய அளவில் தனக்குச் சவாலாக இருக்கும் சமூக நீதிக்கட்சிகளின் ஆதரவுத் தளத்தை ஒழித்துக் கட்டுவது, தனது கார்ப்பரேட் அடிவருடித்தனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் இந்துத்துவ கோவணத்தில் விழுந்த கிழிசலுக்குச் சாதி அரசியலைக் கொண்டு ஒட்டுப் போடுவது என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கத் திட்டமிடுகிறார் மோடி.

சர்க்கரை என்றெழுதிய காகிதத்தை நக்க போட்டாபோட்டி

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடைநிலைச் சாதிகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. பிற மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள இடைநிலைச் சாதிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தற்காலிக நிவாரணமாக இடஒதுக்கீடு இருந்தாலும், பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகள் ஒவ்வொன்றாக ஒழித்துக்கட்டப்பட்டு தனியார்மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சொல்லிக் கொள்ளப்படும் இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் கேலிக்கூத்தாக்கப்பட்டு விட்டது.

ஏற்கனவே வேலை வாய்ப்புகளை வழங்கும் அருகதை இழந்து, அரசுத் துறைகள் காலிப் பானையாகி விட்ட நிலையில், ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீத இடங்களைத் தனது தேர்தல் நலன்களுக்குத் தோதான சாதிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதே பாரதிய ஜனதாவின் திட்டம். இந்தப் பிரிவினை இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே முறுகல் போக்கை ஏற்படுத்தும்.

வெறும் தாளில் எழுதப்பட்ட சர்க்கரையை நக்குவதற்குப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் மோதலைத் தூண்டி விடுவதன் மூலம், தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதே மோடியின் எதிர்காலத் தேர்தல் உத்தி.

இதை உத்திரப் பிரதேச மாநிலத் தேர்தலில் ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்து விட்டார் அமித் ஷா. சுமார் 9 சதவீத யாதவ்களையும் இசுலாமிய வாக்குகளையும் கொண்ட முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியின் வாக்கு வங்கிக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளான குர்மி, கஹார், கும்மார், நிஷாத் மற்றும் சாஜ்பர் சாதிகளைத் தனக்கு ஆதரவாக வளைத்தது பாரதிய ஜனதா.

அரியானாவில் தனது பாரம்பரிய வாக்கு வங்கியாக இருந்த ஜாட்களுக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஒருங்கிணைத்த பாரதிய ஜனதா, சிறுபான்மையாக உள்ள பஞ்சாபி கட்டாரி சாதியைச் சேர்ந்த மனோகர் லால் கட்டாரை முதல்வராக்கியது. அதே போல் மகாராஷ்டிராவிலும் மராத்தாக்களுக்கு எதிராக இதர சாதிகளை ஒருங்கிணைத்த பாரதிய ஜனதா, பார்ப்பனரான பட்னாவிசை முதல்வராக்கியுள்ளது.

இவ்வாறு பிராந்திய அளவில் எண்ணிக்கை அடிப்படையில் செல்வாக்கோடு இருக்கும் இடைநிலைச் சாதிகளுக்கு எதிராக இதர சாதிகளைத் தூண்டி விடுவதன் மூலம் ஏராளமான ஆதாயங்களை அறுவடை செய்ய முடியும் என பாரதிய ஜனதா கணக்குப் போடுகின்றது. முதலில் இடைநிலைச் சாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்குவதன் மூலம் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது.

அடுத்து, வட்டார அளவில் உமாபாரதி, கல்யாண் சிங் போன்ற சாதிப் பின்புலமுள்ள தலைவர்கள் செல்வாக்கு பெறாமல் தடுப்பது, மாநில அளவில் சுயமான செல்வாக்கில்லாத, திறமையற்ற பொம்மைகளைப் பராமரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் கட்சிக்குள்ளிருந்தே தனக்கு சவால்கள் உருவாகாமல் தவிர்த்துக் கொள்வது எனத் திட்டமிடுகிறது மோடி – அமித் ஷா இணை.

இதன் மூலம் இடஒதுக்கீட்டை நிரந்தரத் தீர்வாகவும், அதுதான் அறுதியான சமூக நீதி என்றும், இந்துத்துவத்துக்கு எதிராக சாதிகளின் ஐக்கியத்தைக் கட்டமைப்பதைத் தமது செயல் திட்டமாகவும் கொண்டிருந்த சமூக நீதிக்கட்சிகளின் இடுப்பில் தொங்கிய துருப்பிடித்த வாளை உருவி, அவர்கள் வயிற்றிலேயே செறுகியிருக்கிறது சங்க பரிவாரம்.

பிளவுபடுத்தும் சாதி ஒன்றுபடுத்த ஒருபோதும் உதவாது

இந்துத்துவ அரசியல் மூலம் பார்ப்பன மேலாண்மையைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, சாதிச் சண்டைகளை கிருஷ்ணசாமி, ராமதாஸ் போன்ற பிழைப்புவாதிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்திருக்கிறது. பார்ப்பனியத்துக்கு எதிராக இடைநிலைச் சாதிகளிடையேயான நல்லிணக்க அரசியல் பேசி ஒப்பேற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்துத்துவத்தின் ஆன்மாவான சாதி என்கிற நிறுவனம் எந்தச் சூழலிலும் கேடாகவே பயன்படுத்தப்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளது பார்ப்பன கும்பல்.

தொழில் மற்றும் சமூக ஒடுக்குமுறைகள் காரணமாகத் தீண்டத்தகாதவர்கள் என்று சாதி இந்துக்களால் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் விசயத்தில் சாதி என்பது ஒரு புறவயமான உண்மையாக இருக்கிறது. அதே நேரத்தில் தலித் உட்சாதிகள் தமக்குள் உயர்வு கற்பித்துக் கொள்வதைப் பொருத்தவரையில், அது அகவயமான மனோபாவமாகவும் இருக்கிறது. அதுதான் பிளவுக்கு அடிப்படையாக அமைகிறது.

பார்ப்பனர் தவிர்த்த சாதி இந்துக்களைப் பொருத்தவரை, சாதி என்பது அநேகமாக, உன்னைவிட நான் மேலானவன்  உன்னிடமிருந்து நான் வேறுபட்டவன் என்று கருதும் அகவயமான மனோபாவமாகவே இருக்கிறது. இவ்வாறு, தன்னுடைய சாதியை உயர்ந்ததாகக் கற்பித்துக் கொள்வதற்கும் சித்தரிப்பதற்கும் புனைவுகளே போதுமானவை. அரசு சன்மானங்களையும் பதவிகளையும் பங்கு போட்டுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட பிழைப்புவாதிகள், தனது சாதியினரின் எண்ணிக்கையையைச் சொல்வதிலும் புனைவைத் திணித்து கூட்டிச் சொல்கிறார்கள்.

இத்தகைய பிழைப்புவாதிகள் துணையோடுதான் பார்ப்பனியம் அதிகாரத்தில் நீடிக்க முடிந்திருக்கிறது. சாதி அடிப்படையிலான அடையாள அரசியல், பார்ப்பனியத்தின் காலாட்படையாகச் செயல்பட்டு, சாதியமைப்பைப் பாதுகாப்பதற்கும் பார்ப்பன பாசிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்துவதற்குமே பயன்படும்.

– சாக்கியன்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

பார்பனியத்துக்கு சேவை செய்யும் சாதி அரசியலை அம்பலப்படுத்தும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பணமதிப்பழிப்பு : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !

0

பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !!

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, செல்லாது என அறிவிக்கப்பட்ட 15.44 இலட்சம் கோடி ரூபாயில், வெறும் 16,000 கோடி ரூபாய்தான் வங்கிக்குத் திரும்பவில்லை. இந்தத் தொகை, நாலு இலட்சம் கோடி, ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் வங்கிக்குத் திரும்பி வராது எனச் சொல்லி வந்த மோடி அரசின் கணக்கில், 1 சதவீதம்கூட இல்லை. இந்தியாவில் புழங்கும், உருவாகும் கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்திருக்கும் பேராசிரியர் அருண் குமார், ”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதுதான் என்றால், அந்நடவடிக்கை 0.01 சதவீத கருப்புப் பணத்தைக்கூட ஒழிக்கவில்லை” எனக் கூறுகிறார்.

இதுதான் மோடியின் நடவடிக்கை சாதித்திருக்கும் உண்மை. இந்த உண்மை ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் அறிக்கையின் வழியாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனும்போது மோடியும் அவரது அரசும் தமது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. கும்பலோ, பாசிஸ்டுகளுக்கே உரித்தான நாக்குமாரித்தனத்தோடு, தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டி, மக்களை மீண்டும் முட்டாளாக்க முயலுகிறார்கள்.

நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை வங்கிக்குள் வரவிடாமல் தடுத்துவிடுவோம் என அப்பொழுது பேசியவர்கள், இப்பொழுது அத்துணை பணமும் வங்கிக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் எங்களது வெற்றி எனக் கூசாமல் கூறுகிறார்கள்.

”வங்கிக்குள் வராத பணம் எத்துணை கோடி என்பதை வைத்துப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் வெற்றியைத் தீர்மானிப்பது தவறானது. ஏனென்றால், பணத்தைப் பறிமுதல் செய்வது இந்த நடவடிக்கையின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. கருப்புப் பணத்தையும் வங்கியில் போடும்படியான கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதே இந்த நடவடிக்கையின் வெற்றிக்கான சாட்சி” என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

”செல்லாத நோட்டுக்களில் ஒரு பகுதி வங்கிக்குள் வராது என்று அரசு ஒருபோதும் சொன்னதில்லை” என்கிறார் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி.

இந்தப் பித்தலாட்டத்தனத்தையெல்லாம் தூக்கி சாப்பிடும் வண்ணம் துக்ளக் இதழில் எழுதுகிறார், தமிழ்நாட்டுப் பார்ப்பனரும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான குருமூர்த்தி. ”பல பொருளாதார நோக்கங்களை உள்ளடக்கிய நோட்டுத் தடையை சாமான்ய மக்களுக்கு எளிமையாக விளக்க, கருப்புப் பணத்தை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம் என மோடி கூற வேண்டிய நிலை ஏற்பட்டதாக”ச் சப்பைக்கட்டு கட்டுகிறார், அவர். (துக்ளக், 13.09.2017)

1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றுவதற்கும் செலுத்துவதற்கும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஒன்றா, இரண்டா? மோடி அரசு அடுக்கடுக்காக விதித்த நிபந்தனைகளால் பொதுமக்கள் எரிச்சலும் ஆத்திரமும் கொண்டபோது, ”கருப்புப் பணம் வங்கிக்குள் நுழைவதைக் கிடுக்கிப்போட்டுப் பிடிக்கத்தான் இவ்வளவு நிபந்தனைகள்; இதனை மீறி யாரும் வங்கியில் கருப்புப் பணத்தை மாற்றிவிட முடியாது; ஒவ்வொரு ரூபாய்க்கும் வங்கியிடம் கணக்குச் சொல்ல வேண்டும்” என்றெல்லாம் சமாதானம் சொல்லி, தனது பாசிச கோமாளித்தனத்தை நியாயப்படுத்தியது பா.ஜ.க. கும்பல்.

இப்பொழுது தங்களது நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி 98.8 சதவீத செல்லாத நோட்டுக்கள் வங்கிக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு அக்கும்பல் வெட்கப்படவில்லை. மாறாக, அதனை வெற்றி எனக் கூசாமல் கொண்டாடுகிறார்கள். இது வெற்றி என்றால், பணத்தை மாற்றுவதற்கு அடுக்கடுக்காக நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது? அந்நிபந்தனைகள் வங்கி வாசலில் நின்ற சாமானிய மக்களை அவமானப்படுத்தி, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதைத் தாண்டி வேறு எதையும் புடுங்கிவிடவில்லை.

– திப்பு

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விழுப்புரம் : சமூகவிரோதிகளுக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

1

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில்  உள்ள காரப்பட்டு கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கொடிக்கம்பம் இந்த ஆண்டு ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்த நாளன்று நிறுவப்பட்டது.

சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்ட கொடிக்கம்பம்

அந்த கொடிக்கம்பத்தை 20.09.2017 அன்று இரவு சமூக விரோதக் கும்பல் ஒன்று வெட்டி சாய்த்து, அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் தூக்கி வீசியுள்ளது. அதைக் கேள்விப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ’மக்கள் அதிகாரம்’ தோழர்கள் கொடிக் கம்பத்தைப் பார்த்து விட்டு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். கொடிக்கம்பம் சாய்க்கப்பட்ட இடத்தில்  சமுக விரோதக் கும்பலை  அம்பலபடுத்தும் வகையில் தட்டி வைக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த சமுக விரோதக் கும்பலை அம்பலபடுத்தி, பகுதி முழுவதும் 5 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. தெருமுனைப் பிரச்சாரத்தில் கொடிக்கம்பத்தை  உடைத்தவர்களை கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 24.09.2017 அன்று காலை 9:50 மணியளவில் காரப்பட்டு கிராமத்தில் இருந்து தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கொடிக்கம்பம் உள்ள இடம் வரை முழக்கமிட்டப்படி ஊர்வலமாக சென்றனர். பின்னர் மக்கள் அதிகாரம் கிளை ஒருங்கிணைப்பாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர் ஏழுமலை கொடியினை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மக்கள் அதிகார மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர் கலை  கண்டன உரையாற்றினார். சமுக விரோதக் கும்பலைக் கண்டித்தும்,  கட்டமைப்பு நெருக்கடி குறித்தும் இன்றைய சூழலில் மக்கள்  அதிகாரத்தின் அவசியத்தையும் விளக்கிப் பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மண்டலம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தஞ்சை : வீராங்கனை கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி !

2

க்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை கிளை சார்பில் பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் -க்கு 18.08.2017 சனிக்கிழமை அன்று தஞ்சை பெசன்ட் அரங்கில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாகப் பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு மலர் அஞ்சலியும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கிய சிவப்பஞ்சலி கூட்டத்திற்கு ம.க.இ.க. தஞ்சை கிளை செயலர் தோழர். இராவணன் தலைமை தாங்கினார். “மரணங்கள் பொதுவாக இரண்டாக வகைப்படுத்திப் பார்க்கப்படுகிறது. ஒன்று சுயநலனில் வாழ்ந்து இறப்பது அடுத்தது பொதுநலனில் அக்கறை செலுத்தி வாழ்ந்து இறப்பது. பொது நலனில் அக்கறை செலுத்தி வாழ்பவர்கள் காலம் கடந்தும் மக்களால் நினைவுகூரப்படுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறையோடு அநீதிக்கு எதிராகப் போராடி இறப்பவர்களின் பிரிவு மலையைவிட கனமானது” என்று தோழர் மாவோ கூறுவார். அப்படி மலையைவிட கனமான ஓர் பிரிவுதான் கௌரி லங்கேஷ் அவர்களின் இறப்பு.

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. குருசேத்திரப் போர் முடிந்து வெற்றிவாகை சூடி அஸ்தினாபுரத்திற்குள் பஞ்சபாண்டவர்கள் நுழைகிறார்கள். “அநீதியான யுத்தத்தை நடத்திவிட்டு வந்த நீங்கள் அஸ்தினாபுரத்திற்குள் நுழையத் தகுதியற்றவர்கள்” என்று ஒருவன் தடுத்து நிறுத்துவான். சுற்றியுள்ள பார்ப்பனக்கூட்டம் இவன் சாருவாகன் என்று கூறி, அந்த எதிர்ப்பாளனை எரித்துக் கொன்றுவிடுவர். சாருவாகன், சம்புகன், நந்தன், பெத்தான்சாம்பான், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரிலங்கேஷ் என்று வேதமத சனாதனிகளால் அழித்தொழிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “சில தி.க.-காரர்கள் கருப்புச்சட்டை போட்டு நாத்திகம் பேசி வந்தார்கள். தற்போது கருப்புசட்டை போட்டு லட்சக்கணக்கில் சபரிமலை சென்று கொண்டிருக்கிறார்கள்” என்று பெருமைபட்டுக் கொண்டார். நேற்று செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாள். சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதிலும் பெரியாரை நினைவுகூற மக்கள் திரண்டிருந்ததை நான் பார்த்தேன். கழகங்கள் பெரியார் சிலைக்கு மாலைபோட்டனர் என்ற நிலைமாறி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் குறிப்பாக, இளைஞர்கள் பெரியாரை நினைவு கூர்ந்ததைப் பார்க்கும் போது நமக்கு நம்பிக்கை துளிர்விடுகிறது. இது ஒரு தொடக்கம்தான்.

காவி பயங்கரவாதிகள் தங்களது திட்டத்தை அமல்படுத்துகிறார்கள் என்பது ஒருபக்கம். காவி பயங்கரவாதமும், கார்பரேட் பயங்கரவாதமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ளது. அத்வானி ரதயாத்திரை, பாபர்மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், கோவைக் கலவரம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னால் கார்ப்பரேட்களின் நலன்களை உள்ளடக்கிய திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

கோவை கலவரத்தின் போது தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோவை ஜவுளித்தொழில் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கோவை கலவரத்தின் காரணமாக, தொழிலாளர் வெளியேற்றம் – கதவடைப்புக்கு எதிராகத் தொழிற்சங்கங்கள் போராட முடியவில்லை, அனுமதிக்கப்படவில்லை.

காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த நாம் இதைப்பற்றி இன்னும் பாரதூரமாகச் சிந்திக்க வேண்டும். பெட்ரோலிய சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்படுவதும், காவிபயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பல் அதற்கு ஆதரவாக செயல்படுவதையும் நாம் சாதாரணமாகக் கருதக்கூடாது. கௌரி லங்கேஷ்  எதற்காகப் போராடினாரோ அதற்கான போராட்டத்தைத் தொடர்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி” என்று தலைமையுரையில் குறிப்பிட்டார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ்குமார் “கௌரி லங்கேஷ் படுகொலை மூலம் கருத்துச் சுதந்திரம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. காட்டுமிராண்டிகாலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெற்றதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நவீனம், ஜனநாயகம் இவையெல்லாம் தெரியாத காலம் அது. நவீன காலத்தில் இதுபோல நடப்பதுதான் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இவர்கள் மட்டுமல்ல நீதிமன்றமே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது” என்பதைத் தனது அனுபவங்கள் மூலம் விளக்கிப் படுகொலையைக் கண்டித்து அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து உரையாற்றிய மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் வி.பாரி;  “கௌரி லங்கேஷ் போன்றவர்கள் அடங்கிப்போகும் சாமான்யர்கள் அல்ல. தீவிரவாதி, நக்சலைட், தேசவிரோதி என்ற அவதூறுகளைக் கிளப்பி அவர்களை ஒடுக்க முடிவதில்லை. அந்த எல்லைகளைக் கடந்து போராடும் போது தீர்த்துக்கட்டுவது என்று செயல்படுகிறார்கள்.

அவன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படும்போது நாம் என்ன செய்வது. நல்லதைப் பார்க்காதே! நல்லதைக் கேட்காதே! நல்லதைப் பேசாதே! என்று காந்தி குரங்குகளாக நாம் இருக்கமுடியாது. சாரணர் இயக்கத்தேர்தலில் எச்.ராஜா பெற்றிருக்கும் தோல்வி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி-க்குச் சமீபத்தில் கிடைத்திருக்கும் ஒரு சவுக்கடி.

அனைவரையும் ஒன்றுதிரட்டும் முயற்சியாக நடைபெற்றிருக்கும் இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஒரு தொடக்கமாக உள்ளது” என்று கூறி பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகளுக்கெதிராக ஓர் அணியாகத் திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து உரையாற்றிய கவிஞர் வல்லம் தாஜுபால். “பெரியாருக்கெதிராக எழுதுவதும், பேசுவதும்தான் கருத்து சுதந்திரம் என்பதுதான் நடைமுறையாக உள்ளது. எதிர்ப்பாளர்களை மிரட்டுவது, அடங்கமறுத்தால் அழித்தொழிப்பது என்பது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய அநியாயம் தொடர்ந்து அரங்கேறுவதற்கான காரணங்களில் ஒன்று நல்லவர்கள், விவரமறிந்தவர்கள் என்று கருதப்படுபவர்களின் மௌனம்தான். தப்பித்துவிடலாம் என்று கருதிப் பலர் மௌனிகளாக இருக்கிறார்கள். மெளனிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பத்திரிகைகள் சமூகத்தின் மனசாட்சிகள் என்று நம்பப்படுகிறது. சமூகத்தின் மனசாட்சி கொல்லப்பட்டுவிட்டது.

கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு அவர்கள் கல் எறிகிறார்கள். கற்குவியல் அருகில் நாம் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரவில்லை. உணர்த்த வேண்டும்” என்று கூறி ம.க.இ.க-வின் முன்முயற்சிக்கும், தனக்கு அளித்த வாய்ப்பிற்கும் நன்றி கூறி அஞ்சலி செலுத்தினார்.

அடுத்து பேசிய த.மு.எ.ச மாநில துணைசெயலர் தோழர் களப்பிரன் “கௌரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் படுகொலைகள் ஒரே மாதிரி கொலையாக உள்ளது. கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை. குஜராத் படுகொலை குற்றவாளிகள் அதிகாரத்தில் இருக்கும்போது நீதி கிடைக்காது. நேற்று சபாநாயகர் தனபாலின் ஜனநாயகப் படுகொலையைப் பார்த்தோம்.

சாரணர் இயக்கத் தேர்தலில் 52 ஓட்டுகளை எச்.ராஜா பெற்றார். அந்த 52 பேர் எப்படி வந்தார்கள்? சாரணர் இயக்கப் பேரவை கூட்டப்படவில்லை. போலி உறுப்பினர்களைச் சேர்த்து 52  ஓட்டுகளைப் பெற்றுள்ளார். 52 பேர் சாரணர் இயக்கத்தில் எச்.ராஜாவுக்கு ஓட்டு போட்டனர் என்பதை சாதாரணமாக நாம் கருதக்கூடாது. பல்வேறு இடங்களில் ஊடுருவி அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருந்து தொடர்ந்து போராட வேண்டும்” என்று தனது கருத்தைப் பதிவுசெய்தார்.

அடுத்து பேசிய பத்திரிகையாளர் கதிரவன் “ஆர்.எஸ்.எஸ்-க்கு தொங்கு சதை அமைப்புகள் ஏராளம். கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக விளங்கிய மும்பை, பூனே போன்ற பகுதிகள் தற்போது சிவசேனா ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பொறுக்கிக் கூட்டத்தைப் பொறுக்கியெடுத்து முன்னிலைப் படுத்துகின்றார்கள். இதனை எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் தாக்குதல் நிலையிருக்கிறார்கள், நாம் தற்காப்பு நிலையில் கூட இல்லை என்பதே உண்மை.

இந்தியச் சமூகம் பிற்போக்கான சமூகம் என்று சொல்லப்பட்டாலும், போராட்டங்களின் ஊடாக வளர்ந்து முன்னேறியது. நமது சமூகம், தத்துவப் போராட்டங்களில் உயர்ந்து நின்றுள்ளது. தற்போது எதிர்ப்புகள் சிதறடிக்ககப்பட்டுள்ளன. தத்துவப் போராட்டங்களை நடத்தும் அதே வேளையில் நடைமுறை போராட்டங்களையும் ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும். அதன் தொடக்கமாக இந்நிகழ்ச்சி உள்ளதாகக் கருதுகிறேன். சமகால எழுத்தாளர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி நிகழ்த்த ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

பிறகு பேசிய தோழர் காளியப்பன் தனது உரையில் “எள் முனையளவு கூட சமரசமின்றி எழுதிய எழுத்தாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு இன்றி இருப்பதுதான் வருத்தத்திற்குரியது. ஊடக அறம் என்பது பின்னடைந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் அப்படித்தான் செயல்படும். ஊடகத்துறையில் முன் உதாரணமான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கௌரி லங்கேஷ். பெண் இவ்வளவு வேகமாக எழுதுவது கூடாது என்று எச்சரித்தார்கள். கௌரி லங்கேஷ் எழுத்தின் ஆழம் எதிரிகளுக்கு ஆத்திரம் ஊட்டியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையின் போது களத்தில் நின்று போராடிய போராளி கௌரி லங்கேஷ்.

சமூக ஊடகங்களில் கௌரி லங்கேஷ் பேசுவது போன்ற ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ‘எனது மரணம் பாதியைச் சாதித்தது. மீதியை நீங்கள் சாதிப்பீர்கள்’ என்று அந்தச் செய்தி கூறுகிறது.

கௌரி லங்கேஷ்-க்கு எதிராகப் பேசுபவர்கள் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் பேசுகிறார்கள். ‘கடவுளின் ஒரு திட்டம் நிறைவேறியது’ என்று ஒருவன் பேசுகிறான். ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் கும்பலின் ஆட்சி நடைபெறுகிறது. இதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. ‘இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல; முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் கொலைவெறி ஆட்சிதான்’ என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

இஸ்லாமியர்களுக்கும். தலித்துகளுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொலை வெறிக்கு நீதிமன்றம் துணைபோகிறது. பெஹ்லுகான் மரணவாக்குமூலம் தெளிவாக இருக்கும் போதும் எதிரிகள் ஆறுபேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். நீதித்துறை பாசிசமயமாகி வருகிறது. மயில் பிரம்மசரியத்தைக் கடைபிடிக்கிறது. அதனால்தான் தேசியப்பறவையாக உள்ளது என்கிறார் ஒரு நீதிபதி. ஆசிரியர்கள் போராட்டத்தில் “நீங்கள் நீதிமன்றத்திற்கு கட்டுப்படவில்லை என்றால் உங்களது கோரிக்கை வழக்குகளை ஏற்கமாட்டேன்” என்று சிறுபிள்ளை போலப் பேசுகிறார் நீதிபதி.

