ரப்பர் ஸ்டாம்ப் கோயிந்தும் ரஜினி பட ஹீரோயினும்
பாரதிய ஜனதா தெரிவு செய்திருக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து தோழர் மருதையனின் உரை
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியின் மீதான தடையானது, கால்நடை வர்த்தகத்தை அழித்து, மாரத்வாடாவின் விவசாய நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
தகிக்கும் 45 டிகிரி வெயிலில், கால்நடைகளை விற்பனை செய்ய ஒரு சந்தையிலிருந்து மற்றொன்றுக்கு நடையாய் நடக்கிறார்கள் விவசாயிகள். வாங்க விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள். பின்னர் அவற்றை விற்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினால் வாங்கத் தயங்குகிறார்கள்.
அப்பாசாஹிப் கோதுலே (45) தனது காளைகள் இரண்டினை விற்க விரும்புகிறார். ஆனால் முடியவில்லை. க்வலீம் குரேஷி (28) காளைகளை வாங்க விரும்புகிறார். அவராலும் முடியவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம், மாரத்வாடா பிராந்தியத்தின் ஔரங்கபாத் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள தேவ்கான் தான் கோதுலேயின் கிராமம். அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கிராமத்தைச் சுற்றி நடக்கும் வாராந்திர சந்தைகள் அனைத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்.
இது அதுல் என்ற ஊரில் நடக்கும் செவ்வாய்க்கிழமை சந்தை. எங்கும் மக்கள் கூட்டம். வெயிலுக்காக தலையில் வெள்ளைத் துணி ஒன்றைக் கட்டியபடி நின்று கொண்டிருக்கிறார் கோதுலே. “என் பையன் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் வேணும். இந்த ஜோடி மாட்டுக்கு பத்தாயிரத்துக்கு மேல யாரும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு பதினஞ்சாயிரமாவது வேணும்” என்கிறார் கோதுலே.
இன்னொருபுறம், ஔரங்கபாத் நகரின் சில்லக்கானா பகுதியில் வேலையின்றி அமந்திருக்கிறார் க்வலீம் குரேஷி. நாள்தோறும் நலிந்து வரும் தனது வியாபாரத்தை எப்படி மீட்டெடுப்பது என்ற ஆழ்ந்த கவலையிலிருக்கிறார். “ஒரு நாளைக்கு இருபதாயிரத்துக்கு வியாபாரம் செஞ்சிட்டிருந்தேன். (மாத வருமானம் ரூ.70,000/- முதல் ரு.80,000/- வரை)” “போன இரண்டு வருசத்துல இது கால் பங்கா கொறஞ்சிருச்சு” என்கிறார்.
“இந்த மாடுகளை விக்கிறதுக்கு சந்தை சந்தையா அலையிறேன். இதுக்கே ஆயிரக்கணக்குல செலவாகுது. எல்லா விவசாயிகளும் இப்படித்தான், மாட்டை விக்கிறதுக்கு சக்திக்கு மீறி செலவு செய்யிறாங்க” என்றார் கோதுலே.
மகாராட்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சித்தடை கொண்டு வரப்பட்டு இரண்டு வருடங்களாகிறது. 2014 ல் பா.ஜ.க. வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார். முந்தைய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆட்சிகளிலேயே விவசாயம் ஆழ்ந்த நெருக்கடிக்குள்ளாயிருந்தது. இடுபொருட்களின் விலையேற்றம், விளை பொருட்களுக்கு கிடைக்கும் விலையில் ஏற்றத்தாழ்வு, தவறான நீர் மேலாண்மை போன்ற பிற காரணிகளும் ஒன்று சேர்ந்து, கொடிய ஆயுதங்களைப் போல விவசாயிகளைத் தாக்கியது. பத்தாயிரக் கணக்கான விவசாயிகளை தற்கொலைகளுக்குத் தள்ளியது. மார்ச் 2015 ல், ஃபட்னாவிஸ், ஏற்கனவே இருந்த பசுவதைத் தடையை காளை மற்றும் எருதுகளுக்கும் நீட்டித்து சட்டம் போட்டார். விவசாயிகளின் நெருக்கடி தீவிரமானது.
மாடுகள் கிராமப்புறப் பொருளாதாரத்தின் மையமாக இருப்பதால், இத்தடையானது கால்நடைகள் சார்ந்த அனைத்து வியாபாரங்களிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியது. திருமணம், மருத்துவம், அல்லது வரவிருக்கும் பயிரிடும் பருவத்தேவைகள் போன்றவற்றிற்கு கால்நடைகளை விற்றுப் பணத்தைப் புரட்டுவது விவசாயிகளின் பழக்கம். இப்படி பன்னெடுங்காலமாக கால்நடைகளை ஒருவகை காப்பீடு போல் பயன்படுத்தி வரும் விவசாயிகளை இது பெரிதும் பாதித்தது.
ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி மற்றும் கோதுமை பயிரிட்டிருக்கிறார் கோதுலே. அவரது பொருளாதார கணக்கீடுகள் பாஜக அரசு விதித்துள்ள தடையால் பாதிப்படைந்திருப்பதாகக் கூறுகிறார். “இந்த ரெண்டு காளைகளுக்கும் நாலு வயசு தான் ஆகுது. “காளைகள் பத்து வயசு வரை விவசாய வேலைக்குப் பயன்படும்.” “சில வருசம் முன்ன வரைக்கும் எந்த விவசாயியும் இதுங்கள இருபத்தஞ்சாயிரத்துக்கு முழு மனசா வாங்கிருப்பான்” என்கிறார் .
தற்போது கால்நடைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், வாங்கத் தயங்குகிறார்கள். பின்னாளில் அவற்றை விற்க இயலாமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறார்கள். “என் வீட்டிலிருந்து காளைகளை பல்வேறு சந்தைகளுக்கு கொண்டுபோகவே சில ஆயிரங்கள செலவு செஞ்சிட்டேன். அதுல், நாலு கி.மீ. தூரத்தில இருக்கறதால இன்னிக்கு மாடுகளோட நடந்து வந்துட்டேன். மற்ற வாரச் சந்தைகள் 25 கி.மீ. சுற்றுவட்டாரத்தில இருக்கு, அங்கயெல்லாம் போறதுக்கு மாட்டு வண்டிய வாடகைக்கு எடுக்கணும். எனக்கு ஏற்கனவே நெறைய கடன் இருக்கு. எப்பிடியாவது வித்தாகணும்” என்கிறார் கோதுலே.
பேசிக்கொண்டிருக்கையில், யாராவது வாங்க வரமாட்டார்களா என்ற ஏக்கப்பார்வை கோதுலேயின் கண்களில் தெரிகிறது. அவர் காலை 9 மணிக்கு சந்தைக்கு வந்து மதியம் 1 மணி வரை கடும் வெயிலில் நின்று கொண்டிருக்கிறார். “நான் வந்ததுல இருந்து இதுவரை தண்ணி கூடக் குடிக்கல. தண்ணி குடிக்கப் போனா, அதுக்குள்ள யாராவது மாடு வாங்க வர்ற ஒரு ஆள தவற விட்டுருவேனோங்குற பயந்தான் காரணம்” என்கிறார்.
113 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. மைதானம் பரபரப்பாக இருக்கிறது. பல்வேறு விவசாயிகளும் எப்படியாவது விற்று விட வேண்டும் என்று முனைகிறார்கள். இந்த அதுல் சந்தையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள வாகுல்னி என்ற ஊரிலிருந்து வந்திருக்கும் 65 வயதான ஜனார்தன் கீதே, தனது மாடுகளை வசீகரமாக காட்டும் முயற்சியாக அவற்றுக்கு கொம்பு சீவ வைக்கிறார். அதற்கு ஒரு மாட்டுக்கு 200 ரூபாய் செலவு. “நான் இந்த மாடுகளை அறுவத்தஞ்சாயிரத்துக்கு வாங்கினேன். இப்ப நாப்பதாயிரத்துக்கு வித்துட்டாலே திருப்தி தான்” என்கிறார்.
மாரத்வாடாவில் அதிகரித்து வரும் தண்ணீர்ப்பஞ்சம், உயர்ந்து வரும் மாட்டுத்தீவனங்களின் விலை, மாடுகளை பராமரிக்க போதிய இட வசதியின்மை போன்ற காரணிகள் மாடு வளர்ப்பை கடும் சிரமத்துக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறுகிறார் கோதுலே. ஃபட்னாவிஸ், மாட்டிறைச்சித் தடையை அமலாக்கும்போது, பயன்தராத மாடுகளின் மீதான செலவினங்களைக் குறைக்கும் விதமாக அவற்றுக்கான காப்பிடம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார். அது நிறைவேற்றப் படாததால், கால்நடைகளை விற்று பணமாக்க முடியாதது மட்டுமின்றி, பயன்தராத விலங்குகளுடன் தளையிடப்பட்டு இரட்டைச் சுமைக்கு ஆளானார்கள் விவசாயிகள்.
“ஒரு மாட்டுக்கு, தீவனத்துக்கும் தண்ணிக்குமா வாரத்துக்கு ஆயிரம் ரூவா செலவாகுது. எங்க பிள்ள குட்டிகளுக்கே சரியான சாப்பாடு குடுக்க முடியாதப்ப, வயசான மாடுகள நாங்க எப்புடி பராமரிக்க முடியும்” என்று கேட்கிறார் கோதுலே.
கிராமப்புறப் பொருளாதாரத்தின் அங்கமாக இருக்கும் தலித்துக்களான தோல் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், இறைச்சி வியாபாரிகள், எலும்பிலிருந்து மருந்து தயாரிப்பவர்கள் போன்றோரும் மாட்டிறைச்சித்தடை எனும் இந்த சட்டத்தால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தடைக்கு முன்னர், மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 3,00,000 காளைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வந்தன. தற்போது அனைத்து வெட்டுக்கூடங்களும் வேலையிழந்து, ஒட்டு மொத்த சமூகமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.
கால்நடைகளை வெட்டுதல் மற்றும் கால்நடை வியாபாரத்தில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ள குரேஷி என்ற சாதியைச் சார்ந்த சுமார் 10,000 முஸ்லிம்கள் வசிக்கும் சில்லக்கானாவில் இந்த பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது. தன்னுடைய தொழிலாளர்கள் சிலரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டார் கறிக்கடை உரிமையாளர் க்வலீம். “நானும் என் குடும்பத்துக்கு சாப்பாடு போட வேண்டியிருக்கு; வேறென்ன செய்யிறது?” என்று கேட்கிறார்.
“ஒரு நாளைக்கு 500 ரூவாயாவது சம்பாதிச்சுட்டிருந்தேன். இப்ப கெடச்ச வேலையச் செய்யிறேன். வருமானத்துக்கு உத்தரவாதமில்ல. வேலையே இல்லாத நாட்களும் இருக்கு” என்கிறார் அனீஸ் குரேஷி (41).
அதிகரித்து வரும் விவசாய நெருக்கடியின் காரணமாக மாட்டிறைச்சித்தடைக்கு முன்னரே இறைச்சி வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தது. வேலை தேடி கிராமப்புற மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக உள்ளூரில் மாட்டிறைச்சியின் நுகர்வு கணிசமாகக் குறைந்து விட்டது என்கிறார் க்வலீம்.
கொள்ளுத்தாத்தாவின் காலம் முதல் இந்தக் கறிக்கடை தான் க்வலீமின் ஒரே சொத்து, ஒரே தொழில். “வேறு வேலைக்கு மாறிக்கிற அளவுக்கு எங்கள் சமூகத்துக்கு படிப்பறிவு இல்ல. இப்ப நாங்க எருமை மாட்டுக் கறிய விக்கிறோம். அது மக்களுக்கு அவ்வளவா பிடிக்கல. அது மட்டுமில்ல, மத்த இறைச்சிப் பொருட்களோட போட்டியும் கடுமையா இருக்கு” என்கிறார்.
குரேஷிகள் மற்றும் தலித் உள்ளிட்ட மற்ற சமூகத்தினரது உணவிலும் மாட்டிறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அது ஒப்பீட்டளவில் மலிவான புரதமாகவும் உள்ளது. “மாட்டுக்கறிக்கு பதிலா கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறின்னா மூணு மடங்கு செலவாகும்” என்கிறார் க்வலீம்.
அதுல் சந்தையிலிருந்து புன்னகையுடன் வீடு திரும்பியவர்கள் வெகு சிலரே. அவர்களில் தன் மாடுகளுக்கு கொம்பு சீவிய கீதேயும் ஒருவர். அவரது மாடுகளை வாங்க விவசாயி ஒருவரை அவர் பிடித்து விட்டார். தியான்தியோ கோரே என்ற இன்னொரு விவசாயி அவரைப் பொறாமையுடன் பார்க்கிறார்.
கோரே தனது காளையுடன் அதுல் சந்தைக்கு 7 கி.மீ. தூரம் நடந்தே வந்திருக்கிறார். அதுதான் அவரிடம் இருந்த 7 மாடுகளில் இன்று மிச்சமிருப்பது. மற்ற ஆறும் விற்றாகிவிட்டது. இதுதான் கடைசி மாடு.
ஆறு லட்சமாய் இருந்த அவரது கடன், 5 வருடங்களில் பன்மடங்காக பெருகி விட்டது. இந்த மாட்டை விற்றால்தான் அடுத்த பருவத்துக்கு அவர் பயிர் வைக்க முடியும். “இயற்கை எங்களுக்கு ஆதரவா இல்ல. அரசாங்கமும் எங்களுக்கு ஆதரவா இல்ல. பணக்காரன் யாரும் தற்கொலை செஞ்சுக்கிறது இல்ல. என்னப்போல கடன்பட்ட விவசாயிகதான் தற்கொலை பண்ணிக்கிறோம். எனக்குத் தெரிஞ்சி, தன் பிள்ளை விவசாயியா இருக்கணும்னு நெனக்கிற ஒரு விவசாயியைக் கூட நான் பார்த்ததில்லை” என்கிறார் கோரே.
மாட்டை வண்டியில் கொண்டு செல்ல அவரிடம் பணமில்லை. கொதிக்கும் 113 டிகிரி வெயிலில், 60 வயதில், ஒரு சந்தையிலிருந்து இன்னொன்றுக்கு சந்தைக்கு தனது மாட்டுடன் நடந்தே போகிறார் கோரே என்ற அந்த 60 வயது விவசாயி. “இன்னிக்கு விக்க முடியாட்டி, வியாழக்கிழமை வேறொரு சந்தைக்கு போவேன்” என்றார் கோரே.
“அந்த சந்தை இங்கிருந்து எத்தனை தூரம்?” என்று கேட்டேன்.
“30 கிலோ மீட்டர்” என்று பதிலளிக்கிறார் கோரே.
People’s Archive of Rural India இணைய தளத்தில் ஜூன் 1 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டிருக்கும் Not quite a cash cow என்ற Parth.M.N எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.
தமிழாக்கம் : சங்கரி
***
தலித் சமூகத்தை சேர்ந்தவங்க …தாக்கப்படும் போதும்,கொல்லப்படும் போதும்,அவர்களின் குடியிருப்புகள் தீ வைத்து அழிக்கப்படும் போதும் அமைதியா வேடிக்கை பார்த்துகிட்டு இப்ப தலித் சமூகத்தை சேர்ந்தவரை குடியரசு கேன்டிடேட் ஆக நிறுத்தி இருப்பது எப்படி இருக்குனா…ஒரு குடும்பத்த உசுரோட கொளுத்தி புட்டு…அவன் குடும்ப தலைவனுக்கு சிலை வைக்கற மாதிரி இருக்கு இவிங்க டிராமா……ஆனா நீங்க எல்லாம் நிமிசத்துக்கு ஒரு போஸ்ட் அவர் தலித் இனத்தவர்னு போட்டு போட்டு….நாளைக்கே அவர் குடியறசு தலைவர் ஆனாலும் கூட அவருடைய மற்ற நல்ல பின்புலம் எதாச்சும் இருந்தா கூட அதை வெளிக்கொனறாது…அவர் தலித் இனத்தவர் என்ற ஒரு கருத்தை மட்டும் மக்கள் மனசில் பதித்த எல்லா நல்ல ஆர் எஸ் எஸ் உள்ளங்களுக்கும் நன்றி…….எப்படி எடியூரப்பா ஹோட்டல்ல வாங்கிட்டுப் போய் தலித் வீட்ல உக்காந்து சாப்டேனு போஸ்டர் அடிச்சி ஒட்டினாரோ…எப்படி செத்துப்போன நந்தினி வீட்ல உக்காந்து பொன்னர் மீன் வருவல் சாப்டு ஆறுதல் சொன்னாரோ அது மாதிரி தான் இருக்கு உங்க குடியரசு தலைவர் கேன்டிடேட் அனோன்ஸ்மென்ட்
Arun Santhosh
***
Prabakar Kappikulam
***
மோடி-அமித்ஷா குடுமி சும்மா ஆடாது…
பிஜேபியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், உபியில் தலித் பிரிவில் வரும் கோரி (Kori) என்னும் நெசவு சாதியை சேர்ந்தவர்.. இந்த சாதியானது, குஜராத்தில் கோலி (Koli) எனப்படும் OBC பிரிவில் வருகிறது.. அங்குள்ள மக்கள் தொகையில் 20% இந்த கோலி பிரிவு மக்கள் தான்.. வட இந்தியாவில் கோரி, கோலி என பல பெயர்களில் இந்த சாதியினர் உள்ளனர்.. மாநிலத்துக்கு மாநிலம் SC, OBC என பட்டியல் மாறும்..
பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருபதாலும், படேல் பிரிவின் கோபத்தாலும், சில மாதங்களில் நடைபெறும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கடுமையான சவால் உள்ளது.. இந்நிலையில் கோலி பிரிவினரின் வாக்குகளை கவரவே, ராம்நாத் கோவிந்த்தை ஜனாதிபதி வேட்ப்பாளராக அறிவித்துள்ளது மோடி-அமித்ஷா ஜோடி.. அகில இந்திய கோலி சாமாஜ்ஜின் (Akhil Bhartiya koli Samaj) தலைவர் யார் தெரியும்மா?? இந்த ராம்நாத் கோவிந்த்தான்.. (A lawyer by profession, Kovind had also been BJP Scheduled Caste Morcha chief (1998-2002) and President of the All-India Koli Samaj.)..
சரி, பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாகியதால், பிராமணர்கள் ஓட்டு காங்கிரஸ்சுக்கு வந்ததா?? பிரதீபா படேலை ஜனாதிபதியாகியதால் படேல் சாதி ஓட்டு காங்கிரஸ்சுக்கு வந்ததா?? அல்லது முதன் முதலாக தலித் ஒருவரை, K.R. நாராயணனை ஜனாதிபதியாகியதால், எல்லா தலித் ஓட்டுகளும் காங்கிரஸ்சுக்கு வந்ததா??
அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதால், இசுலாமியர் மீது நஞ்சு கக்குவதை பிஜேபி RSS நிறுத்தி விட்டார்களா?..
இதெல்லாம் வெறும் அடையாள பதவிகள் தானே..
அதிகாரம் இல்லா #பதவி அது .. ஒன்னும் செய்ய முடியாம அப்பேற்பட்ட Missile man அப்துல் காலம் ஐயாவே வெறும் கனவு மட்டுமே காண வைச்ச பதவி .. இந்த பஞ்சு மிட்டாய் லுலாயி எல்லாம் வேணாம் ..
பவர் புள் மத்திய மந்திரியாக ராஜாவை #திமுக செய்து அழகு பார்த்தது .. மகாராஷ்டிரா முதல் மந்திரியாக ஷிண்டவை #காங்கிரஸ் அமர்த்தி பெருமை சேர்த்தது .. இத மாதிரி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுக்க முடியுமா முடியாதா ..
போடுறது லெப்ட்ல வெமுலாவை ., ரைட்ல கோவிந்த வுக்கு ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட் .. இதிலே எங்களை மாதிரி உண்டா ன்னு ஓவர் சவுண்ட் வேற ..
ரொம்ப ஓல்ட் ஸ்டைல் பாலிடிக்ஸ் #bjp #rss .. போங்க போய் எல்லா இந்தியர்கள் கணக்கில் 100 kilos தங்க கட்டி போடறேன் ., காவேரியை டைரக்ட் ஆ பைப் மூலம் வீட்டு குழாய்க்கு கொண்டு வரேன் .. வித்தியாசமா ட்ரைன்னு பண்ணுங்க
நாட்டின் முதல் குடிமகனாக தேர்ந்தெடுக்கப் படபோறவர் என்ன சாதி என்பது தான் தகுதியா ????
ரப்பர் ஸ்டாம்பா வர என்ன தகுதி வேணும்….
குறிப்பு: அவரின் ஜாதி சில மாநிலத்தில் SC பிரிவிலும் சில மாநிலத்தில் BC பிரிவிலும் வருதாம்….
***
இப்படித்தான் ராம்னாத் சாலையில் செல்லும் போது…
ஒரு முறை மோடி அழைக்கும் போது…
இப்படி பல கதைகள் வரும்!!! எஞ்சாய் மக்களே!!!
***
Manoj Savarimuthuraj….ன் பதிவு… (ஆதாரத்துக்கு 26.03.2010 ல் Hindustan Times நாளிதழ் செய்தியோட லிங்க் முதல் கமெண்ட்ல போட்டிருக்கு)
யாரை குடியரசு தலைவராக பெறப் போகிறோம் ?
கடந்த 2009-ல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி , சமூக ,பொருளாதார நிலையில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு ( முஸ்லீம் 10 + இதர பிரிவு 5) வேலைவாய்ப்பில் 15% இடஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைக்கிறது. அது குறித்த கேள்வியை அப்போதுதான் புதிதாக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதற்கு அவர் கூறியது
” என்னது இட ஒதுக்கீடா , முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஏலியன்கள். ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை உடனடியாக நீக்க வேண்டும் ” என்றார்..
“சார், ரொம்ப பின் தங்கி இருந்தா கொடுக்கலாமே ” என மீண்டும் வினவ ,
“முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என சொல்வது அரசியலமைப்புக்கு எதிரானது” என்றார்.
அப்போ , சீக்கிய தலித்துகளுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதே என கேட்ட பொழுது ” ஏலியன்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் ? என்றார்…
செய்தி ஆதாரம் : Islam, Christianity alien, so cannot get quota: BJP
***
செயல் கோலம் போட்டுட்டு இருக்காராம்.. கோயிந்து ஜனாதிபதி ஆகிட்டாராம்..
காவி பாய்ஸ்..
எதுக்கும் எதுக்கும் கம்பேர் பண்றதுன்னு கூட அறிவில்லாம இருக்கிறீங்க சரி…
செயல் கோலமாவது போடுறார்..
ஆனா அத்வானி கையில கோல மாவு கூட இல்லாம குச்சியை கையில் பிடிச்சிட்டு நிக்கிறாரே.. வெக்கமா இல்லையா?
***
தலித் என்பவர் யார்?
படித்து, பட்டம் பெற்றவுடன் தன் மக்களை விட்டு தூரமாகச் சென்று சாதி அடையாளத்தை மறைத்து வாழ்பவர் தலித்தாக இருக்கலாம் பிறப்பால். ஆனால் தன் அடையாளங்களை மறைத்து, மூன்றாம் தர பார்ப்பனன் போல் வாழ நினைப்பவர் எப்படி தலித்தாக முடியும்?
அந்த வகையில் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பிறப்பால் தலித்தாக இருந்தாலும் அவர் தலித்தே அல்ல. எந்த இந்து மதம் அவரை தலித், தீண்டதகாதவன் என முத்திரை குத்தி தனியே ஒதுக்கி வைத்து கல்வி, அரசியல், பொருளாதரம் என எதிலும் இடம் கொடுக்கமால் ஒதுக்கி வைத்ததோ, அந்த இந்துமதத்தின் வாலைப் பிடித்து தொங்கி, தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கும் அவர் ஒரு போதும் தலித்தாக வாழ முடியாது…தலித்தாக இருக்க முடியாது.
ஆகையால் பாஜக செய்யும் சாதி அரசியலுக்கு பலியாகமல் இருப்பதே உத்தமம்.
***
ஜனாதிபதி, ஆளுநர் பதவிகள் என்பது மன்னராட்சியின் நீட்சியே. மக்களாட்சியில்(?) மன்னர்களுக்கு என்ன வேலை? விருது கொடுப்பதும், பதவிப்பிரமாணம் செய்துவைப்பதை தவிர நாட்டிற்கு எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை.
ஆனால் ஒருவருக்கு மட்டும் மிக மிக நன்மை. அது வேறு யாருமல்ல அந்த ஜனாதிபதி தான்.
இதே பிஜேபி தான் அப்துல்கலாமையும் ஜனாதிபதி ஆக்கினார்கள். நாட்டிற்கு ஏதாவது நல்லது நடந்ததா..? சோனியாவை பதவிக்கு வராமல் நிறுத்தி வைத்தார். சோனியா மன்மோகன் என்ற பொம்மையை வைத்து ஆண்டார். சிறுபான்மையினர் வாழ்வில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா..
இப்போது ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கப்போகிறார்கள். இங்கே பிரதமரே கார்பொரேட் பொம்மை தான் எனும்போது ஜனாதிபதி யார் வந்தால் என்ன? ஒரு மாற்றமும் நடந்துவிட போவதில்லை. வெட்டிப் பெருமையை தலித்துகள் கேட்கவில்லை. குறைந்தபட்ச சமூக நீதியை தான் கேட்கிறார்கள். அதற்கே நிறைய போராட வேண்டியிருக்கிறது.
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த கவுன்சிலரினால் கூட சிறு மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆகவே பொம்மை அதிகாரத்தை விட உண்மை அதிகாரம் தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை.
***
அன்று பாபாசாஹிப் அம்பேத்கரை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ் கட்சியின் வலதுசாரிகள் கண்டெடுத்தது பீஹாரிலிருந்து பாபுஜி ஜெகஜீவன் ராம்!
இன்று அதே நோக்கத்திற்காக, அதே சக்திகள், அதே பீஹாரிலிருந்து ராம்நாத் கோவிந்த்!
***
நீங்கள் தலித்தா பார்பனரா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் எஜமானன் யார், நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதுதானே கேள்வி.
கே.ஆர் நாராயணன் என்கிற தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி ஆக்கிய காங்கிரஸ் கட்சி நாங்கள் தலித்தை ஜனாதிபதி ஆக்கிவிட்டோம் என்று பீற்றித் திரியவில்லை. தலித் சமுதாயத்தை சேர்ந்த கே.ஆர் நாராயணன் ஜனாதிபதி ஆனதால் தலித் சமுதாயத்தின் இன்னல்கள் நீங்கவும் இல்லை. அவர்களின் துயரம் இன்றளவும் நீடிக்கவே செய்கிறது.
அப்துல் கலாம் என்கிற ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியதால் முஸ்லிம் சமுதாயத்தின் எந்த இன்னலும் இதுவரை நீங்கியதே இல்லை. இன்னல்கள் நீங்காதது ஒரு புறமிருந்தாலும் பாபர் மஸ்ஜித் போன்ற முஸ்லிம்களின் உரிமைக்காக ஒரு ஜனாதிபதி பதவியில் இருந்தவரால் கூட குரல் எழுப்ப முடியவில்லை.
இதனால்தான் ஜனாதிபதி பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று பலரும் விமர்சிக்கின்றனர். பாஜக-வினர் கூட இந்த ரப்பர் ஸ்டாம்ப் என்கிற விமர்சனத்தை செய்தவர்கள் தான்.
எதார்த்தம் இப்படியிருக்க ராம்நாத் கோவிந்த் என்கிற தலித் ஜனாதிபதி ஆகிவிட்டால் தலித் சமுதாயத்தினரின் வாழ்வு வளமாகிவிடும் என்று டவுசர் வாலாக்கள் அள்ளி விடுவதெல்லாம் தார்ப்பாயில் வடிகட்டிய பொய். இதை தலித் சமுதாயம் நம்ப போவதில்லை. அப்படி நம்பினால் அவர்களை விட ஏமாளிகள் இங்கே வேறு யாரும் இல்ல
கருவுற்ற பெண்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மோடியின் ஆயுஷ் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை அறிவுறுத்துகிறது. ஆன்மிகச் சிந்தனைகளை வளர்ப்பதும் நல்ல படங்களை அறையில் மாட்டுவதும் நலமிக்க குழந்தைகளை பெறுவதற்கு அவசியமாகும் என்றும் கூறியிருக்கிறது.
ஆயுஷ் அமைச்சரவையின் கீழ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம் (CCRYN) இந்த அறிவுறுத்தல்களை மைய அரசின் நிதியுதவியுடன் கையேடாக தொகுத்து வெளியிட்டுள்ளது.
மேலும் “கருத்தரித்த பெண்கள் [தாமச உணர்ச்சிகளான] ஆசை, கோபம், ஈர்ப்பு, வெறுப்பு, காமம் ஆகிய உணர்ச்சிகளில் இருந்து தங்களை துண்டித்துக் கொள்ள வேண்டும்…” என்று கையேட்டின் 14 ஆம் பக்கத்தின் ஒரு பத்தியில் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் உணர்ச்சி கூடாது என்று இதைப் பத்திரிகைகள் திரித்துக் கூறியதாக சொல்லி அதற்கு மறுப்பும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. பாலியல் உணர்ச்சியை மறுக்கவில்லை என்று சமாளிக்கும் ஆயுஷ் இதர உளறல்களை மறுப்பதற்கு முன்வரவில்லை.
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இறைச்சி உணவை பரிந்துரைப்பதில்லை. அதனால் கருத்தரித்த பெண்களும் பால் கொடுக்கும் தாய்மார்களும் இறைச்சி மற்றும் முட்டையை தவிர்த்து சாத்வீக உணவையே உண்ண வேண்டும் என்றும் அந்த கையேடு அறிவுறித்தியிருக்கிறது.
ஆனால் இது அறிவியல் ஆதாரமற்றவை என்கிறார் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மூத்த மகளிர் மருத்துவரும் மகப்பேறு மருத்துவருமான மாலவிகா சபர்வால். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை இரண்டும் கருவுற்ற பெண்களை பாதிக்கும் உடல்நலப் பிரச்சனைகள். புரதச்சத்திற்கான மிகச்சிறந்த மூலாதாரங்கள் இறைச்சி உணவுகள். தாவரங்களை விட இறைச்சியிலிருந்து தான் புரதச்சத்துக்கள் விரைவாக உடலால் உறிஞ்சப்படுகிறது என்று மேலும் கூறுகிறார்.
இறைச்சி உட்கொள்ளுவதில் இந்தியாவின் தனிநபர் சராசரி உலகிலேயே இரண்டாவது குறைவான அளவாக 4.4 கிலோவாக மட்டுமே இருக்கிறது. கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44 ஆயிரம் பெண்கள் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். பேறுகால இறப்பு விகிதம் 167 ஆகவும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 30 ஆக உலகிலேயே மோசமான ஒன்றாகவும் இருக்கிறது. மனித மேம்பாட்டு குறியீட்டில்(HDI) உலகிலேயே 131 வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சராசரி தனிநபர் ஆயுட்காலம் 68.01 ஆண்டுகள் மட்டுமே. பங்களாதேசின் நிலையும் ஏறக்குறைய இதே தான்.
ஆனால் இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக இறைச்சி உட்கொள்ளுவதில் ஆஸ்திரேலியாவின் தனிமனித சராசரி 111.5 கிலோவாக இருக்கிறது. அதே நேரத்தில் பேறுகால இறப்பு விகிதம் வெறும் 6 ஆகவும், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 3.8 ஆகவுமே இருக்கிறது. மனித மேம்பாட்டு குறியீட்டில்(HDI) உலகிலேயே இரண்டாவது இடத்தில இருக்கும் ஆஸ்திரேலியாவின் சராசரி தனிநபர் ஆயுட்காலம் 83.1 ஆண்டுகள் ஆகும். ஆஸ்திரேலியா ஒரு முன்னேறிய நாடாக இருப்பதாலும் இது சாத்தியம் எனலாம். ஆனால் அந்த முன்னேற்றம் என்பது இறைச்சி இல்லாமல் இல்லை.
ஆயுஷின் அறிக்கை படி பார்த்தால் மிகக்குறைவான இறைச்சி உண்ணும் இந்தியா தான் உலகிலேயே நலமான குழந்தைகள் பெறுவதில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் புள்ளிவிவரம் உணர்த்தும் எதார்த்தம் நேர்மாறாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவின் சமூகப்பொருளாதாரம் தாமஸ உணவை மட்டுமல்ல சாத்விக உணவையும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்குத் தடை செய்திருக்கிறது.
குறிப்புகள்:
செய்தி ஆதாரம்:
பூனாவில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்வப்னா போஸ்லே-யின் வேலை பறிக்கப்பட்ட போது, அவர் அப்போதுதான் தனது 3 வயது குழந்தையை ஒரு மேட்டுக்குடி மழலையர் பள்ளியில் சேர்த்திருந்தார். மாதந்தோறும் குடும்பத்தின் இரண்டு படுக்கையறை வீட்டுக்கான கடன் தவணையை கட்டும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. இன்னொரு வேலை தேடுவதற்கு அவகாசம் தருமாறு அவர் கெஞ்சியும் அது மறுக்கப்பட்டு, இரண்டு மாத அவகாசத்தில் அவரது வேலை பறிபோனது.
சென்னை விப்ரோவில் வேலை செய்து வந்த பார்வதி சுப்பிரமணியனின் (பெயர் மாற்றப்பட்டது) நிலைமையும் கிட்டத்தட்ட இதே போலத்தான். புதிய புராஜக்டில் சேர்ப்பதற்கு நிறுவன கணினி அனுமதிக்காத நிலையில், ஒரு முக்கியமான இன்டர்வியூ என்று அழைத்து பேசிய எச்.ஆர். அதிகாரிகள், இனிமேல் அவருக்கு விப்ரோவில் இடம் இல்லை என்று அறிவித்தார்கள். “இரண்டு பசங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், மத்த பொறுப்புகளும் இருக்கு. என் குடும்பம் இந்த சம்பளத்தை நம்பித்தான் இருக்கு. இந்த வேலை போனா வாழ்க்கையே பிரச்சனையாகி விடும்” என்று கெஞ்சியிருக்கிறார், பார்வதி. அங்கும் கருணை கசியவில்லை; ஒரு எந்திர மனிதனின் இரக்கமற்ற தன்மையோடு ஆட்குறைப்பு அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் இந்நிலையை எதிர்கொள்கிறார்கள். பெங்களூரு ”மின்ட்” என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில் இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல்., டெக் மகிந்த்ரா, காக்னிசன்ட், கேப்ஜெமினி, டி.எக்ஸ்.சி. ஆகிய 7 முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆண்டு 56,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன என்று தெரிய வந்தது. ஹெட் ஹன்டர்ஸ் (Head Hunters) என்ற வேலைக்கு ஆள் அமர்த்தும் நிறுவனம், ஐ.டி. துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 இலட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று கணித்துள்ளது. இவ்வாறாக, 40 இலட்சம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, அந்நியச் செலாவணியை ஈட்டி, இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாகக் கருதப்பட்ட இந்திய ஐ.டி. துறை பனிப்பாறையில் மோதி, மூழ்கிப் போகும் அபாயத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது.
25 வயது இளைஞர்களும், 40 வயது ‘முதியவர்’களும் தமது கனவு மயக்கத்திலிருந்து முரட்டுத்தனமாக எழுப்பப்பட்டிருக்கிறார்கள். “என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்” என்று இருந்தால், “என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்” என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஹைதராபாத்-விப்ரோவில் வேலை செய்யும் நாகேஸ்வர் ரெட்டிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 15 ஆண்டு கால பணி வாழ்க்கைக்குப் பிறகு, “திறம்படப் பணியாற்றாதவர்” (under performer) என்று முத்திரை குத்தியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவரைப் பணிவிலகல் கடிதம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். “குறிப்பான காரணம் எதுவும் இல்லை, நிர்வாகம் செலவுகளைக் குறைக்க போட்ட திட்டத்தில் உங்கள் பெயரும் சேர்ந்திருக்கிறது” என்றிருக்கிறார் அவரது மேலாளர்.
“ஐ.டி. துறை நண்பா, உனக்கு ரோசம் வேணும்டா!” என்று வினவு தளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய போது, “ரோசம் எல்லாம் வேண்டாம், ரொக்கம் போதும்” என்று பணிப்பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றை அலட்சியப்படுத்தினார்கள் பல ஐ.டி. ஊழியர்கள். இன்று தொழில் தகராறு சட்டம் 1947-இன் ஷரத்துகளைத் தேடித்தேடிப் படிக்கிறார்கள். தொழிற்சங்கம் அமைப்பதற்கு என்ன விதிமுறை என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். “அவமானப்படுத்தி விட்டார்கள்” என்று கொதிக்கிறார், ஒருவர்; ”இத்தனை ஆண்டுகள் வேலை வாங்கிய பிறகு, திடீரென்று நான் திறமை இல்லாதவன் என்று கண்டு பிடித்தீர்களா?” என்று பொங்குகிறார், இன்னொருவர்.
”ஆட்குறைப்பே இல்லையே, ஒரு சில திறமை இல்லாதவர்கள் வெளியேறுகிறார்கள். இது வழக்கமாக நடப்பதுதான்” என்று ஐ.டி. நிறுவனங்களும், அவர்களது கூட்டமைப்பான நாஸ்காமும் எழுதிக் கொடுத்ததை வாசிக்கிறார் மோடியின் ஐ.டி. துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். “சங்கராச்சாரி கொல்லவில்லை என்றால், சங்கரராமனைக் கொன்றது யார்?” என்று கலங்கும் பக்த கோடிகளைப் போல, “ஆட்குறைப்பே நடக்கவில்லை என்றால், இவ்வளவு பேர் எப்படி வேலை இழந்தார்கள்?” எனக் குழம்புகிறார்கள், ஐ.டி. ஊழியர்கள்.
ஐ.டி. துறை கனவில், “1990-களுக்குப் பிந்தைய ‘வளர்ச்சி’ வண்டியில் நமக்குத்தான் இடம் கிடைக்கவில்லை. நமது பிள்ளைகளாவது படித்துக் கை நிறைய சம்பளம், ஏ.சி. அலுவலக வேலை, அமெரிக்கப் பயணம் என முன்னேறி விட வேண்டும்” என்று சொத்தை விற்று, கடன் வாங்கி பொறியியல் படிக்க வைத்த உழைக்கும் வர்க்கப் பெற்றோர் கதிகலங்கி நிற்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு 12 இலட்சம் பேர் என்ற வீதத்தில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகள், ஐ.டி. நிறுவனங்கள் உருவாக்கும் 1.5 இலட்சத்துக்கும் குறைவான வேலைவாய்ப்புகளை மொய்க்கிறார்கள்.
பொறியியல் அல்லாத பட்டதாரிகளையும் சேர்த்து ஆண்டுக்கு 60 இலட்சம் பேர் இந்திய உழைப்புச் சந்தையில் சேர்கிறார்கள். இந்த உபரி பட்டாளத்தைப் பயன்படுத்தி அதிக சம்பளம் வாங்கும் பழைய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அடிமாட்டு விலையில் ஒப்பந்த ஊழியர்களாகப் புதிய பட்டதாரிகளை அமர்த்திக் கொள்கின்றன ஐ.டி. நிறுவனங்கள். மற்ற தொழில்துறைகளில் நடப்பதைப் போல, சம்பளமே இல்லாமலோ அல்லது மிகக் குறைந்த உதவித்தொகை கொடுத்தோ பல்வேறு பெயர்களில் இளம் பட்டதாரிகளை பணியமர்த்திக் கொள்ளும் போக்கும் ஐ.டி. துறையில் வளரத் தொடங்கி விட்டது.
இதற்கெல்லாம் காரணம் ஆட்டோமேஷன், “அமெரிக்க வேலை வாய்ப்பு அமெரிக்கர்களுக்கே” என அமெரிக்க அதிபர் டிரம்ப் முழங்குவது, எச்-1பி விசா நடைமுறைகளை இறுக்கமாக்கியது என்று சொல்கின்றனர் முதலாளித்துவ அறிஞர்கள். ஆனால், ஆட்டோமேஷனுக்கும், அமெரிக்க அரசியலுக்கும் அடிக்கொள்ளியாக இருந்து இயக்குவது நிதி மூலதன இரத்தக் காட்டேறியின் அடங்காத இலாப வேட்கை.
உதாரணமாக, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1500 கோடி டாலர் கொடுத்து 4% காக்னிசன்ட் பங்குகளை வாங்கிய எலியட் மேனேஜ்மென்ட் என்ற நிதி மூலதன நிறுவனம் காக்னிசன்டின் இலாப வீதம் போதாது என்று கண்டிப்புக் காட்டியிருக்கிறது. மொத்த இலாபத்தை 18.5%-லிருந்து 21% ஆக உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. அதை ஏற்று எலியட்-உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது காக்னிசன்ட். நேற்று வந்த எலியட்டின் உத்தரவு, 15 ஆண்டுகளாக உழைத்த ஊழியரின் நலனை வென்று விட்டது. அதன்படி ஆட்குறைப்பு, தலை வெட்டு நடந்து கொண்டிருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு அதிக சம்பளம் வாங்கிய அமெரிக்க ஊழியர்களைத் தூக்கி விட்டு அந்த வேலைக்கு இந்திய ஊழியர்களை அமர்த்தி இலாபம் சம்பாதித்த முதலாளிகள், இன்றைக்கு இந்திய ஊழியர்களைத் தூக்கி விட்டு, அதைவிடக் குறைந்த செலவில் வேலையை செய்து வாங்க எந்திரங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். “எந்திரங்களுக்குத் தூக்கம் வராது, அரட்டை அடிக்காது, தம் அடிக்க நடுநடுவே வெளியில் போகாது, மகப்பேறு விடுப்பு எடுக்காது, நிர்வாகத்துடன் வாதம் புரியாது” என்று பல ஆதாயங்கள் இருக்கின்றன.
மனிதர்கள் செய்யும் வேலையை எந்திரங்களால் செய்விக்க முடியாத இடத்தில் மட்டும்தான் மனிதர்களுக்கு இடம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதி. வேலை செய்வதற்கான திறமையும், விருப்பமும் இருந்தும் இலாபம் ஈட்டுவதற்குத் தேவைப்படாத காரணத்தினால் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகிறார்கள்.
அப்படி மனிதர்களின் இடத்தில் எந்திரங்களை அமர்த்திக் கொண்டே போவதால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்கு ஆளில்லாமல் சந்தை சுருங்குகிறது. இந்த முரண்பாடு தோற்றுவிக்கும் நெருக்கடி முற்றிப்போய் மீளமுடியாத சிக்கலில் சிக்கியிருக்கிறது முதலாளித்துவம். நானோ தொழில்நுட்பம், கிளவுட் தொழில்நுட்பம், செயற்கை அறிவு தொழில்நுட்பம், விண்வெளிப் பயணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய எரிசக்தி தொழில்நுட்பம் இவற்றின் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது.
ஆனால், வேலை கொடுப்பதல்ல; இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம். இந்நிலையில் “என் வேலை, என் வாழ்க்கை” என்று சிந்திப்பதிலிருந்து, “நம் வேலை, நம் வாழ்க்கை” என்று சிந்திப்பதும், “நம் மக்கள், நம் நாடு” என்று அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்வதும் தவிர்க்க முடியாதது என்பதை ஐ.டி. துறை ஊழியர்கள் உணரவேண்டும்.
– சாக்கியன்
**********
பெட்டிச் செய்தி : நெருக்கடி தற்காலிகமானதா?
இந்த நெருக்கடி தற்காலிகமானதா அல்லது திரும்பிப் போகமுடியாத மாற்றமா என்பதுதான் கேள்வி.
இந்திய ஐ.டி. நிறுவனங்கள் மேற்கத்திய நிறுவனங்களுக்கான கணினி உள்கட்டமைப்பு பணிகளை, அயல்பணி சேவை மூலம் செய்து வருகின்றன. அத்தகைய பணிகளைச் செய்து கொடுப்பதற்குத் தேவையான நிறுவனக் கட்டுமானங்களை இங்கே உருவாக்கி, மேற்கத்திய ஊழியர்களைவிடக் குறைந்த சம்பளத்தில் ஆள் அமர்த்துவதன் மூலம் இலாபமீட்டுகின்றன.
இந்நிலையில் 2008 பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள், சேவை நிறுவனங்களுக்கிடையேயான கழுத்தறுப்பு போட்டி, அரசியல் மாற்றங்கள், இவற்றோடு தொழில்நுட்ப மாற்றங்களும் இணைந்து ஐ.டி. நிறுவனங்கள் அனுபவித்து வந்த அதீத வளர்ச்சிக்கும், பெருவீத இலாபமீட்டலுக்கும் முடிவு கட்டியிருக்கின்றன.
காகிதக் கோப்புகள், அவற்றை வைப்பதற்கான அறைகள், அதனைப் பராமரிப்பதற்கான பணியாட்கள், குமாஸ்தாக்கள் என்ற பழைய அலுவலக கட்டுமான முறையை கணினிமயமாக்கம் மாற்றியமைத்தது, அன்று. இன்று, கணினித்துறைக்குள்ளேயே நிகழ்ந்துவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற கட்டுமான மாற்றம், நிறுவனங்களின் கணினிக் கட்டமைப்பு, பராமரிப்பு சார்ந்த பணிகளைப் பெருமளவில் குறைத்துள்ளது.
அதேபோல, முன்னர் மற்ற தொழில்துறை உற்பத்தி செயல்பாடுகளைக் கணினி தொழில்நுட்பமும் கணினி ஊழியர்களும் தானிமயமாக்கினர் (automated). இப்போது கணினித்துறை தன்னைத்தானே தானிமயமாக்கிக் கொள்கிறது. மென்பொருள் சோதனை, வாடிக்கையாளர் சேவை போன்ற மனிதத் தலையீடு அதிகம் தேவைப்படும் பணிகள் மென்பொருள்களால் இயங்கும்படி தானிமயக்கமாக்கப்பட்டு விட்டன. மேலும் தன்னைத்தானே கண்காணித்துக் கொள்ளவும், தனக்குத்தானே பழுது நீக்கிக்கொள்ளவுமான ஆற்றலைக் கணினிகளுக்கு வழங்கும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் (artificial intelligence), நிரல் எழுதுதல், மென்பொருள் வடிவமைப்பு போன்ற பணிகளையும் தானிமயக்கமாக்குகின்றது.
அதாவது, இதுநாள்வரை இலட்சக்கணக்கான ஊழியர்கள் தமது அறிவுத்திறன் கொண்டு செய்த பணிகளில் பலவற்றை எந்திரம் உள்வாங்கிக் கொண்டுள்ளது. பணிகளைத் தொகுத்தும் பகுத்தும் பார்க்கின்ற ஆற்றலையும் கணினி தொழில்நுட்பம் பெற்றுவருவதால், கணினிகளை இயக்குவதற்கு தனியே ஊழியர்கள் தேவையில்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
உள் கட்டுமானங்களின் தேவையை கிளவுட் கம்ப்யூட்டிங் குறைத்திருக்கிறது என்றால், ஊழியர்களின் தேவையை ஆட்டோமேசன் குறைத்து வருகிறது. இது திரும்பிப் போக முடியாத மாற்றம்.
**********
மார்க்ஸ் பிறந்தார் – 6
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
3. “கோபமான பரிகாசமும்” “கவிதாவே சத்துக்கான தேடலும்”
ஆ) மனிதகுலம் தன்னுடைய கடந்த காலத்திடமிருந்து புன்சிரிப்புடன் விடைபெற்றுக் கொள்கிறது!
அறிமுகக் குறிப்பு: எந்த ஒரு எழுத்தாளரும் தான் எழுதியதில் இருந்து தன்னை பிரித்து அந்த எழுத்தை ஆய்வு செய்வது கடினம். எத்தகைய கருப்பொருளாக இருந்தாலும் அது தன்னில் கருவாகி உருவாகி பிராவகமாக ஓடுவதை உணர்ச்சித் தளத்தில் அனுபவிக்கும் இந்த எழுத்தாளர்கள் உணர்வுத் தளத்தில் (பகுத்தறிவு) அக்கருவை விமர்சனப்பூர்வமாக ஆய்வு செய்வதில்லை. இதே வேறு விதமாகவும் சொல்லலாம். தன் எழுத்தை ஒரு தேர்ந்த வாசகன் போல படிக்கத் தெரியாத எந்த எழுத்தாளரும் ஒரு எழுத்தாளராக நீடிக்க முடியாது. இந்த விளக்கத்திற்கு ஆகச்சிறந்த சான்று காரல் மார்க்ஸ். முடிவு செய்த கருப்பொருளின் உயிராதாரம் வரை சென்று அதை மாறிக் கொண்டிருக்கும் இயக்கநிலையில், இயங்கிக் கொண்டிருக்கும் வளர்ச்சி நிலையில் ஆய்வு செய்யும் போதும் சிந்திக்கும் போதும் எவரும் தன் எழுத்தின் மீது பெரும் அதிருப்தியையே கொண்டிருக்க முடியும். ஏனெனில் உண்மை இன்னும் நெருக்கமாக கண்டுபிடிக்கப்படவில்லையே எனும் அறிவுத் தேடல் காரல் மார்க்ஸை அலைக் கழிக்கிறது. அதானால்தான் “மூலதனம்” எனும் முதலாளித்துவத்தின் மர்மமும் பிரம்மாண்டமும் அடங்கிய வரலாற்றை பாட்டாளி வர்க்கத்தின் பேரிலக்கியமாக அவரால் எழுத முடிந்தது.
இயற்கையை விஞ்சும் இயற்கை அழகை தீட்ட விரும்பிய பல்ஸாக்கின் கதையில் வரும் கலைஞனின் நோக்கத்தை மிகையான திறமை அழித்து விட்டது. அப்படித்தான் மார்க்சும் தன்னை ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆயுள் முழுவதும் தனது எழுத்தையும், சிந்தனையையும் அவர் எப்போதும் குறுக்கு விசாரணை செய்தபடியே இருந்தார். மனித குலம் தனது கடந்த காலத்திலிருந்து புன்சிரிப்புடன் விடைபெறுகிறது எனும் மூதுரையை புரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் காரல் மார்க்சின் வாழ்க்கையை… ஆம் ‘வாழ்க்கையை’ கற்க வேண்டும். படித்துப் பாருங்கள்
– வினவு
பல்ஸாக் யாருக்கும் தெரியாத அரும்படைப்பு என்று சிறு கதையை எழுதினார். அக்கதையில் ஒரு சிறந்த கலைஞன் அதியற்புதமான ஒரே ஒரு ஒவியத்தை வரைகிறான். அந்த ஒவியத்தில் வண்ணத்தின் முழு அழகையும் தீட்ட வேண்டும், இயற்கையை விஞ்சும் வகையில் இயற்கை அழகைத் தீட்ட வேண்டும் என்று விரும்புகிறான். அவன் பல வருடங்களாக அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறான். தொல்கதையில் வருகின்ற பிக்மாலியன் ஒரு சிற்பத்தைத் திருத்திக் கொண்டிருந்ததைப் போல அவன் ஒவியத்தில் ஒவ்வொன்றையும் திருத்திக் கொண்டிருக்கிறான். கடைசியில் அவன் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று நினைக்கிறான். ஆனால் பார்வையாளர்கள் அது தூரிகையின் ஒழுங்கில்லாத வீச்சுக்கள் என்றுதான் நினைக்கிறார்கள். மிகையான திறமை அந்த ஒவியத்தைச் சிதைத்து விட்டது.
மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியைப் பல வருடங்களாக அரும்பாடுபட்டு எழுதிக் கொண்டிருந்தார். 1867 பிப்ரவரியில் அந்தப் பணி முடிவடைகின்ற தறுவாயில் அவர் பல்ஸாக்கின் கதையைத் திரும்பப் படித்தார்; அது கலைநுணுக்கம் நிறைந்த பரிகாசக் கதை என்று எங்கெல்சுக்கு சிபாரிசு செய்தார்.(1) மூலதனத்தை எழுதிக் கொண்டிருந்த பொழுது பரிபூரணத்தைத் தேடிய தன்னுடைய கடுமுயற்சியையும் அந்தப் பணி நிறைவு பெறுமா என்று அவர் சில சமயங்களில் கவலைப்பட்டதையும் இக்கதையின் பரிகாசத்தில் அவர் கண்டிருக்க வேண்டும்.
பல்ஸாக்கின் கதாநாயகனைப் போலன்றி மார்க்ஸ் தன்னுடன் நடத்திய போராட்டத்தில் வெற்றியடைந்தார். அவருடைய ஈவிரக்கமற்ற சுயவிமர்சனம், தலைப்புப் பொருளை இயன்ற அளவுக்கு அதிக முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும், அதை மிகச் சிறந்த முறையில் விளக்க வேண்டும் என்ற அவருடைய உள்மனத்தின் கோரிக்கைகள் அவருக்கு உதவி புரிந்தன. முதலாளித்துவச் சமூகத்தைப் பற்றி அவருடைய படப்பிடிப்பு பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கக் கூடிய அரும்படைப்பாக இருந்தது. மூலதனம் ஒரு முழுமையான கலைப் படைப்பு என்று கூறுவதற்கு மார்க்சுக்கு முழு உரிமையுண்டு. ஆனால் அதற்கு அவர் பல வருடங்கள் மிகவும் தீவிரமாகப் பாடுபட்டார். அதற்கு அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், ஏனென்றால் அவருடைய வாழ்க்கை முழுவதுமே மூலதனத்தைப் படைப்பதற்கு ஒரு தயாரிப்பாகவே இருந்தது.
உண்மையான படைப்பாளிகள் அனைவரையும் போல மார்க்ஸ் எப்பொழுதும் தன்னுடைய நூல்களைக் காட்டிலும் உயர்ந்து நின்றார், அவருடைய வளமான எழுத்துக்களில் அவருடைய ஆன்மீக உலகத்தின் செழுமை அரைகுறையாகவே பிரதிபலிக்கப்பட்டிருந்தது. ஆகவே அவருடைய ‘‘மிகச் சிறந்த” புத்தகம் எழுதப்படாமலே இருந்தது. ஆகவேதான் அவர் அதிருப்தியின் வேதனைக்குத் தொடர்ச்சியாக ஆளானார்.
சிந்தனை ஐயப்பாடு மந்த நிலைமையின், கோழைத்தனத்தின் சின்னமாக இருக்கலாம். அது வாழ்க்கை இரகசியங்களின் சிக்கலுக்கு முன்னால் நடுங்கி விவிலிய எக்லெசியாஸ்டசைப் போல அவை ஏழு முத்திரைகளால் மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கிறது. எக்லெசியாஸ்டஸ் “வானப் பரப்பின் கீழே நடைபெறுகின்ற எல்லாவற்றையும்” அறிவின் மூலம் ஆராய்ந்தார், “எல்லாமே பகட்டு, ஆன்மாவின் நச்சரிப்புத்தான்” என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனால் அதே ஐயப்பாடு தத்துவ ரீதியான துணிச்சலுக்கு, கடந்த காலத்தின் கலவரமடைந்த பொய்த் தோற்றங்கள்- அவை இன்னும் சக்தி குன்றவில்லை-மீது சிந்தனை பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்குகின்ற பொழுது அவசியமான ஆயுதமே.
ஹெகல் வேடிக்கையான பரிகாசத்தையும் சோகமான பரிகாசத்தையும் சந்தேகப் பரிகாசத்தையும் பற்றி எழுதினார். சந்தேகப் பரிகாசம் “எல்லாவற்றையும் ஒழிக்கின்ற பல்துறைக் கலையாக” உதவுகிறது, ஆன்மநித்திய வாதத்துக்கு இட்டுச் செல்கிறது. டிட்ரோ குறிப்பிட்டதைப் போல அப்பொழுது உணர்ச்சியற்ற பியானோ தன்னை உலகத்தில் இருக்கின்ற ஒரே பியானோ என்று நினைத்துக் கொள்கிறது. ஆனால் “ஆக்கபூர்வமான” பரிகாசமும் உண்டு. அது படைப்புக் கிளர்ச்சியைப் பக்குவப்படுத்துகின்ற பொருளாக இருக்கிறது, ஒரு புதிய கருத்தைப் பிரசவிப்பதற்கு உதவுகிறது, அதற்காகப் பாதையைச் சுத்தப்படுத்தி நம்பிக்கை என்னும் உத்வேகத்தைக் கொடுக்கிறது.
மனிதகுலம் தன்னுடைய கடந்த காலத்திடமிருந்து புன்சிரிப்புடன் விடைபெற்றுக் கொள்கிறது என்பது மூதுரை. அது தன்னுடைய தத்துவ ரீதியான கடந்த காலத்திலிருந்தும் புன்சிரிப்புடன் விடைபெற்றுக் கொள்கிறது. மறுமலர்ச்சி யுகத்தில் மதம் மற்றும் “தலையில் நடுவட்ட மழிப்புடைய அரிஸ்டாட்டிலுடைய” அதிகாரத்தைப் பற்றி பரிகாசமான அணுகு முறை சிந்தனைக் களத்தில்-புது யுகத்தின் இயற்கை விஞ்ஞானம் மற்றும் தத்துவஞானத்தில்–புரட்சியின் முன்னோடியாகும். சர் பிரென்ஸிஸ் பேக்கன் தர்க்க ரீதியான வாதங்களின் மூலம் மத்திய காலக் கோட்பாட்டுவாதிகளின் “விக்கிரகங்களை’’ அகற்றி, புதிய கருத்துக்கள் மற்றும் இலட்சியங்களால் அவற்றை மறுப்பதற்கு முன்னால் பிரான்சுவா ராப்லேயின் குதூகலமான, ஒழுக்கக்குறைவான சிரிப்பு ஒலித்தது.
சமூகம் முழுமைக்கும் எது உண்மையோ அது இந்த உதாரணத்தில் தனி மனிதருக்கு-குறிப்பாக மார்க்சைப் போன்ற ஒரு நபருக்கு-உண்மையானதே. ஒரு மேதை எப்பொழுதுமே எதிர்மறை மற்றும் பரிகாச உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் “உயர்ந்தனவற்றில்” உள்ள தற்காலிகமான, கடைகெட்ட, பரிதாபகரமானவற்றை அவரைப் போலக் கூர்மையாக வேறு எவராலுமே உணர முடியாது. “உயர்ந்தனவற்றை” சிற்பியின் கூர்மையான சிற்றுளி கொண்டு அவ்வளவு கவனமாகச் சுத்தப்படுத்த வேறு எவராலுமே முடியாது.
மார்க்சின் பரிகாச உணர்ச்சியின் ஊற்றுக்களில் முங்கியெழுவதற்கு விரும்பினால் நாம் கலைக்குத் திரும்ப வேண்டும்.
பல்ஸாக் தன்னுடைய கசப்பான, பரிகாசமிக்க கதாநாயகனைக் கலையின், அதன் இரகசியங்கள், எழுச்சிகள், கனவு மயக்கங்களின் உருவகம் என்று கூறினார். இது மிகவும் ஆழமானது; ஏனென்றால் கலை எல்லாவித வறட்டுக் கோட்பாட்டு வாதத்துக்கும் கல்லாகிப் போன கருத்துக்களுக்கும் அந்நியமாக இருக்கிறது. அது யதார்த்தத்தை ஒரு நிகழ்வுப் போக்காக, இயக்கமாக, நடவடிக்கையாகப் புரிந்து கொள்கிறது. இல்லையென்றால் அது கலையாக இருக்க முடியாது. அதன் பேருருவ வடிவத்தில் கூட அது “கெட்டிதட்டிப் போனவற்றை” மறுக்கிறது, அதில் வாழ்க்கையின் மூச்சையும் துடிப்பையும் சேர்க்க முயல்கிறது.
யதார்த்தத்தைத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்கின்ற பொழுது வரையறுப்புகளும் வகுத்தளித்தல்களும் துல்லியமாகவும் முழுமையாகவும் இருப்பது அவசியம்; ஆகவே அதன் முடிவுகள் “நிரந்தரமானவையாக” “அசைக்க முடியாதவையாக” மாற்றமடைகின்ற சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு மாறாக கலையில் (நிச்சயமாக மெய்யான கலையில்) உலகத்தைப் பற்றி நம்முடைய கருத்துக்கள் கல்லாகி விடுகின்ற சாத்தியம் இல்லை.
மார்க்ஸ் குழந்தைப் பருவத்திலிருந்தே கலைச் சூழலில் வளர்ந்தார். ஷீல்லர் அவருடைய உள்ளத்தில் எதேச்சாதிகாரத்துக்கும் ஏழைகள் மீது வன்முறைக்கும் எதிராக வெறுப்பைத் தூண்டிக் கொண்டிருந்த நேரத்தில் மனித உணர்ச்சிகள் மற்றும் உறவுகள் என்ற பல்வகையான உலகத்தை ஷேக்ஸ்பியர் அவருக்கு எடுத்துக்காட்டி அவருடைய இயற்கையான நகைச்சுவை உணர்ச்சிக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தார்… கேதே. உணர்ச்சியைச் சிந்தனையுடன், கற்பனையின் விசித்திர நாடகத்தை வாழ்க்கை மற்றும் மரணத்தின் உட்பொருளைப் பற்றி உயர்வான சிந்தனைகளுடன், மரபு ரீதியான ஒழுக்கத்தின் போலித்தனத்தைப் பற்றிய மெஃபிஸ்டோபிலியச் சிரிப்பை விஞ்ஞானம் மற்றும் அதன் சர்வவல்லமை பற்றிய வாக்னரின் ஆவேசத்துடன் இணைக்கும்படி நிர்ப்பந்தித்தார்.
நாம் பழைய பெர்லின் நகரத்தில் ஒரு அமைதியான தெருவில் ஒரு மாணவர் விடுதிக்குத் திரும்புவோம். அங்கே சுருட்டுப் புகை மேகங்களுக்கு நடுவில் கறுப்புத் தலைமுடி கொண்ட இளைஞரான கார்ல் ஹென்ரிஹ் மார்க்ஸ் – 1837இல் அந்தப் பெயருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, யாருக்கும் தெரியாது-தன் தகப்பனாருக்குக் கடிதத்தை எழுதி முடித்துக் கொண்டிருந்தார்.
நான் பலவற்றையும் மறுத்து விட்டேன்; “பரிகாசம் என்னும் ஆவேசம் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது”; என்னுடைய முயற்சிகள் ‘’வீணாகி” விட்டபடியால் நான் எழுப்பியிருக்கும் “கொந்தளிப்பான பிசாசுகளை” அமைதிப்படுத்தக் கூடிய பலம் என்னிடம் இல்லை என்று தோன்றுகிறது என்று மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிக் கொண்டிருந்தார்.
ஆனால் இது அவருடைய வாழ்க்கையின் திருப்பத்தில் தற்காலிகமான நெருக்கடியே. யதார்த்தம் மற்றும் விஞ்ஞானத்துடன் அவருடைய மோதலின் முதல், முதிர்ச்சியற்ற கட்டத்தில் அது பகுதியளவுக்கு “கடைசிப் பாடலாகவும்” எதிர்காலத்துக்கு, இதைக் காட்டிலும் முக்கியமான, அடிப்படையான மோதல்களுக்குப் பகுதியளவுக்குத் துணிவான முன்னுரையாகவும் இருந்தது.
இந்த முன்னுரையில் இங்குமங்கும்- மிகவும் தெளிவாக, நம்பிக்கையாக இல்லாவிட்டாலும்-சில குரல்கள் கேட்கின்றன. இவை பிற்காலத்தில் முழுக் கச்சேரிகளாக வளர்ச்சியுற்றன. எல்லாவற்றையும் மறுத்த, உலகத்திடமும் தன்னிடமும் இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட அறிவு உழைப்பு மார்க்ஸ் நினைத்ததைப் போல வீணாகி விடவில்லை; அதன் மறுப்புகள் பயனற்றவை அல்ல, அவை புதிய கனிகளின் விதைகளை மறைத்துக் கொண்டிருந்தன. அவருடைய சிந்தனை மரபு வழிப்பட்ட, விஞ்ஞானப் போலியான பிதற்றலை, தப்பெண்ணங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டிருந்தது; உண்மையான விஞ்ஞானத்தின் முளைகள் வளர்வதற்காக மண்ணைப் பண்படுத்திக் கொண்டிருந்தது.
இது உண்மை என்பதை 1837 நவம்பர் 10இல் அவர் தகப்பனாருக்கு எழுதிய அதே கடிதத்திலிருந்து பார்க்கலாம்.
சட்டவியலின் தத்துவஞானத்தைப் பற்றி தான் செய்திருக்கும் ஆராய்ச்சிகளை விரிவாக வர்ணித்துத் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் தன்னுடைய நூலில் உள்ள குறைபாடுகளின் காரணங்களைத் தேடுகிறார். தொடக்க முதலே, “கணிதவியல் வறட்டுக் கோட்பாட்டின் விஞ்ஞானத்துக்கு மாறான வடிவம்” உண்மையை அடைவதற்குத் தடையாக இருந்தது. தத்துவஞானத்தில் ஸ்பினேஸா காலத்திலிருந்து வளர்ச்சியடைந்திருக்கின்ற “வடிவ கணித” முறையை மார்க்ஸ் குறிப்பிடுகிறார், வடிவகணிதத்தில் முக்கோணம் வெவ்வேறு உறவுகளில் ஆராயப்பட்டு அந்தப் பகுப்பாய்வு தேற்றங்கள் அல்லது முற்கூற்றுகளிலிருந்து கறாரான, சம்பிரதாயமான முறையில் பெறப்பட்ட கருதுகோள்களில் பதிவு செய்யப்படுவதைப் போல இம்முறையில் அறியப்படும் பொருள் பல்வேறு பக்கங்களிலிருந்து கொடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. முக்கோணம் மாற்றமடைவதில்லை, “வேறு ஏதேனும் ஒன்றாக வளர்ச்சியடைவதில்லை,” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், “ஒருவன் இப்படியும் அப்படியுமாக வாதிடுகிறார், ஆராயப்படுகின்ற பொருளைச் சுற்றிச் சுற்றி வருகிறார்; ஆனால் ஆராயப்படுகின்ற பொருள் வாழ்கின்ற, பன்முக வழியில் வளர்ச்சியடைகின்ற ஏதோ ஒன்றாக உருவமெடுப்பதில்லை’’.
“செத்த” பருப்பொருளின் வெளித் தோற்றங்களை ஆராய்கின்ற பொழுது சிறந்த பலன்களைத் தருகின்ற இந்த முறை “உயிருடனுள்ள” பருப்பொருளை, சிறப்பாக சமூகப் போக்குகளே, விளக்குவதற்கு முற்றிலும் போதுமானதாக இருக்கவில்லை. “இங்கே அறியப்படும் பொருள் அதன் வளர்ச்சியில் ஆராயப்பட வேண்டும், எந்தத் தன்னிச்சையான பிரிவினைகளையும் நுழைக்கக் கூடாது, அறியப்படுகின்ற பொருள் தன் முரண்பாடுகளில் தோய்ந்த ஒன்றாக, தனக்குள் ஒருமையை அடைகின்ற ஒன்றாக வளர்ச்சியடைய வேண்டும்.”(2)
அறியப்படும் பொருளை அதன் வளர்ச்சியில், தானாகவே உருவாகி, “பன்முக வழியில் வளர்ச்சியடைந்து, வாழ்கின்ற ஒன்றாக” ஆராய்வது-இந்த முறையியல் நிபந்தனை மூலதனத்தில் மேதாவிலாசத்துடன் நிறைவேற்றப்பட்டது.
மேலே தரப்பட்ட சூத்திரத்தில் ஹெகல் பெரிய அளவுக்கு இடம் பெற்றிருக்கிறார் என்பது உண்மையே. இங்கே அவருடைய தாக்கத்தை ஒருவர் உணர முடியும். பருப்பொருளையும் வடிவத்தையும் எதிர்நிலைப்படுத்தியதற்காக -அதன் விளைவாக, “பருப்பொருள்” நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொருகு அறைகளைக் கொண்ட மேசை போன்ற ஒன்று அவருக்குக் கிடைத்தது-மார்க்ஸ் தன்னை விமர்சித்துக் கொள்வதிலும் இந்த உண்மையைக் காண முடியும். இந்த அணுகுமுறையைப் பற்றி பரிகாசமான முறையில் எழுதிய மார்க்ஸ் “உள்ளடக்கத்தின் தொடர்ச்சியாக மட்டுமே வடிவம் இருக்க வேண்டும்’’ என்ற முடிவுக்கு வந்தார்.
மரபு வழிப்பட்ட தத்துவஞான ஆராய்ச்சியில் உள்ள சில சிக்கல்களிலிருந்து ஹெகல் மார்க்சைக் காப்பாற்றிய போதிலும் அவரைத் தழுவிக் கொள்ள மார்க்ஸ் அவசரப்படவில்லை. முதலில் ஹெகலியத் தத்துவஞானத்தின் “கோரமான, கரடுமுரடான இசையை” அவர் விரும்பவில்லை என்பதை மார்க்ஸ் ஒத்துக்கொள்கிறார். அதிகமான ஆராய்ச்சி உழைப்பின் விளைவாக மார்க்ஸ் உடல்நலமில்லாதிருந்த பொழுது ஹெகலை “தொடக்கத்திலிருந்து கடைசி வரை” படித்தார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் ஹெகலைப் பற்றி தொடர்ந்து எச்சரிக்கையாகவே இருந்தார். “எனக்கு வெறுப்பாக இருந்த கருத்தைச் சொன்னவரை வழிபடும் விக்ரகமாக்கிக் கொள்வதற்கு எனக்குச் சங்கடமாக இருந்தது” என்று மார்க்ஸ் எழுதுகிறார். “கரடுமுரடான இசை” மோகினிப் பெண்ணின் பாட்டின் கவர்ச்சியைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவர் மயங்கிவிட்டார்.
“டாக்டர்கள் கழகத்தில்’’ இருந்த இளம் ஹெகலியவாதிகள் ஹெகலை உற்சாகத்துடன் வழிபாடு செய்தார்கள். ஆனால் ஹெகலின் பிரகாசமான ஒளியில் மயங்கிவிடாத நபராக மார்க்ஸ் இருந்தார். அவர் ஹெகலின் வழியைப் பின்பற்றப் போகிறாரா என்ற கேள்வி இன்னும் முடிவு செய்யப்படாமல் இருந்தது. ஹெகலை விரிவாகப் படிப்பதற்கு முன்னர் மூலச்சிறப்பான ஜெர்மன் தத்துவஞானத்தின் இரண்டு மாமேதைகளின் – கான்ட் மற்றும் ஃபிஹ்டே-தாக்கத்தை மார்க்ஸ் ஏற்கெனவே உணர்ந்திருந்தார். கான்ட்டின் நூல்களிலிருந்த மேன்மையான தார்மிக இலட்சியங்களும் தத்துவஞான மற்றும் மதச்சிந்தனையின் உறுதியான ஐயுறவுவாதமும் மார்க்சைக் கவர்ச்சித்தன என்றால் பிரதானமாக ஃபிஹ்டேயின் தத்துவஞானத்தின் சுறுசுறுப்பான, ஆவேசமான, உறுதியான சித்தம் அவர் மனதில் பதிந்தது.
இளம் மார்க்ஸ் செயலில் ஈடுபடுவதற்குத் துடித்தார், விஞ்ஞானச் சிந்தனையை உலகத்தை மாற்றுகின்ற நெருப்பாகவும் வாளாகவும் செய்ய அவசரப்பட்டார். எனவே தன்னுடைய தொடக்க கால மாணவ வருடங்களில் ஃபிஹ்டேயின் தத்துவஞானம் மற்றும் கண்ணோட்டத்திலிருந்து அவர் பெற்றவை மிக அதிகமே.
அக்காலத்தில் ஃபிஹ்டேயின் ஆளுமை தீவிரவாத இளைஞர்களை மிகவும் வசீகரித்தது. அவரிடம் தத்துவச் சிந்தனை ஈடுபாட்டுடன் செயலுக்கான துடிப்பும் இணைந்திருந்தது. அவர் போராட்டக்காரராகவும் தத்துவஞானியாகவும் இருந்தார், சிந்தனையையும் செயலையும் ஒன்றுபடுத்தினார். அவரைத் தத்துவஞானத்தின் போனப்பார்ட் என்று கூறினார்கள், ஆனால் அவருடைய தத்துவப் பணியின் ஆரம்பக் கட்டத்தில் அவரைத் தத்துவஞான ஜாக் கொபின்வாதி என்று சொல்லியிருந்தால் அது பொருத்தமானதே. புரட்சிகர பிரான்சின் குடிமகன் என்று தன்னைக் குறிப்பிடுவதற்கு அவருக்கு உரிமையளிக்கப்பட்ட பொழுது அவர் அதை ஒரு கெளரவமாகக் கருதினார்.
அவர் கான்ட்டிடமிருந்து வேறுபாடானவர், எந்த வடிவத்திலும் சமரசத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. அவருடைய சிந்தனையும் நடவடிக்கைகளும் சவாலாக, ‘அவமதிப்பு’ என்கின்ற அளவுக்குத் துணிச்சலாக இருந்தன. அவருடைய எழுத்துக்களில் சுதந்திர உணர்ச்சியும் பெருந்தகைமையான கண்ணியமும் இருந்தன. அவருடைய இலக்கிய நடை தெளிவானதாக, கம்பீரமானதாக, உருக்கமானதாக இருந்தது. என்னுடைய தத்துவஞானத்தின் உதவியினால் ஒரு யுகத்தின் உணர்ச்சியையே நெறிப்படுத்த முடியும் என்று அவர் உரிமை பாராட்டுவதை ஒருவர் உணர முடியும். “தத்துவஞானம் என்பது வறண்ட ஊகமல்ல, ஓட்டைச் சூத்திரங்களை உருட்டுவதல்ல. ஆன்மாவை அதன் மூல வேர்களுடன் மாற்றியமைத்தல், புத்துயிரூட்டல், புத்தெழுச்சி-ஒரு புதிய உறுப்பைப் படைத்தல், அதிலிருந்து காலத்தில் ஒரு புதிய உலகத்தை அடைதல்-தத்துவஞானம்”(3) என்று அவர் எழுதினார்.
ஃபிஹ்டே செயலற்ற சிந்தனைத்தவத்துக்குப் பதிலாக படைப்புச் செயலுக்கு, தனிமனிதனுடைய படைப்பு நடவடிக்கைக்கு இடமளித்தார். மனிதன் தன்னுடைய நடவடிக்கைகளின் மூலம் தன்னை உருவாக்கிக் கொள்கிறான் என்பது அவருடைய முக்கியமான கருத்து. மார்க்ஸ் தன்னுடைய மாணவப் பருவத்தில் நெருங்கிப் பழகிய இளம் ஹெகலியவாதிகளிடம் இக்கருத்துக்கள் அதிகமான செல்வாக்குப் பெற்றிருந்தன.
ஃபிஹ்டேயின் “நடவடிக்கைத் தத்துவஞானம்” என்பது உலகத்தைப் பற்றிய கருத்து முதல்வாதக் கண்ணோட்டமே, அவருடைய நடைமுறை வெறும் ஆன்மாவின் நடை முறையே, ஃபிஹ்டேயின் (மற்றும் இதர சிந்தனையாளர்களின்) கருத்துக்களின் “அறிவுக் கரு” நடைமுறையைப் பற்றிய இயக்கவியல்-பொருள் முதல்வாதப் போதனையாக, உலகத்தை மாற்றுவதற்கு உண்மையான கருவியாகப் பயன்பட்ட விஞ்ஞான தத்துவத்தைப் படைப்பதற்கு மார்க்ஸ் தன்னுடைய ஆன்மீக வளர்ச்சியில் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருந்தது.
கான்ட், ஃபிஹ்டே இருவருமே மனிதாபிமானிகளே, ஆனால் சுதந்திரம் மற்றும் தனி மனிதனுடைய முழுமையான வளர்ச்சி என்ற கருத்தை கான்ட் நெடுந்தொலைவிலுள்ள எதிர்காலத்துக்குத் தள்ளி வைத்தார், ஃபிஹ்டே அதற்குக் கற்பனாவாதக் கூறுகளைக் கொடுத்தார். ஜெர்மானியக் கருத்துமுதல்வாதத்தின் மூலச்சிறப்பான தத்துவஞானம் இளைஞரான மார்க்சுக்கு ஏன் திருப்தியைத் தரவில்லை என்பதை 1837இல் அவர் எழுதிய ஒரு பரிகாசக் கவிதையில் காணலாம்:
கான்ட்டும் ஃபிஹ்டேயும் தொலைதூரத்திலுள்ள உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள்; நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன் அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்.(4)
கான்ட்டையும் ஃபிஹ்டேயையும் பற்றி அவர் எழுதியிருப்பது ஹெகலுக்கும் பொருந்தும் என்பது உண்மையே. ‘ஆன்மாவின்’ முந்நிலைத் தன்மையை மட்டுமின்றி, “தெருவில்”, உண்மையான வாழ்க்கையில் நடைபெறுவதையும் தத்துவ ரீதியில் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் துடிக்கிறார்.
முந்திய வருட முழுவதும் அவர் செய்த சிந்தனைகள் பின்வரும் முடிவில் தொகுத்துரைக்கப்படுகின்றன: “என்னுடைய கருத்து முதல்வாதத்திலிருந்து-அதை நான் கான்ட் மற்றும் ஃபிஹ்டேயின் கருத்துமுதல்வாதத்துடன் ஒப்பிட்டுச் செழுமைப்படுத்தியிருக்கிறேன் – யதார்த்தத்தில் கருத்தைத் தேடுகின்ற நிலைக்கு நான் முன்னேறினேன். முன்பு கடவுள்கள் பூமிக்கு மேலே வசித்தார்கள் என்றால் இப்பொழுது அதன் மையமானார்கள்.”(5)அவர் பொருள்முதல்வாதத்துக்கு மாறுவது இன்னும் தொலைவில்தான் இருக்கிறது. “கடவுள்கள்’’ தூக்கியெறியப்படவில்லை, அவர்கள் அந்த உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு, “தன்னிலைப் பொருளிலிருந்து’’ “நமக்குரிய பொருளாக” மாற்றப்படுகிறார்கள். ஏனென்றால் யதார்த்தம் தெய்வீகக் கருத்து குடிகொண்டிருக்கும் ஆலயமென்று அறிவிக்கப்படுகிறது.
மார்க்ஸ் இந்த ஆலயத்துக்குள் நிரந்தரமான கைதியாக நுழையவில்லை; ஹெகலியத் தத்துவஞானத்தில் விரித்துரைக்கப்படுகின்ற பரம கருத்துக்கு முன்னால் தாள் பணிந்து வணங்குபவராக நுழையவில்லை. இந்தக் கடவுள் அந்த அளவுக்கு “வல்லமையானவரா” , தன்னுடைய விமர்சனத்தின் தீவிரமான தாக்குதல்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று அவர் சோதித்துப் பார்க்க விரும்பினார்.
குறிப்புகள் :
(1) Marx, Engels, Werke, Bd. 31, Berlin, 1965, S. 278.
(2) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 12.
(3) J. G. Fichte, Werke, Bd. 6, S. 415-16.
(4) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 577.
(5) Ibid., p. 18.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.
முந்தைய பாகங்கள்:
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்துவரும் “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அரசு” ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஆட்சி குறித்த நமது மதிப்பீடை விவாதிப்பதற்கு முன்பாக, அ.தி.மு.க. அம்மா கோஷ்டியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தமது சொந்த ஆட்சி குறித்து கொண்டிருக்கும் கருத்தைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.
“அம்மா இருந்தவரை அமைச்சர்கள் மற்றும் கார்டனுக்கான கமிசன் 11 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கெல்லாம் சேர்த்து டீலிங் மற்றும் காண்ட்ராக்டுகள் 30 சதவீதத்தில் முடியும். ஆனால், தற்போது அமைச்சரவை கமிசன் மட்டும் 15 சதவீதம் கேட்கிறார்கள். அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்களின் கமிசன் எல்லாம் கொடுத்தால், அது 40 சதவீதம் வரை போய்விடுகிறது. அதனால் யாரும் காண்ட்ராக்டு எடுப்பதற்கே துணிவதில்லை. எனவே, கமிசன் தொகையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் பயன் பெறுவார்கள். கட்சியை நடத்த முடியும்” என்று 16.5.17 அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும், எம்.எல்.ஏ. விடுதியிலும் நடந்த எம்.எல்.ஏ.க்களின் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதாக எழுதியிருக்கிறது ஜூனியர் விகடன் (24.5.17, பக்.45)
நடப்பது தீவட்டிக் கொள்ளையர்களின் ஆட்சி என்பதைப் புரிந்துகொள்வதற்கு, “கமிசனைக் குறை” என்ற எம்.எல்.ஏ.க்களின் கூப்பாடே போதுமானது. இதற்கு அப்பாலும் சான்றுகள் வேண்டுமென்றாலும், அதற்கும் எந்தக் குறையுமில்லை.
தமிழகம் முழுவதுமுள்ள தெருவிளக்குகளில் மெர்க்குரி பல்புகளுக்குப் பதிலாக எல்.இ.டி. பல்புகளைப் பொருத்துவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மட்டும் 600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகத் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீது சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம் குற்றஞ்சுமத்தியிருக்கிறார். இந்த டெண்டரில் விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு எதிராக இந்திய ஊழல் எதிர்ப்புக் கூட்டமைப்பு வழக்குத் தொடர்ந்ததையடுத்து, இந்த டெண்டரை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழக மின்வாரியத்தில் 375 பொறியாளர்களை நியமனம் செய்வதற்கான நேர்முகத் தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஒரு நியமனத்திற்கு இரண்டு இலட்ச ரூபாய் வரை பேரம் பேசப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.6 இலட்சம், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு ரூ.4 இலட்சம், பிற பணிகளுக்கு ரூ.3 இலட்சம் என ரேட் நிர்ணயிக்கப்பட்டு, 60 பணியிடங்கள் விற்கப்பட்டிருப்பதாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறது, ஸ்காலர்ஸ் ஃபோரம் என்ற அமைப்பு.
இது மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் 40 கோடி ரூபாய் ஊழல், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 50 கோடி ரூபாய் ஊழல், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 64 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும் பல கோடி ரூபாய் ஊழல் எனத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை ஊழல் துறையாக நாறிப்போய் நிற்கிறது.
தமிழகத்தில் கார் தொழிற்சாலை தொடங்க தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்திவந்த தென்கொரியாவைச் சேர்ந்த நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றுவிட்டது. இந்நிறுவனம் தமிழகத்திலிருந்து தலைதெறிக்க ஓடியதற்குக் காரணம் அமைச்சர்கள் கேட்ட கமிசன்தான் எனக் கூறியிருக்கிறார், அந்நிறுவனத்தின் ஆலோசகர் கண்ணன் ராமசாமி. “கியா மோட்டார்ஸுக்கு ஒதுக்கவிருந்த 390 ஏக்கர் நிலத்தின் உண்மையான மதிப்பில் 50 சதவீதத் தொகையை இலஞ்சமாகக் கேட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், அவர்.
சமூக நலத்துறையில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலராகப் பணியாற்றிவரும் ராஜ மீனாட்சி, தனது பணி நீட்டிப்பிற்கு அத்துறையின் அமைச்சர் சரோஜா முப்பது இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்டதோடு, இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.
நீடாமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் குமாரிடமிருந்து 45 இலட்ச ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு, அதனைத் திருப்பித் தராமல், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏப்பம் விட முயற்சி செய்த உணவுத் துறை அமைச்சர் காமராஜின் மீது பண மோசடி குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழக போலீசிற்கு உத்தரவிட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
அம்மாவின் ஆவியாலும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலாலும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ்., முதலமைச்சர் நாற்காலியில் எடப்பாடிக்கு முன்பாக ஒட்டிக்கொண்டிருந்தபொழுது 808 கோடி ரூபாய் பெறுமான ஊழலுக்கு அச்சாரமிட்டுச் சென்றிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் ஒரு தனியார் நிறுவனம், தனது பிரிமியம் தொகையை 437 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்துமாறு கோரித் தூண்டில் போட்டுவந்த நிலையில், சுகாதாரத் துறை செயலரின் எதிர்ப்பையும் மீறி, அந்நிறுவனத்தின் பிரிமியத் தொகையை 699 ரூபாயாக உயர்த்திக் கொடுத்திருக்கிறார், ஓ.பி.எஸ். இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 808 கோடி ரூபாய். ஓ.பி.எஸ். அடைந்த இலாபம், மோடிக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
ஒரிஜினல் அம்மா ஆட்சியில், ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் என்ற ஐவரணிதான் போயசு தோட்டத்தின் ஏஜெண்டுகளாக இருந்தனர். தற்பொழுது அ.தி.மு.க. அம்மா ஆட்சியில் அந்த இடத்தைப் பிடித்திருப்பவர் சுகாதராத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர்.
அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா லெட்சுமி ஆகிய இருவரும் சுகாதாரத் துறையை முறைகேடுகளின் மூட்டையாக மாற்றி அமைத்திருக்கின்றனர். 30 சதவீத கமிசன் அடிப்படையில்தான் – அதாவது, ஒரு ரூபாய்க்கு முப்பது பைசா கமிசன் என்ற சதவீதக் கணக்கில்தான் தமிழகமெங்குமுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் வாங்குவதை விதியாகவே மாற்றியிருக்கிறது, இந்தக் கும்பல்.
மருத்துவப் பல்கலைக்கழக வட்டாரத்தில் கீதா லெட்சுமியின் பட்டப் பெயர் பட்டுப்புடவை லெட்சுமி. அப்பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், தமது ஆராய்ச்சிக் கட்டுரையைத் தேர்வுக்காகக் கொடுக்கும்போது, அதனுடன் சேர்த்து ஒரு பட்டுப்புடவையையும் தட்சணையாகக் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாம். நீட் தேர்வைக் காரணம் காட்டி, என்.ஆர்.ஐ. ஒதுக்கீடில் சேர்ந்த 169 மாணவர்களிடம் நடத்தப்பட்ட வசூல், பணி நியமனம், பதவி உயர்வு, இடம் மாறுதல் ஆகியவற்றுக்குத் தனித்தனி ரேட் எனத் துணை வேந்தர் கீதா லெட்சுமி வசூல் வேந்தராக அவதாரமெடுத்திருக்கிறார்.
இவற்றையெல்லாம்விட, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக அங்கீகாரம் அளிப்பதுதான் விஜயபாஸ்கர் – கீதா லெட்சுமி கூட்டணிக்கு இலஞ்சத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் மூன்று மருத்துவ மாணவிகள் மர்மமான முறையில் இறந்துபோகக் காரணமாக இருந்த எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்த பெருமைக்குரியவர்தான் கீதா லெட்சுமி.
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகள், பாஸ்கர் கானுமுரி என்பவர் பங்குதாரராக இருக்கும் பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி அண்ட் பெசிலிட்டிஸ் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்திற்குத் தரப்பட்டிருக்கிறது. பாஸ்கர் கானுமுரியும் ரெய்டு புகழ் ராம மோகன ராவின் மகன் விவேக் பாபுவும் வியாபாரக் கூட்டாளிகள். தலையைச் சுற்றி மூக்கைத்தொடும் தந்திரம் மூலம் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் ராம மோகன ராவின் பினாமி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவே இப்பணிகள் குறித்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள அறப்போர் இயக்கம், இதில் 520 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. விசாரணை கோரியிருக்கிறது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி நிறுவனம் 8,672 தொழிலாளர்களையும் ஊழியர்களையும் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த எண்ணிக்கையில் பாதியளவே நியமித்துவிட்டு, மீதிமுள்ள தொழிலாளர்களுக்கான சம்பளம், கூலியனைத்தையும் நிறுவனமும் அதிகாரவர்க்கமும் பங்கு போட்டுக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறது, அறப்போர் இயக்கம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் நடந்த மஸ்டர்ரோல் ஊழலுக்கு இணையான மோசடி இது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரு ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் என்ற கணக்கில், ஏறத்தாழ 200 கோடி ரூபாயை தினகரன் கும்பல் அள்ளிவிட்டதே, அந்தப் பணத்தில் பெரும்பகுதி விஜயபாஸ்கர் – கீதா லெட்சுமியின் வழியாகப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பான் மசாலா, போதைப் பாக்குகளைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து விநியோகிக்கும் ஏஜெண்டுகளிடம் பெறப்பட்ட மாமூல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்துப் பெறப்பட்ட இலஞ்சம் – இவை மூலம்தான் அந்த 200 கோடியில் பெரும்பகுதி பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெயா முதல்வராக இருந்த சமயத்திலேயே, போதைப் பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குகளில் வருமான வரித் துறையால் நடத்தப்பட்ட சோதனையில், எந்தெந்த போலீசு அதிகாரிகளுக்கு எவ்வளவு மாதாந்திர மாமூல் தரப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியது. இப்பொழுது இன்னொரு டைரி கிடைத்திருக்கிறது. மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியிடமிருந்து வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில், 18 அமைச்சர்கள், 25 அதிகாரிகள் உள்ளிட்டு 68 பேருக்கு 300 கோடி ரூபாய் அளவிற்குக் கையூட்டுத் தரப்பட்ட விவரங்கள் கிடைத்துள்ளன.
அ.தி.மு.க. அம்மா அரசின் அடித்தளமே இலஞ்சமும் கையூட்டும்தான். இந்த அரசை ஆதரிக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.விற்கும் பல கோடி ரூபாய் பணமும் தங்கக் கட்டிகளும் சன்மானமாகத் தரப்படும் என்ற கீழ்த்தரமான பேரத்தின் மூலம்தான் அ.தி.மு.க. அம்மா அணி அதிகாரத்தைக் கைப்பற்றியது. எனவே, தமிழகத்தை மொட்டையடிக்காமல் இந்த அரசால் நீடித்திருக்க முடியாது.
சூடான வாணலியிலிருந்து தப்பித்துக் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரைக்குள் விழுந்த கதை போல, ஜெயாவிடமிருந்து தப்பித்த தமிழகம், இப்பொழுது சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன், ஓ.பி.எஸ்., சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விசுவநாதன், விஜய பாஸ்கர் – என நீளும் குற்றக் கும்பலிடம் சிக்கி மூச்சுத் திணறிவருகிறது. கிரிமினல் ஜெயாவையே டபாய்த்த கேடிகள் இவர்கள்.
வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகிப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராம மோகன ராவ், எதுவுமே நடக்காதது போல மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அவர் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், ராம மோகன ராவின் தலையை யாரும் துண்டித்துவிடப் போவதில்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயா, அதன்பிறகு இரண்டு முறை தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததை, அந்த வழக்கு விசாரணை தடுத்துவிடவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அவ்வழக்கின் இறுதித் தீர்ப்பில், ஜெயா இறந்துபோனதைக் காட்டி, அவரை வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது, உச்சநீதி மன்றம். ஜெயா போன்ற அதிகார வர்க்க கிரிமினல்களைச் சட்டப்படி தண்டிக்க முயல்வது, வழுக்குப் பாறையில் ஏறுவதற்கு ஒப்பானது என்பதை உலகத்திற்கே எடுத்துக்காட்டிய வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு.
எனவே, ஜெயா-சசியின் தயாரிப்பான இந்தக் குற்றக்கும்பலைச் சட்டம் நின்றாவது கொல்லும் என நம்பியிருக்கத் தேவையில்லை. மாறாக, தமிழக மக்களே இவர்களைக் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். பிக்பாக்கெட் திருடர்களின் படத்தைப் போட்டு போலீசு எச்சரிப்பது போல, இந்தக் கொள்ளைக் கும்பலை அம்பலப்படுத்தி, அவமதிக்க வேண்டும். இந்தக் கும்பல் பதுக்கி வைத்துள்ள பணத்தையும் சொத்துக்களையும் தமிழக மக்கள் தாமே முன் வந்து பறிமுதல் செய்ய வேண்டும்.
குடி கெடுக்கும் டாஸ்மாக் கடையை அரசு இழுத்து மூடும் வரை காத்திருக்காமல், அந்தச் சனியனைப் பெண்கள் தாமே முன்வந்து அடித்து நொறுக்குவது எப்படி நியாயமானதோ, அது போல, தமிழச் சமூகத்தின் எதிரிகளாக நிற்கும் அ.தி.மு.க. கொள்ளைக் கூட்டத்தின் சொத்துக்களைப் பொதுமக்கள் தாமே முன்வந்து பறிமுதல் செய்வதுதான் நீதியானது!
-செல்வம்
புதிய ஜனநாயகம் – ஜூன் 2107
**********
பெட்டிச் செய்தி : கோவணத்தையும் உருவும் பஞ்சமா பாதகர்கள்!
சென்னை-ஆர்.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள எழில் நகர் 250 ஏக்கர் பரப்பு கொண்ட குடியிருப்புப் பகுதி. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வசித்து வருகின்றன. அக்குடும்பங்களைக் கூண்டோடு துரத்தியடித்துவிட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முயன்றுவருகிறார், அ.தி.மு.க.வின் உள்ளூர் எம்.எல்.ஏ. அவரின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து, அப்பகுதி மக்கள், எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் என்ற பெயரில் அமைப்பாகத் திரண்டு போராடி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்தை அச்சுறுத்தி நசுக்கும் விதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் போலீசும் கைகோர்த்துக் கோண்டு, அச்சங்கத்தின் தலைவரும் 74 வயது முதியவருமான வேதக்கண் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகப் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுதாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது, போலீசு. இதனால் சந்தேகமடைந்த குற்றவியல் நீதிபதி, வேதக்கண் மீது போடப்பட்டுள்ள கஞ்சா வழக்கு குறித்து நேர்மையான போலீசு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக, வேதக்கண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் பிணை வழங்கியிருக்கிறது.
ஆனாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போலீசை மீண்டும் தூண்டிவிட்டு, அந்த முதியவர் மீது 25 இலட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, மீண்டும் வேதக்கண்ணைச் சிறையில் அடைத்துவிட்டார்.
1991-96 ஆண்டுகளில் ஜெயா-சசி கும்பல் அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி கண்ணில் கண்ட இடங்களையும் வளைத்துப் போட்டு வந்தனர். அந்தக் கும்பலின் அடாவடித்தனமான நில அபகரிப்புக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் இரத்த சாட்சியாக உள்ளார்.
அந்த அபாயம் மீண்டும் திரும்புகிறது, தமிழர்களே எச்சரிக்கை!
**********
விவசாயிகளை வாழவிடு என்ற தலைப்பில் சீர்காழியில் கூட்டம் நடத்துவதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பலமுறை அனுமதி கோரியும் காவல்துறை மறுத்திருந்தது. மறுப்பிற்காக அவர்கள் கூறிய காரணம் தான் வேடிக்கையானது, அதாவது விவசாயிகளது பிரச்சினையை பேசினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுமாம். தமிழகத்தில் என்றுமில்லாத அளவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. மீத்தேன் – ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரிப் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகளுக்காக போராடி வருகின்றனர் விவசாயிகள். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் மோடி அரசின் விவசாயிகளை அழிக்கும் கொள்கைக்கு எதிராக போராட்டம் போர்க்குணத்தோடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்கு கூட தமிழகத்தில் தடை என்றால் இதுதான் இன்றைய ஜனநாயகத்தின் அருகதை. கடைசியில் சீர்காழி காவல்துறை பொதுக்கூட்டத்திற்கு அனுமதியை அளித்திருக்கிறது. இதுவும் கடைசி நேரம் வரை உண்மையாக இருக்க வேண்டும்.
தடை பல தாண்டி நாளை சீர்காழியில் பொதுக்கூட்டம் – அனைவரும் வருக!
நாள் : ஜூன் 17, 2017.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : பழைய பேருந்து நிலையம்.
மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஷேல்கேஸ் திட்டம் எத்தனை திட்டங்கள் விவசாயிகளை கொலை செய்ய?
தேசபக்த வேடமிடும் மோடி அரசே! கையாலாகாத தமிழக அரசே! மீத்தேன் திட்டத்தால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால், நியூட்ரினோ திட்டத்தால், ஷேல்கேஸ் திட்டத்தால், தண்ணியில்லாமல் காய்ந்து பிளந்து கிடக்கும் எங்கள் அன்னை பூமியை பசுமையாக திருப்பி தர முடியுமா? விவசாயம் அழிந்து கடனாளியாகி தினம் தினம் நெஞ்சு வெடித்தும், தூக்கு போட்டும் சாகும் விவசாயிகளின் உயிரை திருப்பி தரமுடியுமா ? அல்லது தடுக்கத்தான் முடியமா?
நாட்டு மக்களுக்கு உணவு கொடுத்து உயிர் கொடுக்கிறவன் விவசாயி. தேசத்தின் ரத்த நாளங்கள் விவசாயமும், விவசாய நிலமும். அதை கொன்றால் அந்த தேசத்தின் அழிவு எவ்வளவு பயங்கரமாக இருக்கும்? தேசத்தின் உயிரை காப்பாற்ற, விவசாயத்தை காப்பாற்ற போராடும் மக்களை தேசத்துரோகிகள் என்கிறாயே! அதை அழிக்க நினைக்கும் நீ யார்?
விவசாயி பாதித்தால் கூலி விவசாயியும் பாதிக்கிறான். விவசாயி உயிரை விடுகிறான் கூலி விவசாயி நாடோடியாக, சொந்த நாட்டில் அகதியாக மாறுகிறான். விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!
கார்பரேட் முதலாளிகளுக்கு 2015 -ம் ஆண்டு – 5,OO,823 கோடி, 2016-ல் 5,51,OOO கோடி கொடுத்தாயே விவசாயிகளுக்கு எத்தனை கோடிகொடுத்தீர்கள்? இல்லை, விவசாயிகளின் கழுத்தைதானே அறுதத்தீர்கள். வறட்சிக்குக் காரணம்? வானம் பொய்த்ததென்று இயற்கை மேலே பழி போடுகிறீர்களே, அந்தக் காலத்தில் ஏரி, குளம், கம்மாய் வெட்டி தண்ணியை தேக்கி வைத்து மழையில்லாத காலத்திலே பயன்படுத்ததானே? அதை பராமரிக்காம விட்டவன் எவன்? அதை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் போட்டு விற்று அழித்தவன் எவன் நீதானே?
தப்பித் தவறி தண்ணிர் வரும் காலத்தில் கடலில் கலக்கும் நீரை கூட தடுத்து நிறுத்த தடுப்பணைகள் கட்டாத சதிகாரன் நீதானே! தண்ணிரை உறிஞ்சி எடுத்து, ஆற்று மணலை அதள பாதாளத்துக்கு தோண்டி கொள்ளையடித்து நிலத்தடி நீரை அழித்தவன் எவன் நீதானே?
போராடுகிற விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் சொல்ல துப்பில்லாமல் போராடுகிறவர்கள் யாரும் விவசாயிகளே இல்லையென்று நாக்கு கூசாமல் கொச்சைப்படுத்துகிறீர்களே, பிறகு அவர்கள் என்ன தொழில் அதிபர்களா? அல்லது வேற்றுகிரக வாசிகளா? அல்லது அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? சொந்த நாட்டு மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க மறுக்கும் உங்களுக்கு இந்த நாட்டை ஆளும் தகுதி என்ன இருக்கு? மக்களை காப்பாற்ற வக்கற்ற உங்களுக்கு அதிகாரம் எதற்கு?
இது எங்கள் நிலம்! எங்கள் ஆறு! எங்கள் உரிமை! எங்களை வாழவிடு! இதுவே மக்கள் அதிகாரம்!
மக்களே!
இது வெறும் விவசாயிகள் பிரச்சினை இல்லை! நம் அனைவரின் பிரச்சினை நாட்டின் பிரச்சினை! மக்களை காப்பாற்றும் அதிகாரத்தை பற்றிய பிரச்சினை! மக்கள் அதிகாரத்தில் இணைவோம்! எழுச்சியை உண்டாக்குவோம்! விவசாயத்தையும் நாட்டையும் காப்போம்!
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, கடலூர் – விழுப்புரம் மண்டலம்.
98434 80587, 81108 15963, 99441 17320.
நாடு முழுவதும் உயர்கல்வி நிலையங்களில் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒழித்துக்கட்டி காவிமயமாக்கி வரும் இந்து மதவெறி பாசிச கும்பல் சென்னைப் பல்கலைக்கழகத்தையும் காவிக்கூடாரமாக்கும் நோக்கத்துடன் சைவ சித்தாந்த துறை தலைவர் சரவணனை பொறுப்பாக்கி விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையம் என்கிற பெயரில் ஒரு இருக்கையை உருவாக்கியுள்ளது. இது தனித்துறை அல்ல ஆனால் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் பெயரில் உயர்கல்வி குறித்த கருத்தரங்கம் என்கிற பெயரில் பாஜக ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலை அழைத்து வந்து அவ்வப்போது கூட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
நேற்று 15.6.17 காலை 10.45 மணிக்கு பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் கல்வி மற்றும் உயராய்வு மையத்தின் சார்பில் ‘விவேகானந்தரின் உயர்கல்விக்கொள்கையும் அதன் நோக்கமும்’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த திட்டமிட்டிருந்தனர். கருத்தரங்கிற்கு வரலாற்றுத்துறை பேராசிரியரும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினருமான சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்தியாவுக்காக தமிழகத்தை பலியிடுவதில் தவறில்லை என்று பேசிய பா.ஜ.க எம்.பி இல.கணேசன் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும் இந்த காவி கூட்டத்தோடு ஐக்கியமாகியிருந்தார்.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கும் தகவலே எங்களுக்கு அன்று காலை 8 மணிக்கு தான் தெரியும். தற்போது இன்டர்ன்ஷிப் நடந்து கொண்டிருப்பதால் மாணவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழகத்திற்கு வருவதில்லை எனவே குறுகிய காலத்திற்குள் இயன்ற மாணவர்களை அணிதிரட்டிக் கொண்டு கருத்தரங்கம் நடக்கவிருந்த பெரியார் அரங்கிற்குள் சென்று அமர்ந்தோம்.
நீதிபதி சந்துரு பேசும் போது இந்துக்கள் பசுவை உண்ணலாம் என்று விவேகானந்தர் கூறியதாக பலர் கூறுகின்றனர் அதற்கெல்லாம் ஆதாரமில்லை என்று கூறினார். விவேகானந்தர் கூறியது உண்மையா பொய்யா என்பது ஒருபுறமிருக்க சந்துரு காவி கும்பலோடு உட்கார்ந்துகொண்டு காவித்தனமாக பொய் பேசிக்கொண்டிருந்ததுதான் பிரச்சினை. மேலும் அவருடைய உரை முழுவதும் மாட்டுக்கறியை மாட்டுக்கறி என்றோ மாட்டிறைச்சி என்றோ கூறவில்லை பக்தாளை போல பசுக்கள்… பசுக்கள்… என்று மிகவும் மென்மையாகவே பேசிக்கொண்டிருந்தார்.
அடுத்து இல.கணேசன் பேச எழுந்ததுமே ‘வெளியேறு வெளியேறு காவி கும்பலே வெளியேறு’ என்று முழக்கமிடத் துவங்கினோம். நிகழ்ச்சி தடைபட்டது. காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தும் விதமாக தொடர்ந்து முழக்கமிட்டோம். அரங்கிற்குள் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்கள் இருப்பது அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது. மாட்டுக்கறி உரிமை எல்லாம் உரிமை கிடையாது என்று ஒருவன் எங்களை மிரட்டும் விதமாக பேசினான். அதற்கடுத்து மாட்டுக்கறி எங்கள் உரிமை தடை போட மோடி யாரு என்று முழக்கமிட்டோம்.
அரங்கிற்குள் காவி கும்பலுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருப்பது பல்கலைக்கழகம் முழுவதும் பரவியது. அரங்கிற்கு வெளியே வந்து முழக்கமிட்ட போது சுற்றிலும் நின்றவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். முன்பு மாட்டுக்கறி விருந்து நடத்திய போது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் காவலர் ஆர்வத்துடன் விருந்தில் கலந்துகொண்டு மாட்டிறைச்சியை கேட்டு வாங்கி உண்டார். நேற்றைய போராட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தவர் அருகில் வந்து என்னப்பா போராட்டம் மட்டும் தானா பீஃப் இல்லையா என்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வலுவான முற்போக்கு இடதுசாரி மாணவர் சங்கங்கள் எதுவும் இல்லாத நிலையில் காவி பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்தை கைப்பற்றத் துடிக்கின்றனர். தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல் கும்பல் செய்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர். இது போல தி.மு.க, சி.பி.எம், வி.சி.க போன்ற கட்சிகள் வந்து இங்கே கூட்டம் போட நிர்வாகம் அனுமதிக்குமா? காவி கும்பலை வளர்த்துவிட பல்கலைக்கழகத்திற்குள் இருந்துகொண்டே சிலர் வேலை செய்கின்றனர். நிர்வாகமும் அதை கண்டு கொள்ளாமல் துணைபோகிறது.
பார்ப்பன பாசிச கும்பல் பல்கலைக்கழகத்தில் நுழைந்து மதவெறியை தூண்டிவிட்டு மாணவர்
இது பெரியார் பிறந்த மண் இங்கே காவி கும்பல் தலை தூக்கினாலே நசுக்கி எறிவோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் (செ.ப)
APSC (MU)
விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாடு விற்பனை மற்றும் மாட்டுக்கறிக்கு விதித்துள்ள தடை உத்தரவை திருப்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக திருச்சியில் 10.06.2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்தவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர், தோழர் ஜீவா தலைமையுரையில் “BJP-யினர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது விவசாயத்தில்,பொருளாதாரத்தில், சிறிதும் அக்கறை காட்டாமல் இருக்கிறது. மக்கள் எங்களுக்கு வாக்களித்தால் அத்தனையும் நிறைவேற்றுவோம் என கூறி ஓட்டு வாங்கினார்கள். ஆனால் நடந்தது என்ன 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களை துளி கூட மதிக்காமல் தொடர்ந்து மக்களுக்கு எதிரான சட்டங்களை அமுல்படுத்தி, மறுபிறப்பு எடுத்த இட்லர் ஆட்சி போல இயங்கும் BJP யை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலிருந்தே துரத்தியடிப்போம் அதற்கு அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் இது போல ஒன்றாக இணைந்து போராடுட வேண்டும்”. என அறை கூவினார்.
திராவிடர் விடுதலை கழகத்தின் மாணவர் அமைப்பின் தோழர் வழக்கறிஞர் சந்துரு பேசுகையில் “மாட்டுக்கறிக்கு தடை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இன்று தடை விதிப்பவர்கள்தான் இதிகாச காலகட்டத்தில் நிறைய மாமிசங்களை தின்றிருக்கிறார்கள். உடல் வலுவிற்கும்,ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவு என்றார்கள். தான் மட்டுமல்ல தன் சந்ததிகளையும் ஆற்றல் மிக்கவர்களாக்கினர். ஆனால் இன்று மலிவு விலையில் கிடைக்கும் மாட்டிறைச்சியின் சத்துக்களை நமக்கு கிடைக்க விடாமல் செய்வதற்கும், அவர்களை போல் நாமும் வளர்ந்து விடக்கூடாதெனவும் இப்படி கோமாதா, பசு பாதுகாப்பென கூறி மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறது மோடி அரசு. பார்பனியத்தின் வெற்றி சாதிகளாக பிரித்து வைத்திருப்பதுதான். தனக்கு கீழ் உள்ள சாதிகள் சண்டையிட்டு கொண்டிருப்பதால் உயர் சாதி என்று சொல்லிக்கொள்பவர்கள் தனக்கு மேல் உள்ள பார்பனியத்தை எதிர்ப்பதில்லை. சாதியாக பிரிந்து கிடப்பது பார்பனியத்திற்கு தேவைபடுகிறது. அதே சமயம் இந்துக்கள் எல்லாம் வாருங்கள் என்கின்றனர். இந்துக்களுக்கு என்ன வரையறை எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, முஸ்லீம் இல்லையோ, பௌத்தர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று சேர்த்துக் கொண்டனர். நான் உண்ணும் உணவு வேறு நீ உண்ணும் உணவு வேறு, நான் உடுத்தும் உடை வேறு நீ உடுத்தும் உடை வேறு, உன்னுடைய பார்ப்பன கலாச்சாரம் வேறு, என்னுடைய கலாச்சாரம் பண்பாடு வேறு, இப்படி வேறுபாட்டை வைத்து கொண்டு நாமெல்லாம் இந்துகள் என்று கூறுவது மோசடி”. என BJP RSS -ஐ அம்பலப்படுத்தி பேசினார்.
தமிழ் புலிகள் கட்சியின் மாநில அமைப்பாளர், தோழர் முகிலரசன் பேசுகையில் “மோடி அரசு மக்களிடம் நயவஞ்சகமாக பேசி ஓட்டு வாங்கி ஏமாற்றி விட்டது. மாட்டிறைச்சிக்கான தடை என்பது சிறுபான்மையினர்,தலித்துக்களை ஒடுக்குவதற்க்காக கொண்டு வந்துள்ளது இதனை புரிந்து கொண்டு தமிழகத்தில் இவர்களை கால் பதிக்க விடாமல் செய்ய இவர்களுக்கு ஓட்டுப்போடாமல் புறக்கணிப்போம்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்,தோழர் சுரேஷ் பேசுகையில் “இன்றைய சூழலில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் இம்மாதிரியான கூட்டுத்துவ போராட்டம் சிறப்பானது. மிகவும் அவசியமானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மோடி அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றோம். இனி இது போன்று அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் BJP,RSS கும்பல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்” என்றார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைப்பு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர், தோழர் சுந்தரராஜு பேசுகையில் “மத்திய அரசு இந்தியா முழுவதும் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றி தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் தற்போது விவசாயத்திற்க்கும் மாடு வளர்ப்பிற்கும் அழிவை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே தொழிற்சாலைகளில் வேலை இழப்பு , விவசாயம் பாதிப்பு என மக்கள் துன்பத்தில் இருக்கும் போது பணமதிப்பிழப்பு என்ற கொள்கையை நாடு முழுவதும் அமுல்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடி அரசு தற்போது மீண்டும் பசு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மக்களை மேலும் வஞ்சிக்கிறது. BJP க்கு எதிராக போராடும் மக்களுடன் தொழிற்சங்கங்கள் என்றும் துணைநிற்கும்” என பேசினார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட உறுப்பினர், வழக்கறிஞர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி பேசுகையில் “மத்திய அரசு இந்திய அரசியல் சட்டத்தை துளி கூட மதிப்பதில்லை அதை குழி தோண்டி புதைக்கிறது. தான் வைத்ததுதான் சட்டம் என பாசிச தன்மையோடு ஜனநாயகத்திற்கு விரோதமான செயலில் ஈடுபடுகிறது. தனக்கேற்ப சட்டங்களை வலைத்து கொள்வதும், உழைக்கும் மக்கள் மீது கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது என செயல்படுகிறது. BJP அரசை சட்டப்பூர்வமான முறையில் நின்று முறியடிக்க முடியாது. இதுபோன்று களத்தில் இறங்கி போராடினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்று பேசினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு இனைச்செயலாளர், தோழர் சீனி விடுதலை அரசு பேசுகையில் “மாடு விற்பனை மற்றும் மாட்டுகறிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசு மக்களிடம் எதாவது ஒரு விசயத்தை பேசி கொண்டே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. தமிழிசை கூறுகிறார். மாட்டுக்கறி தின்னக்கூடாது என்று சட்டம் சொல்லவில்லை, மாடு வெட்ட கூடாது என்று தான் கூறுகிறது என்கிறார். இவர் எவ்வளவு பெரிய அறிவாளி பாருங்கள் மாட்டை வெட்டாமல் கறி எப்படி சாப்பிடுவது. H.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஸ்ணன் இவர்கள் அவைவரும் மாட்டுக்காக அக்கறைப் படுகிறார்கள். மக்களைப் பற்றி, விவசாயிகள் பற்றி கவலை பட்டது கிடையாது. பசுவை பாதுகாக்க வேண்டுமாம் அதற்கு ஏசி வைக்கனுமாம்,லாரியில் ஏற்றி வரும்போது அடிப்படுகிறதாம் அடிமாட்டுக்கு கொடுக்கிறார்களாம் இப்படியே சென்றால் மாட்டு இனமே அழிந்து விடுமாம். எங்க அம்மா அப்பாவிற்கு எனது குடும்பத்திற்கு ஒழுங்கான வீடு இல்ல, மாடுகளை லாரியில் அடைத்து கொடுமை படுத்துகிறார்களாம். பள்ளிக்கூட புள்ளைங்கள பஸ்ஸில் அடைத்து மாட்டை விட கேவலமாக கொண்டு செல்லும் போது இவர்களுக்கு பாவமாக தெரியவில்லை. விவசாயிகள் 400 -க்கும் மேற்பட்டோர் இதுவரை தற்கொலை செய்துள்ளனர் அது பற்றி கவலை இல்லை. ஸ்ரீரங்கத்தில் இருக்கின்ற கோசாலையில் உள்ள மாடுகளை இரண்டு வேளை குளிக்க வைப்பது, சாம்பிராணி புகை போடுவது, ஏசி ரூமில் படுக்க வைப்பது என செய்கிறோம் என கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பொய் கூறுகிறார்கள். இவர்களை மீடியாவில் வேறு பேச அனுமதிக்கிறார்கள் குறிப்பாக தந்தி டிவியில் சாமானியன் என்று இணைத்துக் கொண்டு பேச வைக்கிறார்கள். இப்படி இவர்கள் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகிறார்கள் என்றார். நான் மாட்டை வளர்ப்பேன், உண்ணுவேன் அதன் தோலை பயன்படுத்தி பறை செய்வேன் அதை கிளர்ச்சிக்கான ஆயுதமாகவும் மாற்றுவேன் என்றார். இனி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி இது தந்தை பெரியார் பிறந்த மண் என்பதை எதிரிகளுக்கு உணர்த்த வேண்டும்”. என்று பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி பேசுகையில் “நான் மாட்டுக்கறி சாப்பிட்டதில்லை, எந்த இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. ஆனால் என் வீட்டில் மகள், மனைவி என அனைவரும் அசைவம் சாப்பிடுவார்கள். நான் சாப்பிட மாட்டேன் என்பதற்காக அவர்களை சாப்பிடக்கூடாது என தடுத்தால் எப்படி? எந்த உணவை உண்பது என்பது அவர் அவர் விருப்பம் சார்ந்தது அதில் எவரும் தலையிட முடியாது என்றார். மேலும் பசுவை பாதுகாப்போம் என்று சொல்லிக் கொண்டு டன் கணக்கில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது இந்த அரசு. ஏற்றுமதியில் முதலிடத்தில் இந்தியா உள்ளதாம். இதற்கு யாரை தூக்கில் போடலாம் கூறுங்கள், நான் எதை சாப்பிட வேண்டும், எதை உடுத்தவேண்டும், எந்த இடத்தில் வசிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் ஜனநாயகம் இருக்குமா? ஜெர்மனியில் இட்லர் செய்ததை இங்கு மோடி அரசு நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார்கள். இதை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் வெற்றி பெருவோம்” என்றார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப்பொதுச் செயலர், தோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றும் போது “ஜெர்மனியில் இட்லர் கொண்டு வந்ததை போல் இந்தியாவில் RSS-BJP இந்துத்துவத்தை கொண்டு வர வேண்டும் என துடிக்கிறது. இட்லர் மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திருக்க வேண்டும். இடை விடாமல் கொள்கைகளை பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறினான். இந்த இரண்டையும் மோடி தற்போது செய்து கொண்டிருக்கிறார். தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவேன் என்றார். ஆனால் நடப்பது விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழகம் என போராட்டம் நீண்டு செல்கிறது. ம.பியில் சிவராஜ் சிங் சவுகான் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் இறந்துள்ளனர். அதை மறைக்க உண்ணாவிரதம் இருக்கிறார். BJP எப்போதும் இரட்டை வேடம் போடுகிறது. மாட்டுகறி தடை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதும் மாட்டு சந்தையை ஒழுங்குபடுத்ததான் சட்டம் கொண்டுவந்தோம் என்கின்றனர். மாட்டை வாங்குவோருக்கும் விற்ப்போருக்கும் நிலம் இருக்க வேண்டும் என்கிறது சட்டம். இது சாத்தியமா? மாட்டை விற்க தடை போட்டுவிட்டு மாட்டுகறிக்கு தடை போடவில்லை என்று கூறுகிறார்கள். மோடி என்றால் மோசடி, RSS என்றால் அயோக்கியதனம் என்று பொருள். இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பசுவை கொன்று சாப்பிடுகிறார்கள், இவர்களை ஒழிக்க வேண்டும் என்கின்றனர். ஆதிசங்கரர் மாட்டுகறி சாப்பிடுங்கள் என்கிறார். ரிக் வேதத்தில் மாட்டுகறி சாப்பிடுபவர்களை பற்றி உள்ளது. உன்னுடைய மகன் சிறந்த பாடகராக, உடல் கட்டுமானவனாக வளர வேண்டுமா? மாட்டுகறி சாப்பிட வேண்டும் என்று வேதத்தில் உள்ளது. ஓம் ஓம் என்று கூறுகிறார்களே அது ஓம் இல்லை அது சோம், சோம் என்றால் கஞ்சா, கஞ்சா குடித்துவிட்டு ஆடு, மாடு, குதிரைகளை கொன்று சாப்பிடுவார்கள் பார்ப்பனர்கள். ஆனால் இன்று பசுவை பாதுகாப்பதாக துடிக்கிறார்கள்.
இந்து… இந்து… என்று இல்லாத பண்பாட்டை தினிக்கிறார்கள். தமிழர் பண்பாடு வேறு, அது சிறந்த பண்பாடு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிறது தமிழர் பண்பாடு. ஆனால் பார்பனியத்தின் பண்பாடு இவர்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிறது. இந்தியை திணிப்பது, சமஸ்கிருதம் திணிப்பது பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை ஒற்றைப் பண்பாடாக மாற்ற முயற்சிக்கிறது. இதற்கு கலவரத்தை தூண்டுவது, மக்களை திசை திருப்பிவிடுகிறது. மூன்றாண்டு சாதனை என்று எதையும் கூற முடியாது. மக்கள் BJP-RSS மோடி கும்பலை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இதை திசைதிருப்ப புது புது பிரச்சனைகளை உருவாக்குவது, அதை நோக்கி மக்களை கொண்டு செல்வது என்பதை திட்டமிட்டே செய்கிறார்கள். தமிழகம் இதை புரிந்து கொண்டதால் தான் BJP எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் மக்கள் புறக்கணிக்கிறார்கள், மறுக்கிறார்கள். BJP-RSS காரர்கள் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் அந்த முகத்தை கிழித்து நொறுக்கிவிடுவோம். பார்பனியத்திற்கு கல்லறை கட்டுவோம்” என்று கூறி தனது சிறப்புரையை முடித்துக் கொண்டார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர், தோழர் விஜய் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் அதற்கு மாணவர் அமைப்பு என்றும் துணை நிற்கும் என்று நன்றியுரையுடன் கூட்டத்தை முடித்து வைத்தார்.
இடையிடையே BJP-RSS ஐ கண்டிக்கும் விதத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது, மேலும் ம.க.இ.க தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினார்கள் அதில் உலகம் சுற்றும் வாலிபனாம் நரேந்திர மோடி அவர் கருப்பு பணத்தை ஒழிக்க போராராம் ஜேம்சுபாண்டா மாறி என மோடியை கிண்டலடித்தும் சத்தான மாட்டுக்கறி சுவையான மாட்டுக்கறி என்ற பாடலையும் பாடினர். புதிய பாடலான மாடு எங்க மாடு வளப்பது எங்க பாடு என்ற பாடலை தோழர்.கோவன் பாடினார். இப்பாடல்கள் பார்ப்போரை உற்சாக மூட்டியது.
இவ்வார்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.
கடன் தள்ளுபடி கோரித் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் ம.பி. மாநில விவசாயிகள் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆட்சியாளர்களிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம் இருப்பது என்ற வழமையான போராட்டங்களுக்குப் பதிலாக, விவசாய விளைபொருட்களைச் சந்தைக்கு அனுப்புவதை நிறுத்தி, ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கக்கூடிய போராட்டதைக் கையிலெடுத்துள்ளனர், மகாராஷ்டிர மாநில விவசாயிகள். துப்பாக்கிச் சூட்டில் ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்ட பிறகும்கூட, ம.பி. மாநில விவசாயிகள் போராட்டம் தணிந்துவிடவில்லை. சாலைத் தடையரண்களை ஏற்படுத்திப் போக்குவரத்தை முடக்குவது, மாவட்ட ஆட்சியரை முற்றுகையிடுவது என அம்மாநில விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. ஓரிரு மாநிலங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் வெடித்துவிடுமோ என மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கதிகலங்கிப்போய் நிற்கின்றனர்.
கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி ஏப்பம் விட்ட கடன்களையெல்லாம் வாராக் கடனாக எழுதித் தள்ளுபடி செய்வதற்குக் கிஞ்சித்தும் தயங்காத இந்து மதவெறிக் கும்பல், கடன் தள்ளுபடிக் கோரிக்கைக்காகப் போராடும் விவசாயிகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தால் நாட்டில் பணவீக்கம் – அதாவது விலைவாசி உயர்ந்துவிடும் எனப் பூச்சாண்டி காட்டி, விவசாயிகளின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, அவமதிக்கிறது. மோடிக்கு அடிமைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆட்சி நடத்திவரும் அ.தி.மு.க. கும்பலோ, விவசாயிகள் அனைவரின் கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாது எனத் திமிரோடு அறிவிக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலும், சொசைட்டிகளிலும் மார்ச் 31, 2016 முடிய வாங்கியிருக்கும் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது, தமிழக அரசு. இந்த ஆணை குளறுபடிகள் நிறைந்திருப்பதாகவும் விவசாயிகளிடையே பாகுபாடு காட்டுகிறதென்றும் கூறித் தொடரப்பட்ட வழக்கில், ”வறட்சியும், விவசாயிகளின் துர்மரணங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
”உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசின் கொள்கை முடிவில் தலையிடுகிறது” என வாதிட்டு, உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது, தமிழக அரசு. தமிழக மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வைத் திணித்த நீதிமன்ற உத்தரவை மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொண்டுள்ள அ.தி.மு.க. அரசு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி விவகாரத்தில் கொள்கையைக் கைவிட முடியாது எனக் கூறி, மல்லுக்கட்டுகிறது.
அ.தி.மு.க. அரசு தமிழக விவசாயிகளுக்கு இழைத்துவரும் துரோகம் இதோடு நின்றுவிடவில்லை. ”தமிழகத்தில் வெறும் 80 விவசாயிகள்தான் அகால மரணமடைந்திருப்பதாகவும், அவர்களும்கூட வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் இறந்து போனதாக” உச்ச நீதிமன்றத்தில் பச்சையாகப் புளுகியிருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பகுதியில் நடந்துவரும் போராட்டத்தை உதாசீனப்படுத்திவிட்டு, விவசாய நிலங்களைத் தனியார் நிறுவனத்திற்குக் குத்தகை அளிக்கும் நடைமுறைகளை மிக இரகசியமாகச் செய்துவருகிறது.
தஞ்சை-திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது எரிவாயுக் குழாய்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிப்பதற்காக, நூற்றுக்கணக்கான போலீசை இறக்கி அக்கிராமத்தை முற்றுகையிட்டு, அக்கிராம மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுச் சிறையில் அடைத்து, ஐந்தாம் படையாகச் செயல்பட்டிருக்கிறது.
”காவேரிப் படுகையை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்” எனத் தமிழக விவசாயிகளும் மக்களும் கோரி வரும் வேளையில், அந்நெற்களஞ்சியத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காடாக மாற்றுவதற்கு மோடி அரசும் அ.தி.மு.க. அரசும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றன.
உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் நடப்பவையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் ம.பி., மகாராஷ்டிர மாநில உழவர்கள் தம்மைத்தாமே வருத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் கருணையைக் கோரும் சாத்வீகமான போராட்டத்தை நடத்தாமல், ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் போராட்டங்களை நடத்த முன்வந்திருப்பது காலத்திற்கேற்ற நியாயமான மாற்றம்தான். எனினும், போர்க்குணமிக்க போராட்டங்களும், கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளும் மட்டுமே தீர்வாக அமைந்துவிடாது.
சாண் ஏறினால் முழம் வழுக்கும் கதையாக, இடுபொருட்களின் விலை உயர்வும், விவசாய விளை பொருட்களின் விலை வீழ்ச்சியும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து, விவசாயிகளைத் திரும்பத் திரும்பக் கடன் வலையில் சிக்க வைத்து, அவர்களைப் போண்டியாக்கிவருகின்றன. இவற்றின் விலைகளைத் தீர்மானிக்கும் உரிமையும் அதிகாரமும் ஆட்சியாளர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், வர்த்தகச் சூதாடிகளின் கைகளில் இருந்துவரும்வரை, உழவர்களின் கடன் பிரச்சினை உள்ளிட்ட நெருக்கடிகள் தீர்ந்துவிடாது.
இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து, உழவர்கள் அவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மாற வேண்டும். உழவர்களின் போராட்டங்கள் இந்த நோக்கத்தை மையப்படுத்தி நடைபெறுவதோடு, இதற்கேற்ப நாடெங்கும் உழவர்களின் அதிகாரத்தைச் செயல்படுத்தக்கூடிய விவசாய சங்கங்களைக் கட்டியமைத்து ஒருங்கிணைக்க வேண்டும். இத்தகைய தலைகீழ் மாற்றம் மட்டுமே, விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தீர்ப்பதாக அமையும்.
மத்திய பிரதேச விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்ற பி.ஜே.பி யை கண்டித்து , விவசாயிகளின் அழிவு சமூகத்தின் பேரழிவு என்பதை விளக்கியும், தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு 14.06.2017 அன்று மாலை 4:00 மணி அளவில் தருமபுரி தந்தி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தினை மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மத்திய பிரதேசத்தில் விளைவித்த பொருளுக்கு உரிய விலை வேண்டும் என்று போராடிய விவசாயிகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி 5 பேரை சுட்டு தள்ளி இருக்கிறது பி.ஜே.பி. மோடி ஆட்சிக்கு வந்த உடன் விவசாயத்தை வளர்ச்சியை பாதையை நோக்கி கொண்டு செல்வேன் என்று வாய்சவடால் அடித்த மோடி, இன்றைக்கு விவசாயத்தை அழித்ததோடு, விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிவருவது, போராட கூடிய விவசாயிகளை சுட்டுத்தள்ளுவது என்று விவசாயிகளின் எதிரியாக இருக்கிறார்கள். எனவே துருபிடித்து போன இந்த அரசு அமைப்பை தூக்கி எறிய மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றார்.
விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டார செயலாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், கடந்த 1 ஆம் தேதியில் இருந்து வடமாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் முன் உதாரணமிக்க போராட்டமாக அரசை ஸ்தம்பிக்க வைக்கும் வகையிலே போராடி வருகிறார்கள். இதனை சகித்துக்கொள்ளமுடியாது என்று மத்திய பிரதேசத்தில் துப்பாக்கிசூட்டை பரிசாக கொடுத்திருக்கிறது பிஜேபி. மோடி ஆட்சிக்கு வந்தததில் இருந்து விவசாயிகள் படும் அவலத்தை சொல்லிமாளாது. எனவே விவசாயத்தை அழிப்பதுதான் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் கொள்கைகளை வைத்திருக்கும் அரசு விவசாயிகளை சுட்டுதான்தள்ளும். தமிழகத்தில் விவசாயிகளின் போராட்ட வழிமுறையானது காலம் கடந்தது. இதிலும் என்.ஜி.ஓ -களை நுழைத்து போராட்டத்தை சீர்குலைத்து வருகிறார்கள் எனவே இதனை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் . ஜானகிராமன் பேசுகையில், பா.ஜ.க ஆட்சி செய்து கொண்டிருக்கிற மத்திய பிரதேசத்தில்தான் உரிமைக்காக போராடிய விவசாயிகளை படுகொலை செய்து இந்திய விவசாயிகளுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் விவசாயம் கட்டுபடியாகத தொழிலாக மாறிவிட்டது. இந்நிலையில் தான் தமிழகத்திலே 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் விவசாயம் அழிவு, வறட்சி, தற்கொலைக்கு திராவிட கட்சிகள்தான் காரணம் என்று பா.ஜ.க பேசுகிறது. ஆனால் பா.ஜ.க ஆட்சிசெய்யும் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கடுமையான தாக்குதல், துப்பாக்கி சூட்டை நடத்தியிருக்கிறார்கள். ஆக விவசாயத்தை பாதுகாக்க எந்த கட்சியிடம் திட்டம் இல்லை. எல்லா பொருட்களையும் இறக்குமதி செய்வதுதான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது. காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவது போல, இன்றைக்கு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பசுவை வைத்து மதத்தின் பேரால் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் ம.பி விவசாயிகளை சுட்டுக்கொன்றவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. எனவே பா.ஐ.க விவசாயிகளுக்கு மட்டும் எதிரி அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரி. இவர்களுக்கு எதிராக ம.பி விவசாயிகளின் கலகம் இந்தியா முழுவதும் வரவேண்டும் என்றார்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில், நல்லகாலம் பிறக்க போகிறது என்று கூறி ஆட்சியை பிடித்த மோடி, நாட்டின் வளர்ச்சி நாயகனாக சித்தரிக்கப்பட்டார். அந்த மோடியின் பா.ஐ.க அரசுதான் மத்திய பிரதேசத்தில் விவசாயிகளை சுட்டுத்தள்ளியிருக்கிறது. பசுவை பாதுகாக்க கோசாலைகளை அமைக்க வேண்டும் என்றுகூறி 1000-கணக்கான பசுக்களை கொலைசெய்கிற கும்பல்தான் பசுவை பாதுகாக்கிறார்களாம். தனியார்மய, தாராளமய கொள்கையால் விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதனை சார்ந்து துணை தொழிலையும் அழிக்கும் வகையில் பசுவதை தடுப்பு சட்டம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே இவர்களை இந்தியா முழுவதும் துடைத்தெரிய வேண்டும். மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய்களிடம் கெஞ்சுவதை விட்டுவிட்டு பா.ஜ.க வை ஓட, ஓட விரட்டியடிக்க வேண்டும். அதை செய்யாததன் விளைவுதான் இன்றைக்கு 5 விவசாயிகளை சுட்டு தள்ளியிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு பெண்களே அதிகாரத்தை கையிலெடுத்து டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி வெற்றிபெற்றார்களோ? அத்தகைய போராட்டம்தான் ஓரேதீர்வு… அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது என்று அறைகூவல்விடுத்தார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்.
தருமபுரி. தொடர்புக்கு – 81485 73417.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 150 மில்லியன் டன்கள். இதன் மதிப்பு 6 இலட்சம் கோடி ரூபாய். இது ஒரு ஆண்டில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசி அல்லது கோதுமையின் மதிப்பைவிட அதிகம். விற்பனை செய்யப்படும் பாலில் 70% சிறு உற்பத்தியாளர்களாலேயே விநியோகிக்கப்படுகின்றன. 30% மட்டும்தான் அமுல் மற்றும் தனியார் பண்ணைகள் மூலம் விற்கப்படுகின்றன. இவர்களும் ஓரிரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்தே பாலைக் கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையை 2020 க்குள் 1,44,000 கோடியாக அதிகரிப்பது தனியார் பண்ணைகளின் திட்டம். சிறு உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டித்தான் இந்த இலக்கை அவர்கள் எட்டுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத் நகரில் தனது பால் விற்பனையை அமுல் நிறுவனம் தொடங்கியது. அங்கு லிட்டர் 47 ரூபாய்க்கு பால் விற்று வந்த நிலையில், லிட்டர் 38 ரூபாய்க்கு தன் பாலை இறக்கியது அமுல். இதன் விளைவாக மற்ற கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகளும் விலையைக் குறைக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, பால் கொள்முதல் விலையைக் குறைத்தன. விளைவு பால்மாடு வளர்த்த சிறு உற்பத்தியாளர்கள் அழிந்தனர்.
அமுல் ஐதராபாத்தில் என்ன செய்ததோ அதைத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் செய்கின்றன. நாம் இந்திய பால்பண்ணைகள் என்று கருதிக்கொண்டிருப்பவையெல்லாம் இந்திய நிறுவனங்கள் அல்ல. எடுத்துக்காட்டாக, திருமலா பால் நிறுவனத்தின் உரிமையாளர் லாக்டாலிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம்.
இந்தத் தனியார் பால்பண்ணைகளே, சிறு உற்பத்தியாளர்களை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டி வருகின்றன என்பது ஒருபுறமிருக்க, பன்னாட்டு பால்பண்ணைகள் தமது பொருட்களை இந்திய சந்தையில் இறக்க அரசை நிர்ப்பந்தித்து வருகின்றன. குறிப்பாக ஏசியான் (Association of South East Asian Nations) நாடுகளுடன் தற்போது மோடி அரசு நடத்தி வரும் சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தையில், தங்களது பால்பண்ணைப் பொருட்கள் மற்றும் இறைச்சியின் மீது விதிக்கப்படும் சுங்கவரியை இந்தியா முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் கோருகின்றன. ரத்து செய்யப்பட்டால், அமுல், ஆவின், நந்தினி போன்ற நிறுவனங்களின் விலையை விடக் குறைவான விலையில் ஆஸ்திரேலியாவின் பால் இந்திய சந்தையில் பெருக்கெடுத்து ஓடும்.
எனவேதான், “சுங்கவரியை ரத்து செய்யாதீர்கள். பால் மாடுகளை தமது வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் இந்தியாவின் 15 கோடி விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிடாதீர்கள்” என்று மோடி அரசை எச்சரிக்கிறார் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி. இருப்பினும் மோடி அரசு ஆஸ்திரேலியாவின் ஐ.டி சந்தையில் வர்த்தக சலுகைகளைப் பெறுவதற்காக, இந்தியாவின் பால் சந்தையைக் காவு கொடுத்துவிடும் என்று பொருளாதாரப் பத்திரிகைகள் ஊகிக்கின்றன. நமது பால் உற்பத்தியாளர்களின் எதிர்காலம் பேரம் பேசப்படுவது, ஐ.டி முதலாளிகளுக்காகவா, அல்லது ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் வாங்கியிருக்கும் அதானிக்காகவா என்பது இப்போதைக்கு நாம் அறிந்து கொள்ள முடியாத அரசாங்க இரகசியமாகவே இருக்கும்.
இந்தியச் சந்தை திறந்துவிடப்படும் பட்சத்தில், விவசாயிகளின் எதிர்ப்பை அரசு சந்திக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே விலை கட்டுப்படியாகாமல் பாலைத் தெருவில் கொட்டிப் போராடுகிறார்கள் விவசாயிகள். தற்போதைய விதிகள் மாட்டுச்சந்தையையே இல்லாமல் ஆக்குவதால், கணிசமான விவசாயிகள் பால்மாடு வளர்க்கும் தொழிலிலிருந்து விரட்டப்படுவார்கள். தொழிலை விட்டே துரத்திவிட்டால், அந்த அளவுக்கு விவசாயிகளின் எதிர்ப்பும் குறையும் என்பது மோடி அரசின் கணக்காக இருக்கக்கூடும்.
நெற்களஞ்சியமான தஞ்சை, விவசாயம் நடக்காத தரிசாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்த போது, பிற்காலத்தில் மீத்தேன் திட்டமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் வரப்போகிறதென்று நமக்குத் தெரிந்திருந்ததா என்ன?