Friday, August 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 722

ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!

95
முதலாளித்துவம்
முதலாளித்துவ நியாயம்.

“பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான், அது போல பணம் இருக்கிறவன் காபி ஷாப்பில் காபி சாப்பிடுவான், 7 நட்சத்திர ஹோட்டலில் தண்ணி அடிப்பான், வேலியிட்ட குடியிருப்பில் வீடு வாங்குவான், அப்பல்லோவில் சிகிச்சை பார்த்துப்பான்.’ அதைப் பார்த்து ஏன் பொறாமைப்படுறீங்க?”

‘யாருக்கு பொருட்களும் சேவைகளும் கிடைக்க வேண்டும்’ என்பதற்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களின் பதில் இதுதான்.

ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். முதலாளித்துவ கனவு உலகத்தில், ஐடியல் சந்தை பொருளாதாரம் செயல்படும் ‘பூலோக சொர்க்கத்தில்’, மருந்து வாங்குவதற்கு அவர் மாதம் ரூ 1.5 லட்சம் செலவழிக்க வேண்டும். அதாவது கிலிவெக் என்ற பெயரில் நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருந்தை வாங்கிச் சாப்பிட்டு நோயை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு ஆண்டுக்கு ரூ 18 லட்சம் செலவழிக்க வேண்டும். 5 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 90 லட்சம், 10 ஆண்டுகள் உயிரோடு இருக்க ரூ 1.8 கோடி.

இவ்வளவு பணத்தை யார் செலவழிக்க முடியும்? அந்தப் பணம் எப்படி வந்திருக்கும் என்று யாரும் கேட்கப் போவதில்லை. ‘நாய் விற்ற பணம் குரைக்கப் போவதில்லை’, அதனால் நாயையோ, பேயையோ விற்று பணம் குவித்த முதலாளிகளுக்கு மட்டும்தான் வாழும் உரிமை இருக்கும்.

‘அப்படி பணம் குவித்திருக்காதவர்கள் செத்து விட வேண்டியதுதான். அவ்வளவு பணம் சம்பாதிக்க வக்கில்லாத ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன பலன்’ என்கிறது முதலாளித்துவம்.

“உயிர் காக்கும் மருந்துகளை கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிக்கு பெருத்த செலவாகிறது. கண்டு பிடித்த மருந்துகளை மருந்தகங்களில் பரிசோதனை செய்து, தேசிய மருந்து ஒழுங்குமுறை கழகங்களிடம் ஒப்புதல் வாங்க இன்னும் பெரும் தொகை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்த மருந்தை அதிக விலைக்கு விற்றால்தான் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு பணம் கிடைக்கும்” என்ற வாதத்தின் அடிப்படையில் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் நலனை பாதுகாக்க மேற்கத்திய நாடுகளில் காப்புரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. ஒரு புதிய மருந்தை முதலில் கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டு வந்த நிறுவனத்துக்கு அந்த மருந்தை உற்பத்தி செய்து விற்பதற்கு 20 ஆண்டுகள் தனி உரிமை கொடுக்கப்படுகிறது. கண்டுபிடித்த நிறுவனத்தின் அனுமதி இன்றி மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தை நகல் செய்து உற்பத்தி செய்வது சட்டப்படி குற்றம்.

அறிவியல் ஆராய்ச்சி, தொழில் நுட்ப முன்னேற்றம் அனைத்தும் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் உழைப்பின் பலன்கள்; ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன் வந்த ஆயிரக்கணக்கான முன்னோடிகளின் தோள்களின் மீது நின்றுதான் புதிய அறிவியல் முன்னேற்றங்களை நிகழ்த்துகிறது.

அறிவியல் என்பது நோவார்டிஸ் கம்பெனியின் கிணற்றுக்குள்ளோ, ஒரு தனிநபர் வீட்டு புழக்கடையிலோ விளைவதில்லை. உலகெங்கிலும் உள்ள பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் நோய்களின் உடற்கூறு பற்றியும் அவற்றுக்கான மருந்துகள் பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. புகழ் பெற்ற ஆய்வு இதழ்களில் வெளியாகும் இந்த ஆராய்ச்சி முடிவுகள்தான் புதிய மருந்துகள் உருவாக்குவதற்கான விளைநிலம். சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒட்டு மொத்த உலகும் சேர்ந்து ஆதரிப்பதுதான் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சி; எந்த தனிப்பட்ட நிறுவனமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. இப்போது மேற்கத்திய அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் படி அறிவுக்கு சொந்தம் கொண்டாட வேண்டுமானால், மனித குலத்தின் பொது அறிவுக் களஞ்சியத்திலிருந்து எந்த ஆதாயமும் பெறாத ஒரு குழுவை நிறுவனம் உருவாக்க வேண்டும்.

கிலிவெக் மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் ஒரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் பிரியன் டிரக்கர், ‘தங்களது ஆய்வுக்கான செலவில் 10% மட்டுமே நோவார்ட்டிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்றும், 90% அரசு மற்றும் கல்வி ஆய்வு நிறுவனங்களின் பங்களிப்பு’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அறிவியலை வளர்த்துச் செல்ல முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் முறையின் முட்டாள்தனம் விரிவாக விவாதிக்கப்பபட வேண்டிய விஷயம். இங்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு தொடர்பான விபரங்களை மட்டும் பார்ப்போம்.

பன்னாட்டு நிறுவனங்கள்
நாட்டு உரிமைகளை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள்.

காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புரிமை காலாவதி ஆன பிறகு, மற்ற நிறுவனங்களும் உற்பத்தியில் நுழைய விலை 20-ல் ஒரு பங்காக வீழ்ந்து விடுகிறது.

ஆனால், இந்தியாவின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இயற்றபட்ட இந்திய காப்புரிமை சட்டம் 1970 வித்தியாசமாக இருந்தது. மருந்து பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவது சட்டத்தில் இல்லை. மாறாக, மருந்தை உற்பத்தி செய்யும் முறைக்குத்தான் காப்புரிமை வழங்கப்பட்டது. அதுவும் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்கப்படும். இதன்படி பன்னாட்டு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்த புதிய மருந்தை மாற்று முறையில் இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து அதே மருந்தை பல மடங்கு குறைந்த செலவில் சந்தைப் படுத்த முடிந்தது. இப்படி உருவாக்கப்பட்ட மருந்துகள் அடிப்படை மருந்துகள் (generics) என்று அழைக்கப்படுகின்றன.

இதன் மூலம் இந்தியாவிலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கத்திய நிறுவனங்களின் மருந்து விலைகள் கட்டுப்படியாகாத மக்கள் கோடிக்கணக்கான பேர் பலன் பெற்றார்கள்.

1990களுக்குப் பிறகான ஒற்றைத் துருவ மேலாதிக்க உலகில் ‘ஒரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொன்னாலும் சரி, அமெரிக்கா வைப்பதுதான் சட்டம்’ என்பதை நிரூபிக்கும் விதமாக காட் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். ‘அப்படி உலகப் பொருளாதாரத்தோடு இரண்டற கலந்து விடா விட்டால் நாட்டில் சோறு, தண்ணீர் கிடைப்பது நின்று போகும்; குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இறந்து போவார்கள்; பள்ளிக் கூடங்கள் நடப்பது நின்று போகும்; மருத்துவமனைகள் செயலிழந்து விடும்’ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்திலும் (TRIPS) இந்திய அரசு கையெழுத்திட வைக்கப்பட்டது. அதற்கேற்ப இந்தியாவின் காப்புரிமை சட்டம் 1999, 2002, 2005, 2006 ஆண்டுகளில் மாற்றப்பட்டது. இனிமேலும் புதிய நிபந்தனைகள் பன்னாட்டு நிறுவனங்கள் முன் வைக்கும் போது அவற்றிற்கு ஏற்ப சட்டம் மாற்றப்படும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

இந்த திருத்தங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் என்ன செல்லுபடியாகுமோ அதுதான் இந்தியாவிலும் செல்லுபடியாகும். ‘மருந்து நிறுவனங்களுக்கு மருந்து மீதான காப்புரிமை வழங்கப்பட வேண்டும், அதுவும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை வழங்கப்பட வேண்டும். அடிப்படை வடிவிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாது.’

இதன் விளைவாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்திய மருந்து நிறுவனங்கள் ரான்பாக்ஸி, பிரமல், மேட்ரிக்ஸ் லேப், ஆர்சிட் நிறுவனத்தின் ஒரு பிரிவின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி துறைகள் என்று வரிசையாக பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்பட்டன.

இனிமேல் புதிதாக கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு மருந்துக்கும் சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனம் வைப்பதுதான் விலை. அதற்கான காப்புரிமையை இந்திய அரசு வழங்கியே தீர வேண்டும். இனிமேல் மார்பகப் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் சிகிச்சை பெற்று உயிர் வாழ முடியும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நிலைமையை இம்மியளவு கூட மாற்றி விடவில்லை. அமெரிக்க காப்புரிமை சட்டங்களை வளைத்து விளையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு உத்தியை மட்டும் இந்தியாவில் தடுத்திருக்கிறது, அவ்வளவுதான்.

நோய் பற்றி ஆராய்ச்சி செய்வது, அதற்கான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடிப்பது, அதற்கான பரிசோதனைகளை நடத்துவது என்று நீண்ட முயற்சிக்குப் பிறகு லாபம் கிடைப்பதை முதலாளிகளின் லாப வேட்கை சகித்துக் கொள்ளப் போவதில்லை. குறுக்கு வழியில் லாபத்தை பெருக்க கண்டு பிடித்த வழிகளில் ஒன்றுதான் “என்றென்றும் பசுமை” என்ற முறை. அதாவது ஒரு மருந்தின் மூலம் என்றென்றும் லாப அறுவடை செய்யும் வழிமுறை.

மருந்தின் 20 ஆண்டு கால காப்புரிமை காலாவதி ஆவதற்கு முன்பு அந்த மருந்தின் உள்ளடக்கத்தில் ஒரு சிறு மாற்றம் மட்டும் செய்து புதிதாக காப்புரிமைக்கு விண்ணப்பிப்பார்கள். ‘இந்த மாற்றத்தினால் நோய்க்கான சிகிச்சை பல மடங்கு மேம்பட்டிருக்கிறது’ என்று விளம்பரம் செய்வார்கள். ஒரிஜினல் மருந்துக்கும் ‘புதிய’ மருந்துக்கும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோக சந்தை உரிமை கிடைத்து விடும்.

கிலிவெக் மருந்தின் காப்புரிமை காலம் முடியப் போகிறது. சென்ற ஆண்டு மட்டும் நோவார்டிஸ் $8.5 பில்லியன் மதிப்பிலான கிலிவெக் மருந்துகளை உலகம் முழுக்க விற்றிருக்கிறது. அந்த ஏகபோக சந்தை வருமானத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கிலிவெக் மருந்தில் அப்படி ஒரு மாற்றம் செய்து இமதினிப் மெசிலேட் என்ற வேதி சேர்மத்துக்கான காப்புரிமைக்கு சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது நோவார்டிஸ்.

சென்னை அலுவலகம் அந்த விண்ணப்பத்தை 2006-ம் ஆண்டு நிராகரித்து விட்டது. ‘இந்திய காப்புரிமை சட்டம் (2005)ன் பிரிவு 3(d)ன் படி அப்படி சிறு அளவு மாற்றம் செய்யப்பட்ட மருந்துகளுக்கு காப்புரிமை இல்லை’ என்று சொல்லி விட்டது.

அதை எதிர்த்து நோவார்டிஸ் சென்னை உயர் நீதி மன்றம், இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டுக் கழகம் இவற்றில் மேல் முறையீடு செய்து இறுதியாக ஆகஸ்ட் 2009-ல் உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கை கொண்டு வந்தது. அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. ‘சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் முடிவு சரியானதுதான், நோவார்டிஸூக்கு கிலிவெக் மருந்தில் சிறிதளவு செய்த மாற்றத்தின் அடிப்படையில் காப்புரிமை வழங்க முடியாது’ என்று முடிவு செய்திருக்கிறது.

ஆனால், இதே அடிப்படையில் சீனா, ரஷ்யா, தாய்வான் உட்பட 40 நாடுகளில் நோவார்டிஸ் காப்புரிமை பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் காப்புரிமை பெறுவதற்கான தடைகளை தகர்த்தெறிவதற்கு முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

மன்மோகன் சிங் - ஏஞ்சலா மெர்கல்
மன்மோகன் சிங் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உடன்.

ச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே ‘இனிமேல் இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் வருவதே குறைந்து போகும்’ என்று எச்சரித்தார் நோவார்டிஸ் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் ரஞ்சித் ஷாஹானி. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

இப்போது ஜெர்மனிக்கு காவடி தூக்கிக் கொண்டு போயிருக்கும் மன்மோகன் சிங், ‘இது தொடர்பான புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று ஜெர்மனி வலியுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லுடனான மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகிக்கப் போகிறது. அந்த ஒப்பந்தத்தில் அறிவு சார் சொத்துரிமையில் உலக வர்த்தக நிறுவன பொறுப்புகளை விட உறுதியான சட்டங்களை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை வலியுறுத்துகிறது.

இந்திய நீதித் துறையில் சாதகமான தீர்ப்பு கிடைக்கா விட்டால், சட்டத்தையே மாற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.

“பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” என 2012-13 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையில் குறிப்பிட்ட நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை’ என்று பிரகடனம் செய்து, ‘அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொல்கிறார்.

அதன்படி, இந்த ஆண்டு இல்லா விட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்குள், காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் இல்லா விட்டால் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும் அசௌகரியங்கள் நீக்கப்பட்டு தடையின்றி அன்னிய மூலதனம் இந்தியாவிற்குள் பாய்வதற்கான மடை வெட்டப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலமும் சாதாரண மக்களுக்கு அடிமை வாழ்வும் உறுதி.

– அப்துல்

மேலும் படிக்க
HIV cancer patients seek access to affordable medicines
A Just order
Top three MNC pharma companies Novartis, Pfizer and Abott lose 10 in 2013
Novartis loses Indian Glivec patent case
Novartis denied cancer drug paten

தமிழகத்தைத் துண்டாட குஷ்பு சதி!

21

விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலுக்கு ஒரு அவசரக் கடிதம்

______________________________________________________________________________________________________________________

ஜெயபாரதம்

அயோத்தியில் ராமனுக்கு                                                                                                        ஆலயம் அமைப்போம்

பூஜ்ய ஸ்ரீ அஷோக் ஷிங்கால்ஜி அவர்களின் சமூகத்திற்கு
ராமஸ்வாமியின் பணிவான விக்ஞாபனம்:

ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியைப் பார்த்தேன். ஸ்ரீராமனின் ஜென்மபூமியைக் கண்டு பிடித்ததுடன், பரதன் பாதுகையைப் பெற்ற மரத்தடியையும் நீங்கள் கண்டு பிடித்து விட்டது பற்றி ரொம்ப ஸந்தோஷம். இந்த மரத்தடியை முஸல்மான்கள் எப்படி விட்டு வைத்தார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. போகட்டும். இங்கே தமிழ்நாட்டில் நம்மவா ஆட்சிதான் என்றாலும் அவ்வப்போது மனக்கிலேசத்தை உண்டு பண்ணக்கூடிய கார்யங்கள் நடக்காமலில்லை. நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

குஷ்பு
இந்து கடவுள் படங்கள் கொண்ட சேலையை அணிந்தார் என்று தமிழகத்து ஸ்ரீராம் சேனாவான இந்து மக்கள் கட்சி குஷ்புவை எதிர்த்தது.

ஸமீபத்தில் மதறாஸ் ‘குமரன் சில்க்ஸ்’ கடையில் என் பெண்ணுக்கு பட்டுப்புடவை வாங்கப் போயிருந்தேன். இந்த வருஷ தீபாவளிக்கு அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் புடவைக்கு ‘குஷ்பு சேலை‘ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் நான் கடையைவிட்டு வெளியில் வந்துவிட்டேன். கடை முதலாளியும் ஹிந்துதான் என்பதை சொல்லத்தேவையில்லை. இங்கே திரும்பின இடமெல்லாம் குஷ்பு வளையல், குஷ்பு பொட்டு, பொட்டுக்கும் குஷ்புவுக்கும் என்ன ஸம்பந்தம்? கேட்க சகிக்கவில்லை. அதிகம் சொல்வானேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் என் கடைசிப் பையன் கூட நோட்டுப் புஸ்தகத்துக்குள் இந்தப் பிசாசின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த குஷ்பு என்பவள் தமிழ் சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை. இருந்து விட்டுப் போகட்டுமே என்று அலட்சியம் பண்ணிவிடாதீர்கள். அவள் ஒரு முஸ்லீம். அவளுடைய உண்மைப் பெயர் நக்கத். பம்பாய்க்காரியாம். இந்துவா முஸ்லீமா என்று கண்டு பிடிக்க முடியாதபடி குஷ்பு என்று வேண்டுமென்றே ஈரெட்டாக தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்த விஷயத்தையே நான் தற்செயலாக ஒரு சினிமா பத்திரிகையைப்பார்த்துதான் தெரிந்துகொண்டேன். ‘ஹிந்துவே விழிப்புணர்வுகொள்’ என்று சொல்லிக்கொண்டு நம் பத்திரிகைகள் தூங்குகின்றன.

ஹிந்து சமுதாயத்துக்கு ஏன்தான் இப்படி புத்திகெட்டுப் போனதோ தெரியவில்லை. விநாயகர் சதுர்த்தி பந்தலில் ‘கூந்தலிலே என்ன பூ குஷ்பு’ன்னு மைக்செட்டில் பாட்டு போட்டு போடறான் ஒரு சேரி ஹிந்து. ஹிந்து சமூகத்தில் பிளவு உண்டாகிவிடப் போகிறதே என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் வந்தேன். நம்மவாளே சினிமாவில் இப்படி பாட்டு போடும்போது நாம் அவனை எப்படி கேட்க முடியும்? பாலசந்தர், மணிரத்தனம், விசு, ஜீவி இவாளுக்கெல்லாம் நீங்களாவது சொல்ல வேணும். இல்லையானால் ஆசாரிய சுவாமிகளையாவது இதில் தலையிட்டு அவாளுக்கு புத்தி சொல்லச் சொல்லவும். இப்படியெல்லாம் எழுதுவதால் லெளகிக நிலைமை புரியதாவன் என்று என்னை எடைபோட்டு விட வேண்டாம்.

இன்றைக்கு ஸினிமாதான் எல்லாம் என்று ஆனபிறகு நாமும் இறங்கி ஒருகை பார்த்துவிட வேண்டியதுதான். இந்த அகண்ட ஹிந்து தேசத்தில் ஹிந்து பெண்களுக்கா பஞ்சம்? நமக்கு பாரம்பர்யம்தான் இல்லையா? ரம்பை, ஊர்வசியென்ன, திலோத்தமையென்ன, அப்ஸரஸ் ஸ்திரீகள் என்ன…. ஆனானபட்ட விஸ்வாமித்ரனையே வழிக்குக் கொண்டுவந்த மேனகை பிறந்த பூமியல்லவா இது. அந்த காலத்தில் ஆலயங்கள் இந்தமாதிரி விஷயங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தன. இப்போ எல்லாமே ஸினிமா கொட்டகைதான். சிற்பிகளும் இப்போது சுவாரசியமில்லை.

தமிழ் பார்ப்பனர்போன எலக்ஷனில் சத்ருக்னன் சின்ஹா மாதிரி ஹிந்து நடிகர்களை ஈடுபடுத்தியதிலிருந்து நீங்கள் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டிருப்பது தெரிகிறது. இருந்தாலும் லக்ஷணமான ஸ்திரீகள் இல்லாத பக்ஷத்தில் ஹிந்து தர்மத்தின்பால் வாலிபர்களை ஈர்ப்பது கஷ்டம். உமாபாரதியெல்லாம் இதற்கு லாயக்கில்லை. ஜீ.வியிடம் இந்த விஷயத்தை நீங்கள் காதில் போட்டுவிட்டால் போதும். ஆக வேண்டியதை பார்த்துக்கொள்வார்.

ஏதோ ஒரு அலையில் நம்மவா ஆட்சி இங்கே வந்துவிட்டது. ஆனால் அடுத்த வேர்தலில் இந்த ராக்ஷஸி (குஷ்பு) போட்டி போட்டால் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எனக்கு இன்னொரு ஸம்சயமும் உண்டு. தமிழ்நாட்டைத் துண்டாட பாகிஸ்தான் நடத்தும் சதியாகவும் இது இருக்கலாம். வடக்கே காஷ்மீரில் ஏ.கே.47ஐக் கொடுப்பவன், தெற்கே மோகனாஸ்திரத்தை ஏவுகிறான். இதில் கருணாநிதியும் உள்கையாக இருக்கலாம். எதற்கும் நீங்கள் பிரதமர் காதில் இதைப் போட்டுவைக்கவும்.

ராமஜன்ம பூமி விஷயமே இன்னும் முடியாத போது இப்போதைக்கு இதை பெரிய விஷயமாக கிளப்புவது நமது கக்ஷிக்கு உசிதமில்லை. தமிழ்நாட்டுக்கு கோவிந்தாசார்யாவை அனுப்பியிருக்கிறீர்கள். விஷயத்தை அவரிடம் விட்டுவிட்டால் பிரமாதமாக கவனித்துவிடுவார். குறைந்த பக்ஷம் ஹிந்து தயாரிப்பாளர்கள் ஹிந்து நடிகைகளைப் போட்டு படம் எடுக்க வேண்டும் என்று பிரச்சாரத்தைக் கிளப்பினாலே இந்த சனியனை சீக்கிரம் ஒழித்து விடலாம். எப்படியோ இந்த முஸல்மான் மோகினியிடமிருந்து ஹிந்து தர்மத்தைக் காப்பாற்ற பகவான் அருள் பாலிக்கட்டும். ஜெய் சியாராம்.

அனந்தகோடி நமஸ்காரங்களுடன்
ராமஸ்வாமி (ஐயர்)

பின் குறிப்பு: ஸ்ரீராம பாதுகா ஊர்வலம் பற்றிய செய்தியை இண்டியன் எக்ஸ்பிரஸ் 10-ம் பக்கத்தில் போட்டிருக்கிறார்கள். தலைப்பு செய்தியாகப் போடாவிட்டாலும் முதல் பக்கத்திலாவது போடக்கூடாதா? பாதுகையை ‘ஸ்லிப்பர்’னு இங்கிலீஷில் மொழி பெயர்த்து எழுதறாள். இதெல்லாம் ரொம்ப அநியாயம். சம்பந்தப்பட்டவாளிடம் சொல்லி கவனிக்கச் சொல்லவும்.

___________________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1992

____________________________________________

அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

162

ஹியுகோ சாவேஸ்

ஹியுகோ சாவேஸ் 1954-2013: அமெரிக்காவை மண்டியிட வைத்த வெனிசுலாவின் வீரப்புதல்வன்!

வெனிசுலாவின் அதிபர் ஹியுகோ சாவேஸ் மார்ச் 5-ஆம் தேதியன்று மறைந்தார். அவருக்கு வயது 58. “யோ ஸா சாவேஸ்” (நானே சாவேஸ்) என்று கண்களில் நீர் வழிய முழங்கியபடியே இருபது இலட்சம் மக்கள் தங்களுடைய தேசத்தின் வீரப்புதல்வனது உடலை ஏந்திச் சென்றனர். “வாழ்வதும் மரிப்பதும் வேறுவேறல்ல. வாழ்தலின் மரித்தல் சிறந்ததாகவும் இருக்கலாம் – வாழும் காலத்தில் செயவேண்டியதை ஒருவன் செய்திருந்தால்” என்று கூறினான் கியூபாவின் மறைந்த விடுதலைப் போராளியும் கவிஞனுமான ஜோஸ் மார்ட்டி. செய்ய வேண்டியதைச் செய்தவர்தான் சாவேஸ் என்ற போதிலும், அரியதொரு தலைவனைத் திடீரென்று இழந்த அதிர்ச்சியில் தவிக்கின்றனர் வெனிசுலா மக்கள்.

“அவர் மீது புற்றுநோய் ஏவப்பட்டிருக்கிறது என்றும், அந்தச் சதியை விரைவில் கண்டுபிடிப்போம்” என்றும் கூறியிருக்கிறார் கூறுகிறார், சாவேஸிற்குப் பின் பொறுப்பேற்றிருக்கும் நிக்கோலஸ் மாதுரோ. “விரைவிலேயே இந்த மர்மம் வெளியே வரும்” என்கிறார் பொலிவிய அதிபர் இவா மொரேல்ஸ். தென் அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் தலைவர்கள் 6பேர் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு ஆட்பட்டிருக்கின்றனர். உணவு, பரிசுப் பொருட்கள், உள்ளாடைகள் போன்றவற்றை இரகசியமாக கதிரியக்கத்துக்கு ஆளாக்குவதன் மூலம், தமது அரசியல் எதிரிகளைக் கொலை செய்வதாக சி.ஐ.ஏ – வைப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பிடல் காஸ்டிரோவைக் கொல்வதற்குப் பல வழிகளில் முயன்று தோற்ற இழிபுகழ் பெற்றதுதான் சி.ஐ.ஏ. என்பதால் இந்தக் குற்றச்சாட்டு அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல.

சாவேஸின் மீது கொலைவெறி கொள்வதற்கான எல்லா முகாந்திரங்களும் அமெரிக்காவுக்கு இருந்தன. அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் வலிமையான குறியீடாக சாவேஸ் இருந்தார். 2001-இல் இராக்கிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து, சதாமுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா மிரட்டி வைத்திருந்தபோது, சாவேஸ் இராக் சென்றார். புஷ் கண்டனம் தெரிவித்தபோது, “வெனிசுலா இறையாண்மை கொண்ட ஒரு நாடு என்பதை புஷ்ஷுக்கு நினைவுபடுத்துகிறேன்” என்று அலட்சியமாக பதிலளித்தார். ஆப்கான், இராக் ஆக்கிரமிப்புகளை வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார். 2008-இல் காசாவின் மீது இசுரேல் படையெடுத்த மறுகணமே, தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டார்.

சாவேஸ் இறப்பு துயரம்
தமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அதிபர் ஹியுகோ சாவேஸின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றுக் கதறியழும் வெனிசுலா மக்கள்.

