Saturday, July 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 529

முதலாளிகள் பணமூட்டையை நிரப்பும் மோடி ! கேலிச்சித்திரம்

2
Adani loan slider

குயின்ஸ்லாண்டில் தொழில் துவங்க அதானிக்கு 6000 கோடி கடன் – பாரத ஸ்டேட் வங்கி

Adani loan water mark

பார்த்துக்கங்க… கருப்புப் பணத்தை ஒழிக்கிறதுல இதெல்லாம் முக்கியமான நடவடிக்கையாக்கும்…

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

 

கவலைப்படாதீர்கள் மக்களை வரிசையில் நிற்க வைத்து கொன்றாவது உங்கள் பண மூட்டைகளை நிரப்புவோம் !

Demonetization

கேலிச்சித்திரம் நன்றி : Rebel politik

இணையுங்கள்:

கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் ராஜா !

10
Tughlaq modi

வம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, மத்தியப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் ரேஷன் கடை ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. நாடு முழுவதும் மக்கள் வங்கிகளிலும் ஏடிஎம்-களிலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கக் தொடங்கினர். இன்னும் சில வங்கிகளிலும் ஏடிஎம்-களில் கைகலப்பும் தாக்குதல்களும் ஏற்பட்டன. பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு உணவு வாங்க முடியாமல் பரிதவித்தனர். நோயாளிகள் தங்களது மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் அல்லாடினர். விவசாயிகள் தங்களது தானியங்களை விற்கவும் வாங்கவும் முடியாமல் தவித்தனர். பிரதமர் மோடியின் ரூபாய் 500, 1000 நோட்டுகளின் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு மக்கள் சந்தித்த அவலங்களின் மிகச்சில உதாரணங்களே மேலே கூறியவை. மோடியின் இந்த நடவடிக்கையை சிலர் துக்ளக் மன்னரோடு ஒப்பிட்டு ‘துக்ளக் தர்பார்’ என்று விமர்சிக்கின்றனர்.

Tughlaq_1
முகமது பின் துக்ளக்

முகமது பின் துக்ளக் என்பவர் 14ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் ஆவார். இவரது ஆட்சியில் தலைநகராக இருந்த டெல்லியை மாற்றிவிட்டு புதிய தலைநகராக தெளலதாபாத் எனப்படும் தற்போதைய மகாராஷ்டிராவை அறிவித்தார். இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களை நிலைகுலையச் செய்தது. எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாத இந்த முடிவால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். அது துக்ளக் மன்னருக்கு சர்வாதிகாரி என்ற பெயரை பெற்றுத் தந்தது. பேரழிவில் முடியக்கூடிய, இதுபோன்ற துக்ளக்கின் அறிவிப்புகள் இதோடு முடியவில்லை. துக்ளக் மன்னன் தனது சாம்ராஜ்ஜியத்தில் அதன் பின்னரும் இதுபோன்ற திடீர் நகர்வுகளை ஏற்படுத்தினார்.

சர்வாதிகாரத்தன்மையோடு எடுக்கப்பட்ட இவரது மற்றொரு முடிவு, இன்றளவும் வரலாற்று பேரழிவாக கருதப்படுகிறது. மோடியைப் போலவே துக்ளக் மன்னரும் நாணய விவகாரத்தில் எடுத்த முடிவு பெரும் தோல்வியைச் சந்தித்தது. அது, அவரது தலைமையிலான சுல்தானிய அரசுக்கு மிகப்பெரும் பலவீனமாக அமைந்தது.

பண மதிப்பிழப்பு தொடர்பான இந்த அறிவிப்பின்மூலம், தற்போது இந்தியாவில் எழுந்திருக்கும் சிக்கல்களும் குழப்பங்களும் நவீன நாணய அமைப்பின் மீதான நம்பகத்தன்மை உடைவதற்கான அறிகுறியே ஆகும். மிகப் பெரிய செல்வமாகக் கருதப்பட்ட ஒன்று, தற்போது வெறும் காகிதமாக பார்க்கப்படுகிறது. நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்த வெறும் காகிதங்கள் என்றும், தற்போது வழங்கப்படுகிற நவீன ரூபாய் நோட்டுகள் மட்டுமே மதிப்பு உள்ளவை என்றும் ஒரு ஏகாதிபத்திய அரசு சொல்வதைத்தான் தற்போதைய பகிரங்க அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.

முதலில் பண்டமாற்று முறை இருந்தது. அதன் பிறகு, நாணயங்களை பயன்படுத்தத் தொடங்கியபோது நாணயங்கள் பெரும்பாலும் தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களால் செய்யப்பட்டவையாகவே இருந்தன. அப்போது புழங்கிய நாணயங்கள் தன்னளவிலே ஒரு விலை மதிப்புள்ள உலோகமாக இருந்த காரணத்தால், அந்த நாணய அமைப்பு முறை நிலையான, ஸ்திரமான முறையாக இருந்தது. எனினும், விலைமதிப்பற்ற உலோகங்களின் பற்றாக்குறையால் அந்த நாணய அமைப்பு முறை நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஏழாம் நூற்றாண்டில், புதிய நவீன காகிதப் பணத்தை சீனா அறிமுகம் செய்தது. அதன்படி தங்கம், வெள்ளி, பட்டு போன்றவற்றுக்கு ஈடாக இந்த ரூபாய் நோட்டுகளை பிரதியாகக் கொடுத்துவிட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இந்த புதிய பண அமைப்பு முறையின் தீவிரம் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் இந்த முறையைப் பின்பற்ற 1000 ஆண்டுகள் ஆனது. சீனாவின் இந்த புதிய பணப்பரிமாற்ற முறையை மேலைநாடுகள் பின்பற்றுவதற்கு முன்னரே இந்தியாவில் செயல்படுத்தி நிர்வகித்தது துக்ளக் மன்னன்தான்.

துக்ளக் மன்னன், டெல்லியின் சுல்தான் என்ற முறையில் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பான்மை வடக்குப் பகுதிகளை ஆட்சி செய்தார். துக்ளக் மன்னன் 1329ஆம் ஆண்டு தெளலதாபாத்தை தலைநகரமாக அறிவித்த பின்னர், டோக்கேன் (அ) பிரதி ரூபாய் (representative money) என்ற பண அமைப்பு முறையை அறிமுகப்படுத்தினார். செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட இந்த நாணயங்களை குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் வெள்ளிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. டாங்கா என்றழைக்கப்பட்ட இந்த புதிய வகை நாணயங்கள், சுல்தானிய போர் நடவடிக்கைகளுக்கான நிதிப் பயன்பாட்டை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆனால் அது, இந்திய துணைக்கண்டத்தை மிகப்பெரும் ஆபத்தில் ஆழ்த்தியது.

Painting of Tughlaq
துக்ளக் அரசவை ஓவியம்

துக்ளக் மன்னன் தனது ஆட்சியில் இந்த புதிய பணப்பரிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அது மக்களிடம் சிறிதும் அறிமுகமில்லாத திட்டமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், எதிர்கொள்வதற்கு பல சிரமங்களை உடையதாகவும் இருந்தது. அப்போதுவரை இந்த புதிய திட்டத்தைச் சீனாவுக்கு வெளியே ஒரே ஒரு மன்னர் மட்டுமே நடைமுறைப்படுத்தியிருந்தார். 13ஆம் நூற்றாண்டின் பாரசீக மன்னராக இருந்த கேய்கது (Gaykhatu) என்பவர்தான் அவர். அவர், இந்தத் திட்டத்தை அமல்படுத்திய பின்னர் அதன் அறிமுகமின்மை மற்றும் நடைமுறைச் சாத்தியத்தில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்கள் காரணமாக, அறிமுகப்படுத்திய எட்டு நாட்களுக்குள் அவர் அதை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர், மிகச்சில நாட்களுக்குள்ளாகவே அவர் படுகொலை செய்யப்பட்டது வேறு கதை.

இப்படியான சிக்கல்களும் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்களையும் கொண்ட இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்ற துக்ளக் மன்னர் அதை செயல்படுத்துவதில் தோல்வியைச் சந்தித்தார். பெயரளவில் நல்ல திட்டமாக தோன்றினாலும் இதில் மிகப்பெரிய ஒரு குறை இருந்ததே அதற்குக் காரணம். இதுபோன்ற பிரதி நாணயத்தில் எளிதாக போலிகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருந்ததே அதற்குக் காரணம். உண்மையில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களை மாற்றிக்கொள்வது போன்ற சிலவற்றில், இந்த பண முறை உதவிகரமாக இருந்தபோதும், போலி நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற அபாயகரமான சில குறைகளையும் இந்தத் திட்டம் தன்னகத்தே கொண்டிருந்தது.

அதன் காரணமாக அரசாங்கம், ரூபாய் நோட்டுத் தயாரிப்பில் புதிய உத்திகளை கையாளத் தொடங்கியது. அதன்படி, போலி நாணயத் தயாரிப்பை தடுக்கவும், பாதுகாப்பு நோக்கத்துக்காகவும் பிரத்யேகமான பல அடையாளங்களைக் கொண்ட ரூபாய் நாணயங்கள் அச்சிடத் தொடங்கியது. எனினும், மோசமான திட்டமிடல் காரணமாக புதிய நாணயங்களில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களையும் சேர்க்க நேரமில்லாமல் போனது. அந்தவகையில், புதிய நாணய அச்சிடல் விவகாரத்தில் முதலில் சொதப்பியது மோடிதான் என்று சொல்ல முடியாமல் போனது மட்டும் மோடிக்கு ஆறுதலான ஒரே விஷயம்.

Tughlaq coin
துக்ளக் அறிமுகப்படுத்திய் நாணயம்

துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயமானது, போலிகள் தயாரிக்க முடியாதளவுக்கு பாதுகாப்பான அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. அது கறுப்புப் பணம் புழங்குவதற்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் விளைவாக, பல்வேறு மோசடிகள் நடந்து உயர் பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. அதன் பின்னர், டாங்கா எனப்படும் துக்ளக் அறிமுகப்படுத்திய நாணயம் மதிப்பிழந்து போனது.

இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடுகட்டுவதற்கு துக்ளக் தலைமையிலான அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. டாங்கா நாணயங்களை வைத்திருப்பவர்கள் நியாயமான முறையில் அவரது நாணயங்களை கொடுத்துவிட்டு அதற்கு நிகரான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது. அதிலும் ஒரு குளறுபடி நடந்தது. ஏராளமான போலி நாணயங்கள் புழங்கியதால் சரியான முறையில் இந்தப் பரிமாற்றத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆனது. அதில் நிராகரிக்கப்பட்ட செம்பு டாங்கா நாணயங்கள் தெளலதாபாத் கோட்டை முன்பு மலைபோல் குவிந்து கிடந்தன.

அப்போது ஏற்பட்ட நாணய குளறுபடிகள் கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தின. துக்ளக் மன்னனின் ஆட்சி கவிழ்ந்ததற்கும் அது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. 1351இல் துக்ளக் இறந்த பிறகு, அவரது ராஜ்யத்தின் முக்கியப் பகுதிகளான வங்காளம் மற்றும் டெக்கான் போன்றவை சுல்தானிய அரசிடமிருந்து தாமாகவே தம்மை விடுவித்துக் கொண்டன. அதன்பின்னர், சுல்தானம் எனப்படும் இஸ்லாமிய அரசின் ஆளுகைக்குட்பட்ட பகுதி டெல்லியின் ஒரு சிறிய பகுதியாகவும், தற்போதைய உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளாகவும் சுருங்கின.

நன்றி: scroll.in
ஆசிரியர் : ஷோயாப் டானியல்
தமிழில்: பீட்டர் ரெமிஜியஸ், நன்றி:

மோடியின் முடிவை காறி உமிழும் வெளிநாட்டு பத்திரிக்கைகள் !

38
Photo Shop modi
80% மக்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்திய மோடிஜி.

ன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரை “அண்டர் அச்சிவர்” – திறன் குறைந்தவர் – என அட்டைபடத்தில் செய்தி வெளியிட்டது அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை. அப்போது 56 இன்ச் மார்புடைய அண்டர் டேக்கராக – மல்யுத்த பயில்வான் – மோடியைக் காட்டிய பாஜகவினர்  தற்போது கிளிசரின் கண்ணீர் பிதுக்கும் அவரைக் காப்பாற்ற படாதபாடுபடுகின்றனர். ஃபோட்டோ ஷாப் உபயமாக மோடியை ஒபாமா பாரட்டுகிறார், புடின் வாழ்த்துகிறார், தெரசா வியக்கிறார் என்று அடித்து விட்டதெல்லாம் இப்போது எடுபடவில்லை.

Photo Shop modi
போட்டோ ஷாப்பால் -கருப்புப் பண ஒழிப்பு காவலரான மோடிஜி!

வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்ற வடிவேலு தத்துவத்தின்படிதான் சங்க பரிவாரத்தினர் மோடிக்கு சர்வதேச ஆதரவு வெளுத்துக் கட்டுகிறது என்று கதையளந்தனர். ஆனால் உண்மை அப்படியில்லை.

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வந்த அறிவிப்பையொட்டி பல வெளிநாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்த விமர்சனங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 19.11.16 அன்று வெளியிட்டது. இப்பத்திரிகைகள் அனைத்தும் மோடியின் அறிவிப்பை முட்டாள்தனமென்று காறித்துப்பியிருக்கின்றன. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பத்திரிகைகள் மட்டுமல்ல, பா.ஜ.கவின் பாசத்திற்குரிய பாகிஸ்தான் பத்திரிகையும் உண்டு. அதன் சாரத்தைப் பார்ப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி நவம்பர் 2016 இரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, அதற்கு மாற்றாக புதிய 500, 2000 நோட்டுகள் வெளிவரும், கருப்புப் பணத்தை மீட்பதே இதன் இலக்கு என அறிவித்தார். மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை வரும் டிசம்பர் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

இதை ஆரம்பத்தில் பலர் வரவேற்றிருந்தாலும் பிறகு நாடு முழுக்க லட்சக் கணக்கானோர் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நீண்ட வரிசையில் ரொக்க பணத்துக்காக தற்போது காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமண காலமென்றாலும் ரொக்கப் பணமில்லாமல் திருமண ஏற்பாடுகள் தடைபட்டுள்ளன. தினக் கூலியாக வேலை செய்பவர்கள் பலர் வங்கிகளில் காத்திருப்பதால் தங்கள் வேலை வாய்புகளை இழந்துள்ளனர். மருத்துவ செலவுகள் மற்றும் அடிப்படையான செலவுகள் செய்ய முடியாமல் சிலர் இறந்தும் போயுள்ளனர்.

இந்த நிலைமைகளைப் பற்றி பல்வேறு வெளிநாட்டு பத்திரிக்கைகள் என்ன சொல்லுகின்றன?

தி கார்டியன் – The Guardian:

செல்வந்தர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது ஊழல் பணத்தையெல்லாம் தங்கமாகவும், பங்குகளாகவும், ரியல் எஸ்டேட் துறையிலும் மாற்றிவிட்டனர். ஆனால் 120 கோடி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் ஏழைகள்தான் இந்த நடவடிக்கையால் இழந்துள்ளனர். அவர்களில் பலருக்கு வங்கி கணக்குகளே இல்லை. மணிக்கணக்கில் வங்கிகளில் நிற்பதன் மூலம் அவர்களின் கூலியும், வேலைக்கான நேரமும் கணிசமாக இழக்கப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் சில பத்து உயிர்களும் பலி வாங்கப்பட்டுள்ளன. அரசோ இன்னும் சில வாரங்களின் ATM Queueபிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகிறது.

மோடியின் இந்த திட்டமானது ஏற்கனவே பல நாடுகளில் சர்வாதிகாரத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு,  விலைவாசியை உயர்த்தி, பணத்தை சீர்குலைத்து, பெரும் மக்கள் எதிர்ப்பில் தோல்வியடைந்த ஒன்று. அது மட்டுமல்ல பல நாடுகளில் பணச் சரிவையும், கலகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஊழலுக்கு முடிவு கட்டுவேன் எனக் கூறியிருந்த மோடி அதனை பழைய வரி வசூலிக்கும் முறைகளை சீர்திருத்தியிருந்தாலே செய்து இருக்க முடியும்.

தி நியூயார்க் டைம்ஸ்The New York Times:

இந்தியாவை பொருத்தவரை பணம் தான் ராஜா. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 20 முதல் 25 சதவீதமாக உள்ள நேரடி பணப் பரிவர்த்தனை இந்தியாவில் கிட்டத்தட்ட 78 சதவீதமாக உள்ளது. அதே போல இந்தியாவில் பலரிடம் வங்கிக் கணக்கு கிடையாது. அதனால் அவர்களின் வியாபாரங்கள் நேரடிப் பணம் தவிர்த்த வேறுவழிகளில் (கடன் அட்டை, வங்கி அட்டை மூலம்) செய்யவும் வாய்ப்பில்லை.

இது போன்ற திட்டத்தை அறிவிக்கும் முன்னர் போதுமான முன் ஏற்பாடுகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் நிற்கும் நிலை, பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது.

புளூம்பெர்க் Bloomberg :

பார்ப்பதற்க்கு ஆரம்பத்தில்  மோடி அவர்களின் திறன்மிகுந்த செயலாகக் காணப்பட்ட ஒன்று தற்போது ஏன் தப்புக் கணக்காக மாறியுள்ளது… ஒரே வாரத்தில் எது இப்படி நிலைமையை தலைகீழாக மாற்றியது?

ஒருவிசயம் தெரிகிறது புழக்கத்தில் இருக்கும் 86 சதவீத நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் ஒரு மொக்கை தைரியத்தில் தான் முடிவெடுத்திருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கியோ போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடியாமல் திணறுகிறது. மேலும் புதிய நோட்டுக்கள், இயங்கிக் கொண்டிருந்த ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பொருந்தும் வடிவத்திலும் இல்லை.

இந்த சிக்கல்களை எல்லாம் மோடி அவர்கள் 50- நாள்களில் சரி செய்துவிடலாம். பொருத்துக் கொள்ளுங்கள் என்கிறார். உண்மையில் இப்பிரச்சினைகளைச் சரி செய்ய குறைந்தது 4-மாதங்கள் வரை ஆகலாம்.

சில கிராமங்களுக்கு மட்டுமதான் ஏ.டி.எம் வசதி இருக்கின்றனது. பலர் வங்கிகளின் வாசலில்தான் நிற்க வேண்டியிருப்பதால் தங்களது வேலை வாய்ப்புகளை இத்தகைய பிரச்சினைக்குரிய நாட்களில் இழக்கின்றனர். பல இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகள் இல்லை.

இந்நிலையில் இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ எத்தனை 1000 ரூபாய் நோட்டுக்கள் எழைகளிடம் இருக்கப் போகிறது என கணிப்புடன் கேட்கிறார். கேள்வி தருக்கபூர்வமாக இருந்தாலும் எதார்த்தம் அப்படியில்லை. இந்தச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் வீழ்வதற்கு முன்பாக இப் பிரச்சினைகளை சரி செய்ய யாராவது முயல வேண்டும்.

ஹெரால்டு Herald:

எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு. ஆனால் அந்த உறுதியானது இந்தியாவில் உடைக்கப் பட்டிருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றனர். ரொக்கம் காலியாகி வங்கிகளும் விரைவிலேயே மூடப்படுகின்றன.

indian currency 500 note
எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு

அரசை அதிதீவிரமாக ஆதரிக்கும் சிலர் இந்த அறிவிப்பை எகத்தாளமாக ஆதரிப்பதோடு சில வாதங்களையும் முன் வைக்கின்றனர். அதாவது அதிக மதிப்புள்ள 1000, 500 நோட்டுக்கள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டதால் கருப்புப் பணத்தை கண்பிடிக்க முடியுமாம். இந்த அறிவிப்பு ரகசியமாக காப்பாற்றப்பட்டு வெளியிட்டதால் கருப்புப் பண முதலைகள் தங்கள் பணத்தை வேறு வழிகளில் மாற்றுவதர்கான அவகாசம் மறுக்கப்பட்டுள்ளது. எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கருப்புப் பண முதலைகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு கிடைத்த போதுமான நேரத்திலேயே அவற்றை வேறு வழிகளில்பதுக்கி இருப்பதால் தற்போது அவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? ” எனக் கேட்கிறது பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் இப்பத்திரிக்கை.

நன்றி : indianexpres
What foreign media thinks about PM Narendra Modi’s demonetisation move
தமிழாக்கம்: ராஜாமணி

கிராமங்கள் – சிறு நிறுவனங்களில் வங்கி பரிவர்த்தனை – ஒரு பார்வை

0

பண மதிப்பைக் குறைத்தல் விளைவு: பண நெருக்கடி தொடர்வதால் வங்கிச் சேவையற்ற கிராமங்கள், சிறு வணிகங்கள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன

கிராம மற்றும் நகரங்களில் ஏ.டி.எம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகளின் சமநிலையற்றப் பரவல் இந்திய கிராமப்புறப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளை அழித்திருக்கிறது. இதனால் நுண், சிறு, குறு நிறுவனங்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் தடுமாறுகின்றன.

india-agriculture-economyஇந்தப் புள்ளிவிவரத்தைக் கவனியுங்கள். கிராமப்புற மற்றும் சிறுநகர மையங்களில் உள்ள ஒவ்வொரு வங்கிக் கிளையும் நகர்ப்புற – பெருநகரங்களில் இருக்கும் மக்களை விட இரண்டு மடங்கு மக்களுக்கு உதவுகிறது. கிராமம் மற்றும் சிறு நகரங்களில் உள்ள ஒரு வங்கிக்கிளை 12,863 மக்களுக்கு உதவுகிறது. இதுவே நகர மற்றும் பெருநகரங்களில் உள்ள ஒரு வங்கிக்கிளை 5,351 மக்களுக்கு மட்டுமே உதவுகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் டிசம்பர் – 2015 மாத “இந்தியாவின் நிதி சேர்க்கை” ( financial inclusion in India) என்ற அறிக்கைக் கூறுகிறது.

ஏ.டி.எம் இயந்திரங்களின் பரவலும் கூட நகரங்களுக்கு ஆதரவாக தான் வளைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக டெல்லியில் 9,070 ஏ.டி.எம் இயந்திரங்களும் அதனை விடப் பெரிய மாநிலமான இராஜஸ்தானில் அதை விடக் குறைவான ஏ.டி.எம் இயந்திரங்களுமே இருக்கின்றன.

இப்போது நுண், சிறு குறு நிறுவனங்களின்(MSMEs micro, small and medium enterprises) பரவலைப் பார்க்கலாம். இந்திய கிராமப்புறங்களில் பதிவு செய்யப்படாத 200.18 இலட்சம் நிறுவனங்களும், நகர்ப்புறங்களில் 161.58 இலட்சம் நிறுவனங்களும் உள்ளன. ஒட்டுமொத்த இந்தியாவில் கிராமப்புற நிறுவனங்களின் பங்கு மட்டும் 55% ஆகும். கடைசியாக கிடைத்த 2006-07 ஆம் ஆண்டிற்கான நுண், சிறு, குறு நிறுவனங்களின் கணக்கெடுப்பு இதைத் தெரிவிக்கிறது. மாவட்டத் தொழிற்துறை மையங்களில் MSMEs தாக்கல் செய்த தொழில் முனைவோர்கள் குறிப்பாணையில் 2007-08 முதல் 2014-2015 வரைத் தொகுத்தளிக்கப்பட்டத் தகவலின் படி 22.10 இலட்சம் புதிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிராமப்புற நிறுவனங்களா இல்லை நகர்ப்புற நிறுவனங்களா என்று அது கூறவில்லை. ஆனால் இது சமமானப் பரவலாக இருந்தாலும் கூட அதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

நாக்பூரைச் சேர்ந்த தொழில் முனைவோரான அபிதாப் மெஸ்ராம் அரசுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மொத்தமாக குடிநீரை வழங்குகிறார். நகரத்திற்குள் குடிநீரை வழங்கச் செல்லும் வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வாரக் கூலிக் கொடுப்பதற்குக் கூடச் சிரமமாக இருக்கிறது என்கிறார். “என்னிடம் வேறொரு வேளாண் சார்ந்த தொழிலுள்ளது. ஆனால் பணமில்லாமல் பூண்டு வெங்காயம் போன்ற பொருட்களை பெரிய அளவில் மண்டிகள் வழங்காது”.

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், 10 இலட்சத்திற்கும் அதிகமான நுண் மற்றும் சிறு நிறுவனங்கள் இருக்கின்றன. ”ஒரு ஒன்றரை மாதத்திற்கு உற்பத்தியேதும் இருக்காது. சென்னையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் 2015 வெள்ளச்சேதத்தில் இருந்தே இன்னும் மீண்டெழவில்லை. நாங்கள் விற்பனை எதுவும் செய்ய மாட்டோம் என்பது உறுதியாக இருந்தாலும் வங்கிகள் பழைய கடன்களுக்கான மாதத் தவணையை வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும் என்பது அதை விட உறுதி” என்கிறார் தமிழ்நாடு சிறு மற்றும் நுண் நிறுவனங்கள் அமைப்பின் தலைவர் சி.பாபு. இந்த அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் 1.5 கோடிக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.

farmers-protest-759“பற்றாக்குறையான வங்கிக்கிளைகள் தான் சிறு வணிகத்தில் பணப்புழக்கத்திற்கான ஆதிக்கத்திற்கு ஒரு இன்றியமையாதக் காரணமாகும். பெரும்பான்மையான வங்கிகள் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்தியக் கிராமப்புறங்களில் வங்கிப்பணிகளை ஒரு சுமையாகவே மக்கள் கருதுகின்றனர்” என்கிறார் நுண் சிறு குறு நிறுவனங்கள் கூட்டமைப்பின்(Fisme) பொதுச் செயலாளர் அணில் பரத்வாஜ். “நிறுவனம் சிறிதாக இருந்தால் பிரச்சினைப் பெரிதாக இருக்கும். உற்பத்தியின் கூடுதல் மதிப்பு மேற்கொண்டு உயராமல் நின்று விட்டதாக இடை நிகழ்ச்சி அறிக்கைகள்(Anecdotal reports) அறிவுறுத்துகின்றன” என்று அவர் கூறுகிறார்.

2001-2015 ஆண்டுகளுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி நகர மற்றும் பெருநகரங்களில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 20,713 லிருந்து 43,716 என இரண்டு மடங்கிற்கும் மேலாக எகிறிவிட்டது. அதேக் காலக்கட்டத்தில் கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 44,905 லிருந்து 82,358 ஆக அதிகரித்திருந்தாலும் நகர்ப்புற அளவிற்கு வேகமாக இல்லை. 2015 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கிராமப்புற மக்களுக்கு 7.8 கிளைகளே இருந்தன. ஆனால் இந்திய நகர்ப்புறங்களில் வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் மக்களுக்கு 18.7 ஆக இருப்பது பரத்வாஜின் கூற்றை மெய்ப்பிக்கிறது.

கணக்கில் வராத பணம் மற்றும் கருப்புப் பணத்திற்கு இடையேயான பாரிய வேறுபாடு காணாமல் போனது தான் மிகப் பெரியப் பிரச்சினை என்கிறார் நுண் சிறு குறு நிறுவனக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் வி.கே.அகர்வால். தவறான நடவடிக்கையினால் வரும் பணம் தீங்கானது தான். ஆனால் சிறு வணிகத்தில் புழங்கும் பணமானது பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலுவை மட்டுமேச் சேர்க்கிறது” என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவில் பெரும்பாலான MSMEs நிறுவனங்களின் விற்றுமுதலே சில இலட்சங்கள் தான். இதில் நடுத்தர அளவு நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் 1% கூடக் கிடையாது. அகர்வாலுடைய நடுத்தர அளவு நிறுவனமான ஷாஷி கேபிள்ஸ் லிமிடெட் கம்பிவட கடத்திகளைத் தயாரிக்கிறது. இணையத்தில் RTGS வசதியை பயன்படுத்துவதால் தான் பாதிக்கப்படவில்லை என்கிறார் அவர். அதுமட்டுமல்லாமல் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் செலுத்தவும் அவரிடம் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

“நடுத்தர அளவு நிறுவனங்களால் பணப்பற்றாக்குறையை எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் பெரும்பாலான சிறு குறு நிறுவனங்கள் தனி மனிதர்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள் பயங்கரமான நிலையில் இருக்கின்றனர்” என்று அகர்வால் கூறுகிறார். இதுவரையில் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று கூறுவது கடினம் என்றாலும் பொருளாதார நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று MSME லிருப்பவர்கள் கூறுகிறார்கள்.

“MSME ஒரு பலபடித்தான துறையாகும். அமைப்புச்சாரா MSME பிரிவில் ஏற்படும் தொழில் முடக்கத்தை உணர நீண்ட நாட்கள் ஆகும். அதை உணரும் போது நேரம் கடந்து விடும்” என்று பரத்வாஜ் கூறுகிறார். இந்தத் துறை பணமில்லாப் பொருளாதாரத்தை வரவேற்றாலும் அதற்கு நேரம் வேண்டும். “ஒன்றிரண்டு வாரங்களில் நீங்கள் எப்படி பேடிம்(Paytm)மிற்கு மாற முடியும்? இதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும்” என்கிறார் அவர்.

“இணையப் பரிமாற்றத்தை சிறுதொழில் துறைக் உறுதியாக கைக்கொள்ளும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். ஆனால் இது ஒருப் படிப்படியான செயல்பாடாகும். வணிகத்தில் உருவாகும் பணமானது ஒழுங்கற்றது அல்ல என்பதை ஒப்புக் கொள்வதும் இன்றியமையாததாகும். சில பிரச்சினைகளை ஓரளவிற்கு மேல் ஒரு அமைப்பை முடமாக்கி அதன் விளைவைச் சிதைக்கும் அளவிற்கு திணிக்க முடியாது.” என்கிறார் அகர்வால்.

செல்லாததாய் ஆக்கியது ரொக்கத்தை அல்ல வர்க்கத்தை !

3
Modi

கருப்பு பணத்தை ஒழிக்க  மோடி வருகிறார்
கடுகு
டப்பியை  மறைத்துவை!

அரசு சொல்லும்
அனைத்து செல்லும் அடையாளங்களுடனும்
கையில் இருக்கிறது நோட்டு…

கொண்டு போனால்
‘காந்தியின் நோக்குநிலை’ மட்டுமல்ல
கடைக்காரரின் நோக்குநிலையும்
மாறுபடுகிறது.

‘வேற்று கிரகத்துக்கு
அனுப்பிய விண்கலம்’
இருக்கும் நோட்டை
சொந்த கிரகத்தில்
அனுப்ப முடியவில்லை.

‘சாய்த்துப் பார்த்தால்
பச்சையிலிருந்து நீலமாக மாறும்’
நோட்டை,
சாயங்காலம் நேராக
கீரைக்கட்டு அம்மாவிடம்
நீட்டினால்
‘பச்சையாக’ மாற மறுக்கிறது.

‘இடப்பக்கத்திலிருந்து
‍பெரிதாகிக்கொண்டே
போகும் எண்கள்’
கடைப்பக்கத்தில் போனால்
தடைபட்டு
பாக்கெட்டில் சுருங்கி விடுகிறது.

‘வலப்பக்கத்து
தேவநாகரி எண்களை’
வளைத்து வளைத்துக் காட்டினாலும்
தட்சணைப் போக
மீதம் தர தயாரில்லை
கோயில் குருக்கள்!

‘தூய்மை இந்தியா சின்னம்
மற்றும் வசனத்தை’
தூக்கி தூக்கி காட்டினாலும்
‘தூய்மையா…. நீயே வச்சிக்க!’
என ரேசன் இந்தியா துரத்துகிறது.

‘ரிசர்வ் வங்கி ஆளுநரின்
உத்திரவாதக் கையெழுத்தைக்’
காட்டினாலும்
ஒத்துக் கொண்டு சில்லறைத் தர
ஒரு பிச்சைக்காரும் தயராயில்லை…

“ஏத்திவிடப்பா
தூக்கிவிடப்பா
இரண்டாயிரத்தை
மாத்திவிடப்பா”…
வேண்டுவது
அய்யப்ப சாமிகள் அல்ல
அன்றாடம்
வங்கிக்கு
இருமுடி கட்டி
வரிசையில் நிற்கும்
அன்றாடம் காய்ச்சிகள்!

எழுந்ததும் போய்
வரிசையில் நின்று
காலைக் கடனை அடக்கி
கை, கால் உழைப்பை முடிக்கி
‍செல்லாத நோட்டை
கொடுத்தது
‘இல்லாத’ நோட்டை
வாங்கத்தானா?

அய்நூறுக்கு
பெட்ரோல் போட்டு,
ஆயிரத்துக்கு சாப்பிட்டு,
இரண்டாயிரத்துக்கு
செருப்பு வாங்கினால்தான்
இந்த நோட்டு
செல்லும் என்றால்
உண்மையில்
மோடி
செல்லாததாய் ஆக்கியது
ரொக்கத்தை அல்ல
வர்க்கத்தை.

ஒன்றுக்கும் உதவாமல்
சும்மா காட்டுவதற்கும்
ஆட்டுவதற்கும்
எங்கள் கையில்
எதற்கு நோட்டு?
கையாலாகாத
ரிசர்வ் வங்கியைப் பூட்டு!

எச்சரிக்கை!
கருப்பு பணத்தை ஒழிக்க
மோடி வருகிறார்
கடுகு டப்பியில் இருக்கும்
சில்லரையை மறைத்துவை!

– துரை. சண்முகம்

முதலாளிகளுக்கு மக்கள் பணம் வங்கிகளில் மக்கள் மரணம் – கேலிச்சித்திரம்

11

வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 5,44,571 கோடி -புள்ளி விவரம்!

demonetisation-deaths

அப்படியே ஏ.டி.எம் வரிசையில் நின்று இறந்தவர்களின் புள்ளிவிவரத்தை போடுங்க பாப்போம்…!

கேலிச்சித்திரம்: சர்தார்

இணையுங்கள்:

சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்

0

தீய்ந்து போகும் இதயம்
எழுதும் பாடல்
இன்னொரு இதயம் பற்றித் தீய்க்கும்.

எரி அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளி
பனிக்கட்டி போல இருக்கமுடியுமோ?

beacon-fire-2நானெழுதும் இப்பாடல்
கணவன் முன் வன்புணரப்பட்ட
பெண்களின் வேதனையிலிருந்து வருகிறது.

– பசித்துச் சோறுகேட்ட ஒரே குற்றத்திற்காக
மனிதர்களாக மட்டுமே வாழ்வோம்
என்று குரல் கொடுத்ததற்காக
கட்டி வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட
மக்கள் தலைவர்களின்
மரணவேதனையிலிருந்து வருகிறது

இந்தப்பாடல்
எப்படி உனக்கு இன்பம் கொடுக்கும்?
இதயம் மட்டும் உனக்கு இருக்குமானால்
அது துடிதுடிக்கும்

வாழ்க்கை எனும்
சாணைக்கல்லில் தீட்டியது
இந்தப் பாடல்
எப்படி இது நடுநிலை வகிக்கும்?
எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?

ஒன்று நீ நம் ஆளாயிருக்கவேண்டும்
அல்லது எதிரியாக இருக்கவேண்டும்

எதிரிக்கு எதிராய் நடக்கும் போரில்
என்னைப் பொருத்தவரை
என் பாடலும் ஒர் ஆயுதமே!

எச்.ஆர்.கே. (தெலுங்கு)

புதிய கலாச்சாரம், நவ, டிச 1990- ஜன1991.

உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது

5

கிராமப்புற இந்தியாவின் நிலைமை படுமோசமான நிலையை அடைந்துள்ளது. ஒப்பீட்டளவில் குறைவான பணத்தாள்களே கிராமப்புற வங்கிகளுக்குச் சென்றடையும் நிலையில் நிலைமையைச் சமாளிக்க வங்கி ஊழியர்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் உள்ள கிராமம் ஒன்றில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போன நிலையில் பணமும் தீர்ந்து போய் மக்களால் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

bastar-demonetisationபொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரியும் வி.எம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இதே போன்ற சூழ்நிலையை தானும் எதிர்கொள்வதை தனது முகநூல் பதிவொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கிக் கிளைக்குப் பல நாட்களாக பணம் அனுப்பப்படாத சூழலில் இருந்த ரொக்கமும் தீர்ந்து போன நிலையை விளக்கும் அவரது பதிவு நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.

“ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன்.. ஒரு வேளை நாளையும் குளிரில் நடுங்கும் வயதான பெண் ஒருவரைக் காண நேர்ந்தால் நான் உடைந்து போவேன்..” என்கிறார் அந்த வங்கி ஊழியர். அவரது முகநூல் பதிவு சுமார் 2500 பேரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது.

இதோ அவர் எழுதியது :

ஓ… எனக்குப் போதும் போதும் என்றாகி விட்டது! நான் ******வங்கியின் கிராமக் கிளையில் பணிபுரிகிறேன். ஒரு வேளை நாளையும் இன்னொரு தாயிடம் அவரது குழந்தையின் சிகிச்சைக்குப் போதுமான பணம் கொடுக்க முடியாது என்று சொல்லும் நிலை வந்தால் நான் உடைந்து போவேன்.. ஒரு வேளை நாளையும் குளிரில் நடுங்கும் வயதான பெண் ஒருவரைக் காண நேர்ந்தால் நான் உடைந்து போவேன்..

ஏனெனில் அவர்களது கண்களைப் பார்த்து சில பெரிய நன்மைகளைக் கருதியும் தேச நலன் கருதியும் இந்த நிலையை அனுபவித்தாக வேண்டுமென்றும், இதனால் கருப்புப் பணம் ஒழிந்து போகுமென்றும் என்னால் விளக்க முடியவில்லை.. கருப்புப் பணம் இருக்கிறதோ இல்லையோ.. ஒவ்வொரு முறையும் இந்த அமைப்புமுறை அவர்களை மிக மோசமாக ஏமாற்றியுள்ளது…

இங்கே அரசு மருத்துவமனைகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளோ பழைய நோட்டுக்களை வாங்குவதில்லை. நீங்கள் கூச்சலிடுவது புரிகிறது; ஆனால், கொழுத்துப் போன மேட்டுக்குடி புட்டங்களே, உங்கள் அன்புக்குரியவர்கள் என்று வரும் போது அரசு மருத்துவமனைகளை நீங்கள் நம்புவதில்லை தானே! தயவு செய்து கொஞ்சம் நேர்மையாக இருங்கள். தயவு செய்து இந்த மேட்டுக்குடித்தனத்தை விடுங்கள்.

இவை ‘அசௌகரியங்கள்’ அல்ல. இப்போது இது ஒரு குற்றம். இது மனித உரிமை மீறல். மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். வரிசைகளில் காத்திருக்கும் போது இறந்து போயிருக்கிறார்கள். பழைய நோட்டுக்களை வாங்காத மருத்துவமனைகளில் இறந்து போயிருக்கிறார்கள். வங்கிகளில் பணிபுரியும் போது இறந்து போயிருக்கிறார்கள். மிகக் கேவலமாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால் நிகழும் மரணங்களை சில பெரிய நன்மைகளைக் காட்டி உங்களால் நியாயப்படுத்த முடியுமா?

எனக்கு மற்றவர்களின் இரத்தக்கரை படிந்த எந்த நன்மையும் தேவையில்லை. ஆமாம், இந்த நன்மை என்பது வருமானச் சமநிலையை அளித்து விடப்போகிறதா? அது முடியுமா? உங்கள் உட்கட்டமைப்புகளே தயாராக இல்லாத நிலையில் எதற்காக இந்த அவசரம்? தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்க வேண்டுமென்கிற உங்களது அவசரத்திற்காக மக்கள் இறந்து போயிருக்கிறார்கள்.

கருப்புப் பணத்தால் உங்களது இரக்கமின்மையை நியாயப்படுத்த முடியாது. இது தான் தேசபக்திக்கு நீங்கள் வைத்திருக்கும் விளக்கமென்றால், அந்த தேசபக்தியைத் தூக்கி நரகத்தில் போடுங்கள். யாரோ ஒருவருடைய ‘பெரிய நன்மையை’ கருதி மக்களை சாகவிடாது எனது தேசபக்தி..!

மூலக்கட்டுரை :
Demonetisation: This banker’s live updates from a rural bank on his experiences will move you
– தமிழாக்கம்: முகில்

மோடியின் தீவிரவாதம் : அரசு மருத்துவமனையில் அகதிகளான மக்கள்

18
Arakkonam Davasi's mother (2)
தவசி அம்மா

யிரம், ஐநூறு நோட்டுக்கள் செல்லாது என்று மோடி நடத்திய நாடகத்தின் அங்கமாக அரசு மருத்துவமனைகளில் பழைய நோட்டு வாங்கப்படும் என்றார்கள். தமிழக அரசை நடத்திச் செல்பவர் அப்பல்லோவில் இருக்கும் போது மக்கள் அரசு மருத்துவமனைகளில் எப்படி எதிர்கொள்கிறார்கள்? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.

மணலி நிர்மலா:

Manali Nirmala (1)
நிர்மலா

நின்னது நிக்க திடீர்னு இப்படி அறிவிச்சா மக்கள் எப்படி சமாளிப்பாங்கன்னு ஒரு அறிவு வேணாம்? மத்த செலவை எப்படியோ சமாளிச்சாலும் மருத்துவச் செலவை என்ன செய்ய முடியும். விடிஞ்சா ஆப்ரேசன் செஞ்சவங்க செலவுக்கு என்ன செஞ்சுருப்பாங்க. பத்து நாளாயிட்டு, இன்னுமும் நான் ஒரு ரூபா பணம் மாத்தல. நான் இதய நோயாளி, பேங்கு வாசல்ல நிக்குற கூட்டத்த பாத்தேலே மயக்கம் வருது.

கருப்புப் பணத்த ஒழிக்கப் போறதா சொல்றாங்க, ஆயிரம் ஐநூறு அடிக்கிறவனுக்கு ரெண்டாயிரம் அடிக்க முடியாதாக்கும். எங்க ஏரியா பேங்குல வங்கி அதிகாரியே ஒரு பணக்காரனுக்கு 3 பேக்கு பணத்த மாத்தி குடுத்துட்டு, வரிசையில நின்னவங்களுக்கு பணம் இல்லன்னு சொல்லிட்டாரு. பணக்காரன் யாரும் வரிசையில நிக்கல.

நான் ஸ்கேன் எடுக்க வந்துருக்கேன். தண்ணிய குடிச்சுட்டு மூத்தரம் முட்டுது. இவ்வளோ பெரிய ஆஸ்பத்திரியில ஒரு நல்ல டாய்லெட் இல்ல. அதை மாத்த சொல்லி முதல்ல படம் புடிச்சு போடுங்க. நம்ம பணத்த நாம எடுக்குறதுக்கு திருடனப் போல கையில அடையாள மை வைக்கிறாங்களாம். நாட்டுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்க லூசு தனமா ஏதேதோ செய்றாரு மோடி.

திருப்பத்தூர் வண்ணிநாதபுரம் மல்லிகா, சத்தியவாணி, காந்தா:

கருப்புப் பணம் பணக்காரங் கிட்ட இருக்கா? கல்லு மண்ணு தூக்குற சித்தாளு எங்க கிட்ட இருக்கா? திருடுனவன விட்டுட்டு சும்மாருக்க எங்களப் போல மக்களுக்கு தண்டனை தர்ரது என்ன ஞாயம்? இவ்ளோ சட்டதிட்டம் இருக்குற நாட்டுல கருப்புப் பணம் யாரு வச்சருக்கான்னு கண்டு பிடிக்க முடியாதா? அவங்க எப்படி பணம் சேத்தாங்கன்னு சோதன போடு! கேமரா வச்சு கண்டுபிடி! அத்த வுட்டுபுட்டு ஏழைங்க எங்கள வதைச்சு வயித்தெரிச்சல கொட்டிக்கிறியே வெக்கமில்லெ?

எங்க அண்ணன் குடிச்சே ஒடம்ப கெடுத்துகினு இங்க வந்து ஒரு மாசமா படுத்துருக்காரு. கூட இருந்தவங்ககிட்ட செலவுக்கு காசு கிடையாது. நாங்க வந்து தொணைக்கி இருந்துட்டு அவங்கள போகச் சொல்ல எங்கள்ட்ட காசு கிடையாது. பணம் செல்லாதுன்னு சொல்லி நாளு நாளு ஆச்சு. ஃபோனு மேல ஃபோனு அடிக்கிறாங்க. டவுனுனலதான் பேங்கு இருக்கு, போயி மாத்திரலான்னு நாலு குடும்பத்துல நாலு பேரு மெனக்கெடுறோம் முடியல. மேஸ்திரிகிட்ட 5 – நூறு ரூவா நோட்டா குடுய்யான்னு கெஞ்சி பாத்துட்டோம். இல்லன்னு ஆயிரம் சத்தியம் பன்றாரு.

Satyavani, Kantha, Malika  (1)
சத்தியவாணி, காந்தா, மல்லிகா

நாங்க எல்லாம் ஒரே குடும்பத்த சேத்தவங்க. ஒடம்பு சரியில்லாத அண்ணன  பாக்க வர்ரதுக்கு 1000-க்கு 100 கமிசனக் கொடுத்து மாத்திட்டு வந்தோம். பேங்குக்கு போயி வரிசையில நின்னா பாதி பேருக்குதான் பணம் தர்ராங்க. ஒருநா ரெண்டுநா பொழப்புக் கெட்டுப் போகுது. கையெல்லாம் காச்சுப்போக கல்லு, மண்ணுத் தூக்கி சம்பாரிச்சக் காசுக்கு தெண்டம் குடுத்துட்டு வர்ரோம்.

எங்க ஊருல புருசன இழந்த அம்மா ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்காக நெலத்த வித்துட்டு 70 லெச்சம் பணம் வச்சுருந்துச்சு. பணம் செல்லாதுன்னு சொன்னதும் தூக்கு போட்டு செத்துப் போச்சுன்னு சொல்லிக்கிறாங்க. ஒரு பொண்ண கல்யாணம் செய்ய கிலோக் கணக்குல கேக்குறான். எல்லாத்தையும் செல்லாதுன்னும் கருப்பு பணமுன்னும் சொன்னா எப்படி பொண்ணக் கட்டிக் குடுக்குறது?

சொத்து வித்தவங்க, சின்னக் கம்பனி நடத்துறவங்க, பிள்ளைங்கப் படிப்புக்காக வச்சுருக்கவங்க, எங்களப் போல ஆளுங்களுக்கு வேலை கொடுக்குற மேஸ்திரிங்க இவங்கள்ளாம் கருப்பு பணம் வச்சுருக்காங்கனு பயம் காட்டுனா அவங்க எப்படி பொழக்கிறது?

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கோபால்: (அலுவலக உதவியாளர்)

Retired govt staff from chengalpattu
கோபால்

எனக்கு மாசம் பத்தாயிரத்து ஐநூறு பென்சன் வரும். இப்ப ஒரு பத்து பைசா எடுக்க முடியல. வீட்டு செலவுக்கு பாலு தண்ணி எதுவும் வாங்க முடியல.

தங்கச்சி மகனுக்கு தலையில கட்டி. 9-ந் தேதி ஆப்ரேஷன். அவன் பொண்டாட்டி கைக்கொழந்தக்காரி. உதவிக்கி யாரும் இல்ல. எம்மகன் அவன் ஃபிரண்டுகிட்டெல்லாம் கேட்டுப் பிச்ச எடுக்காத கொறையா 200 ரூபா கொண்டு வந்தான். செங்கல்பட்டு பக்கம்தான் எங்க ஊரு. ஊரு கடந்து சாப்பாடு எடுத்து வர முடியல. காபி குடிக்கக் கூட யோசிச்சுட்டு பட்டினி பசியா குத்திருக்கோம். கைப் பிள்ளைய வச்சுகிட்டு ஒரு வேளை சாப்பாட்டோட கெடக்குது அந்த பொண்ணு. இங்க செலவுக்கு கையில ஐஞ்சு காசு இல்லாமெ தவிச்சுகினு இருக்கேன்.

அறநூறு கோடி செலவுல நம்ம கட்சி அமைச்சரே பொண்ணுக்குக் கல்யாணம் செய்யறப்ப, கருப்பு பணத்த ஒழிக்க ஒரு வேளை சாப்பாட்டுக்கு திண்டாட்ற மக்கள வதைச்சத நெனச்சு மோடி வெக்கப்படனும். அம்பது நாள்ல எல்லாம் சரியாகிடும் அப்படிங்கறாறு. ஐநூறு வருசம் ஆனாலும் இதெல்லாம் மாறாது. காலங்காலமா பாத்துட்டுதானே இருக்கோம். ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் பணக்காரனாதான் இருக்கான். நான் அடிக்கிறா மாறி அடிக்கிறேன் நீ ஓடுறா மாறி ஓடுங்கறதுதான் மோடி கருப்பு பணம் வச்சுருக்கவங்க கிட்ட போட்ருக்க ஒப்பந்தம். என்ன திட்டம் போட்டாலும் கருப்ப ஒழிக்க முடியாது.

அரக்கோணம் பரித்திப்புத்தூர் தவசி:

Arakkonam Davasi's mother (2)
தவசியின் தாயார்

எங்க அம்மாவுக்கு கழனி காட்டுல கெடந்த ஆணி குத்திருச்சுங்க. டாக்டர்கிட்ட காட்டிட்டுதான் இருந்தோம் எப்படியோ புரையோடி போச்சு. அரக்கோணம் டாக்டருங்க கால எடுக்கணுன்னு சொன்னதால இங்க கொண்டு வந்தோம். ஆபரேசன் செஞ்சு சரிபடுத்திரலாம் ரெண்டு நாள் கழிச்சு வந்து அட்மிஷன் போடுன்னு சொன்னாங்க.

பணம் செல்லாம போச்சு. ரெண்டு நாள் அரக்கோணம் பேங்குக்கு போய் பணம் எடுக்க முடியாம வந்துட்டேன். ரெண்டு நாளுமே வரிசையில நின்ன பாதி பேருக்குதான் பணம் கெடைச்சுது. பணம் எடுக்க அலைஞ்துல வயலுக்கு தண்ணி பாச்ச முடியாம பயிரு சோம்பி கெடக்குது. எங்க அம்மா வேற வலி தாங்காம வீட்டுல கத்தித் தொலைக்கிது. நேத்துதான் 1000-த்துக்கு 100 குடுத்தா சில்லறை வாங்கித் தர்ரதா ஒருத்தர் சொன்னாரு. அத வாங்கிட்டுதான் இன்னைக்கி வந்தோம்.

அந்த நேரம் பாத்து ஆயிரம், ஐநூறு செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. பணமே கெடைக்கலங்க. கமிஷனுக்கு வாங்கிட்டு இன்னைக்கு (17.11.2016) வந்தா இதயத்தை பாக்குற டாக்டர் வரலை, நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்க. பணம் புரட்டி இப்ப கொண்டு வரவே ரொம்ப லேட்டாச்சு. இன்னொரு மொற காரு வச்சு கொண்டு வரவெல்லாம் வசதி கெடையாது அதான் என்ன செய்றதுன்னு தெரியாம நின்னுகினு இருக்கோம்.”

சென்னை புறநகரைச் சேர்ந்த பெண் ஒருவர்:

Unknown Chennai woman (1)“ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அறிவுப்புக்கு ஒரு வாரம் முன்னாடி இருந்து எனக்கு காய்ச்சல். புத்தி சுவாதினம் இல்லாத அம்மாவை தவிர எனக்கு யாரும் இல்ல. அம்மாவ பாத்துக்க யாரும் இல்லாததால எங்கூடவே கூட்டிட்டு வர்ரேன். எனக்கு குளிர் நடுக்கம் நிக்க முடியல. அசிங்கமா பேசுற அம்மாவை கட்டுப்படுத்த முடியல. (வினவு செய்தியாளர்களையும் திட்டினார் அந்தம்மா)

வீட்டுப் பக்கத்துல உள்ள டாக்டர்ட ஒரு வாரமா ட்ரீட்மெண்ட் எடுத்தும் நிக்கல. ரத்தம் டெஸ்ட் செய்ய சொன்ன மறு நாள் பணம் செல்லாதுன்னு சொல்லிட்டாங்க. சரி அரசு ஆஸ்பத்தரிக்கு வரலான்னா பஸ்சுக்குக் கூட காசு இல்ல. பேங்குல பணம் இருந்தும் வரிசையில நின்னு எடுக்க முடியல. எப்படியோ வந்து ரத்தம் டெஸ்டுக்கு கொடுத்து நாலு நாள் ஆச்சு. இன்னைக்கி வந்தா எலி காய்ச்சல் போல இருக்கு, பெட்டுல சேருங்கன்னு சொல்லிட்டாங்க.  அட்மிஷன் போட்டுட்டா வெளிய வரமுடியாது. செலவுக்கு காசு இல்லாம உள்ள எப்படி இருக்க முடியும். எப்படியாவது ஏ.டி.எம்-ல பணம் எடுத்துட்டு போகலான்னு வந்தேன். நல்ல காலம் வாசல்ல வண்டி நிக்குது. ஆனா (நடமாடும் ஏ,டி,எம்). வரிசையப் பாத்தா பணம் தீந்துடுமோன்னு பயமா இருக்கு. சரி நான் போறேங்க……

மருத்துவமனை துப்புறவுத்துறை ஒப்பந்த ஊழியர்கள் – பெண்கள்:

“மோடி பணம் செல்லாதுன்னு சொன்ன அன்னைக்குத்தான் எங்களுக்கு சம்பளம் போட்டாங்க. கத்த கத்தையா ஆயிரமும் ஐநூறுமா 6,000 பணம் இருக்குது. பணந்தான் இருக்கெங்காட்டி அன்னைய நெலமைக்கி ஒரு டீ குடிக்க முடியல. அன்னைக்கி நைட்டு டூட்டி சம்பளம் வாங்கச் சொல்லோ நல்லா பிரியாணி துண்ணலான்னு வீட்டாண்ட இருந்தும் எதுவும் எடுத்துகினு வரல. பசிவேற இந்த கோடியில இருந்து அந்த கோடி வரைக்கும் ஒரு கடக்காரனும் செல்லாது செல்லாதுன்றான். இன்னா பன்னுவே சொல்லு.

mobile ATM GH (1)
நடமாடும் ஏ.டி.எம்

விடிய விடிய கக்கூசு நாத்தத்துல கூட்டிப் பெருக்கி அள்ளிட்டு காலையில ஒரு வா காபிக்கி வழியில்ல. கை நெறையோ துட்டுக்கிது, அத்தையா துண்ண முடியும். ஒரு நா லீவு குட்க மாட்றான் இந்த துக்கிரிப் பையெ. பேங்கு வாசல்ல கீவு கட்டி நிக்குது ஜனம். இன்னா செய்வ சொல்லு. சரி செலவுக்கு என்ன செய்யலான்னு பாத்தா 2000 நோட்டுதான் தர்ரான்றாங்க அதுக்கு சில்ற ஆரு தருவா.

நம்புனா நம்பு, நம்பாங்காட்டி போ. ஒரு சாரிடான் மாத்தர வாங்க முடியாம லோலுபட்டேன். அண்ணாச்சி கடையத் தொறந்தா கடனுக்கு வாங்கி சோறு பொங்கு இல்லாங்காட்டி சும்மாருன்னு வீட்டுல சொல்லிகினு வந்துருக்கேன். எங்க பொண்ணுங்க ரெண்டும் பாத்தரத்துக்கு பாலிஷ் போட்ற வேலைக்கு போகுது. அவங்கள போய் வரிசையில நின்னு மாத்திகினு வாங்கன்னா லீவு இல்லன்னுதுங்க. இன்னா பன்னுவ. நூறு  ரூபாய் கமிஷனுக்குதான் மூவாயிரம் மாத்துனேன். இன்னுமும் மீதிப் பணம் மாத்தாதே கெடக்கு. கையில இருக்கற துட்டு இன்னைக்கி காலியாபூடும். நாளைக்கி இன்னா செய்றது ஒன்னியும் புரியல.

Sanitory Workers (4)
துப்புரவுப் பணியாளர்கள்

இந்தா மாறி ஒரு திட்டம் கொண்டாந்தா இன்னா மாறி பாதிப்பு வருன்னு முன்னங்காட்டி ரோசன பன்னிருக்கனும்ல. அத்த வுட்டுபுட்டு மக்கள் அலையவுட்ரியே, இது நல்ல மன்சனுக்கு அழகா. திடிர்னு சொலங்காட்டி எவ்வளோ பிரச்சின ஆயிபோச்சு. ஏதோ புத்திகெட்டு சொல்லிட்டேன்னு ஒத்துகினாலும் மனசு ஆறிப்பூடும். அத்த வுட்டுப்போட்டு 500 நோட்டு அட்சிகினே இருக்கோம் வந்துகினே இருக்கு, பணம் தர்ர மிசினு செஞ்சுகினு இருக்கோம்ன்னு இன்னான்னாவோ பீலா வுட்டுகினுருந்தா இன்னா அர்த்தம்.

நானும் எங்கூட்டு ஆம்பளையும் இங்கதான் வேல செஞ்சுகினுருக்கோம். எங்க ரெண்டு பேருக்குமே பேங்குல அக்கோண்டு, அடயாள அட்ட கெடையாது. எம்பொன்னுகிட்ட நேத்துதான் 7000 பணம் குடுத்து அவ அட்டையில மாத்திகினு வாம்மான்னே. இந்த இன்னைக்கி மை வைக்கிறதா சொல்றாங்க. எம்பொண்ணு பணத்த எப்புடி மாத்துவா, நா எப்புடி மாத்தப் போறோன்னு தெரியல. நம்மூட்டு துட்ட நாம மாத்துறதுக்கு அடையாளம் எதுக்குங்கறேன்.

ஆதார் அட்ட எடுங்க போங்குல கணக்கு வைங்க கேஸ் மானிய காசு அதுல வந்துருன்னு சொல்லிட்டு வர்ரதே இல்லை. பேங்குல பணமிருந்தும் கார்டு தேச்சா வரலன்னு சொல்றா எம்பொண்ணு. எதுவானாலும் நேரடியா குடுத்து வாங்குனா இன்னான்னு கேப்ப, இப்ப யார கேக்க முடியும். எல்லாம் ஆளே இல்லாம மிஷின வச்சு ஓட்ட போறாரு மோடி.

கருப்பு பணத்த யாராலும் ஒழிக்க முடியாது. நல்லவனுக்கு ஒரு வழி. திருட்டு பயலுக்கு ஆயிரம் வழி. திருடன் செவுரு ஏறுவான், வேலி தாண்டுவான் ஏன் கொலை கூட செய்வான். அவன இட்டாந்து எந்த வழியில சொத்து சேத்தான்னு கண்டுபிடி. அதுக்கு எத்தினியோ வழி கீது. நகை, சிலை, எஸ்டேட், பங்களா, சொத்து இப்பிடி யாரெல்லாம் வச்சுருக்கான்னு பாத்து அங்க போயி அதிரடி நடவடிக்க எடு. அது ஒங்களால முடியும். நாட்ட ஆளுர மகராசனுக்கு அது முடியாம இருக்குமா. அத்த வுட்டுப்போட்டு இன்னாத்துக்கு ஏழைங்களையும், கஷ்டப்பட்டு வேலைக்கி போயி நாலு காசு வச்சுருக்க அப்பாவிங்களையும் அலைய வுட்ற.

இந்த பணம் செல்லாதுன்னு சொல்லங்காட்டி ஒரு கல்யாணமே நின்னு போச்சுன்னு டிவியில காட்றாங்க. ஐநூறு கோடி செலவு பண்ணி கல்யாணம் பண்ணாங்கன்னு மோடி ஆளுங்கள டி.வி-ல காட்றாங்க. இத்தெல்லாம் அந்த மோடி கண்ணுக்குத் தெரியாதாம்மா? சாதார்ண மக்களாண்ட உள்ளதுதான் தெரியுமாமா? எங்க வூட்டாண்டெ கடை வச்சுருந்த அண்ணாச்சி யாவாரமே கெட்டுப் போச்சு. சில்ற கெடைகெலன்னு மூடிட்டாரு. மோடி இன்னுரு வாட்டி எலஷ்சன்ல நின்னுருவாரு? பாக்கலாம்.

– நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்

மோடி வரட்டும் பாத்துக்குறோம் – வீடியோ

0

சென்னை சைதாப்பேட்டையில் கூவம் நதிக்கருகில் இருக்கிறது சலவைத்துறை குடியிருப்பு. அதிகமும் சலவைத் தொழில் செய்யும் மக்கள் வாழும் இடமிது. இதர வேலைகளை அதாவது அன்றாடம் உழைத்தால் கூலி கிடைக்கும் வேலைகளை செய்யும் மக்களும் இங்கே கணிசமாக இருக்கிறார்கள்.

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு குறித்து இம்மக்கள் சொல்வது என்ன?

கருப்புப் பணத்தை பதுக்கிய பணக்காரர்கள் எவரும் வங்கி வரிசைக்கு வருவதில்லை. நாங்கள்தான் வேலையை விட்டுவிட்டு நிற்க வேண்டியிருக்கிறது. கருப்புப் பணத்தை பதுக்கியவர்களை விட்டுவிட்டு எங்களை ஏன் வதைக்க வேண்டும்? மழைத் தண்ணியில் நாங்கள் மூழ்கிய போது மோடியோ இல்லை லேடியோ வந்தார்களா? நாங்கள்தானே ஏதோ தப்பிப் பிழைத்தோம்? இருக்கும் ஒரு ஆயிரம் அல்லது ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ஒரு நாள் முழுவதும் சுற்றியும் மாற்ற முடியவில்லை.

வங்கிக் கணக்கை விடுங்கள், கையெழுத்தே போட தெரியாத மக்களிடம் வங்கிக்கு வாருங்கள் என்று சொல்வது ஏன்?

இன்னும் அவர்களது ஆதங்கம் குறையவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளிகள், பெண்கள் அனைவரும் பேசுகிறார்கள். கோபப்படுகிறார்கள். மோடியை நேரில் பார்த்தால் சும்மா விடமாட்டார்கள் இந்த மக்கள்! பாருங்கள் – பகிருங்கள்!

நேர்காணல்:
வினவு செய்தியாளர்கள்.

கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !

0

நிசப்தம். காற்றுக்கும் தொண்டை அடைத்துக் கொண்டது
பனஒலைகளுக்கும் பல்வலி.
சேரியில்-குடிக்க மறந்தனரா? முனக மறந்தனரா?
சுடுகாடு கிராமத்திற்குள் வந்துவிட்டதா?
நிசப்தம்.
’அவர்கள் வரப்போகிறார்கள்!’
பரட்டைத் தலைப் பூமியை-
யார் யார் ரத்தம் நனைக்கப் போகிறதோ?

**

stickசூரியன் கிழக்கே சிவந்தபோது
கிராமத்தில்
கதவுகள் உடைந்திருந்தன.
பள்ளிக்கூடத்திற்குச்செல்லும்
ஒன்றிரண்டு குழந்தைகளும்
கிழிந்திருந்தன.
சுடுகாடு மட்டும் வெளிச்சமாகவே இருந்தது.

**

அவள் கிழவி.
தலை, தலைமுறைகளைக் கண்டிருந்தது.
கன்னங்களில் இறுகிக் காய்ந்து வெடித்த களிமண் போல் சதை
கண்ணிரா? உழைப்பா? அனுபவமா? வன்முறை
எல்லாம்தான்.
அவளால் நடக்கமுடியாது!
அவள் ஏன் ஊருக்குள் இருக்கிறாள்?
’கைத்தடி’யைக் கொண்டுபோன பேரன்
திரும்பி நிச்சயம் வருவன் என்றுதான்.

**

அதே ஊர்தான்.
வீடுகள் தளிர்த்திருந்தன.
முன்னைவிட மக்கள் இருக்கிறார்கள்.
”கைத்தடி”யோடு பேரன்மார் நிறையபேர்.
அவர்கள் பேசிக் கொண்டார்கள்.
கண்ணுக்குத் தெரியவில்லை.
வேலைகள் மும்முரமாக நடந்தன.
கிழவி சொன்னாள் :
”அடேய் அவர்கள் எப்போதும் வரலாம்டா”

**

வரட்டும்.
கைகள் இறுகின.
சங்கிலிகள் இல்லாமலேயே பேரன்மார்கள்
கிராமத்தை இணைத்திருந்தனர்.
இரவு மலர்ந்தது – கனத்தது.
விளக்குகளில் ஒளி தவழ்ந்தது – பின்னிக் கொண்ட
’வேன்’ ஊளையிட்டது.
‘நரிப்பயல்கள்… வக்காளி… நரிப்பயல்கள்’.

**

சூரியன் கண்கசங்கினான்
சிதறினான் – வழிந்தோடியிருந்தான்.
கிராமத்துக்கு என்ன வந்தது?
நல்ல அறுவடையா?
பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள்.
பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள்.
காயங்கள் இருக்கத்தான் செய்தன.
செய்திகள் பரவின – வந்தன.

**

கிழவி ஒருபக்கம் உற்சாகமாக இருந்தாள்.
பேரன்மார்கள்.
நிறைய பேரன்மார்கள்-தொடர்ந்து பேரன்மார்கள்
குழந்தைகள் பாடின.
” ‘கைத்தடி’ ஒன்றை எடுத்துக் கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
ஆரவாரம்.

– அலகநந்தா

புதிய கலாச்சாரம், நவம்பர் 1987.

ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !

14
மேற்கு வங்க மாநிலம் புருலியா பகுதியில் மகிஷாசுரனை வணங்கும் பழங்குடியினர்.

”இந்த அடையாளம் எங்களுக்கு தீராத அவமானங்களையே வழங்கியுள்ளது. மற்ற மக்கள் எங்களைக் கேலி செய்கின்றனர். அரக்கர்களைப் போல் எங்களுக்கும் பெரிய பற்கள் இருக்கிறதா என கிண்டலாக கேட்கின்றனர்” என்கிறார் இருபத்தோரு வயதான அமர்.

அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மையிலும் சிறுபான்மையினாரான அசுர் பழங்குடியினத்தவரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம்மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாக கருதிக் கொள்கின்றனர். அங்கே மகிஷாசுர் அசுர்களின் மூதாதை.

பழங்குடி மக்களைக் கொன்றொழித்த ஆரியப்படைகளின் வெற்றிக் கதையான மகிஷாசுர வதம் துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது. இன்று சட்டிஸ்கார், ஜார்கண்ட் பழங்குடிகள் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்பு – மாவோயிஸ்டு அழிப்பு நடவடிக்கைகளின் அன்றைய வடிவமே மகிஷாசுர வதம்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கத்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியின மக்கள் ராவணனை அரக்கனாகச் சித்தரித்து எரிப்பதைத் தடை செய்யக் கோரி கோர்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கத்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியின மக்கள் ராவணனை அரக்கனாகச் சித்தரித்து எரிப்பதைத் தடை செய்யக் கோரி கோர்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்து வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக்குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின் நினைவில் திட்டுத் திட்டாய் உறைந்திருக்கின்து. உயிர்த்தெழும் தருணத்துக்காகக் காத்திருக்கிறது.

ஆரிய படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து மகிஷனின் தலைமையிலான அசுரர் படை தங்களைக் காப்பாற்றியதை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை. போரில் தோற்ற ஆரியர்கள், பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தக் கூடாது என்ற அசுரர்களின் யுத்த தருமத்தைப் பயன்படுத்தி, துர்கா என்கிற பெண்ணை போருக்கனுப்பி அவள் மூலம் வஞ்சகமான முறையில் மகிஷாசுரனைக் கொன்றுவிட்டதாகச் சொல்கிறது இம்மக்களின் தொன்மம். பாரதப் போரில், பீஷ்மனுக்கு எதிராக சிகண்டியை (திருநங்கை) முன்னால் நிறுத்தி வஞ்சகமான முறையில் அவரைக் கொலை செய்த கிருஷ்ணனின் தந்திரத்தை விவரிக்கும் வியாசன், மகிஷாசுர வதம் என்ற சூதுக்கு சான்று கூறுகிறான்.

மேற்கு வங்க மாநிலம் புருலியா பகுதியில் மகிஷாசுரனை வணங்கும் பழங்குடியினர்.
மேற்கு வங்க மாநிலம் புருலியா பகுதியில் மகிஷாசுரனை வணங்கும் பழங்குடியினர்.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக் கொண்டாட்டங்களின் போது வங்காளத்தின் நகர்ப்புறங்கள் கேளிக்கையில் மூழ்கியிருக்க, அசுர் இன மக்களோ அநீதியாய் வீழ்த்தப்பட்ட தம்மினத் தலைவருக்காய் துயரில் ஆழ்ந்திருப்பர். ஒன்பது நாட்களும் அவர்கள் வீடுகளை விட்டு வெளிவருவதில்லை. வெளியாட்களிடம் பேசுவதில்லை. ஒன்பதாம் நாளன்று உறவினர்கள் கூடி தங்கள் முன்னோர்களுக்கு எளிமையான படையல் வைக்கின்றனர். அப்போது தங்கள் நாசி, வயிறு மற்றும் மார்பகங்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வெள்ளரிக்காய் தின்னும் சடங்கு ஒன்றையும் செய்கின்றனர்.

“மகிஷாசுரனை வஞ்சகமாக ஏமாற்றிய துர்கா அவரது வயிற்றைக் கிழித்து விட்டாள். அவன் மூக்கிலிருந்தும் மார்பிலிருந்தும் ரத்தம் வடிந்ததை நினைவு கூர்ந்து, நாங்கள் அங்கெல்லாம் எண்ணை தடவிக்கொள்கிறோம். பழிக்குப் பழியாக எதிரிகளின் ஈரலைத் தின்பதற்கான உருவகமாகவே வெள்ளறிக்காயைத் தின்கிறோம்” என்கிறார் சுஷ்மா அசுர்.

பார்ப்பன இந்து மதம், கொலைகளைக் கொண்டாடும் மதம். நவராத்திரி முடிந்த பத்தாவது நாளான விஜயதசமியைத்தான், இராவணன் கொல்லப்பட்ட நாளாக கருதுகிறது பார்ப்பன மரபு. அன்றுதான் இராவணின் கொடும்பாவி கொளுத்தப்படும் இராமலீலா. இதே விஜயதசமி நாளில்தான் ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் வெற்றி ஊர்வலம் நடத்துகிறது. உத்திரபிரதேச மாநிலம் லக்னௌ நகரில் நடந்த ராம் லீலாவில் “ஜெய்ஸ்ரீராம்” என்று கூவி தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி வைத்தார் மோடி. ராமனாக மோடியையும், இராவணனாக நவாஸ் ஷெரீபையும் சித்தரித்தன சங்க பரிவாரத்தினர் இறக்கியிருந்த விளம்பரங்கள்.

ravanan-captionஇராவணவதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த அதே சமயத்தில், தங்களை இராவணின் வழித்தோன்றல்களாக கருதும் மத்திய இந்தியாவின் கோண்டு பழங்குடியின மக்கள் அறிவிற் சிறந்த தங்கள் மூதாதையர் அநீதியாக கொல்லப்பட்டதையும், அந்தக் கொலை கொண்டாடப்படுவதையும் எதிர்த்து கடந்த மாதம் பேரணி நடத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோர்ச்சி நகரில் சுமார் 3000 கோண்டு பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒன்றும், பெந்திரி கிராமத்தில் சுமார் 6000 பேர் கலந்து கொண்ட கூட்டு வழிபாடும் நடந்துள்ளது.

அசுர் மற்றும் கோண்டு பழங்குடியினத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக போற்றிப் பாதுகாத்து வைத்திருந்த தமது அடையாளங்களை, தேவ மரபுக்கு எதிரான அசுர மரபை, கம்பீரமாகப் பிரகடனம் செய்வது கண்டு திகைக்கிறது பார்ப்பனியம்.

மகிஷன் பட்ட காயங்களின் மேல் எண்ணை தடவிக் கொண்டிருந்த அசுரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. கோமாதா குண்டர்களால் ஊனாவில் உரிக்கப்பட்ட தலித்துகளின் முதுகுத் தோலில் ஹரியாணாவின் ஜாட் வெறியர்கள் மிளகாய்த்தூள் தடவிய போதும், போட்மாங்கேவின் கண்களில் அக்லக்கின் ரத்தம் வழிந்த போதும், ரண்வீர் சேனாவின் துப்பாக்கி ரவைகள் இஸ்ரத் ஜஹானின் இதயத்தைத் துளைத்த போதும், பெஸ்ட் பேக்கரியில் ஆர்.எஸ்.எஸ் கொளுத்திய நெருப்பில் தண்டகாரண்யக் குடிசைகள் எரிந்த போதும், அசுரர்களின் வாரிசுகள் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை.

பார்ப்பனியப் பாலைவனத்தின் சுடுமணற்பரப்பின் அடியில், உயிர்த் தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருந்த அசுர விதைகளை சிலிர்த்தெழ வைத்திருப்பது தங்களுடைய கோமாதாவின் மூத்திரம்தான் என்ற உண்மை, இந்துத்துவ மூடர்களுக்குப் புரியவில்லை. கல்கத்தாவில் நடந்த துர்கா பூஜைக்கு அசுர் இனத்தவர்கள் சிலரை அழைத்துச் சென்று அவர்களை “மைய நீரோட்டத்தில்” கரைக்க முயற்சித்திருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாடும் மாணவர்கள்.(கோப்புப்படம்)
ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாடும் மாணவர்கள்.(கோப்புப்படம்)

பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற கிராத மரபின் வழித்தோன்றல்களான மணிப்பூர், திரிபுரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினப் பெண் குழந்தைகளை வேறு மாநிலங்களுக்குக் கடத்திச் சென்று, பார்ப்பனிய விழுமியங்களில் ஊறப்போட்டு, பார்ப்பன வைரஸ்களாக மாற்றி, மீண்டும் அவர்களை வட கிழக்குக்கே அனுப்புகிறார்கள்.

இருப்பினும் ஒன்றுகலத்தல் சாத்தியப்படவில்லை. நாக்பூர் விஜயதசமி நைவேத்தியத்தை வெறித்துப் பார்க்கிறது மாசானிக்கு வெட்டிய பன்றியின் தலை. அனந்த சயனத்தில் உறங்கும் மகாவிஷ்ணுவின் முகத்தில் சுருட்டுப் புகையை ஊதுகிறான் எல்லைக் கருப்பன். ஓணம் பண்டிகையை வாமன ஜெயந்தியாக சித்தரித்த அமித் ஷாவைக் காறி உமிழ்கிறார்கள் மலையாளிகள். இருப்பினும் தேசியம் என்பது பார்ப்பனியமே என்று கருதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல், தனது பார்ப்ப மயமாக்கும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.

பார்ப்பனியத்தை மக்களின் தொண்டைக் குழிக்குள் திணிக்கும் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்பும் அதிகரிக்கிறது. அந்த வகையில் தான் இப்போது அசுர் பழங்குடியினரும் கோண்டு பழங்குடியினரும் தங்கள் மூதாதைகளை உயர்த்திப் பிடித்துள்ளனர்.

பார்ப்பன புராணங்களை ஆய்வு செய்து அவை ஆரியர்களால் இந்த மண்ணின் பூர்வகுடிகள் அழித்தொழிக்கப்பட்ட கதைகளின் குறியீடுகளாக உள்ளன என்பதை வரலாற்றறிஞர்கள் நிறுவியுள்ளனர். தற்போது எழுந்து வரும் இந்த எதிர்வினைகள், அந்த ஆய்வுகளுக்கான ரத்த சாட்சியங்களாக உள்ளன. உ.பி., ம.பி., ஜார்கண்டு, வங்காளம் போன்ற பல இடங்களில் இராவணனும் மகிஷாசுரனும் பழங்குடி மக்களால் வழிபடப்படுகிறார்கள் என்பது சமீப ஆண்டுகளில் தெரிய வந்த உண்மை. இருப்பினும் இவையெல்லாம் தம்மளவிலேயே இந்துத்துவ எதிர்ப்பு உள்ளடக்கத்தைப் பெற்றிருப்பதாக நாம் கருதவியலாது.

அறிவியல் ரீதியிலான ஆய்வுகளோ, நேரடி சாட்சியங்களோ இல்லாத காலத்திலேயே பார்ப்பன புராணங்களை வாசித்து தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அதற்கொரு அரசியல் உள்ளடக்கத்தை பெரியார் வழங்கியுள்ளார். ஆரியப் படைகள் திராவிட அசுரர்களின் மேல் நிகழ்த்திய அநீதியான போரும், கொலைகளுமே இராமாயணம் என்பதை மேடைகளில் முழங்கிய பெரியார், இராமனின் படத்திற்கு செருப்பு மாலையிட்டு பார்ப்பனியத்தின் முதுகெலும்புகளைச் சில்லிட வைத்தார்.

வால்மீகி எழுதிய இராமாயணத்தின் பிரதிகளில் இருந்தும், இன்ன பிற புராணங்களின் பிரதிகளிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி அதிர்ச்சியில் பிளந்த பார்ப்பன வாய்களில் நெருப்பைக் கொட்டினார். பெரியாரின் இராமாயணத்தை மேடைகளில் நாடக மேடைகளில் நிகழ்த்திக் காட்டி சனாதனிகளைக் கலங்கடித்தார் எம்.ஆர்.இராதா. இராதாவின் நாடகத்தில் அவதரிக்கும்போது, ஒரு கையில் மீனும், இன்னொரு கையில் கள்ளுக் கலயமும் ஏந்தியிருந்தான் இராமன். ’இராமனைக்’ கைது செய்தால் இந்துக்களின் மனம்புண்படுமே – எனத் தடுமாறிய போலீசார், வேடத்தைக் கலைக்குமாறும் வண்டியில் ஏறுமாறும் ராதாவிடம் கெஞ்சியும், அதனை மறுத்து, கையில் மீனும் கள்ளுக்கலயமுமாக ராமன் நடந்து சென்ற கண்கொள்ளாக் காட்சியை அன்று தமிழகம் கண்டது.

பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. ராமனுக்கு செருப்பு மாலை சாத்தப்பட்டதோ, பிள்ளையார் சிலைகள் உடைக்கப்பட்டதோ, இராவணலீலாவோ – அவையனைத்தும் அரசியல் உள்ளடக்கத்துடன் மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

அயோத்தியை முன்வைத்து அத்வானி ரத யாத்திரை நடத்திய போதும், பாபர் மசூதியை இடித்த போதும் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் இராமனை எரித்தது. சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், அரங்கநாதனின் உறக்கத்தைக் கலைத்தது. நந்தனும், சம்புகனும், ஏகலைவனும் பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான போராளிகளாக ம.க.இ.க.-வின் அசுரகானம் பாடல்களில் உயிர்த்தெழுந்தார்கள். முற்போக்காளர்களோ இராம ஜென்ம்பூமி என்ற மோசடியை நேருக்கு நேர் எதிர்க்கும் துணிவின்றி, “கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு” என்று மழுப்பினார்கள். அத்வானியின் ராமனுக்கு எதிராக மோடியின் ராமனை நிறுத்தினார்கள்.

ஆம். 1980-களின் பிற்பகுதி தொடங்கியே பார்ப்பன பாசிசம் தீவிரமாகத் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது என்ற போதிலும், இந்து மதம் என்று இவர்களால் அழைக்கப்படுவதே பார்ப்பன மதம்தான் என்பதையோ, இதன் புராணங்கள் அனைத்திலும் நிரம்பியிருப்பவை ஆரிய நிறவெறியும் வருணாசிரம வெறியும்தான் என்பதையோ முற்போக்காளர்கள் எனப்படுவோரே ஏற்கவில்லை. அவர்களும் பார்ப்பனக் கருத்தாக்கத்துக்கு ஆட்பட்டிருந்தனர் அல்லது அதனை எதிர்க்க அஞ்சினர்.

இராவண காவியமும், இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகமும் தமிழகத்தில் சென்ற நூற்றாண்டிலேயே அரங்கேறிவிட்டன என்ற போதிலும், இப்போதுதான் ஜே.என்.யு. வில் மகிஷாசுரன் தினம் கொண்டாடப்படுகிறது. இப்போதும் கூட பார்ப்பன மரபையும் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட அசுர மரபையும் எதிர் நிறுத்தி இந்து மதத்தின் வரலாற்றையும் அதன் ஆன்மாவையும் புரிந்து கொள்வதற்கு பல அறிவுத்துறையினர் தயாராக இல்லை. தேவ மரபும் அசுர மரபும், பார்ப்பனியமும் பவுத்தமும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கான சான்றுகள் என்று இந்துத்துவ வாதிகள் அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறார்கள், அல்லது விமரிசிக்கிறார்கள்.

இராவணனுக்கும் மகிஷாசுரனுக்கும் வரலாறு எழுதி, அவர்களை தேசிய நாயகர்களாக்குவது நம் நோக்கமல்ல. இராம ராச்சியத்துக்கு எதிராக இராவண ராச்சியம் எதையும் நாம் முன்வைக்கவில்லை. ஆனால் வரலாறு திரிக்கப்படும்போது, திரிக்கப்பட்ட அந்த வரலாறு, நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது, எதிர்காலத்தை விழுங்கி விடுமோ என்று அச்சுறுத்தும்போது நாம் அசட்டையாக இருக்க முடியாது.

”சிங்கங்களுக்கென்று ஒரு வரலாற்றாசிரியன் தோன்றாதவரை, வேட்டைகளின் வரலாறு வேட்டைக்காரர்களையே கொண்டாடும்” – என்றார் நைஜீரியக் கவிஞர் சினுவா அச்சேபி (Chinua Achebe). பசுமாட்டு தேசியத்தின் கொம்பைப் பிடித்து உலுக்குகிறது எருமைமாட்டு தேசியம்.

– சாக்கியன்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

கடன் வாங்கிய விவசாயிகளை இழிவுபடுத்தும் அதானிகளின் அரசு !

0

வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி வங்கி மற்றும் வட்டாட்சி நிர்வாகங்கள் அவமானப்படுத்தியிருக்கின்றன. வறட்சியும், கடனும், ஏழ்மையும் விவசாயிகளை சுழற்றியடித்துத் துன்பத்தில் ஆழ்த்துகின்ற அதே நேரத்தில் இந்த இழி செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியிருக்கிறது.

up-farmer
நான் என்ன செய்தேன்? திருடினேனா? இல்லை, ஏமாற்றினேனா? நான் செய்தது நேர்மையாக தொழில் செய்யலாம் என்று கடன் வாங்கியது தான் என்கிறார்.

மணிக்பூர் கிராமம் இருக்கும் பண்டல்கண்ட் பகுதி உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது.

2003-லிருந்து வறட்சியின் கொடுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் கொந்தளிப்பான சூழலில், வங்கிகள் கடன் வசூலிப்பதை நிறுத்தச் சொல்லி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உ.பி அரசு விவசாயிகளிடம் கடன் வசூல் செய்வதைத் தடைச் செய்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியும் கடனாளிகளின் புகைப்படங்களைப் பொதுவிடத்தில் வெளியிடுவதை நிறுத்தச் சொல்லி வங்கிகளுக்கு சுற்றறிக்கை அளித்திருந்தது.

மத்தியப்பிரதேசத்தில் வரும் 2017-ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதையொட்டி பா.ஜ.க, காங்கிரசு, சமாஜ்வாடிக் கட்சிகள் கடந்த 10 மாதங்களாக கடனைப் பற்றியும், சாதகமான திட்டங்களைப் பற்றியும் பண்டல் கண்ட் பகுதி விவசாயிகளிடம் விதவிதமான வெற்று சவடால்களை அள்ளிவீசத் தொடங்கிவிட்டன.

ஆனால் தொடர்ச்சியான வறட்சியால், போட்ட முட்டூலியைக் (விவசாயத்தின் அடக்கச் செலவு) கூட எடுக்கவியலாமல் அப்பகுதி விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் கடன் சுமையானது ஆண்டாண்டுக்கும் அதிகரிக்கிறது. “ஒட்டுமொத்த மாநிலத்தின் 45%  கடன்சுமையை ஒப்பிடும் போது பண்டல்கண்ட் பகுதி விவசாயிகளின் கடன்சுமை 80%” இருப்பதாக பண்டல்கன்ட் விவசாய சங்கத் தலைவரான அணில் பிரதான் கூறுகிறார்.

‘’2015-ல் வழங்கப்பட்ட 818 கோடி ரூபாய் கடனில் 664 கோடி நிலுவையில் இருப்பதாக’’ சித்ரகூட் மாவட்ட வங்கிகளின் கடன் திட்டங்களை நிர்வகிக்கும் மேலாளரான அபிநந்தன் மிஸ்ரா கூறுகிறார். அதே நேரத்தில் தரகு முதலாளி அதானி பொதுத்துறை வங்கிகளிடம் பெற்றக் கடன் தொகையான 72,000 கோடி ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் கடன் தொகைக்குச் சமமாகும்.

நய சந்திரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான விவசாயி ராம் லோச்சனின் பெயர் அந்த சுவரில் இரண்டு ஆண்டுகளாக இருக்கிறது. மணிக்பூர் அலகாபாத் வங்கியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டருக்காக அவர் வாங்கிருந்த 2.5 இலட்சம் கடன் இன்று 4 இலட்சத்து 90 ஆயிரமாக ஆகிவிட்டது. வறட்சி மட்டுமல்ல கடுமையான மழையும் அவரது பயிர்களை ஆகஸ்டு மாதத்தில் நாசம் செய்துவிட்டது. வேறு வழியில்லாமல் அவரது இரண்டு மகன்கள் விவசாயத்தையும் தந்தையையம் விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.

வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி அவமானப்படுத்தியுள்ளனர்
வாங்கியக் கடனைக் கட்டாததால் உத்திரப்பிரதேசம், சித்ரகூட் மாவட்டத்தின் மணிக்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 10 ஏழை விவசாயிகளின் பெயர்களைச் சுவற்றில் எழுதி அவமானப்படுத்தியுள்ளனர்

ராம் லோச்சனின் மூன்றாவது மகனான ஜகத்பால் தந்தையின் 5.6 ஏக்கர் நிலத்துடன் அவரது கடனையும் உரிமையாகப் பெற்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டில் ஒருநாள் வீட்டையும் டிராக்டரையும் பறிமுதல் செய்யப் போவதாகக் கடன் வசூலிப்பவர்கள் மிரட்டியிருக்கின்றனர். சுவரில் எங்களது பெயர் எழுதப்பட்ட நாளிலிருந்து கடனுடன் அவப்பெயரையும் சேர்த்துச் சுமக்கிறோம் என்று குமுறுகிறார் ஜகத்பால். ஆனால் அதே இந்திய ஜனநாயகம் தான் சுற்றுச்சூழலை நாசம் செய்ததற்காக அதானிக்கு விதிக்கப்பட்ட 200 கோடி அபராதத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி லோச்சன் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேருக்கு ஒரே குடும்ப அட்டை தான் வழங்கப்பட்டிருக்கிறது. எதை நாங்கள் சாப்பிடுவது?. “சில நேரங்களில் உப்பையும் ரொட்டியையும் சாப்பிடுகிறோம், பல நேரங்களில் அதுவும் இல்லை” என்கிறார் லோக்சன்.

ஏற்கனவே பசியால் துடித்துக் கொண்டிருக்கு ஜகத்பால் போன்ற ஏழைகளை, பழைய ரூவாய் நோட்டுக்களைச் செல்லாதாக்கியதன் மூலம் கிட்டத்தட்ட முடக்இ போட்டுவிட்டார் திருவாளர் மோடி. இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கான தியாகமென கூறுகிறார்.

அணில்குமாருக்கு அந்தச் சுவரில் மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் டிராக்டர் வாங்குவதற்காக வாங்கியக் கடன் 3 இலட்சம், தற்போது 6.1 இலட்சமாக எகிறிவிட்டது. எப்படிக் கடன் அதிகமானது என்பது அவருக்குத் தெரியவில்லை. கடனை வாங்கும் போது 9 % ஆக இருந்த வட்டிவீதம் தற்போது 14% ஆகிவிட்டது என்கிறார் அவர்.

ஆனால் அம்பானி கட்ட வேண்டிய 8299 கோடி வட்டியைக் கூட வங்கிகள் கேட்பதில்லை அல்லது கேட்க முடியாது. மாறாக அம்பானிக்கான புதியக் கடனில் அதைக் கழித்துக் கொள்கிறது அரசு.

2014 -ல் இன்டியாஸ்பென்டின் ஆய்வின்படி ஒரு பண்டல்கான்ட் விவசாயி வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடன் நான்கே ஆண்டுகளில் 18,704 ரூபாயாக அதிகரித்துவிடுகிறது. முதல் ஆறு மாதங்களில் 4 விழுக்காடாக இருந்த வட்டிவீதம் சில ஆண்டுகளில் 22 விழுக்காடாக எகிறி வீட்டுக்கடனை விடக் கொடுமையானதாக மாறிவிட்டது.

எள் அறுவடைக்குப் பிறகு கடனைக் கட்டிவிடலாம் என்ற அவரது கனவு, விளைச்சல் பொய்த்து விட்டதால் நொறுங்கிவிட்டது. கடனாக வாங்கிய டிராக்டரும் துன்பத்தைத் தவிர வேறேதும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவரது டிராக்டரைப் போலீஸ் பலமுறைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் ஒரு வழிபறிக் கொள்ளைக்காரனைப் போல அவர் மீது வழக்குப் போட்டுள்ளது. சொத்தைப் பறிமுதல் செய்துச் சிறையில் தள்ளிவிடுவோம் என்ற மிரட்டலால் பயந்து போன அனில்குமார் அலகாபாத் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கியிருக்கிறார். பொதுத்துறை வங்கிகளின் 9000 கோடியை ஏப்பம் விட்ட மல்லையாவைப் பிடிக்க வக்கில்லாத இந்திய அதிகார வர்க்கம் ஒரு ஏழை விவசாயின் மீது தனது வீரத்தைக் காட்டியிருக்கிறது.

adani40 வயதாகும் யோகேந்திர குமார் சிங்கிற்கு கடன் வாங்கியவர்களின் பட்டியலில் 9 வது இடம் கிடைத்திருக்கிறது. எட்டு ஆண்டுகளாக அவருக்கு நிலையான வேலை ஒன்றுமில்லை. 2008 ஆம் ஆண்டு பால் பண்ணைத் தொடங்குவதற்காக அவர் வாங்கிய 1.9 இலட்சம் கடன் தந்தையின் கல்லீரல் புற்றுநோயைச் சரி செய்யப் போதாததால் தனது 6 ஏக்கரில் 80% நிலத்தை விற்று விட்டார்.

ஆகஸ்டில் பெய்த கனமழையால் சேதமான அவரது வீட்டை ஏலம் விடுவதற்கானத் தேதியையும் வட்டாட்சியர் அறிவித்து விட்டார். கடனைத் திருப்பி கட்டவில்லையெனில் மீதமுள்ள அவரது நிலத்தையும் இந்த ஆண்டிற்குள் இழந்து விடுவார்.

அதுமட்டுமல்லாமல் சகோதரருக்கு சிறுநீரகக் குறைபாடு, மனைவிக்கு இதய நோய்க்கான மருத்துவ செலவுகள் எனக் கடன் 2.6 இலட்சமாக எகிறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக நிலம் படைத்த விவசாயியாக இருந்த அவர் தற்போது ஒரு உதிரிப் பாட்டாளியாய் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார்.

கடனையும், பூப்படைய இருக்கும் மகளையும் எண்ணியேத் தனக்கு நெஞ்சு வலி வருவதாகக் கூறுகிறார் சிங்கின் மனைவி. ஒரு நாளில் குறைந்தது மூன்று முறையாவது அவர் மயக்கமடைவதாக கூறுகிறார் சிங்கின் தமக்கை.

நான் என்ன செய்தேன்? திருடினேனா? இல்லை, ஏமாற்றினேனா? நான் செய்தது நேர்மையாக தொழில் செய்யலாம் என்று கடன் வாங்கியது தான் என்கிறார். நம்முடைய வசதியான வாழ்க்கைக்காக மேம்பாலங்களையும் கட்டிடங்களையும் கட்டும் அந்தத் தொழிலாளர்களின் ஆகப் பெரும்பான்மையாவர்களில் யோகேந்திர குமாரைக் காணலாம்.

இளைஞர்கள் வேலைத் தேடுபவர்களாக இருக்க கூடாது மாறாக வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என்று ஆரவாரமான மந்திர உச்சாடனத்துடன் மோடி பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா திட்டத்தைத் தொடங்கியிருந்தார். ஆனால் ஏற்கனவே கடனாளியான சிங் போன்ற ஏழை மக்களால் அத்திட்டத்தின் குறைந்தபட்சக் கடனான 50 ஆயிரம் கூட வாங்க இயலவில்லை. ஆனால் அம்பானி, அதானிகளுக்கு பொதுத்துறை வங்களில் சில இலட்சம் கோடி ருபாய்களே வழங்கப்பட்டிருக்கின்றன.

கடன் வாங்கிய விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். உயிரோடு இருந்தால் சுவற்றில் திருடர்கள் போன்று இழிவுபடுத்துகின்றன வங்கிகள்! மல்லையா தப்பி ஓடுகிறார். அதானி சிரிக்கிறார். மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் மோடி.

செய்தி ஆதாரம்:
Named and shamed: In Uttar Pradesh, debt-ridden farmers have their backs to the wall
‘Adani’s debt equals to entire farm debt’

பாசிச கோமாளி ! கேலிச்சித்திரம்

0
பாசிச கோமாளி slider

பாசிச கோமாளி

பாசிச கோமாளி

“நாட்டை எப்போதும் பதட்டமாகவே வைத்திருக்க வேண்டும். அமைதி நிலவினால் மக்கள் சிந்திப்பார்கள். சிந்தித்தால் நமது பலவீனங்கள் தெரிந்துவிடும்.” – இட்லர்

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

நரேந்திர மோடி: “வளர்ச்சியின்” நாயகனா, கொள்ளைக்கூட்டத் தலைவனா ?

6

யணிகளின் பர்ஸை காலி செய்வதில் தனியார் ஆம்னி பேருந்துகளைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவிற்கு பயணக் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது, இந்திய ரயில்வே துறை. சனி, ஞாயிறு உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் டிக்கெட் விலை, இந்திய ரயில்வே துறை பயணிகள் சேவையைக் கைகழுவிவிட்டு, ஏலக் கம்பெனியாக மாறிவிட்டதை எடுத்துக் காட்டுகிறது. பொருளுக்குள்ள கிராக்கியைப் பொருத்து ஏலத்தொகை ஏறிக் கொண்டே போவதைப் போல, பயணிகளின் கூட்டத்தைப் பொருத்து சுவிதா ரயில்கள் என்றழைக்கப்படும் சிறப்பு ரயில்களின் கட்டண வீதம், வழமையான கட்டணத்தைக் காட்டிலும் 20 சதவீதம், 40 சதவீதம் என ஏறிக்கொண்டே போகும் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

railway-robbery-3
ரயில் பயணத்திற்குத் திரளும் கூட்டத்தைக் கொண்டு, ரயில்வே துறையை மாபெரும் கொள்ளைக்கார நிறுவனமாக மாற்றி வருகிறது, மோடி அரசு.

தனியார் ஆம்னி பேருந்துகளின் பண்டிகைக் காலக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடும் வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால், இந்த ஒப்புக்குச் சப்பாணியான வாய்ப்பைக்கூட, இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ள வளர்வீதக் கட்டணத்திற்கு எதிராகப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், அரசே அறிவிப்பதால் இந்த வளர்வீதக் கட்டண வீதத்திற்குச் சட்டபூர்வ அந்தஸ்து கிடைத்துவிடுவதோடு, சிறப்பு ரயில்கள் மற்றும் துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட அதி விரைவு சொகுசு ரயில்கள்; மேலும், எதிர்காலத்தில் இயக்கப்படவுள்ள புதிய அதிவிரைவு ரயில்கள் அனைத்திற்கும் வளர்வீதக் கட்டணம்தான் நிர்ணயிக்கப்படும் என்பதைக் கொள்கையாகவே அறிவித்துவிட்டது, இந்திய ரயில்வே துறை. இத்தகைய “வளர்ச்சி”யை முன்னிறுத்தும் அரசின் கொள்கை முடிவுகளை நீதிமன்றங்கள் கேள்விக்குள்ளாக்குவதுமில்லை, தலையிடுவதுமில்லை.

தனியார் விமான நிறுவனங்கள் அதிரடி இலாபத்தை அடையும் நோக்கில் அறிமுகப்படுத்தியதுதான் இந்த வளர்வீதக் கட்டணம். இக்கட்டண முறையைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், புதுப்பட ரிலீஸ் நாளன்று தியேட்டர் வாசலில் கூடுதல் விலையில் விற்கப்படும் கள்ள டிக்கெட்டுக்கும், இதற்கும் அதிக வேறுபாடில்லை. கூட்டத்தைப் பொருத்து டிக்கெட்டின் ரேட்டை தியேட்டர் வாசலில் தீர்மானித்தால், அது கள்ள டிக்கெட். அதையே கவுண்டருக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டு செய்தால், அதன் பெயர் வளர்வீத கட்டண முறை. இந்த நெறியற்ற, முறைகேடான வர்த்தக யுத்தியைத்தான் இந்திய ரயில்வே துறைக்குள் புகுத்தியிருக்கிறது, மோடி அரசு.

சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயிலில் படுக்கை வசதி டிக்கெட் கட்டணம் ரூ.315/-. இதுவே சுவிதா ரயில் என்றால், அதே படுக்கை வசதி டிக்கெட் விலை ரூ.1,105/-க்கு எகிறிவிடும். தூரமோ, வண்டியின் வேகமோ, பயண நேரமோ மாறாதபொழுது, டிக்கெட் விலை மட்டும் மூன்று மடங்காக வீங்கிப் போவதன் சூட்சமத்தைப் புரிந்துகொள்ள பொருளாதார அறிவெல்லாம் தேவையில்லை. பதுக்கி வைத்திருக்கும் சரக்கைக் கொஞ்சம் கொஞ்சமாகவும் படிப்படியாக விலையை ஏற்றியும் சந்தையில் விற்கும் பதுக்கல் வியாபாரிகளின் கிரிமினல் வியாபார யுத்தியைத்தான் மோடி அரசும் பயன்படுத்தி வருகிறது.

railway-robbery-captionமுதலாவதாக, சுவிதா ரயில்களில் டிக்கெட் கட்டணம் வழமையான கட்டணத்தைப் போல் அல்லாமல், தட்கல் கட்டணத்திற்கு இணையாக அதிக விலையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டாவதாக, இந்த தட்கல் கட்டணத்தின்படியும் ரயிலின் மொத்த டிக்கெட்டுகளும் விற்கப்படுவதில்லை. ரயிலின் மொத்த இருக்கைகளில் முதல் இருபது சதவீத இடங்கள் மட்டுமே இந்த தட்கல் கட்டணத்தில் விற்கப்படுகின்றன. அவை விற்ற பிறகு, அடுத்த 20 சதவீத இடங்கள், முந்தைய கட்டணத்தைவிட 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படும். அவை விற்ற பிறகு, அடுத்த இருபது சத இடங்கள் தட்கல் கட்டணத்தைப் போல இரு மடங்கு விலையிலும், அடுத்த இருபது சதவீத இடங்கள் 2.5 மடங்கு விலையிலும், கடைசி 20 சதவீத இடங்கள் மூன்று மடங்கு விலையிலும் விற்கப்படும்.

கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு கட்டணக் கொள்ளை அடிப்பது மட்டும் மோடி அரசின் நோக்கமல்ல. ஓரளவு குறைந்த கட்டணத்தில் ரயில் பயணம், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பயணச் சலுகைகள் – என இதுகாறும் பொதுமக்கள் பெற்றிருந்த உரிமைகளை ரத்து செய்துவிட்டு, ரயில்வே துறையைத் தனியார்மயத்திற்கு ஏற்றவாறு அதிரடி இலாபம் தரும் துறையாக மாற்றியமைப்பதுதான் மோடி அரசின் திட்டம். அதற்கான பரிசோதனைக் களமாக இருப்பதுதான் சுவிதா ரயில்கள்.

ரயில்வே துறையின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் சாதாரணப் பெட்டிகளைக் கழட்டிவிட்டுவிட்டு, அவற்றின் இடத்தில் இணைக்கப்படும் எல்.எச்.பி. பெட்டிகள்
ரயில்வே துறையின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் சாதாரணப் பெட்டிகளைக் கழட்டிவிட்டுவிட்டு, அவற்றின் இடத்தில் இணைக்கப்படும் எல்.எச்.பி. பெட்டிகள்

சுவிதா ரயில்களில் குழந்தைகளுக்குக்கூட முழு டிக்கெட்தான் எடுக்க வேண்டும். முதியவர்களுக்குத் தரப்படும் சலுகைக் கட்டணம் கிடையாது. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்னால் மட்டுமே  ரத்து செய்ய முடியும்; அதற்கும் 50 சதவீதக் கட்டணம்தான் திருப்பித் தரப்படும். ஆறு மணி நேரத்திற்குள் ரத்து செய்ய நேர்ந்தால் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இவை எல்லாவற்றையும்விடக் குரூரமானது என்னவென்றால், சுவிதா ரயில்களில் பொதுப் பெட்டிகளே கிடையாது. இதன் மூலம் சுவிதா ரயில் சேவை மிகச் சாதாரணமான, எளிய பயணிகளைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கிறது.

வழமை போலவே, பயணிகள் ரயில் சேவையால் அரசுக்கு நட்டமேற்படுகிறது என்ற அழுகுணித்தனமான காரணத்தை முன்வைத்து, இந்த வளர்வீதக் கட்டண முறையை மோடி அரசும் அதனின் துதிபாடிகளும் நியாயப்படுத்தி வருகிறார்கள். இலாப நோக்கோடு நடத்துவதற்கு பயணிகள் ரயில் சேவை வியாபாரம் கிடையாது. அது அரசின் தார்மீகப் பொறுப்பும் கடமையுமாகும். இதுவொருபுறமிருக்க, பயணிகள் ரயில் சேவையால் நட்டமேற்படுகிறது என்பதால், ரயில்வே துறையே நட்டத்தில் இயங்கி வருவதாகக் கூறவும் முடியாது.

2015-16 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மோடி அரசு, அதற்கு முந்தைய ஆண்டில் ரயில்வே துறை மைய அரசுக்கு 8,008 கோடி ரூபாயை இலாப ஈவாகத் தந்திருப்பதாகவும், இதற்கு அப்பால் ரயில்வே 3,740 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருப்பதாகவும் அப்பட்ஜெட்டிலேயே அறிவித்தது.

வசதி படைத்தவனுக்குச் சொகுசுப் பயணம்; ஏழைகளுக்கு மரணத்தோடு விளையாடுகின்ற பயணம்: ரயில்வே சேவையில் காணப்படும் வர்க்க ஏற்றத்தாழ்வு
வசதி படைத்தவனுக்குச் சொகுசுப் பயணம்; ஏழைகளுக்கு மரணத்தோடு விளையாடுகின்ற பயணம்: ரயில்வே சேவையில் காணப்படும் வர்க்க ஏற்றத்தாழ்வு

பயணிகள் சேவையைக் குறைந்த கட்டணத்தில் தருவதற்கான மானியத்தை மைய அரசு தனது கையிலிருந்து தருவதில்லை. மாறாக, சரக்குக் கட்டணத்திலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து அந்த மானியத்தை ரயில்வே துறை தானே ஈடு செய்து கொள்கிறது. இந்த உள்மானியத்தையும் (cross subsidy) ரயில்வேயின் இலாபத்தோடு சேர்த்துக் கணக்கீட்டால், ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை 30,000 கோடி ரூபாய்க்கு மேல் இலாபமீட்டும் பொன் முட்டையிடும் வாத்தாகும்.

பெட்ரோல், டீசலுக்குத் தரப்பட்டு வந்த உள்மானியத்தை முற்றிலுமாக ரத்து செய்து, அப்பொருட்களைச் சந்தை விலைக்கு வாங்க வேண்டிய நிலையை உருவாக்கியதைப் போல, ரயில் கட்டணத்தையும் மாற்றியமைக்கத் தீவிரமாக முயன்று வரும் மோடி அரசு, அதனைப் பல்வேறு வழிகளில் நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களையொட்டி வழமையான கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதைக் கைவிடுவதை காங்கிரசு கூட்டணி அரசு தொடங்கி வைத்தது என்றால், சுவிதா ரயில்கள் மட்டுமே இனி சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்பதைக் கொள்கை முடிவாகவே அறிவித்திருக்கிறது, மோடி அரசு. அவரது தலைமையில் வலதுசாரி பார்ப்பன-பனியா ஆட்சி அமைந்தவுடனேயே, ரயில் பயணக் கட்டணம் 14 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டது. தொழிலாளர்களும் ஊழியர்களும் பயன்படுத்திவரும் மாதாந்திர பயணக் கட்டணமும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கப்பட்டது. பயணக் கட்டணம் மட்டுமின்றி, நடைமேடைக் கட்டணமும் இரு மடங்காக, ரூபாய் பத்தாக உயர்த்தப்பட்டு, ரயில்வே நிலையத்திற்குள் நுழைவதே சூதாட்ட கிளப்புக்குள் தலையைக் கொடுப்பது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

மேலும், பயணக் கட்டணத்திற்கு மேல் சூப்பர் பாஸ்ட் கட்டணம், சேவை வரி, கல்வி வரி, தூய்மை இந்தியா வரி, விவசாய நல வரி என மறைமுகக் கட்டணங்கள் ஏற்றப்பட்டன. சில்லரை பிரச்சினையைத் தீர்ப்பது என்ற பெயரில் டிக்கெட் கட்டணம் அனைத்தும் ஐந்து ரூபாய்களின் மடங்குகளாக மாற்றம் செய்யப்பட்டன. பிரீமியம் சிறப்பு ரயில், தட்கல் பிரிமீயம் சிறப்பு ரயில், தட்கல் சிறப்பு ரயில் எனப் பெயர்களை மாற்றிமாற்றிப் போட்டு, கட்டணக் கொள்ளைக்கான ரயில்களை அறிமுகப்படுத்துவது வாடிக்கையாகிப் போனது.

railway-robbery-2
வசதி படைத்தவனுக்குச் சொகுசுப் பயணம்; ஏழைகளுக்கு மரணத்தோடு விளையாடுகின்ற பயணம்: ரயில்வே சேவையில் காணப்படும் வர்க்க ஏற்றத்தாழ்வு

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பயணிகள் வருமானத்தை 46,000 கோடி ரூபாயிலிருந்து 51,000 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என அறிவித்த கையோடு, ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி சொகுசு ரயில்களில் இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. வளர்வீதக் கட்டண முறையைக் கொண்ட சுவிதா ரயில்கள் மட்டுமே சிறப்பு ரயில்களாக இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் விரைவு ரயில் உள்ளிட்டுப் பல்வேறு விரைவு ரயில்களை அதிவிரைவு ரயில்களாக அறிவித்து, மறைமுகக் கட்டண உயர்வு திணிக்கப்பட்டது.

ரயில்வேயை நவீனமயமாக்குவது என்ற முகாந்திரத்தில் நீளம் குறைந்த சாதாரண பெட்டிகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் நீளம் அதிகமான, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளின் எண்ணிக்கை அதிகம்கொண்ட, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்படுகின்றன. அதேசமயத்தில், ரயிலின் மொத்த நீளம் அதிகமாகவதைத் தவிர்ப்பதற்காக, மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்படும் தனிப் பெட்டிகளை அகற்றுவது, பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்றவாறு சாதாரண பயணிகளின் உரிமைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் முன்பதிவு செய்ய இயலாத ஏழைகள் அல்லது திடீர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் விலங்குகளைப் போல மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்படுகிறது.

துரந்தோ, சதாப்தி, ராஜ்தானி சொகுசு ரயில்களின் கட்டண உயர்வின் மூலம் மட்டும் ரயில்வேக்கு இந்த ஆண்டில் 500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிட்டும் என்றும்; ஒவ்வொரு சுவிதா ரயிலின் மூலமும் கிடைக்கும் வருமானம், அந்த ரயிலை இயக்குவதற்கு ஆகும் செலவிற்கு அப்பால், 4 சதவீத இலாபத்தைத் தருகிறதென்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கும் மேலாக, அனைத்துவிதமான பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு பெட்டிகளின் இடத்தில் குளுரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டு வருவதன் மூலம் பயணிகள் சேவையை அதிரடி இலாபமீட்டும் துறையாக மாற்றத் திட்டமிடுகிறது, மோடி அரசு. இதன் தொடக்கமாக, அனைத்தும் ஏ.சி. பெட்டிகளாகக் கொண்ட ஹம்ஸஃபர் ரயில்கள் அறிமுகமாகவுள்ளன.

இது குறித்த தொலைக்காட்சி விவாதத்தின்பொழுது பா.ஜ.க. பிரமுகர் நாராயணன், “யாரால் முடியுமோ, அவர்களிடமிருந்துதான் நாங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம்” எனப் பதில் அளித்தார். மிகச் சாதுர்யமாகச் சொல்லப்பட்டிருப்பதைப் போலத் தோன்றும் இந்த பதில் ஒரு மோசடி.

ஏ.சி. பெட்டிகளின் பயணச்சீட்டுக் கட்டணம் விமான கட்டணத்திற்கு இணையாக இருப்பதால், மேல்தட்டு வர்க்கத்தினர் ரயிலைவிட, விமான பயணத்திற்கு முன்னுரிமை தருகின்றனர். நடுத்தர வர்க்கமும்அதற்கும் கீழாக உள்ள ஏழைகளும் மட்டுமே இன்னமும் தமது பயணத்திற்கு அரசு பேருந்துகளையும் ரயில்களையும்தான் நம்பியுள்ளனர். குறிப்பாக, வேலை தேடி, வாழ்வாதாரம் தேடி இலட்சக்கணக்கான ஏழைகள் இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள நகரங்களை நோக்கி விசிறியடிக்கப்படும் நிலையில், அந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசரத் தேவைகளுக்கோ, வருடத்துக்கு ஒரிரு முறையோ தமது சொந்த கிராமத்துக்குச் சென்று திரும்புவதற்கு எளிமையான, கொஞ்சம் வசதியான போக்குவரத்துச் சாதனமாக ரயில்தான் இருந்து வருகிறது. நகரமயமாக்கம் தீவிரமடைய, தீவிரமடைய, அதற்கு நேர் விகிதத்தில் பயணிகள் கூட்டமும் அதிகரித்துச் செல்கிறது. இந்த நிலையில், ரயில் கட்டணத்தைச் சந்தையின் சூதாட்டத்துக்கு ஏற்ப உயர்த்திக்கொண்டே போவது ஏழைகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிரான போர் என்றுதான் சொல்ல முடியும்.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________