நீதித்துறை இப்படி என்றால் ஊடகத்துறை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு விவாதத்தில் ‘திருப்பதியில் 18 தலித் அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்’ என்று ஒரு பி.ஜே.பி ஆதரவாளர் பொய் சொல்லுகிறார். மறுத்துப் பேச ஆள் இல்லை.

கௌரிலங்கேஷ் நடத்திய லங்கேஷ் இதழ் ஆர்.எஸ்.எஸ்–ஐ கடுமையாக அம்பலப்படுத்தியது. கௌரி லங்கேஷ்-ன் சகோதரர்  பி.ஜே.பிக்குச் சென்றுவிட்டார். சகோதரரைப் புறக்கணித்து லங்கேஷ் இதழை நடத்தினார் கௌரி லங்கேஷ். விளம்பரம் வெளியிடாத பத்திரிகை என்ற சிறப்பை அவரது பத்திரிகை பெற்றது.

இறுதிக்காலத்தில் தன்னைவிட்டு விவாகரத்து வாங்கிப் பிரிந்து வாழ்ந்த கௌரி லங்கேஷ் பிரிவிற்குப் பிறகும் காட்டிய பரிவை அவரது கணவர் பதிவு செய்திருக்கிறார். எவ்வளவு உயர்ந்த மனிதாபிமானி என்பதை எடுத்துக்காட்டும் எண்ணற்ற சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பெரும் மனிதாபிமானியும், பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிரான போராளியுமான கௌரி லங்கேஷ்-க்கு செலுத்தும் அஞ்சலி என்பது அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வதுதான்” என்றார்.

இறுதியாக நிறைவுரையாற்றிய மூத்தப்பத்திரிகையாளர் அருள் எழிலன் பேசியதாவது,

“பெண் ஒருவர் மீது மோட்டார் வாகனம் மோதி பெண் இறந்துவிடுகிறார். அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் ‘மாட்டின் மீது மோதாமல் பெண்மீது மோதினேன். பெண் இறந்தற்காக ஏதாவது தண்டனை கிடைக்கலாம். மாட்டின் மீது மோதியிருந்தால் கொலை செய்யப்பட்ருப்பேன்” என்றார்.

முட்டவரும் மாட்டைக் கல் எறிந்து விரட்டியதற்காகப் பெண்ணை அடித்தார்கள் என்றால் எப்படிப்பட்ட நிலைமை என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

சக பத்திரிகையாளன் என்ற முறையில் இந்த அபாயத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன். உயிரைப் பறிப்பார்கள் என்பதை கௌரி லங்கேஷ் உணர்ந்திருக்கவில்லை. மதவெறியர்கள் செயல்பாடுகளை நேரில் சென்று பார்த்தவன் என்ற முறையில் கூடுதலாகவே நான் உணர்ந்திருக்கிறேன். உணர்ந்தே கடமையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

பார்ப்பனர்களுக்கெதிரான போராட்டம் நடத்தப்பட்ட தமிழகத்தில் மண்டைக்காடு கலவரம் நடந்ததை மறக்கமுடியாது. விவேகானந்தர் பாறைதான் அதன் தொடக்கம். ஒரு தாய் மக்களாகப் பழகிய மீனவர்கள், நாடார்கள் எதிரிகளாகப் பிளவுபட்டு மோதிக்கொண்டார்கள். ஆறு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். கோவை கலவரத்தை நடத்தினார்கள். அது எடுபடவில்லை.

போராட்டச் சூழலில் நடுநிலை என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் நடுநிலையானது என்று நான் நினைக்கிறேன்.

ஊடகங்களில் விவாதம் என்ற பெயரில் நான்கு பேரில் ஒருவர் பி.ஜே.பி, மற்றொருவர் மோடி ஆதரவாளர், மூன்றாவது நபர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் அவரும் பி.ஜே.பி மூன்று பேரும் சேர்ந்து நெறியாளரை மிரட்டுவார்கள். விவாதத்தில் மதிமாறனுக்கு எதிராகப் பேசிய ஆர்.எஸ்.எஸ் நாராயணன் “அதற்கான விலையைக்” கொடுக்க வேண்டும் என்றார். அவர் கூறும் விலை என்பது என்ன? ஜனநாயகமே இல்லாமல் ஜனநாயகவாதியாக நடிப்பதுதான் இன்றைய ஊடகத்தின் நிலை” என தனது உரையில் பேசினார்.

நிறைவாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது.கொட்டும் மழையிலும் 100 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

-வினவு செய்தியாளர்.

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடி வரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் !

77

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம் – பாகம் 3

1993-ம் வருடத்தில் போர்னோ உலகில் நுழைந்தேன். இது நாள் வரை ஒரு விபச்சாரியாக, ஆபாச நடன மங்கையாக வாழ்ந்த எனக்கு நடிப்பு மற்றும் வெகு இயல்பாகப் பொய் பேசும் திறமை நன்றாக வளர்ந்திருந்தது. பணத்திற்காக உடல், உடலுக்காகப் பணம்; இதற்காகத் தான் எல்லாமே என்ற புரிதலில் போர்னோ உலகில் நுழைந்தேன்.

முதல் நாள் ஷூட்டிங்கிற்காக நான் தயாராகினேன். தலைமுடிக்கு வர்ணம் பூசி, அழகான குட்டைப் பாவாடை அணிந்து ஒரு ஹாலிவுட் நடிகையைப் போன்று என்னை அலங்கரித்துக் கொண்டு கொஞ்சம் மதுவும் அருந்தி விட்டு அந்த இரகசிய வீட்டிற்குள் சென்றேன். அந்த வீட்டிற்குள் நுழைந்தவுடனே ஒரு கரும்புகை என்னை ஆட்கொண்டது. ஆம் அது சிகரெட் புகை. ஒரு அறையிலிருந்து என்னை ஒரு மனிதன் அழைப்பதை உணர்ந்தேன்; ஆனால் வீடு முழுவதும் புகை படிந்திருந்ததால் அவர் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

அந்த அறையின் மூலையில் மிகப்பெரிய வீடியோ கேமரா சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கேமராவின் லென்ஸ் எதிரிலிருந்த ஒரு சோபாவை முழுதாகக் கவர் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. எனக்கு இப்போது எல்லாமே தவறாகத் தெரிந்தது. நான் தவறான உலகத்திற்குள் நுழைந்து விட்டேனா? எண்ணற்ற கேள்விகள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

ராக்சியின் போர்னோ வாழ்க்கை

நீதான் அந்த சமந்தா சொல்லியனுப்பிய பெண்ணா என்று அந்த ஆண்குரலின் கேள்வி என் சிந்தனைக்குத் தடைபோட்டது. உடனே ஆம் என்றபடி என்னுடைய மருத்துவ சோதனைச் சான்றிதழை அவரிடம் நீட்டினேன். ம்ம்ம்… நீ இந்தத் தொழிலில் சிறந்த பெயரெடுப்பாய் என்று அவர் எனக்கு சான்றிதழ் கொடுத்தார்.

சரி அடுத்த அழைப்பு வருவதற்குள் கொஞ்சம் மது அருந்திவிட்டு வரலாமென்று நினைத்து அங்கிருந்த குளியலறைக்குள் சென்று மது அருந்தினேன். சரி நான் நடிக்கப்போகும் ஆணுடன் என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்ளப்போகிறேன்?? “ஹாய்! நான் ராக்கி! இன்று நான் உங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளப் போகிறேன்! “ ம்ம்ம்…இது சரியில்லை “ஹாய்! உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி; நாம் இருவரும் இன்று நடிக்கப்போகிறோம்!“ . இது நல்ல அறிமுக வார்த்தைகளாகத் தோன்றியது. மறுபடி சில முறை கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொண்டேன்.

திடீரென ஷுட்டிங்-கிற்கு தயாராகுமாறு அந்த டைரக்டரிடமிருந்து அழைப்பு வந்தது. அங்கே சில பெண்கள் உடையில்லாமல் நின்று கொண்டிருந்தனர். சில ஆண்களும் அங்கே இருந்தனர். போர்னோ டைரக்டர் அன்றைய தினம் எடுக்கப்போகும் படம் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

கதை என்னவென்றால் ஒரு கல்லூரிப் பேராசிரியர் தன்னுடைய குறும்புக்கார மாணவிகளுக்குக் காமவிளையாட்டுக்கள் குறித்து செய்முறை வகுப்புக்கள் நடத்திக் காண்பிப்பதாம். அப்படியென்றால் நான் என்னை அறிமுகம் செய்து கொள்வதற்காகச் கண்ணாடி முன் செய்த தயாரிப்புக்கள்?? என்ன ஒரு முட்டாள்தனம் செய்தேன்; என்னையே நான் நொந்து கொண்டேன் அந்தத் தருணத்தில்.

ஒரு வழியாக நான் கேள்விப்படாத அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கதையை அந்த டைரக்டர் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு சொல்லிமுடித்து விட்டு “ஓகே..ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்” என்று சொன்னார்.

போர்னோ பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது

“லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன்” ஆண்கள் ஒவ்வொருவராக உடைகளைக் கழட்டி எறிந்தனர். என்னுடன் இருந்த சக பெண் ஒருவர் பேராசிரியராக நடிக்கவிருந்த ‘அந்த’ நபரிடம் சென்று எனக்கு நன்றாக வகுப்பு எடுக்க முடியுமா என்று கேட்டு என்னையும் காண்பித்து அவளுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியாது; எனவே அவளுக்கும் சேர்த்து வகுப்பெடுங்கள் என்று கூற உடனே எனக்குக் கோபம் வந்துவிட்டது.

எத்தனை நபர்களைப் பார்த்திருப்பேன்; சட்டப்பூர்வமற்ற அந்தத் தொழில்களிலேயே சமாளித்தவள் நான்; போர்னோ சட்டப்பூர்வமானது தானே இதில் எனக்கு என்ன கற்றுத்தரவேண்டியுள்ளது. வா! நான் உனக்குக் கற்றுத்தருகிறேன் என்று அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்தேன். உடனே டைரக்டர் “ ராக்சி! உன் நடிப்பு வெகு இயல்பாக உள்ளது! நீ வெகுவிரைவில் போர்னோ உலகின் ராணியாவாய்” என்று உசுப்பி விட்டார்.

போதாக்குறைக்கு ஜாக் டேனியல் வேறு நிறைய உள்ளே சென்றதால் எனக்கு மேலும் சாதிக்க வேண்டும் என்ற அற்ப வெறி அதிகரிக்க அந்தப் பெண்ணால் என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென டைரக்டர் குறுக்கிட்டு ஓகே இப்போது இந்தப் படத்தின் முக்கியமான காட்சிக்கு வந்துவிட்டோம்; “ராக்சி, உன் கவர்ச்சியான கண்களைக் காட்டு: கேமராவை ராக்சியின் கண்களை நோக்கித் திருப்புங்கள்” என்று கட்டளையிட்டார்.

சக பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பேராசிரியர் தன் ஆணுறுப்பை வெளியில் எடுத்து விந்தணுவை என் முகத்தின் மீது தெளிக்க விட்டார். பெருத்த அவமானத்துடன் கோபமும், அழுகையும் பீறிட்டு வர மற்றவர்களிடம் காண்பிக்க முடியாமல் அந்த நடவடிக்கையை வரவேற்பது போல நடித்தேன். நடிப்பு எனக்குப் புதிதா என்ன? எல்லாவற்றையும் மீறி சில கண்ணீர்த் துளிகள் வெளிவந்தன.

ஆஹா! என்ன ஒரு அருமையான காட்சி! என்று டைரக்டர் கைதட்டினார். உடனே அருகிலிருந்த ஆண் ஒருவர் என் மீது ஈரக் காகிதங்களை வீசினார். முகம் முழுவதும் தெளிக்க விடப்பட்ட விந்தணுக்களைத் துடைத்த அவமானம் தாங்க முடியாமல் செத்துப் போய்விடலாமா என்று நினைத்தேன். ஆனால் எக்காரணம் கொண்டு என் சோகத்தை வெளியில் யாருக்கும் காண்பிக்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருந்தேன்.

பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறையின் ஊற்றுக்கண் வேறு எதுவுமல்ல…போர்னோ தான்.

டைரக்டர் என்னைப் புகழ்ந்த கையோடு அடுத்த படத்திற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருந்தார். என் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போது டைரக்டர் என்னிடம் அந்த நாளுக்கான பணத்தைக் கொடுத்து கூடவே பிரபல போர்னோ டைரக்டர் பாபி ஹொலாந்தே -யின் விசிட்டிங் கார்டையும் என் கையில் கொடுத்து அவரைப் போய் பார் என்றார்.

கையில் பணம், இரத்த நாளங்களில் மது பானம், மனதில் எல்லையில்லா வெறுப்பு, அடுத்த போர்னோ நட்சத்திரம் ஆக வேண்டுமென்ற வெறியுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினேன்.

ஆண்கள் மீது ஏற்பட்ட இயல்பான வெறுப்பு மற்றும் போர்னோ உலகில் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் தீவிரமாக நடிக்க முடிவெடுத்தேன். லாஸ் ஏஞ்செல்சில் உள்ள வான் நைஸ்-இல் நான் நடித்த படம் போர்னோ உலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாபி ஹொலாந்தேவை ஈர்த்துவிட்டது போலும்.

என்ன ஒரு அழகான இடை உனக்கு? இது பாபி ஹொலாந்தே. கழுத்தில் ஒரு பட்டைச் செயினுடன் பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருந்தார் அவர். என்னை அழைத்து அவருடைய மடியில் அமர வைத்துத் தடவிக்கொண்டே “நீ மிகவும் அழகாக இருக்கின்றாய். என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் நடிக்கப்போகிறாய்” என்றார். எனக்கோ ஹாலிவுட் மாடல் ஆக வேண்டும் என்று விருப்பம் என்றேன். போர்னோ படங்களில் நீ சிறப்பாக நடித்தால் ஹாலிவுட் வாய்ப்புக்கள் தானாகத் தேடி வரும் என்று அவர் சொல்லியதை முழுவதுமாக நம்பிவிட்டேன்.

1993 -ல் பாபி ஹொலாந்தேவுக்காக நான் நடித்த அந்தப் படத்தை, நான் நடித்த போர்னோ படங்களிலேயே உண்மையான போர்னோ படம் என்று சொல்லலாம். பிரம்மாண்டமான பண்ணை வீட்டிற்குள் நுழையும் போதே பதற்றத்துடன் தான் நுழைந்தேன். பாபி என்னுடைய பதற்றத்தைப் புரிந்து கொண்டு என்னைத் தோளில் அரவணைத்துக் கொண்டே அங்கிருந்த ஆண்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். இவள் தான் போர்னோ உலகின் அடுத்த இராணி என்ற அளவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு ஹாய் என்ற புன்னகையுடன் தலைகுனிந்து நின்றேன். என்ன தான் போர்னோ தொழில் என்றாலும் பட்டப்பகலில் வெட்டவெளியில் நிர்வாணமாய் நிற்கும் ஆண்களிடம் சென்று எப்படி நான் கைகுலுக்க முடியும்? அதுவும் அறிமுகமே இல்லாத அந்த ஆண்களிடத்தில்?

பாபியிடம் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கே உடனடியாக விரைந்தேன். பையில் வைத்திருந்த வோட்காவை உள்ளே தள்ளி விட்டு, என்னால் இங்கு துளியும் இருக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்தேன். சில நிமிடங்களில் பாத்ரூம் கதவு தட்டப்பட்டது. யாரென்று கேட்கையில் ஒரு பெண் குரல் “ஏ! பெண்ணே எனிமா உனக்குத் தந்துவிட்டார்களா?” என்று கேட்க எனக்கு ஒன்றும் புரியாமல் “எனக்கெதற்கு எனிமா” என்று திருப்பிக் கேட்டேன். ஓ! அது தெரியாதா உனக்கு? எனிமாவைப் பயன்படுத்தி மலக்குடலைச் சுத்தம் செய்தால் தான் செக்ஸ் பொம்மையைப் உன் மலத்துவாரத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்று அந்தப் பெண் கூறினாள்.

மீதமிருந்த வோட்காவை உள்ளே தள்ளிவிட்டு, என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி நல்லது செய்வதாகப் பொய் பேசி நடித்து, என்னைப் படுகுழியில் தள்ளிய அந்த பாபியின் படத்தில் நடித்த அனுபவம் சொல்லி மாளாதது. அதைச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் என்னிடம் எனிமா குறித்து கேட்ட அந்தப் பெண் செயற்கை ஆணுறுப்பை என் மலக்குழாயில் திணித்து என்னை வதைத்த கொடுமையை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

மறுபடியும் செத்து விடலாமா என்று நினைத்தேன். இனியும் போர்னோ படங்களில் நடிக்கக்கூடாது என்று சபதமெடுத்தேன். உடனடியாக எனக்குத் தெரிந்த ஹாலிவுட் தொடர்புகளிடம் பேசியதில் ஒரு வாய்ப்பு ஒன்று கிடைத்தது. “டான் ஜுவான் டிமார்கோ” என்ற படத்தில் 250 பெண்கள் பழங்காலத்து அரசன் ஒருவனின் அந்தப்புற மாளிகையில் நிர்வாணமாக இருக்கும் காட்சி படமாக்கப்படவேண்டும். அதற்கான தேர்வுக்குச் சென்றபோது பல நூறு பெண்கள் அந்த வாய்ப்பைத் தேடி வந்திருந்தனர். அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

போர்னோவில் பெண்கள் வெறும் இறைச்சி உணவாக மட்டும்…

ஹாலிவுட் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில், பணம் பிரதான தேவையான போது வேறு வழியின்றி மீண்டும் போர்னோ உலகிற்குள் நுழைந்தேன். ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன். ஆண் மிருகங்களிடம் சிக்கி வதைபட்டு இறுதியில் எல்லா எச்சங்களையும் முகத்தில் சிந்தவிடும் அந்தக் காட்சிகள் என்னை மிகவும் பாதித்திருந்தபடியால் இனியும் ஆண்களுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன்.

கொலை மிரட்டல், பண மோசடி, நோய்கள் இப்படி எதுவுமே இங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விதித்த நிபந்தனைகள் அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டனர். எதையெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னேனோ அவையனைத்தையும் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

கொஞ்சம் கூட பாதுகாப்பில்லாத வகையில் உடலுறவுக் காட்சிகள் படம்பிடிக்கப்படும். ஆபாசப் படங்களில் கண்டிப்பாக ஆணுறை அணிய வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம். ஆனால் பார்ப்பதற்கு இயல்பாக இருக்காது என்ற காரணத்தால் ஆணுறை இல்லாமலேயே படம் பிடிக்கப்படும். மொத்தத்தில் ஆபாசப் படத்தொழிலை பாலியல் கடத்தல் தொழில் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

பெரும்பாலும் இரகசிய வீடுகளுக்குள் படம்பிடிக்கப்படுவதால் பெண் என்ற முறையில் எங்கள் குரலை உயர்த்திப் பேசக்கூட அனுமதியில்லை. பல ஆண்கள் ஒன்று சேர்ந்திருக்கையில் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? கொடுக்கப்படும் போதைப்பொருட்களை உட்கொண்டுவிட்டு அவர்கள் சொல்வதை நிறைவேற்றித்தரவேண்டும்.

ஆபாசப் படம் எடுக்கப்படும் இரகசிய வீடுகள் இயக்குனர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் இருக்கும். சில சமயங்களில் பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டி நிர்ப்பந்திப்பார்கள். சில சமயங்களில் வலி தாங்காமல் அழுகை வரும். ஒருவேளை அப்படி அழுதுவிட்டால் முகத்தில் குத்து விழும் அல்லது சம்பளம் கிடைக்காது. வாயும் வயிறும் இருக்கின்ற ஒரே காரணத்தால் வேறு வழியில்லாமல் அத்தனை பேருக்கும் ஈடுகொடுத்தேயாக வேண்டும்.

ஒரு முறை மிக மோசமான காம வெறியன் ஒருவன் என்னுடைய அனுமதியின்றி என்னுடைய மலத்துவாரத்தில் தன்னுடைய ஆணுறுப்பைத் திணித்து உடலுறவு கொண்டான். நரக வேதனையால் துடித்த எனக்கு அழுகையைக் கட்டுப்படுத்த இருந்த ஒரே வழி என்ன தெரியுமா? என் முன்னாலிருந்த நின்று கொண்டிருந்த இன்னொரு ஆணின் பிறப்புறுப்பை வலுக்கட்டாயமாக வாயில் திணித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. மிகக் கொடூரமான மனித சித்திரவதை அது.

ஆனால் இது போன்ற படங்கள் உங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டு இணையத்தில் நீங்கள் பார்க்கும் போது பிரமாதமானதாகத் தெரியும்; ஆனால் உண்மையில் அப்படியல்ல… முகம், கண், வாய் தொடங்கி பிறப்புறுப்பு வரை தெளிக்கப்பட்ட மூத்திரம், விந்தணு, இரத்தம் மேலும் மலத்துவாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆணுறுப்பில் இருந்து வெளிவரும் நாற்றம், அதை வாயில் வேறு வைத்துத் திணிப்பார்கள்; மறுப்பு தெரிவிக்க ஏது வாய்ப்பு; என்ன இருந்தாலும் நான் ஒரு இகழ்ச்சிக்குரிய பெண்ணல்லவா? எனவே இப்படி சகித்துக் கொள்ள முடியாத காட்சிகள் இங்கு மிகவும் சாதாரணம்.

பாத்ரூம்கள் குறித்து சொல்ல வேண்டியதேயில்லை. எனிமா எனப்படும் மலக்குடலைச் சுத்தம் செய்யும் மாத்திரைகள், ஆங்காங்கே வீசியெறியப்பட்ட சேவிங் பிளேடுகள்…அப்பப்பா ஏன் தான் இந்த போர்னோ படங்களை இரகசிய வீடுகளில் வைத்து எடுக்க அனுமதிக்கின்றார்களோ தெரியவில்லை. நடக்கும் வழியெங்கும் எச்சில், இரத்தம்,மூத்திரம், துடைத்தெறியப்பட்ட காகிதங்கள் என சுகாதாரம் கொஞ்சம் கூட இருக்காது. ஆனால் என்னை இந்த உலகத்திற்குள் அழைத்து வரும் முன்னர் அவர்கள் பேசியதில் என்னை வெகுவாக ஈர்த்தது சுகாதாரம் குறித்த அவர்களின் உத்திரவாதம் தான்.

சரி ஆண்களுடன் நடிக்கப்போவதில்லை என்றால் மாற்றுவழி என்ன? பெண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதுதான். அதில் எனக்கு ஈடுபாடில்லை என்றாலும் முந்தையதுடன் ஒப்பிடுகையில் சக பெண்ணைப் பார்த்தவுடன் காம உணர்ச்சி ததும்பி வழிவது போல் நடிக்க வேண்டும் அவ்வளவுதான். நடிப்பு, பொய், வெற்றுவேடம் இரத்தத்தில் ஊறிப்போய் விட்டது.

இப்படி நடித்துக்கொண்டிருக்கையில் ஒரு லெஸ்பியன் படத்தில் விந்தையான நிகழ்வைச் சந்தித்தேன்; ஆம் படுக்கையறையில் அமெரிக்க தேசியக்கொடியை மெத்தை விரிப்பாகப் பயன்படுத்தியிருந்தனர்.

என் சிறு வயதில் நான் தேசப்பற்றுடன் இருந்த நிகழ்வு இப்போது என்னைச் சூழ்ந்து கொண்டது. 1976-ம் ஆண்டு நடந்த அமெரிக்கப் புரட்சிகரக் கொண்டாட்டங்களின் 200-ம் ஆண்டு நிகழ்வின் போது என் தாய்க்கு அமெரிக்க தேசியக்கொடி பதித்த ஒரு தட்டை வாங்கி பரிசளித்தேன். அந்தச் சிறுமி எப்போதோ இறந்து விட்டாள்.

வாழ்க்கை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நன்கு அறிமுகமான போர்னோ டைரக்டர் ஒருவர் என்னை ஒரு நாள் அணுகி “ராக்சி! உன்னுடைய படங்களுக்கு இப்போது மவுசு குறைந்து கொண்டு வருகிறது. எனவே நீ ஏன் ஒரு போர்னோ நடிகையாக விபச்சாரம் செய்யக்கூடாதென்று கேட்டார். விபச்சாரமே வேண்டாமென்று தானே இந்தத் தொழிலுக்கு வந்தேன் என்று பதிலளித்தேன். இது அப்படிப்பட்ட விபச்சாரமல்ல, போர்னோ உலகில் உனக்கு இரசிகர்களாக இருக்கும் பெரிய மனிதர்களிடம் வார இறுதியைச் செலவிட்டால் உனக்கு 2500 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்றார்.

ஒரு பணக்கார வக்கீலிடம் 2,500 அமெரிக்க டாலர்களுக்கு விலை போனேன். சென்ற பிறகு தான் தெரிந்தது அந்த ஆள் ஒரு மோசமான போதை வண்டி என்று. என்ன செய்ய, இரண்டு நாட்கள் தானே. தொடர்ச்சியாக மணிக்கணக்கில் அந்த மிருகம் என்னைக் கொடுமைப் படுத்தியது. போதாத குறைக்கு ஆணுறையை வேறு அணியமாட்டேன் என்று ஆணவத்துடன் கூறி என்னைச் சிதைத்தது.

2,500 டாலர்களுடன் வீட்டிற்குத் திரும்பிய நான் இரண்டு நாட்களாகப் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. அப்படி ஒரு உறக்கமும் ஓய்வும் தேவைப்பட்டது. பிறகு மறுபடியும் ஆபாசப் படங்களில் நடிப்பது என்று வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது நான் வெகுவாக மாறிவிட்டேன்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு விபச்சாரத்தால் பாதிக்கப்பட்ட நான் ஒரு கட்டத்தில் மற்றவர்களை அதாவது என்னுடன் படத்தில் நடிப்பவர்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்த ஆரம்பித்து விட்டேன். இது போர்னோ பட இயக்குனர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுக்க, அவர்கள் மேலும் என்னை இவ்வாறு செய்யத் தூண்டினர். இப்படி என்னுடைய மிருக குணத்தை வைத்து அவர்கள் நல்ல காசு பார்த்தனர்.

ஹெர்பெஸ் நோய்த் தாக்குதலுக்குட்பட்டவரின் உதடுகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயங்கி வரும் என்னைப் போன்ற பெண்களுக்கு வரும் நோய்களுக்குப் பஞ்சமா என்ன? ஏறக்குறைய 30 படங்களில் நடித்த பிறகு எனக்கு இரண்டு கொடிய பால்வினை நோய்கள் வந்தது. அதில் ஹெர்பெஸ் (Herpes) எனப்படும் நோய் மிகக் கொடூரமானது. இதைக் குணப்படுத்த மருந்துகளும் இல்லை. ஒரு நாள் காலையில் நான் தூக்கத்திலிருந்து எழுந்த போது 103 டிகிரி அளவுக்குக் காய்ச்சல் அடித்தது. முகமெல்லாம் வெளிறிப்போய் என் முகத்தைக் கண்ணாடியில் கூட பார்க்கத் துணிவின்றி, மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவரோ உனக்கு வந்திருக்கும் ஹெர்பெஸ் நோய் இது வரை நான் கண்டிராத மிக மோசமான பாதிப்புக்களை உனக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் என்னுடைய இரத்த மாதிரிகளை சோதனைக்காக எடுத்துக்கொண்டார். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டதைப் போல உணர்த்தேன்; தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு நல்ல வழி எனக்கு அப்போது தெரியவில்லை; வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன். ஆனால் சாகாமல் பிழைத்தேன்.

என் உடலில் எங்கு பார்த்தாலும் ஹெர்பெஸ் நோயின் தாக்கம் வெளிப்பட்டது. உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு, மலத்துவாரம் என எல்லா இடங்களிலும் இந்த நோய் என்னை வாட்டி வதைத்தது. இனியும் போர்னோ உலகத்தில் இருப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்தபின் விபச்சாரத்திற்குள் நுழைவது சரியென்று பட்டது. அது மட்டுமே எனக்கு முன்னிருந்த வாய்ப்பு என்பது வேறு கதை. ஆணுறை அணிந்தால்தான் உறவு என்று நிபந்தனை விதித்து விபச்சாரம் செய்வது சாத்தியம் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கை வேறு வழியில் என்னை அழைத்துச் சென்றது…

(தொடரும்)

-வரதன்

(இக்கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்)

 _____________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா? மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !! – மோடியின் பணமதிப்பழிப்பு !

0

பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !!

”கருப்புப் பணத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லிய தாக்குதல்” என மெச்சப்பட்ட நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக்கொள்ளப்பட்ட அந்த நோக்கத்தில் கடுகளவைக்கூட நிறைவேற்ற முடியாமல், கேவலமான முறையில் படுதோல்வி அடைந்துவிட்டது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016 – 17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் வழியாக இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதனை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ”காஷ்மீரிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான கருப்புப் பணம் முடக்கப்பட்டுவிடும்” என ஆணித்தரமாக அறிவித்தார்.

இந்திய அரசு வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நவம்பர் 23, 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், ”2.4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 4.8 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பணம் வங்கிக்குத் திரும்பாது. இந்தப் பணம் முழுவதும் அரசுக்குக் கிடைத்த இலாபமாகக் கருதப்பட்டு, அந்தப் பணம் நாட்டின் அடிக்கட்டுமானப் பணிகள் தொடங்கி பலவற்றிலும் மூலதனமாகப் போடப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

”நாட்டைத் தூய்மைப்படுத்தும் மகாயாகத்தைத் தொடங்கியிருக்கின்றேன். இதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்குபெற வேண்டும். இதனால் ஏற்படும் துன்பங்களை எனக்காக, 50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார், மோடி.
ஐம்பது நாட்கள் அல்ல, கடந்த பத்து மாதங்களாகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்குக் கிடைத்தது என்ன? சமையல் எரிவாயு மானியம் ரத்து, பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வு, ரேஷன் அரிசியின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும் கத்தி, வங்கி சேவைக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. வரிக்கொள்ளை ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள்தான் பொதுமக்களுக்குக் கிடைத்த சன்மானம்.

சரி, இது போகட்டும், உள்நாட்டில் புழுங்கும் கருப்புப் பணத்தையாவது மோடி அண்ட் கம்பெனி முடக்கியதா என்றால், அதிலும் படுதோல்வி அடைந்துவிட்ட உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக 15.44 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்தன. அதில், 15.28 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது, ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை. வங்கிக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட பணம்தான் கருப்புப் பணம் என்ற அளவுகோலின்படி பார்த்தால், வெறும் 16,000 கோடி ரூபாய் பணத்தைத்தான் மோடியின் நடவடிக்கை கருப்புப் பணமாக முடக்கியிருக்கிறது.

மைய அரசின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரமொன்றில், ”2013 – 14 ஆம் ஆண்டு தொடங்கி, வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 11,000 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டப்படாத தொகையைக் கண்டுபிடித்து வருவதாக”க் கூறப்பட்டிருக்கிறது. இதோடு ஒப்பிட்டால், வெறும் 16,000 கோடி ரூபாயைக் கண்டுபிடித்திருக்கும் மோடியின் துல்லிய தாக்குதலை, நமத்துப் போன பட்டாசு என்றுதான் குறிப்பிடமுடியும்.

வங்கிக்கு வராமல் வெளியே இருப்பதாகக் கூறப்படும் இந்த 16,000 கோடி ரூபாயிலும், ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய் – 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக இந்தியா வெங்கிலுமுள்ள மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் இருப்பதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவன்றி, இந்தியாவின் அண்டை நாடான நேபாள மத்திய வங்கியிலுள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் முடக்கப்பட்ட கருப்புப் பணம் எனச் சொல்லிக்கொள்ள ஒரு பைசாகூடத் தேறாது என்பதே உண்மை.

’மலையைக் கெல்லி எலியைப் பிடித்த’ பழமொழியோடுகூட ஒப்பிடத் தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப் பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது. அதேசமயம், அவரது சுயதம்பட்ட நடவடிக்கைக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தமது வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டனர்.

பணவரத்து சுருங்கிப் போனதால், விவசாயிகள், தாம் விளைவித்த தானியங்களை விற்க முடியாமல் தெருவில் கொட்டினார்கள். கூட்டுறவு சங்க கடன்களை நம்பி சாகுபடியைத் தொடங்க எண்ணியிருந்த விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலை நோக்கித் துரத்தப்பட்டார்கள். கூலிப் பணம் கொடுக்க வழியில்லாததால், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.

திருமணத்திற்கும், மருத்துவத்திற்கும் சேர்த்து வைத்திருந்த பணம் செல்லாது போன நிலையில், பலரும் செய்வதறியாது தவித்துப் போனார்கள். ஓய்வூதியப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியாத முதியவர்கள், மருந்துக்கும் சாப்பாட்டுக்கும் வழிதேடி அலைந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வங்கி வாசலிலிலேயே உயிரைத் துறந்தார்கள்.

சிறுதொழில்களும், கடைகளும் பணத்தைப் புரட்ட முடியாமல் நசிந்து நின்றன. சிறுதொழில்களும், கட்டிட வேலைகளும் முடங்கியதால், நாடெங்கும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சில இலட்சங்களைத் தொட்டது.

பொதுமக்களின் மீது திணிக்கப்பட்ட இத்துணை துன்பங்களை, சித்திரவதைகளை மோடி அரசும், பா.ஜ.க. கும்பலும் அனுதாபத்தோடா எதிர்கொண்டனர். ”தேசத்தின் நலனுக்காக கியூவில் நிற்பதைக்கூடவா பொறுத்துக் கொள்ள முடியாது” என எகிறினார்கள், ”நாட்டின் எல்லைப் பகுதியில் நிற்கும் சிப்பாயின் கஷ்டத்தைவிடவா இதெல்லாம் பெரிது” எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள்.

”பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தையோ இலஞ்சத்தையோ ஒழித்துவிட முடியாது. காரணம், கருப்புப் பணம் என்பது இந்த அமைப்பு முறையே திரும்பத் திரும்ப உருவாக்கும் பொருளாதார நடவடிக்கை. மேலும், மொத்தக் கருப்புப் பணத்தில் 1 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாகப் புழக்கத்திலுள்ளது.

மீதமனைத்தும் சொத்துக்களாகவோ, வெளிநாட்டு வங்கி இருப்பாகவோ மாற்றப்பட்டுவிட்டது” எனச் சமூக அக்கறை கொண்ட பொருளாதார நிபுணர்களும், புரட்சிகர, ஜனநாயக அமைப்பைச் சேர்ந்தவர்களும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னபோது, அதனை அவர்களால் மறுதலித்துப் பேச முடியவில்லை.

எனினும், மோடியின் நடவடிக்கை கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது கருப்புப் பணத்தை வளைத்துப் பிடிக்கும் என அப்பாவித்தனமாக நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பது ரிசர்வ் வங்கியின் அறிக்கை வழியாக உறுதியாகியிருக்கிறது.

-செல்வம்

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மியான்மர் அரசால் குதறப்படும் ரோஹிங்கியா முசுலீம்கள் – படக்கட்டுரை

1

ரு பச்சிளம் குழந்தை அதனுடைய தாயின் மடியில் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறது. குழந்தையின் முகம், கைகள் மற்றும் உடல் முழுதும் எரிந்துள்ளது. ஒரு பெண் உடல் முழுவதுமான தீக்காயங்களுடன் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து இருக்கிறார்.

“இராணுவம், என் வீட்டைக் கொளுத்தும் போது  நான் வீட்டிற்குள் இருந்தேன். தப்புவதற்கு வழியேதுமின்றி  தீயினால் சூழப்பட்டேன். மேலும் என் முழு உடலும் எரிந்தது” என்கிறார் 30 வயது ஷாகிதா பேகம். “இந்த வலி தாங்க முடியாதது. இதை விட செத்துப்போவதே மேல்” என்று அவர் கூறுகிறார்.

இராசிடாங் கிராமத்தில் இருக்கும் ஷாகிதாவின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட தீயில் அவரது மகன்களில் மூவர் கொல்லப்பட்டனர். “அந்த வாழ்க்கை மீண்டும் ஒருபோதும் திரும்பாது” என்கிறார் அவர்.

தில்தர் பேகம் மற்றும் அவரது 10 வயது மகள் நூர் கொலிமா இருவரும் ஐந்து நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது குடும்பத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் அவர்கள் மட்டுமே. கணவர், பச்சிளங்குழந்தை மற்றும் மாமியார் என மூவரையும் அவர் வன்முறையில் இழந்திருக்கிறார்.

“எனது குடும்பத்தினர் ஆகஸ்டு 29 ஆம் தேதி தாக்கப்பட்டனர். இராணுவம் கண்மூடித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூட்டை நடத்தியது” என்று தில்தர் கூறுகிறார்.

“என் மகளும் நானும் தாக்குதலில் இருந்து எப்படியோ தப்பிவிட்டோம். இராணுவத்தோடு இருந்த இரண்டு புத்ததுறவிகள் ஒரு பெரியக் கத்தியைக் கொண்டு எங்களைக் கொல்ல முயன்றனர். நாங்கள் இறந்துவிட்டோம் என்று நினைத்தார்கள். மூன்று நாட்களாக வீட்டில் மறைந்திருந்து பின்னர் நாங்கள் தப்பினோம்.” என்று கூறினார். எல்லையை அடைய நாங்கள் சென்ற அந்த பயணம் திக்கற்றதாக இருந்தது. நான் மிகவும் வேதனையில் இருந்தேன்.” என்று தில்தர் கூறுகிறார்.

மியான்மரில் இருந்து தப்பியோடியபோது கிழே விழுந்ததில் எட்டு வயதான முகம்மது அனஸிற்கு முகத்தில் காயமேற்பட்டது. மருத்துவமனையில் அவரது மாமா சையத் ஆலம் உடன் இருக்கிறார்.

“நாங்கள் மாண்டுவா மாவட்டத்தைச் சேர்ந்த லங்காலி கிராமத்தில் இருந்து வருகிறோம். ஈகைத் திருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அங்கே தாக்குதல் நடத்தப்பட்டது” என்று சையத் விளக்குகிறார். “அருகிலுள்ள மலைக்கு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்கள் தப்பி ஓடிவிட்டோம். ஆனால் எங்களில் ஆறு பேரால் மட்டுமே இங்கு வர முடிந்தது. மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.” என்கிறார்.

வங்கதேசத்தின் துறைமுக நகரமான காக்ஸின் பஜார் நகரில் இருக்கும் சதார் மருத்துவமனையில் இத்தகையக் காட்சிகள் வழக்கமான ஒன்றாகிவிட்டன. அண்டை நாடான மியான்மரின் ராக்கின் மாநிலத்தில் மியன்மார் இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பியவர்கள் இவர்கள்.

ஆகஸ்ட் 25-ல் இருந்து 4,00,000 ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்திற்கு வந்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளினல் நடைபெற்ற மோசமான அகதி நெருக்கடிகளில் இதுவும் ஒன்று” என்று ஐ.நா. அகதிகள் அமைப்பு கருதுகிறது.

காக்ஸின் பஜார் சதார் மருத்துவமனையில் 30 வயதான ரோஹிங்கிய அகதி முகம்மது உல்லாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவமனையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதி முகாமிற்கு நோயாளிகள் அனுப்பப்படுவார்கள்.

முகம்மது அனாஸ் – இச்சிறுவனின் கிராமத்தின் மீது மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் தப்பி ஓடும் போது அவனது முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

40 வயதான ஷாகிதா பேகத்தின் உடல் முழுவதிலும் தீக்காயங்கள் இருக்கின்றன.

டாலு ஹுசைனுக்கு 50 வயதாகிறது. மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 39 ரோஹிங்கிய அகதிகளில் அவரும் ஒருவர்.

மியான்மரில் உள்ள டன்ஸெவரா கிராமத்தைச் சேர்ந்த இமான் ஹுசைன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பி ஓடும் போது அவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் எதிர்நோக்கவிருக்கும் நிச்சயமற்றத் தன்மையையும் நம்பிக்கையின்மையையும் கண்டு அச்சப்படுவதாகக் கூறுகிறார்.

இமான் ஹுசைனின் காலில் புதைந்திருக்கும் துப்பாக்கி தோட்டா ஒன்றை ஊடு-கதிர் (X-Ray) படம் காட்டுகிறது.

26 வயதான சலீம் உல்லா அவரது இடது தொடையில் சுடப்பட்டார்.

காயமடைந்த தன்னுடைய 10 வயது மகள் நூர் அருகே தில்தார் பேகம் அமர்ந்திருக்கிறார். அவர்களது குடும்பத்தில் அவர்கள் மட்டுமே உயிர் தப்பியவர்கள்.

சதார் மருத்துவமனையில் கடந்த ஒன்பது மாதமாக 25 வயதான ஷேக்கீபா ஒரு செவிலியராக     பணிபுரிந்து கொண்டிருக்கிறார். ரோஹிங்யா அகதிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஆறு முதல் எட்டு வார்டுகளில் ஒன்றான இந்த வார்டுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் அவர் மாற்றப்பட்டார். “மருத்துவமனையில் தற்போது நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார். “புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பினாலும் (International Organization for Migration) மருந்துகள் வழங்கப்படுகின்றன” என்று மேலும் கூறினார்.

மருத்துவமனையில், ரோஹிங்கியா  அகதிகள் சேர்க்கை எண்ணிக்கையை காட்டும் ஒரு தகவல் பலகை.

கடுமையான தீக்காயங்களினால் துயருறும் பச்சிளம் குழந்தை முகம்மது ஹரிஸ்-ஐ தனது மடியில் கிடத்தியிருக்கிறார் அவனது தாய் குர்ஷீதா பேகம். மியான்மர், புச்சிடோங் மாவட்டத்தின் தாமி பகுதியிலிருந்து வந்தவர்கள் அவர்கள். குர்ஷீதாவின் கணவர் மற்றும் ஐந்து குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். வன்முறையில் இருந்து தப்பி ஓடும் போது அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

“அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதாக நான் வலிமையாக உணர்கிறேன்” என்கிறார் அவர்.

நன்றி : அல்ஜசீரா

_____________

இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

0

வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !

வெள்ளாற்றை பாதுகாப்போம் ! மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம் !! இனியும் தாமதித்தால் வெள்ளாறு செத்துவிடும் !!! என கடலூர் மாவட்டம் கூடலையத்தூர் பகுதி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி சுற்றுப் பகுதி விவசாயிகள் மக்கள் அதிகாரம் அமைப்புடன் இணைந்து வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடி வருகின்றனர்.

அதனடிப்படையில் மணல் குவாரியை கடந்த 26.08.2017 அன்று திரளான விவசாயிகள், மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என குவாரியை முற்றுகையிட்டு ஆற்றில் இறங்கிப்போராடினர். போராட்டத்தை தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட போலீசு போராடுபவர்களை மிரட்டிப்பார்த்தது. ஆனால் போரட்டத்தின் வலிமை கண்டு பின்வாங்கியது.

கடந்த மாதம் 26 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது மக்கள் அமைத்த பந்தலைப் பிடுங்கும் போலீசு

பின்னர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை நம்பி மக்கள் களைந்து சென்றனர். ஆனால் மக்கள் போராட்டங்களை முதுகில் குத்தும்விதமாக காவல்துறையும், அதிகாரிகளும் தற்போது நடந்து வருகின்றனர். போராட்டத்தில் முன்னணியாக இருந்தவர்கள் மீது பொய் வழக்கு பூச்சாண்டி காட்டுகிறது போலீசு.

ஆனால் பொய் வழக்குகளால் போராட்டங்களை ஒடுக்க முடியாது என அடுத்தடுத்த போராட்டங்களுக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையில் தலைமைச் செயலருக்கு போலீசு மற்றும் அதிகாரிகளின் மிரட்டல் குறித்து கடிதம் அனுப்பியுள்ளனர் வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர். அந்தக் கடிதம் இங்கே தரப்பட்டுள்ளது.

***

அனுப்புதல்

கா.ஆசைத்தம்பி, வயது 45 த/பெ காசிநாதன்,
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்,
கூடலையாத்தூர், காவாலக்குடி அஞ்சல்,
திருமுட்டம் வட்டம். கடலூர் மாவட்டம்.

பெறுதல்

உள்துறைச் செயலாளர்   அவர்கள்
தலைமைச் செயலகம்,
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, .சென்னை.

அய்யா வணக்கம்,

நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். விவசாய தொழில் செய்கிறேன். வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பில் கூடலையாத்தூர் கிராம ஒருங்கிணைப்பாளாராக உள்ளேன். வெள்ளாற்றங்கரையில் உள்ள பல்வேறு கிராம மக்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டம், திருமுட்டம், தாலுக்கா கூடலையாத்தூர் வெள்ளாற்றில் கடந்த இரண்டு மாத காலமாக அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. பொதுப்பணித்துறைதான் நேரடியாக இணையதளம் மற்றும் டி.டி மூலமாக இரண்டு யூனிட் மணலுக்கு 1,080 ரூ என பெற்றுக்கொண்டு  லாரிகளில் ஆற்றிலேயே ஜே.சி.பி மூலம் நிரப்பட்டு கிராம சாலை வழியாக திருமுட்டம், சேத்தியா தோப்பு வழியாக தமிழகத்தின் பல ஊர்களுக்கு செல்கிறது.

கூடலையாத்தூர் வெள்ளாற்றில் அதே இடத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக 2005 முதல் இதற்கு முன்பே மணல் குவாரி அமைக்கப்பட்டு அளவுக்கு அதிகமாக மணல் அள்ளபட்டுவிட்டது. பல இடங்களில் களிமண் தெரிகிறது. இதனால் மழை பெய்தாலும் தண்ணீரை தேக்கி வைக்க இயலாமல் கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் 50 அடி இறைத்த போர் இன்று 250 அடி ஆழத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் கீழே இறங்கி விட்டது. விவசாயம் பெருமளவில் பாதித்து வருகிறது. வெள்ளாற்றங்கரையில் சுமார் 2,500 போர்வெல் உள்ளது. பல போர் வெல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சுமார் 70 சதவீத போர் செயலிழந்து விட்டது. மேலும் வீராணத்தில் தண்ணீர் இல்லாததால் பல இடங்களில் ஆழ்துளை போர் போட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடலூர் ரசாயண ஆலைகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி மாறிவருகிறது. நெய்வேலி சுரங்கம் பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி வருகிறது. அருகில் கடல் நீர் உள்ளே புகும் அபாயம் என கடலூர் மாவட்ட விசாயிகள் மட்டுமல்ல பொதுமக்களும்  நீராதரத்திற்கு  சுகாதாரமான குடிநீருக்கு பெரும் அபாயத்தில் உள்ளனர்.

கூடலையாத்தூர் மணல் குவாரியால்  மணல் அள்ள வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் கிராமம் தோறும் ரயில் வண்டி போல் வரிசை கட்டி நிற்கிறது. வெளியூர் லாரி ஓட்டுநர்கள் இரண்டு மூன்று நாள் வரை  தங்குவதால் குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து போடுவது, தொடர்ந்து லாரி நகர்த்துவதால் சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பது, இதனால் பொது மக்களின் பள்ளி மாணவர்களின், அன்றாட வாழ்க்கை பாதிக்கிறது. பயணிகள் பேருந்துகூட தற்காலிகமாக நிறுத்தபட்ட அவல நிலை. இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர், சேத்தியா தோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மேலும் மாவட்ட ஆட்சியர், பொது பணித்துறை அதிகாரிகள் என உரிய அதிகாரிகளுக்கு பல முறை நேரிலும் மனுவாகவும் அனுப்பினோம். மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

மேலும் போலீசாரின் துணையோடு அதிமுகவினர் சிலர் லாரி ஒன்றுக்கு ரூபாய் 500 – 1,000 என மாமுல் கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர். இவ்வாறு வசூலித்த தொகை மட்டும் சுமார் எழுபது லட்சம் இருக்கும். தினம்தோறும் திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷாவிற்கு இருபதாயிரம் லஞ்சமாக பணம் கொடுக்கின்றனர். காவல் நிலையத்திற்கும் மாமூல் செல்கிறது. உள்ளுரில் வசூல் செய்வதில் கோஷ்டி பூசல் எற்பட்டு அமைதி குலைகிறது. தாய் போன்ற வெள்ளாறு சிதைக்கப்படுவதற்கு அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். பர்மிட் இல்லாமல் லாரிகள் மணல் ஏற்றி செல்வது, அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி செல்வது என தினம்தோறும் தொடர்கிறது.. மாநில சுற்றுசூழல் ஆணையம் வரையறுத்துக் கொடுத்த உத்திரவில் சர்வே எண் 8-ல் 19 ஹெக்டேர் என்பதை தாண்டி கண்ணில் தெரிந்த வரை வெள்ளாற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது. ஆறும் வறண்டு போய் விட்டது.

ஆற்று மணல் கொள்ளை போவது பற்றியும், இத்தகைய முறைகேடுகள் பற்றியும் பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. சரவணன் அவர்களிடம் கைபேசி மூலமும், நேரிலும் புகார் தெரிவித்தோம். அது போல் திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா அவர்களிடமும் இவ்வாறே புகார் தெரிவித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இவர்கள் இவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ஆற்றுமணலை கொள்ளையடிக்க அனுமதித்து வருகின்றனர்.

