குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்! – சாய்நாத்

5

மனிதர் உருவாக்கிய வறட்சி – புகைப்படங்கள் : பி சாய்நாத்

ண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

“கனவை நனவாக்கும் அபார்ட்மென்டுகள்! சுத்தமான ராஜ ரத்தம் ஓடுபவர்களின் சுகமான வாழ்க்கைக்கு மகுடம் வைப்பதற்கான அபார்ட்மென்டுகள்!” இது ஒரு விளம்பரம். உண்மைதான்! ராஜ பரம்பரையினருக்கு எதுவுமே பிரமாண்டமாகத்தான் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அபார்ட்மென்டிலும் தனித்தனி நீச்சல் குளம் உண்டு. “உயர் ஆடம்பர, மிகப்பெரிய, சிறப்பு வடிவமைப்பிலான” அபார்ட்மென்டுகள் அல்லவா அவை! “ராஜ வாழ்வுக்கு” தகுதியானவை அவை.

அந்த கட்டிட நிறுவனம் தனது “முதல் பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு” என்று விளம்பரப்படுத்திய தனி வீடுகளையும் விற்பனைக்கு வைத்திருந்தது. 9,000 முதல் 22,000 சதுர அடி அளவில் கட்டப்பட்ட அந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தனி நீச்சல் குளம் உண்டு.

இரண்டு மாடி வீடுகளுக்கான திட்டங்களிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் மொட்டை மாடியில் நீச்சல் குளங்கள் உண்டு.

இவ்வளவும் பூனா நகரில் மட்டும். இவை அனைத்திலும் இன்னும் நிறைய தண்ணீர் தேவைப்படும் மற்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி சிறு அளவிலானதுதான். ஆனால் பெருமைப்பட வேண்டிய அளவில். இந்தப் போக்கு இன்னும் தொடரும் என்று அறிகுறிகள் தென்படுகின்றன.

இதெல்லாம் நடப்பது கடந்த 40 ஆண்டுகளில் மோசமான பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள மாநிலத்தில்; முதலமைச்சர் பிருத்விராஜ் சவுகானின் கருத்துப்படி இது வரை ஏற்பட்ட பஞ்சங்களிலேயே மிக மோசமான பஞ்சம் இது; ஆயிரக்கணக்கான கிராமங்கள் லாரிகளில் வரும் தண்ணீரை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன; அதிர்ஷ்டமிருந்தால் தண்ணீர் லாரி தினசரி வரும், இல்லையென்றால் வாரத்துக்கு ஓரிரு முறை வந்து சேரும்.

ஆனால், நீர் நிரம்பி வழியும் நீச்சல் குளங்களுக்கும் வற்றிக் கொண்டிருக்கும் ஏரிகளுக்கும் தொடர்பே இல்லாதது போல தோன்றுகிறது. இதைப் பற்றி யாரும் பெரிதாக விவாதிக்கவில்லை. டஜன் கணக்கிலான நீர் விளையாட்டு பூங்காக்கள் கட்டி மாநிலமே கொண்டாடிக் கொண்டிருந்த போது அதைப் பற்றி யாரும் பேசாதது போல. கிரேட்டர் மும்பை பகுதியில் மட்டும் அத்தகைய 20 நீர் விளையாட்டு பூங்காக்கள் இருந்தன.

பெரும் அளவு மடை மாற்றம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரக்தி பரவி வருகிறது. 7,000க்கும் அதிகமான கிராமங்கள் வறட்சியால் அல்லது தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த எண்ணிக்கை இது. மோசமான நிலையில் இருக்கும் இன்னும் பல ஆயிரக்கணக்கான கிராமங்கள் வறட்சி பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்படவில்லை. வறட்சி பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்ட கிராமங்களில் சிலவற்றுக்கு சிறிதளவு உதவி கிடைக்கிறது. அரசு தண்ணீர் லாரிகளை அந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கிறது. ஆயிரக்கணக்கான மற்ற கிராமங்கள் தனியார் லாரிகளிடம் தண்ணீர் வாங்கிக் கொள்கின்றன.

சுமார் 5 லட்சம் ஆடு, மாடுகள் கால்நடை முகாம்களை நம்பி உள்ளன. ஆடு, மாடுகளை கிடைத்த விலைக்கு விற்று விடுவது மும்முரமாக நடக்கிறது. பல அணைகளில் தண்ணீர் மட்டம் 15 சதவீதத்தை விட குறைந்துள்ளது. சிலவற்றில் அடிமட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறது. 1972ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தை விட இப்போது ஏற்பட்டுள்ள பஞ்சத்திற்கு செயற்கை காரணங்கள் அதிகம்.

கடந்த 15 ஆண்டுகளில் தொழில் துறை பயன்பாடுகளுக்கும் உயர்தட்டு வாழ்க்கை முறை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெருமளவிலான தண்ணீர் திருப்பி விடப்பட்டது. அத்தகைய திட்டங்களுக்கு எதிராக இரத்தம் சிந்திய போராட்டங்கள் நடந்தன. 2011ம் ஆண்டு மாவல் கிராமத்தில் ஆவேசத்துடன் போராடிய விவசாயிகள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர். பாவனா அணையிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாடுக்கு தண்ணீர் கொண்டு போகும் குழாய் பதிப்பதற்காக அவர்களது நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து அவர்கள் போராடினார்கள். அதனால் ஏற்படப் போகும் தண்ணீர் இழப்பின் பரிமாணம் தெரிந்தவுடன் இன்னும் ஆயிரக்கணக்கான பேர் போராட்டத்தில் குதித்தனர். அரசு 1,200 பேர் மீது “கொலை முயற்சி” வழக்கு பதிவு செய்ததது; கலவரம் செய்தததாக குற்றச்சாட்டை சுமத்தியது.

துணை முதலமைச்சர் அஜித் பவார் நீர்ப்பாசன திட்டங்களின் மீது தொழில் துறையின் ஆதிக்கத்தை அதிகரிக்க எல்லா முயற்சிகளையும் செய்தார். ஏற்கனவே பிற்போக்கான கூறுகளை கொண்டிருந்த மகாராஷ்டிரா நீர் வள ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை இன்னும் மோசமாக மாற்றுவதற்கு முயற்சி செய்தார். அவரது திட்டத்தில் இருந்த ஒரு புதிய விதிப்படி தண்ணீர் வினியோக கொள்கைகளுக்கு எதிரான எந்த எதிர்ப்பும் தடை செய்யப்படும்.

மேல் தட்டு ஆடம்பர வாழ்க்கை முறைக்கும் கேளிக்கைகளுக்கும் தண்ணீர் மடை மாற்றப்படுவது புதிதில்லை. 2005ம் ஆண்டு நாக்பூர் (ஊரக) மாவட்டத்தில் மிகப்பெரிய “விளையாட்டு & உணவு கிராமம் தண்ணீர்&கேளிக்கை பூங்கா” ஒன்று முளைத்தது. மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் அது கட்டப்பட்டது. அந்த கேளிக்கை “கிராமத்தில்” 18 வகையான நீர் சறுக்கு விளையாட்டுகள் இருந்தன; பனிக்கட்டி வளையத்தால் சூழப்பட்ட “இந்தியாவின் முதல் பனி நிலையம்” இருந்தது. 47 டிகிரி வெப்பத்தில் பனியையும் பனிக்கட்டியையும் பராமரிப்பது எளிதான வேலை அல்ல. 15 மணி நேர மின் வெட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த பகுதியில் அது பெருமளவிலான மின்சாரத்தை விழுங்கியது; கூடவே பெருமளவிலான தண்ணீரையும் கபளீகரம் செய்தது.

இந்த மாநிலத்தில்தான் கடந்த 10 ஆண்டுகளில் பல புதிய கோல்ப் மைதானங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது 22 கோல்ப் மைதானங்கள் உள்ளன. இன்னும் புதிதாக பல  கட்டப்பட்டு வருகின்றன. கோல்ப் மைதானங்கள் பெரும் அளவிலான நீரை பயன்படுத்துகின்றன. கடந்த காலங்களில் இது விவசாயிகளுடன் மோதல்களை உருவாக்கியிருக்கிறது. கோல்ப் மைதானங்கள் பெருமளவு பூச்சிக் கொல்லிகளை  பயன்படுத்துவதால் அவை தண்ணீரில் கசிந்து போய் நீர் வளங்களை நச்சுப்படுத்துகின்றன.

லவாசாவும் விவசாயமும்

“சுதந்திர இந்தியாவின் முதல் மலை நகரம்” என்று அழைக்கப்பட்ட லவாசா திட்டம் போன்றவற்றுக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை பார்த்த மாநிலம் இது. வறட்சிக் காலத்தில் திருமண விழாவுக்காக ஆடம்பரமாக செலவழித்ததற்காக அவரது கட்சியின் அமைச்சரையே கடுமையாக சாடியதற்காக கைத்தட்டல் வாங்கியவர் சரத் பவார். ஆனால் மத்திய விவசாய அமைச்சராக இருக்கும் அவர் லவாசா திட்டத்தை எப்போதும் உறுதியாக ஆதரித்து வருகிறார். 0.87 டி.எம்.சி. (அதாவது 2,460 கோடி லிட்டர் தண்ணீர்) நீரை தேக்குதவற்கு அனுமதி வைத்திருப்பதாக அந்தத் திட்டத்தின் இணைய தளத்தில், சிறிது காலத்துக்கு முன்பு  குறிப்பிட்டிருந்தது.

  • இவ்வளவு அதிக பணம் செலவழித்து இவ்வளவு குறைவான பாசனை வசதிகளை எந்த ஒரு மாநிலமும் உருவாக்கியதில்லை. 2011-12க்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி பாசன வசதி செய்யப்பட்ட நிலத்தின் அளவு 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது. மாநிலத்தின் விவசாய நிலங்களில் 18 சதவீதத்துக்கும் குறைவானவற்றுக்குத்தான் பாசன வசதி உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து பல கோடீஸ்வரர்களையும் மிகக் குறைவான பாசன வசதியையும் உருவாக்கிய பிறகுதான் இந்த நிலை. விவசாயம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில்தான் தொழில்துறைக்கு பெருமளவு தண்ணீர் திருப்பி விடப்படுவது நடந்தது. (பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2011-12ல் உணவு தானியங்களின் உற்பத்தி 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது)
  • உணவுப் பயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மகாராஷ்டிராவின் கரும்பு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய அல்லது தண்ணீர் பற்றாக்குறையான பகுதிகளில் நடைபெறுகிறது. இப்போதைய வறட்சியை காரணம் காட்டி மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகள் கரும்பு பிழிவதை நிறுத்தும்படி ஒரு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். அங்கு உள்ள சர்க்கரை ஆலைகள் ஒரு நாளைக்கு மொத்தம் 90 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றன. சர்க்கரை முதலாளிகளின் செல்வாக்கை வைத்து பார்க்கும் போது  கரும்பு பிழிவது நிறுத்தப்படுவதை விட அந்த ஆட்சியர் வேலை நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் தெரிகின்றன.ஒரு ஏக்கர் கரும்பு விளைவிக்க தேவைப்படும் தண்ணீரை வைத்து 10-12 ஏக்கர்களில் ஜோவார் போன்ற உணவுப் பயிர்களை விளைவிக்கலாம். 6 சதவீதம் விவசாய நிலங்களில் மட்டும் பயிராகும் கரும்பு விவசாயத்துக்கு மகாராஷ்டிராவின் பாதிக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கரும்புக்கு, “180 ஏக்கர் இஞ்ச் தண்ணீர்” தேவைப்படுகிறது. அதாவது ஒரு ஏக்கருக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர். 1.8 கோடி லிட்டர் தண்ணீரை வைத்து 3,000 கிராமத்து குடும்பங்களின் ஒரு மாத தண்ணீர் தேவையை நிறைவு செய்யலாம். (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் என்ற மிதமான கணக்கீட்டின்படி).
  • கரும்பு விவசாயம் நடக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டு தோறும் தாழ்ந்து கொண்டே போகிறது. இந்த அனுபவத்தை வைத்து மகாராஷ்டிரா அரசு ரோஜாப் பூ உற்பத்தியை ஊக்குவிக்காமல் இருக்கவில்லை. இப்போது மிகச் சிறிய அளவில் அது நடந்தாலும் போகப் போக அதிகமாவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ரோஜாப் பூவுக்கு இன்னும் அதிகமான தண்ணீர் “212 ஏக்கர் இஞ்சு தண்ணீர்”, அதாவது ஒரு ஏக்கருக்கு 2.12 கோடி லிட்டர் தண்ணீர் தேவை.பார்க்கப் போனால், சிறிய அளவில் நடக்கும் ரோஜாப் பூ உற்பத்தி மாநிலத்தில் பெரிதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஏற்றுமதி இந்த ஆண்டு 15-25 சதவீதம் அதிகரித்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நீளமான குளிர் காலம், வேலன்டைன்ஸ் டே எல்லாம் சேர்ந்து ரோஜா வளர்ப்பவர்களை வளப்படுத்தியிருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் அரசு கொண்டு வந்துள்ள ஒரே ஒழுங்குமுறை சட்டம் தண்ணீரை இன்னும் அதிகமாக தனியார் மயமாக்க வழி வகுத்திருக்கிறது. இந்த இயற்கை வளத்தின் மீது சமூகத்தின் அதிகாரத்தை விரைவில் ஒழித்து விட வழி வகுத்திருக்கிறது. இந்த வளம் வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கட்டுப்பாடில்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது சந்திக்கும் நெருக்கடியை உருவாக்குவதற்கு மகாராஷ்டிரா கடுமையாக உழைத்திருக்கிறது.

வறண்ட விரக்திப் பெருங்கடல்களுக்கு மத்தியில் தனியார் நீச்சல் குளங்கள் மிதக்கின்றன. பணக்காரர்களுக்கு எப்போதுமே பற்றாக்குறை ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையான மற்றவர்களின் நம்பிக்கைகள் நாளுக்கு நாள் காற்றில் பறக்கின்றன.

நன்றி: தி இந்து

கட்டுரை ஆங்கிலத்தில்
How the other half dries