Tuesday, June 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 721

பாலியல் வன்கொடுமைகள் – நெல்லையில் கருத்தரங்கம் !

2

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு நடத்தும் கருத்தரங்கம்

நாள் : 23-02-2013 சனிக்கிழமை

நேரம் : மாலை 5 மணி

தலைமை :
திரு செ தங்கபாண்டியன் B.A.,B.L. வழக்கறிஞர்,
அமைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திருநெல்வேலி மாவட்டம்

கருத்துரை :

பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு! எண்ணெய் ஊற்றி வளர்க்கும் பன்னாட்டுப் பண்பாடு

தோழர் காளியப்பன், மாநில இணைப் பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு

பெண்களை போகப் பொருளாக பாவிக்கும் சமூக சிந்தனையை சட்டத்தால் தடுக்க முடியாது

திரு கோ இராமலிங்கம் B.Sc., B.L., வழக்கறிஞர், மாவட்ட அமைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், புதுக்கோட்டை

நன்றியுரை
திரு அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், திருநெல்வேலி.

பெண்கள் மீதான பாலியல் வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சென்ற டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லி மாநகரில் துணை மருத்துவ மாணவியை ஏழு பேர் கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு அவரை இரும்புத் தடியால் அடித்து துவைத்து குற்றுயிரும் கொலையிருமாக வீசியெறிந்து விட்டுப் போனது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் இறந்து விட்டார். இந்தச் சம்பவத்தையொட்டி டெல்லியில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு பாராளுமன்றம், நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றை முற்றுகையிட்டுப் பல நாட்கள் போராடினர். இந்தப் போராட்டம் இதுவரை பாலியல் வல்லுறவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கணிக்கப்பட்டது.

இதையொட்டி அனைத்து ஊடகங்களும் அரசியல் தலைவர்கள், சமூக சிந்தனையாளர்கள், மதத் தலைவர்கள், எழுத்தாளர்கள் என்று பல தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர். கிளர்ந்து எழுந்த மாணவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டம் டெல்லி காவல் துறையினரால் ஒடுக்கப்பட்டது. டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை பாதிக்கப்பட்ட மாணவியை பார்க்கவோ அவரது குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் சொல்லவோ கூட போராட்டக் காரர்கள் அனுமதிக்கவில்லை. வல்லுறவு கொண்டவர்களை உடனடியாகத் தூக்கில் போட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை விதிக்க வேண்டும், ஆணுறுப்பை வெட்ட வேண்டும். ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்டுத்தள்ள வேண்டும். சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று பொதுவாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. மக்களின் கொந்தளிப்பான மனநிலையை மாற்றுகின்ற வகையில் காங்கிரஸ் அரசு வர்மா கமிஷனை அமைத்தது. அவரும் தனது நீண்ட பரிந்துரைகளை அரசுக்கு அளித்து விட்டார்.

ஆனால், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது இப்போதுதான் நடைபெற்ற ஒன்றா? இல்லை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வருகின்ற ஒன்று. மேலும் டெல்லி மாணவி மீது நடைபெற்றது மட்டும்தானா? இல்லை. அன்றாடம் இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 7 பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். டெல்லி சம்பவத்தையொட்டியே நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் பல்வேறு வல்லுறவு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. கிராமப் புறங்களிலும் ஏழைகளின் மீதும் ஆதிவாசி, தலித் பெண்கள் மீதும் நாளும் கட்டவிழ்த்து விடப்படும் வன்கொடுமைகள் கணக்கிலடங்காதது. ஆனால் இதற்குத் தீர்வை முன் வைப்பவர்கள் பாலியல் வல்லுறவு என்பது ஒரு குற்ற நிகழ்வு என்றும் அதற்குத்தான் உரிய தண்டனை என்றும் அந்த தண்டனை சட்டத்தின் மூலமாக கடுமையாக்கப்பட வேண்டும் என்றே முன்வைக்கின்றனர்.

ஆனால் அது ஒரு குற்ற நிகழ்வு மட்டுமல்ல. இந்த வன்கொடுமைக்குக் காரணம் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கமே. அதாவது, இந்த சமூக அமைப்பே ஆணாதிக்க சமூக அமைப்பாக இருப்பதுவே. பெண்களுக்கு அணிகலன் கற்பு என்றும்- அது புனிதமானது என்றும் அதை இழந்து விட்டால் அவள் வெறும் நடைப்பிணம்தான் என்றும் கூறுகின்ற ஆண்கள், பெண்கள் கற்பிழக்க காரணமாயிருக்கிற ஆணைப் பற்றி எதுவும் சொல்வதில்லை, ஏன்? அதுதான் ஆணாதிக்கம.. பெண்ணை அடிமையாக நினைப்பது, நடத்துவது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சொல்கிறார், “பெண்கள் பிள்ளைகளைப் பெறவும், வளர்க்கவும், வீட்டு வேலைகள், கணவனுக்குப் பணிவிடை செய்பவளுமாக இருக்க வேண்டும். அவர்களது நடையுடை பாவனைகளில் அடக்கம் வேண்டும்.” எனவே பெண் என்பவள் ஆணுக்கு இன்பம் தருகின்ற அடிமை என்பதே அவரது கருத்து. இன்னும் சிலர், பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிவதாலேயே ஆண்களின் காம உணர்வு தூண்டப்படுகிறது. எனவே அவர்கள் உடை அணிவதிலே கட்டுப்பாடு வேண்டும் என்கிறார்கள். ஆனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள்; இன்னொரு பங்கினர் தெரிந்தவர்கள், உறவினர்கள், அலுவலக மேலதிகாரிகள், நம்பியவர்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றவர்கள்; இன்னொரு பகுதியினர், போலீசு, ராணுவம், அரசு எந்திரத்தினால் வன்புணர்வு செய்யப்படுகிறவர்கள்.

அது போக எஞ்சியுள்ள ஒரு சிறுபகுதி மட்டுமே முகம் தெரியாத மனிதர்களால் நடைபெறுகிறது என்று தேசிய மற்றும் சர்வதேச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்ற பெண்கள் புகார் தர முன்வருவதில்லை. இது வெளியே தெரிந்தால் பெண் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் இதற்கு எதிரான போராட்டம் இங்கே மிகமிகக் குறைவு. இதுவே மேலை நாடுகளில் மிக அதிக அளவில் (அமெரிக்காவில் நிமிடத்திற்கு 22 பெண்கள்) பாலியல் வல்லுறவு நடைபெறுகிறது. அதற்கெதிரான போராட்டமும் அவ்வாறே அதிக அளவில் நடைபெறுகின்றது, பதிவாகின்றது. இந்தியாவில் கற்பு என்ற ஒன்றால் பெண்கள் விலங்கிடப்பட்டுள்ளனர். ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டால் அவளது வாழ்க்கை அத்துடன் முடிந்து விட்டதாக கருதப்படுகிறது. இதிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும். ஆண்களோடு பேசுவது, பழகுவது, தொடுவது, சிரிப்பது இவையெல்லாம் பெண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் பெண்ணடிமைத்தனம். இதனைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கச் சூழலில் பெண்கள் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், பெண்கள் ஒரு நுகர்வுப் பண்டமாக கருதப்படுகின்றனர். ஊடகங்கள், சினிமா, வலைத்தளம், செல்போன்-விளம்பரங்கள் என்று அனைத்து தளங்களிலும் பெண் போதையேற்றும் சரக்காக மாற்றப்பட்டிருக்கிறாள். மேலும் போதையேற்ற அரசே டாஸ்மாக் நடத்துகிறது. அது போலவே, காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள் எல்லாம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுக் கூடாரங்களாக மாறி விட்டிருக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சட்ட விரோதக் கும்பல்தான் பாலியல் குற்றவாளிகளை தண்டிக்கும், அதன் கையில் அதிகாரத்தைத் தர வேண்டும் என்று கோருகிறார்கள் பலர். நம்நாட்டின் உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பாலியல் புகாருக்கு ஆளாகாதவர்கள் எத்தனை பேர்?

தகவல் தொடர்பு ஊடக வளர்ச்சியை பாலியல் வக்கிரங்களுக்காக பயன்படுத்துபவர்கள் வயது வராத சிறுவர், சிறுமி, மாணவர்களிடம் வேகமாகப் புகுத்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் அரசு தடைவிதிப்பதில்லை, கட்டுப்படுத்துவதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு முதல் எதிரி அரசுதான்.

பெண்ணியம், பெண்ணுரிமையை விலாவாரியாகப் பேசுவதெல்லாம் இவற்றுக்குத் தீர்வாகி விட முடியாது. மாறாக ஆணாதிக்க சமூக சிந்தனையை ஒழிப்பதே தீர்வாகும். ஆணாதிக்கம் ஒழிந்த சமூகத்தில்தான் பெண்ணுக்கு சம உரிமை கிட்டும். முதலாளித்துவ சமூக அமைப்பு முற்போக்கானது, அங்கே பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஏகாதிபத்திய உலகமயமாக்கச் சூழலில்தான் பெண் மிகவும் மோசமாக சுரண்டப்படுகிறாள். போகப் பொருளாக கருதப்படுகிறாள். வரைமுறையற்ற பாலுறவு, வயதுக்கு முன் பாலுறவு, பொருந்தாத பாலுறவு, இயற்கைக்கு முரணான பாலுறவு என்று அத்துணை வக்கிரங்களும் இந்தச் சூழலில்தான் வேகமாக வளர்க்கப்படுகின்றன. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வாழ்வாதாரங்கள் முற்றிலும் பறிக்கப்படுகின்ற காரணத்தினால் தவிர்க்க இயலாமல் பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அங்கேதான் பெண் இரு வகையிலும் சுரண்டப்படுகிறாள். பெண் என்றாலே அவள் போகப் பொருள் என்கிற கருத்தோட்டம் தோன்றி வளர்ந்து பாதுகாப்புக்குள்ளாகிறது.

ஆணும் பெண்ணும் இணைந்து உயிர்களை மறு உற்பத்தி செய்வது என்பது இயற்கையின் விதி. இதில் ஓர் உயிரை ஈன்று தருகின்ற பெருமை படைத்தவள் பெண். எனவே பெண் என்பவள் இயற்கையிலேயே ஒரு படி உயர்ந்தவள். அந்தப் பெண்ணினத்தை மதிக்கத் தவறியதோடு சிறுமைப்படுத்துகிற சமூகமாக இந்திய சமூகம் உள்ளது. இந்த ஆணாதிக்கச் சமூகத்தை வீழ்த்துவதற்குப் பெண்கள் தங்களது தளைகள், அனைத்தையும் அறுத்தெறிந்து விட்டு ஜனநாய மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கீழ் அணி திரள்வதே ஒரே மாற்று.

  • ஆணாதிக்கத்தின் வேரறுக்கப் போராடுவோம்!
  • பெண்ணுரிமைகளை நிலைநாட்டச் சூளுரைப்போம்!
  • பெண்களை முற்றிலும் நுகர்வுப் பொருளாக மாற்றிச் சீரழிக்கும் மறுகாலனியாக்கச் சூழலை துடைத்தெறிவோம்!

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம்
தொடர்புக்கு : 94423 39260

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – நேர்காணல் வீடியோ

8

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கு குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி ராஜூவும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனும் கலந்து கொண்ட நேர்காணல்  நிகழ்ச்சி பிப்ரவரி 16, 2013 காலை 11 மணி முதல் 12 மணி வரை கேப்டன் நியூஸ் டிவியில் ஒளிபரப்பானது.

நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு, இன்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும்.

நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை கீழே காணலாம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 94432 60164, 94437 24403
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தொடர்புக்கு: 90474 00485

குமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?

38
குமுதம் ரிப்போர்ட்டர்

செட்டியார் – ஐயங்கார் கூட்டணியில் இருந்த குமுதம் நிறுவனம் தற்போது ஐயங்கார் கும்பலிடம் மட்டும் உள்ளது. செட்டியார் கும்பல் நீக்கம் நிறைவேற்றப்பட்டதற்கு அம்மாவின் அருளும் ஒரு காரணமென்பதால் சொத்தைக் கைப்பற்றிய ஐயங்கார் கும்பல் அதிமுகவின் அடிவருடி பத்திரிகையாக செயல்படுவதை அனைவரும் அறிந்திருக்கலாம். குமுதம் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்தியும், மூளையில் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கும் முத்திரையை பதித்தும் பத்திரிகைகளை நடத்துகிறார்கள், எழுதுகிறார்கள். இதில் ஓனர், வொர்க்கர் என்ற பேதமெல்லாம் இல்லை.

தமிழக அரசு அல்லது ஜெயாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் கருணாநிதியின் சதியே காரணமென்று ஜெயாவே யோசித்திராத கோணத்திலெல்லாம் சிந்தித்து எழுதுகின்றன குமுதம் குழும பத்திரிகைகள்.

விசவரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி இவர்கள் தமிழக அரசை ஆதரிப்பதோடு கமலையும் ஆதரிக்கிறார்களாம். அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம்.

இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள். அதன்படி 1991இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவை தமிழக மக்கள் அமர்க்களமாக ஆதரித்து தள்ளினார்களாம். அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாட்சா பட விழாவில் மணிரத்தினம் வீட்டு குண்டு வீச்சு தொடர்பாகவும், டிராபிக் ஜாமில் தனது கார் நிற்பதற்காகவும் துக்கப்பட்ட ரஜினி தமிழக அரசைக் கண்டித்தது நினைவிருக்கிறதா? அதை ஊதிப்பெருக்கி ரஜினிக்கும் ஜெயாவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அடுத்த தேர்தலில் ரஜினியை ஒரு வாய்ஸ் கொடுக்க வைத்து அதிமுகவை தோற்க வைத்தவர் கருணாநிதி என்று போகிறது குமுதம் மாமாவின் வரலாறு.

அட மாமாக்களா! அந்த ஆட்சிக்காலத்தில் பாசிச ஜெயாவின் ஆட்சியில் முழு தமிழகமுமே மொட்டை அடிக்கப்பட்டதும், வளர்ப்பு மகன் திருமணம் முதல் டான்சி ஊழல் வரை பாசிச ஜெயாவின் முறைகேடுகளும்தான் அந்த தேர்தலில் தமிழக மக்கள் கொடுத்த செருப்படிக்கு முக்கியமான காரணம். உண்மையாகவே வாக்கு கேட்க வந்த அதிமுக அமைச்சர்கள் பலரை பெண்களின் விளக்குமாறுதான் அடித்தி விரட்டியதெல்லாம் வரலாறு. அதைக்கூட தனது அம்மா போற்றி அடிமைத்தனத்திற்காக இப்படி புரட்டி எழுவது என்றால் இவர்களின் நரித்தனம் எந்த அளவு அபாயகரமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படி அந்தக் காலத்தில் ரஜினியை பயன்படுத்திய கருணாநிதி இன்று கமலை மோத வைத்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை வாய்ஸ் கொடுக்க வைத்து வெற்றி பெற திட்டமிட்டிருக்கிறாராம். இதனாலாயே ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் வேட்டி கட்டிய தமிழர்தான் பிரதமர் ஆக வேண்டும் என்று கமல் விரும்புகிறாரே ஒழிய சேலை கட்டியவரை அல்ல என்று விசமத்தனம் செய்து பேசியவர் கருணாநிதியாம். இப்போதும் முழு தமிழக மக்களும் ஜெயாவை முழுமனதுடன் ஆதரிக்கிறார்களாம். ஒரு வேளை கமல் அப்படி குரல் கொடுத்தால் மக்கள் மாற வாய்ப்பிருக்கிறது என்பது திமுகவின் திட்டமாம்.

இதுதான் விசுவரூபம் கதையின் பின்னணி என்று நாக்கூசாமல் எழுதுகிறது குமுதம். சரி கருணாநிதி இப்படி சதி செய்து கமலை அப்படி பேசவைத்தால் அம்மா ஏன் கோபப்பட்டு கமலை எதிர்க்க வேண்டும்? அந்த சதியை முறியடிக்கும் வண்ணமாக அமைதியாக இருந்து விசுவரூபத்தை அனுமதித்திருக்கலாமே? இப்படியெல்லாம் நாம் கேட்டாலும் குமுதத்தைப் பொறுத்தவரை அம்மாவின் அதிகாரம் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அதை தெருவில் போகும் ஒரு குழந்தை கேட்டாலும் அவருக்கு கோபம் வரும். இந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு கேள்வி கேட்ட அந்த குழந்தையை ரெண்டு அடி போடுவதுதான் ஊடக தர்மம் என்று குமுதம் சொல்கிறது. அதாவது அந்த அறியாக் குழந்தையை கருணாநிதிதான் லாலிபாப் வாங்கி இப்படி அம்மாவுக்கு எதிராக பேசவைத்தார் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். அடேங்கப்பா, இம்சை அரசனின் அரசவைக் கவிஞர்களெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட காலத்தில் கூட கமலின் ரசிகர்கள் ஆந்திரா சென்றுதான் படத்தை பார்த்தார்களே அன்றி தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இப்படிப்பட்ட ரசிகர்களை உசுப்பி விட்டு கமல் குரல் கொடுத்து திமுக வெற்றிபெறும் என்றால் பவர் ஸ்டாருக்கு இதைவிட வாய்ஸ் அதிகம் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இது போக திமுக வாரிசுச் சண்டையை வைத்து ரிப்போர்ட்டர் எனும் இந்த நரி எழுதிய கதைகளை பிட்டு வைப்பதற்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது.

குமுதம்-ரிப்போர்ட்டர்-குஷ்பு-மணியம்மைஇதன் தொடர்ச்சியாக இன்று வந்த குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பு படத்தை போட்டு பக்கத்தில் பெரியாருக்கு பதில் கருணாநிதி அமர்ந்திருக்கும் படத்தை ஒட்ட வைத்து “இன்னொரு மணியம்மை?” என்று வெட்கம் கெட்ட விதத்தில் எழுதியிருக்கிறார்கள். குஷ்பு இப்படி மணியம்மை பெரியாரை மணந்தது போல கருணாநிதியிடம் நெருங்கி வர முயற்சி செய்கிறார் என்றும் இதை கருணாநிதியின் குடும்ப பெண்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் இந்த மஞ்சள் பத்திரிகை மாமா பச்சையாக வாந்தி எடுத்து வைத்திருக்கிறது.

ஆனந்த விகடனில் பேட்டி கொடுத்த குஷ்பு, திமுகவில் தலைவர் என்பவர் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார் என்பது போல கூறியதை அனைத்து பத்திரிகைகளும் ஊதிப்பெருக்கி ஒரு சென்சேஷன் நியூசை உருவாக்கின. இதன் தொடர்ச்சியாக குஷ்பு வீடு திமுகவினரால் தாக்கப்பட்டதும், கருணாநிதி அதை கண்டித்தாதாகவும் செய்திகளை படித்திருப்பீர்கள். குஷ்பு ஒரு மேட்டுக்குடி ரோட்டரி கிளப் பெண் அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அப்படித்தான் பேசுகிறார். இவரது பிரபலம் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்க பயன்படும் என்பதால் திமுக இத்தகைய களப்பணி செய்து வந்த ‘போராளிகளை’ வெட்கமில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. பதிலுக்கு குஷ்புவும் தனது பிரபலத்தை வைத்து திமுகவில் இன்னும் செல்வாக்குமிக்க பதவிகளில் வரலாம் என்று முயற்சி செய்கிறார். பரஸ்பரம் காரியவாதம். அதே போல ஸ்டாலின், அழகிரி மற்றும் பல தளபதிகள் கொண்ட திமுகவின் மையங்கள் பல ஒரு நடிகையின் பிரபலத்தை எந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்பதை எச்சரிக்கையாகவே கையாள்கிறார்கள்.

இதைத்தாண்டி குஷ்புவின் நேர்காணல்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஸ்டாலின், அழகிரி வாரிச் சண்டையின் பின்னணியில்தான் குஷ்புவின் நேர்காணல் பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டது. இதை இன்னும் கொஞ்சம் பாலியல் கலந்த தளத்திற்கு கொண்டு சென்றது குமுதம் ரிப்போர்ட்டர் மட்டுமே.

குமுதத்தின் இலக்கு என்ன? கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்து பெண்களையெல்லாம் காலஞ்சென்ற எஸ்.எஸ்.சந்திரன் பொதுமேடையில் வாய் புழுக்க பேசிய போது குலுங்கி குலுங்கி சிரித்தவர்தான் இந்த ஜெயலலிதா. இன்று குமுதம் ரிப்போர்ட்டரை பார்த்தால் அப்படி சிரிப்பது உறுதி என்று குமுதம் மாமாவுக்கு தெரியும். இந்த ஒரு மேட்டருக்காகத்தான் இத்தகைய தரந்தாழ்ந்த கதையை படத்துடன் எழுதி வெளியிடக் காரணம்.

எனினும் தமது தலைவரை குமுதம் கேவலப்படுத்திவிட்டது, தனது கட்சிக்காரர் என்பதால் குஷ்புவை இழிவுபடுத்திவிட்டது என்று திமுகவின் ஒரு உடன்பிறப்புக்கு கோபம் வந்து குமுதம் அலுவலகத்தை அடிக்க சென்று கலவரமெல்லாம் நடக்காது. ஒன்று அம்மாவின் மீதான பயம். இரண்டு இப்படித்தான் திமுக மட்டுமல்ல அதிமுக மேடைகளிலும் இரண்டு கட்சி பேச்சாளர்களும் பாலியல் அநாகரிகத்தோடு பேசுவார்கள். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நாஞ்சில் சம்பத் பேச்சுக்களுக்கு கை தட்டும் இவர்கள் குமுதத்திற்காக கல்லை எடுக்க மாட்டார்கள் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் குமுதம் ரிப்போர்ட்டரின் இத்தகைய அயோக்கியத்தனத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழகத்தை பிடித்த சாபக்கேடு பாசிச ஜெயா மட்டுமல்ல, அவருக்கு பல்லக்கு தூக்கும் இத்தகைய பத்திரிகை மாமாக்களும்தான் என்பதை உணர்வதோடு பொது அரங்கில் இவர்களை முறியடிப்பதற்கும் நாம் முன்வரவேண்டும்.

கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?

17

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 28

“கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியுறுவதையும், பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதையும் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களது தேசபக்தி யோக்கியதைக்கு இதுவே சான்று”

இந்து முன்னணியின் பிரபலமான அவதூறுகளில் ஒன்று.

கபில்தேவ் - இம்ரான்கான்20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பயணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்தபோது தில்லி ஆடுகளத்தை சிவசேனா கொத்தியது; சென்னை அரங்கத்தில் பன்றித் தலைகளை வீசியது; மும்பை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தினுள் புகுந்து பரிசுக் கோப்பைகளை அடித்து நொறுக்கியது.

அணுகுண்டு வெடிப்பு, தேவாலய இடிப்புகளால் உலக அரங்கில் தனிமைப்பட்டிருக்கும் பா.ஜ.க. அரசுக்கு எப்படியாவது ஆட்டத்தை நடத்திவிட வேண்டும் என்ற கவலை; போட்டி ரத்தானால் பலகோடி ரூபாய் பறிபோகுமே என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவலை; பணம் வாங்கிக்கொண்டு தோற்றதாக இந்திய, பாகிஸ்தான் வீரர்கள்மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால், அந்தக் களங்கத்தைத் துடைப்பதற்காகவாவது போட்டியில் வெல்ல வேண்டும் என்பது  இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் கவலை; தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பரம் உருவாக்கித் தரும் வியாபாரம் குறித்த கவலை; எதைப் பற்றியும் கவலைப்படாத ரசிகர்களுக்கு மட்டும்தான் ஆட்டத்தை ரசிக்க வேண்டுமே என்ற கவலை.

இவை பின்னரங்கத்தில் பேசப்படும் பல்வேறு கவலைகள். ஆனால், மக்கள் அரங்கில் பேசப்படும் ஒரே கவலை, ‘விளையாட்டு வேறு, அரசியல் வேறு, இரண்டையும் கலக்காதீர்கள்’ என்பதுதான். என்றால் யுத்தத்தை தாக்கரே மைதானத்திற்கு கொண்டு வந்ததில் உண்மையில்லையா? ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியில்லையா? சிவசேனா செயற்கையாகத்தான் இப்பிரச்சினையை எழுப்பியதா? எழுப்பப்படும் ஒரு பிரச்சினையால், ‘அரசியலைக் கலக்காதே’ என்பது, அப்பிரச்சினையைச் சந்திப்பதற்கு பதில், தப்பித்து ஓடுவதையே கோருகிறது. தானும், தன் வீடும் மட்டுமே உலகம் என்று வாழும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கம், ஒளிந்திருக்கும் பாதுகாப்பான இடமே, ‘அரசியலைக் கலக்காதே’ என்பதில்தான். இதுதான் நேர்மையற்ற அரசியல். இதனால்தான் சிவசேனாக்கள் வளருகின்றன.

உண்மையில் விளையாட்டிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லையா? பண்டைய கிரேக்க வீரனுக்குத் தரப்பட்ட விருது வெறும் ஆலிவ் இலைக் கிரீடம்தான். இன்றைய ஒலிம்பிக் வீரனுக்கு விருது, விளம்பரத்திற்காக பன்னாட்டு நிறுவனம் தரும் சில மில்லியன் டாலர்கள். டாலரும், இலையும் ஒன்றுதானா? பிரான்சில் நடந்த உலகக் கால்பந்து போட்டியினால் பிரபலமான வீரர்களை வாங்குவதற்கு ஐரோப்பிய கிளப்புகள் போட்டியிட்டன. யார் திறமையான கால்பந்து வீரர் என்பது, யார் விலை அதிகம் என்பதிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது. திறமையைப் பணம் ஆதிக்கம் செய்வதன் காரணம் என்ன?

முன்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஆடுவதையே காணமுடியாத நீங்கள், இன்று எந்த நாடு ஆடினாலும் காண முடியும். உலக மயமாக்கமும், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியும் அதைச் சாத்தியமாக்கியது. விளையாட்டில் மட்டும் புழங்கும் மூலதனம், பல மூன்றாம் உலக நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகம். சர்வதேசக் கால்பந்துக் கழகம்தான் உலகின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனம், பில்கேட்சின் நிறுவனம் அல்ல. விளையாட்டின் இத்தகைய மாபெரும் வருமானம் ஆப்பிரிக்கப் பஞ்சத்தைப் போக்குவதற்கும், ஆசியாவின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் தான் பயன்படுகிறதா? அல்லது ஏழை நாடுகளைக் கொள்ளையிடவும், ஆதிக்கம் செய்யவும் பயன்படுகிறதா? மூலதனம், சந்தை, விளம்பரம், பணம் இவற்றை உருவிவிட்டு எந்த விளையாட்டைக் காட்ட முடியும்? அல்லது ஆட முடியும்? முடியாதென்றால் அதன் காரணம் அரசியல்; ஆம். அரசியல் கலப்பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்தியமும் இல்லை.

ஒரு போராகவும், போர் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகவும், இன – நிற வெறிச் சண்டையாகவும் விளையாட்டு மாற்றப்பட்டுவிட்டது. ஏகாதிபதிய உலகின் ஆதிக்க மனோபாவமும், அதை எதிர்க்கும் விடுதலை உணர்வும் விளையாட்டிலும் வெளிப்பட்டே தீரும். 1932-இல் மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் ஓட்டத்தில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் எனும் அமெரிக்கக் கருப்பர் வெல்கிறார். வெள்ளையர்களே பலசாலிகள் என்று கருதிய ஹிட்லரால் அதைத் தாங்க முடியவில்லை. முந்தைய சோவியத் யூனியன் பல தலைமுறைகளாக, ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பெற்றது. கம்யூனிச அரக்கனின் அதிகாரத்தின் கீழ் தரப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பயிற்சிதான் வெற்றிக்குக் காரணம் என அமெரிக்க மக்கள் இன்றும் கருதுகின்றனர்.

பிரான்சில் நடந்த உலகக் கால்பந்துப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய ஈரானை, அரபு மக்கள் விடிய விடியக் கொண்டாடியதற்குக் காரணம், ஏகாதிபத்திய வெறுப்பு. இந்தியாவின் தெற்காசிய ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் இலங்கை, கிரிக்கெட்டில் இந்தியாவை வெல்லும்போது ஈழத் தமிழர்களும் மகிழ்வார்கள். காரணம் அமைதிப்படையின் அழியாத வடுக்கள்தான். இதுபோக, ஏழை நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளும் தேசிய வெறியால் கவ்வப்பட்டிருக்கின்றன. அவை பொய்யான உணர்ச்சியில் மக்களை மூழ்கடிக்க ஆள்பவருக்குப் பயன்படுகின்றன. இருப்பினும் விளையாட்டில் நாம் கண்ட சமூக நிலைமைகள் அனைத்தும், பரபரப்பை ஏற்படுத்தி, சந்தையை அதிகரித்து, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடவே முக்கியமாகப் பயன்படுகிறது. கிரிக்கெட்டின் விதிகள் தெரியாத ஒரு நபர்கூட, ‘ஸ்கோர் என்னாச்சு, நம்மாளு ஜெயிப்பானா?’ என்று கேட்பதன் காரணம் அதுதான்.

விளையாட்டின் சர்வதேச அரசியல் நிலைமைகள் இந்தியக் கிரிக்கெட்டிற்கும் பொருந்தும். ஆள்பவர்களுக்குத் தேசிய வெறியூட்டும் கருவியாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் வர்த்தமாகவும்தான் கிரிக்கெட் பயன்படுகிறது. அதனாலேயே அது பிரபலமாக்கப்பட்டது. இனிமேலும் அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல.

‘பாகிஸ்தானுடன் போரோ, கிரிக்கெட்டோ இரண்டிலும் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’, என்கிறார் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன். ‘போரில் யாரிடம் நியாயம் உள்ளதோ அவன் வெல்லட்டும், விளையாட்டில் யாரிடம் திறமை உள்ளதோ அவன் வெல்லட்டும்’ என்பதுதானே சரி. தாக்கரேயின் அரசியல் கலப்பைக் கண்டித்தவர்கள், மகாஜனின் கூற்றில் அரசியலைக் காணவில்லையா? இல்லை என்பதன் காரணம் இது புதிதல்ல. இருநாட்டு அணிகளுக்கிடையேயான போட்டியின் போது கிளம்பும் தேசிய வெறியில்  இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் குளிர் காய்கின்றன. காசுமீர் பிரச்சினையிலும், கிரிக்கெட் போட்டியிலும் அவர்களது அணுகுமுறை ஒன்றுதான். இன்று சிவசேனாவை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் இதில் அடக்கம்.

கபில்தேவ் தலைமையிலான அணி, பாகிஸ்தான் அணியுடன் ஷார்ஜாவில் மோதிய ஒரு போட்டியின் இறுதிக் காட்சி.  கடைசிப் பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி, என்ற நிலையில் சேதன் சர்மாவின் பந்தை சிக்சர் அடிக்கிறார், பாகிஸ்தான் வீரர் மியான்தத். இருநாட்டு இரசிகர்களையும் பல நாட்கள் தூங்கவிடாமல் செய்த இப்போட்டியைப் போன்று, பலவற்றில் பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. அரசியல் கலக்காத கிரிக்கெட்டை விரும்பியவர்கள் அனைவரும் திறமை – இரசனை அடிப்படையில் பாகிஸ்தான் அணிவெற்றியைப் பாராட்டியிருக்க வேண்டும். இரசிகர்களை ஏற்கச் செய்திருக்க வேண்டும். செய்தார்களா? அன்று இந்தியப் பத்திரிகைகள் எழுதியவை என்ன? ”இறைச்சி விழுங்கும் பாகிஸ்தான் வீரர்களின் ரத்தத்தில் ஒரு வெல்லும் வெறி (Killer instinct) இருக்கும். இந்தியாவுடன் மோதும்போது அவ்வெறி விசுவரூபமெடுக்கும். சைவ பட்சிணிகளான இந்திய வீரர்கள் சாந்த சொரூபியாக, இக்கட்டான தருணங்களில் கோழைகளாக விளையாடுகின்றனர்.”

தாக்கரேயுடன் தோளோடு தோள் நின்று தேசிய வெறியை ஊட்டியவர்கள், அரசியலற்ற விளையாட்டைப் பற்றி நமக்கு நீதி உபதேசம் செய்கிறார்கள். தேசிய வெறியின் தர்க்க நீட்சியாக முன் செல்லும் சிவசேனாவை ‘ஒரு எல்லைக்குள் மேல் போகாதே’ என அன்பாய்க் கடிந்து கொள்கிறார்கள்.

எப்போதோ அரசியலாக்கப்பட்ட கிரிக்கெட்டின் செல்வாக்கை அறுவடை செய்ய, சிவசேனைக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் முயன்று வந்தது. ‘இந்தியாவை வெல்லும் பாகிஸ்தான் அணியை, இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனர்’ என்று தமது முசுலீம் எதிர்ப்பு அரசியலை கிரிக்கெட்டிலும் புகுத்தினர். ஒரு விளையாட்டு என்ற முறையில் யாரும் எவரையும் ஆதரிக்கலாம் என்று, கிரிக்கெட்டின் ஜனநாயகக் காவலர்கள் இதுவரை உங்களிடம் ஏன் விளக்கவில்லை? இல்லையென்றால், இந்திய கிரிக்கெட்டில் இந்து தேசிய அரசியல் நுழைவை இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றுதானே பொருள்?

வருடந்தோறும் வளைகுடா ஷார்ஜாவில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அங்கே இந்திய அணியை ஆதரிப்பவர்களில் அதிகம் பேர் இங்கிருந்து பிழைக்கச் சென்ற இசுலாமிய மக்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ‘முசுலீம்கள் தேச பக்தர்கள்தான்’ என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் சான்றிதழ் பெறுவதற்காக இதைக் கூறவில்லை. உண்மையை எப்படித் திரிக்கிறார்கள் என்பதைத்தான் கூறுகிறோம். இருப்பினும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இசுலாமிய இளைஞனின் மனநிலை – பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருக்க முடியுமா என்பதையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

பிரான்சில், உலகக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்தான் வெல்ல வேண்டும் என்ற நமது விருப்பம், ஏகாதிபத்திய வெறுப்பினாலும், மூன்றாம் உலக நாட்டின் மீதான நட்பினாலும் வருகிறது. இங்கிலாந்தை எதிர்த்து மேற்கிந்தியக் கிரிக்கெட் அணி வெற்றி கொள்ள விரும்பும் நமது ஆவல், வெள்ளை நிற வெறியின் மீதுள்ள வெறுப்பினால் வருகிறது; யார் திறமையாக ஆடுகிறார்கள் என்பதல்ல. எனில், இந்தியச் சமூக நிலைமைகளில் ஒரு முசுலீமின் மனநிலை கிரிக்கெட்டில் யாரை ஆதரிக்கும்? 20 ஆண்டுகளில் அவர்களை எதிர்த்து நூற்றுக்கணக்கில் கலவரங்கள், ஆயிரக்கணக்கில் படுகொலைகள், அகதிகளாக வெளியேற்றம், பாபர் மசூதி இடிப்பு, ஐ.எஸ்.ஐ. பீதியூட்டி சிறை, மொத்தத்தில் முசுலீம்கள் சொந்த மண்ணில் இரண்டாந்தரக் குடிமக்கள்.

தாக்கரே-வாஜ்பாயிஆனால், தண்டிக்கப்பட வேண்டிய இந்துமத வெறியர்கள் ஆட்சியில்; ‘முசுலீம்களின் புட்டத்தை எட்டி உதைப்பேன், மசூதியை இடித்தது நாங்கள்தான், ஸ்ரீகிருஷ்ணா கமிசனைக் குப்பையில் போடு’ என்னும் தாக்கரே; கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம் என்று ஏனைய கட்சிகளின் மழுப்பலான உபதேசம். இந்தச் சூழ்நிலையில் காயம்பட்ட இசுலாமிய இதயங்களை வருடிக்கொடுத்தது யார்?

தாக்கரேவைக் கைது செய்யுங்கள் என்று இந்திய அணி ஊர்வலம் போனதா? மசூதி இடிப்பு தவறு என ஒரு வீரராவது அறிக்கை விட்டாரா? இல்லை. எதுவும் இல்லை. டெண்டுல்கரின் திருமணத்திற்கு வந்த 50 பேரில் பாதிக்கும் மேல் தாக்கரேவின் குடும்பத்தினர்தான். கீர்த்தி ஆசாத், சௌகான் போன்ற முன்னாள் வீரர்கள் பா.ஜ.க.வில் குவிகின்றனர். பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி, முசுலீம்களை எதிர்த்துப் போராடும் இந்து மதச் சேனையாக உங்களுக்குக் காட்டப்படுகிறது. இப்போது முசுலீம்களுக்கு நீங்கள் தரும் யோசனை என்ன?

பம்பாய், மீரட், பிவந்தி, பகல்பூர், கோவைக் கலவரங்களில் சொந்தபந்தத்தையும், வாழ்க்கையையும் இழந்து, விதியை நொந்து உழலும் இசுலாமிய இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஒரு சிலர் குண்டு வைக்கலாம். முடியாதவர்கள் மைதானத்தில் கை தட்டலாம். இந்தியாவில் எவரும் தண்டிக்க முடியாத இந்து மத வெறியர்களை, ஒரு கிரிக்கெட் போட்டியிலாவது வெறுப்பேற்றலாம் என்ற அந்த இளைஞர்களது மனநிலை, இசுலாமிய மக்களுக்கல்ல, இந்தியாவின் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்குத்தான் அவமானம். அதில் ரசிகர்களாகிய உங்களுக்கும் பங்கு உண்டா, இல்லையா?

‘ஒரு இந்து ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தின் வீரனை ரசிக்கலாம்; ஒரு பாகிஸ்தான் வீரனை மட்டும் ரசிக்கக்கூடாது’ என்பதற்கு என்ன பதில்? பிராட்மேனுக்குப் பிறகு டெண்டுல்கர்தான் சிறந்த மட்டையாளர் என பல நாட்டு இரசிகர்களும், வீரர்களும் கூறுகின்றனர். அவர்களெல்லாம் அந்நாடுகளின் தேசத் துரோகிகளா? ராம் பிரகாஷ், சந்தர்பால், முரளிதரன், தீபக்பட்டேல், நாசர் ஹூசைன் போன்ற இந்திய வம்சாவழியினர் பல நாடுகளுக்காக இந்தியாவை எதிர்த்து ஆடுகிறார்கள். எனில் இவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று இந்து முன்னணி கோருமா?

– முற்றும்.

_________________________

வாசக நண்பர்களே! இத்துடன் கண்ணைப் பறிக்கும் காவிப்புழுதி எனும் இந்நூலின் கட்டுரைகள் வரிசை முடிவு பெறுகிறது. ஆனால் இந்துமதவெறியர்களின் அவதூறுகள் இன்றும் தொடர்கின்றன. இவை வெறுமனே கருத்து ரீதியான அவதூறுகள் மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ் எனும் பார்ப்பன பாசிசக் கூட்டம் இத்தகைய அவதூறுகளை மூலதனமாக வைத்துத்தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறது. எனவே இந்த அவதூறுகளும், வெறுப்பும் கருத்து என்பதைத்தாண்டி நாட்டு மக்களை ஒடுக்கும் வன்முறைக்கு அச்சாரமாகவும் இருக்கின்றன. சிறுபான்மை மக்களை குறிவைத்து குறிப்பாக முசுலீம் மக்களை வில்லன்களாக்கி ‘இந்துக்களை’ அணிதிரட்டும் வேலைக்காகவே இந்த அவதூறுகள் சுமார் 80 ஆண்டுகளாக இந்துமதவெறியர்களால் பரப்பப்படுகின்றன. பார்ப்பன பாசிசம் என்பது முசுலீம்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான ‘இந்துக்களுக்கும்’ எதிரான ஒரு நிறுவனமாகும். உழைக்கும் மக்கள் என்ற முறையில் மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்துமதவெறியர்களை வீழ்த்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அத்தகைய பணிக்கு இங்கே வெளியிடப்பட்டிருக்கும் 28 கட்டுரைகளும் உங்களுக்கு ஒரு ஆயுதமாக பயன்படும் என்று நம்புகிறோம்.

மேலும், இந்த நூல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்டு விற்பனையாகியிருக்கின்றது. தற்போது கீழைக்காற்று வெளியீட்டகத்தில் இந்த நூல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூலை நீங்கள் வாங்குவதோடு உங்கள் நண்பர்களிடமும் விநியோகிக்குமாறும் அன்புடன் கோருகிறோம்.

– வினவு

கண்ணை மறைக்கும் காவிப்புழுதி

நூல் விற்பனை விவரங்கள்:
பெயர்: கண்ணை மறைக்கும் காவிப்புழுதி – சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் பொய்யும் புரட்டும் !

கிடைக்கும் இடம் :
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

பக்கங்கள் : 160 விலை : ரூ 80/-
தபால் செலவு : 
உள்நாடு ரூ 50/-, வெளிநாடு ரூ 500/-
கிடைக்கும் இடம்
:
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

__________முந்தைய பகுதிகள்____________

 

ஒரு பெண் ஒரு பொறுக்கியை எதிர்க்க முடியுமா ?

26

பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் வன்முறைக்கும் கடுமையான சட்டங்கள்தான் தீர்வு என்று அரசாங்கம் முன் வைக்கிறது. ‘சட்டத்தை கடுமையாக்கணும், போலீசுக்கு அதிக அதிகாரம் வேணும், நல்லவங்க அரசியலுக்கு வரணும், ஊடகங்கள் சுதந்திரமா செயல்பட்டா பிரச்சனை தீரும்’ என அப்பாவியாய் நம்புபவர்கள் பலர் உள்ளனர்.

ஆணாதிக்க பிற்போக்கு கலாச்சாரத்தோடு  புழங்கும் பொது இடங்களில் பெண்கள் மீது வசை பொழிவது, பாலியல் ரீதியாக திட்டுவது போன்ற நடத்தைகள் சகஜமாகியுள்ளன. அனைவரும் தினமும் சந்திக்கும் இந்த நிகழ்வுகளை பெண்கள் ‘வேறு வழியில்லாமல்’ சகித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.

சட்டங்களை செயல்படுத்த வேண்டிய காவல் துறை, சமூகத்தின் ஒட்டு மொத்த ஆணாதிக்க மனப்போக்கைத்தான் பிரதிபலிக்கிறது. இந்தச் சூழலில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த அச்சுறுத்தல்கள் குறித்து புகார் செய்ய காவல் நிலையத்தை அணுகுவதோ, வழக்கு பதிவு செய்வதோ நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

கடந்த 2 வாரங்களில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்வதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களைப் பற்றிய இரண்டு சம்பவங்களை பார்க்கலாம். பெண்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக ஒன்றிணைந்து போராடுவதுதான் ஒரே தீர்வு.

திருச்சியைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவினர் பிப்ரவரி 1ம் தேதி அனுப்பிய சம்பவம்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளிக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். 30 வயதுடைய ஆண் ஒருவர் ஹீரோ ஹோண்டாவில் வேகமாக வந்து, அந்த மாணவியின் தோளை அமுக்கி, பின்பக்கம் தட்டிவிட்டு சென்றுள்ளான்.

சிறிதும் தயங்காத அந்த மாணவி வேகமாக பின்னாலேயே ஓடிப்போய், அவனை வழிமறித்து, வண்டியை நிறுத்தி, வண்டிசாவியை பறித்து கொண்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக திட்டி உள்ளார். அவன் வேறுவழியின்றி “என்னை மன்னித்துவிடு , வண்டி சாவியை கொடு” எனக் கேட்டுள்ளான்.

அந்த மாணவி சாவியை தரமறுத்து, அருகில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து விட்டு, அவர்கள் வருவதற்க்குள் வேகமாக அந்த ‘பொறுக்கி’ இருக்கும் இடத்திற்கு வந்து மீண்டும் திட்டியுள்ளார். கூட்டம் கூடவும் ஆண் ட்ராபிக் போலீஸ் வந்து… “ஏம்மா இதப் போயி பெரிய பிரச்சனையா ஆக்குற, போம்மா” என்று அந்த மாணவியை திட்டியுள்ளார். அதற்குள் கூடியிருந்த மக்களில் ஒருவர், அந்த ‘பொறுக்கியை’ கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போயுள்ளார். ட்ராபிக் போலிஸ் உடனே “சரி…சரி விடுங்க, பிரச்சனைய பெரிசாக்காதீங்க“ என்றிருக்கிறார்.

அங்கு வந்த மகளிர் காவல் நிலைய பெண் போலிஸ் ட்ராபிக் போலிஸிடம் “சார், இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லை. அந்த பெண்ணை தோளை பிடித்து அமுக்கி இருக்கான், சாதாரணமா விட்டுடுங்கன்னு சொல்லுறீங்க… இது எங்க(பெண்கள்) பிரச்சினை.. நாங்க பார்த்துக்குறோம். நீங்க உங்க ட்யூட்டிய பாருங்க“ என்று சொல்லி அந்தப் ‘பொறுக்கியை’ அழைத்துக் கொண்டு காவல்நிலையத்திற்கு சென்றார்.

திருச்சியைச் சேர்ந்த பெண்கள் விடுதலை முன்னணி பிப்ரவரி 14ம் தேதி அனுப்பிய செய்தி

திருச்சி பாலக்கரையில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்வதற்காக தனியார் நகர பேருந்தில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ஒருவர் பயணம் செய்தார். பேருந்தில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் தொங்கி கொண்டும், தள்ளாடிக் கொண்டுமிருந்தது.

பேருந்தின் நடத்துனர் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் இடமே இல்லையென்றாலும் பயணிகளை ஏற்றிக் கொண்டேயிருந்தார். அவ்வப்போது ‘உள்ளே போ, உள்ளே போ’ என சத்தம் போட்டு கொண்டேயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் நடத்துனர் டிக்கெட் போடவே முடியாதபடி இட நெருக்கடி ஏற்ப்பட்டது.

நிலைமையை உணர்ந்த நடத்துனர் பயணிகளை பார்த்து ஆத்திரத்துடன் வா, போ என்றும் பெண்களிடம் “ஏய் சொன்னா கேட்கமாட்டியா போன்னு சொல்றேன் அப்படியே நிக்கிற” என தன் மனைவியை ஆணாதிக்கத்துடன் அதட்டுவது போல அடிக்காத குறையாக உறுமினார்.

பெண் தோழர் “ஏங்க மரியாதை இல்லாம பேசுறீங்க, இவ்வளவு கூட்டத்தில் எப்படி இன்னும் உள்ளே போக முடியும், எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு பேசுறீங்க தனி ஒரு முதலாளி லாபத்துக்காக இவ்வளவு மக்களையும் கொடுமை படுத்துறீங்க” என சத்தம் போட்டு கண்டித்தார்.

உடனே டிரைவர் ஆவேசமாக “ஏய் என்ன திமிறா பேசுற, கண்டக்டர் வயசு என்ன? உன் வயசு என்ன? மரியாதையா பேசு” என சீறினார்.

“ஏங்க மரியாதை இல்லாம எல்லா பெண்களையும் ஒருமையில் பேசுறதும் என்ன நியாயம்? பயணிகள் எல்லாம் இவருக்கு என்ன பொண்டாட்டியா? (மனைவியையே அப்படி பேசுவது தவறு என்பது வேறு)” என கேட்டதும் நக்கலாக

“பொண்டாட்டி இல்ல வப்பாட்டி” என கேலி செய்தான் டிரைவர்.

“மரியாதையா பேசல செருப்பால அடிப்பேன்” என பெண் தோழர் பதில் சொல்ல,

டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு “நீ என்னடி அடிக்கிறது நானும் செருப்பால அடிப்பேன்” என செருப்பை தூக்கி காட்டி போடி, வாடி என்று ரவுடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறான்.

பெண் தோழர் விடாமல் அவனிடம் சண்டை போட்டுள்ளார், உடனே பயணிகள் மத்தியில் இருந்த ஆண்கள் சிலர் “ஏம்மா டிரைவர் தான் பேசுறார்னா நீயும் சரிக்கு சரியா பேசுற, பேசாம அமைதியாய் போம்மா” என பஞ்சாயத்து செய்தனர்.

“நாகரீகமே  இல்லாமல் இவ்வளவு கேவலமா பேசுறான் என்னை அடங்கி போக சொல்றீங்க, இதே உங்க வீட்டு பொம்பளைங்களை இவன் இப்படி பேசுனா வேடிக்கை பார்ப்பீங்களா? என்ன உங்க நியாயம்” என அவர்களிடமும் வாதம் செய்து கொண்டே பெண் தோழர் உறுதியாக நின்றார். இடையில் 3 இடங்களில் டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி ஆபாசமாக திட்டுவதும், செருப்பை தூக்கி அடிக்க வருவதும் நடந்தது.

“யேய் போடி என்ன வேணாலும் செய்டி ஒன்னும் புடுங்க முடியாது. இதோ போலீஸ் ஸ்டேஷன் இங்கதான் இருக்கு போய் என்ன வேணாலும் செய்!” என இறக்கிவிட்டு பேருந்து கிளம்பியது. பேருந்தில் இருந்து இறங்கிய தோழருடன் சில இளம்பெண்களும், இரண்டு இளைஞர்களும் அந்த ஸ்டாப்பில் இறங்கினர்.

நடந்த சம்பவங்களை கவனித்தவர்கள் “இவனுக்கு இதே வேலதாம்மா, தினமும் இவனோட வேற வழி இல்லாமல் இந்த பேச்சை கேட்க வேண்டி உள்ளது. இதுக்கு ஏதாவது முடிவு கட்டணும்” என தைரியமூட்டினர். உடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள் “வாங்க நாங்களும் புகார் செய்றோம்” என தோழருடன் ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தெரிவிக்க சென்றனர்.

சம்பவங்களை கேட்டறிந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப நிதானமாக, “சம்பவம் நடந்தது கே கே நகர் எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வருது. நாங்க அதில் தலையிட முடியாது, இது ஏர்ப்போர்ட் எல்லையில் வராது. நீங்க கே கே  நகர் போலீஸ் ஸ்டேஷன் போங்க” என திசை காட்டினர். சலிப்படையாமல் கே கே நகர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க பெண் தோழர் சென்றார். மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தோழர்கள் உதவியுடன் புகார் அளிக்கப்பட்டது.

சம்மந்தப்பட்ட டிரைவர், நடத்துனர் காவல் நிலையத்திற்குள் வந்து சேர்ந்ததும் “நடத்துனரை பார்த்தா வயதான அப்பாவிபோல தெரியுது, இவர் அப்படி பேச மாட்டாரே!” என அதிகாரிகள், பெண் தோழர் பொய் புகார் அளித்ததை போல கேள்வி கேட்டு துளைத்தனர். தோழரின் உறுதியை பார்த்து பின்வாங்கினார்.

அடுத்து தனியார் பேருந்தின் மேனேஜர், “ஏம்மா நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேக்குறேன் புகார் எல்லாம் வேண்டாம், இன்னும் 15 நாளில் டிரைவருக்கு திருமணம் நடக்க போவுது. அதுவும் உன்னை போல ஒரு பெண் தான், அது வாழ்க்கையை கெடுக்கலாமா?” என உருகினார்.

“இப்படிப்பட்ட காலிப் பயலுக்கு எதுக்கு வக்காலத்து வாங்குறீங்க, உங்க வீட்டு பொண்ணு கிட்ட இப்படி நடத்துகிட்டா நீங்க என்ன செய்வீங்க?” என்றதும் மேனேஜர் உதட்டை பிதுக்கியாவாறே சென்று விட்டார்.

மாலை நேரம் கடந்து இருட்ட தொடங்கியது. தீர விசாரித்ததாக கூறிய காவல்துறை ஆய்வாளர், “வழக்கு போட சொல்லி உள்ளேன், எனக்கு முக்கிய வேலை இருக்கு, சார் பார்த்துக்குவார்” என உதவி ஆய்வாளரை கைகாட்டி விட்டு எஸ்கேப் ஆனார். கடைசி வரை திரும்ப வரவே இல்லை.

அடுத்து உதவி ஆய்வாளர் தீர விசாரித்த வகையில் நடந்த குற்றத்திற்காக ரூ.1,000 அபராதம் கட்ட போதுமான அளவிற்கு வழக்கு என்று தீர்ப்பு எழுதுவது போல பேசினார். “என்ன சார் நியாயம்? நாகரீகமே இல்லாமல் பொது மக்கள் மத்தியில் எந்த வித கூச்சநாச்சம் இல்லாமல் இவ்வளவு கேவலமாக நடந்துள்ளனர். மொய் எழுதுவதை போல அபராதம் போடுவது என்ன நியாயம்?” என சத்தம் போட்டனர்.

“சரி, சரி உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம், 506\1 ஜாமீனில் வரும் செக்க்ஷனில் வழக்கு போடுகிறோம், போதுமா? இப்போது சந்தோஷம் தானே” என பேரம் பேசினார் உதவி ஆய்வாளர்.

கொடுத்த புகாருக்கு நடந்த சம்பவத்துக்கு பொருத்தமான செக்சனில் வழக்கு போடாமல் இழுத்தடித்தது நீடித்தது. இரவு மணி 10 வரை, வந்திருந்த தோழர்கள், பெண்கள், குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் உறுதியோடு காத்திருந்தனர். ‘சரி இவனுங்க சரிப்பட்டு வரமாட்டானுங்க, இரண்டு பொறுக்கிய உள்ள தள்ளனும்னா, நாம 10 பேர் சிறைக்கு போற போராட்டம் நடத்துறதை தவிர வேறு வழி இல்லை’ என முடிவு செய்து, ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்தனர். பத்திரிக்கைகளுக்கு தகவல் தரப்பட்டது.

பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதை போல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் வாயில் மைக்கை திணிக்கும் மீடியா கும்பல் ஒன்றையும் காணோம். இறுதியாக தினத்தந்தி நிருபர் மட்டும் வந்து படம் எடுத்து சென்றார்.

ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

K K நகர் காவல்துறையே,
துணை போகாதே! துணை போகாதே!
பொறுக்கிகளுக்கு துணை போகாதே!

தினமும் இரண்டு கற்பழிப்பு,
கடத்தல், கொலைகள், தாலியறுக்க
வேடிக்கை பார்க்கும் காவல்துறையே!

பட்டப் பகலில் பஸ்ஸிலே
இரண்டு பொறுக்கிகள் துணிச்சலாக
திட்டுறான், மிரட்டுறான்,
பெண்ணை அடிக்க பாயுறான்!
வார்த்தையால கொல்லுறான்
பாதிக்கப்பட்டவர் புகார்கொடுக்க
நேரில் பார்த்த சாட்சியிருக்க
காவல் துறையே தயக்கமென்ன?

பாலியல் குற்றத்துக்கு
ஆண்மை நீக்க தண்டனை என்று
ஜம்பமிடும் ஜெயலலிதாவே!
பாரு, பாரு, யோக்கியதை பாரு,
உன் காவல் துறையின் யோக்கியதை பாரு.

பெண்கள் விடுதலை முன்னணி – வாழ்க!
மக்கள் கலை இலக்கியக் கழகம் – வாழ்க!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – வாழ்க!
மனித உரிமை பாதுகாப்பு மையம் – வாழ்க!

என முழக்கம் எதிரொலிக்க துவங்கியதும், கியூ பிரிவு போலீசு வெளியே வந்தார். “இந்தாம்மா ஏன் சத்தம் போடுறீங்க, FIR போட்டுக்கிட்டு இருக்கோம். சும்மா அமைதியா இருங்க” என்றார்.

பிறகு நமது மனித உரிமை பாதுகாப்பு மையம்  வழக்கறிஞர், மக்கள் கலை இலக்கிய கழகம் செயலாளர், பெண்கள் விடுதலை முன்னணி முன்னணியாளர்களை அழைத்து 294(B),506(1),352,354,பெண்களை தொல்லையில் இருந்து காக்கும் சட்டம் பிரிவு-4 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்ததாக கூறி நகலை நம்மிடம் ஒப்படைத்தனர்.

இதற்கு முன் இரண்டு எப்.ஐ.ஆர் எழுதப்பட்டது. அது என்ன ஆனது கிழித்தெறியப்பட்டதா? அல்லது வேறு நபர்கள் மாட்டினால் அவர்களை வைத்து வழக்கு ஜோடிக்கப்படுமா? என நமக்கு தெரியவில்லை.

காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 11 மணிக்கு முடிவிற்கு வந்தது. இது தான் நம்ம ஜனநாயகமும் சட்டமும் பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பின் லட்சணம்.

ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் அவதூறுகள் !

22
சாதி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியில் தப்படிக்க மறுத்ததற்காகத் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு தாக்கப்பட்டது குறித்து நடந்த விசாரணை (இடது); இருகூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆதப்பகவுண்டன் புதூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாட்டில் புதைக்கும் உரிமை மறுக்கப்படுவதால், தனிச்சுடுகாடு கேட்டு, அம்மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கீழ் அணிதிரண்டு நடத்திய போராட்டம்
சாதிக் கூட்டம்
ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்.

ன்றளவும் தமிழக கிராமங்கள் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கும் நிலையில், இரட்டைக் குவளை முறையும் தனிச்சுடுகாடும் இருந்துவரும் நிலையில், கிராமப் பொதுக் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் சென்று வழிபடுவதற்கு ஆதிக்க சாதியினர் தடைபோட்டு வரும் நிலையில், தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால், ஊர் திருவிழாக்களுக்குத் தப்படிக்க மறுத்தால் தண்டிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் தீண்டாமை ஒழிந்துவிட்டதாகவும், வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ராமதாசு கும்பல் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருகிறது. இது மட்டுமின்றி, ராமதாசும், அவரது புதிய கூட்டாளிகளும் அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற பெயரில் ஊர்ஊராய்ப் போய்க் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து வருகிறார்கள்.

கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி கோவையில் நடந்த அனைத்துச் சமுதாயப் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு ரெட்டியார் சங்கத்தைச் சேர்ந்த காமராஜ், “நம்பியூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து வந்தனர். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். அதோடு வாலைச் சுருட்டிக் கொண்டனர். இனி யாரும் வாலாட்ட அனுமதிக்கக் கூடாது” என வெளிப்படையாகவே ஆலயத் தீண்டாமைக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

அக்கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த பா.ம.க. ராமதாசோ இன்னும் ஒருபடி மேலே போய், “பி.சி.ஆர். சட்டத்தில் புகார் அளிக்கவும், வழக்குத் தொடரவும் இனி ஒருவனுக்கும் தைரியம் வரக்கூடாது. குழந்தைகளிடம் சாதியைப் பற்றிச் சொல்லுங்கள். குறிப்பாக, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித் தெளிவாகச் சொல்லுங்கள்” எனப் பேசி ஆதிக்க சாதித் திமிருக்கும் வன்கொடுமைக்கும் கொம்பு சீவிவிட்டிருக்கிறார்.

இப்பேரவை நடத்திவரும் கூட்டங்களில் போடப்படும் தீர்மானங்களோ ஒருபுறம் பொய்-அவதூறுகளையும் மற்றொருபுறம் வெறுப்பையும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக உமிழ்கின்றன.

‘‘தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிந்துவிட்டது. ஆனாலும், தாழ்த்தப்பட்டோர் மற்ற சமுதாயத்தினர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பொய்ப் புகார்களைக் கொடுத்து வருகின்றனர். அதனால், இச்சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களைப் பரிசீலித்து முடிவுசெய்ய மாவட்ட நீதிபதி தலைமையின் கீழ் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்; இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு உடனடியாகப் பிணை கிடைக்கவும்; பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்றவாறும் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.”

‘‘வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பொய்ப் புகார்களுக்கு அடுத்து, காதல் என்ற பெயரில் நடக்கும் நாடகத் திருமணங்களால்தான் தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் கெட்டு வருகிறது. இந்நாடகத் திருமணங்கள் பணம் பறிக்கும் நோக்கத்தோடு நடந்து வருவதோடு, இதனைச் சில தலித் தலைவர்கள் தூண்டிவிட்டு வருகிறார்கள். எனவே, இந்நாடகத் திருமணங்களைத் தடுக்கும் விதத்தில், பெண்ணின் திருமண வயதை 21 ஆகவும், ஆணின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும்; இந்த வயதிற்கு முன்பு திருமணம் நடத்த வேண்டுமென்றால், அத்திருமணங்களுக்கு மணமக்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகத் திருமணங்கள் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.”

‘‘10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தனித்தொகுதிகள் மாற்றப்பட வேண்டும்” என ராமதாசு தலைமையில் திரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்கள் கோருகிறார்கள்.

*********

சாதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள், திராவிட விடுதலை இயக்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தடியடி நடத்திக் கலைக்கும் போலீசு

தீண்டாமையை வெளிப்படையாக ஆதரித்துப் பேசி வரும் இந்தப் பிற்போக்குக் கும்பலை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவையைத் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்து விடவில்லை. இதிலிருந்தே வன்கொடுமைச் சட்டம் எந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும், அந்தச் சட்டம் எவ்வளவு மொன்னையானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

வன்கொடுமைச் சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதைக் காட்டியே இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வாதிடுகிறது, ராமதாசு கும்பல். மேலவளவு முருகேசன் கொலை வழக்கிலும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோரின் வாயில் மலத்தைத் திணித்த வழக்கிலும்கூட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த குற்றவாளிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல், சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ்தான் தண்டிக்கப்பட்டனர். இவ்வழக்குகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வராது என்றுதான் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. இந்தத் தீர்ப்புகளைக் காட்டி இவ்வழக்குகளில் வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வாதிடுவது எத்துணை மோசடியானதோ, உண்மைக்குப் புறம்பானதோ, அதைப் போன்றதுதான் ராமதாசின் வாதமாகும்.

சாதாரண மக்கள் தரும் எந்தவொரு புகாரையும் இழுத்தடிக்காமல் போலீசுக்காரர்கள் பதிவு செய்து விடுவதில்லை என்பது ஊரறிந்த உண்மை. அதிலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் போலீசு நிலையங்களில் நடத்தப்படுவது பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கச் சென்றாலோ, அப்புகாரை போலீசு தனது சாதிப் பற்று மற்றும் ஆதிக்க சக்திகளோடு அதற்குள்ள உறவு ஆகியவற்றின் காரணமாக நிராகரித்துவிடுவதில்தான் அக்கறை காட்டுகிறது. போலீசின் இந்த அலட்சியத்தையும் தாண்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், அதற்கு வெளியிலிருந்து ஓர் அமைப்பின் உதவியைத் தாழ்த்தப்பட்டோர் நாடுவது அவசியமாகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக வரும் இயக்கங்களை, குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளைக் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ஆதிக்க சாதிகள் பழி போடுகின்றன.

இச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் கொடுக்கும் புகார்கள் போலீசு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதனைச் சாதாரண கீழ் நிலையில் உள்ள போலீசு அதிகாரிகள் விசாரிக்க முடியாது. போலீசு துணைக் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அந்த அதிகாரி இது பொய்ப்புகார் என அறிக்கை அளித்தால், நீதிமன்றம் உடனடியாகவே அப்புகாரைத் தள்ளுபடி செய்துவிடும். இது, ஆதிக்க சாதியினர் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும்.

தேசியக் குற்றவியல் ஆவணத் துறை வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2007 முதல் 2010-ஆம் ஆண்டு முடிய இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடந்துள்ள வன்முறைக் குற்றங்களில் 67 சதவீதமும், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைத் தாக்குதல்களில் 81 சதவீதமும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. உண்மைப் புகாரைப் பதிவு செய்வதே குதிரைக் கொம்பாக இருக்கும்பொழுது, பொய்ப் புகாரை போலீசு பதிவு செய்கிறது என்றால், போலீசு யாருடைய ஆதாயத்துக்காகவோ தாழ்த்தப்பட்டோரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.

சாதி பலியானவர்கள்
வன்னிய சாதிப்பெண்ணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (இடது); வேறு சாதியைச் சேர்ந்த தனது வகுப்புத் தோழனை காதலித்த விவகாரம் வீட்டிற்குத் தெரிய வந்ததையடுத்து, ‘மர்மமான’ முறையில் தீயில் கருகி இறந்து போன கவுண்டர் சாதியைச் சேர்ந்த நந்தினி.

ஏழு கடல் – ஏழு மலைகளைத் தாண்டிப் பதிவு செய்யப்படும் வழக்குகளிலும்கூட நீதி கிடைத்துவிடுவதில்லை. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் 2010-ஆம் ஆண்டு முடிய, கடந்த 21 ஆண்டுகளில் நாடெங்கும் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் (1,26,593), நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,00,098. தீர்ப்பு அளிக்கப்பட்ட 25,573 வழக்குகளில் 8,628 வழக்குகளில் மட்டும்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 2010-ஆம் ஆண்டு முடிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 3,635. இதில் 30 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன; 2,839 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. தீர்ப்பு அளிக்கப்பட்ட 766 வழக்குகளில் 189 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; 577 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (ஆதாரம்: மைய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத்துக்கான அமைச்சகம் வன்கொடுமைச் சட்டம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை.)

‘‘இந்தியாவெங்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுகின்றனர்; ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோர் கொல்லப்படுகின்றனர்; இரண்டு தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் எரிக்கப்படுகின்றன” என்ற புள்ளிவிவரத்தோடு, கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய தீண்டாமைக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தாலே, இச்சட்டம் தாழ்த்தப்பட்டோருக்கு எவ்விதப் பாதுகாப்பையும் நீதியையும் வழங்கிவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றளவும் கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக்குடியிருப்பு, தனிக்குழாய், தனிக்கிணறு, தனிச்சுடுகாடு போன்றவை இருப்பதை இச்சட்டம் குற்றமாகப் பார்க்கவில்லை. தீண்டாமையின் இந்த வடிவங்களை அரசும் சட்டமும்கூட ஏதோ சம்பிரதாயமான நடைமுறையாக, காலப்போக்கில்தான் இவற்றை மாற்ற முடியும் என்பது போலவே கருதுகின்றன. இப்படிபட்ட நிலையில் இன்று தீண்டாமையோ புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாகச் சோன்னால், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினால், ஆதிக்க சாதியினரோ தங்களுக்கென தனிக் கோவிலைக் கட்டிக்கொண்டு, அதில் தாழ்த்தப்பட்டோர் நுழைய அனுமதியில்லை என வக்கிரமாக வாதிடுகின்றனர். முன்பு தாழ்த்தப்பட்டோர் செருப்பு அணியத் தடை விதித்த ஆதிக்க சாதியினர், இந்த நவீன காலத்திற்கு ஏற்ப அவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டத் தடை விதிக்கின்றனர். இந்திய அரசின் வங்கிகள் பல்வேறு காரணங்களைச் சொல்லி தாழ்த்தப்பட்டோருக்குக் கடன் தர மறுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாக ப.சிதம்பரம் புலம்பியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது போலீசும் அரசு துருப்புகளும் நடத்தும் தாக்குதல்கள் – பரமக்குடி துப்பாக்கிச் சூடு, கொடியன்குளம் தாக்குதல், தாமிரபரணி படுகொலை, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் பழங்குடியின மக்கள் எல்லைப் பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்படுவது போன்றவை இச்சட்டத்தின் கீழ் மட்டுமல்ல, கிரிமினல் சட்டத்தின் கீழும் வழக்காகப் பதிவு செய்யப்படுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் ஆதிக்க சாதிவெறியர்களுக்குச் சாதகமாக இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமெனக் கோருவது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இச்சட்டம் வழங்கியிருக்கும் பெயரளவிலான பாதுகாப்பையும் பறித்தெடுப்பது தவிர வேறல்ல. இப்படியொரு கோரிக்கையை முன்வைத்துவிட்டு, “நான் இச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டுமெனக் கோரவில்லை” என எகத்தாளமாகப் பகடி செய்கிறார், ராமதாசு.

***********

சாதி புள்ளிவிபரங்கள்சாதி மாறித் திருமணங்கள் செய்வதை அனுமதிக்கவே கூடாது என சாதித் தூமைவாதம் பேசி வரும் கொங்கு வேளாளர் பேரவையைச் சேர்ந்த பொங்கலூர் மணிகண்டன், “கடந்த ஓர் ஆண்டில் மட்டும் காதல் திருமணங்களால் 963 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 716 பேர் வாழாவெட்டியாக உள்ளனர். ஏழு ஆண்டுகளில் 300 கோடி ரூபா பணத்தைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நமது சமூகத்தினரிடம் இருந்து கறந்துள்ளனர்” என்றொரு புள்ளிவிவரக் குண்டைத் தூக்கிப் போட்டு வருகிறார் (ஜூ.வி.,30.12.12, பக்.28) அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய தனது கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில், “நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 955 காதல் திருமணங்களில் 712 தோல்வியில் முடிந்துவிட்டதாக’’க் கூறுகிறது. ராமதாசு-காடுவெட்டி குரு கும்பல், நாடகக் காதல் திருமணங்களால் 2,000 வன்னியப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பட்டியல் தங்களிடம் உள்ளதாகக் கூறித் திரிகின்றனர்.

இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா, போலீசில் வழக்குப் பதிவாகியிருக்கிறதா எனக் கேட்டால், இதெல்லாம் பெண் வீட்டாரின் மானப் பிரச்சினை, எங்களுக்கு மட்டும்தான் தெரியும் எனப் பதில் அளித்து, செண்டிமென்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகமெங்கும் நடந்துள்ள நாடகக் காதல் திருமணங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரும் ராமதாசு, அந்த விசாரணைக்கு இணையாக, ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தங்கள் சாதிப் பெருமையைக் கட்டிக் காப்பதற்காக நடத்தியிருக்கும் கௌரவக் கொலைகள் பற்றிய விசாரணை நடத்தக் கோருவாரா?

அப்படியொரு விசாரணை நியாயமாக நடந்தால், மேல்சாதிப் பெண்களைக் காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றியதாகக் கூறப்படும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையைவிட, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தலையும் மீறி, அச்சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; தாழ்த்தப்பட்ட இளைஞர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கையைவிட, தனது குடும்பத்தை எதிர்த்து தாழ்த்தப்பட்ட இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதால், தனது பெற்றோர்களால், உறவினர்களால், சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட மேல்சாதிப் பெண்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் என்ற உண்மைகள் அம்பலத்துக்கு வரும்.

‘‘வன்னியன் வீட்டுப் பெண்களை வன்னியன்தான் காப்பாற்ற வேண்டும். கொங்கு வேளாளார் வீட்டுப் பெண்களை கொங்கு வேளாளர்கள்தான் காப்பாற்ற வேண்டும். முதலியார் வீட்டுப் பெண்களை முதலியார்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என வன்னிய சாதிப் பெருமை பேசும் இணையதளமொன்று சூளுரைக்கிறது. ஆனால், வன்னிய சாதிப் பெண்களுக்கு வன்னியனாலும், கவுண்டர் சாதிப் பெண்களுக்கு கவுண்டனாலும்தான் ஆபத்து என்பதை இக்கௌரவக் கொலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

************

சாதி மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியில் தப்படிக்க மறுத்ததற்காகத் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு தாக்கப்பட்டது குறித்து நடந்த விசாரணை (இடது); இருகூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆதப்பகவுண்டன் புதூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொது சுடுகாட்டில் புதைக்கும் உரிமை மறுக்கப்படுவதால், தனிச்சுடுகாடு கேட்டு, அம்மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கீழ் அணிதிரண்டு நடத்திய போராட்டம்

தருமபுரியில் வன்னிய சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு மீது நடத்திய தாக்குதலைத் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் கண்டித்துள்ளன என்றாலும், தற்பொழுது ராமதாசு அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்ற போர்வையில் ஆதிக்க சாதிவெறிக்குத் தூபம் போட்டு வருவதையும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பி வருவதையும் எத்தனை கட்சிகள் கண்டிக்கவும், அதற்கு எதிராகப் போராடவும் முன்வந்துள்ளன என்பதுதான் இப்பிரச்சினையில் கவனத்தைக் குவிக்க வேண்டிய விடயம்.

இந்த ஆதிக்க சாதிக் கும்பல் கட்டியிருக்கும் பேரவையைத் தடை செய்யாமல், தமிழகத்தின் மூன்றே மாவட்டங்களில் மட்டும் (மதுரை, இராமநாதபுரம், கடலூர்) ராமதாசு நுழைவதற்குத் தடை விதித்து நாடகமாடுகிறார், ஜெயா. இத்தடையை கருணாநிதி எதிர்த்தவுடன், கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதிக்கப்பட்டத் தடை அ.தி.மு.க. அரசால் உடனடியாக நீக்கப்படுகிறது. இப்படியாக அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே ஆதிக்க சாதியினரை அரவணைத்துக் கொள்வதில் ஒரு போட்டாபோட்டி நடந்து வருகிறது.

மற்ற திராவிடக் கட்சிகளும், தமிழின அமைப்புகளும் காரியத்தனமாக மௌனம் சாதிக்கின்றன. சி.பி.எம்., ராமதாசு மீது விதிக்கப்பட்ட தடையை ஆதரிப்பதாக அறிவித்ததோடு முடங்கிக் கொண்டது. காதலைக் கொண்டாடும் மாநாடு நடத்தியதைத் தாண்டி, ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் தெம்பு சி.பி.எம்-க்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பிற தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் மற்றும் பெரியார் திராவிடர் கழகம், ம.க.இ.க., ஆகிய அமைப்புகளும்தான் ராமதாசு தலைமையில் அணிதிரண்டுள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் கூட்டம் நடைபெறும் இடங்களில், அதனை எதிர்த்துக் களத்தில் இறங்கிப் போராடி வருகின்றன.

தேசியக் கட்சியானாலும் சரி, திராவிடக் கட்சியானாலும் சரி, அக்கட்சிகள் அனைத்தும் பல காலமாகவே ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களைத்தான் கட்சிப் பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்து வருகின்றன. இப்பிரமுகர்களில் பலர் நிலவுடமை ஆதிக்க சக்திகள் என்பது ஒருபுறமிருக்க, தற்பொழுது தனியார்மயத்தையும் தங்கள் பதவிகளையும் பயன்படுத்திக் கொண்டு, ரியல் எஸ்டேட், மணல் காண்டிராக்டு, கல்வி வியாபாரம் எனப் புதுவிதமான தரகு முதலாளிகளாகவும் வளர்ந்துவிட்டனர். ஓட்டுக்கட்சிகளில் அண்ணன்களாக, தளபதிகளாக வலம் வரும் இப்பிரமுகர்களுக்கு ஓட்டுப் பொறுக்குவதற்கும், தங்களது சுய இலாபத்திற்கும் சாதியும், சாதி அரசியலும் அவசியமாக உள்ளது. அதனாலேயே இந்தத் தளபதிகளும் சாதி சங்கங்களும் இயற்கையான கூட்டாளியாகப் பொது அரங்கில் நடமாடி வருகின்றனர். இந்தத் தளபதிகள்தான் ஓட்டுக்கட்சிகளின் பணப்பெட்டிகளாக, அடியாட்களைத் திரட்டிக் கொடுப்பவர்களாக, சுருக்கமாகச் சோன்னால் கட்சியின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்களாக இருப்பதால், எந்தவொரு ஓட்டுக்கட்சியும் தமிழகத்தில் தற்பொழுது தூண்டிவிடப்படும் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக நிற்காது; நிற்கவும் முடியாது.

எனினும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ராமதாசு கும்பலை ஆதரித்து நிற்கவில்லை. வன்னிய சாதி மக்கள் கணிசமாக வாழும் கடலூர் மாவட்டத்தில் ராமதாசு நுழைவதற்கு விதித்த தடையை எதிர்த்து, அம்மாவட்டம் கொதித்துப் போவிடவில்லை என்பதே இதற்கு சாட்சி. இது, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடையே சாதி கடந்த ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கும், அவர்கள் மத்தியில் சாதிகளைப் புறக்கணிக்கக்கூடிய ஜனநாயகப் போராட்டங்களைக் கட்டமைப்பதற்குமான வாய்ப்புகள் அருகிப் போய்விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

– குப்பன்

சரணாகதிதான் திருமாவின் எதிர்வினையா?

வீராணம் ஏரி நீரை விவசாயத்துக்குத் திறந்துவிடக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த ஜனவரி மாதம் சிதம்பரம் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், “இதுவரை நடந்ததை நாங்கள் மன்னித்துவிட்டோம்; மறந்துவிட்டோம். வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறக்கும் பிரச்சினைக்காக பா.ம.க. போராட முன்வந்தால், அவர்களுடன் இணைந்து விடுதைச் சிறுத்தைகள் கட்சியும் போராடும்” எனப் பேசியிருக்கிறார், தொல்.திருமாவளவன்.எதை மறப்பது? யார், யாரை மன்னிப்பது? விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ராமதாசு குற்றஞ்சுமத்தி வருவதை மன்னிப்பது, மறப்பது என்றால், அதற்கு திருமாவிற்கு முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு.

ஆனால், தருமபுரி தாக்குதலை மன்னிப்பது என்றால், அந்த உரிமையை திருமாவிற்குக் கொடுத்தது யார்? தருமபுரியில் நடந்த தாக்குதல் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கக்கூடியதா? மன்னிக்கக் கூடியதா?

தருமபுரியில் தமது கட்சியினரும் சாதியினரும் நடத்திய தாக்குதலுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காமல், ஊர்ஊராகக் கூட்டம் போட்டுத் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பிச் சாதிவெறியைத் தூண்டி வரும் ராமதாசை மன்னிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகாதா, துரோகமாகாதா? ராமதாசு கூட்டம் போடும் இடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அணிகள் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா?

“தருமபுரி தாக்குதலையொட்டி பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும் இன்ன பிற ஜனநாயக சக்திகளும் ஆற்றவிருக்கும் எதிர்வினையென்ன?” என்று மற்றவர்களையெல்லாம் கூண்டிலேற்றிக் கேள்வி எழுப்பினார் திருமா. அவருடைய எதிர்வினை “மறப்போம், மன்னிப்போம்” என்று தெளிவு படுத்திவிட்டார்.

திருமாவின் இந்தக் கூற்றுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினை என்ன?

______________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி ?

6

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்:  மரத்துப் போனதா சமூகத்தின் மனசாட்சி?

  • தேசிய குற்றப்பதிவுத் துறையின் புள்ளிவிவரப்படி, கடந்த 2011ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் பெண்களுக்கு எதிராக 2,28,650 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் மட்டும் 24,260.
  • 1971-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2011 வரையிலான நாற்பதாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் 873 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வல்லுறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதவீதத்தினர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.
  • இந்தியாவின் 53 பெருநகரங்களை ஒப்பிடும் போது தலைநகரான டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிக அளவு குற்றங்கள் நடக்கின்றன.
  • ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும் நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4-வது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் தாம்சன்-ராய்டர் செய்தி நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது.
  • தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது.
  • தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செய்யப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படாமல் உள்ளன. இவற்றில் 834 பாலியல் வல்லுறவுக் குற்றங்களாகும்.
  • தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.
  • இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒவ்வொரு 7-வது நிமிடத்திலும் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சிணை சாவு நடக்கிறது. பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக பதிவாகியுள்ள 93,000 வழக்குகள் இன்னமும் விசாரணைக்கே வரவில்லை.

_____________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

காதலர் தினம் சிறப்புப் பரிசு : விநோதினியின் மரணம் !

17
வினோதினி
விநோதினி
அமில  வீச்சினால் உயிரிழந்த விநோதினி

காதலர் தினத்திற்க்காக ரோஜாப்பூ முதல் பரிசுப் பொருள் அங்காடி வரை காதலை பரிமாறிக் கொள்வதற்காக எண்ணிறந்த பொருட்கள் கடைவீதியினை நிரப்பியிருக்கின்றன. ஒற்றைத் தண்டுடன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்துடன் வரும் பெங்களூர் ரோஜாதான் காதலர்களின் ஏகோபித்த வரவேற்பாம். அமில வீச்சால் கண்ணை இழந்த விநோதினியை பெண் என்பதற்காக ஒரு மலருடன் ஒப்பிட்டு கவிஞர்கள் யாரேனும் கவிதைகள் எழுதியிருப்பார்களா தெரியவில்லை! எனினும் அந்த மலர் நேற்றோடு கருகிப் போனது.

அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ அடக்கியாள வேண்டியவள்தான் ஒரு பெண் என்பதை எண்ணிறந்த கதைகளின் மூலம் சொல்லிக் கொடுக்கும் திரைப்படங்கள் ஒருபுறம். அந்த திரைப்படங்களை வைத்தும், அந்தக் கதைகளின் மூலமாகவும் சமூகப் பிரச்சினைகளை செய்திகளாக்கித் தரும் பத்திரிகைள் அனைத்தும் ஒரே மாதிரியான சோகத்தில் விநோதினியின் மரணத்தை அறிவிக்கின்றன, கண்டிக்கவும் செய்கின்றன. சஹானா எனும் கேரளப் பெண்ணை ஊடகத் திமிரால் வன்புணர்ச்சி செய்த தினமலரும் கூட வெட்கமில்லாமல் விநோதினிக்காக வருந்துகிறது. அதை உண்மையென நம்பும் அப்பாவிகளும் வாசகர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

டெல்லி மாணவியின் மரணத்திற்கு பிறகு, வர்மா கமிஷன் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் அவசரச்சட்டத்திற்கு பிறகு அமிலத்தை வீசிய சுரேஷை தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை எண்ணிறந்த முறையில் கோரப்படுகின்றது. விநோதியினை அழித்த சுரேஷை தண்டிப்பது கடினமல்ல. ஆனால் சுரேஷ் எனும் ஆணாதிக்க பன்றியினை வடிவமைத்த ஊடகக் குற்றவாளிகள் இங்கே நீதிபதிகளாக தீர்ப்பளிக்கும் கொடுமையினை என்ன செய்ய?

காதலர் தினக் கொண்டாட்டங்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நாட்டில்தான் விநோதினி எனும் 23 வயது பெண் ‘காதலின்’ பெயரால் கொல்லப்பட்டிருக்கிறாள், அதுவும் கொடூரமான சித்திரவதைக்குப் பிறகு. பரிசுகள், வாழ்த்துக்கள், சந்திப்புகள் என்பதாக காதலை நுகர்வு கலாச்சார விற்பனைக்குரிய சரக்காக மாற்றி விட்டு அதன் விளம்பரங்களில் கல்லா கட்டும் ஊடகங்கள் இங்கே காதல் என்ற பெயரில் கற்றுத் தருவது என்ன? பெண்ணடிமைத்தனத்தை போற்றும் விதமாக அழகு, உடைகள், அணிகலன்கள், பரிசுகள், வார்த்தைகள் எதற்கும் குறைவில்லை. காதலை எப்படி கவர்ச்சியாக தெரிவிப்பது, பரிமாறிக் கொள்வது என்பதை நீயா நானா அலசுகிறது.

ஆனால் சாதி, மத, ஆணாதிக்க அடக்குமுறைகளுக்குள் சிக்கியிருக்கும் காதலை எப்படி வெற்றி பெறவைப்பது என்பதை ஊடகங்களோ இல்லை திரையுலகமோ பேசத் துணியாது. கலப்புத் திருமணம் குறித்து விவாதம் நடத்தும் விஜய் டி.வி, எந்த சாதியையும் குறிப்பிட்டு பேச மறுக்கிறது. யாராவது தப்பித் தவறி சாதியைக் கூறினால் மியூட் செய்து மறைக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர் கொங்கு வேளாள முன்னேற்றக் கழகத்தின் ஈசுவரன்.

கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது  போட்டியாளரான சிம்புவோ அனைவரும் தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் மானை வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர். அப்படித்தான் அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு. ஆனால் சுரேஷ் மட்டும்தான் குற்றவாளி என்றால் என்ன செய்வது?

விநோதினியின் மரணத்திற்கு ‘அய்யா’ ராமதாசும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். காதலர்களை வெட்டுவேன் என்று சபதம் புரிந்திருக்கும் காடுவெட்டி குருவும் கூட கண்டித்திருக்கக் கூடும். ஒரு ஆணும் பெண்ணும் சாதி மாறி காதலித்தால் அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து கொண்டு ஒரு ஆண் பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணை காதலித்தால் அய்யாவின் அடிப்பொடிகள் வெட்டுவார்கள். மாறாக அந்தக் காதலை குறிப்பிட்ட பெண் மறுத்தால் சுரேஷ் போன்ற ஆண்கள் கொலை செய்வார்கள். கவனியுங்கள் இங்கே காதலை ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அந்த உரிமையினை அமிலத்தாலும், அரிவாளாலும் மறுக்கும் சுரேசுக்கும் ராமதாசுக்கும் என்ன வேறுபாடு?

காதலர் தினக் கொண்டாட்டங்களை கடுமையாக எதிர்ப்பதில் சங்க பரிவாரங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இசுலாமிய மதவாதிகளும் போட்டி போடுகின்றனர். ஆபாசம், வெளிநாட்டுக் கலாச்சாரம், என்று தமது ‘நியாயத்தை’ பேசுவதில் இருவரும் ஒன்றுபடுகின்றனர். அமெரிக்காவைக் காதலிக்கும் சவுதியையும், பாரத மாதாவை அமெரிக்காகாரனுக்கு நேர்ந்து விட்டதையும் ஆதரிக்கக் கூடிய இந்த மதவாதிகள்தான் சாமானியர்களின் காதலை சகித்துக் கொள்ள முடியாது என்கின்றனர். காதல் எனும் குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகூட தமது மதங்களில் கிடையாது என்று ஆணையிடும் இவர்கள்தான் இந்து மற்றும் முசுலீம் மக்களின் பிரதிநிதிகள் என்றால் நமது மக்கள் எத்தனை பரிதாபத்திற்குரியவர்கள்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ஒரு தோழரின் நண்பர் தேவர் சாதியைச் சார்ந்தவர். முதலியார் சாதியைச் சார்ந்த பெண்ணை காதலிக்கிறார். இருவரும் பசையான சம்பளம் வாங்குபவர்கள். ஐந்தாண்டு காதலுக்கு பிறகும் பெண் தரப்பில் ‘மேல்’ சாதி என்பதால் குடும்பத்தினர் மறுக்கிறார்கள். அந்த மறுப்பைத் தாண்டி போராடி வாழ்வதற்கு பெண் தயாராக இல்லை. அந்த இல்லையை இன்னும் பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி நியாயப்படுத்தி விட்டு அந்த ஆண் சொந்த சாதியில் வீட்டார் பார்த்த பெண்ணை மணந்து கொள்கிறார். எனில் இந்தக் கதையில் ‘காதல்’ என்பது என்ன என்று கேட்டால் நமது தோழரிடம் பதில் இல்லை.

மனித குலத்தின் மிகவும் அன்னியோன்னியமான உறவு என்று போற்றப்படும் காதலே இத்தனை தரமிழந்து காணப்படுகிறது என்றால் ஏனைய உறவுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. ஜனநாயகம், ஆண் – பெண் சமத்துவம், சாதி மத பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பது போன்றைவையெல்லாம் நமது இந்தியக் காதலில் பெருமளவு கிடையாது. இருப்பதெல்லாம் நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் சரக்குக் காதல்தான். இத்தகைய அபாயரகமான சமூக சூழலில்தான் சுரேஷ் போன்ற வெளிப்படையாகத் தெரியும் கொலைகாரர்களிடம் விநோதினி போன்ற பெண்கள் உயிரை இழக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக போராட்டங்கள் என்ன வகை தரத்தினைக் கொண்டிருக்கிறதோ அதுதான் காதலிலும் பிரதிபலிக்கும். சமூக அக்கறையில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் காதலை எந்த அளவுக்கு சமூக மதிப்பீடுகளின் பால் கொண்டு வருகிறோமோ அந்த அளவு இங்கே கண்ணியமான காதலை உருவாக்க முடியும். அது வரையிலும் விநோதினிகள் காதல் பலிகளாக தமது உயிர்களை துறக்க வேண்டியிருப்பது வெட்கக் கேடு. சமூக அக்கறையுள்ளவர்கள் சிந்திக்கட்டும்.

ரஜத் குப்தா : திறம் வேறல்ல ! அறம் வேறல்ல !!

17
ரஜத் குப்தா
ரஜத் குப்தா

ப்படி ஒரு நல்ல மனிதரை நான் நீதிமன்றத்தில் எதிர்கொண்டதேயில்லை” குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பை எதிர்நோக்கி நிற்கும் ஒருவரைப் பார்த்து நீதிபதி சொன்ன வார்த்தைகள் இவை.

“இவர் குற்றம் செய்திருப்பாரென்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. ஆனாலும் சாட்சியங்களின் வலுவால் குற்றவாளி என்று உறுதி செய்கிறோம்” – நீதிமன்றத்தின் ஜூரிகள் உதிர்த்த வார்த்தைகள் இவை. அவர்களில் சிலருக்கு சொல்லும்போதே கண்களில் நீர் கோர்த்து விட்டது.

குற்றவாளியின் சார்பில் ஆஜராகி வழக்காடிய வழக்கறிஞரோ, “இது காப்பிய நாயகர்களின் வீழ்ச்சிக்கு நிகரானது” என்கிறார். மேலும், “இவரைச் சிறைக்கு அனுப்பாமல் ருவாண்டாவுக்கு சமூக சேவை செய்ய அனுப்புங்கள்” என்றும் மன்றாடுகிறார்.

இந்தக் காட்சிகள் நடப்பது அமெரிக்காவில் என்பதால், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனில் இருந்து மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வரை குற்றவாளிக்குக் கருணை காட்ட வேண்டுமென நீதிமன்றத்துக்கு வேண்டுகொள் விடுவிக்கின்றனர்.

சரி, ‘குற்றவாளியின்’ கருத்து என்ன? அவர் இன்னமும் தான் செய்த காரியம் தவறானது என ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், “நடந்த விவகாரத்தில் என் நண்பர்களுக்கும், நெருக்கமான அமைப்புகளுக்கும், குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நினைத்து வருந்துகிறேன்” என்று மட்டும் தெரிவிக்கிறார்.

கேட்பதற்கு தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கரின் திரைக்கதை போல் இருக்கிறதா? இல்லை நண்பர்களே, இவையனைத்தும் உண்மையில் நடந்தேறிய காட்சிகள் தான். நடந்தது இங்கேயல்ல – அமெரிக்காவில். கதையில் வரும் ‘குற்றவாளி’ கோடீஸ்வர அமெரிக்க இந்தியர் ரஜத் குப்தா.

ரஜத்தின் குற்றம் என்னவென்கிற விவரங்களுக்குள் செல்லும் முன், அவரைப் பற்றியும் அவரது வளர்ச்சி பற்றியும் முதலில் பார்த்து விடுவது அவசியம். ஏனெனில், அவருடைய வளர்ச்சி என்பதும் அவர் செய்ததாகச் சொல்லப்படும் ‘குற்றம்’ எனப்படுவதும் பிரித்துப் பார்க்கவியலாதபடிக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.

ரஜத் குப்தா தில்லி ஐ.ஐ.டியில் பொறியியலும், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மையும் பயின்றவர். 1973ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாக ஆலோசனை (Management Consulting) நிறுவனமான மெக்கின்சியில் சேர்கிறார். 1994ம் ஆண்டு அதன் நிர்வாக இயக்குநராக உயரும் ரஜத் குப்தா, 2003ம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் தொடர்கிறார். 2003க்குப் பிறகு மூத்த ஆலோசகராக மெக்கின்சியுடனான தொடர்பை பராமரித்துக் கொள்கிறார். பணி ஓய்வு பெற்ற பின்பு, 2006 முதல் 2010 வரை நிதி மூலதன சூதாடியான கோல்ட்மேன் சாக்ஸிலும், 2007 முதல் 2011 வரை நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிராக்டர் – கேம்பிளிலும், 2008 முதல் 2011 வரை விமான சேவை நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸிலும் இயக்குநர் குழுவில் பணியாற்றுகிறார்.

ரஜத் குப்தா பணியாற்றிய நிறுவனங்கள் சாமானியப்பட்டவை அல்ல. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள், தேசங்கடந்த தொழிற்கழங்கங்கள் அவை. பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கே நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் தான் மெக்கின்சி. அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் என்ரானில் இருந்து பெப்சி, வோடஃபோன் வரை உலகளவில் பிரபலமாக அறியப்பட்ட பல்வேறு பன்னாட்டு கம்பெனிகளின் செல்வாக்கான பதவிகளில் அமர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி, மெக்கின்சி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அமெரிக்காவின் நிதித்துறை, கருவூலத் துறை மற்றும் மத்திய ஃபெடரல் வங்கியின் தலைமைப் பதவிகளையும் அடைந்துள்ளனர்.

இவர்கள் தான் வால்வீதியின் அசைவுகளையும், உலக முதலாளித்துவ அமைப்பின் இயக்கத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய முடிவுகளை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள். பல்வேறு நாடுகள் எடுக்க வேண்டிய முக்கியமான பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பதும், அது தாமதமாகும் போது அந்நாடுகளைத் தர வரிசைப் பட்டியலில் கீழிறக்கி அச்சுறுத்துவதும் இந்நிறுவனங்கள் தாம். இன்றைய தேதியின் இந்தப் புவிப்பரப்பையே ஆட்டிப் படைக்கும் நிதிமூலதனத்தின் கருவறை வால்வீதி என்றால், அங்கே பூசாரிகளாய் நிற்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நிறுவனங்களில் இவையும் உண்டு.

ஒரு பக்கம் பெரும் கார்ப்பரேட்டுகளின் உயரிய பதவிகளை அனுபவித்த அதே நேரத்தில், பில் கேட்ஸூம், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனும் நடத்தும் சில அறக்கட்டளைகளிலும் ரஜத் குப்தா பதவி வகிக்கிறார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்படுத்திய உலக ஆலோசகர் குழுவிலும் 2012 வரை உறுப்பினராக இருக்கிறார். மேலும் மெக்கின்சியில் வெலை பார்த்த இவரது சீடரான அனில் குமாருடன் சேர்ந்து இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்ற பன்னாட்டு மேலாண்மை கல்லூரியை ஹைதராபாத்தில் ஆரம்பித்திருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் ரஜத் குப்தா இந்த முதலாளித்துவ பரமபதத்தில் அடைந்த இடம், அவருக்குக் கீழே உள்ள மற்ற அனைவரும் தமது கற்பனையிலும், கனவிலும் அடைய ஏங்கும் இடமாகும். அவர் உலக முதலாளித்துவத்தின் மணிமகுடத்தின் ஒளிவீசும் வைரக்கற்களில் ஒருவராக இருந்தார். இந்தப் பின்னணியில் வைத்துத் தான் ரஜத் குப்தா மேல் சுமத்தப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட குற்றங்களைப் பார்க்க வேண்டும்.

ரஜத் குப்தா செய்ததாகச் சொல்லப்படும் குற்றம் – உள்வட்ட வியாபார மோசடி (insider trading). 2008 காலகட்டத்தில் அமெரிக்க நிதிமூலதன வங்கிகள் ஒவ்வொன்றாக பொருளாதார நெருக்கடியெனும் புதைகுழியில் மூழ்கிக் கொண்டிருந்தன. அப்போது கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி கிட்டத்தட்ட முற்றிலுமாக நொறுங்கிப் போகும் நிலையிலிருந்த சமயத்தில்தான் வாரன் பப்பெட் என்ற உலக கோடீசுவரன் அதில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய முன்வந்திருந்தார்.

அந்த சமயத்தில் கோல்ட்மேனின் சேர்மன் போர்டில் அங்கம் வகித்த ரஜத், இந்த முக்கியமான உள்தகவலை ராஜரத்தினம் என்பவருக்கு கடத்துகிறார். அதே நாளில் பங்குவர்த்தகம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நிலையில் ரஜத் அளித்த உள்தகவல்களின் அடிப்படையில் 43 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ராஜரத்தினம், அதன் மூலம் 1 மில்லியன் டாலர்கள் லாபமாக சம்பாதிக்கிறார்.

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் ப்ராக்டர் – கேம்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்த ரஜத், அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதன் விவரங்களை ராஜரத்தினத்துக்கு அளித்துள்ளார். மேலும், அந்நிறுவனம் கையகப்படுத்த உத்தேசித்துள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் ராஜரத்தினத்திற்கு அளித்து அந்நிறுவனங்களின் பங்குகளிலோ ப்ராக்டர் – கேம்பிள் நிறுவன பங்குகளிலோ முதலீடு செய்து லாபம் பெற ராஜரத்தினத்துக்கு உதவி புரிந்துள்ளார்.

மேலும், ரஜத் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்த பிற நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்த ஒவ்வொரு சமயமும் அதில் விவாதிக்கப்பட்டவைகள் பற்றி ராஜரத்தினத்துக்கு தொலைபேசியில் தகவல் அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

’பங்குச்சந்தை சூதாட்டம் நியாயமாக செயல்பட வேண்டுமானால் எந்த ஒரு தனிநபரும் பொதுவில் அனைவருக்கும் கிடைக்காத நிறுவனங்களைப் பற்றிய உள் தகவல்களை வைத்துக்கொண்டு பங்குகளை வாங்கி விற்கக் கூடாது’ என்று ஒரு விதி உள்ளது. குறிப்பாக, பில்கேட்ஸ், டாடா, அம்பானி போன்ற முதலாளிகள் மற்றும் அந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு, தமது கம்பெனி லாபமாக நடக்கிறதா, புதிய தொழில்கள் மூலம் எக்கச்சக்கமாக லாபம் ஈட்டும் வாய்ப்பு இருக்கிறதா என்பன போன்ற விவரங்கள் தெரிந்திருக்கும். இந்த விவரங்கள் தெரிந்ததன் அடிப்படையில் அவர்கள் தமது சொந்த கம்பெனியின் பங்குகளில் சூதாடக் கூடாது, அல்லது இந்த ரகசியங்களைத் தமக்கு வேண்டியவர்களுக்கு கசிய விட்டு, அவர்கள் மூலம் பங்குச்சந்தையில் சூதாடி ஆதாயமடையக் கூடாது என்பது விதி. இதை மீறுவது குற்றம்.

நடுத்தர வர்க்க மக்கள் தமது சேமிப்புகளை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம், எந்தக் குதிரை (கம்பெனி) ஜெயிக்கும், எந்தக் குதிரை தோற்கும் என்று ஊகித்து அறியும் திறமை கொண்டவர்கள் இதில் பெரும் லாபம் ஈட்டலாம் என்பதுதான் பங்குச்சந்தை சூதாட்டத்தின் அடிப்படை விதி.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர்மட்டப் பொறுப்புகளிலோ அல்லது அதன் உள் விவகாரங்களைத் அறிந்துகொள்ளும் இடத்திலோ இருப்பவர்கள் இவ்விதியை மீறுவது சட்டவிரோதம். அமெரிக்காவில் இது தண்டனைக்குரிய குற்றம்.

ரஜத் குப்தா 2008ம் ஆண்டில் மூன்று தருணங்களில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் பற்றிய உள் விவரங்களை வேலியிடப்பட்ட நிதிய (Hedge Funds) சூதாடி ராஜரத்தினத்தின் காலியோன் நிறுவனத்திற்கு கடத்தியதன் மூலம் அந்நிறுவனம் $23 மில்லியன் லாபம் சம்பாதிக்க உதவி செய்துள்ளார். மேலும் ப்ராக்டர் – கேம்பிள் நிறுவனம் பற்றிய உள் விபரங்களையும் அவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் பகிர்ந்து கொண்டு பங்குச்சந்தை சூதாட்டத்தில் அவர் கொழுத்த லாபத்தை அறுவடை செய்ய உதவியுள்ளார்.

இந்த வழக்கில் நடந்த விசாரணைகளின் இறுதியில் ரஜத் குப்தா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு ஐந்து மில்லியன் டாலர் அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வாசிப்பதற்கு சற்று முன்பாக நடந்த சென்டிமெண்ட் காட்சிகளைத் தான் கட்டுரையின் துவக்கத்தில் பார்த்தோம். ரஜத் குப்தாவின் வீழ்ச்சிக்காக நீதிபதியும், ஜூரர்களும் மாத்திரம் இழவு கொண்டாடவில்லை. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே ‘ரஜத்தின் நண்பர்கள்’ எனும் பெயரில் ஒரு இணையதளம் துவங்கப்படுகிறது.

இதில் முகேஷ் அம்பானியிலிருந்து ஆதி கோத்ரேஜ் வரையிலான இந்திய தரகு முதலாளிகளும், பல்வேறு பன்னாட்டு முதலாளிகளும் ரஜத் குப்தாவுக்கு நேர்ந்து விட்ட சங்கடத்துக்காக கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களில் பலரும் செவாலியே சிவாஜி கணேசனே பொறாமை கொள்ளும் அளவுக்கு “நம்ப முடியவில்லை.. வில்லை.. வில்லை…” என்று நீட்டி முழக்குகிறார்கள். ரஜத் குப்தாவின் தர்ம சிந்தனைகளை நினைவு கூர்ந்து மெய்சிலிர்க்கிறார்கள். இவர்களே இப்படியென்றால், முதலாளித்துவ ஊடகங்கள் வடித்த கண்ணீரின் அளவு பற்றி தனியே சொல்ல தேவையில்லை.

ரஜத் குப்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை இவர்களை அசைத்து விட்டதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. ஏனெனில், இவர்களனைவருக்கும் ரஜத் குப்தா ஒரு முன்மாதிரி. ஏனெனில், இந்தியாவில் நடக்கும் உள்வட்ட வியாபார மோசடிகளை கடந்த அக்டோபரில் விசாரித்த செபி, ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இதே போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக கண்டுபிடித்து தலா 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. அந்த வகையில் ரஜத் குப்தாவுக்காக அம்பானியின் தசையாடுவது புரிந்துகொள்ளத் தக்கதே.

இது ஒருபுறமிருக்க, மெக்கின்சியில் இருக்கும்போது நாள்தோறும் தான் அலுவல் ரீதியாக செய்த அதே வேலையை தனிப்பட்ட முறையில் செய்ததற்காக தான் கைது செய்யப்படுவோம் என்று ரஜத் எதிர்பார்க்கவில்லை. அல்லது அப்படி நடிக்கிறார்.

ஏதோ நடக்கவே வாய்ப்பற்ற ஒன்று நடந்து விட்டதைப் போல் இவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் ஆபாசமான மிகை நடிப்பாகப் பல்லிளிக்கின்றன. ஏனெனில், ரஜத் எந்த ஏணியில் ஏறி சிகரத்தைத் தொட்டாரோ அதே ஏணியின் பல்வேறு படிநிலைகளில் தான் இவர்களனைவருமே ஏறிக் கொண்டுள்ளனர்.

முதலாளித்துவம் பரமாத்மா என்றால் அதன் சேவகர்கள் அனைவரும் ஜீவாத்மாக்கள். இவர்களனைவரும் பிரிக்கவொண்ணாத படிக்கு ஒன்று கலக்கும் ஆத்மசாகரப் பெருவெளி தான் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரமும், அதன் இயக்கு சக்தியாக இருக்கும் நிதிமூலதனமும்.

அந்த நிதிமூலதனத்தின் கருவறையில் ரஜத் குப்தா ஒரு தலைமைப் பூசாரி; ‘துண்ணூறு’ வாங்க வந்த அம்பானிகள் அவர் ‘தேவநாத’ கோலத்தில் நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். ஆனால் அந்த அதிர்ச்சியில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை; ஏனெனில், ரஜத் சிறிய அளவில் தனிப்பட்ட முறையில் செய்ததைத் தான் அவர் பணியாற்றிய நிறுவனங்களும், வால்வீதியின் பிற நிறுவனங்களும் தங்கள் நடைமுறைகளாகக் கொண்டுள்ளன என்பதை இவர்கள் அறியாதவர்களல்ல.

சந்தை பங்குஎந்தவிதமான உற்பத்தியிலும் ஈடுபடாத கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிதிமூலதன வங்கிகள், உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலம் அதில் முதலீடு செய்கின்றன. பின்னர் அவற்றின் மதிப்புகளை வெறும் ஊகங்களின் அடிப்படையிலேயே அதிகரிக்கச் செய்கின்றன. இவ்வாறான ஊகங்களை முதலீட்டு வங்கிகளின் நிர்வாக ஆலோசனைப் பிரிவுகளைக் கொண்டே சந்தையில் உற்பத்தி செய்து உலவ விடுகின்றன. இதன் மூலம் பங்குச்சந்தையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மதிப்பு உயரும் போது, மொத்தமாக கையில் உள்ள பங்குகளை விற்று லாபம் ஈட்டுவது நிதிமூலதன வங்கிகளின் வழக்கமான நடைமுறை.

மேலும், வீட்டுக்கடன் பத்திரங்களின் மேல் சூதாட்டம், வேலியிடப்பட்ட நிதியத்தின் மேலான சூதாட்டம், உணவுப் பொருட்களின் மேல் முன்பேர சூதாட்ட வர்த்தகம், காப்பீட்டின் மேல் சூதாட்டம், ஓய்வூதியத்தை வைத்து சூதாட்டம், நிலத்தின் மேல் சூதாட்டம் என்று கண்ணில் பட்ட சகலத்தின் மேலும் சூதாடி, பொருளாதாரத்திலிருந்து பொருளுற்பத்தியையே அந்நியமாக்கி அதனிடத்தில் சூதாட்டத்தை அமர வைத்த நிறுவனங்களின் பதவிப் படிநிலைகளில் தான் ரஜத் குப்தா தாவித் தாவி ஏறியுள்ளார். அவ்வாறு ஏறி அவற்றின் உச்சபட்ச பொறுப்புகளில் அமர்ந்தது தான் முதலாளித்துவ ஊடகங்கள் விதந்தோதும் அவரது ‘வளர்ச்சி’. தன்னை ஏற்றி விட்ட ஏணிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்பது தான் அவர் செய்த குற்றம்.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவது ரஜத் குப்தாவின் இயல்புக்கே மீறிய ஒன்று என ‘ரஜத்தின் நண்பர்கள்’ இணையதளத்தில் பலரும் ஆச்சரியத்தோடு கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், ரஜத் மோசடி செய்ததல்ல – செய்யாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். வால்வீதியின் சூதாடிகள் தாமே வகுத்துக் கொண்ட சூதாட்ட விதிகளையும் தங்களுக்கு வேண்டிய மட்டும் வளைத்துக் கொண்டனர் – போலிப் பத்திரங்கள் தயாரித்து சக சூதாடிகளையே கழுத்தறுத்தனர். எந்த முகாந்திரமும் இன்றி அளிக்கப்பட்ட வீட்டுக்கடன் பத்திரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்து, அதன் மேல் சூதாடி, ஒட்டுமொத்த முதலாளித்துவ கட்டமைப்பையே நெருக்கடிக்கு உள்ளாக்கினர். இந்தக் கழுத்தறுப்புப் போட்டியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருந்தவர் தான் ரஜத் குப்தா.

டாட் காம் குமிழி வெடித்து ஒவ்வொரு நிறுவனங்களாக விழுந்து கொண்டிருந்த தொன்னூறுகளின் இறுதியில் மெக்கின்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ரஜத் குப்தா ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அதாவது, நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கான கட்டணமாக அவற்றின் பங்குகளைப் பெறும் முறையை அறிமுகம் செய்கிறார். இப்படிச் செத்த மாட்டிடம் திறமையாக பால் கறந்த ‘தகுதியின்’ அடிப்படையிலேயே அவரது வளர்ச்சி அமைந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும், அமெரிக்க மக்களையும், தனது சொந்த ஊழியர்களையுமே ஏமாற்றி, அவர்களுடைய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஏப்பம் விட்ட என்ரான் நிறுவன முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளைக்கு ரூட் போட்டுக் கொடுத்து, நிர்வாக ஆலோசனைகள் வழங்கிய மெக்கின்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில், இந்த அயோக்கியத்தனம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றியவர்தான் ரஜத் குப்தா.

வால்வீதி சூதாட்டங்கள் இரண்டாயிரங்களின் இறுதியில் ஓரு மாபெரும் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடியை உண்டாக்கியது. அதைத் தொடர்ந்து வீடு, வேலை, சேமிப்பு, ஓய்வூதியம், காப்பீடு என்று சகலத்தையும் இழந்த அமெரிக்கர்கள் தெருவிலிறங்கிப் போராடி வருகிறார்கள். அமெரிக்காவையும் தாண்டி, ஐரோப்பிய கண்டமெங்கும் போராட்டத் தீயினால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளிலோ இந்த சூதாட்டப் பொருளாதாரம், ஊழல்களாகவும், இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முயற்சிகளாகவும் அதைத் தாங்கி வரும் அரச பயங்கரவாதமாகவும் வெளிப்பட்டு, மக்களைத் தெருவுக்கு இழுத்து வந்துள்ளது. வாழ்விழந்த மக்களைத் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுத்து தேசத்தின் குறுக்கும் நெடுக்குமாய் அவர்களை வீசியெறிந்துள்ளது.

இந்நிறுவனங்கள் எடுத்த ஒவ்வொரு சின்னச் சின்ன முடிவுகளும், தீர்மானங்களும் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சொல்லவொண்ணாக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த முடிவுகளை ஆத்மார்த்தமாக எடுக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவரின் அறம் என்னவாயிருக்கும்?

இவர் அலுவலகத்தில் செய்யும் ஒவ்வொரு ‘சட்டப்பூர்வமான’ செயல்பாடும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையைப் பறிக்கும் என்பதை அறிந்தே அதைத் திறமையாகச் செய்துள்ளார் என்றால், அவரது மனச்சாட்சி அவரைக் குத்திக் கிழித்திருக்காதா? இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மையாய் இருக்க முடியும். அதைத் தான் அவர் தண்டனை பெற்ற பின் நீதிமன்றத்துக்கு வெளியே உதிர்த்த வார்த்தைகளும் மெய்ப்பிக்கின்றன.

ரஜத்திடம் அமெரிக்க முதலாளித்துவம் எதிர்பார்த்து ஏமாந்த நேர்மை என்பது, அம்பானி போன்றோரிடம் அண்ணா ஹசாரேக்கள் எதிர்பார்க்கும் அதே நேர்மை தான். விபச்சாரத் தரகன் வள்ளலாராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று பசப்புகிறார்கள்.

ரஜத் குப்தா புறங்கையை நக்கி விட்ட நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முதலாளித்துவத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பொருட்டு, ‘இந்த ஒரு கனி மட்டுமே கெட்ட கனி; எனவே பொறுமையாக நல்ல கனியைத் தேடுவீராக’ என்று முதலாளித்துவம் உலக மக்களுக்குத் தனது சுவிசேஷத்தை அருளுகிறது.

சூதாட்ட சந்தை விதிகள் எனும் நஞ்சை அருந்தி வளரும் நச்சு மரங்கள் நல்ல கனிகளையே தரும் என்று நம்ப வைக்கும் முயற்சி தான் இந்த வழக்கும், தண்டனைகளும், அதைத் தொடர்ந்து நடக்கும் சென்டிமெண்ட் நாடகங்களும். குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம் நிறுத்தப்படாமல் தவிர்ப்ப்பதற்காக, முதலாளித்துவத்தை குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, தமது நாயகர்கள் சிலரைக் கூடக் காவு கொடுப்பதற்கு முதலாளித்துவம் எப்போதும் தயாராகவே இருக்கிறது.

உள்வட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணையில் வால் வீதி முதலீட்டு நிறுவனங்களுக்குள்ளும், புனிதமான அமெரிக்க கார்ப்பரேட் இயக்குநர் குழுக்களுக்குள்ளும் தனது விசாரணை வலையை வீசுகிறது, நீதிமன்றம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட வர்த்தகர்களும், கார்ப்பரேட் மேலாளர்களும், வங்கி அதிகாரிகளும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுகின்றனர். அந்த வரிசையில் மாட்டிக் கொண்ட திமிங்கலம் தான் ரஜத் குப்தா.

‘உலகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் அர்ப்பணிப்பு மிகுந்த இது போன்ற ஒரு பிரதிவாதியை இந்த நீதிமன்றம் சந்தித்ததில்லை என்று சொன்னால் அது மிகையாகாது‘ என்றார் நீதிபதி ஜெட் ராக்கோப். ‘அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் இந்த உலகின் வரலாறு நல்ல மனிதர்கள் செய்த கெட்ட செயல்களின் வரலாற்றால் நிரம்பியிருக்கிறது’ என்று வருத்தப்பட்டுக் கொண்டே தண்டனைத் தீர்ப்பை வாசிக்கிறார். வாழ்ந்து கெட்ட பண்ணையாராக ரஜத் குப்தா நீதிமன்றத்திலிருந்து வெளிப்படுகிறார்; அவரது துயரத்தை தங்கள் துயரமாக வரித்துக் கொள்ளும் முதலாளித்துவ ஊடகங்கள் அதை மக்களின் துயரமாகவும் மாற்றும் விதமாக சோக ரசம் பொங்கும் கட்டுரைகளை எழுதிக் குவிக்கின்றன.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ரஜத் குப்தாவின் பெயரை தனது பதிவுகளிலிருந்தே நீக்கி விட்டது மெக்கின்சி. அவர்களைப் பொறுத்த வரை, ரஜத் குப்தா அங்கு வேலை செய்யவே இல்லை, அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே இல்லை.

“ரஜத் குப்தாவுடன் எங்கள் நிறுவனத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை‘ என்கிறது மெக்கின்சி. ’இதற்கு மேல் அவருடன் எந்த பரிமாற்றங்களும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று மெக்கின்சியின் உலகளாவிய வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ’எங்கள் புனிதத் தன்மை இப்படி நிரூபிக்கப்பட்டு விட்ட பிறகு, இனிமேல் எங்களை நம்பி வழக்கமான செயல்பாடுகளைத் தொடரலாம்’ என்று அவர்களை நம்பச் சொல்கிறார்கள்.

ரஜத் குப்தாவின் குற்றத்திற்கு தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது; முதலாளித்துவத்திற்கு எதிரான வழக்கு மக்கள் மன்றத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

_________________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
_________________________________________________________________________________________________________________

கம்பீரம் – ஒரு உண்மைக் கதை !

12

கம்பீரம்

“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.

நாங்கள் மொத்தம் பதினைந்து பேர். நான் உட்பட மற்றவர்களும் அப்போதுதான் பட்டயப் படிப்பை முடித்திருந்தோம். சிலருக்கு இன்னும் மீசை கூட அரும்பியிருக்கவில்லை. எனக்கு இடதுபுறமாக நின்று கொண்டிருந்த சபாபதி என்பவனின் வாய் லேசாக முணுமுணுத்தது.

“குமார்…” நடுங்கும் காற்றுக் குரலில் இரகசியமாய் அழைத்தான்.

“ஷ்ஷ்ஷ்… சும்மா இருங்க. எனக்கும் கெதக்குன்னுதான் இருக்கு”. ஆம். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அச்சமாகத்தானிருந்தது.

எங்கள் கிசுகிசுப்புகள் கங்காதரைக் கலைத்தன. சட்டென்று விரைப்பாய்த் திரும்பினார். ஒரு மயான அமைதி அந்த அறையைச் சட்டென போர்த்திக் கொண்டது. அது ஒரு பயிற்சி வகுப்பறை. பெங்களூருவில் இருந்த பன்னாட்டு கணினி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. நாங்கள் படிப்பை முடித்து விட்டு கேம்பஸ் தேர்வில் தேர்வாகி பயிற்சிக்காக வந்திருந்தோம். அன்றுதான் பயிற்சியின் முதல் நாள்.

அது RISC சர்வர் வகைக் கணினிகளைத் தயாரிக்கும் நிறுவனம். சர்வர் எனப்படுவது பல நூறு கணினிகள் சேர்ந்தால் கிடைக்கும் ஆற்றலை ஒரே பெரிய கணினிக்குள் அடக்கியதைப் போன்றது. இவற்றில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சிக்கலானவை என்றும், புரிந்துகொள்வது சிரமம் என்றும் எங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தது. பயிற்சியாளர் வரும் முன் அதைப் பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த போதுதான் திடீரென அந்த அறைக்குள் இராணுவம் ஊடுருவியிருந்தது.

கங்காதர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அட்டேன்ஷனில் நான் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி நகரத் துவங்கினார். எனது தொடைகள் எடை குறைந்து போல லேசானது. முழங்காலுக்குக் கீழே பஞ்சு போல் உணர்ந்தேன். தொண்டைக்குள் கசந்தது. இதயத்துடிப்பு எகிறியது. ‘என்னாங்கடா இது! பேசினதெல்லாம் ஒரு குத்தமாடா’ மனதிற்குள் தாறுமாறான சிந்தனைகள் துள்ளிக் குதித்தன.

மொத்தம் மூன்று வரிசைகளாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடுவில் இருந்த வரிசையில் இரண்டாவதாக இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். மிகச்சரியாக என்னை நோக்கி வந்த கங்காதர், கருவிழிகளை மட்டும் திருப்பிப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார். எனக்கு நேர் பின்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். வடிவேலுவைப் போல் உணர்ந்தேன்.

சற்று நேரத்திலேயே பயிற்சியாளர் ராகேஷ் வந்தார். முதலில் அறிமுகப் படலம். இராணுவத்தையும் சேர்த்து மொத்தம் பதினேழு பேர். இராணுவம் தன்னை முழுமையாக அறிமுகம் செய்து முடித்த போதுதான் எங்களுக்கு விசயமே புரிந்தது. இவர்கள் இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று.

கங்காதர் சவுத்ரி என்று அறிமுகம் செய்து கொண்டவர், இராணுவத்தின் ஏதோவொரு படைப்பிரிவில் கீழ்நிலையில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, இப்போது காப்டனாகி இருக்கிறார். நாற்பதுகளின் இறுதியில் அல்லது ஐம்பதுகளின் துவக்கத்தில் இருந்தார். அந்த நிறுவனம் இராணுவத்துக்கு கணினிகளை விற்கும்போது அதோடு சேர்த்து அதை எப்படி இயக்குவது எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றிய பயிற்சிக்கும் இரண்டு சீட்டுகளை இலவசமாய் கொடுத்து விடும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவின் சார்பாக கங்காதரும் அவரது உதவியாளர் நிதின் ஷர்மா என்பவரும் தேர்வாகியிருந்தனர். இதற்காகவே டெஹ்ராடூனில் இருந்து பெங்களூரு வந்துள்ளனர்.

அந்தப் பயிற்சி பத்து நாட்களுக்கு நடந்தது. அந்த நாட்களில் நாங்கள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டதோடு, இராணுத்தினர் பற்றியும் கொஞ்சம் போல் அறிந்து கொண்டோம் – உபயம் கங்காதர். அவர் எங்களிடம் இராணுவம் என்பதைப் பற்றிய உயர்வான பிம்பம் ஒன்றை உருவாக்க நிறைய மெனக்கெட்டார். ஓசிச் சோறின் விளைவாகவோ, ஓசிச் ‘சரக்கின்’ காரணமாகவோ அவர் பருத்த வயிற்றைப் பெற்றிருந்தார்.

ஆனால், தானொரு மிடுக்கான அல்லது விரைப்பான பேர்வழி என்பதை உலகுக்கு உணர்த்த கஷ்டப்பட்டு அடிவயிறை எக்கிப் பிடித்துக் கொள்வார். இதன் விளைவாய் இடுப்பு கொஞ்சம் போல் முன்னே இழுத்துப் பிடித்தது போல் நிற்கும். இந்தக் கஷ்டத்தோடு மார்புக்கூட்டை தூக்கலாக வைத்துக்கொள்ள வேண்டும். இத்தனை சித்திரவதைகளுக்கிடையே சிரமமின்றி சுவாசிப்பதைப் போல் நடிக்கவும் வேண்டும். கங்காதர் திறமைசாலிதான்… என்றாலும் மூன்றாவது நாளே கவனக்குறைவான ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பெரும் தொந்தியர் என்பதை சபாபதி கண்டுபிடித்து, எல்லோருக்கும் ரகசியமாய்ச் சொல்லி விட்டான்.

அவர் சாதாரணமாக நடக்கும்போது கூட கால் மூட்டு மடங்காமல் அட்டேன்ஷனில்தான் நடந்தார். அதேபோல் பயிற்சி நடந்த நாட்களில் அவர் எப்போதும் அறையின் குறுக்குவாக்கில் நடந்ததே இல்லை; நுழைவாயிலில் இருந்து நூல் பிடித்தது போல் நேராக பத்து தப்படிகள், அப்புறம் மின்னல் போல ஒரு ‘ரைட்டர்ன்’; மீண்டும் நூல் பிடித்தாற் போல் பத்து தப்படிகள் நடை; ஒரு ‘அபவுட்டர்ன்’; அப்புறம் இரண்டு தப்படிகள் பக்கவாட்டில் நகர்ந்து நாற்காலியில் அமர்வார்.

உட்கார்ந்த பின் அவரது முதுகில் மட்டக்கோலை வைத்துப் பார்த்தால் முதுகெலும்பு நறுக்கென்று கச்சிதமாக நேர்கோட்டில் இருக்கும். பக்கவாட்டில் எதையாவது அல்லது யாரையாவது பார்க்க வேண்டுமென்றால் கூட ஸ்கேல் வைத்து அளந்தது போலத்தான் தலையைத் திருப்புவார்.

கங்காதர் நிறைய சந்தேகப்படுவார். யாரையும், எதையும் நம்ப மாட்டார். ‘இன்றைக்கு செவ்வாய்க் கிழமை’ என்று அவரிடம் யாராவது சொல்லி விட்டால் கூட அவராக ஒரு முறைக்கு இரண்டு முறை நாள்காட்டியைப் பார்த்து, சரிபார்த்து விட்டுதான் ‘அப்படியா! சரிதான்’ என்று ஒத்துக்கொள்வார். அவ்வளவு முன்னெச்சரிக்கை. ராணுவம் என்றால் சந்தேகப்பட வேண்டும்; நாட்டையே காப்பாற்றுவது என்றால் சும்மாவா என்பதுதான் அதிலிருந்த செய்தி.

இராணுவம் பற்றி எங்களுக்கு உருவான சித்திரம் எந்த வகையானது என்று அன்றைய நிலையில் எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை. ஒரு வேளை அது கேலிச்சித்திரமாக இருக்குமோ என்று கங்காதரே எங்களை சந்தேகப்பட வைத்தார். அதற்கு அவரது உடல் மொழி மட்டும் காரணமல்ல.

தொழில்நுட்பத்தில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதைத் தீர்த்துக்கொள்ள அவர் கேட்கும் கேள்விகளும் விநோதமானவை. உதாரணமாக, “மிஸ்டர் ட்ரைனர், உங்களது இந்த கணினியை நேர்மட்டமாகத்தான் நிறுவ வேண்டுமா? கிடைமட்டமாக நிறுவினால் வேலை செய்யாதா?” அல்லது, “மிஸ்டர் ராகேஷ், இந்தக் கணினி வேலை செய்து கொண்டிருக்கும் போது அதன் எலக்ட்ரிகல் வொயரை வெடுக்கென்று பிடித்து இழுத்தால் என்னவாகும்?”

‘கேள்விகள்’ இந்த ரகத்தில் படுபயங்கரமான மொக்கைகளாகத்தான் இருக்கும். அவர் ஒவ்வொரு முறை கேள்விகளைக் கேட்கும்போதும் கையிலிருக்கும் கோப்பு ஒன்றிலிருந்து எதையோ சரிபார்த்துக் கொள்வார். அந்தக் கோப்பை அவர் பயிற்சி நடந்த பத்து நாட்களும் இராணுவ ரகசியம் போல் பாதுகாத்து வந்தார். பயிற்சி இடைவேளைகளில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதோ அல்லது யாரோடாவது கைகுலுக்க வேண்டுமென்றாலோ கூட அந்தக் கோப்பை பத்திரமாக கக்கத்தில் அதக்கிக் கொள்வார். யாரும் அதைப் பிரித்துப் பார்த்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இராணுவமும் ரகசியமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நாங்கள் நம்பினோம்.

கங்காதரின் மேலதிகாரிகள் தினசரி ஐந்து கேள்விகளாவது கேட்க வேண்டுமென்று இலக்கு நிர்ணயித்து அனுப்பியிருப்பார்களோ என்று சபாபதி சந்தேகப்பட்டான். பயிற்சி நடந்த பத்து நாட்களிலும் இதே பாணியில் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்தார். பயிற்சிக்கு வந்த மற்றவர்களோடு சேர்ந்து நாங்கள் உதடு பிரியாமல் சிரித்துக் கொள்வோம். ஆனால், பயிற்சியாளர் ராகேஷ் சிரிக்கவில்லை. கங்காதரின் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார்.

எதாவது எடக்கு மடக்காகப் பதில் சொல்லி, அதனால் கங்காதர் ஆத்திரமடைந்து, அதனால் அவரது மேலதிகாரிகள் அதிருப்தியடைந்து, அதனால் அடுத்தமுறை ஆர்டர் கிடைக்காமல் போனால்? அந்த நிறுவனத்தைப் பொறுத்தமட்டில் இராணுவம் ஒரு பொன் முட்டையிடும் வாத்து. இதைக் கொன்று விட்டால் இன்னொரு வாத்துக்கு எங்கே போவார்கள்? எனவே ராகேஷுக்கு தெளிவான உத்திரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று இஞ்சுகள் அதிக உயரம் கொண்ட கங்காதரின் ஈகோவை எந்த சேதாரமும் இல்லாமல் பவுனைப் போல் பாதுகாத்து, பத்திரமாய் முகாமுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் ராகேஷ் தெளிவாக இருந்தார்.

கங்காதர் ஒவ்வொரு முறை கேள்வி கேட்கும் போதும் விரைப்பாக எழுந்து நிற்பார். கங்காதர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிதின்ஷர்மாவும் எழுந்து கொள்வார்; அவர் உட்காரும் வரை உட்கார மாட்டார். அதிகாரியல்லவா? அவர் நிற்க, இவர் அமர…. அதெல்லாம் நிதினின் கற்பனையிலேயே இல்லை.

கங்காதர் தினசரி இரண்டு முறை நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்வார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளின் போது கங்காதரால் சொல்லப்படும் ‘ஜோக்குகள்’ அவரது கேள்விகளை விடப் படுபயங்கர மொக்கைகளாக இருக்கும். அந்த ஜோக்குகள் அவருக்கு அவரது மேலதிகாரிகளால் சொல்லப்பட்டவை. அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி, அவர்களுக்கு அவர்களது மேலதிகாரி என்று இது பின்னோக்கி நீண்டுகொண்டே போய் ராபர்ட் க்ளைவின் காலத்தைத் தொடும் அளவுக்கு அரதப்பழசான ஜோக்குகள்.

இதைக் கேட்டு எல்லோரும் சிரிக்க வேண்டுமென்பதுதான் கங்காதரின் எதிர்பார்ப்பு. இந்த இராணுவ சர்வாதிகாரத்துக்கு ராகேஷையும், நிதினையும் தவிர மற்றவர்கள் யாரும் உட்படவில்லை. சிரிப்பதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டுமென்று கங்காதர் எதிர்பார்த்தார். சுமாரான நகைச்சுவை என்றால் மூன்று முறை “ஹஹ்ஹஹ்ஹா” சொல்ல வேண்டும்; சுமாருக்கு மேல் என்றால் நான்கு முறை சொல்ல வேண்டும்.

இப்படிச் ‘சிரிப்பதை’ நிதின் அளவுக்கு ராகேஷால் நேர்த்தியாகச் செய்ய முடியவில்லை. என்னயிருந்தாலும் இராணுவப் பயிற்சியல்லவா? பயிற்சிக்கு வந்த மற்றவர்கள் கங்காதரின் இந்த எதிர்பார்ப்பைக் கூட மிகுந்த சிரமத்துக்கிடையே சகித்துக் கொண்டார்கள். அவருக்கிருந்த இன்னொரு எதிர்பார்ப்பைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அதாவது, அவர் தன்னை அனைத்தும் அறிந்த மேதாவி என்று கருதிக் கொண்டார். வானத்தின் கீழ் பூமிக்கு மேல் இருந்த சகலத்தைப் பற்றியும் அவருக்கென்றே பிரத்யேகமாக ஏதாவதொரு ‘கருத்து’ இருக்கும். சில சமயம் வானத்தைக் கடந்தும் பூமியின் ஆழத்திலும் இருப்பனவற்றைப் பற்றிக் கூட ‘கருத்து’ சொல்வார். இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார். நிதின் அவரது கீழ்நிலை அதிகாரி என்பதால் வேறு வழியில்லை; ராகேஷ் அனுபவசாலி என்பதால் சமாளித்துக் கொண்டார்.

ஆனால் நாங்களோ அப்போதுதான் கல்லூரியிலிருந்து வந்திருந்த மாணவர்கள். முழுப் பொய்யையும், முழு உண்மையையும் எதிர்கொள்வது எளிது. பாதி உண்மை – பாதி பொய் என்றால் கொஞ்சம் சிரமம். ஆனால் முழுப் பொய்யை உண்மை என்று ஏற்றுக்கொள்வது போல் நடிக்க வேண்டுமென்றால்? நாங்கள் சொல்லவொண்ணா கொடுமைகளுக்குள்ளானோம்.

ஒரு வழியாக அந்த பத்து நாட்களும் ஒரு முடிவுக்கு வந்தது. பத்தாவது நாளில்தான் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பதை நாங்கள் நேரடியாகப் புரிந்து கொண்டோம். அதாவது, கங்காதரை பயிற்சிக்காக தேர்வு செய்து அனுப்பிய அவரது மேலதிகாரிகள், அவரிடம் தினமும் பயிற்சியில் கலந்துகொண்ட மற்றவர்களோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். பயிற்சிக்காக என்று வந்துவிட்டு ஒழுங்காக அதில் கலந்து கொள்ளாமல் மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றி விடுவார்களோ என்று அவர்கள் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும். இந்த ராணுவத்தினர் யாரையும் நம்புவதேயில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கங்காதர் இந்த புகைப்பட சமாச்சாரத்தை ஒன்பது நாட்களாக மறந்து விட்டார் என்பது பத்தாம் நாளில் மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதை எப்படிச் சமாளிப்பது என்று மூளையைப் போட்டு கசக்கி, கடைசியில் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.

அதாவது, கங்காதரும், நிதினும் இராணுவச் சீருடை அணிந்தபடி எங்களோடு பத்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாங்களெல்லாம் வரிசை மாறி நிற்க வேண்டும். அதோடு எங்கள் தோற்றத்திலும் எதாவது ஒரு மாற்றம் செய்துகொள்ள வேண்டும். சட்டையை இன் செய்திருந்தால் எடுத்து விட வேண்டும். தங்களுக்குள் சட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தலைமுடியை மாற்றி வகிடெடுத்து சீவிக்கொள்ள வேண்டும். இப்படி சில ‘மரு’ வேஷங்கள் போட்டு சமாளிக்க வேண்டும். வேறு வழியின்றி இந்திய இராணுவத்துக்காக இந்தத் தியாகத்தையும் செய்தோம்.

இந்த புகைப்படக் கூத்தோடு பயிற்சி ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் ராணுவம் பற்றி என்னில் உருவாகி வந்த மனச்சித்திரம் அப்போதைக்கு முழுமை அடைந்திருக்கவில்லை; ஏதோவொன்று குறைவது போலவே இருந்தது. பயிற்சிக்குப் பின் அந்தக் குழுவிலிருந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போஸ்டிங் போடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நான் தில்லிக்குச் சென்றேன்.

தில்லியின் தால் ரொட்டிக்கும், ஆலு பரோட்டாவுக்கும், அனல் காற்றுக்கும், கடுங்குளிருக்கும் பழக்கப்படத் துவங்கியிருந்த நான்காம் வருடத்தின் முதல் மாதத்தில் எனக்கு எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு மின்மடல் வந்தது. எங்கள் நிறுவனம் தயாரித்து சந்தைக்கு அனுப்பியிருந்த குறிப்பிட்ட மாடல் கணினியில் சில பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதனால் உலகெங்கும் அந்த மாடல் கணினி எங்கெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனைச் சரிசெய்ய அதன் மென்பொருளில் சில திருத்தங்கள் (bug fix) சேர்க்க வேண்டும் என்றும் அந்த மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மடலின் பின்னிணைப்பாக நாங்கள் திருத்தங்கள் சேர்க்க வேண்டிய கணினிகளின் பட்டியலும், அது நிறுவப்பட்டிருக்கும் முகவரியும், தொடர்புகொள்ள வேண்டிய வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது. அகர வரிசைப்படியிருந்த பட்டியலில் முதலாவதாக “ஆர்மி ரிசர்ச் சென்டர் – டெஹ்ராடூன்” என்று குறிப்பிடப்பட்டு, அதற்கு நேராக தொடர்புகொள்ள வேண்டி கங்காதரின் பெயரும், அவரது தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்து கங்காதரைப் பிடித்தேன்.

“ஹலோ! கப்தான் கங்காதர் சௌத்ரி” மறுமுனையில் அதே விரைப்போடு மிரட்டல் கேட்டது.

என்னை நினைவூட்டி அறிமுகம் செய்துகொண்ட பின், கணினியில் கண்டறியப்பட்டுள்ள குறைபாட்டை விளக்கி அந்த வார இறுதியில் டெஹ்ராடூன் வருவதாகத் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டேன். திட்டமிட்டபடி அந்த வார இறுதியில் கங்காதர் சொன்ன நேரத்துக்கு சரியாக அங்கே இருந்தேன். நேரம் தவறாமையில் கங்காதர் கறார் பேர்வழி. பயிற்சியின் போது ஒரு நாள் கூட அவர் தாமதமாக வந்ததே இல்லை. நிதின் ஷர்மா இன்னமும் உதவியாளராகத்தான் இருந்தார். அவர்தான் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.

“சார்! கணினியை எங்கே நிறுவி இருக்கிறீர்கள்?” வேலையைத் தவிர வேறு அநாவசியமான கேள்விகளை இராணுவம் விரும்புவதில்லை.

“முதல் தளத்தில்” கேட்ட கேள்விக்கு ஒரு வரி பதிலைத்தான் இராணுவம் அளிக்கும்.

முதல் தளத்தின் சந்து பொந்துகளைத் தாண்டி ஒரு கண்ணாடி அறையின் முன் அமர்த்தப்பட்டோம். உள்ளே பெரிய பெரிய சர்வர்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்கே இருந்த சர்வர்கள் ஒவ்வொன்றும் நம் வீடுகளில் பயன்படுத்தும் இரும்பு பீரோக்களின் உயரத்தில் இருந்தன.

“கொஞ்சம் பொறுங்கள்! காப்டன் சார் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்” குளிரூட்டப்பட்ட அறையில் கங்காதரின் வருகைக்காக காத்திருந்தேன். சரியாக ஒன்பது நிமிடம் ஐம்பத்தொன்பதாவது நொடியில் பழக்கப்பட்ட அந்தக் குரல் கேட்டது,

“ஹல்லோ யெங்மென்! எப்படிஇருக்கிறீர்கள்?” ஆரவாரமாக அந்த அறைக்குள் நுழைந்த கங்காதர், எனது கையை வலுவாகப் பற்றிச் சுளுக்கினார்.தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் கணினியில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி விரிவாக விளக்கம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

“ஓக்கே! இதோ இந்த அறையில்தான் நீங்கள் சப்ளை செய்த கணினி இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். உங்களோடு நிதின் இருப்பார்”

ஒரு வழியாக ஏழு மலை ஏழு கடல் தாண்டி அரக்கனின் அரக்கு மாளிகையில் சிறைவைக்கப்பட்ட லைலாவைக் காணும் சிந்துபாத்தைப் போல் அந்த அறைக்குள் பாய்ந்தேன். நுழைந்ததும் ஒரு கணம் அப்படியே உறைந்தேன். அங்கே அந்தக் கணினி மாலைகளெல்லாம் அணிந்து சந்தனம் குங்குமம் அப்பிக் கொண்டு அய்யனார் கோவில் பூசாரியைப் போல் கம்பீரமாய் நின்றது. அந்த மாலைகள் காய்ந்திருந்தன. ஆனால் அதிர்ச்சிக்கு அது காரணமில்லை.

“இதெல்லாம் நாங்க ஆயுதபூசை கொண்டாடும்போது போட்டது” நிதின் கேட்காமலேயே பதில் சொன்னார்.

“அது பரவாயில்லை.. ஆனால், கணினி இயக்கப்படாமல் ஒட்டடை படிந்துபோய்க் கிடக்கிறதே?” அதிர்ச்சிக்கு இதுதான் காரணம்.

“அதுவா… இந்தக் கணினியால் எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதால் வாங்கிய நாளிலிருந்து இயக்காமலே வைத்திருக்கிறோம். நீங்கள் அதை இயக்கி வேலையை முடித்தபின் பழையபடி அணைத்து வைத்து விடுங்கள். வேண்டுமானால் ஆட்களை அனுப்பி இதில் படிந்திருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்யச் சொல்லவா?” நிதின் பதறாமல் கேட்டார்.

“அதுக்கில்லை சார்! இது இயங்காமல் நின்றால் நிறைய உற்பத்தி இழப்பு ஏற்படுமே?”ஆச்சர்யம் தாளாமல் கேட்டேன்.

“உற்பத்தியா? அதான் சொன்னேனே! வாங்கினதுலேர்ந்து பயன்படுத்தவே இல்லையென்று?” புன்முறுவல் மாறாமல் பேசினார்.

“ரெண்டு கோடிக்கும் மேல கொடுத்து வாங்கியதை இப்படியா வீணா போட்டு வைப்பீங்க? இந்த மாதிரி கணினிகளை வாங்குகிறவர்கள் இதிலேர்ந்து முடிந்தவரை வேலை வாங்குவாங்க சார்! யாரும் இப்படி சும்மா நிப்பாட்டி வைக்க மாட்டாங்களே!?”

“குமார்.. நீங்க டிபென்ஸ் செக்டாரை இப்பத்தான் பாக்கறீங்கன்னு நினைக்கிறேன்! சரியா?”

“ஆமா… ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

நிதின் சிரித்துக் கொண்டார். பின் தொடர்ந்தார், “குமார்! இங்க இருக்கிற மற்ற பெரிய சர்வர்கள் எல்லாமும் சாதாரண முப்பதாயிரம் ரூபா கணினிகள் செய்யும் அதே வேலைகளைத்தான் செய்யுது.. நீங்க சப்ளை செய்ததைத்தான் என்ன செய்ய வைக்கிறதுன்னு தெரியாம போட்டு வச்சிருக்கோம். கவர்மெண்ட் செக்டார்ல இதெல்லாம் சாதாரணம்… வருஷா வருஷம் எங்களோட கணினி பிரிவுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்வாங்க. அதை எதுக்காச்சும் நாங்க பயன்படுத்தியாகணும். ஒரு வருஷம் முழுமையா பயன்படுத்தலைன்னா அடுத்த வருஷம் ஒதுக்கீட்டை குறைச்சிடுவாங்க. அதனால நாங்க வாங்கற கருவிகள் எல்லாத்தையும் அந்த வகையிலேயே காஸ்ட்லியா என்ன இருக்கோ அதைத்தான் வாங்குவோம். நீங்க புதுசில்லே! அதான் திகைச்சுப் போயிட்டீங்க. சரி! வந்த வேலையைப் பாருங்க!”

ஒரு வழியாக அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டு, அந்தக் கணினியை இயக்கி அதில் சேர்க்க வேண்டிய மென்பொருள் நிரலை சேர்த்துவிட்டு, மீண்டும் பழையபடி அணைத்து வைத்தேன். அந்தக் கணினி அறைக்குள் இரும்பு பீரோக்கள் போல் நிமிர்ந்து நின்ற மற்ற எல்லா கணினிகளுமே பிச்சையெடுக்கும் கோவில் யானைகளைப் போல் பரிதாபமாய் நின்றன. எத்தனை பொருட்செலவு? அத்தனையும் வீண் விரயம். மாதாமாதம் சம்பளத்திலிருந்து கேட்காமலேயே பிடித்தம் செய்துகொள்ளப்படும் வருமான வரிப்பணம் இப்படி பெருமாள் கோவில் பிச்சைக்கார யானைகளைப் பராமரிக்க வீணடிக்கப்படுவதைக் கண்டு, நீண்ட பெருமூச்சு எழுந்தது. அதற்குள் நிதின் கையில் ஒரு கோப்போடு வந்தார். அதே பழைய கோப்பு. இராணுவ ரகசியமாய் கங்காதர் போற்றிய கோப்பு.

“குமார்! இப்ப என்ன செய்தீங்களோ அதை அப்படியே ரிப்போர்ட்டா எழுதி இந்தக் கோப்பில் சேர்த்துடுங்க. ஆடிட் வர்ற மேலதிகாரிங்க இதையெல்லாம் கறாரா சரி பார்ப்பாங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” கையில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

ஆர்வத்தோடு திறந்து பார்த்தேன். உள்ளே, அந்தக் கணினி வாங்குவதற்காக வெளியிட்ட டெண்டர் பற்றிய அறிவிப்பிலிருந்து, கங்காதர் மற்றும் நிதினின் பெங்களூரு வருகைக்கான அனுமதிக் கடிதம், ரயில் டிக்கெட்டுகளின் நகல்கள், தங்கிய ஹோட்டலில் கொடுத்த பில்கள் வரை தேதி வாரியாக அடுக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த பத்து புகைப்படங்கள்.. சுத்தமாக வாயடைத்துப் போனேன்.

இதற்காகவா அத்தனை ஆர்பாட்டங்கள்? பயிற்சிக் காலத்தில் இராணுவம் பற்றி உருவாகத் துவங்கியிருந்த முற்றுப்பெறாத சித்திரம் இப்போதுதான் முழுமையடைந்தது. அதை உற்றுப்பார்த்ததில், நன்கு உருண்டு திரண்டு கொழுத்துப் போன பங்களா நாய் ஒன்று அந்த சித்திரத்தினுளிருந்து முறைத்துப் பார்த்தது.

ஆம்! இது ஒரு பிரமாண்டமான பங்களா நாய். பங்களா நாய்கள் தங்கள் எஜமானர்கள் கொடுக்கும் செல்லத்தின் விளைவாய் அதீதமாய்க் கொழுத்துப் போய்விடும். தெரு நாய்களைப் போன்றோ, வேட்டை நாய்களைப் போன்றோ ஓட முடியாது. தன் கொழுத்த உடலை அசைக்க முடியாமல் அப்படியே கிடையாய்க் கிடக்கும். அவ்வப்போது போகிற வருகிறவர்களைப் பார்த்துக் குரைத்தோ அருகில் அகப்பட்டவர்களைக் கடித்தோ தன் எஜமானனைக் குஷிப்படுத்தும். இது வெறும் அலங்காரம்தான். பயனற்றது – ஆனால் ஆபத்தான ஒட்டுண்ணி. மொத்த சமூகத்தின் இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சிக் கொழுத்துக் கிடக்கிறது.

இவற்றின் எஜமானர்கள் கற்பனை செய்து கொள்வதைப் போல் இவை காவலுக்கும் கூடப் பயன்படாது. என்றைக்காவது தெரு நாய்களோடு சண்டை வந்தால் பரிதாபமாய் செத்துப் போகும். ராணுவம் என்பது ஒரு பங்களா நாயைப் போல் இந்தியாவின் மேல் அழுத்திக் கொண்டிருப்பதே என்பதுதான் அந்த சித்திரம் சொல்லும் செய்தி என்பது அன்றைக்கு எங்களுக்குப் புரிந்தது.

-மாடசாமி

______________________________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________________

பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !

11
பாலியல் வன்முறைக்கு எதிராக
ஆணாதிக்க சமூகத்தின் இழிவைச் சாடி, "வல்லுறவை ஏவாதே என்று ஆண்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகாதே என்று பெண்களுக்குத்தான் சமூகம் பாடம் நடத்துகிறது" என்ற முழக்க அட்டையுடன் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்.
state-01-delநாடாளுமன்ற ஆர்ப்பாட்டம்hi-demo
“பிப்ரவரி 23,1991-இல் காஷ்மீரின் குனான் போஷ்போரா கிராமத்தில் இந்திய இராணுவப் படையினர் 53 பெண்களைக் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரத்தை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை!” என்ற பதாகையுடன் இந்தியாவின் 64-வது ‘குடியரசு’ தினத்தன்று நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

பாலியல் வல்லுறவுத் தலைநகரான டெல்லியில், துணை மருத்துவ மாணவி மீதான கும்பல் பாலியல் வல்லுறவுக் கொடூரத்தைத் தொடர்ந்து, உழைக்கும் மக்களும் பெண்களும் இளைஞர்களும் ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க வீதிகளில் திரண்டு போராடினார்கள். இப்போராட்டங்களாலும், பொதுக்கருத்தும் பொதுமக்களின் நிர்ப்பந்தங்களும் பெருகியதாலும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், டெல்லியில் பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் பெண்கள் இதுபற்றி புகார் கொடுக்க 181 என்ற தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது.

பாலியல் கொடூரத்துக்கு எதிரான சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் செம்மைப்படுத்தவும் அமைக்கப்பட்ட ஓவு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி, தனது அறிக்கையை அண்மையில் மைய அரசிடம் அளித்துள்ளது. ஆனால், அக்கமிட்டி தனது பரிந்துரைகளைச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அரசாங்கத்தின் உறுப்புகளாக உள்ள – குற்றத்தைத் தடுப்பதற்கான பொறுப்பில் உள்ளவர்கள் இவை எதையுமே ஏற்க மறுக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் முதன்மை எதிரி யார்?

ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்டமும் நீதித்துறையும் போலீசும் அதிகார வர்க்கமும் அடங்கிய அரசு எந்திரத்துக்கு வெளியே, கணநேரப் பாலியல் தூண்டுதலால் வெறிகொண்டு வல்லுறவை ஏவும் சிவில் சமுதாயத்திலுள்ள உதிரி கிரிமினல்களால்தான் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராகத்தான் உள்ளது. வங்கிக்குப் பொறுப்பான காசாளரே, கொள்ளையில் ஈடுபடுவதைப் போலத்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர்களே, ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்டவர்களே அத்தகைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள் மீதான இந்துத்துவ, சாதிய, ஆணாதிக்க அடக்குமுறைகளைப் பாதுகாப்பதாகவே அரசின் உறுப்புகள் உள்ளன. இத்தகைய நிறுவனங்களால் பெண்களுக்கு வரும் ஆபத்துதான் மிகக் கொடியது. வரம்பற்ற அதிகாரம் பெற்றதாக, அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டதாக, சீருடை அணிந்த கிரிமினல்களைக் கொண்டுள்ள இத்தகைய அதிகார அமைப்புகளே முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அவற்றை யாரும் தட்டிக்கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாது.

டெல்லி பேருந்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்குக்கூட உள்ளூர ஒருவித அச்சம் இருந்திருக்கும். எந்தத் தடயமும் இல்லாமல் தப்பிவிட வேண்டும் என்ற பதற்றமும் இருந்திருக்கும். ஆனால், போலீசுக்கும் இராணுவத்துக்கும் அப்படி எந்த அச்சமோ, பதற்றமோ இருப்பதேயில்லை. சமுதாயத்திலுள்ள கிரிமினல்களுக்கு இல்லாத இந்தச் சிறப்பு அதிகாரத்தைக் கொண்டுள்ள இந்தச் சீருடை அணிந்த கிரிமினல்கள், எவ்வித அச்சமுமின்றி அட்டூழியங்களில் ஈடுபடுவதோடு, எவனும் எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்ற ஆணவத்தோடு கொட்டமடிக்கின்றன.

காஷ்மீர் பெண்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியப் பெண்களின் முதல் எதிரி யார் என்பதை உலகுக்கு உணர்த்திய போராட்டம்: “ஐ.நா. மன்றமே, இந்திய இராணுவப் படைகளின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ள காஷ்மீரின் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை!” என்ற பதாகையுடன் காஷ்மீர் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

டந்த 2006 மார்ச் மாதத்தில், காஷ்மீர் மாநிலத்தில் சிறீநகர் புறநகரப் பகுதியின் 15 வயதான பள்ளி மாணவி யாஸ்மினா, வேலை வாங்கித் தருவதாகக் கூறித் தன்னை அழைத்துச் சென்று, போதை மருந்து கொடுத்து நிர்வாணப்படுத்திப் படம் எடுத்து, அதைக் காட்டி மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சபீனா பேகம் என்ற பெண் மீது குற்றம் சாட்டியதோடு, போலீசு -இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தான் இரையாக்கப்பட்டதையும், தன்னைப் போலவே 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பயங்கரவாதக் கும்பலிடம் சிக்கித் தவிப்பதாகவும் சாட்சியமளித்தார். அதைத் தொடர்ந்து விபச்சார தாதாவான சபீனா பேகத்தைக் கைது செய்து, அவளது விபச்சார விடுதியிலிருந்து இளம்பெண்களை மீட்டுச் சூரத்தனம் காட்டிய போலீசார், இந்த விவகாரத்தை மூடிமறைத்து போலீசு மற்றும் இராணுவ அதிகாரிகளைத் தப்புவிக்க முயற்சித்தபோது, சிறீநகர் மக்கள் ஆவேசமாகி சபீனாவின் விபச்சார விடுதியையும் போலீசு நிலையங்களையும் தாக்கினர். இது காஷ்மீர் மாநிலம் முழுவதுமான போராட்டமாகப் பற்றிப் படரத் தொடங்கியதும், மாநில உயர்நீதி மன்றம் இந்த வழக்கை மையப் புலனாவுத் துறையிடம் ஒப்படைத்தது.

விபச்சார குற்றக் கும்பல்களின் அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிவந்த போதிலும், இவை எல்லாவற்றிலுமே அரசு உயர் அதிகாரிகள், போலீசு -இராணுவ அதிகாரிகள், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள், நீதித்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், அவர்கள் தண்டிக்கப்படவில்லை. துறைசார்ந்த விசாரணை, இடமாற்றம், தற்காலிகப் பணிநீக்கம் என்பதுதான் நடந்தது.

காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் மீது பொதுமக்கள் எவரும் அச்சீருடை அணிந்த கிரிமினல் கும்பல்கள் நடத்திவரும் பாலியல் வன்கொடுமைகளை, மனித உரிமை மீறல்களைப் பற்றி வாய்திறக்கக் கூடாது என்பதற்காகவே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமும், கலவரப்பகுதி தடைச் சட்டமும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களும் போடப்பட்டுள்ளன. தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் முறியடிப்பது என்ற பெயரில் இம்மாநிலங்களில் போலீசும் இராணுவமும் நடத்திவரும் காமவெறி – கொலைவெறியாட்டங்கள் தொடர்ந்து மூடிமறைக்கப்படுகின்றன. போலீசின் வன்முறை ஆயுதங்களில் ஒன்றாகக் கேள்விமுறையின்றி பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள் தொடர்கின்றன. இக்கொடுமையை எதிர்த்து மணிப்பூர் தாய்மார்கள் இராணுவத் தலைமையகம் அருகே நடத்திய நிர்வாணப் போராட்டத்தைப் போல, இவற்றில் ஒரு சில விவகாரங்கள் மெதுவாகக் கசிந்து அம்பலமானாலும், இக்காமவெறி பயங்கரவாதக் கும்பல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

டந்த ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதியன்று இரவில் பேருந்துக்காகக் காத்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான வசந்தி என்ற பெண்ணை, கடமலைக்குண்டு போலீசு நிலையத்துக்கு இழுத்துச் சென்று, போலீசு ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமாரும் சிறப்புத் துணை ஆய்வாளரான அமுதனும் அப்பெண்ணிடம் தமது காமவெறியைத் தீர்த்துக் கொண்டனர். பின்னர், அவரிடமிருந்த 6,700 ரூபாயையும் பறித்துக் கொண்டு, வசந்தியின் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி அவரைச் சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த வசந்தி நடந்த உண்மைகளை வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காக போலீசாரால் தொடர்ந்து மிரட்டப்பட்டதால், விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து, பின்னர் காப்பாற்றப்பட்டார். இந்த உண்மைகள் மெதுவாகக் கசிந்து, ஜூனியர் விகடன் இதழ் இக்கொடுமையை அம்பலப்படுத்தியது. ஆனால், அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளரான பிரவீன் குமார் அபினயு, திருட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே வசந்தி பொய் சொல்கிறார் என்று கிரிமினல் போலீசாருக்கு நற்சான்றிதழ் அளித்தார்.

சட்டபூர்வ கிரிமினல்களான போலீசின் காமவெறியாட்டத்துக்கு, பாதிக்கப்பட்ட வசந்தி மீதான பாலியல் வல்லுறவுக் கொடூரமே சான்று கூறப் போதுமானது. போலீசு உயரதிகாரிகள், தமது துறைசார்ந்த கீழ்நிலை போலீசாரைக் காப்பதற்காகவே இப்படி செய்துள்ளார்கள் என்று இந்த விவகாரத்தை குறுக்கிச் சுருக்கிப் பார்க்க முடியுமா? கீழ்நிலைப் போலீசுதான் ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாதவர்கள்; ஆனால், போலீசு உயரதிகாரிகளாக இருப்பவர்கள் ஐ.பி.எஸ். படித்தவர்கள், கண்ணியமான மேட்டுக்குடியினர், அவர்கள் நேர்மையுடன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்பத்தான் முடியுமா?

அரியானா மாநிலத்தின் ஐ.ஜி.யான எஸ்.பி.எஸ்.ரத்தோர், 14 வயது சிறுமியான ருச்சிகாவை 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதியன்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, அவனிடமிருந்து தப்பிய அச்சிறுமி போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ருச்சிகா, தான் படித்து வந்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவரது தம்பி மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் ரத்தோரின் போலீசாரால் அச்சுறுத்தப்பட்டுத் தொல்லைக்குள்ளாக்குள்ளாக்கப்பட்டனர். இக்கொடுமைகளைக் கண்டு மனமுடைந்த ருச்சிகா,1993-இல் தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனாள். அதேசமயம், காமவெறியன் ரத்தோருக்கு அரியானா அரசு பதவி உயர்வு அளித்தது. 1999-இல் அவன் மாநிலத்தின் போலீசு தலைமை இயக்குனராக்கப்பட்டு, சிறந்த சேவைக்கான அரசுத் தலைவர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டான். 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 2009-இல் ரத்தோர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பிணை வழங்கவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து சி.பி.ஐ. கோர்ட் தடை விதித்த போதிலும், 2010-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அவனுக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கியது.

நாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் என்ற திமிரோடு தனிவகை சாதியாக இருந்து கொண்டு சமூகத்தையே போலீசும் இராணுவமும் அச்சுறுத்துவதை இந்த விவகாரமும், போலீசு பாதுகாப்புடன் நடந்து வந்த திண்டிவனம் விபச்சார சந்தையில் தள்ளப்பட்டு, தப்ப முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் செஞ்சி சிறைக்காவலர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ரீடாமேரி விவகாரமும் நிரூபித்துக் காட்டுகின்றன. சிதம்பரம் பத்மினி மற்றும் சின்னாம்பதி பாலியல் கொடூர வழக்குகளை விசாரித்த விசாரணைக் கமிசன்கள், இந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யவும் பாலியல் குற்றங்களை மூடிமறைக்கவும் போலீசு அதிகாரிகள் செய்துள்ள தகிடுதத்தங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. இத்தனைக்குப் பின்னரும் போலீசும் அதிகாரவர்க்கமும் சட்டங்களை முறைப்படி செயல்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டித்து, பெண்களைப் பாதுகாக்கும் என்று நம்பத்தான் முடியுமா?

நீதித்துறையும் மையப் புலனாவுத்துறையும் பெண்களைப் பாதுகாக்குமா?

காவல் நிலையத்தில் பெண்இந்தியாவின் முதலாவது நீதிபதியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட நீதிபதி முத்துசாமி அய்யர், கணவன் தனது மனைவியை அடிப்பது தவறல்ல என்று கடந்த நூற்றாண்டில் தீர்ப்பு கூறினார். ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை மாறிவிட்டதா? மாமியார் தனது மருமகளை அடித்தாலோ, அல்லது தனது மகன் அவளை விவாகரத்து செய்துவிடுவான் என்று மிரட்டினாலோ அது சட்டப்படி குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.பி.சின்காவும் சிரியாக் ஜோசப்பும் கடந்த 2009-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்துள்ளனர். நீதிபதிகள் மட்டுமல்ல, நீதிக்காக வாதிடும் வழக்குரைஞர்களும் இத்தகைய ஆணாதிக்க அணுகுமுறையைக் கொண்டவர்களாகவே உள்ளனர். ஜெசிகாலால் கொலை வழக்கில், அவரை நடத்தை கெட்டவராகக் காட்டும் கோணத்தில் வாதாடி குற்றவாளியைத் தப்புவிக்க பிரபல வழக்குரைஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.க. தலைவர்களுள் ஒருவருமான ராம் ஜெத்மலானி எத்தனித்தார்.

டெல்லியில் தனது இச்சைக்கு இணங்க மறுத்த சட்டக் கல்லூரி மாணவி பிரியதர்சினி மட்டூவை, அதே கல்லூரியின் மாணவனும் மாநில இணை போலீசு ஆணையரின் மகனுமாகிய சந்தோஷ்குமார் சிங் என்பவன் அம்மாணவியின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் வன்முறையை ஏவிய பின்னர் கோரமாகக் கொன்றான். அதே டெல்லியில், சாராய விடுதியில் விற்பனை முடிந்த பிறகு சாராயம் பரிமாற மறுத்த மாடல் பெண் ஜெசிகாலால் என்பவரை அரியானா மாநில அமைச்சரின் தறுதலைப் பிள்ளையான மனு சர்மா சுட்டுக் கொன்றான். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விரு வழக்குகளில் சாட்சியங்களை போலீசும் மையப் புலனாவுத்துறையும் மூடிமறைத்து வழக்கை நீர்த்துப் போக வைத்தன. இதை அறிந்திருந்த போதிலும், டெல்லி அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. செய்தி ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இந்த அநீதியை எதிர்த்துக் கூச்சலிட்ட பிறகு, டெல்லி உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளிகள் பின்னர் தண்டிக்கப்பட்டனர். நாடே அதிர்ச்சிக்குள்ளான பிரபல வழக்குகளுக்கே இதுதான் நிலைமை.

1972-ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மதுரா என்ற 16 வயதான விவசாயக் கூலிப் பெண், தேசா கஞ்ச் போலீசு நிலையத்தில் இரு போலீசுக்காரன்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 1974-இல் மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் அளித்த ஐந்தாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து, காமவெறி போலீசாரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. மதுரா ஒரு கன்னிப் பெண் அல்ல, அவள் பாலியல் வல்லுறவை எதிர்த்ததற்கான காயங்கள் எதுவும் அவளது உடலில் இல்லை – என்றெல்லாம் காரணங்களைக் காட்டி விடுதலையை நியாயப்படுத்தியது உச்ச நீதிமன்றம்.

1992-இல் ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிதேவி என்ற மிகவும் பிற்பட்ட சாதிப் பெண், குஜ்ஜார் ஆதிக்க சாதிவெறியர்கள் 5 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 1995-இல் தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம், தாழ்த்தப்பட்டவரை மேல்சாதியினர் தீண்டவே மாட்டார்கள் என்பதால் பாலியல் வல்லுறவு நடந்ததாகக் கூறுவது பொயானது என்று தீர்ப்பு கூறி ஆதிக்க சாதிவெறியர்களான காமவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்தது.

ஒரிசாவின் போலீசு தலைமை இயக்குனர்களில் ஒருவரான வித்யபூஷண் மொகந்தியின் மகனாகிய பிட்டி மொகந்தி என்பவன், 2005-ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் ஒரு ஜெர்மானியச் சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமையை ஏவிய குற்றத்துக்காக 2006-இல் கைது செய்யப்பட்டான். பின்னர், அந்த போலீசு உயரதிகாரி தனது தாயார் மரணப்படுக்கையில் கிடப்பதால் அவரைத் தனது மகன் ஒருமுறை பார்க்க அனுமதி கேட்டு, பரோலில் வந்த பின்னர் அவன் தலைமறைவாகிவிட்டதாகப் பசப்பி, தனது அதிகாரத்தைக் கொண்டு குற்றவாளியான தனது மகனை தனது வீட்டிலேயே வைத்துக் கொண்டு பாதுகாத்ததோடு, போலீசையும் அதற்காகப் பயன்படுத்தியுள்ளான். ராஜஸ்தான் போலீசு, ஒரிசா மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்ட போதிலும், 7 ஆண்டுகளாகியும் அவன் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை என்கிறது ஒரிசா போலீசு. பின்னர் குற்றவாளியைப் பாதுகாத்து வைத்திருந்த போலீசு இயக்கு னர் 2008-இல் கைது செய்யப்பட்ட போதி லும், அவரது மகன் இன்னமும் தலைமறைவாகத்தான் இருந்து வருகிறான்.

தமிழ்நாட்டை உலுக்கிய சிதம்பரம் பத்மினி கற்பழிப்பு வழக்கை விசாரித்த பழனியப்பன் விசாரணைக் கமிசன், பத்மினி மானபங்கப்படுத்தப்பட்டாரே தவிர, வல்லுறவு நடக்கவேயில்லை என்று அபாண்டமாகத் தீர்ப்பு எழுதியது.

இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் வழக்குகளையும் அரசாங்கத்தின் உறுப்புகளே குற்றவாளிகளைப் பாதுகாப்பதையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் கடந்து ஒரு பெண் துணிவுடன் சட்டம், போலீசு, நீதித்துறையை அணுகினால், விட்டால் போதும் என்று தாங்களே வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும் வகையில் இந்த நிறுவனங்கள் பெண்களை மேலும் தொல்லைக்குள்ளாக்கி இழிவுபடுத்துகின்றன. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் அருவருப்பான வக்கிரமான பல்வேறு சோதனைகளையும் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்பெண்களின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நீதிமன்றங்களில் அவர்கள் படும் துன்பமும் மனவேதனையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளான பொழுதில் ஏற்பட்ட துயரைவிட மோசமானதாக இருக்கிறது.

பெண்களுக்கு எதிராக நிற்கும் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்புகள்

போலீஸ், ஜெயலலிதா கார்ட்டூன்ஒரு பெண் எந்தக் குற்றமும் செய்ய வேண்டியதில்லை. அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பதற்காகவே வன்முறை – கிரிமினல் குற்றங்கள் ஏவிவிடப்படுகின்றன. ஒரிசாவில் கணவனின் கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளான அஞ்சனா மிஸ்ரா என்ற மேட்டுக்குடி பெண், அவனிடமிருந்து தப்பி பெண்கள் காப்பகத்தில் குழந்தைகளுடன் தங்கியிருந்து, அவரது கணவனாகிய வனத்துறை அதிகாரி மீது புகார் கொடுத்தார். 1997 ஜூலையில் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞரிடம் இவ்வழக்கு தொடர்பாக சந்தித்த போது, அவன் அஞ்சனா மீது பாலியல் வல்லுறவுக் கொடூரத்தை ஏவ முயற்சித்தான். ஆடைகள் கிழிக்கப்பட்டு உடலெங்கும் காயங்களுடன் அவனிடமிருந்து தப்பிய அவர், போலீசில் புகார் செய்தார். ஆனால் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் அஞ்சனாவுக்கு எதிராகச் செயல்பட்டன. பின்னர் மையப் புலனாவுத்துறை விசாரணை நடந்து, அரசுத் தலைமை வழக்குரைஞர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அன்றைய காங்கிரசு முதல்வர் பட்நாயக் தலைமையிலான அரசு, அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வாடகைக் காரில் சென்று கொண்டிருந்த அஞ்சனாவை துப்பாக்கி ஏந்திய கும்பல் வழிமறித்து, புகார் கொடுத்ததற்கு இதுதான் தண்டனை என்று பாலியல் வன்கொடுமையை ஏவியது. வரம்பற்ற அதிகாரத்தைக் கொண்டு ஆட்டம் போடும் அரசாங்கத்தின் உறுப்புகளுக்கு எதிராக யார் நின்றாலும், அவர்களுக்கு இந்தக் கதிதான் ஏற்படும்என்று மிரட்டி எச்சரிக்கும் வகையில் நடந்துள்ள இந்த அட்டூழியம், ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பே பெண்களுக்கு எதிராக நிற்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியது.

அரசு வழக்குரைஞர், போலீசு, நீதிபதி – ஆகிய இம்மூவரில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக நடந்து கொண்டால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் நாகஷைலா. இதனாலேயே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சிணைக் கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் வாழ்வுரிமைக்கான சட்டங்கள், பெண்களின் பணியிடப் பாதுகாப்புச் சட்டங்கள் என பெண்களுக்காகவே பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் பெண்களின் நிலை இன்னமும் அதல பாதாளத்தில்தான் இருக்கிறது.

ஓட்டுக்கட்சிகளின் யோக்கியதை என்ன?

போலீஸ் காப் பஞ்சாயத்து

ஆணாதிக்க குடும்ப – சமூக அமைப்பு முறையும், அதற்கேற்ற சட்டம், நீதி மற்றும் அமலாக்கத்துறையும் நீடிக்கும் போது, பெண்களைப் பாதுகாத்து முன்னேற்றுவதற்கான இப்படிப்பட்ட சீர்திருத்தச் சட்டங்களால் மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியாது. இருப்பினும் பெயரளவிலான சில சீர்திருத்தச் சட்டங்களைக்கூட ஏற்க மறுத்து, இதனால் இந்தியாவின் பாரம்பரியமும், குடும்ப உறவுகளும் பாதிக்கப்பட்டு சிதைந்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ். முதலான இந்துத்துவ பிற்போக்கு அமைப்புகள் வாதிட்டுத் தடுக்கின்றன. பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துத்துவ ஆணாதிக்க சிவில் சட்டத்தைத் திணிக்கவே எப்போதும் இந்துத்துவ பரிவாரங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது நிலவும் மத ரீதியான திருமணச் சட்டத்தில் சிறிய சீர்திருத்தங்களைச் செய்வதைக்கூட கிறித்துவமயமாக்கும் முயற்சி என்று இக்கும்பல் எதிர்க்கிறது. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களும் சீர்திருத்தங்களும் செய்தால், இவற்றைப் பெண்கள் தங்களது கணவருக்கும் குடும்பத்திலுள்ள ஆண்களுக்கும் எதிராகப் பயன்படுத்திக் குடும்ப ஒற்றுமையைச் சீர்குலைத்துவிடுவார்கள் என்று இந்து சனாதன ஆணாதிக்க வெறியுடன் துக்ளக் சோ, குருமூர்த்தி வகையறாக்கள் கூப்பாடு போடுகின்றனர். இந்துத்துவ பரிவாரங்கள் பார்ப்பனிய ஆணாதிக்கத்துக்காக நிற்கின்றன என்றால், பிற்படுத்தப்பட்டோராகக் காட்டிக் கொள்ளும் நிலப்பிரபுக்களான ஜாட், யாதவ் சாதிய அரசியல்வாதிகள் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு ஆணாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றனர்.

ஜனநாயகத்தின் அறிவார்ந்த பிரதிநிதிகளாகச் சித்தரிக்கப்படும் ஓட்டுக்கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலோர் ஆணாதிக்கவாதிகளாகவே உள்ளனர். இவர்களின் காமவெறிக் களியாட்டங்களும் சின்னவீடு சமாச்சாரங்களும் பாலியல் குற்றவழக்குகளில் சிக்கியுள்ள சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலும் ஏற்கெனவே வெளிவந்து நாடெங்கும் நாறிப் போயுள்ளன.

மே.வங்கத்தில், ஒரு பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் ஒரு பூங்காவில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய விவகாரம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த போது, அந்தப் பெண்ணுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பணப்பட்டுவாடாவில் தகராறு வந்ததால், அவர்கள் தன்னை வல்லுறவு கொண்டதாக அப்பெண் பொய்ப்புகார் கொடுத்துள்ளார்” என்று கூச்சநாச்சமின்றி பேசியுள்ளார், திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் நாடாளுமன்ற பெண் உறுப்பினருமான டாக்டர் கோகோலி கோஷ். இந்த விவகாரம், தனது அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்டுள்ளது என்றார், அம்மாநிலத்தின் பெண் முதல்வரான மமதா பானர்ஜி.

டாக்டர் ராணி என்பவரை இரண்டாம் திருமணம் செய்தவரான பரஞ்சோதி, அப்படியொரு திருமணமே நடக்கவில்லை என்று புளுகியதை ஏற்றுக் கொண்டு அ.தி.மு.க. தலைவியான ஜெயலலிதா அவரைத் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட வைத்து அமைச்சராக்கினார். தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக டாக்டர் ராணி போலீசில் புகார் கொடுத்ததால், வேறுவழியின்றி பரஞ்சோதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும், அவர் போலீசைக் கொண்டு டாக்டர் ராணியைத் தொடர்ந்து மிரட்டிய விவகாரம் வெளிவந்துள்ள போதிலும், தனது கட்சியின் எம்.எல்.ஏ.வான பரஞ்சோதி மீது பெண் முதல்வரான ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த லட்சணத்தில் அவர், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதி மன்றங்களை அமைப்பது, இத்தகைய வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பது என்பது உள்ளிட்ட 13 அம்சத் திட்டத்தை அறிவித்து சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்.

கடுமையான சட்டங்கள் அல்ல, ஜனநாயகப் புரட்சிதான் தேவை!

பாலியல் வன்முறைக்கு எதிராக
ஆணாதிக்க சமூகத்தின் இழிவைச் சாடி, “வல்லுறவை ஏவாதே என்று ஆண்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகாதே என்று பெண்களுக்குத்தான் சமூகம் பாடம் நடத்துகிறது” என்ற முழக்க அட்டையுடன் டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

இவையனைத்தும் இது ஜனநாயக அரசு அல்ல, பெண்களைச் சமத்துவமாக நடத்தும் அரசியலமைப்பு முறையுமல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. இருப்பினும், இந்த அரசு நடுநிலையானதாகவும் ஜனநாயகமாகவும் நடப்பதாகக் கருதிக் கொண்டு சட்டங்களைக் கடுமையாக்கி, போலீசுத் துறையிலும் நீதித்துறையிலும் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுத்துவிடலாம் என்று சிலர் நம்பச் சொல்கின்றனர். போலீசாருக்குப் போதனைகளை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க வந்தால், அவரை மரியாதையோடும் பரிவோடும் போலீசார் நடத்த வேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகளைக் கூறுகின்றனர்.

ஆனால், மனித உரிமைகள் பற்றி போலீசாருக்குப் பல ஆண்டுகளாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்குப் பின்னரும் போலீசாரின் அணுகுமுறையில், அவர்களது சிந்தனையில் மயிரளவுகூட மாற்றம் ஏற்படவில்லை என்பதை அன்றாடம் போலீசை எதிர்கொள்ளும் சாமானிய மக்கள் நன்கறிவார்கள். ஆண்களாகிய உயர் அதிகாரிகளால் பெண் போலீசாரே பாலியல் வன்கொடுமைக்குள்ளாவதும், அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி அவர்களைப் பாலியல் இச்சைக்கு ஆண் அதிகாரிகள் பயன்படுத்துவதும் பற்றி நக்கீரன் இதழில் பலமுறை அம்பலமாகியிருக்கும்போது, பெண் போலீசாரை அதிகமாக நியமித்தால், பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்களைத் தடுத்துவிட முடியுமா? வேலைவாப்பிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு, பெண் போலீசு, பெண் நீதிபதிகள், மகளிர் போலீசு நிலையம் – முதலானவற்றால் இன்றைய அரசியலமைப்பு முறையின் கீழ் தொடரும் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்துவிடத்தான் முடியுமா?

இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிரானதாக உள்ளது. அது பெயரளவிலான ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும்கூடச் செயல்படுத்த வக்கற்று தோல்வியடைந்து செல்லரித்துப் போக் கிடக்கிறது. இன்றைய தந்தை வழி ஆணாதிக்க – இந்துத்துவ சாதியாதிக்க அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு, புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதே இன்றைய அவசர-அவசியத் தேவையாக உள்ளது. மாறாக, போலீசுக்கு இன்னும் அதிகாரங்களைத் தருவதும், தண்டனைகளைக் கடுமையாக்குவதும் பாம்புக்குப் பால்வார்த்த கதையாகவே முடியும்.

– பாலன்
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக – நாட்றாம்பாளையம்

2

சாதி வெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைப்போம்!

என்ற தலைப்பின்கீழ் 23.01.2013 மாலை 5.00 மணியளவில் தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை
நாட்றாம்பாளையம் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் சரவணன்

கண்டன உரை
தோழர் மாரியப்பன் (வி.வி.மு),
தோழர் வெங்கடேசன் (பு.ஜ.தொ.மு),
தோழர் சுரேஷ் (வி.வி.மு),
தோழர் ஜானகிராமன் (ம.உ.பா.மையத்தின் மாவட்ட செயலாளர்)

சிறப்புரை
தோழர் கோபி (வி.வி.மு வட்ட செயலர், பென்னாகரம்)

திரளான மக்கள் கூடி நின்று கண்டு உணர்வோடு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். கூட்டத்தின் கடைசியில் போலீசு அதிகாரிகளின் அருகில் பாதுகாப்போடு நின்றுகொண்டு மூன்று அஇதிமுகவைச் சேர்ந்த வன்னிய சாதியை சேர்ந்தவர்கள் தகறாறு செய்ய முற்பட்டபோது அதே சாதி சமூகத்தை சேர்ந்த நண்பர்கள் அவர்களை தடுத்து விரட்டியடித்தனர்.

புரட்சிகர கலை நிகழ்சியை காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களும் இறுதிவரை ஆர்வமுடன் கேட்டனர். தோழர்கள் துண்டேந்தி நிதிகேட்டு வந்த போது உழைக்கும் மக்களின் உணர்வோடு சில காவல் நண்பர்களும் நிதி தந்தும் வாழ்த்து தெரிவித்து சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. இறுதியில் பிரச்சினை செய்ய முயற்சித்து தோற்றுச் சென்ற மூவரில் ஒருவர் ஓடிவந்து கலைக்குழு தோழர்களில் ஒருவரிடம் கைகுலுக்கி, “நீங்கள் எல்லா சாதித் தலைவர்களையும்தான் திட்டுகிறீர்கள்! நான் வன்னிய ராமதாசை மட்டும்தான் திட்ட கூட்டம் போடுகிறீர்கள் என்று தவறாக நினைத்துக்கொண்டேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !

15
டச் போன்

சம்பவம் – 1

சேகர் கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவன். சுமதி நடுத்தர வயதை எட்டிய திருமணமனவர் – இரண்டு பிள்ளைகளின் தாய். இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரின் குடும்பத்தாரும் நட்பாகப் பழகக் கூடியவர்கள். சுமதியின் செல்பேசி எண் தற்செயலாக சேகருக்குக் கிடைக்கிறது. சுமதியின் செல்போனுக்கு ஆரம்பத்தில் நலம் விசாரிக்கும் குறுந்தகவல்களை அனுப்பத் துவங்கும் சேகர், கொஞ்சம் கொஞ்சமாக நகைச்சுவைத் துணுக்குகளை அனுப்புகிறான். ஒரு கட்டத்தில் சேகரின் செல்பேசியிலிருந்து ஆபாசமான நகைச்சுவைத் துணுக்குகள் அனுப்பப்படுகின்றன. இந்த ‘நட்பு’ ஒரு சில மாதங்களிலேயே மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொள்ளும் அளவுக்கு முன்னேறுகிறது.

சாதாரணமாகத் துவங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசமான உரையாடல்களாகவும், தனிப்பட்ட பாலியல் உறவாகவும் மாறுகிறது. ஒரு நாள் கணவனுக்குத் தெரியாமல் சுமதி சேகரோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மனைவியைக் காணாத சுமதியின் கணவன் போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஒரு வாரம் கழித்து பக்கத்து நகரத்தில் இருவரும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். இன்று இரண்டு குடும்பத்தாரும் மானம், மரியாதையைத் தொலைத்து விட்டு வதையுடன் வாழ்கின்றனர்.

சம்பவம் – 2

குமார் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன். கவிதா திருமணமான பெண் – இதற்கு மேல், சம்பவம் ஒன்றில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளை அப்படியே பெயர்த்தெடுத்து இங்கும் பொருத்திக் கொள்ளலாம். ஒரே வித்தியாசம், இங்கே கதையின் முடிவில் போலீசு வரவில்லை. கவிதா வீட்டிலிருந்து களவாடிச் சென்ற காசும், இருவரின் காமமும் தீர்ந்து போன பின் ‘காதல்’ ஜோடிகள் தாமே திரும்பி வந்து விட்டனர்.

(குறிப்பு : இந்த சம்பவங்களில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

டச் போன்சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சந்தித்து மாணவர்களிடையே செல்பேசிகள் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் கலாச்சார தாக்கத்தின் விளைவுகள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். உரையாடலின் போது அவர்கள் தெரிவித்த சம்பவங்கள் அனைத்தும் இந்த ரகம்தான்.

தற்போது பெருநகரங்களின் மாணவர்களிடையே செல்பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்துள்ளனர். வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் கூட சொந்தமாக செல்பேசிகள் வைத்திருக்கின்றனர். செல்பேசிகள் என்றால் சாதாரணமாக பேசுவதற்காக மட்டும் பயன்படுத்தப்படும் கருப்பு வெள்ளைக் கருவிகள் அல்ல – இணையப் பயன்பாடு மற்றும் வீடியோக்களை காண்பதற்கு ஏதுவாக சந்தையில் விற்கப்படும் விலை அதிகமான தொடுதிரை செல்பேசிக் கருவிகள் (touch phones).

வசதி படைத்த மாணவர்கள் தங்கள் பெற்றோரை நச்சரித்து, விலையுயர்ந்த செல்பேசிகளை வாங்கிக் கொள்கிறார்கள். வசதியற்ற மாணவர்களோ இது போன்ற செல்பேசிக் கருவிகளை வாங்க பள்ளி, கல்லூரி நேரம் போக சின்னச் சின்ன வேலைகளுக்குச் செல்கிறார்கள். காலையில் பேப்பர் போடுவது, மாலையில் கொரியர் கம்பெனிகளில் வேலை செய்வது என்று கிடைக்கும் வேலைகளைச் செய்து சேர்க்கும் காசில் செல்பேசிகளை வாங்குகிறார்கள். இந்தளவு மெனக்கெடத் தயாரில்லாத சில கல்லூரி மாணவர்களோ, இதற்காகவே சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுவது, வேறு கல்லூரிகளில் படிக்கும் வசதியான மாணவர்களிடம் அடித்துப் பறிப்பது, செயின் அறுப்பது என்று எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

உலகம் புரியாத விடலைப் பருவம்; உணர்ச்சிகளைக் கையாளப் பழகியிராத இரண்டுங்கெட்டான் வயது; சமூகப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிராத பொறுப்புணர்வற்ற வளர்ப்பு முறை; பொருளாதார பிரச்சினைகளைச் சமாளிக்க வேலையைத் துரத்தும் பெற்றோரால் கவனிக்கப்படாமல் விடப்படுவது; அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் தனிநபர் வாதம் – இவற்றோடு சேர்த்து கையில் அதிநவீன தகவல் தொழில்நுட்பம். இந்தக் ரசாபாசமான கூட்டுக்கலவை என்பது தவிர்க்கவியலாதபடிக்கு மாணவ சமுதாயத்தை திறந்து வைக்கப்பட்டிருக்கும் அசிங்கமான உலகம் ஒன்றின் வாசலுக்குள் தள்ளி விடுகிறது.

இம்மாணவர்களில் அநேகமானோர் முக நூல் (facebook) கணக்கு வைத்துள்ளனர். செல்பேசியில் கிடைக்கும் இணையத்தை அறிவைத் தேடித் தெரிந்து கொள்வதற்காகவோ, கல்வி சம்பந்தப்பட்ட துறை வாரியான தகவல்களைத் தேடிப் படிப்பதற்காகவோ இவர்கள் பயன்படுத்துவதில்லை. முக நூலில் பெண்களை நட்பாக்குவது, அவர்களோடு ஆபாசமாக உரையாடுவது (chat), ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்வது போன்றவைகளுக்காகவே பிரதானமாகப் பயன்படுத்துகிறார்கள். அவ்வகையில் செல்பேசி என்பது மலிவான “போர்னோ” (pornography – பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் — இலக்கியம்) கிடைக்கும் கருவியாகிவிட்டது.

செல்பேசியில் இணைய வசதி மிக மலிவாகக் கிடைக்கிறது. ஒரு நாள் முழுவதும் செல்பேசியில் இணையம் பயன்படுத்த வகைசெய்யும் ஐந்து ரூபாய் ரீசார்ஜ் கூப்பன்களை பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் வழங்குகின்றன. பெற்றோர் பேருந்துக் கட்டணத்திற்காகவும், கைச் செலவுகளுக்காகவும் கொடுக்கும் காசை மிச்சப்படுத்தினால இணையச் செலவுகளை ஈடுகட்டிக் கொள்ளலாம். ஆபாச இணையதளங்களில் இருந்து வீடியோக்களைத் தரவிறக்கம் செய்யும் இம்மாணவர்கள், அவற்றை நண்பர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள். வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருக்கும் போதே மேஜைக்கடியில் வைத்து இது போன்ற வீடியோக்களைப் பார்க்கவும் தயங்குவதில்லை.

இணையத்தின் மெய்நிகர் அனுபவங்களில் தோய்ந்தெழுவது அலுத்துப் போகும் போது, அதையே செயல்முறையில் பரீட்சித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அந்த வகையில் தான் தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். தமது பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களின் செல்போன் எண்களை எப்படியோ அறிந்து கொள்ளும் மாணவர்கள், அதை இந்த நட்பு வட்டத்திலிருப்பவர்களோடு பரிமாறிக் கொள்கிறார்கள்.

முதலில் அந்த எண்ணுக்கு ஏதாவது அநாமதேயமான தொலைபேசி இலக்கத்திலிருந்து சாதாரண குறுந்தகவல்கள் போகும். அதற்கு என்னவிதமான எதிர்வினை வருகிறது என்பதைப் பொறுத்து மேற்கொண்டு தொடர்கிறார்கள். நல விசாரிப்பு குறுந்தகவல்கள், மெல்லிய நகைச்சுவைக் குறுந்தகவல்கள், மெல்லிய ஆபாச நகைச்சுவைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் மணிக்கணக்காக பேசுவது, ஆபாச நகைச்சுவைகளைச் சொல்வது, ஆபாசப் பேச்சு என்று வளர்த்து விடுகிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு ‘நட்பாகும்’ பெண்களைத் தமது பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களோ, பிரதானமாக மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இதில் ஈடுபடுகிறார்கள். தனது செல்பேசிகளுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வது, அதிலேயே சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வாங்குவது, ஆடம்பரமான துணிமணிகள் வாங்கிக் கொள்வது, குடிப்பதற்கு காசு வாங்குவது என்று பணம் கறப்பதற்கான தேவைகள் நீள்கிறது. புதுப்புது பாணிகளில் முடிவில்லாமல் குவியும் நகரத்து வசதிகளை துய்ப்பதற்கான குறுக்கு வழியாக இத்தகைய விபரீதங்களை மாணவர்கள் செய்கிறார்கள்.

சக வயது மாணவிகளைக் ‘காதலிக்கும்’ ஒரு சில மாணவர்கள், அந்தக் காதலியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லவும், பரிசுப் பொருட்களை வாங்கித் தரவும், இன்னும் வேறு ‘காதல்’ நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட தனது ஆபாசப் பேச்சுக் கூட்டாளியிடமிருந்து பெற்று சமாளித்துக் கொள்கிறார்களாம். ஒரு கட்டத்திற்கு மேல் குறிப்பிட்ட பெண்களோடு பேசுவது சலித்துப் போனால், தம்மிடம் உள்ள எண்களை நண்பர்களிடம் கொடுத்து அதற்குப் பதிலாக வேறு எண்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆபாசப் பேச்சுக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டிருக்கும் மாணவர்கள் இதன் ஆபத்தான தொடர் விளைவுகள் பற்றிய பிரக்ஞையற்று இருக்கிறார்கள். கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாழ்க்கை முறை, பொறுப்புகளுக்காக வயதுக்கேற்ற கடமைகளை ஆற்றுவது, சமூகரீதியான ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது எல்லாம் பழங்கதைகளாகவும், கட்டுப்பெட்டித்தனங்களாகவுமே இவர்களால் நகைக்கப்படுகின்றன. மாணவர்களின் ஆதர்சங்களாய் வெள்ளித்திரையில் தோன்றும் நாயகர்கள் காட்டும் விட்டேத்தித்தனமும், சில்லறைத்தனமும், ஆணாதிக்க பொறுக்கித்தனமும் பொதுக் கலாச்சாரங்களாய் திரைக்கு வெளியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பழைய பாணி செல்பேசிகளை வைத்திருப்பவர்களைப் பார்த்து சூர்யாவும், மாதவனும் விளம்பரங்களில் எள்ளி நகையாடுகிறார்கள். செல்பேசி வைத்துக்கொள்ளாத மாணவர்கள் ‘நவ நாகரீக’ உலகத்தின் அங்கமாக மதிக்கப்படுவதில்லை. உடன் படிக்கும் மாணவர்களில் வசதியுள்ளவர்கள் ஆடம்பர நுகர் பொருட்களைத் துய்ப்பதன் மூலம் ஏற்படுத்தும் ‘முன்னுதாரணம்’ வாய்ப்பற்றவர்களிடம் ஏக்கத்தையும், வாய்ப்பை மறுக்கும் வரம்புகளை உடைத்தெறியும் வெறியையும் தோற்றுவிக்கிறது. விளைவாக, செல்போன் வாங்க செயின் அறுப்பும் – அதை ரீசார்ஜ் செய்ய ‘ஆண்டிகள்’ (ச்தணtதூ – அவர்களது மொழியில் நடுத்தர வயதுப் பெண்) தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் இவர்களிடம் எந்தவிதமான குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.

மறுகாலனியாக்க நுகர்வு மோகத்தின் – தக்கை மனிதர்கள்..!

செல்பேசிகள் வழியே தொடர்ச்சியான இணையத் தொடர்பும், முகநூலில் மூழ்கிக் கிடப்பதும், அதில் கிடைக்கும் தொடர்புகளோடு ஆபாசமாகப் பேசிக் களிப்பதும் என்று சதா சர்வகாலமும் எதார்த்த உலகிலிருந்து விலகி சஞ்சரிக்கும் இம்மாணவர்களின் பண்புக் கூறுகள் பாரிய அளவில் மாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. மாணவப் பருவத்துக்கே உரித்தான புதுமைகளை சிருஷ்டிக்கும் படைப்பூக்கத்தை வெளிப்படுத்துவது, குழு உணர்ச்சியையும் அதன் வழியே ஒரு சமூக உணர்ச்சியையும் ஏற்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபடுவது, சிக்கலானவைகளைச் சட்டென்று கிரகித்துக் கொள்ளும் இளமைத் துடிப்புள்ள மூளைச் செயல்பாடுகள் போன்ற நேர்மறை அம்சங்களை மெல்ல மெல்ல அவர்கள் இழந்து வருகிறார்கள்.

செல்பேசி இணையத் தொடர்பு மூலம் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், அதையே பேச்சிலும் செயலிலும் விரித்துச் செல்லும் செல்பேசி நட்புகளும் இம்மாணவர்களின் மிருக உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்து, ஹார்மோன்களைத் தாறுமாறாக இயக்கி சிந்தனையின் சமன்பாட்டையே குலைக்கின்றன. மலிவான பாலியல் உணர்ச்சித் தூண்டுதல்களுக்கு மட்டுமே வினையாற்றிப் பழகிப் போன மூளையின் நரம்புகள் இவர்களின் கவனத்தை கல்வியிலிருந்தும், விளையாட்டிலிருந்தும், சமூகப் பொறுப்புணர்விலிருந்தும் விலக்கி நிறுத்துகின்றன.

தனியார்மயத்தின் விளைவாய் மணவர்களிடமிருந்து அந்நியமாக்கப்பட்டிருக்கும் கல்வி, உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்கள், புறக்கணிக்கப்படும் கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகள், வேலையின்மை என்று மாணவர் சமுதாயத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய எந்த விசயத்திலும் இது போன்ற கலாச்சார சீரழிவுக்குள்ளாகும் மாணவர்கள் கவலை கொள்வதோ, எதிர் வினையாற்றுவதோ இல்லை. இறுதியில் விட்டேத்தித்தனமும், சமூகவிரோத தனிநபர்வாதமுமே எஞ்சி நிற்கிறது. இவர்கள் கல்லூரித் தேர்வுகளில் இயல்பாகவே தோற்றுப் போகிறார்கள் என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.

முதலாளித்துவ நுகர்வு வெறியின் அடிப்படை விதியான, ‘எப்போதும் புதியவைகளைத் தேடித் துய்ப்பது’ ‘எந்த வழியிலாவது நுகர்ந்து விடுவது’ என்பது இவர்களை ஆவலுடன் அலைய வைக்கிறது. மூன்று இஞ்ச் அகலத் தொடுதிரை வசதி கொண்ட செல்பேசிகள் அளிக்கும் காட்சி இன்பத்தை விட அதிகமான இன்பத்தை புதிதாக சந்தையில் இறங்கியிருக்கும் நான்கு இஞ்ச் அகலத் தொடுதிரை செல்போன்கள் வழங்கவல்லது என்றால், அதை அடைய எந்த எல்லைக்கும் செல்ல இம்மாணவர்கள் துணிகிறார்கள். அதற்காக சில்லறைக் குற்றங்களில் ஈடுபடுவது என்பது நினைத்ததை சாதித்து முடிக்கப் பயன்படும் சாகச நடவடிக்கையாக வியந்தோதப்படுகிறது. இவர்களுடைய நட்புவட்டத்தில் இந்த சாகசங்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் நாயக பிம்பத்துக்குக் கிறங்கிப் போகிறார்கள் – தங்களது பொறுக்கித்தனத்தை சாகசம் என்ற பெயரில் தொடரவும் செய்கிறார்கள்.

மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

பொருள் நுகர்வின் மேல் உண்டாகும் மோகத்திற்கும் – அந்த மோகத்தைத் தணித்துக் கொள்ள குற்றச் செயலில் ஈடுபவதற்கும் இடையேயான எல்லைக் கோடு என்பதே கற்பனையானது தான். சமூக நியதிகள் முந்தையதைக் குற்றமற்றதாகவும், பிந்தையதை தண்டனைக்குரியதாகவும் வரையறுக்கிறது. சம்பாதிக்காத வயதில், படிக்கும் காலத்தில் இது போன்ற ஆடம்பர நுகர்பொருட்களைப் பாவிப்பது குற்றமல்ல – ஆனால் அதை அடைவதற்கு யாருடைய கழுத்துச் செயினையாவது அறுத்தாலோ, பிக்பாக்கெட் அடித்தாலோ மட்டும் குற்றம் என்றாகிறது. மேலும் ஆபாசப் படங்கள் பார்த்தாலோ யாரிடமாவது ஆபாசமாகப் பேசினாலோ குற்றம் இல்லை. ஈவ் டீசிங்கில் வரம்பு மீறாத வரை குற்றம் இல்லை என்று சொல்வது போல மாணவர்களின் இந்த சீரழிவுக் கலாச்சாரத்திற்கும் அப்படி சில வரம்புகளை கற்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் இரண்டையும் பிரிக்கும் கோடு என்பது தற்போது மங்கி வருகிறது.

பாதை எதுவாயிருப்பினும் இலக்கு என்னவாயிருக்கிறது என்பதே முக்கியமானதாகி விட்ட இந்நிலையில், மேற்கொண்டிருக்கும் ‘பாதையில்’ தடுமாறி ஏதேச்சையாக மாட்டிக் கொள்பவர்கள் குற்றவாளியாகிறார்கள் – மாட்டாதவர்களின் கெட்டிக்காரத்தனம் போற்றப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகள் இந்தச் சின்ன வயதிலேயே இணையதளங்கள், செல்பேசிகள் என்று நவீன தொழில்நுட்ப சாத்தியங்களில் புகுந்து விளையாடுவதைப் பார்த்து புளங்காகிதம் அடைகிறார்கள். தமக்கு வாய்க்காத அறிவெல்லாம் தமது பிள்ளைகளுக்கு வாய்த்திருப்பதைப் பார்த்து பிரமித்துப் போகிறார்கள். எதேச்சையான சந்தர்ப்பத்தில் குட்டு வெளிப்படும் போது திகைத்துப் போகிறார்கள். நடந்த காரியத்துக்காக மனம் நொந்து போகிறவர்கள் கூட அதன் பின்னே ஒளிந்திருக்கும் காரணத்தைத் காணத் தவறுகிறார்கள். ஓரளவு விபரம் தெரிந்த நடுத்தர வர்க்கத்தினரோ, இவறையெல்லாம் ஒரு வரையறையோடு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றே கருதுகிறார்கள்.

போதை பொருட்கள்

புழுத்து நாறும் ‘நவீன’ கலாச்சாரம் : உலகமயமாக்கல் வழங்கும் பரிசு..!

“அந்தக் காலத்துல சார்… ஒரு போன் பண்ணனும்னா டிரங்கால் புக் பண்ணனும். அப்பால எப்படா கூப்பிட்டு கனெக்சன் கொடுப்பான்னு தேவுடு காக்கனும். ஒரு வழியா கனெக்சன் கிடைச்சா ஒரே கொர்ர்ர்னு கேட்னு இருக்கும். இப்ப பாருங்க. எல்லார்ட்டயும் செல்போன் இருக்கு. அட, கூலி வேலைக்குப் போறவன் கூட வச்சிருக்கான் சார். இந்த வசதிகளையெல்லாம் அனுபவிக்கனும் சார்” – பேருந்திலோ, தொடர்வண்டியிலோ, தெருமுனை தேநீர்க் கடையிலோ அல்லது வேறு எங்காவதுமோ பொருளாதார உலகமயமாக்கலைப் பற்றிய பேச்சை எடுத்தவுடன் பாடமெடுக்கும் நடுத்தர வர்க்கத்தினரை எங்கும் காணலாம்..

ஆம், தொழில்நுட்பம் உலகமயமாகியுள்ளது. கணினி, இணையம், கைபேசி என தகவல் தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் மிகப் பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ளது. கைபேசியிலேயே இணையம் பார்க்கும் வசதியும் வளர்ந்துள்ளது. மொத்த உலகமும் தகவல் தொழில்நுட்பக் கண்ணியில் இறுக்கமாகவும், நெருக்கமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தில் மிஷேல் ஒபாமா வடித்த சென்டிமெண்ட் கண்ணீர் அவரது கன்னங்களினூடே வழிந்து ஆண்டிபட்டியில் விழுவதை தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதித்துள்ளது. உலகின் கடைக்கோடியில் நிகழும் சம்பவங்கள் கை சொடுக்கும் நேரத்தில் அதன் மறுபக்கத்தின் மக்களைச் சென்று சேர்கின்றன.

பொருளாதார உலகமயமாக்கம் தொழில்நுட்பத்தை மட்டும் உலகமயமாக்கவில்லை – அதோடு சேர்த்து நுகர்வு வெறியையும், அதற்கு ஏதுவான முதலாளித்துவ தனிநபர் கலாச்சாரத்தையும், அது உண்டாக்கும் சமூகச் சீரழிவுகளையும் சேர்த்தே உலகமயமாக்கியுள்ளது. ஆபாசப் படங்கள் தரவிறக்கம் செய்யும் இணைய தளங்கள் இந்தியாவில் சட்ட விரோதம் – ஆனால் மேற்கின் பல்வேறு நாடுகளில் அது சட்டப்பூர்வமானது. கூடவே தொழில்நுட்ப சாத்தியங்கள் தேசங்களின் எல்லைக் கோடுகளைத் தகர்த்தெறிந்துள்ளது. இணைய வெளியில் பாரவிக் கிடக்கும் ஆபாசக் குப்பைகளை எவர் நினைத்தாலும், எந்த நேரத்திலும், எந்த நாட்டிலிருந்தும் தரவிறக்கம் செய்து கொள்வதை அது சாத்தியப் படுத்தியுள்ளது.

செல்போன் நிறுவனங்கள் சந்தைப் பொருளாதாரம் தோற்றுவித்திருக்கும் கழுத்தறுப்புப் போட்டியைச் சமாளிக்கவும், உலகப் பொருளாதார பெருமந்தம் தோற்றுவித்திருக்கும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் எந்தளவுக்கும் இறங்கிப் போகத் தயாராய் உள்ளன. ஒரு பக்கம் லாப வெறியோடு அலையும் செல்போன் நிறுவனங்கள்; இன்னொரு பக்கம் வெட்டி அரட்டைக் கலாச்சாரத்துக்கும் இணையத்தின் கசடுகளுக்கும் அடிமையாக்கப்பட்ட இளைஞர் கூட்டம். இவர்களிருவரும் ஒருவருக்கொருவர் பொருந்திப் போகிறார்கள்.

இந்தப் பண்பாட்டை மேலும் வளர்த்தெடுத்து கல்லா கட்டும் விதமாகவே விதவிதமான ரீசார்ஜ் கூப்பன்கள், மலிவான விலையில் சிம்கார்டு, மலிவான விலையில் கொரியன் செல்போன்கள், மலிவாக இணைய வசதி என்று செல்போன் நிறுவனங்கள் தங்களிடையே போட்டி போடுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரவியுள்ள ஆபாசக் கலாச்சாரத்தில் கால் நனைக்கும் அளவிற்கு ‘துணிச்சல்’ இல்லாதவர்களுக்காகவே இதை ஒரு முறைப்படுத்தப்பட்ட தொழிலாக சில நிழல் நிறுவனங்கள் நடத்துகின்றன. செல்போன் நிறுவனங்களும் இதைக் கண்டும், காணாமலும் தொடர அனுமதிக்கின்றன.

மாதச் சம்பளத்துக்காக அமர்த்தப்படும் பெண்கள், குறிப்பிட்ட சில எண்களில் அழைத்தால் மலிவான பாலுணர்ச்சியைத் தூண்டுவது போல் பேசுகிறார்கள். இதற்காகவே, ‘நட்புக்காக அழைக்க வேண்டிய எண்கள்’ ‘தனிமையைத் தீர்த்துக்கொள்ள அழைக்க வேண்டிய எண்கள்’ என்று சம்பந்தப்பட்ட நிழல் நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் செய்கின்றன – மட்டுமின்றி, செல்போன் நிறுவனங்களே குறுந்தகவல்கள் மூலமும் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த எண்களை அழைத்தால், சாதாரண தொலைபேசிக் கட்டணங்களை விட பல மடங்கு அதிகளவில் செலவாகும். சில நிமிடங்கள் பேசுவதற்கே பல நூறு ரூபாய்களைக் கட்டணமாக வசூலிக்கின்றன. வசூலாகும் கட்டணத்தில் செல்போன் நிறுவனங்கள் கமிஷன் பெற்றுக் கொண்டு அனுமதியளிக்கின்றன. இவை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் சூழலில் பெண்களை பேசி பயன்படுத்த நினைக்கும் மாணவர்களின் செயல் எங்ஙனம் குற்ற உணர்வை ஏற்படுத்தும்?

கலாச்சாரச் சீரழிவு என்பது சூறைக்காற்றில் பரவும் விசம் போல் ஒட்டுமொத்த சமூகத்தின் மேலும் படர்ந்து வருகின்றது. அற்றது நீக்கி உற்றதைப் பருகும் அன்னப் பறவை போல உலகமயமாக்கலின் ‘நற்பயன்களை’ மாத்திரம் பெற்றுக் கொண்டு, அதன் தீமைகளில் இருந்து எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால், தனது பிள்ளை வழி தவறிச் செல்வதை தற்செயலாகவோ அல்லது விசயம் முற்றி விவகாரமாக வெடிக்கும் போதோ அறிய நேரும் பெற்றோர் அவ்வாறு முடியும் என்று இன்னமும் நம்புகிறார்கள்.

ஒரு படையெடுப்பைப் போல் கலாச்சார அரங்கில் நிகழும் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டுமெனில், புறநிலையில் இதற்கு மாற்றான ஒரு புதிய கலாச்சாரத்தை நிறுவ சமூக, பொருளாதாரத் தளத்தில் போராடுவதும், அதை சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த அக நிலையில் போராடுவதுமே உதவி செய்யும். மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதன் ஊடாகத் தான் இந்த மாற்றுக் கலாச்சாரத்தை வரித்துக் கொள்வதும் சாத்தியமாகும். எளிமையாகச் சொல்வதாக இருந்தால் சமூக உணர்வு, பொறுப்பின் மூலமே நுகர்விலும், வருமானத்திலும் தனிநபர் வாதத்தை முன்வைத்து வரும் இந்த கலாச்சார சீர்கேடுகளை அகற்ற முடியும்.

-தமிழரசன்.
_____________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________________________________

பெண் விடுதலை கானல் நீரல்ல !

4
புரட்சியில் மகளிர்
பிரெஞ்சு புரட்சியில் பெண்கள்

லைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போதைக்கு ஓய்ந்துவிட்டன. ஆனால் பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. தூக்கில் போடுவது, ஆணுறுப்பை வெட்டுவது – எனத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியபோதிலும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கான காரணம், இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியலமைப்பில் உள்ளது. இந்தியச் சமூகமானது ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களின் ஊடாக உருவாகி வளர்ந்த சமூகமல்ல. நீண்ட நெடுங்காலமாக நீடித்துவரும் சாதி, மத, ஆணாதிக்கம் நிறைந்த நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பும், அதற்கு அக்கம்பக்கமாக தரகு முதலாளித்துவ உற்பத்திமுறையும், அதற்கேற்ற அரசியல், பண்பாட்டு நிறுவனங்களும் காலனிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டன.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கப் பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு-பாலியல் தாக்குதலுக்கு ஆணிவேராக இருக்கும் அதேநேரத்தில், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயமாக்கம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் கண்டிராத வகையில் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், பெண்களை நுகர்வுப் பண்டமாக்கி எவ்வித விழுமியங்களுமின்றி பாலியல் வன்முறைகளைத் தீவிரமாக்கியிருக்கும் உலகமயமாக்கம்; மறுபுறம், ஆதிக்க சாதி மற்றும மத அமைப்புகள் பெண்கள் மீது கேள்விக்கிடமற்ற முறையில் தொடுக்கும் தாக்குதல்கள், கட்டுப்பாடுகள், கௌரவக் கொலைகள்- என இத்தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

சாதியானாலும், பாலியல் வன்கொடுமையானாலும் இரண்டுக்குமே அடிப்படையாக உள்ள அரசியல்- பொருளாதார கட்டமைவை இன்றைய அரசு பாதுகாக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராக உள்ளது. அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை முதலான அரசின் உறுப்புகளே பெண்களுக்கு எதிரான முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அதை யாரும் தட்டிக் கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாதபடி சட்டத்துக்கு மேலானதாக, தனிவகைச் சாதியாக இருந்துகொண்டு சமூகத்தையே அச்சுறுகின்றன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கொண்டு பெண்கள் மீது கேள்விமுறையற்ற வன்முறைகளில் ஈடுபடும்இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின்கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்திருத்தங்களைக்கூட ஏற்க மறுக்கிறது அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துள்ள போதிலும், மாநில போலீசு இயக்குனர் முதல் மகளிர் நல அமைச்சகம், வாரியங்கள் உள்ளிட்ட எந்த அரசாங்க உறுப்புகளும் தமது பரிந்துரைகளை வர்மா கமிஷனுக்குக் கொடுக்கவுமில்லை.

வரதட்சிணை தடுப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைத் தாக்குதல்களை தடுக்காத நிலையில், சட்டங்களை அமலாக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ள நிலையில், கடுமையான சட்டங்களாலும் தண்டனைகளாலும் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்டிவிட முடியாது. நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.

இவ்விரு நுகத்தடிகளையும் கட்டிக்காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணினத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !

0

பொதுவழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!
பெண்கள் உட்பட 100 பேர் கைது!!

DIGITAL CAMERAபொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், பொதுவழித்தட உரிமைக்காகவும் பெரும்பாலை பேருந்து நிலையத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுப்பிரமணி, விவசாயிகள் விடுதலை முன்னணி – காவாக்காடு தலைமை தாங்கினார்.

காவாக்காடு, பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேரி வழித்தடம் மூலமாக விவசாயம் செய்யவும், ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றும், விறகுக்கும் சென்று வரவும் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர். இவ்வழித்தடத்தை காவாக்காடு கிராமம் ஐயண்ணன் மகன் குமாரசாமி கல்நட்டு கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்துள்ளான். அதற்கு எதிராக பலமுறை பெரும்பாலை காவல்நிலையத்திலும் பெண்ணாகரம் வட்டாட்சியரிடமும் முறையிட்டும் பொதுவழித் தட உரிமையை பெற்றுக் கொடுக்கவில்லை.

அப்பகுதி மக்களின் நியாயமான உரிமைக்கு ஆதரவாக விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு பெரும்பாலை காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் கடைசிநாள் வரை அனுமதி பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

ஏற்கனவே அனுமதி கோரியிருந்த 11.2.2013 அன்று திட்டமிட்டபடி பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் நூற்றுக்கணக்கான மக்கள், பெண்கள் உட்பட முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் போது பெரும்பாலை போலீஸ் அவர்களை கைது செய்தது.

போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கவனித்து பெரும்பாலான மக்கள் அங்கு கூடினர். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறையும், வருவாய்த் துறையும் பொதுவழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள ஐயண்ணன் மகள் குமாரசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பொது வழித்தடத்தை மீட்டுக் கொடுக்காததால் காவாக்காடு பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு, விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் பின்னணியை விளக்கும் துண்டறிக்கை:

காவாக்காடு மக்களுக்கான இட்டேரி வழித்தடத்தை அபகரிக்க முயலும் முன்னாள் சாராய வியாபாரி இந்நாள் நிலமோசடித் திருடன் குமாரசாமியின் கொட்டத்தை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் :11-02-2013
நேரம் : காலை 11.00 மணியளவில்
இடம் : பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில்
தலைமை : தோழர் சுப்பிரமணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, காவக்காடு
கண்டன உரை :
தோழர் முருகன், வட்டக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மாவ செயலாளர், தருமபுரி
தோழர் கோபிநாத், வட்டார செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

வறட்சி போன்ற இயற்கை சீற்றத்தாலும் அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருவதாலும் விவசாயம் அழிந்து வருகிறது. எனினும் தம் நிலங்களை இரத்த உறவுகளாகக் கருதும் விவசாயிகள் உழைத்து உழைத்து பண்படுத்திய நிலங்கள் மீது கொண்ட பாசத்தால் அதை தரிசாக விட மனமின்றி விவசாயம் செய்து வருகிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் காவக்காடு வாழ் விவசாயிகள்.

மற்றொரு புறம் வறட்சி (ம) விவசாய அழிவை பயன்படுத்திக் கொண்டு ரியல் எஸ்டேட் கும்பல்களும், உள்ளூர் ஆதிக்க சக்திகளும் விளைநிலங்களை பறித்து வருகிறார்கள். அந்த வகையில், காவாக்காடு பகுதியில் முன்னாள் கள்ளச்சாராய வியாபாரியும், இன்னாள் நிலமோசடித் திருடனுமான குமாரசாமி விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகிறான்.

இட்டேரி வழித்தட உரிமை பறிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்யும் குமாரசாமி தலைமையிலான திருட்டுக் கும்பல்

காக்காடு, பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேரி வழித்தடம் மூலமாக தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் காடுகளுக்குச் சென்று வந்தனர். ஆடு, மாடுகளை இந்த வழியாக மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தை தடுத்து அராஜகமாக பிரச்சனையை தொடங்கினான் ஐயண்ணன் மகன் குமாரசாமி. இதற்கு துணை நின்றது பெரும்பாலை முனுசாமி செட்டி மகன் கோவிந்த செட்டி. இவ்வளவுக்கும் இட்டேரி வழித்தடம் செங்கம் என்பவரின் நிலத்தில்தான் உள்ளது. இதை மூடி மறைத்து தன் நிலத்தில் உள்ளதாகக் கூறி அடாவடியாக தடுத்தான் குமாரசாமி. இதற்காக சேலத்தில் இருந்து ரௌடிகளை கூட்டிவந்து சாராயம் கறி விருந்து வைத்து ரௌடித்தனம் செய்தான். துப்பாக்கி, வெடிகுண்டு, அரிவாள் போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்டு மக்களை தாக்கினான். காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு செய்து இந்த ரௌடிகள் மீது வழக்கு தொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமி, தன் குடும்ப பெண்ணை கற்பழிக்க முயன்றதாக தாழ்த்தப்பட்டோர் மீது பொய் வழக்கு தொடுத்தான். ஆதாரமில்லாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பிறகு, தள்ளாடும் முதியோர்கள் உள்ளிட்ட 54 பேர் மீது தங்களை தாக்க வந்ததாக பொய்வழக்கு போட்டான். இதனால் மூன்று ஆண்டுகளாக பிழைப்பு கெட்டு 54 பேரும் வாய்தா, வாய்தா என்று நீதிமன்றங்களில் படிக்கட்டுகள் ஏறி இறங்குகின்றனர்.

மேலும் இது தொடர்பாக காவக்காடு கீழ் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரது தாயார் வெள்ளை மூஞ்சு, சுந்தரம் ஆகியோரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர். பின்னர் மரத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதற்கு குமாரசாமி மீது பி.சி.ஆர். வழக்கு தொடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

மாதையன் சொத்தை ஆட்டையைப் போட்ட குமாரசாமி.

காவக்காடு மாதையன் – சிவலிங்கம் ஆகியோரது பாட்டனாரின் 10 ஏக்கர் நிலத்தை அரசு அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு பொய் பட்டா தயாரித்து கோவிந்த செட்டியும், குமாரசாமியும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். இவர்களிடையே போட்டி ஏற்படவே, இந்த நிலத்தின் மதிப்பை குறைக்கவும், கோவிந்த செட்டியை தன் வழிக்கு கொண்டு வரவும் இட்டேரி வழித்தடத்தை தடுத்தான் குமாரசாமி. இதன் மூலம் அந்நிலத்தை தன் பெயரில் வாங்க அக்ரிமென்ட் பட்டா பெற முயன்றான்.

இந்நிலையில் சென்ற ஆண்டில் குமாரசாமியின் புகாரின் பேரில் நிலமோசடி செய்ததாக மாதையன் – சிவலிங்கம் மீது வழக்கு தொடுத்து சிவலிங்கம் மற்றும் மாதையன் மனைவியை கைது செய்து சிறையில் தள்ளியது பெரும்பாலை போலீஸ். தானும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சிய மாதையன் தனது வீட்டிற்கு வராமல் தலைமறைவாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி 3 ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு மாதையன் வீட்டையும் காட்டையும் இடித்து நிரவி ஆக்கிரமிப்பு செய்து கொண்டான் குமாரசாமி. இதைத் தடுக்க வந்த மாதையனின் தாய், மகள்களை அடித்து துரத்தினான்.

தொடரும் குமாரசாமியின் அக்கிரமங்கள்

குமாரசாமி சொத்து சேர்த்த வரலாறு காவக்காடு சுற்றுப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். இதை அவனே பலமுறை பெருமைபட பேசி வருகிறான். “பெரும்பாலை போலிஸ் நிலையம் என் சட்டை பாக்கெட்டில்” என்று மக்கள் மத்தியிலேயே பேசி வருகிறான். இட்டேரி பொது வழித்தடப் பிரச்சனையிலும் இதே எண்ணத்தில்தான் துணிவோடு ஆக்கிரமித்து வருகிறான்.

இட்டேரி சம்பந்தமாக 90/12, 8/13 என்ற குற்ற எண்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் போலீசை தன் சாராய பணத்தைக் கொண்டு சமாளித்து விடலாம் என்ற பணத்திமிரில் 28-12-2012 அன்று ஜே.சி.பி. மூலம் இட்டேரி வழித்தடத்தை அழிக்க முயன்றான். சட்டவிரோதமாக செயல்படும் குமாரசாமியை கைது செய்யாமல் இதை எதிர்த்துப் போராடிய பெண்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு போட்டு 4 பேரை சிறையில் அடைத்தது பெரும்பாலை போலீஸ்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை என்று போலீசும் வட்டாட்சியரும் அழைத்தனர். பிறகு 2 நாள் கழித்து வருவதாகவும் அதுவரை குமாரசாமி வேலி போடக்கூடாது என்று கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் இதற்கிடையில் அதிகாரிகள் கூறியதை ஏற்காமல் திடீரென ரவுடிகளை அழைத்து வந்து 1-2-2013 அன்று நள்ளிரவில் சட்டவிரோதமாக கம்பிவேலி போட்டு விட்டான். இதன் பிறகு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை அறிந்து ரௌடிகளை வீட்டிலேயே வைத்துக் கொண்டான். 4-2-2013 அன்று அவ்வழித் தடத்தில் ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை குமாரசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அந்த ரௌடிகள் கொடிய ஆயுங்களுடன் வந்து வெறியுடன் தாக்கியியுள்ளனர். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரசாமி தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமல்ல தன்னுடை வன்னி சாதி மக்களின் சொத்துளையும் இவ்வாறே ஆக்கிரமித்தும், அவர்களுடைய வழி உரிமையை பறித்தும், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டும் தொல்லை கொடுத்து வருகிறான்.

சமூக விரோதிகளின் விருட்சம் தனியார்மயம்!

வன்னிய சாதியை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று மக்களின் தாலியறுத்த குமாரசாமி இன்று தனியார்மயம் வந்த பிறகு அதிகாரிகள்-ஆட்சியாளர்கள் என எங்கும் லஞ்சம், ஊழல் புழுத்து நாறத் துவங்கியது. நேர்மை, நீதியெல்லாம் பணத்தால் வாங்கப்படும் சரக்காகி விட்டது. தன் சாராய பணத்தால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இன்று பெரும் ஆதிக்க சக்தியாக வளர்ந்துள்ளான். இப்பணத்தை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டியும் வருகிறான். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கண்டு அஞ்சிய இவன் இன்று ஆதி சக்தியாக வாழ்வதற்கு தனியார்மயம் என்ற முதலாளித்துவ கொள்கையே காரணம்.

வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே குமாரசாமியை மண்டியிடச் செய்ய முடியும்!

ஒரு காலத்தில் சாராய வியாபாரியாக இருந்த பொழுது உள்ளூர் மக்களே குமாராசாமியை அடித்து உதைத்து உள்ளீர்கள். இன்று இவனது பணபலம் பொய்வழக்கு போடுவதை பார்த்து அஞ்சுகிறீர்கள். உங்களது அச்சம் என்ற சிறையினால்தான் குமாரசாமி ஆதிக்கத் திமிர் தொடர்கதையாகிறது. நீங்கள் அச்சத்தை தூக்கி எறிந்தால் மறுகணமே அவனது ஆதிக்கம் முடிவுக்கு வரும். சட்டரீதியாக போராடுவது மட்டுமின்றி வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே குமாரசாமிக்கு பாடம் புகட்ட முடியும்.

தமிழக அரசே!

  • விவசாயிகளின் நிலங்களை அபகரித்து தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து வரும் குமாரசாமியை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • விவசாயிகளிடமிருந்து அபகரித்த நிலங்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு திருப்பி வழங்கு!
  • விவசாயிகளை அச்சுறுத்தும் சமூக விரோதிகளுக்கு துணை போகாதே!

உழைக்கும் மக்களே!

  • குமாரசாமி போன்ற சமூக விரோதிகளுக்கு வீதியில் இறங்கி பாடம் புகட்ட ஒன்றிணைவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம்.
தொடர்புக்கு 9943312467

தகவல்:  செய்தியாளர், பென்னாகரம்