வெள்ளாற்றை காக்க மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க காவல் துறை மற்றும் உரிய அதிகாரிகளிடம்  தெரிவித்து விட்டு 26-8-2017 அன்று காவாலகுடி, கூடலையாத்தூர், அகர ஆலம்பாடி, பவழங்குடி, ஓட்டி மேடு, பெருந்துரை, கானூர், முடிகண்ட நல்லூர் என பல் வேறு கிராம மக்கள், மற்றும் வெள்ளாற்றுபாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், பல கட்சி பிரமுகர்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆற்றிலிறங்கி அமைதியான முறையில் போராடினர். சுட்டெரிக்கும் வெயிலிலும் பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என கலந்து கொண்டனர்.

திருமுட்டம் ஆய்வாளர் பீர்பாஷா மற்றும் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. திரு. அருள் சந்தோஷ்முத்து மக்களுக்கு குடி நீர் கொடுக்க விடாமல் மிரட்டி தடுத்தனர். பெண்கள் தாகத்தில் தவித்தனர். சிதம்பரம் கோட்டாட்சியரிடம் முறையிட்டதும் குடிநீருக்கு அனுமதி அளித்தனர். சிதம்பரம் கோட்டாட்சியர் அவர்கள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். ஆற்றில் நடக்கும் முறைகேடுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கோரிக்கை குறித்து கோட்டாட்சியர் கைபேசி வழியாக பேசினார். பிறகு இந்த குவாரியை தற்காலிகமாக மூட உத்திரவிடுகிறேன் என பொது மக்களிடம் அறிவித்தார். அனைவரும் அமைதியான முறையில் கலைந்து சென்றோம்.ஆனாலும் வெயில் கொடுமைக்கு கொண்டு வந்த சாமியாணாவையும் போலீசார் பிடுங்கி கொண்டனர். போராட்டம் நடைபெற்ற தினத்தன்று மணல் குவாரி இயக்காமல் நிறுத்தபட்டு இருந்தது.

ஆனால் எந்த முன் அறிவிப்பும் பேச்சுவார்த்தையின்றி 30-8-2017 முதல் மணல் குவாரி மீண்டும் செயல்பட துவங்கியது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி விடக்கூடாது என என் பெயரிலும் மேலும் சிலர் பெயரிலும் பொதுப்பணித்துறை பொறியாளர் திரு சரவணனிடம் பொய் புகார் பெற்று திருமுட்டம் போலீசு ஆய்வாளர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளார்.

மீண்டும் ஊரில் அதிமுகவினர் லாரிகளுக்கு 1,200 வரை மாமூல் வசூலித்து திருமுட்டம் காவல் ஆய்வாளருக்கு நாள் தோறும் இருபதாயிரம் மாமூல் தருகிறார்கள். பொதுப்பணித்துறை பொறியாளர் சரவணனும் இது போல் மணல் கொள்ளை முறைகேடுகளுக்கு உடந்தையாக உள்ளார். பல லாரிகள் பர்மிட் இல்லாமல் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி செல்கிறது என கிராம மக்கள் எங்களிடம் தொடர்ந்து முறையிட்டனர். நாங்களும் அதிகாரிகளுக்கு தெரிவித்து கொண்டே இருந்தோம் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்களை அச்சுறுத்தும் வகையில் பேசினர். மணல் முறைகேடு தடுக்கபடவில்லை.

இந்நிலையில் 9-9-2017  அன்று காலை சுமார் 8-30 மணியளவில் கூடலையாத்தூர் குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மக்கள் அச்சுறுத்தும் வகையில் சென்றது. இது பற்றி திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா அவர்களிடம்  கைபேசியில் தகவல் சொன்னேன். மணல் லாரி மேட்டரில் தலையிடாதே, ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்  குண்டாசில் உள்ளே தள்ளி விடுவேன், உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தும் வகையில் பேசினார். பிறகு  பொதுப்பணித்துறை பொறியாளர் திரு. சரவணன் அவர்களிடம் இது பற்றி புகார் தெரிவித்தோம். அவரும் “ஆசைதம்பி ரொம்ப ஓவரா போறீங்க நல்லதல்ல, எல்லாம் தெரிஞ்சுதான் நடக்குது உங்களுக்கு வேணும்னா ஏதாவது வாங்கிங்க எது நடந்தாலும் உங்க மேல் வழக்கு போடுவேன், ஒதுங்கி கொள் என மிரட்டும் வகையில் பேசினார். உடனே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிதம்பரம் கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தோம். அதிகாரிகள் வரும் வரை தாமதமானதால் பல லாரிகள் தப்பித்து சென்று விட்டன. பிறகு 15 லாரிகளை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மடக்கி பிடித்தோம். பிடிபட்ட லாரிகள் அனைத்திலும் பர்மிட் இல்லை. அளவுக்கு அதிகமாக சுமார் 4 யூனிட் மணல் ஏற்றி யிருந்தது. அனைத்த தொலைகாட்சிக்கு ஊடகங்களுக்கும் தகவல் தெரிவித்து  திருட்டு மணல் லாரிகளை சிறைபிடித்தோம்.

சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் விஜயவேந்தன் வந்தார். உளவு பிரிவு பேலீசார் அன்பரசன் ஏன் நேரிடையாக எஸ்பியிடம் பேசினீர்கள் என்னிடம் சொல்ல வேண்டும் என எங்க கூட இருந்த கிருஷ்ணன ராஜை கடிந்து கோபமாக பேசினார். பிறகு காவல்துறை அதிகாரிகள் திருமுட்டம் காவல் நிலையத்தில் ஆறு வண்டிகள் மீது மட்டும் வழக்கு போட்டு பறிமுதல் செய்தனர். பிற வண்டிகளை அனுப்பி விட்டனர். பர்மிட் இல்லாமல் ஓவர் லோடு லாரி மணல் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் வரை அபராதம் கட்ட வேண்டும்.

அரசு கணக்கில் வராமல் மணல் லாரிகள் செல்ல உடந்தையாக இருந்தது, வெள்ளாற்றில் மணல் கொள்ளைஅடிக்க கனிம வள திருட்டு குற்றங்களுக்கு பொது பணித்துறை பொறியாளர் சரவணன் மற்றும் அதை தடுக்க வேண்டிய காவல் ஆய்வாளர் திரு பீர்பாஷா தடுக்காமல் மணல் கடத்தலுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதித்த குற்றத்திற்கும், திருட்டு மணல் லாரிகளை பிடித்து கொடுத்த ஆசைத்தம்பி மற்றும் கிராம மக்களை அச்சுறுத்தியது ஆகிய செயல்களுக்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவம் எங்கள் ஊரை சேர்ந்த மற்றும் காவாலகுடியை சேர்ந்த  பொதுமக்கள் பலருக்கும் நேரிடையாக  தெரியும்.

இப்படிக்கு
தேதி – 15-9-2017
உண்மையுடன்

ஆசைத்தம்பி

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மலேரியாவில் இருந்து மக்களை காப்பாற்றிய ரொனால்ட் ரோஸ்

1

ருத்துவத்தின் சாதனைகள் மனிதனை பல கொள்ளை நோய்களில் இருந்து விடுதலையடைய வைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அறிவியலின் வளர்ச்சி, மருத்துவர்களின் உழைப்பு! என்னதான் அறிவியலின் முன்னேற்றம் அதிகரித்திருந்தாலும் சில நோய்களை தடுப்பது இன்றும் பெரும் போராட்டமாகவே உள்ளது.

அந்த வகையில் மலேரியா நோய் மனித குலத்தின் அச்சுறுத்தலாகவே உள்ளது. இக்கொடிய நோயை ஒழிக்க  இன்று வரை போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பினும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, இந்நோயை ஒழிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ்.

மலேரியா நோய் பெரும்பாலும் வெப்பமண்டல நாட்டில் தான் அதிகமாக தோன்றும். பலம் பொருந்திய படைகள்  கூட மலேரியா என்றால் நடுங்கும். அந்த அளவிற்கு கொடியது. ஒருகாலத்தில்  ஐரோப்பா  மற்றும் வட அமெரிக்காவில் மலேரியா நோய்த்தொற்று மிகவும் அதிகமாக காணப்பட்டது. பிறகு இந்தியாவையும் இந்நோய் ஆட்டிப்படைத்தது.

இந்நோய்க்கும், கொசுவிற்கும்  நிறையத் தொடர்புண்டு. கொசுக்கள் நிரம்பிய பகுதிகளில் இருந்து மலேரியா தோன்றும் என்பதை முதலில் கண்டுபிடித்தவர் டேவிட் லிவிங்க்ஸ்டன் .

அசுத்த நீரிலும், நீர் நிலைகளிலும், நதி முகத்துவாரத்திலும் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும். பெரும்பாலும் சதுப்பு நிலங்களே கொசுக்களின் பிறப்பிடம் என்பதால் இந்நோயை “சதுப்பு நிலசுரம்” என்றும் கூறுவார்கள். இவை சதுப்பு நில விசக்காற்றின் மூலமும், ஈரக்காற்றின் மூலமும் தான் பரவுகிறது என்றும் கூறுகிறார்கள்.

இந்நோய் தாக்கப்பட்டவரின் உடல் நடுங்கிக் கொண்டிருக்கும், உடலில் சூடுபிடிக்க முடியாது, கொஞ்ச நேரத்தில் காய்ச்சல் தோன்றும், உடல் வெப்பநிலை அளவு அதிகமாக இருக்கும், காய்ச்சல் திடீரென்று மாறி வியர்வை அதிகமாக சுரக்கும், பிறகு காய்ச்சல் நின்றுவிடும், ஆனால் நோய் தணியாது, இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நோய் தோன்றும். இது போன்ற சமயங்களில் ஆள் இறந்து போகக்கூடும்.

இந்நோய் தீர்வது மிக அரிது, இந்நோய்க்குரிய மருந்து “கொய்னா” என்பதாகும். சின்கோனா மரப்பட்டையில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்நோய்க்குரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் நோயின் மூலக்காரணம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் மர்மமாகவே இருந்தது. இந்த மர்மத் திரையை கிழித்து மனிதகுலத்தை பெரும் அபாயத்தில் இருந்து காப்பாற்றியவர். இந்நோய் கொடிய தன்மையும், விரைந்து பரவும் குணமும் கொண்டவை. இந்நோய் தோன்றினால் மனிதன் மறைந்து தான் ஆக வேண்டும் என்ற சரித்திரத்தை மாற்றியவர் ரோஸ்.

1857 -ம் ஆண்டு மே மாதம் 13 -ம் தேதி “அல்மோரா” என்னும் ஊரில் பிறந்தார். இந்தியாவில் முதல் சுதந்திரப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். இவருடைய தந்தை இந்தியாவில் பிரபலமான படைத்தளபதியாக விளங்கியவர். ரோஸ் இங்கிலாந்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் பள்ளிப்படிப்பை  முடித்தார். 1874 -ம் ஆண்டு இலண்டனில் உள்ள “செயின்ட் பர்தலோமியஸ்” கல்லூரியில்  இவருடைய தந்தையால் வலுக்கட்டாயமாக மருத்துவப்படிப்பில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவத்தின் மீது நாட்டம் கொண்டிராத ரோஸ் வேறு வழியின்றி தந்தையின் கண்டிப்புக்கு பயந்து மருத்துவ படிப்பில் தனது கவனத்தை செலுத்தினார்.  ஆர்வமும் உற்சாகமும் இல்லாமலேயே மருத்துவராக பட்டமும் பெற்றார்.

மீண்டும் தந்தையின் வற்புறுத்தலால் 1881 -ல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த ரோஸ் மருத்துவராக பணியாற்றிட முனைந்தார். இருப்பினும் ரோசின் மனவோட்டம் எல்லாம் இசையிலும், புத்தகம் வாசிப்பதிலும் தான் இருந்தது. தன் மனம் போல் நடப்பதற்கு நேரம் ஒதுக்கி, இளவயது விருப்பமான  கவிதைகள் படிப்பதிலும், சங்கீதம் பயில்வதிலும் ஓய்வு  நேரத்தை பயன்படுத்தினார்.

பிரெஞ்ச், ரோமன், இத்தாலி, ஜெர்மன் என்று பல மொழிகளை கற்றுத்தேர்ந்தார்.  இசையிலும் வல்லவரானார். எங்கு சென்றாலும் தன்னுடைய பியானோவையும், நிறைய புத்தகங்களையும் கொண்டு செல்வது அவருக்கு பிடித்தமானது. உடற்பயிற்சி, உளப்பயிற்சி என்று அனைத்திலும் கவனம் செலுத்தினார். மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என்று பல வழிகளில் நாட்கள் கடந்தது.
ரோஸ் என்றுமே தன் மனசாட்சிக்கு விரோதமாக நடந்ததில்லை. மருத்துவ துறையில் மனமில்லாமல் இருந்தாலும் அதற்கு விரோதமாக நடந்து கொண்டதில்லை.

சிறிதுகாலம் கழித்து மருத்துவத் துறையில் இவரின் ஈடுபாடு அதிகரித்தது. மனித குலத்திற்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்று எண்ணினார். மனித இனத்திற்கு பெரும் எதிரியானது  நோய். இந்த நோய்களின் காரணத்தை அறிந்து தடை செய்து விட்டால் மனிதனுக்கு நோய் பரவாமல் தடுத்து விடலாம் என்று கருதி முதன் முதலாக மலேரியா நோயின் காரணங்களை அறிய முயற்சித்தார்.

மலேரியா நோய்க்கான ஆராய்ச்சி :

ரோஸின் பங்களாவை சுற்றி நிறைய பூந்தொட்டிகள் உள்ளன. இந்த தொட்டிகளில் நிறைய கொசுக்கள் உற்பத்தி ஆகி இருப்பதை கண்ட ரோஸ் அதனை அப்புறப்படுத்தினார். மனிதனுக்கு தொல்லை கொடுக்கும் கொசுக்கள், பூச்சிகள் அனைத்தையும்  அழித்துதான் தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
முதலில் தனது ஆராய்ச்சியை கொசுக்கள் மேல் திருப்பி அவற்றை ஆராய முயற்சித்தார். கொசுக்கள் எப்படி உருவாகின்றன, அதனால் மனிதனுக்கு என்னென்ன தீங்கு, எத்தனை வகை கொசுக்கள் உள்ளன என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.

பல வகையான கொசுக்களை “லார்வா” கொடுத்து வளர்க்கவும் தொடங்கினார். தனது நீண்ட நாள் ஆராய்ச்சியின் பயனாக “கிரேசிலர்” மற்றும் “கடிவாளம்” ஆகிய இரண்டு வகை கொசுக்களை கண்டுபிடித்தார்.

கொல்கத்தா ஆய்வகத்தில் தனது மனைவி மற்றும் உதவியாளர்களுடன் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ்.

இந்த ஆராய்ச்சியினூடே மலேரியா நோயின் மர்மத்தையும் ஆராய்ச்சி செய்தார். 1878 -ம் ஆண்டு பிரெஞ்ச் ராணுவ மருத்துவர் “அல்போன் சேலாவன்” என்பவர் மலேரியா தாக்கப்பட்ட மனிதனின் ரத்தத்தில் சில கரும்புள்ளிகள் தென்படுகின்றன என்றும், அக்கரும்புள்ளிகளே மலேரியா நோய்க்கு காரணமென கண்டறிந்து, இந்த கரும்புள்ளிகள் உற்பத்தியாகி உடல் முழுவதும் பரவி மலேரியா என்ற நோயை உருவாக்குகிறது என்பதை கூறினார்.

இந்த கரும்புள்ளிகள் உடலில் எவ்வாறு உருவாகிறது? உணவில், தண்ணீரில், மலேரியா பாதிக்கப்பட்டவரின் சுவாசத்தை சுவாசிப்பதால் உருவாகிறதா, ஏதேனும் பூச்சிக்கடியினால் ரத்தத்தில் உருவாகிறதா என்று தேட ஆரம்பித்தார். இதற்காக ரோஸ் பட்ட சிரமங்கள் அளப்பரியது.

ஒரு நாள் தன் நண்பருடன் ஒரே வீட்டில் உறங்கினார். நண்பர் கொசு வலையின்றியும், ரோஸ் கொசு வலையிலும் தூங்கினார். ஆனால் நண்பருக்கு மட்டும் மலேரியா தாக்கப்பட்டது.  இது ரோஸிற்கு வியப்பை ஏற்படுத்தியது. ஒரே உணவு, ஒரே தண்ணீர் அருந்தினோம். ஆனால் நண்பனுக்கு மட்டும் நோய் எப்படி வந்தது என்று சிந்தித்தார். நண்பர் பாதிக்கப்பட்டதற்கு காரணம் கொசு தான் என்ற முடிவிற்கு வந்தார்.

இதன் பிறகு தனது ஆராய்ச்சியில் தீவிர கவனம் செலுத்தினார். தனது பொழுதுபோக்கு, நண்பர்களிடம் உரையாடுவது  உள்ளிட்ட எல்லாவற்றையும் துறந்து முழு ஆராய்ச்சியில் இறங்கினார்.

1894 -ல் “பாட்ரிக் மான்சன்” என்ற மருத்துவர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அவர் மலேரியா நோய் கொசுவின் மூலம் தான் பரவுகிறது. கொசு உணவுப்பொருளில் தன் நச்சுத் தன்மையை செலுத்துவதால் அது உடலில் சென்றவருக்கு நோய் உண்டாக்கும் என்றார். அதனை அதனை ரோஸ் முழுமையாக நம்பவில்லை.

தொடர்ந்து மலேரியா நோய் தாக்கப்பட்ட ஒருவரை ஆராய்ந்தார். என்ன ஆராய்ந்தாலும் கொசுவினால் பரவுகிறது என்பதை தவிர அவரால் வேறு எதையும் அறிய முடியவில்லை.

கொசுக்கள் எவ்வாறு மலேரியா நோயினைப் பரப்புகிறது என்பதைப் பற்றிய ஆய்வுக் குறிப்பு

மலேரியா பாதித்த ஒருவரின் உடலில் கடித்த கொசுவினை பிடித்து உருப்பெருக்கி கண்ணாடி வழியே ஆராயத் தொடங்கினார். மலேரியா நோய்க்கிருமிகள் அந்த கொசுவின் வயிற்றில் இருப்பதை கண்டறிந்தார். ஆனால்,  நோய் பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்நோய் கிருமிகள், நல்ல ஆரோக்கியம் உள்ளவருக்கு எப்படி கொண்டு செல்லப்படுகின்றன என்பது புதிராகவே இருந்தது. இந்த உண்மையை கண்டறிய பல வகையான கொசுக்களை பிடித்து ஆராய்ச்சி செய்தார். இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகினார். இந்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வை இந்தியாவிலுள்ள “பேகம் பேட்” என்னும் இடத்தில் இருந்த ஆராய்ச்சி மையத்திலேயே கழித்தார்.

இந்த ஆராய்ச்சி மையத்தில் கொசுக்கள் பறந்து செல்லுகின்ற அழகை ரசிப்பார். கொசுக்கள் பறந்து விடும் என்பதற்காக தன் ஆராய்ச்சி மையத்தில் இருந்த மின் விசிறிகளைப் போடுவதைக்கூட நிறுத்தி விட்டார். கடும் வெயிலில் கூட அதனை போடுவதில்லை. வியர்வை சொட்ட சொட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அனைத்து சிரமங்களையும் பொருட்படுத்தாமல் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

ஒருமுறை ஆழ்ந்த சிந்தையில் இருக்கும் போது புதிய வகை கொசு ஒன்று ஆய்வகத்தில் உட்கார்ந்திருப்பதை கண்ட ரோஸ், அதனை பிடித்து ஆய்வு செய்தார். அதைப்போன்று பல கொசுக்களை ஆய்வு செய்தார்.  இந்த கொசுக்களின் தோற்றம் புது மாதிரியாக இருந்தது. இதன் வால் உயர்ந்து மேல்நோக்கி இருந்தது. இறகில் மூன்று கருப்புக்கோடுகள் இருந்தன. இந்த கொசுக்களுக்கு “அநோபில்ஸ் “ என்றும் பெயர் சூட்டினார்.

மலேரியா நோய் பாதிக்கப்பட்டவரை இக்கொசுக்களை கொண்டு கடிக்க செய்து ஆய்வு செய்தார். இந்த ஆராய்ச்சி தோல்வியே தந்தது. இதனால் நம்பிக்கையிழந்த ரோஸ் ஆராய்ச்சி செய்வதையே கைவிட்டு விட்டார்.

என்ன செய்வது, எப்பொழுதும் ஆராய்ச்சியில் காலம் கழித்த அவருக்கு பொழுது போகவே கஷ்டமாயிருந்தது. மீண்டும் தனது ஆராய்ச்சியின் மூலம் பல கொசுக்களை பிடித்து அதன் வயிற்றினை அறுத்து நுன்பெருக்கி மூலம் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சியில் கொசுவின் வயிற்றில் பல நுண்ணிய கரும்புள்ளிகள் இருப்பதை கண்டறிந்தார்.  இந்த புள்ளிகள் தான் “மலேரியா நோய்க்கிருமிகள்” என்பதை மருத்துவர் அல்போன் சேலாவன் கூறியிருந்தார்.

இவ்வாராய்ச்சியில் நோயுள்ளவரின் உடலில் இருந்து நோயுற்றவருக்கு “அநேபில்ஸ்” கொசுக்கள் வழி பரவுகிறது என்பதை கண்டறிந்தார். நோயுற்றவரின் உடலில் இருந்து எவ்வாறு அவ்வணுக்கள் செலுத்தப்படுகிறது என்பது மர்மமாகவே இருந்தது. இடைவிடாத தனது ஆராய்ச்சியின் மூலம் இம்மர்மத்தை கிழித்தெறிந்து, கொசு ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சும் போது தன் உடலில் இருந்து ஒரு வகை திரவத்தை வெளியேற்றுகிறது. பின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தன் உடலில் உள்ள கிருமிகள் அவர் உடலில் செல்லவும் அவர் உடம்பில் உள்ள நோய்க்கிருமிகள் ரத்தத்துடன் கலந்து கொசுவின் உடலில் செல்லவும் செய்கிறது என்ற உண்மையை கண்டறிந்து 1898 -ம் ஆண்டில் மலேரியாவை கொசுக்கள் தான் பரப்புகின்றன என்று இறுதியாக நிரூபித்தார்.

மலேரியாவை ஒழிக்க வேண்டுமென்றால் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதையும் நிறுவினார். அவர் கண்டறிந்த மலேரியா கொசுவின் பெயர் தான் “அநோபில்ஸ்”.  இவருடைய இந்த ஆராய்ச்சிக்காக 1902 -ம் ஆண்டு மருத்துவத்தில் ரோஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரோஸ் :

தனது கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்திய மருத்துவத்துறையை விட்டு விலகி இங்கிலாந்து சென்றார். லிவர் பூலில் அப்பொழுது தான் “ ஸ்கூல் டிரோபிக்கல் மெடிசன்ஸ்” என்னும் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அக்கல்லூரியின் முதல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இக்கல்லூரியில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் மலேரியாவை சுலபமான முறையில் குணப்படுத்தும் தடுப்பு முறைகளை கண்டுபிடிக்க முயன்றார். இவருடைய கண்டுபிடிப்பின் மூலம்  வெப்ப நாடுகள் பலவற்றில் மலேரியா தடுத்து நிறுத்தப்பட்டது.

மலேரியா ஒழிப்பை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக் கொண்ட ரோஸ் பல நாடுகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என்று பெயர் பெற்ற “சீய்ராவியோன்” என்ற நகரத்திற்கு சென்று மலேரியாவால் ஏற்படும்  மரணத்தை தடுத்தார். வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என்ற பெயர் இவரால் மாற்றப்பட்டது. அந்த மக்களின் அன்பையும் பெற்றார் ரோஸ்.

1900-ல் இஸ்மைலியா என்ற நகரத்தில் வசிக்கும் மக்கள் மூன்றில் ஒரு சதவீதம் பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டனர். அப்பகுதிக்கு விரைந்து சென்ற ரோஸ் கொசு ஒழிப்பின் மூலம் அம்மக்களை மலேரியா நோயிலிருந்து மீட்டெடுத்தார். இதனை தன் கண்டுபிடிப்பிற்கு ஓர் ஆணித்தரமான சான்று என்றும் வருணித்தார் ரோஸ். பின்னாளில் இந்நோய் ஆண்டு முழுவதும் நீடிக்கும் நோய் இல்லை என்ற நிலை இருந்தாலும் நாடு முழுவதும் இன்று வரை ரோஸின் மலேரியா ஒழிப்பு முறையை தான் பின்பற்றி வருகிறார்கள்.

மக்களுக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக இவருடைய  பெயரில் மக்களால் “ ரோஸ் இன்ஸ்டிடியூட் அன்ட் ஹாஸ்பிட்டல் பார் டிராபிக்கல் டிஸீஸ்” என்ற கல்லூரி 1926 -ல் நிறுவப்பட்டது.  பின்னாளில் இக்கல்லூரி வளர்ந்து “லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜின் அன்ட் டிராபிக்கல் மெடிசன்” என்று மாறியது. மக்களை மலேரியா எனும் கொடிய நோயிலிருந்து விடுவிக்க தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த ரோஸ் 1932  செப்டம்பர் 16 அன்று இறந்தார். அவர் மறைந்தாலும் தனது அறிய கண்டுபிடிப்பால் மக்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார் மருத்துவர் ரோஸ்.

-காவிரிநாடன் எழுதிய “மருத்துவ மன்னர்கள்” என்ற நூலில் இருந்து…

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி