ஜுனைத் வீடு திரும்பவில்லை ……………………….. இப்போது இன்னொரு பெயர்
திடீரெனெ பிரபலமாகிவிட்டது
ஜுனைத் என்ற பதினாறு வயது பையனை
ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி
கொலை செய்துவிட்டார்கள்
ரத்தம் வெள்ளத்தில் மிதக்கும் படங்கள்
பரவலாகக் காணக்கிடைக்கின்றன
ஒரே நாளில் நாம் பிரலமாவதற்கு
தேச பக்தர்களால்
நாம் கொல்லப்படுவதைவிட
சிறந்த வழி வேறு எதுவுமில்லை
ஜுனைத் என்பது ஒரு பையன் அல்ல
ஒரு பெயர் கூட அல்ல
அது ஒரு அடையாளம் அவ்வளவுதான்
அக்லக் என்பது
எப்படி ஒரு அடையாளமோ
அதேபோல
ரோஹித் வெமூலா
எப்படி ஒரு அடையாளமோ
அதே போல
கொலைகாரர்கள் முன்
கைகூப்பிக் கெஞ்சிய
ஒரு டெய்லரின் படம்
நாடு முழுக்க பரவியதே
அந்த டெய்லரின் பெயர் எனக்கு மறந்துவிட்டது
அது முக்கியமல்ல
அந்தப் புகைப்படமும் ஒரு அடையாளம்தான்
ஜுனைத் டெல்லியிலிருந்து
ரமலானுக்கு புத்தாடைகளுடன்
ரயிலில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது
ஒரு கும்பல் அவனைக் கொன்றுவிட்டது என்கிறார்கள்
கொல்வதற்கு காரணம் எதுவும் தேவையில்லை
ஜுனைத்திற்கு ஒரு அடையாளம் இருக்கிறது
அக்லகிற்கு ஒரு அடையாளம் இருக்கிறது
அந்த டெய்லருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது
ஆனால் கும்பலுக்கு எந்த அடையாளமும் இல்லையா?
அவர்களுக்கு பெயர்கள் இல்லையா?
அக்லக்கை கும்பல் ஏன் கொலை செய்தது
என்பது உங்களுக்குத் தெரியும்
அந்த முதியவன் வைத்திருந்த ஆட்டிறைச்சியை
பசு இறைச்சி என சந்தேகித்து கொலை செய்தார்கள்
நாடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது
இப்போது எந்த இறைச்சியும் தேவையில்லை
மாட்டிறைச்சிகான
உங்கள் உரிமையைப்பற்றி பேசினாலே போதும்
நீங்கள் கொல்லப்படுவீர்கள்
ஜினைத் என்று அழைக்கப்படும்
அந்தச் சிறுவன் கும்பலோடு மாட்டிறைச்சியைப் பற்றி
விவாதித்தான் என்று சொல்லப்படுகிறது
ஆயுதம் தாங்கிய பசுப்பாதுகாவலர்கள்
தங்கள் கத்தியை நேராக அவனது நெஞ்சில் இறக்கினார்கள்
ஜினைத் கொல்லப்பட்ட அன்று
ரமலான் நோன்பு இருந்தான்
அவன் அதிகாலையிலிருந்து
ஒரு சொட்டுத்தண்ணீரைக் கூட
அருந்தியிருக்கவில்லை
அவன் நோன்பு திறப்பதற்கான
கடைசி நோன்புக் கஞ்சியை
அவனுக்கு கொடுக்க முடியாமல் போயிற்று
என்று அவனது தாய் கதறிய செய்தியைப் படித்தேன்
இப்போது முற்றுபெறாத அந்த நோன்பு
முடிவற்றதாக நீண்டுகொண்டே இருக்கிறது
அந்தப் பசியும் தாகமும்
முடிவற்றதாக வளர்ந்துகொண்டே இருக்கிறது
இந்த நாட்டின் இதயமற்ற அரசரே
உங்களால் இதை புரிந்துகொள்ள முடிகிறதா?
ஒரு சிறு பையன்
தன் ரத்த வெள்ளத்தில்
தாகத்தோடு பசியோடும்
மிதந்துகொண்டிருக்கிறான்
அவன் நோன்பை முடிக்கவேண்டிய நேரம்’
கடந்துவிட்டது
உங்களுக்கு இந்தப் பாவத்தில்
எந்தப் பொறுப்பும் இல்லையா?
அமெரிக்க ஜனாதிபதியுடன்
இன்றிரவு நீங்கள் விருந்து மேசையின் முன் அமரும்முன்
உங்கள் கரங்களை ஒரு கணம் உற்றுப்பாருங்கள்
இந்தப் பையன்களும் சேர்ந்துதானே
நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும்?
உங்களால் இதைத் தடுக்க முடியாது
என்பதும் எனக்குத் தெரியும்
அந்தக் கும்பலைப் போலவே
நீங்களும் ஒரு கருவி
கும்பலுக்கு பெயர் இல்லை
உங்களுக்கு இருக்கிறது
அவ்வளவுதான்
இன்று சுவரில் ஒட்டப்பட்டிருந்த
ஒரு சுவரொட்டியைப் படித்தேன்
‘’ முஸ்லீம்கள் யாரிடமும்
எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள்
முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ
நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ
உரத்துப் பேசாதீர்கள்
கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள்
நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு
அது மிகவும் அவசியம்’’
ஆம் மெளனமாக இருங்கள்
கொலைகார்கள் உங்கள் அருகிலேயே’
இருக்கக்கூடும்
அவர்கள் உங்களை சற்றுமுன்
கட்டித்தழுவிகொண்டிருந்திருக்கூடும்
நீங்கள் கிரிக்கெட்பந்தயங்களைப்
பார்ப்பதைக்கூட தவிர்த்துவிடுவது நல்லது
நீங்கள் உங்கள் பகைநாட்டு வீரனின் சிக்ஸருக்கு
கைதடிட்டினால்
உங்கள் கைகள் முறிக்கப்படும்
புனித ரமலான் மாதத்தில்
குடிப்பது தடை செய்யபட்டிருக்கிறது
நிரம்பிய கோப்பையிடம்
மனம் கசந்து
நான் என்ன செய்யவேண்டும்
என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை
நான் அமைதியிழந்திருக்கிறேன்
நான் இதையெல்லாம்
கடந்து போய்விடவே விரும்புகிறேன்
இந்த நாட்டில் யாருக்கும் நீதி கிடைத்ததில்லை
கலவரங்களில் கொல்லப்பட்டவர்களுக்கோ
குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கோ
ரயிலில் அடித்துக்கொல்லப்பட்ட
ஒரு பையனுக்கோ
எவருக்கும் நீதி கிட்டப்போவதில்லை
கும்பலைச் சேர்ந்தவர்கள்
காத்திருக்கிறார்கள்
ஒரு பையன் கொல்லப்பட்டதற்காக
தங்களில் இரண்டுபேர் கொல்லப்பட வேண்டும் என்று
அப்போதுதான் பதிலுக்கு இறுநுறு பேரைக் கொல்ல முடியும்
இரண்டாயிரம்பேரைக் கொல்ல முடியும்
அதுதான் திட்டம்
அதற்காக ஒரு பையன்
தான் ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியமலேயே
இறக்கிறான்
மாட்டிறைச்சி என்பது முக்கியமே அல்ல
நிறைய மனித இறைச்சிக்கு தேவை இருக்கிறது
மனித இறைச்சி
அதிகாரத்தின் ஆண்மையை
பெருகச் செய்வது
எனக்கும் ஒரு பெயர் இருக்கிறது
எனக்கும் சில அபிப்பராயங்கள் இருக்கின்றன
அந்தப் பெயர் நான் கொல்லப்படுவதற்கான ஒரு பெயர்
அந்த அபிப்ராயங்கள் நான் கொல்லபடுவதற்கான ஒரு அபிப்ராயங்கள்
மேலும் நான் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறேன்
இதையெல்லாம் மாற்றியமைப்பது
அல்லது மறைத்துவைப்பது
அவ்வளவு சுலபமல்ல
எனது ஆதார் அட்டையில்
என்னைப்பற்றிய எலலா விபரமும் இருக்கிறது
நீங்கள் என்னிடம் வருவதற்கு
இன்னும் அதிக நேரம் ஆகபோவதில்லை
என்பது எனக்குத் தெரியும்
நான் பயப்படவில்லை
தர்க்கரீதியாக இதை
புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்
மக்கள் அந்தப்பையன் கொல்லப்படுவதை
அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்
என்று சொல்லப்படுகிறது
எல்லோராலும்
வெளிப்படையாக கும்பலில்
சேர்ந்துகொள்ள முடியாது
அவர்கள் தங்கள் மனசாட்சியைக்கொல்வதற்கான
வழிமுறைகளை ஏற்கனவே உருவாக்கிவிட்டார்கள்
அந்தப்பையனின் குரல்வளையை
அறுத்தவர்களில் ஒருவன்
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்
சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ
தேர்ந்தெடுக்கப்படலாம்
புனித ரமலான் மாதத்தில்
குடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது
நமது அசோக சக்கரத்தின்
நான்கு சிங்கங்கள்
மிகவேகமாக
ஓநாய்களாக மாறிவிட்டன
அது பரிணாம வளர்ச்சியில்
மிகவும் விசித்திரமான ஒரு சம்பவம்
ரத்தவெள்ளத்தில் மிதக்கும்
ஒரு பையனின் சடலம் அருகே
நான்கு ஓநாய்கள் உற்றுப்பார்த்தபடி
நின்றுகொண்டிருக்கின்றன
ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில் சில வரலாற்று அணுகுமுறை அற்றோர் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் எழுதிய நூல்கள், வைத்த வாதங்கள் அனைத்தும் வரலாற்று அணுகுமுறையின் தொழில் நுட்ப சொற்களை தவறாக பயன்படுத்தி, குதர்க்கவாதங்களோடு ஆரிய குடியேற்றத்தை மறுத்தன. மாறாக ஆரியர்களே இங்குள்ள பூர்வகுடி மக்கள் என்பதை வலிந்தும் பொய்யாகவும் பேசினர். மோடியின் தலைமையில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் இதை அடிப்படையாக வைத்தே வரலாற்றை மாற்றுகிறார்கள். இன்னும் மோசமாக புராணப் புரட்டுக்களையே அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் பேசுகின்றனர். நாட்டின் பிரதமரே உலக அறிஞர்கள் – அறிவியலாளர்கள் கூட்டத்தில் அதை வெட்கம் கெட்டு பேசுகிறார்.
இதை ஆரம்பத்திலிருந்தே வரலாற்று அறிஞர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். அதற்கு சமீபத்திய வரவாக இந்த மரபணு ஆராய்ச்சி உண்மையை மறுக்க முடியாமல் எடுத்துரைக்கிறது. மற்ற ஆய்வுமுறைகளை விட மரபணு ஆராய்ச்சி இன்னும் துல்லியமானது. கி.மு 2000-ம் வாக்கில் மத்திய ஆசியாவிலிருந்து சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை வேராகக் கொண்ட ஆரியர்களின் வருகையை இந்த ஆய்வு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுகிறது. அதே காலத்தில் இங்கு சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து போனதும் நடந்திருக்கிறது.
ஆரியர்கள் மட்டுமல்ல இங்கு இருக்கும் மற்ற மக்களும் குடியேறிகள்தான் என்று கட்டுரையாசிரியர் சற்றே நகைச்சுவையுடன் குறிப்பிடுகிறார். அது உண்மைதான். ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மக்களே இந்தியாவின் பூர்வகுடிகள். அதன் பிறகு சிந்து சமவெளி நாகரீகத்தை படைத்தோர், கிழக்காசியாவில் இருந்து விவசாயத்தோடு குடியேறிய மக்கள் எல்லாம் ஆரியர் வருகைக்கு வெகு காலம் முன்பே இங்கு குடியேறினார்கள். ஆனால் ஆரியமயமாக்கம் என்பது இங்குள்ள பூர்வகுடிமக்களை விரட்டியது, ஒடுக்கியது, சமஸ்கிருதமயமாக்கம், நிறவெறி, பின்னர் அதுவே வர்ணமாக மாறியது என்று ஒரு பெரும் பார்ப்பனிய அடக்குமுறையோடு தொடர்புடையது.
இன்று இந்த மரபணுக்கள் எல்லாம் கலந்து ஒன்று பிணைந்திருக்கின்றது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த ஒன்றிணைவை இன்றைக்கும் பார்ப்பனியம் கேள்விக்குள்ளாக்கி மதம், சாதி, மொழியின் பெயரால் இந்திய உழைக்கும் மக்களை சூத்திரன், பஞ்சமன் என்றே ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறை ஆரியர் வருகையோடு தொடர்புடையது என்பதுதான் முக்கியமானது. “நாங்கள் கருப்பாக இருக்கும் திராவிடர்களோடு சேர்ந்து வாழவில்லையா” என்று தருண் விஜய் கேட்ட கேள்வி அதை வேறு விதத்தில் விளக்குகிறது. இனி இந்துமதவெறியர்கள், ஆரியர்கள்தான் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை மறுத்துப் பேச முடியாது. ஆனால் இந்த வரலாற்று உண்மையை அவர்கள் பாடப்புத்தகங்களில் இருந்து தடை செய்ய முனைவார்கள். உண்மையை வன்மையாக மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
கட்டுரையை படியுங்கள், பரப்புங்கள்!
இந்திய வரலாற்றின் மிகவும் நெருடலானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கேள்விக்கான விடை நிதானமாக அதேசமயம் மிக உறுதியாகக் கிடைத்து வருகிறது. தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் தனி வகைப்பட்ட கலாச்சாரத்துடனும் கி.மு 2000 க்கும் கி.மு 1500 -க்கும் இடைப்பட்ட காலத்தில் (அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு) இந்தியாவிற்குள் குடியேறினார்களா என்பதுதான் அந்தக் கேள்வி. அந்த காலகட்டம்தான் சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆம் அவர்கள் குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
மரபணுவியல் ஆராய்ச்சி அளிக்கின்ற இந்த விடை பலருக்கு வியப்பையும் சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடும். ஏனென்றால், சமீபகாலமாக ஆரிய குடியேற்றம் என்ற கருத்தாக்கமே மரபணுவியல் ஆராய்ச்சிகளின் மூலம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற கருத்து பரப்பப்பட்டு வந்தது. இந்தக் கருத்து வலிந்து கூறப்படும் மிகைக் கூற்று என்பது அந்த கருத்தை முன்வைப்பவர்கள் சுட்டும் மூல ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவனமாக படித்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய ஒன்று.
ஆனால், அப்படிப்பட்ட சந்தேகங்கள் எதற்கும் இடமில்லாமல், தந்தை வழியாக ஆண் வாரிசுகளுக்குக் கடத்தப்படும் Y-குரோமோசோம்கள் தொடர்பாக இப்போது வெள்ளம் போல் வந்து சேரும் புதிய தரவுகள் ஆரியக் குடியேற்றத்தை மறுக்கும் வாதங்களை தூள் தூளாக்கிவிட்டன.
வம்சாவழித் தொடர்கள்
சமீப காலம் வரை தாயிடமிருந்து பெண் வாரிசுகளுக்கு கடத்தப்படுகின்ற mtDNA (matrilineal DNA) என்ற தாய்வழி உயிரணுவைப்பற்றிய தகவல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அந்தத் தரவுகள், இந்திய மக்களின் மரபணு தொகுப்பிற்குள் சுமார் 12,500 ஆண்டுகளாக வெளியிலிருந்து வந்த எந்த புதிய மரபணு சேர்க்கையும் நடைபெறவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தின. தற்போது கிடைத்துள்ள புதிய Y-DNA தரவுகளிலிருந்து இந்த 12,500 ஆண்டு காலகட்டத்தில் இந்திய ஆண் வம்சாவழியில் வெளியிலிருந்து வந்த மரபணுக்கள் கலந்திருக்கின்றன என்பதை நிறுவ முடிகிறது. இது ஆரியக் குடியேற்றம் நிகழவில்லை என்று வைக்கப்பட்ட வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியிருக்கிறது.
தாய்வழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும், தந்தைவழி உயிரணு தொடர்பான தரவுகளுக்கும் இடையேயான வேறுபாட்டுக்கான காரணம் என்ன என்பது இந்த புதிய விபரங்களின் ஒளியில் வரலாற்றை பரிசீலிக்கும் போது தெளிவாகத் தெரிகிறது. வெண்கல யுகக் குடியேறிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக இருந்திருக்கின்றனர். எனவே, தாய்வழி மரபணு தொடர்பான தரவுகளில் இந்தக் குடியேற்றத்தின் விளைவாக ஏற்பட்ட மரபணு கலப்பு தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருக்கவில்லை. ஆனால், புதிதாக ஆய்வு செய்யப்பட்ட தந்தை வழி உயிரணு தொடர்பான தரவுகளில் அவை வெளிப்படுகின்றன.
இன்று சுமார் 17.5% இந்திய ஆண்களின் மரபு தொடர்ச்சி, மத்திய ஆசியாவிலும், ஐரோப்பாவிலும், தெற்கு ஆசியாவிலும் பரவியிருக்கும் R1a ஹேப்லோகுழுவைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. (ஒரு ஹேப்லோகுழு ஒரு தனிப்பட்ட வம்சா வழியை அடையாளப்படுத்துகின்றது). R1a வம்சாவழி மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி பகுதியிலிருந்து மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் பரவியதென்றும் அவ்வாறு பரவும் வழியில் அது பல்வேறு துணைக்கிளைகளாக பிரிந்ததென்றும் தெரிகிறது.
சமீபத்திய புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, இந்தியாவிற்குள் ஏற்பட்ட குடியேற்றங்களைப் பற்றிய ஒரு செறிவான கோர்வையான வரலாற்றை சித்தரிக்கும் ஆய்வுக்கட்டுரை மூன்று மாதங்களுக்கு முன்னர் BMC Evolutionary Biology என்ற, அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.
“இந்திய துணைக்கண்டத்தின் மரபணுவியல் கால வரிசை பெருமளவில் ஆண் வழியிலேயே மரபணு கலப்பு ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது” என்ற தலைப்பிலான அந்த ஆங்கில ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் மார்ட்டின் பி.ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு பின்வரும் முடிவுக்கு வந்திருக்கிறது :
சிந்து சமவெளி நாகரீகம்
“வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்து கலந்த மரபணு உள்ளீடு பெருமளவில் ஆண்கள் வழி வந்திருக்கிறது. இது இந்தோ-ஐரோப்பிய மேய்ச்சல் சமூகம், ஒரு வட்டார அளவிலான தந்தைவழி ஆணாதிக்க சமூகம் என்ற முந்தைய புரிதலுடன் ஒத்துப்போகிறது. மேற்கண்ட மரபணு கலப்பை உருவாக்கிய இந்த குடிபெயர்வு, இதை விட விரிவான இந்தோ-ஐரோப்பிய குடிபெயர்வின் ஒரு பகுதியே. ஐரோப்பிய-ஆசிய கண்டங்கள் எங்கும், 3,500 முதல் 5,000 ஆண்டுகளுக்கிடைபட்ட காலத்தில் நிகழ்ந்த இந்த குடிபெயர்வு காஸ்பியன் பகுதியிலிருந்து தோன்றியிருக்கிறது.”
இந்திய ஆண்களின் உடலில் R1a குழுவைச் சேர்ந்த மரபணுக்கள் பரவலாக காணப்படுவது, இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வெண்கல யுகத்தில் குடியேறியதற்கான ஒரு வலுவான ஆதாரம் என்று பேரா. ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார். பேரா. ரிச்சர்ட்ஸ் குழுவினரின் உறுதியான முடிவுகள், அவர்களது சொந்த ஆராய்ச்சியில் கிடைத்த வலுவான ஆதாரங்களை மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளில் உலகெங்கிலும் நடத்தப்பட்ட மரபணுவியல் விஞ்ஞானிகளுடைய ஆய்வுகளில் கிடைத்த தரவுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் மரபணுவியலாளரும், பேராசிரியருமான டேவிட் ரைக் தனது முந்தைய ஆய்வுகளில் மிகவும் எச்சரிக்கையாக முடிவுகளை முன் வைத்திருந்தார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டேவிட் ரைக் தலைமையிலான குழுவின் 2009-ம் ஆண்டு நேச்சர் இதழில் வெளியான “இந்திய வரலாற்றை மீண்டும் பொருத்திப் பார்ப்பது” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையாகும்.
இந்த ஆய்வு இந்திய மக்கள்தொகையின் மரபணுவியல் உட்பிரிவை தீர்மானிக்க “வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர்” என்ற கோட்பாட்டை பயன்படுத்தியது. வடஇந்திய மூதாதையர் மத்திய கிழக்கு மக்களுடனும், மத்திய ஆசிய மக்களுடனும் ஐரோப்பியர்களுடனும் மரபணுவியல் ரீதியில் நெருக்கமானவர்கள் என்றும் தென்னிந்திய மூதாதையர் இந்தியாவில் மட்டுமே காணப்பட்டவர்கள் என்றும் அந்த ஆய்வு நிறுவியது. இன்றைய இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான குழுக்களை இந்த இரண்டு மக்கள் பிரிவினரின் கலப்பாக வகைப்படுத்தலாம் என்றும் மேல் சாதி குழுக்களிலும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை பேசுபவர்களிலும் வட இந்திய மூதாதையர் கூறுகள் அதிகமாக உள்ளன என்றும் இந்த ஆய்வு நிறுவியது. இந்த ஆய்வு ஆரிய குடியேற்றத்தை மறுக்கவில்லை. மாறாக வடஇந்திய மூதாதையர்களுக்கும் மத்திய ஆசிய மக்களுக்கும் இடையேயான தொடர்பை சுட்டிக் காட்டுவதன் மூலம் ஆரிய குடியேற்றம் பற்றிய கருதுகோளை வலுப்படுத்தியிருந்தது.
இருப்பினும், இந்த ஆய்வு உருவாக்கிய வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர் என்ற கோட்பாடு விருப்பம் போல இழுத்துத் திரிக்கப்பட்டு இந்த இரண்டு குழுக்களும், ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறியதாகக் கருதப்படும் 4000-3500 ஆண்டுகளுக்கு வெகு முன்னதாகவே, பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்து விட்டவர்கள் என்றும் வாதிடப்பட்டது.
புதிதாக பெருமளவு தரவுகள் கிடைத்திருக்கும் நிலையில் இப்போது ரைக் என்ன சொல்கிறார் என்று கேட்போம். கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில், இந்தோ-ஐரோப்பிய மொழிகள் ஸ்டெப்பிப் புல்வெளி பகுதிகளில் தோன்றி பின்னர் ஐரோப்பாவிற்கும் தெற்காசியாவுக்கும் பரவின என்ற கருதுகோளைப் பற்றி பேசும் போது அவர் “மரபணுவியலைப் பொறுத்தவரை ஸ்டெப்பி கோட்பாட்டுக்கு ஆதரவான நிலையே உள்ளது. ஐரோப்பாவில் இன்று வலுவாக காணப்படும் வடக்கு யூரேசிய வம்சாவழி கிழக்கு ஸ்டெப்பியிலிருந்து சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தது என்று நிறுவியிருக்கிறோம்” என்று சொன்னார்.
இந்தியாவைப் பொறுத்தவரை “2000 முதல் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் ஒரு சிக்கலான மக்கள் தொகை கலப்பு நடந்திருக்கிறது. பலவகை சமூகங்களைப் பற்றி பேசும் உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றான ரிக் வேதம் இயற்றப்பட்ட காலத்துடன் இது பொருந்துகிறது” என்கிறார் அவர்.
இவ்வாறு, வெண்கலயுகத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் குடியேறினார்கள் என்ற கூற்றை எதிர்க்கும் வாதங்கள் ஒவ்வொன்றும் பொய்ப்பிக்கப்பட்டு விட்டன.
வாதங்களை தொகுத்துப் பார்க்கலாம்
தாய்வழி உயிரணுக்களில் அதற்கான தரவுகள் இல்லை என்பதால் 12,500 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் வெளியிலிருந்து எந்த மரபணு கலப்பும் நிகழவில்லை என்ற வாதம் தந்தைவழி உயிரணு தரவுகள் மூலம் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. தந்தைவழி உயிரணு தரவுகள் இன்றைக்கு 4,000 ஆண்டு முதல் 5,000 ஆண்டு வரை முந்தைய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் பெருமளவு வெளியிலிருந்து மரபணு கலப்பு நடந்திருக்கிறது என்று காட்டுகின்றன. குறிப்பாக இந்தியாவில் 17.5% ஆண் வம்சாவழியினரில் காணப்படும் R1a இந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்குள் கலந்திருக்கிறது. தாய்வழி உயிரணு தரவுகளில் இதற்கான ஆதாரங்கள் காணப்படாமல் இருப்பதற்கான காரணம், வெண்கல யுகத்தின் குடியேற்றங்கள் பெருமளவு ஆண்களால் நிகழ்ந்திருக்கின்றன என்பதேயாகும்.
R1a வம்சாவழி மற்ற பகுதிகளை விட இந்தியாவில் அதிக பன்முகத்தன்மை கொண்டிருப்பதால், அது இந்தியாவில் தோன்றி பிற இடங்களுக்கு பரவியிருக்க வேண்டும் என்ற வாதமும் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால், R1a ஹேப்லோ குழுக்களைப் பற்றி கடந்த வருடம் வெளியிடப்பட்ட உலகளாவிய மிகப்பெரிய ஒரு ஆய்வு, இந்தியாவின் R1a வம்சாவழிகள் R1a-Z93 ன் 3 துணைக் குழுக்களை மட்டுமே சேர்ந்தவை என்றும் அவை 4000-4500 ஆண்டுகளுக்கு முந்தையவை மட்டுமே என்றும் நிறுவியிருக்கிறது.
இந்தியாவில் வடஇந்திய மூதாதையர்கள், தென்இந்திய மூதாதையர்கள் என்ற இரண்டு புராதன குழுக்கள் இருந்தன என்ற கோட்பாட்டின் படி ஆரியர்கள் குடியேறியதாக சொல்லப்படும் காலத்துக்கு வெகு முன்னதாகவே அந்த இரண்டு குழுக்களும் இந்தியாவுக்குள் வந்து விட்டன என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானது. ஏனென்றால் அந்தக் கோட்பாட்டை முன் வைத்த ஆய்வே வடஇந்திய மூதாதையர் குழு என்று கூறப்படுவதே, ஆரிய குடியேற்றம் உட்பட பல குடியேற்றங்களின் கலப்புதான் என்று கூறி எச்சரித்திருந்தது.
இந்த ஆதாரங்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் போது நாம் இன்னும் இரண்டு விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, வெவ்வேறு துறைகளில் செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகள் கி.மு 2000 இந்திய வரலாற்றின் முக்கிய காலகட்டம் என்ற முடிவுக்கு வருகின்றன.
அ. பிரியா மூர்ஜானி குழுவின் ஆய்வின் படி, அந்த காலகட்டத்தில்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களினங்களின் கலப்பு பரந்த அளவில் தொடங்கியது. அந்தமான் தீவுகளின் ஒங்கே மக்கள் மட்டும்தான் இந்த கொந்தளிப்பான காலகட்டத்தினால் பாதிக்கப்படாத ஒரே குழுவாகும்.
ஆ. 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட டேவிட் போஸ்னிக் குழுவின் தந்தை வழி மரபணு ஆய்வின் படி, கி.மு 2000 வாக்கில்தான், இந்திய மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் R1a-வின் துணைக்குழுவான Z93 “மிகவும் கவனிக்கத்தக்க வகையில்” பிளவுபட ஆரம்பித்திருக்கிறது. இது “வேகமான வளர்ச்சியையும் பரவலையும்” குறிக்கிறது.
இ. கடைசியாக, நீண்ட காலமாகவே நிரூபிக்கப்பட்டு விட்ட தொல்லியல் ஆய்வுகள், கி.மு. 2000 வாக்கில்தான் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடைய தொடங்கியது என்று நிறுவியுள்ளன.
இந்த எல்லா தகவல்களையும் பக்கச்சார்பில்லாமல் பார்க்கும் போது, இந்திய வரலாற்றின் புதிரான கால கட்டத்தை புரிந்து கொள்வதற்கான தகவல்களும் கிடைக்காமலிருந்த இணைப்புகளும் கிடைத்துவிட்டன என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இரண்டாவதாக இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆய்வுகளில் பலவற்றின், நோக்கங்களும் மாதிரிகளும் ஆராய்ச்சி முறையியலும் உலகம் முழுவதற்குமானவை. எடுத்துக்காட்டாக, R1a Z93 வம்சாவழியின் சிதறலுக்கான காலத்தை 4000-4500 என்று கணித்த போஸ்னிக் ஆய்வு, பெரிய அளவிலான தந்தைவழி உயிரணு குடியேற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை, இந்தியாவுக்காக மட்டும் நிகழ்த்தவில்லை. மற்ற நான்கு கண்ட மக்கள் மத்தியிலும் நிகழ்த்தியது. அதன் மூலம் அமெரிக்காவில் 15000 ஆண்டுகளுக்கு முன் நடந்த Q1a-M3 ஹேப்லோகுழுவின் குடியேற்றத்தை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது. இது அமெரிக்கக் கண்டத்தின் ஆரம்ப கால குடியேற்றத்தைப் பற்றி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலத்துடன் ஒத்துப்போகிறது.
ஆகையால் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடியேற்றங்கள் பற்றிய புதிர்களுக்கு சமீபத்திய இந்த ஆய்வுகள் மூலம் விடை கிடைத்துள்ளன. இந்த உலகளாவிய குடியேற்றங்கள் பற்றிய சித்திரம் மேலும் மேலும் முழுமை அடையும் போது, குடிபெயர்வுகள் பற்றிய இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ஒருமித்த கருத்தை (அறிவியலற்ற உள்நோக்கத்துடன் – மொர்) மறுப்பவர்களின் முயற்சி கடினமாகிவிடும்.
இது வரை, நாம் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்களின் குடியேற்றங்களை மட்டுமே பார்த்தோம். ஏனென்றால் அதுதான் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வாக இருந்திருக்கிறது.
ஆனால் இதை விட விரிவான சித்திரத்தை நாம் காணத் தவறக் கூடாது. R1a வம்சாவழி 17.5% இந்திய ஆண்களிலும், அதை விடக் குறைவான அளவு பெண்களிலும் மட்டுமே காணப்படுகிறது.
உண்மையில், அறுதிப் பெரும்பான்மையான இந்தியர்கள் பல்வேறு குடியேற்றங்களிலிருந்தான மூதாதையரை கொண்டிருக்கிறார்கள்.
55,000 – 65,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் இருந்த வந்த ஆதிமுதல் குடியேற்றம்.
கி.மு 10,000 ஆண்டுக்கு பிறகு மேற்காசியாவிலிருந்து பல அலைகளாக நிகழ்ந்த விவசாயக் குடியேற்றங்கள்
காலம் இன்னமும் கணிக்கப்படாத கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த ஆஸ்ட்ரோ-ஆசியாட்டிக் மொழி பேசும் முண்டா, திபெத்தோ-பர்மன் பேசும் கரோ போன்ற இனத்தவர்களின் குடியேற்றம்
இப்போது தெள்ளத்தெளிவாகி விட்டது என்னவென்றால் நாம் ஒரு மூலத்தை அல்ல, பல மூலங்களைக் கொண்ட, அவற்றின் கலாச்சார, பழக்கவழக்க, வம்சாவழி, குடியேற்ற வரலாறு போன்றவற்றை ஏற்றுக்கொண்ட நாகரிகம் ஆவோம்.
இந்தியாவை முதலில் கண்டுபிடித்து குடியேறிய நால்திசையும் முன்னேறிச் சென்ற, பயமறியா முன்னோடிகளான, ஆப்ரிக்காவிலிருந்து வந்த மக்கள் நமது நாட்டின் மக்கட் தொகையின் அடித்தளப்பாறையாக இன்னும் இருக்கிறார்கள்.
பிறகு விவசாய தொழில்நுட்பத்துடன் வந்த மக்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை படைத்தனர். அவர்களின் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் இன்றும் நம்மை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
பிறகு நெல் பயிரிடுதலையும் அது தொடர்பான கலாச்சாரத்தையும் கிழக்காசியாவிலிருந்து கொண்டுவந்த மக்கள் இவர்களுடன் இணைந்தார்கள்.
பிறகு சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் அதை ஒட்டிய நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்துடனும் வந்து நமது சமூகத்தை அடிப்படையிலேயே உருமாற்றிய மக்களின் குடியேற்றம் நடந்தது.
இன்னும் பிற்காலத்தில் வியாபாரத்திற்காகவோ நாடுபிடிப்பதற்காகவோ வந்து, இங்கேயே தங்கிவிடுவது என்ற முடிவு செய்த மக்களின் கலப்பும் நிகழ்ந்திருக்கிறது.
இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் இன்று இந்திய நாகரிகம் என்று நம்மால் அழைக்கப்படுவதை உருவாக்கியிருக்கிறார்கள்.
நாம் எல்லோருமே குடியேறிகள் தான்.
– டோனி ஜோசஃப் (Tony Joseph), நன்றி: The Hindu
தமிழாக்கம் – நேசன்
தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த டோனி ஜோசப் எழுதிய கட்டுரை சுருக்கப்பட்டு, மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
ரஜினி அரசியலுக்கு வருவதை தமிழகத்தின் தலைப்பு செய்தியாக ஊடகங்கள் மாற்றிவிட்டன. பாஜக, ஆர்.எஸ்.எஸ், குருமூர்த்தி வகையறாக்களின் திட்டமும் அதுவே. மாலை நேர தொலைக்காட்சி விவாதங்களோ இல்லை தந்தி டி.வி முன்வைத்த கருத்துத் திணிப்போ எல்லாம் ரஜினியை தமிழகத்தின் அடுத்த ரட்சகராக மக்கள் கருதுவதாக முன்வைத்தன. உண்மையில் ரஜினியைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள திட்டமிட்டோம். முதலில் ரஜினியை நேரடியாக அறிந்த அவரது திரையுலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதறிய சில சினிமாத் தொழிலாளிகளை சந்தித்தோம்.
சென்னையின் அதிகாலை ஐந்து மணி, வடபழனி பேருந்து நிலையம் அருகே சினிமா தொழிலாளிகளை ஏற்றிசெல்லும் ஃபெட்போர்டு வண்டியின் வருகைக்காக காத்திருந்த புரடெக்சன் தொழிலாளி செல்வத்திடம் ஆரம்பித்தோம்.
ரஜினி அரசியலுக்கு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
செல்வம்
நான் இருபத்தி அஞ்சு வருசமா ஃபெட்போர்டு வண்டி ஓட்டுறேன். ஒரு கால்சீட்க்கு 700 ரூபா தான் கூலி.மாசத்துல எல்லா நாட்களும் வேலை கிடைக்காது. ஒரு மாசம் முழுசா வேலை இருக்கும் இல்லனா, சுத்தமா வேலையே இருக்காது. சிலசமயம் மாசத்துல பத்து நாள் தான் வேலை இருக்கும். இந்த வருமானத்தை கொண்டு நான் வீட்டு வாடகை கட்டுறதா? குடும்பத்தை நடத்துறதா? ஆனா, ரஜினி ஒரு படம் நடிச்சா எவ்ளோ? 50 கோடி! இந்த பணத்தை வச்சி என்ன பண்ணுறாரு? அவரோட ரசிகர்களின் பசங்க படிக்க இலவச பள்ளிகூடம் கட்டி கொடுத்திருக்கலாம். வேற ஏதாவது மக்களுக்கு பண்ணியிருக்கலாம். ஆனா, எதுவும் பண்ணது கிடையாது.
ரஜினி ஏற்கனவே ஒரு பள்ளி நடத்துகிறாரே அதில் கொண்டு போய் உங்கள் பிள்ளைகளை சேர்க்கலாமே?
அவரு ஸ்கூல் நடத்துறதே நீங்க சொல்லித் தான் தெரியுமே. எங்க யூனியன்ல எல்லாரோட பிள்ளைங்களும் கவர்மென்ட் ஸ்கூல்ல தான் படிக்க வைக்கிறோம்.
ரஜினி முதலமைச்சர் ஆனால் சினிமாகாரங்களுக்கு நல்லது தானே. தொழிலாளியோட பிரச்சனையை தீர்க்க மாட்டாரா?கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் சினிமாவுல இருந்து தானே வந்தாங்க.
அவங்க என்ன பண்ணிருக்காங்க. எல்லாம் அப்படி தான் சார் சொல்லுவாங்க. எல்லாம் பொய். அவனுங்களால் எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா?
நான் வேணாம்னு சொல்லல. அது அவரோட விருப்பம். இன்னைக்கு அரசியலே ஒரு பிசினஸ் தானே. பணம் இருக்கவன் தொழில தொடங்குறான். அவ்ளோ தான். அவனவன் அரசியல்ல கவுன்சிலர், வட்டம், மாவட்டம்னு தான் போவாங்க. இவரு ஒரேடியா முதலமைச்சர் ஆகப் பார்க்கிறார். அப்பதானே அதிகமா சம்பாதிக்க முடியும். மோடி பிரதமராகி என்ன பண்ணாரு. ஏதாவது ஒரு அறிக்கை விடுவாரு, அதோட பறந்து போயிடுவாரு. அதத்தான் ரஜினியும் பண்ணுவார். சினிமாவுக்கு வேணும்’னா ஸ்டாரா இருக்கலாம். அரசியலுக்கு எல்லாம் வொர்த் இல்லை
ரஜினி, அண்ணாமலை படத்தில் ஒரே பாட்டில் பணக்காரர் ஆனது மாதிரி நம்மையும் பணக்காரர் ஆக்கிடுவாராமே?
அருகே இருந்த புரடெக்சன் தொழிலாளி முருகன் பேச ஆரம்பித்தார்.
“சினிமா என்பது ஒரு கவர்ச்சி தான். அது மக்களுக்கு பிடிக்கும்” சினிமாவுல நல்லவரா நடிக்கலாம். அவரோட நடிப்பை ரசிக்கலாம், இது தான் சினிமா. ரசிகர்கள் கொண்டாடுவாங்க. அதுக்காக அரசியலுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஏதாவது செஞ்சிருக்காரா என்றால் இல்ல. மக்களுக்கோ, ரசிகர்களுக்கோ ஒன்னும் பண்ண வேணாம். சினிமா தொழிலாளிங்களுக்கு என்ன பன்னிருக்காருன்னு முதல்ல சொல்ல சொல்லுங்க!
முருகன்
சென்னையில வெள்ளம் வந்தப்ப வீட்டுக்குள்ளயே பத்திரமா இருந்தாரு. சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் வந்தபிறகு தான் இவர் வெளியவே வந்தார். மக்கள் கஷ்டப்படும் போது கூட எதுவும் பேசாதவன் தான் ஆட்சிக்கு வந்து செய்யப்போகிறாரா?
விவசாயியங்க போராடினப்ப ரஜினி எதுவும் பேசல. ஆனா இப்ப எதுக்காக அய்யாக்கண்ணுவை பாக்கணும்? புதுக்கோட்டையில மக்கள் எல்லோரும் போராடினாங்க அதுக்காக என்ன பண்ணாரு? நான் ரஜினியோட தீவிர ரசிகன் தான், இருந்தாலும் அரசியல்ல அவரால ஒன்னும் பண்ண முடியாது. சினிமா கற்பனை; வாழ்க்கை நிஜம். ரெண்டும் வேற தான்……….
அதற்குள் ஃபெட்போர்டு வண்டி வந்ததும் சென்று விட்டார்.
சற்று தொலைவில் நின்றிருந்த தொழிலாளி ஒருவர்,
…. நான் ஒரு சினிமாக்காரன். அதனால் சினிமாவையோ, நடிகர்களையோ பத்தி எதுவும் குறை சொல்ல முடியாது. இதற்கு முன்பு இருந்த முதலமைச்சர் எல்லாம் மாற்று மொழியில் இருந்து தான் வந்தார்கள். அந்த வகையில் இவரும் வரட்டுமே என்று கூறியவாறே நகர்ந்தார்.
ஃபெட்போர்டில் அமர்ந்திருந்த பெண் தொழிலாளிகள்,
நாங்க எதுவும் சொல்ல கூடாதுங்க…… எங்க யூனியன்ல பிரச்சனை வந்துடும். ….! யாரு வந்தாலும் எதுவும் பண்ண போறதில்ல. நானும் 20 வருசமா சினிமாவுல சோறு ஆக்கிபோடுறேன். எங்க முகம் கூட அவங்களுக்கு தெரியாது. எந்த நடிகை, நடிகரும் ஒரு புடவை கூட எடுத்து கொடுத்தது இல்லை.
அங்கே வேலைக்காக காத்திருந்த ஆந்திரா தொழிலாளர்கள் ஆர்வமாக,
ரஜினிய பத்தி என்ன சொல்றது….? சொல்லுற அளவுக்கு ஒன்னும் இல்ல..! நாங்க எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருக்கோம். தொழிலாளிங்க எங்க பாடே பெரும்பாடு. ஷூட்டிங் ஸ்பாட்க்கு ஆறு மணிக்கு போகணும். அதுக்காக நாங்க நாலு மணிக்கே எழுந்து கெளம்புறோம். 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் வேலை செய்றோம்.
ஆந்திர தொழிலாளிகள்
ஷூட்டிங் சாப்பாட்டுக்கு தேவையான எல்லா வேலையும் செய்வோம். ஆனா ஒருநாள், கேமராவுக்கு சூடம் காமிக்க தேங்கா, கற்பூரம் வாங்க மறந்துடுவோம். அதுக்காக வாங்கற திட்டு கொஞ்சமில்ல…..! செட்டு போடுவோம், புரடெக்சன் வேலையும் பார்ப்போம். ரொம்ப கஷ்டமா இருக்கும். வெறும் 750 ரூபா தான் தராங்களே. சொந்தமா வீடு கூட வாங்க முடியல.
அரசு உதவி பெரும் பள்ளியில என்னோட பிள்ளையை சேர்த்தேன். ஐந்தாவது படிக்கிற பையனுக்கு 5,000 பீசு கட்ட முடியாம கஷ்டப்பட்டேன். 25 தேதியிலிருந்து 10 ம் தேதி வரைக்கும் எங்களுக்கு ஏற்படுற மன உளைச்சல் மரண வேதனையா இருக்கும். வீட்டு வாடகை கட்டனும், தண்ணி, கரண்ட் பில் எல்லாம் கட்டனும். ஆனா அந்த நேரத்துல ஷூட்டிங் இருக்காது. ஆனா, இந்த வேலைக்கி யூனியன்ல சேர அப்போ ரூ.4000 கட்டி ஷூட்டிங் கார்டு வாங்கினோம். இப்ப ரூ.2.60 லட்சம் கட்டினா தான் இங்க வேலையே செய்ய முடியும்.
இன்று வேலை கிடைக்குமா கிடைகாதா என என்ற தவிப்புடன் அமர்ந்திருக்கும் பெண்கள்
நாங்க ஓய்வு பெரும் போது ஆறு லட்சம் தருவதற்காக எங்களோட சம்பளத்துல இருந்து 5% பிடிப்பாங்க. 20 வருசமா வேலை செய்றவங்களுக்கு இத கொடுக்கணும், ஆனா 30 வருஷம், 35 வருஷமாகியும் பல தொழிலாளிக்கு இன்னும் பணம் கிடைக்கல. இந்த பிரச்சனைய எந்த ரஜினியும் கேட்டதில்லை. நாங்களும் கேட்க முடியாது. கேட்டா வேலையும் இருக்காது.
இங்க இருக்கவங்க முகத்தை பார்த்திங்கன்னா தெரியும் . ஒரே கலக்கத்தோட இருப்பாங்க. வேலை இருக்குமா? இருக்காதா-ன்னு ஒரே குழப்பமா இருக்கும். எங்க யூனியன்ல 300 பேர் வந்திருக்கோம்.. இதுல ஒரு ஐம்பது பேர் தான் வேலைக்கு போவாங்க. இது தான் எங்களோட வாழ்க்கை. இப்ப ரஜினி வந்து மட்டும் என்ன பெரிய மாற்றம் வரப்போகிறது?
குழுவாக இருந்த பெண்கள்,
35 வருசமா இந்த வேலை செய்யறோம். எங்கள பாத்தா கொத்தனார் வேலைக்கு போற மாதிரி இங்க குந்திக்கினு இருக்கோம். எத்தனையோ ரஜினி படத்துல சோறு ஆக்கி போட்டிருக்கோம். அந்த ஆளு சாப்பிட்ட தட்டை கூட நாங்க தான் எடுக்குறோம். எங்களுக்குன்னு ஒண்ணுமே பண்ணாதவன். அட, எதுவும் பண்ண கூட வேணாங்க. நாம வணக்கம் சார்னு சொன்னா கூட ஒரு “ஹாய்” கூட சொல்ல மாட்டான். அவங்க வந்தாலும் போனாலும் கேரவனு. எங்களுக்கு எப்பவுமே இந்த ஃபிளாட் பாரம் தான். ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க “ஆளப் பார்த்த அழகு, பூ**** பார்த்த சொத்த” அதான் ரஜினி!
தமிழகத்தில் விவசாயம் முதல் குடிநீர் வரை வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு. சென்னை வடபழனி கோவிலில் மக்களைச் சந்தித்து குடிநீர் அரசியல், மெரினா கோக் பெப்சி எதிர்ப்பு குறித்து பேசிய போது மழை வெள்ளமாக பொங்கித் தீர்த்தனர்.
இந்த வறட்சி என்பது தானாக உருவான இயற்கை நிகழ்வு இல்லை என்பதை பல பேர் விளக்கவும் செய்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு கோக் பெப்சிக்கான எதிர்ப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவு தமிழகத்தில் வலுவடைந்திருக்கிறது.
சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர்.
“ஒரு கேனு தண்ணீ கொறஞ்சது 40 ரூவாங்க ரெண்டு புள்ளைங்க கொண்ட குடும்பத்துக்கு ஒரு கேனு தண்ணி பத்தமாட்டேங்குது. மாசம் 20,000 சம்பாதிக்கிறேன் கிட்டத்தட்ட தண்ணிக்கே 1,500 செலவழிக்கிறேன். பொறவு வாடக, ஸ்கூல் பீசு, சாப்பாடு நல்லது கெட்டது மனுசனுக்கு எங்கிட்டு நிம்மதி இருக்கும் சொல்லுங்க. அரசாங்கம் நமக்கு நல்ல குடிதண்ணிய குடுக்காம மெத்தனமா இருக்கக் காரணமே தனியாரு வித்துக்கட்டும் நமக்கு கமிசனா ஒரு தொக தருவான் அப்படிங்கறதுதான்.“
“நான் இதுவரைக்கும் கோக்கு பெப்சியெல்லாம் குடிச்சதில்ல. நம்ம தண்ணி பிரச்சனைக்கி அவங்கள ஒரு காரணமா நெனச்சதுமில்ல. ஜல்லிக்கட்டுக்கு பிறகு பயங்கரமா எதுக்குறேன்.
நான் பட்டுக்கோட்டை பக்கத்துல உள்ள கிராமத்த சேந்தவன். ரெண்டு ஏக்கர் நிலத்துல எங்க குடும்பமே பாடுபட்டு பத்தாததுக்கு கூலிக்கி வேலபாத்து வல்லம் பெரியார் கல்லூரியில பி.இ படிக்க வச்சாங்க. 2012-ல படிப்ப முடிச்சேன். வேல தேடுற தேடுறன் தேடிட்டே இருக்கேன். சென்னையில தங்கி வேலை தேடவும் அரை வயித்துக்கு சாப்பிடவும் கெடைக்கிற கூலி வேலைக்கி போறேன். எங்க போறது என்ன செய்றதுன்னு தெரியாம இன்னைக்கி இங்க வந்து குந்திருக்கேன். அப்பா ஊருலேருந்து போன் பண்றாரு ஆத்துல தண்ணி வராம வயல்ல ஒரு பயிரு கூட ஊனல. எப்படியாவது செலவுக்கு கொஞ்சம் பணம் அனுப்புடான்னு. கையாலாகாதவனா இருக்கேன்”
குரோம்பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவி
“எங்க வீட்டுல குழாய் தண்ணிதான் குடிக்குறோம். எந்த நேரத்துல சாக்கட வாசன வரும்னே சொல்ல முடியாது. அத விட்ட வேற வழியும் கெடையாது.. எங்க ஸ்கூல் டாய்லெட்ல தண்ணியே கெடையாது. (அரசு பள்ளி) நான் 12 படிக்கிறேன் பீரியடு நாள்ல கூட அப்படியே வீட்டுக்குதான் வருவேன். விவசாயிங்க டெல்லியில போராட்டம் பன்றாத நியூசுல பாத்தேன் பாவமா இருக்கு. நமக்கு தேவையான தண்ணி பிரச்சனைக்கு வழி செய்ய முடியாத அரசாங்கம் கோக்கு தயாரிக்கவும் விக்கவும் தடை செல்ல முடியாதுங்குது.
மாதிரிப் படம்
தாமிரபரணி ஆத்துல தண்ணி எடுத்துக்கலான்னு அரசு லைசன்சு குடுத்துருக்கும் போது எடுக்க கூடாதுன்னு சொல்ற உரிமையும் அவங்களுக்கு இருக்குமில்ல. விவசாயிங்க தண்ணி இல்லாம கஷ்டப்படும் போது கோக்குக்காறன் தண்ணிய எடுத்துக்கலாம்னு சொன்னா அரசுக்கு நம்மள பத்தின அக்கற இல்லன்னுதானே அர்த்தம். நாங்க பெரியவங்களா ஆகும் போது தண்ணிப் பிரச்சனை எப்படி இருக்குன்னு நெனச்சு பாத்தேலே பயமாருக்கு”
தள்ளுவண்டியில் கூழ் விற்பவர்.
எந்த நாட்டுலங்க சோறு போட்ற விவசாயத்த பத்தி எந்த கவலை இல்லாம இருங்காங்க. தண்ணியில்ல… தண்ணியில்ல… வறட்சி வறட்சின்னு கத்துறது காதுல கேக்குதா எவனுக்காச்சும்? என்னடா இப்புடி பேசுறானேன்னு நெனைக்காதிங்க.
மாதிரிப் படம்
எனக்கு 50 வயசாகுது. ஆத்துல ஓடுற தண்ணி ஓட்டத்துல, வத்திப் போன கெணத்துல கூட ஊத்துக் கண்ணு தொறந்துடும். இன்னைக்கி ஊறே வறண்டு கெடக்கு. கிராமத்துல சனங்க குடிதண்ணிக்கி கொடத்த தூக்கிட்டு அலையிரத பாக்கும் போது வேதனையாருக்குங்க. இப்படி ஒரு நெலம வந்து ரெண்டு மூணு தலமொற ஆகலங்க. எங்கண்ணு பாத்துருக்க உருவானதுதான். அவ்வளவு ஏங்க தவிச்ச வாயிக்கி தண்ணி குடுண்ணு பக்கத்துல இருக்கவன கேக்க முடியல. காசு போட்டு வாங்குன தண்ணிய கேக்கறதான்னு நமக்கு பயம். தண்ணிய கேட்டு இல்லன்னு சொல்றதான்னு சங்கடப்பட்டு பைக்குள்ள மறச்சு வைக்கிறான். இப்படி ஒரு நெலம யாரால வந்துச்சு. பாலைவனம் போல வறண்ட பூமியாங்க இது தண்ணி பஞ்சம் வர? எல்லா வளமும் கொட்டி கெடக்குற நாடுங்க. குட்டிச்சுவரா ஆக்கிட்டானுங்க பாவிங்க.”
சென்னையில் ஆட்டோ மொபைல் கடை வைத்திருப்பவர்.
“எங்க வீட்டுல போர் தண்ணி தாங்க குடிக்கிறோம். கோக்கு பெப்சியெல்லாம் குடிக்கிற பழக்கமில்லைங்க. நான் பாக்குறது ஆட்டோ மொபைல் தொழில். உடம்பு வலிக்க வேல பாத்துட்டு ஒரு டீ குடிச்சா அடுத்த வேலை பாக்க சுறுசுறுப்பா இருக்கும். கூல்டிரிங்சல்லாம் மெழுக்கா வேலை செஞ்சுட்டு ஒதட்டுல ருசி தெரிய குடிக்கிறது. நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.
ஆரம்பத்துல புடிக்காமதான் குடிக்காம இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கு பிறகு நம்ம நாட்டுலேயே இவனுங்க இருக்க கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன். நமக்கு விவசாயத்துக்கே தண்ணி இல்ல, குடிக்க தண்ணியில்ல, இவனுங்க என்ன இங்க ராஜியம் பண்றது. அதுக்காக கோக்கு முதலாளிய தேடி போயி எதுவும் பண்ண முடியாது. அதுக்கு அனுமதி கொடுத்த அரசதான் நாம கேக்கனும். இங்க அடிக்கிற அடியில அங்க நெறி கட்டணும்.”
சென்னையில் ஐ டி வேலை செய்யும் ஊழியர்.
நான் ஏ.டி.எம்.கே –ங்க அம்மா செத்ததுலேருந்து மனசு ஒடிஞ்சு போச்சுங்க. அவவனும் பொறுக்கித் திங்க என்னாமா நாடகம் நடத்துறானுங்க. வெறுத்துப் போயிட்டேன் இப்ப நான் எந்த கட்சியும் இல்ல. ஜல்லிக்கட்டு போராட்டத்தப் பாத்த பிறகு கட்சியே தேவை இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்.
அதுல ஒரு விசயத்த கவனிச்சிங்களா ஜல்லிக்கட்டு போராட்டத்துல கோக்கு பெப்சிக்கு எதிர்ப்பு கெளம்புன ஒடனே ட்ரம்பு (டொனால்ட் ட்ரம்பு) மோடிக்கு போன போட்டு வடிவேலு மாறி “என்னடா நடக்குது அங்க” ஏதோ மாடு புடி மேட்டருன்னு. பாத்தா நம்ம பாட்டில போட்டு ஒடைக்கிறான், கீழ ஊத்துறான் பாட்லுக்கு மாலை போட்டு சங்கூதுறான் இதெல்லாம் ஆவாதுப்பு மாட்ட ஒடனே அவுத்துடுன்னா அதுக்கு பிறகுதான் மோடி அவுத்துட்டார். இதுலேருந்து என்ன தெரியிது தும்ப விட்டுட்டு வால புடிக்க கூடாது. நாம விக்க மாட்டோன்னு சொல்றத விட வெளிநாட்டுக்காரன் இனி இங்க இருக்க கூடாதுன்னு சொல்லனும்.
ஐ.டி-யில இருந்துட்டு என்னடா இப்படி பேசுறேனேன்னு நெனைக்கிறீங்க அதானே! அவன் குடுக்குறத விட புடுங்குறதுதாங்க அதிகம். யோசிச்சு பாருங்க பத்து பேருக்கு வேலை கொடுக்குறா போல இருக்கும். நூறு பேரு உயிரு போக காரணமா இருப்பான். நாளைக்கே அவன் மூட்ட கட்டிட்டா நான் சொன்னது நடக்கும். நான் கை நெறையா சம்பளம் வாங்குறேன் இல்லேங்கல. ஆனா எங்க அப்பா விவசாயம் செய்ய முடியாம நெலத்த தரிசா போட்டுருக்காரு. இப்ப நெலமைக்கி நான் ஒரு கிராமத்தானா இருக்கதாங்க ஆசப்படுறேன்.”
வெள்ளாற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு நீதி விசாரணை கோரி பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்!
வெள்ளாற்றில் இரு மணல் குவாரிகளில் மட்டும் 180 கோடி ஊழல்!
அதிமுக ஆட்சியின் ஊழல்களில் ஒரு துளி!
ஆதாரங்களுடன் பத்திரிக்கையாளர்களை சந்திதார்கள் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தினர்!
நாள் : 22-6-2017 வியாழன்
நேரம் : காலை 11-00
இடம் : பத்திரிக்கையாளர் மன்றம்,
சேப்பாக்கம், சென்னை.
கலந்து கொண்டவர்கள் :
சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் ஆர்.வெங்கடேசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், கூடலையாத்தூர். சி.மலர்மன்னன், கா.ஆசைதம்பி, கூடலையாத்தூர். எம்.ஜி.பஞ்ச மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், கருவேப்பிலங்குறிச்சி, நந்தகுமார் , தெய்வக்கண்ணு, ராஜவன்னியன்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், பவழங்குடி,சி.கீரனூர், மேல்பாளையூர். அ.தமிழரசன், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம். மதகளிர் மாணிக்கம், வீ.பட்டுசாமி, ராமச்சந்திரன், ராயர், ஜான்சன், மதகளிர்மாணிக்கம்
வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப் பட்ட மனு :
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்
702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம்.
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு – 99651 91023, 9865131060, 99429 46797
_____________
நாள் 22-06-201
பெறுதல் :
உள்துறைச் செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.
அரசு செயலாளர் அவர்கள்,
பொதுப்பணித்துறை,
தலைமைச் செயலகம்,
செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை.
பொருள் :
1. கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, வெள்ளாறு – மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி
2. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா,வெள்ளாறு-கார்மாங்குடி,குவாரி மற்றும் சிதம்பரம் கோட்டம், முடிகண்டநல்லூர் குவாரிகளில் அரசின் கணக்கில் வராமல் நடந்த சுமார் 180 கோடி ஊழல் முறைகேட்டிற்கு விசாரணைக்கு உத்திரவிடக்கோரி
3. வெள்ளாறு மணல் குவாரிகளில் விதிமுறைகளை மீறி மணலை எடுத்து ஆற்றின் இயல்பை சீர்குலைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி
மதிப்பிற்குரியீர், வணக்கம் !
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுக்கா, கார்மாங்குடி மணல் குவாரியில், புல.எண்.398/1- 19.10 எக்டேர் பரப்பளவில் 191000 c.m மட்டுமே அனுமதி வழங்கபட்டது. ஆனால் ஜனவரி 2014 முதல் டிசம்பர் 2014 வரை அனுமதிக்கபட்ட அளவைவிட சுமார் மூன்று மடங்கு அரசின் கணக்கில் வராமல் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
மாநில சுற்றுசூழல் ஆணையத்தின் உத்திரவுப்படி எந்த விதி முறைகளையும் கடைபிடிக்காமல் 5 பொக்லைன் வைத்து மணல் அள்ளபட்டுள்ளது. 3 அடி என்ற அளவை தாண்டி 30 அடிக்கு மேல் மணல் எடுக்கபட்டுள்ளது. அதற்கான வீடியோ,புகைப்பட ஆதாரங்கள், சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு போராட்டங்கள் மூலமாகவும், கோரிக்கை மனுக்கள் மூலமாகவும் அனுப்பி தெரிவித்தோம். இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் வெள்ளாறு சிதைந்துள்ளது. 40 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இன்று 250 அடிக்கு கீழ் சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான போர்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. நெய்வேலி சுரங்கம் ஒரு புறம் நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றி வருகிறது.
மழையும் பொய்த்து வருகிறது. வெள்ளாறுதான் நிலத்தடி நீரை காக்க ஒரே வழி. பாசனத்திற்கு போர்வெல்தான் வேறு வழியில்லை. வெள்ளாற்றில் மீண்டும் மணல் குவாரி அனுமதிக்க பட்டால், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் குடிநீருக்கே அலையும் நிலை ஏற்படும். விவசாய நிலங்கள் பாழாகும். கடல்நீர் அருகில் உள்ளதால் உட்புகுந்து விடும். கண்காணித்து முறைபடுத்த வேண்டிய அதிகாரிகள் யாரும் ஆறுகள் சிதைந்து போவது பற்றியும், விதி முறைகள் மீறப்பட்டு மணல் கொள்ளை அடிப்பது பற்றியும் பொறுப்பில்லாமல் குற்றம் செய்பவர்களுக்கு துணை போகின்றனர்.
கார்மாங்குடி குவாரியில் ஊராட்சி மற்றும் மணல் குவாரி சார்பில் தினசரி லோடுகளை கணக்கெடுக்க நியமிக்க பட்ட நபர் தினம்தோறும் எழுதிய கணக்கு விபரங்கள்படி சுமார் 48,500 நடைகள். ஒரு லோடு ஆறு யுனிட் என்ற அளவில் அள்ளப்பட்டது. ஆனால் அரசு பதிவேட்டில் இரண்டு யுனிட்தான் குறிக்கபடுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் கொடுக்க பட்ட தகவலின்படி 8,247 லோடு என குறிப்பிட பட்டுள்ளது. ஆனால் இரண்டு யுனிட் என கணக்கிட்டால் 1,45,000 லோடுகள் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு சுமார் 150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கபட்ட இடத்தை தாண்டி பல இடங்களில் மணல் அள்ளியுள்ளனர். ஜி.பி.எஸ். கருவி வைத்து நாங்கள் ஆய்வு செய்து உறுதி படுத்தியுள்ளோம்.
இணைக்கப்பட்ட புகைப்படம், மற்றும் வீடியோவை பார்த்தால் விதிமுறை மீறியது தெளிவாக தெரியும். மணல் அள்ளிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் விதி முறை மீறியதுடன் மணல் கொள்ளைக்கு துணைபோயிள்ளனர். மேலும் கண்காணிக்க வேண்டிய மாவட்ட அளவிலான, தாலுக்கா அளவிலான கண்காணிப்பு படையும் நேரடியாக வெள்ளாற்றிற்கு சென்று ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.. நாங்கள் பல முறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம் என்பதற்கு நிறை சான்றுகள் உள்ளன.
சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட முடிகண்ட நல்லூர் குவாரியிலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாநில சுற்றுசூழல் ஆணயை உத்திரவை மீறியுள்ளனர். உத்திரவுப்படி 106528 c.m. தான் அள்ள வேண்டும். அதாவது சுமார் 37593 யுனிட்தான் மணல் அள்ள வேண்டும். ஆனால் சுமார் 150000 யுனிட் வரை அள்ளியுள்ளனர். மார்க்கெட் மதிப்பின்படி சுமார் 30 கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வந்தால் முறையாக செல்லமுடியாத படி ஆற்றின் நீரோட்டங்களை சீர்குலைத்துள்ளனர். வெள்ளாற்றில் மணல் அள்ள வேண்டும் என்பதற்காக வீராணம் ஏரி உபரி நீரை அதிகாரிகள் பாழ்வாய்க்காலுக்கு திருப்பிவிட்டுள்ளனர். அனுமதிக்கபட்ட அளவைவிட மணல் கொள்ளையை கண்காணித்து தடுக்க வேண்டிய அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனால் பகுதி மக்கள் போராடி மணல் கொள்ளையை தடுத்தால் காவல் துறையை வைத்து பொய் வழக்கு போடுவது, கீயு பிரிவு போலீசார் மூலம் மிரட்டுவது. குண்டர் சட்டத்தில் போடுவேன் என மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவது,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் என கோட்டாட்சியர் விசாரணைக்கு அலைகழிப்பது என போலீசார் அத்துமீறுகின்றனர். குவாரிக்கு தகுந்தார் போல் கிராமத்தில் சிலருக்கு லஞ்சம் கொடுத்து போராட்டத்தை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.
எனவே நாங்கள் இத்துடன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பரிசீலித்து நீதி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மேலும் வெள்ளாற்று பகுதி கிராம மக்களை அழைத்து பொது விசாரணை நடத்தினால் முழு உண்மைகளை கொண்டுவரமுடியும். ஒருலாரி மணல் கடைமடைக்கு வந்து சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது ஜே.சி.பி.எந்திரத்திற்கு தெரியாது. வெள்ளாற்றின் இயற்கை அமைப்பை சிதைத்த, மணல் கொள்ளைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறாம்.
கடலூர் மாவட்டம், வெள்ளாற்றில் பல ஆண்டுகள் பல இடங்களில் அளவுக்கு மீறி மணல் அள்ளப்பட்டுவிட்டது. மேலும் மணல் அள்ளுவது எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும், விவசாயத்திற்கும் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் எனவே தற்போது அனுமதிக்கபட்ட மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் மணல் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்து மணல் குவாரிகளை மூடு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
“சென்னைக்கு மிக அருகில்” என்று ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் விளம்பரத்தை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். விளைவு, விளைநிலங்கள் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளானது. அவற்றில் இருந்து தப்பி விவசாயம் நடப்பது என்பது மிக மிக அரிது தான். இந்த புரோக்கர்களின் பிடியில் சென்னை போரூர் அருகே உள்ள கோவூர் கிராமும் தப்பவில்லை. இருப்பினும் அங்கே ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயம் நடக்கிறது.
“இந்த கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்தார்கள். அவை கொஞ்சம் கஞ்சமாக சுருங்கி இப்பொழுது 70 ஏக்கருக்கும் குறைவாக வந்து விட்டது. முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் விவசாயத்தில் லாபம் இல்லை , தண்ணீர் இல்லை.
விவசாயி அருள்தாஸ்
இந்த கோவூர் கிராம விவசாயிகளுக்கு பாசன நீர் செம்பரம்பாக்கம் ஏரி நீர் தான். அந்த நீர் தற்பொழுது கார் கம்பனிகளுக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் தான் பயன்படுகிறது. விளைநிலங்களுக்கு செல்லும் கால்வாய்க்கால் அனைத்தும் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
விளைநிலங்கள் அடுக்குமாடி கட்டிடங்களாக மாற்றப்பட்டு வரும் வேளையில், அந்த கட்டிடங்களுக்கு நடுவே தற்பொழுது நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அருள்தாஸ் என்ற விவசாயியை சந்தித்து, விவசாயத்தில் லாபம் இல்லை என்கிறார்கள். நீங்கள் எப்படி பயிர் செய்கிறீகள் என்றோம்.
இலாபம் இல்லை என்பதால் தான் இந்த நிலங்களை எல்லாம் விற்று விட்டார்கள். வீடுகள் வந்துவிட்டது. எனக்கு நிலத்தின் மீது இருந்த பாசம் விற்காமல் இருக்கிறேன். நாற்பது வருடமாக இந்த விவசாயத்தை தான் பார்க்கிறேன். இதை விட்டால் எனக்கு வேறு தொழிலும் தெரியாது. நான் மூன்று போகமும் பயிர் செய்கிறேன். ஒரு போகம் விட்டாலும் அடுத்தது என்னால் பயிர் செய்ய முடியாது. தண்ணீர் கிடைக்காது, நிலம் வறண்டு விட்டால் இப்பொழுது கிடைக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்யவும் முடியாது அதிக செலவு பிடிக்கும். அதனால் தான் விடாமல் நஷ்டம் ஏற்பட்டாலும் விவசாயம் செய்கிறேன்.
ஒரு ஏக்கருக்கு நெல் பயிரிட பிடிக்கும் செலவை ஒவ்வொன்றாக அடுக்கினார். முதலில் நாற்றாங்கால் செலவு, 1 கிலோ விதை உட்பட ரூ.2500, பதினைந்தாம் நாள் மருந்து அடிக்க ரூ.500, நடவுக்கு முன்பு மூன்று சால் உழவு ஓட்ட வேண்டும் அதற்கான செலவு ரூ.6000, பரம்பு கூலி ரூ.600, அடி உரமாக காம்ப்ளக்ஸ் 2 மூட்டை ரூ.2500, நடவு அன்று நாற்று எடுக்கும் கூலி, நடவு கூலி அனைத்தும் காண்ட்ராக்ட் ரூ.3500, வேலையாட்களுக்கு உணவு மூன்று வேளை ரூ.2000 (உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் இல்லை என்பதால் ஒப்பந்த முறையில் திண்டிவனத்தில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறார்கள்) , நடவு நட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு யூரியா, பொட்டாஷ் உரத்திற்கு ஆள் கூலியுடன் ரூ.2500, நாற்பத்தைந்து நாட்கள் கழித்து ஒரு யூரியா , கதிர் வரும் 60 வது நாளில் சல்பேட், பூச்சி மருந்து என்று ரூ.1500, அறுவடையின்போது ரூ.2500, இதர செலவுகள் உட்பட மொத்தமாக ரூ.25000 வரை செலவாகிறது.
ஆனால் அறுவடையின் போது கிடைக்க கூடியதோ வெறும் 25 அல்லது 30 மூட்டை தான். மூட்டைக்கு ரூ.1000 என்றாலும் மிஞ்சுவதோ வெறும் ரூ.5000 தான். அதுவும் எங்கள் உழைப்பிற்கு எடுத்துக்கொண்டால் ஒன்றும் மிஞ்சுவதில்லை. நெல் விலை எப்பொழுதும் ஒரே சீராக இருந்தால் பிரச்சனை இல்லை. எப்பொழுது விலை ஏறும், குறையும் என்று தெரியாது. நெல் மூட்டைகளை காஞ்சிபுரம் கமிட்டிக்கு தான் கொண்டு போகணும். அவ்வளவு தூரம் சென்று வர ஆகும் செலவை ஈடுகட்ட தனியார் வியாபாரியிடம் கொடுத்து விடுகிறோம். எங்களுக்கென்று நாங்கள் ஒருபிடி நெல் கூட எடுத்துக் கொள்வதில்லை.
என் பிள்ளைகளை எல்லோரையும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்ததால் பெரிய சிரமம் தெரியவில்லை. தனியார் பள்ளியில் படிக்க வைத்திருந்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பேன். இந்த நிலத்தை காப்பற்ற வேண்டும் என்பதற்காக நஷ்டத்திலும் இந்த விவசாயத்தை செய்து வருகிறேன். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நிலத்தை விற்கச் சொல்லி தொடர்ந்து நச்சரிக்கிறார்கள். விவசாயத்தின் மீதான பிடிப்பு தான் தற்பொழுது வரை பயிர் செய்து வருகிறேன் என்றார்.
திண்டிவனத்தில் இருந்து வேலைக்கு வந்திருந்த விவசாய தொழிலாளிகளிடம் பேசினோம். அவர்களில் நடவு வேலைக்கு வந்திருந்த பெண்கள், வேலைக்கு போகாத குடிகார கணவனால் குடும்பத்தை தான் பொறுப்பேற்று நடத்த வேண்டிய கட்டாயத்தாலும், இல்லையெனில் குடியினால் கணவனை இழந்த பெண்களும் தான் வந்திருந்தார்கள். “எங்கள் ஊரில் சுத்தமாக விவசாயம் இல்லை. வேறு எந்த வேலையும் இல்லை. அதனால் தான் இவ்வளவு தொலைவு வந்து வேலை செய்கிறோம்” என்றார்கள்.
நடவு நடும்போது இடுப்பு வலி ரணமா இருக்கும், முக்கியமாக ஆப்புரேசன் செஞ்ச ஒடம்புக்கு தான் ரொம்ப பிரச்சனையா இருக்கும். இந்த வலியோட தான் வீட்டு வேலையும் பாத்துக்குறோம் என்றனர்.
அதில் மல்லிகா என்ற பெண் ஒருவர் “ ஊர்ல சாராயம் வித்துகிட்டு இருந்தேன். அந்த தொழில செய்ய மனசு வரல. அதை விட்டுட்டு விவசாய வேலைக்கு வந்துட்டேன். இப்ப கெடக்கிற வேலைய செய்யுறேன். சாராயம் விக்கும்போது பணம் இருந்தது, ஊர்ல எல்லோரும் என்ன திட்டுவாங்க. இப்ப இந்த வேலை கஷ்டமா தான் இருக்கு. ஆனா கொஞ்ச நிம்மதியா இருக்கேன் என்றார்.
அதேபோல், ஆண்களும் நாற்று பிடுங்கியவரே இந்த சாண் வயித்துக்கு எந்தெந்த ஊருக்கெல்லாம் வந்து பொழைக்கிறோம் பாருங்க. தேள், பூரான், பாம்பு எல்லாம் நாற்றில் இருக்கும். எது கடித்தாலும் தண்ணியில் தெரியாது. இரண்டு தோள் பட்டை கடுமையான வலி ஏற்படும், தொடர்ந்து வேலை செய்தால் ஒன்றும் தெரியாது. ஆனால், இந்த வேலை கிடைப்பதேயில்லை. விவசாயமே அழிஞ்சிடுச்சி என்று சொல்லிக்கொண்டே தங்கள் வேலையை செய்தனர்.
அருகே பரம்பு ஓட்டிக்கொண்டிருந்தவரிடம் மோடி மாட்டையெல்லாம் விற்ககூடாதுன்னு சொல்லிட்டாரே இந்த மாடு வயசாகிடுச்சின்னா என்ன பண்ணுவிங்க என்றோம்.
அவன் கடக்கிறான்…பா அவனா மாடு மேய்க்கிறான். ஏறு ஓட்டுறான். மேல வந்து ஒக்காந்துகினு எதையாது ஒன்னு சொல்லுவான் அதெல்லாமா கேக்க முடியும். அப்புறம் விவசாயம் எப்படி பண்றதாம். நாங்க பொழப்புக்கு எங்க போறதாம். என்னமோ சோறு போடறவன் மாதிரி பேசுறான். பாட்டன் காலத்துல இருந்து மாடு வளக்குறோம், கறி சாப்பிடுறோம். அவன் திடீர்னு வந்து நிறுத்த சொன்னா நடக்கிற காரியாமா… நம்ம ஊர்ல அதெல்லாம் முடியாது என்று சொல்லிக்கொண்டே மாட்டை வேகமாக அதட்டினார்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். வங்கிக் கடன் தள்ளுபடிக்காக வீதிக்கு வருவது, சாலை மறியல் செய்வது, பேரணிகள் நடத்துவது, கண்ணீர்புகைக் குண்டுக்கு இலக்காவது, சில சமயங்களில் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியாவது போன்ற நடவடிக்கைகளை விவசாயிகள் ஏன் மேற்கொள்கிறார்கள்? ஆனால் புது தில்லி ஜந்தர் மந்தரில் கடன் தள்ளுபடி கோரி எந்த கார்பரேட் முதலைகளும் தர்ணா நடத்துவதை நாம் பார்ப்பதில்லையே ஏன்?
6 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர விவசாயிகள் கிளர்ச்சியின் விளைவாக மகாராஷ்டிர அரசு ரூ. 30, 500 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய இணங்கியுள்ளது. முன்னர், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் திருப்பிச் செலுத்தாத வங்கிக் கடன் ரூ. 36, 359 கோடியை உபி அரசு தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இன்று பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மபி, சட்டிஸ்கர் எங்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிப் படர்கிறது. பஞ்சாபின் மோஹாவில், கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை பொறுத்திருந்து வாழ வழியில்லாததால், போராட்டத்தின் போதே ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதிலிருந்து விவசாயிகளின் நிலை எவ்வளவு பரிதாபகரமான வகையில் மோசமாக உள்ளது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.
கடன் தள்ளுபடிக்கான விவசாயிகள் போராட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி கோரி ஜூன் 16 -இல் வடக்கு பிராந்தியம் முழுவதும் மூன்று மணிநேர சாலை மற்றும் இரயில் மறியலுக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. கடன் தள்ளுபடி செய்வது எவ்வளவு அத்தியாவசியமான உடனடித் தேவை என்பதை உணர வைப்பதற்கே தொடர் போராட்டங்களை இவ்வளவு தீவிரமாக நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் ஏன் தள்ளப்படுகிறார்கள்? நாடுமுழுவதும் விவசாயிகள் நித்தம் சாவது பற்றி ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தெரியாதா? விவசாயம் அவசர நிலையில் உள்ளது.
கடந்த 21 ஆண்டுகளில் 3.18 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் ஏதாவதொரு பகுதியில் 41 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். கடன் திருப்பி செலுத்த முடியாத காரணத்தினாலேயே பெரும்பான்மையான தற்கொலைகள் நிகழ்கின்றன. உண்மையில் அவர்கள் பலதரப்பட்ட கடன்களின் குவியலுக்குள் புதைக்கப்பட்டுள்ளனர். வருடாந்திரம் ரூ. 12.60 இலட்சம் கோடிக்கு விவசாயிகள் கடனாளியாவதாக, 2016 நவம்பரில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார். எனவே விவசாயக் கடன் தள்ளுபடி நல்ல அரசியல் மட்டுமல்ல; நல்ல பொருளாதாரமும் கூட.
ஆனால் கடன் தள்ளுபடிக் கொள்கை விவசாயிகளை மட்டும் எவ்வளவு பாரபட்சமாக நடத்துகிறது என்பதைப் பார்க்கும் முன், கார்ப்பரேட்டுகள் அமைதியாக கடன் தள்ளுபடி பெறும் பொழுது விவசாயிகள் மட்டும் ஏன் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் நான் தோல்வியடைந்தேன். எதிர்ப்பை ஒழுங்கமைப்பது பற்றிப் பேசுவதற்குக் கூட அவர்கள் (கார்ப்பரேட்) தங்கள் காரை விட்டு இறங்க வேண்டியதில்லை. கேள்வியென்னவென்றால் விவசாயிகள் வீதிகளிலிறங்கி தோட்டாக்களை எதிர்கொள்ளும் போது தொழிற்துறையினருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கப்படுகின்றதே? எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளும், தொழிற்துறையினரும் ஒரே வங்கியிலிருந்து தான் கடன் பெறுகிறார்கள். அப்படியிருக்கையில் விவசாயிகள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துமளவிற்கு தொல்லை கொடுக்கும் வங்கிகள், கடன் திருப்பி செலுத்தாத தொழிற்துறையினரை அனிச்சமலரைப் போல மென்மையாக கையாள்வதன் காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
உ.பி. -யில் விவசாயக் கடன் தள்ளுபடியை யோகி ஆதித்யநாத் அறிவித்த உடனேயே, எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, விவசாயக்கடனைத் தள்ளுபடி செய்யும் தலைவர்கள், ‘கடன் திருப்பி செலுத்தும் ஒழுக்கத்தை’ சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டினார். சில வாரங்களுக்குப் பின், ரூ. 4.85 இலட்சம் கோடி ‘நிலையற்ற’ அழுத்தப்பட்ட கடனால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி (bail out) வழங்கக் கோரி நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதினார். என்னால் புரிந்துக் கொள்ள முடியாதது என்னவெனில், தொலைத் தொடர்புத்துறையில் கடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் சார்பில் எஸ்.பி.ஐ. தலைவர் ஏன் நிதியுதவி கேட்கிறார்?
பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்திய மகாராஷ்டிர விவசாயிகள்
கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வழக்கமாக கடைபிடிக்கும் வழியைப் போல, புது தில்லியில் தர்ணாவில் தொலைத் தொடர்புத்துறையின் உயர்பதவிகளிலிருப்போர் ஏன் உட்கார வைக்கப்படுவதில்லை? கார்ப்ரேட்டுகளின் இறுதி நிலை அறிக்கைக்காக (balance sheet) ஒதுக்கப்பட்டிருக்கும் அதே சுத்திகரிப்பு முறையை (clean-up mechanism) விவசாயிகள் பயன்படுத்தும் பொழுது, கடன்பெறும் ஏழைகளிடமும், பெருநிறுவனங்களிடமும் இவ்வாறுதான் வங்கி அமைப்பு பாரபட்சம் காட்டுகின்றது.
பாரபட்சம் இத்துடன் முடிந்துவிடவில்லை. விவசாயத்துறை கடன் தள்ளுபடிக்கான நிதி ஆதாரங்களை மாநில அரசுகளே கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடனில் தள்ளாடும் தொலைத் தொடர்புத் துறைக்கு நிதியுதவி அளிப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தலைமையில் அமைச்சரவைகளின் குழுவை அமைத்துள்ளார். முன்னதாக எஃகு (steel) நிறுவனங்களின் மோசமான கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கப் போவதாக மார்ச் 23 ஆம் தேதி பிஸினஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டது. அதன்படி, பிரதமர் அலுவலகமும், நிதி அமைச்சகமும் முன்னணி எஃகு நிறுவனங்கள் மற்றும் கடன் அழுத்தத்திலுள்ள 40 வங்கிக் கணக்குகளுக்கு புதியதாக நிதியுதவி வழங்குவது குறித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்நிறுவனங்களின் மொத்தக் கடன் ரூ. 1.5 இலட்சம் கோடி.
விவசாயத் துறைக்கு எதிரான நடவடிக்கைகள் இத்துடன் முடிவடையவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடியை மகாராஷ்டிரா அறிவித்ததிலிருந்தே, “இது தேசியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும், பணவீக்கத்தை அதிகரிக்கும், வீட்டுக்கடன் தவணையை உயர்த்தும்” என நச்சுப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் தங்கள் நேரத்தை அர்பணிப்பதை நான் பார்க்கிறேன். விவசாயிகளை குற்றவாளிகளாக வேண்டுமென்றே சித்தரிக்கின்றனர். அதே நேரம் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் போது இத்தகைய விஷயங்கள் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. உண்மையில் கார்ப்ரேட்டுகளுக்கு நிதியுதவி வழங்குவது பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், விவசாயக் கடன் தள்ளுபடி, நாட்டின் நிதிச் சரிவுக்கான காரணியாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அமெரிக்க மெர்ரில் லிஞ்ச் வங்கி (Bank of America Merrill Lynch) அறிக்கைப்படி, 2019 பொதுத் தேர்தலுக்கு முன் சுமார் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் (அதாவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2%) தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிக அளவில் தள்ளுபடி செய்யப்படும் கார்ப்ரேட் கடன்கள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று மெர்ரில் லிஞ்ச் நமக்கு ஒருபோதும் கூறுவதில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 2.57 இலட்சம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான மாபெரும் நிதியுதவி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தொலைத் தொடர்புத் துறைக்கு ரூ. 4 இலட்சம் கோடி நிதியுதவி வழங்கும் திட்டம் பற்றி மெர்ரில் லிஞ்ச் பேசுவதில்லை, ஏன்? விவசாயிகளை மோசமாக சித்தரிப்பதன் மூலம் வழக்கமாக பெருமளவிலான கடன்களை திருப்பிசெலுத்தாத கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கவே மெர்ரில் லிஞ்ச் முதன்மையாக முயல்கிறது.
இப்படித்தான் வங்கிகள் விளையாடுகின்றன. இது வெறும் தார்மீக ஆபத்து மட்டுமல்ல; முற்றிலும் ஒழுக்ககேடானதும் கூட. வங்கி அமைப்பின் விதிகள் ஏழைகளுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது.
1857-ம் ஆண்டு, மே 10 அன்று மீரட் நகரின் இந்தியச் சிப்பாய்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். சிப்பாய்களின் எழுச்சி இந்தியா முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஹிந்து, முஸ்லீம் சிப்பாய்கள் ஒன்றிணைந்து டில்லியை ஆண்ட பகதூர் ஷா வே தங்களது மன்னர் என அறிவித்தனர். இந்த முதல் இந்திய சுதந்திரப் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியால் ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர். முதல் இந்திய சுதந்திரப் போரில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர் என்பது பலருக்கு தெரியாது. ஜான்சிராணி லட்சுமி பாயை தவிர மற்ற பெண் போராளிகளை நாம் அறிந்திருக்க மாட்டோம்.
1857 போரில், பங்கேற்ற பெண் போராளிகள் சிலரைப் பற்றிய அறிமுகம் இங்கே இடம் பெறுகிறது.
ஜான்சியின் ராணி “லட்சுமி பாய்”
ஜான்சி ராணி
ஜான்சி ராணி என அழைக்கப்படும் ராணி லட்சுமி பாய், 1828-ம் ஆண்டு வாரணாசியில் பிறந்தார். 17 வயதில் ஜான்சியின் அரசர் கங்காதர் ராவை அவர் மணந்தார். கங்காதர் ராவின் காலகட்டத்திலேயே ஜான்சி கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் உள்ள ஒரு சமஸ்தானமாக இருந்தது. கங்காதர் ராவிற்கும், லட்சுமிபாய்க்கும் பிறந்த குழந்தை, பிறந்த சில மாதங்களிலேயே மரணமடைந்ததைத் தொடர்ந்து அரசின் வாரிசிற்கு உறவினரின் குழந்தையைத் தத்தெடுத்தனர். சில ஆண்டுகளிலேயே லட்சுமிபாயின் கணவரும் உயிரிழந்தார். அதன் பின்னர், தத்தெடுத்த குழந்தையை வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, ஜான்சியின் இராஜ்ஜியத்தை முழுவதுமாக தன்னோடு இணைந்துக் கொள்ள எத்தனித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. அதன் தொடக்கமாக லட்சுமி பாய்க்கு அரச ஓய்வூதியம் மட்டும் கொடுத்து அரண்மனையை விட்டு வெளியேற்றியது.
1857, சிப்பாய்கள் கிளர்ச்சி தொடங்கிய போது, ஜான்சிக்குள் புகுந்த சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரிட்டிஷ் அதிகாரிகளையும் , படையினரையும் கொன்று குவித்தனர். அதற்கும் லட்சுமிபாய்க்கும் சம்பந்தம் இருக்குமோ என சந்தேகித்த பிரிட்டிஷ் அரசு, அவருக்குக் கொடுத்து வந்த பென்சனை உடனடியாக நிறுத்தியது. அதோடு அவரை ஜான்சியை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது. “ஜான்சி எனது பிரதேசம், அதனை ஒரு போதும் கைவிட மாட்டேன்” என உறுதியாக நின்ற லெட்சுமி பாய், தனக்கு விசுவாசமான அதிகாரிகள், அமைச்சர்கள், படையினர் மற்றும் மக்களுடனும், சிப்பாய்க் கலகத்தில் பங்கேற்ற சிப்பாய்களுடன் சேர்ந்து படையை திரட்டி கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்தார். முதல் போரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பெரும்படையிடம் தோல்வியுற்ற லெட்சுமிபாய், தனது மகனுடன் கல்பிக்கு தப்பிச் சென்றார். கல்பியில் தாந்தியா தோப்பேவுடன் இணைந்து கிழக்கிந்திய கம்பெனியின் வசம் இருந்த குவாலியரை மீட்டார். அதன் பின்னர் பெரும்படையுடன் வந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையுடன் கடுமையாகப் போரிட்ட லெட்சுமி பாய், 1858 ஆண்டு ஜூன் மாதம் 17-ம் நாள் அன்று போர்க்களத்தில் உயிரிழந்தார்.
லெட்சுமி பாயின் நெருங்கிய முசுலீம் தோழியான மண்டர்பாயும் அதே போரில் அவருடன் உயிரிழந்தார். ஜான்சியின் அரசியான லெட்சுமி பாய் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக இருமுறை தோல்வி அடைந்தும், மீண்டும் மீண்டும் சமரசமின்றி, பிரிட்டிஷ் படையோடு மோதினார். நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்குஎதிராக ஒன்று திரட்ட பெருமுயற்சிகள் மேற்கொண்டார். லெட்சுமி பாய் தனது படைப்பிரிவில், துர்கா தளம் என்ற பெயரில் பெண்களுக்கான படைப்பிரிவு ஒன்றையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துர்கா தளம்
துர்கா தளம் என்பது ராணி லெட்சுமி பாயின் பெண்களுக்கான படைப்பிரிவு ஆகும். இப்படைப் பிரிவில் பெண்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்கபட்டது. இதில் பல பெண்கள் இணைந்து கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டனர் . மண்டர் பாய், சுந்தரி பாய், முண்டரி பாய், மோட்டி பாய் ஆகியோர் இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள் ஆவர். இதில் சிறு வயதில் இருந்தே போர்ப்பயிற்சி எடுத்து இப்படையில் சேர்ந்து ராணி லெட்சுமிபாய் தப்பிச் செல்ல உதவிய ஜல்கரி பாய் மிகவும் முக்கியமானவர்.
ஜல்கரி பாய்
ஜல்கரி பாய்
ஜல்கரி பாய், 1830-ம் ஆண்டு கோரி என்னும் ஒரு தலித் சமூகத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தாயை இழந்த ஜல்கரி பாயை ஒரு ஆணைப் போல அவரது தந்தை வளர்த்தார். சிறு வயதிலேயே, குதிரையேற்றம், வாள் வீசுதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். ராணி லெட்சுமி பாயின் படையில் பணிபுரியும் புரான்சிங் என்பவரை மணந்த பின்னர், புரான்சிங்கின் மூலமாக லெட்சுமிபாயின் துர்கா தளம் படையில் இணைந்தார். அங்கு வில் வித்தை மற்றும் வாள் வீசுதல் போன்றவற்றில் சிறப்புப் பயிற்சி எடுத்தார்.
சாதாரண போர் வீராங்கனையாக சேர்ந்த ஜல்கரிபாய், தனது திறமையால் ராணி லெட்சுமிபாய்க்கு நெருக்கமானவராக உயர்ந்தார். 1857-ல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரில் துர்கா தளத்தை தலைமை தாங்கி வழி நடத்தினார். இப்போரில் அவரது கணவர் புரான் சிங் கிழக்கிந்தியக் கம்பெனியின் படையால் கொல்லப்பட்டார். அதன் பின்னரும் மனம் தளராது, இன்னும் ஆக்ரோஷமாக பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப் போரிட்டார். அப்போரில் ராணி லெட்சுமி பாய் தப்பிச் செல்கையில் பிரிட்டிஷ் படையை குழப்ப இவரே ராணி லெட்சுமி பாய் போல உடை தரித்து, கிழக்கிந்தியக் கம்பெனியைக் குழப்பினார். இவரை லெட்சுமிபாய் என நினைத்துக் கைது செய்த கிழக்கிந்தியக் கம்பெனி, இரண்டு நாட்களுக்குப் பின்னர், உண்மையறிந்து இவரை விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் போரில் மரணமடைந்தார் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
ஹஸ்ரத் மஹல்
‘அவாத்’தின் ராணி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஹஸ்ரத் மஹல், 1820-ம் ஆண்டு ஃபைசாபாத் நகரில் பிறந்தார். அவாத் என்பது தற்போதைய அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை உள்ளடக்கிய பிரதேசமாகும். ஹசரத் மஹல் அவாத் ராஜ்ஜியத்தின் நவாப் ’வாஜித் அலி ஷா’ வின் மனைவி. 1856-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி, அவாத் பிரதேசத்தை தனது ஆட்சி அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொண்டது. அதோடு அவாத் ராஜ்ஜியத்தின் நவாப்பும், ஹசரத் மஹலின் கணவருமான வாஜித் அலி ஷா வை கல்கத்தாவிற்கு நாடு கடத்தியது. அதன் பின்னர் 1857 முதல் 1858 வரை நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரில், ஹசரத் மஹல், ஒரு பெரும் கிளர்ச்சிப் படையை அமைத்து போர் புரிந்தார்.
ஹஸ்ரத் மஹல்
இப்படை தான் அக்கால கட்டத்தில் திரட்டப்பட்ட மிகப்பெரிய கிளர்ச்சிப் படை. லக்னோவில், ஹசரத் மஹல் திரட்டிய கிளர்ச்சிப்படையின் வீரத்திற்கு முன்னே கிழக்கிந்தியக் கம்பெனியின் சேனை புறமுதுகிட்டு ஓடியது. அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய பேகம் ஹசரத் மஹல், 1857- ஜூன் 5 அன்று தனது 11 வயது மகன் பிர்ஜிஸ் காதர்க்கு முடி சூட்டினார்.
ஹசரத் மஹலின் வெற்றியைத் தொடர்ந்து, கிழக்கிந்தியக் கம்பெனி அவருடன் பேரம் பேசியது. பெரும் அளவிலான பொருளும் செல்வமும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் ஒரு பகுதி ராஜ்ஜியம், அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட நாடு கடத்தல் தண்டனையை இரத்து செய்வது எனப் பல விதங்களில் ஆசை காட்டியது. ஆனால் அதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு, கிழக்கிந்தியக் கம்பெனியுடன் மோதத் தயாரானார். 10 மாதங்கள் தனது மகனின் மூலம் ஆட்சி அமைத்த பேகம் ஹசரத் மஹல் மீது பெரும்படை திரட்டி வந்து போர் தொடுத்தது கிழக்கிந்தியக் கம்பெனி. ஹசரத் மஹல் எவ்வித சமரசமுமின்றி களத்தில் இருந்து போராடினார். பிரிட்டிஷ் திரட்டி வந்த பெரும்படையால் கிளர்ச்சிப்படை சிதறடிக்கப்பட்ட பின்னர், ஹசரத் மஹல் தனது 11 வயது மகனுடன் நேபாளத்தின் இமயமலைக் காடுகளில் தஞ்சம் புகுந்து தனது மீதமுள்ள வாழ்க்கையைக் கழித்தார்.
ஹசரத் மஹலைப் பற்றி “இந்தியப் புரட்சி பற்றிய எனது குறிப்பேடு” என்னும் நூலில் வில்லியம் ஹோவர்ட் ரூசல் குறிப்பிடுகையில் “ பேகம் ஹசரத் மஹல், பெரும் திறனையும் சக்தியையும் காட்டினார். அவர் முடிவுறாத போரை எங்கள் மீது தொடுத்தார்” எனப் பதிவு செய்திருக்கிறார். ஹசரத் மஹல் – அயோத்தியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு வீராங்கனை.
உடா தேவி
உடாதேவி லக்னோ அருகில் உள்ள உஜ்ரியான் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பாசி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் மக்கா பாசி ஹசரத் மஹல் படையில் ஒரு போர் வீரராக இருந்தார். உடாதேவியும் அடிப்படையில் வீரம் மிக்கவராக விளங்கினார். ஹசரத் மஹலின் படைப்பிரிவுக்கு பெண்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார். 1857 நவம்பரில் நடைபெற்ற சிக்கந்தர் பாக் போரில் மிகப்பெரிய அளவில் பிரிட்டிஷ் அணியை சிதறடித்துள்ளார். முன்னேறி வந்த பிரிட்டிஷ் படையை விரட்டியடிக்க ஒரு உயரமான மரத்தில் அமர்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு பிரிட்டிஷ் படைக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சுமார் 20 முதல் 30 வரையிலான பிரிட்டிஷ் படையினரை சுட்டுக் கொன்றிருக்கிறார். இறுதியில் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான் ஒரு பிரிட்டிஷ் சிப்பாய்.
மஹாபிரிதேவி
உத்திரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்த முண்ட்பர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மஹாபிரிதேவியின் பங்கு மிகவும் முக்கியமானது. 1857 கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் தொடங்கிய போது, 22 பெண்களைக் கொண்டு ஒரு படையைக் கட்டி பிரிட்டிஷ் துருப்புகளின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். அதனால் பிரிட்டிஷ் துருப்புகள் இழப்பைச் சந்தித்தன. இப்பெண்கள் அனைவரையும் பிடித்துக் கொன்றது கிழக்கிந்திய கம்பெனி.
அஸிசுன் பாய்
அஸிசுன் பாய்
கான்பூரில் நானாசாகிப்பும், தாந்தியா தோப்பும் சேர்ந்து பிரிட்டிஷ் துருப்புகளை எதிர்த்து 1857-ல் கடுமையாகப் போர் புரிந்து கொண்டிருந்த நேரத்தில் நானாசாகிபின் அந்தப்புரத்தில் இருந்த ஒரு பெண் தான் அஸிசுன் பாய். இவர் சிப்பாய் புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களை ஒருங்கிணைத்து அவர்கள் சந்திப்பதற்குத் தனது வீட்டைஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அதோடு பல பெண்களை ஒருங்கிணைத்துப் போரில் காயமடைந்த சிப்பாய்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துள்ளார். பல்வேறு பகுதிகளுக்கு சிப்பாய்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் பணியையும் இப்பெண்கள் முன்னெடுத்துச் செய்துள்ளனர். இவரும் தமது கைகளில் துப்பாக்கி ஏந்தி பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போரிட்டார்.
காலங்காலமாக சமூகத்தில் கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மற்றும் முசுலீம் பெண்கள் பெருமளவில் 1857-ம் ஆண்டின் சிப்பாய் கிளர்ச்சிக்கும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கும் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். ஆஷா தேவி, பக்தவரி, பகவதி தேவி தியாகி, இந்திரா கவுர், ஜமீலா கான், மான் கவுர், ரஹிமி, ராஜ் கவுர், ஷோபா தேவி, உம்டா ஆகியோர் 1857 போரில் தமது இன்னுயிரை ஈந்த நூற்றுக்கணக்கான பெண்களில் ஒரு சிலர். அஷ்கரி பேகம் என்னும் பெண் தனது 45 வயதில் இப்போரில் பங்கேற்று பிரிட்டிஷ் படையால் சிறை பிடிக்கப்பட்டு உயிரோடு கொளுத்தப்பட்டார். அவரைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் தங்களது 20 – 30 வயதுகளில் தான் இப்போரில் கலந்து கொண்டு , அவ்வயதிலேயே, பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போரிட்டு அப்படைகளால் தூக்கிலிடப்பட்டோ, உயிரோடு எரிக்கப்பட்டோ, கொல்லப்பட்டனர்.
இவர்களைத் தவிர வேறு இரண்டு அரசிகளும் 1857 முதல் சுதந்திரப் போரில் பங்கெடுத்துக் கொண்டனர். ராஜ்கர் பகுதியை ஆண்டு வந்த ராணி அவந்திபாய் லோதி மற்றும் தார் பகுதியை ஆண்டு வந்த ராணி திரௌபதி ஆகியோர் இப்போரில் பங்கு கொண்டனர். ஆனால் கெடுவாய்ப்பாக அவர்களின் போராட்டம் வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. . பெண்கள், அதுவும் குறிப்பாக தலித் மற்றும் முசுலீம் பெண்கள், அரசாட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தனக்கான எந்த ஒரு தனிப்பட்ட இலாபமும் இல்லாவிடினும், தமது மண்ணை அந்நியனிடமிருந்து காக்க வேண்டும் என்ற உணர்விலிருந்து எதிர்த்திருக்கின்றனர்.
பெண்கள் என்றாலே பலவீனமான பாலினம் என்ற கருத்தியலை காலனியாதிக்கக் கால கட்டங்களிலேயே பொய் என்று பெண்கள் நிரூபித்திருக்கின்றனர். காலனியாதிக்கப் பெரும் படைகளை எதிர்த்துப் போராடப் பெண்களைத் தூண்டியது இம்மண்ணின் மீதான பற்றும், ஒடுக்குமுறையின் மீதான வெறுப்புணர்வும் தான். 1948-ல் நடைபெற்ற வீரத்தெலுங்கானா ஆயுதமேந்திய போராட்டத்தில் தொடங்கி, இன்றைய டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் வரை இவ்வுணர்வு தான் அவர்களை களத்தில் முன் நிற்கச் செய்கிறது.
சென்னை பல்லாவரம் 11 -வது வார்டில் குவாரி சாலை அருகே மிகப் பெரிய மலை உள்ளது. அந்த மலையடிவாரத்தில் பாரதி நகர், மலைமகள் நகர், பச்சையம்மன் கோவில் ஆகிய இடங்களில் சுமார் 600 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 45 வருடங்களாக வசித்து வருகின்றனர். அனைத்து சாதியினரும் இருக்கிறார்கள் என்றாலும் பெரும்பான்மையாக தலித் மக்கள் தான் வசிக்கிறார்கள். இந்த குடியிருப்புகளுக்கு மையப்பகுதியில் 2.19 ஏக்கர் காலி மனை ஒன்று உள்ளது. இதன் மதிப்பு சுமார் 30 கோடி இருக்கும் என்கிறார்கள்.
இந்த இடம் தனக்கு தான் சொந்தமானது என்று நித்தியானந்தாவின் சீடரான “சன்னியாசி” வள்ளிராமநாதன் 4.1.2017 அன்று ஒருவரை அந்த இடத்தில் தங்க வைத்தார். அவரும் நித்தியின் சீடர் தான். அன்று முதல் அப்பகுதி வழியாக மலைமகள் நகருக்கு செல்லும் மக்களுக்கு வழி விடமுடியாது என்று தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். இதன் உச்சகட்டமாக 18 -ம் தேதி காலை நித்தியின் பொறுக்கி கும்பலுக்கும், பகுதி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மலைமகள் பகுதியை சேர்ந்த ஐந்து பேரையும், அந்த பிரச்சனைக்குரிய இடத்தில் குடியிருக்கும் கிருஷ்ணனின் மகன், மருமகன் உட்பட ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது பல்லாவரம் போலிசு.
கிருஷ்ணன்
இந்த பிரச்சனை குறித்து கிருஷ்ணன் கூறுகையில்,
“1953-1973 வரை வீரப்பன் செட்டியார் ( ராமநாதன் தந்தை- வள்ளியின் தாத்தா) கல் குவாரியை 4 முறை டெண்டர் எடுத்தார். இந்த குவாரியில் நான் டிரில்லிங் ஆப்புரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். 1967 -ல் எனக்கு அடிபட்டு கால் முறிவு ஏற்பட்டது. இது வெளியில் தெரிந்தால் குவாரிக்கு தடைவிதித்து விடுவார்கள் என்று கூறி, திரிசூலத்தில் வாடகை வீட்டில் இருந்த என்னை மாதம் சம்பளம் ரூ.300 கொடுத்து குவாரி அருகே குடிசை போட்டு தங்கிக்கொள் என்றார். அன்று முதல் இன்று வரை அந்த குடிசையில் தான் இருக்கிறேன். குவாரிக்கு கீழே 3 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தது. தற்போதைய பச்சையம்மன் நகர். அந்த நிலம் ராயப்பேட்டையை சேர்ந்த குர்ஷித் பேகம் என்ற முசுலிமுக்கு சொந்தம். இந்த நிலத்தை 3000 ரூபாய்க்கு வாங்கினார்.பிறகு அந்த மூன்று ஏக்கர் உட்பட பத்து ஏக்கர் ஏரி புறம்போக்கு என்பதால் அரசாங்கம் அதனை கைப்பற்றி பர்மா அகதிகள் 132 பேருக்கு வீடு கட்டிகொள்ள அனுமதித்தது.
குவாரி இருந்ததற்கான அடையாளமாக நிற்கும் பிளந்த பாறைகள்
வீடு கட்டும் பணி பாதி முடிந்த நிலையில் தன்னுடைய இடத்தை பறிகொடுத்த வெறுப்பில் திரிசூலம் மலை குவாரியை குத்தகைக்கு எடுத்த ராஜகோபால் ஐய்யரும், வீரப்பன் செட்டியாரும் சேர்ந்து சுரங்க விதிப்படி (Mines act) குவாரிக்கு அருகில் வீடு கட்ட முடியாது என்றும், 1500 அடிக்கு அப்பால் தான் கட்ட முடியும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஸ்டே வாங்கி விட்டார்கள். 1973-ல் டெண்டர் முடிந்து விட்டது. மீண்டும் கட்டிடப்பணிகள் தொடங்கியது.
இதற்கிடையில் நான் குடிசை போட்டு தங்கியிருந்த இடத்திற்கு நிலவரி கட்ட சொல்லி அப்போதைய முனிசிபாலிட்டி அதிகாரி வெங்கட்ராம ஐயர் ஒரு நோட்டிசு அனுப்பினர். அன்று முதல் இந்த இடத்திற்கு நிலவரி கட்டி வருகிறேன். மீண்டும் 1976 -ல் இந்த குவாரியை நான் தான் டெண்டர் எடுத்தேன் ஆகவே இந்த நிலம் எனக்கு தான் சொந்தம் என்று வழக்கு போட்டார் வீரப்பன் செட்டி. அந்த வழக்கில் நிலவரி நான் கட்டி வந்ததற்காக எனக்கு தான் சேரும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பதினான்கு முறைக்கு மேல் வழக்கு போட்டு அனைத்தும் தள்ளுபடி ஆகிவிட்டது.
நித்தியானந்தா அமைத்துள்ள சுற்றுசுவருடன் கூடிய காலி நிலம்
2007 -ம் ஆண்டு அவருடைய மகன் ராமநாதன் செட்டியார் இந்த இடம் எங்களுடையது என்று கூறி நித்தியானந்தாவுடன் வந்து என்னிடம் பேசினார்கள்.இடத்தை காலி செய்ய சொல்லி மிரட்டினார்கள். 25.03.2007 -ல் இந்த இடத்தில் இருந்த பத்து வீடுகள், தென்னை அனைத்தையும் போலிசு பாதுகாப்புடன் இடித்து விட்டு மலைமகள் நகரில் வசிக்க கூடிய மக்கள் செல்வதற்கு கூட வழிவிடாமல் மிகப்பெரும் சுற்று சுவர் கட்டினார்கள். அப்பொழுது நித்யானந்தாவின் செருப்பை வைத்து பூஜையும் போட்டார்கள். அதன் எதிரில் ஒரு குடிசை போட்டு பாதுகாப்பிற்கு இரண்டு வாட்ச்மேன் போட்டார்கள். அன்று முதல் அவர்களுக்கு எதிராக போராடி வருகிறோம்.
2015-ல் நான் இங்கு வீடு கட்டிய போது கவுன்சிலர் அன்புகுமாரை வைத்து மிரட்டினார்கள். ராமநாதன் மகள் வள்ளி என்னுடைய நிலம், அதில் மக்கள் நுழைகிறார்கள் என்றும் வழக்கு போட்டார். அந்த வழக்கு நடந்து வருகிறது.
2017 மார்ச் மற்றும் மே மாதம் ரஞ்சிதாவுடன் வந்து பார்வையிட்டு சென்றார்கள். அன்று முதல் பாதுகாப்பிற்கு இருந்த வாட்ச்மேன்களை துரத்திவிட்டு அந்த குடிசையில் நித்தியின் சீடர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். அப்பொழுது தொடங்கிய அவர்களின் பொறுக்கித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்தது” என்று கூறினார்.
பொறுக்கி நித்தியின் சீடர்கள் செய்யும் கேடுகெட்ட அயோக்கியத்தனங்களைப் பற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், இந்த இடத்தில் 7 சென்ட்டிற்கு மட்டும் பட்டா உள்ளது, நித்தி சீடர்கள் தினமும் ஏதாவது பூஜை செய்து இங்கு இருக்கக் கூடிய குழந்தைகளை கூட்டி சென்று அவர்களுக்கு பிரசாதம் கொடுப்பார்கள். அன்னதானம் வழங்கும் போது அவர்களை போட்டோ எடுத்துக்கொள்வார்கள். இந்த காம்பவுண்டை சுற்றியும் கண்காணிப்பு கேமாரா வைத்துள்ளார்கள். யாராவது உள்ளே வந்தால் அடிப்பார்கள். அவசரத்துக்கு ஒதுங்கும் பெண்களை வீடியோ எடுக்கிறார்கள். நாங்கள் இதனை கேட்டால் அப்படித் தான் செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று மிரட்டுகிறார்கள்.
“குழந்தைகளை எங்களிடம் விட்டு விடுங்கள் ஒரு குழந்தைக்கு ஐந்து லட்சம் தருகிறோம். பெங்களூரு ஆசிரமத்தில் தங்க வைத்து படிக்க வைக்கிறோம்” என்பார்கள். உங்களில் யாரேனும் சந்நியாசியாக வருவதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்று இங்கு இருக்க கூடிய இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள். இரவு நேரத்தில் ஏதாவது பள்ளம் தோண்டுகிறார்கள். என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு போலிசும் பாதுகாப்பு கொடுக்கிறது. மின்சாரத்தை திருட்டுத் தனமாக தான் எடுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
இந்த பிரச்சனை தொடங்கிய காலம் முதல் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் அரசு செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், சாலை, கழிநீர் வாய்க்கால் என எதுவும் இல்லை. மழைக்காலத்தில் மலைமேல் இருந்து விழும் நீர் செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் தண்ணீர் முழுதும் தேங்கி நிற்கும், தெருவில் நடக்கவே முடியாது. அதிகாரியிடம் நாங்கள் முறையிட்டால் இந்த பிரச்சனை முடியட்டும் என்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் இதனை முடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதே இல்லை. நாங்கள் படிக்காதவர்கள். எங்களால் என்ன செய்ய முடியும்? தினமும் வேலைக்கு போனால் தான் எங்கள் பொழப்பு என்றாகிவிட்டது. தினந்தோறும் வேதனையாக உள்ளது. இந்த அரசின் மீது இருந்த நம்பிக்கை எங்களுக்கு விலகி விட்டது. போலீசு, தாசில்தார் எல்லாரும் இப்பொழுது நித்தியானந்தாவின் கையில் தான் இருக்கிறார்கள்.
எல்லா கொடுமைகளையும் விட உச்ச கட்டமாக பெண்களை தினந்தோறும் கிண்டல் செய்கிறார்கள். அசிங்கமாக பேசுவது, பாலியல் சைகைகள் செய்வது என்று இவர்களுடைய அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவர்கள் சாமியாரே இல்லை. ஒரு பொறுக்கியை விட கேவலமாக நடந்து கொள்கிறார்கள். எங்களுடையை கோபத்தை வேண்டுமென்றே தூண்டி விடுகிறார்கள். 18 -ம் தேதி திருமணமான பெண்ணை கிண்டல் செய்தார்கள். நாங்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்து கேட்டதற்கு எங்களை போட்டோ எடுத்தார்கள். போட்டோ எடுக்க வேண்டாம் என்ற எங்களை கடுமையாக அடித்தார்கள். அசிங்கமாக திட்டினார்கள். நாங்கள் திருப்பி அடித்தோம்.
போலிசு, எங்களை “நித்தியானந்தா சீடர்கள் மேல் கேசு கொடுங்கள்” என்று கூறி ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பெண்கள் என்றும் பார்க்காமல் அசிங்கமாக திட்டினார்கள். கேசு போட்டு விடுவோம் என்று எங்களையே மிராட்டினார்கள். இந்த பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத 9 பேரை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். அன்று இரவு முதல் போலிசை குவித்து மிரட்டி மிரட்டினார்கள். போலிசின் மிரட்டலுக்கு பயந்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கிறார்கள். ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கிய நித்தியனந்தாவுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மோடியோட சப்போர்ட் இல்லாம இவனால இவ்ளோ அட்டூழியம் செய்ய முடியாது என்று கூறி முடிக்கும் போதே அவர்களிடம் ஒரு இயல்பான பயம் தென்பட்டது.
இந்நிலையில் 19 -ம் தேதி தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் இருந்து மலைமகள் பகுதி மக்கள், கிருஷ்ணன், சன்னியாசி வள்ளி ஆகியோரை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அந்த இடம் முழுவதும் நித்தியானந்தாவின் சீடரான வள்ளிக்கு தான் சொந்தம் நீங்கள் அனைவரும் காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். தற்பொழுது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசை குவித்து அவர்களை வெளியேற்றும் பணியை செய்து வருகிறார்கள். அரசு, போலிசு அனைத்தும் கார்ப்பரேட் சாமியார்களுக்கு அடியாள் தான் என்பதை நிரூபித்துள்ளது.
அதானிக்கும், அமெரிக்காவிற்கும் சேவை செய்யும் மோடி அரசாகட்டும், மோடி அரசின் பினாமியாக தமிழகத்தை கொள்ளையடிக்கும் எடப்பாடி அரசாகட்டும் இரண்டும் பொறுக்கி சாமியாரை ஆதரிக்கின்றன. பகுதி மக்கள் இந்த பொறுக்கிக் கூட்டத்தை துரத்துவது என்று முடிவெடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இழிவுகளில் ஒன்றான நித்தியை துரத்துவது அவர்களுக்கு மட்டுமல்ல நமது அனைவரின் கடமையும் கூட.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்துகையில், வரி வீதங்களை தீர்மானிக்கும் ஜி.எஸ்.டி குழு பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12% வரி நிர்ணயித்துள்ளது. பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை “அத்தியாவசிய” பொருட்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரி விலக்களித்துள்ளது.
இதற்கு எதிராக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நாப்கின்கள் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு வரிவிலக்கு அளிக்குமாறு கோரி “லாகு கா லகான் – நாப்கின்களுக்கு வரி” (#LahuKaLagaan) என்ற குறிச்சொல்லுடன் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்று வரை சுமார் 70% பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்துவதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்களை தீட்டு என்று ஒதுக்கி வைப்பது, அவர்களது சுகாதாரம் மற்றும் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காத ஆணாதிக்க, பார்ப்பனிய கலாச்சார பின்புலம் ஒரு புறம், மறுபுறம் வறுமை; இவையே இதற்கு காரணம். இன்றும் கூட பெண்கள் வெளியில் சொல்ல வெட்கிகுறுகுவதும், ரகசியம் காக்கவேண்டிய ஒன்றாகவும் தான் மாதவிடாயை பார்க்கின்றனர்.
மாதவிடாய் என்பது சாதாரண உடலியல் சுழற்சி நடைமுறை. சுழற்சியின் முதல் கட்டத்தில் கருப்பையில் கருவை சுமப்பதற்கான மிருதுவான உட்சுவர் தயாராகிறது. சுழற்சியின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயாரானவுடன், சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறி கருமுட்டைக் குழாய் வழியாக கருப்பையை அடைந்து கருப்பை சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். இந்த மத்திய கட்டத்தில் கருப்பை கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருக்கிறது. கருத்தரிக்காத போது அடுத்த கட்டத்தில் கருப்பையின் மிருதுவான உட்சுவர் தேவையில்லை. அதனால் உட்சுவர் உடைந்து சிதைந்து, அதனுடன் கரு முட்டையும் சேர்ந்து இரத்தப் போக்காக வெளியேறுகிறது. மாதவிடாய் நின்றவுடன், கருப்பையின் மிருதுவான உட்சுவர் மீண்டும் தயாராகி அடுத்த சுற்று துவங்குகிறது.
மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தின் மூலம் நுண்ணுயிர் கிருமி தொற்றுகள், நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன, அவ்வளவே. ஆனால், மாதவிடாயின் இரத்தமே சுகாதாரக் கேடானது என்பது உண்மை இல்லை.
சுகாதாரக் குறைவான மாதவிடாய் கால அணுகுமுறைகளால் பல நோய்த் தொற்றுகள் ஏற்படுவதோடு, கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்று நோய்கள் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சுகாதாரக் குறைவான அணுகுமுறைகள் சில நேரங்களில் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கக் கூடுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வருடத்திற்கு 1,22, 844 பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், 67, 477 பேர் கொல்லப்படுவதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் நாப்கின்களுக்கு 12% ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது ஏழை எளிய பெண்களுக்கு நாப்கின்கள் கிடைக்கப் பெறுவதை மேலும் அரிதாக்குகிறது. இன்று உலக அளவில் நாப்கின்களின் பயன்பாட்டை உயர்த்தும் பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களில் அரசுகள் ஈடுபட்டு வரும் போது மோடி அரசின் இவ்வரிவிதிப்பு இந்தியாவில் நாப்கின்கள் பயன்பாட்டை மேலும் குறைக்கும்.
வரிவிதிப்பை ஆதரித்தும் எதிர்த்தும் நடக்கும் விவாதங்களில் இந்திய பெண்கள் போதுமான அளவுக்கு நாப்கின்களை பயன்படுத்துவதில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. மறுபுறம் சிலர் நாப்கின்கள் ஆடம்பரமானது, அவை ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இரு தரப்பினரும் விவரங்களையும் புள்ளிவிவரங்களையும் தமது கருத்துக்கு ஆதரவாக முன்வைக்கின்றனர்.
ஹுயிண்ட் (The Quint) இணையபத்திரிக்கையின் இந்த காணொளி இந்திய பெண்களது மாதவிடாய் தூய்மை பழக்கங்கள் எவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை நோய்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் சில பெண்களின் குரலின் மூலம் அறியத்தருகிறது.
***
வீடியோவின் தமிழாக்கம்:
நாப்கின்களுக்கு வரிவிதிப்பது நல்லறிவுள்ள செயலல்ல!
ஜி.எஸ்.டி குழு 66 உற்பத்தி பொருட்களுக்கு வரி குறைப்பு செய்துள்ளது. ஆனால் நாப்கின்களுக்கு அல்ல.
ஆணுறைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் நாப்கின்களுக்கு இல்லை.
பெண்கள் தங்கள் ரத்ததிற்கு வரி ஏன் செலுத்த வேண்டும்?
கவிதா, வயது – 47 மாதவிடாயின் போது நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள்?
நாப்கின் பட்டைகளை பயன்படுத்துகிறேன். அவற்றால் நீங்கள் வசதியாக உணர்கிறீர்களா? ம். நீங்கள் ஆரம்பத்திலிருந்தே நாப்கின் பட்டைகளை பயன்படுத்துகிறீர்களா? இல்லை.
கிரண் தேவி, வயது – 31 அவை விலையுயர்ந்தவை அதனால் பணத்தை சேமிக்க அவற்றை மொத்தமாக வாங்கிக்கொள்வோம்.
அனிதா நாயர், வயது – 17
முதலிரண்டு மாதங்களில் நான் துணிகளை பயன்படுத்த ஆரம்பித்தேன்.
அதன் பின்னர் நாப்கின்களை பயன்படுத்துகிறேன்.
நாப்கின்கள் துணியை விட சிறந்தவை என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் 12% மட்டுமே உள்ள நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்களில் அனிதாவும் ஒருவர். மீதமுள்ள 88% பேரின் நிலை என்ன?
பீபி சலேஹா, வயது – 48 எனக்கு மாதவிடாய் துவங்கிய நாளில் இருந்து நான் துணிகளையே பயன்படுத்துகிறேன். ஏழையான என்னால், நாப்கின்களை வாங்க முடியாது.
அவர்கள், துணி, சாம்பல், உலர்ந்த இலைகள் மற்றும் மண்ணைக் கூட பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் துணிக்கும் நாப்கினுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்கிறீர்களா? துணியைப் பயன்படுத்தும் போது எனக்கு முதுகு வலி இருந்தது. நாப்கின் பயன்படுத்தும் போது அது இல்லை.
பலர் சுகாதாரமானது என்று நாப்கின்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். சிலர் அக்கருத்தில் மாறுபடுகிறார்கள்.
பூனம் குப்தா, வயது 23 நான் இப்போது துணிகளை பயன்படுத்துகிறேன்.
கருத்தரிப்பதற்கு முன்னால் நான் நாப்கின்களை பயன்படுத்தினேன்.
கருத்தரித்த பின் நாப்கின் பயன்படுத்துவது குத்த ஆரம்பித்தது. அதனால் இப்போது துணியை பயன்படுத்துகிறேன்.
உங்களுக்கு குத்துவதைப் பற்றி எந்த மருத்துவரிடமாவது கலந்தாலோசித்தீர்களா?
இல்லை, நான் எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை.
மேலும் சிலருக்கோ சுகாதாரம் என்பதே ஆடம்பரம் தான்
மாலா தேவி, வயது 43 குழந்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு சிசேரியன் செய்யப்பட்டது. டாக்டரும் செவிலியர்களும் எனக்கு நாப்கின் பயன்படுத்துவதை அறிமுகப்படுத்தி பரிந்துரைத்தனர். நீங்கள் அந்தப் பரிந்துரையை ஏற்கவில்லையா? டாக்டர் அதற்கு பணம் கொடுப்பாரா? அல்லது நீங்கள் அதற்கு பணம் கொடுப்பீர்களா?
நான் என்னுடைய சொந்த தர்க்கத்தை பின்பற்ற வேண்டும்.
இங்கு எங்களுக்கு உணவுக்கே பணமில்லை. நீங்கள் எங்களை நாப்கின் வாங்கச் சொல்கிறீர்கள்.
வரிவிலக்கு அவர்களுக்கு சிறந்த மாதவிடாய் சுகாதாரத்தை அளிக்குமா?
பூனம் குப்தா உள்ளூர் கடைகளில் நாப்கின்களின் விலை ஏறிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு விலை மலிவான ஒன்று கிடைக்க வேண்டும். சில கட்டுகளின் விலை ரூ.40, சிலவற்றின் விலை ரூ.50 விலை. இத்தனைக்கும் அதில் 7 எண்ணிக்கை மட்டுமே இருக்கும். நீண்ட மாதவிடாய் காலம் கொண்டவர்களால் அதை வாங்க முடியாது.
கிரண் தேவி நாப்கின்களின் விலை குறைந்தால், மேலும் பல பெண்கள் அவற்றை பயன்படுத்த துவங்குவார்கள். அதன் பின் சுகாதாரமற்ற மாதவிடாய் பழக்கங்கங்களால் ஏற்படும் நோய்களும் குறையும்.
விலை மலிவானால் நீங்கள் நாப்கின்களை பயன்படுத்துவீர்களா?
மாலா தேவி ஆம், மலிவானால் நான் பயன்படுத்த முயற்சிப்பேன். என்ன விலை இருந்தால் உங்களால் வாங்க முடியும்? ஒரு கட்டின் விலை ரூ.10 அல்லது ரூ.20 இருக்கலாம்.
பணம் மட்டுமே பிரச்சினையா?
கிரண் தேவி படித்தவர்களுக்கு மட்டும் தான் நாப்கின் என்றால் என்னவென்று தெரியும். என் தாய், மூத்த சகோதரியைப் போல் வயதானவர்களுக்கு தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் எங்கள் அண்டை வீட்டார்களுக்கும் தெரியாது. குடும்பத்திலுள்ள ஆண்களை ஏற்றுக்கொள்ள செய்வதும் கடினம். நாங்கள் அவர்களை நாப்கின்கள் வாங்கிவரச் சொன்னால், வீட்டிலுள்ள ஏதாவதொன்றை பயன்படுத்திக் கொள் என்பார்கள்
அவர்கள் வாங்கிவர மாட்டார்கள். எதற்கு வீண் செலவு?
இளந்தலைமுறையினர் இந்த இடைவெளியை இட்டு நிறப்புகிறார்கள்.
அனிதா நாயர் சில நேரம் என் தாயை நாப்கின்களை பயன்படுத்த சொல்லிம் போது அவர் முயற்சிக்கிறார். ஆனால் அவர் பெரும்பாலும் துணியையே பயன்படுத்துகிறார்.
கவிதா பத்தாண்டுகள் முன்னரே நாப்கின்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் பயன்படுத்தவில்லை. ஏன்? எப்படி பயன்படுத்துவதென்று எனக்கு புரியவில்லை. பின்னர் எனது மகள் வளர்ந்த பின் அவள் எனக்கு அதை விளக்கினாள். அவள் அவளுக்கான அடிப்படை தேவையாக இதை தொடர்ந்து வாங்க ஆரம்பித்த பின் நானும் உணர்ந்து கொண்டேன்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்பது புகழ்பெற்ற முதலாளித்துவ மூதுரை மட்டுமல்ல, இந்திய நீதிமன்றங்களால் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்ட மூதுரையும் இதுதான். இந்திய நீதித்துறையால் சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கும் இரண்டு தீர்ப்புகள், இந்த மூதுரையை மீண்டும் எள்ளி நகையாடியிருக்கின்றன.
குல்சார் அகமது வானி: சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இளம் வயதில் (இடது); அவ்வழக்கில் 16 ஆண்டுகள் சிறையில் அடைத்து அவரது இளமையை அழித்த பிறகு, நிரபராதியாக நடுத்தர வயதில்.
மதிவாணன், சேலம் மாவட்டம்-ஆத்தூருக்கு அருகிலுள்ள கெங்கவல்லியைச் சேர்ந்த ஆடு, மாடுகளை வாங்கி விற்கும் தரகர். 17 வருடங்களுக்கு முன், கள்ளச் சாராயம் கடத்தியதாக இவர் மீது குற்றஞ்சுமத்திய ஆத்தூர் மதுவிலக்கு போலீசார், அவரது இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது இருசக்கர வாகனத்தைத் திருப்பித் தருவதற்கு மதிவாணனிடமிருந்து எட்டாயிரம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டனர். அந்த இலஞ்சப் பணம் கைமாறும் சமயத்தில் சாமிநாதன், ரவி, சேகர் ஆகிய மூன்று போலீசாரை இலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும்களவுமாகப் பிடித்தனர்.
இது தொடர்பாக, இலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆத்தூர் மதுவிலக்கு போலீசு நிலையத்தில் ரெய்டு நடத்தியதில், அங்கிருந்து கணக்கில் காட்ட முடியாத 1.15 இலட்ச ரூபாய் ரொக்கமும், எந்தெந்த போலீசுக்கு எவ்வளவு இலஞ்சம் தரப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் அந்த போலீசு நிலையத்தைச் சேர்ந்த 22 போலீசார் மீது இலஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த பதினேழு ஆண்டுகளாக விசாரித்து வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்த மே மாத இறுதியில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 போலீசாரில் 12 போலீசார் விடுதலை செய்யப்பட்டனர். தற்பொழுது ஆய்வாளராகப் பணியாற்றிவரும் சேகர், உதவி ஆய்வாளர் அருள் முருகன் உள்ளிட்ட 7 போலீசாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், தலா 17,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
மற்றொன்று, உ.பி.மாநில பாரபங்கி குற்றவியல் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த குல்சார் அகமது வானி, மொபின் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது, அந்நீதிமன்றம்.
கடந்த 2000-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 14 அன்று, பீகார் மாநிலம் – முசாபர்பூரிலிருந்து குஜராத் மாநிலம் – அகமதாபாத் நகருக்குச் செல்லும் சபர்மதி விரைவு ரயில், உ.பி.மாநிலம் கான்பூர் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபொழுது, அந்த ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் ஒன்பது பயணிகள் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்தான் குல்சார் அகமது வானி.
பதினேழு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டபொழுது, குல்சார் அகமது வானி உ.பி.யிலுள்ள அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர். அவரை டெல்லியில் வைத்துக் கைது செய்ததாகவும், அவரிடமிருந்து வெடிபொருட்களையும், முக்கியமான ஆதாரங்களையும் கைப்பற்றியதாகவும் குற்றப் பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டிருந்தனர். மேலும், சபர்மதி ரயில் குண்டு வெடிப்புக்கான சதித் திட்டத்தை, குல்சார் அகமது வானி அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்திலுள்ள ஹபீப் ஹாலில் வைத்துத் தீட்டியதாகவும் போலீசார் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
“இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகவும், சதித் திட்டத்தின் மூளையாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட குல்சார் அகமது வானி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மொபின் ஆகிய இருவருக்கும் எதிராக போலீசாரால் ஒரு ஆதாரத்தைக்கூடக் காட்ட முடியவில்லை; சதி உள்ளிட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டு, அவ்விருவரையும் பாரபங்கி குற்றவியல் நீதிபதி எம்.ஏ.கான் விடுதலை செய்திருக்கிறார். மாணவப் பருவத்தில் சிறைக்குள் தள்ளப்பட்ட குல்சார் அகமது வானி, நடுத்தர வயதைக் கடந்த நிலையில் நிரபராதியாக விடுதலை ஆகியிருக்கிறார். எத்தகைய குரூரம் இது ?
அப்பாவியான தனது மகன் குல்சார் அகமது வானியின் விடுதலைக்காக 16 ஆண்டுகள் சலையாமல் சட்டப் போராட்டம் நடத்திய குலாம் முகம்மது வானி.
இந்த இரண்டு வழக்குகளிலும் நீதி வழங்கப்பட்டிருப்பதாக, அறிவும், மனசாட்சியும், இரக்க உணர்வும் கொண்ட எவராலும் ஒத்துக் கொள்ள முடியுமா? தீர்ப்பு தாமதமாக வழங்கப்பட்டிருக்கிற அலட்சியத்தையும் தாண்டி, நீதியை வழங்கவேண்டிய கடமையும், பொறுப்பும் மிக்க நிறுவனங்களாகக் கூறப்படும் நீதிமன்றங்களும், போலீசும், அதற்கு எதிராக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் நடந்துகொண்டிருப்பதை இந்த இரண்டு வழக்குகளும் எடுத்துக்காட்டவில்லையா ?
ஆடு வியாபாரி மதிவாணன் போலீசார் மீது கொடுத்த இலஞ்சப் புகாரை விசாரித்து, பதினேழு ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிமன்றத்தின் திருநாமம், ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றமாம். வழக்கை நடத்தியதோ தமிழக போலீசின் இலஞ்ச ஒழிப்புத் துறை. இதைக் கேட்டுச் சிரிப்பதா, இல்லை அழுவதா என்றே தெரியவில்லை.
இந்த வழக்கில் 99 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு சாட்சி என்று விசாரித்திருந்தால்கூட, வழக்கை இரண்டு ஆண்டுகளில் முடித்திருக்கலாம். ஆனால், நீதிமன்றமோ பதினேழு ஆண்டுகளை விழுங்கிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பல பத்தாயிரக் கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஆள், ஆனை, அம்பு, சேனை என்றபடியான அதிகாரங்களை அனுபவித்துக்கொண்டு, நீதிபதியும் போலீசு அதிகாரிகளும் இலஞ்சத்தை ஒழிக்கப் பாடுபடும் இலட்சணம் நம்மை மெய்சிலிர்க்கத்தான் வைக்கிறது.
சட்டவிரோதமான முறையில் 16 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குல்சார் அகமது வாணிக்கு உடனடியாகப் பிணை வழங்காமல், விநோதமான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர்.
இந்த இழுத்தடிப்பிற்காக வழக்கை விசாரித்த நீதிபதியையும் குற்றஞ்சுமத்த முடியாது. வழக்கை நடத்திய போலீசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. மக்களின் வரிப் பணத்தைத் தின்று தீர்க்கும் இந்த அதிகார வர்க்கக் கூட்டத்திற்கு அப்படிபட்டதொரு பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கைத் தொடுத்த மதிவாணன் தீர்ப்பிற்கு முன்பே, அதாவது நீதி கிடைக்கும் முன்பே இறந்து போனார். குற்றஞ்சுமத்தப்பட்ட போலீசாருள் மூவர் இறந்துபோய், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் குற்றஞ்சுமத்தப்பட்ட எந்தவொரு போலீசுக்காரனும் இடைக்கால நீக்கம் செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி, குற்றஞ்சுமத்தப்பட்ட சேகர், அருள்முருகன், ரவி ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றமோ, பதினேழு ஆண்டுகள் கழித்து, எறும்பு கடிப்பது போன்று, இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது.
தமக்கு எதிரான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே, பதவி உயர்வு பெற்ற இந்த போலீசு அதிகாரிகள் இன்னும் திமிரோடும் அகங்காரத்தோடும் இலஞ்ச, ஊழல் கிரிமினல் குற்றங்களைச் செய்திருப்பார்கள் என நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு வழக்கைப் பதினேழு ஆண்டுகள் இழுத்தடிக்கலாம் என்ற மமதையே, அதிகார வர்க்கத்தைத் துணிந்து குற்றங்களை இழைக்கத் தூண்டுகிறது. இந்த அமைப்பு முறையைக் கொண்டு ஜெயா போன்ற பெருச்சாளிகளை மட்டுமல்ல, சாதாரண போலீசுக்காரன் உள்ளிட்ட சுண்டெலிகளைக்கூடத் தண்டிப்பது அத்துணை எளிதானதல்ல என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, பின்னர் நிரபராதியென விடுதலை செய்யப்பட்ட (இடமிருந்து) நூருல் ஹுடா, முகம்மது ஜாஹித், ரயீஸ் அகமது, டாக்டர் பரோக் மக்தூமி, டாக்டர் சல்மான் ஃபார்சி, அப்ரார் அகமது.
போலீசாருக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு அற்பத்தனமானது என்றால், போலீசாரால் பயங்கரவாதியாக நிறுத்தப்பட்ட குல்சார் அகமது வானி வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, நியாயம் வழங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்டது.
சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகத் தேடுதல் வேட்டை நடத்தி, குல்சார் அகமது வானியை போலீசு கைது செய்யவில்லை. வேறொரு வழக்கில் அவரைச் சிக்க வைத்து, அதன் பிறகு சபர்மதி ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் அவரைச் சேர்த்து விட்டிருக்கிறது, போலீசு.
டெல்லியில் வெடிகுண்டு தேடுதல் வேட்டை நடத்தியதபொழுது, காஷ்மீரி முசுலீமான குல்சார் அகமது வானி ஆயுதங்களோடு பிடிபட்டதாகத்தான் போலீசாரே கூறியிருக்கிறார்கள். வானி மீது சட்டவிரோத ஆயுதச் சட்டத்தின் கீழ்தான் முதலில் வழக்கு பதியப்பட்டது. அதன் பிறகுதான் அவர் மீது சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு பாய்ச்சப்பட்டது.
அந்த வழக்கில் மூன்றாவது, நான்காவது குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இருவர் போலீசிடம் அளித்த சாட்சியங்களின்படிதான், அதாவது போலீசு உருவாக்கி நிறுத்திய பொய்சாட்சிகளின்படிதான் குல்சார் அகமது வானி முதல் குற்றவாளியாகவும், சதித் திட்டத்தின் மூளையாகவும் காட்டப்பட்டார். கொலை, கொலை முயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல், ஆயுதங்களைச் சேகரித்து நாட்டிற்கு எதிராகக் குற்றங்களை இழைக்க சதித் திட்டம் தீட்டுதல் என்ற பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமின்றி, அவர் மீது மேலும் பத்து வழக்குகள் ஜோடிக்கப்பட்டன.
குல்சார் அகமது வானி சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் முன்பே, அவர் மீது போடப்பட்டிருந்த மற்ற பத்து வழக்குகளும் பொய் வழக்குகள் என அம்பலமாகி, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. இதிலிருந்தே போலீசின் பித்தலாட்டத்தை அறிவுள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், உ.பி.மாநில உயர்நீதி மன்றமோ வானிக்கு எதிராக இந்து மதவெறி கொண்ட நஞ்சைக் கக்கியது. சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு தவிர, மற்றைய வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்ட தன்னைப் பிணையில் விடக் கோரி அவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அந்நீதிமன்றம், “இத்தகைய நபர்களை விடுவிப்பது சமூகத்தின் நலனுக்கு எதிரானது” எனக் கூறி, பிணை தர மறுத்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் வானி. அவ்வழக்கு விசாரணையின்போது, “11 வழக்குகளில் பத்து வழக்குகளில் விடுதலை செய்யப்பட்ட இந்த நபரை, 16 ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பது அவமானகரமானது” என உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி கேஹார் கடிந்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த வார்த்தைகள் தலைமை நீதிபதியிடமிருந்து அத்துணை எளிதாக வந்துவிடவில்லை.
அவ்விசாரணையின்போது, “ஒரு தனி மனிதனான வானிக்கு, இர்ஷத், அஷ்ரஃப், அப்துல் ஹமீது என்று இத்துணை பெயர்கள் எதற்காக?” என வினவினார் தலைமை நீதிபதி. “அலிகர் பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த ஆராய்ச்சி மாணவனான தனக்கு, இத்துணை பெயர்களைச் சூட்டிய போலீசிடம்தான் அதனை நீங்கள் கேட்க வேண்டும்” என வானி, தனது வழக்குரைஞர் மூலம் அளித்த பதில்தான் நீதிபதிகளின் வாயை அடைத்தது.
இதன் பிறகும்கூட உச்சநீதி மன்றம் வானிக்குப் பிணை வழங்கிவிடவில்லை. “சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை அக்டோபர் 31, 2017-க்குள் முடித்துவிட வேண்டும். அதற்குள் அந்த விசாரணை முடிந்தாலும், முடிவடையாவிட்டாலும், நவம்பர் 1, 2017 அன்று வானியைப் பிணையில் வெளியே விட வேண்டும்” என்ற விநோதமான தீர்ப்பைத்தான் வழங்கியது.
வானி விடுதலையாகியிருக்கலாம். ஆனால், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமையை, கல்வியை, மனநிம்மதியை யாரால் திருப்பித் தர முடியும்? குல்சார் அகமது வானி ஜூலை 2001-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தப் பதினாறு ஆண்டுகளில் சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக வெறும் 20 சாட்சிகள்தான் (மொத்த சாட்சிகள் 96) நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம் வானியைச் சட்டவிரோதமான முறையில் தண்டிப்பது என்பதுதான் நீதிமன்றத்தின், போலீசு அதிகாரிகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கோடு, வானி மீது மேலும் பத்து பொய் வழக்குகளை ஜோடித்தது, போலீசின் காவி புத்தியையும் கிரிமினல் காலித்தனத்தையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.
தீய நோக்கத்தோடு திட்டமிட்டு வானியைக் குற்றவாளியாக்கிய எந்தவொரு போலீசு அதிகாரியும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அந்த அதிகாரிகள் நாட்டு நலன் கருதித்தான் செயல்பட்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கு வேறெந்த தவறான உள்நோக்கமும் கிடையாது என வாக்காலத்து வாங்கி, நீதிமன்றங்களே அதிகாரிகளைக் காப்பாற்றிவிடுகின்றன. போலீசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இந்தச் சட்டபூர்வ பாதுகாப்புதான், அப்பாவி முசுலீம் இளைஞர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி சிறையில் தள்ளும் துணிவையும், அகங்காரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த முப்பது ஆண்டுகளில் இந்த கிரிமினல் போலீசு அதிகாரிகளும், அவர்களுக்கு உடந்தையாக நடந்துகொண்ட நீதிபதிகளும் நாடெங்கும் ஆயிரக்கணக்கான வானிகளின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள்.
சபர்மதி ரயிலில் ஆகஸ்டு 14, 2000 அன்று குண்டு வெடித்தது உண்மை. அந்தக் குண்டு வெடிப்பில் ஒன்பது பயணிகள் இறந்து போனதும் உண்மை. அந்தக் குண்டு வெடிப்பிற்கும் வானிக்கும் தொடர்பில்லை என்பதும் உண்மை. அப்படியென்றால், அந்தச் சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டி நடத்தியது யார்? இந்தக் கேள்விக்குள் நீதிமன்றமும் நுழையவில்லை, போலீசும் அக்கறை கொள்ளவில்லை. இதன் மூலம் அந்தக் குண்டுவெடிப்பில் இறந்து போனவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டுவிட்டது.
இந்த அமைப்பு முறை தோற்றுப் போய்விட்டதையும், தனது குடிமகனுக்கே எதிராகச் செயல்படுவதையும் எடுத்துக்காட்டும் சான்று இது.
விவசாயியை வாழவிடு என்று தமிழகத்தில் பேசக்கூடாது. சீர்காழியில் பொதுக்கூட்டம் நடத்த 10.05.2017, 22.05.2017 மற்றும் 28.05.2017 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக போலீசார் இறுதி நாளில் அனுமதி மறுத்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என நீதிமன்றத்தில் போலீசார் பதில் மனு தாக்கல் செய்தது. ஆனாலும் நாம் போராடி அனுமதி பெற்று ஒரு நாளில் திட்டமிட்டு பொதுக்கூட்டத்தை 17-6-2017 அன்று மாலை நடத்தினோம். இதற்கு முன்னர் போலீஸ் மறுத்ததற்கு காரணம் இந்தக் கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வருமாம். கூட்டம் முடிந்து விட்டது. எந்தப் பிரச்சினையும் வரவில்லை. மாறாக இந்தக் கூட்டம் விவசாயிகளிடையே பெரும் விழிப்புணர்வை உருவாக்கியிருக்கிறது. இதைத்தான் போலிஸ் தடை செய்ய நினைக்கிறதோ?
கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையுரையாற்றினார்
அவரைத் தொடர்ந்து தெற்கு ராஜன் வாய்க்கால் சங்கத்தின், திரு ராமசாமி அவர்கள் பேசுகையில், “இன்று மக்களை பற்றி சிந்திக்காத அரசால் விவசாயி வறுமையால் செத்து மடிகிறான். இயற்கையை வெல்வது மனிதனின் இயல்பு. வெள்ளம் வரும்போது அணை கட்ட வேண்டும். தண்ணீர் பஞ்சம் வருவதற்கு முன்பு அணைக்கட்டி தண்ணீர் சேமிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை 7 நதிகள் வற்றாத ஜீவ நதிகள் தடுப்பணை கட்டியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும். இந்த அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, விவசாயியை வாழ வைக்க வேண்டுமானால் நம்முடைய அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.” என்றார்.
அதற்கடுத்தபடியாக ம.உ.பா.மையத்தின் கடலூர் மாவட்டச் செயலர், வழக்கறிஞர் செந்தில், பேசுகையில் “15, 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் அது உடனடி சாத்தியம். ஆனால் இன்றைய ஜனநாயக’ நாட்டில் அது சாத்தியமில்லை.” என அரசை அம்பலப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர், திரு. சிவபிரகாசம், பேசுகையில் “41 நாட்கள் அய்யாகண்ணு போராட்டம் நடத்தினார் அரசுக்கு மானமிருந்தால் அவர்களை கேட்டிருக்க வேண்டும். விவசாயியை பற்றி யார் பேசினாலும் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்போம். 39 எம்.பி எவனாவது எதிர்ப்பு தெரிவிக்கிறானா? எந்த அதிகாரத்திற்கும் பயப்படாமல் உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட வேண்டும். விவசாயிக்கு இந்த பச்சை துண்டுதான் மிச்சம் அதிகாரி எவனுக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.
அதன் பின்னர் கொள்ளிடம் மேற்கு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு.விசுவநாதன், பேசுகையில் “விவசாயக் கடன், கல்விக்கடன், எதையும் தள்ளுபடி செய்யவில்லை, உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் இருந்தால் போதும் எந்தத்தள்ளுபடியும் எங்களுக்கு வேண்டாம்”. என்றார்.
அவருக்கடுத்தபடியாக தெற்கு ராஜன் வாய்க்கால் சங்கத்தலைவர் திரு காந்தி (எ) புருஷோத்தம்மன், பேசுகையில் “இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டியிருக்கிறார்கள் விவசாயிகள். கட்டிய இன்சூரன்ஸ்க்கு கூட பணத்தை வாங்க முடியவில்லை” என்றார்.
கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. ரவீந்திரன், அவர்கள் பேசுகையில் “கடந்த மன்மோகன் ஆட்சியில் திட்டக்குழுவின் துணைத்தலைவரிடம் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி நான் பேசத்தொடங்கும் போதே “விவசாயிகள் பற்றி பேசாதே, வெளியே போ” என்றார். விவசாயியைப்பற்றி பேசாத திட்டக்குழு யாருக்காக இருக்கிறது. அந்தக்கூட்டம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் செருப்பாலேயே மாண்டேக் சிங்கை அடித்திருப்பேன்”
தமிழக விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலர் திரு நந்தகுமார், பேசுகையில் கட்சி, மதம், சாதி என்று பல்வேறு வகையில் விவசாயிகளை பிரித்து வைத்து இருக்கிறார்கள். விவசாயிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அதை தெரிந்து கொள்ளத்தான் இந்த பொதுக்கூட்டம், மத்திய அரசு கரும்புக்கு 3 வருஷமா விலை சொல்றான். மாநில அரசு ஆதார விலை நிர்ணயிக்கிறான். ஆதாயம் அடைகிறான் முதலாளி. அதிலும் 100 ரூபாயை பிடித்துகொண்டுதான் கொடுக்கிறான். இதுக்காகவா இந்த பிடுங்கிகளை ஆட்சியில உட்கார வைத்தோம்? நம்மை கொள்ளையடித்த இவர்களின் சொத்தையும், ஆட்சியையும் பறிமுதல் செய்யணும் இதற்கு மக்கள் அதிகாரம் தான் வேண்டும்.
பெருமாள் ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு சண்முகம் விவசாயிகள் பிரச்சனை பெரிது, ஆனால் பிரிந்து கிடக்கிறாங்க, பிரிந்து கிடந்த விவசாயிகளை ஒரேமேடையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை மக்கள் அதிகாரம்தாம் செய்திருக்கிறது. எல்லா விவசாயிகளையும் ஊர் ஊரா போய்திரட்டணும். ஆந்திரா, உ.பி. மாதிரி போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிலும் கடனை தள்ளுபடி செய்யணும்.
வெள்ளாற்றுபாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திரு பஞ்சமூர்த்தி அவர்கள் பேசுகையில் வெள்ளாற்று மணல் போராட்டம் என்பதே மக்கள் அதிகாரம் செய்ததுதான் மக்களை ஊர் ஊராக திரட்டினோம். மணல் அள்ளகூடாதுன்னு சொல்லி 2000 பேர் ஆற்றிலே உணவு சமைத்து சாப்பிட்டு படுத்து தூங்கி போராட்டம் நடத்தினோம். மணல் குவாரியை நிறுத்தினோம் அப்போது ஒரு போலிசு எங்களிடம் வந்து எங்கள் ஊரில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னார். வெள்ளாற்று போராட்டம் போல லட்சக்கணக்கில் விவசாயிகளை திரட்டாமல் விவசாயப் பிரச்சனை தீராது.
விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி பேசுகையில் விவசாயிகள் நாட்டின் முதுகு கெலும்பு என்று சொன்ன அரசு உண்டு இன்று விவசாயி முதுகெலும்பை உடைக்கிறான். இந்த மண்தான் நம் உயிர் நம் உடலில் ஓடும் ரத்தம் சதைக்கு காரணம் மண்தான் இதை புரிந்துகொள்ள வேண்டும்., கடலை அழிக்கிறான், மண்ணை அழிக்கிறான் மோடி அரசாங்கம். உழவர்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்
வழக்கறிஞர் வேலு குபேந்திரன், பேசுகையில் விவசாயி இல்லையென்றால், மருத்துவமோ, வழக்கறிஞரோ கிடையாது என்ற கருத்து தான் உண்மை. பேருக்கு போராட்டம் நடத்தினால் வெல்ல முடியாது. காஷ்மீர் ராணுவம் கூறுகிறது, மக்கள் கல்லால் அடித்தால் நாங்களும் திருப்பி கல்லால் அடிப்போம் என்கிறான். பெண்களை மயிரை பிடித்து அடிக்கிறானே நாங்களும் திருப்பி அடிப்போம்.
கரும்பு விவசாய சங்கம் திரு இமயவரம்பன் ஓடுகின்ற ஆற்றை தடுத்து நீரை பயன்படுத்தியது தமிழன் தான். ஆனால் இப்போது பலவருடமாக தண்ணீர் கடலுக்குதான் போகிறது. சர் ஆர்தர் கார்ட்டன் கல்லணை கட்டிய முறை பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தில் 23 நாட்கள் தான் நல்ல மழை இருக்கும் நான்கு லட்சம் விவசாயிகள் நாடு முழுக்க செத்திருக்கிறார்கள்.யாரும் சாகவில்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் சொல்கிறது. இந்த அயோக்கியத்தனத்தை நாம் முறியடிக்க வேண்டும்.
தோழர் காளியப்பன் பேசுகையில் “விவசாயியை வாழவிடு என்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் அனுமதி கொடுப்பதில்லை. 2015-ல் மூடு டாஸ்மாக்கை ! முழக்கத்தை மக்கள் நடைமுறைபடுத்திருக்கிறார்கள். அடுத்து வயலைபற்ற வைத்து விடுவோம் என்று அஞ்சுகிறார்கள். விவசாயிகளை வாழவிடாமல் தடுப்பது யார்? இந்த அரசுதானே? மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயி வருமானம் இரண்டு பங்கு உயர்த்தப்படும் என்றார் மோடி நடந்ததா? அத்தனையும் பொய் வாக்குறுதி, மன்மோகன்சிங், மாண்டேக் சிங் அலுவாலியா திரும்ப, திரும்ப சொன்னார்கள் விவசாயியே விவசாயத்தை விட்டு வெளியே போ . அரசு விவசாயத்தை கை கழுவி விட்டது,. தமிழகத்தில் ஆட்சியே இல்லை, ரவுடிகளும், அதிகாரிகளும் தான் ஆள்கிறார்கள். இந்தியாவின் 70 சதவிகித விவசாயிகள் வறுமை சாவுக்கு தள்ளப்படும் நிலையை தடுக்க வேண்டும்.” அதற்காக தான் இந்த கூட்டம் என்று பேசி முடித்தார்.
மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேசுகையில் நமக்கு ஒரு நாளில் கூட்டம் நடத்த கற்று தந்திருக்கிறார்கள். போலீசு என்பவர்கள் கெட்டவங்க, என்று நாம் சொல்லித்தான் மக்கள் நம்புகிறார்கள் என்றில்லை. மக்களே தங்கள் சொந்த அனுபவத்தில் அறிந்து இருக்கிறார்கள்.அப்படித்தான் விவசாயத்திலும் அரசுதான் விவசாயியை வாழவிடவில்லை என்பதும் விவசாயிகள் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறார்கள். தண்ணீரில் உயிரினங்கள் இருந்தால் அது நல்ல நீர் உயிர் இல்லையென்றால் அது குடிக்க உபயோகமில்லாத நீர். அதுபோல விவசாயி சமூகத்தின் உயிர்நாடி அவனில்லையென்றால் சமூகம் இல்லை விவசாயி தன் சாவின் மூலம் சமூக அழிவை எச்சரிக்கை செய்கிறான்,
3 மாநில விவசாயிகளின் கடனோ ஒரு லட்சம் கோடிக்கு கீழ்தான் வருகிறது. ஆனால் 3 முதலாளிகளுக்கு மட்டும் ஒரு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய எவ்வளவு செலவாகும்னு தெரியாதா? விவசாயியை வாழவிடு என்ற திரும்பி திரும்ப சொல்லி பாருங்கள், பச்சை வயல் பற்றி எரியும். 100 நாள் வேலை திட்டத்தில் ஒதுக்கும் தொகையைவிட விவசாயத்திற்காக ஒதுக்கும் தொகை குறைவு. இப்படி மையமான விஷயங்களில் அரசின் சிண்டை பிடித்து கேட்க வேண்டும்.
நெடுவாசல் போராட்டத்தில் மாணவர்கள் போனா தீவிரவாதினு எந்த சட்டம் சொல்கிறது? அய்யாக்கண்ணுவின் போராட்டத்தை ரசிக்கிறது அரசு. நம் போராட்டத்தை பார்த்தால் அரசு, பதற வேண்டும்
விவசாயி வருட வருமானம் 20000, மாதம் என்றால் 1700-ல் எப்படி வாழமுடியும்? அரசு ஊழியர் கடைநிலை ஊழியர் மாதம் 18000/- சம்பளம் விவசாயிக்கு 1700 என்ன கணக்கு இது. அதிகாரி சொன்னதைத்தான் விவசாயி பயிர் செய்தான், விவசாயி தூக்குல தொங்குறான். அதிகாரி சாகவில்லை. நீர் நிலையை அழிச்சது, இந்த அரசுதான். மதுரை கோர்ட், விழுப்புரம் பஸ் ஸ்டாண்டு எல்லாம் நீர் நிலையில்தான இருக்குது. இந்த அரசு கட்டமைப்பிடம் இந்த ஆட்சியிடம் எப்படி நியாயம் கிடைக்கும்?
விவசாயிகள் தப்பிப்பதற்கு ஒரேவழிதான் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேளுங்கள் கோர்ட்டு சொன்னாலும் டாஸ்மாக் கடைய மூட முடியாது என்ற இந்த அரசிடம் மக்கள் கெஞ்சவில்லை. என் ஊர்ல கடை வைக்கிறதுக்கு நீ யார் என்று அடித்து நொறுக்கியதைப்போல உனக்கு ஆளத் தகுதியில்லை என அறிவிப்போம். விவசாயிகள் மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் சேர்ந்த நம்முடைய வாழ்க்கையை அழித்த இந்த அமைப்பை அடித்து நொறுக்க வேண்டும். அரசு கடன் தள்ளுபடி, ஆதார விலை போன்றவற்றை இந்த அரசு இனிமேலும் செய்யாது. ஏனெனில் இது கார்ப்பரேட் அரசாங்கம். மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் அனைத்து மாநிலங்களிலும் பற்றி எரிகிறது போராட்டம். தமிழகத்தில் பச்சைவயல்கள் பற்றி எரியும். அப்போது இந்த அரசு கட்டமைப்பின் மாயை எரிந்து சாம்பலாகும்.
நிகழ்ச்சியின் இடையிடையே ம.க.இ.க பாடல்கள் பாடப்பட்டன.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், சீர்காழி, தொடர்பு எண்- 98434 80587
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க அரசால் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களில் 14.6.17 அன்று மாலை 5:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
மக்கள் அதிகாரம் தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில், எப்படி இந்திய விவசாயமும், விவசாயிகளும் படுகுழிக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும், உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளின் இலாபவெறிக்காக விவசாயம் அழிக்கப்பட்டு மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மேலும், மோடி அரசு எந்த அளவுக்கு முட்டாள்தனமாகவும், கொடூரமாகவும் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தோடு செயல்படுகிறது, என்பதை எளிமையாக உணர்த்தும் வகையில் பேசினார். இறுதியாக, எப்படி விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் சீரழிந்து மக்களுக்கு எதிரானதாக உள்ளது என்று கூறி, ஒரே மாற்று மக்கள் அதிகாரமே என்பதைக் கூறி முடித்தார். தோழர். சரவணன் நன்றி கூறினார்.
நூற்றுக் கணக்கான மக்கள் சுற்றிலும் நின்று ஆர்வமாக பேச்சைக் கவனித்தனர்.
நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவராஜபூபதி தலைமை தாங்கினார். முதலில் பேசிய குமரி மாவட்ட பாசனசபை தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் புலவர் செல்லப்பா டாஸ்மாக் போராட்டம் பற்றியும், அதில் எப்படி மக்கள் போராடினர் என்பதைப் பற்றியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்து பேசிய பூமி பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு பத்மதாஸ் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கிப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நெல்லை அமைப்பாளர் தோழர் சிவா, விவசாயப் பிரச்சினைக்கு அதிகாரத்தைக் கையில் எடுப்பதே தீர்வு என்பதைவலியுறுத்தும் விதமாகப்பேசினார்.
குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் திரு வின்ஸ் ஆண்ட்டோ விவசாயிகள் எப்படிபோராட வேண்டும் என்பதற்கு மத்தியபிரதேச விவசாயிகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பேசினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், திருச்சி வழக்கறிஞர் காவிரிநாடன் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்கு நம் விவசாயிகள் கொல்லப் படுவதையும், விவசாயம் அழிக்கப்படுவதையும், அதற்கேற்ப மாட்டுக்கறிதடை உள்ளிட்ட உத்தரவுகள் போடப்பட்டு அதிகாரத் திமிரோடும், கார்ப்பரேட் அடிமையாகவும் மோடி அரசு செயல்படுவதையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
இறுதியாக மக்கள் அதிகாரம், நாகர்கோவில் பகுதி தோழர் வனிதா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பரவலாக பெண்கள் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரமே தீர்வு என்பதை வலியுறுத்தி எழுப்பப்பட்ட முழக்கங்களும், உரைகளும் மக்களிடையே பரவலாக கவனத்தைப்பெற்றன.
கோவில்பட்டியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். முதலில் பேசிய கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் ஜெயேந்திரன், இன்று விவசாயம் திட்டமிட்டு அரசால் அழிக்கப்படும் சூழலில், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளோடு இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பேசினார்.
அடுத்து கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்ட செயலாளர், தோழர் லயனல் அந்தோணிராஜ் அரசு விவசாயிகளுக்கு எதிரானதாகவும், கார்ப்பரேட்டுகளின் தரகனாகவும் மாறிப் போனதையும், ஒரே தீர்வு மக்கள் அதிகாரமே என்பதை நிறுவும் வகையிலும் உரையாற்றினார்.
இறுதியாக தோழர் பொன்ராஜ் நன்றியுரையாற்றினார். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்து, பிரசுரத்தை ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.
( படங்கலைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )