சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் 31.05.2017ல் “மாட்டுக்கறித் திருவிழா” நடத்த முடிவெடுத்து கோவை மக்கள் அதிகாரம் சார்பாக நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமையில், ப்ளெக்ஸ், கொடி, முழக்க அட்டை, சீருடை அணிந்த தோழர்கள் தடையை மீறி அதிரும் முழக்கங்களுடன் குவிந்திருந்த போலீசை நோக்கி பேருந்துகள் மற்றும் மக்கள் நெருக்கம் கொண்ட நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அத்தனை பேரிலும் எப்படியோ மோப்பம் பிடித்த போலீசு அதிகாரி ஓடிவந்து தோழர் கையில் வைத்திருந்த மாட்டுக்கறியை பறித்து பிடுங்கியது. “உனக்கு வேணும்னா கேட்க வேண்டியதுதானே” என்பது போன்ற நடவடிக்கையாக தோழர்களும் இழுத்து பிடித்தும் ஆர்வவெறியால் போலீசே வென்றது. இதை ஊடகங்களும் படம்பிடித்தன. தினமும் போலீசிடம் மாமுலாக, தான் விற்கும் பொருளை (பரோட்டா முதல் புண்ணாக்கு வரை) இழக்கும் வியாபாரிகளும், சாமர்த்தியமாக மாட்டுக்கறியை தட்டிபறிக்கும் போலீசை பார்த்து வியந்தனர். போராட்டத்தை காட்சிகளை மறைக்கும் விதமாக போலீசு வாகனத்தை குறுக்கே நிறுத்தி ஊடகத்தையும் தடுக்கமுயன்றது.
மோடியின் மதவெறியை அம்பலப்படுத்தும் முழக்கங்களை பொறுக்க முடியாத போலீசு அவசர அவசரமாக கைது செய்ய முயற்சித்தது, ஆனால் தோழர்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்து கைதாக மறுத்து முழக்கமிட்டனர். ஊடகத்திற்கும்பேட்டி கொடுக்கபட்டது. இறுதியில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றது போலீசு. வேனில் செல்லும் பொழுது வழியெங்கும் தொடர்ந்து தோழர்கள் முழங்கிய முழக்கங்களால் எரிச்சலடைந்த போலீசு மண்டபத்திற்கு வேனிலிருந்து இறங்கும் பொழுது முழக்கம் கூடாதென மிரட்டியது. தோழர்கள் அதையும் மீறி முழக்கமிட மீண்டும் தள்ளுமுள்ளு ஆனது. மண்டபதிற்கு முன்பாகவும் SP அலுவலகத்திற்கு முன்பாகவும் மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டம் போல் நடந்தேறியது. பெண் உதவி ஆய்வாளர் உட்பட போலீசு யாவும் ரௌடிக் கூட்டம் போல் செயல்பட்டது. “ரிமான்ட் பண்ற பாரு” என பெண் ரௌடி SI யும் உ(எ)ளவு துறை போலீசு ஒருவரும் மிரட்டினர்.
பதிலுக்கு பதில் தோழர்கள் போராட்ட குணத்துடன் பேசியதை பார்த்து அப்பகுதயில் திரண்டிருந்த மக்கள் கவனம் நம் பக்கம் திரும்பியது, மிரட்டிப் பார்த்த போலீசு தகவல்களை மட்டும் எழுதிக்கொண்டு அடுத்த ஒரு மணிநேரத்தில் ஆர்பாட்டத்தில் பிடுங்கி ஓரமாக பதுக்கிய மாட்டுக்கறிப் பையை திரும்பக் கொடுக்க முற்பட்டனர். அது (மாட்டுக்கறி) அங்கிருந்து தாமதமாக எடுத்து வரப்பட்டதால் அதனை வாங்க தோழர்கள் மறுத்து விட்டனர். கைது செய்து சிறையில் அடைப்பேன் என்ற போலீசு, நாம் கலந்துரையாடலை தொடங்கிய உடனே நீங்கள் விடுதலை என அழுத்தமாக சொல்லி நாம் தயாராவதற்கு முன்பே மண்டப விளக்குகளை அனைத்தது.
இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மோடி அரசு தடை விதித்த பிறகு, தமிழகத்தின் முக்கியமான மாட்டு சந்தையான மணப்பாறை சந்தை களையிழந்து போயுள்ளது. அச் சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தங்கள் எதிர்ப்பையும் நியாயமான கோபத்தையும் உடனே வெளிப்படுத்தினர். ஒரே இரவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் இலட்சக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தியதைப் போன்ற மற்றுமொரு தாக்குதலே இந்த அறிவிப்பு.
தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன், கார்பரேட் சேவையில் கை கோர்த்துள்ள மோடி அரசின் இந்த தடை பற்றி விவசாயிகள் வணிகர்களின் கருத்துக்களை கேளுங்கள்! பகிருங்கள்!
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
“கோபமான பரிகாசமும்”“கவிதாவே சத்துக்கான தேடலும்” உங்களுக்குப் பிடித்தமான வாசகம்? — De omnibus dubitandum. எல்லாவற்றைப் பற்றியும் சந்தேகப்படு. -கார்ல் மார்க்ஸ் {கார்ல் மார்க்சின் ஒப்புதல்கள்(1)}
அ) எல்லாவற்றையும் சந்தேகப்படு” என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
வினவு குறிப்பு: இந்த அத்தியாயத்தில் காதலிலும், அறிவுத்துறை தேடலிலும் கல்லூரிப் பருவத்தை கடக்கும் மார்க்சைப் பார்க்கிறோம். எனினும் மார்க்சின் மனைவியான ஜென்னியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டாமா என்று கார்ல் மார்க்சின் தந்தை கடிதம் எழுதுகிறார். இக்காலத்தில் மலைக்க வைக்கும் எண்ணிக்கையில் புத்தகங்களை படிக்கிறார் மார்க்ஸ். அதே போன்று பல நூல்களை எழுதவும் செய்கிறார். எழுதியவை குறித்த அதிருப்தியால் அவற்றை அழிக்கவும் செய்கிறார். சிந்தனை உலகின் உண்மையை கண்டுபிடிக்கும் பாதையில் ஆவேசமாகவும் பரிசீலனையுடனும் பயணிக்கிறது அவரது பார்வை. அந்த வேகத்தை மட்டுப்படுத்த தந்தை முனைகிறார். இருப்பினும் தன்னுடைய பணி என்ன என்பதை மார்க்ஸ் இக்காலத்தில் தெளிவற்ற முறையிலாவது தேடியிருக்க வேண்டும். மூலதனத்தை எழுதம் பணிக்காக தனது குடும்பம், மகிழ்ச்சி, பொழுது போக்கு அனைத்தையும் இழந்த மார்க்ஸ் அதன் அறிகுறிகளை இங்கேயும் காண்பிக்கிறார். இது படித்தலும் திளைத்தலும் கொண்ட ஒரு இலக்கியவாதியின் காலமல்ல. மனித குலத்தின் இரகசியத்தை கண்டு பிடிக்க பாடுபட்ட ஒரு போராளியின் நெருப்பு காலம். படியுங்கள்
1835ம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பான் பல்கலைக்கழகத்தில் சட்டவியல் படிக்கச் சென்றார். ஆனால் மார்க்சுக்கு சட்டவியலைக் காட்டிலும் உலகம் அதிக விரிவானதாக இருந்தது. அவர் சுதந்திரமான வாழ்க்கை என்ற நீர்ச்சுழலுக்குள் இளமைத் துடிப்போடு குதித்தார். அவர் பலவிதமான ஆன்மீக நடவடிக்கைகளில் முதலில் ஈடுபட்டார்; ஆனால் அவர் கட்டுப்பாடில்லாத மாணவர் கூட்டங்களையும் அவற்றின் தங்குதடையற்ற குதூகலத்தையும் விருந்துகளையும் சண்டைகளையும் பல விதமான வீரசாகசச் செயல்களையும் மறந்து விடவில்லை. ஒரு சண்டையின் போது கார்ல் காயமடைந்தார். ஒரு நாள் அவர் “இரவுக் கால அமைதியைக் குலைத்ததற்காகக்” கைது செய்யப்பட்டார். அவருடைய வற்றாத நகைச்சுவை உணர்ச்சிக்காக நண்பர்கள் அவரை நேசித்தார்கள். ஆனால் அவருடைய புண்படுத்துகின்ற கேலிப் பேச்சும் பரிகாசப் பாடல்களும் அவர்களைப் பயமுறுத்தின. இத்திறமைக்காக மார்க்ஸ் உயர்நிலைப் பள்ளியிலேயே பிரபலமடைந்திருந்தார்.
முதியவரான ஹென்ரிஹ் மார்க்ஸ் தன் மகனிடம் “சண்டைகளையும் தத்துவஞானத்தையும் எப்படி ஒன்று சேர்க்கிறாய்’’ என்று கேட்டதற்குப் போதிய காரணம் இருந்தது. தகப்பனாருடைய கடிதங்கள் மகனுடைய உடல் நலம், மன நலத்தைப் பற்றி அதிகமான அக்கறையைக் காட்டுகின்றன. உடல் நலத்தை நன்கு பேண வேண்டும், ஏனென்றால் “உடல் நலக்குறைவான விஞ்ஞானி பூமியில் மிக அதிகமான பரிதாபத்துக்குரியவர்” என்று அவர் எழுதுகிறார். அவர் தன் மகனுக்கு நற்போதனைகளை வழங்குகிறார்; “இளமைக் காலத்தின் பாவச் செயல்களுக்காக” “பயங்கரமான தண்டனை” பெற்ற குன்ஸ்டர் ஒருவருடைய உதாரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.(2)
ஆனால் அவருடைய தகப்பனார் மகனுடைய மாணவ வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பற்றி மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சியைப் பற்றியும் கவலைப்பட்டார். 17 வயதான கார்ல் பான் பல்கலைக்கழகத்திலிருந்து தகப்பனாருக்கு எழுதிய ஆரம்பக் கடிதங்களில் ஒன்றில் மதத்தைப் பற்றித் தன்னிடம் புதிதாகத் தோன்றியிருக்கும் சந்தேகங்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். ஹென்ரிஹ் மார்க்ஸ் அக்கடிதத்துக்குப் பின்வருமாறு பதிலளித்தார்: “நீ அறநெறிப்படி தொடர்ந்து நல்லவனாக இருப்பாய் என்பதை நான் உண்மையாகவே சந்தேகிக்கவில்லை. ஆனால் கடவுளிடம் தூய்மையான நம்பிக்கை வைப்பது அறநெறிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும். என்னிடம் இந்த விஷயத்தில் வெறியுணர்ச்சி கிடையாது என்பது உனக்குத் தெரியும். ஆனால் இந்த நம்பிக்கை-சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ – மெய்யாகவே மனிதனுக்கு அவசியம்; நாஸ்திகன் கூட கடவுளை வணங்கும்படி இழுக்கப்படுகின்ற தருணங்களும் வாழ்க்கையில் ஏற்படுகின்றன.”(3)
ஹென்ரிஹ் மார்க்ஸ் தன்னுடைய வாதத்தைப் பலப்படுத்துவதற்காக நியூட்டன், லோக், லேய்ப்னித்ஸ் ஆகியோரை உதாரணமாகக் காட்டுகிறார். ஆனால் ஹென்ரிஹ் மார்க்ஸ் இத்தகைய நயமான கண்டிப்புகளுடன் மட்டும் நிற்கவில்லை; பானில் மிகையான சுதந்திரக் காற்று வீசுகிறது, அங்கிருந்து பிரஷ்யப் பேரரசின் தலைநகரமான பெர்லினின் கட்டுப்படுத்தப்பட்ட, கட்டிறுக்கமான சூழலுக்கு மாற்றிக்கொள் என்று அவர் வற்புறுத்துகிறார். இதற்கு இன்னும் அழுத்தமான காரணங்களும் இருந்தன: அன்றைய ஜெர்மனியின் தத்துவச் சிந்தனை பெர்லின் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டிருந்தது. “இந்த தொழிற்சாலையுடன் ஒப்பிடுகின்ற பொழுது மற்ற பல்கலைக்கழகங்கள் உண்மையான மதுபானக் கூடங்களே’'(4) என்று லுட்விக் ஃபாயர்பாஹ் கூறினார்.
மார்க்ஸ் மற்றும் அவருடைய மனைவி ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலன்
எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது என்ற ஸ்தூலமான பிரச்சினையைப் பற்றி கார்ல் திரும்பத் திரும்பச் சிந்தித்தார். டிரியர் நகரத்திலேயே மிகவும் அழகான பெண், “நடன அரங்குகளின் அரசியாகிய” ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலனுக்கும் மார்க்சுக்கும் திருமணம் நிச்சயமானதும்-அது “அவருடைய முதல் வெற்றி, மிகவும் மகிழ்ச்சிகரமான வெற்றி” (மேரிங்)-அது மிகவும் அவசரமாக முடிவு செய்யப்பட வேண்டிய பிரச்சினையாயிற்று.
மார்க்சின் தகப்பனார் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களில் ஜென்னி உனக்காக மாபெரும் தியாகம் செய்திருக்கிறாள் என்று மகனிடம் நினைவுபடுத்தத் தவறவில்லை. ஜென்னி வசதியான எத்தனையோ இளைஞர்களின் வேண்டுதல்களை நிராகரித்திருந்தாள்; ஆனால் கார்ல் எப்படியோ அவளுடைய இதயத்தை வெற்றி கொண்டுவிட்டபடியால் அந்த அசாதாரணமான இளம் பெண்ணின் எதிர்காலம் தன் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பதைக் கார்ல் உணர வேண்டும்; ஆகவே அவர் “உலகத்தின் மரியாதைக்கு” உரியவராக வேண்டும், தன்னுடைய எதிர்காலக் குடும்பத்துக்குப் பொருளாயத வசதிகளைச் செய்வதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதைக் கார்லும் உணர்ந்தார். அவர் 1836இல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பானில் வாழ்க்கையின் ஆனந்தங்களை அனுபவிப்பதில் முழு மனத்துடன் ஈடுபட்டதைப் போல அதே உணர்ச்சி வேகத்துடன் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டார். அவருடைய அக்கறைகள் மிகவும் பல்வகையாக இருந்தன. மூலச்சிறப்பான பண்டைக் காலம், நாடகம், அழகியல், கவிதை, தத்துவஞானம், சட்டவியல் ஆகியவற்றில் ஆழமான அக்கறை காட்டினார். எதிர்கால வேலையைப் பற்றி முடிவு செய்கின்ற வேதனை நிறைந்த முயற்சியில் அவர் இன்னும் ஈடுபட்டிருந்தார். ஒரு சமயத்தில் எழுத்தாளனாவதென்று நினைத்தார். அவர் இசைப்பாடல்கள், சான்னேட் கவிதைகள் எழுதினார், நோட்டுப்புத்தகங்கள் நிறைய கவிதைகளை எழுதிக் குவித்தார். ஒரு வரலாற்று நாடகத்தையும் கேலியான நாவலையும் கூட எழுதினார். அவருடைய தகப்பனார் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் நாடக ஆசிரியர் போன்ற வேலைகளிலுள்ள சாதகங்களையும் பாதகங்களையும் அவருடன் மிகவும் அக்கறையோடு விவாதித்தார், எத்தகைய பொருட்களைப் பற்றி எழுதலாம் என்று ஆலோசனை கூறினார், அவருடைய திறமையைப் பற்றி அறிவுரை கூறினார்.
தன்னுடைய மகன் “சூக்குமமான கருத்தியலானவற்றில்” ஈடுபடுவதாக ஹென்ரிஹ் மார்க்ஸ் கருதினார்; ஆனால் அவர் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பட்டார். அவர் கார்லிடம் “தேசபக்த” நடையில் ஒரு நாடகத்தை எழுதும்படி, பிரஷ்ய முடியாட்சியின் “மேதாவிலாசத்தை” விளக்கிக் கூறும்படி, ஜெர்மானிய உணர்ச்சியில் ஒரு வரலாற்றுப் பொருளைப் பற்றி எழுதும்படி ஆலோசனை கூறினார், ஏனென்றால் அத்தகைய “எழுச்சிப் பாடல்’’ “புகழ் அடைவதற்கும் “பிரபலமடைவதற்கும்” நல்ல அடிப்படையாக இருக்கும் என்றார்.(5) இலக்கிய விமர்சகராக வேண்டும் என்ற மகனுடைய விருப்பத்தை அவர் அங்கீகரிக்கவில்லை; ஏனென்றால் மாபெரும் லேஸ்ஸிங் தன்னுடைய வாழ்நாளில் மிகக் குறைவான பாராட்டுக்களையே பெற்றார், ஏழை நூலகராகவே மரணமடைந்தார்.”(6)
எனினும் நாம் ஹென்ரிஹ் மார்க்சுக்கு உரிய சிறப்பை அளிக்க வேண்டும். அவர்தான் கார்லின் அசாதாரணமான திறமையை முதலில் அங்கீகாரம் செய்தவர்; அவருடைய மகத்தான எதிர்காலத்தை-தெளிவில்லாத முறையில் என்ற போதிலும்-முதலில் உணர்ந்தவர். “கடவுளின் கருணையில் உன்னுடைய மற்றும் உன் குடும்பத்தின் நன்மைக்கு, என்னுடைய ஆரூடம் தவறாக இல்லாமலிருக்குமானால் மனிதகுலத்தின் நன்மைக்காக, நீ இன்னும் நெடுங்காலம் வாழ்ந்திருக்கப் போகிறாய்”(7) என்று அவர் 1836இல் தன் மகனுக்கு எழுதினார்.
சில சமயங்களில் அவர் தன் மகனின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டார். கார்லின் திறமை, அவரை ஒத்த வயதுள்ளவர்களிடமிருந்து அவர் வேறுபட்டிருப்பது, அவருடைய அசாதாரணமான மனத்திடம், விடாப்பிடியாக உண்மையைத் தேடல்-இவை அனைத்தின் காரணத்தால் தன் மகனை “ஆபத்தான பிசாசு” பிடித்திருக்கிறது, உலகியல் வெற்றிக்குரிய தெளிவான பாதையிலிருந்து அவரை விலக்கிவிடும், அமைதியான வாழ்க்கையை எதிர்த்துக் கலகம் செய்யும்படி அவரைத் தூண்டும் என்று அவர் நினைத்தார்.
“அது வானத்துப் பிசாசா அல்லது ஃபாவுஸ்டின் பிசாசா?” ஹென்ரிஹ் மார்க்ஸ் தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்த பிரச்சினையைப் பற்றி இப்படிக் கேட்டுக் கொண்டார். கேதேயினுடைய ஃபாவுஸ்டின் முடிவை நினைத்த பொழுது அது பின்பற்றப்பட வேண்டிய உதாரணமாக அன்பு நிறைந்த தகப்பனாருக்குத் தோன்றவில்லை. நிரந்தரமான அதிருப்தியுடன் உண்மையையும் வாழ்க்கையின் மெய்ப் பொருளையும் தேடிய ஃபாவுஸ்டின் உருவம்-அற்புதமான தருணம் என்ற கைக்கு அகப்படாத கானல் நீரைக் கண நேர ஓய்வுகூட இல்லாமல் தேடியவர், மெய்யான மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருந்த பொழுது தனக்குக் கிடைத்த சிறு பங்கைக் கொண்டு திருப்தியடையாமல் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியவர், அவர்களுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்யத் துணிந்தவர்களே வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் தகுதி உடையவர்கள் என்று கருதுபவர்-அந்த உருவம் மார்க்சின் தகப்பனாருக்குக் கவர்ச்சியாக இருந்திருக்க முடியாது, தன் மகனைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் பிசாசு அது என்று அவர் பயந்தார்.
“உன்னையும் உன்னுடைய எதிர்காலத்தையும் பற்றி நினைக்கும் பொழுது என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. ஆனால் என்னிடம் கவலைகளையும் அச்சத்தையும் தூண்டுகின்ற கருத்துக்களைச் சில சமயங்களில் என்னால் அகற்ற முடியவில்லை. உன்னுடைய அறிவுக்கு, உன்னுடைய திறமைகளுக்குத் தகுந்தாற்போல உன் இதயம் இருக்கிறதா என்ற கேள்வி மின்னல் கீற்றைப் போல என்னிடத்தில் தோன்றுகிறது. துன்பம் நிறைந்த இவ்வுலகத்தில் கூருணர்ச்சி படைத்த மனிதன் ஆறுதலடைவதற்கு மிகவும் அவசியமான, சாதாரணமான ஆனால் புனிதமான உணர்ச்சிகளுக்கு உன் இதயத்தில் இடமிருக்கிறதா?. நீ என்றைக்காவது உண்மையான மானுட மகிழ்ச்சியை, குடும்ப மகிழ்ச்சியை அடைவாயா? இது என் இதயத்துக்குக் குறைவான வேதனையைத் தருகின்ற கேள்வியல்ல. ஒரு குறிப்பிட்ட நபரை என்னுடைய குழந்தையைப் போல நான் நேசித்து வருகின்றபடியால் அண்மைக் காலத்தில் மற்றொரு கவலையும் என்னை வாட்டுகிறது. உனக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியுண்டாக்க உன்னால் என்றைக்காவது முடியுமா?”(8) அவர் “குறிப்பிட்ட நபர்;” ஜென்னி வான் வெஸ்ட்ஃ பாலன். அந்த நங்கையின் மகிழ்ச்சியைப் பற்றியே இங்கே ஹென்ரிஹ் மார்க்ஸ் உருக்கமாகக் குறிப்பிடுகின்றார்.
ஒருவர் மகிழ்ச்சியைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? ஒருவேளை கார்ல் மார்க்ஸ் தனக்கு “மிகவும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு” அவருடைய தகப்பனார் கனவு கண்ட, கவலைகள் ஊடாடாத “குடும்ப” மகிழ்ச்சியைத் தராதிருந்திருக்கலாம். என்னுடைய வாழ்க்கைப் பணியான மூலதனத்தை எழுதுவதற்காக என்னுடைய உடல்நலத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்தேன் என்று மார்க்ஸ் எழுதியிருக்கிறார், அவருடைய ஓய்வில்லாத வாழ்க்கையின் எல்லாச்சுமைகளையும்-அலைச்சல், சிறை, நாட்டிலிருந்து வெளியேற்றப்படுதல், வறுமை, காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை-ஜென்னி தன் கணவருடன் பகிர்ந்து கொண்டாள். மூன்று குழந்தைகள் இறந்தன. ஆனால் அவள் மார்க்சின் மிக நெருங்கிய சகாவாக, ஆலோசகராக, அவருடைய நற்தெய்வமாக இருந்தாள். ருஷ்யாவிலிருந்து அமெரிக்கா வரையிலும் புதிய, போராடுகின்ற உலகத்தின் சின்னமாக மார்க்ஸ் ஆகியிருப்பதை அவள் உயிரோடிருந்து பார்த்தாள். இது அவள் இழந்த அனைத்துக்கும் ஈடாக இருந்தது.
ஹென்ரிஹ் மார்க்சின் வருந்தீங்குணர்தல் பொய்த்துவிடவில்லை. அவருடைய மகனைப் பிடித்தாட்டியது வானத்துப் பிசாசு அல்ல, அது ஃபாவுஸ்டின் பிசாசே. அது அவரை ஓரிடத்தில் நிற்க அனுமதிக்கவில்லை; அவருடைய ஆன்மிக வளர்ச்சியில், பரிபூரணத்தை நோக்கி அவருடைய தேடலில், பிடிக்கு அகப்படாத, கவர்ச்சி நிறைந்த “பிசாசுத் தர்க்கவியலை”, முழுமையான அறிவு என்ற பொய்த் தோற்றத்தை, யதார்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதை நோக்கி அவருடைய தேடலில் முடிவில்லாதபடி மென்மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அது தூண்டியது. அதற்கு மார்க்சும் அவருக்கு “மிகவும் பக்கத்தில் இருந்தவர்களும்” தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று அது கோரியது. மார்க்ஸ் சமூக உண்மையின் தர்க்கவியலின் சேவைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அவர் தன்னுடைய பள்ளிக்கூடக் கட்டுரையில் மகிழ்ச்சியைப் பற்றி எழுதிய கருத்துக்கு (“எல்லோருடைய நன்மைக்காகச் செய்யப்பட வேண்டிய தியாகங்கள்”’, “கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சி”) அவர் விசுவாசமாக நடந்து கொண்டார்.
ஃபாவுஸ்டைப் போலின்றி மார்க்ஸ் மெஃபிஸ்டோபிலேத் தனக்குள்ளேயே வைத்திருந்தார். தன்னுடைய சொந்த நூல்களின் மிகவும் ஈவிரக்கமில்லாத விமர்சகராக அவர் எப்பொழுதும் இருந்தார். “எல்லாவற்றையும் சந்தேகப்படு” என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை.முதலாவதாகவும் முதன்மையாகவும் அவர் இதைத் தன்னுடைய சொந்த எழுத்துக்களுக்குக் கையாண்டார்.
மாணவப் பருவத்தின் ஆரம்ப வருடங்களில் அவர் செய்த கவிதைச் சோதனைகள் கண்டிப்பு நிறைந்த தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டன. 19 வயதாகிய மார்க்ஸ் தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் அவற்றைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்: “நம் காலத்தைப் பற்றிய கடுந்தாக்குதல்கள், மேலோட்டமான வளர்ச்சியில்லாத உணர்ச்சி வெளியீடுகள், இயல்பான விதத்தில் எதுவுமில்லாதவை, எல்லாமே கற்பனையில் தோன்றியவை, இருப்பதற்கும் இருக்க வேண்டியதற்கும் இடையில் முழுமையான எதிர் நிலை, கவித்துவமில்லாத பிரசங்கச் சிந்தனைகள், ஒரளவுக்கு உணர்ச்சித் துடிப்பும் கவிதாவே சத்துக்கான தேடலும் கொண்டவை.”(9) மார்க்சின் விமர்சனக் கூர்மை இங்கே அவரை ஏமாற்றிவிடவில்லை என்பது வெளிப்படையாகும்.
“வெகு தொலைவிலுள்ள தேவதையின் அரண்மனையைப் போன்ற உண்மையான கவிதையின் பளிச்சிடும் உலகத்தை” அவர் முடிவில் சிற்சில கவிதைகளில் கண்டபோதிலும் இந்த வெற்றி அவருடைய கவித் திறமையைப் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பாகவே மார்க்சுக்கு உதவியது, “என்னுடைய படைப்புகள் அனைத்தும் ஒன்றுமில்லாதபடிச் சிதைவடைந்தன.”(10) இக்கூற்றை அதன் நேர்ப்பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்: மார்க்ஸ் தன்னுடைய கவிதைகளையும் நாவல்களின் உருவரைகளையும் எரித்துவிட்டார்.
மார்க்ஸ் “கலைத் தேவதைகளின் நடனங்களையும் வன தேவதைகளின் இசையையும்”(11) கைவிட்ட பிறகு அதிகமான ஆர்வத்துடன் விஞ்ஞானத்தை நோக்கித் திரும்பினார். இதற்கு முன்னர் கூட கவிதை அவருக்குத் துணைத் தொழிலாகவே இருந்தது. அவர் எழுதிக் கொண்டிருந்த இசைப்பாடலை அல்லது கவிதை நாடகத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு சட்டவியல் அல்லது தத்துவஞானத்தில் மூழ்கிவிடுவார். அவர் லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்கெல்மானின் கலைகளின் வரலாறு மற்றும் ஓவி டின் இரங்கற்பாக்களுடன் ரேய்மாருளின் மிருகங்களின் கலை உணர்ச்சிகள், லுடெனின் ஜெர்மன் வரலாறு, அரிஸ்டாட்டிலின் சொல்வன்மை மற்றும் பேக்கன், ஷேல்லிங், கான்ட், ஹெகல் ஆகியோர் எழுதிய நூல்களையும் படித்தார். சட்டவியலைப் பற்றி மலையளவு நூல்களைப் படித்தார். ஒரு வருடத்தில் அவர் படித்த நூல்களின் எண்ணிக்கை நமக்கு மெய்யாகவே திகைப்பளிக்கின்றது !
ஆனால் மார்க்ஸ் வெறுமனே படிக்கவில்லை. அவர் படித்த புத்தகங்களிலிருந்து நீண்ட பகுதிகளை நோட்டுகளில் எழுதிக் கொள்வார்; அவற்றைப் பற்றித் தன்னுடைய சொந்தச் சிந்தனைகளையும் எழுதி வைத்திருப்பார். இந்தப் பழக்கத்தை அவர் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இது அவருடைய சிந்தனையையும் நினைவாற்றலையும் ஒழுங்குபடுத்தியது; அவருடைய ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவி புரிந்தது.
மார்க்ஸ் ஒரு புதிய அறிவுத்துறை பற்றிப் படிக்கும் பொழுது அது உடனடியாக அத்துறையைப் பற்றி சுதந்திரமான பகுப்பாய்வாக முன்னேற்றமடைவது அவருக்கே உரித்தான குணாம்சமாகும். அவர் ஒரு மாணவனைப் போல ஈடுபாடற்ற முறையில் நூல்களைப் படிக்கவில்லை, அவருடைய சுதந்திரமான, படைப்பாற்றல் மிக்க சிந்தனையை ஊக்குவிப்பதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக, தூண்டுதலாக உதவியது.
அவர் சட்டவியலையும் தத்துவஞானத்தையும் படித்த பொழுது “சட்டவியலின் மொத்தத் துறையையும் உள்ளடக்கிய சட்டவியலின் தத்துவஞானத்தைத்” தேடுகிறார். பதினெட்டு வயதான மார்க்ஸ் இப்பொருளுக்கு அறிமுகமாக மட்டுமே சுமார் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியற்ற நூலை”(12) எழுதுகிறார், அதே கல்வியாண்டில் கலையின் வரலாற்றையும் தத்துவஞானத்தின் வரலாற்றையும் படித்துக் கொண்டிருந்த பொழுது அவர் சுமார் 24 பக்க அளவில் ஒரு உரையாடலை எழுதினார்; அதில் “கலையும் விஞ்ஞானமும் ஓரளவுக்கு ஒன்று சேர்க்கப்பட்டிருந்தன. கிளியாந்தஸ் அல்லது தத்துவஞானத்தின் தொடக்க நிலையும் அவசியமான தொடர்ச்சியும் என்பது அந்த உரையாடலின் தலைப்பாகும். அது நமக்குக் கிடைக்காமல் போனது வருந்தற்குரியதே; ஏனென்றால் அந்தக் கட்டத்தில் எழுதப்பட்டவற்றில் மார்க்சினுடைய பாராட்டைப் பெற்றது இந்தக் கட்டுரை மட்டுமே. மற்றவை அனைத்தும் அவருடைய கவிதைகளைப் போலவே கடுமையான விமர்சனத்திற்கு ஆளாயின.
இந்தக் கல்வியாண்டின் போது (1836-37) அவருக்கு உறக்கமில்லாத இரவுகளும் வேதனைமிக்க ஆன்மீகச் சண்டைகளும் ஏற்பட்டன. “ஆன்மப் பயணம்” ஏற்கெனவே செய்யப்பட்டதை நிராகரிப்பதிலேயே வழக்கமாக முடிந்தது. தத்துவஞானம் மற்றும் சட்டவியலில் ஏதாவதொரு அறிஞரின் கருத்தை மார்க்ஸ் ஏற்றுக் கொண்டு அதைத் தர்க்க ரீதியான முடிவுக்கு வளர்த்துச் செல்வதற்கு முயற்சிப்பார். ஆனால் அதன் விளைவாக அந்த அறிஞரும் அவருடைய போதனையும் தன்னுடைய சொந்தத் தேடல்களும் பயனற்றவை என்பதைக் காண்பார். ஒரு கோவிலில் இருக்கும் விக்கிரகங்களைத் தூக்கியெறிவார், உடனே அதில் புதிய விக்கிரகங்களை நிறுவுவார். உண்மையின் பீடத்திலிருந்து ஒரு விக்ரகத்தைத் தூக்கியெறிவார், அப்பீடத்தில் மற்ற விக்ரகங்களை நிறுவுவார். கவிதை, அழகியல், தத்துவஞானத் துறைகளில் அவர் ஏராளமான நூல்கள் எழுதினார்-ஆனால் உடனே அவற்றை நெருப்புக்கு இரையாக்கினர். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதிலும் எழுதக் கூடிய நூல்களை அவர் ஒரே வருடத்தில் எழுதி முடித்தார். ஒரு அற்பவாதிக்கு இது பெருமையாக இருக்கும். ஆனால் இளைஞரான மார்க்சுக்கு இது அதிருப்தியின் துன்பத்தைக் கொடுத்தது.
மார்க்ஸ் தன்னுடைய கற்பனை உலகங்களைப் படைத்து முடிப்பதற்குள்ளாகவே உடைத்து விடுகிறார், புதிய உலகங்களைத் தேடிப் புறப்பட்டுவிடுகிறார், அவர் எழுதிய தேடல் என்ற கவிதையை ஜென்னிக்கு அர்ப்பணித்தார். அதில் அவரே பின்வருமாறு எழுதுகிறார்:
என்னைக் கட்டிய தளைகளை நொறுக்கி எழுந்தேன்.
“எங்கே செல்கிறாய்?” “எனக்கொரு உலகம் தேடி!”
“இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்
கீழே – கடல்களும் மேலே-விண்மீன்களும் இல்லையா?”….
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்,
என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்,
என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்,
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும் . . .
நான் நெடுந்தூரம் அலைந்து சென்றேன்,
திரும்பினேன் – கீழும் மேலும் உலகங்கள்,
விண்மீன்களும் கதிரவனும் துள்ளின,
மின்னல் வெட்டியது- நான் மடிந்தேன்.(13)
தான் சாதித்தவற்றைப் பற்றித் தொடர்ச்சியான அதிருப்தியும் பரிபூரணத்தை நோக்கி முடிவில்லாத தேடலும் அவருடைய முதிர்ச்சிக் காலத்திலும் அவருடைய சிறப்பான அம்சங்களாக இருந்தன. அவருடைய சிந்தனை உருவமெடுத்த உடனே ஏற்கெனவே சாதிக்கப்பட்டவற்றை அது கடந்து சென்றுவிடும், எழுதப்பட்டவற்றை இதுவரையிலும் அடைந்திராத சிகரங்களிலிருந்து நோக்கும், அதன் பிறகு புதிய சிகரம் தோன்றும். அச்சிகரங்களைத் தன்னுடைய காலடியில் குவிப்பது அவருடைய நோக்கமல்ல, உண்மையை அதன் மெய்யான ஒளியில் பார்க்கக் கூடிய சிகரத்தை எட்டுவதே அவருடைய நோக்கம்.
குறிப்புகள் :
(1)Reminiscences of Marx and Engels, p. 266. 70
(2)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 647, 649.
(3) Ibid., p. 647.
(4) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 1, S. 73.
(5)Marx, Engels, Collected Works, Vol. 1, pp. 672, 673.
(6) Marx/Engels, Gesamtausgabe, Bd. 1, Halbband, 2, S. 210.
(7) Marx, Engels, Collected Works, Vol. 1, p. 662.
(8) Ibid., p. 670. 78
(9)Ibid., p. 11.
(10) Ibid., p. 17.
(11) Ibid.
(12 ) Ibid., p. 12.
(13) Ibid., p. 559. – தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு, விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்றுள்ளது. விளைவித்த விளைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் விவசாயிகள் 2017 ஜூன் 1-ம் தேதியிலிருந்து போராடி வருகின்றனர். அவ்வாறு போராடிய விவசாயிகளை சுட்டுக்கொன்றுள்ளது ஆர்.எஸ்.எஸ். சவுகான் அரசு. இது ஏதோ சவுகான் அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தப்பித்தவறி செய்துவிட்ட ஒரு சம்பவமாக சுருக்கிப் பார்க்க முடியாது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக போராடியும் திரும்பிப் பார்க்காத ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. மோடி அரசு; பா.ஜ.க. ஆட்சி செய்யும் மராட்டியத்தில் பால் விவசாயிகளை வஞ்சித்தது அந்த மாநில அரசு; மறைமுகமாக விவசாயிகளைக் கொல்லும் இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் சவுகான் அரசு விவசாயிகளை நேரடியாக சுட்டுக் கொன்றுள்ளது.
அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என உறுதியாக அறிவித்தது. தமிழக விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. பினாமி தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. இந்த திசையில்தான் சவுகான் அரசு அடுத்தக்கட்டத்திற்கு சென்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது.
வறட்சியினால் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாததால் தமிழ விவசாயிகள் 200-க்கும் அதிகமானொர் தற்கொலை செய்து கொண்டபின்னரும் தமிழக அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகள் சொந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று சொன்னதே ஒரு படுகொலைதான். அந்த படுகொலையை சுட்டுக்கொல்வதன் மூலம் நேரடியாக சவுகான் அரசு செய்துள்ளது. இந்த சவுகான் ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தில்தான் விவசாயிகள் தற்கொலை என்பது அதிக அளவில் நடந்து வருகிறது என்பதுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
விவசாயத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலையில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க அரசு தீவிரமாக செய்துவருகிறது. அந்த வகையில் தன்னுடைய பசுவதை தடுப்புச்சட்டத்தைக் கொண்டுவந்து நாடு முழுவதிலும் விவசாயிகள் மாடு வளர்க்கும் தொழிலை ஒழித்துக்கட்டி விவசாயிகளை அழித்தும் வருகிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது; விவசாயத்திற்கான மானியங்களை நிறுத்துகிறது. மற்றொருபுறம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் மானியங்களையும் வரிச்சலுகைகளையும் வாரி வழங்குகிறது.
ஒரு புறம் ஜிஎஸ்டி மசோதாவை விவசாயிகளுக்காகக் கொண்டுவருவதாக சொல்லிக்கொண்டே விவசாயிகளை அழிக்கிறது. உண்மையில், ஜிஎஸ்.டியின் நோக்கம் விவசாயிகளை அழிப்பதை உள்ளடக்கியதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகளைக் கொன்றொழித்து வருகின்ற இந்த அரசுக் கட்டமைப்பு நம்மை ஆளும் தகுதியிழந்துவிட்டது; அதற்கான நியாய உரிமையையும் இழந்துவிட்டது. அடிப்படை கோரிக்கைகள், நியாயமான உரிமைகள் எல்லாவற்றையும் பயங்கரவாத செயல்பாடுகளாக சித்திரிக்கும் இந்த அரசுக்கட்டமைப்பை இனியும் சகித்துக் கொள்ள வேண்டுமா? உண்மையில், நடப்புகள் எல்லாம் உழைக்கும் மக்களாகிய விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் மற்றும் சிறுதொழில் புரிபவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரான, ஆக அதிகபட்ச கொடுமைவாய்ந்த, பாசிச கொடுங்கோல் ஆட்சி. இதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டு, உரிமை கோரிய விவசாயிகளைச் சுட்டுக்கொன்ற ஆர்.எஸ்.எஸ். சவுகான் அரசு! ஆகையால், இந்த கட்டமைப்பை தூக்கியெறிவதே மாற்று! இதில் முதலிடம் வகிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி கும்பலை விரட்டியடிப்பதே உடனடி தேவை!
விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் பேரழிவு. அனைத்து மக்களும் ஒன்று திரளுவோம். விவசாயியை வாழவிடு… என்ற குரல் ஓங்கட்டும்!
மக்கள் அதிகாரம் : தருமபுரி மண்டலம். தொடர்புக்கு: 81485 73417
கோவை சித்தாபுதூர் பகுதியில் கடந்த 18.05.2017 அன்று அப்பகுதி டாஸ்மாக் கடையை மக்கள் அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசு இனி கடை திறக்கப்படாது என வாக்குறுதி அளித்து மக்களைக் கலைத்தது. இத் தகவல் அறிந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி மக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் காவல்துறை மக்களை எப்படியெல்லாம் பொய் வாக்குறுதி தந்து ஏமாற்றும் என்பதை எடுத்துச் சொல்லி போராட்டத்தைத் தொடரவது தான் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை மூட ஒரே வழி என உற்சாகப்படுத்தினர்.
அதை ஏற்றுக் கொண்ட மக்களும் கடையை மீண்டும் திறக்க முயற்சி செய்தால் போராட்டததை தொடருவோம் எனக்கூறினர். இந்நிலையில் 31.05.2017 அன்று மீண்டும் அதே டாஸ்மாக் கடையை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கினர். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டு “அண்ணா நாங்க தனலட்சுமி நகர்ல இருந்து பேசுறோம். கடைய திரும்ப தொடங்க சரக்கெல்லாம் கொண்டுவந்து எறக்குறாங்க” என போராட்டத்துக்கு உரிமையோடு அழைத்தனர்.
அச்சமயத்தில் தோழர்கள் அனைவரும் சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இத்தகவல் கிடைத்தவுடன் ம.க.இ.க, பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் தோழர்கள் திரண்டு சென்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
பிறகு பிற பகுதி மக்களும் அணிதிரட்டப்பட்டனர். பகுதி பெண்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையிலும் 15 நாளுக்கு ஒருமுறை வரும் குடிநீரை பிடிக்கும் வேலையைக் கூட விட்டு விட்டு கடையை மூடும் போராட்டத்துக்காக வந்தனர்.
மக்கள் கூட்டம் குறைவாக இருந்த போது இளைஞர்கள், பெண்களைச் சேரவிடாமல் கலைக்க முயன்ற போலீசு மக்கள் திரண்ட பின்னர் போராட்டத்தை சுத்தமாக கண்டும் காணாமல் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் போராட்டம் மேலிம் தீவிரமடைந்து சாலை மறியலாக மாறியது. அதன் பின்னர் மக்களின் முற்றுகை முக்கிய சாலையை நோக்கி சென்றது. இதனைக் கண்டு மேலும் பல மக்கள் போராட்டத்தில் இணைய ஆரம்பித்தனர். அதுவரை அலட்சியமாக இருந்த போலீசு பதறியடித்து ஓடோடி வந்தது.
தோழர்கள் முழக்கமிட்டதை மக்கள் தங்கள் முழக்கமாக மாற்றிக் கொண்டனர். அத்துடன் அவர்களாகவே மேலும் பல முழக்கங்களைப் போட ஆரம்பித்தனர். அதன் பின்னர் போராட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த தோழர்களை தனியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது போலீசு. எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசுங்கள் என தோழர்கள் அறிவித்துவிட்டனர்.
அப்போது சீருடையில்லாமல் இருந்த போலீசு ஒருவர் நேரடியாக மக்களை மிரட்டும் தொனியில் “மக்கள் அதிகாரம் உங்களை தவறான பாதைக்கு தூண்டுகிறது நீங்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்” எனக் கூறினார். நாங்கள் தான் அவர்களை அழைத்தோம் எங்களை யாரும் தூண்டிவிடவில்லை என மக்கள் பதிலளித்தனர். சரி எதுவானாலும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என மீண்டும் கூறியது போலீசு. மக்களோ நாங்கள் ஏன் கலெக்டரைப் போய் சந்திக்க வேண்டும்? அவரை வரச்சொல்லுங்கள். பலமுறை மனு கொடுத்துப் பார்த்துவிட்டோம் என பதிலடி கொடுத்தனர்.
போராட்டத்தில் முதியவர் ஒருவர் அன்றாடங்காய்சியான எங்கள் இடத்தில் டாஸ்மாக்கை திறக்கும் அரசு அதையே கலெக்டர் ஆபிசுலயோ அல்லது போலீஸ் ஸ்டேசன்லயோ கடைய திறக்கிறது தானே எனக் கேட்டார். வயதில் முதியவர் என்று கூட பார்க்காது அவரை “என்ன லூசு மாதிரி பேசுற?” என அவமானப்படுத்தியது போலீசு.
போராடும் மக்களைப் பார்த்தால் உங்களுக்கு லூசு மாதிரி தெரிகிறதா? என தோழர்களும் மக்களும் போலீசை அம்பலப்படுத்தினார். மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுவதை பொறுக்கமுடியாது போலீசு மக்களைத் தாக்கத் தொடங்கியது.
மக்களிடம் இருந்து தோழர்களைப் பிரிக்க முயன்று புமாஇமு தோழர் வினோத்தை குறிவைத்து கொடூரமாக தாக்க ஆரம்பித்தது. மக்கள் அவருக்கு அரணாக இருந்து அவர் மீது விழுந்த அடிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து தோழரைப் பிரித்து வண்டியில் ஏற்றிச் சென்றது போலீசு.
இதையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து இதெல்லாம் எடுக்காதே எனக் கூறியுள்ளனர். அதை மீறி போராட்டத்தை பதிவு செய்து கொண்டிருந்த ஒருவரது கேமாரா பேட்டரியை பிடுங்கியது போலீசு.
மக்களும் தோழர்களை கைது செய்து கொண்டு போன வாகனத்தின் பின்னாலே ஓடிச் சென்றனர். அதன் பின்னர் வாகனங்களை ஏற்பாடு செய்து காவல் நிலையம் சென்றனர். மக்களைப் பார்த்த போலீசு தோழர்களை விடுவிப்பதாக வாக்களித்தது. பின்னர் இரவு 12:00 மணிக்கு மேல் வழக்கு பதிவு செய்துவிட்டு விடுவித்தது. மக்களும் அதுவரை காத்திருந்து தோழர்களை அழைத்துச் சென்றனர்.
இறுதியாக அன்று மூடப்பட்ட தனலட்சுமி நகர் டாஸ்மாக் கடை இன்று வரை திறக்கப்படவில்லை.
திவாலான கிரீஸின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக தங்கள் மீது சுமத்தப்படும் புதிய சிக்கன நடவடிக்கைகளை (உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள்) எதிர்த்து இலட்சக்கணக்கான கிரீஸ் மக்கள் தலைநகர் ஏதென்சில் போராடி வருகின்றனர். தனியார் முதலாளிகளின் கடனானது தேசத்தின் கடனாகிப் போனதால் மக்களுக்கான நலத்திட்டங்கள் பறிக்கப்பட்டிருப்பதுடன் ஐரோப்பாவிலேயே மிக மோசமான பொருளாதாரச் சிக்கலில் சிக்க வைக்கப்பட்டுள்ளது கிரீஸ்.
ஸ்பெயின் அரசின் சிக்கன நடவடிக்கைளுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல் போராடி வரும் ஸ்பெயின் மக்களைப் பார்த்து கிரீஸ் மக்களும் போராடுகிறார்கள். நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவன ஊழியர்கள், அரசு மருத்துவமனை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கிரீஸ் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுகின்றனர்.
2017, மே மாதம் 17ஆம் தேதி ஏதென்சில் நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வர்க்கப் பின்னணியை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அரசின் சிக்கன நடவடிக்கையை “காட்டுமிராண்டித்தனமானது” என்று விமர்சித்திருக்கிறது கிரேக்க பொதுத்துறை ஊழியர்கள் சங்கம். ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை கொள்ளையடிக்கவும் பொதுச்சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களையும் இந்த நடவடிக்கைகள் கடுமையாக பாதித்திருப்பதாக கூறுகிறார் கிரீஸ் தொழிலாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தானோஸ் வெசிலோபுலோஸ். 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிதியுதவி என்ற பெயரில் வழங்கப்பட்ட கடன் சுமார் 15 இலட்சம் வேலையற்றோரைத்தான் உருவாக்கியுள்ளது என்கிறார் அவர்.
கிரீஸை கைத்தூக்கி விடுவதற்காக அளிக்கப்படும் நிதியுதவிகளில் ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளால் 95 விழுக்காடு விழுங்கப்பட்டு வெறும் 5 விழுக்காடு மட்டுமே கிரீஸ் பொருளாதரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“எங்களது வாழ்க்கையை அழிக்க அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்ற உறுதியான ஒரு செய்தியை கிரீஸ் அரசிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் கூற விரும்புகிறோம்” என்று அனைத்துத் தொழிலாளர் இராணுவ முன்னணித் (PAME) தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் அலெகோஸ் பெராக்ஸிஸ் கூறுகிறார்.
17 மே 2017-ல் கிரீசின் போராட்டக் காட்சிகள்:
கிரீஸை கைத்தூக்கி விடுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஓய்வூதிய வெட்டு, வரி உயர்வு உள்ளிட்ட புதிய சிக்கன நடவடிக்கைகள் திணிக்கப்படுவதை எதிர்த்து நடைபெற்ற அமைதிப் பேரணியில் கிட்டத்தட்ட 12,000 மக்கள் கலந்து கொண்டனர்.
“ஒரு கிரேக்க காவலரின் வாழ்க்கை எவ்வளவு மதிப்பு மிக்கது?” என்று ஜெர்மனிலும் கிரீசிலும் எழுதப்பட்ட பெரிய பதாகையை, மத்திய ஏதென்சில் இருக்கும் லைக்காபெட்டஸ் ஹில்லில் தொங்க விட்டுள்ளனர் கிரீஸ் காவலர் தொழிற்சங்கத்தினர்.
பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த பொதுச்சேவைகளை நிறுத்தி 24 மணி நேர பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர் கிரீஸ் தொழிலாளர்கள்.
கிரீஸ் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்துத் தொழிலாளர்கள் இராணுவ முன்னணியைச் (PAME-Panergatiko Agonistiko Metopo) சேர்ந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கிரீஸின் வங்கித் தலைமையகத்தை கடந்து செல்லும் காட்சி.
போராட்டத்தில் கலவரத்தடுப்புக் காவலரை நோக்கி முகமூடியணிந்த ஒரு போராட்டக்காரர் குழல் துப்பாக்கியால் (projectile) சுடுகிறார்.
கலவரத் தடுப்புக் காவல்துறையினரை எதிர்க்கின்றனர் போராட்டக்காரர்கள். அதே நேரத்தில் கிரீஸ் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் காவலர்களை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலப்பத்து இளைஞர்கள் கற்களை எறிந்ததுடன் குழல் துப்பாக்கியாலும் சுட்டனர்.
போராடும் இளைஞர்களுக்கும் கிரீஸ் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் கண்ணீர் புகைக்குண்டுகளால் பதில் தாக்குதல் நடத்தியது காவல்துறை.
போரட்டக்காரர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை எறிந்ததால் தலைநகரின் தெருக்கள் விரைவில் போர்க்களமாகின.
கருப்பையில் சிசுவை வைத்து எப்படி தாய் பாதுக்காக்கிறாளோ அது போலவே வட தமிழகத்தில் ஓடும் பாலாறும் தன்னுடைய மணல் வயிற்றினுள் நீரைப் பாதுகாத்து அதை கால்வாய்களாகவும் ஏரிகளாகவும் குளங்களாகவும் கிணறுகளாகவும் ஊற்றுகளாகவும் பிரசிவித்திருக்கிறது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருக்கும் நந்தி மலையில் உருவாகி கர்நாடகாவில் 93 கிலோமீட்டரும் ஆந்திரப்பிரதேசத்தில் 23 கிலோமீட்டரும் பயணம் செய்கிறது பாலாறு. பின்னர் வேலூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக தமிழக எல்லைக்குள் 222 கிலோமீட்டர் பயணம் செய்து கிட்டதட்ட 2,50,000 ஏக்கர் பாசனப்பரப்பைக் கடந்து காஞ்சிபுர மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையோரத்தில் சாக்கடையாக ஓடும் பாலாறு
பாலாற்றில் இருந்து இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் இராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் சென்னைக்கு உறிஞ்சப்படுகிறது. அதே போல பாயலூர் மற்றும் ஆயப்பாக்கம் கிராமங்களில் இருந்து கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் 1226 தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டத்தின் பங்கு 37 விழுக்காடு ஆகும். தோல் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சையனைடு, பாதரசம், குரோமியம் உள்ளிட்ட வேதியியல் இராசயனக் கலவைகள் நேரடியாக பாலாற்றில் கலக்கின்றன.
பாலாற்றங்கரையில் பினாயூர் படுகை 30 அடிக்கும் ஆழமாக மணல் எடுக்கப்பட்டு சகதியாக மாறிய பாலாறு
மறுபுறம் மணல் மாஃபியா கும்பல் பாலாற்றின் வழித்தடம் 222 கிலோமீட்டர் முழுவதையும் 30 அடி ஆழத்திற்கு பெயர்த்தெடுத்து விட்டனர். இதற்கெதிராக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களாலும் சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியாலும் வேறு வழியின்றி தனியார் மணல் ஏலத்தை இரத்து செய்து இனி நியாயமான தேவைகளுக்காக மட்டுமே மணல் பயன்படுத்தப்படும் என்று ஒரு சட்ட ஆணையை பிறப்பித்ததார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் முப்பதடி ஆழத்திற்கு மேல் மணலை தோண்டி பாலாற்றை நாசம் செய்து டாஸ்மாக்கை போல மணல் கொள்ளையை அரசுடைமையாக்கியது அ.தி.மு.க அரசு. சட்டப்படி 3 அடிதான் மணல் அள்ள வேண்டும். ஆனால் அள்ளப்பட்டதோ 20 அடிக்கு மேல். இதை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவும் உறுதி செய்தது. ஆனால் அன்றைய தி.மு.கவின் அமைச்சர் துரைமுருகனோ 3 அடிக்கு மேல் மணலே எடுக்கவில்லை என்று சாதித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆர்.வேலு இரயில்வேத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இங்கு இரயில் நீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பிறகு அதிமுக ஆட்சியில் பாலாறு வரலாறு காணாத வகையில் மணற்கொள்ளையர்களால் சிதைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் உள்ள வாலஜாபாத் இளையனார் வேலூர் ஆற்றுப்பாலம் நூறடி தூரத்திற்குள் ஆறுக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள்
காவிரி, பாலாறு, பேரியாறு, சிறுவாணி, தாமிரவருணி என தமிழகத்தின் நீர் வளங்கள் பெப்சி கோக் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களாலும் தமிழகத்து ஓட்டுக்கட்சிகளாலும் மணல் மாபியாக்களாலும் சூறையாடப்பட்டு விட்டது. தமிழகமே முன்னெப்போதும் கண்டிராத வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் வட தமிழகத்தின் காவிரி என்று அழைக்கப்பட்ட பாலாற்றுப் படுகையில் இரண்டு நாட்கள் நடைபயணமாக சென்று அதன் நீராதாரத்தை நம்பியிருக்கும் கிராம மக்களை சந்தித்தார்கள் வினவு செய்தியாளர்கள்.
கதிர், நடராஜ் – புஞ்சை அரசந்தாங்கல் – தினக்கூலி
நாங்க, இந்த பாலாத்தங்கரையில தான் பொறந்தோம். சின்ன வயசுல ஆத்து நெறைய… கண்ணாடி மாறி தண்ணி போவும். அப்பவும் கைல தோண்டிய புது ஊத்து தண்ணிய தான் குடிப்போம். தேங்காத்தண்ணிய போல இருக்கும்.
இப்போ 150 அடி 200 அடி போர் தோண்டுனாக் கூட தண்ணி இல்லை. ஆடு மாடுக்கு தண்ணி இல்லாம கும்பல் கும்பலா ஊர் ஜனங்க வெளியூருக்கு நாடோடியா போய்ட்டாங்க. வீடெல்லாம் இங்க ஆளில்லாம கெடக்குது. அப்போ ஆத்தங்கரை எல்லாம் 20, 30 ஏக்கரில் மாந்தோப்பு இலுப்பை தோப்பு மண்டி கெடக்கும். ஆனா இப்போ பன மரம் கூட காஞ்சி போச்சு.
வளத்தோட்டம் கதிர்,நடராஜ பாலாற்றில் இருந்து வளத்தோட்டத்திற்கு வரும் பாசன கால்வாய் பல தலைமுறையாக சித்திரை வெய்யிலிலும் வற்றாத கால்வாய் இன்று காய்ந்து கிடக்கிறது
இங்கு ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரு பெரிய ஏரி கண்டிப்பாக இருக்கும். எல்லா ஏரிக்கும் தண்ணி வர காவா… அதுல இருந்து தண்ணி போற தாங்கல்… இப்படின்னு ஊரே தண்ணி, காவா, ஏரினு பிணைஞ்சு இருக்கும்.
குடிக்கிற தண்ணி ஒரு மணி நேரம் கூட இப்போ கொழாயில வரதில்லை. பூமி காஞ்சி போச்சு. அப்போல்லாம் வெய்யில்ல ஆறு வத்தி போனாலும் அங்கிருக்கும் ஆத்துக்கண்ணுங்கல்ல எந்த காலத்துலயும் தண்ணி வத்தாது. எங்க எடத்துல பத்து கண்ணு, மூணு கண்ணு, ஒத்த கண்ணுனு அதுல எப்பவுமே தண்ணி இருக்கும். அதெல்லாம் வெள்ளத்தின் போது 40 50 அடின்னு இயற்கையா விழுந்த பள்ளம். வெய்யில் காலத்துல அதுல தான் நீச்சல் அடிப்போம்.
ஒவ்வொரு ஆத்துகண்ண சுத்தியும் ஜம்பு கோர, காடு மாறி வளரும். அத அறுத்து இங்க இருக்குறவங்க பாயி மொடைவாங்க. அசுரை, கெண்ட, வெராலு, வெலாங்கு, ஜிலேபினு பல மீனுங்க ஜம்புல வளரும். வெய்யுலுல ஆத்துக்கண்ணுல குளிச்சுட்டு மீன புடிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவோம்.
அப்போ இங்கஃ பிரிட்ஜ் எல்லாம் இல்லை. தரைப்பாலம் தான் உண்டு. மழக்காலத்துல கண்ணுக்கு எதுக்க தெரியுற காஞ்சிபுரத்துக்கு கூட போக முடியாது. வெள்ளம் ரெண்டு கிலோமீட்டர் அகலுத்துக்கு கர பொரண்டு ஓடும். ஆத்தர அவசரத்திற்கு காஞ்சிபுரத்திற்கு போகணும்னா கூட மாமண்டூர், வடால் வழியா 40 கிலோமீட்டர் சுத்திகினுதான் போக முடியும். இருந்தாலும்… இப்போ இருக்குற கஷ்டம் அப்போ இல்லை.
சின்ன வயசுல நாங்க வீட்டில இருந்த நேரத்த விட ஆத்துல ஆடுனது தான்.. அதிகம். மழைக்காலத்துல வெள்ளம் பொரளும் போது அஞ்சு கிலோமீட்டர் எட்ட வெள்ளம் வரும்போதே, ஆறு எங்களை எச்சரிச்சு வீட்டுக்கு தொரத்திடும். மணல்ல விளையாடுற எங்க காலு, சேத்துல எறங்குற மாறி கீழ எறங்கும். அப்பவே எங்களுக்கு தூரத்தில வெள்ளம் வருதுனு… தெரிஞ்சிடும். நாங்க எல்லாரும் விழுந்தடிச்சு வேகவேகமா கரை ஏறுவோம். அதுக்கு கொஞ்ச நேரத்துல வெள்ளம் எங்க பின்னாடியே வரும்.
புஞ்சை அரசந்தாங்கல் கதிர்,நடராஜ: அப்போல்லாம் வெய்யில்ல ஆறு வத்தி போனாலும் அங்கிருக்கும் ஆத்துக்கண்ணுங்கல்ல எந்த காலத்துலயும் தண்ணி வத்தாது
எங்க தாத்தா எல்லாம் , டேய், காலுக்கு கீழ பனமரம் உயரம் மணலு இருக்குடா அதுல தாண்டா இப்போ வெள்ளம் போகுது. அடுத்து மேல் வெள்ளம் வருண்டா வாங்கடானு கத்துவாரு.. இப்போ சாதாரணமா 50 அடி ஆழத்துக்கு அந்த மணல பல கிலோமீட்டருக்கு வாரிட்டாங்க. அதுக்கு அப்பால ஆறுன்னு எங்க இருக்கும்.
அந்த கீழ் ஊத்து தண்ணிய தான் நாங்க காவாயாக்கி அந்த காலத்துல விவசாயம் பண்ணுவோம். அந்த தண்ணியில எங்க முகமே தெரியும். அவ்ளோ.. தெளிவா இருக்கும்.
விவசாயம் பண்ணுன எங்க குடும்பத்து பசங்க இப்போ ஷூ கம்பெனிக்கும் தோல் கம்பெனிக்கும் தினக்கூலியா போகுதுங்க. வீட்டுக்கு பின்னால கடல் மாதிரி காவாய் போகும். அங்க தான் நாங்க குளிப்போம். துணித் துவைப்போம். அதுதான் எங்களுக்கு விவசாயத்திற்கான பாசனக்காவாய். அது எந்த காலத்துலயும் வத்தாது. இப்போ அத பாருங்க முள்ளு மண்டிக் கிடக்குது.
பாலகிருஷ்ணன் – ஆடு மேய்ப்பவர் – குருவி மலை
மூணு போகம் விளைஞ்ச பூமி இது. முழங்காலு சேத்துல நடந்த இடம் இது. இப்போ பாருங்க இது பொட்டல் காடு மாறி இருக்குது. இப்போ ஒரு போகம் அறுக்குறதே பெரும்பாடா ஆயி போச்சு. அதுக்கே பம்புசெட்டு இருந்தா தான் முடியும். இப்போ ஆடு மாட்டுக்குக் கூடத் தண்ணி இல்லாம நாடோடி மாறி அலையுறோம். இந்த வெய்யுலுல முன்னெல்லாம் ஒருபக்கம் விதைப்பு மறுபக்கம் அறுப்புனு வாழ்ந்தோம்.
பாலாறு பாசன நிலம் ரியல் எஸ்டேட்டாக மாறிய குரூரம் மூணு போகம் விளைஞ்ச பூமி இது. முழங்காலு சேத்துல நடந்த இடம் இது.
மழக்காலத்துல இந்த பூமி வேற மாறி இருக்கும். மழக்காத்துன்னு வெடவெடன்னு இருக்கும். ஒருக்கைல பொறந்த ஆட்டுக்குட்டி மறுக்கைல ஜம்புகூடைனு மழையில திரிவோம். ஆடு ஒருப்பக்கம் நாங்க ஒருபக்கம்னு தீராத மழையில மாட்டிக்குவோம்.
மூணு மாசம் மழை பெஞ்சாலும் மொத்த வருசமும் நாங்க சொகமா இருந்தோம். ஏரித் தண்ணி காவாத்தண்ணி வத்தாம இருந்தது தான் அதுக்குக் காரணம். இப்போ அந்த ஏரியும் காவாவும் எங்க இருக்குனு தேடுறோம்.
வருசத்துல ஆறு மாசம் கடன் வாங்கி சாப்பிடுவோம். அடுத்த ஆறு மாசம் மகசூல வெச்சு அதை அடைச்சுடுவோம். அத நம்பி கடன் குடுப்பாங்க.
இந்த ஆடுங்க தான் இதுநாள் வரைக்கும் எங்க குடும்பத்தக் காப்பாத்துது. ஆடு மேச்சு அஞ்சு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்துட்டேன். பையனையும் இப்போ கல்லூரி படிப்பு படிக்க வக்கிறேன். இப்போ பொண்ணு வயித்து பேத்திங்களுக்கும் இந்த ஆடுங்கள வெச்சு தான் எல்லாம் செய்யறேன்.
நூறு ஆடுங்க எப்பவுமே எங்கால சுத்தி சுத்தி வரும். மூணு மாசத்துக்கு ஒரு தடவை இதுங்க போடுற குட்டிங்களை வெச்சு தான் இவ்ளோவையும் செஞ்சேன். கட்டிக் குடுத்துட்டாலும் அப்பப்போ தாய்தகப்பனு ஓடியாராங்க. நாம இருக்குற வரைக்கும் தான் செய்ய போறோம்.
வெள்ளாம இல்லாம போனதால மனுசனுக்கு மட்டும் இல்ல ஆடுமாட்டையும் ஆயிரம் நோயோட தான் வளக்குறோம். மனுசனுக்கு ஹார்ட் அட்டாக் வர மாறியே ஆடுங்களும் அப்பப்போ விருவிருனு இழுத்துக்கிட்டு மயக்கம் போட்டு கிழே விழுந்துருதுங்க. மாட்டு டாக்டர வெச்சு அதுகளையும் காப்பாத்த வேண்டி இருக்கு.
முனிரத்தினம் – வளத்தோட்டம் – விவசாயி
அஞ்சு ஏக்கரு நெலம் எனக்கு. ஒரு ஏக்கரு பயிர் வக்கிறதே இப்போ பாடாப்போவுது…. இப்போ இங்க ஆறா இருக்குது? பாலாறுனு இத சொல்ல முடியுமா? வெறும் வேலிக்காத்தானா (சீம கருவேல மரம்) மண்டிக் கிடக்குது. மனசெல்லாம் நோவுது.
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள பாலாற்றுப் பாலம் சீமகருவேல மரமாக மண்டிய அவலம்
ஆத்து மணல கருணாநிதி ஆட்சில வார ஆரம்பிச்சாங்க. அம்மா ஆட்சியில எல்லாத்தையும் வாரி ஆத்தையே சமாதி கட்டிட்டாங்க.
அப்போ எல்லாம் ஆத்து மணலை யாருனா பக்கத்துல வீடு கட்டனும்னா தான் எடுப்பாங்க. நாங்க அதுக்கு ஒரு வண்டி ஒரு அம்பது அறுவதுனு ஓட்டறதே பெருசு. இப்போ எட்டு டயரு வண்டி பன்னெண்டு டயரு வண்டினு ஜே.சி.பிய சுத்தி சுத்தி வெச்சு மொத்தமா வாரிட்டாங்க. வேலிக்காத்தான் முள்ளால ஆத்தையே மூடிட்டு போய்ட்டாங்க.
இருபது வருசத்துக்கு முன்ன கூட நெலம இவ்ளோ மோசமா இல்லை. அப்போ இந்த காச்ச காலத்துல எங்க ஊருகாரங்க எல்லோரும் சேர்ந்து ஆத்துல கொளஞ்சி அடிப்போம் (ஊத்து வாய்க்கால் தோண்டுவது). அதுக்கு ராவோட ராவா எங்க ஊரு பங்குக்கு என்பது பேரு ஆத்துக்கு போவோம். மாடு பூட்டி பலக மாட்டி வாய்க்கா எடுப்போம். இதே மாதிரி ஒவ்வொரு ஊருக்காரங்களும் இந்த காவாய தொடர்ச்சியா தொண்டுவாங்க.
இந்த காவால ஊத்தெடுக்குற தண்ணி மேல்மடைல இருந்து கடைமடை வரைக்கும் ஒரு ஏக்கர் நிலம் ஒரு மணி நேரத்துல பாயும். அப்படி இருந்துச்சு தண்ணி வளம். ஆறு பாத்தா காஞ்சி தான் இருக்கும். ஆனா என்ன மந்திரமோ தெரியாது தண்ணி மட்டும் வத்தாது. இப்போ மணல் போனதிலிருந்து ஆறே செத்துப் போச்சு.
முனிரத்தினம் வளத்தோட்டம் விவசாயி ஆத்து மணல கருணாநிதி ஆட்சில வார ஆரம்பிச்சாங்க
இந்த காச்ச காலத்துல தான் நாங்க நாத்து நடுவோம். குள்ளகார், மோஷம், கிச்சிடி சம்பா, பிசினி இப்படி எடத்துக்கு ஏத்த மாறி ஆளுக்கொரு நெல்லப் போட்டு பயிர் அறுப்போம்.
இந்த ஆத்துல ஒரு முள்ளு செடிய பாக்க முடியாது. இப்போ ஆறே முள்ளு மண்டி கிடக்குது. என்னத்த சொல்ல.
தனசேகரன் – புஞ்சைஅரசந்தாங்கல் – மாணவர்
அம்மா அப்பா பிரிந்ததால் அப்பா வழிப் பாட்டியின் பாதுகாப்பில் இருக்கும் மாணவர் தனசேகரன்.
நான் இப்போ படிக்கிறத நிறுத்திட்டேன். போன வருஷம் ஓரிக்கையில் இருக்கிற சி.பி.டி.லீ(C.P.T.LEE) செங்கல்வராயன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் எடுத்து படிச்சேன். செமஸ்டர் பீஸ் கட்ட முடியாமல் பாட்டி படிப்பை நிறுத்திருச்சி. இந்த வருஷம் பச்சப்பாஸ் கல்லூரியில் சேர்க்க சொல்லி பாட்டிகிட்ட சொல்லி இருக்கேன். பணம் இல்ல என்ன பண்றதுன்னு தெரியலனு சொல்லுது பாட்டி. எனக்கு Bsc zoology படிக்கணும்னு ஆசை. பாட்டி நூறு நாள் வேலைக்கு போகுது. அதுக்கே இப்போ வேலை இல்லை அதனால் பணம் கிடைக்கலைன்னு சொல்லிடுச்சு.
தனசேகரன் புஞ்சைஅரசந்தாங்கல் மாணவர் எனக்கு Bsc zoology(விலங்கியல்) படிக்கணும்னு ஆசை. பாட்டி நூறு நாள் வேலைக்கு போகுது
விஜயா – மாடு மேய்ப்பவர் – வளத்தோட்டம்
இங்க கீழ் ரோட்டுக்கும் மேல் ரோட்டுக்கும் இடையில இருக்குற இரண்டு கிலோமீட்டர் இடத்துல 25 கவர்மென்ட் மோட்டார்ல… தண்ணி எடுக்குறாங்க. அந்த தண்ணி எங்களுக்கு கிடையாது. மெட்ராசுக்கு போகுது. ஒரு ஆளே உள்ள போற அளவு பைப்புல தான் தண்ணி எடுக்குறாங்க. தண்ணி இங்க காயாம என்ன பண்ணும். மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
விஜயா தாத்தனாஞ்சேரி எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல
இருந்த ஏரியும் காவாயும் சிறுத்துப் போயி தூந்துப் போச்சு. ஏரி இருந்த தடமே இப்போ காணும். அப்புறம் தண்ணி எங்க நிக்கும்.
எனக்கு ரெண்டு பொம்பள குழந்தைங்க. உள்ளூரு கவர்ன்மென்ட் பள்ளிக்கூடத்துல மூணாவதும் நாலாவதும் படிக்குதுங்க. எங்க ஊட்டுக்கறாரு விவசாயம் பாத்தவரு இப்போ வேலை இல்லாம சென்ட்ரிங் வேலை பாக்குறாரு. வேலை செய்ய முடியல உடம்பு கஷ்டமா இருக்குனு சொல்றாரு. என்ன பண்றது கொழந்தைங்க இருக்குதே.
சோத்துக்கு வழி இல்லனாலும் நோய்க்கு கொறச்சல் இல்லை. சக்கர நோய்க்கு பத்து வருசமா மாத்திர சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். காஞ்சிபுரம் கவர்ன்மென்ட் ஆசுபத்திரியில மாசம் ஒருவாட்டி மாத்திரை வாங்கி வரேன். பால் மாடு வெச்சு இருக்கேன்னு தான் பேரு. கொழந்தைங்களுக்கு ஒரு வாய் காப்பி போட்டு கொடுக்குனும்னா கூட கணக்கு பாப்போம். ஏன்னா விக்கற பாலு குறைஞ்சுடும். அத வெச்சு மாட்டுக்கு வக்கபுல்லு வாங்குறதா இல்ல நாங்க சோறு சாப்புடறதா?
தேவராஜன், மேக நாதன், பழனி, சாந்தமூர்த்தி, இரவி, தமிழினி – திருமுக்கூடல் பாலாற்றுத் தடுப்பணைக்கான 50 கிராம கமிட்டிக் குழு முன்னோடிகள் :
இந்த அமைப்பு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது, வட்டார எம்.எல்.ஏக்களை சந்திப்பது, மனு கொடுப்பது, அதிகாரிகளிடம் முறையிடுவது என்று படிப்படியாக இயக்கமெடுத்து பின்னர் அப்பகுதியில் ஆத்தோர கிராமத்தில் இயங்கிய மணல் குவாரியை மக்கள் போராட்டத்தின் மூலம் மூடியது.
திருமுக்கூடல் பாலாற்றுத் தடுப்பணைக்கான 50 கிராம கமிட்டிக் குழு முன்னோடிகள் அரசும் அதிகார வர்க்கமும் வெறும் பத்து கோடி மட்டுமே செலவுள்ள திருமுக்கூடல் தடுப்பணைக் கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை
அதற்கு அடுத்து பாலாற்று படுகை நிலத்தடி நீரை அதிகப்படுத்தவும் வெள்ளக்காலங்களில் நீர் வழிந்தோடுவதை தடுக்கவும் தடுப்பணை கட்டும் கோரிக்கைகளை முன் வைத்தது. அதற்காக கல்லூரி மாணவர்களிடம் ஓவியப் போட்டி, கட்டுரை எழுதுவது, புத்தக வெளியீடு, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, ஊர்வலம், கிராம கூட்டங்கள் என்று பல வழிகளில் இயக்கம் போராடியது.
இதற்கு மக்கள் சிவில் உரிமை கழகம், வட்டார ஆசிரியர் – மாணவர்கள் அணி, சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர் வீரப்பன் இவர்கள் உதவியுடன் ஆற்று மணல் கொள்ளையை ஊடகங்களில் வெளிப்படுத்தியது.
கடந்த பத்தாண்டுகளில் பாலாற்று பாசனப் பரப்பு குறைந்து வருவதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புள்ளி விவரங்களாக சேகரித்து மக்கள் முன் வைத்தது. இதனால் பாலாறு கண்ணெதிரே அழிவதை உணர்ந்த 150 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்கள் மணல் அள்ளுவதற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி அரசிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.
பாலாறு செய்யாறு வேகவதி ஆறு சங்கமிக்கும் திருமுக்கூடலில் இருந்து சென்னைக்காக உறிஞ்சப்படும் பாலாறு
இவர்களின் சட்டபூர்வ தொடர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ச்சியாக பாலாற்று மக்களுக்கு துரோகம் இழைத்தன. வெறும் பத்து கோடி மட்டுமே செலவுள்ள திருமுக்கூடல் தடுப்பணைக் கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. மரணத்தில் இருக்கும் பாலாற்றின் கடைசி நீரை உறிஞ்சும் செய்யாறு சிப்காட், ஸ்ரீபெரும்பதூர் சிப்காட், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டுகளில் இருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய சமூக நல நிதியை அரசிடம் முறையாக கொடுக்காமல் தாங்களே பூங்கா கட்டுவதாகவும் பொதுப்பணிகள் செய்வதாகவும் ஏமாற்றுகின்றன. இந்த நிதியே பலத் தடுப்பணைகள் கட்ட போதுமானது என்று பலமுறை எடுத்துக்காட்டியும் அதிகார வர்க்கம் பொருட்படுத்தவில்லை.
இதற்கு மாறாக திருமுக்கூடலில் இரயில் நீர் திட்டத்தின் கீழ் ரயில்வேத்துறைக்கு மேலும் பல இராட்சத குழாய்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது அரசு. இதற்குத் தேவையான நீராதாரத்திற்கான படுக்கை அணையை(Bed Dam) கட்டி அதை தடுப்பணை கட்டியதாக கணக்கு காட்டி ஏமாற்றியது.
முத்தாள், நடராஜன், காத்தவராயன், ராஜேந்திரன், கண்ணையா – இவர்கள் அனைவரும் வாலாஜாபாத் அருகே பாலாற்றுக்கரையில் உள்ள நெய்குப்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள்.
நடராஜன்:
நாங்க எல்லாருமே பதினைஞ்சு வயசுல இருந்து ரைஸ் மில்லுல மூட்ட தூக்குற கூலிங்க. நெல் அவிக்கிற வேலையும் செய்வோம். சின்ன வயசுல பாலாத்து தண்ணிய கடந்து தான் ரைஸ் மில்லுக்கு வரணும். ஒத்தையா எங்களால வர முடியாது. அதனால நாங்க ஒருத்தருக்கொருத்தர் கைகோத்து தண்ணிய கடந்து வருவோம். இன்னும் வெள்ளம் பொறன்டா நாலு பானைய நாலு மூலைக்குக் கட்டி அதுல கொஞ்சம் மணலக் கொட்டித் தெப்பம் கட்டுவோம். அத புடிச்சிகினு தான் கரைய கடந்து வேலைக்கு வருவோம்.
வீட்டுக்கு ஒரு ஆளுனு நாங்க தோண்டுன புளியம்பாக்கம் காவாய் இக்கரை காவா, அங்கம்பாக்கம் காவாய் அக்கரை காவாய். அது தான் எங்க ஊரு விவசாயத்த கவனிச்சுகிது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் பாலாற்றுக்கு அக்கரையில் உள்ள நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்த நெல் மண்டித் தொழிலாளி நடராஜன்
தண்ணி தேவாமிர்தம் மாறி இருக்கும். ஆத்துல காவாய் எடுக்குறதுக்கு மாட்டப் பூட்டி கொளஞ்சி அடிப்போம். அதுக்கு அப்பால பெரம்ப பூட்டி தண்ணி காவாய சீர் பண்ணுவோம். வேலைக்கு வராதவங்களை ஒரு தலக்கட்டுக்கு இவ்ளோன்னு அபராதம் போடுவோம்.
மணல ராவும் பகலும் லாரி வெச்சு அள்ளி ஆத்தையே தூத்துட்டாங்க. இங்க விவசாயமே இல்லை. எங்களுக்கு இந்த ரைஸ் மில்லு வேலை தான் சோறு போடுது.
வேலைக்கு காலைல ஏழு மணிக்கு வந்தா மறுநாளு மதியம் மூணு மணிக்கு தான் முடியும். நாங்க நாலு நாலு பேரு ஒரு குரூப்பா வேலை செய்வோம். நூறு மூட்டைக்குக் குறையாத நெல்லை தொட்டில கொட்டி தண்ணிய உட்டு அலசி மொதக்குற கருக்காய கையில வாரி சுத்தம் பண்ணுவோம். சுத்தம் பண்ணுன நெல்லை டேங்குல கொட்டி அதுல தண்ணிய ஊத்தி வேக வைப்போம்.
நெல்லு வேக நைட் ஒன்பது ஆவும். அத அப்படியே ஆவி கட்டிட்டு நைட் சாப்பாட்டுக்கு போயிடுவோம்.
மறுநாளு வெள்ளென காலைல வெந்த நெல்ல சிமெண்ட் களத்துலக் கொட்டிடுவோம். அதை காய வெக்க பல்லு பெரம்பு ஓட்டுவோம். பிறகு காலாலத் துளாவுவோம். துளாவுவுது விளையாட்டுக் கிடையாது. ரெண்டு காலையும் பாம்பு மாதிரி சரசரன்னு தேச்சுகினு முன்ன போகணும். இதால கோடு போட்ட மாதிரி தரை ஈரமும் காயும் அதால நெல்லும் காயும். இது அரை நாள் முழுக்க மாத்தி மாத்தி செய்யனும். சூடாலே காலே காப்பு காச்சி கெடக்குது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையின் பாலாற்று கரையோர கிராமங்களில் வாழும் நெல் மண்டித் தொழிலாளர்கள்
நெல்லு பதமா காஞ்சதும் கையில நிம்டி பாத்து அரிசி ஒடையாம இருக்கானு பாப்போம். பிறகு அதை அம்பாரம் ஆக்கி நைட் பூரா டம் கட்டுவோம். அப்போ தான் அரிசி உடையாம முழுசா இருக்கும். இல்லாட்டி ரவை மாறி அரிசி நொறிங்கிடும்.
பிறகு இதை மெசின்ல போட்டு அரிசியாக்குவோம். பிறகு சைஸ் வாரியா மூட்டையாக்கி லோட் ஏத்துவோம். முதலாளியோட கணக்கு மூட்டைக்கு 20 ரூபாய். இந்த ரெண்டு நாள் வேலைக்கு 600 கிடைக்கும். வருசத்துக்கு ரெண்டு மாசம் தான் முழுசா வேலை இருக்கும். மத்த நாளெல்லாம் பாதி வேலை பாதி கூலி கெடச்சாலே பெருசு.
இப்போ இங்க தண்ணி இல்ல விவசாயமும் இல்ல. எனக்கு வயசாயி போச்சு. எந்த வேலைக்கு போறதுன்னு தெரியல. பசங்கள எப்படி காப்பாத்த போறேன்னு தெரியல. இதுல இந்த இருமுடி செலவு மட்டும் குறையில. என்னாப் பாக்குறீங்க கட்டிங் செலவுதான் என்று சிரிக்கிறார்.
தாத்தனாஞ்சேரி தடுப்பணை – பாலாற்றுக் குறுக்கே செங்கல்பட்டுக்கு அருகே கட்டப்பட்ட தடுப்பணை (Bed Dam)
தாத்தனாஞ்சேரி தடுப்பணையை நேரடியாகவே சென்று பார்த்தோம். தடுப்பணை என்று சொல்வது வெறும் உடைந்த பாறாங்கற்களே. உடைந்த பாறாங்கற்களையே ஐந்தடி ஆழம் ஐந்தடி அகலத்துக்கு பள்ளம் தோண்டி கொட்டி இருக்காங்க. இரு கரைகளிலும் சுமார் முன்னூறு அடி நீளத்திற்கு நடைப்பாதை சிமெண்டு சிலாபு ஒட்டி வைத்து இருக்காங்க. இதற்கு பெயர் தான் தடுப்பனையாம். அதிகாரிகளின் இந்த அக்கிரமத்தை ஊர்காரர்கள் காரித் துப்புகிறார்கள்.
தாத்தனாஞ்சேரி தடுப்பணை நாங்க எங்க ஊரு கரையத் தாண்டி ரோட்டுக்கு போறதுக்கு பிரிட்ஜ் கட்டித் தரக் கேட்டோம்
தாத்தனாஞ்சேரி தடுப்பணையில் இருந்த விக்னேஷ் என்ற மாணவர் கூறியது:
நாங்க எங்க ஊரு கரையத் தாண்டி ரோட்டுக்கு போறதுக்கு பிரிட்ஜ் கட்டித் தர கேட்டோம். அவுனுங்க (அதிகாரிங்க) இங்க வந்து கல்ல கொட்டிட்டு நாங்க தடுப்பணை கட்டிட்டோம்னு சொல்றானுங்க. அதுமட்டுமல்லாமல் இனிமே இங்க பிரிட்ஜ் கட்ட முடியாதுனு சொல்றாங்க. கொட்டிட்டு போன ஆறு மாசத்துக்குள்ள வர்தா புயல் வந்துச்சு. கருங்கல்லு பாதி வெள்ளத்துல அடிச்சிகினு போய்டுச்சு. மீதி இருக்கறது தான் நீங்க பாக்குறது. இங்க தண்ணியும் இல்ல ஒன்னும் இல்ல. எதுக்கு இத செஞ்சாங்கனு தெரியல. அவங்க ஏமாத்தறாங்கனு மட்டும் எங்களுக்கு நல்லாத் தெரியுது.
இது கூட இங்கு பாலாற்றில் எடுக்கும் இரயில் நீருக்காக நீர் ஊத்துக்காக செய்த மோசடி. அதுக்கும் கூட இது பயன்படாது. எதையோ சொல்லிப் பணத்த அடிச்சுட்டாங்க.
***
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் நீராதாரத்தை நம்பி கிட்டத்தட்ட 1200 ஏரி குளங்கள் இருந்திருக்கின்றன. சென்னையின் கட்டுமான பணிகளுக்காகவும் பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகளுக்காகவும் வளமான திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலவளமும் நீர்வளமும் சுரண்டப்பட்டுவிட்டன. சென்னையின் செயற்கையான வளர்ச்சியில் பாலாற்றின் இயற்கை அழிவைக் காணலாம்.
பாலாறு என்பது வட தமிழகத்தின் இயற்கை வளங்களை குவித்து வைத்திருக்கும் ஒரு பேரூயிர். அது உருவாக்கிய வளங்களும், வாழ்க்கையும், சுற்றுச்சூழலும் ஏராளம். உலகமயத்தின் அகோரப் பசிக்காக இந்த ஆற்றின் மைந்தர்களும், அவர்கள் உருவாக்கிய வாழ்க்கையும் இன்று அழிந்து கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி ஜெர்மன் நாட்டிற்குச் சென்ற போது இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தது நினைவிருக்கலாம். அப்போது பிரியங்கா சோப்ரா குட்டைப் பாவாடையுடன் குந்தியிருந்து பிரதமருடன் தீவிர உரையாடலில் இருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
பிரதமருடனே இப்படி குட்டைப் பாவாடையுடன் இருக்கலாமா என்று சில பல கண்டனங்கள் வந்த பிறகு, வேறு வழியின்றி பிரியங்காவும் “நாங்கள் வீட்டிலேயே இப்படித்தான் சாதரணமாக இருப்போம்” என்று அம்மாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
ஒபாமா இந்தியா வரும் போது மோடி அணிந்த பத்து லட்ச ரூபாய் கோட்டும் பலருக்கு நினைவிருக்கலாம். அந்தக் கோட்டில் நரேந்திர மோடி என்ற பெயர் சரிகையாக பொறிக்கப்பட்டிருக்கும்.
விருதுநகர் மாவட்டம் அ.முக்குளத்தில் அபாயகரமான மருத்தவக்கழிவுகளை எரித்து நூற்றுக்கும் மேலான மக்களைக் கொன்று பொதுஅமைதியை சீர்குலைப்பதோடு, திருப்பூர், ஈரோடு மாவட்ட சாயப்பட்டறை மற்றும் வெளிநாட்டு மின்னணுக் கழிவுகளைப் புதைக்கும் புதிய நிறுவனத்தின் அனுமதியை ரத்துசெய்து ராம்கி நிறுவனத்தை விரட்டியடிக்கும் மாபெரும் பேரணி 25.05.2017 மாலை 5 மணியளவில் காரியப்பட்டி சந்தைக்கடை பஜார் பகுதியிலிருந்து பறைமுழக்கத்துடன் எழுச்சிகரமாகத் துவங்கியது.
ராம்கி நிறுவனம் மக்கள் மீது நிகழ்த்திய கோரத்தாண்டவத்திற்கு துணைபோகும் அரசையும், அதிகாரிகளையும் அம்பலப்படுத்தும்விதமாக விண்ணதிரும் முழக்கங்களோடு பேரணிசென்றது. சிறிய அளவிலான போராட்டங்களை மட்டுமே சந்தித்திருக்கிற காரியப்பட்டி நகர் இந்தப் பேரணியால் ஸ்தம்பித்தது. சாலையின் இருப்புறங்களிலும் உள்ள மக்கள் ஆர்வமாக பிரசுரங்களை வாங்கிப்படித்து ஆதரவு அளித்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் பேரணிசென்று பொதுக்கூட்ட மேடை அருகே முடிவுற்றது. சரியாக 6.30 மணிஅளவில் பொதுக்கூட்ட நிகழ்வு தொடங்கியது. 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500 மக்கள் கலந்து கொண்டனர்.இதில் பெண்கள் கூட்டமே அதிகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காரியாபட்டி ஒன்றிய செயலாளர் தோழர்.முருகன் வரவேற்புரை நிகழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ராம்கி நிறுவனத்தை மூடச்சொல்வது வெற்றுக் கோரிக்கையல்ல என்பதையும், மக்களின் கோரிக்கையின்பால் உள்ள நியாயத்தின் அடிப்படையில் கருத்துக்களை எடுத்துரைத்தார்
தோழர் வாஞ்சிநாதன்
26.6.2013 அன்று மக்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் பல்துறைவல்லுனர்கள் குழு ஆய்வுசெய்து 04.7.13 -இல் மாவட்டஆட்சியர் ராம்கி நிறுவனத்திற்கு சீல் வைத்ததையும், முறையாக நோட்டீஸ் அனுப்பாமல், சீல் வைத்ததால் நீதிமன்ற தடைக்கு அதிகாரிகள் வாய்ப்பு ஏற்படுத்தியதைக் குறிப்பிட்டார். அதன்பின் 2015-ஆம் ஆண்டு திருச்சுழியில், அருப்புக்கோட்டை RDOதலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தையும், மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதன் காரணமாக அதிகாரிகள் மூடஉத்திரவாதம் அளித்ததையும், ஏப்ரல் 9, 2015-இல் DRO முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் விளக்கி அதன்பின்னர் ஒருவருடமாக எந்த நடவடிக்கையும் எடுக்காததை அம்பலப்படுத்தினார்.
மக்கள் ராம்கி நிறுவனத்தின் வாகனங்களை சிறைப்பிடித்த பின்னர் இரண்டு சமாதானக்கூட்டம் நடத்தி அதிகாரிகள் நிறுவனத்தை இயக்கக் துடிப்பதையும், அதிகாரிகள் ராம்கியின் கைக்கூலிகள் என, அவர்கள் செயல்கள் மூலம் அம்பலப்படுத்தினார்.
மருத்துவ ஆவணங்கள், இறப்புவிகிதம், ஆய்வறிக்கைகள் அடிப்படையில் ராம்கி நிறுவனம் கொலைகார நிறுவனமே என ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேலும் 1998-ஆம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டுவாரியவிதிகள் மற்றும் 2016-இல் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி குடியிறுப்புப் பகுதியில் ராம்கி செயல்படுவது விதிமீறல்.மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிலேயே (2011-2012 & 2012-2013) ஆண்டுக்களுக்கான உரிமம் புதிப்பிக்கப் படாததையும் (ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை), கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி வாங்காததையும், நீர்நிலை அருகில் இருப்பது, மருத்துவ சான்றுகள் உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் நிறுவனம் என்பதையும், மேலும் ராம்கி நிறுவனத்தால் இப்பகுதியில் மக்கள் உயிருக்கும்,பொதுஅமைதிக்கும் பங்கம் ஏற்படுவதால் ராம்கி மற்றும் தமிழ்நாடு வேஸ்ட்மேனேஜ்மெண்ட் என்ற புதிய நிறுவனத்தையும் குற்றவியல் சட்டப் பிரிவு 133 -இன் கீழ் மூடவேண்டும் என்றார்.மேலும் நிறுவனம் சரியானது என்றால், அதை கலெக்டர் அலுவலகத்தில் வைத்துக் கொள்ளத் தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
மூன்று மாதத்திற்கு முன்பாக பாசிச மோடி அரசு, புதியநிறுவனத்திற்கு அனுமதி அளித்ததையும் அம்பலப்படுத்தி அரசு ராம்கி நிறுவனத்தை மூடவில்லையெனில் மக்களே ராம்கியைமூடி, இது வேற தமிழ்நாடு என்பதை நிரூபிப்பார்கள் என்றார். கூட்டத்தில் பங்கேற்ற மக்களும் தயார் என்றனர்.
விடுதலை சிறுத்தைகள் சார்பாக கண்டன உரை நிகழ்த்திய திரு இனியவன் அவர்கள் பேசும்போது ராம்கிநிறுவனத்தால் விவசாயம் அழிக்கப்படுவதையும், பல்வேறு நோய்த் தாக்குதலுக்கு மக்கள் உள்ளானதையும் கூறி கண்டித்தார்.
தமிழ்புலிகள் கொள்கை பரப்புச் செயலாளர் திரு கலைவேந்தன் அவர்கள் ராம்கிநிறுவனத்தால் மக்கள் பாதிக்கப்பட்டும், போராடியும் கூட, ஆளும்வர்க்கங்கள் மக்கள்நலனை கருத்தில்கொள்வதில்லை எனவும், மோடி அரசின் வஞ்சிக்கும் செயல்களையும் அம்பலப்படுத்தி, ராம்கியை மட்டுமல்ல BJP RSS-யையும் விரட்டியடிக்க போராட வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் அர்ச்சுனன் தனது கண்டன உரையில் ராம்கி நிறுவனத்திற்கு எதிராக நடந்த சமாதானக் கூட்டங்களில், மார்க்சிஸ்ட்கட்சி கலந்து கொண்டு பங்களிப்பு செய்ததை நினைவுகூர்ந்தார். திருப்பூர், ஈரோடு மற்றும் வெளிநாட்டு மின்ணனுக் கழிவுகளை இங்கு கொட்டுவதற்கு அனுமதியை மத்தியஅரசு கொடுக்கிறது எனில்இது நாடா? சுடுகாடா? எனக் கேள்வி எழுப்பினார். நீதிமன்றத் தடையாணை மூலமே ராம்கிசெயல்படுவதால், நீதித்துறையையும் அம்பலப்படுத்தியதோடு, கட்சிவேறுபாடுகள் கலைந்து ராம்கி நிறுவனத்திற்கு எதிராக போராட வேண்டிய தேவைகள் இருப்பதாகப் பேசினார்.
மதிமுக காரியப்பட்டி ஒன்றிய செயலாளர் திரு கலாமணி அவர்கள் ராம்கி எதிர்ப்பு போராட்டக் குழு அடுத்தக்கட்டமாக என்ன முடிவெடுத்தாலும் அதற்கு ஆதரவாக மதிமுக துணைநிற்கும் என முடித்தார்.அதிமுக(அம்மா) மற்றும் அதிமுக(புரட்சித் தலைவி அம்மா) கட்சியினரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு
இறுதியாக சிறப்புரையாற்றிய திமுகவின் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு தனது உரையில், அதிகாரவர்க்கத்தில் உள்ள அரசு அதிகாரிகள், தனிநபர் இலாபத்துக்கு ஆதரவாகவோ, அரசியல்வாதிகளுக்காகவோ, செயல்படாமல், மக்களுக்காகச் செயல்படவேண்டும் எனக் கண்டனம் செய்தார். அரசியலில் இரு துருவங்களாக உள்ள திமுக-வும், அதிமுக-வும் இக்கூட்டத்தில் இணைந்து கலந்து கொள்கிறது என்றால், இப்பிரச்சனையின் முக்கியத்துவத்தை அரசு உணர வேண்டும் என்றார்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எடுத்துரைத்த மருத்துவ ஆவணங்களை சுட்டிக்காட்டி, நோய்பாதிப்புகளை எடுத்துரைத்தோடு, ராம்கி நிறுவனத்திற்கு எதிராக சட்டசபையில் கவனஈர்ப்புத் தீர்மானம் கொடுத்து ராம்கி நிறுவனத்தை மூடவலியுறுத்தியதை சுட்டிக்காட்டியதோடு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக்கூறி, அதன்பின் புதியநிறுவனத்துக்கு அனுமதிக் கொடுத்து சிறப்பாக நடவடிக்கை எடுத்ததாகவும் அப்படியெனில், இந்த அதிகார வர்க்கம் யாருக்கானது எனக் கேள்வி எழுப்பினார்.
தாமரைக்குளம், பொட்டல்குளத்தில் சாயப்பட்டறை நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை எடுத்துரைத்தார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழக அளவிலும், தேசியத் தலைவர்களுடனும் பேசி ராம்கி நிறுவனத்திற்கு எதிரான பிரச்சனையை மாநிலப் பிரச்சனையாகவும், தேசிய பிரச்சனையாகவும் மாற்றித் தெருக்களில் இறங்கி போராடக்கூடிய முன்னெடுப்புகளைச் செய்வோம் என உறுதியளித்தார். ராம்கிநிறுவனத்தின் கதவுகள் நிரந்தரமாக மூடப்படவில்லை எனில் அதிக அளவில் மக்களைத் திரட்டி, முக்குளம் பகுதியை நெடுவாசலாக, மெரினாவாக, போராட்ட பூமியாக மாற்றி வெற்றி பெறச் செய்வோம் என நம்பிக்கையூட்டினார்.
அ.முக்குளத்தைசேர்த்தராம்கிஎதிர்ப்புபோரட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு தங்கப்பாண்டியன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து வந்திருந்த ஜனவரி 18 தைப்புரட்சி அமைப்பிற்கு ராம்கி எதிர்ப்பு போராட்டக்குழு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. இறுதியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் அனைத்துக்கட்சி பேரணி-பொதுக்கூட்டம் முடிவுற்றது. கூட்ட முடிவில் பெரும் நம்பிக்கையுடன் மக்கள் சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மோடி அரசின் மாட்டிறைச்சி தடை காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வர முடியாமல் வெறிச்சோடி கிடந்தது. பல மாட்டு வியாபாரிகள் இதனால் மாடுகளை வாங்கி விற்கவும் முடியாமல், வேலையிழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மாட்டு சந்தையில் அடிமாடுகளும் குறைந்த அளவே கொண்டுவரப்பட்டன. சந்தையில் இதை சார்ந்து தொழில் செய்யும் மற்ற வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இத்தடை வெறும் பசு புனிதம் என்று கூறும் மனுநீதி மட்டுமல்ல, இந்தியாவின் மாட்டுசந்தையை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்திற்கான முதல் கட்டம்.
28-05-2017 அன்று திருவோணம் மாட்டுச் சந்தை திடல்28-05-2017 அன்று நடைப்பெற்ற திருவோணம் மாட்டு சந்தைதஞ்சை மாவட்டம், திருவோணம் மாட்டுச் சந்தை 28-05-2017. விற்பனையாகாமல் திரும்பி செல்லும் மாடுகள்மாட்டிறைச்சி தடையினால் திருவோணம் மாட்டு சந்தையில் வேலையிழந்து நிற்கும் சிவவிடுதி மாட்டு வியாபாரிகள்திருவோணம் சந்தை, மூக்கணாங்கயிறு பின்னும் தொழிலாளி28-05-2017 அன்று திருவோணம் மாட்டு சந்தையில் விவசாயிகள் அனுப்பி வைத்துள்ள அடிமாடுகள்திருவோணம் மாட்டு சந்தையில் கடைவிரித்தேன் கொள்வாரில்லை – டீ விற்கும் தொழிலாளிதிருவோணம் மாட்டு சந்தையில் கயிறு சாட்டைக்குச்ச்சி வியாபாரம் ஆகாமல் காத்திருக்கும் வியாபாரிசந்தையில் கயிறு வாங்குவதற்கு ஆளில்லாமல் அவற்றை திருப்பி எடுத்து செல்லும் பெண் வியாபாரிமாட்டிறைச்சி தடையினால் ஆட்களில்லாத சந்தையில் கடைவிரித்திருக்கும் மற்ற வியாபாரிகள் .
தருமபுரி தண்ணீர் பஞ்சம் – நேரடி ரிப்போர்ட் 4 – இறுதிப் பகுதி
பென்னாகரத்திலிருந்து தாசம்பட்டி போகும் வழியில் 3-வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது இந்த பூனைக்குண்டு-காட்டுக்கொட்டாய் சிறு மலைக்கிராமம். வனப்பகுதியின் எல்லையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலேயே பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆடு, மாடுகள் மேய்ப்பது, சிறு விவசாயம் இங்குள்ளவர்களின் பிரதான தொழில். ரேசன், மருத்துவம் மற்ற இதர அனைத்திற்கும் பென்னாகரத்தையே நம்பியுள்ளனர் இப்பகுதி மக்கள். பெரும்பாலான இடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். பரம்பரை பரம்பரையாக இங்கு தான் வசித்து வருகின்றனர். கடும் வெயில் மற்றும் வறட்சியின் தாக்கம் இங்குள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது தெரிகிறது. கோடைவெயில் அதிகமாக இருக்கும் பகற்பொழுதில் யாரும் வெளியே வரவேண்டாம் என்று பொது நலன் கருதி நகர்ப்புறங்களில் வானொலி, தொலைக்காட்சிச் செய்தி மற்றும் நாளிதழ்களில் அறிவிப்புக்கள் அவ்வப்போது வெளிவரும். ஆனால் இவை எதுவுமே இவர்களுக்குப் பொருந்தாது. சிறு குழந்தைகள் முதல் 80 வயது பெரியவர்கள் வரை ஏறக்குறைய நாள் முழுவதுமே குடமும் கையுமாகத் தான் அலைந்த வண்ணம் உள்ளனர்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தினால் இந்த மக்களுக்குப் பெரிய பயனில்லை. குழாய்களில் காற்று கூட வரவில்லை. பலமுறை PWD ஆபிசில் மனு கொடுத்தும் இவர்களுக்குத் தண்ணீர் வரவில்லை. அரசிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.500 வசூல் செய்து போர் போட்டுள்ளனர். அதுவும் அவ்வப்போது நின்று போய்விடுவதால் மேலும் ஆழப்படுத்த முடியாமல், பக்கத்திலுள்ள சிலரது ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீரை அடி குழாய் மூலம் எடுக்கின்றனர். மனிதர்கள் தங்களுடைய குடிநீர்த் தேவைக்காக எந்த அளவுக்குத் துன்பப்படுகிறார்களோ அதைவிட இரு மடங்கு தாங்கள் வளர்க்கும் ஆடு மாடுகளுக்காகத் துன்பப்படுகின்றனர். ஆறுகள், சிற்றோடை, கிணறு என்று எல்லாமே வறண்டு போய்விட்டதால் ஆடு, மாடுகள் மனிதர்களை மட்டுமே நம்பியிருக்கின்றன.
குட்டி, வயது 45
இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் மகன் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு வரையில் 100 மாடுகளுக்கும் மேல் வளர்த்து வந்துள்ளனர். இவற்றில் சில பட்டி மாடுகள். இவைகள் காட்டுக்குள் சென்றுவிட்டால் திரும்பிவர பல மாதங்கள் ஆகும்; அப்படி வரும்போது நல்ல ஊட்டமாக இருக்கும். அதை விற்று குடும்பச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். கடந்த 2 வருடங்களாக மழை பொய்த்துப் போனதால் ஏறக்குறைய 60 மாடுகள் வரை விற்று விட்டனர். இப்போது இருப்பதோ 35 மாடுகள் வரை தான். இவற்றில் சில பட்டி மாடுகள். மீதம் 30 மாடுகள் வரை வீட்டில் இருக்கின்றன.
சாவின் விளிம்பில் குட்டியின் மாடுகள்
ஆறு, கிணறுகள் வற்றிவிட்டதால் ஆடு மாடுகளுக்குப் போதிய மேய்ச்சல் இல்லை; 30 மாடுகளுக்கும் தீவனம் வாங்குவதற்கோ அல்லது வைக்கோல் வாங்கிப் போடுவதற்கோ வசதியில்லை(வைக்கோல் விலை 1 லோடு 13,000 ரூபாய். 30 மாடுகளுக்கும் ஒரு வாரம் கூட தாங்காது ). காலையில் வீட்டில் தண்ணீர் குடித்துச் சென்றால் பிறகு மாலையில் திரும்பி வரும்போது தான் தண்ணீர் குடிக்க முடியும். இதனிடையே சரியான மேய்ச்சல் இல்லாததாலும், தண்ணீரின்றி ஆறுகள் வறண்டு போய்விட்டதாலும் 3 மாடுகள் காட்டிலும் 2 மாடுகள் வீட்டிலும் இறந்து விட்டன. 2 மாடுகளை வீட்டிலேயே புதைத்து விட்டார். மீதமுள்ள 3 மாடுகளும் காட்டில் உள்ள விலங்குகள் சாப்பிட்டதுபோக அப்படியே அழுகிவிட்டன.
வினவு செய்தியாளர்கள் இப்பகுதிக்குச் சென்றபோது 2 மாடுகளைத் தவிர மற்ற மாடுகள் காட்டுப் பகுதிக்குள் மேய்ச்சலுக்குச் சென்றிருந்தன. வீட்டிலிருக்கும் 2 மாடுகளும் இன்றோ, நாளையோ என்றுள்ளன. இவையிரண்டும் கன்றுகளை ஈன்று ஓரிரு மாதங்கள் தான் ஆகின்றது. கன்றுக் குட்டிகளுக்காக இவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை. தீவனமில்லாததால் தண்ணீரும், கழனித் தண்ணீருமே இவைகளின் உணவு. இத்தனைக்கும் கன்றுக்குட்டி ஈன்றதிலிருந்து இவைகளிடம் பால் கறப்பதேயில்லை. அப்படிப்பட்ட நிலையில் கன்றுக்குட்டிகள் மொழு மொழுவென்று இருக்கும். ஆனால் இந்தக் கன்றுக்குட்டிகள் அப்படியிருக்கவில்லை.
குட்டி இவைகளை விற்றுவிடலாம் என்று எண்ணியபோது ஒரு பசுமாடும் அதன் கன்றுக்குட்டியும் ரூ.5000 விலை கூட விற்காததால் குட்டிக்கு இவற்றை விற்க விருப்பமில்லை.
மாட்டிற்காக பாத்திரங்களில் தண்ணீர் பிடித்து வைத்துள்ளார் குட்டி
மாடுகள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காகவே 750 அடி ஆழத்திற்கு போர் போட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வரை 350 ஆடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்துள்ளது. கடந்த வருடம் நிலத்தடி நீர் வற்றி விட்டதால், கூடுதல் செலவு செய்து போர் ஆழத்தை அதிகரித்த பின்பே தண்ணீர் கிடைத்துள்ளது. இவர்களின் உறவினர்கள் சிலருக்கு 1000 அடி வரை போர் போட்டும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் மாடுகள் முழுவதையுமே இழந்து வாழ்வாதாரத்தைத் தொலைத்து இறுதியில் தாங்கள் வாழ்ந்த பூர்வீக இடத்தையே காலி செய்யும் நிலை வரலாம் என்கிறார்.
வீட்டில் மொத்தம் 6 -பேர் இருப்பதால் வாங்குகின்ற ரேசன் அரிசி முழுவதும் இவர்களுக்கே சரியாக உள்ளது. குழந்தைகள் அனைவருமே சிறு வயதினர். மெக்கானிக்கல் கடை ஒன்று வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்து ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
முனுசாமி – தங்கப்பொண்ணு தம்பதியினர்
குடமும் கையுமாக தண்ணீர் தூக்கப் புறப்பட்டதங்கப்பொண்ணுவைப் பார்த்து பேச ஆரம்பித்ததும் அப்படியே மர நிழலில் நின்று விட்டார்.
நான் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்து 35 வருசம் கிட்ட ஆயிடுச்சு.தண்ணிக்கு கஷ்டமா?? ரொம்ப ரொம்ப கஷ்டமுங்க. ரெண்டு பொம்பளப் புள்ளங்களக் கட்டிக் கொடுத்துட்டோம், ஒரே மவன் வெளியில வேலைக்குப் போயிருக்கான், வர ராத்திரி ஆகும்.
மண்டையைப் பிளக்கும் வெய்யிலில் குடங்களுடன் நீருக்காக செல்லும் தங்கப் பொண்ணு
போட்ட வெள்ளாமையெல்லாம் பாழாப் போச்சுங்க! கடலைக்காயெல்லாம் பூ பூத்ததோட வாடிப்போச்சு; அதுக்கு போட்ட காசும் போச்சு; ரெண்டு வருசமாவே நெலம ஒன்னும் சரிப்பட்டு வரலங்க. நாளு முழுசா தண்ணி புடிக்கிறதுக்கே நேரம் சரியாயிருக்கு. நம்ம கிட்ட 30 வெள்ளாடு 1 சீம மாடு நிக்கிது. இதுகளுக்கும் சேத்து தண்ணி புடிக்கிறதுக்குள்ள இடுப்பெலும்பே ஒடையுற மாதிரியாயிடும். எங்கையுமே பைப் கனெக்சனே குடுக்கல. அவிங்கள நம்புனா வேலைக்காவாதுன்னு நாங்களே வூட்டுக்கு 500 வசூல் பண்ணி மோட்டர் போட்டோம், அதுவும் கை கொடுக்கல, எல்லா ஆபிசருங்களையும் பாத்தாச்சு, ஒருத்தரும் கண்டுக்கலை. 5000லிட்டரு 750 ரூபாய்க்கு வண்டில கொண்டாராங்க. ஆனா அவ்ளோ தண்ணிய புடிச்சி வக்கிற அளவுக்கு வீட்டுல வசதியில்ல. அஞ்சாறு குடும்பங்களா சேந்து வாங்குனாத்தான் உண்டு.
இடுப்பொடிய அடிகுழாயில் நீர்பிடித்து வரும் பெண்கள்
எத்தனை குடம் தண்ணீர் தூக்குவீங்க?
ஒரு நாளக்கின்னு பாத்தா எங்களுக்கும் ஆடு மாடுகளுக்கும் சேத்து 50 குடம் தண்ணி தேவப்படுது. அதோ அங்க தெரியுது பாருங்க ஒரு பெரிய பாறை(1 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கின்றது) அங்க தான் தண்ணிய பைப்ல அடிச்சு எடுத்துட்டு வரணும். காலையில ஆறு மணிக்கு தண்ணி தூக்க ஆரம்பிச்சா சாயந்திரம் வரைக்கும் தண்ணி தூக்குன கதியாத்தான் கெடப்போம். முன்னெல்லாம் கெணத்துல தண்ணி கெடக்கும், ஆடு மாடுகளும் மேவுக்குப் போற எடத்துல தண்ணி குடுச்சிட்டு வரும். இப்பல்லாம் தண்ணியில்லாததுனால சிக்கிரமே திரும்பி வந்துடுதுங்க; வந்தவுடனே அதுக தண்ணிக்கு அலயுறதபாத்தா மனசுக்கே சங்கடமாயிருக்கும்; பாவம் வாயில்லாத ஜீவனுங்க… நம்மளவிட்டா யாருதான் அவுங்களுக்கு கெதி!
மாட்டுக்காக வாங்கிவைக்கப்பட்டுள்ள வைக்கோல்
மாட்டுக்குத் தீவனமெல்லாம் வாங்குறீங்களா?
புல்லுக்கட்டு(வைக்கோல்) வாங்கிப்போடவே காசு இருக்க மாட்டேங்குது. இதுல தீவனத்த எங்க போடுறது. முன்னாடி மாதிரி இப்போ நெறயா மாடெல்லாம் இல்லங்க! ஒரேயொரு சீமப் பசு தான் இருக்குது. அங்க பாருங்க புல்லுக்கட்டு வாங்கிப் போட்ருக்கோம், வெல என்னான்னு தெரியுமா, 13,000/- ரூவாங்க! நாலு வாரம் கூட வராது. ஆனா என்னத்த பண்றது, இருக்குறத வித்தாவது இதுகள காப்பாத்தனும். மாட்ட வித்தாக்கூட எங்களுக்கு லாபமேயில்ல; அதனால நாங்களே வெச்சுக்கலாமுன்னு தான் இத்தன செரமத்துலயும் காவுந்து பண்ணிட்டிருக்கோம். இதுல வாயில்லா ஜீவனுங்கதா பாவம், வெயிலுக்கு குளுப்பாட்ரதேயில்லை. மனுஷனுக்கே தண்ணியில்லை இதுல அதுங்களை எங்க நாங்க குளுப்பாட்டுறது.
அரை மூடி தேங்காய் தான் இவருக்கு மதிய உணவு
சாப்பாட்டுக்கெல்லாம் என்ன பண்றீங்க?
முன்னெல்லாம் நெலத்துல வெளயிற கேவூரு, கடலக்காய், சோளம் இதத்தான் சாப்டுவோம். இப்போ வெளச்சலேயில்லாததுனால ரேசன் அரிசி தான். இதுல கேவூர் வெலயெல்லாம் எங்கேயோ போச்சு(மூடை ரூ.4000). ஆனா களி, கூழ் தான் நாங்க விரும்பி சாப்புடுவோம்; வேற என்னத்த பெருசா செலவு பண்றோமுன்னு இப்பதான் கொஞ்சம் வாங்கிப்போட்டுருக்கோம்;
தண்ணியெல்லாம் சிக்கனமா செலவு பண்ணுவீங்களா?
இல்லயா பின்ன! கெடைக்கிற தண்ணிய வெச்சு எவ்ளோ சிக்கனமா இருக்க முடியுமோ அவ்ளோ இருக்கோம். அதுக்காக பாத்திரத்தெல்லாம் கழுவித்தானே ஆகனும்; வீடு கழுவி விடுறது, வாசலுக்குத் தண்ணி தெளிக்கிறது, மாடுகள குளுப்பாட்டுறது இப்படி எதுக்குமே தண்ணிய வீணடிக்க மாட்டோம்.
செய்யுற வேலைக்கு ஒடம்புக்கெல்லாம் ஒன்னும் ஆவாதுங்க
72 வயதான பெண்மணி சுந்தரம்மாள்; தெளிவான கண்பார்வைத் திறன் உள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளும் திறன்படைத்த தைரியசாலி. சற்றும் பயமறியாத இவர் மிகவும் இயல்பாகவும் எதார்த்தமாகவும் பழகுகிறார். வெயிலில் வந்த எங்களுக்கு உணவு தரும் நிலையிலில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டார்.
சுந்தரம்மாள்
எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லேருந்து இந்த மாதிரி பஞ்சத்த பாத்ததேயில்ல கண்ணு. முன்னல்லாம் அந்த தூரத்துல இருக்குற வீடே தெரியாது அந்த அளவுக்கு காடிருக்கும். இப்போ எல்லாம் தெரியுது. கேவூருக்கும், சோளத்துக்கும் காட்டுப்பன்னி, மயில், யானைன்னு எல்லாமே வருங்க…ஒரு முறை யானை ஒன்னு வந்துருச்சு..தெய்வமே நீ பாதி சாப்டுக்கோ, எனக்குப் பாதிய கொடுத்துருன்னு வேண்டிக்கிட்டேன். யான சாப்பிட்டது போக 16 மூட்ட கேவூரு கெடச்சுச்சு. இப்ப எனக்கும் ஒன்னுமில்ல; அதுகளுக்கும் ஒன்னுமில்ல; ஒருவேள ஒலகம்தான் அழியப்போவுதோ என்னவோ. ஆனா ஒலகம் அழியிற அளவுக்கு நாங்க என்ன தப்பு பன்னோம்னுதாம்பா வெளங்கலை.
ஏதோ ரேசன் இருக்கதுனால ஓடுது. அதுக்கு நாங்க பென்னாகரம் வரை நடக்க வேண்டிருக்குப்பா. எனக்கு 2 புள்ளங்க, எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணிவெச்சு பேரன் பேத்தி பாத்துட்டோம், இப்போ இந்த குடிசைல தண்ணிக்கு அல்லல் பட்டுட்டு கெடக்கோம். அவுங்க வூட்ல மாதிரிதா புல்லுக்கட்டு வெலைக்கு வாங்கி போடுறோம் 3 மாட்டுக்கு. ரெண்டு வருஷமா நிலத்துல எதுவு போடமுடிலை. கடுமையான வறட்சினால தென்ன மரம் 15 பக்கம் பட்டுபோச்சுய்யா. முன்னல்லாம் கேவுரு வீட்டுக்கு வந்த ஆள சும்மா அனுப்புனதா பழக்கமேயில்லய்யா, இப்ப நிலமைய பாத்தியாய்யா. நிவாரண கிவாரணும்னு ஒன்னையும் காணோம். கேட்ட புருஃப் பூரா குடுத்தோம் ஆனா ஒரு பைசாகூட வரலைப்பா. நான் வார்டு மெம்பராக்கூட நின்னுருக்கேன், அப்புடி செல்வாக்கு, என்ன இருந்து என்ன பன்ன ஒரு நாளைக்கு மாட்டுக்கு வீட்டுக்கு சேத்து 20 குடம் தூக்க வேண்டிக்கிடக்கே. பூச்சிகடி எதாவதுனாக்கூட பென்னாகரம் ஆசுபத்திரிக்குத்தான் ஓட வேண்டிக்கிடக்கு.
கடைக்காரிசி கொட்டாய்
பென்னாகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஊர். மற்ற ஊர்களைப்போன்றே கிணறுகளில் தண்ணீர் வற்றிப்போய் மக்கள் குடிநீருக்காக ஏங்கி அலைகின்றனர்.
சாலையோரத்தில் பதிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்க்குழாயில் ஏற்பட்ட சிறிய கசிவுகளிலிருந்து தண்ணீர் வெளியேற அதில் ஒரு சிறிய குழிபறித்து அதில் தேங்கியிருக்கும் தண்ணீரைச் சேர்த்துக் கொண்டிருந்தார் கவிதா என்ற பெண்மணி.
இந்த தண்ணி தான் ஒரே கெதி, இதக்குடிச்சி புள்ளக்கி அப்பப்ப காய்ச்சலும் பேதியுமா வருது…ஏன்னா ரோட்ல ஒரே புழுதி, அப்புறம் இங்க மேவுற ஆடு மாடுங்களும் இதுல தான் தண்ணி குடிக்கிதுங்க. அதான் தண்ணி கெட்டுப்போயிருது. ஆனா இத விட்டா வேறவழியில்லங்க! வீட்டுல வேற 1½ வயசுக் கொழந்த இருக்குது; அதனால தொலவுல போயி தண்ணியெல்லாம் புடிக்க முடியாதுங்க! வெட்ட வெயிலில் வாடி வதங்கிப்போயிருந்த அந்தப் பெண்ணையும் அவருடைய குழந்தையையும் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
அருகிலிருந்த உள்ளூர் தோழர் ஒருவர் ஆறுதல் கூறி தைரியமூட்டினார். இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இங்கே வரவேண்டும்; மாறாக பக்கத்து இடத்தில் உள்ள குழாயில் தண்ணீர் விடச்சொல்லி அவர்களிடம் உரிமையாகக் கேட்கவேண்டியது தானே என்று தோழர் சொல்ல, அந்தப் பெண்மணி பயந்த சுபாவத்துடன் எப்படிங்க கேக்குறது? என்று அச்சப்பட்டார். உடனே தோழர் ‘அழுவுற புள்ளக்கி தாங்க பால் கெடைக்கும், நீங்க போயி கேட்டாதான் தண்ணிய விடுவாங்க! இல்லன்னா கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேண்ணு சொல்லுங்க! கண்டிப்பா தண்ணி தருவாங்க” என்று சொன்னவுடன் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த வயதான பெண்மனி “ நீ சொல்றதுதாம்மா சரி, கெவர்மெண்ட் தர்ற தண்ணிய அவுங்க எப்பிடி தரமாட்டேன்னு சொல்லலாம்? நீ போயி தைரியமா கேளும்மா நானும் வர்றேன்” என்று சொன்னார்.
சக்கல் நத்தம் :
மலைக்கிராமமான இந்த ஊரில் பொருளாதாரத்தில் சற்று முன்னேறியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்புக்களில் மற்ற ஊர்களைக் காட்டிலும் முன்னேறியுள்ளனர். வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வரை இங்கு வாழ்கின்றனர். ஆனால் தண்ணீரின்றி கிணறுகள் வறண்டுவிட்டன. விவசாயம் நடக்கவில்லை;
நாம் பார்த்த சின்னப்பொண்ணு-வின்(வயது 67) நிலத்தில் ஏறத்தாழ 15 தென்னை மரங்கள் நீரின்றி பட்டுப்போய்விட்டன. 3 மாடுகள் வைத்திருக்கின்றனர். குடும்பத்திற்கும் மாடுகளுக்கும் என தண்ணீரை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றனர். தான் பிறந்ததும் இந்த ஊர் தான் என்றும் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படி ஒரு வறட்சியைப் பார்த்ததேயில்லை என்றும் கூறினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சென்னை நேரு பூங்கா குடியிருப்பில் மாட்டுக்கறி திருவிழா !
சென்னை நேரு பார்க்கில் 4.5.17 அன்று மாட்டிறைச்சி விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காலை 9:00 மணி முதலே குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மதியம் 3:00 மணிக்கெல்லாம் அப்பகுதியைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
4.30 மணிக்கு பகுதியில் புகுந்த போலீசு விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று மக்களை மிரட்ட ஆரம்பித்தது. அத்துடன் சமையலுக்காக வைத்திருந்த காலி கறிப்பானையை ‘கைப்பற்றிக்கொண்டு’ ஓடியது. பகுதியில் ஒட்டப்பட்டிருந்த மக்கள் அதிகாரம் சுவரொட்டியை கிழித்து அட்டகாசம் செய்தது. எனினும் திட்டமிட்டபடி மாலை 5:00 மணிக்கு விருந்து துவங்கியது. தயாரித்து வைத்திருந்த இறைச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது இதனை போலீசின் மிரட்டல்களைத் தாண்டி மக்கள் விருப்பத்தோடு வாங்கி உண்டனர்.
மாட்டிறைச்சி சாப்பிட்ட குற்றத்திற்காக 16 தோழர்களை கைது செய்து போலீசு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். நடந்துகொண்டிருப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த பகுதி மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடவிடாமல் தடுக்கும் போலீசையும், மாட்டுக்கறிக்கு தடை போட முயலும் மோடியையும் கடுமையான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. தொடர்புக்கு – 95518 69588.
பார்ப்பன பாசிஸ்ட் மோடி அரசு மாடுகளை விற்க தடை என்பதன் மூலமாக மறைமுகமாக மாட்டுக்கறிக்கு தடை விதித்து தனது இந்துத்துவ கொள்கையை அனைத்து தரப்பு மக்கள் மீது திணித்துள்ளது. மற்றொரு புறம் விவசாயிகளை ஒழித்துக்கட்டி கார்பரேட்டுகளிடம் கையேந்தும் நிலையை உருவாக்கி உள்ளது. இதனை எதிர்த்து தமிழகமெங்கும் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது.
விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்புகள் சார்பில் கடந்த 03.06.2016 சனி, மாலை 5:00 மணிக்கு ஜல்லிக்கட்டுத் திடல், புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பாளர், தோழர் ஞானவேல்ராஜா அவர்கள் தலைமை தாங்கினார் அவர் தனது தலைமையுரையில், மோடி அரசின் இந்த இந்த உத்தரவால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றது. மாட்டை பாதுகாப்பது இந்த அரசின் நோக்கமல்ல, ஐரோப்பிய நாடுகளில் குவிந்து கிடக்கும் கறிக்கு சந்தையை ஏற்படுத்தி கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு வழிவகுப்பது தான் இந்த திட்டம் என்பதை அம்பலப்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளை பொருளாளர் தோழர் E.K சங்கர் பேசுகையில், போராடும் மக்களை தேசவிரோதி என்று சித்தரிப்பதும், அவர்களுக்கு ஆதரவாக போலிசு செயல்படுவதையும் அம்பலப்படுத்தினார்.
அவரை தொடர்ந்து பெரியார் சிந்தனை இயக்கத்தின் தோழர் தீனா அவர்கள், இந்தியா ஒரு நாடா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பல்வேறு அடக்குமுறைகள் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. தற்பொழுது நிலவி வரும் பாசிச அரசுக்கு எதிராக உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
இறுதியாக கண்டனயுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர், புதுச்சேரி. தோழர் லோகநாதன் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் 68 % பேர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடியவர்கள். மோடி அரசின் இந்த உத்தரவை ஏற்றுகொள்ளக் கூடியவர்களை எளிமையாக அடையாளம் கண்டு விடலாம். ஒன்று RSS சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள். மற்றொன்று சாதி வெறியர்கள். இவர்களை தாண்டி மற்ற அனைவரும் எதிர்க்கிறார்கள்.
அம்பேத்கர் சித்தாந்த ரீதியாக இந்த உச்சிக்குமியை உலுக்கி எடுத்தார். இன்று தமிழகமே எதிர்க்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதைத்தான் சாதித்தேன் என்று சொல்வதற்கு மோடி அரசிடம் ஒன்றுமில்லை. மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு துப்பில்லாத இவர்கள் மாட்டை பாதுகாக்கிறார்களாம். விவசாயிகளையும் விவசாயத்தையும் ஒழித்துக்கட்டும் சதி வேலையை தான் மோடி செய்கிறார். இதனை முறியடிக்க வேண்டுமென்றால், RSS-BJP யை ஒழித்துக் கட்ட வேண்டும். இது பெரியார் பிறந்த மண் என்பதை நாம் நிலைநாட்ட வேண்டும் என்று கூறி முடித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே மகஇகவின் புரட்சிகர பாடல் பாடப்பட்டது. இறுதியில் அனைவருக்கும் மாட்டுக்கறி வழங்கப்பட்டது. மாட்டுக்கறியை சாப்பிடக் கூடாது என்று மறுத்தது போலிசு. மீறி சாப்பிட்டால் கைது செய்வோம் என்று மிரட்டியது. நீங்கள் கைது செய்யுங்கள் என்று தோழர்கள் உறுதியாக நின்றதும் வேறு வழியில்லாமல் அமைதியாகிவிட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்: புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, விழுப்புரம். தொடர்புக்கு – 99650 97801.
_____
தஞ்சையில் மாட்டுக்கறி திருவிழா !
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைச் சார்ந்த, சென்னை ஐ.ஐ.டி. மாணவர்
சுராஜ், RSS காலிகளால் கொடூரமாக தாக்கப்பட்டத்தை கண்டித்தும், அவர்களை
கைது செய்ய கோரியம், பி.ஜே.பி. கும்பலின் சதிதனமான மாட்டுக்கறி தடையை
கண்டித்தும் தமிழ்நாடு முழுக்க மக்கள் அதிகாரம் சார்பாக மாட்டுக்கறி
உணவுத்திருவிழா நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக தஞ்சையில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக 01.06.2017 காலை 10 மணிக்கு ரயிலடியில் மக்கள் அதிகார தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில் தோழர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதை முன்கூட்டியே அறிந்திருந்த காவல்துறை தோழர்களை கைதுசெய்ய தயாராக காத்திருந்தது. குறித்த நேரத்தில் தோழர்கள் திரண்டு மோடி அரசை கண்டித்து
முழக்கமிட்டனர். சிறிது நேரம்கூட தோழர்களை முழக்கமிட அனுமதிக்காமல்
வெறித்தனமாக தரதரவென்று இழுத்து சென்று வண்டியில் ஏற்றிச்சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றிம் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், தஞ்சை.
_____
புதுச்சேரியில் : மாட்டுக்கறி திருவிழா – ஆர்ப்பாட்டம்
மாடுவிற்பதற்கு தடை, மாட்டுகறிக்கு தடை என தொடர்ந்து இந்திய விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் கொடுமைபடுத்தி வருகின்றது பாஜக அரசு. காவிரியில் தண்ணீர் மறுத்து டெல்டா மாவட்டத்தில் விவாசாயிகளை கொன்ற காவி கும்பல் பாஜக தேசிய ஒற்றுமைக்கும் மதசார்பின்மைக்கும் எதிராக நடக்கின்றது.
பாசிச மோடி அரசு – ஆர்.எஸ்.எஸ். மாட்டுக்கறிக்கு தடைபோட்ட மத்திய அரசை கண்டித்து சென்னை ஐ.ஐ.டி -யில் மாணவர்கள் மாட்டுக்கறி உணவு திருவிழா நடத்தினார்கள். அதற்கு எதிராக மதவெறி கொண்ட பாசிச ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்த காவிக்கும்பல் மாட்டுக்கறி திருவிழா நடத்திய மாணவர்களை அடித்து, சூரஜ் என்ற மாணவரின் கண்ணை படுகாயமாக்கியுள்ளனர். இந்த காட்டு மிராண்டி செயலை கண்டித்து புதுச்சேரியில் திருவாண்டார்கோவில் பகுதியில் ஜீன் – 1 அன்று மாலை: 5.00 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மக்களை திரட்டி மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. முதலில் பறை முழக்கத்துடன் தொடங்கப்பட்டு, பிறகு விண்ணதிரும் முழக்கங்களுடன் வந்திருந்த அனைவருக்கும் மாட்டுக்கறி சமைத்து வழங்கப்பட்டது. அனைவரும் கேட்டு வாங்கி விரும்பி உண்டனர். அங்கு கூடி இருந்த மக்களும் தொழிலாளர்களும் விருப்பமுடன் வாங்கி உண்டார்கள். இதில் ஒரு சிறப்பு என்ன என்றால் கறியை வறுத்து கொடுத்த குண்டானில் அதன் சாந்துகூட மிஞ்சவில்லை. அந்த அளவிற்கு மாட்டுக்கறி அற்புதமாக இருந்ததாக மக்கள் சொன்னார்கள். எனவே இப்போராட்டம் உழைக்கும் மக்களுக்கான உண்மையான உணவுத் திருவிழாவாகவே இருந்தது. இத்திருவிழாவை நாடு முழுதும் தினமும் நடத்த வேண்டும் என்று அப்பகுதியில் வாழும் தொழிலாளி ஒருவர் சொன்னார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஆதரவாக பென்னாகரத்தில் மாட்டுக்கறி திருவிழா. நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவந்த ஆர்எஸ்எஸ் -மோடி கும்பல் பார்ப்பன கலாச்சாரத்தை நாடு முழுவதும் திணித்து வருகிறது. இதற்கு எதிராக சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் சார்பில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது.
அதில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை நடத்திய பிஜேபி மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்ந்த மணீஸ் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும், சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஆதரவாகவும் புமாஇமு, மக்கள் அதிகாரம் சார்பாக மாட்டுக்கறி திருவிழா ஏற்பாடு செய்து கடந்த இரண்டு நாட்களாக தருமபுரி, பென்னாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு 02.06.2017 அன்று மாலை 3 மணி அளவில் இத்திருவிழாவை நடத்தினர்.
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்ந்த தோழர் சத்தியநாதன் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்த உடன் நீட்தேர்வு, சமஸ்கிருத திணிப்பு, ஐல்லிக்கட்டுக்கு தடை, மாட்டிறைச்சிக்கு தடை ,என நீதிமன்றமும் மோடியும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகத்தை இழைத்து வருகிறார்கள். இன்றைக்கு மாடு வெட்ட தடை, நாளைக்கு கோழி, மீனுக்கும் தடை வரும். எனவே வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். அதனை முன்கூட்டிதயே தடுக்க மக்கள் அணைவருக்கும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சார்ந்த வழக்குரைஞர் ஜானகிராமன் பேசுகையில், சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் மீதான தாக்குதலால் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக சித்தரிக்கபடுகிறது. இந்நிலையில் இந்திய சுற்று சூழல் அமைச்சகம் பசுமாடுகளை விற்க வேண்டுமென்றால் தாசில்தார் முதல் முனிசீப் வரை அனுமதி வாங்கிதான் விற்கவேண்டும் என்று கூறியுள்ளது.
இதனை எதிர்த்து போராட கூடியவர்களை மாடு வியாபாரிகளை, முஸ்லீம்களை கடுமையாக தாக்கி வருகின்றனர். மதவெறி பாசிச தாக்குதலுக்கான சட்டத்தை ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதுதான் ஐ.ஐ.டி மாணவர் சூரஜுக்கு ஏற்பட்டது. எனவே மாட்டிறைச்சி சாப்பிடும் தலித்துக்கள், முஸ்லீம்களுக்குகான பிரச்சினை மட்டும் அல்ல , காவிரியில் தண்ணீரை தடுத்து இன்றைக்கு 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து இருக்கிறார்கள், விவசாயம் பொய்த்து போய் விவசாய நிலத்தை விட்டு பிரிந்து நகரங்களுக்கு வேலையை தேடி அலையும் சூழ்நிலையில்தான் பசுமாட்டை பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் கலவரத்தை நடத்தி வருகிறார்கள்.
இப்படி விவசாயிகளுக்கு எதிராக, விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கும் பார்ப்பன பாசிச மோடிக்கும்பலுக்கு எதிராக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதின் வாயிலாகத்தான் பிரச்சினையை தீர்க்கமுடியும்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில், மாட்டிறைச்சிக்கு தடைவிதிப்பதுதான் பிஜேபி-யின் நிலைபாடு, கொள்கையாக இருக்கிறது. இதன்மூலம் மக்களை மோதவிட்டு இரத்தம் குடிக்கும் கொலைவெறி கட்சிதான் பிஜேபி. 2000 முஸ்லீம்களை கொலை செய்து கொலைகார கட்சிதான் பிஜேபி. இக்கட்சியின் பின்னால் பார்ப்பன கலாச்சாரத்தை நிறுவுவது அதற்கு ஏற்றவாறு சட்டம் இயற்றுவது என்று செய்து வருகிறார்கள். மாட்டு மூத்திரத்தை, குடிக்கும் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால் மாட்டு தொடையை சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என்று எச்சரித்தார்.
ஜெயா ஆட்சியில் இருக்கும் போது கிடா வெட்டும் தடைச்சட்டம் கொண்டுவந்த போது ஆடு, கோழியை கழுத்திலே போட்டு போராட்டம் நடத்திய ம.க.இ.க அந்த சட்டத்தை துரத்தி அடித்தது. எனவே காவிரியில் தண்ணீரை தடுத்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கொலை செய்தவர்கள் மாட்டை பாதுகாக்கிறார்களாம் . இப்படிப்பட்ட துரோகிகளை ,கொலைகாரர்களை செருப்பால் அடித்து தமிழகத்தில் இருந்து ஓட,ஓட விரட்டியடிக்க வேண்டும். அதற்கு அணைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இத்திருவிழாவில் நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் பறிமாறப்பட்டது. அப்போது கடைவீதியில் நின்று கவனித்த பொது மக்கள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று அச்சத்தோடும், ஆர்வத்தோடும் நின்று கவனித்தனர். நான்கு சுவருக்குள் சாப்பிட்டவர்களை தெருவுக்கு இழுத்து விட்டிருக்கிறான் என்று அவர்களும் மோடி திட்டுவதை பார்க்கமுடிந்தது.
மாட்டுக்கறி சாப்பிடுவது என்னுடைய உரிமை, அதில் கை வைப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது. அரசாங்கம் நடத்த வந்தால் அதை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று பலரும் பலவாறு மோடி கும்பலை திட்டி தீர்த்தனர். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் வௌக்கமாறு, செருப்போடு தெருவுக்கு வந்து இச்சட்டத்தை கூட்டி குப்பையில் வீசுவோம் என்று ஆவேசமாக பெண்கள் வெளிப்படுத்தியது நாங்கள் பெரியாரின் வாரிசுகள் ஆகவே பார்ப்பன விச பாம்புகளை தமிழமகத்திலிருந்து அடித்து விரட்டுவோம் என்பதை பறைச்சாற்றும் விதமாக அமைந்தது.
தகவல் : மக்கள் அதிகாரம்,
புரட்சிகர- மாணவர் இளைஞர் முன்னணி
தொடர்புக்கு; 81485 73417.
கருத்துக் கணிப்பு : இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டி
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அதில் நேற்று 4.6.2017 அன்று இந்தியா – பாக் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. மழை குறுக்கீடுகள் இருந்தும் பாகிஸ்தான் தோல்வியடைய இந்தியா வெற்றி அடைந்திருக்கிறது. 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அடைந்த வெற்றி குறித்து இன்றைய கருத்துக் கணிப்பு! வாக்களியுங்கள்.
இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?
“கீழடி அகழ்வாய்வு முடக்கப்படுகிறது! தொல் தமிழர் நாகரிகம் புதைக்கப்படுகிறது!! என்ன செய்யப் போகிறோம் நாம்!!!” என்கின்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் கடந்த 28.05.2017 ஞாயிறு மாலை மதுரை மாட்டுத்தாவணி அருகில் செய்தியாளர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தோழர் சினேகா தனது வரவேற்புறையில் சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட உட்புறத்தில் சுடப்பட்ட பானைகள் கண்டறியப்படவில்லை. ஆனால் கீழடியில் இருபுறமும் சுடப்பட்ட மண்பானைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அரிய 310 பழம்பொருட்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு நம் தொல்தமிழரின் நாகரிகம் கண்டறியப்படுவதை பொறுக்க முடியாமல் இந்து-இந்தி-இந்தியா என்று ஒற்றை கலாச்சாரத்தை நோக்கி செல்ல முயற்ச்சிக்கும் RSS – BJP கும்பல் கீழடியை முடமாக்கி அழிக்க முயற்சிக்கிறது. ஆனால் ஏற்கனவே ராமன் சிலைக்கு செருப்படி, விநாயகர் சிலை உடைப்பு என ஆரிய எதிர்ப்பு பாரம்பரியம் கொண்டது. எனவே இந்த கருத்தரங்கிற்கு வந்திருப்பவர்கள் இங்கே சொல்லப்படும் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என உரையாற்றினார்.
தோழர் கதிரவன்
தோழர் கதிரவன் தன்னுடைய தலைமை உரையில் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் மட்டுமே ஒரு போக்கிற்காக 3-வது கட்ட ஆராய்ச்சிக்கு பாஜக அனுமதி வழங்கி 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதை ஜல்லிக்கட்டு போராட்டம் போல் போய்விடக்கூடாது என்று பயந்துபோய் அனுமதியளித்துள்ளனர் என சந்தேகிக்க காரணங்கள் இருக்கின்றன. கிடைத்துள்ள 5,300 பழம்பொருட்களில் குறைந்தது 10 பொருட்களையாவது ஆய்விற்கு அனுப்பவேண்டும் என்று பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது கூட பொருட்படுத்தாமல் வெறும் இரண்டை மட்டுமே கால கணிப்பு ஆராய்ச்சிக்கு அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அதுவும் வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.
வட இந்தியாவில் நடக்கும் அகழ்வாராய்ச்சியிலிருந்து 15, 20 பொருட்களை அனுப்புகின்றனர். ராமாயண அருங்காட்சியகத்திற்கு 150 கோடி ஒதுக்கீடு, இல்லாத சரஸ்வதி நதியை தேட 100 கோடி ஒதுக்கீடு என்பதையும் இதோடு சேர்த்து சிந்தித்து பாருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை விவசாயிகளிடம் கேட்காமல்கூட கையகப்படுத்தும் மோடி கீழடிக்கு கள அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்க மறுக்கிறது. மேலும் வெளிநாட்டு பிரதமர்களை சந்திக்கும் போதெல்லாம் பகவத்கீதையை பரிசளிக்கும் மோடி பிறப்பால் உயர்வு தாழ்வை ஏற்றுக்கொள்ளாத திருக்குறளை பரிசளிப்பதில்லை. இவற்றையெல்லாம் பல ஆயிரக்கணக்கில் பிரசுரங்களிடித்து மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்றுள்ளோம் என தனது உரையில் பேசினார்.
தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம்
அதன் பின்னர் தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் பேசும்போது பொதுவாகவே வடஇந்தியாவில் JNU பேராசிரியர்கள்கூட தென்னிந்தியாவில் மூவேந்தர்கள் பேரரசு இருந்தது என்பதையோ அல்லது அசோகர் காலத்திற்கு முன்பாகவே எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். கீழடிக்குப் பிறகுதான் ரொமிலா தாப்பரிடம் மாற்றம் வந்துள்ளது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த வரலாற்று போராய மாநாட்டின் தலைமையுரையில் கீழடி கண்டுபிடிப்பானது நாம் தமிழக வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்றார்.
ஆனால் கீழடியே முதன் முறை அல்ல ஆதிச்சநல்லூரில் தொடங்கி கொடுமணல், புளிமான் கோம்பை என பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. இதில் ஆதிச்சநல்லூர் கிட்டத்தட்ட கி.மு.1700-க்கும் முந்தைய நாகரிகமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ சில சில்லறை விசங்களை கூறி அதன் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளார்கள். குறிப்பாக வட இந்திய அகழ்வாரய்ச்சிகளில் கிடைத்த மண்பாண்டங்களில் எதிலும் எழுத்துக்கள் குறிக்கப்படவில்லை. தமிழக்கத்தில்தான் எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அதுவும் பிராமி எழுத்துக்கள் கலக்காத தமிழ் எழுத்துக்களுடைய மண்பாண்டங்கள். மேலும் வட இந்தியாவில் எத்தனையோ அறிஞர்கள் 20 வருடம் வரை ஒரே அகழ்வாராய்ச்சியில் பணி செய்தே ஓய்வு பெறும் சூழலில்
திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனை மட்டும் 2 வருடத்தில் மாற்றுவது கூடாது. என்னுடைய கணிப்பின்படி கீழடியானது மிகப்பெரிய தொழிற்கூடமாக இருக்கலாம் குறிப்பாக நெசவு அல்லது நூல் தயாரிப்பு செய்யப்பட்ட தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்று பேசினார். முனைவரின் உரையானது இந்தியாவின் மூத்த தொல்குடி தமிழ்குடிதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இருந்தது.
அதன் பின் ம.க.இ.க.வின் மாநில இணை செயலாளர் தோழர் காளியப்பன் பேசும்போது முனைவரின் அனுபவப்படி பல்வேறு ஆராச்சி முடிவுகள் தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் விதமாக வந்திருக்க ஆனால் அது எதுவும் பாடநூல்களில் சேர்க்கப்படாமல் 1960-களில் சேர்க்கப்பட்ட பாடங்களே வரலாற்று நூல்களில் இருக்கிறது என்றால் இந்த பாடத்திட்டமே எவ்வளவு அநாகரிகமானது என்று கேள்வியெழுப்பினார். பொதுவாகவே BJP – RSS கும்பலை சந்தேகப்பட பல காரணங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் திராவிட நாகரிகத்தின் தொன்மையை பற்றியும் பல்வேறு கண்டுபிடிப்பு உண்மைகள் வெளியே வந்துள்ளது. ஆனால் BJP – RSS கும்பல் இவை எவற்றையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தாய்மொழி, சிந்து நாகரிகமே இந்து நாகரிகம்தான் என இன்னுமும் சொல்லி கொண்டிருக்கின்றனர்.
தோழர் காளியப்பன்
பாட நூல்களில் புராணக் கதைகளை நுழைப்பது, திராவிட கருத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசுவது இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் இவர்கள் கீழடியை விட்டு வைக்க மாட்டார்கள் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். கால்டுவெல் தன்னுடைய ஆராய்ச்சியில் தமிழர்கள் அவ்வளவாக மூடநம்பிக்கை அற்றவர்களாகவும், பொதுவில் பொதுச்சிந்தனை உடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இந்துத்துவ கும்பல் வைத்துள்ள பெயர் பிரித்தாளும் அந்நிய சூழ்ச்சிக்காரர். மேலும் அத்திரப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித இனம் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் RSS-ன் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு வேட்டு வைப்பதாக உள்ளது, எனவேதான் தமிழகத்தில் நடக்கும் எந்த அகழ்வாராய்ச்சிகளை நிறுத்திவிட அவர்கள் துடிக்கிறார்கள்.
தோழர் ராமலிங்கம்
RSS-ன் சாவர்காரின் கருத்துப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா என்று ஒற்றை பண்பாடு கொண்ட நாடாக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இந்துக்கள் என்று கூறியதை யோசித்துப் பார்த்தால் அவர்களின் திராவிட எதிர்ப்பு மனநிலை புரியும். எனவே ஆதிச்சநல்லூர் தொடங்கி கீழடி வரையிலான அனைத்து அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை வெளியே கொண்டுவர போராடுவதும், அந்த முடிவுகளை வரலாற்று பாடநூல்களில் இடம் பெறச்செய்வதும் ஆரிய இந்துத்துவ சித்தாந்தத்திற்கு பேரிடியாக இருக்கும் என தேவையை உணர வைத்து பேசினார்.
இறுதியாக ம.க.இ.க வின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் நன்றியுரையாற்றினார். கருத்தரங்கத்திற்கு திரளான பார்வையாளர்களும், ஜனநாயக உணர்வு கொண்டவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகா சிறுகனூர் ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சுற்றுவட்டார கிராம மக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட கலெக்டரிடம் மனுகொடுக்கப்பட்டது. மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் 28.05.2017 அன்று மக்களைத் திரட்டி டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோமென மக்கள் அதிகாரம் சார்பில் கிராமங்களில் தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்போதே லத்தி, கயிறு என போராட்டத்தை ஒடுக்கப் போவது போன்ற முன் தயாரிப்புகளுடன் வந்து நின்று மக்களை பீதியூட்டியது காவல்துறை.
போராட்டத்தன்று விடுவார்களா? கிராமங்களுக்கு சென்று மக்களை மிரட்டியும், டாஸ்மாக் கடைக்கு மட்டுமல்லாமல் கடைக்கு செல்லும் வழி நெடுக 1 கி.மீட்டர் வரை போலீசை குவித்து போராட்டத்திற்கு செல்லவிடாமலும் தடுக்க முயன்றனர். போலீசாரின் தொடர்ச்சியான மிரட்டலை, அச்சுறுத்தலை மீறி விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளையும், சிறுகனூர், C.R பாளையம், ரெட்டிமாங்குடி, கொளக்குடி ஆகிய கிராம மக்களையும் இணைத்து நடத்தப்பட்டப் இப்போராட்டம் போலீசின் மூஞ்சில் கறிபூசும் வகையில் அமைந்தது.
சிறுகனூர் பேருந்து நிறுத்தத்தில் கூடிய தோழர்களையும், மக்களையும் தடுக்கும் நோக்கில் டாஸ்மாக்கிற்கு செல்லும் வழியில் தடுப்பரண் அமைத்தனர். போராட்டம் நடத்த விடாமல் தடுக்க முயன்றால் நெடுஞ்சாலையை மறிப்போம் என தோழர்கள் எச்சரிக்கை விடுத்ததை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் பேரணியாக செல்ல அனுமதித்தனர். மீண்டும் டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் இருந்து அரை கிலோ மீட்டருக்கு முன்பே ஏராளமான போலீசை குவித்தனர். மிரண்டு போன காவல்துறைக்கு அதிர்ச்சி தரும் வகையில் தோழர்கள் சாலை மறியல் செய்தனர்.
பேச்சுவார்த்தைக்கு வந்த காவல்துறையிடம் தோழர்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் எனக்கோரினர். சாலை மறியலின் போது “மூடு டாஸ்மாக்கை!” பாடலால் உந்தப்பட்ட மக்கள் இன்னும் 5 நிமிடத்தில் அதிகாரிகள் வரவில்லை என்றால் நெடுஞ்சாலையை மறிப்போம் என போர்க்குணமாக கிளர்ந்தெழுந்தனர். அதில் ஒரு பெண் “டாஸ்மாக் கடையை உன்னால் முடிஞ்சா மூடு. இல்லன்னா ஒதுங்கிக்கோ நாங்க மூடிக்கிறோம்” என்றார்.
மூடச் சொல் கடையை
மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை தாசில்தாருக்கு நெருக்கடி கொடுத்தது. சமரசமாக பேசி போராட்டத்தை முடித்துவைக்கும் நோக்கில் வந்த தாசில்தார் உமா மகேஸ்வரிக்கு போடப்பட்டிருந்த போலீசாரின் பாதுகாப்பைத் தாண்டி கையைப் பிடித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த முயன்ற பெண்ணிடமிருந்து, பயம் கலந்த எச்சரிக்கை (மக்களின் உணர்வுகளுக்கு ஆட்ப்பட்டுவிடக்கூடாது) உணர்வுடன் விலகி நின்றார். தன் கழுத்திலிருந்த தாலிக் கையிறை காட்டி “இந்தக் கயிறப் பாருங்க, இதுல தாலி இல்ல. இருந்த தாலியும் அடகு வச்சு குடிச்சிட்டான். நீங்களும் ஒரு பொம்பள தான உங்க வீட்டுல இது மாறி நடந்தா சும்மா இருப்பீங்களா. எங்க தாலியறுக்கிற இந்த டாஸ்மாக்கு வேணாம்” என்றார் மற்றொரு பெண். பெண்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத தாசில்தார் தன் உயரதிகாரியுடன் பேசிவிட்டு GM-ம், AC-யும் நாளைக்கு Inspection-க்கு வாறாங்க என தோழர்களிடம் விளக்கமளித்தார். அதை மக்களிடம் தெரிவிக்குமாறு தெளிவாக ஒதுங்கிக் கொண்டனர் தோழர்கள். தாசில்தாரின் உப்புக்கு பெறாத விளக்கத்தை ஏற்க மறுத்து பெண்கள் ஒருமித்த குரலில் டாஸ்மாக்கை மூடு என கலகக் குரலெழுப்பினர்.
பெண்களின் கலகக்குரலுடன் இணைந்த பறையிசையும், தோழர்களின் உணர்வுப்பூர்வமான முழக்கங்களும் மொத்தக்கூட்டத்தையும் டாஸ்மாக்கை நோக்கி முன்னேற வைத்தது. தடுக்க முயன்ற போலீசுக்கும் – தோழர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி மக்கள் அதிகாரம் மற்றும் விசிக தோழர்களை கைது செய்து மக்களை விரட்டிவிடலாம் என்றெண்ணிய போலீசின் சதித்தனம் முறியடிக்கப்பட்டது. தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த தாசில்தாரும், DSP செட்ரிக் மேனுவேலும் நிலைமை மோசமாவதை உணர்ந்து, கடையை மூடிக்கொள்கிறோம். நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என ஒப்புதல் அளித்தனர். இருப்பினும் கலைய மறுத்த மக்களிடம் கடையை மூடாவிட்டால் மீண்டும் மக்களைத் திரட்டி கடையை அடித்து நொறுக்குவோம் என மக்கள் அதிகார தோழர் ரவி நம்பிக்கையளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். கலைந்து செல்லும் போதே அடுத்தமுறை பெட்ரோலை எடுத்து வந்து எரித்துவிட வேண்டும். பெட்ரோல் எதுக்கு? பாட்டிலை உடைச்சு பத்த வச்சாலே எரியும் என தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி – 9445475157
***
போடி போலீசைப் பணியவைத்த மக்கள் அதிகாரம்!
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு கட்டுப்படாமல் போலிசின் தனி ஆட்சிப் பிரதேசமாக தேனிமாவட்டத்தின் போடிநாயக்கனூர் நகரம் இருக்கிறது ! இல்லாவிட்டால், தமிழகமெங்கும் டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் தினசரி செய்தியாக வந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், போடியில் மட்டும் இரு தனியார் பார்கள் மெயின் ரோட்டில் வெளிப்படையாக இயங்க முடியுமா?
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியான போடியில் அதிமுக குண்டர்களை எல்லாம் முறியடித்துவிட்டு, காங்கிரசு கட்சியின் போடி நகரச் செயலாளர் பச்சையப்பன் என்பவர் ‘இந்தியன் மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் பார் நடத்துகிறார் !
போடியின் எஸ்.பி. சிஐடி-யான வெற்றி என்பவரின் அண்ணன் பரணி. இவர் இந்தியக் கப்பற்படையில் தேசபக்த சேவை புரிந்துவிட்டு, தற்போது ஒய்வு காலத்தில் மக்கள் சேவை செய்யும் எண்ணத்தில் போடி-மூணாறு சாலையில் ‘டாடா மனமகிழ் மன்றம்’ தொடங்கி டாஸ்மாக் சாராயம் விற்று வருகிறார் !
இந்த இரு பார்களையும் உடனடியாக மூடக்கூறி “உதிர்ந்த ரோமமா உச்சநீதிமன்ற உத்தரவு?” என்று மக்கள் அதிகாரம் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இரண்டு நாட்கள் மட்டும் மூடிவிட்டு போலீசு துணையுடன் மீண்டும் திறந்துவிட்டார்கள். இருவரும் “கலெக்டரிடம் அனுமதி பெற்றிருப்பதாகவும், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” என்றும் டி.எஸ்.பி. தெரிவித்தார் ! அடுத்ததாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கும் மறுத்துவிட்டது போலீசு.
இந்நிலையில், 29/05/2017-தேதியன்று அறிவிப்பின்றி போடி நகர மக்கள் அதிகாரம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாகக் காலையிலிருந்து நகரம் முழுவதும் துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்துவிட்டு, மாலையில் பெண்கள் உட்பட 30 தோழர்கள் விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்று ‘இந்தியன் மனமகிழ் மன்றத்தை’ முற்றுகையிட்டனர்! அரைமணிநேரம் கழித்து ஆஜரான இன்ஸ்பெக்டர் சேகர் வந்தவேகத்தில் “கடையை மூடிவிடுவோம் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று பேரம் பேசத் தொடங்கினார் ! முதலில், “இந்த பாருக்கு அனுமதி கொடுத்த தாசில்தார், கலெக்டரை வரச் சொல்லுங்கள். இங்குள்ள சரக்குகளை உடனே அகற்றுங்கள். அப்புறம் பார்க்கலாம்” என்று பதிலடி கொடுத்தனர்.
தோழர்களை முறைத்துவிட்டு, ‘ஈனப்போகும் மாடு மாதிரி’ ஓரிடத்தில் நிற்காமல் மேலதிகாரிகளிடம் ஆலோசனை செய்யத் தொடங்கினார். எஸ்.ஐ. ஜெயலட்சுமி தலைமையில் மேலும் சில போலீசுகள் வந்திறங்கியதும் துணிச்சல் பெற்ற இன்ஸ்.சேகர், வேனை வரவழைத்து ஏறச்சொல்லி தோழர்களை மிரட்டினார். தோழர்கள் மறுத்து தரையில் அமர்ந்து முழக்கமிடத் தொடங்கினர். தோழர்களை ஏகவசனத்தில் ஆபாசமாகப் பேசிய சேகர், போலீசாரை ஏவி தோழர்களை அடித்தும், தோழர்களைத் தூக்கமுடியாத கோபத்தில் தரையில் இழுத்துச் சென்று, குண்டுக்கட்டாக தூக்கியும் வேனில் ஏற்றினார்.
அடைக்கப்பட்ட மண்டபத்தில் இன்ஸ் சேகரின் ஆபாசப் பேச்சைக் கண்டித்தும், இரண்டு பார்களிலும் உள்ள டாஸ்மாக் சரக்கை உடனே அப்புறப்படுத்தக் கோரியும் தோழர்கள் உணவு உண்ண மறுத்தும் போராடினர். தோழர்களின் உறுதியைக் கண்டு பின்வாங்கிய போலீசு தன எஜமானரின் உத்தரவுக்கேற்ப இருகடைகளையும் இழுத்து மூடியதோடு உள்ளிருந்த சரக்குகளையும் அப்புறப்படுத்தியது !
ஆனாலும் போலீசின் அடக்குமுறை ஆபாசப் பேச்சுக்களைக் கண்டித்து இறுதிவரை சாப்பிடாமலே வெளியேறிய தோழர்களைக் கண்டு வேறு ஏதேனும் பிரச்சனை செய்து விடுவார்களோ என்றஞ்சி, மறுநாள் காலையில் பகுதித் தோழர்களை அழைத்து “நேற்று நடந்ததை பெரிதுபடுத்தவேண்டாம். எங்களுக்கு மேலிடத்து பிரஷர். நீங்கள் நடத்திய போராட்டம் எங்களுக்கும் நல்லதுதான்” என்று சமாதானம் செய்துள்ளனர் !
தோழர்களின் உறுதியான போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், “டி.வி.யில தினமும் பொம்பளைகள் சாராயக் கடையை உடைக்குறாங்க. எவனும் ஒன்னும் பண்ண முடியல. இங்க போராடுனவங்க நம்மளுக்கும் சேர்த்துதான போராடுனாங்க. இங்க நின்னு வேடிக்கைப் பாக்குறவங்க பத்துப்பேரு சேர்ந்து நின்னிருந்தா போலீசு அவங்கள அடிப்பானா?” என்று அங்கிருந்தவர்களைப் பார்த்து கேட்டார் ! அவரை எதிர்த்துப் பேசாமல் ஒருவித குற்ற உணர்வுடன் மக்கள் கலைந்து சென்றனர் !
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் மக்கள் அதிகாரம்
போடி
***
கோத்தகிரி M கைகாட்டி டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தில் 30 பெண்கள் கைது, சிறையில் அடைப்பு!
மலை மாவட்டமான நீலகிரியில் நிரந்தரமான வேலை , வருமானம் என்பது கிடையாது. பெண்கள் தேயிலை பறிப்பு வேலைக்கும், ஆண்கள் உதிரியாகக் கிடைக்கக் கூடிய பெயின்டிங், கட்டிட வேலைக்கும் செல்வதுதான் நிலையாக உள்ளது. தேயிலை விலை வீழ்ச்சியினால் இப்பொழுது இந்த வேலைகளும் கிடப்பது என்பது அரிதாக உள்ளது. இந்த வேலைகளில் கிடைக்கக் கூடிய சொற்பமான வருமானத்தில் ஆண்கள் குடித்துவிட்டு வருவது என்பதும், குடிக்க பணம் இல்லாமல் போனால் பணம் கேட்டு பெண்களை அடித்துத் துன்புறுத்துவதும் தொடர் கதையாக உள்ளது. பெண்கள் வேலைக்கு சென்று செலவுக்கு வைத்துள்ள பணத்தை பிடுங்கிக் கொண்டு போவது என கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி மாவட்டம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகின்றது. அந்த வகையில் கோத்தகிரி தாலுக்காவுக்கு உட்பட்ட M கைகாட்டி பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடை ஏற்கனவே கட்டபெட்டு என்ற பகுதியில் இயங்கி வந்த கடை ஆகும். அங்கு மக்கள் போராடி விரட்டிய கடையை இந்தப் பகுதியில் திறந்து உள்ளது மாவட்ட நிர்வாகம். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அங்கு வந்த தாசில்தார் , கோத்தகிரி காவல் ஆய்வாளர் போராடிய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாளில் கடையை மூடிவிடுவதாகவும் அப்படி இல்லையென்றால் கடையை உடைக்க நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று வாக்குறுதி தந்தனர். வழக்கம்போல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆத்திரம் கொண்ட மக்கள் கடையை அடித்து நொறுக்கினர். இதில் மக்கள் அதிகாரம் தோழர்கள், பெண்கள் உட்பட 37 பேரை கைது செய்து கடுமையான வழக்குப் பிரிவுகளைப் போட்டு சிறையில் அடைத்து உள்ளது காவல்துறை.
சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டது, அத்துமீறி கடையில் நுழைந்தது, மொத்தமாகக் கூடியது என்று வழக்கு போட்டு தங்களை சட்டத்தின் காவலர்களாக காட்டிகொண்டனர் கோத்தகிரி காவல்துறை. ஆனால் இதே காவல்துறை கோத்தகிரியில் பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டும், பொறுக்கிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு புகார் கொடுக்கும் பெண்களிடம் உங்கள் மீதும் வழக்கு போடுவோம் என்று மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைப்பதுண்டு. தடை செய்யப்பட்ட லாட்டரிகள் தாராளமாக காவல் நிலையம் அருகிலேயே கிடைப்பதையும் அனுமதிக்கிறது. இவையெல்லாம் கோத்தகிரி உளவு போலீஸ் மற்றும் கோத்தகிரி ஆய்வாளர் பாலசுந்தரம் ஆசியுடன் நடக்கிறது.
இந்த சட்டவிரோத கிரிமினல் கும்பல் தான் நியாயமாகப்போராடியவர்களை சட்டவிரோதம் என்று சிறையில் அடைக்கிறது. கைது செய்யப்பட்ட மக்களையும், தோழர்களையும் பார்க்கச்சென்ற புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத்தலைவர் ராஜாவை பார்க்க விடவில்லை. ஏன் என்று கேட்டதற்கு தோழர் ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது. போராட்டத்தில் கலந்து கொள்ளாத மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் வழக்கு போட்டு தனது வெறித்தனத்தைக் காட்டியுள்ளது.
இந்த வழக்கில் பிணை கேட்டு நீதிமன்றம் சென்றால் ஒருவருக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள் நீதிபதிகள். வழக்கு விசாரிக்குமுன்பே தண்டனை வழங்கி நாங்களும் மக்களை ஒடுக்குவதில் சளைத்தவர்கள் அல்ல என்று நீதிபதிகள் நிரூபித்து உள்ளனர். இந்த அபராதத்தைக் கட்ட முடியாது என்று உயர்நீதிமன்றம் சென்று உள்ளனர் தோழர்கள். இன்றுடன் 15 நாள் ஆகிறது அபராதம் கட்டி வெளியே வரமாட்டோம் என்று உறுதியுடன் போராடி வருகின்றனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோத்தகிரி.
***
ஓலையூர் டாஸ்மாக் கடை மூடல் !
மக்களின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!
மக்கள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி நிச்சயம் “மக்களே அதிகாரத்தை கையிலெடுப்போம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்”
இன்றே இணைவீர் மக்கள் அதிகாரத்தில்
தகவல் : மக்கள் அதிகாரம், ஓலையூர் கிளை – 96591 94257.