Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 487

அச்சப் பத்து – தெருவில் அருளியது !

5

அச்சப் பத்து
(தெருவில் அருளியது)

புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்
பொய்யில்வாழ் ஆர்.எஸ்.எஸ். அஞ்சேன்
மற்றும் ஓர் நஞ்சை அஞ்சேன்
மறைகுரு மூர்த்தி அஞ்சேன்
குடத்தில்வாழ் தேளும் அஞ்சேன்
கொலைவெறி வாளை அஞ்சேன்
மடத்தில் வாழ் உருவைக் கண்டால்
அம்ம நாம்! அஞ்சு மாறே!

விரட்டிடும் நாயும் அஞ்சேன்,
வெருட்டிடும் பேயும் அஞ்சேன்
கத்தியின்  கூர்மை அஞ்சேன்.
பக்தியின் போர்வை அஞ்சேன்
வன்சுடு காடும் அஞ்சேன்
வரும் நரி ஊளை அஞ்சேன்
சின்னவாள் தியானக் கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

டெங்கெலாம் வரினும் அஞ்சேன்
தினம் ஒரு வைரஸ் அஞ்சேன்.
பொங்கிடும் மதுவும் அஞ்சேன்
புழுநெளி உடலை அஞ்சேன்
முத்திய நோயும் அஞ்சேன்
முகமெலாம் வடுக்கள் அஞ்சேன்
‘நித்தியின்’ சிரிப்புக் கோலம்
அம்ம நாம்! அஞ்சு மாறே!

பஸ் டிக்கெட் பார்த்தும் அஞ்சேன்
ரயில்டிக்கெட் பார்த்தும் அஞ்சேன்
ஜி.எஸ்.டி. வரியும் அஞ்சேன்
பி.எச்.டி. ரேட்டும் அஞ்சேன்
எம்பிரான் பித்தை அஞ்சேன்
ஈசன் கை ஓடும் அஞ்சேன்
தம்பிரான் சொத்தைப் பார்த்தால்
அம்ம நாம்!   அஞ்சு மாறே!

பொழுதுக்கும் சீரியல் அஞ்சேன்
புழுத்திடும் டி.வி. அஞ்சேன்.
எச்சுராஜா வாயை அஞ்சேன்
எஸ்.வி. சேகர்  மெய்யை  அஞ்சேன்
நெக்குரு அடிமை அஞ்சேன்
நீடிக்கும் வறுமை அஞ்சேன்
‘சத்குரு’ ஞானக் கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

வரையிலா வாட்ஸ் அப் அஞ்சேன்
வன்மனக் காட்சி அஞ்சேன்
வட்டியின் கொடுமை அஞ்சேன்
வருத்திடும் சாதி அஞ்சேன்
புத்தியில் உரைக்கா தஞ்சேன்
பக்தியின் கொழிப்பைப் பார்த்தால்
அம்ம நாம்!   அஞ்சு மாறே!

காய்கனி விலையை அஞ்சேன்
கட்டணக் கழிப்பறை அஞ்சேன்
பிழிந்திடும் வேலை அஞ்சேன்
பிசிறிடும் கூலி  அஞ்சேன்
தெருக்களின் வெறுமை அஞ்சேன்
தேய்ந்திடும் உழைப்பை அஞ்சேன்
குருக்களின் தட்டைப் பார்த்தால்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

ரஜினியின் பித்துவம் அஞ்சேன்
கமலின் தத்துவம் அஞ்சேன்
போலீசின் தடியடி அஞ்சேன்
பொறுக்கியின் அடிதடி அஞ்சேன்
நாயர் கடை சோடா அஞ்சேன்
நந்துலால் பீடா அஞ்சேன்
ஜீயரின் சோடா கோலம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

வாள் உலாம் எரியும் அஞ்சேன்
வந்திட்ட பட்ஜெட் அஞ்சேன்
தகையிலா விலையை அஞ்சேன்
தறியிலா ஆட்சி அஞ்சேன்
வாடிய பயிரை அஞ்சேன்
வளர்ச்சியின் பக்கோடா அஞ்ச‍ேன்
மோடியின் அறிவு வேகம்
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

நிலையிலா வேலை அஞ்சேன்
நெறியிலா சம்பளம் அஞ்சேன்
உயிரிலா ஆற்றை அஞ்சேன்
பயிரிலா நிலத்தை அஞ்சேன்
செடியிலா ஊறை அஞ்சேன்
சிதறிய உறவை அஞ்சேன்
மோடியின் வளர்ச்சிப் பாதை
அம்ம நாம்!  அஞ்சு மாறே!

– துரை. சண்முகம்

 

திகாருக்கே அனுப்பினாலும் போராட்டம் தொடரும் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் !

6

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது பிளாண்ட்டின் கட்டுமான வேலைகளை எதிர்த்து அ.குமரட்டியாபுரம் பொதுமக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நடக்கிறது. 1996 முதல் இயங்கிவரும் இந்த ஆலையில் வெளியேறும் நச்சு வாயுக்களாலும், நிலத்திற்குள் செலுத்தப்படும் அமிலக்கழிவுகளாலும் தூத்துக்குடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஸ்டெர்லைட்டை அடுத்துள்ள அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள் நேரடியாக தன் ஊர் அழிவதைக்கண்டு பொறுக்கமுடியாமல் குமுறி வெடித்துள்ளனர். இங்கு 40 வயதான சண்முகத்தாய் கேன்சருக்கு பலி! கருப்பை புற்றுநோயும் பரவுகிறது! ஆலையின் சுற்றுச்சுவர் வரை சென்று ஆடுமேய்த்து வந்த மாடசாமியின் கண் குருடானது!

கருவுரும் பெண்களுக்கு 3 மாதத்திலேயே கருச்சிதைவு தொடர்கதையாகிவிட்டது; தோலில் ஒவ்வாமை; 15 ஆண்டுக்கு முன்பு வரை குடிநீர் தந்த கிணறுகளில் இன்று அமிலநீர்தான் சுரக்கின்றன! இதை குடிக்க முடியாது. குடித்தால் தலைசுற்றும், மயக்கம் வரும். தண்ணீரை விட அடர்த்தியான இந்நீரை கால்நடைகள் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, அதன் காரணமாக அவை இறக்கின்றன.

இரவில்தான் அதிக அளவு உற்பத்தியும் நடக்கிறது. சல்பர் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது. இவ்வளவும் வருடத்திற்கு 1 லட்சம் டன் உற்பத்தி செய்யும் பிளாண்ட்- 1 வாரி வழங்கியவை!  இந்நிலையில் 4 லட்சம் டன் உற்பத்தி செய்யும் இலக்குடன் பிளாண்ட் – 2 -ன் கட்டுமானத்தை எப்படி அனுமதிப்பது? உயிரைக்கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என களமிறங்கியுள்ளனர் கிராம மக்கள்.

“ஆளுக்கொரு புதுவீடு, 5 லட்சம் பணம்” என்று ஆலை நிர்வாகம் தனது ஆட்களை வைத்து பஞ்சாயத்தும் பேசியது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் ஊரா? – ஊரை அழிக்க கம்பெனி போடும் பிச்சையா? எதுமுக்கியம் என்பதில் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்  தெளிவாக சிந்தித்து சரியான முடிவெடுத்தனர்.

ஆலை விரிவாக்கப்பணிகளை தடுக்க கோரி 05.02.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர். மத்திய அரசால் தேசிய அளவில் சிறந்த நிறுவனம் என்று பல துறைகளில் பரிசளிக்கப்படும் ஸ்டெர்லைட்டை மூட அரசிடமே மனு தருவது தீர்வைத் தருமா? காற்றும், நிலமும், நிலத்தடி நீரும் கெட்டு, கேன்சரும் சிறுநீரக செயலிழப்பும் ஆஸ்துமாவும் தோல் நோய்களும் பெருகியுள்ள தூத்துக்குடிக்கு தூய்மையான நகரம் என்ற விருது தந்து அழகுபார்க்கிறது அரசு! எனினும் போராட்டத்தை முறைப்படி அரசுக்கு மனுகொடுத்து தொடங்கினர் மக்கள்.

06.02.18-ல் ஸ்டெர்லைட் கட்டுமான வேலை நடக்கின்ற இரண்டாம் வாயிலில் முற்றுகை. நிலத்தடி நீரை விசமாக்கிவரும் ஸ்டெர்லைட் தரும் லாரி குடிநீரை வாங்க மறுத்தனர். 07.02.18-ல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சிப்காட் காவல்நிலையத்தில் வைத்து DSP யின் மிரட்டல் “கோர்ட்டுக்கு போங்கள்.இப்படி எல்லாம் கேட்டில் நிற்கக்கூடாது. அரெஸ்ட் பண்ணி உள்ளே போட்டுருவோம்”. ஊர்மக்களோ “எங்க குடிதண்ணில பாலிடால கலந்துவுட்டுருங்க. ஊர் மொத்தமா செத்துடுறோம்.நீங்கல்லாம் கம்பெனிக்கு காவலா நின்னுக்கங்க” என்று முகத்தில் அறையும்படி சொல்லியுள்ளனர்.

08.02.18-ல் மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். “போராட்டம் முடியும்வரை ஊரிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் ” ஊர்சார்பாக பள்ளிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை.  “போராட்டம் என்று வந்து பெட்டி வாங்கிகொண்டு நம்மை ஏமாற்றியதே கட்சிகளின் வரலாறு! நாம் இனி கட்சிகளின் பின் செல்லக்கூடாது. ஊர்தான் சுயமாக போராடனும். ஊர்தான் தலைமை தாங்கனும். எந்த முடிவாக இருந்தாலும் ஊர்க்கூட்டம் மூலம்தான் எடுப்பது” என்று முடிவெடுத்தனர்.

தலைக்கு 500 ரூபாய் என்று போராட்ட நிதி திரட்டினர். உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டனர். மறுத்தது ஸ்டெர்லைட்டின் ஏ(கா)வல்துறை! 12.02.18 அன்று 2மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதையே வாய்ப்பாக்கி மையவாடி பேருந்து நிறுத்தம் எதிரில் உண்ணாவிரதத்தை நடத்தினர் கிராம மக்கள். மாலை 5.00 மணி ஆகியும் கலையாத உறுதியை கண்டு கொதித்த அரசு பந்தல் போட்டவரை மிரட்டி பிரிக்க வைத்தது. மைக்செட்காரரை மிரட்டி எடுக்க வைத்தது.

ஓரமாக அமைதியாக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவர்களை கலைத்து சாலைக்கு விரட்டியது போலீசு. MGRபூங்கா வாயிலை ஒட்டி அமர்ந்து விட்டனர் மக்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் கொட்டும் பனியில் சாலையோரம் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்களும் அவர்களுடன் இரவில் தங்கினர்.

 

13.02.18 அன்று காலை போராட்டம் தொடர் முழக்க ஆர்ப்பாட்ட வடிவத்தை எட்டியது. பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் பிரதிநிதிகள் சமூக அக்கறை கொண்டவர்கள் வர ஆரம்பித்தனர். கல்லூரி மாணவர்களும் வந்து பார்த்தனர். எங்கே இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாகி விடுமோ என்ற அச்சம் ஸ்டெர்லைட்டுக்கு உண்டு. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இக்கம்பெனி தந்த உணவை திருப்பி அனுப்பியதும், அடுத்த போராட்டம் உனக்கெதிராகத்தான் இருக்கும் என்று எச்சரித்ததும் மறந்திருக்குமா? மாணவர்கள் வந்துவிடக்கூடாது என்று கல்லூரிகளில் கண்காணித்தது மாவட்ட நிர்வாகம்.

மதியம் 11 மணியளவில் போராடியவர்களை தாக்கி கைது செய்ய ஆரம்பித்தது அரசு. இதில் ஒரு மாணவன் உட்பட மூவர் காக்கிகளால் அடிபட்டு சாலையில் சரிந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஊர்மக்களை இரண்டு மண்டபத்தில் ஆண்கள், பெண்கள் என்று பிரித்து  அடைத்தனர்.

வாழ்வுரிமைக்காக அமைதியாக எதிர்ப்பை தெரிவித்து போராடிய தங்களை அடிக்கும் போலீசை வெறுப்புடன் பார்த்தனர் மக்கள். அவர்கள் தந்த உணவையும் தொடவில்லை. இத்தகவல் தெரிந்தவுடன் குழந்தைகளுக்கு மட்டும் வெளியிலிருந்து உணவு தயாரித்து தந்தனர் சமூக ஆர்வலர்கள்.

மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்களை பார்க்கவிடாதது மட்டுமல்ல, வெளியேயும் நிற்கக்கூடாது என்று கலைத்தனர். அருகிலுள்ள தெருவில் சற்று தள்ளியிருந்த ஒரு கட்டிடத்தின் படியில் அமர்ந்தவர்களிடம் மீடியாவினர் பேட்டி எடுக்க ஆரம்பிக்கவே ASP தலைமையிலான கடமை தவறா காவலர்கள் அங்கும் ஓடிவந்து தடுத்தனர்.

“இங்கே உட்காரக்கூடாது. ரோட்டில் பேட்டி தர காவல்துறையிடம் அனுமதி வாங்கனும். இல்லை பத்திரிக்கை ஆபீஸ்ல போய் கொடுங்க” என்று தன்  ‘கடமையை’ செய்தார் ASP.   “போராட்டத்தை ஆதரிப்பதும், கூடி நிற்பதும், பேட்டி கொடுப்பதும் எங்கள் உரிமை. நீங்கள் தடுக்க முடியாது” என்று  மக்கள் உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் எதிர்த்து பேசவே  போலீசார் பின்வாங்கினர். எனினும் ஊடக நண்பர்கள் தமது உரிமை பற்றி வாய் திறக்கவில்லை. எதற்கு வம்பு என்பதைபோல் PRPC தோழர் அரிராகவனை அங்கிருந்து மேலும் தள்ளி அழைத்துச்சென்று பேட்டி எடுத்தனர்.

அதே நேரம் பெண்கள் அடைக்கப்பட்ட மண்டபத்தில் ஆய்வாளர் ஹரிகரனோ  “உங்களை கோவை, சேலம், வேலூர்னு கொண்டுபோய் ஜெயில்ல போடப்போறோம்.  ஒழுங்கா நாங்க சொல்றத கேளுங்க” என்றிருக்கிறார்.  தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளரான இவரின் மனைவியோ “இவளுங்க பேசுனதையே திரும்பதிரும்ப சொல்றாளுங்க. நம்ம பேச்ச கேக்கறமாதிரி தெரியல்ல” என்று ஆத்திரமடைந்துள்ளார். “டெல்லி திகாருக்கே அனுப்பினாலும் சரி, போராட்டம் தொடரும்” என்று பெண்கள் பதிலடி தந்துள்ளனர்.

இரவு 8 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு என்று 10 பேரை தனியாக அழைத்துச்சென்று அவர்களை தெற்கு காவல் நிலையத்தில் வைத்தனர். நள்ளிரவில் 9 பேரை ரிமாண்ட் செய்தனர். மறுபுறம் மண்டபத்தில் இருந்தவர்களை போகும்படி அறிவித்தனர். எங்களையும் ரிமாண்ட் செய் அல்லது அவர்களையும் வெளியே விடு என்று அறிவித்தனர் ஊர்மக்கள்.

ஆண்கள் வீட்டிற்கு போய்விட்டனர் என்று பெண்களிடமும்,பெண்கள் போய் விட்டனர் என்று ஆண்களிடமும் கூறி சதி செய்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட தனிநபர்களாக உடன் கைதான சிலர்  வெளியே வந்துவிடவே, கிராம மக்களும் குழப்பத்திற்குள்ளாகி வெளிவந்தனர். வெளிப்படையாக அரசு எந்திரம் ஸ்டெர்லைட் பக்கம் நிற்கும் சூழலில், கம்பெனி வேண்டும் என்று சுய உதவிக்குழு மூலம் முத்தையாபுரம் பெண்களை கலெக்டரிடம் மனுகொடுக்க வைத்துள்ள நிலையில், கம்பெனி கையாட்கள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்கவும் கூடும். இந்த முதல்சுற்று அனுபவத்தை கணக்கிலெடுத்து அடுத்தகட்ட போராட்டத்தை தொடரவேண்டிய நிலையில் உள்ளனர் அ.குமரட்டியாபுரம் கிராம மக்கள்.

அரசிடம் கெஞ்சியோ மனுகொடுத்தோ கார்ப்பரேட்டுகளைக் விரட்ட முடியாது! அனைத்து கிராமங்களும் ஒன்றிணைந்து மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து விரட்டியாக வேண்டும்! இணைந்து போராட தயாராக வேண்டும் தூத்துக்குடியின் இளைஞர் படை!

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.

 

வழக்குகளும் மிரட்டல்களும் எங்களை முடக்காது – கோத்தகிரி மக்கள் அதிகாரம் !

0
Exif_JPEG_420

ந்த அரசுக்கட்டமைப்பு ஆளத்தகுதியற்றதாக மாறிவிட்டது என்பதை சமீபகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. அதற்குச் சிறந்த உதாரணமாக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் அன்றாடம் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த அரசமைப்பின் தோல்வியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதில் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அதை தமிழகத்தில் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக கோத்தகிரி பகுதியில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காகவும், மதவெறியர்கள் மற்றும் சாதிவெறியர்களின் கலவரங்களுக்கு எதிராகவும், அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து கோத்தகிரி மக்கள் அதிகாரம் செயல்பட்டு வருகிறது.

 

Exif_JPEG_420
கோத்தகிரியில் நடந்த மூடு டாஸ்மாக் போராட்டம் – கோப்புப் படம்

மக்களுக்காக போராடி, அடிபட்டு சிறைகுச் சென்று பல வழக்குகளைச் சந்தித்து வருகிறது கோத்தகிரி மக்கள் அதிகாரம். கடந்த இரண்டரை (2.5) ஆண்டுகளாக டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட அரசுக்கு நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

விவசாயிகள் பிரச்சினை, ஜல்லிக்கட்டுப் போரட்டம், மற்றும் நீதிமன்ற ஊழலுக்கு எதிராக வழக்கறிஞர்களின்போராட்டம் ஆகியவற்றுக்காக அவர்களுடன் இணைந்து போராடியது மக்கள் அதிகாரம்.

கார்ப்பரேட் கைக்கூலி, மத வெறியன் மோடி தமிழகத்திற்கு வந்த போது அவருக்கு எதிராக கோத்தகிரி மக்கள் அதிகாரத்தின் சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் பணமதிப்பழிப்பு, நீட் தேர்வு, கோகுல்ராஜ், உடுமலை சங்கர் படுகொலை ஆகியவற்றிற்கு எதிராக போராடினோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்தோம்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வைப்புத் தொகையை இந்த அரசு சூறையாடியதைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் மக்களிடம் “ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்” எனப் பேட்டி அளித்ததை ஆதரித்தும், தூய்மை இந்தியா எனக் கூறிக் கொண்டு பொதுக் கழிப்பறை கூட கட்டித்தர வக்கற்ற அரசைக் கண்டித்தும் சுவரொட்டி மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

100 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் மக்களை வனத்துறைக்கு சொந்தமான இடம் எனக் கூறி அவர்களது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து விரட்டியடிக்கும் அரசையும் அதற்கு துணை நிற்கும் நீதிமன்றத்தையும் கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் செய்து, போராடும் மக்களுக்கு கடைசி வரை துணை நின்று வழிகாட்டினோம்.

அடிமேல் அடிவாங்கிக் கொண்டு இருந்த கோத்தகிரியை போராடும் களமாக மாற்றியதில் மக்கள் அதிகாரத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பது உரிமைக்காக போராடும் பலருக்கும் தெரியும்.
கோத்தகிரியில், இலஞ்சம், ஊழல், கட்டப்பஞ்சாயத்தும் பொது சொத்தை சூறையாடி சொத்து குவிப்பது, உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை ஆதரித்து வரும் அரசின் அனைத்து உறுப்புகளும், மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகளால் மக்கள் முன் அம்பலப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மக்கள் அதிகாரத்தின் செய்ல்பாடுகளை முடக்க அரசின் ஏவல்படையான போலீசை வெறி பிடித்த மிருகம் போல அரசின் அத்தனை உறுப்புகளும் கட்டவிழ்த்து விடுகின்றன.

கந்துவட்டி, லாட்டரி, குட்கா விற்பனை, பொதுச்சொத்து ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சட்டவிரோத கும்பல்களிடம் மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை, மற்றும் தினமும் என இலஞ்சம் வாங்கும் போலீசுக்கும் மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகள் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் காரணமாக, மக்கள் அதிகாரத்தின் செயல்பாடுகளை முடக்க அனைத்துவகையான முயற்சிகளையும் செய்து வருகிறார் கோத்தகிரி போலீசு ஆய்வாளர்.

போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, எந்த விதமான பிரச்சாரங்களுக்கும் அனுமதி மறுப்பது, வழக்கு போடுவது, தோழர்களைத் தனியாகப் பார்த்து மிரட்டுவது, புகார் கொடுத்தால் ஏற்க மறுப்பது என ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் ஆய்வாளர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

சுவரொட்டி வாசகங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகக் கூறியும், கலகத்தைத் தூண்டுவதாகக் கூறியும், பொது இடங்களை அசுத்தம் செய்வதாகக் கூறியும் இதுவரை 11 வழக்குகளை மக்கள அதிகாரம் தோழர்கள் மீது போட்டுள்ளது.

சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களை காப்பாற்றாமல், லஞ்சலாவண்யத்தில் ஊறித்திளைக்கும் போலீசு, மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் சுவரொட்டி ஒட்டினால் வழக்கு போடுகிறது. போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்கப் பார்க்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும், அதனை மக்கள் அதிகாரம் சந்திக்கத் தயார். அடக்குமுறைக்கோ, அதிகாரத் திமிருக்கோ அடங்கப் போவது இல்லை. தொடர்ந்து, வீரியமாக இயங்கிக் கொண்டே இருப்போம்.

ஒட்டுமொத்தத் தமிழகமும் மக்கள் அதிகாரத்தின் களம். போலீசின் வழக்குகள் மக்கள் அதிகாரத்தின் களத்தினை உறுதி செய்யும் என்பதை கோத்தகிரி ஆய்வாளர் புரிந்து கொள்ளட்டும்.

இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழியில்லை. அனைத்து வழிகளும் ஆள அருகதையற்ற இந்த அரசால் அடைக்கப்பட்டுவிட்டது. மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுப்பது தான் ஒரே தீர்வு. அதனை மக்கள் அதிகாரம் முன் நின்று செய்துவருகிறது.

இன்றே மக்கள் அதிகாரம் அமைப்பில் இணையுங்கள் ! நன்றி !

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோத்தகிரி.

 

மோடி 2018 பட்ஜெட் : முதலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா ! ஆர்ப்பாட்டங்கள் !

0
திருவள்ளுர் மேற்கு மாவட்டம் ” மோடி-ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட்! முதலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா!”என்ற தலைப்பில் ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் 10.02.2018 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணிக்கு விண்ணதிர முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் தோழர் ம.சரவணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மோடி – ஜெட்லி கூட்டணியில் போடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் உழைக்கும் மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கானது என்றும், இதனால் நாடு வளர்ச்சிப்பாதை நோக்கி செல்லும் என்று கூறும் மோடி, மக்கள் மத்தியில் மேலும் மேலும் பொய்யான வாக்குறுதிகளை கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று உரையாற்றினார்.
பிறகு கண்டன உரையாற்றிய மாவட்ட செயலாளர் தோழர் மு.முகிலன்  கார்ப்பரேட்களின் நலனுக்காக போடப்பட்ட பட்ஜெட் என்றும், மோடியின் தேர்தல் வாக்குறுதிகளும், வளர்ச்சி, வல்லரசு என்ற கோஷங்கள் எல்லாம் கார்ப்பரேட்களின் நலன் சார்ந்தது என்பது நிரூபணமாகி வருகிறது. தொழிலாளர்களின் தொடர் வேலை பறிப்பு, சிறுகுறு தொழில்கள் மறுகாலனியாக்க நடவடிக்கையின் விளைவாக அழிக்கப்படுகிறது, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்ப்பதின் நோக்கம் குறித்தும், விவசாய பட்ஜெட் என்பது விவசாயத்துறையை கார்ப்பரேட்டின் வசம் ஒப்படைக்கும் முயற்சி என்றும் இந்த பட்ஜெட் முழுவதும் வெற்று சவடால்களும், வாய்ஜாலங்களால் அலங்கரிக்கப்பட்டு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரான பட்ஜெட் என்பதை தனது கண்டன உரையில் விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட கிளை/இணைப்பு சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர். அப்பகுதியின் வியாபாரிகள், பாதசாரிகள் மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் என அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கவனித்துக் கொண்டு இருந்தனர்.
இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் தோழர் து.லெட்சுமணன் நன்றியுறையுடன் கூட்டம் முடிவுற்றது.
 ( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இவன்
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
***
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட் மோசடி பட்ஜெட் ! முதலாளிகளிக்கு கல்லா! மக்களுக்கு குல்லா! “ என்கிற தலைப்பின் கீழ் 10.02.18 மாலை கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் தோழர் ஹரிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் சதிஷ், அரசால் திட்டமிட்டு சீரழிக்கப்படும் போக்குவரத்து துறை குறித்தும், அதனால் பாதிப்படையும் தொழிலாளர்களை குறித்தும் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார் மோடி அரசின் பட்ஜெட் மோசடியான பட்ஜெட் என்றும், அது மக்களுக்கானது அல்ல, முதலாளிகளின் நலனுக்கானது என்பதை விளக்கிப் பேசினார்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் மெய்யழகன் நன்றியுரையாற்றினார்.
100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டக் கூட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
இவன்
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
***

” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட் மோசடி பட்ஜெட்! முதிலாளிகளுக்கு கல்லா, மக்களுக்கு குல்லா! ” என்ற முழக்கத்தை முன்வைத்து ஒசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக (10.02.2018 சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில்  ஓசூர் ராம் நகர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியோர் தற்போது மத்திய அரசால் போடப்பட்டுள்ள 2018 பட்ஜெட் என்பது நம் நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் பிரிவை சேர்ந்த விவசாயி, தொழிலாளி, சிறு- குறு வணிகம் மற்றும் சிறு-குறு தொழில் முனைவோர் அனைவருக்கும் எதிராகவும், அதே சமயம் இன்னொருபுறம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் தங்குதடையற்ற சுரண்டல் நலனுக்காவே போடப்பட்ட பட்ஜெட் என்ற உண்மையை பல்வேறு விவரங்களுடன் தரவுகளோடு அம்பலப்படுத்திப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் ஒரே குரலாய் மோடி – ஜெட்லியின் கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டிற்கு எதிராக விண்ணதிர முழக்கங்களை முழங்கினர். திரளான மக்கள் இவ்வார்ப்பாட்டத்தை கேட்டு வாழ்த்தி ஆதரித்துச் சென்றனர்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்,
செல் – 9788011784.

***

” மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட்  மோசடி படஜெட்! முதலாளிக்கு கல்லா ! மக்களுக்கு குல்லா ! ” என்ற முழக்கத்தின் அடிப்படையில்  காஞ்சிபுரம்  காந்தி ரோடு  பெரியார் துண் அருகே  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  பு.ஜ.தொ.மு – வின்  மாவட்டத் தலைவர் தோழர் சரவணன்  தலைமை தாங்க  மாவட்ட செயலாளர் தோழர் சிவா தனது கண்டன உரையில் “ மோடி தலைமையிலான  மத்திய அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் அறிவித்த திட்டங்களும் அரசின்  நடவடிக்கைகளும்   கார்ப்ரேட்டுகளுக்காக நடக்கும் ஆட்சி என்பதை தினந் தோறும் நிருபித்தார் மோடி !

GST வரி விதிப்பும்  பண மதிப்பு இழப்பு  ஆகியவை மக்களின் துயரத்திற்கு  அடிப்படையாக இருக்கின்றன.  பொதுத்துறையை 80,000 கோடிக்கு  விற்பது முதல்  இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அம்பானிக்கு அனுமதி  வரை  தற்போதைய பட்ஜெட்டும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கானதுதான்  என்பதை அம்பலப்படுத்தி   இந்த  அரசமைப்பில்  உழைக்கும் மக்கள் வாழ முடியாது.  மக்களுக்கு அதிகாரம் உள்ள புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டும்” அறை கூவினார்.

இடையிடையே  மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ள அறிவிப்புகளை அம்பலப்படுத்தி  முழக்கம் இட்டது  மக்களை  ஈர்க்கும் வகையிலே இருந்தது.

தோழமையுடன்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞசிபுரம் மாவட்டம் – 8807532859

***

மோடி – ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட்! முதலாளிகளுக்கு கல்லா! மக்களுக்கு குல்லா! என்ற தலைப்பின் கீழ் வேலூர் மாவட்டம், மண்டி வீதியில் ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், தோழமை அமைப்பான ம.க.இ.க. தோழர்கள் என மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்று நடத்தினார். மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மணி நன்றியுரையாற்றினார். இவ்வார்ப்பாட்டம் அனைத்து துறைகளும் கார்ப்பரேட் மயமாவதை அம்பலப்படுத்தும் விதமாகவும், இதற்கு தீர்வு புதிய ஜனநாயக புரட்சிதான் என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.

மண்டி வீதியில் வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள், சுமை தூக்குவோர் என நூற்றுக்கணக்கானோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. கூட்டம் கட்டுப்கோப்புடன் நடந்தது. மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தோழமையுடன்
புதிய ஜனநாகத்தொழிலாளர் முன்னணி
வேலூர்

***

” மோடி–ஜெட்லி 2018 -19  பட்ஜெட் : முதலாளிகளுக்கு  பட்டுக்கம்பளம்! மக்களுக்கோ  பட்டை நாமம்! என்கிற முழக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டம்  புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக  பென்னாகரத்தில்   பிடிஓ  அலுவலகம், டெம்போ  ஸ்டேண்ட்   ஆகிய  இரண்டு  இடங்களில்  07.02.2018  அன்று மாலை  4 மணி அளவில் தோழர் சத்தியநாதன்  தலைமையில்   தெருமுனைக்கூட்டம்   நடைப்பெற்றது.  அவரது உரையில்  ஆண்டு தோறும்  பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அதேபோல தான் இந்த ஆண்டும் தாக்கல் செய்துள்ளனர். விவசாயம், கல்விக்கு பட்ஜெட் கிடையாது. ஒட்டுமொத்தமாக மக்களுக்கு அல்வா கொடுக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது. 8 கோடி மக்களுக்கு  சிலிண்டர் மானியம் ரத்து . எனவே  நம்முடைய பிரச்சினையை  தீர்க்க வேண்டுமானால்  நாம்தான்  போராடவேண்டும்.  முதலாளித்துவ பொருளாதாரத்தை  ஆயிரம் ஜெட்லி வந்தாலும்  தூக்கி நிறுத்த முடியாது என்று அம்பலப்படுத்தி பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்  தோழர்  ஜானகிராமன் பேசுகையில் ,மோடி பட்ஜெட் என்பது வரபோகும் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து  போடப்பட்டுள்ளது. இவர்கள் போடக்கூடிய வரி எல்லாமே மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.  10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு  ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதாயமடைவது  தனியார் மருத்துவ முதலாளிகள்தான் லாபமடைய போகிறார்கள்.

விவசாயத்திற்கு 11 லட்சம் கோடி  மானியம் வழங்கப்படும் என்கிறார்கள் . இது விவசாயத்தை  பதப்படுத்தும்  நிறுவனங்களுக்கு கொடுக்க போகிறார்கள். இதில் விவசாயிகளுக்கு இடைதரகனாக இருந்து  கொள்ளையடிப்பது,  தனியார் கார்ப்பரேட் நிறுவனம். எனவே  இந்திய விவசாயத்தையும், கல்வியையும்  தனியாருக்கு கொடுக்கும்  பட்ஜெட். மேலும் குடியரசு தலைவருக்கு  ரூ.5 லட்சம் சம்பளம், அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு   இதற்காக  மக்களின் மீதான வரியை அகலப்படுத்துகிறார்கள். எனவே  எந்த  அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சினை தீரப்போவது இல்லை, மாற்றாக  தனியார்மயம், தாராளமையம் , உலகமய எதிராக போராடுவதுதான் ஒரே தீர்வு.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் பேசுகையில், அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது விவசாயம். அதற்கு மானியமாக 11 லட்சம் ஒதுக்கியுள்ளதாக  கூறுகின்றனர். இது விவாசாயிகளு போய் சேரபோவது இல்லை,  விவசாயத்தை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு, அம்பானி, அதானிக்கும் போய் சேரபோகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று சொல்கிறார்கள். எப்படி   இரட்டிப்பாக்க முடியும்.  நெல்லுக்கான ஆதார விலை  கிடைக்கவில்லை, எங்களுக்கு உரிய விலை வேண்டும் என்று போராடிய மத்திய பிரதேச விவசாயிகளை சுட்டுத்தள்ளுகிறார்கள். விவசாயத்திற்கு  அடிப்படையாக இருப்பது தண்ணீர்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது  என்று சொன்ன மோடியால் எப்படி  விவசாய பிரச்சினையை தீர்க்க முடியும். தஞ்சையில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அங்கு குடிப்பதற்கு  நல்ல தண்ணீர் கிடையாது.

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள் அப்பகுதி மக்கள்.  எனவே விவசாய பிரச்சினை என்பது வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இன்று வரை விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே விவசாயிகளின் அழிவு  சமூகத்தின் பேரழிவு என்பதை  விளக்கி மக்கள் அதிகாரம்  தொடர் இயக்கமாக நடத்திகொண்டு இருக்கிறது.  எனவே அனைவரும் ஒன்றிணைவதுதான் தீர்வு.

தோழர் பழனியம்மாள் பேசுகையில், பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த கணமே  பங்குச்சந்தை  5 லட்சம் கோடி ரூபாய் சரிவை கண்டுயிருக்கிறது. அடுத்து 5 லட்சம் சரிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவே காலியாகிவிடும்.  எனவே முதலாளித்துவ பொருளாதாரம் மக்களை மரணக்குழியில் தள்ளும். மார்க்சிய பொருளாதாரமே மக்களை காக்கும். அதனால்தான் 2009 அமெரிக்க நெருக்கடியின் போது, அந்த மக்கள் மார்க்கிய பொருளாதாரத்தை தேடினார்கள். பல நாடுகளில் மார்க்சின் மூலதனத்தை தேடுகிறார்கள்.

மேலும் இந்த பட்ஜெட் குடியரசுதலைவருக்கு 5 லட்சம் சம்பளம், துணை குடியரசு தலைவருக்கு 4 லட்சம் என்று  பல மடங்கு சம்பளத்தை உயர்த்திவிட்டு, விவசாயிகளின்  வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்கிறார் ஜெட்லி. அதற்கான அடிப்படை என்ன இருக்கிறது.

ஒருபக்கம்  மீத்தேன், போன்ற கனிமவளங்களை  கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு  திட்டமிட்டே விவசாயத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  விவசாயத்தை இரட்டிப்பாக்குவேன் என்றால்  விவசாயிகளுக்கு விலை சொல்லும் அதிகாரத்தை கொடுப்பாரா? இப்படி பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான்  பிஜேபியின் திட்டம்.  கிராமங்களில் 5 லட்சம் இணையம் வசதி செய்து கொடுக்கபடும் என்கிறார்கள் .

கிராமங்களில் உள்ள  100 நாள் வேலைத்திட்டத்தையும் ஒழித்துக்கட்டிவிட்டு யாருக்கு வேண்டும் இணையம். எனவே மீனவர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, தொழிலாளர்கள் பிரச்சினை எதையும் தீர்த்துக்கொடுக்க துப்பில்லாமல் இருக்கிறார்கள். 1% அமைச்சர்கள் அதிகாரிகள் தின்று கொழுப்பதற்காக 99% மக்களின் இரத்தத்தையும், வேர்வையையும் உறுஞ்சுகிறார்கள். அதை ஏன் அனுமதிக்கவேண்டும் 99% மக்கள்  உழைக்கவில்லை என்றால் இந்த சமூகம், அரசு, அமைச்சர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

எனவே  அநீதீயை வேடிக்கை பார்க்காம்ல 99% மக்கள் வீதியில் இறங்கி  அதிகாரத்தை கையிலெடுப்பதுதான் தீர்வு என்று அறைக்கூவி அழைத்தார். இதனை நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். பார்த்த அனைவருக்கும் இந்த பட்ஜெட் எப்படி மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்பதை புரியவைக்கும் படியும், போராடுவதுதான் தீர்வு என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில்  இத்தெருமுனைக்கூட்டம் அமைந்தது.

தகவல்
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
தருமபுரி. தொடர்புக்கு-8148055539.

 

 

ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

1

“ தோழர் பிரபு “- ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

ம்மூரில் பண்ணையார்கள், நிலவுடைமையாளர்கள் போன்றோர், சொத்துக்களை ஆண்டு அனுபவிப்பவர்கள், ஏன் கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்ற காரணம் தெரிய வேண்டுமா? இலங்கையிலோ, இந்தியாவிலோ கம்யூனிச ஆட்சி வந்தால், தமது சொத்துக்களைப் பறித்துக் கொண்டு சிறையில் அடைத்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். இதற்கு முன்னர் சோஷலிச நாடுகளில் தமது வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அஞ்சி நடுங்குகிறார்கள்.
ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் சொகுசாக வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம் (கவனிக்கவும்: “வர்க்கம்”, மனிதர்கள் அல்ல.), எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப் பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் “Kameraad Baron” (தோழர் பிரபு). இதை எழுதிய டச்சு எழுத்தாளர் Jaap Scholten, பல மாதங்களாக ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்து, அங்கு வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் நபர்களை சந்தித்துப் பேசி, அவர்களது கதைகளை எழுதி உள்ளார்.
இந்தப் புத்தகமானது நிலப்பிரபுக்கள் மீதுள்ள கரிசனையால், ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் சாதாரண மக்களாக தெருவுக்கு வந்து விட்டார்களே என்ற சுய கழிவிரக்கம் காரணமாக எழுதப் பட்டது.  கம்யூனிஸ்டுகளால் பிரபுக் குடும்பத்தினருக்கு நடந்த கொடுமைகளை விவரித்துக் கூறுவது தான் நூலின் நோக்கம். ஆனால், நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழே வேலை செய்த பண்ணையடிமைகளுக்கு செய்த கொடுமைகள் பற்றி ஒரு வரி கூட  இல்லை. (ஆண்டாண்டு காலம் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வை, கம்யூனிஸ்டுகள் ஒரே நாளில் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டார்கள் என்ற உண்மையை மறைக்க வேண்டுமே?)
Jaap Scholten

இன்றைக்கும் வாழும்  முன்னாள் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தமது வாழ்க்கைக் கதைகளை கூறுகின்றனர். தமது பிரபுக் குடும்பத்தினரின் அருமை பெருமைகளை, சிறுவயதில் அனுபவித்த ஆடம்பரங்களை மட்டுமே நினைவு கூறுகின்றனர். கிழக்கில் இருந்து மேற்கு வரையிலான, ஐரோப்பிய மன்னர் குடும்பங்களுக்குள் நடந்த கலப்புத் திருமணங்கள், பன்மொழித் தேர்ச்சி இவை போன்ற பழம் பெருமைகளை சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்றைக்கு ருமேனியாவுக்கு சுற்றுலா செல்வோர், ஐரோப்பாவிலேயே அழகான கோட்டைகள், மாளிகைகளை கண்டு களிக்கலாம். மன்னர் காலத்து வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நேரில் பார்க்கலாம். அவை இன்று சுற்றுலா மையங்களாக அனைவருக்கும் திறந்து விடப் பட்டாலும், 1949 ம் ஆண்டு வரையில் அங்கு உள்ளூர் நிலப்பிரபுக்களின் குடும்பங்கள் வசித்து வந்தன.
இரண்டு உலகப் போர்களை கண்ட போதிலும், நிலப்பிரபுக் குடும்பங்கள் எந்தக் குறையும் இல்லாமல் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தன. இதிலே குறிப்பிடத் தக்கவர்கள் ஹங்கேரிய நிலப்பிரபுக்கள். ஏனெனில், முதலாம் உலகப் போர் நடக்கும் வரையில், ருமேனியாவின் பெரும் பகுதி, குறிப்பாக மத்திய டிரான்ஸ்சில்வேனியா பிரதேசம், ஹங்கேரி சாம்ராஜ்யத்திற்குள் அடங்கியது. ருமேனியாவின் வட மேற்குப் பகுதியில் ஹங்கேரி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவில், சோவியத் செம்படைகளால் விடுதலை செய்யப் பட்ட ருமேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளை வர்க்க எதிரிகளாக பிரகடனம் செய்தனர். இதிலே இன்னொரு பிரச்சினையும் சேர்ந்து ஹங்கேரி நிலப்பிரபுக்களை ஒடுக்கியது. அவர்கள், முன்னை நாள் ஆஸ்திரிய – ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் என்பதால், பெரும்பாலான ருமேனிய மக்களால் வெறுக்கப்பட்டு வந்தனர்.
கம்யூனிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாளிகைகளில் வசித்து வந்த நிலைப்பிரபுக் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒரே இரவில் வெளியேற்றப் பட்டனர். அரை மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கி, உடுப்புகள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மட்டுமே ஒரு பெட்டியில் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள். எல்லோரையும் டிரக் வண்டியில் ஏற்றி தடுப்பு முகாம்களுக்கு அனுப்பினார்கள்.
பல நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக, “ஆண்ட பரம்பரை” என்ற மிதப்பில், செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், ஒரே நாளில் “அடிமைப் பரம்பரையாக” வறுமைக்குள் தள்ளப் பட்டனர். ஆடம்பரமான மாளிகைகளில் வசதியாக வாழ்ந்த பணக்காரக் குடும்பங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத சிறை முகாம்களில் அடைக்கப் பட்டன. ஒரு நாள் கூட உடல் வருந்தி உழைத்திராத அரச வம்சத்தினர், இளவரசர்கள், நிலவுடைமையாளர்கள், வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள். கட்டாய வேலை முகாம்களில் கால்வாய் தோண்டுவது போன்ற கடின உடல் உழைப்பை செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டனர்.
ருமேனியப் புரட்சியின் ஆரம்ப காலங்களில், நிலப்பிரபுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்க்க எதிரிகளாகவோ, அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்ததாகவோ குற்றம் சாட்டப் பட்டவர்கள். அதே நேரம், சித்திரவதை தாங்க முடியாமல், அல்லது பொருள் இழப்புகளால் மனமுடைந்து  தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.
அதற்காக, ருமேனியாவின் எல்லா நிலப்பிரபுத்துவக் குடும்பங்களும் கொல்லப் பட்டனர் என்று கூறுவது ஒரு மிகைப் படுத்தல். கைது செய்யப் படுவதற்கு முன்னரே ஆஸ்திரியாவுக்கு தப்பியோடியவர்கள் பலருண்டு. அவர்கள் பின்னர் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரி அங்கேயே தங்கி விட்டனர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிச ஆட்சி கவிழும் வரையில் நாடு திரும்பவில்லை.
சுற்றிவளைப்பில் பிடித்துச் செல்லப் பட்டவர்களும், சில வருட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டவர்கள் ஏராளம் பேருண்டு.விடுதலை செய்யப் பட்ட பின்னர், ஒவ்வொரு வாரமும் போலிஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது.
இருப்பினும் “செகுரிதாத்தே” (Securitate) என்ற உளவுப் பிரிவு அவர்களை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட்டன. இப்படியானவர்கள் அரசில் உள்ளவர்களை குறை கூறினாலும், சந்தேகத்தில் திரும்பவும் கைது செய்யப் பட்டனர். ஒரு தடவை, பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய ஒருவர் ஸ்டாலினை பற்றி அவதூறு செய்த குற்றத்திற்காக சக ஆசிரியரால் காட்டிக் கொடுக்கப் பட்டார். நல்ல வேளையாக, அந்த ஆசிரியையின் பிரியத்துக்குரிய வகுப்பு மாணவியின் தந்தை உளவுப்பிரிவில் வேலை செய்த படியால் தண்டனையில் இருந்து தப்பினார்.
பெரும்பாலும் எந்தக் குற்றமும் இல்லாமல் விடுதலை செய்யப் பட்ட நிலப்பிரபுத்துவக் குடும்பத்தினர், சாதாரண மக்களைப் போன்று ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு, அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.  அவர்களது பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் காலத்தில், தமது நிலப்பிரபுத்துவ பின்னணியை மறைத்து வந்தனர்.
முன்னாள் நிலப்பிரபுக்களின் பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப் பட்டாலும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்கும் உரிமை பாட்டாளிவர்க்க குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே உண்டு. (புரட்சிக்கு முன்னர் இது நேர்மாறாக இருந்ததை இங்கே சொல்லத் தேவையில்லை.) “நிலப்பிரபுவின் பிள்ளைகள்” என்றால் அது சமூகத்தில் தாழ்வானவர்கள் என்ற அர்த்ததில் பார்க்கப் பட்டது. அதனால், தமது குடும்பம் பற்றிய உண்மை ஏனைய பிள்ளைகளுக்கு தெரிய விடாமல் மறைத்தனர். சிலநேரம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லி இருப்பார்கள்.
முன்பு மாளிகையில் வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்கள், தற்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இருப்பினும், வீடுகளில் தமது நிலப்பிரபுத்துவ கடந்த காலத்தை நினைவுபடுத்தும் படங்கள், நினைவுச் சின்னங்களை வைத்திருந்தனர். சிலநேரம், முன்னாள் நிலப்பிரபுக்கு விசுவாசமான சாமானியர்கள் அவற்றை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்து கொடுத்தனர்.
நிலப்பிரபுக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படையாக நடந்தன. அந்தக் காலத்தில் ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் Wilfred G. Burchett அவற்றை நேரில் கண்டு குறிப்பெடுத்துள்ளார். அந்தக் கட்டுரைகள் 1951 ம் ஆண்டு வெளியான Peoples Democracies சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டன.
அதில் அவர் முன்னாள் நிலப்பிரபுக்களின் அவல நிலை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அவர்கள் தாம் ஏழ்மையில் வாடுவதாக குறைப் படுகின்றனர். எந்தக் காலத்திலும் கஷ்டப் பட்டு உழைத்து வாழாதவர்கள், இப்போதும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு, தம்மிடம் இருந்த நகைகளை விற்று சாப்பிடுகிறார்கள் அல்லது சட்டவிரோத சந்தைகளில் பொருட்களை விற்றுப் பிழைக்கிறார்கள்.”
Margit Odescalchi – The red princess

இன்றைக்கு எஞ்சியிருக்கும் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தாம் “கம்யூனிச கொடுங்கோன்மைக்கு” அடிபணியாமல் தப்பிப் பிழைத்து விட்டதாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். “கொலை செய்தார்கள், சித்திரவதை செய்தார்கள், சிறுமைப் படுத்தினார்கள், ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், ருமேனிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் எதுவுமே கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை…” என்று இறுமாப்புடன் கூறுகின்றனர்.

இந்த நூலை எழுதியவரும் அது உண்மை என்றே நம்பி இருக்கிறார். ஆனால், நாடு முழுவதும் பலரது சாட்சியங்களை கேட்டு பதிவு செய்த பின்னர், எல்லாமே கருப்பு, வெள்ளை இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. பலர் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டனர். ருமேனியாவில் புதிய கம்யூனிச ஆட்சியாளர்களை ஆதரித்த முன்னாள் நிலப்பிரபுக்களும் இருந்தனர்.
பாட்டாளிவர்க்கத்தின் பக்கம் நின்ற ஒரு “கம்யூனிச இளவரசி” இன் கதை பிரபலமானது. மார்கிட் (Margit Odescalchi), ஒரு குறுநில மன்னர் குடும்பத்தில் இளவரசியாக பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் காலத்தில், நாஸிகள் இவரது சகோதரனை சித்திரவதை செய்ததை கண்டதில் இருந்து தீவிர பாசிச எதிர்ப்பாளராக மாறியவர். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் தனது பரிபூரண ஆதரவை வழங்கினார்.
அதற்காக, கம்யூனிச ஆட்சியாளர்கள் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 150 ஹெக்டேயர் நிலத்தை வைத்திருக்க அனுமதித்து இருந்தனர். இருப்பினும், அவர் அந்த நிலங்களை தானாகவே ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டு, ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வாழ்ந்தார். ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பாட்டாளிவர்க்கத்தில் ஒருவராக மாறிய இளவரசி மார்கிட், சோஷலிச ஹங்கேரி நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
 ( நன்றி: Kameraad Barron, Jaap Scholten நூலில் இருந்து சில பகுதிகள். ) 
நன்றி : தோழர் கலையரசன், கலையகம்

 

திருவாரூர் – கடம்பன்குடி ஓ.என்.ஜி.சி. முற்றுகை !

0

மிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சுடுகாடாக்க தொடர்ந்து இந்த அரசு முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் கடம்பன்குடி கிராமத்தில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. திட்டமிட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே ஓ.என்.ஜி.சி. சார்பில் எண்ணெய் கிணறுகள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பழைய கிணறுகளை மூடவும், புதிதாக எண்ணெய் கிணறு திறப்பதை தடுக்கக் கோரியும் கடம்பன்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் பிப்ரவரி 11, 2018 அன்று ஓ.என்.ஜி.சி. முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

 

மேலும் இந்த போராட்டத்தை ஆதரித்து கலந்து கொள்ள வந்த பேராசிரியர் ஜெயராமன் அவர்களை கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தது போலீசு. போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

 

அதிகாரத்தை கையில் எடுப்போம் ! பிரதீப் – லோகநாதன் உரை !

0

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ),  புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது என்ற அடிப்படையில் கடந்த 28.1.2018 அன்று  சென்னையில் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது

தோழர் லோகனாதன்

இக்கருத்தரங்கில் புதுவை புஜதொமு-வின் தோழர் லோகநாதன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் “ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை நிரந்தரம் கிடையாது. பணியிடங்களில் அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய ரூ. 2 மதிப்புள்ள பாதுகாப்பு முகமூடியைக் கூட முறையாக வழங்காமல், வாரம் ஒருமுறை வழங்குகிறார்கள்.

சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தின் தூசுகளுக்கு மத்தியில்தான் உணவு உட்கொள்கின்றனர். அதே புழுதியில் தான் பணிபுரிகின்றனர். இந்நிலை இந்தியா முழுவதும் இருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்துத் தொழில்களிலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசே தமது பொதுத்துறை நிறுவனங்களில் சட்டத்தை மீறி அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை பெருவாரியாக குறைத்துக் கணக்குக் காட்டுகிறது.

விவசாயத்துக்கான மானியத்தை ரத்து செய்வது, தண்ணீர் தர மறுப்பது ஆகிய நடவடிக்கைகளால் மத்திய மாநில அரசுகளால் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அதன் விளைவாக, விவசாயிகள் விவசாயத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அத்துக்கூலிகளாக  நகரத்தை நோக்கி தள்ளப்படுகின்றனர். இவர்கள்தான் இங்கு ஒப்பந்தத் தொழிலாளியாக, ரிசர்வ் பட்டாளமாக வருகின்றனர்.

விவசாயிகள் கிராமத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும், பார்ப்பனிய ஒடுக்குமுறையின் காரணமாக அவர்கள் தங்களின் மீதான சுரண்டலுக்கு எதிராக கிளர்ந்தெழுவது இல்லை. அவர்கள் நகரத்தில் தொழிலாளர்களாக மாறினாலும் அவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

தொழிலாளர்கள் சங்கமாகத் திரள்வதற்குத் தயங்குவதற்குக் கூறும் முதல் முக்கியக் காரணம், அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் பொருளாதார நிலைமைதான். வர்க்கச் சுரண்டலை அவர்கள் சூழல் எனக் கருதுகிறார்கள். வர்க்கச் சுரண்டலை வெறுமனே சூழல் என்று பார்க்க முடியுமா ? டீசல் விலை, பெட்ரோல் விலை உயர்வு, பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவைதான் மோடி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சூழல். இது இயற்கையான விசயம் அல்ல. கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும்.

நமது பிரச்சினைகள் அனைத்தும், அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவே ஆகும். ஆகவே அதனை வெறுமனே தனிப்பட்ட சூழலாக நாம் கருத முடியாது.

மற்றொரு பக்கத்தில் கருத்துச் சுதந்திரத்தை முடக்குகிறது மோடி அரசு. பாசிசத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதனை முன்னின்று சங்க பரிவார அமைப்புகள் செய்து வருகின்றன. இதனையே முதலாளிகளின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் பணியிடங்களில் செய்கின்றனர். எதிர்மறை கருத்துக்களை கைவிடவேண்டும் என்று கூறுகின்றனர். பார்ப்பனியம் இங்கு முதலாளித்துவத்துக்குச் சேவை செய்கிறது.

பலரும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். குறைந்தபட்ச கூலி சட்டத்தை, அரசு நிறுவனமான நெய்வேலி சுரங்க நிறுவனமே பின்பற்றுவதில்லை. பின்னர் எப்படி தனியார் முதலாளிகள் பின்பற்றுவார்கள்?  ஒரு வேளை நீதிமன்றம் சொன்னாலும், அந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு தனியார் நிறுவனங்கள் தயார் இல்லை. நீதிமன்றமும் சொன்ன பிறகும் நடைமுறைப்படுத்தமாட்டேன் எனச் சொல்பவர்களுக்கு என்ன பதில்? அதற்கு சங்கமாக திரண்டால் மட்டும் போதாது. அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.

நீதிமன்றம், தொழிலாளர்துறை தீர்வு தராது. அதற்கு தொழிற்சங்கமாக திரண்டு, அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்ட முடியும் ” என்றார்.

*********

இக்கருத்தரங்கில் பேசிய அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் தோழர் பிரதீப் அவர்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆங்கிலத்தில் வாசித்தார். அதனை புஜதொமு-வைச் சேர்ந்த தோழர் விஜயகுமார் தமிழில் மொழிபெயர்த்தார்.

தோழர் பிரதீப் தனது உரையில் கூறியதாவது:

கடந்த 2017-ம் ஆண்டு இதே நேரத்தில் சர்வதேச சுரங்கத் தொழிலாளர்கள் மாநாட்டை இந்த நான்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வேறு நான்கு தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தியாவில் நடத்துவதற்கான வேலைகளில் மூழ்கி இருந்தன. அவ்வேலைகளில் மிகவும் துடிப்போடு பங்கெடுத்துக் கொண்ட தொழிற்சங்கமான, மஸ்தூர் சங்கதன் சமீதியை (MSS) கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் பல்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி ஜார்கண்ட் அரசால் தடை செய்துள்ளது .

இந்தக் கருத்தரங்கின் முதல் தீர்மானமாக மஸ்தூர் சங்கதன் சமீதியின் மீதான ஜார்கண்ட் அரசின் தடைக்கு நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்தக் கருத்தரங்கம் இந்தியத் தொழிலாளிவர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்த முறையின் மீது அக்கறை செலுத்துகிறது.

இந்தியாவில் இருக்கும் ஒப்பந்த முறையானது, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அடிமாட்டுக் கூலிக்கு எவ்வித அடிப்படை வசதியும் வழங்கப்படாமல் கொத்தடிமைகளைப் போல  தொழிலாளர்களை இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்கு அமர்த்தும் ஒப்பந்த முறை இருந்தது. இத்தகைய நிலையிலிருந்து தான் இந்தியாவின் தொழில்துறை வளர்ந்தது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அரசாங்கம், தொழிலாளர்களின் வாழ் நிலைமையை அவ்வப்போது குழுக்களை அமைத்து பரிசீலித்தது. 1860-ம் ஆண்டு அமைக்கப்பட்ட வைட்லி கமிசன் குழு, தனது பரிந்துரையில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்கவேண்டும் எனக் கூறியது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அனைத்துக் கமிட்டிகளும்  அதனை பரிந்துரைத்தன. இன்று வரை இதே நிலைமை தான் நீடிக்கிறது.

ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் குறைந்த கூலி, அதிக வேலை நேரம், சமூகப் பாதுகாப்பின்மை, வேலைப் பாதுகாப்பின்மை போன்றவற்றால் சுரண்டப்படுகின்றனர்.

தோழர் பிரதீப்

இத்தகைய ஒப்பந்த தொழிலாளர் முறையை முறைப்படுத்த 1970-ம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டம் இயற்றப்பட்டது. அன்றைய சூழலில் எழுந்த பல்வேறு போராட்டங்களின் பின்புலத்தில் இருந்துதான், இச்சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றுவரை இச்ச்ட்டத்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு பயனும் இல்லை. இச்ச்ட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அரசு இச்சட்டத்தை நிறுவனங்கள் மீறுவதற்கு உதவியிருக்கின்றது. நீதிமன்றங்களும் அதற்குத் துணை நின்றிருக்கின்றன.

இச்சட்டத்தின் சில சரத்துகள் அதனை மீறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தன. 1990களில்  தனியார்மயக் கொள்கைகள், அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான இலகுவான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டன. ஒப்பந்த தொழிலாளர்  (முறைப்படுத்துதல், ஒழித்தல்) சட்டத்தை மீறுவதற்கு ஏற்ப பல்வேறு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முதன்மையான சட்டமீறல் என்னவெனில், நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யக் கூடிய அனைத்து வேலைகளிலும், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் புகுத்துவது, நிரந்தரத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை விடக் குறைவான சம்பளத்தை அவர்களுக்குக் கொடுப்பது என்பதுதான்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை பாதுகாக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை, தமது பணியில் இருந்து விலகிக் கொண்டது. குறிப்பாக உச்சநீதிமன்றமே, ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழித்தல்) சட்டம் (1970)-ஐ மீறியது. கடந்த 2001-ம் ஆண்டு இந்திய எங்கு ஆணையத்திற்கு (SAIL) எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதன் மூலம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்தத் தேவையில்லை என்ற நிலையை நிறுவனமயப்படுத்தியது.

ஒப்பந்த தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுவதற்கு ஏற்ப, அப்ரண்டீஸ் (தொழில் பழகுனர்) போன்ற பல பெயர்கள் உபயோகிக்கப்பட்டன. நாளாக நாளாக இச்சட்டம் வெறும் காகிதமாகவே இருக்கிறது.

தற்போது மோடி அரசு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்னர், இச்சட்டத்தை பாஜக திருத்தம் செய்ய முனைகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழிலாளர் நலப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு வெளியே துறத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்து வந்த சிறு சிறு உரிமைகளும் கூட தற்போது மறுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு தற்போது பரிந்துரைத்திருக்கும் சீர்திருத்த வரைவில்ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் சட்டம் பிரிவு 12இல் குறிப்பிடப்பட்டிருக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஏற்பாடு செய்வதற்கான உரிமம் வாங்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்திக் கொடுக்கிறது. அச்சட்டத்தின் பிரிவு 10-ல் ஒப்பந்தமுறை தடை செய்யப்பட்ட தொழில்களிலும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது இச்சட்டத்திருத்த வரைவு.

இந்த கருத்தரங்கம், ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களையெல்லாம் கவலையோடும், அக்கறையோடும், பரிசீலித்து விவாதிக்கிறது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்களின் அதே வேலையைச் செய்தாலும், அவர்களுக்கு குறைவான கூலியே கொடுக்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லும் சம வேலைக்கும் சம ஊதியம் என்ற சட்டப்பிரிவை மத்திய மாநில அரசுகள் மீறுகின்றன. அவை சட்டப் பிரிவு 25(5A)-வைக் கைவிட தயாராக இருக்கின்றன. இந்தக் கருத்தரங்கம் இதனைக் கண்டிக்கிறது.

இந்த கருத்தரங்கத்தின் கருத்துக்கள், அரசு மற்றும் ஆட்சியாளர்களின் கொள்கைகள், இதன் ஊடாக அரசியல் கட்சிகள் எடுக்கும் நிலைமைகளை பரிசீலிக்கின்றன.

அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கையின் காரணமாக,  தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிரிக்கிறது. இதன் மூலமாக பெருமுதலாளிகளுக்கு சேவை செய்து, அவர்களது செல்வத்தை உயர்த்துகிறது அரசு. குறிப்பாக ஒப்பந்தமயமாக்குதலை அதிகரிக்கிறது. அதன் மூலம் கூலியை குறைக்கிறது. இந்தக் கருத்தரங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது.

  • மஸ்தூர் சங்கதன் சமிதி (MSS) தொழிற்சங்கத்தை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் பல்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி ஜார்கண்ட் அரசு தடை செய்ததை இந்த கருத்தரங்கம் கண்டிக்கிறது.
  • ஒப்பந்தத் தொழிலாளர்களுடைய வேலையை நிரந்தரப்படுத்த வேண்டும்
  • சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.
  • நாடு தழுவிய அளவிலான எதிர்ப்பு இயக்கத்தை மார்ச் 5 அன்று எடுக்கவெண்டும் என இக்கருத்தரங்கம் தீர்மானத்தை முன் வைக்கிறது. நாடு முழுவதும் அன்றைய தினம் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

 

காண்டிராக்ட் முறைக்கு எதிராக திரண்ட தொழிலாளிகள் ! சென்னை பொதுக்கூட்டம்

0

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !
கருத்தரங்கம் – சென்னை பொதுக்கூட்டம்

காலை 10 மணிக்குத் துவங்கிய கருத்தரங்கம் பிற்பகல் 4.30 மணிக்கு முடிந்தவுடன், சென்னையின் புறநகரான ஆவடியில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு பு.ஜ.தொ.மு-வின் மாநிலத்தலைவர் தோழர் அ.முகுந்தன் தலைமை தாங்கினார். காண்டிராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் சரவணன், மணலி தொழிற்சங்கங்களது கூட்டமைப்பின் ( FMTU ) பொதுச்செயலாளர் திரு. செங்கை எஸ்.தாமஸ், AICCTU  சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் கு.பாரதி ஆகியோர் தங்களது உரையில் காண்டிராக்ட் முறையை ஒழிப்பதற்கு எடுக்கப்படுகின்ற எந்த முயற்சிக்கும் ஆதரவையும், கூட்டான செயற்பாட்டையும் உத்தரவாதம் செய்தனர்.

காண்டிராக்ட் முறைக்கு எதிராக ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்கு அடித்தளமிட்டுள்ள 3 சங்கங்களின் சார்பில் உரையாற்றப்பட்டது.  இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு ( IFTU ) சார்பில் அதன் தேசியக்குழு உறுப்பினரும், தெலுங்கானா மாநில செயலாளருமான தோழர் சூர்யம், புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ) சார்பில் அந்த அமைப்பின் தலைவர் தோழர் வாசுதேவன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். தோழர் விஜயகுமார் தனது சிறப்புரையில்

தோழர் முகுந்தன்

“ காண்டிராக்ட் முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பிற உழைக்கும் மக்கள் கருதுகின்றனர். இது காண்டிராக்ட் தொழிலாளியின் பிரச்சினை என்று நிரந்தரத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்களால் தான் உள்ளூர்காரர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது என்கிற கருத்து அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது. 1991 முதல் அமலாக்கப்பட்டு வருகின்ற தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையை உள்ளடக்கிய மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் காரணமாக விவசாயத்திலிருந்து விரட்டப்பட்ட விவசாயியும்,  நெசவிலிருந்து விரட்டப்பட்ட நெசவாளர்களும், சிறு வணிகத்திலிருந்து துரத்தப்பட்ட வணிகர்களும், கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழிலிலிருந்து விரட்டப்பட்ட கோடிக்கணக்கான மக்களும் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக நடுத்தெருவுக்கு வந்தனர். வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட இந்த மக்கள் எந்த வேலைக்கும், எத்தகைய ஆபத்தான நிலையிலும் வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். அற்பக் கூலிக்கு எவ்வளவு மணிநேரம் உழைக்கவும் சொந்த நாட்டிலேயே அகதியாக ஊர், ஊராக வேலை தேடி அலைகின்றனர். இவர்கள் தான் காண்டிராக்ட் என்கிற கொத்தடிமை முறைக்கு அடித்தளமாக இருக்கின்றனர்.

தோழர் விஜயகுமார்

இந்த ரிசர்வ் பட்டாளத்தை வைத்துக் கொண்டு, நிரந்தர வேலைகளை ஒழித்தும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதை மறுத்தும், இயந்திரம் மற்றும் பணியிடத்தில் சாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட செய்யாமலும் தன்னுடைய இலாபவேட்டையை நடத்தி வருகின்ற கார்ப்பரேட்டுகளுக்கு காண்டிராக்ட் முறையானது மேலும், மேலும் கொழுப்பதற்கு உதவியாக இருக்கிறது. இதன் பொருட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவது உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து, அரசு என்பது முதலாளிகளது அடியாள்படை தான் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது, மோடி கும்பல்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்ற இனவாதிகள், அந்த தொழிலாளர்கள் எத்தகைய வாழ்நிலையில் இருக்கின்றனர் என்பதைப்பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நள்ளிரவு தூக்கத்தில்கூட,கால்நடைகளைப் போல வேலைக்கு இழுத்துச் செல்லப்படுவதும்,  சிறு முணுமுணுப்பு எழுந்தால்கூட அடியாட்களை வைத்து அடித்து நொறுக்கி  அவர்களை எப்போதுமே பீதியில் வைத்திருப்பதும் சகஜமான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு போட்டியல்ல. மாறாக, கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு சுலபமான இலக்கு. 

தோழர் கோவன் குழுவினர்

எல்லா துறைகளிலும், எல்லா வேலையிலும்  காண்டிராக்ட் முறையே பிரதான வேலையளிப்பு முறையாக மாறியுள்ள இந்த சூழலில் காண்டிராக்ட் முறை பற்றி கவலைப்படாமலோ, அதனை எதிர்த்து முறியடிக்காமலோ நமது சொந்த வேலையைக்கூட பாதுகாத்துக் கொள்ள முடியாது என்கிற நிலையில் நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை  எல்லா தரப்பு உழைக்கும் மக்களும் சிந்திக்க வேண்டும் என்பதே இந்த முழக்கங்கள் அரங்கிலிருந்து பொதுவெளிக்கு வந்திருக்கிறது. காண்டிராக்ட் முறையை ஒழிப்பது நமது சொந்த வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதன் ஒரு பகுதியே “

என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

அருணோதயா குழுவினரது கலைநிகழ்ச்சி

பொதுக்கூட்டத்தின் இடையே அருணோதயா குழுவினரது கலைநிகழச்சி நடைபெற்றது. இறுதியில் தோழர் கோவன் தலைமையில் ம.க.இ.க கலைக் குழுவினரது புரட்சிகர கலைநிகழச்சி நடைபெற்றது. பு.ஜ.தொ.மு-வின் திருவள்ளூர் (மேற்கு) மாவட்டச் செயலாளர் தோழர் முகிலனது நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது.

காண்டிராக்ட் முறை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதை ஆலை வளாகத்திலிருந்து வெகுமக்கள் மத்தியில் கொண்டு சென்றது, இந்த பொதுக்கூட்டம்.

 

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு : 9444442374

 

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு – வாஞ்சிநாதன், சுதேஷ்குமார் உரை !

0

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு ! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு !! – கருத்தரங்கம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு  ( IFTU ),  புதிய தொழிற்சங்க முனைப்பு ( NTUI ), அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (All ECLC W & E U ) ஆகிய 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது என்ற அடிப்படையில் கடந்த 28.1.2018 அன்று  சென்னையில் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சே. வாஞ்சிநாதன் சிறப்புரையாற்றினார்.  அவர் பேசுகையில், “ சில நாட்களுக்கு முன்பு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில் ”மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்திற்கு பேராபத்து இருக்கிறது. உச்சநீதிமன்றத்தை தங்கள் நலனுக்கு ஏற்ப உபயோகப்படுத்துகிறது மோடி அரசு” என்று குறிப்பிட்டனர். 1975-ம் ஆண்டு எமர்ஜென்சியின் போது கருத்துரிமை ரத்து செய்யப்பட்டது. அவ்வகையில் இந்நாடு மீண்டும் ஒரு அவசரநிலை பாசிசத்தை எதிர்கொள்ளவிருக்கிறது என்பதை தான் இந்த 4 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பேட்டி மறைமுகமாக தெரிவிக்கிறது.

அத்தகையதோர் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்தக்கூடிய ஆற்றல் தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டும்தான் இருக்கிறது. ஆனால், இதனை எத்தனை தொழிற்சங்கங்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

வாஞ்சிநாதன்

இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருக்கும் முழக்கங்கள் அனைத்தும் எப்போது சாத்தியமாகும் என்பது தான் கேள்வி. இந்த அரசியல் சாசன அமைப்பு முறையில் இது சாத்தியமா ? இந்திய அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின் படிதான் இந்த அரசு அமைப்பு முறை செயல்படுகிறது.

இந்தியாவில் இருந்துவரும் இரு பெரும் பிரச்சினைகளான முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனியத்திற்குள்தான் தொழிலாளர் பிரச்சினை வருகிறது. இதனை இந்த அரசு அமைப்பு முறை தீர்க்குமா?

இந்தியாவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அகதிகளைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். பணிப்பாதுகாப்பு கிடையாது. வெளிமாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர் நிலை என்பது அகதிகளை விட மோசமான நிலையில் இருக்கிறது. அடுத்த நாள் வாழ்க்கை குறித்து அகதிகள் எப்படி எந்நேரமும் ஒரு பயத்தில் இருந்த்தப்பட்டிருப்பார்களோ அதே அளவிற்கு காண்ட்ராக்ட் தொழிலாளர்களும் பயத்தில் இருத்தி வைக்கப்படுகின்றனர்.

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தங்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுமார் 13,000 தொழிலாளர்கள் போராடுகிறார்கள். அவர்களை நிரந்தரப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றுவரை அவர்கள் நிரந்தரப்படுத்தப்படவில்லை. 1970களில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டமே அயோக்கியத்தனமான சட்டமாக இருக்கிறது. முழுமையான தீர்வைத்தராததாக இருக்கிறது. 90-களில்  தனியார்மயம் வந்த பிறகு இது வெறும் குப்பைக் காகிதமாகத்தான் இருக்கிறது.

சம வேலைக்கு சம ஊதியம் என்றுதான் சட்டமும், உச்சநீதிமன்றமும் சொல்கின்றன. ஆனால் இந்தியாவில் இச்சட்டம் எங்கும் அமல்படுத்தப்படவில்லை. மற்ற மேலை நாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சம்பளம் மாதம் ரூ.80,000-க்கும் அதிகம். ஆனால் இங்கு ரூ.8,000தான் அதிகபட்ச சம்பளமே.

 

 

மக்கள் நீதிமன்றத்தைத்தான் கடைசிப் புகலிடமாக நம்புகிறார்கள். ஆனால் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் இந்நீதிமன்றம் மக்களுக்கானது அல்ல என்பதை இங்கு சொல்லவேண்டியது எனது கடமையாகும். இதற்கு சமீபத்தில் நடந்த செவிலியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நீதிமன்றம் விடுத்த மிரட்டல்களே மிகச்சிறந்த உதாரணம்.

பிரிக்கால், மாருதி தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடினால் அதனை வன்முறை என்று கூறும் நீதிமன்றம், சாமியார் ராம்ரஹிம் சிங் கைது செய்யப்பட்ட போது நடைபெற்ற வன்முறைகளுக்கும், பத்மாவதி படம் குறித்து சாதி வெறியர்கள் நடத்திய வன்முறைகளுக்கும் வாய் மூடி மவுனம் சாதிக்கிறது.

பாபர் மசூதியை விட நீதிமன்றத்தை அம்பலப்படுத்த தனியாக ஒன்று தேவையில்லை. மசூதி இடிப்பின் சூத்திரதாரிகளான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி உள்ளிட்ட கிரிமினல்கள் கைது செய்யப்பட்டார்களா? அவர்கள் வெளியே சுதந்திரமாக உலவுகிறார்கள். அமித்ஷாவை கொலை வழக்கில் இருந்து விடுவித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவத்திற்கு கவர்னர் பதவி. அமித்ஷா வழக்கை நேர்மையாக விசாரித்த நீதிபதி லோயா கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலை பற்றிய வழக்குகூட இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது தான் நீதிமன்றத்தின் யோக்கியதை.

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். டிராக்டர் கடனில் ரூ.1,00,000 தவணை செலுத்தாதற்காக விவசாயிகளை அடியாட்கள் கொண்டு தாக்கும் வங்கி,  ரூ.1,96,000 கோடி கடனை திரும்பச் செலுத்தாத அம்பானிக்கு மீண்டும் கடன் கொடுக்கிறது. இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் 73% மக்களின் சொத்து குவிந்துள்ளது என்கிறது ஒரு முதலாளித்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனம். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களா?

அரசியல் அமைப்புச் சட்ட முறையில் இந்த ஏற்றத்தாழ்வை என்றுமே சரி செய்ய முடியாது. ஏனெனில், ஒருவன் குவிக்கும் செல்வத்திற்கு அது எவ்வித வரம்பையும் விதிப்பதில்லை. இது சாதி, மத பிரச்சினைகளுக்கும் எவ்வித தீர்வும் தரவில்லை. அரசியல் சாசனம் எழுதிய அம்பேத்கர் தனது இறுதிக்காலத்தில் இந்த அரசியல் சாசன சட்டத்தைக் கொளுத்துவேன் என்றார். பெரியார் அதனைக் கொளுத்தினார்.

இந்த ஏற்றத்தாழ்வு பிரச்சினை உலகில் எங்குதான் தீர்க்கப்பட்டது ? 100 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பிரச்சினை சோவியத் ரசியாவில் தீர்க்கப்பட்டது. அதற்குக் காரணம் அங்கு உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் இருந்தது. தொழிலாளர்கள் சமூகத்தின் தலையெழுத்தை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் மாற்ற வல்லவர்களாக இருந்தனர்.

வெறும் கூலி உயர்வுக்காக இல்லாமல், அரசியல் அதிகாரத்திற்காகத்தான் நமது போராட்டம் இருக்கவேண்டும். அகதியைப் போல் வாழும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை என்றாவது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டிருக்கிறதா ? தொழிலாளர்கள் சங்கமாக திரண்டால் மட்டுமே அது சாத்தியம். அதனை நோக்கி நமது முயற்சிகள் இருக்க வேண்டும்”என்று பேசினார்.

கருத்தரங்கில் நாடு முழுவதும் 13 மாநிலங்களிலிருந்து வந்த 20 பிரதிநிதிகள் உரையாற்றினர். வேலை நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், பணியிடப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய உரிமைகளுக்காக தாங்கள் நடத்திய போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பு.ஜ.தொ.மு சார்பில் மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமாரும் தொழிலாளி வர்க்கம் இன்று சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்துப் பேசினார். ஆந்திரம், தெலுங்கானா பகுதியிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுக்கு ஏற்றவாறு அவர் தெலுங்கு மொழியில் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  அவ்வுரையை தோழர் விஜயகுமார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

 

தோழர் சுதேஷ்குமார் பேசுகையில், “இன்றைய நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது,  நிரந்தரத் தொழிலாளர்களும் தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர். மோடி அரசு தொழிலாளர் உரிமைகளை பறித்து வருகிறது. இந்த அமைப்பு முறையே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இங்கு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இரண்டு அனுபவங்களை இங்கு முன்வைக்க விரும்புகிறேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மிட்சூபா என்ற ஜப்பான் நிறுவனம் இருக்கிறது. அங்கு நிரந்தரத் தொழிலாளர்கள் 2 நிமிடம் தாமதமாக வந்தால் வீட்டிற்கு திருப்பியனுப்பப்படுவார்கள். தொடர்ந்து ஒரு சில நாட்கள் விடுமுறை எடுத்தால் வேலையைவிட்டு நீக்கப்படுகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கே இது தான் கதி என்றால், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதி என்ன என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு நிறுவனம், மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி (MRF). இது இந்தியாவின் மிகப்பெரிய டயர் நிறுவனங்களில் ஒன்று . இங்கு நிரந்தரத் தொழிலாளர்கள் சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலேயே வேலையை விட்டு நீக்கப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது மேற்பார்வையாளர்கள் தொடுக்கும் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளும், சுரண்டலும் இங்கு சொல்லி மாளாது. நிரந்தரத் தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காகவே மாதக்கணக்கில் போராடி வரவேண்டிய சூழ்நிலை இருக்கிறது எனில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

பெரும்பாலானோர், இங்கு தொழிலாளர்களுக்கான உரிமைகளை நீதித்துறை வழியாக சாதிக்கமுடியும் எனக் கருதுகிறார்கள். ஆனால் எதார்த்தம் அப்படியில்லை. பெரு நிறுவனங்கள் வேலையை விட்டு நீக்கிய பின், ரிசர்வ் பட்டாளத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை நிரப்புகிறார்கள். முருகப்பா குழுமத்தின் நிறுவனத்தில் புஜதொமு, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான சங்கம் அமைத்து அவர்களுக்கு போனஸ் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் இதனை நாங்கள் சாதனையாகக் கருதவில்லை.

சட்டப்பூர்வமாக தொழிலாளர்களின் உரிமைகளை சாதிக்க முடியாது என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்கள் இருக்கின்றன. ஒப்பந்த செவிலியர்கள், நிரந்தரப்படுத்தப்படுவ்தற்கும், வெறும் 7000 ரூபாய் சம்பளத்தை உயர்த்தவும் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ”இஸ்டம் இருந்தால் 7000 சம்பளத்தில் வேலை பாருங்கள், இல்லையெனில் வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்” எனத் திமிராக உத்தரவிட்டார்.

இதே போல போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் தங்களது சேமிப்புப் பணத்தையும் திரும்பக் கேட்டு போராடினார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, உங்களால் இந்த வேலையை இந்த சம்பளத்திற்கு செய்யமுடியவில்லை என்றால், வேறு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசுக்கு போக்குவரத்துத் துறையை தனியார்மயப்படுத்தவும் பரிந்துரைத்தார். ஆகவே நீதித்துறை தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்காது.

மோடி, ராகுல் போன்ற தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை என்றும் பாதுகாக்க மாட்டார்கள். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்களே தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அதிகாரத்தில் பாட்டாளி வர்க்கத்தை நிறுத்தவும் செய்வார்கள். செங்கொடியின் பதாகையின் கீழ் அணிதிரண்டு நமது உரிமைகளை வென்றெடுப்போம்.” என்று கூறினார்.

 

சட்டமன்றத்தில் ஊழல் பெருச்சாளி ! கருத்துப் படம்

2

சட்டமன்றத்தில் கிரிமினல் ஜெயாவின் படத் திறப்பு !

சட்டமன்றத்தில் ஜெயா படத்திறப்பு !

வாழ்க அம்மா ! வளர்க ஊழல் !

படம்: வேலன்

இணையுங்கள்:

 

மூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ். படை திரட்டினால் ? கருத்துக் கணிப்பு

6

ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பகவத் கடந்த பத்து நாட்களாக பீகாரில் முகாமிட்டுள்ளார். அங்கே பல்வேறு சங்கி பரிவார கூட்டங்களோடு பரிசீலனை கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு கூட்டம் முசாஃபர்புர் நகரில் நடைபெற்றது. அதில் பீகார் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்த சங்கி கூட்டத்தினர் கலந்து கொண்டனர்.

இத்தகைய சங்கி கூட்டங்களில் பல்வேறு ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கங்களின் இலக்கு, அணிசேர்க்கை, மற்றும் பஞ்சாயத்துக்களைப் பேசுவார்கள். மோடியின் தலைமையில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது இந்தக் கூட்டங்கள் அடுத்தது என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதாகவும் நடக்கும். ஏனெனில் தாம்தான் ஆள்கிறோம் என்பதால் சங்கிகள் சில பல ‘போர்’ திட்டங்களை கையில் வைத்திருப்பார்கள்.

எனினும் அந்தக் கூட்டத்தில் மோகன் பகவத் கெத்தோடு கூறிய ஒரு விசயம் ஊடகங்களில் செய்தி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

“எங்கள் இயக்கம் ஒரு இராணுவ அமைப்பு அல்ல என்றாலும், நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதை கடைபிடிக்கிறோம். இந்த நாட்டிற்கும், அரசியல் சாசனத்திற்கும் இராணுவம் உடனடியாக தேவைப்படுகிறது என்றால், இராணுவம் அணிசேர்ந்து தயாராவதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மூன்றே நாடகளில் திரண்டு விடுவார்கள். இதுதான் எங்களது ஆற்றல்” என்று பேசினார் மோகன் பகவத்.

எல்லையிலே இராணுவ வீரன் சாகும் போது ஏடிஎம்மிலே நீ மாரடைப்பு வந்து செத்தால் என்ன? என்று பணமதிப்பழிப்பின் போது வசனம் பேசியவர்கள் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள். இன்று அப்பேற்பட்ட இராணுவமெல்லாம் ஒரு ஜுஜுபி, நாங்கள்தான் உண்மையான இராணுவம் என்று கேலி செய்கிறார்கள். உடனே ராகுல்காந்தி போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் இராணுவத்தை அவமதித்து விட்டார்கள் என்று மன்னிப்பை கோருகிறார்கள்.

இராணுவத்தை வைத்து தேசபக்தியை கிளப்புவதில் பாஜக-வும், காங்கிரசும் சளைப்பதில்லை என்றாலும் ஆர்.எஸ்.எஸ்-ன் பக்தியில் நாட்டுப்பற்று நிறையவே தூக்கலாக இருக்கும். ஏனெனில் இராணுவத்தையே எதிர்க்கிறாய் என்று இவர்கள் தமக்கு பிடிக்காதாரை ‘ஆன்டி-இன்டிய’னாக்கி விடுவார்கள்.

இவற்றையல்லாம் விட ஒரு முக்கியமான விசயம் உண்டு. மூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அணிதிரட்டப்படும் என்றால் நாடு எப்படி ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. இத்தகைய துரித அணிதிரட்டலின் அழிவை 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையில் பார்த்திருக்கிறோம். மோகன் பகவத் திருவாய் நாறியிருக்கும் முசாஃபர்புரம் நகரிலேயே இவர்கள் எவ்வளவு வேகமாக கலவரம் நடத்தி பிறகு தேர்தலில் இந்துமதவெறியை கிளப்பி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தை குந்த வைத்தார்கள் என்பதை பார்த்திருக்கிறோம்.

ஆகவே இன்றைய கருத்துக் கணிப்பு:

மூன்றே நாளில் ஆர்.எஸ்.எஸ் படை திரட்ட முடியும் என்று மோகன் பகவத் கூறியிருப்பது?

  • ஏதோ ஒரு ஃபுளோவில் உளறிய ஒன்று கவலைப்படத் தேவையில்லை
  • பாசிச ஆட்சி வருவதை அறிவிக்கும் எச்சரிக்கையாக கவலைப்பட வேண்டும்.
  • இராணுவத்தை அவமதித்திருப்பதுதான் இதில் உள்ள விசயம்
  • தெரியவில்லை

 

குரூப் 4 தேர்வு : 5 வருசமா எடுத்த புக்கை கீழ வைக்கல – வேலயும் கிடைக்கல !

4

மிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வு கடந்த பிப்ரவரி 11 ஞாயிறு அன்று நடந்தது. தமிழக அரசின் 9351 காலி பணியிடங்களுக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். வேலையின்மை, அதிகரித்து வரும் பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையளிக்காத கல்வி நிறுவனங்கள்…… இந்தச் சூழ்நிலையில் இந்தத் தேர்வுக்கு வரும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டோம். ஒரு வகை மாதிரிக்காக காஞ்சிபுரத்திற்கு சென்றோம். இந்த சந்திப்பு தேர்வுக்கு முந்தைய நாட்களில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து வந்து தங்கி படித்து வந்தனர். 10-ம் வகுப்பு மட்டுமே தகுதி கேட்டிருந்தாலும், சந்தித்த மாணவர்கள் அனைவரும் முதுநிலை பட்டதாரிகளாகவும், இளநிலை, பொறியியல் பட்டதாரிகளாகவே இருந்தனர்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் பல கோயில்களில் மாணவர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு படிப்புத் தவம் இருக்கிறார்கள்.  அதில் ஒரு கோவிலுக்கு மட்டும் சென்றோம். சந்தித்தவர்களில் பலர் மூன்றாண்டுகளில் தொடர்ச்சியாக, நான்கிற்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுதியுள்ளனர். பயிற்சிக் கட்டணமாக சில பல ஆயிரங்களை செலவு செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு நிகராக இன்னுமொரு கொள்ளையை மாநில அரசு வேலைவாய்ப்பு என்ற பெயரில் அரசும், தனியார் நிறுவனங்களும் மேற்கொள்கின்றன. அந்த கொடுமையை தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

அவர்களுக்குத்தான் எத்தனை எத்தனை கனவுகள்! ஆனால் அவை கனவுகள் மட்டுமே என்பதை வாழ்க்கை அழுந்திச் சொல்கிறது. எத்தனை தேர்வு எழுதினாலும் வேலை கிடைக்கவில்லை. சரி கிடைக்கவில்லை அரசு வேலை வேண்டாமென தனியார் நிறுவனங்களுக்கோ, தனியார் பள்ளிகளுக்கோ சென்றால் குறைந்த பட்ச சம்பளம் இல்லை. வீட்டில், சமூகத்தில் மதிப்பு, மரியாதை இல்லை.

என்ன செய்வது? காண முடியாத அந்த மாய மானைத் தேடி இந்த இளைஞர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

கேளுங்கள்! :

தாமரைச் செல்வன். பி.இ., சேலம் கொல்லம்பட்டி.

பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2015-ல முடிச்சேன். கவர்மெண்ட் வேலையினா, லைப்ல பின்னாடி , நல்லா இருக்கலாம். அப்பா, அம்மாவை கடைசி காலத்துல வைச்சி காப்பாத்தலாம். வேலையில இருந்தாதான், பொண்ணுக் கொடுக்கறாங்க. கம்பெனி வேலைக்குப் போனா, 5 ஆயிரம், 6 ஆயிரம்தான் கொடுக்கறேன்றான், அதுவும் நிரந்தரமில்ல. எப்பத் தூக்குவான்னு தெரியாது.

நோக்கியா கம்பெனி இன்னா பண்ணான்…? சாத்திட்டுப்புட்டான். கவர்மெண்ட் வேலையினா, எடப்பாடியோ, கவர்னரோ, எவன் ஆண்டாலும் மாசம் ஆன சம்பளம் வந்துடும். இதுக்குத்தான், டிஎன்பிசி மூணு வருசம் படிக்கிறோம். ஐந்து வருசமா படிக்கிறவன்கூட இருக்கான்.

ஒன்றரை வருசமா, காஞ்சிபுரத்துல தங்கி படிக்கிறேன். நாங்க நாலு பேரு அறை எடுத்து தங்கிருக்கிறோம். அறை வாடகையே மாசம் இரண்டாயிரத்து ஐநூறு. நாங்களே சமைச்சி சாப்பிடறோம். மளிகை சாமானே ஐயாயிரம் ஆகுது. செலவ நாலு பேரும் பிரிச்சிக்கிறோம். இதில்லாம டீ செலவு, செல் ரீஜார்ஜ், படிக்க வாங்கிற புக்கு, ஜெராக்சுனு மாசம் குறைஞ்சது ஆயிரம் ஆகுது. குரூப் ஒண்ணு, குரூப் ஃபோர் குரூப் டூ னு ஒன்றரை வருசத்துல மூணு எக்ஸாமு எழுதிட்டேன். இதற்கான, பயிற்சிக் கட்டணமா இதுவரைக்கும் இருபாதாயிரம் ஆகியிருக்கு. எங்கண்ணன்தான் உதவியா இருக்காரு. நாங்க நாலு பேரு. விவசாயம்தான் பொழப்பு.

அண்ணனுக்கு இப்பதான் டிஎன்பிசி எழுதி வேலை கிடைச்சது. அதனால, என்னையும் படிடா, படிடானு சொல்றாரு. இரண்டு வருஷம் ஆறு எக்ஸாம் எழுதி…கடைசியில… பாஸ்பாண்ணாரு. இ்ப்ப, அக்ரி டிபார்மெண்டுல இருக்காரு. நாங்க எஸ்சி. எங்களுக்கே இப்ப கட்ஆப் 200 க்கு 181 ஆயிடுச்சி, நா போன எக்ஸாமுல 164 தான் எடுத்தேன். இந்த வாட்டி எப்படியும் பாஸ் பண்ணனும். வாரத்துக்கு ஏழு நாளும் படிக்கறேன். காலைல 6 மணிக்கு புக்க தொறந்தா, நைட்டு 11 மணிக்குத்தான் புக்க மூடுவேன். குறுக்கல எப்பனா, டீ குடிக்கறது, மதியத்துல கோயில்ல போடுற… அன்னதானத்த சாப்பிடறதுன்னு போய்ட்டிருக்கு.

கோமதி .பி.சி.ஏ.

காஞ்சிப்புரம் சங்கரா காலேஜ்ல 2016-ல முடிச்சேன். சொந்த ஊரு காஞ்சிப்புரந்தான். அப்பா பட்டு நெசவு. கஷ்டப்பட்டுத்தான் படிக்கவச்சாரு. நான் படிச்ச காலேஜ்ல கேம்பஸ் இண்டர்வியு நடத்தி, மெட்ராஸ்ல இருக்குற கம்பெனிக்கு எடுத்தாங்க. சம்பளம், நான் தினமும் பஸ்ல போய்ட்டு வர்றதுக்குக்கூட பத்தல. கேட்டா, இன்ஜினியரிங் முடிச்சவங்க, நிலைமையே அதுதானுட்டாங்க…. எங்கப்பா, எங்கேயும் வேலைக்கு போகவேண்டாம்… வீட்டுலயே பட்டுதறிக்கு உதவியா இருன்னுட்டாரு….. ஆனா, என்னால இருக்க முடியல.

ட்ரை பண்ணலாமேன்னு இந்த வருசமதான் பண்றேன். வார கடைசி, ரெண்டு நாள் கோச்சிங் கிளாஸ் 3 மாசத்துக்கு 6,000 பீஸ் கட்டியிருக்கேன். மெட்டீரியல் கொடுத்துடுவாங்க… நிறைய ஜெராக்ஸ் எடுக்கணும் அது…வேற செலவு. வாரம் 5 நாளும் கோயில்லதான் படிப்பேன்… ஷேர் ஆட்டோவுல இங்க, வந்துபோற செலவுன்னு மாசம் 500 ஆயிடுது. நம்பிக்கையோட படிக்கிறேன். ஆனா, இங்க படிக்க வர்றவங்கள பாத்தா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எல்லாம், 4-5, வருசமா படிக்கிறதா சொல்றாங்க……அவங்க, பி.இ. , எம்.எஸ்.ஸி., எம்.எட் எல்லாம் படிச்சிருக்காங்க.

சரண்யா எம்.எஸ்ஸி., பி.எட்.,

2015 காஞ்சிபுரம் பச்சையப்பாஸ்ல முடிச்சேன். பனப்பாக்கத்துல கட்டிகொடுத்தாங்க. மாமியார் வீட்ல விவசாயம். எங்க வீட்டுக்காரு எம்பிஏ முடிச்சிட்டு சரியான வேலை இல்லைன்னு, விவசாயத்துல இறங்கிட்டாரு. நான் மண்ணுல வேலை செய்றேன், சோத்து செலவ பாத்துக்குறேன். குழந்தைங்க படிப்பு செலவுக்கு நீ பாத்துக்கனுட்டாரு. டீச்சருக்கான எக்ஸாமும் எழுதிட்டேன். ரிசல்ட் வந்துடுச்சி, ஆனா போஸ்டிங் எப்பனு தெரியல. அதுலயும் இன்னொரு எக்ஸாம் இருக்காம். இது வேலைக்கு ஆகாதுன்னு டிஎன்பிசி எழுதறேன். இப்ப திரும்பவும், என் போறாத நேரம். ஏழாவது கிளாஸ் புக்க படிக்கிறேன் இங்க படிச்சாத்தான் படிக்க முடியுது. வீட்ல படிக்க உட்கார்ந்ததுமே, வீட்டோட கஷ்டந்தான் கண்முன்ன வருது! கவர்மண்டுல சம்பளம் பத்தல-ன்னு சொல்லி போராட்டம் பண்ணிட்டு, வேலைக்கு மறுபடியும் போய்டலாம். ஆனா பிரைவேட்டுல அப்படி சொல்லவும் முடியாது.

எழில், எம்.பி.ஏ.(கட்டம்போட்ட சட்டை)

நான் காஞ்சிபுரம்தான். எம்பிஏ, மெட்ராஸ் யுனிவர்சிட்டில 2012-ல முடிச்சேன். எவன் வேல கொடுக்கிறேங்குறான்?  இப்ப, ஒன்றரை வருசமா, குரூப்2, குரூப்1- ன்னு மூணு எக்ஸாமு எழுதிட்டேன். இதுவரைக்கும் 20,000 காலியாடுச்சி, எதுலயும் பாஸ் பண்ண முடியல.

அதனாலதான், இப்ப குரூப் 4 எழுதலாமுனு முடிவு பண்ணிட்டேன். எப்படியாவது உள்ளே, நுழைஞ்சிட்டா, மறுபடியும், மறுபடியும் பரீட்சை எழுதி மேலே போய்டலாம். கவர்மெண்ட்ல ஒரு அதிகாரியா ஆகிடணும். அப்படியே, பாசாயிட்டாலும் வேலையில போய் உட்கார , ஒரு வருஷம் இழுக்கடிக்கிறான். ரிசல்ட்வர… ஆறு மாசம், சான்றிதழ் சரிபார்ப்பு னு 3 மாசம், டிபார்மெண்ட்ல இருந்து லெட்டர் வர்றதுக்கு 3 மாசம், இப்படி காத்துக்கிட்டுத்தான் இருக்கணும். இருந்தாலும் இது கவர்மெண்ட் வேலை. அதனாலத்தான் பல்லை கடிச்சிக்கினு படிக்கிறேன்.

மோனிகா, பி.எஸ்ஸி., டி.டெட்.,

எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். விவசாயம் பாத்துக்கினு என்னை படிக்க வைச்சாங்க….. இதுவரைக்கும் டீச்சருக்கான எக்ஸாமுத்தான் எழுதியிருக்கேன். அம்மா கஷ்டப்படறதால, தாய் மாமா எனக்கு பொறுப்பான வேலை வாங்கி குடுத்திடனும்னு, என்ன டிஎன்பிசி எழுதச் சொல்லிட்டாரு.

மாமா பசங்க போலீசுக்கு எழுதி வேலை வாங்கிட்டாங்க….. அதனால என்னையும் எப்படியாவது கவர்மெண்ட் வேலை வாங்க வைச்சிடணும்னு கோச்சிங் கிளாஸெல்லாம் விசாரிச்சி, சேர்த்துவிட்டாரு….. பிரைவேட் ஸ்கூலுக்கு ட்ரை பண்ணேன். ரொம்ப கம்மியான சம்பளத்துக்கு கூப்பிடுறாங்க…… கேட்டா, இப்பத்தானே முடிச்சி வந்திருக்கே…. டிரெயினிங்கா நினைச்சிக்க… விருப்பமிருந்தா… செய் , இல்லனா நிறையபேர் இருக்காங்க…. ன்னு சொல்றாங்க…. அங்க போய் கம்மி சம்பளத்துக்கு செய்றதுக்கு…. இத மாதிரி எழுதி, பாசாயிட்டா நிரந்தரமான சம்பளம். கோச்சிங் சென்டருக்கு 5,000 ரூபாய் கட்டியிருக்கேன். போக்கு வரத்து செலவுன்னு மாசம் 1,000 ஆகுது.

சசிகலா, எம்.எஸ்.ஸி.

2016-ல சென்னை குயின் மேரீஸ்ல முடிச்சேன்… சொந்த ஊரு காஞ்சிப்புரந்தான். அப்பா பட்டு நெசவு. பிரைவேட் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். ரொம்பவும் கம்மி சம்பளம். படிப்புக்கு சம்மந்தமில்லாத வேலை. மனசுக்கு பிடிக்கல…. அம்மாக்கிட்ட சொல்லிட்டேன். வீட்ல எந்த வேலைக்கும் போகவேணானுட்டாங்க….. ஆனா….. பக்கத்துல இருக்கிறவங்க….. படிச்சிட்டு சும்மாவ …. இருக்க்க….. னு கேள்வி.. டார்ச்சரா இருக்கு. …அத அனுபவிச்சாத்தான் தெரியும்.

கம்மி சம்பளன்றதக்கூட பொறுத்துப்போனாலும், வேலை, டைமிங் ரொம்ப மோசம். 12 மணிநேரம் வேலை செய்யணும்றான்…. நம்ம சொந்த வேலையக் கூட நம்ம செய்துக்க முடியாது. தூங்கறது, வேலைக்கு போறதுன்னு … ஓய்வே இல்ல… பயமாயிடுச்சி….. அப்படியே கஷ்டப்பட்டாலும் என்ன வேலையினு கேட்றவங்கக் கிட்ட சொன்னா, மதிப்பாவே பார்க்கல….. .கிடைக்குதோ இல்லையோ…. கவர்மெண்ட் வேலைக்கு டிரை பண்ணுவோம்னு வந்திட்டேன்…..

இதுவரைக்கும் 4 எக்ஸாம் அட்டர்ன் பண்ணிட்டேன். எங்க தப்பு பண்றேனே தெரியல…. எதுவும் பாஸ் பண்ணல. இந்த எக்ஸாமாவது பாசாயிடனும்னு தூங்கமா, படிக்கிறேன். கட்டிக்கிட்டு போற எடத்துல கவர்மெண்ட் வேலையினாதான்… வெளியில அனுப்புவாங்களாம்…. இல்லான வீட்டோட கிடக்கணும். சவரனும் ரொம்ப கேட்கமாட்டாங்க.

மதன்ராஜ், பி.லிட். (தமிழ்), திருவாரூர்.

கொல்லுமாங்குடி பக்கத்துல முகூந்தனூர் தான் என் கிராமம். பி.லிட் தமிழ் படிச்சிருக்கேன். இரண்டு வருசமா டிஎன்பிசிக்கு வி.எ.ஒ. , குரூப் 4 , குரூப் 2 மூணு எக்ஸாம் எழுதியிருக்கேன். நான் எஸ்சி. இதுவரைக்கும் 154, 164 ன்னு கட் ஆஃப் எடுத்துருக்கேன் அதை தாண்ட முடியல. இரண்டு வருஷத்துல எஸ்சி, கட்ஆப், 154-ல யிருந்து 180 ஆக எகிறிடுச்சி. ஆயிரம், ரெண்டாயிரம் வேகன்சிக்கு பத்துலட்சம், இருபதுலட்சம் அப்ளிகேசன் வருது. இதால, கட்ஆப் பத்து பத்தா ஏறிக்கினே இருக்கு…. இனிமே 200க்கு 200 எடுத்தாலும் வேலை கிடைக்குமானு தெரியல.

அப்பா விவசாயி. கூலி வேலைத்தான் செய்றாரு. நான் முதல் தலைமுறை படிக்கிறேன். 10 ஆவதுல இருந்து பரீட்சை, பரீட்சைனு படிச்சிக்கினுருக்கேன். இன்னும் புக்க கீழ வைக்கல….. வேலைத்தான் எப்ப கிடைக்கும்னு தெரியல. பணம் தண்ணியா செலவு ஆகுது. பயிற்சி கட்டணமுனு பதினேட்டாயிரம் செலவு பண்ணிருக்கேன். அதில்லாம, தங்கற, சாப்பிடுற செலவு னு மாசம் 3 ஆயிரமுனு கணக்குப்போட்டுங்கங்க…….இரண்டு வருசமாயிடுச்சி.

சரவணக்குமார், எம்.எஸ்ஸி, பயோடெக்.

திருச்சியில 2011-ல முடிச்சேன். எனக்கு சயின்ஸ்டிஸ்ட் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதனாலத்தான் பயோ சயின்ஸ் எடுத்தேன். வேலை இல்லை….. இப்ப குரூப் 4-க்கு விழுந்து, விழுந்து இரண்டறை வருசமாப் படிக்கறேன். 5 வருசமா 6 எக்ஸாம் எழுதிட்டேன். குரூப் 4, குரூப் 2, போஸ்டல் எக்ஸாம், எஸ்.எஸ்.சி னு சென்ட்ரல் கவர்மெண்ட் எக்ஸாமுனு ஒண்ணு விடல. எல்லாம் 10 மார்க்குள்ளே கட்ஆப்ல போயிடுச்சி, 180-க்கு 170, 158-க்கு 145னு இ்ப்படினு நெருக்கமா போனேன்…. ஆனா உள்ளத்தான் போக முடியல.

எக்ஸாம் பீசுன்னு 50,000 ஆயிரம் முழுங்கிடுச்சி. எங்க சொந்த ஊரு தேனி மாவட்டம். அப்பா விவசாயம். நெல்லு, கம்பு, தென்னை-ன்னு விவசாயத்துல வர்றதெல்லாம் எனக்கே செலவுப் பண்ணி ஓய்ஞ்சிட்டாரு. எப்படியும் கவர்மெண்ட்ல ஒரு அதிகாரியாக்கியிடணும்னு அவருக்கு ஆசை. ஆனா, படிச்சா மட்டும் பத்தல.

ஃபெயிலானா….கோச்சிங் சென்டர்ல சொல்றான்…, டைம் அனலைஸ் இல்ல… கொஸ்டீன் அனலைஸ் இல்ல, எக்ஸாமு பதட்டத்துலயே படிச்ச பார்முலா எல்லாம் மறந்துடுறீங்க, எத டிக் அடிக்கறதுன்னு தெரியாத, கண்டத டிக் அடிக்கிறீங்கனு… சொல்றான். இதுக்காடா பணம் கொடுக்கறோம்னு கேட்க தோணுது. ஆனா அங்க, கேட்க முடியல.

ரேம், டிப்ளமோ இன் மெக்கானிக்கல்,

2013-ல முடிச்சேன். காஞ்சிபுரம் பக்கத்ததுல விஷாரம்தான் என் ஊரு.

எங்கப்பா சொல்றாரு தமிழ்நாட்டுல எங்கேங்கேயோ இருந்தெல்லாம் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கி, இங்க கோயில்ல உட்கார்ந்து படிக்கிறாங்க…. பாஸ் பண்றாங்க…… நீ ஏன்டா… காஞ்சிபுரத்துல இருந்துக்கீனே ஊர சுத்துறனு, இங்க தொறத்தி விட்டாரு. நானும் எழுதி எழுதிப் பாக்கறேன். ரிசல்டுல நம்ம பேரு வரல. இதுவரைக்கும் பதிமுனாயிரம் கொடுத்திருக்காரு. செலவு ஆணாதுதான் மிச்சம்.

எங்க அம்மா, நான் வேலைக்கு போற மாதிரி சோறுக் கட்டிக் கொடுக்கிறாங்க. நானும் டெய்லி இங்க படிச்சிட்டுப்போறேன். பஸ்பேர் 300, டீ செலவு 200, மெட்டீரீயல் ஜெராக்ஸ் எடுக்கறதுன்னு மாசம் 1000 ஆகுது. கோச்சிங் கிளாசுக்கு பணம் கட்டுனாலும், சனி – ஞாயிறுத்தான் கிளாசு. மத்த நாள்ல நாங்களே படிச்சிக்கணும். கவர்மெண்ட் லீவுன்னா அன்னிக்கு ஸ்பெஷல் கிளாசு. இப்டி ஒவ்வொரு எக்ஸாமுக்கும் 6 மாசம் கோச்சிங் கொடுக்குறாங்க. ஆளுக்கு ஏத்த மாதிரி 5,000ல யிருந்து 8,000 வரைக்கும் பீஸ் வாங்குறாங்க.

இங்க எந்த மண்டபமும் ப்ரீயா இல்ல. 500, 600 பேரை சேர்த்து, மைக்க வைச்சி கிளாசு எடுக்கறாங்க. வேலை செய்யற வி.எ.ஒ, ரிடையர் ஆன டீச்சரு, டிஎன்பிசியில வேலைக்கு சேர்ந்த அதிகாரிங்களை வைச்சி கிளாஸ் எடுக்கிறாங்க.  சனி, ஞாயிறுக் கிளாசுக்கு பாண்டிச்சேரி, திண்டிவனத்திலிருந்தெல்லாம் வந்து தங்கி படிச்சிட்டுபோறவங்கல்லாம் இருக்காங்க. குஜராத் சத்திரம், செட்டியார் சத்திரம்-னு பல சத்திரத்துல நைட்டு 50 ரூபா கொடுத்துட்டு, தங்கி படிப்பாங்க.

– படம், நேர்காணல் : வினவு செய்தியாளர்.

 

தருமபுரி : மோடியின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0

“மோடி ஜெட்லியின் 2018-19 பட்ஜெட்! முதலாளிகளுக்கு பட்டுக்கம்பளம்! மக்களுக்குக்கோ பட்டை நாமம்!” என்ற தலைப்பில் கடந்த 07-02-2018 அன்று தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டங்களில் மோடி அரசின் இந்த பட்ஜெட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும், ஏழைகளுக்கு நிறைவேற்றவியலாத வெறும் வாய்வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளதையும் அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் பேசினர்.


தகவல்:

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. (R.S.Y.F.)
தருமபுரி மாவட்டம்,
தொடர்புக்கு: 81480 55539.

 

சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !

6

ந்துக்களின் கோவில்களில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?” என்பது புதிய முழக்கமல்ல. தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்தே சங்கப்பரிவார அமைப்புகள் – குறிப்பாக இந்து முன்னணி, இந்த முழக்கத்தை எழுப்பி வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி (பிப்ரவரி, 2018) மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் “ஏற்பட்ட” தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது இக்கூச்சல் காதை அடைக்கிறது.

சொல்லப் போனால், கடந்த காலங்களில் கருவறைத் தீண்டாமை கேள்விக்குட்படுத்தப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் – குறிப்பாக, ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ் பாடும் உரிமைக்கான போராட்டம், இந்துசமய அறநிலையத் துறை சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்த போது – என எல்லா சந்தர்ப்பங்களிலும் மேற்படி எதிர்க் கோரிக்கையை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பி வந்துள்ளன.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து   உண்மையில் விபத்தா இல்லை சங்கிகள் சதியா?

சமீபத்தில் கேரள அரசு அர்ச்சகர் நியமனம் செய்ததை அடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் தமது பழைய கோரிக்கையை முன்னிறுத்த துவங்கினர் – இப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தை அடுத்து ஒரு புதிய உத்வேகத்தை அடைந்துள்ளனர்.

இதனடிப்படையில் சில வாதங்களை இந்துத்துவ கும்பல் முன்வைக்கின்றன. முதலாவதாக, இசுலாமியர்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டிடங்கள் அவர்களாலேயே நிர்வகிக்கப்படும் நிலையில் இந்துக் கோவில்களின் நிர்வாகத்தில் அரசு தலையிடுவது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பனர்கள் முன்வைக்கும் முக்கியமான வாதம்.

இசுலாமிய வழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் “மத்திய வக்பு வாரியம்” என்பது இந்திய வக்பு சட்டம் 1954-ன் கீழ் அமைக்கப்பட்டது என்பதும், அதன் தலைவராக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் இருக்கிறார் என்பதும், மத்திய வக்பு வாரியத்தின் கீழ் மாநில வக்பு போர்டுகள் இயங்குகின்றன என்பதும் யாரும் மறுக்க முடியாத உண்மைகள்.

தற்போது மத்திய வக்பு போர்டின் தலைவராக இருப்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி. கிறிஸ்தவ தேவாலயங்கள் சொந்த முறையில் இயங்குகின்றன என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஒவ்வொரு தேவாலயங்களும் அதன் உறுப்பினர்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட கமிட்டியினரால் நிர்வகிக்கப்படுகின்றன என்பதும் உண்மை. வரலாற்று ரீதியில் இந்து மற்றும் இசுலாமிய வழிபாட்டிடங்கள் அரசு (மன்னர்கள்) பணத்தில் அமைக்கப்பட்டதைப் போல் அன்றி கிறிஸ்தவ தேவாலயங்கள் வெளிநாட்டு மிஷனரிகளின் நிதியால் அமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அனைத்து மத நிறுவனங்களும் மக்கள் சொத்துக்களை அடிப்படையாக வைத்து செயல்படுவதால் அவை முழுக்க அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னரும் கூட ம.க.இ.க பிரச்சாரங்களில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் கிறித்தவம் என்ற வேறுபாடு இல்லை. எனினும் இந்தியாவில் ‘இந்துக்களும்’ இந்து கோவில்களின் சொத்துக்களும் பெரும்பான்மையாக இருப்பதால் சிறுபான்மை மத சொத்துக்களின் முறைகேடுகள் – சர்ச்சைகள் பெரிய அளவிற்கு எழவில்லை.

கோவில் ‘மீட்பு’ப் போராட்டத்தைத் துவங்கியிருப்பதாக கூப்பாடு போடும் ஹெச்.ராஜா!

இந்துக் கோயில்கள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு அரசர்கள், குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் பராமரிப்பிலும் கட்டுப்பாட்டிலுமே இருந்து வந்தன. மக்களின் வரிப்பணத்தையும் உழைப்பையும் கொண்டு தான் கோவில்கள் உருவாக்கப்பட்டன. கம்பெனி ஆட்சியின் கீழ் Regulation XIX of Bengal Code, 1810 மற்றும் Regulation VII of Madras Code, 1817 ஆகிய இரண்டு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்படி இந்துக் கோவில்கள் மற்றும் இசுலாமிய மசூதிகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

அதன் பின் 1839-42 காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் இந்து வழிபாட்டிடங்களை பராமரிப்பதற்கு எதிராக ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்கள் (போப் உள்ளிட்டு) ஆட்சேபணை தெரிவித்து இங்கிலாந்து மன்னருக்கு பல புகார் மனுக்களை அனுப்புகின்றனர். இந்த நடைமுறையில் ஈடுபட வேண்டாமென இந்தியாவில் இருந்த தமது அதிகாரிகளுக்கு பிரிட்டிஷ் நீதித்துறை 10.08.1840-ல் ஒரு கடிதம் எழுதுகின்றது. இதனடிப்படையில் கோவில்கள் மற்றும் மசூதிகளின் மேல் அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை இந்தியாவிலிருந்த வெள்ளை அதிகாரிகள் தளர்த்துகின்றனர். (ஆதாரம் – ஆய்வு நூல்; State and religious endowments in Madras / Chandra Mudaliar.(University of Madras, 1976))

1845-ல் இருந்து 1872 வரை உள்ளூர் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில் நிர்வாகத்தில் ஏகப்பட்ட முறைகேடுகளும் குளறுபடிகளும் நடந்துள்ளன. இவையனைத்தும் புகார்களாகவும், வழக்குகளாகவும் பதியப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் சாட்சாத் ‘உயர்சாதி’ இந்துக்களால் பதியப்பட்டவை என்பது முக்கியம். இதில் கிறித்தவ முஸ்லீம் ‘சதி’ ஏதுமில்லை. அதைத் தொடர்ந்து 1872-ல் கோவில்களின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஆங்கிலேய அரசு முயன்றது. எனினும், உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி அந்த முயற்சி தோல்வியுறுகின்றது.

இதற்கிடையே கோவில்களில் பக்திமான்கள் அடிக்கும் கொள்ளைகள் வரைமுறையின்றிச் செல்லத் துவங்கின. கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்வது, நகைகளைக் களவாடுவது, சிலைகளைக் கடத்தி விற்பது, வசூலாகும் நன்கொடையைத் திருடிக் கொள்வது, கோவிலைப் பராமரிப்பின்றி சீரழிய விடுவது என “பக்திமான்களின்” லீலைகள் அதிகரித்துச் சென்ற நிலையில் சர். டி.சதாசிவ அய்யர், பனகல் ராஜா ஆகியவர்கள் முயன்று 1927-ஆம் வருடத்தில் இந்துமத தர்ம பரிபாலன சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

அச்சட்டப்படி தர்மகர்த்தாக்கள் அடங்கிய வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, கோயில் சொத்துகள் நிர்வகிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேறுவதை சத்தியமூர்த்தி அய்யர் முதல் எம்.கே.டி. ஆச்சாரி வரை அனைத்துப் பார்ப்பனிய சக்திகளும் கடுமையாக எதிர்த்தனர். இன்றைக்கு சங்கபரிவாரங்கள் முன்வைக்கும் அதே கோரிக்கையை இவர்கள் முன்வைத்தனர். ஆனால் அவர்களிடத்தில் ஊழல் முறைகேடுகள் ஏன் நடந்தன, யார் செய்தார்கள், அவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரம் இல்லை. சொல்லப்போனால் முறைகேடுகள் செய்த ஆதிக்க உயர் சாதியினரின் அதிகாரம் பறிக்கப்படுவதே இவர்களின் கவலையாக இருந்தது.

1951-இல் அன்றைய தமிழக முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், இந்து சமய அறநிலையத் துறை எனும் அரசுத்துறையை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்காக அவரை சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள், ’வெளியே ஒரு கருப்புச்சட்டை ராமசாமி (பெரியார்), உள்ளே ஒரு கதர்ச்சட்டை ராமசாமி’ என திட்டித் தீர்த்தன.

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனியம், வென்றது மகஇக

“1951க்கு முன்பு தர்மகர்த்தாக்கள் வேண்டுமென்றே நிலத் தீர்வையையோ அல்லது போர்டாருக்குச் செலுத்தவேண்டிய தொகையையோ செலுத்தாது வைத்து, கோவில் நிலங்களை ஏலத்துக்குக் கொண்டுவந்து தாங்களே தட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்.” என்றும் “தஞ்சாவூர் ஜில்லாவில் வேதாரண்ய ஈஸ்வரர் தேவஸ்தானத்துக்கு 16,000 ஏக்கர் நிலம் கொண்ட 45 கிராமங்கள் சொந்தமாக இருக்கின்றன. இருந்தும்கூட, இதன் வருஷ வருமானம் இன்று ரூ.75,000 என்றுதான் காட்டப்படுகிறது. வட ஆற்காடு ஜில்லாவில் ஒரு கோவிலின் தர்ம சொத்துக்கள் பூராவுமே ஒரு ஜாகீரின் சொந்த சொத்தாக மாறிவிட்டது. தஞ்சாவூர் ஸ்வர்க்கபுரம் மடத்தில் சுமார் ரூ.15,000 ரொக்கம் கையாடல் செய்யப்பட்டு, 26 ஏக்கர் நிலம் பராதீனம் ஆகியிருக்கிறது. திருச்செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் நகைகள் காணாமல் போயுள்ளன” என்றும் குறிப்பிட்டு, இந்து அறநிலையத் துறையின் தேவையை அன்று ஓமந்தூரார் வலியுறுத்தியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட பின்னரும் கூட கோயிலின் கருவறையை ஆக்கிரமித்துக் கொண்ட பார்ப்பனர்கள் அடித்த கொள்ளைகளின் பட்டியல் மிக நீண்டது. புதிய ஜனநாயகத்தின் இந்தக் கட்டுரை பார்ப்பனர்களும் பக்திமான்களும் கோவில் சொத்துக்களை சூறையாடியது குறித்து விளக்கமாகப் பேசுகிறது

மற்றுமொரு எடுப்பான உதாரணம் சிதம்பரம் கோவில். 2009-ம் ஆண்டு வரை சிதம்பரம் கோவிலில் உண்டியல் வசூலை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வைத்திருந்தனர். அதுவரை ஆண்டு வருமானமாக தீட்சிதர்கள் சில ஆயிரங்களைக் காட்டி அதுவும் செலவாகி விட்டதாக கள்ளக் கணக்கெழுதி வந்தனர். 2009-ம் ஆண்டில் சிதம்பரம் கோவிலில் ஐந்து உண்டியல்கள் வைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு அவை எடுக்கப்பட்ட போது வசூலான தொகை மொத்தம் ஒருகோடியே 38 லட்சம் ரூபாய்கள் மற்றும் தங்கம் வெள்ளிப் பொருட்கள்.

எப்படி இருந்தாலும் இந்துக் கோவில்கள் இந்துக்களிடம் தானே இருக்க வேண்டும்? என்கிற பாமரத்தனமாக சிந்திப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வரலாற்று உண்மை என்ன?

பண்டைய காலங்களில் நிலவிய ஆசிய பாணி சொத்துடைமை வடிவத்தில் இந்திய கிராமங்கள் தன்னிறைவு பெற்று விளங்கின. ஒவ்வொரு கிராமமும் தனது விவசாய உற்பத்தியின் ஒரு பகுதியை தமது உழைப்பிற்கான ஊதியமாக எடுத்துக் கொண்டு ஒரு பகுதியை மன்னருக்கு கப்பமாக அனுப்பி வைத்தது. மற்றுமொரு பகுதியை உள்ளூர் கோவிலுக்குச் செலுத்தினர். அன்றைய கோவில்கள் வெறும் பக்திக்கான இடமாக மட்டும் இல்லாமல் நிர்வாக அலகுகளாகவும் இருந்தன.

ஒவ்வொரு கோவிலிலும் ஏராளமான சொத்துக்களும், தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் என செல்வங்களும் குவிந்து கிடந்தன. எனவே தான் மன்னர்கள் (இந்து மன்னர்களே கூட) அண்டை நாட்டின் மீது படையெடுக்கும் போது கோவில்களைத் தாக்கிக் கொள்ளையடித்தனர். ”விராட இந்துக்களான” மராத்தியர்கள் ”மிலேச்ச முசுலீம்” திப்புவின் ராஜ்ஜியத்தின் மீது போர் தொடுத்து அவரது ராஜ்ஜியத்தில் இருந்த சிருங்கேரி மடத்திற்கு சொந்தமான கோவில்களைக் கொள்ளையடித்ததற்கும் அந்த இந்துக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்ய “மிலேச்ச முசுலீம்” திப்பு நிதி ஒதுக்கியதற்கும் இது தான் காரணம்.

மன்னராட்சி நிலவிய காலம் தொட்டு கோவில்கள் அரசுக்குச் சொந்தமாக இருந்ததோடு அவை கிராம பொருளாதாரத்தின் சொற்ப உபரியை உறிஞ்சிக் கொழுத்தவைகளாகவும் இருந்தன. இந்து மன்னர்கள் மட்டுமின்றி இசுலாமிய மன்னர்களும் கூட வேர்மட்ட அளவில் நிலவிய கிராமப் பொருளாதாரத்தையும் அதன் குவிமையமாக இருந்த கோவில்களையும் அப்படியே போற்றிப் பராமரித்து வந்தனர். சமீபத்திய வரலாற்றுக் காலம் வரை கோவில்களுக்கு கிராம நிர்வாகத்தில் இருந்த பங்கின் எச்சசொச்சமாக இன்றும் கிராமப் பஞ்சாயத்துகள் கோவில்களில் கூடும் வழக்கம் உள்ளது. இன்றைக்கும் தமிழக கிராமப் புறங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு வரி பிரிக்கும் போது இந்துக்கள் மட்டுமின்றி கிராமத்தில் உள்ள இசுலாமியர்களும், கிறிஸ்தவர்களும் வரி செலுத்தும் வழக்கம் உள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீவிபத்தை அடுத்து இந்துத்துவ கும்பல் முன்னெடுத்திருக்கும் பிரச்சாரத்திற்குப் பின் இருப்பது ஆன்மீகமோ பக்தியோ அல்ல. கோவில்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையும் அல்ல. அப்படி அக்கறை இருந்திருந்தால், கோவில் சொத்துக்களைச் சுரண்டிக் கொழுத்துக் கிடக்கும் பார்ப்பன முதலாளிகளிடமிருந்த அந்த சொத்துக்களை மீட்கப் போராடுவதில் இருந்து அவர்கள் துவங்கியிருக்க வேண்டும். பார்ப்பனர்களும் பக்திமான்களும் கோவில் சொத்துக்களை சூறையாடியது குறித்து திராவிடர் கழகத்தின் உண்மை இதழில் வெளியான இந்தப் பட்டியலில் இருந்து ஹெச்.ராஜாவும் ஆர்.எஸ்.எஸ் வானரப் படைகளும் தனது கோவில் மீட்புப் போராட்ட்த்தைத் துவங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இந்துத்துவ கும்பலுக்கு இருப்பதோ கீழ்த்தரமான பாசிச அரசியல் உள்நோக்கங்கள். இந்துத்துவ கும்பலின் ஊளைகள் அதிகரித்திருப்பதும் இதே காலகட்டத்தில் கோவில் சிலை திருட்டுச் சம்பவங்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருப்பதும் மிகுந்த கவனத்திற்குரியது. அதிலும் குறிப்பாக சிலைத் திருட்டு வழக்குகளில் கைதானவர்களில் ஒருவர் கூட பார்ப்பன குருக்களாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பாதுகாப்பு நிறைந்த கோயில்களில் இருந்து சிலைகளைத் திருடும் குற்றவாளி என ஒருவன் இருந்தால் அந்த குற்றத்திற்கு துணை போன உள்கைகள் இல்லாமல் இருக்குமா? பார்ப்பன அர்ச்சர்களின் துணையின்றி சிலைகளை எப்படிக் கடத்தியிருக்க முடியும்?

கடந்த முப்பதாண்டுகளாக கோவில்களைக் கைப்பற்றி அவற்றை ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக் கூடாரமாக மாற்றும் இந்துத்துவ கும்பலின் சதித்திட்டத்திற்கு தோதாகவே சிலைத்திருட்டு, கோவிலில் தீவிபத்து என சமீபத்திய நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. இவை ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் சுமார் 36 ஆயிரம் கோவில்களைக் கைப்பற்றவும், அவற்றைத் தற்போது நிர்வகித்து வரும் இந்துசமய அறநிலையத்துறையையே கலைத்து விடவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் சுப்பிரமணிய சாமி. அரசியல் சாசனப் பிரிவு 25 மற்றும் 26-ன் படி ஒவ்வொரு மதக் குழுவினருக்கும் தாம் விரும்பியபடியும், அவரவரின் பாரம்பரிய முறைகளின் படியும் வழிபாடு செய்ய உரிமை இருப்பதாகவும் அதில் அரசு தலையிடுவது அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது என்று வாதிட்டு வருகின்றனர்.

கோவில்களை மீட்க இந்துத்துவ கும்பலின் சார்பாக பல ஆண்டுகளாக முனைப்பாக செயல்பட்டு வருபவர் டி.ஆர்.ரமேஷ். இவர் http://templeworshippers.in/ என்கிற இணையதளம் ஒன்றை இதற்காக பராமரித்து வருகிறார். அதில் தமது லட்சியங்கள் என “Restore the practices and traditions of our Temples” இந்த லட்சியத்தின் கீழ் தேவதாசி முறையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பயிற்சிக் கூடமாக கோவிலை மாற்றுவது வரை எதை வேண்டுமானாலும் அவர்களால் செய்து கொள்ள முடியும்.

இந்துக் கோவில்கள் ஆர்.எஸ்.எஸ் கையில் போனால் கொடியவர்களின் கூடாரங்களாகி விடும்!

இந்துத்துவ அரசியல் நோக்கங்களுக்கு சமூக வாழ்வின் அங்கமாக உள்ள கோயில் வலைப்பின்னலை கைப்பற்றிக் கொள்வது என்பதோடு கோவில்களில் குவிந்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துகளைக் கைப்பற்றுவது, அதைக் கொண்டு தமது பயங்கரவாத செயல்களுக்குத் திருப்பி விடுவதும் இவர்களது நோக்கங்களாக உள்ளன. வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என வகைதொகையில்லாத சொத்துகள். இவற்றை கைப்பற்றலாம். கோயில் உண்டியலில் விழும் பணத்தை அப்படியே மடை மாற்றலாம்.

இந்த நோக்கங்களுக்காக அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகளையும் முறைகேடுகளையும் ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனர். அரசுகளால் நடத்தப்படும் எந்தவொரு அமைப்பிலும் முறைகேடுகள் இருப்பது உண்மைதான். அதை சரி செய்யவே மக்கள் போராடுகின்றனர். சான்றாக ஒக்கி புயலின் போது கடற்படையும், இந்தியக் கடலோரக் காவற்படையும் சரியாக செயல்படவில்லை. எனவே இப்படைகளை கலைத்து விட்டு மீனவர்களே படை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சங்கிகள் ஆதரிப்பார்களா?

அதே போல போக்குவரத்து, சுகாதாரம், கல்வி என அனைத்து துறைகளிலும் அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒரு அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை என்று அதை அப்பல்லோவுக்கு எழுதிக் கொடு என்பதற்கும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட கோருவதற்கும் வேறுபாடு இல்லை.

கோவில்களின் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை மக்களால் பெயரளவிற்காவது அதைக் கேள்விக்குட்படுத்த முடியும். தனியாரிடம் ஒப்படைத்து விட்டால் அங்கே கேள்விக்கே இடமில்லை. இராணுவத்திலும் போலீசாரிடமும் லஞ்ச ஊழல் இருக்கிறது என்பதற்காக அந்த துறைகளை மொத்தமாக அம்பானி அதானி ஏன் அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்றால் ‘தேஷபக்தர்கள்’ ஒத்துக் கொள்வார்களா? எதார்த்தத்தில் இராணுவத்தின் ஆயுதத் தளவாடங்களின் மூலம் அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கிறது என்பதும் உண்மை.

இந்துமதம் சார்ந்த விவகாரங்களில் அப்படி தனியார்மயம் ( பார்ப்பனிய மயம்) நடப்பதற்குத் தோதான வகையில் மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடுபிடிகளின் அரசும் அமைந்துள்ளன. புராணப்புரட்டுக்களை கல்வியில் சேர்ப்பது, பார்ப்பன சடங்குகளை அரசு விழாவாக்குவது, வரலாற்றை திருத்தி எழுதுவது, பாபர் மசூதியை ஒழித்து விட்டு அதிகாரப் பூர்வமாக ராமர் கோவில் கட்டுவது, மாட்டுக்கறி – அசைவ உணவு வகைகளை பொது வாழ்வில் இல்லாததாக்குவது என ஏகப்பட்ட திட்டங்களை பார்ப்பனிய பாஜக அமல்படுத்தி வருகிறது. இத்தகைய கயர்கள் தமிழக கோவில்களை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

கோவில்களைக் காப்பாற்றுவது என்பது இனிமேலும் மதம் சார்ந்த பிரச்சினை அல்ல – கோவில்களுக்கு சமூகத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றின் சொத்து – பாரம்பரிய – வரலாற்று மதிப்பை காப்பாற்ற மக்கள் அனைவரும் களமிறங்கியாக வேண்டும். அறநிலையத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். அவை அனைத்திற்கும் தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களும், இதர சொத்துக்களும் உள்ளன. மதங்களில் பக்தி, ஆன்மீகம் மட்டுமே சாமியார்களுக்கும், கடவுளர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். இவை தவிர அனைத்தும் மக்கள் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் மன்னர்களும், நம்பூதிரிகளும் அடித்த கொள்ளையை இன்று வரை தண்டிக்க முடியவில்லை. பாபாராம் தேவ், அஸ்ராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா போன்ற சாமியார்கள் பொறுக்கித்தனத்தில் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளிலும் முன்னணி வகிக்கிறார்கள்.

ஆக வரும் காலத்தில் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் சொத்துக்கள் என்ற வகையில் மட்டுமல்ல, தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கே அது  முன் நிபந்தனையாக தேவைப்படுகிறது.

தமிழக கோவில்கள் இந்து அறநிலையத்துறையில் இருந்து இந்துமதவெறிக் கும்பல்களின் கையில் செல்லுமானால் இவர்களுக்கு ஊருக்கு ஊர் ஒரு ஆயுத முகாம் உருவாகிவிடும். அங்கே அப்பாவி மக்களை வெறியேற்றுவது, இளைஞர்களை அடியாட்படைகளாக மாற்றும் வண்ணம்  பயிற்சி கொடுப்பது என பல முறைகேடுகள் நடக்கும். இவற்றுக்கு கோவில்களில் உள்ள மக்கள் சொத்துக்கள் பயன்படும். அனுமதிக்க போகிறோமா?

– சாக்கியன்

மேலும் படிக்க
Fire in Madurai’s Meenakshi temple sparks demand for shops to be evicted from complex
தமிழகம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தில் ரூ.52 கோடி இழப்பு : 3 நாளாகியும் வெப்பம் தணியவில்லை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீ விபத்து: நிபுணர் குழு இன்று ஆய்வு
Madurai: Hindu outfit seeks action over Meenakshi temple fire
Major fire at Meenakshi temple in Madurai, 40 shops gutted
கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை
கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன-‘மேல்’சாதிக் கும்பல்!
உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

 

கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் !

5

ல்வி தனியார்மயம் ஆகிவரும் சூழ்நிலையில், ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்கும் என்பதே எட்டாக்கனி ஆகிவிட்ட நிலையில் இதெல்லாம் போதாது என்று, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சாதி அடிப்படையில் அவமானப்படுத்தப்படுவதும், அடையாளப்படுத்தப்படுவதும் தினம் தினம் நடந்துகொண்டுதான் உள்ளது.

புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

இந்த நிலையில் கரூர் பள்ளி மாணவன் சரவணனின் மரணம் இதனை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்த சிவக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் சரவணன். கரூர் ஆண்டாங்கோவிலில் அருகே இருக்கும் புனித அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரவணன் 12-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் அவன் 10 வகுப்பில் 470 மதிப்பெண் பெற்று முதல் மாணவனாக இருந்துள்ளான். படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, நீச்சல், யோகா, நடனம் போன்ற அனைத்து துறையிலும் அவனே முதல்நிலை வகித்துள்ளான். இதன்மூலம் அவன் பள்ளியில் உள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்து பாராட்டையும் பெற்று வந்துள்ளான்.

11-ம் வகுப்பு படிக்கையில் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்று மாணவர் தலைவனாக (School People leader) தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலையில் இதனை பொருத்துக்கொள்ள முடியாத அப்பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோர்கள் இதனை ஏற்க மனமின்றி, சரவணன மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதே பள்ளியைச் சேர்ந்த வேறொரு மாணவியை தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

சரவணன்

மேற்படி விபரம் தெரியவந்து, இதுபற்றி சரவணன் கேட்டபொழுது அம்மூவரும் ” நீயெல்லாம் வெட்டியான் வேலைசெய்யத்தான் லாயக்கு, நீ ரொம்ப அழகாவா இருக்க, பீப்பிள் லீடராக இருக்க உனக்கு தகுதி இல்லடா பறப்பயலே” என்று கேவலமாக அமானப்படுத்தி திட்டியுள்ளார்கள். பின்னிட்டு பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அந்த மூன்று ஆசிரியர்களும் வந்திருந்த பெற்றோர்களிடம் உங்கள் பிள்ளைகளை சரவணனுடன் சேர விடாதீர்கள் என்றும் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் சரவணனுடன் சேர வேண்டாம் என்றும் மீறி அவனுடன் சேர்ந்தால் T.C.யை கிழித்து வீட்டிற்கு அனுப்பிவிடுவோம் என்றும் எச்சரிக்கை செய்து மிரட்டியுள்ளார்கள். இதனால் சக மாணவர்கள் மத்தியில் தனிமையாகவே இருந்து வந்துள்ளான். மற்ற சில மாணவர்களும் ஆசிரியர்களும் ஏன் இப்படி சொல்கிறார்கள் என தெரியாமல் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் 23.01.2018 அன்று சரவணன் நேரில் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மூவரிடமும், ஏன் என் சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள பணியாளர்களும் சரவணனை விளையாட்டு மைதானத்தில் நிற்க வைத்து, சரவணனை பார்த்து ” கேள்வியாடா கேட்கிறே பறப்பயலே, நீ இந்த வருஷம் பாஸ் ஆக முடியாது, பெயில்தாண்டா ஆகப் போற” என்றும், ” உன் அப்பன் வெளிநாட்டில் இருந்தால் நீயெல்லாம் பெரிய ஆளா? உன்னை ஒழிச்சு கட்டாமல் விடமாட்டேன்” என்று மிரட்டியதுடன் பலவாறு சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த சரவணன் மாலை வீட்டிற்கு வந்து தன் தாயாரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளான்.

பின்பு சாப்பிடாமலே தன் அறைக்கு தூங்க சென்ற சரவணன், மறுநாள் காலை 7.00 மணிக்கு வழக்கம்போல் எழாமல் இருக்கவே அவரின் தாயார் அறைக்கு சென்று பார்த்தபொழுது, சரவணன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான். இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற பெற்றோர்கள் உடனே மருத்துவமனைக்கு சரவணனை எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனை செய்த டாக்டர் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். தன் மகனை சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தி தற்கொலைக்கு செய்துள்ளதை நினைத்து, அழுகையும், ஆத்திரமும் அடைந்த பெற்றோரும் உறவினரும், சரவணனின் மரணத்திற்கு நீதிகேட்டு மேற்படி பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

வழக்கம் போல வந்த கரூர் நகர போலீசார் கூட்டத்தை விரட்டிவிட்டு, பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் கண் துடைப்பிற்காக ஒரு புகாரை பெற்றுக்கொண்டு, குற்ற எண். 77/2018 சட்டப்பிரிவு 174ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நாடகம் நடத்தினார்கள். சரணவனின் மரணத்திற்கு என்ன காரணம் சொல்வது என்று திணறிப்போயிருந்த பள்ளி நிர்வாகத்தினர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் காதல் தோல்வியால் மரணம், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை என்றெல்லாம் பொய்யாக தகவலை பரப்பிவிட்டனர்.

மேற்படி விபரத்தை கேள்விப்பட்டு களத்திற்கு சென்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பாதிக்கப்பட்ட சரவணனின் பெற்றோர்களிடம் விபரத்தை கேட்டறிந்து, இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டி அம்பலப்படுத்தினோம்.

பின்னர் போலீசாரும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காக்கிறது. சரவணனின் மரணத்திற்கு நீதி கேட்டும், நியாயமான விசாரணை மேற்கொண்டும், மேற்படி பள்ளியின் முதல்வர் P.ஜோசப் (எ) அனீஷ், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆசிரியை ஜெயந்தி, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நூலக ஆசிரியை தேவி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வழியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு நமது தோழர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இன்று தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக்கொள்ளைக்கும், சாதிய அடக்குமுறைக்கும் எத்தனை மாணவர்கள் பலியாகியுள்ளனர் என்பது பட்டியலிட்டு சொல்ல முடியாது. கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், மாணவர்களின் மீதான சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் அமைப்பாக அணிதிரள வேண்டும் என்பதையே சரவணனின் மரணம் சுட்டிக்காட்டுகிறது.

சாதி வெறியர்களுக்கு எதிராக களம் இறங்குவோம்!
சாதி வெறியூட்டும் பள்ளிகளை இழுத்து மூடுவோம் !

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர் – 98941 66350

***

தன் மகனை இழந்த தாய் சரஸ்வதி முதல் தகவலறிக்கை கூட பதியாமல் இருந்ததை தொடர்ந்து அனைத்து காவல்துறை மேலதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலருக்கும் எழுதிய புகார் மனு

பொருள்:- என் மகனை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி தற்கொலைக்கு தூண்டிய புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிரின்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு.

அய்யா/அம்மா,

மேற்கண்ட விலாசத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் நானும் என் குடும்பத்தினரும் இந்து பறையன் சாதியை சேர்ந்தவர்களாவோம். என் மகன்களில் ஒருவனான சரவணன் 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் பெற்றுள்ளான். தற்பொழுது அவன் புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயோ மேத்ஸ் குரூப்பில் படித்து வந்தான்.

அவன் படிப்பு மட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸ், யோகா, நிச்சல், டான்ஸ் போன்ற அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருந்து வந்ததன் காரணமாக எல்லோரும் பாராட்டி வந்தார்கள். பள்ளி மாணவர் தலைவராக மாணவர்களால் என் மகன் சரவணன் 11ம் வகுப்பு படித்துவரும் போது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆனால் மேற்படி பிரன்ஸ்பல், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோர் என் மகன் சரவணன் மாணவர் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்காமல் வேறு ஒரு பெண்ணை மாணவர் தலைவராக்கினார்கள்.

அதனால் என் மகன் சரவணன் மனம் உடைந்து போனான். அதைப் பற்றி பிரின்ஸ்பாலிடமும் ஆசிரியை ஜெயந்தி(பிராமீன்), நூலக ஆசிரியை தேவி(கவுண்டர்) ஆகியவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், “நீயெல்லாம் வெட்டியான் வேலை பார்க்கதாண்டா லாயக்கு. ஸ்கூல் பியூப்பில் லீடராக இருக்க உனக்கு தகுதியில்லடா. பறப்பயலே”, என்று கேவலமாக திட்டியுள்ளார்கள். அந்த விசயங்கள் அனைத்தையும் என்னிடம் என் மகன் சரவணன் சொன்னான். நான் படிக்கிறதுதான் உனக்கு முக்கியம். எதற்கும் வருத்தப்படாதே நன்றாக படி”, என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.

தொடர்ந்து மேற்படி நபர்கள் என் மகன் சரவணனை சாதியை சொல்லி டார்ச்சர் செய்துள்ளார்கள். அதனை என் மகன் சரவணன் என்னிடமும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லி அழுதான். நான் என் மகன் சரவணனிடம், “இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் பரிட்சை நடந்துவிடும். அதுவரை பொருத்திரு. யாரிடமும் எதுவும் பேசினால் பிரச்சனையாகிவிடும்”, என்று சொன்னேன். என் மகன் சரவணனும் அமைதியாகிவிட்டான்.

ஒரு மாதம் முன்பாக நான் மேற்படி பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்ற போது மேற்படி பிரின்ஸ்பால், ஜெயந்தி, தேவி, மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்துகொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம், “சரவணன்கூட யாரும் அவரவர் பிள்ளைகளை சேரவிடக்கூடாது” என்றும் மாணவர்களிடம், “யாரும் சரவணனிடம் சேரக்கூடாது”, என்றும் சொல்லி அவமானப்படுத்தினார்கள். நானும் என் மகன் சரவணனும் கதறி அழுதோம்.

அதன் பின்னர் பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி ஆகியோரிடம் என் மகன் சரவணன் 23.01.2018ம் தேதியன்று, ‘நான் என்ன தவறு செய்தேன். ஏன் என்னை இப்படி டார்ச்சர் செய்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளான். அதற்கு விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைத்து மேற்படி பிரின்ஸ்பால், ஆசிரியை ஜெயந்தி, நூலக ஆசிரியை தேவி மற்றும் சில பள்ளி பணியாளர்கள், “கேள்வியாடா கேக்குற. பறப்பயலே. நீ இந்த வருஷம் பாஸாக முடியாதுடா. பெயில்தாண்டா ஆகப்போற. உன்னை ஒழிச்சுகட்டுறோமா. இல்லையான்னு பாருடா”, என்று திட்டியுள்ளார்கள். அழுதுகொண்டே என்னிடம் வந்து என் மகன் சரவணன் சொல்லி அழுதான். இரவு தூங்க சென்ற சரவணன் 24.01.2018ம் தேதியன்று காலை 7 மணியளவில் தூக்கில் இறந்து தொங்கிகொண்டிருந்தான்.

தகவலறிந்து போலீசார் வந்து என்னை விசாரித்தார்கள். நடந்ததை சொன்னேன். வழக்கு பதிவு செய்ததாக கேள்விப்பட்டேன். கடந்த 31.01.2018ம் தேதியன்று கரூர் டவுன் காவல்நிலையத்திற்கு சென்று முதல் தகவல் அறிக்கையை வாங்கி பார்த்த போது நான் சொன்ன விசயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எனவே உரிய விசாரணை நடத்தி மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் மகன் சரவணன் மரணத்திற்கு நீதி பெற காவல்துறை தவிர வேறு புலனாய்வு முகமையை அமர்த்திடவும் மேலும் சூழ்நிலைக்கு உகந்த இன்னபிற நடவடிக்கை எடுக்க வழிவகை செய்திட வேண்டுமென்று மிகவும் பணிந்து வேண்டுகிறேன்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
(சி.சரஸ்வதி)

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர் – 98941 66350