விருத்தாசலம் பாலக்கரையில் 10.6.2017 அன்று காலை 10.30 மணியளவில் ம.பி விவசாயிகளைச் சுட்டு கொன்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்திரிக்கைகளில் வெளியான மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டச் செய்தி
தலைமை : தோழர் கு.முருகானந்தம், மக்கள் அதிகாரம்
கண்டன உரை :
திரு தெய்வக்கண்ணு உழவர் மன்ற தலைவர். திரு அன்பழகன் விவசாய சங்கம். தோழர் அருள்தாஸ் மக்கள் அதிகாரம் கம்மாபுரம். தோழர் S.மணிவாசகம் பு.மா.இ.மு. திரு நந்தகுமார் விவசாயி சங்கம். தோழர் சீ.ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தகவல் : மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம்.
***
ம.பி விவசாயிகளைக் சுட்டுக் கொன்ற பா.ஜ.க – காஞ்சிபுரத்தில் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம்!
பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் அமைதியான முறையில் கடந்த 01.06.2017 முதல் போராடி வந்தனர். இரவு பகல் பராமல் உழைத்துக், கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காய்கறிகள் பால் உள்ளிட்ட உணவு பொருட்களை சாலையில் கொட்டி போராடி வந்தனர்.
போராடும் விவசாயிகள் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்த முன் வராமல் அலட்சியம் செய்தது கார்ப்ரேட் கைக்கூலி கட்சியான பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசு.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், வாழ்வாதாரத்தை உயர்த்துவேன் என்றெல்லாம் பேசிய மோடியின் பேச்சு பித்தலாட்டம் என்பதை உணர்ந்த விவசாயிகள் விடாப்பிடியாக தொடர்ந்து போராடி வந்தார்கள். இனி வாழ முடியாது என்ற நிலையில்தான் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் முன் வைத்தார்கள் இதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் கடந்த 06.06.2017 அன்று அமைதியாக போராடிக் கொண்டிருந்தோர் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதுடன் பா.ஜ.க. – வின் வெறிநாய் படைகளான போலீசு காக்கை குருவிகளைப் போல 8 விவசாயிகளை சுட்டுக் கொன்றுள்ளது.
உரிமைகளை கேட்டு போராடினால் உயிரையும் பறிக்கப்படுவது காலனிய ஆட்சியின் அடக்குமுறை, அத்தகைய கொடூரத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம். எனவே இதற்கெதிராக போராடுவதும் மக்களை திரட்டுவதும் அவசிய அவசர தேவையாக உள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த போவதாக சொல்லி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் உண்ணாவிரதம் இருப்பது பிரச்சனையை திசை திருப்பும் சதித்தனம் என்பதுடன் போலீசின் கொலை வெறியாட்டத்தையும் அதன் கொலை முகத்தையும் மூடி மறைக்கும் முயற்சியாகும்.
இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு மத்திய பிரதேச மாநில விவசாயிகளின் போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவளிப்பது தார்மீகக் கடைமையாகும். அதேநேரம் பாசிச பா.ஜ.க அரசை உடனடியாக கண்டிக்கின்ற வகையில் 10.06.2017 அன்று பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைநகரில் மக்கள் கூடும் இடங்களான வட்டாச்சியர் அலுவலகம் எதிரிலும் சுமைதூக்கும் தொழிலாளர் நிறைந்துள்ள மண்டித் தெரு முனையிலும் அடுத்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்கு தோழர் சரவணன் தலைமை தாங்கினார்.
கார்ப்பரேட் கைக்கூலி காவி பயங்கரவாதிகளான பா.ஜ.க கும்பலை நாட்டை விரட்டியடிக்க மக்கள் போராட முன் வர வேண்டும்! மக்கள் எதிரிகளை புரட்சியின் மூலம்தான் தண்டிக்க முடியும்!! என்பதனை உணர்த்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டக் குழு – 8807532859.
பெட்டிக் கடைகளில் விற்காமல் தொங்கும் “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகையை பார்த்திருப்போம். வாரமிருமுறை வந்தாலும் போட்டி காரணமாகவும், ஆளும் கட்சிகள் – அரசாங்கங்களிடமிருந்து வாங்கும் காசுக்கு மேலேயே கூவி ஆதரிப்பதாலும் குமுதத்தை மக்கள் தவிர்த்து விடுவர். ஆகவேதான் ‘வாரியா’ என்ற வரிசையில் அவ்வப்போது ஆபாச தலைப்புக்களோடு ‘ஆண்களை’ குறிவைத்து வீழ்த்த நினைக்கிறது குமுதம்.
ஜெயாவின் அண்ணன் மகளான தீபாவை “சொப்பன சுந்தரி” என்று அட்டைப் படம் வெளியிட்டு “புரட்சித் தலைவியின்” பொற்பாத சேவையை இன்றும் பக்தியோடு செய்கிறது குமுதம் ரிப்போர்ட்டர் எனப்படும் புரசைவாக்கம் புரோக்கர்.
சமூகவலைத்தளங்களில் எழுந்த கடும் கண்டனம் காரணமாக குமுதம் அந்த சொப்பனசுந்தரியை யாரு வைச்சிருக்கா படம் கொண்ட ரிப்போர்ட்டரை தனது ஃபேஸ்புக்கில் வைத்திருக்கவில்லை. அதே நேரம் இந்தப் பிரச்சினை காரணமாக தனது பெயர் சந்தையில் பரபரப்பாக பேசப்படுவதால் குமதம் ரிப்போர்ட்டரின் ஓனர் வரதராஜ ஐய்யங்கார் கல்லாப்பெட்டிக்கு தனியே பூஜை செய்திருப்பது உறுதி. எந்த ஒரு விபச்சாரத் தரகனுக்கும் வெட்கம், சுரணை, பயம், ஒழுக்கம் இருப்பதில்லை என்றுதான் நாம் நினைக்கிறோம். உண்மையில் இவையெல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தான் தொழில் செய்ய முடியும் என்பது தரகர்களுக்குத் தெரியும்.
தீபாவை கடுமையாக விமிரசிப்போர்தான் குமுதத்தின் இந்த தரங்கெட்ட செயலை கண்டிப்பதில் முதன்மை வகிக்கின்றனர், காரணம் இந்த நாகரீகம் பெரியார் கற்றுக் கொடுத்தவைகளில் ஒன்று என ஒரு நண்பர் எழுதியிருந்தார். உண்மைதான். ஆனால் கருணாநிதியையும், குஷ்புவையும் இணைத்து இன்னொரு மணியம்மை என்று எழுதியிருந்த ரிப்போர்ட்டருக்கு, இப்போதைய ஏகோபித்த கண்டனம் அப்போது எழவில்லை.
சொல்லப் போனால் இதுதான் இந்தப் பிரச்சினையின் மையம். அதாவது குமுதத்தின் தவறை வெறுமனே பெண்களுக்கு எதிரான ஒன்றாகவோ இல்லை ஆணாதிக்கத்தின் திமிராக மட்டும் பார்ப்பதோ போதாது.
சொப்பன சுந்தரி காமடியை கவுண்டமணி – செந்தில் கூட்டணி மூலம் இன்றும் ரசிக்கும் ரசனை இருக்கும் வரை குமுதம் ஏன் இப்படி அட்டைப்படம் போடாது என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார். குமுதம் பெண்களை இழிவாகப் பார்க்கிறது என்பதற்காக இந்தப் படத்தைப் போடவில்லை. மாறாக ஜெயலலிதாவை விழுந்து கும்பிடும் அடிமைத்தனத்திற்காக இப்படிப் போடுகிறது. இல்லையேல் உடன்கட்டை ஏறத்துடித்த ஜெயலலிதா குறித்து குமுதம் ஏன் அட்டைப் படம் போடவில்லை? ஆகவே இது பெண்ணியம் – ஆணாதிக்கம் சார்ந்த ஒன்றல்ல. அல்லது அதுவே முதன்மையானதல்ல.
கார்ட்டூனிஸ்ட் பாலா குமுதத்தில் வேலை பார்த்த போது (இப்போது அவர் அங்கு இல்லை) லீனா மணிமேகலை குறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விமரிசனம் ஏதோ எழுதினார். உடனே லீனா மணிமேகலை குமுதம் அலுவலகம் சென்று நிர்வாகத்திடம் பேசி பாலாவை மன்னிப்பு கேட்க வைத்தார். பிரச்சினை என்னவென்றால் அந்த நிகழ்வு குறித்து முதலில் லீனா குமுதம் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம்தான். அதில் பெண்களை கண்ணியமாக மதிக்கும் குமுதம் என்று ஏகப்பட்ட பதக்கங்களை திணித்திருந்தார். இதுதான் பிரச்சினை!
தண்டகாரண்யாவின் பழங்குடி மக்களை ஒடுக்கும் டாடாவின் நடத்தையை நன்னடத்தையாகக் காட்டுவதற்கு தேஜஸ்வினி படம் எடுத்த பெண்ணுரிமைப் போராளி லீனா மணிமேகலையின் கண்களுக்கு குமுதம் பத்திரிகை எப்படி பெண்களை மதிப்பதாக தெரிகிறது?
இல்லை அதே கார்ட்டூனிஸ்ட் பாலா குமுதத்தில் வேலை பார்த்த போது கருணாநிதியை கிட்டத்தட்ட அம்மணக்குண்டியாகவெல்லாம் கார்ட்டூன் போட்டிருந்தார். அதே போன்று அவர் ஜெயலலிதாவையோ இல்லை மோடியையோ போட முடியுமா? எனவே குமுதத்தின் பிரச்சினை என்பது பெண் மீதான ஆணாதிக்கம் சார்ந்த ஒன்றல்ல. மாறாக உழைக்கும் மக்களின் மீதான ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை சார்ந்தது.
மேலும் குமுதம் தனது தோற்றத்திலிருந்தே பெண்களை இழிவுபடுத்தவதை அட்டைப்படமாகவோ, கிசுகிசுவாகவோ, நகைச்சுவையாகவோ, ஜெயராஜின் ஓவியங்களாகவோ, கதைகளாகவோ செய்து வருகின்றது. குமுதத்தை 1943-ம் ஆண்டு துவக்கிய எஸ்.ஏ.பி. செட்டியார் தினசரி காலையில் குமுதம் ஆசிரியர் குழுவைக் கூட்டி பகவத் கீதையின் சுலோகம் ஒன்றை படித்து விளக்குவாராம். பிறகு அவர் தனது மேசைக்குச் சென்று நடிகைகளின் கவர்ச்சி படக் குவியலில் இருந்து அந்த வாரப் படத்தை தெரிவு செய்வாராம்.
எஸ்.ஏ.பி. செட்டியார்
இப்படி ஆன்மீகமும், லவுகீகமும் கலந்த காக்டெயில் பத்திரிகையான குமுதத்தின் உத்தியே சினிமா செய்திகளும், கவர்ச்சி படங்களும்தான். 90-களில் வெளிவந்த குமுதத்தின் அட்டைப் படம் ஒன்றில் வெள்ளை பனியன் அணிந்த நடிகை சிம்ரனின் இடையில் தீண்டாமைக் கிராமங்கள் எனும் ஒரு கட்டுரையின் தலைப்பை போட்டிருந்தார்கள். தீண்டாமை எனும் கொடிய சமூக ஒடுக்குமுறையை இப்படி ‘கவர்ச்சியாக’ காட்டும் ஆபாச தைரியம் எவருக்கு வரும்?
சுச்சிலீக்ஸ் விவகாரத்தின் போது மார்கெட் இழந்த நடிகையான கஸ்தூரி ஊடகங்கள் எப்படி நடிகைகளை தவறாக சித்தரிக்கின்றன, அத்தகைய ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும் என்றெல்லாம் பொங்கினார். இன்று தீபாவை இழிவுபடுத்தும் குமுதத்திற்கு எதிராக மார்கெட் உள்ள நடிகைகள் ஒரு பத்து பேரை புறக்கணிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். சொன்னால் புறக்கணிக்கச் சொன்னவர்களை புரட்டி எடுத்து விடுவார்கள்.
ஆகவே கரகாட்டக்காரன் காமடியை மக்கள் ரசிப்பதை வைத்து குமுதத்தின் குற்றத்தை மக்களின் அதாவது ஆணாதிக்கத்தின் குற்றமாக எளிமைப்படுத்துவது சரியல்ல.
“கதவைத் திற காத்து வரட்டும்” இழி புகழ் நித்தியானந்தாவை தமிழக சந்தையில் இறக்கியதே குமுதம்தான். பிறகு நித்தியானந்தா பிடிப்பட்ட போது கூட்டத்தோடு கூட்டமாக நித்தியானந்தாவை விமரிசிக்க – அதாவது அப்போதும் அதை ரஞ்சிதாவின் கவர்ச்சி கதையாக காட்ட – குமுதம் ஓடி வந்தது.
ஜெயா உயிரோடு இருந்த போது இருவர் ஜால்ரா – காக்காய் – ஐஸ் – முதுகு சொறிதல் – இன்னபிறவற்றில் அடியாழம் வரை சென்று ஆதரித்தனர். ஒருவர் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். மற்றொருவர் குமுதம். கருணாநிதியின் குடும்ப பெண்களை விதவிதமான காம்பினேஷனில் எஸ்.எஸ்.சந்திரன் ஆபாசமாக அர்ச்சிக்கும் போது ஜெயா குலுங்கி குலுங்கிச் சிரிப்பார். விளைவு சந்திரன் நாடாளுமன்றத்திற்கே தெரிவு செய்யப்பட்டார். குமுதத்திற்கு கிடைத்த பரிசு – சொத்துப் பிரச்சினையில் செட்டியார் வாரிசுகளை ஓரங்கட்டி அய்யங்கார் வகையறாக்களுக்கு உரிமை கிடைத்தது. அதன் பிறகு குமுதம் பத்திரிகை குழுமம் ஹாலிவுட்டின் தேர்ச்சி பெற்ற வரைகலை நிபுணர்களே திகைக்கும் வண்ணம் ஜெயாவுக்கு ஆதரவாக தினுசு தினுசாக திரைக்கதைகளை எழுதித் தள்ளியது.
விஸ்வரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம். இத்தகைய கற்பனை வளம் காமரூனுக்கோ, லூகாசுக்கோ இருக்காது என்று சவால் விடுகிறோம்.
இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள். அதன்படி 1991 -இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவை தமிழக மக்கள் அமர்க்களமாக ஆதரித்து தள்ளினார்களாம். அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாட்சா பட விழாவில் மணிரத்தினம் வீட்டு குண்டு வீச்சு தொடர்பாகவும், டிராபிக் ஜாமில் தனது கார் நிற்பதற்காகவும் துக்கப்பட்ட ரஜினி தமிழக அரசைக் கண்டித்தது நினைவிருக்கிறதா? அதை ஊதிப்பெருக்கி ரஜினிக்கும் ஜெயாவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அடுத்த தேர்தலில் ரஜினியை ஒரு வாய்ஸ் கொடுக்க வைத்து அதிமுகவை தோற்க வைத்தவர் கருணாநிதி என்று போகிறது குமுதத்தின் வரலாறு.
இருப்பினும் இப்படி ஜன்மபகையோடு குமுதம் கருணாதியை அடித்தாலும் உடன்பிறப்புக்கள் கோபம் வந்து புரசைவாக்கம் சென்று அய்யங்காரை உண்டு இல்லை என்று கேட்கவில்லை. அ.தி.மு.க, தி.மு.க இருகட்சிகளிலும் இத்தகைய ஆபாசப் பேச்சுக்கள் அடிப்படையான பொதுக்கூட்ட பண்பு என்பதால் குமுதம் எந்த எல்லைக்கும் சென்று எழுதுகிறது.
2014 பாராளுமன்றத் தேர்தலின் போது குமுதத்தில் துக்ளக் சோவின் அனுபவத் தொடர் வந்து கொண்டிருந்தது. மோடி பிரதமராக முன்னிறுத்தப் பட்ட உடனேயே குமுதம் உரிமையாளரான வரதராஜ அய்யங்காரும், ஆசிரியரான கோசல்ராமும் குஜராத் சென்று மோடியை பேட்டி கண்டு வெளியிட்டனர். அதில் இவர்கள் குஜராத்தைப் பற்றியும், மோடியைப் பற்றியும் நாக்கூசாமல் பொய்யுரைத்தது போல தமிழிசை கூட பேசமாட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
செட்டியாரின் வாரிசான ஜவஹர் பழனியப்பனிடமிருந்து குமுதத்தின் உரிமையை கைப்பற்ற நினைத்த வரதராஜனை கடந்த திமுக ஆட்சியில் போலீஸ் கைது செய்தது. அதனாலேயே அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவை திருப்திப் படுத்தவும் திமுகவை விதவிதமாக திட்டி எழுதியது குமுதம். ஜெயா செத்த பிறகு குமுதம் தன்னுடைய புரோக்கர் விசுவாசத்தை பாஜகவிற்கு சோலோவாக ஒப்பந்தம் போட்டிருப்பதால் கமலாலயத்தின் இயக்கத்தை ஆதரிக்கும் பொருட்டு கூட தீபாவை இப்படி ஆபாசமாக எழுதியிருக்கலாம்.
தற்போது மன்னார்குடி சசிகலா – தினகரன் கும்பலிடம் ஆட்சியும், கட்சியும் இருந்தால் ஆதாயம் என நினைக்கும் குமுதம், அதே போன்று அவர்களை அடக்க ஓபிஎஸ்-ஐ இறக்கும் பாஜகவையும் ஆதரிக்கிறது. எந்த திட்டம் வெற்றி பெற்றாலும் அதை முதலில் ஆதரிக்கும் மாமாத்தானம் தன்னுடைய தனமாக இருக்க வேண்டும் என்று துடிக்கிறது குமுதம்.
ஜெயலலிதாவுக்கு சொம்படித்த மற்றுமொரு பத்திரிகையான தி இந்துவும் கூட விதவிதமான திரைக்கதைகளை ஓரளவு எழுதியது. என்ன இவர்கள் கொஞ்சம் டீஸன்டான அடிமைகள் என்பதால் போற்றிப் புராணத்தில் கொஞ்சம் ‘கண்ணியத்தை’ கடைபிடித்தார்கள். குமுதமோ மலிவான அடிமை என்பதால் கூச்சப்படாமல் ஆபாச அர்ச்சனையை அவிழ்த்து விடுகிறார்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆட்சியில் கிடைத்த ஆதாயங்களுக்கு பிரதிபலனாக தீபாவை இப்படி பலிகொடுக்கிறது குமுதம். இப்படி தில்லானா வைத்தியே திகைக்கும் புரோக்கரான குமுதத்தை கண்டிக்க வேண்டுமென்றால் இந்த புரோக்கரை வைத்தும் அரசியல் செய்யும் அ.தி.மு.க மற்றும் பாஜக கும்பல்களை தண்டிக்க வேண்டும்.
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் போராடி, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நாடெங்கிலும் விவசாயப்போராட்டம் கிளர்ந்து எழுந்துவருகிறது. பச்சை பசேலென்று இருக்க வேண்டிய இந்திய கிராமங்கள் இன்றைக்கு களையிழந்து ரத்தக்களறியாக பிணங்களைச் சுமக்கும் மயானமாக மாறி வருகிறது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழும் நாம், இந்திய கிராமங்களின் நிலைமையை உணர்ந்திருக்கிறோமா? விவசாயிகள் சந்திக்கும் அவலங்களை பேசியிருக்கிறோமா? கிராமங்களைப் பற்றிய நம்முடைய புரிதல் எத்தகையது?
இந்தியா முழுவதும் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளை கட்டுரைகளாக எழுதிவரும் வேளாண் நிபுணர் தேவந்தர் சர்மா நகர்ப்புறவாசிகளின் வாழ்க்கை எங்கிருந்து வந்ததது? வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்கள் எப்படி கண்டுகொள்ளப்படாமல் ஒடிக்கப்பட்டிருக்கின்றன? கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடும் வறட்சி நிலவினாலும் பெருநகரங்களான சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு மட்டும் அதிக பயன் பெறுவது ஏன்? என்பதை தன்னுடை புரிதலின் படி எழுதியிருக்கிறார். கட்டுரையாளின் பார்வைபடி நகரங்களில் நாம் காணும் தண்ணீர் தட்டுப்பாடு கிராமங்களின் நிலையை ஒப்பிடும் பொழுது ஒரு பொருட்டாக இருப்பதில்லை என்ற பார்வை கிடைக்கிறது. எனில் விவசாயிகள் அன்றாடம் செத்து மடிகிறார்கள் அது ஏன் நமக்கு உரைக்கவில்லை? விவசாயிகளின் பிரச்சனை எவ்வளவு பாரதூரமாக இருக்கும்? என்ற கோணங்களை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ள முடியும். படித்து பாருங்கள்.
நகரவாசிகளே ! இந்திய கிராமங்களை உங்களால் கண்டு கொள்ள முடிகிறதா ?
நான் அடிக்கடி பெங்களூருக்கு பயணம் செய்கிறேன். வருடத்திற்கு குறைந்தது நான்கு முறையாவது இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை பெங்களூருக்கு செல்லும் பொழுது, கர்நாடக மாநிலம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. பெருநகரங்களில் வாழ்க்கை வெறும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலவும் கடும்வறட்சியின் அறிகுறியைக் கூட காட்டுவதாக இல்லை. இந்த வருடம் கர்நாடக மாநிலத்தின் 176 தாலுகாக்களில், 139 -க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் மோசமாக, கடந்த பதினாறு வருடங்களில் பதினோறு வருடங்கள், கர்நாடகா வறட்சியின் பிடியில் இருந்திருக்கிறது.
வறட்சியால் மக்கள் புலம் பெயர்ந்து காலியாகக் கிடக்கும் கிராமங்கள்
பெங்களூருலிருந்து வெறும் இரண்டு மணிநேர பயண தொலைவில் இருக்கிறது ஆந்திர மாநிலத்தின் அனந்த்பூர் மாவட்டம். ஏப்ரல் 28, 2017 ஆம் தேதியன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளிவந்த அறிக்கை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது, 12 வயது சிறுவன் திவாகர் பள்ளியிலிருந்து நேராக வீட்டுக்கு நுழையும் பொழுதே, ‘என் அப்பா திரும்பி வந்துவிட்டாரா?’ என்று கேட்கிறான். ‘இல்லை, அவர் அடுத்த மாதம் வருவார். வரும் பொழுது பெங்களூரூவிலிருந்து உனக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கி வருவார்’ என்கிறார் திவாகரின் உறவினர் ஈஸ்வரய்யா. வெறுப்படையும் திவாகர் தனது புத்தகப்பையை தூக்கி எறிந்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு தனது மூன்று சக்கர சைக்கிளை எடுத்துக்கொண்டு காலியான தெரு ஓரமாக ஓட்டிச் செல்கிறான். அந்தத் தெரு முழுதுவமே பூட்டிய வீடுகளால் எல்லையற்று நீண்டிருக்கிறது.
ஆந்திராவின் அனந்த்பூர் மற்றும் இதர கிராமங்கள் எப்படி வெறிச்சோடி கிடக்கின்றன என்பதை வெளிக்கொணரும் பத்திரிக்கையாளர் ஹரிஷ் கிலாயின் கட்டுரை இந்திய கிராமங்களின் அவல நிலையை ஆழமாக படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. ஆனால் யாரும் இது போன்ற செய்திகளில் கவனம் செலுத்த விரும்புவதில்லை.
ஹரிஷ், அனந்தபூர் மாவட்டம் நல்லமடா மண்டலத்தில் உள்ள குட்டபல்லே கிராமத்தை ‘ஒரு பேய் நகரம்’ என்று எழுதுகிறார். பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு பூட்டியே கிடக்கின்றன. நீங்கள் இங்கு ஒன்று வயதானவர் நடந்து போவதையோ அல்லது தெருவில் குழந்தைகள் விளையாடுவதை மட்டுமே பார்க்க முடியும்.
அதிதி மாலிக் மற்றும் கீதிகா மந்திரியின் மற்றொரு அறிக்கை இதயத்தைப் பிழியும் கதைகளைச் சொல்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் அற்ப வேலைகளைத் தேடி தங்களது பிள்ளைகளை யாருடைய பாதுகாப்பும் இன்றி விட்டுச் செல்கின்றனர். அனந்தபூர் மாவட்டம் கெரடிப்பள்ளி கிராமத்தில் உள்ள 12 வயது பழங்குடியினச் சிறுமி புக்யா சயமுலம்மா தனது இரு தம்பி தங்கைகளுடன் தன்னந்தனியாக வாழ்கிறாள். இவள் பக்கத்து கிராமத்தில் உள்ள ரேசன் கடையிலிருந்து 25 கிலோ அரிசியை சுமந்து வருகிறாள். சென்ற வருடம் குடியால் தன் தந்தையை இழந்த புக்யா, இப்பொழுது தன்னை மட்டுமல்லாது தன் தம்பி/தங்கைகளை பராமரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். இது ஏதோ பாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படக் காட்சி போன்று தெரியும். ஆனால் இது உண்மை என்பதை மறந்துவிடாதீர்கள்.
கடும் வறட்சியிலும் நீர் கேளிக்கை விளையாட்டுக்கள் ( வொண்டர்லா தீம் பூங்கா )
‘கெரேட்டிப்பள்ளியில் வாழும் மற்றுமொரு பதினைந்துவயது சிறுமி ரமாதேவி தனது பெற்றோர் வேலை தேடி கேரளாவிற்கு இடம்பெயர்ந்துவிட்டதால் தன்னந் தனியாகவே வாழ்கிறாள்’. சமயங்களில் தனது பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாக தெரிவிக்கிறாள் இச்சிறுமி. ஆனால் என் மனதை அரிக்கும் மிகப்பெரிய கேள்வி எதுவென்றால் வேலைக்காக தனது ஒரே மகளை விட்டுச் செல்லும் ரமாதேவியின் பெற்றோர்கள் எவ்வளவு தூரம் துன்பப்பட்டிருப்பார்கள் என்பதுதான். அவர்களுக்கு வேறு வழியில்லை. கண்டிப்பாக எந்தப் பெற்றோரும் தன் பிள்ளைகளை தன்னந்தனியாக விடமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். இது பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹோம் அலோன் (Home Alone) திரைப்படத்தில் வரும் காட்சி அல்ல! நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஏதாவது சிறுவேலை பார்த்து பிழைக்கலாம் என்று தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு இடம் பெயர்ந்திருக்கின்றனர். அனந்த்பூர் மாவட்டம் ஆறாவது வருடமாக தொடர்ச்சியாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது.
கேரளா கடவுளின் தேசமாக இப்பொழுது அறியப்படுவதில்லை. பாலக்காடு மாவட்டத்தில் வாழும் குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு 10 முதல் 15 பக்கெட் தண்ணீரைக் கொண்டே சமாளித்து வருகின்றனர். மே எட்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் சாஜு பிலிப்ஸ் ‘அட்டப்பாடி தொடர்ந்து இரண்டாவது வருட வறட்சியை எதிர்நோக்கியிருப்பதை நமக்கு அறியத் தருகிறார். கேரளா கடந்த 15 வருடங்களில் மோசமான வறட்சியை சந்தித்து வருகிறது. கேரளாவில் அனைத்து மாவட்டங்களும் அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன. இருந்தபோதிலும் நீங்கள் திருவனந்தபுரம், கொச்சி அல்லது கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள எந்த பெரிய நகரங்களுக்கும் பயணம் செய்ய நேர்ந்தால் கேரளா வறட்சியில் பாதித்திருப்பதாகவே உங்களுக்குத் தெரியாது.
ஐந்து நாள் பயணமாக தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்ட யோகேந்திர யாதவ் “மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மாநில அரச இயந்திரத்தை முடக்கியிருக்கிறது. இதனால் இம்மாநிலத்தின் விவசாயிகளின் வாழ்க்கை பேரழிவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது” என்று சாடுகிறார். இவர் மேலும் கூறும் பொழுது ‘கால்நடைகளின் அழிவு தமிழ்நாட்டில் பஞ்சம் வந்துவிட்டதைக் காட்டும் அறிகுறி’ என்கிறார்.
40,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் டில்லி ஜந்தர் மந்தரில் நடத்திய பரவலான போராட்டம் ஊடகங்களில் நல்ல கவனத்தைப் பெற்றாலும் தேசம் முழுமைக்கும் எடுத்துச் செல்வதில் தோற்றுவிட்டது. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், வேளான் வானியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் எஸ். பன்னீர்செல்வம் IndiaSpend இணையத்திற்கு அளித்த பேட்டியில் ‘இது எதிர்பாராத சூழ்நிலை’ என்கிறார். இவர் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்கள் வறட்சி பாதித்திருப்பதாகக் கூறுகிறார். தற்பொழுது தமிழ்நாடு கடந்த 140 வருடங்களில் சந்தித்திராத வறட்சியை சந்தித்து வருகிறது. இருப்பினும் நீங்கள் சென்னை அல்லது கோவை மாவட்டம் அல்லது ஏதாவது தமிழ்நாட்டின் பெருநகரங்களுக்கு சென்றால் நகரத்தை விட்டு வெறும் இரண்டு கிலோ மீட்டர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதை உணர முடியாது.
எனக்கு இது மிகவும் புதிரான ஒன்றாக படுகிறது. வறட்சி ஒட்டுமொத்த பகுதிகளையும் பாதிக்கிற பொழுது ஏன் கிராமங்கள் மட்டும் வறட்சியின் கொடூரத்தை அனுபவிக்க வேண்டும் என்று என்றைக்காவது நீங்கள் யோசித்ததுண்டா? ஏன் வறட்சி பெருநகரங்களையும் நகர்புறங்களையும் அரிதாகவே பாதிக்கிறது? கடவுள் கண்டிப்பாக கிராமப்புற பகுதிகளுக்கு மட்டும் வறட்சி தாக்கும்படி ஓரவஞ்சனை செய்துவிடமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். மேலும் தாங்கள் செய்யாத தப்புக்காக கடவுள் கிராமவாசிகளை மட்டும் தண்டிப்பார் என்றும் நிச்சயமாக நான் சொல்ல மாட்டேன். அப்படியானால் வறட்சியின் பாதிப்புகள் பாரதூரமாக கிராமப்புற மக்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?
லட்டூர் நகரம் (குஜராத்-கட்ச் பகுதி) விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் கடும் வறட்சி வந்தாலும் ரயில் பெட்டிகளில் தண்ணீர் கொண்டுவரும் அளவுக்கு நிலைமை இருக்காது. தண்ணீர் பற்றாக்குறை மட்டுமல்ல, வறட்சி பல பிரச்சனைகளை கொண்டுவருகிறது. ஆனால் இவை யாவுமே நகரங்களில் உணரப்படுவதில்லை. இதற்கு காரணம் ‘வளர்ச்சியின்’ போக்கில் நிலவும் அசமத்துவத்தின் வெளிப்பாடு தான். என்னுடைய புரிதலின் படி ‘வளர்ச்சி’ பெருநகரங்களை மட்டும் வறட்சியை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நகரத்திற்கும் கிராமத்திற்குமான பாரபட்சம் அப்பட்டமாக தெரிகிறது. அனைத்து முயற்சிகளும் நகர்புற குடிகள் வறட்சியின் தீவிரத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே எடுக்கப்படுகின்றன.
கிராமங்களில் ஓடும் ஆறுகளும் ஓடைகளும் வறண்டு போகலாம், ஆனால் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் நகரங்களில் காலை மாலை சில மணி நேரமாவது குழாய்த் தண்ணீர் வந்துவிடுகிறது. டில்லிக்கு தேவைப்படும் தண்ணீர் ஹிமாச்சல பிரதேசம் ரேணுகா அணைக்கட்டிலிருந்து எடுக்கப்பட்டாலும் மும்பையின் குடிநீர் வழங்கல் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து உறிஞ்சப்பட்டாலும் தங்களது பெரு நகர வாழ்க்கைக்கான விலையை பெருவாரியான கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வைத் தொலைத்து தான் தருகின்றனர் என்பது அறியப்படாமல் இருக்கிறது.
இது தான் நகரங்களில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்திய கிராமப்புறங்களின் யதார்த்த நிலையோடு ஏன் துண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதற்கு முதன்மையான காரணம். இவர்கள் தங்களது உலகங்களில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நகரத்தைவிட்டு சில மைல் தொலைவில் தன் வீட்டு கொல்லைப்புறத்தில் மனிதர்கள் படும் துயரங்களை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கின்றனர்.
நல்லது! ‘குடிமைச் சமூகம்’ நம்மை இந்தப் பாதையில் தான் வழிநடத்துகிறது. செல்ஃபி எடுக்கும் உலகத்தில் சுயநலமாக இருப்பது அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
-தேவந்தர் சர்மா,
பின் குறிப்பு : கடும் வறட்சி நிலவும் மகராஷ்ட்ரா மாநிலத்தில் ரியஸ் எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானத்திற்கு நாளொன்றுக்கு பல இலட்சம் லிட்டர் தண்ணீர். நீதிமன்றங்கள் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது, கோக்கோலாவிற்கு நாங்கள் உபரி நீரைதான் தருகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூசாமல் பொய்யுரைப்பது, சிப்காட் போன்ற தொழிற்கூடங்களில் அனைத்து நிறுவனங்களும் தண்ணீர் தரும் பொழுது பெப்சிக்கு மட்டும் ஏன் தரக்கூடாது என்று இந்தியாவின் தாராளமயக் கொள்கையின் கொடூரத்தை நீதிபதியே தன் வாயால் போட்டுடைப்பது என்று அனைத்து விசயங்களையும் இதனுடன் கோர்த்து பாருங்கள். வளர்ச்சியின் கபடவேடம் புரியும்! நகரங்கள் மட்டுமல்ல இந்த அரசு ஒரு சிலருக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியும்!
1. விவசாய நெருக்கடிக்குத் தீர்வு – உழவனின் அதிகாரமே!
உழவர்களின் எதிரிகள்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் நடப்பவையெல்லாம் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் ம.பி., மகாராஷ்டிர மாநில உழவர்கள் தம்மைத்தாமே வருத்திக்கொண்டு, ஆட்சியாளர்களின் கருணையைக் கோரும் சாத்வீகமான போராட்டத்தை நடத்தாமல், ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் போராட்டங்களை நடத்த முன்வந்திருப்பது காலத்திற்கேற்ற நியாயமான மாற்றம்தான்.
2. ஐ.ஐ.டி. யில் மாட்டிறைச்சி விழா!
அக்லக் கொலைக்கும் சூரஜ் தாக்குதலுக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை. இது தமிழகம் என்ற ஒரு வேறுபாட்டைத் தவிர.
3. ஐ.டி. ஆட்குறைப்பு: கனவு கலைகிறது நிஜம் சுடுகிறது!
வேலை கொடுப்பதல்ல, இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம் என்பதைப் பொட்டில் அடித்தாற்போலப் புரிய வைக்கிறது, ஐ.டி. துறையில் நடந்துவரும் மாற்றங்கள்.
4. கொம்பில் சிக்கிய கோமாளி
கால்நடைச் சந்தைகளை முறைப்படுத்துவது என்ற பெயரில் மோடி அரசு அறிவித்திருக்கும் விதிகள், கோமாதாவை ” இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கும்.
5. அ.தி.மு.க. அம்மா அரசு: ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம்!
அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க இந்து மதவெறி பா.ஜ.க.விற்குப் பல்லக்குத் தூக்குவதும்தான், அ.தி.மு.க.வின் ஒரே வேலை
6. சமஸ் வழங்கும் இட்டிலி உப்புமா!
சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தடுமாற்றமின்றி பாசிசத்தை எதிர்த்து நிற்கும் சக்திகள் யாரென்று எச்.ராஜாவுக்கும் பொன்னாருக்கும் தெரிந்திருப்பதால்தான் அவர்கள் நக்சல் ஆதரவு இயக்கங்களை ஒடுக்கச் சொல்கிறார்கள். சமஸ் ஒதுக்கச் சொல்கிறார். இரண்டு சொற்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் ஒரு எழுத்துக்கு மேல் வேறுபாடு இல்லை.
7. நீட் தேர்வு: வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம்!
தமிழக மாணவர்களின் உரிமைகளைப் பறித்ததைத் தாண்டி, தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையையோ, முறைகேடுகளையோ நீட் தேர்வு தடுத்துவிடவில்லை.
8. தோற்றுப்போன நீதித்துறை!
வழக்கை இழுத்தடித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அல்லது அப்பாவிகளைச் சட்டவிரோதமான முறையில் தண்டிக்கும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை
9. சகரான்பூர்: பல்லிளிக்கிறது ஆதித்யநாத்தின் தாக்கூர் சாதிவெறி!
யோகி ஆதித்யநாத் நல்லவர், வல்லவர், திறமைசாலி என்று பில்டப் கொடுக்கிறது நம்மூர் ஆதித்தனார் பத்திரிகையான தினத்தந்தி. அங்கே, ஆதித்யநாத்தின் முகமூடியைக் கிழிக்கிறது தலித் மக்களின் போராட்டம்.
இந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.
இப்போது வரை கல்வியின்மை மற்றும் வாய்ப்பின்மை ஆகியவற்றால் அவர்களது திறமை உணரப்படாமலேயே போய்விடுகிறது.
அல்ஜஜீராவின் இந்த ஆவணப்படத்தில் 101 கிழக்கு (101 East) குழு ஏழ்மையான சூழ்நிலையிலுள்ள பிரகாசமான குழந்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும் வழிகாட்டி மற்றும் கொடையாளர்களை பின்தொடர்கிறது.
அவர்கள் சரியான வாய்ப்பும், பள்ளிக் கல்வியும், ஆதரவும் கிடைக்கும் போது இந்த “தீட்டப்படாத வைரங்கள்” இறுதியாக தாங்கள் பிரகாசிக்கும் வாய்ப்பை எப்படி பெறுகிறார்கள் என நமக்கு காட்டுகின்றனர்.
கோமாதாவைப் பாதுகாப்பது என்ற பெயரில் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் தாக்கி வந்த பார்ப்பன பாசிஸ்டுகள் இப்போது கிறுக்கு முற்றிக் கூரைக்குக் கொள்ளி வைத்திருக்கிறார்கள்.
கால்நடைச் சந்தைகளை “முறைப்படுத்தும்” விதிகள் என்ற பெயரிலான விதிகளை, மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. “விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகளைப் பாதுகாப்பது, இறைச்சி உண்போருக்கு தரமான இறைச்சி கிடைக்கச்செய்வது” ஆகியவையே இந்த விதிகளின் நோக்கம் என்று மோடி அரசு கூறுகிறது. “பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் தீவிரவாதத்தையும் ஒழிப்பது” என்று மோடி அரசு கூறியது எப்படி முழுப்பொய்யோ, அதேபோல இதுவும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டால், ஓரிரு மாடுகளை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறிய, நடுத்தர விவசாயிகள், சிறிய பால் வியாபாரிகள், சிறிய மாட்டிறைச்சிக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்கள், பால் விற்பனை, தோல் தொழில், இறைச்சித் தொழில், மாட்டு வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் – ஆகிய அனைவரும் தமது வாழ்வாதாரங்களை இழப்பர். இந்த விதிகள் இவர்களுடைய வாழ்வுரிமையைப் பறிப்பது மட்டுமின்றி, ஏழைகளின் புரத உணவான மாட்டிறைச்சியை உள்நாட்டுச் சந்தையிலிருந்து முற்று முழுதாக ஒழித்துக்கட்டிவிடும். பால் மற்றும் இறைச்சித் தொழில் முழுவதையும் பெரிய பால் பண்ணை நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு பால் மற்றும் இறைச்சித் தொழில் நிறுவனங்களின் பிடிக்குக் கொண்டு சென்று விடும்.
இது ஒரு பல நோக்குத் திட்டம். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு இணையான இந்தப் பேரழிவு நடவடிக்கை தனது ஆட்சியின் மூன்றாண்டுத் தோல்வி குறித்த விவாதத்திலிருந்து நாட்டைத் திசைதிருப்பப் பயன்படும் என்று மோடி கணக்குப் போட்டிருக்கக்கூடும். இருப்பினும், இந்த அறிவிக்கை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கும் ஆத்திரம், அந்தக் கணக்கைத் தப்புக்கணக்காக்கி விட்டது. தென் மாநிலங்களிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் வெடிக்கும் எதிர்ப்புகள், மாநில அரசுகளின் எதிர்ப்புகள், பா.ஜ.க.வுக்கு உள்ளேயே தோன்றியிருக்கும் எதிர்ப்புகள், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் மாடுகளை விற்க முடியாததால் விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கும் கோபம் ஆகியவற்றையெல்லாம் கண்ட மோடி அரசு பம்முகிறது. “பார்ப்பனியம்” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசத் தயங்கியவர்களையும் “பார்ப்பனிய எதிர்ப்பு” பேசுமாறு தூண்டியிருக்கிறது மோடி அரசு.
பார்ப்பனியம் எல்லா காலத்திலும் அழிவு சக்தியே!
பார்ப்பனியம் என்பது எல்லாக் காலங்களிலும் ஒரு அழிவு சக்திதான். அதற்கும் உற்பத்தி நடவடிக்கைக்கும் என்றைக்கும் தொடர்பு இருந்ததில்லை. அதன் காரணமாகவே ஆதிக்கத் திமிரும் அடிமுட்டாள்தனமும் அதனிடம் சரி விகிதத்தில் கலந்தே இருப்பதை நாம் காண்கிறோம். அன்று வேள்வி என்ற பெயரில் கால்நடைகளை வகைதொகையின்றி அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கியது பார்ப்பன மதம். அதன் மீது வெறுப்புற்ற மக்களிடையே பவுத்தம் செல்வாக்கு பெறவே, தனது சமூக மேலாண்மையை நிலைநிறுத்திக் கொள்ளும் பொருட்டு, மாட்டுக்கறியைத் துறந்த பார்ப்பனர்கள், மாட்டை மாதாவாக்கி, மாடு தின்போரைத் தீண்டத்தகாதவர் ஆக்கினர்.
விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டிற்குப் பதிலாக மாட்டை முன்தள்ளி, இந்து – முஸ்லிம் பிளவை விதைத்து பிரிட்டிஷாருக்கு உதவினர் இந்து வெறியர்கள். தற்போது, இந்த விதிகள் மூலம் மாடு வளர்ப்போர், வெட்டுவோர், தின்போரை மட்டுமின்றி, கோமாதாவையும் “இன அழிப்பு” செய்வதன் வாயிலாக, இனி வேறு யாரும் பசுக்கொலை செய்யத் தேவையில்லாத நிலையை உருவாக்கி வருகிறது சங்கப் பரிவாரம்.
கோமாளிகளா, கொடூரர்களா?
சங்கப் பரிவாரம் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரம் என்பது உலக முதலாளித்துவம் வரையறுத்திருக்கும் எல்லைக்கோட்டுக்குள் பயபக்தியுடன் நின்றபடி, பார்ப்பனியம் ஆடுகின்ற கோரத் தாண்டவம். எனவே, சூழ்ச்சியும் அபத்தமும் அதில் கலந்திருப்பதும், ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு சுவை அதில் மேலோங்குவதும் தவிர்க்கவியலாது.
உங்களால் நம்ப முடிகிறதா? ஆண் மயிலின் கண்ணீர்த்துளியை விழுங்கிப் பெண் மயில் கருத்தரிப்பதாக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சாதிக்கிறார். மாட்டு மூத்திரத்தில் தங்கம் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்துகிறது குஜராத் அரசு. ரூ.500, 1000-த்தைச் செல்லாமலாக்கிவிட்டால் பொருளாதாரம் புயல் வேகத்தில் வளரும் என்று பில்லிசூனியத்தைப் போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மக்கள் மீது ஏவுகிறார் ஒரு பிரதமர். மொத்தத்தில் சங்கப் பரிவாரத்தினர் எனப்படுவோர், முட்டாள்தனமும் வக்கிரமும் ஆதிக்கத் திமிரும் கலந்த தெலுங்கு சினிமா வில்லனைப் போன்ற விசித்திரமான பிராணிகள்.
அதனால்தான், கோமாதா சென்டிமென்டை வைத்து இந்து வாக்குகளை அறுவடை செய்து வந்த சங்கப் பரிவாரம், பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து விட்டது. “முஸ்லீம்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள்” என்று வெறுப்பைத் தூண்டி, அதை இந்து வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வது வேறு, “பயன்தராத மாட்டை விற்கக்கூடாது” என இந்து வாக்கு வங்கிக்கு உத்தரவிடுவது வேறு என்பது “சங்கி”கள் மண்டையில் ஏறவில்லை. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் ஆசையில், பித்தம் தலைக்கேறிய இந்தக் கும்பல், அக்லக்கைக் கொன்ற கத்தியை உருவி, “இந்து” விவசாயிகளின் வயிற்றில் செருகி விட்டது.
விதிகளின் முதல் பலி விவசாயி!
மோடி அரசு தற்போது உருவாக்கியிருக்கும் விதிகள் முதலில் விவசாயிகளைத்தான் குறி வைத்துத் தாக்குகின்றன. “மாட்டுச் சந்தையில் ஒரு விவசாயி தனது மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது. வாங்குபவரும் வெட்டுக்கு அனுப்பக் கூடாது. அவ்வாறு அடிமாட்டுக்கு விற்பதோ, வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றம்” என்கிறது மோடி அரசு. மேலும் மாட்டை வாங்குபவர், “அந்த மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு யாரிடமும் விற்க மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். மீறினால், அதுவும் நடவடிக்கைக்கு உரிய குற்றமாகும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.
வேலையிழந்த மாட்டு வியாபாரிகள்
இந்தப் புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கூறியிருக்கும் காரணங்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரகத்தைச் சேர்ந்தவை. மாட்டுச் சந்தையில் ஆரோக்கியமான மாடுகள் அடி மாடுகளாக விற்பனை செய்யப்படுவதால், விவசாயத்துக்கு மாடு இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல, ஆரோக்கியமற்ற மாடுகளை அடிமாட்டுக்கு விற்பதால், அந்த இறைச்சியைச் சாப்பிடும் மக்கள் பாதிக்கப்படுகிறார்களாம். அதனால்தான் மாட்டுச் சந்தைகளில் அடிமாட்டுக்கு விற்பதையும் வாங்குவதையும் தடை செய்திருப்பதாகக் கூறுகிறது மோடி அரசு.
மாடு இல்லாத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்படுவதாகக் கூறுவது அண்டப்புளுகு. விவசாயம் சார்ந்த பணிகளில் மாடுகளைப் பயன்படுத்துவது மிகவும் அரிதாகிவிட்டது என்பதே உண்மை. மாட்டின் பராமரிப்புச் செலவு அதிகமாகிவிட்டதால், அது பொருளாதாரரீதியாகக் கட்டுப்படியாகாததாகிவிட்டது. ஏரில் பூட்டுவது, நீர் இறைப்பது, வண்டி இழுப்பது போன்ற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சுமார் 45% அளவுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன. இன்று அது வெறும் 5% ஆகக் குறைந்து விட்டது.
விவசாயத்தின் அழிவுக்குக் காரணம் இந்த அரசு. பாசனப் பராமரிப்பை அரசு புறக்கணிப்பது, வங்கிக் கடன் வழங்க மறுப்பது, உள்ளீடு பொருட்களின் கொள்ளை விலை, விளைபொருளுக்கு நியாயவிலை மறுப்பு போன்ற பல காரணங்களால்தான் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தின் கோரிக்கைகளும் அதையே நிரூபிக்கின்றன.
விவசாயத்தின் அழிவையும் மீறிக் கிராமப்புற மக்களுக்குச் சோறு போட்டுக்கொண்டிருப்பவை கால்நடைகள்தான். 2013-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள் 1000 பேரிடம் 1586 மாடுகளும், ஏழை விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 1518 மாடுகளும், நடுத்தர விவசாயிகள் ஆயிரம் பேரிடம் 2575 மாடுகளும் இருக்கின்றன. வேறு வகையில் சொன்னால், நாட்டில் இருக்கும் 70% கால்நடைகள், 67% ஏழை விவசாயிகளிடம் உள்ளன.
பயன்படாத மாட்டைப் பராமரிக்க முடியுமா?
ஒரு மாட்டின் ஆயுட்காலம் 15 முதல் அதிக பட்சம் 25 ஆண்டுகள். நாட்டுப் பசுமாடுகளானால் சராசரியாக பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும், வெளிநாட்டுப் பசுக்களானால் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவை பால் தருவதில்லை. எனவே பால் வற்றிப்போன மாடுகளை சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டுமென்றால், விவசாயி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவிட வேண்டும். ஆண்டுக்கு சுமார் 40,000 ரூபாய்.
விற்க முடியாமல் கைவிடப்பட்ட மாடுகள் தெருவோரக் கழிவுகளைத் தின்னும் அவலம். (கோப்புப் படம்)
இவையே காளைக்கன்றுகளாக இருந்தால், அவற்றை உழவுக்கும் பயன்படுத்த முடியாத இந்தக் காலத்தில், அந்தக் காளைகளை கடைசி காலம் வரை விவசாயி பராமரிக்க வேண்டும். ஒரு பசுமாடு ஈன்று தரும் சுமார் 8 கன்றுகளில் 4 காளைக்கன்றுகளாக இருக்குமாகையால், அவற்றை எந்த விவசாயியாவது பராமரிக்க முடியுமா என்று எண்ணிப்பாருங்கள். ஆரோக்கியமான மாடுகளை விற்கக் கூடாது என்ற தடையின் மூலம் பயன்படாத இந்தக் காளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை விவசாயிகளின் மீது சுமத்தியிருக்கிறது மோடி அரசு.
உழைத்து ஓய்ந்து போன முதியவர்களையும் உழைப்பதற்குத் தயாராக இருந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களையுமே பராமரிக்க முடியாத நாட்டில், பால் தராத பசுவை பத்து ஆண்டுகளுக்கும், காளை மாட்டை இருபது ஆண்டுகளுக்கும் பராமரிக்க வேண்டும் என்று கூறுவது விவசாயிகளின் குடும்பத்துக்கே விதிக்கப்படும் ஆயுள் தண்டனையல்லவா?
“வெட்டுக்கு விற்க முடியாது” என்பது மட்டுமல்ல, நல்ல நிலையில் உள்ள பால்மாட்டையோ உழவு மாட்டையோ, விவசாயிகள் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு விற்பதுகூட இந்த விதியின்படி மிகவும் கடினமானது. இந்த விதிகளின்படி, “மாட்டை வாங்குபவரும் விற்பவரும் தனது அடையாள அட்டை, நிலப்பட்டா போன்றவற்றைத் தரவேண்டும். மாட்டை வாங்கிய வியாபாரி விற்பனைக்கான ஆதாரத்தை வருவாய்த்துறை அதிகாரி, கால்நடை மருத்துவர், மாட்டுச்சந்தையைக் கண்காணிப்பதற்காக அரசு நியமித்திருக்கும் கமிட்டி போன்ற 5 இடங்களில் தரவேண்டும்.” வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், விவசாயி ஒரு மாட்டை விற்பதற்கு இத்தனை இடங்களிலும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஜல்லிக்கட்டுத் தடை அமலில் இருந்தபோது போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டத்தை எண்ணிப்பாருங்கள். அதைக் காட்டிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் விதிகள் பன்மடங்கு கொடியவை. இச்சட்டத்தின்படி மாடு வளர்ப்பதும் விற்பதும் வாங்குவதும், கள்ளச்சாராயம், கஞ்சா விற்பதைப் போன்ற ஒரு கிரிமினல் நடவடிக்கையாகவே மாற்றப்பட்டுவிடும்.
அதிகாரிகள் என்ற அட்டைகள் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுவது போதாதென்று, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இரத்தக் காட்டேறிகள் “பசுப் பாதுகாவலர்கள்” என்ற பெயரில் எல்லா ஊர்களிலும் முளைப்பார்கள். தங்களுக்கு மாமூல் தரவில்லை என்றால், போலீசில் புகார் செய்வோம் என்று மிரட்டி, விவசாயிகளிடமும் வியாபாரிகளிடமும் பணம் பறிப்பார்கள். தற்போது முஸ்லிம்களுக்கு நடந்து வருவது, நாளை இந்து விவசாயிகளுக்கும் நடக்கும். அந்த விதத்தில், இந்த அறிவிக்கையை மோடி அரசின் மிக முக்கியமான “மதச்சார்பற்ற நடவடிக்கை”யாக நாம் கருதலாம்.
இந்த புதிய விதிகளை நியாயப்படுத்துவதற்கு மோடி அரசு கூறும் இரண்டாவது காரணம், “மக்களுக்குத் தரமான மாட்டிறைச்சி கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவது” என்பதாகும். வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி அக்லக் என்ற முதியவரை வெட்டிக் கொன்ற கட்சி, “அக்லக்கைப் போன்றவர்கள் கெட்டுப்போன மாட்டிறைச்சியை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டுவிடக் கூடாதே” என்று கவலைப்படுகிறதாம்! நம்புகிறீர்களா?
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் வேலையிழந்து நிற்கும் உ.பி. மாநில இறைச்சிக்கூடத் தொழிலாளர்கள்.
நாடு முழுவதும் மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்பது யாரும் அறியாத இரகசியமல்ல. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டுக்கறி தடை வந்த பிறகு, இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குரேஷி என்ற சாதியைச் சேர்ந்த முஸ்லிம்களும் தலித் மக்களுமாக பல இலட்சம் பேர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைக்கு நாடு முழவதும் அம்மக்களை ஆளாக்கி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க வேண்டும் என்ற வக்கிரமான நோக்கம் மோடி அரசின் இந்த முடிவின் பின்னால் இருக்கிறது.
இப்போது, எதிர்ப்பு அதிகரித்தவுடன், “இறைச்சித் தொழிலைக் குற்றப்படுத்துவது எமது நோக்கமல்ல, மாட்டுச் சந்தையில்தான் அடிமாடுகளை விற்கக்கூடாது என்று கூறியிருக்கிறோம். அதை இறைச்சிக்கூடத்தினர் விவசாயிகளிடம் அல்லது பண்ணைகளிடம் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம்” என்று சமாளிக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம்.
சந்தைகள் எனப்படுபவை, கிராமப்புறங்களில் சிதறிக் கிடக்கும் விவசாயிகள், தங்களது கால்நடைகளையும் விளை பொருட்களையும் விற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக உருவாக்கப்பட்டவை. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் பேரம் பேசுவதற்கான வாய்ப்பையும், ஓரளவேனும் நியாயமான விலை பெறுவதற்கான வாய்ப்பையும் சந்தைகள்தான் வழங்குகின்றன. இந்த வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் விவசாயிகள், மாடு வாங்குபவர்கள், மாட்டு வியாபாரிகள், இறைச்சிக்கூடத்தினர் உள்ளிட்ட அனைவருடைய தொழில் செய்யும் உரிமையையும் பறிக்கிறது மோடி அரசு.
ஒருவேளை, இறைச்சிக் கூடத்தினர் விவசாயியிடம் நேரில் சென்று கால்நடையை வாங்கி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தாலும், அவர்களை மறித்துத் தாக்கவும் மாமூல் வசூலிக்கவும் அதிகார வர்க்கமும் இந்து அமைப்புகளின் காலிகளும் கூட்டணி அமைத்துத் தயாராக இருப்பர். அந்த வகையில் இந்துத்துவ கிரமினல்களின் நடவடிக்கைகளுக்குச் சட்டபூர்வ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.
அதேபோல, “சந்தையில் மாடு வாங்குபவர், அந்த மாட்டை வேறு மாநிலத்துக்கு விற்க முடியாது என்றும், அப்படி விற்க வேண்டுமானால் முன் அனுமதி பெறவேண்டும்” என்றும் புதிய விதி கூறுகிறது. மாட்டுக்கறிக்கு தடை இல்லாத கேரளம், வடகிழக்கிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாடுகள் அனுப்பப்படுவதைத் தடுப்பதற்குத்தான் இந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் வணிகம் செய்வதற்கு அரசியல் சட்டத்தின் பிரிவு 301, குடிமக்கள் அனைவருக்கும் வழங்கும் உரிமையை நேரடியாகவே பறிக்கிறது.
சந்தை – சுத்தம் – தரம் – புனிதம்!
“சந்தை” என்ற சொல்லுக்கு ஒரு கிரிமினல்தனமான விளக்கத்தை இந்த அறிவிக்கை தருகிறது. இதன்படி சந்தை என்பது வழக்கமான மாட்டுச் சந்தை மட்டுமல்ல, “இறைச்சிக் கூடத்தின் வாயிலில் கால்நடைகள் நிறுத்தப்படும் இடம் (lairage), இறைச்சிக்கூடங்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் (vehicle stand), கால்நடைகளை அடைத்து வைக்கும் பட்டிகள் (animal pounds)” உள்ளிட்ட அனைத்தையும் “சந்தை” என்ற சொல்லுக்கான விளக்கமாகக் கூறுகிறது இந்த விதி. இந்த விளக்கத்தின்படி மாட்டிறைச்சிக் கூடமே சந்தை என்ற சொல்லுக்குள் அடக்கப்படுவதால், எல்லா மாட்டிறைச்சிக் கூடங்களையும் எந்த நேரத்திலும் சட்ட விரோதமானவையாக்க முடியும் என்பதே இதன் விளைவாக இருக்கும்.
அதேபோல, “தரமான இறைச்சி” என்பதும் மாட்டிறைச்சிக் கடைகளை ஒழிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. “தரப்படுத்துதல்” என்ற பெயரில் உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், சிறு உணவகங்கள், தெருவோர உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒழித்துக்கட்டுவதற்கு FSSAI (Food Safety and Standards Authority of India – உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்) என்ற மைய அதிகாரத்தின் மூலம் ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் இறைச்சிக்கூடங்கள், இறைச்சிக்கடைகளும் அடக்கம்.
தெருவோரக் கடைகளுக்கு உணவுத்தரம் பற்றி “சொல்லிக்கொடுக்கும்” பொறுப்பை கோகோ கோலா நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார் மோடி. உணவுச்சந்தையை ஆக்கிரமிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் மோடியும் சந்திக்கும் புள்ளி இது. தரமற்ற மாட்டிறைச்சிக் கூடங்களைப் “போட்டுக்கொடுக்கும்” பொறுப்பை ஜல்லிக்கட்டு புகழ் பீட்டா (PETA) ஏற்றிருக்கிறது. 30,000 சட்டவிரோத மாட்டிறைச்சிக் கூடங்கள் FSSAI இன் உரிமம் இல்லாமல் நாட்டில் இயங்குவதாக பீட்டா அறிவித்திருக்கிறது. இறைச்சிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தும் சங்கபரிவாரமும் பீட்டாவும் இணைகின்ற புள்ளி இது.
“புனிதமற்றது” என்று பார்ப்பனியம் கருதுகின்ற மாட்டிறைச்சி, மதச்சார்பற்ற மொழியில் “தரமற்றது” என்று முதலில் முத்திரை குத்தப்படுகிறது. பிறகு மோடி அதனைச் “சட்டவிரோதமானது” ஆக்குகிறார். தரத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதற்கான அதிகாரத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்வதன் மூலம், “பார்ப்பனியச் சுத்தம் – பன்னாட்டுத் தரம்” என்ற இரண்டையும் சமூகத்தின் மீது திணிக்கிறது மோடியின் அரசு.
சுத்தம், தரம் என்ற பெயரிலான தாக்குதலை எல்லா இறைச்சிக்கடைகள் மீதும் நடத்த முடியும். “ராமேசுவரம் போன்ற புனித நகரங்களில் இறைச்சிக் கடைகளே இருக்கக் கூடாது”, “கோயில்களுக்கு அருகே இறைச்சிக்கடை கூடாது” என்பன இந்து முன்னணியின் கோரிக்கைகள். “இந்துப் பண்டிகை, ஜெயின் பண்டிகை நாட்களில் இறைச்சிக் கடைகளை மூடவேண்டும்” என்பது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் நகரங்கள் இந்துப் பகுதி – முஸ்லிம் பகுதி என்று பிரிக்கப்பட்டு விட்டன. இந்துப் பகுதியில் அசைவ உணவுக்கடைகளே கிடையாது. அசைவ உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் முஸ்லிம் பகுதிக்குத்தான் செல்ல வேண்டும் என்பது அங்கே அங்கீகரிக்கப்பட்ட பொது ஒழுங்காக நிலைநாட்டப்பட்டு விட்டது.
இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும், மத நம்பிக்கைக்காகப் பலியிடுவதும் ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி பிராணிகளைத் துன்புறுத்தும் குற்றங்கள் ஆகாது. தற்போது மிருகவதை சட்டத்தின் கீழ் சந்தையில் மாட்டை வெட்டுக்கு விற்கக் கூடாது என்ற விதியை கொண்டு வந்திருப்பதன் மூலம், இறைச்சித்தொழிலையே “விலங்குகளைத் துன்புறுத்தும் குற்றமாக” காட்டுகிறது மோடி அரசு. இது சட்டப்படி செல்லத்தக்கதே என்ற நிலைமை ஏற்படுமானால், இதே அடிப்படையில் நாளை ஆடு, கோழி உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளையும் ஒதுக்குவதும், அவற்றின் மீது கண்காணிப்பை ஏவுவதும், தேவைப்படும்போதெல்லாம் குற்றப்படுத்துவதும் சாத்தியமாகிவிடும்.
மாநில அதிகாரத்தைப் பறிக்கும் குறுக்குவழி!
அரசமைப்புச் சட்டத்தின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதை அனுமதிப்பதோ தடுப்பதோ மாநிலத்தின் அதிகாரமாகும். இதனைத் தடுக்கவோ, முறைப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல கால்நடைச் சந்தைகளையோ, காய்கனிச் சந்தைகளையோ முறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுடையது. இதில் மைய அரசு தலையிட இயலாது.
எனினும், மக்களின் அடிப்படை உரிமைகளையும், மாநிலத்தின் உரிமைகளையும் கள்ளத்தனமான முறையில் பறிப்பதையே தனது வழிமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மக்களின் அடிப்படை உரிமைகளைத் தூசுக்குச் சமமாகக் கருதித் திணிக்கப்பட்ட பண மதிப்பழிப்பு, மாநிலங்களவையைத் தவிர்ப்பதற்காக நிதிமசோதாவாக திணிக்கப்படும் ஆதார் சட்டம் ஆகியவற்றைப் போன்றே, குறுக்கு வழியில் “விலங்குகள் துன்புறுத்தல் தடை சட்டத்தின்” கீழ்தான் (Prevention of cruelty to animals act, 1960) “மாட்டுச்சந்தைகளை நெறிப்படுத்தும்” இந்த விதிகளையும் அறிவித்திருக்கிறது மோடி அரசு. மிருகவதையைத் தடுப்பதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம், மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் வழங்குவதால், இந்த சந்து வழியாக மாநில அரசின் அதிகார எல்லைக்குள்ளே நுழைந்திருக்கிறது மோடி அரசு.
“கொம்பு சீவக்கூடாது, சாயம் பூசக்கூடாது, மூக்கணாங்கயிறு போடக்கூடாது, அலங்கரிக்கக் கூடாது, கன்றுகளுக்கு வாய்க்கூடை போடக்கூடாது” – என்று பல நிபந்தனைகளைப் போடுகின்றன மோடியின் புதிய விதிகள்.
“இந்த விதிகளை மீறியதாக அதிகாரிகள் கருதினால், மாட்டைப் பறிமுதல் செய்து கோசாலைக்கு அனுப்புவார்கள். வழக்கு முடியும் வரை மாட்டின் பராமரிப்புக்கான செலவுக்கு மாட்டின் உடைமையாளர்கள்தான் பொறுப்பு. மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டாலும், மாட்டின் உரிமையாளர் குற்ற வழக்கிலிருந்து தப்பிக்க முடியாது”.
“மேற்கூறிய விதிகளுக்கு முரணாக, வாகனங்களில் மாடுகளை அனுப்பினால், அந்த வண்டியில் உள்ள மாடுகளை விற்றவர்கள், வாங்குபவர்கள், வாடகை வண்டியின் உரிமையாளர், இவற்றில் சம்மந்தப்பட்ட தரகர்கள் உள்ளிட்ட அனைவரும் வழக்கு முடியும் வரை மேற்படி மாடுகளைப் பராமரிப்பதற்கான செலவுக்கு பொறுப்பேற்க வேண்டும். வண்டியும் மாடுகளும் வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்யப்படும். மேற்படி விதிகளில் எது ஒன்றை மீறியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலைகள் அல்லது விலங்குகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்” என்று கூறுகின்றன இந்த விதிகள்.
“நாடு முழுவதும் மாட்டுக்கறியைத் தடை செய்ய வேண்டும்” என்ற தனது நோக்கத்தை பல மாநிலங்களில் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதனால்தான் இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடித்திருக்கிறது மோடி அரசு. “இந்த விதிகள் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு முரணானவை” என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள் சட்ட வல்லுநர்கள். “இந்த விதிகளுக்கு கட்டுப்படமாட்டோம்” என்று கேரள, புதுச்சேரி, கர்நாடக, மே.வங்க முதல்வர்கள் அறிவித்திருக்கிறார்கள். மோடி அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அரசியல் சட்டம்தான் அடிக்கொள்ளி!
ஆனால், அரசியல் சட்டத்தின் துணை கொண்டே இந்த விதிகளைத் தடுத்துவிடலாம் என்று எண்ணுவதும், அதற்கு நீதிமன்றத்தை நம்புவதும் அறிவுக்குகந்த நடவடிக்கைகள் அல்ல. இந்திய அரசியல் சட்டமென்பது இந்துத்துவ பாசிசத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சாத்தியத்தை உள்ளடக்கிய ஒரு ஆவணம். “கால்நடை பராமரிப்பு அறிவியல் வழியில் அமைய வேண்டும்” என்றும், “பசு மற்றும் அதன் கன்றுகளைக் கொல்வது தடை செய்யப்படவேண்டும்” என்றும் இரு முரண்பட்ட கருத்துகளை ஒரே நேரத்தில் கூறுகின்ற அரசமைப்பின் உறுப்பு 48 தான், நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ள பசுவதை தடைச் சட்டங்களுக்கான அடிக்கொள்ளி.
பார்ப்பன மத நம்பிக்கையான “பசுவதைத் தடை”யை, “கால்நடை செல்வத்தைப் பேணுதல்” என்ற மதச்சார்பற்ற மொழியில் திணித்திருக்கின்ற இந்தக் கயமையை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலேயே பல உறுப்பினர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வழிகாட்டும் கோட்பாட்டின் அடிப்படையில் நாடு முழுவதும் பசுவதை தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட (குரேஷி) வழக்கில், “பயன்படாத மாடுகளை வெட்டத் தடைவிதிக்கவியலாது” என்று 1958-இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். 2005-இல் இன்னொரு (மிர்சாபூர்) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. “பயன்தராத மாடு என ஒன்று கிடையாது” என்றும், “சாணி, மூத்திரத்தை விற்றே விவசாயி கணிசமாகச் சம்பாதிக்கலாம்” என்றும் அரியதொரு கண்டுபிடிப்பை அந்த தீர்ப்பு வெளியிட்டது. இந்த அரசியல் சாசன அமர்வின் அறிவுக்கும், ராஜஸ்தானின் மயில் நீதிபதியுடைய அறிவுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அந்தத் தீர்ப்பைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும். இது குறித்த கட்டுரைகளை முந்தைய புதிய ஜனநாயகம் இதழ்களில் எழுதியிருக்கிறோம்.
உச்ச நீதிமன்றம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்ற பிரமைகள் அடிப்படையற்றவை. சட்டவிரோதமாகவும் மரபுகளை மீறியும் பண மதிப்பழிப்பை மக்கள் மீது ஏவினார் மோடி. அதனால், மக்களின் அடிப்படை உரிமைகளும், வாழ்வுரிமையும் பறிக்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை கொள்ளவில்லை. “ஆதார் கட்டாயமில்லை” என்று சொல்லிக்கொண்டே அதனை எல்லா முனைகளிலிருந்தும் கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. குடிமக்களின் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவது தெரிந்தும் இதனை அனுமதித்துக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையையும், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் உரிமையையும் துச்சமாக மதித்து அடாவடியாகத் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டு வழக்கில் “சிங்கத்தோடு விளையாடுகிறீர்களா” என்று தனது மேட்டிமைத்தனத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தியது.
தமிழக மக்களின் எழுச்சிதான் அந்த ஆணவத்தை வீழ்த்தியது. பார்ப்பன பாசிசம் என்பது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கின்ற வெறும் பண்பாட்டுப் பிரச்சனை அல்ல. அது மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரானது, நாட்டு நலனுக்கு எதிரானது, மக்களின் ஒற்றுமக்கு எதிரானது. இதை மக்கள் சொந்த முறையில் புரிந்து கொள்ளத்தக்க வாய்ப்பை இந்த அறிவிக்கையின் வாயிலாக வழங்கியிருக்கிறது மோடி அரசு.
இது ஜல்லிக்கட்டு இரண்டாவது சுற்று.
-மருதையன்
புதிய ஜனநாயகம், ஜூன் 2017
**********
பெட்டிச் செய்தி : கௌரி மௌலேகி – யார்?
“நாங்களாக இந்த அறிவிக்கையை வெளியிடவில்லை. கௌரி மௌலேகி என்ற பெண்மணி தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையின்படிதான் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறோம்” என்று கூறுகிறது மோடி அரசு. இந்த நாடகம் எப்படி அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
கௌரி மௌலேகி
2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் கௌரி மௌலேகி ஒரு மனு தாக்கல் செய்தார். “நேபாளத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கதிமாயி திருவிழாவில் பலியிடப்படுவதற்கு இலட்சக்கணக்கான எருமைகள் உ.பி., பிகார் போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டு செல்லப்படுவதால், அதனைத் தடுக்க உத்தரவிடவேண்டும்” என்பது மனு.
இதனை எப்படித் தடுப்பது என்று ஆலோசனை கூறுமாறு “சஷஸ்திர சீமா பால்” என்கிற பெயரிலான நேபாள் எல்லையில் பணியாற்றுகின்ற ஆயுத போலீசு படைக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அதன் இயக்குநரான பன்ஷிதர் ஷர்மாவின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, “நேபாளத்துக்கு எருமை கடத்துவதைத் தடுப்பது எப்படி” என்பதோடு தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், “இந்திய மாட்டுச் சந்தைகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவது, இறைச்சிக்காக விற்கப்படுவது ஆகியவற்றைத் தடுப்பதற்கும்” தனது பரிந்துரைகளை அளித்தது. அந்தப் பரிந்துரையைத்தான் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை என திரிக்கிறது மோடி அரசு. மேற்படி பரிந்துரையை வழங்கியதற்காக, மேனகா காந்தியின் “பீப்பிள் பார் அனிமல்ஸ்” என்ற என்.ஜி.ஓ., சர்மாவுக்கு விருது அளித்து கவுரவித்தது.
இதற்கிடையில் கதிமாயி கோயிலில் பலியிடுதலைத் தடை செய்து விட்டதாக அந்தக் கோயில் நிர்வாகமே 2015-இல் அறிவித்துவிட்டதால், எருமை கடத்தல் பிரச்சினையே இல்லாமல் போய்விட்டது. வெளிநாட்டு கடத்தலுக்குச் சட்டமில்லை. ஆனால், நேபாளத்தைக் காட்டி உள்நாட்டு மாட்டுச்சந்தை முடக்கப்பட்டுவிட்டது.
கௌரி மௌலேகி, தனது இணையப் பக்கத்தில் “கோரட்சக்”குகளைப் புகழ்கிறார். “மாட்டுக்கறி பணம் பயங்கரவாத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படுவதாக” ஒரு புதுப்புரளியைக் கிளப்பி, மோடி அரசின் அறிவிக்கையை எதிர்ப்பவர்களை மிரட்டுகிறார். “பயனற்ற மாட்டுக்கு அதை வளர்ப்பவன்தான் பொறுப்பேற்க வேண்டும். முடியாவிட்டால் தொழிலை மாற்றிக்கொண்டு போகட்டும்” என்று திமிர்த்தனமாகப் பேசுகிறார்.
கௌரி மௌலேகி யார் தெரியுமா? இவர் மேனகா காந்தி நடத்திவரும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் என்ற என்.ஜி.ஓ.-வின் டிரஸ்டி. அதே நேரத்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்திக்கு ஆலோசகர் என்ற அரசு பதவியிலும் இருப்பவர்.
இதைத்தான் “யாரோ ஒரு பெண் போட்ட வழக்கு” என்கிறார்கள் பாரதிய ஜனதா யோக்கியர்கள். பார்ப்பன பாசிசத்தின் “வலைப்பின்னல்” இந்த அரசமைப்பு முழுவதும் ஊடும் பாவுமாக எப்படிப் பரவியிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தத்தனூர் கிராமத்தில் செயங்கொண்டம் – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மீனாட்சி இராமசாமி கல்லூரி. இயல்பாகவே தனியார் கல்லூரிகள் என்பது உழைக்கும் மக்களை சுரண்டி தின்னும் கழுகு கூட்டமாகும். இதில் உச்ச நிலையில் உள்ளது மீனாட்சி இராமசாமி(MRC) கல்லூரி.
கட்டண கொள்ளை, தலித் மாணவர்களுக்கு கட்டணமில்லா படிப்பு என்று சொல்லி கல்லூரியில் சேர்த்த பிறகு அதிகப்படியான கட்டணம் நிர்ணயித்து கொள்ளையடிப்பது, கல்லூரியில் இருந்து இடைநின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் பணம் கேட்டு மிரட்டுவது என அனைத்து ரெளடி வேலையையும் செய்து வரும் நிறுவனம் தான் மீனாட்சி இராமசாமி கல்லூரியாகும்.
ஏழை, எளிய மாணவர்களிடம் ஏமாற்றி வாங்கிய கட்டணங்களில் கட்டப்பட்டுள்ள வானுயர்ந்த கட்டிடங்களுக்கு எந்த அனுமதியும் உள்ளாட்சி துறையில் பெறவில்லை, மேலும் மக்களின் வரிப்பணத்தில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட தார்சாலையை, தனது கல்லூரிக்கு வழிச்சாலையாகவும் சுற்றுசாலையாகவும் போட்டுள்ளார்கள்.
இவை போன்று ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகள் குவிந்த குப்பை தொட்டிதான் MRC எனும் மீனாட்சி இராமசாமி கல்லூரியாகும்.
இந்நிலையில்தான் கடந்த ஓராண்டிற்கு முன்னர் ABVP எனும் RSS ன் மாணவர் அமைப்பை தங்கள் கல்லூரியில் அறிமுகம் செய்து, அதற்கான முழுநேர பொறுப்பாளர்களையும் நியமித்து, ABVP யை அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தது மீனாட்சி இராமசாமி கல்லூரியே ஆகும்.
இதன் அடுத்தபகுதியாக அரியலூர் மாவட்டத்தின் நந்தினி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் RSS-ன் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் என்பது ஒருபுறம் இருக்க, தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரம் என தென்னிந்திய அளவில் நடைபெறும் RSS-ன் பயிற்சி முகாம் ஜூன் 10, 11 இரண்டு நாட்கள் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் நடைபெற இதில் குறைந்தபட்சம் 300 நபர்கள் பங்கேற்று பயிற்சி பெற போவதாகவும், பெரும்பான்மையோர் முழுநேர ஊழியர் என்பதும் சில பத்திரிக்கையாளர்களின் ஆணித்தரமான தகவல் ஆகும்.
இப்படுபாதக பயிற்சியை இந்திய ஒருங்கிணைப்பாளர்(Organizer) செந்தில் ஒருங்கிணைத்துள்ளார். RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்தானுமலையன்(STHANUMALAIYAN) மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் (State Organizer) வன்னியராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, அரியலூர் மண்ணை காவி வெறியூட்டி கலவர பூமியாக்க திட்டமிட்டுள்ளனர்.
மேற்கண்ட செயல்பாடுகளை கவனித்த சில முற்போக்கு தோழர்கள் 08-06-2017 அன்று MRC கல்லூரியின் தாளாளர் இரகுநாதன் அவர்களை சந்திக்க சென்றனர். ஆனால் தோழர்களை காத்திருக்க வைத்து சந்திக்க முடியாது என திருப்பி அனுப்பி உள்ளார். இருப்பினும் RSS-ன் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கடிதம் ஒன்றை கல்லூரி நிறுவனத்திடம் வழங்கி எச்சரித்து வந்துள்ளனர்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு RSS-ன் தலைவன் மோகன் பகவத் பயிற்சி அளித்து ஒரு மாதம் நிறைவுறாத நிலையில், அடுத்து அதே பகுதியில் அரியலூரில் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சியளிப்பது கவனிக்கதக்கதாகும்.
இதற்கு பாதுக்காப்பளிக்க எடப்பாடி அரசின் போலீசு குவிக்கப்படுவதும், எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை ஒடுக்குவதும், தமிழகத்தில் நடப்பது BJP-யின் பினாமி அரசு என்பதை வெளிச்சமாக்குகிறது.
தகவல் மதவாத எதிர்ப்பு கூட்டிமைப்பு
அரியலூர் மாவட்டம்
84288 12913
RSS-ன் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பப்பட்ட கண்டன கடிதம்
03-06-2017
தத்தனார்
மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு
அரியலூர் மாவட்டம்
செல் 84288 12913
தாளாளர்
MRC கல்வி நிறுவனம்
தத்தனூர்
அரியலூர் மாவட்டம்
ஐயா
வணக்கம்
தங்கள் கல்லூரி மிகச்சிறந்த சேவையை இந்தப் பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறது, அனைத்து மதம், மற்றும் சாதியினரும் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்கள் கல்லூரியில் வரும் 10-06-2017 மற்றும் 11-06-2017 ஆகிய தேதிகளில் இந்து பார்ப்பன மதவாத சக்தியான RSS மதவெறியியூட்டும் பயிற்சியை மேற்கொள்வதாக அறிந்து வேதனையுற்றோம், தங்கள் கல்லூரியில் பயிலும் மற்ற மதத்தினருக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் அச்சமூட்டும் செயலாகவே இந்த பயிற்சி அமையும், கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்க வேண்டிய மாணவர்கள், மதவெறியையும் சேர்த்து கற்க போவதை கண்டு நாங்கள் பயப்படுகிறோம், ஆகவே ஐயா அவர்கள் அதற்கு இடம் கொடுக்காது பயிற்சியை இரத்து செய்யுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு
அரியலூர் (மா)
84288 12913
கடைசிச் செய்தி: திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் 10, 11 தேதிகளில் நடந்தது. கல்லூரியின் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு மூடிய வளாகத்தில் சங்க பரிவாரங்களின் வன்முறை பயிற்சி முகாம் திட்டமிட்டவாறு முடிந்து விட்டது. மீனாட்சி ராமசாமி கல்லூரி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை ஆதரிப்பதில் உறுதியாக நிற்கிறது. தமிழக மக்கள் திரளும் போது அந்த உறுதி உளுத்துப் போவது உறுதி!
போயசு தோட்டத்தில் ஜெயாவுக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி ! எழுதலாம் என்று தான் தோன்றுகிறது. போயஸ் தோட்டத்தின் வாசலில் நடந்த ஆபாசக் கூத்துகளுக்கு ஊடகங்கள் அளித்து வரும் கவரேஜைக் காணும்போது, இதைப்பற்றி எழுதவும் கூசுகிறது. மானங்கெட்ட நிலையின் உச்சம் என ஒன்று இருப்பதாகக் கொண்டால், அந்த நிலையை எட்டியிருப்பது யார், தீபாவா, போலீசா, ஊடகங்களா, தமிழக மக்களா என்று கேட்டால் எளிதில் பதில் சொல்லி விட முடியாது.
தன்னை வரச்சொல்லி அழைத்து விட்டு இப்போது வெளியே துரத்தி விட்டதாக தீபக் மீது குற்றம் சாட்டுகிறார் தீபா. “இதற்கு ஆதாரம் அந்த போனில் இருக்கிறது” என்று தீபா பேரவை தலைவர் ராஜாவின் போனை காட்டுகிறார். “யாரைக்கேட்டு என் போனிலிருந்து பேசினாய்” என்று தீபாவிடம் கேட்கிறார் பேரவை தலைவர் ராஜா. “அதை அப்புறம் பேசிக்கொள்ளலாம், நம்மை வரச்சொல்லி கூப்பிட்டானா இல்லையா அதை தீபக்கிடம் கேள்” என்கிறார் தீபா.
“மரியாதையாக பேசுங்கள், நீ, வா, போ என்று பேசாதீர்கள். மாதவன் என்னுடைய ஹஸ்பெண்டு” என்று போலீசு அதிகாரியிடம் எகிறுகிறார் தீபா. “எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. இது அக்கா தம்பி பிர்ச்சினை” என்கிறார் மாதவன். “நீ ஏன்டா இங்கே வந்தே, திருட்டு நாயே, நகையை எடுத்துகிட்டு ஓடினவன்தானடா நீ” என்று தீபா புருசன் மாதவனை திட்டுகிறார் ராஜா. “எச்சகலை நாயே” என்று தீபக்கை திட்டுகிறார் தீபா.
உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை கவர் செய்ய வந்ததைப்போல ஒரு ஊடகத்தினர் கூட்டம் காமெராவுடன் அங்கே நிற்கிறது. ஊடகத்தினரை போயஸ் தோட்டத்து காவலர்களும் போலீசும் சேர்ந்து விரட்டுகிறார்கள். உடனே ஊடகத்துக்காரர்கள் “உரிமைக்கு” குரல் கொடுக்கிறார்கள்.
இரண்டு நாளாக இதுதான் தமிழகத்தில் முக்கிய செய்தி. இறுதிக் காட்சியில் “சசிகலாவும் தன் தம்பியும் சேர்ந்து சதி செய்து அத்தையை கொன்று விட்டதாகவும், இது குறித்து பிரதமரிடம் முறையிடப் போவதாகவும்” பிரகடனம் செய்கிறார் தீபா.
நேற்று இந்த கூத்துகளுக்கு நடுவில், போயசு தோட்ட வாசலில் ஒரு போலீசு அதிகாரி தீபாவிடம், “கிளம்புங்கம்மா, எப்பேர்ப்பட்ட பெரிய குடும்பம் அம்மா, நீங்க இப்படி பண்ணலமா” என்று உருக்கமாக கெஞ்சிக்கொண்டிருந்தார். நேற்று அரங்கேறி கேவலங்களிலேயே ஆகப்பெரிய கேவலம் இதுதான்.
அறிவோ சொரணையோ சுயமரியாதையோ இல்லாத ஒரு அடிமையைப் போல பேசினாரே அந்த போலீசு அதிகாரி, கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் நாட்டின் ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் ஜெயலலிதாவை அணுகின, அணுகுகின்றன. தீபா விவகாரத்தையும் ஓபிஎஸ்,இ பி எஸ், தினகரன் விவகாரங்களையும் அவ்வாறே அணுகி வருகின்றன.
உண்மை என்ன? நேற்று போயசு தோட்டத்தின் வாசலில் என்ன நடந்ததோ அதுதான் ஜெயலலிதா இருந்தபோது போயசு தோட்டத்துக்கு உள்ளேயும் நடந்து வந்தது. கப்பம் கட்டாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களுக்கு நடந்த ஆபாச அர்ச்சனைகளை ஒப்பிடும்போது நேற்று நடந்தது ஒன்றுமில்லை. உள்ளே “எச்சக்கலை நாயே” என்று அம்மாவால் அழைக்கப்பட்டவர்கள், சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களே என்றும் அழைக்கப்பட்டார்கள் என்பது மட்டுமே வேறுபாடு.
நேற்று நடைபெற்ற குடுமிபிடி ரோட்டில் நடந்த காரணத்தினால், படம் எடுக்கவிடாமல் தடுப்பதற்கு போலீசு முயற்சி செய்தது. அம்மா இருந்தபோது போயசு தோட்டத்தின் காம்பவுண்டுக்கு உள்ளேயே யாரும் நுழைய முடியாமல் போலீசு பார்த்துக் கொண்டதால், லைவ் கவரேஜ் சாத்தியப்படவில்லை என்பதுதான் இரண்டுக்குமான வேறுபாடு.
“பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா” என்று கேட்டால் “அத்தைக்கு பக்கத்தில் கூட மருமகள் வரமுடியாது” என்றுதான் சொல்ல வேண்டும். பதவிக்கு வாரிசுரிமை கோரும் பொருட்டு “எம்ஜியாரின் உடன்கட்டை” என்று தயங்காமல் சொல்லிக் கொண்டதாகட்டும், ஜானகியியும் ஜெயலலிதாவும் ஒருவருக்கு எதிராக ஒருவர் கூறிக் கொண்ட கொலைக் குற்றச்சாட்டுகளாகட்டும், ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தலைவிரிகோலமாக நடத்திய நாடகமாகட்டும், “கவர்னர் சென்னா ரெட்டி என் கையைப் பிடித்து இழுத்தார்” என்று ஜெ குற்றம் சாட்டியதாக இருக்கட்டும் – ஜெயா ஜெயாதான். இவை எதிலும் அத்தையின் கால் தூசுக்குகூட தீபா சமமாக மாட்டார்.
இருந்தாலும் ஜெயலலிதா ஏதோ கண்ணியமான நபரைப் போலவும், ஆளுமைத்திறன் மிக்கவரைப் போலவும், அவர் தலை சாய்ந்தவுடன், அவரது அருமை பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் கட்சிக்காரர்களும் தீபாவும் நடந்து கொள்வதாகவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.
போயசு தோட்டம் என்பது ஒரு திருடியின் சொத்து. பறிமுதல் செய்து மக்களின் உடைமையாக்கப்படவேண்டிய அந்த சொத்தை மட்டுமின்றி பறிமுதல் செய்யப்பட வேண்டிய பல சொத்துகளை சசிகலா கும்பல் சட்டவிரோதமாகத் தன் பிடியில் வைத்திருக்கிறது. நீதிமன்றம் அதை அனுமதிக்கிறது. போலீசு அதற்கு காவல் காக்கிறது. ஊடகங்கள் இந்த அசிங்கத்தை ஈயாய் மொய்க்கின்றன.
‘பீ’ யே நோயைப் பரப்புவதில்லை. ஈக்கள்தான் அதைச் செய்கின்றன.
கோடை வெயிலோடு சேர்ந்து கல்வி ஆண்டின் ஆரம்ப கட்ட துன்பங்கள் மக்களை வாட்டுகின்றன. பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வந்த பிறகு எந்தக் கல்லூரியில் என்ன படிப்பு கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு, விடுதி இடம் கிடைக்குமா என்றெல்லாம் ஆரம்பித்து இறுதியில் பிடித்த படிப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு படிப்பு கிடைக்குமா என்று தவிக்கிறார்கள் மாணவர்கள்.
அன்றாடம் மதிய நேரத்தில் அனைத்து தொலைக்காட்சிகளும் எந்த படிப்பு படிக்கலாம் என்ற வண்ண மயமான கனவுகளையும், கல்லூரிகளையும் நிபுணர்கள் வாயிலாக ஆசை காட்டுகிறார்கள். சிலநேரம் அச்சுறுத்தவும் செய்கிறார்கள்.
ஒரளவு பிடித்த படிப்பும் கல்லூரியும் கிடைத்தவர்களுக்கும் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பொறியியல் படித்த மாணவர்கள் பலர் போலீசு வேலைக்குப் போட்டி போடுகிறார்கள். பொறியியல் இடம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்கு பல தனியார் பள்ளிகள் தமது மாணவர்களை இறுதித் தேர்வில் காப்பி அடித்து எழுதக் கூட ஊக்குவிக்கின்றன. நாமக்கல் பிராயலர் பள்ளிகள் உருவாக்கும் மன அழுத்தம் ஆண்டுக்காண்டு காவு கொள்ளப்படும் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.
மேட்டுக்குடியினர் படிக்கும் பள்ளிகளில் ஏழை மாணவருக்கு 25% இடம் ஒதுக்க வேண்டும் எனும் அரசு உத்திரவு கேலிக்குரிய முறையில் அலட்சியப்படுத்தப்படுகிறது. மல்லையா வகையறாக்களின் வராக்கடனை வசூலிக்க முடியாத அரசுகள், ரிலையன்ஸ் நிறுவனத்தை வைத்து மாணவர்களின் கல்விக் கடனை அடாவடி செய்து வசூலிக்கின்றன. மதுரை மாணவர் லெனின் இப்படித்தான் கொல்லப்பட்டார்.
ஒப்பீட்டளவில் கட்டணக் கொள்ளை இல்லாத அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே சாகடிக்கப்படுகின்றன. இந்நிலையில் “நீட் தேர்வு” ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை நிரந்தரமாக புதைத்து விட்டது.
கேள்வி கேட்க கற்றுத்தர வேண்டிய கல்வி இன்று கேள்விக்கிடமின்றி மக்களை காயடிக்க பயன்படுகிறது. நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தனியார் மயத்தின் கோரக்கரங்களை அழிக்காமல் நமது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல கல்வியையோ எதிர்காலத்தையோ வழங்கிவிட முடியாது!
தோழமையுடன் புதிய கலாச்சாரம்
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி – கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்
மெட்ரிக் கொலைக்கூடங்கள!
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி: யார் குற்றவாளி?
கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…
பிட் அடித்து 100% ரிசல்ட் தனியார் பள்ளிகள் சாதனை!
ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?
தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்!
கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?
கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்!
நீட் (NEET) தேர்வு : நரியின் சாயம் வெளுத்தது!
காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
பாவல் குஷிஸ்ன்ஸ்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர். சமூகவியல் நகைச்சுவை பார்வையுடன் இவர் வரைந்த ஓவியங்கள் பிரபலமானவை. 1976 ஆம் ஆண்டு போலந்தில் பிறந்த அவர் போஸ்னன் நுண்கலைக் கல்லூரியில் படித்தவர். 2004 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் நகைச்சுவை சித்திரங்களை வரைவதில் கவனம் செலுத்தி வருகிறார். இத்துறையில் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
அவரது படைப்புகளில் பெரும்பாலானவை வறுமை, பேராசை, அரசியல் மற்றும் இறப்பு ஆகியவற்றை பேசுகின்றன. அவர் சொல்ல வரும் விஷயத்தை ஆதாரங்கள் மற்றும் சித்திரங்கள் கொண்ட விளக்க பாணியுடன் இருக்கும். அவருடைய ஓவியங்கள் எதுவும் மூடு மந்திரமாக பேசுவதில்லை. யதார்த்தமான ஒரு விசயத்தோடு மற்றொரு யதார்த்தமான விசயத்தை எதிர் முரணாக வைத்து அவர் குறிப்பிட்ட கருப்பொருளை உணர்த்துகிறார். இம்மூன்றும் சேர்ந்து அவருடைய ஓவியங்களை சுவாரசியம்கொண்டதாக மாற்றுகின்றன.
காற்று மாசுபாடு
ரத்தத்தை விட வர்ணத்திற்கே மதிப்பு அதிகம்.
கைப்பேசிகள் ரீங்காரிக்கின்றன – குருவி இனங்கள் அழிகின்றன.
காற்று மாசுபாட்டினால் காற்றை விலைக்கு வாங்கும் நிலை
தொடர்ந்து மக்களின் தலையில் இடியாக ஒன்றன் மீது ஒன்றாக பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் மோடி. பணத்தின் மதிப்பை அழித்து மக்களின் பணத்தை வங்கிக்கு கொண்டுவந்துவிட்டு, மல்லையா கடனைத் தள்ளுபடி செய்து வெளிநாட்டுக்கு வழியனுப்பியது பாஜக அரசு. அதே நேரத்தில் வங்கி வாசலின் வரிசையிலும், அவசர மருத்துவ செலவுகளுக்குப் பணமில்லாமலும் நாடெங்கும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து மாண்டனர். இன்று அதற்கு சற்றும் குறையாத வகையில் மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என அறிவித்து விவசாயிகள் மீது மீண்டுமொரு தாக்குதலைத் தொடுத்துள்ளது மோடி அரசு.
இந்த அறிவிப்பில் கிரமப் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் நோக்கமும் உள்ளது. பசு புனிதம் என்று இந்தியாவெங்கும் சட்டவிரோதமாக பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் குண்டர்களால் மக்களைக் கொன்ற பாசிசக் கும்பல்; இன்று அதையே சட்டப்பூர்வமாகப் போலீசைக் கொண்டு செய்வதற்கு எத்தனிக்கிறது. அதனால் தான் பாஜக – ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெவ்வேறு குரல்களில் பேசிப் பார்க்கிறது.
இவற்றையெல்லாம் மக்கள் தங்கள் அனுபவத்திலேயே பார்த்து விட்டனர். மாட்டின் பின்புறத்திற்கு கற்பூரம் காட்டுவதையும், ஒரு கட்டு அகத்திக் கீரையை மட்டும் வழங்கிவிட்டு பசுவை எங்கள் தாய் என தம்பட்டமடித்துக் கொள்ளும் கூட்டத்திற்கு மாடுகளை நம்பி பிள்ளையின் படிப்பு, மகளின் திருமணம், குடும்பத்தின் மருத்துவச் செலவு என தங்கள் வாழ்வின் இரத்தமும் சதையுமாக பிணைத்துள்ள விவசாயிகளின் பதிலடிகளைப் பாருங்கள், பகிருங்கள். நேர்காணல் எடுக்கப்ப்ட்ட இடம் மணப்பாறை மாட்டுச் சந்தை.
இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற அறிவிப்பிற்கு தமிழகத்தில் பரவலாக மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்தே மாட்டுக்கறி உண்பவர்களது பிரச்சினையாக மட்டும் சுருக்க நினைத்தது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
தொலைகாட்சி விவாதங்களில் பசு புனிதம், எங்கள் தாய் போன்றது அதை உண்பது மகா பாவம் என ஏறி நின்று பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆப்பறையும் விதமாக புரட்சிகர அமைப்புகள், முற்போக்கு – ஜனநாயக சக்திகள் தமிழகமெங்கும் மாட்டுக்கறி திருவிழா நடத்தி எதிர்ப்பைப் பதிய வைத்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி போன்ற கூலிப்படை வானரப் பரிவாரங்கள் இதை முசுலீம்களின் பிரச்சினை என்பதாக மடை மாற்ற, பன்றிக்கறி சாப்பிடுவோம் என அறிவித்தது. இவ்வாறு கையை ஊன்றி கர்ணம் போட்டாலும் இந்துத்துவ பருப்பு இங்கு வேகவில்லை. அதனால் பொன்.ராதகிருஷ்ணன் போன்றவர்கள் ஜகா வாங்கி இது மாட்டுக்கறிக்கான தடை கிடையாது. விற்பனைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் என பேசிவருகின்றனர். ஆனால் இவர்கள் எவரும் இதை தமிழக விவசாயிகளிடம் நேரில் சொல்லிப் பார்க்கட்டும். மக்கள் வெளுத்து விடுவார்கள்.
உண்மையில் மாட்டுக்கறி என்பது விவசாயிகளை வாழவைக்கும் சுழற்சிமுறையாக உதவுகிறது. அதனால்தான் மற்ற எவரையும் விட மாடு விற்கும் விவசாயிகள் எப்படி தமது மாடுகளை விற்றே ஆக வேண்டும் என்பதை கோபத்தோடு இங்கே பகிர்கிறார்கள். மணப்பாறை மாட்டுச்சந்தையின் குரல்களில் சில உங்களின் பார்வைக்கு!
இந்திய அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் இந்தியாவின் “சூப்பர் காப்” எனப் புகழப்பட்ட கே.பி.எஸ். கில், 26.05.2017 அன்று மரணமடைந்ததற்கு தங்களது வருத்தத்தைத் தெரிவித்து, அவரது புகழையும் பாடிவருகின்றனர். 30.05.2017 அன்று வெளியான தமிழ் ஹிந்துவில் கூட கே.பி.எஸ். கில் குறித்த சேகர் குப்தா என்னும் முன்னாள் பத்திரிக்கையாளரின் கட்டுரை சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
கன்வர் பால் சிங் கில் என்ற கே.பி.எஸ்.கில், கடந்த 1958-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக அஸ்ஸாம் மாநிலத்தில் பணியிலமர்ந்த அவர், 1980-களின் தொடக்கத்தில் அம்மாநிலத்தின் ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, இவர் மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. அச்சமயத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் போராட்டக்காரர் ஒருவரை உதைத்தே கொன்றிருக்கிறார். அக்குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, பின்னர் அவ்வழக்கிலிருந்து டில்லி உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
கிரிமினல் கில்
1984-ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். காலிகளும், காங்கிரசு காலிகளும் இணைந்து நடத்திய சீக்கிய எதிர்ப்புக் கலவரத்தைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு கேட்டுப் போராடும் போராளிகளின் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமையைச் சீர் செய்ய ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்குப் பெயர் போன கில், பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். 1984-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட கில் 1988 – 1990 கால கட்டத்திலும், 1991 – 1995 காலகட்டத்திலும் மாநிலத்தின் டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் கில்லின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பஞ்சாப் போலீசு, பல்லாயிரக்கணக்கான பஞ்சாப் இளைஞர்களை, சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, போலி மோதலிலும், போலீசுக் கொட்டடிகளிலும் கொன்று குவித்தது.
டிஜிபியாக பதவியேற்ற பின்னர், ஆபரேசன் பிளாக் தண்டர் என்ற பெயரில், சீகியர்களின் புனித்த் தலமான அமிர்தசரஸ் தங்க கோவிலுக்குள் போலீசு படையை அனுப்பி நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சுமார் 43 பேரை கோவிலுக்குள்ளேயே கொன்று குவித்தார் கில். இந்தக் காலகட்ட்த்தில் பத்தாயிரக்கணக்கான பஞ்சாபியர்கள் போலீசின் ஒடுக்குமுறையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் போலி மோதல் கொலைகளின் மூலம் கொல்லப்பட்டனர். விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்ட பலரும் ‘காணாமல்’ போயினர். அதாவது தடயமில்லாமல் ஒழித்துக் கட்டப்பட்டனர். 1989 – 1992 காலகட்டத்தில் மட்டும் பஞ்சாபில் சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்கள், போலீசால் கொலை செய்யப்பட்டனர்.
கே.பி.எஸ்.கில், தீவிரவாதத்தை ஒடுக்க சீக்கியப் போராளி அமைப்புகளைத் தடை செய்து, போராளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்தவில்லை. மாறாக அவர்களைக் கூண்டோடு போலி மோதல் கொலைகள் மூலம் ஒழித்துக் கட்டினார். இந்த நரவேட்டை நாயகனின் வெறி கொண்ட நடவடிக்கைக்கு அப்பாவிகள் தான் பெரும்பான்மையாகப் பலியாகினர். இது தவிர போராளிகளைக் கொல்லும் போலீசுக்கு பரிசுத்தொகைகளும், காட்டிக் கொடுப்பார்களுக்கும், போலீசுக்கு கங்காணிகளாக செயல்படுபவர்களுக்கும் பெருந்தொகைகளைப் பரிசாக வழங்கினார் கில். அன்றைய காலகட்டத்திலேயே ரூ. 50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பட்டியலிடப்பட்ட போராளிகளைக் கொல்பவர்களுக்கு பகிரங்கமாகவும், பட்டியலில் இல்லாதவர்களையும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களையும் கொன்றவர்களுக்கு கமுக்கமாகவும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
ஜஸ்வந்த் சிங் கல்ரா
இதனால் கில் என்ற இரத்த வெறியனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய பஞ்சாப் போலீசு, கொலை செய்வதையே நோக்கமாகக் கொண்டு வெறி கொண்டு திரிந்தது. கொலை செய்தால் பணமும் பரிசும் கிடைக்கும் என்ற அடிப்படையில் பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையைப் போன்று செயல்பட ஆரம்பித்தன போலீசு கும்பல். இந்நிலைமையைக் கண்டு 1993-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை, “கில் போலீசுத்துறை தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், பஞ்சாப் மக்கள் போராளிகளைக் கண்டு பயங்கொள்ளவில்லை, மாறாக போலீசைக் கண்டு தான் அஞ்சி நடுங்குகின்றனர்” என்று எழுதியது.
கில் தலைமையிலான பஞ்சாப் போலீசால், கொட்டடியிலும், போலி மோதலிலும் கொல்லப்பட்ட அப்பாவிகளை சுடுகாட்டில் எரித்த போலீசின் மோசடியை மனித உரிமைச் செயல்பாட்டாளரும், வங்கி ஒன்றின் இயக்குனருமான ஜஸ்வந்த் சிங் கல்ரா அம்பலப்படுத்தி, அது தொடர்பாக பல்வேறு ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1995 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ம் நாள், காலையில் தனது காரைக் கழுவிக் கொண்டிருந்த கல்ராவை, கடத்திச் சென்றது போலீசு கும்பல். அவரது உறவினர்களுக்குக் கூட அவர் குறித்த எந்தத் தகவலையும் தர மறுத்தது போலீசு.
ஜஸ்வந்த் சிங் கல்ராவை உடனடியாக மீட்டுத்தரக் கோரி செப்டெம்பர் 11, அன்று அவரது மனைவி ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில் கில்லுக்கு எதிராக கல்ரா பல்வேறு ஆதாரங்கள் திரட்டியிருந்த சூழலில், அவருக்கு போலீசில் இருந்து மிரட்டல் தொடர்ச்சியாக வந்திருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரைப் போலீசு தான் கடத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்குப் பதில் மனுவில், பஞ்சாப் போலீசு, கல்ராவைத் தாம் கைது செய்யவில்லை என்றும் அவரைத் தேடி வருவதாகவும் நீதிமன்றத்தில் சொன்னது. கில்லின் உத்தரவுப்படி பஞ்சாப் போலீசால் கடத்தப்பட்ட கல்ரா, ஒரு மாத காலம் சித்திரவதை செய்யப்பட்டு அதன் பின்னர் அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேடி வருவதாக வெளியுலகிற்குக் கணக்குக் காட்டியது பஞ்சாப் போலீசு.
அதன் பின்னர் கடந்த 2005ம் ஆண்டு, கில்லின் காலகட்டத்தில் சிறப்புப் போலீசு அதிகாரியாகப் பணியாற்றிய குல்தீப் சிங், இவ்வழக்கில் கில்லின் கிரிமினல் தனத்தை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக விளக்கினார். அவ்வாக்குமூலத்தில், செப்டெம்பர் மாதம், போலீசால் கடத்தப்பட்ட கல்ராவை, அக்டோபர் மாதத்தில் போலீசு அதிகாரி அஜித் சிங் சந்துவின் வீட்டில் வைத்து கில் சந்தித்தார் என்றும் கில் சந்தித்த சில நாட்களில் கல்ரா அங்கிருந்து ஜாபல் போலீசு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியில் போலீசால் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார். அதோடு ஒருவேளை ‘கில்’லின் அறிவுரையை கல்ரா ஏற்றிருந்தால் அவர் தம்மைக் காப்பாற்றிக் கொண்டிருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு இதன் பின்னர் சூடுபிடித்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. குற்றத்தின் சூத்திரதாரியான ‘கில்’ அயோக்கியத்தனமான முறையில் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ரூபன் தியோல் பஜாஜ் – கேபிஎஸ் கில்
வெறுமனே ஒரு வெறி பிடித்த மிருகமாக, ஒரு கொலைகாரனாக, மட்டும் கில்லின் வாழ்க்கையைச் சுருக்கிப் பார்க்க முடியாது. அவர் ஒரு கடைந்தெடுத்த பெண் பித்தனாகவும் இருந்தார். 1988-ம் ஆண்டு ரூபன் தியோல் பஜாஜ் என்னும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை, விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது கில் அத்துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். அப்பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி இது குறித்து புகார் அளித்து வழக்குப் பதிவு செய்தார். 1996-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பிரிவு 509, பிரிவு 357ன் படி மூன்று மாத கடுங்காவல் சிறைத் தண்டனையும், தொடர்ந்து 2 மாத சிறைத் தண்டனையும், ரூ. 2,00,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது, இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடத்திய கில்லிற்கு தண்டனையை உறுதி செய்த அதே வேளையில் சிறைத் தண்டனையை மட்டும் இரத்து செய்தது.
1988 -ம் ஆண்டு ஒரு பெண் அதிகாரியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய கிரிமினலுக்கு 1989 -ம் ஆண்டு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.
1995 -ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், மோதல் மேலாண்மை நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைவராகப் பதவியேற்றார். அரசாங்கங்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாக அது செயல்பட்டது. 1997 -ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் இவரை பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்க அழைத்தது, ஆனால் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளியாக் தீர்ப்பு வழங்கப்பட்டதால் இந்தக் கிரிமினலால் அப்பதவியை ஏற்க இயலவில்லை
அது போல 2000 -ம் ஆண்டு விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக தமது தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை உதவி வழங்க கில்லை அழைத்தது இலங்கை.
கிரிமினல் கில்லை உபயோகித்துக் கொண்ட குஜராத்- சட்டீஸ்கர் கிரிமினல்கள்
குஜராத்தில் 2002ம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் நடத்தப்பட்ட குஜராத் கலவரத்திற்கு பிறகு, கில்லை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார் மோடி. மோடி – கில் என்ற இரண்டு கிரிமினல்களின் கூட்டணியில் 2002 -ம் ஆண்டிற்குப் பிறகு அங்கு நடத்தப்பட்ட போலீசு வெறியாட்டங்கள் குறித்து தனியான விவரங்கள் எதுவும் தேவை இல்லை.
முசுலீம் மக்களைக் கொன்று குவித்த மோடிக்கு உதவியாக தமது கடமையை ஆற்றிய பின்னர், பழங்குடியின மக்களைக் கொன்று குவிக்க சட்டீஸ்கர் அரசு கில்லை பாதுகாப்பு ஆலோசகராக 2006ம் ஆண்டு நியமித்தது. எங்கெல்லாம் அரசு அதிகாரத்தில் உள்ள கிரிமினல்களுக்கு மக்களை ஒடுக்க கிரிமினல் போலீசு அதிகாரிகள் தேவைப்பட்டனரோ, அங்கெல்லாம் கில் ஆலோசகராகவும், அதிகாரியாகவும் சேவை செய்ய அழைக்கப்பட்டார்.
கிரிமினல்களுக்காக மக்களைக் கொன்று குவித்த கிரிமினல் கில், தனது 82-வது வயதில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். முதலாளித்துவப் பத்திரிக்கைகளும், ஊடகங்களும், இந்தக் கிரிமினலின் மறைவிற்கு அஞ்சலியும் புகழாரமும் செலுத்துகின்றன. இந்த ஊடகங்களின் யோக்கியதையைப் புரிந்து கொள்ள அவர்கள் போற்றிப் புகழும் கிரிமினல் கில்லின் யோக்கியதையைப் புரிந்து கொண்டாலே போதும்.
சொறியாங்கல்லுக்கு சொறி புடிச்சதும் சந்தன கட்டைக்கி சளி புடிச்சதும் சரித்திரத்தில் கிடையாது. இப்படி ஒரு சொலவடை தஞ்சை மாவட்டத்தில் உண்டு. ஆனால் அப்படியான இயற்கைக்கு எதிர் மறையான மாற்றங்களை சந்தித்து வருகிறது தஞ்சை மாவட்ட காவிரி விவசாயப் பகுதிகள்.
தஞ்சையின் சிறப்பே தட்டுப்பாடற்ற தண்ணியும் மண்மணம் மாறாத பசுமையும்தான். இன்று தப்பிப் பிழைத்த மீதமிருக்கும் பயிர் பச்சையும் ஊட்டச்சத்தற்ற நோஞ்சான் குழந்தை போல் பசுமையை இழந்துவிட்டு உயிர் தண்ணீருக்காக ஊசலாடுகிறது. காலால் மடைமாற்றும் செழிப்பு மிக்க தஞ்சை கிராமங்கள் நோய் வாய்ப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
தஞ்சை ஒரத்தநாட்டிற்கு அருகே இருக்கும் தென்னமண்நாடு.
டெல்டா பகுதி என்பது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையின் ஒரு பகுதியும், கடலூரின் ஒரு பகுதியும் உள்ளடக்கியது. இதில் புது ஆற்றுப் பாசனம் பழைய ஆற்றுப் பாசனம் என இரு டெல்டா பிரிவுகள் உள்ளன. திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, நாகப்பட்டினம், கடலூர், சிதம்பரம் அதை ஒட்டிய ஊர்கள் பழைய ஆற்றுப் பாசன பகுதி. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை இதை ஒட்டிய ஊர்கள் புது ஆற்றுப் பாசனப் பகுதி.
மலைப் பிரேதேசங்களில் உருவாகும் தண்ணீர் கடலை நோக்கி வரும் போது கடலுக்கு முன் உள்ள சமவெளிதான் டெல்டா பகுதி. தண்ணீர் வந்து சேரும் கடைமடை பகுதி என்பதால் வண்டல்மண் பரவிய நஞ்சை நிலம் அதிகமாகவும் தண்ணீர் செழிப்பான பகுதியாகவும் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மழை ஆரம்பமாகி பருவ மழையும் காவேரி ஆற்றுத் தண்ணீரும் ஒருங்கிணைந்து டெல்டா பகுதிக்கு வந்து சேரும். ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் முடிய தண்ணீரின் அளவு மிதமிஞ்சி இருக்குமென்பதால் நெல் சாகுபடி மட்டுமே இங்கு பிரதானம்.
குருவை, சம்பா என இரண்டு போக நெல்லும் பிறகு ஒரு போக உளுந்து, பயறு, எள்ளு, கடலை போன்ற தண்ணீர் அதிகம் தேவைப் படாத மானாவாரி பயிர் இதுதான் இங்கே வழமையான விவசாயம். விவசாயத்துக்கும் விளைநிலத்துக்கும் இரண்டு மாதம் கோடை விடுமுறை கொடுப்பது வழக்கம். மறு வருடம் ஜூன் மாதம் வந்ததும் பழையபடி குருவை சம்பா என தொடங்கி விடுவார்கள். இப்படித்தான் இங்கே விவசாயிகளின் வாழ்க்கை இயங்குகியது.
காவிரி டெல்டா பகுதியை பொருத்தவரை பாசன ஆற்றைப்போல் வடிகால் ஆறு கூட மதகுக் குழாய் பாலம் என்ற அமைப்பில் தான் இருக்கும். ஏனென்றால் மிதம்மிஞ்சிய தண்ணீரை வயல்களில் இருந்து வடிய வைக்கத்தான். தண்ணீர் செழிப்பான பகுதி என்பதால் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட இழப்பீடு அதற்க்கான நிவாரணம் பற்றிய கணக்கெடுப்புகள் தான் இங்கு அதிகம். வறட்சிக்கான கணக்கெடுப்பு அதுக்கான நிவாரணம் என்பது சமீப காலங்களில் டெல்டா பகுதி சந்தித்து வரும் புதுப் பிரச்சனை.
முழுக்க முழுக்க ஆற்றுத் தண்ணீரையும் கிராம்பபுற விவசாய வாழ்க்கை முறையையும் நம்பி இருந்த மக்கள் காவிரி பிரச்சனை தலை தூக்கியதும் போர்வெல் எனப்படும் ஆழ்குழாய் பாசன முறைக்கு மாறத் தொடங்கினர். மனிதனைப் போல் நிலங்களுக்கும் ஓய்வு கொடுத்து வந்தவர்கள் போர்வெலும், விவசாய இயந்திரமும் வந்தவுடன் நிலத்தை இளைப்பாற விடுவதில்லை. முதலாளித்துவ வழிமுறையிலான இந்த மாற்றம் பெருந்தனக்கார்களை மாற்றி விட்டது.
ஆரம்பத்தில் நிலங்கள் அதிகம் உள்ள பணக்கார விவசாயிகள் தண்ணீர் பாயாத மேட்டுப் பகுதிக்கும், புஞ்சை நிலமான தரிசு நிலத்துக்கும் தண்ணீர் வசதியை ஏற்படுத்த போர்வல் முறையை கொண்டு வந்தார்கள். அதுவும் பேர் சொல்லும் அளவுக்கே குறைவாக இருந்தது. காவிரியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதும் போர்வெல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. போர்வெல் முறை வந்ததும் இரண்டு போக நெல் விவசாயம் மூன்று போகமாக மாறியது.
தஞ்சை ஒரத்தநாடு.
பழைய காவிரி ஆற்றுப் பாசன பகுதியான திருவாரூர் மன்னார்குடி நாகப்பட்டினம் பகுதியில் இந்த வருடம் விவசாயம் அடியோடு இல்லை. வரலாறு காணாத அதிக வறட்சிக்கு காரணம் ஓ.என்.ஜி.சி எரிவாயு குழாய்கள் பதிப்புதான் என்று அங்கே உள்ள விவசாயத்துறை அரசு அதிகாரிகளே எம்மிடம் கூறினர். முப்பது வருடங்களுக்கு முன் எரிவாயு குழாய்களின் பிரச்சனை எப்படி இருக்கும் என்பதை அப்பகுதி மக்கள் உணரவில்லை. பத்து பதினைந்து வருடம் கடந்ததும் அப்பகுதி மீள முடியாத நிலத்தடி நீர் சீர்கேட்டை சந்தித்தது.
காவிரியில் தண்ணீர் பிரச்சனை 2000 ஆண்டு வாக்கில் படுமோசமானது. அப்பபோது அப்பகுதியில் போர்வெல் போட முடியவில்லை. ஏற்கனவே போடப்பட்ட போர்வெலும் விவசாயத்துக்கு பயன்படவில்லை. நிலப் பகுதி வலுவிழந்தும் நிலத்தடி நீர் கடல் நீர் மட்டத்தை விட கீழிறங்கி விட்டதால் கடல்நீர் நிலப்பகுதிக்குள் ஊடுருவி விட்டது. 150 அடிக்கு கீழே போனாலே கடல் நீர் வருகிறது. கடல் நீர் ஊடுறுவலால் குடிநீருக்குக் கூட அவதிபடும் நிலை அப்பகுதியில் ஏற்பட்டிருக்கிறது. அதனால் முழுக்க முழுக்க காவிரியை நம்பி மட்டுமே அவர்கள் விவசாயம் உள்ளது.
புது ஆற்றுப் பாசனப் பகுதியில் ஒப்பீட்டளவு பாதிப்பு சற்று குறைவு எனலாம். இப்பகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை இல்லை என்றாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பசுமையை பார்க்க முடிகிறது. காரணம் இப்பகுதியில் போர்வெல் விவசாயம் அதிகம்.
இப்பகுதியில் போர்வெல் போடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நூறு நூற்றியைம்பது அடி ஆழம்தான் போடப்பட்டது. அதற்க்கே குழாயில் வரும் தண்ணீரின் அளவு அதிவேகமாக இருக்கும். தண்ணீர் வரும் வேகத்தில் எருமை மாடு கூட எதிர்த்து நிற்க முடியாது. குளிக்கலாம் என்று தண்ணீர் ஊற்றும் இடத்தில் நின்றால் அலேக்காகப் பத்தடி தூரம் தூக்கிப் போட்டுவிடும். மழைக்காலம் முடியும் வரை மோட்டாரே தேவையில்லை. ஆர்டிசியன் ஊற்றுப் போல ( சுடுநீரல்ல) தானாகப் பொங்கி வழியும். பருவ மழையும், போர்வெலில் பொங்கும் நீருமே அந்த நிலங்களுக்கு போதுமானதாக இருந்தது. கோடை காலத்தில் மட்டுமே மோட்டார் ஓடும்.
அப்படி ஒரு வேகத்தில் பீச்சி அடித்த போர்வல்கள் இன்று விளக்கெண்ணை போல் வழிகிறது. 150 அடி வரை இறக்கிய குழாய்கள் 450 – 500 அடி போய்விட்டது. காவிரியில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டால் போர்வல் இல்லாமல் விவசாயம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆரம்ப காலகட்டத்தில் பத்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் போர்வெல் போட்டனர். 2000-வது ஆண்டுக்கு பிறகு மூணு ஏக்கர் இருந்தாலே போர்வல் போட தொடங்கி விட்டனர். காரணம் தண்ணீர் தட்டுப்பாட்டால் கைவிடும் நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டதுதான்
வடக்கு, மேற்கு மாவட்ட பகுதியில் போர்வெல் போடும்போது 300 அடியில் ஈரப்பசை வந்தாலே பெரிய விசயம். தஞ்சை பகுதியை பொருத்தவரை 150 அடியிலேயே தண்ணி கிடைத்துவிடும். மற்ற பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் போடப்படும் போர்வெலுக்கு தஞ்சையில் 4 அல்லது 5 லட்சம் தேவைப்படுகிறது. மற்ற பகுதியில் போர்வெல் போடும் போது காற்றை உள்ளே செலுத்தி பூமியை குடைந்து குழாயை இறக்க வேண்டும்.
தஞ்சை பகுதியில் பத்தடிக்கு கீழ போனாலே தண்ணீர் பிசுபிசுப்பு வந்துவிடும். அதனால் காற்றை உள்ளே செலுத்த முடியாது. தண்ணீரை உள்ளே செலுத்தி சகதியாக வெளியேற்றிதான் போர்வெல் போட முடியும். மற்ற இடங்களில் போர்வெல் குழாய் மட்டும் இறக்கினால் போதும். டெல்டாவில் குழாயைச் சுற்றி கூழாங்கற்கள், சல்லி, மணல், மக்கு மண் எல்லாம் போட வேண்டும். அதனால்தான் மற்ற பகுதியை விட போர்வெல் போட அதிக செலவு இங்கே ஆகிறது.
தஞ்சை ஒரத்தநாட்டிற்கு அருகே இருக்கும் தென்னமண்நாடு.
காவிரி கைவிட்டாலும், மழை இல்லை என்றாலும் போர்வல் வைத்துள்ளவர்கள் ஓரிரு மூட்டை குறைவாக அறுவடை செய்தாலும் விவசாயத்தை கை விடவில்லை. அதற்காக காவிரியோ மழையோ இல்லாமல் போர்வெலை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய முடியாது. ஒரிரு ஆண்டுகள் தான் தாக்குப் பிடிக்க முடியும். இதே நிலை நீடித்தால் வரும் காலம் டெல்டா பகுதி நினைத்துப் பார்க்க முடியாத அழிவை சந்தித்து, விவசாயத்தை முற்றிலுமாக கைவிடும் நிலை ஏற்படும்.
போர்வல் வைத்து விவசாயம் செய்வதிலும் அதிக பிரச்சனை உள்ளது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் விட்டு விட்டு வரும். அடிக்கடி இணைப்பு பழுதடையும். தண்ணீர் மட்டம் இறங்கியதால் கூடுதலாக குழாயை இறக்க வேண்டும். கோடை காலங்களில் மோட்டார் பழுது அடிக்கடி நடக்கிறது. 2-பேஸ் கரண்டை 3-பேசாக மாத்த 6 – 7 ஆயிரம் செலவு. ஒரு தடவை மோட்டாரை வெளியே எடுத்து காயில் கட்டி உள்ளே இறக்க 10,000 செலவாகிறது. மோட்டார் ஸ்டாட்டர் பழுதடைந்தால் அதற்கு 2,000 ரூவாய். ஒரு முறை மெக்கானிக் வந்தால் 300 ரூபாய். மோட்டாரின் இழுவைச் சக்தி போதாது என்றால் புது மோட்டார் போட 45 ஆயிரம் ஆகிறது. இப்படியாக செலவு கணக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.
பணக்கார விவசாயிகள் போர்வெல் போட்டு விவசாயத்தை பெருக்க நினைத்தார்கள். காலங்காலமாக விவசாயத்த மட்டுமே நம்பி இருந்த சிறு விவசாயிகள் எப்படியோ வெளிநாடு சென்று நாயாப் பேயாய் பாடுபட்டு பொருள் ஈட்டி போர்வல் போடுகிறார்கள். விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாதவர்கள் லாபம் இல்லை என்றாலும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் பிள்ளைகள் நகர்புறத்தில் ஈட்டும் வருமானத்தையும் போட்டுதான் விவசாயத்தை விட்டுவிடாமல் இழுத்துப் பிடித்து ஓட்டுகிறார்கள்.
இதல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவு நிலம் வைத்துள்ளவர்களின் பிரச்சனை. ஒரு ஏக்கர், அதுக்கும் குறைவு அல்லது நிலமற்ற விவசாயிகளின் நிலை வேறு. வயதானவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் நிலை தடுமாறுகின்றனர். கிராமத்து இளைஞர்களோ முழுவதும் விவசாயத்தை கைவிட்டு விட்டு நகரங்களை நோக்கி விவசாயம் அல்லாத வேறு வேலைக்கு செல்கின்றனர்.
தஞ்சை ஒரத்தநாட்டுக்கு அருகே இருக்கும் சேதுராயன்குடிகாடு.
ஏதோ கொஞ்சம் நடக்கும் விவசாயத்துக்கு கூட ஆள் கிடைப்பதில்லை. வரும் காலங்களில் விவசாயத்துக்கு எதிர் காலம் இல்லை என்பதால் கொத்தனார், சித்தாள், கம்பிகட்டுதல், பெயிண்டர், மெக்கானிக், லாரி கீளினர் போன்ற நகர்ப்புற வேலையை பெரிதும் விரும்புகிறார்கள். ஒரு நாள் விவசாய கூலியாளுக்கு ஒரு நாள் சம்பளம் 400-லிருந்து 500 வரை. வேலை தொடர்ச்சியாக இருக்காது. நகரத்தில் ஆரம்ப அடிப்படை சம்பளம் குறைவாக இருந்தாலும் இரண்டு வருடத்தில் எதிர் காலம் உள்ள ஒரு தொழிலை கற்றுக்கொண்டு முழு தொழிலாளியாகிவிடலாம் என்பது அவர்கள் கருத்து.
தண்ணீர் இல்லாததால் விவசாயம் மட்டும் பாதிக்கவில்லை. மாட்டுக்கு மேச்சல், வைக்கோல் இல்லை. விவசாய இயந்திரங்களுக்கு வாடிக்கையாளர் இல்லை. நன்னீர் மீன் வளர்ப்புக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் மீன்கள் செத்து மிதக்கின்றன. டீக்கடையில் வியாபாரம் இல்லை. மண்பாண்டம் செய்ய களிமண் இல்லை. சலவை தொழிலாளிக்கு ஆறு குளங்களில்லை. இது போல கிராமங்களில் உள்ள மற்ற சிறு தொழில்களும் பாதித்துள்ளன.
தண்ணீர் பிரச்சனையில் கடந்து வந்த வருடங்களை வைத்து பார்த்தால் காவிரியில் தண்ணீர் வருமா மழை பெய்யுமா என்பது சந்தேகமே. இதே நிலை நீடித்தால் போர்வல் வைத்துள்ளவர்கள் மட்டும் ஓரிரு வருடங்கள் விவசாயத்தை மேற்கொண்டு செய்வார்கள். அதன் பிறகு அவர்களாலும் செய்ய முடியாது.
இப்படியே தொடர்ச்சியாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து நிலத்தடி நீரை போர்வெல் மூலம் உறிஞ்சிக் கொண்டே இருந்தால் நான்கு வருடத்துக்குக்குள்ளேயே தஞ்சை புதுப் பாசன டெல்டாவும் திருவாரூர் பகுதியைப் போல் வறண்டுவிடும் அபாயம் உள்ளது.
முப்போகம் விளைந்த தஞ்சை தரணியின் காவிரிப் பகுதி விரைவிலேயே புதுக்கோட்டை ராமநாதபுரம் மாவட்டம் போல் வறண்ட பாலைவனமாகிவிடும் அபாயத்தை எப்படி தடுக்கப் போகிறோம்?