2006-ஆம் ஆண்டு ஐ.நா.-வில் உரையாற்றிய சாவேஸ், “நேற்று சாத்தான் இங்கே வந்திருந்தது. இதே இடத்தில், இதோ நான் நிற்கிறேனே இதே இடத்தில் நின்றிருந்தது. கந்தக நெடிகூட இன்னும் போகவில்லை” என்று ஐ.நா.-வில் முந்தைய நாள் உரையாற்றிச் சென்றிருந்த போர்வெறியன் ஜார்ஜ் புஷ்ஷை எள்ளி நகையாடினார். அது அவை நாகரிகத்தில் பொருந்திய ராஜதந்திர மொழியன்று. ஆனால், அமெரிக்காவின் நடத்தைக்குப் பொருந்திய மொழி. ஆகவேதான் சங்கடத்தில் நெளிந்தாலும் அவையோரால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

1954-இல் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து பிழைப்புக்காக இராணுவத்தில் சேர்ந்தவர் சாவேஸ். இராணுவத்தில் சேர்ந்தவுடன், செங்கொடி இயக்கம் என்றழைக்கப்பட்ட மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒடுக்குவதற்கான படைப்பிரிவுக்குத்தான் அனுப்பப்பட்டார். ஏழைகளுக்காகப் போரிட்ட மாவோயிஸ்டுகள் மீது அரசு ஏவிய சித்திரவதைகளும் படுகொலைகளும் அவரைச் சிந்திக்கத் தூண்டின. 1989-இல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைக்கேற்ப வெனிசுலாவில் அதிரடியாக அமல்படுத்தப்பட்ட மானியவெட்டுகள் மற்றும் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டு, நாடு முழுவதும் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

சாவேஸ்

1973-இல் சிலியில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு, அலண்டே கொலை, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் என்ற பின்புலத்தில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும், அமெரிக்க எதிர்ப்பும் சோசலிச நாட்டமும் கொண்ட பலவிதமான ஆயுதக் குழுக்கள் தோன்றியிருந்தன. அத்தகைய குழுவொன்றை இராணுவத்திற்குள் சாவேஸும் உருவாக்கியிருந்தார். 1992-இல் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த முயன்று தோற்றார். “தோழர்களே, துரதிருஷ்டவசமாக எங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற இயலவில்லை – இப்போதைக்கு” என்று தொலைக்காட்சியில் பேசினார் சாவேஸ். “இப்போதைக்கு” என்ற அந்த ஒரு சொல் மக்கள் நினைவில் பதிந்திருந்தது. சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 1998-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸ் வெற்றி பெற்றார்.

வெனிசுலாவின் எண்ணெய் வளம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்காவின் எக்சான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்கள் தம் இலாபத்தில் ஒரு விழுக்காட்டை மட்டுமே ராயல்டியாக கொடுத்து வந்ததை 13 சதவீதமாக உயர்த்திச் சட்டமியற்றியவுடன், சாவேஸுக்கு எதிரான இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அமெரிக்கா அரங்கேற்றியது. ஆனால், உலகம் முழுவதும் பல நூறு ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்திய அனுபவம் கொண்ட அமெரிக்கா, வெனிசுலாவில் மண்ணைக் கவ்வியது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாகப் பெண்கள் இராணுவத்தை முற்றுகையிட்டுப் பணிய வைத்தனர். 28 மணி நேரத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு தோற்றது. சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். தமக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் வேலை நிறுத்தத்தை அமெரிக்க முதலாளிகளே தூண்டிவிட்டனர். பொருளாதாரம் நிலைகுலைந்தது. உள்நாட்டிலேயே மக்களுக்கு எரிபொருள் இல்லை. “முதலாளிகளிடம் பணியாதே சாவேஸ். நாங்கள் தாக்குப்பிடிக்கிறோம்” என்று கூறி அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள் மக்கள்.

சாவேஸ் இறுதி ஊர்வலம்
பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சாவேஸின் இறுதி ஊர்வலம்.

நாட்டின் எண்ணெய் வளம் தந்த வருவாயை மக்கள் நலத்துக்குப் பயன்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதுதான் சாவேஸின் வெற்றிக்கு காரணம். 2005-இலேயே நூறு விழுக்காடு கல்வியறிவு சாதிக்கப்பட்டுவிட்டது. மக்களுக்கு உணவு உத்திரவாதம் செயப்பட்டிருக்கிறது. சுமார் 3 இலட்சம் பேருக்கு நிலம் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான கூட்டுறவுக் கழகங்கள் எல்லாத் துறைகளிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கியூபாவிலிருந்து சுமார் 25,000 மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டு மக்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரையில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. வீடற்றவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வெனிசுலாவில் வீடற்றவர்களே இல்லை என்று கூறும் விதத்தில், அடுத்த 6 ஆண்டுகளில் மேலும் 20 இலட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. மற்ற உற்பத்தி சார்ந்த உழைப்புகளைப் போலவே பெண்களின் குடும்ப உழைப்புக்கும் ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று கூறி, குடும்ப உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

ஏழை, எளிய உழைக்கும் மக்கள் மீது இயல்பிலேயே அவரிடம் ததும்பிய நேசத்தையும், உண்மையான அக்கறையையும் அவரது எதிரிகள்கூட மறுக்க முடிந்ததில்லை. சாவேஸ் மக்களுடன் நேருக்குநேர் உரையாடி, அவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் “ஹலோ பிரசிடென்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு சான்றாக அமைந்தது.

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களின் அடிப்படை உரிமைகளாக சாவேஸ் மாற்றியதை எதிர்க்கவும் முடியாமல், இத்துறைகளிலிருந்து தனியார் முதலாளிகள் விரட்டப்பட்டதை ஏற்கவும் முடியாமல் தவித்தனர் அமெரிக்க சார்பு முதலாளிகள், “மாதம் 25,000 ரூபாய் (450 டாலர்) தருகிறோம். நீங்கள் விரும்பிய வண்ணம் தரமான சேவையை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்” என்று ‘உங்கள் பணம் உங்களை கையில்‘ திட்டத்தைப் போலவே தனியார்மயத்தின் தந்திரத்தை கடைவிரித்துப் பார்த்தனர். மக்கள் மசியவில்லை.

வெனிசுலா மருத்துவத் துறை
இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளில் மருத்துவமும், பொது சுகாதாரமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வரும் வேளையில் சாவேஸ் அச்சேவைகளைத் தேசியமயமாக்கினார். கியூபா நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களால் பரிசோதிக்கப்படும் வெனிசுலாவின் ஏழைக் குழந்தைகள் (கோப்புப் படம்).

சாவேஸின் திட்டங்கள் வெனிசுலாவின் கஜானாவைக் காலியாக்கிவிடும் என்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கூக்குரலிட்டுப் பார்த்தன. வெனிசுலாவின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 5.8 % வளர்ச்சியைக் கண்டது. மானியவெட்டு, மக்கள் மீது வரிவிதிப்பை அதிகப்படுத்துவது, தனியார்மயம் போன்ற வழிமுறைகள் மூலம்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் தீர்வை சாவேஸ் பொய்ப்பித்தார். இதன் காரணமாக வெனிசுலாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் எழத்தொடங்கின.

எண்ணெய், மின்சாரம், தொலைபேசி, சிமென்டு உற்பத்தி உள்ளிட்ட கேந்திரத் தொழில்துறைகளை பொதுச்சொத்தாக்குவது, மற்ற தென் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுடனான வணிகத்துக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வணிகத்துக்கு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுவிப்பது, தென் அமெரிக்காவைத் தனது சுதந்திர வர்த்தக வலையத்துக்குள் கொண்டு வர முயன்ற அமெரிக்காவின் சதியை முறியடித்து, தென் அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுக்கான தனி வர்த்தக வலையத்தை உருவாக்கியது, உலக வங்கிக்குப் போட்டியாக தென் அமெரிக்க நாடுகளுக்கான ஒரு பொது வங்கியை உருவாக்கியது, தேசிய எல்லைகளைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டம் என்ற முறையில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராக நாடுகளை ஒன்றுபடுத்தியது, வணிகம்-இலாபம் என்ற முதலாளித்துவ அளவுகோல்களை நிராகரித்து வெனிசுலாவின் எண்ணெய், எரிவாயுவை கியூபாவுக்கும் பிற தென் அமெரிக்க நாடுகளுக்கும் மலிவு விலையில் வழங்கியது  போன்றவையெல்லாம் மிகவும் குறுகிய காலத்தில் சாவேஸ் நிகழ்த்திய சாதனைகள்.

வெனிசுலா ஆட்சிக் கவிழ்ப்பு
அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து வெனிசுலா மக்கள் கார்கஸ் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது); வெனிசுலா இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருந்த சாவேஸ், மக்களின் போராட்டத்தையடுத்து விடுதலை செய்யப்படுகிறார் (கோப்புப் படம்).

இவையனைத்தும் வெனிசுலாவின் முதலாளித்துவ அரசமைப்புக்கு உட்பட்டு, முதலாளித்துவக் கட்சிகளையும், பெரும் தனியார் முதலாளிகளையும், அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்தையும், 95% அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களையும் வைத்துக்கொண்டே செயப்பட்ட சீர்திருத்தங்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் இவர்கள் தடைக்கற்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்மேலும் மக்களிடம் செல்வதன் மூலமும், தங்களுடைய கோரிக்கைக்கான போராட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்துவதன் மூலமும் சாவேஸ் அவற்றை எதிர்கொண்டிருக்கிறார். முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதிகாரவர்க்கத்தின் அதிகாரங்களைக் குறைத்து மக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்துகின்ற சட்டங்கள், திட்டங்களைக் கொண்டுவரும்போது, அவை குறித்துத் தேசம் தழுவிய வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பது என்ற முறையின் மூலம், எதிரிகளை அரசியல்ரீதியில் பலமிழக்கச் செய்திருக்கிறார்.

தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை என்பதை வெனிசுலாவின் அரசியல் சட்டத்தில் சாவேஸ்தான் அறிமுகப்படுத்தினார். சாவேஸ் ஒரு சர்வாதிகாரி என்ற அவதூறு பிரச்சாரத்தில் தொடங்கி ஆட்சிக்கவிழ்ப்பு வரையில் அனைத்தையும் முயன்று பார்த்த அமெரிக்க அடிவருடிகள், திருப்பி அழைக்கும் உரிமையையும் பயன்படுத்திப் பார்த்தனர். அதிலும் தோற்றனர்.

மாதுரோ
வெனிசுலாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாவேஸின் உற்ற தோழர் நிக்கோலஸ் மாதுரோ.

சாவேஸ் தன்னை ஒரு சோசலிஸ்டு என்றும் கிறித்தவர் என்றுமே சொல்லிக் கொண்டார். அவருடைய கட்சி பல்வேறு விதமான குட்டி முதலாளித்துவ, தேசியவாத, சோசலிச சக்திகளின் கூட்டணியாகவே இருந்தது. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிசுலாவின் விடுதலைப் போராளியான சைமன் டி பொலிவாரையே தனது வழிகாட்டியாக அவர் அறிவித்துக் கொண்டிருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு, தென் அமெரிக்க ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை இணைந்த, கம்யூனிசத்தின்பால் பெருமதிப்பு கொண்ட ஒரு கண்ணோட்டம் சாவேஸை வழிநடத்தியது. தான் படைக்க விரும்புவது 21-ஆம் நூற்றாண்டின் சோசலிசம் என்று அவர் கூறிக்கொண்டபோதும், அதனை அவர் விளக்கவுமில்லை. ரசிய – சீன சோசலிசங்களுக்கு எதிராக நிறுத்தவுமில்லை.

“சாவேஸ் ஒரு புரட்சிகரமான தேசியவாதி. அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தின் புரட்சிகரமான தன்மை அவரை சோசலிசத்தை நோக்கித் தள்ளிக்கொண்டே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, தேசிய எல்லை கடந்து தென் அமெரிக்க கண்டத்தை ஒற்றுமைப்படுத்த முயன்ற பொலிவார், ஜோஸ் மார்டி ஆகியோர் விதைத்த மரபு சாவேஸின் பின்புலமாக அமைந்தது” என்று மதிப்பிடுகிறார் அஜாஸ் அகமது.

தனது கொல்லைப்புற சோதனைச்சாலையாக தென் அமெரிக்க நாடுகளைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா, 1970-களில் தனது கைப்பாவை ஆட்சிகளைப் பல நாடுகளில் நிறுவியதுடன், 1980-களிலேயே தனியார்மய தாராளமயக் கொள்கைகளை அந்த நாடுகளில் சோதிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, 1980-களின் இறுதியில், ஆசிய நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கை தீவிரமாக கடைவிரிக்கப்பட்ட காலத்தில், அங்கே “ஏகாதிபத்தியங்களின் கடையை மூடுவதற்கான” மக்கள் கலகங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தப் பின்புலம் வலிமையானதொரு கம்யூனிஸ்டு கட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவரும் அளவுக்கு மக்களைப் புரட்சிகரமான மாற்றத்துக்கு உள்ளாக்கவில்லை என்ற போதிலும், சாவேஸ் என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆளுமையைத் தோற்றுவித்திருக்கிறது. “நானே சாவேஸ்” என்ற கதறியபடியே அவரது உடலைப் பின்தொடர்ந்து செல்லும் வெனிசுலாவின் உழைக்கும் மக்கள், சாவேஸ் தங்களைக் காலத்தால் முந்திக் கொண்டுவிட்டதைத் தம் கண்ணீரால் உணர்த்துகிறார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் வெனிசுலா அரசின் வழக்குரைஞர், சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். வெனிசுலாவில் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த சாவேஸ், நிகழ்ச்சி முடிந்த பின் மேடையேறி, ஒரு சிறுமியிடம்

“நீ அணிந்திருப்பது என்ன உடை கண்ணு?” என்று கேட்க, நான் ஒரு மாஜிக் நிபுணர்” என்று பதிலளித்தாள் அந்தச் சிறுமி.
“அய்யோ, அப்படியானால் என்னை காணாமல் போக வைத்து விடுவாயா?” என்றாராம் சாவேஸ்.
“இல்லை. உங்களைப் போலவே பல பேரை உருவாக்கிக் காட்டுவேன்” என்றாளாம் அந்தச் சிறுமி.

அந்தச் சிறுமி சொன்னதைத்தான் வெனிசுலா மக்கள் எதிரொலிக்கிறார்களோ!

– சூரியன்

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

பிட்சா, பர்கர் தொழிலாளி என்றால் இளப்பமா?

2

துரித உணவு ஊழியர்கள்

மெரிக்காவில் இயங்கும் தனியார் துரித உணவகங்களின் ஆண்டு லாபம் உயர்ந்து கொண்டே போக அதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நிலைமையோ படு மோசமாக உள்ளது. இதை எதிர்த்து பல்வேறு துரித உணவகங்களின் ஊழியர்கள் ஒன்று திரண்டு சங்கம் அமைத்து, ஊதிய உயர்வு கோரி அடையாள வேலை நிறுத்த போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் எதிர்த்துப் போராடும் பல்வேறு துரித உணவகங்கள் இந்தியாவில் சமீப காலமாக கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.

“போதும், நான் சோர்ந்து போய் விட்டேன், கடந்த பல ஆண்டுகளாக அதே சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறேன், அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது, நிறுவனத்தின் லாபம் விண்ணைத் தொடுகிறது ஆனால் என் சம்பளம் அப்படியே தான் இருகிறது. வேலை நிறுத்தம்தான் ஒரே வழி ” என்று குமுறுகிறார் பிரபல துரித உணவு விற்பனை நிறுவனமான பர்கர் கிங்ஙில் வேலை செய்யும் தபிதா.

கடந்த வியாழன் அன்று (ஏப்ரல் 4, 2013) சுமார் 60 துரித உணவகங்களைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் தமக்குள் சங்கம் ஒன்றை அமைத்து நியூயார்க் நகரில் பல்வேறு இடங்களில அடையாள வேலை நிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக பஙகேற்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலை செய்யப்பட்ட நாளில் இந்த அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.

“குறைந்த பட்ச ஊதியம் ஒரு மணி நேரத்துக்கு $15 டாலராக உயர வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் நடத்தப்பட்ட இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அமெரிக்காவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் வேகமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவை துரித உணவகங்கள். இன்று இந்தியாவில் கூட இவை   காளான்கள் போல் முளைத்து விட்டன. மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பர்கர் கிங், சப்வே, டாமினோஸ், பீட்சா ஹட், பீட்சா கார்னர், டாகோ பெல் என்று துரித உணவகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களது ஆண்டு வருமானமும் பல கோடி டாலர்களை கடந்துக் கொண்டிருக்கிறது. இவற்றில் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் வேலை செய்யும் ஊழியர்களின் நிலைமையோ படு மோசம்.

துரித உணவு பலகை

இந்த உணவகங்களில் வேலை பார்க்கும் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு  $7.25 ( சுமார் ரூ 370 ) வரை சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 மணிநேரம் என்று வைத்துக்கொண்டாலும், வாரத்திற்கு ஏழு நாள் விடுமுறை எடுக்காமல் வேலை செய்தால் மாதத்திற்கு ரூ 82,000 வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் நியூயார்க் போன்ற நகரத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் வசிப்பதற்கு நகரத்திற்கு பல மைல் வெளியிலிருக்கும் குடியிருப்பு பகுதியிலேயே மாத வாடகை மாத்திரம் சுமார் ரூ 1 லட்சம் முதல் ரூ 1.50 லட்சம் வரை ஆகிறது.

எட்டு மணிநேரம் இடை விடாத வேலை, மூன்று ஆள் வேலை வரை ஒருவரே பார்க்க வேண்டும், எந்நேரமும் வேலை பறி போகலாம். வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்வி செலவு, குடும்பச் செலவு, போக்குவரத்துச் செலவு, மருத்துவக் காப்பீட்டு கட்டணம் என அனைத்தையும் ஊழியரே தன் சம்பளத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல நேரம் ஊழியர்கள் பணம் போதாமல், உணவை   தவிர்ப்பது, பல மைல்கள் நடந்தே பணிக்கு வருவது, பல நோய்களுக்கு மருத்துவமனை செல்லாமல் இருப்பது என தங்கள் செலவுகளை கட்டுப் படுத்துகிறார்கள். யோசித்து பாருங்கள் ! காலை உணவு அருந்த பணமில்லாமல் பசியுடன் வந்த ஊழியர் அன்று தன் கையால் துரித உணவுகளை பரிமாறும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும் ?

மாறாக நிறுவனங்களின் லாபமோ கொள்ளையாக உயர்ந்து வருகிறது. மெக்டொனல்ட்ஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் உயர்ந்து சுமார் $2.6 பில்லியனை ( ரூ 13 ஆயிரம் கோடி ) எட்டியுள்ளது. பர்கர் கிங் கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிக லாபம ஈட்டியுள்ளது. கேஎஃப்சி, பிட்சா ஹட், டாகோ பெல் நிறுவனங்கள் 2011 -ம் ஆண்டு $1.3 பில்லியன் லாபம் ஈட்டின. ஆனால் டாகொ பெல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜோசப்பிற்கோ ஒரு மணி நேரத்திற்கு $7.25 தான் சம்பளமாக கிடைக்கிறது. இதே நிறுவனத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தன் 15 வயதில் சேரும் போது அவர் வாங்கிய சம்பளம் $7.10. கடந்த 6 ஆண்டுகளில் சூப்பர்வைசராக பதவி உயர்வும் பெற்றுள்ள அவரது சம்பளம் வெறும் $0.15 தான்   உயர்ந்துள்ளது.

1968 -ல் $1.60 ஆக இருந்த குறைந்த கூலியின் இன்றைய டாலர் மதிப்பு $11. ஆனால் 2013 -ல் அது $7.25 ஆக மட்டுமே உயர்ந்திருக்கிறது. அதாவது 45 ஆண்டுகளில் கூலி 50% வீழ்ச்சியடைந்திருக்கிறது.

பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள், படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், அகதிகளாக வரும் வெளிநாட்டினர்.  கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால் பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அந்த உதிரி தொழிலாளர்களும் சேர்ந்துக் கொள்ள, நிறுவனங்கள் மனித வேட்டையில் திக்கு முக்காடி போயின. சம்பள உயர்வு கேட்டால் வேலை நீக்கம். அவருக்கு பதிலாக வேலையில் புதிதாக சேருபவர் சில ஆண்டுகள் கழித்து சம்பள உயர்வு கேட்டால் வேலை நீக்கம். இது தான் ஊழியர்களின் அவல நிலை.

இந்த நிலையை சாக்காக வைத்து நிறுவனங்கள் வேலையை மும்மடங்கு அதிகரித்து விட்டன. அதனால் இரண்டு ஆள் சம்பளம் நிறுவனத்திற்கு லாபம். இப்பொழுது புரிகிறதா கடந்த சில ஆண்டுகளாக அந்நிறுவனங்களின் லாப உயர்வுக்கு காரணம் ?

ஊழியர் போராட்டம்

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊழியர்கள், சங்கம் அமைத்தனர். கடந்த வியாழன் அன்று இந்த அடையாள வேலை நிறுத்தத்தால் பல நிறுவனங்கள்   தாமதமாக கடையை திறக்க வேணடிய நிலை ஏற்பட்டது. நேரடியாக அந்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் ஊழியர்களே எதிர்பாரா விதமாக பல்வேறு சங்கங்கள், இவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தன.

மக்கள் முன் தங்கள் நிலையையும், கோரிக்கையையும் புரிய வைக்க இவர்கள் “துரித உணவு முன்செல்க” என்ற வலைத்தளம் ஒன்று துவங்கியதுடன், பல்வேறு பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்னர்.

வேலை நிறுத்தம் செய்தால் வேலை போய்விடும் என்று தெரிந்தாலும், தற்போதைய தங்கள் மோசமான வாழ்கையினால் விரக்தியுற்றிருக்கும் இவர்கள் போராடி பார்த்துவிடுவது என்று முடிவுடன் இருக்கிறார்கள். அடையாள வேலை நிறுத்தம் செய்துவிட்டு மீண்டும் நிறுவனத்திற்கு போனால் தாங்கள் மிக மோசமாக நடத்தப்படுவோம் என்று அவர்களுக்கு தெரிந்தேதான் இருக்கிறது ஆனால், அவர்கள் கோரிக்கையை கேட்க மறுத்து   வந்த நிறுவனங்களின் செவிகளை அதிர செய்திருக்கிறார்கள்.

1980 களில் ரீகன் காலத்தில் பணி நீக்கம் என்று பயமுறுத்தி ஊழியர்கள் மத்தியிலான போராட்டங்கள் அடக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்த விமான கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்களை ரீகன் வேலை நீக்கம் செய்து ‘ வரலாறு ‘ படைத்தார். ஆனால் தொழிலாளர்களின் எழுச்சி கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

சிகாகோ ஆசிரியர்கள் வேலை நிறுத்தம், வால்மார்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தம், நியூயார்க் குப்பை அள்ளும் ஊழியர்களின் வேலை நிறுத்தம், வால்வீதி ஆக்கிரமிப்பு போரட்டங்கள், இப்பொழுது துரித உணவு ஊழியர்களின் அடையாள வேலை நிறுத்தம் என அனைத்து போராட்டங்களும் ஊழியர்களால் தனியார் நிறுவன்ங்களை எதிர்த்து நடத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்பு போராட்டங்கள் தனியார்மயத்தையே எதிர்த்து நடக்கின்றன. தங்கள் எதிரியை கண்டுணர்ந்து அவனை எச்சரிக்கும் போராட்டங்கள் இவை. வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியவை.

நம் நாட்டிலும் வால்மார்ட் முதல் மெக்டானால்ட் வரை பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் வருகை, ‘வேலை வாய்ப்புகளை உருவாக்கும், வளம் பெருகும், தனிநபர் வருமானம் உயரும்’ என பல கவர்ச்சி வாசகங்களைச் சுமந்து வருகிறது. ஓரளவு ஊழியர்கள் நலச் சட்டங்களை கொண்டுள்ள அமெரிக்க போன்ற நாட்டிலேயே ஊழியர்களை கடுமையாக சுரண்டும் இந்நிறுவனங்கள், மிக மோசமான ஊழியர் நடை முறை சட்டங்களை கொண்டுள்ள இந்தியாவில் ஆடப் போகும் ருத்ர தாண்டவத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் நடந்துவரும் இந்த வேலை நிறுத்த போரடடங்கள் ஒரு நல்ல துவக்கம்.

சோவியத் புரட்சியின் 10 -ம் ஆண்டை நினைவு கூற சோவியத் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரபல திரைப்பட இயக்குனரான ஐசன்ஸ்டீன் மூன்று படங்களை இயக்கி கொடுத்தார். சோவியத் புரட்சிக்கு வித்தாக அவர் எடுத்த முதல் படம் “ ஸ்ட்ரைக் ”. ஆம், எண்ணற்ற தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் தான் புரட்சியின உந்துசக்தியாக, விதைகளாக இருந்தன.

அந்த வகையில் அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் தொழிலாள்ர்களின் இந்த வேலை நிறுத்தங்கள் தனியுடமை முதலாளித்துவ பொருளாதார அமைப்புக்கு சாவு மணியடிக்கட்டும்.

மேலும் படிக்க
I am loving it. NYC fast food workers take to streets
Fast Food Forward
Average rent in New York
Fast food workers plan surprise strike
Fast food workers strike citing low wages

மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!

2
உச்சநீதி மன்றம்
உச்சநீதி மன்றம்

தூத்துக்குடியில் கடந்த 16 ஆண்டுகளாக நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் உடல் நலத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் குற்றங்களுக்கெல்லாம் கண்துடைப்பு தண்டனையாக ரூ 100 கோடி அபராதம் கட்டும்படி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

2010-ல் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஏ கே பட்னாயக், எச் எல் கோகலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மேற்கண்டபடி தீர்ப்பளித்தது.

‘உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்குவதற்காக ஸ்டெர்லைட் பொய்யான தகவல்களை தந்ததும், தகவல்களை மறைத்ததும் உண்மைதான். ஆனாலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கா விட்டால் அது தொழிற்சாலையை மூடுவதில் முடிந்திருக்கும்’ என்று குறிப்பிட்டு ஸ்டெர்லைட்டின் அந்த குற்றத்தை மன்னித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

‘1997 முதல் 2012 வரை ஸ்டெர்லைட் இழைத்த சேதங்களுக்கு நிவாரணமாகவும், உரிய அனுமதிகள் பெறாமல் தொழிற்சாலையை நீண்ட காலம் நடத்தியதற்கு அபராதமாகவும் ரூ 100 கோடி கட்ட வேண்டும். 2010-11ல் கம்பெனியின் லாபமான ரூ 1,043 கோடி முந்தைய நிதி ஆண்டில் கிடைத்த ரூ 744 கோடியை விட 40 சதவீதம் அதிகம். அதனால் ரூ 100 கோடி ரூபாய் அபராதம் என்ற கடும் தண்டனையை விதிக்க வேண்டியிருக்கிறது’ என்று சவடாலாக உறுமியிருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

‘ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கும் வேலை வாய்ப்புகள், அரசுக்கு செலுத்தும் வரித் தொகைகள், அது உற்பத்தி செய்து நாட்டுக்கு அளிக்கும் தாமிரத்தின் முக்கியத்துவம் இவற்றைக் கருத்தில் கொண்டு அபராதத்தைக் கட்டி விட்டு அது தனது நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கிறோம்’ என்று ‘பாலியல் வல்லுறவு செய்த மைனர் அபராதம் செலுத்தி விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்’ என்ற  ஆலமரத்து சொம்பு நாட்டாமையைப் போல தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

ஸ்டெர்லைட்2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே. ஸ்டெர்லைட்டின் மொத்த விற்பனை வருமானத்தில் 0.48% பெற்றுத் தரும் வேலை வாய்ப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களின் உடல் நலத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொள்ளலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்.

சென்ற நிதியாண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய ரூ 960 கோடி கலால் வரியையும், சுமார் ரூ 550 கோடி வருமான வரியையும் முழுவதுமாக செலவிட்டால் கூட நிலங்களுக்கும், கடல் வளங்களுக்கும், மக்களின் உடல் நலத்துக்கும் இந்த ஆலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் செய்வது சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்.

சமூகத்துக்கு மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி ஸ்டெர்லைட் நிறுவனம் சென்ற ஆண்டு ஈட்டிய நிகர லாபம் ரூ 1,657 கோடி (விற்பனை மதிப்பில்ல் 8.6%). இந்த லாபத்தில் 56.64% (ரூ 939 கோடி) டுவின் ஸ்டார் என்ற லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்துக்கும், 12.45% (ரூ 206 கோடி) சிட்டிபேங்க் நியூயார்க்குக்கும் போகிறது. ஒரு ஆண்டில் ரூ 939 கோடி ரூபாய் லாபம் பெறும் வேதாந்தா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் செய்த பங்கு முதலீடு வெறும் 336 கோடி மட்டும். அதாவது 16 ஆண்டுகளில் தனது முதலீட்டுப் பணத்தை பல மடங்கு திருப்பி எடுத்த பிறகு சென்ற ஆண்டு முதலீட்டின் மீது சுமார் 300% லாபம் ஈட்டியிருக்கிறது.

ராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டது.

அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஸ்டெர்லைட்டை இரு கரம் நீட்டி வரவேற்று 30.10.1994 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆரம்பம் முதலே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களும், உழைக்கும் மக்களும், சில கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் ‘சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் மக்களின் எதிர்ப்புகளை மீறி 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது. “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகில் உள்ள குருசடி தீவில் பவளப் பாறைகள். (படம் உதவி : பிரண்ட்லைன்

“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

“மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் கொடுத்த பொய்யான தகவல்களையும், உண்மை நிலவரங்களை திரித்து கூறியதையும் அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து ஆலை தொடர்ந்து இயங்க வழி வகுத்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இழுத்தடித்த வாதங்களுக்குப் பிறகு 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆலையை மூடும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தியாவின் தாமிர தேவைக்காக ஸ்டெர்லைட் தொண்டு செய்கிறது என்பது ஆதாரமற்ற வாதம். 1992-ல் இந்திய தாமிர உற்பத்தித் துறை தனியார் முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டது. 1996-ல் 62,000 டன்னாக இருந்த தாமிர உற்பத்தி 2007-ல் 9.97 லட்சம் டன்னாக உயர்ந்தது. இப்போது இந்தியாவின் தாமிர தேவை ஆண்டுக்கு 4 லட்சம் டன் மட்டுமே. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் தாமிரமும் தாமிரப் பொருட்களும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது உற்பத்தி செய்யும் சுமார் 4 லட்சம் டன் தாமிரம் நின்று போனாலும் நாட்டுக்குத் தேவையான தாமிரத்தின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.

தாமிர உற்பத்திக்கான தொழிற்சாலைகள் ஏன் இந்தியாவில் இடம் பெயர்ந்தன?   வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின்  விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.

சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.

மாசு உருவாவதையும், வெளியாவதையும் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கோ, உருவான மாசை தூய்மைப் படுத்துவதற்கோ பணம் செலவழிக்காமல் மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் முதலாளிகளும், வாங்கி பயன்படுத்தும் பன்னாட்டு முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். சுற்றுச் சூழல் மாசுபடுவதை கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளி, நீர், நில மாசுகளை தொடர்ந்து வெளியேற்றி தமது சுரண்டலையும் கொள்ளை லாபம் ஈட்டலையும் தொடர்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஏற்பட்ட கந்தக டை ஆக்ஸைடு கசிவினால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் தீவிரமடைந்த எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை ரத்து செய்யக் கோரும் ஸ்டெர்லைட்டின் மேல் முறையீட்டை பசுமை வாரியம் விசாரித்து வருகிறது.

திருப்பூரில் சாயப் பட்டறைகள் அழித்தொழித்த நொய்யல் ஆற்றையும் அவற்றால் பாழாக்கப்பட்ட சார்ந்த விளைநிலங்களையும் வேலூர் மாவட்டத்தில் தோல் பட்டறைகளால் பாழடிக்கப்பட்ட விளைநிலங்களையும் நீர் ஆதாரங்களையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புள்ளி விபரங்கள் காட்டுவதில்லை.

உலகளாவிய உற்பத்திச் சங்கிலிகளை இணைத்து இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு குறைந்த செலவிலும் மக்களுக்கு அதிக பாதிப்பிலும் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்த பொருட்களை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உயர் விலைக்கு விற்று லாபம் ஈட்டி கொழுக்கின்றனர். நிலத்தையும், நீரையும், காற்றையும் அதன் மூலம் மக்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டு பாயைச் சுருட்டிக் கொண்டு அவர்கள் இன்னொரு நாட்டுக்குத் தமது கொள்ளையைத் தொடர நகர்ந்த பிறகு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அழிவுகளின் விளைவுகளை மக்கள் சுமக்கின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் அமைச்சகம், உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ம.தி.மு.க.வின் வழக்குகள் போன்ற நீதித்துறை நடவடிக்கைகளை அத்தகைய தொழில் செய்யும் முறையின் சைட் ஷோக்களாகவே கருதி தமது சுரண்டலை தொடர்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

இதில் ஸ்டெர்லைட்டை கொண்டு வந்த ஜெயலலிதா தற்போதைய இடைக்காலத் தடை மூலம் போற்றப்படுகிறார். போராடும் மக்களை திசைதிருப்பும் இந்த ஏமாற்று நடவடிக்கையை பலரும் ஆதரிக்கின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் நடந்து வரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகள் மக்களை மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளத்தையும் அழிக்கின்றன என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை ஒரு துலக்கமான சான்று.

– செழியன்.

மேலும் படிக்க
For Sterlite it’s crisis situation once again
SC slaps Rs 100 Cr penalty on Sterlite for pollution
Government orders closure of Sterlite Copper smelter
Sterlite Industries’ copper smelter ignites toxic debate
Sterlite case, the unforseen part
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
Sterlite Annual Report 2011-12
Indian copper industry – 1
Indian copper industry – 2
World copper industry

விவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை!

0

க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் பருவ ஆட்சியில், அக்கூட்டணி அரசு 2008-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபொழுது, 2009-ஆம் ஆண்டு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து,  விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத் திட்டம் ஒன்றை அறிவித்தது. இத்திட்டத்திற்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கவுள்ளதாகக் கூறிய அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “விவசாயிகளுக்கு இந்நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்” என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார்.

ஆந்திர விவசாயிகள்
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் சடலங்களைக் கண்டு கதறும் உறவினர்கள் (கோப்புப் படம்).

இக்கடன் திட்டத்தால் ஏறத்தாழ 3.45 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் எனக் கூறப்பட்டாலும், சிறு-குறு விவசாயிகள் அனைவரும் இக்கடன் தள்ளுபடியைப் பெற முடியாதபடியும், விவசாயிகளின் வங்கிக் கடன் முழுவதும் தள்ளுபடி ஆகிவிடாதபடியும், இந்நிவாரணத் திட்டம் நரித்தனமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

“ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே இக்கடன் நிவாரணத் திட்டம் பொருந்தும்; 50,000 ரூபாய் வரையிலும் கடன் பெற்ற விவசாயிகள் மட்டும்தான் முழுத் தள்ளுபடி கோர முடியும்.  50,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள், தாம் வாங்கிய கடனில் 75 சதவீதத்தை ஜூன் 30, 2010-க்குள்  திருப்பிச் செலுத்தியிருந்தால், மீதி 25 சதவீதக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோர முடியும்.  இந்த 25 சதவீத தள்ளுபடியும் இருபதாயிரம் ரூபாய் என்ற வரம்பைத் தாண்டாது” என்றவாறு விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.  அதேசமயம், ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களைப் பயிரிடும் விவசாயிகள்  ரூ. 1 இலட்சம் வரையிலும்; கோழிப்பண்ணை, பால்பண்ணை நடத்துவோர் மற்றும் சுய உதவிக் குழுக்களும் இக்கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறத் தகுதி வாய்ந்தவர்களாக வரையறுக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட ஏறுக்குமாறான விதிகளின் காரணமாக, நாட்டிலேயே விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகமாக நடந்துவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விதர்பா பகுதி பருத்தி விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடியால் எந்தவிதமான பலனும் கிடைக்காது என்று இத்திட்டம் அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன.

விவசாய கடன்கள்

கடன் தள்ளுபடித் திட்டத்தின் இவ்வர்க்கச் சார்பு ஒருபுறமிருக்க, இக்கடன் தள்ளுபடித் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து நாடெங்கிலும் 800 வங்கிக் கிளைகளையும், அக்கிளைகளில்  கடன் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளுள் 90,576 கணக்குகளையும் வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த மையத் தணிக்கைத் துறை, “இவற்றுள் கடன் தள்ளுபடி பெறத் தகுதியற்ற 20,216 கணக்குகளுக்கு முறைகேடாகக் கடன் தள்ளுபடி தரப்பட்டிருப்பதை” அம்பலப்படுத்தியிருக்கிறது.  மேலும், “கடன் தள்ளுபடி பெற அனைத்துத் தகுதிகளும்  இருந்தும் 9,334 விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டுள்ளது. 4,826 விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நீட்டிப்பு வழங்கப்படவில்லை” என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

தகுதிவாய்ந்த விவசாயிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்த வங்கிகள், நவீன கந்துவட்டிக் கும்பலான நுண்கடன் நிறுவனங்களை இத்தள்ளுபடித் திட்டத்தின் மூலம் மஞ்சள் குளிக்க வைத்துள்ளன.  ஒரு தனியார் வணிக வங்கி, விதிமுறைகளுக்கு மாறாக நுண்கடன் நிறுவனங்களின் கடன்களை விவசாயக் கடன்களாகக் காட்டி ரூ.164.6 கோடி ரூபாயை அரசிடம் இருந்து சுருட்டியுள்ளதை, அவ்வங்கியின் பெயரைக் குறிப்பிடாமல் அம்பலப்படுத்தியுள்ள தணிக்கை அறிக்கை, அந்நுண் கடன் நிறுவனங்களிடம் கடன்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடியாகியிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய்யப்பட்ட வேளாண் கடன் தொகையில் 7 சதவீதத் தொகை சென்னையைச் சேர்ந்த புள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரகசியத்தைத் தமிழகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு ஊழியர் சங்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது.  ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் சொர்க்க பூமியாக மாறிவிட்ட சென்னையில், மொட்டை மாடியில் காய்கறிகளைப் பயிரிடும் ‘விவசாயிகளுக்கு’ இந்தக் கடன் தள்ளுபடியை வங்கிகள் வழங்கியுள்ளன போலும்.

இத்திட்டம் 3.45 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பலனளிக்கும் என்ற அரசின் அறிவிப்பையும் தணிக்கையில் அம்பலமாகியிருக்கும் முறைகேடுகளையும் ஒப்பிட்டால், ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேர் முறைகேடாகக் கடன் தள்ளுபடி பெற்றிருக்கக்கூடும்; தகுதிவாய்ந்த 34 இலட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டிருக்கக்கூடும்.  இம்மோசடியால் கடன் தள்ளுபடி செய்வதற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட 52,000 கோடி ரூபாயில் தோராயமாக 10,000 கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வர முடியும்.

விஜய் மல்லையா
வங்கிகளில் கோடிகோடியாய் தொழில்கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளி விஜய் மல்லையா.

அரசியல் புள்ளிகள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட கும்பல்தான் வேளாண் கூட்டுறவு வங்கிகளை இயக்கி வருவதால்; இவர்களோடு நுண்கடன் நிறுவனங்கள், நவீன பண்ணை விவசாயத்தில் இறங்கியிருக்கும் புதியவகை தரகு முதலாளிகள் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டுச் சேர்ந்து இந்த ஊழலை நடத்தியிருப்பதால், விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் இந்த ஊழலை அமுக்குவதில் முன்னணியில் நின்றார்.  அதனால், இக்கடன் தள்ளுபடி ஊழல் நாடாளுமன்றத்திலோ, தேசியப் பத்திரிகைகளிலோ பெரிய அளவில் விவாதிக்கப்படாமல், வந்த சுவடே தெரியாமல் அமுங்கிப் போய்விட்டது.

இவ்வூழலால் பலனடைந்த கும்பலைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முன்வராத அரசு, முறைகேடாகக் கடன் தள்ளுபடி பெற்றவர்களிடமிருந்து அத்தொகையைத் திரும்பப் பெறுமாறு பொத்தாம் பொதுவாக வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.  வங்கிகளோ, இதைச் சாக்காக வைத்துக் கொண்டு நியாயமாகக் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு பணத்தைத் திரும்பக் கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.  மகாராஷ்டிராவில் கோலாப்பூர் மாவட்டக் கூட்டுறவு வங்கி மட்டும் 49,000 விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது.

தமிழ்நாட்டிலோ, சில பொதுத் துறை வங்கிக் கிளைகள் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் புகைப்படங்களை வங்கிகளின் வாசலில் ஒட்டி, விவசாயிகளை ஏதோ ஜேப்படி திருடர்களைப் போல அவமானப்படுத்தும் அடாவடித்தனத்தில் இறங்கியுள்ளன.  கடன் தள்ளுபடியை ஏப்பம் விட்ட கும்பலோடு,வங்கியில் தொழில்கடன் வாங்கிவிட்டு ஏப்பம் விட்டுள்ள விஜய் மல்லையா போன்ற தரகு முதலாளிகளோடு இணக்கமாகவும், அக்கொள்ளையில் பங்காளியாவும் நடந்துவரும் வங்கி நிர்வாகம், சிறு விவசாயிகளைக் கிள்ளுக்கீரைகளாக நடத்துவதையும் எட்டி உதைப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்பதைத்தான் இந்த விவகாரங்கள் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளன.

– அழகு

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 – கேள்வி பதில்!

ஈழத்தாய்

கேள்வி 1:
ஈழம் தொடர்பான குரல்கள் பலமாக எழும் இவ்வேளையில், ஜெயலலிதாவின் ஐ.பி.எல் லில் இலங்கை வீரர்களை புறக்கணிக்க சொல்லும் குரலையும், அதன் தொடர்ச்சியாய் சுப்பிரமணிய சாமி ஜெ.அரசை  356 வது பிரிவை பயன்படுத்தி கலைக்க கோருவதையும் எப்படி பார்க்கிறீர்கள்? ஈழம் தொடர்பான ஜெயாவின் போக்கு இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும்?

கேள்வி 2:
கெயில் எரிவாயு குழாய் பதிப்பு மற்றும் ஈழம் தொடர்பான விசயங்களில் ஜெயலலிதா தொடர்ந்து சரியான பாதையில் நடப்பதாக ஒரு பரப்புரை நடக்கிறதே. உண்மையில் இம்மாதிரியான விசயங்களில் ஜெயாவை இயக்கும் அடிப்படை எது?

கேள்வி 3:
கேள்வி பதில் பகுதி தற்போது இயங்குவதே இல்லையே ஏன்? வினவில் அதிக செய்திகள் வரும் இக்காலகட்டத்தில் வாசகர்களின் பழைய பொருத்தமான கேள்விகளோடு இன்றைய செய்திகளை இணைத்து வழங்கலாமே…

– சீனிவாசன்

__________________________________________

ன்புள்ள சீனிவாசன்,

வேலைச்சுமை காரணமாகவே கேள்வி பதில் பகுதி தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. இனி முடிந்த மட்டும் எழுத முயல்கிறோம்.

ஐபிஎல் தொடர்பாக ஜெயாவும் சு.சாமியும் நேரெதிர் நிலை எடுத்திருப்பதாக தோன்றலாம். அப்படி இல்லை. காலந்தோறும் பார்ப்பனியம் என்ற வழக்கின் படி இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே!

முதலில் ஜெயாவின் ஈழத்தாய் சீசன் 3 வெளியீடைப் பார்த்து விடுவோம். பொது வாக்கெடுப்பு, தனி ஈழம், பொருளாதாரத் தடை, நட்பு நாடு என்று அறிவிக்க கூடாது இன்னபிற ஜெயாவின் அறிவிப்புக்களை உள்ளடக்கி இருக்கிறது தமிழக சட்டப்பேரவை தீர்மானம்.

முதலில் சட்டசபை தீர்மானம் குப்பைக் கூடைக்குச் செல்லும் பயன்மதிப்பு கூட அற்றது. அந்த வகையில் இவை வெறும் ஒரு அபிப்ராயம் மட்டுமே. மேலும் இவை குறித்து ஜெயா அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதமும் எழுதி வருகிறார். மத்திய அரசும் உங்கள் கடிதம் கிடைத்தது என்று ஒப்புதல் தெரிவித்து வருகிறது என்றாலும் மீனவர் கொல்லப்படுவதற்காக கருணாநிதி கடிதம் எழுதியதைக் கிண்டல் செய்வோர் ஜெயா கடிதம் எழுதுவதை மட்டும் தீவிர நடவடிக்கையாக பார்க்கின்றனர்.

ஒரு கருத்து அமலுக்கு வருவதற்காக பேசுவது, போராடுவது ஒரு ரகம். அமலுக்கு வராது என்பதை நிச்சயம் தெரிந்து கொண்டு, விரும்பிக் கொண்டு, அதைப் பயன்படுத்துவதற்காக உணர்ச்சி பொங்க பேசுவது ஒரு நாடகமே அன்றி வேறல்ல.

ஈழத்தாய்ஜெயாவின் நோக்கம் தெளிவானது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்று, மத்திய அரசில் முக்கியமான கட்சியாக பேரம் பேசுவது, வரலாற்று விபத்து ஏதும் நடந்தால் பிரதமர் பதவியையும் கைப்பற்றுவது, இறுதியில் மத்திய அரசு அதிகாரத்தை வைத்துக் கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கை நீர்த்துப் போகச் செய்வது, தமிழக அளவில் இருந்து இந்திய அளவில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்துவது இவைதான் ஜெயாவின் அரசியல் நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதாவது நாற்பது தொகுதிகளையும் வெல்ல வேண்டுமென்றால் மக்கள் வாக்களிக்க வேண்டும். மின்வெட்டு, விலைவாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு என்று நாற்புறமும் தத்தளிக்கும் மக்களை திசை திருப்புவதற்கு ஜெயாவிற்கு கிடைத்த ஆயுதம்தான் ஈழம். அதில் மற்றவர்களை விட தான்தான் முன்னணியில் போராடுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் தமிழின ஆர்வலர்களின் உதவியுடன் ஈழத்தாயாக மீண்டும் உருவெடுத்து தேர்தலில் வென்றுவிடலாம் என்று ஜெயா பகிரங்கமாகவே முயல்கிறார். அதற்கு தோதாக அனைத்து வித தமிழின ஆர்வலர்களும், குழுக்களும் ஜெயாவின் ஈழம் குறித்த நாடகங்களை உண்மையென அங்கீகரிக்கின்றன.

ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்களை தடை செய்வது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காட்டித்தான் தமிழக அரசு செய்திருக்கிறது. முக்கியமாக இந்திய அரசு, கிரிக்கெட் வாரியமும் கூட இதனை எதிர்க்கவில்லை, எதிர்க்கும் அவசியமில்லை என்பதையும் பார்க்க வேண்டும். மேலும் திமுக சார்ந்த கலாநிதி மாறனின் ஹைதராபாத் அணியின் கேப்டனே இலங்கை வீரர்தான் என்பதால் கருணாநிதியை கட்டம் கட்டுவதற்கும் இது உதவும். அந்த வகையில் தனது மேல் உள்ள மக்கள் அதிருப்தியை கருணாநிதி மேல் உள்ள வெறுப்பாக மாற்றுவதற்கும் ஈழப்பிரச்சினை ஜெயாவிற்கு உதவும்.

மற்றபடி ஐபிஎல் வீரர்கள் போல இலங்கையில் தொழில் செய்யும் அம்பானி, டாடா, ஏர்டெல், பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரமாட்டார் என்பது உங்களுக்கே தெரியும். இதனை ஏன் செய்ய முடியாது, வீரர்களை தடை செய்வது ஏன் சாத்தியம் என்பதன் வேறுபாடு கூட ஈழம் குறித்த ஜெயாவின் நாடகத்தை பளிச்சென அம்பலப்படுத்தும். ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஆடக்கூடாது என்பதை ஒரு அரசியல் நடவடிக்கையாக ஈழ ஆர்வலர்கள் கோருகிறார்கள். போராடுகிறார்கள். ஜெயாவோ நானே அதை முடித்து தருகிறேன், அமைதியாக இருங்கள் என்கிறார். இதுதான் பிரச்சினை.

சு.சாமி, ஜெயலலிதா

அதனால்தான் ஜெயாவின் இத்தகைய ஆபத்தில்லாத நடவடிக்கைகளை இந்தியா ஆளும் வர்க்கம் அனுமதிக்கிறது. இருப்பினும் சில தேசிய ஊடகங்கள், சு.சாமி போன்ற தரகர்கள் இதை எதிர்க்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்தில் ஒரு முரண்பாடு ஏற்படுத்தும் அளவிற்கு வலுவாக, அடிப்படையாக இல்லை. எனினும் சு.சாமி பேசும் இந்திய அரசு, வெளியுறவுக் கொள்கை, சட்டத்தின் ஆட்சி போன்றவை உண்மையில் இந்தியாவின் அடக்குமுறையை, இலங்கை குறித்த கொள்கையை வெளிப்படையாக ஆதரிப்பவை. இதுதான் இந்திய அரசின் கொள்கை என்றாலும் அதற்கு பங்கம் விளைவிக்காத அளவுக்கு ஜெயாவின் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. அப்படி அனுமதிக்க கூடாது என்ற சு சாமியின் கருத்து குறித்து கவலைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை. இது சு சாமிக்கும் தெரியும்.

ஆகவே அவரது எச்சரிக்கை ஒரு செல்லமான கண்டிப்பே அன்றி வேறல்ல. முக்கியமாக புலிகளை அழித்து, ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, அவர்களது உரிமைப் போராட்டத்தை நசுக்கி விட்டபிறகு ஜெயாவைப் போன்றவர்கள் ஈழம் குறித்து என்ன குரல் எழுப்பினாலும் பலன் ஒன்றுமில்லை என்பதையும் ஈண்டு நினைத்துப் பார்க்க வேண்டும்.

கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகளுக்காக மக்கள் போராடும் போது அதற்கு ஆதரவு என்பதாக காட்டிக் கொள்ளும் ஜெயா டெக்னிக்கலாக மட்டும் செயல்படுகிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதே அவரது அரசுதான் என்றிருக்க இன்றைக்கு போராட்டம் நடைபெறுவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தற்காலிக தடையைத்தான் விதித்திருக்கிறார். உச்சநீதிமன்ற வழக்கை வென்று வந்திருக்கும் ஸ்டெர்லைட் அலை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் வழக்கில் வென்று வர முடியாதா என்ன? இதுவும் ஜெயாவுக்குத் தெரியும்.

அது போல கெயில் எரிவாயு குழாய் பதிப்பிற்காக  அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ள ஜெயா விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறார். ஆனால் 1990-களில் சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய-மேய்ச்சல் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்ததே அவர்தான்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள “2025-இல் தமிழகம்” என்ற அறிக்கையில், “தற்போது 50 சதவீதமாக இருக்கும் தமிழக நகர்ப்புற மக்கள் தொகையை, 2025-இல் 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2025-இல் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  அப்படிக் குறைப்பதற்கு நகரமயமாவதைத் தற்பொழுதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த அபாயகரமான யோசனையின் உட்கிடை என்ன? விவசாயத்தையும், அதை நம்பி வாழும் மக்களையும் துரத்த வேண்டும் என்பதைத் தாண்டி வேறென்ன?

கூடங்குளம் போராட்டம் குறித்தும் ஜெயா எப்படி நடந்து கொண்டார் என்பது நமக்குத் தெரியும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆரம்பத்தில் எதிர்ப்பது போல நடித்து, நிபுணர் குழு, மத்திய அரசுக்கு கோரிக்கை என்று இழுத்து இறுதியில் அந்தப் பகுதியில் கடும் அடக்குமுறை கொண்டு ஒடுக்கி வருகிறது. கூடங்குளம் போராட்டக் குழுவினர் கூட ஜெயாவை இறுதிவரை நம்பினார்கள் என்பதும் உண்மையில்லையா?

இதே போன்று மூவர் தூக்கு விவகாரத்திலும் அவர் அடித்த பல்டியை நினைவுபடுத்திக் கொள்வோம். வரலாறு இத்தனை சாட்சியங்களை கொண்டிருந்தும் ஒவ்வொரு முறையும் ஜெயா அடிக்கும் சவடால்கள் கணிசமானோரை ஈர்க்கவே செய்கிறது. இதன் அரசியல் அடிப்படை என்ன?

மக்கள் நலன் சார்ந்த ஒரு பிரச்சினைக்கு நாம் அதில் பாதிப்படையும் மக்களையும், பாதிக்காத பிற பிரிவு மக்களிடையே பிரச்சாரம் செய்தும் அணிதிரட்டி போராட வேண்டும். ஆனால் அத்தகைய மக்கள் திரள் வேலையினை சுமையாகக் கருதும் நடுத்தர வர்க்க அரசியல் முன்னணியாளர்கள்தான் இப்படி அரசு, ஆளும் கட்சிகள் வழியாக ஏதும் நல்லது நடக்காதா என்று முயல்கிறார்கள். மக்கள் சக்தியால் நடைபெற வேண்டிய ஒரு விசயம் ஜெயா அரசால் மட்டுமே நடைபெற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது குறுக்கு வழி என்ற போதும் அவர்கள் விரும்பியே செல்கிறார்கள். மக்களை நம்பாத எவரும் இத்தகைய சமரச அழிவுப் பாதையில்தான் பயணிக்க முடியும்.

எனவே ஜெயாவை, அவர் எந்த வர்க்கங்களை பிரதிபலிக்கிறார், யாருக்காக ஆட்சி நடத்துகிறார், அவரது பழைய வரலாறு என்ன?, என்று முழுமையிலிருந்து மதிப்பிடாமல் சில பல அதிரடி சவடால்களை வைத்து ஏமாந்தோம் என்றால் எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் நாம் போராட முடியாது. அப்படி போராடுபவர்களை வலுவிழக்கச் செய்வதற்குத்தான்  ஜெயாவின் புரட்சி-புரட்டு நடவடிக்கைகளை பார்த்து ஆதரிப்பவர்கள் துணை போகிறார்கள்.

மார்கரெட் தாட்சர்: துருப்பிடித்து மறைந்த இரும்புப் பெண்!

8

1979 முதல் 1990 வரை கிரேட் பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் தனது 87-வது வயதில் லண்டனில் காலமானார். பொருளாதாரத் துறையிலும், வெளிநாட்டு உறவுகளிலும் உறுதியான முடிவுகள் எடுத்த மார்கரெட் தாட்சர் இரும்புப் பெண் என்று முதலாளித்துவ அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறார். உண்மையில் இந்த இரும்பு பின்னர் துருப்படித்து போனதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இரும்புப் பெண்
இரும்புப் பெண், துருப்பிடித்த சாதனைகள்

1980களில் பிரிட்டனில் தாட்சரின் தலைமையிலும், அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் தலைமையிலும் தனியார் மய, தாராள மய பொருளாதார கொள்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு வழி வகுக்கப்பட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றி, பாக்லாந்து போரில் அர்ஜென்டினாவை தோற்கடிப்பு, தொழிற்சங்கங்களை வீழ்த்தியது என்று அசைக்க முடியாத செல்வாக்கு படைத்தவராக போற்றப்பட்ட தாட்சர் 1990-ம் ஆண்டு அவரது கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் என்ற பெயருடன் பிறந்து வளர்ந்து, 1951-ல் டெனிஸ் தாட்சர் என்ற பணக்கார வர்த்தகரை திருமணம் புரிந்து மார்கரெட் தாட்சர் என்று அறியப்பட்ட அவரது புகழின் பின்னணி என்ன? முதலில் இத்தகைய முதலாளித்துவ கட்சி தலைவர்கள் எத்தகைய பிற்போக்குத்தனங்களையும் ஏற்பவர்களே என்பதற்கு ஒரு சான்றைப் பார்த்து விடுவோம்.

1970களில் இறுதியில் லண்டனில் இந்தியாவின் துணை தூதுவராக பணியாற்றிய நட்வர்சிங், பன்னாட்டு ஆயுத புரோக்கரும் சாமியாருமான சந்திராசாமியை தாட்சருடன் சந்திக்க ஏற்பாடு செய்தது பற்றி “வாக்கிங் வித் லயன்ஸ்…..” என்ற தன்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

இந்தி மட்டும் பேசத் தெரிந்த சந்திராசாமி சாமியார் உடையில் நெற்றியில் பெரிய திலகத்துடன் கம்பை ஊன்றிக் கொண்டு, ஆறு மாதங்களுக்கு முன்பு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மார்கரெட் தாட்சரை சந்திக்கப் போயிருக்கிறார். கிரேட் பிரிட்டனுக்கான இந்தியாவின் துணைத்தூதர் சாமியாரின் மொழிபெயர்ப்பாளராக உடன் போயிருக்கிறார்.

சாதாரண மாஜிக் ஒன்றை செய்து காட்டி தாட்சரை கவர்ந்து விட்டிருக்கிறார் சந்திராசாமி. ‘அடுத்த முறை சந்திக்க வேண்டும்’ என்று தாட்சர் கேட்க, ‘துணைத் தூதுவரின் வீட்டுக்கு வாருங்கள், சிவப்பு உடை உடுத்து வாருங்கள், கையில் நான் கொடுக்கும் தாயத்தை கையில் கட்டிக் கொண்டு வாருங்கள்’ என்றெல்லாம் சந்திராசாமி உத்தரவிட்டிருக்கிறார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சிவப்பு உடையில், தாயத்து கட்டிய கையுடன் ஆஜராகி, ‘தான் பிரதமர் ஆவது நடக்குமா, எப்போது நடக்கும், எத்தனை ஆண்டுகள் பிரதமராக இருக்க முடியும்’ என்று ஆர்வத்துடன் பல கேள்விகளுக்கு சாமியாரின் பதில்களை பெற்றுக் கொண்டு போயிருக்கிறார்.

சாமியார் சொன்னபடி பிரதமராகி விட்ட தாட்சர், அடுத்து நட்வர்சிங்கை சந்திக்கும் போது ‘சாமியாரிடம் குறி கேட்டது பற்றியெல்லாம் யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறார். பின்னர் தாட்சரின் புகழ் மாயை கலைந்து அம்பலமானதாலோ என்னமோ அதை தனது சுயசரிதையில் விலாவாரியாக எழுதி விட்டிருக்கிறார் நட்வர் சிங்.

மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ், இங்கிலாந்தின் லிங்கன்ஷையரில் உள்ள கிரந்தாம் என்ற ஊரில் 1925-ம் ஆண்டு பிறந்தார். அவர் தனது பள்ளிப் பருவத்தை, ரயில் பாதை ஓரம் இருந்த அவரது தந்தையின் மளிகைக்கடைக்கு மேல் இருந்த வீட்டில் கழித்தார். ‘மளிகைக் கடையில் வரவு, செலவுகளை சமன்படுத்துவது போல ஒரு நாடு தனது வரவு, செலவுகளை சமன்படுத்த வேண்டும்’ என்று பிற்காலத்தில் தனது பொருளாதார அடிப்படையை ‘அறிவுடன்’ விளக்கியிருக்கிறார் தாட்சர்.

1930களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தின் போது இங்கிலாந்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி, சிறு வணிகர்களும் தொழில்களும் நொடித்துப் போயின. அந்தச் சூழலில் வளர்ந்த மார்கரெட் ராபர்ட்ஸ் 1943-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டின் சாமர்வில் கல்லூரியில் சேர்ந்து 1947-ம் ஆண்டு வேதியல் பட்டப் படிப்பு பெற்றார். அதன் பிறகு ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகளை சுரண்டும்  ஏகபோக அதிகாரத்தை பிரிட்டன் இழந்தது; போரில் அழிக்கப்பட்ட பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியிருந்தது; சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச அரசுகளின் தாக்கம் பிரிட்டிஷ் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் ஒன்று சேர்த்திருந்தது; சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய நாடுகள் மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கத்துக்கு மூடப்பட்டிருந்தன; காலனி ஆட்சியிலிருந்து விடுபட்ட இந்தியா போன்ற நாடுகளில் மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் மட்டுப்பட்டிருந்தன. பிரிட்டனில் தனியார் முதலாளிகள் முதலீடு செய்து லாபம் ஈட்டும் கட்டமைப்பும் வாய்ப்புகளும் குறைவாக இருந்தன.

இந்தச் சூழலில், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றதாக சிலாகிக்கப்படும் சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சி, மக்களால் நிராகரிக்கப்பட்டு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது. தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசாங்கம் சுரங்கங்கள், பெட்ரோலியத் துறை, மின்சாரத் துறை, பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து போன்ற துறைகளை நாட்டுடமையாக்கியது. தொழில் நிறுவனங்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பது, தேசிய அளவில் பொருளாதார திட்டமிடுவது போன்ற கோட்பாடுகள் செல்வாக்கு பெற்றன. கார் தொழிற்சாலைகள், விமான தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள் போன்றவை அரசுடமையாக்கப்பட்டன.

மக்களுக்கு நாடு தழுவிய பொது மருத்துவ சேவை, இலவசக் கல்வி, அரசு வீட்டு வசதி போன்ற நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. சமூக நலத்திட்டங்களுக்கான சட்டங்கள் அனைத்தும் சோசலிச அபாயம் கருதி தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்ற இரு தரப்பின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. தொழிற்சங்கங்களின் செல்வாக்கு பெருகியது. 1955-ம் ஆண்டு வேலை இல்லாத் திண்டாட்டம் 1 சதவீதமாக குறைந்து வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.15 லட்சமாக குறைந்திருந்தது.

இந்த பொருளாதார சூழலில் தொழிலாளர் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த டார்ட்பர்டு தொகுதியில் போட்டியிடுவதற்கு மார்கரெட் தாட்சரை கன்சர்வேடிவ் கட்சி தேர்ந்தெடுத்தது. இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர் 1959-ம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த பின்க்ளே தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

கோழி, கோழி முட்டைத் தொழிலில் பெருமுதலாளியான ஆன்டனி பிஷர் என்பவர் நிதி கொடுத்து உருவாக்கிய பொருளாதார விவகாரங்களுக்கான கழகத்துடன் மார்கரெட் தாட்சர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ‘அரசாங்கத்தின் அளவை குறைக்க வேண்டும், மக்கள் நலத் திட்டங்களை ஒழிக்க வேண்டும், வரிகளை குறைக்க வேண்டும், சந்தைப் போட்டியை ஊக்குவிக்க வேண்டும்’ என்ற அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அந்த கழகம் செய்து வந்தது.

1970-ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த எட்வர்ட் ஹீத் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரவையில் மார்கரெட் தாட்சர் கல்வி, அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கல்வித் துறையில் அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியில் 7 வயது முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்கும் அரசின் திட்டத்தை ஒழித்துக் கட்டியதன் மூலம் ‘மார்கரெட் தாட்சர் – பால் பிடுங்கியவர்’ என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

1975-ல் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோற்றதை அடுத்து எட்வர் ஹீத்தை எதிர்த்து போட்டியிட்டு கட்சி தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார் மார்கரெட் தாட்சர். அந்த காலத்தில்தான் ‘3 ஆண்டுகளுக்குள் பிரதமர், 11 ஆண்டுகளுக்கு பிரதமர் பதவி’ என்று சந்திராசாமியின் நல்லாசியை பெற்றிருக்கிறார்.

1979-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்று மார்கரெட் தாட்சர் பிரதமரானார் . 1970களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், சீனா அன்னிய முதலீடுகளை வரவேற்று உற்பத்தி வாய்ப்புகளை அளித்தது, சோசலிச முகாமின் பின்னடைவு இவற்றால் பிரிட்டிஷ் தொழில்களை தனியார் மயமாக்கி உற்பத்தித் துறையை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாயின.

தாட்சர் தலைமையிலான அரசு, பெருநிறுவனங்களுக்கான வருமான வரியை குறைத்து, உழைக்கும் மக்கள் மீதான மறைமுக வரிகளை அதிகரித்தது; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன; செலவுகளை குறைப்பதாக மக்கள் நலத் திட்டங்கள் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டன; பொது மருத்துவத் துறை, இலவசக் கல்வி, ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் குறைக்கப்பட்டன.

“சமூகம் என்று ஒன்றும் கிடையாது. தனிப்பட்ட ஆண்களும் பெண்களும் குடும்பங்களும்தான் உண்டு. ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள வேண்டும்.” என்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றி வைத்திருந்த முதலாளிகளுடன் தினமும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளிகள் ‘சுதந்திரமாக’ போட்டியிட்டு வதைபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார், தாட்சர்.

முதலாளிகளின் லாப வேட்டைக்கு உள்நாட்டு தொழிலாளர்களை சார்ந்திருக்கத் தேவையில்லாத நிலையில், மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்கள் ஜனநாயகமற்ற முறையில் ஒடுக்கப்பட்டன. தொழிற்சங்கங்களின் செல்வாக்கு ஒழிக்கப்பட்டது.

1984-ல் தேசிய நிலக்கரி வாரியம் 174 அரசு நிலக்கரி சுரங்கங்களில் 20ஐ மூடுவதன் 1.87 லட்சம் வேலைகளில் 20,000ஐ வெட்டுவதாக அறிவித்தது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒரு ஆண்டு வரை வேலை நிறுத்தம் செய்தனர். அரசு பாராமுகமாக இருந்து வேலை நிறுத்தத்தை முறியடித்தது. 1985-ல் 25 சுரங்கங்கள் மூடப்பட்டன. 1992-ல் 97 சுரங்கங்கள் மூடப்பட்டன. 1994-ல் மீதியிருந்த சுரங்கங்கள் தனியார் மயமாக்கப்பட்டன.

தொழிலாளர்களும் சிறு தொழில்களும் நசிவடைய, சிட்டி ஆப் லண்டன் எனப்படும் ஒரு சதுர மைல் பரப்பில் குவிந்திருக்கும் நிதி நிறுவனங்கள் உலகளாவிய நிதி மூலதன பாய்ச்சல் மூலம் கொழுக்க ஆரம்பித்தன. இங்கிலாந்தில் தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது; உழைக்கும் மக்கள் தமது அடிப்படை தேவைகளுக்கு கூட வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. லண்டனின் நிதித்துறை சூதாடிகள் உலகம் முழுவதும் மூலதன சூதாட்டத்தை நடத்த ஆரம்பித்தனர்.

  • அரசு செலவுக் குறைப்புக்கும் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கும் நிகராக மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.
  • போக்குவரத்துத் துறையில் லாபம் இல்லாத தடங்களுக்கு சேவைகள் வெட்டப்பட்டன.
  • தனியார் மயமாக்கப்பட்ட போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய பேருந்து போக்குவரத்து கம்பெனி ஏகபோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
  • தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு, பயன்பாட்டு கட்டணங்கள் விண்ணைத் தொட்டன.
  • வீட்டு பயனீட்டாளர்களுக்கு மின்கட்டணங்கள் அதிகமாக்கப்பட்டன, மின் கட்டண வீதங்கள் தொழில் துறை முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றப்பட்டன.
  • தொழிலாளர்களின் எண்ணிக்கை 1979-ல் இருந்ததை விட 1997-ல் 20 லட்சம் குறைந்திருந்தது. கூலியும், சம்பளமும் குறைந்து தனியார் நிறுவனங்களின் லாபம் உயர்ந்தது.
  • அரசுத் துறை நிறுவனங்களை விற்று கிடைத்த காசில் பணக்காரர்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன.
  • தனியார் மயமாக்கப்பட்ட ரயில் போக்குவரத்து கடும் சீரழிவுகளுக்கு உள்ளானது.

1980களின் இறுதியில் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள் வெளிப்பட ஆரம்பித்து தொழிலாளர்கள், சிறு முதலாளிகள், வணிகர்கள் என்று அனைத்து பிரிவினரின் வெறுப்பையும் சம்பாதித்திருந்தது தாட்சர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அரசு. அடுத்த தேர்தலில் தாட்சரை தலைவராக வைத்திருந்தால் வேலைக்காகாது என்று உணர்ந்த கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் 1990-ம் ஆண்டு தாட்சரை கட்சித் தலைவர், பிரதமர் பதவிகளிலிருந்து பதவி நீக்கம் செய்தனர்.

1984-ம் ஆண்டு பிரிட்டனின் பொருளாதாரத்தில் விவசாயத் துறை 5.5 சதவீதம், தொழில் துறை உற்பத்தி 50.5 சதவீதம், சேவைத்துறை 48.12 சதவீதம் பங்கு வகித்தன. 2009-ல் விவசாயத் துறையின் பங்கு 0.7 சதவீதமாகவும், தொழில் துறை உற்பத்தி 16.15 சதவீதமாகவும் வீழ்ச்சியடைய, சேவைத்துறை 83.16 சதவீத அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

1984-ம் ஆண்டு உள்நாட்டு தொழில்துறை உற்பத்தி மதிப்பில் 49.5 சதவீதமாக இருந்த உற்பத்தி பொருட்களின் இறக்குமதி 2009-ம் ஆண்டு 154.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது பிரிட்டன் தான் உற்பத்தி செய்யும் பொருட்களின் மதிப்பை விட 1.5 மடங்கு அதிக மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது. பொருட்கள் இறக்குமதியில் 83 சதவீதம் தொழில் துறை பொருட்கள்; 12 சதவீதம் மூலப் பொருட்களும் எரிபொருட்களும்.

1984-க்கும் 2007-க்கும் இடைப்பட்ட 13 ஆண்டுகளில், 16 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களுக்குக் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகளில் 40 சதவீத வேலைகள் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளன. தற்பொழுது 18 சதவீத இளைஞர்கள் பள்ளிக்கோ, வேலைக்கோ செல்ல வழியற்றவர்களாக ஆக்கப்பட்டு, சமூகத்தின் கடைக்கோடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நகர்ப்புறத்தில் வசிக்கும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 வயது சிறுவன்கூட ஏதாவதொரு கும்பலில் சேர்ந்து ஊரைச் சுற்றுவது சர்வசாதாரணமாகிவிட்டது.

நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு பன்னாட்டு முதலாளிகளும், நிதி நிறுவன சூதாடிகளும் கொழுப்பதற்கான பொருளாதார கொள்கைகளை ஆரம்பித்து வைத்த பெருமை தாட்சரை சேரும்.

பிரதமர் பதவியை விட்டு விலகிய பிறகும் பன்னாட்டு நிறுவனங்கள் தாட்சருக்கான தமது நன்றியை மறந்து விடவில்லை. ஜூலை 1992-ல் பன்னாட்டு சிகரெட் நிறுவனம் பிலிப் மோரிஸ் தாட்சருக்கு புவிஅரசியல் ஆலோசகர் பதவி அளித்து ஆண்டுக்கு $2.5 லட்சம் ஊதியமாகவும், $2.5 லட்சம் அறக்கட்டளைக்கு நன்கொடையாகவும் வழங்கியது. இதைத் தவிர பிலிப் மோரிஸ் ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் நிகழ்த்தும் ஒவ்வொரு உரைக்கும் அவருக்கு $50,000 ஊதியம்  வழங்கப்பட்டது.

ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான போராளி என்று  பொய்யாக போற்றப்படும் தாட்சர் 1999-ல் சிலியின் முன்னாள் கொடுங்கோல் ஆட்சியாளன் அகஸ்டோ பினோசெட் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட போது அவரை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார். 1999-ல் லண்டனில் வீட்டுச் சிறையில் இருந்த அவரை போய் பார்த்தார். மார்ச் 2000-ல் பினோச்சே வழக்குகளை எதிர் கொள்ளாமலேயே பிரிட்டிஷ் அரசால் விடுவிக்கப்பட்டார்.

2005-ம் ஆண்டு முதல் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மார்கரெட் தாட்சர் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி திங்கள் கிழமை லண்டனில் மரணமடைந்தார்.

புகழ் தோன்றிய பத்து வருடங்களுக்குள்ளேயே தாட்சரின் மக்கள் விரோத கொள்கைகள் அம்பலப்பட்டு அனைவரும் வெறுக்கத் துவங்கினர். தற்போது தாட்சரின் மறைவை இங்கிலாந்து மக்கள் கொண்டாடுவதாகவும் செய்திகள் வருகின்றன. முதலாளித்துவத்தின் உலகமயக்கொள்கைக்கு தேவைப்பட்ட நடவடிக்கைகளை தாட்சர் எடுத்தார். அதனாலேயே முதலாளித்துவ உலகத்தால் பாராட்டப்பட்டு, மக்களால் தூற்றப்பட்டார்.

இதுதான் இரும்புப் பெண் துருப்பிடித்து மறைந்த கதை!

– அப்துல்.

மேலும் படிக்க
Thatcher, Chandraswami and I
The iron lady who remade Britain
Margaret Thatcher
UK Business

பட்ஜெட் 2013 – 14 பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!

0

மைய அரசின் 2013-14 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை காங்கிரசின் விசுவாசிகள் மட்டுமின்றி, இரண்டு சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களும் பாராட்டியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.  ஆறேழு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவின் தரச் சான்றைக் குறைக்கப் போவதாக மிரட்டிவந்த சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இன்று பட்ஜெட்டைப் பாராட்டுகின்றன என்றால், இந்த மனமாற்றம் ஆதாயமில்லாமலா ஏற்பட்டிருக்கும்?

பட்ஜெட் கார்ட்டூன்முடிவடையப் போகும் இந்த நிதியாண்டில் (2012-13) நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சிதம்பரம் அப்பற்றாக்குறையை 5.2 சதவீதமாகக் கட்டுப்படுத்திவிட்டதாக பட்ஜெட்டில் கணக்குக் காட்டியிருக்கிறார்.  இது மட்டுமின்றி, வரும் நிதியாண்டில் (2013-14) அப்பற்றாக்குறையை 4.8 சதவீதமாகக் குறைக்கும் அளவிற்கு பட்ஜெட்டைத் தயாரித்திருப்பதோடு, 2014-15 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை, சர்வதேச நிதி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு – 3 சதவீதமாகக் குறைந்துவிடும் என்றும் உறுதியளித்திருக்கிறார்.  சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டியிருப்பதன் பின்னணி இதுதான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெட்ரோலுக்குக் கொடுத்து வந்த மானியத்தை முற்றிலுமாக நிறுத்திய மைய அரசு, அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை அதிகார வர்க்கக் கும்பலிடம் ஒப்படைத்தது; இதனையடுத்து, ஆண்டொன்றுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்த்தப்பட்டது.  டீசலின் விலையை மாதாமாதம் 50 காசு உயர்த்தி விற்கும் முடிவினை அறிவித்து, டீசலுக்கு வழங்கி வந்த மானியத்திற்கும் மங்களம் பாடிவிட்டது, மைய அரசு.  இந்தச் சீர்திருத்தங்களின் மூலம் பட்ஜெட்டிற்கு முன்பாகவே பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு எரிபொருள் மானியத்தை வெட்டித் தள்ளினார், ப.சிதம்பரம்.

கடந்த ஆண்டு (2012-13) பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 80,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.  பின்னர், அதில் 5,000 கோடி ரூபாய் வெட்டப்பட்டு, உணவு மானியம் 75,000 கோடி ரூபாயாகச் சுருக்கப்பட்டது.  மைய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், குறைந்தது 1,35,000 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்க வேண்டும் என்ற நிலையில், ப.சி., தனது பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை 90,000 கோடி ரூபாய்தான். உணவு மானியத்திற்கு 45,000 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கியிருப்பதைப் பற்றிப் பேச மறுக்கும் காங்கிரசு கும்பல், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உணவு மானியத்திற்குச் சற்றுக் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் காட்டித் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொள்ள முயலுகிறது.

தங்கம்
கடந்த 2005-06ம் ஆண்டு தொடங்கி 2012-13 ஆம் ஆண்டு முடியவுள்ள எட்டு ஆண்டுகளில் தங்கம், வைரம், சுங்கவரிச் சலுகைகள் 3,14,456 கோடி ரூபாயாகும். இதுவும் உள்ளிட்டு கடந்த எட்டு ஆண்டுகளில் மேட்டுக்குடிப் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச்சலுகை 31,11,169 கோடி ரூபாய். வரிச்சலுகைகள் என்ற பெயரில் சட்டபூர்வமாக நடந்து வரும் இப்பகற்கொள்ளைதான் பற்றாக்குறை என்ற புதைசேற்றுக்குள் இந்தியாவைத் தள்ளி விட்டுள்ளது.

இப்படி எரிபொருள், உணவு, உரம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மானியங்களை வெட்டியதன் மூலம் அல்லது குறைவாக ஒதுக்கியதன் மூலம் 26,571 கோடி ரூபாயும்;  கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை வசதி, பாசன வசதி உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெட்டியதன் மூலம் ஏறத்தாழ 90,000 கோடி ரூபாயும் மக்களிடமிருந்து மறைமுகமாகப் பிடுங்கியிருக்கிறார், ப.சிதம்பரம்.  மேலும், பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளையும், அலைக்கற்றை உள்ளிட்ட இயற்கை வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம் 50,000 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.  நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க ப.சிதம்பரம் கையாண்டுள்ள இந்த வழிகளை ஜேப்படித் திருட்டுத்தனத்தோடு மட்டுமே ஒப்பிட முடியும்.

தனியார்மயம்-தாராளமயம் நடைமுறைக்கு வந்த பிறகு, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் கட்டளையை, இந்திய அரசு புனிதமான மதக் கட்டளையைப் போலக் கடைப்பிடித்து வருகிறது.  தற்போதைய காங்கிரசு கூட்டணி அரசு மட்டுமின்றி, இதற்கு முன்பிருந்த அரசுகளும் கூட இக்கட்டளைக்கு ஏற்றபடிதான் பட்ஜெட்டைத் தயாரித்து வந்தன.  பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மக்களுக்கு அளிக்கும் மானியங்களையும், சமூக நலத் திட்டங்களுக்குச் செலவு செவதையும் படிப்படியாக வெட்டுவது என்ற வழிமுறையைத்தான் இதற்கு முன்பிருந்த அரசுகளும் கடைப்பிடித்தன.

ப.சிதம்பரமும் இதேவழியில்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டைத் தயாரித்து, பற்றாக்குறையைக் குறைத்துக் காட்டியிருக்கிறார்.  பழைய கள்ளு புதிய மொந்தை என்றபடிதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றபோதும், அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில்கூட, விலைவாசி உயர்வு மக்களை வாட்டிவரும் வேளையிலும்கூட ப.சிதம்பரம் மானியங்களை வெட்டத் தயங்கவில்லை என்பதனால்தான் சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டியுள்ளன.

கோடிக்கணக்கான மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மானிய உதவிகளை வெட்டியது குறித்து குற்ற உணர்வோ, வருத்தமோ கொள்ளாத ப.சிதம்பரம், கையளவேயான பணக்காரர்கள் (42,800 பேர்) மீது, அவர்கள் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டும் வருமானத்தின் மீது மட்டும் கொஞ்சம் கூடுதலாக, எறும்பு கடித்தாற் போல வரி விதிக்க நேர்ந்த துயரத்திற்காகப் பெரிதும் சஞ்சலப்படுகிறார். “நாட்டிலுள்ள ஏழை மக்களின் நலன் கருதி இந்தக் கூடுதல் சுமையை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என மன்றாடும் ப.சிதம்பரம், இந்தக் கூடுதல் வரி விதிப்பை அடுத்த ஆண்டே ரத்து செய்துவிடுவதாக அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்.

“பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட சொகுசுக் கார்கள் இந்தியச் சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் 27,000-க்கும் அதிகமாக விற்கப்படும் வேளையில்;  இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5.5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 1,25,000 ஆக இருக்கும் என சர்வதேசப் பொருளாதாரப் பத்திரிகைகள் குறிப்பிட்டு வரும் நிலையில், வெறும் 42,800 பேர்தான் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவதாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள கணக்கே மோசடியானது” எனக் கேலி செய்கிறார், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.குருமூர்த்தி.

இந்த 42,800 பேர் மீது 3 சதவீத அளவிற்குக் கூடுதல் வருமான வரி விதிக்கப்பட்டிருப்பதை மட்டும் பெரிதுபடுத்தியிருக்கும் ப.சிதம்பரம், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரியில் மட்டும் 1,90,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்த பட்ஜெட்டில் வரி விலக்குகள் அளித்திருப்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் மூடிமறைத்திருக்கிறார்.

2012-13 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மொத்த வரிச் சலுகைகள் 5,28,163 கோடி ரூபாய்.  அதே ஆண்டில் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை 5,20,925 கோடி ரூபாய்.  பட்ஜெட்டில் துண்டு விழுவதற்கான காரணத்தை இந்தப் புள்ளிவிவரமே தெளிவுபடுத்திவிடுகிறது.

நியாய விலைக்கடை

2005-06 ஆம் ஆண்டு முதல் 2012-13 ஆம் ஆண்டு முடியவுள்ள காலக்கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 31,11,169 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச்சலுகைகள் இந்தியாவை நிதிப் பற்றாக்குறை என்ற புதைசேற்றுக்குள் மட்டும் சிக்க வைக்கவில்லை.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான தனியார்மயம் – தாராளமயம் என்ற இப்பொருளாதாரக் கொள்கை தேக்கவீக்கம் என்ற கட்டுமான நெருக்கடிக்குள்ளும் இந்தியாவைத் தள்ளிவிட்டுள்ளது.  குறைந்த கூலி, சம்பள வெட்டு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, மானிய வெட்டு, விவசாய நசிவு என மக்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் அனைத்தும் இந்நெருக்கடியின் விளைவுகளாகும்.

உலகமயம் இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக மாற்றிவிடும் என ஆளும் கும்பல் கூறி வந்த சரடுகளையெல்லாம் இந்தத் தேக்கவீக்கம் வெளுத்துப் போகச் செய்து விட்டதை இன்று யாராலும் மறைக்க முடியவில்லை.   “பொருளாதாரத் தேக்கம், விலைவாசி உயர்வு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவைதான் நாம் தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்” எனத் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், இதிலிருந்து நம்மைக் காப்பாற்ற அந்நிய மூலதனத்திடம் சரணடைவதைத் தவிர வேறு நாதி நமக்கில்லை என்று பிரகடனம் செய்வதோடு, அந்நிய மூலதனத்திற்கு காட்டப்படும் சலுகைகளை யாரும் எதிர்க்கக் கூடாது என்றும் அறிவுரை சொல்கிறார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரேஷன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைப் பலப்படுத்தக் கூடாது; மாறாக, சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்.  நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் மீதும் கைவைக்கக் கூடாது; அவர்கள் வரி ஏப்பு செவதையும் கண்டுகொள்ளக் கூடாது; மாறாக, மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்ட வேண்டும்.  இந்த மானிய வெட்டைக் கவர்ச்சிகரமான முறையில் நடைமுறைப்படுத்த “உங்கள் பணம், உங்கள் கையில்” திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்க பங்குச் சந்தை, வங்கி, காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட நிதிச் சந்தையில் அந்நிய மூலதனத்திற்கு இருக்கும் கட்டுப்பாடுகளை அறவே நீக்க வேண்டும் – இவைதான் மன்மோகன் சிங் – ப.சிதம்பரம் கும்பல் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க முன்வைக்கும் தீர்வுகள்.

எந்த விஷக் கிருமி இந்திய மக்களை மேலும் மேலும் வறுமை படுகுழிக்குள் தள்ளி வருகிறதோ, எந்த விஷக் கிருமி இந்தியப் பொருளாதாரத்தைத் தேக்க வீக்கம் என்ற கட்டமைப்பு நெருக்கடிக்குள் சிக்க வைத்ததோ, அதே விஷக் கிருமியை இன்னும் தீவிரமாக இந்தியாவிற்குள் இறக்கிவிட்டால், இந்தியா அடுத்த ஆண்டே 13 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துவிடும் என நம்மை நம்பச் சொல்கிறார், ப.சிதம்பரம்.  13 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற வாய்வீச்சு நிறைந்துள்ள ப.சிதம்பரத்தின் பட்ஜெட் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால், அது இந்தியாவைப் பன்னாட்டு நிதிச் சூதாடிகளிடம் முழுமையாக அடகு வைக்கும் இன்னொரு அடிமைச் சாசனம் தவிர வேறில்லை.

– செல்வம்
___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!

17

“ஈழத் தமிழருக்கெதிராக இனப் படுகொலை நடத்திய ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணை, தண்டனை வேண்டும்; பொது வாக்கெடுப்பு வேண்டும்;” இவ்விரண்டு சரியான, அவசியமான கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள், 1983 ஜூலைக்குப் பிறகு நாம் கண்டதொரு தமிழகம் தழுவிய எழுச்சியை நினைவுபடுத்துகின்றன.

1983 ஜூலையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்  உட்பட 53 ஈழத் தமிழர்கள் வெளிக்கடை சிறையில் வைத்துச் சிங்களக் காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்; அதைத் தொடர்ந்து சிங்கள இனவெறி இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட வெறியாட்டத்தில் பலநூறு ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் சிங்களக் காடையர்களின் வல்லுறவுக்குப் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான அகதிகள் தமிழகத்தில் வந்து குவிந்தனர். ஆத்திரமும் கோபமும் அடைந்த தமிழக மக்கள், தன்னெழுச்சியாக, இப்போது நடப்பதைவிட மிகப்பெரிய அளவில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் குதித்தார்கள். தமிழகம் முழுவதும் பல  நகரங்கள், கிராமங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – என அனைத்துத் தரப்பும் தெருவில் இறங்கி, பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள், அன்றைய சிங்கள இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பு எனப் போராட்டங்கள் நடத்தினர்.  அதன் பிறகு, அவ்வாறான மிகப் பெரிய எழுச்சியைத்  தமிழகம் கண்டதில்லை.

எனினும், புலிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம், பிரிவினைவாதம் என்று பீதி கிளப்பிப் பார்ப்பன ஆதிக்கச் செய்தி ஊடகங்கள் நடத்திய அவதூறுப் பிரச்சாரம், குறிப்பாக, ராஜீவ் கொலைக்குப் பிறகு ஜெயலலிதா அரசு கட்டவிழ்த்துவிட்ட ஈழ எதிர்ப்புப் பிரச்சாரம், ஈழத் தமிழர் வேட்டை – இவை காரணமாக முன்பு நிலவிய ஈழ ஆதரவு எழுச்சி மங்கி, மறைந்து போனது. கடைசியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கே மக்கள் அஞ்சும் சூழல் நிலவியது. அந்த நிலையிலும் அரசு துரோக வழக்கு, “தடா” கைதுகளை எதிர் கொண்டும், புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் மட்டுமே ஈழ ஆதரவு இயக்கங்களை நடத்தின. அப்போது  நெடுமாறன், வைகோ, ராமதாசு, வீரமணி, மணியரசன் போன்ற புலி ஆதரவாளர்கள்கூட முடங்கிப் போனார்கள்.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளின்போது, விடுதலைப் புலிகளின் படை வெற்றி முகத்தில் உள்ளதென்றும், ஈழத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கிட்டத்தட்ட புலிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டனவென்றும், விரைவில் தனி ஈழம் பிரகடனப்படுத்தப் போகிறார்கள் என்றும், அதனைப் பிற நாடுகள் அங்கீகரிப்பது மட்டுமே தேவை என்றும் ஒருபுறம் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.  இன்னொருபுறம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒழித்துக் கட்டுவதென்பது ஜெயலலிதா அரசின் நடவடிக்கை என்பதைத் தாண்டி, அவரது சொந்த முறையிலான வெறி பிடித்த நடவடிக்கையாகவே இருந்தது. இருப்பினும், ஈழ விடுதலைக்கு ஆதரவான எழுச்சி எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

2006-இல் மகிந்த ராஜபக்சே அரசு புலிகளுக்கு எதிரான இறுதிப் போரைத் துவங்கியது. மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை இரண்டரை ஆண்டு காலம் நீடித்த இந்தப் போர் அதிகரித்த அளவில் ஈழத் தமிழின அழிப்புப் போராகவே இருந்தது. 2008-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிங்கள இனவெறி இராணுவத்தின் கிளிநொச்சி முற்றுகையும் தாக்குதலுமாகத் தீவிரமடையத் தொடங்கின. புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லிக் கொண்டு, போர் விமானங்களும், பீரங்கிகளும், ஹெலிகாப்டர்களும் ஈழத் தமிழர் மீது கொத்துக்குண்டு மழை பொழிந்தன. நூற்றுக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட, எஞ்சியவர்கள் வீடிழந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். உணவும் மருத்துவமும் கிடைக்காமல் சொந்த மண்ணில் அகதிகளாகவும் நாடோடிகளாகவும் அலைந்தனர்.

அப்போதும்கூட தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு ஈழ ஆதரவு எழுச்சி எதுவும் நடந்துவிடவில்லை. கிளிநொச்சியைக் கைப்பற்றி, வன்னியைத் திறந்தவெளி வதை முகாமாக சிங்கள இராணுவம் மாற்றிவிட்ட நிலையில், புலிகள் முல்லைத் தீவுக்கு விரட்டப்பட்ட நிலையில், “எப்படியாவது போரை நிறுத்துங்கள்; இங்கே நாங்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுகிறோம்” என்று ஈழத் தமிழர்கள்  துயரக்குரல் எழுப்பினர்.  முத்துக்குமார் தீக்குளிப்பும், வழக்குரைஞர்கள் போராட்டங்களும் தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வலைகளை ஏற்படுத்தின. இவற்றில் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தமிழகமோ மக்களவைத் தேர்தல் திருவிழாக் கொண்டாட்டத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. ஈழப் போரோ, முல்லைத் தீவு, முள்ளிவாய்க்கால், இறுதியாக நந்திக் கடற்கரையில் வரலாறு காணாத தமிழின அழிப்புப் படுகொலையை நோக்கி நகர்ந்தது.

காங்கிரசு – கருணாநிதி தலைமையில் ராமதாசு, திருமா திரண்டு மன்மோகன் – சோனியா கும்பலுக்குக் கடிதம் – மனுப் போட்டு மன்றாடுவது, அரை நாள் உண்ணாவிரதம், மனித  சங்கிலி, மேனன் – நாராயணன், பிரணவ முகர்ஜியின் போர் நிறுத்த வாக்குறுதிகள் -இலங்கை விஜயங்கள் எனப் பித்தலாட்ட நாடகங்களை அடுத்தடுத்து அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம், ஜெயலலிதா தலைமையில் பா.ஜ.க. முதல் தா.பா.வரை புலி ஆதரவாளர்கள் உட்பட ஓரணியில் திரண்டார்கள். “இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழத்தைப் பெற்றுத் தருவேன்” என்ற வாக்குறுதியோடு ஜெயலலிதா “ஈழத் தாய்” அவதாரம் எடுத்தார். “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று நம்பச் சொன்னார்கள், புலி ஆதரவாளர்கள்.

ஈழம் மாணவர் எழுச்சி2009 மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஈழத்தில் இனப் படுகொலை உச்சத்தில் நடந்தபோதுகூட,  தமிழகத்தில் அதற்கெதிரான குறிப்பிடத்தக்க பெரும் எழுச்சி எதுவும் நடந்துவிடவில்லை. “நாங்கள் தாய்த் தமிழகத்தை நம்பினோம்; அவர்களும் எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்”  என்று ஈழத் தமிழர்கள் மனம் உடைந்து கூறினர். இத்தகைய நிலைக்குப் பொறுப்பானவர்கள் யார்? ஈழப் போரை வழிநடத்திய விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் தலைவர் பிரபாகரன் மீது “உலகிலேயே சிறந்த அரசியல், இராணுவ வல்லுநர்; போரில் வெல்வதற்கு ஏதோ தந்திரங்கள் வைத்திருக்கிறார்; புலிகளை வெல்லவே முடியாது” என்ற மாயையை  இறுதிக் கட்டத்திலும் பேணியவர்கள் யார்? சோனியா – அத்வானி, கருணாநிதி – ஜெயலலிதா, அமெரிக்கா, சர்வதேச சமூகம் எனப்படும் அதன் எடுபிடி நாடுகள் ஆகிய மேலாதிக்க பாசிச சச்திகள், பிழைப்புவாதிகள் – துரோகிகள், ஏகாதிபத்திய வல்லரசுகள் மீது அடுத்தடுத்து நம்பிக்கை வைக்கும்படி வாதாடியவர்கள் யார்? ஈழத்தின் “தலைவிதி” முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்? அவர்கள்தான் அத்தகைய செயலற்ற நிலைக்குப் பொறுப்பானவர்கள்!

இந்தியா, இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்களையும் விண்வெளி வேவுச் செய்திகளையும் வழங்குவது மட்டுமல்ல; நேரடியாக போர்க்களத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என்பது 2008 அக்டோபரிலேயே அம்பலமானது. புலிகளின் எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள்  போர்க்களத்தில் நிற்பதையும், அவர்களில் சிலர் காயமடைந்ததையும் இலங்கை ஏடுகளே உறுதி செய்தன. இந்தியா ஈழத்தின் எதிரி நாடாகச் செயல்படுவதையும் ராஜபக்சேவுடன் ஈழப் போரை வழிநடத்துவதையும் அறிந்திருந்தபோதும், அப்போதே கருணாநிதியின் துரோகங்களை அறிந்திருந்த போதும், புலி ஆதரவாளர்கள் இந்த உண்மைகளை முன்வைத்து மன்மோகன் – சோனியா மற்றும் கருணாநிதி அரசுக்கு எதிராக எந்தப் போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மாறாக, மன்மோகன் – சோனியா கும்பல் மீதும் இந்தியா மீதும் நம்பிக்கையைப் பேணினார்கள்; பார்ப்பன, மலையாள அதிகாரிகளின் தூண்டுதல், தவறான ஆலோசனைகள் காரணமாகத்தான் இந்திய அரசு போர் நிறுத்தம், ஈழ ஆதரவு நிலையெடுக்க மறுக்கிறது என்றும் இலங்கையிடம் இந்திய அரசு ஏமாந்து விட்டது என்றும், சீனா, பாகிஸ்தான் சதிகளை முறியடிக்க ஈழத் தமிழர் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளிக்க வேண்டும் என்றும், சோனியாவின் தாய்மையுணர்ச்சிக்கும் மன்மோகனின் மனிதாபிமானத்துக்கும் மன்றாடினார்கள்.

பிழைப்புவாதிகள்
பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து வை.கோ., நெடுமாறன் தலைமையில் சென்னை – உயர்நீதிமன்றம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம்; பிழைப்புவாதக் கும்பலின் பெருங்கூச்சல்.

“ஈழம் மலர்வதற்கு உத்திரவாதம் இருந்தால் நான் பதவி விலகுகிறேன்” என்ற கருணாநிதியை விட்டு விலகி,  “40 தொகுதிகளையும் உத்தரவாதப்படுத்தினால் ஈழம் தருகிறேன்” என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதிக்குப் பின்னால் அணி அமைத்தார்கள், புலி ஆதரவாளர்கள். “தனி ஈழம் கூடாது; ஒன்றுபட்ட இலங்கையே சரியானது; புலிகள் பயங்கரவாதிகள்” என்பதுதான் பா.ஜ.க. மற்றும் இ.க.க. கட்சிகளின் அதிகாரபூர்வ நிலை என்றபோதும், அவற்றின் தமிழ்நாட்டுத் தலைவர்களான இல.கணேசன், தா.பாண்டியனை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

ஈழப்பிரச்சினையில் மட்டுமின்றி, வேறு பல பிரச்சினைகளிலும் இவர்களது அரசியல் சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் தம் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கும் தமிழக மக்கள், ஈழத் தமிழ் மக்களின் துயரம் குறித்து தமிழக மக்களுக்கு அனுதாபம் இருப்பினும், காங்கிரசு- தி.மு.க. கூட்டணியின் மீது அதிருப்தியும் வெறுப்பும் இருப்பினும், ஈழ மக்களின் துயரத்தை ஜெ. அணியினர்  துடைத்து விடுவார்கள் என்று நம்பிவிடவில்லை.

பிழைப்புவாதிகள், பாசிஸ்டுகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார்கள் புலி ஆதரவாளர்கள். உள்ளூர் பிரச்சினைகள், சாதி உள்ளிட்ட  பல்வேறு காரணங்களால் ஆளும் கட்சி மீது மக்களுக்குத் தோன்றியிருக்கக் கூடிய அதிருப்தியை, ஈழ ஆதரவாக அப்படியே மடைமாற்றிவிட முடியும் என்று கணக்குப் போட்டார்கள். அந்தக் கணக்கு பொய்த்து விட்டது. காங்கிசு-தி.மு.க., கூட்டணியே நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றது.

அதேசமயம், ஈவிரக்கமற்ற முறையில் நடந்துகொண்டிருந்த ஈழப்போரின் கடைசி நாட்கள் இந்திய மேலாதிக்கத்தின் கோரமுகத்தை நமக்குக் காட்டுகின்றன. மே 13 அன்று தமிழகத்தில் தேர்தல் முடிந்தபின் இறுதித் தாக்குதலை வைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு வழிகாட்டி இயக்கியது, இந்திய அரசு. புலி ஆதரவாளர்களோ, மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வரும்வரை ‘இறுதி முடிவு’ எதுவும் எடுக்கவேண்டாமென புலிகளுக்கு ஆலோசனை கூறினார்கள்.

தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையிலும், “துப்பாக்கிகளை மவுனிக்கச் செய்வது” என்ற தங்களது இறுதி முடிவை அறிவிப்பதற்கு இந்தியத் தேர்தல் முடிவுகள் தெரியும் வரை (மே 16) புலிகள் காத்திருந்தார்கள். தோல்வியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதும், ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளை ராஜபக்சே அரசு நிராகரித்து விட்டது என்பதும் புலிகள் அறியாததல்ல. புலிகளுக்கு நம்பிக்கையூட்டும் எந்த நிகழ்வும் இந்தக் கடைசி நாட்களில் நடந்துவிடவில்லை. இருப்பினும், அன்றாடம் பல்லாயிரம் மக்களும் புலிகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோதும், கடைசியாக புலிகள் இயக்கத் தலைவர்களே கொல்லப்படும் நிலைமை நெருங்கிய போதும், “டில்லியில் ஆட்சி மாறினால் போர்நிறுத்தம் வந்துவிடும்” என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.  கடைசி நாட்களின் நிகழ்வுகள் இதனைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. இந்த மூடநம்பிக்கை மிகவும் பாரதூரமான இழப்பை ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது.

ஒருவேளை, ஈழ ஆதரவாளர்கள் எதிர்பார்த்த வெற்றியை ஜெயலலிதாவும் பாரதிய ஜனதாவும் பெற்றிருந்தால், மறுகணமே போர்நிறுத்தம் வந்திருக்குமா? அப்படி ஒரு பிரமை ஒருவேளை புலிகளுக்கு இருந்திருந்தாலும், இங்கிருக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் அந்தப் பிரமையை நீக்கி, அவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி இருக்கவேண்டும். மாறாக, அத்தகைய பிரமையை உருவாக்கும் திருப்பணியையே இவர்கள்தான் செய்து கொண்டிருந்தார்கள். இந்தப் பிரமைக்கு, தங்கள் உயிரையும் சொந்தங்களையும் காவு கொடுத்தார்கள், ஈழத் தமிழ் மக்கள்.

இவ்வாறு குற்றம் சாட்டுவதன் காரணமாக புலி ஆதரவாளர்கள் நம்மீது ஆத்திரப்படலாம். அது குறி தவறிய ஆத்திரம். மாறாக, இத்தகைய பிரமையை இன்னும் தொடர்வதற்காக அவர்கள் மீதுதான் தமிழ் மக்கள்  ஆத்திரம் கொள்ள வேண்டும்.

மே 21-ஆம் தேதியன்று நெடுமாறன், வைகோ, ராமதாசு முதலானோர் நடத்திய பேரணிக்கு ஜெயலலிதாவை அழைத்தார்கள். அவர் வரவில்லை. அதுமட்டுமல்ல; ஜெயலலிதா விடுத்த அறிக்கையிலும் ‘தனிஈழம்’ என்பதோ, ‘இனப்படுகொலை’ என்பதோ ‘ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி’ என்பதோ வார்த்தை அளவில்கூட இடம்பெறவில்லை. இந்த அம்மையாரின் வெற்றிதான் போர்நிறுத்தத்தைக் கொண்டுவரும் என்று ஈழத் தமிழ் மக்களையும் புலிகளையும் நம்ப வைத்து அவர்களைப் படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் புலி ஆதரவாளர்கள். எந்தப் புலிகளை இவர்கள் ஆதரித்தார்களோ, அந்தப் புலிகளையே காவு வாங்கிவிட்டது இவர்களுடைய பிழைப்புவாதத் தேர்தல் அரசியல்.

இவ்வளவுக்கும் பிறகு பார்ப்பன பாசிச ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் ஈழப் பிரச்சினையில் மத்திய அரசிடம் வைக்கும் “தனி ஈழம், போர்க்குற்றவாளி, சர்வதேச நீதி விசாரணை, பொருளாதாரத் தடை” என்றெல்லாம் அடிக்கும் சவடால்கள், தீர்மானங்களை நம்பும்படி உலகத் தமிழர்களிடம் புலி ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

“ஈழத் தமிழருக்கு மிகப் பெரிய அளவு துரோகம் புரிந்தது யார்? கருணாநிதியா, ஜெயலலிதாவா?” என்ற தலைப்பிலான இலாவணிதான் தமிழக அரசியலில் அடுத்த சில ஆண்டுகளுக்கு முதன்மை இடத்தைப் பெறப் போகிறது. ஈழத் தமிழினப் படுகொலை, பாசிச ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்களுக்கான விசாரணை, தண்டனை மற்றும் ஈழத் தமிழினத் தன்னுரிமை ஆகிய பிரச்சினைகள் மீதான கோரிக்கைகள், விவாதங்கள், போராட்டங்கள் எழும்போதெல்லாம் இந்தக் கேள்வி வருகின்றது.

2009 மே-யில் ஈழத் தமிழர் இன அழிப்புப் படுகொலைகள் நடந்தபோது ஆட்சியிலிருந்த கருணாநிதி என்ன செய்தார்? அப்படுகொலையை தி.மு.க., பங்கேற்கும் இந்திய அரசு வழிநடத்திய போதும் அதைக் கண்டு கொள்ளாமல், பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தவர்தானே கருணாநிதி. அந்தப் ’பாவச் செயல்’ இந்த இலாவணியினூடே நம் கண் முன்பு வந்து நிற்கும். ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தைத் தனிநாடாகப் பெற்றுத் தருவேன் என்றெல்லாம்  ஜெயலலிதா என்னதான் நீலிக் கண்ணீர் வடித்தாலும், புலிகளின் துப்பாக்கிக் கலாச்சாரம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்ற பீதி கிளப்பியதும், ஈழத் தமிழ் அகதிகளை வேட்டையாடியதும், ராஜீவ் கொலைக் குற்றவாளி பிரபாகரனைப் பிடித்து வந்து தண்டிக்க வேண்டும் என்றும், போர் நடந்தால் மக்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்றும் ஈழத்தமிழர் மீது வெறுப்பை உமிழ்ந்த ஜெயலலிதாவின் குரூர – வக்கிர முகம் இந்த இலாவணியினூடே நம் கண் முன்பு தோன்றும்.

இந்த இலாவணியில் கருணாநிதி, ஜெயலலிதா தலைமையிலான இரு அணிகளில் அரசியல் ஆதாயம் அடிப்படையில் ஏதாவது ஒன்றில் அணி சேர்ந்து பக்கவாத்தியங்களை வாசிக்கவுள்ளவர்கள்தாம் நெடுமா, திருமா, சீமா, வைகோ, சுப.வீ., வீரமணி, இராமதாசு, பிற உதிரி இனவாத மற்றும் பெரியாரிய அமைப்பினர், பெ.ம., தியாகு போன்ற சிலர் ‘கூச்சப்பட்டுக்கொண்டு‘ இந்த குரூப் போட்டோவில் (அல்லது அணி சேர்க்கைகளிலிருந்து) இரண்டடி விலகி நின்றாலும், இவர்களுக்கிடையிலான வித்தியாசம் வெறும் இரண்டடி மட்டும்தான்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈழத் தமிழினத்தின் எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நேரடியான துரோகம் செய்தார்கள்; ஆனால், இவர்கள் செய்தது, துரோகிகளுடன் கைகோர்த்துக் கொண்ட மறைமுகத் துரோகம். புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இவர்கள் காட்டும் மாளாத விசுவாசம், தமிழீழத்துக்கான தணியாத தாகம், இவ்விரண்டுக்கான பெருங்கூச்சல் – இவை எதுவும் இவர்களின் மறைமுகத் துரோகத்தை மறைத்துவிட முடியாது.

பாசிச காங்கிரசின் பிராந்திய மேலாதிக்க ஈழ எதிர்ப்பு, ராஜபக்சே கும்பலுடனான போர்க் குற்றங்களில் கூட்டு எல்லாம் தமிழக மக்களிடையே அம்பலப்பட்டு, அக்கட்சி தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்படும் நேரம் வந்துவிட்டது. மீண்டும் அக்கட்சி ஆட்சிக்கு வரவும் முடியாது. இனி அதனுடன் கூட்டுச் சேர்ந்தால், இங்கு ஒரு ஓட்டுக்கூடப் பெறவும் முடியாது. கருணாநிதி கட்சி ஆட்சியிழப்பதற்குக் காரணமாக அமைந்த 2-ஜி வழக்கில்கூட காங்கிரசின்  முதன்மையான பங்கு அம்பலமாகி வருகின்றது. இந்த நிலையில் மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிக்கும் எலியைப் போல எகிறிக் குதித்து விட்டார், கருணாநிதி. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து தான் செய்த குற்றங்களையும், முந்தைய ஆட்சிக் காலத்தின் ஊழல்களையும்விட தற்போதைய ஜெயலலிதா ஆட்சியின் தவறுகள்தாம் தமிழக மக்கள் முன்நிற்கும் என்பதால், எப்படியும் தனது குடும்ப ஆட்சியை மீட்டு விடலாம்  என்பது கருணாநிதியின் கணக்கு.

ஜெயலலிதாவின் கணக்கு வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான். இனிமேலும் காங்கிரசு, பா.ஜ.க., எதனுடனும் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர்ந்து பயனில்லை; 40-உம் தனக்குதான்; கண்ணுக்கெட்டிய தூரத்தில் பிரதமர் பதவி என்ற கனவு நிறைவேறாவிட்டாலும், கணிசமான சீட்டுக்களைப் பெற்றுவிடலாம்; சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிவிடவும், குவித்த  சொத்துக்களைக் காத்துக் கொள்ளவும் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் யாருடனும் கூட்டுச் சேரலாம். ஈழச் சிக்கல் குறித்து சில தீர்மானங்களும், வாக்குறுதிகளும், சவடால்களும் அடித்தால் போதும்; தனது  ஈழ எதிர்ப்பு நிலைப்பாடுகளால் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்பை ஈழ ஆதரவாளர்கள் என்ற பெயரிலுள்ள தனது விசுவாசிகளே  சரிக்கட்டிவிடுவார்கள்; நோட்டுகளையும், சீட்டுக்களையும் விட்டெறிந்தால் போதும்,  பழைய கசப்புகளை மறந்துவிட்டு தான் எட்டி உதைத்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூடத்  தன் காலில் வந்து விழுவார்கள் என்பது ஜெயாவின் கணக்கு.

தமிழகத்திலுள்ள புலி ஆதரவாளர்களும் தமது ஆதாயத்துக்காக இந்த இரு இலாவணிக்காரர்களில்  ஏதாவது ஒருவரைத் தெரிவு செய்து அணிசேர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், அவர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து, இந்திய அரசு மற்றும் அதன் தேர்தல் அரசியல் கட்டமைப்புக்குள் மட்டுமே இயங்கக்கூடியவர்கள்; அதற்கு அப்பாற்பட்டுச் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் அல்ல.

பின்வரும் உண்மையே இதை நிரூபிக்கிறது: ஈழப் பிரச்சினைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போராடுவதும் அதன் பொருட்டு பிற விடுதலை இயக்கங்கள் மற்றும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் ஈழ விடுதலைப் போர் வெற்றி பெற அவசியமானது என்பதை எப்போதும் புலி ஆதரவாளர்கள் ஏற்றதில்லை. ஈழம் பிரிவதையோ, தெற்காசியப் பகுதியில் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதையோ இந்திய அரசும் இந்திய தேசியக் கட்சிகளும் ஒரு போதும் ஏற்கவில்லை; அது ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு எதிரானது; இதுதான் சிங்கள இனவெறி அரசுடன் இந்திய அரசு கூட்டுச் சேர்ந்து ஈழப்போரை நடத்தியதற்கு முதன்மைக் காரணம் என்பதை பலமுறை எடுத்துச் சொல்லியும் ஏற்றதில்லை.

இந்திரா-ராஜீவ், எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா, வாஜ்பாய் – அத்வானியையும் இந்திய அரசையும் இராணுவத்தையும் புலி ஆதரவாளர்கள் நம்பினார்கள். புலி பிரபாகரனே இம்மாதிரியான அணுகுமுறையைத்தான் கொண்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் முற்றான தோல்வியைச் சந்திக்கும் வரை தெற்கு ஆசியாவில் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு சிங்கள அரசைவிடப் புலிகள் உறுதியான ஆதரவளிப்போம் என்று நட்புக்கரம் நீட்டினார். நீட்டிய அந்தக் கரத்தை மடக்காமல் இருந்ததுதான் பிரபாகரனின் அரசுதந்திர ஆளுமை என்று இங்குள்ள புலி ஆதரவாளர்கள் புகழ்ந்தார்கள். அப்போதும், இப்போதும் இந்திய மேலாதிக்க எதிர்ப்பு, இந்திய தேசிய இனங்களின் தன்னுரிமை என்ற அரசியல் முழக்கங்களின் கீழ் தமிழ் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமல், ஈழத் தமிழினப் படுகொலை தமிழக மக்களிடம் தோற்றுவித்த அனுதாப உணர்வை, அப்படியே குறுக்கு வழியில் இனவுணர்வாக உருமாற்றிவிடலாமென ஈழ ஆதரவாளர்கள் முயல்கிறார்கள். இன்னமும் ஈழத்தின் எதிரிகளையும், துரோகிகளையும் வைத்துத்தான் காரியங்களைச் சாதிக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.

ஈழத் துரோகிகளும் பிழைப்புவாதிகளும் கூட இப்போது தமிழத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் எழுச்சிக்குள் முகம் புதைத்துக் கொண்டு எல்லாமும் புதிதாக நடப்பதைப் போல மீண்டும் அதே நாடகத்தை நடத்துகிறார்கள்.

ஆனால் சில மாணவர் குழுக்களின் தலைமை, புலிகளும் புலி ஆதரவாளர்களும் செய்த அதே வகையிலான தவறுகளைச் செய்கின்றனர். இப்போது முன்வைக்கப்படும் இரண்டு கோரிக்கைகளை எவ்வாறு, எந்த வழிகளில்  நிறைவேற்றமுடியும் என்பதை ஆழமாகப் பார்க்க மறுக்கின்றனர். இரண்டு கோரிக்கைகளில் ஒன்றான “பொது வாக்கெடுப்பு” என்பதைத் தமது குறுங்குழுவாத அகநிலைப் பார்வையைத் திணித்தும் திரித்தும் வியாக்கியானம் செய்து மாற்றி அமைத்துக் கொண்டு ஈழ ஆதரவு சக்திகளைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்களும் புலி விசுவாசிகளைப் போலவே  “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றி அமைத்து ஈழ ஆதரவாளர்களைப் பிளவுபடுத்தவும்  செய்கிறார்கள்.

“பொது வாக்கெடுப்பு” என்பது ஒடுக்கப்படும் இனம் தனது சுயநிர்ணய உரிமையை (தன்னுரிமையை) நிறைவேற்றிக்கொள்ளும் செய்முறை. ஒடுக்கப்படும் இனம் (இங்கே ஈழத்தமிழினம்) தனது அரசியல் வாழ்வுரிமையைத்தானே  முடிவுசெய்துகொள்ளும் உரிமைதான் தன்னுரிமை. அதாவது ஒடுக்கப்படும் இனம், ஒடுக்கும் இனத்தோடு (இங்கே சிங்கள இனத்தோடு) சேர்ந்து ஒரே அரசின்  கீழ் வாழ விரும்புகிறதா அல்லது தனித்ததொரு அரசு (தனித் தமிழீழ அரசு) அமைத்துக்கொள்ள விரும்புகிறதா என்பதை முடிவு செய்வதற்காக ஒடுக்கப்படும் இன மக்களின் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு. மேலும் சொல்வதானால், ஒடுக்கப்படும் இன மக்களுக்குள்ளும் (ஈழத் தமிழ் மக்களுக்குள்ளும்) மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின், பெரும்பான்மையினர் எதை ஆதரிக்கின்றனர் என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு.

ஆகவே, தன்னுரிமை என்பது   ஒடுக்கப்படும் இனத்துக்கு தனியரசு அமைத்துக்கொள்ளும் உரிமையை உறுதி செய்வதாகும். அது  ஒரு ஜனநாயக உரிமை என்பதால், ஒடுக்கப்படும் இனத்துக்குள்ளாகவே தனியரசு அரசு அமைப்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பின், அதாவது தனியரசு அரசு அமைப்பதற்கு உடன்படாதவர்கள் அதைத் சொல்லவும், அதுவே பெரும்பான்மைக் கருத்தாக இருத்தால்  தனியரசு அமைப்பதைத் தடுப்பதற்கும் உரிமையுண்டு.  இவ்வாறு எந்வொரு முடிவையும் ஒடுக்கப்படும் மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை.  ஒடுக்கப்படும் மக்கள் தாமேவந்து முழு ஜனநாயக உரிமையுடன் தீர்மானித்துக் கொள்வதற்குத்தான் பொது வாக்கெடுப்பு. ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையைத்தான் “ஈழத் தமிழர்க்கு  தன்னுரிமை” என்று சொல்கிறோம்.

ஆனால், “ஈழத் தமிழர்க்கு  தன்னுரிமை” என்பது “மழுப்புவது, தனித் தமிழீழத்தை மறுப்பது, எதிர்ப்பது; அதை மூடிமறைக்கும் தந்திரம்” என்று சொல்லிக்கொண்டு  சில மாணவர் குழுக்கள், “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை “தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு” என்பதாக மாற்றியும், குறுக்கியும் வியாக்கியானம் செய்கின்றனர். “பொது வாக்கெடுப்பு” என்ற முழக்கத்தை இவ்வாறு திரிப்பது,  “பொது வாக்கெடுப்பு’’க்கான உரிமையைப் பெறுவதற்கு முன்பே மாற்றுக் கருத்துக்கான உரிமையை மறுக்கும் சர்வாதிகாரமாகும். இம்மாதிரியான போக்குதான்  துரோகம் ஏதும் செய்யாமலேயே தமிழீழத்துக்காக உறுதியுடன் போராடிய ஈழத்தமிழர்கள் பலரையும், இசுலாமியர்களையும் புலிகள் படுகொலை செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது.  புலிகள் எத்தனை ஈழத் தமிழர்களை கொன்று போட்டார்கள், இசுலாமியர்களைக் கொன்று போட்டார்கள், எத்தனை ஈழத் தமிழர்களையும் இசுலாமியர்களையும் அகதிகளாக்கினர்கள்? இவர்களும்தானே புலிகளுடன் தமிழீழத்தில் சேர்ந்து வாழமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. இவர்களும் தமது கருத்துக்களைச் சொல்லவும்தானே “பொது வாக்கெடுப்பு’’? சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை மற்றும் இனப்படுகொலை மட்டுமல்ல, மேற்கூறியவை உள்ளிட்ட அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து ஈழத்தமிழ் மக்கள் தமது கருத்தினை சொல்வதற்குத்தானே பொதுவாக்கெடுப்பு?

ஆனால் தனித் தமிழீழத்தை ஏற்கிறீர்களா, இல்லையா? இப்போதே சொல்லுங்கள், சொல்லாவிட்டால் ஈழத் துரோகிகளாவீர்கள் என்று கையை முறுக்கிக் கருத்துத் திணிப்பு செய்வதன் பொருள் என்ன?  தனித் தமிழீழம்தான் ஒரே முடிவு  என்றால் அப்புறம் எதற்குப் “பொது வாக்கெடுப்பு”?

“பொது வாக்கெடுப்பு” உரிமையைப் பெற்ற பிறகு நடைமுறைக்கு வரக்கூடியதே தன்னுரிமை. வாக்கெடுப்புக்கு முன்னரே முடிவைச் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் எதற்கு அக்கோரிக்கை, போராட்டம் எல்லாம்?  அதுவும் இந்த உரிமை உலகத் தமிழர் அனைவருக்குமான உரிமை அல்ல. ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்துக்குள்ள இந்த உரிமையை, புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் அகதிகளாகவோ, குடியுரிமை பெற்றவர்களாகவோ வாழ்கின்ற மக்கள், தம் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்கான உரிமையை இங்குள்ள தமிழர்கள் எப்படித் தம் கையில் எடுத்துக் கொள்ள முடியும்? அந்த உரிமையை யார் கொடுத்தது? இதற்கும் இந்திய பெரியண்ணன்தனத்துக்கும் என்ன வேறுபாடு?

இராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும் நிறைவேற்றுவதில் பாரிய அக்கறை கொண்டவர்கள் பின்வரும் உண்மைகளில் கவனம் செலுத்தவேண்டும்: இவ்விரண்டு கோரிக்கைகளும் நிறைவேற வேண்டுமானால்,

ஒன்று,  சர்வதேச சமூகம் எனப்படும் உலக நாடுகள் இலங்கைக்கு வெளியிலிருந்து சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலின் அதிகாரக் கோரப்பிடியிலிருத்து இலங்கையையும் ஈழத் தமிழர்களையும் மீட்கவேண்டும்; ஈழத்தில் ஒரு பொது வாக்கெடுப்பை ஏற்கும் ஜனநாயக அரசை இலங்கையில் நிறுவி இதைச் செய்ய வேண்டும்.

அல்லது,

உள்நாட்டிலேயே சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலைக் கொன்றொழிக்க வேண்டும்; அக்கும்பலைச் சிறைப் பிடிக்கவேண்டும். ஒருவேளை இது நிறைவேறினாலும், ஈழத் தமிழினத்தின் தன்னுரிமையையும் அதன் அடிப்படையிலான ஒரு பொது வாக்கெடுப்பையும் ஏற்கும் ஜனநாயக அரசு இலங்கையில் அமைய வேண்டும். இல்லையென்றால், அவ்வாறான அரசு அமைவதற்கான புரட்சி இலங்கையில் நடைபெறவேண்டும்.

ஆனால்,போர்க் குற்றங்களில் பங்காளியான இந்தியா எத்தகைய நிலைமையிலும் இவ்விரண்டு கோரிக்கைகளையும் ஏற்கப்போவதில்லை. புலிகளை ஒழித்துக்கட்டுவதென்று 2006-இல் கூடிப்பேசி, முடிவெடுத்து, ஈழப்போரில் ராஜபக்சேவுக்குத் துணை நின்ற அமெரிக்கா  தலைமையிலான 20 உலக நாடுகளும் இவற்றை ஏற்கப்போவதில்லை.

ஆக, இராஜபக்சே மீது போர்க் குற்றவாளி, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு – ஆகிய இரண்டையும் நிறைவேண்டுமானால், இலங்கையில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது தவிர்க்கவியலாத அவசியம்.

அதை எப்படிச் சாதிப்பது என்பது ஈழத் தமிழர்களின் உடனடி, நீண்டகாலக் கடமையாக இருக்கவேண்டும். சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கு எதிரான ஒரு  ஜனநாயக ஐக்கிய முன்னணியைக் கட்டுவது முதன்மையான பணியாகும். பாசிச ராஜபக்சே கும்பல் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை மிகக்கெடூரமான போர்க் குற்றம். அதோடு ஒப்பிட முடியாதெனினும், சிங்கள ஜனநாயக சக்திகளுக்கெதிரான பாசிச வெள்ளைவேன் ஆள்கடத்தல்களும், படுகொலைகளும், அவசரநிலை-தடுப்புக் காவல் கைதுகளும் ஒடுக்கு முறைகளும் பெருமளவு நடந்து கொண்டுதானிருக்கின்றன.  ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்ல, சிங்கள  ஜனநாயக சக்திகள் மீதுமான மனித உரிமை மீறல்களுக்காகவும் பாசிச ராஜபக்சே கும்பல் ஐ.நா. அவையில் குற்றஞ்சாட்டப்படுகிறது. சிங்கள  ஜனநாயக சக்திகளில் கணிசமான பேர் ராஜபக்சே அரசின் கும்பலாட்சி, இசுலாமிய எதிர்ப்பு பவுத்த வெறி, ஈழத்தமிழர் மீதான இராணுவக் கொடுங்கோன்மை ஆகியவற்றை வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள், அத்தகைய சக்திகளுடன் ஒரு ஐக்கிய முன்னணி சாத்தியமே இல்லை என்று கதவடைத்துக் கொள்வது சரியான அரசியல் அணுகுமுறையே கிடையாது.

இன ஒற்றுமை
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கண்டி பேராதனைப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (இடது); மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தி கிழக்கு இலங்கைப் பகுதியில் நடந்த ஊர்வலம்.

இலங்கைத் தீவில் தற்போது காட்டப்படும் ஈழத்தின் வரைபடத்தைப் பார்த்தாலே பாமரனுக்கும் புரியும்! இவ்வளவு நீண்ட எல்லையைக் கொண்ட ஈழம் தனித்திருந்தால்கூட, போரும் பகையும் இனப் படுகொலைகளும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் நிரந்தரமான நிம்மதியோடு வாழவேண்டுமானால் பின்வரும் ஒரு நிபந்தனை நிறைவேற்றப்பட வேண்டும்.  ஈழத் தமிழினத்தின் தன்னுரிமையை ஏற்கக்கூடிய ஜனநாயக அரசு அமைப்பு இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். சிங்கள இனவெறி, கொலைவெறி பாசிச  ராஜபக்சே கும்பலின் அதிகாரப்பிடியிலிருந்து சிங்களமும் விடுபடவேண்டும். ஈழத் தமிழினத்துக்கெதிராக அது இழைத்த  குற்றங்களுக்காக “பாவமன்னிப்பும் பரிகாரமும்” தேடும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டும்.

இது சாத்தியமா? யூத மக்கள் மீது தீராத பகைகொண்டு குரூரமான வதைகளும் இனப் படுகொலைகளும் புரிந்தான், நாஜி இட்லர்.  அவனது போர்வெறி, அதிகாரப்பிடியிலிருந்து விடுபட்டு யூத இனத்துக்கெதிராகத் தாம் இழைத்த  குற்றங்களுக்காக “பாவ மன்னிப்பும் பரிகாரமும்” தேடும் நிலைக்கு ஜெர்மானியர்கள் தள்ளப்பட்டனர். பாசிசம் போரில் தோற்கடிக்கப்பட்டதும், நூரம்பர்க் விசாரணையும், தண்டனைகளும்,  சர்வதேசப் பொதுக் கருத்தின் மீது சோசலிசமும், கம்யூனிச சித்தாந்தமும் செலுத்திய செல்வாக்கும் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது. அம்மாதிரியான சர்வதேச நிலைமை இப்போது இல்லையாதலால், ராஜபக்சே கும்பலைத் தூக்கியெறியும் உள்நாட்டுப் புரட்சிதான் இலங்கையில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. இதுதான் சாத்தியமானது.

இனப் படுகொலை நிகழ்ந்துள்ள நிலையில், சிங்கள இனவெறி தலைவிரித்தாடும் நிலையில் இத்தகையதொரு தீர்வே கோமாளித்தனமானது என்று புலி ஆதரவாளர்கள் கேலி பேசலாம். முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து தடயங்களை அழித்து முடிக்கும்வரை ராஜபக்சேவுக்கு வழிகாட்டி இயக்கிய இந்தியா மற்றும் சர்வதேசம் என்றழைக்கப்படும் அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்திய நாட்டாமைகளிடம் கெஞ்சுவதும், அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காண்பதும்தான் கோமாளித்தனமானது. புலி ஆதரவாளர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், கட்சிகளுக்கும் சலாம் போட்டும், மனுக்கொடுத்தும், தேர்தல் வேலை பார்த்தும், இவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு ஈழத்தமிழ் மக்களை இழுத்து விட்டும் 30 ஆண்டுகளை அழித்தார்கள். கடைசியாக முள்ளிவாய்க்காலில் பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும், கொலையுண்ட அந்த உடல்களை வைத்துக் கொலையாளிகளே அரசியல் ஆதாயம் தேடுவதற்கு வழிவகை செய்கிறார்கள். இது கோமாளித்தனமானதல்ல, வக்கிரமானது.

சிங்களப் பேரினவாதமும் இனவெறியும்தான் ஈழத் தமிழ் மக்களின் துயரத்துக்கு அடிப்படைக் காரணமென்றாலும், சிங்களருக்கும் தமிழருக்கும் இடையிலான இன்றைய பகை நிலை நிரந்தரமானதென்றும், 200-க்கும் மேற்பட்ட அரச உயர்பதவிகளை ராஜபக்சே குடும்பமே கைப்பற்றிக்கொண்டு சிங்கள மக்களுக்கே எதிராக அது இழைத்துவரும்  பாசிச பயங்கரவாதக் குற்றங்களும், இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளும் இந்தப் பகை நிலையை மாற்றாது என்றும் கருதிக் கொண்டு ஈழச் சிக்கலுக்குத் தீர்வைத் தேடக்கூடாது. அவ்வாறான தீர்வு, எளிமையானதாகவும் உடனடியானதாகவும் தோன்றினாலும் கற்பனையானது. இத்தீர்வும் வழிமுறையும் புலிகளையும் ஈழத்தமிழர்களையும் முள்ளிவாய்க்காலுக்குக் கொண்டுபோய் முடித்தது.

இந்தப் பார்வை தனித் தமிழீழத்தை மறுப்பது என்றும் தமிழீழத்துக்கு எதிரானதென்றும் புலி ஆதரவாளர்களால் அவதூறுக்குள்ளாக்கப்படும் என்பது எமக்கு நன்கு தெரியும். எமது இந்தத் தீர்வு ஈழத் தமிழர் தன்னுரிமையை நிபந்தனையாகக் கொண்டதென்பதை மறந்துவிடக்கூடாது. ஈழத்தின் மூன்றில் இரண்டு பகுதியை விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டு, 40,000 சிங்கள இராணுவத்தினரை யாழ்க் கோட்டையில் சூழ்ந்து கொண்டநிலையிலும் பிரபாகரன் தனித் தமிழீழத்தைப் பிரகடனம் செய்யவில்லை! பிரபாகரனின் அரசியல் குரு ஆண்டன் பாலசிங்கம் தனித் தமிழீழம்  அல்ல, சுயாட்சிதான் எமது நோக்கம் என்று சொன்ன காலமும் உண்டு! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று சொன்னவர்கள், துப்பாக்கிகளை மௌனித்து இனி அரசியல் போராட்டம்தான் என்று அறிவிக்கும் நிலையும் வந்தது. ஆகவே, எல்லாக் காலத்திலும் எல்லா நிலையிலும் ஒரே தீர்வு என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாதது!

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

நாவல் அறிமுகம்: சடையன்குளம்

5

டையன்குளம்– தமிழகத்தின் தென்பகுதி கிராமம் ஒன்றில் தலித் மக்களின் வாழ்வையும், உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு புனைவு [நாவல்]. நகரத்தின் வண்ண ஒளிச்சிதறல்களில் வாழ்க்கையை கழிப்பவர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிரதான சாலைகளிலும் மட்டுமே பயணிப்போருக்கும் சடையன்குளம், நாயக்கன்கொட்டாய் போன்ற தமிழகத்தின் எதார்த்தங்கள் புலப்படாது. இந்த நாவல் சுழலும் கிராமம், கடந்த நூற்றாண்டின் காலச்சக்கரத்தில் கடந்துவிட்ட ஒரு வாழ்க்கையின் பதிவு அல்ல என்பது நாயக்கன்கொட்டாய் தாக்குதலை கவனித்தவர்களுக்குப் புரியும்.

சடையன்குளம், கீழத்தெருவில் வசிக்கும் சாம்பார் [பறையர்] மக்கள், சற்று தள்ளி மிகச்சிறிய எண்ணிக்கையில் வாழும் சக்கிலிய மக்கள் மீது அடக்குமுறை செலுத்துவதில் தேவர், நாயக்கர், செட்டியார், மற்றும் கோனார் சாதியினர் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆதிக்க சாதியினரில் பிறந்த ஆண்கள், பெண்கள். வயதானவர்கள், இளைஞர்கள் அனைவரும் பால் வேறுபாடின்றி சாதி வெறி மனநோய்க்கு ஆட்பட்டுக் கிடக்கின்றனர். கீழத்தெருவில் வசிக்கும் நல்லையா குடும்பம் சந்திக்கும் சவால்களை சடையன்குளம் முதன்மையாக பேசுகிறது.சடையன்குளம்

தம்மீது நிறுவனமாகியுள்ள தொடர் தாக்குதல் குறித்த ஓர்மையோடே தமது வாழ்க்கையை கடத்துகிறார்கள் கீழத்தெரு மக்கள். எனினும் அச்சத்திலும், பீதியிலும் அவர்கள் உறைந்து போய்விடவில்லை. கீழத்தெருவை சார்ந்த முத்துமரியான் தேவர்சாதிப் பெண்ணை காதலிக்கிறான். நல்லையா குடும்பம் செங்கல் சூளைக்கு சென்று உழைத்து பிறகு சொந்தமாக ஒரு செங்கல் சூளையை ஆரம்பிக்கிறார்கள். முத்துமரியான் காதலித்த பெண்ணை அவரிடமிருந்து பிரிக்கிறார்கள். கரசேவை போன்ற ஒரு நடவடிக்கையில் நல்லையாவின் செங்கல் சூளையை துவம்சம் செய்கிறார்கள், தேவர் சாதியினர். அரசாங்கம் மூலம் கிடைத்த ஐந்து செண்ட் நிலத்தில் பயிர்வித்த பருத்தி, அறுவடைக்கு நெருங்கும் போது, அதனை சாதிவெறியர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஊர்க்காத்தானும், நல்லையாவும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். எனினும், கலைக்க கலைக்க மணல்வீட்டை கட்டும் சிறுகுழந்தையின் பிரயத்தனமாக வாழ்க்கையை ஆடிப்பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள்; காதல்வசப்படுகிறார்கள், கீழத்தெரு மக்கள். உழைப்பின் மீது மட்டும் நம்பிக்கை வைத்த அவர்களை மனித வாழ்வின் அடிப்படை விழைவு உந்தி செலுத்திக் கொண்டே இருக்கிறது.

தேங்கிக் கிடந்த கீழத்தெரு மக்களின் வாழ்க்கையில் தொடிச்சியின் வருகை ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. தொடிச்சி, நல்லையாவின் மனைவி. முதன் முதலில் அவள் அத்தெருவில் ரவிக்கை அணிகிறாள். கிணற்றில் தண்ணீர் பிடிக்கும்பொழுது மேலத்தெரு நாயக்கர் பெண்களுடன் உரசுகிறாள்.அவர்கள் தண்ணீர் பிடித்த வாளியை அவர்கள் செய்ததை போன்று இவளும் அலசிவிட்டு நீர் எடுக்கிறாள். நல்லையாவை அழைத்து நாயக்கர் ஆண்கள் மிரட்டும் போது வேறு வழியில்லாமல் மனைவியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். நல்லையாவுக்கு செங்கல் சூளை ஒன்று சொந்தமாக ஆரம்பிக்கும் எண்ணம் வந்த போது தைரியம் அளிக்கிறாள், தொடிச்சி. நல்லையா கொலை செய்யப்பட்ட பிறகு வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்கிறாள். வாழ்க்கை குறித்து திட்டவட்டமான பார்வை அவளிடம் இருக்கிறது. சக்கிலியர் குடியிருப்புக்குள் முதன்முதலில் நுழைகிறாள். சக்கிலியர் மக்களுடன் பறையர் மக்கள் இணைவதை விரும்புகிறாள்.

தொடிச்சி கீழத்தெருவை சேர்ந்தவள் அல்ல. விளாத்திகுளத்திலிருந்து இங்கு திருமணமாகி வந்தவள். திருமணமான புதிதில் தன்னை கட்டுப்படுத்த முனைந்த ஊர்காத்தானை நகைத்தாள். தேவர் சாதியினரின் மிரட்டலுக்கு ‘இதுவே எங்கள் ஊர் என்றால் நிலைமை வேறாக இருக்கும்’ என்று எகிறினாள். பிற்பாடு கீழத்தெரு பெண்கள் தொடிச்சியை பின்பற்றுகிறார்கள்.ஆண்கள் அவளிடமிருந்து தைரியத்தை பெறுகிறார்கள். தொடிச்சி கீழத்தெருவை சேந்தவள் அல்ல என்பது மட்டுமல்ல; அவளுடைய கடந்தகாலம் மிகப்பிற்பாடு இந்நாவலில் இலைமறை காய்மறைவாக வெளிப்படுகிறது. நகரத்தில் நாயக்கர் வீட்டில் வேலை செய்யும் தனது கணவரின் சித்தி மகளை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது ராமையா என்பவரை பார்க்கிறாள். அவரை தோழர் என்று அழைக்கிறாள். அவரும் நலம் விசாரிக்கிறார். அப்படியே, தனது கணவனுக்கு அரசு கொடுத்த நிலத்தில் மாட்டைப் பூட்டி உழுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாதிவெறியர்கள் குறித்து கூறுகிறாள். அவர் அடுத்த நாளே தமது தோழர்களுடன் மாட்டோடு வந்து உழுகிறார். எதிர்த்து வந்த தேவர் சாதி வெறியர்களை அந்த விவசாயத் தோழர்கள் அடித்து விரட்டுகிறார்கள்.

தொடிச்சி ராமையாவை சந்தித்து உதவி கேட்டது அவளுக்கு முன்பு கம்யூனிசம் அறிமுகம் ஆகியிருப்பதையும் அவளுடைய உந்துதலுக்கு கம்யூனிச வீரம் அடிப்படையாக உள்ளதையும் இந்த நாவல் கூர்மையான அவதானிப்பில் அறியத் தருகிறது. நாயக்கர் மற்றும் கோனார்களிடம், வீட்டு வேலைகளில் கட்டுண்டு கிடந்த மக்களிடம் இருந்தல்ல; தொடிச்சியின் மூலமே விடுதலை உணர்வு அம்மக்களிடம் அரும்பியது என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். ‘தலித் மக்கள் பிரச்சினையை தலித்துகள் மட்டுமே பேசட்டும்; தலித் மக்களின் விடுதலை தேர்வை; பாதையை தலித் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்; கம்யூனிஸ்ட்கள், மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளட்டும்’ என்ற வகை தலித்திய வாதத்தை தொடிச்சி கதாபாத்திரம் வலுவிழக்க செய்கிறது.

இந்நாவலில் வரும் கிளமன்ட் பாதர், பெர்டின் சிஸ்டர் போன்றோர் மிகை கதாபாத்திரங்கள். தலித் மக்களின் ஊனோடும், உயிரோடும் கலந்தவர்களாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். கீழத்தெரு பெண்களை கேலி வம்பு செய்யும் நாயக்கர் ஆம்பிளைகளை எதிர்த்து நின்ற தொடிச்சியை துரத்தி வந்த ஆண்களை நோக்கி பெர்டின் சிஸ்டர் துப்பாக்கியை காட்டி பின்வாங்க செய்கிறார். இது கொஞ்சம் மிகையாக தோன்றுகிறது. இதனை கிறிஸ்தவம் செல்வாக்கு செலுத்தும் குமரிமாவட்டத்தை வைத்து பரிசீலித்து சொல்ல முடியும். திருவிதாங்கூர் பகுதியில் நாடார்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய நாயர்களை எதிர்த்து நின்றது நேசமணி திரட்டிய இளைஞர் படையும், கம்யூனிஸ்ட்களுமே. நாயர்கள் கைப்பற்றியிருந்த 90 சதவீத நிலங்களை மீட்டுக் கொடுத்தது இவர்கள் தான். கிறிஸ்தவம் கல்வி, மருத்துவம் போன்ற ‘நேர்மறையான’ பணிகளை மட்டுமே ஆற்றியது. அடிக்கப்படுகிற நேரத்தில் கிறிஸ்தவம் பாதிக்கப்படும் மக்களோடு உடன் நின்றதற்கான சான்றுகளுக்கு சரித்திரத்தில் நாம் அபூர்வத் தகவல்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். ”துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் ; அவர்கள் ஆறுதல் அடைவார்கள்”, ”துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது” [ மத் : 5 ] என்பன போன்ற பைபிள் வாக்கியங்கள் என்ன செயலூக்கத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கு வழங்க முடியும் ? பாமாவின் கருக்கு கிறிஸ்தவத்தை விசாரணைக்கு உட்படுத்திய எதார்த்த நாவல். ”கடவுளை [கர்த்தர்/இயேசு ] கற்றுத் தந்தவர்கள் எங்களுக்கு கடவுளை அன்பானவர், கருணையுள்ளம் கொண்டவர், பாவம் புரிபவர்களை மன்னிப்பவர், பொறுமையும், பணிவும், சாந்தமும் கொண்டவர் என்றே முன்நிறுத்தினர். கடவுள் நேர்மைத்திறம் கொண்டவர், அநீதிகளை கண்டு கொதிப்பவர், பொய்மையை வெறுப்பவர், அசமத்துவத்துக்கு எதிரானவர் என்று எந்த பாதிரியும் சொன்னதில்லை. ……… பொருளற்ற முறையில் பணிவையும் அடக்கத்தையும், பொறுமையையும், செயலின்மையையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிரிமார்கள் போதித்தார்கள்” [ கருக்கு பக். 90 ] கருக்கு விவாதத்துக்கிடமான கிறிஸ்தவ சமயஉணர்ச்சியை [argumentative faith ] வெளிப்படுத்துகிறது. சடையன்குளம் கிறிஸ்தவம் மீது கேள்விக்கிடமற்ற விசுவாசத்தை [ absolute faith ] கொண்டிருக்கிறது. கிளமன்ட் பாதரும், பெர்டின் சிஸ்டரும் மாற்றலாகி போவது இந்த நாவல் கிறிஸ்தவத்திற்கு காணிக்கையாகின்ற ஆபத்திலிருந்து தப்புகிறது.

இந்நாவலில் வரும் போலீஸ், தமிழ் சினிமா ஹீரோக்கள் போலீஸாக நடிக்கும் படங்களில் வரும் போலீஸ் போன்று மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளிலும் தலித் மக்கள் பக்கமே நிற்கிறார்கள். இறுதியில் காவல்துறை தலித்மக்கள் மீது பாய்வது கூட ராமசாமி நாயக்கரின் சதியே காரணமாக அமைகிறது. போலீசின் தனிப்பண்பு என்பது ஆளும்வர்க்க நலன், ஆதிக்கசாதி மனப்பான்மை, இந்துத்துவம், கம்யூனிச எதிர்ப்பு போன்றவற்றின் இயற்கூட்டில் உருவான ஓன்று என்பதற்கு எண்ணற்ற நடைமுறை உதாரணங்களை சுட்ட முடியும். தருமபுரியின் நாயக்கன்கொட்டாய் வன்முறையில் போலீஸ் துணை ஆய்வாளர் ஒருவரின் பங்கு இருந்ததை அனைத்து உண்மை அறியும் குழுக்களும் சுட்டிக்காட்டின. இப்போது ராமேஸ்வரத்தில் வெடித்துள்ள வன்முறையிலும் போலீஸ் டி எஸ் பி ஒருவர் தூண்டுதலாக இருந்ததை பெயர் குறிப்பிட்டு தெரிவிக்கின்றன, ஊடகங்கள். சடையன்குளம் போலீஸ் மீது ஒரு பலகீனமான நம்பிக்கையை வைக்கிறது. ”வர்க்கங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்த அல்ல; இரு வர்க்கங்கள் இணக்கம் காண இயலாததன் விளைவே அரசு; போலீஸ்” என்றார் மார்க்சிய ஆசான் ஏங்கெல்ஸ். ஒடுக்கப்படும் மக்களிடம் போலீஸ் என்ற அரசின் உறுப்பு செயல்படும் தொழில்கூறு சடையன்குளத்தில் சரியாக உருவமைதி பெறவில்லை என்று தான் சொல்ல முடியும்.

கீழத்தெரு சக்கிலியத் தெருவில் வசிக்கும் முத்துவீரன், சிவன் கோனார் மகளை காதலிக்கிறார். அவளை தகப்பன் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க உதவி செய்வதற்கு கம்யூனிஸ்டாக அறிமுகம் செய்யப்பட்ட ராமையா தேவர் மறுக்கிறார். கட்சி இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காது என்று விலகிக் கொள்கிறார். எனினும் அவர்களின் காதல் ஓட்டம் திட்டம் கசிந்துவிடாமல் காப்பாற்றுகிறார். கீழத்தெருவின் கடற்கரை கம்யூனிச இயக்கத்தில் இருக்கிறார் என்ற தகவல் மிகப்பிற்பாடே வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். தனது மனைவி கிறிஸ்தவத்திற்கு மாறுவதை எதிர்க்கும் தனது தாயை அவர் கடிகிறார். ஜனநாயகபூர்வமாக அந்த முடிவை ஆதரிக்கிறார். எனினும் நல்லையா குடும்ப உறுப்பினர்கள் பெற்ற முக்கியத்துவத்தை நாவலில் கடற்கரை பெறவில்லை. தலித் மக்கள் அதிகாரத்தை நெருங்க நெருங்க சாதி வெறியர்களுக்கு பித்துப் பிடிக்கிறது. பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். நாவல் சற்று நாடகீயமாக முடிக்கப்பட்டுள்ளது.

தனது எளிய கதை சொல்லல் முறையால் சிறீதர கணேசன் வியக்க வைக்கிறார்.  இந்த சமூகத்தின் மொத்த பாரத்தையும் தமது உழைப்பால் தாங்கும் எளிய மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

– சம்புகன்

நாவல்: சடையன் குளம்
ஆசிரியர்: சிறீதர கணேசன்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
பக்கங்கள்: 367
விலை: ரூ. 200

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

 

நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!

3

மிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 138 கிராமங்களில் நடந்துவந்த எரிவாயுக் குழாய்களைப் பதிக்கும் பணிகள், விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இப்பிரச்சினை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  இதனையடுத்து, “கெய்ல் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை விளைநிலங்களில் பதிப்பதைக் கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்க வேண்டும்; இத்திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும் இழந்துள்ள விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும் உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும்” என முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இம்முடிவுகளை உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.

கெய்ல் கூட்டம்
கெய்ல் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை விளைநிலங்களில் பதிப்பது தொடர்பாக தமிழக அரசு நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட விவசாயிகள்.

கெய்ல் நிறுவனமோ, “குழாய்களை நெடுஞ்சாலையோரமாகப் பதித்தால் கூடுதல் செலவு ஏற்படும்; குழாய்களுக்குப் பாதுகாப்பு இருக்காது; குழாய்களைப் பதிக்கும் வரை போக்குவரத்து இடையூறு ஏற்படும்; நெடுஞ்சாலையில் பதிப்பதற்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளிக்காது” என்ற நொண்டிக் காரணங்களைக் கூறி, குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் தனது முடிவை நியாயப்படுத்தி வருகிறது.

குழாய்களை நெடுஞ்சாலைகளில் பதிக்கும் வரைதான் போக்குவரத்து இடையூறு ஏற்படும். ஆனால்,  விளைநிலங்களில் பதிப்பதால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த 5,842 விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு நாசமாகிவிடும்.  இந்த எளிமையான உண்மையைக்கூடப் புரிந்துகொள்ள மறுக்கும் அளவிற்கு அதிகாரத் திமிர் கொடிகட்டிப் பறக்கிறது.

திட்டத்தை மாற்றிக் கொண்டு குழாய்களை நெடுஞ்சாலையில் பதிக்கக் கூடுதல் செலவாகும் என்றால், அச்செலவை இந்தத் திட்டம் யாருக்காக போடப்படுகிறதோ, அவர்களிடம் வசூலித்துக் கொள்வதுதான் நியாயமாக இருக்கும்.  மாறாக, திட்டச் செலவைக் குறைக்க, இத்திட்டத்தால் எந்தப் பயனும் அடைய முடியாத விவசாயிகள், தங்களின் விளைநிலங்களை அற்பமான நட்ட ஈட்டிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது அடிப்படையிலேயே அநீதியானது.

மத்தியப் பிரதேசம்
மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்திரா சாகர் அணைக்கட்டின் உயரத்தைக் குறைக்கக் கோரி, ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நடத்திய “ஜல் சத்யாகிரகப்” போராட்டம் (கோப்புப் படம்)

நெடுஞ்சாலைகளில் குழாய்களைப் பதிப்பதைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுக்க முடியுமென்றால், தமது விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதை விவசாயிகள் மறுக்கக் கூடாதா? ஆனால், இந்த உரிமை விவசாயிகளுக்கு அநியாயமான முறையில் மறுக்கப்படுகிறது.  மாறாக, பொது நோக்கத்திற்காகக் கொண்டு வரப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுத் தர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுத்துப் போராடினால், போலீசு, வழக்கு, சிறை போன்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, விளைநிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொள்கிறது அரசு.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது இப்பொழுது சர்வசாதாரணமாகவும் துரிதமாகவும் நடந்துவருகிறது.  விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அவற்றின் மேல் கொண்டுவரப்பட்டுள்ள விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், தகவல்-தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சுரங்கங்கள், புதிய வேலியிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவற்றால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல, இத்திட்டங்கள் பெரும்பான்மையான மக்களின் நலனில் இருந்தும் போடப்படுவதில்லை.

இந்த எரிவாயுக் குழாய் திட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.  இத்திட்டம் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் போடப்படுகிறது.  இந்தத் திட்டத்தால் பலனடையப் போவது பெரும்பாலும் தனியார் முதலாளிகள்தான்.  ஆனால், அது மூடிமறைக்கப்பட்டு, ஏதோ நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொது நோக்கத்திற்காகவும்தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.  இது போன்ற திட்டங்களை எதிர்ப்பவர்களை, அதற்கு நிலம் தர மறுப்பவர்களை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், நக்சலைட்டுகள் என்றும் குற்றஞ்சுமத்தி, அவர்களை ஒடுக்குவது நியாயமானதென்றும் கருத்து பரப்பப்படுகிறது.  சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள காட்டு வேட்டை; ஒரிசாவின் கலிங்கா நகர் பழங்குடியின மக்கள் மீதும், உ.பி.யின் நொய்டா விவசாயிகள் மீதும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

உத்தர பிரதேசம்
தமது விளைநிலங்கள் அபகரிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய உ.பி. நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த விவசாயி. (கோப்புப் படம்)

எனினும், இத்தகைய அடக்குமுறைகளையும் மீறி, சிங்குரிலும் நந்திகிராமத்திலும் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளன; ஒரிசாவில் கோண்டு இனப் பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, நியம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் சுரங்கம் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.  அம்மாநிலத்தில் கோக்ராஜர் மாவட்ட விவசாயிகளும் மீனவர்களும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் போராட்டம் காரணமாக போஸ்கோ நிறுவனத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது முழுமையாக வெற்றியடையவில்லை.  மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அம்மாவட்ட விவசாயிகள் போராடித் தடுத்து நிறுத்திவிட்டனர்.

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடந்துவரும் இத்தகைய போராட்டங்களால் 5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட திட்டங்கள்  நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் இருப்பதாக ஆளும் கும்பலும் அவர்களது எடுபிடிகளும் புலம்பி வருகின்றனர்.  இந்த தேக்க நிலையை உடைக்க விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் விதத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்தப் போவதாக அறிவித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.

இது தொடர்பான அறிவிப்பை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு வெளியிட்டவுடனேயே, “தனியார் திட்டங்களுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் புரோக்கரைப் போல அரசு செயல்படக் கூடாது.  அரசு திட்டங்களுக்கு மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தலாமென்றாலும், விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தக் கூடாது. நிலத்தைத் தர மறுக்கும் உரிமை விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும்.  நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒப்புதலை மட்டுமின்றி, அந்த நிலத்தைச் சார்ந்து வாழும் மற்ற தொழிலாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும்.  முப்போகம் விளையும் நிலங்களை மட்டுமல்ல, ஒருபோகம் விளையும் நிலங்களைகையகப்படுத்தக் கூடாது” என்பது உள்ளிட்டுப் பல்வேறு திருத்தங்களையும் நிபந்தனைகளையும் விவசாய சங்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன்வைத்தன.

ஆனால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் புதிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்குப் பெயர்தான் கவர்ச்சிகரமாகச் சூட்டப்பட்டுள்ளதே தவிர, அதற்கும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 118 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு தற்போது வரை நடைமுறையில் இருந்துவரும் பழைய சட்டத்திற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை.  நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வில் நியாயமான நட்ட ஈடு மற்றும் ஒளிவுமறைவற்ற தன்மையைப் பெறும் உரிமை மசோதா (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Bill) என்ற இப்புதிய மசோதா, நட்ட ஈட்டைக் கொஞ்சம் கூட்டிக் கொடுத்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரித்துக் கொள்வதைத்தான் தனது அடிநாதமாகக் கொண்டுள்ளது.

தனியார் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை அவர்கள்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்; ஆனால், பொதுத்துறை-தனியார்துறை இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும் எனப் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  பொதுத்துறை-தனியார்துறை கூட்டு என்பது சாராம்சத்தில் கேந்திரமான துறைகளையும் அவற்றின் மூலம் கிடைக்கும் அளப்பரிய வருமானத்தையும் சுற்றிவளைத்துத் தனியாருக்குத் தாரை வார்க்கும் சதித்தனமான, மோசடியான கொள்கையாகும்.  அப்படிப்பட்ட திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும் என்ற திருத்தத்தின் மூலம் தனியாருக்கு அரசு புரோக்கராகச் செயல்படுவது மீண்டும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப் பெரும் முதலீட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்குவதையும் பொது நோக்கம் எனப் புதிய சட்டம் வரையறுத்துள்ளதால், அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்கும் நிலம் தர முடியாது எனக் கூறும் உரிமை விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது.  முப்போகம் விளையும் நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கடைசி வாப்பாகத்தான் கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையைத் தவிர, விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கு வேறெந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒப்புதலைத் தாண்டி, அந்நிலத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கை மசோதாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது, நட்ட ஈடு மற்றும் புனர் வாழ்வு வழங்குவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. பழங்குடியின மக்களின் நிலங்களையும் காடுகளையும் கையகப்படுத்துவதற்கு கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்; பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு வேலை கொடுக்க வேண்டும்; அதிக நட்ட ஈடு வழங்க வேண்டும் என்ற பழைய பல்லவிதான் புதிய மசோதாவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இம்மசோதாவில் தப்பித்தவறிக்கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பாதகமான அம்சங்கள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக இருந்தபொழுது பன்னாட்டு விதைக் கழகங்களின் கைத்தடியாக நடந்துகொண்டு பி.டி. கத்திரிக்காய்க்கு ஆதரவாக வாதாடிய ஜெய்ராம் ரமேஷ்; விவசாயிகளைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை காட்டாத சரத் பவார் ஆகியோர் இம்மசோதாவை உருவாக்கி முடிவு செய்யும் கமிட்டிகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டனர்.  இவர்களுக்கும் மேலாக, இம்மசோதாவை கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக உருவாக்குவதில் மைய அரசின் வர்ததக அமைச்சகம், நகர மேம்பாட்டு அமைச்சகம், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், மின்சாரத் துறை அமைச்சகம், தொழில்துறை அமைச்சகம் ஆகிய ஐந்து துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் காட்டிய முனைப்பு அளப்பரியதாகும்.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை, விவசாயிகளையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்திலிருந்து அப்புறப்படுத்தும் கொடிய செயலாக ஆளும் கும்பல் கருதுவதில்லை.  மாறாக, இதனை ஒரு வர்த்தக நடவடிக்கையாகவும், இதில் பணத்தைத் தவிர, வேறு உணர்ச்சிகளுக்கு இடமில்லை என்றே கருதுகிறது.  இது மட்டுமின்றி, நட்ட ஈடாகக் கிடைத்த பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கையைத் தொடங்குமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவும் இவர்கள் தயங்குவதில்லை.

நோய்டா
உ.பி. மாநில நொய்டா பகுதியில் விளைநிலங்களை வளைத்து, மேட்டுக்குடி கும்பலின் களிவெறியாட்டத்துக்காக கட்டப்பட்டுள்ள கோல்்ப் மைதானம் (மேல்படம்) மற்றும் 875 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள எப் 1 கார் பந்தய மைதானம்.

குறிப்பாக, பழம்பெரும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளுள் ஒருவரான ஆதி கோத்ரேஜ், “விவசாயிகள் அனைவரும் தமது நிலங்களை விற்றுவிட்டு, கிடைக்கும் பணத்தைப் பங்குச் சந்தையிலும் பரஸ்பர நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யுமாறு” வெளிப்படையாகக் கூறி வருகிறார்.  இந்தியாவிற்கு இனி விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பது ஆதி கோத்ரேஜ் என்ற முதலாளியின் கருத்து மட்டுமல்ல, மன்மோகன் சிங் உள்ளிட்டு அனைத்து ஓட்டுக்கட்சிகளின் கருத்தும் ஏறத்தாழ இதுதான்.

சிங்குரிலும், நந்திகிராமிலும் சி.பி.எம். தலைமையில் அமைந்த இடதுசாரிக் கூட்டணி அரசுதான் விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிப்பதில் மிகவும் மூர்க்கமாக நடந்துகொண்டது.  தலித் சகோதரி மாயாவதி ஆட்சியில்தான் நொடா பகுதி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி கெய்ல் நிறுவனத்திற்கு எதிராக முடிவெடுத்துள்ள ஜெயா, 1990-களில் சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவுவதற்காக, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய-மேய்ச்சல் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்துக் கொடுத்தவர்தான்.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு என்ற தரகு முதலாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள “2025-இல் தமிழகம்” என்ற அறிக்கையில், “தற்போது 50 சதவீதமாக இருக்கும் தமிழக நகர்ப்புற மக்கள் தொகையை, 2025-இல் 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்; 2025-இல் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமப்புற மக்கள் தொகையை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.  அப்படிக் குறைப்பதற்கு நகரமயமாவதைத் தற்பொழுதுள்ளதைக் காட்டிலும் 18 மடங்கு வேகத்தில் தீவிரப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

தரகு முதலாளிகள் தமிழகம் குறித்துச் சொல்லியுள்ள இந்த அபாயகரமான ஆலோசனையைத் தற்போதைய நிதி மந்திரியான ப.சிதம்பரம் வழிமொழிந்துள்ளதோடு, இந்தியா முழுவதும் நகர்ப்புற மக்கள் தொகையை 85 சதவீதம் ஆக்குவதுதான் காங்கிரசின் இலட்சியம் எனச் சபதம் போட்டுள்ளார்.  பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏறத்தாழ 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.  அம்மாநிலத்தைத் தொழில்மயப்படுத்துவதற்கு இந்த எண்ணிக்கையை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என அம்மாநில அரசே அறிவித்திருக்கிறது.   கிராமப்புற மக்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் இந்த இலக்குகளை எட்ட முடியாது.  விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து வெளியேற்ற வேண்டுமானால், ஒன்று அவர்களது நிலங்களைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால், நிலங்களைத் தரிசாகப் போடும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ள வேண்டும்.

விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம், கார்ப்பரேட் கும்பலுக்கு அடிமாட்டு விலைக்கு நிலம் கிடைப்பது மட்டும் உறுதி செயப்படவில்லை.  இதன் மூலம் வேலை தேடி நகரங்களுக்கும்; தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற ‘வளர்ந்து’ வரும் மாநிலங்களுக்கும் ஓடிவரும் விவசாயிகளைக் கொண்டு ஒரு பெரும் ரிசர்வ் தொழிலாளர் பட்டாளமும் உருவாக்கப்படுகிறது.  இப்படி ஒரு ரிசர்வ் பட்டாளத்தை உருவாக்குவதன் மூலம், மிகவும் குறைவான கூலிக்குத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பு முதலாளிகளுக்கு உருவாக்கித் தரப்படுகிறது.  இத்தகைய நில அபகரிப்பும் உழைப்புச் சுரண்டலும்தான் இந்தியத் தரகு முதலாளிகளை உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் கொண்டுபோய் குந்த வைத்திருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றியிருக்கிறது.

நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு உபரி நிலம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்கு ஏற்ப நில உச்சவரம்புச் சட்டமும், நிலச் சீர்திருத்த சட்டமும் அமல்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் காங்கிரசு உள்ளிட்டு எந்தவொரு ஓட்டுக்கட்சியும் வாயளவில்கூட இன்று ஏற்றுக் கொள்வதில்லை.  மாறாக, நடுத்தர மற்றும் சிறு விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதுதான் இக்கட்சிகளின், இந்திய அரசின் கொள்கையாக உள்ளது. தனியார்மயம்-தாராளமயத்தின் ஆன்மாவாக இருக்கும் இந்த நில அபகரிப்புக்கு எதிராக விவசாயிகள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது.  இந்த நெடிய போராட்டத்தில் சிங்குரிலும், நந்திகிராமிலும், நியம்கிரியிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை என்றபோதும், அவற்றை தற்காலிகமானதாகக் கருதமுடியுமே தவிர, இறுதி வெற்றியாகக் கொள்ள முடியாது என்பதை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணமிது.

– திப்பு.

___________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2013
___________________________________________________________________________________

காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!

56

காஷ்மீரில் இன ஒடுக்குமுறை இல்லையாம்! காசி ஆனந்தனின் புதிய கவிதை!

ந்திய அரசை ஈழ விடுதலையின் நட்பு சக்தியாக சித்தரித்தவர்களின் மோசடிகள் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிவிட்டன. “ஈழவிடுதலைக்கு இந்தியா பகை சக்தி” என்ற உண்மையை போராடும் மாணவர்களும் இன்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அரசை தாஜா செய்து ஈழத்துக்கு ஆதரவாக மாற்றி விட முடியும் என்று புலி ஆதரவாளர்களும் புலிகளும் கண்ட கனவை, கந்தக வெறியுடன் பொசுக்கியிருக்கிறது இந்திய அரசு.

காசி ஆனந்தன்இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “அக்னிப் பரீட்சை” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில், ஈழத்து “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன் பேசியிருக்கும் பேச்சு, அவரது அடிமை உணர்ச்சியை அடையாளம் காட்டியது. “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேற எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று பச்சைப் படுகொலைப் பகைவனை மூடிமறைக்கும் காசி ஆனந்தனின் கொச்சை அரசியலை கேட்க சகிக்கவில்லை!

“இவன்தான் எம் இனத்தைக் கொன்றவன்” எனும் உண்மையைக் கூட உரைக்க வக்கில்லாத இந்தப் சூரப்புலி, கடந்த காலத்தில் ஜனநாயக சக்திகள் பலரை புலிகள் கொன்றது நியாயம் என்றும், கொல்லப்ப பட்டவர்கள் அனைவருமே “இரண்டகர்கள்” (துரோகிகள்) என்றும் தீர்ப்பளிக்கிறார்.

இந்திய மேலாதிக்கத்துக்கு பத்மநாபா கூஜா தூக்கினால் அது இரண்டகம். அதற்கு புலிகள் விதிக்கும் தண்டனை மரணம். அதே கூஜாவை புலிக்கவிஞர் தூக்கினால் அது புரட்சி, எழுச்சி, உணர்ச்சி, கிளர்ச்சி… ! எத்தனை “சி” வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இது கண்டு “ச்சீ” என யாரேனும் உமிழ்ந்தால் உமிழ்பவன் இனத்துரோகி!

மன்னர்களின் புளித்த ஏப்பத்தையெல்லாம், புலியின் சீற்றம் என்று புகழ்ந்தெழுதி பரிசில் பெற்ற புலவர் மரபில் வந்தவரல்லவா காசி ஆனந்தன்! திருப்பதிக்கே லட்டு விற்கிறார். ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், நாளை காஷ்மீர் பிரச்சினையில் அது தமக்கு எதிராகத் திரும்பிவிடுமோ என்று இந்தியா அஞ்சத் தேவையில்லையாம்.

“இந்திய இராணுவம் காஷ்மீர் மக்கள் மீது குண்டு போட்டதில்லை, காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கியதில்லை.” என்று காசி ஆனந்தனின் வாயிலிருந்து வெடித்தன இந்தியக் குண்டுகள். பேட்டி எடுத்த ஜென்ராமால் அடுத்த கேள்வியைக் கூட கேட்க முடியவில்லை. இதே கேள்வியை ப.சிதம்பரத்திடம் கேட்டிருந்தால் கூட இவ்வளவு நெஞ்சுரத்துடன் புளுகியிருக்க மாட்டார். கவிஞரல்லவா, கவிதைக்கு பொய்தானே அழகு!

காஷ்மீர் மக்களிடம் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லி, 1947 முதல் ஏமாற்றி வருகிறது இந்திய அரசு. 1990 முதல் இந்தக் கணம் வரை சுமார் 24 ஆண்டுகளாக அங்கே இராணுவம் நிற்கிறது. இன்று அங்கு நிற்கும் இராணுவ, துணை இராணுவப் படையினரின் எண்ணிக்கை 7 இலட்சம் பேர்.

68,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 10,000 பேரைக் காணவில்லை. ஒரு இலட்சம் பேர் சித்திரவதையால் ஊனமாகியிருக்கிறார்கள். வல்லுறவுக்கு அளவே இல்லை. இப்போது கூட, “வல்லுறவு குற்றமிழைக்கும் இராணுவத்தினரை எல்லா கிரிமினல்களையும் போல விசாரிக்க வேண்டும்.. இந்த குற்றத்துக்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பாதுகாப்பை வழங்கக் கூடாது” என்று வர்மா கமிசன் கூறியதை இராணுவம் நிராகரித்து விட்டது. இதுதான் உண்மை நிலை.

மணிப்பூர் பெண்கள்
இராணுவ அதிகாரியை எதிர் கொள்ளும் மணிப்பூர் பெண்கள்

வடகிழக்கிந்திய மாநிலங்களில் இந்திய இராணுவம் என்ன செய்கிறது என்பதற்கு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் ஒரு சான்று. ஐரோம் சர்மிளாவின் உண்ணாநிலைப் போராட்டம் இன்னொரு சான்று.

இந்திய இராணுவம் ஈழத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது, ஈழத்தமிழர்களை கொன்றிருக்கிறது. வல்லுறவு செய்திருக்கிறது. அதையெல்லாம் கேட்டால் விளக்கமாக சொல்லுவார் கவிஞர். இருப்பினும் அப்பேர்ப்பட்ட இந்திய இராணுவம், கடந்த 24 ஆண்டுகளாக காஷ்மீரில் ஒரு ஈ எறும்பைக் கூட மிதிக்காமல், வாயில் வெள்ளைத் துணியும், கையில் மயிற்பீலியுமாக வலம் வருகிறது என்று நம்மை நம்பச் சொல்கிறார் கவிஞர்.

புதிய தலைமுறை பேட்டியில் மட்டுமின்றி, சென்னையில் நடந்த கவிஞர் தீபச்செல்வனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் இதையே பேசினார் காசியானந்தன். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்த புலி ஆதரவு அறிஞர் பெருமக்கள் யாரும் இதற்காக அவரை விமரிசிக்கவில்லை. இன உணர்வு காரணமாக கவிஞரின் பொய் அவர்களைச் சுடவில்லை போலும்.

“காஷ்மீர் பற்றி நீங்கள் பேசியது ஆபாசமாக இருந்தது” என்று காசி ஆனந்தனிடம் அங்கேயே விமரிசித்தார் ஒரு ம.க.இ.க தோழர். “உங்களுக்கு வரலாறு தெரியாது” என்று கூறியபடியே வெளியேறினார் கவிஞர்.

இது மட்டுமல்ல, புதிய தலைமுறை பேட்டியில், சிங்கள மக்கள் மத்தியிலான ஜனநாயக சக்திகளையும் இராஜபக்சே அரசு கொல்வது பற்றி ஜென்ராம் கேட்டபோது, “தமிழனுக்கு குரல் கொடுத்த காரணத்தினால்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள்” என்றார் கவிஞர். ஜேவிபி கிளர்ச்சியின்போதும் பல்லாயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களே கொல்லப்பட்டார்களே என்று அவர் கேட்டார். “அது அவர்களுக்குள் கட்சித்தகராறு” என்று அலட்சியமாக பதிலளித்தார். அப்போது கூட சிங்களப் பேரினவாத பாசிஸ்டுகளிடமிருந்து ஜனநாயகத்துக்குப் போராடும் மக்களையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கவிஞருக்கு கடுகளவும் உரைக்கவில்லை. அவ்வளவு சூப்பர் ஸ்டிராங் இன உணர்வு!

ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம். காசி ஆனந்தனின் இந்த அணுகுமுறை அவருடைய தனிப்பட்ட குணாதிசயமல்ல. தம்மை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்ளும் புலி ஆதரவாளர்கள் பலரிடமும் நிலவும் பண்பு இதுதான். உணர்ச்சிக் கவிஞர் என்பதால் உணர்ச்சியை மறைக்க இயலாமல் கொட்டி விட்டார் அவ்வளவுதான்.

1980 களின் துவக்கம் முதலே புலிகளும் பிற இயக்கங்களும் இந்தியாவின் விடுதலை இயக்கங்களையோ ஜனநாயக சக்திகளையோ தம் நண்பர்களாக கருதவில்லை. இந்திய அரசையும், ஓட்டுக்கட்சிகளையும் நம்பிக் கெட்டார்கள். நம்பிக்கெடுவது அவர்களின் “ஜனநாயக” உரிமை. அதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது.

ஆனால் காஷ்மீரிலும் வட கிழக்கிந்திய மாநிலங்களிலும் இன ஒடுக்குமுறை இல்லை என்று நம்பச் சொல்கிறாரே, அது ஜனநாயக உரிமையாகாது. அது இந்திய மக்களுக்கு இழைக்கும் இரண்டகம். கவிஞரைக் கேட்டால் அதுதான் இன உணர்வு என்று சொல்லக்கூடும்.

சட்ட மாணவர்களுக்கான பயிலரங்கம்!

3

னித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளையின் சார்பாக சட்ட மாணவர்களுக்கான பயிலரங்கம் 16.3.13 சனிக்கிழமையன்று காலை மதுரை காந்தி அருங்காட்சியகம், காந்திய சிந்தனை, கல்வி மற்றும் ஆய்வரங்கத்தில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் திரு.ம.லயனல் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது,

“வழக்கறிஞர் தொழில் சமூகப் பொறுப்புள்ள தொழில், சட்டத்தின் பெயரால் இன்றைக்கு மக்களுக்கு எதிரான பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. கல்வி அறிவு குறைந்த நமது நாட்டு மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. சட்டம் பயின்றவர்கள் அதனைச் செய்ய வேண்டும். மாணவர் சமுதாயம் என்றும் இளமையோடு சமூகத்தின் மையப்பகுதியில் நிலைத்திருப்பது. அதுவே சமூகத்தின் வளர்ச்சியிலும் எதிர்காலத்திலும் முக்கியபங்கு வகிப்பது, அதிலும் குறிப்பாக சட்டம் பயிலும் மாணவர்கள் தனிச் சிறப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங் களின் முன்னோடியாக வழக்கறிஞர்கள் திகழுகின்றனர். அவர்களுடன் சட்ட மாணவர் களும் இணைந்து போராடுகின்றனர். அது பாராட்டுதற்குரியது. ஆனாலும் இன்றைக்கு கல்லூரி மாணவர்கள். ஓட்டுச் சீட்டு அரசியல், சாதி, மதம் ஆகியவற்றால் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தத் தளைகளிலிருந்து மாணவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டு சமூகமாற்றத்துக்கான புரட்சிகர இயக்கங்களில் இணைத்துக் கொண்டு தங்களது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அந்த நோக்கத்தில் தான் இந்தப் பயிற்சிப் பட்டறையை மனித உரிமை பாதுகாப்பு மையம்-மதுரைக்கிளை ஏற்பாடு செய்துள்ளது.

இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்று பயன் பெற வேண்டும்”

என்று தலைமையுரையில் கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தொழில் என்ற தலைப்பில் அடுத்து பேசிய உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு,

தான் மாணவப் பருவத்தில் ஒரு சராசரி மாணவனாக இருந்ததையும், சட்டக் கல்லூரியில் கூட முழு நேரக் கல்லூ ரியில் படிக்க முடியாமல் பகுதி நேரக் கல்லூரியில் படித்ததையும் ஆனால் கடுமை யான உழைப்பு, விடா முயற்சி, பயிற்சி ஆகியவற்றின் மூலமாக இன்றைக்கு குறிப் பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்திருப்பதையும் விளக்கிப் பேசினார்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மூத்த வழக்கறிஞர் கற்றுத் தரும் நோக்கமுடையவராக இருக்க வேண்டும், அவர் கற்றுத் தருவதை கவனமுடன் பயில வேண்டும். வழக்கு விவரங்களை எழுதிப் பார்க்க வேண்டும். மூத்த வழக்கறிஞர் சொல்லுகின்ற வேலையைச் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பயிற்சிதான் இதில் முக்கியமானது. வழக்கறிஞர் தொழிலில் எத்தனையோ துறைகள் உள்ளன. சிவில், கிரிமினல், வருமானவரி, விற்பனை வரி, அரசியல் சட்டம், குடும்ப விவகாரங்கள், அரசு வழக்கறிஞர், தொழில் தாவா, கம்பெனி சட்டங்கள், நீதிபதி போன்று பல துறைகள் உள்ளன. எல்லாவற்றிலும் நாம் நிபுணராக இருக்க முடியாது. நமக்குப் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் நேர்மையையையும், ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் எந்தெந்த வகைகளில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் அதற்கான சட்டப் பிரிவுகள், நடைமுறைகள் பற்றி விளக்கினார்.

மாணவர்கள் குறிப்புகள் எடுத்துக் கொண்டதோடு கேள்விகளும் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் எதிர் கொள்ளுதல் என்ற தலைப்பில் ம.உ.பா மைய துணைச் செயலர், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசினார்.

சட்டத்தைப் பற்றிப் பேச வரவில்லை. நடைமுறையைப் பற்றி சொல்ல வந்திருக் கிறேன் என்று தொடங்கினார். காவல்நிலையத்தில் ஒரு புகாரை எப்படிப் பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி நீதிமன்றங்களில் அதற்குத் தீர்வு பெறுகிறவரை என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு கட்டமாக ஒரு ஆசிரியரைப் போல விளக்கினார். அறிவு எனப்படுவது ஒரு நடைமுறையைப் பற்றிய அறிவுடன் தான் முழுமை பெறுகிறது. தவறான நடைமுறையினால் நாம் எதிர்பார்க்கிற விளைவு கிட்டுவதில்லை என்பதை சிறப்பாக எடுத்துரைத்தார். பிணை, முன் பிணை, குடும்ப நல வழக்குகள், ஒருவர் கைது செய்யப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் டி.கே.பாசு VS மேற்குவங்க அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பற்றி விளக்கினார்.

அடுத்து, சமூகப் பொறுப்புள்ள வழக்கறிஞர் தொழிலில் சட்ட மாணவர்கள் பயில வேண்டிய அரசியல், குற்றவியல் சட்ட அடிப்படைகள் என்பது பற்றி உயர்நீதிமன்ற முன்னணி வழக்கறிஞர் திரு.தி.லஜபதிராய் பேசினார்.

தமிழ்நாட்டிலுள்ள சட்டக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புறப் பின்னணியைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் தேசிய சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் நடைமுறை சாராத சட்டப் புழுக்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சட்டப்படியே பார்க்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்ய முடியாது என்றே சொல்கிறார்கள். அவர்களுக்கு மக்களிடம் தொடர்பே இல்லை.

மதுரை அருகே உள்ள தெற்குத் தெரு என்ற ஊரில் கோவில் திருவிழாவில் நடைபெறும் தீமிதியில் பட்டியல் சாதியினர் கலந்து கொள்ளக் கூடாது என்று வழக்கம் இருக்கிறது. ஆனால் சட்டப்படி அது தவறு. ஆனால் வழக்கம், வழக்காறு என்ற அடிப் படையில் தொன்று தொட்டு இருந்து வருவதை மாற்ற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால் அரசியல் சட்டம் உறுப்பு 13 மிக மிக முக்கியமானது. அது நமக்கு எல்லா உரிமைகளையும் வழங்குகிறது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதற்கு எதிராக இருக்கிற எந்தச் சட்டமும் செல்லாது. எந்த நடைமுறையும் செல்லாது. ஆனால் கோவில் நடைமுறைகளில் ஆகம விதிகளைக் காரணம் காட்டி அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆகமங்கள் சொல்லுகின்ற எத்தனையோ விதிகள் கடைபிடிக்கப் படுவதில்லை. ஆனால் தங்களுக்குச் சாதகமானதை மட்டும் எடுத்துக் கொண்டு நீதி மன்றத்தில் தடையுத்தரவு பெறுகின்றனர். அதற்கு நீதிமன்றங்களும் ஒத்துழைக்கின்றன. ஆனால் அரசியல் சட்டத்திற்கு முரணான எத்தனையோ நடைமுறைகளை போராட்டத் தின் மூலம் மக்கள் மாற்றியிருக்கின்றனர். குறிப்பாக ஆலய நுழைவு, தோள் சீலை போராட்டம், கல்வி உரிமை போன்றவை.

1978ம் ஆண்டு வரை சட்டம் என்று ஒன்று இருந்து அது எதைச் சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இருந்தது. 1978க்குப் பிறகு இந்திரா காந்தி-மோனா காந்தி கடவுச் சீட்டு (Passport) வழக்குக்குப் பிறகு ஒரு சட்டம் என்பது அரசியல் சட்டத்திற்கு முரணாக இருக்கிறதா என்று பார்க்கப்பட்டது. ஒரு சட்டம் இயற் றப்பட்டால் அந்தச் சட்டம் சரியா? செல்லுமா என்று பார்க்கும் போது பெரும்பாலும் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் செல்லும் என்றே நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மிசா, தடா, பொடா, தேசிய பாதுகாப்புச் சட்டம், சிறப்பு ஆயுதப்படைச் சட்டம், குண்டர் சட்டம் இவை போன்றவை. ஒருவரிடம் காவல்துறை பெறும் ஒப்புதல் வாக்கு மூலம் செல்லாது என்பது சட்டம். ஆனால் நடைமுறையில் அதை வைத்தே தண்டனை வழங்கப்படுகிறது (அப்சல்குரு தூக்கு.)

அரசியல் சட்டம் 14, 19 மிகவும் முக்கியமானவை. அது நமது கருத்துச்சுதந்திரத்தை வழங்குகிறது. தொழில், வர்த்தகம், பணி தொடர்பான சட்டத்தின் கீழ் Magic Remedy என்று சொல்லப்படுகின்ற ஆண்மையைப் பெருக்குகிற, முடி வளர்க்கிற விளம்பரங்கள் சட்ட விரோதமானவை. ஆனால் அவற்றையெல்லாம் துக்ளக், தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ‘பேண்டிட் குயின்’ என்ற திரைப்படத்தில் பூலான் தேவி நிர்வாணமாக்கப்படுகிற காட்சி வருகிறது. அதை தணிக்கை குழு அனுமதிக்கவில்லை. உச்சநீதிமன்றம் போய் தீர்வு தேட வேண்டி வந் தது. ஆனால் கோவில் விழாக்களில் ஆபாச வக்கிரம் நிறைந்த குத்தாட்டங்கள் அனும திக்கப்படுகின்றன. கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அங்கே 144 தடை உத்தரவு பல மாதங்களாக அமலில் உள்ளது. 2 மாதங்களுக்கு மேல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்த முடியாது. அரசுதான் ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. தடையுத்தரவு சரி என்று நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கினார். பேச்சுரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை மறுக்கப்பட் டால் அது பாசிச அரசு – அதை ஏற்றுக் கொண்டால் அது பாசிச நீதிமன்றம்.

குற்றவியல் வழக்கிலே, பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமைகள் குற்றம் சாட்டப் பட்டவருக்கும் இருக்கிறது என்பது முக்கியமானது. ஒரு வழக்கில் வெற்றி பெறுவ தோடு, இழப்பீடு பெற்றுத் தருவதும் முக்கியமானது. அதுபோல குற்றத்தைத் தொடர்ந்து தடயங்களையும் ஆதாரங்களையும் கண்டுபிடிப்பது முக்கியமானது. திருட்டு வழக்கில் திருடப்பட்ட பொருள், கொலை, தாக்குதல் வழக்கில் ஆயுதங்கள் முக்கியமானவை.

இது போன்ற மேலும் பல எடுத்துக்காட்டுகளுடன் லஜபதிராய் விளக்கினார். வழக்கறிஞர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மாணவர்களுக்கு குறிப்பேடுகளும். பேனாவும் வழங்கப்பட்டது. அனைத்து மாண வர்களும் குறிப்பெடுத்துக் கொண்டதுடன் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டும் தெளிவு பெற்றுக் கொண்டனர். 40 மாணவர்களில் 8 பேர் பெண்கள். பயிலரங்கத்தின் இறுதியில் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. 8 பேர் கொண்ட குழுவில் 2 பேர் பெண்கள். இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் தொடர்ந்து நடத்தவும் மேலும் பல மாணவர்களைத் தொடர்பு படுத்தவும் ம.உ.பா மையத்துடன் பரஸ்பரம் ஒத்துழைக்கவும் குழு பணியாற்றும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். ம.உ.பா மைய வழக்குரைஞர்கள், நடராஜன், ராஜசேகர், மன்மதன் மற்றும் செயற்குழு உறுப்பினர் எம்.டி.ராஜசேகர் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். ம.உ.பா மையவெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தகவல்: ம.உ.பா.மையம்-மதுரைக்கிளை

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!

316

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம். கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் என்ற நூலை மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு பதிப்பித்துள்ளது. இந் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி 14.03.13 வியாழன்று மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மாலை 5.00 மணிக்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமாகிய திரு மு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வழக்கறிஞர் மெல்ட்டியு நூலினை அறிமுகம் செய்து உரையாற்றினார். வழக்கறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், போராளி ஆகிய பன்முகத் தன்மை கொண்ட திரு தி லஜபதிராய் நூலை வெளியிட, எழுத்தாளர் சிந்தனையாளர் வழக்கறிஞர் க பிரபுராஜதுரை பெற்றுக் கொண்டார்.

தலைமையுரையாற்றிய வழக்கறிஞர் திருநாவுக்கரசு, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பல்வேறு போராட்டங்களையும் அதில் கண்ட வெற்றிகளையும் எடுத்துரைத்தார். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த கருணாநிதி இறுதிவரை உறுதியாக நின்று போராடவில்லை. இப்போது மனித உரிமை பாதுகாப்பு மையம் உறுதியாக நின்று போராடுகிறது. 206 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழும் பெற்றுள்ள சூழ்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பணி நியமனம் பெறாமல் உள்ளனர். கிராமக் கோவில்களில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பூசை செய்யும் போது ஓடாத கடவுள் பெரிய கோவில்களில் பூசை செய்யும் போது மட்டும் ஓடிவிடுமா என்று கேள்வி எழுப்பினர்.

நூலின் உள்ளடக்கத்தை முழுமையாகப் படித்துத் தொகுத்துச் சொல்லிய வழக்கறிஞர் மெல்ட்டியூ, 1970-களில் பெரியார் தொடங்கிய போராட்டம் கடந்த 42 ஆண்டுகளாகத் தொடர்கிறது. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்கிறவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்டார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையம் தான் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறது. அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் செய்வதறியாது நின்ற போது மனித உரிமை பாதுகாப்பு மையம் அந்த 206 மாணவர்களையும் சங்கமாகத் திரட்டி அரசுக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே நடைபெற்ற வழக்கில் மாணவர் சங்கத்தையும் ஒரு தரப்பினராகச் சேர்த்தது. அரசியல் சாசனச் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிறது, ஆனால் கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஆகம விதிகள், மரபு, பழக்க வழக்கம் என்று சொல்லி அங்கீகரிக்கிறது. ஆனால் 2002ல் கேரளாவைச் சேர்ந்த ஆதித்தியன் தொடுத்த வழக்கில் பார்ப்பனர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே கருவறைக்குள் நிலவும் தீண்டாமையை ஒழிக்கும் ம.உ.பா மையத்தின் முயற்சியில் நாமும் பங்கேற்க வேண்டும் என்றார். மெல்ட்டியு கத்தோலிக்க கிறித்தவ மத குருவாக இருந்து அங்கே நிலவிய சாதி ஆதிக்கம், தீண்டாமையை எதிர்த்து அப்பதவியைத் தூக்கி எறிந்து விட்டு வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வழக்கறிஞர்

அடுத்து நூலை வெளியிட்டு திரு லஜபதிராய் உரையாற்றினார். கோவில் அதிகார மையமாகத் திகழுகிறது. 2000 ஆண்டுகளாக அடிமைத்தனம் நிலவுகிறது. 7½ ஏக்கர் கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததனால் சென்னகரம்பட்டியில் 2 பேர் பட்டியல் இனத்தவர் கொலை செய்யப்பட்டனர். பூசை செய்யக் கூடியவர்களிடம் அதிகாரம் உள்ளது. ஆகம விதிகளின் படி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகமம் என்றால் என்ன?

ஆகமம் எங்கிருந்து வந்தது. ஆகமம் எழுத்து வடிவத்தில் இல்லை. 36 ஆகமங் கள் இருந்த்தாகவும் அதில் காமிகாம ஆகமம். பைகான ஆகமம் ஆகிய இரண்டு ஆகமங்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆகமத்தை எழுதியவர் யார்? பிரமன், நாரத னுக்குச் சொன்னான். நாரதன், யாதன வல்க்கியருக்குச் சொன்னான்-யாதன வல்க்கியர் மனுவுக்குச் சொன்னான்-மனு யாருக்குச் சொன்னான்-மனு வெங்காயத்துக்குச் சொன்னான் என்றார் பெரியார். கோவில்கள் எப்போது வந்தன. 9 ஆம் நுர்ற்றாண்டுக்கு முன்பு கோவில்கள் இல்லை. கோவில்கள் பௌத்தர்கள். சமணர்களால் உருவாக்கப் பட்டது. மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள் சமண, பௌத்தர்களை விரட்டி விட்டு கோவில்களைக் கைப்பற்றினர். காஞ்சி காமாட்சி, நாகை விசாலாட்சி, மதுரை மீனாட்சி ஆகிய கடவுள்கள் எல்லாம் பவுத்தக் கடவுள்களாக இருந்து இந்துக் கடவுளர் களாக மாற்றப்பட்டார்கள். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ எழுதிய ராகுல்ஜி. அண்ணல் அம்பேத்கர், திலகர் போன்றவர்கள் எல்லாம் இதுபற்றி எழுதியுள்ளனர். ஆரியர்களின் சொத்து பசு. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்-இவை தான் உணவு. மூத்திரம் கிருமி நாசினி-சாணம் எரிபொருளாகப் பயன்பட்டது. அவர்கள் நாடோடிகளாக இருந்தனர். சூரியன் தான் அவர்களது கடவுள்-எனவே சூரிய நமஸ்காரம் அவர்களது வழிபாட்டு முறையில் முக்கியமானது. சங்கராச்சாரி கூட மாடு மேய்க்கிற அதே கோலத்தில் இப்போது கூட இருந்து வருகிறார்.

எனவே கோவில்கள் என்று எடுத்துக் கொண்டால் நாகமலை புதுக்கோட்டை, யானை மலை, பாண்டி கோவில் போன்ற இடங்களில் எல்லாம் மகா வீரர், புத்தர் சிலைகள் தான் உள்ளன. கோவில்களைக் கைப்பற்றிய பார்ப்பனர்களிடமிருந்து வழிபாட்டு உரிமைகளைப் பெறவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்த்து.

1969-ல் இளைய பெருமாள் கமிட்டி, 1972-ல் சேஷம்மாள் வழக்கு, ஆந்திராவில் நாராயண தீர்சிதர் வழக்கு, கேரளாவில் ஆதித்தியன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழக்கு என்று பல வழக்குகள் தொடுத்தும் ஆகம விதிகளை, பரம்பரை நியமனத்தை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை என்ற நிலை உள்ளது. தமிழக அரசு தொடுத்த வழக்கில் 55வது பிரிவு திருத்தத்தில் அரசு தரப்பில் சறுக்கல் ஏற்பட்டது. அர்ச்சகர் நியமனத்தின் போது ஆகம விதிகளைக் கடைபிடிப்போம் என்று அரசு ஒப்புக்கொண்டது, எனவே தான் பெரியார் “ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்” என்று இதைக் குறிப்பிட்டார்.

தீண்டாமையைக் குற்றம் என்று சொல்கிற அரசியல் சட்டப் பிரிவு 13க்கு எதிராக உள்ளது ஆகம விதிகள், அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமைகள் பெரிதா? ஆகமங்கள் சொல்லுகின்ற வழக்கங்கள், வழக்காறுகள் பெரிதா? அப்படியானால் அரசியல் சட்டத்தை விட ஆகமங்கள் பெரிதா? என்று கேள்வி எழுப்பினார் வழக்கறிஞர் லஜபதிராய். மேலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்துகின்ற இந்த சட்டப் போராட்டம் சரியான சிறந்த முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெறும்-ஆகமங்கள் குப்பை-சட்ட ரீதியாகப் போராடி வெல்லலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைக்கிளை துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அர்ச்சக மாணவர் சங்கம் அமைத்தது, சான்றிதழ் பெற்றுத் தந்தது, வழக்கில் தரப்பினராகச் சேர்த்தது, மதுரை, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியது, பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று கூறுகிறவர்களோ, நாமெல்லாம் இந்துக்கள் என்று இந்து ஒற்றுமைக்காக இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமைப்புகளோ இந்தப் பிரச்சனைக்கு ஆதரவாக வரவில்லை. ம.உ.பா மையம் தான் இந்தப் பிரச்சனையில் முன்நின்று போராடுகிறது.

கடும் உழைப்பினாலும், பொருட் செலவிலும், தோழமை அமைப்புகளின் உதவியோடும் இந்த வழக்கினை நடத்தி வருகிறோம். உச்சநீதிமன்றத்தில் 4 வழக்கு களை நடத்தி வருகிறோம். படித்தவர்கள் விவரம் அறிந்தவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இது அர்ச்சகர் பணி என்கிற பிரச்சினை மட்டுமல்ல. தமிழனின் மானப் பிரச்சினை. கருவறைத் தீண்டாமை பிரச்சனை. இந்தியக் குடிமகன் எவர் ஒருவரும் கலெக்டர் ஆகலாம், நீதிபதி ஆகலாம், பிரதமர் ஆகலாம், குடியரசுத் தலைவர் ஆகலாம். ஆனால் அர்ச்சகர் மட்டும் ஆக முடியாது. அது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவரால் மட்டும் தான் முடியும் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

வழக்கறிஞர் ப.வெங்கடேசன் நன்றி கூறினார்.

விழாவில் 60 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்தன. மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரைக்கிளை நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தது.


[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை.