சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 2

ஒனுர்கன் உல்கர்: நீங்கள் இப்போது உற்பத்தியை உயர்த்தும் பிரச்சினையில் முதலாளித்துவ அணுகுமுறைக்கும் மாவோவின் சோசலிச அணுகுமுறைக்கும் இடையேயான அடிப்படை வேறுபாட்டை விளக்கியிருக்கிறீர்கள். இந்த வேறுபாடு அறிவைப் பற்றிய கோட்பாட்டில் ஆழமாக வேர் கொண்டிருப்பது என்று நினைக்கிறேன்.

குறிப்பாக, உற்பத்திச் செயலில் நேரடியாகப் பங்கு கொள்வதன் காரணமாக உழைக்கும் மக்கள் சமூக எதார்த்தத்தைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்று கருதும் மாவோயிச அறிவுக் கோட்பாடும், மூளையுழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையேயான வேறுபாட்டை என்றென்றைக்கும் மறுஉற்பத்தி செய்ய விரும்பும் முதலாளித்துவ அறிவுக் கோட்பாடும் முற்றிலும் வேறுவேறானவை.

ஃபிரட் எங்ஸ்ட்

அறிவின் உண்மையான சொந்தக்காரர்களிடமிருந்து, அதாவது தொழிலாளர்கள், விவசாயிகளிடமிருந்து, கற்றுக் கொள்வதற்காகப் படித்த இளைஞர்கள் கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்டனர் என்று நான் நினைக்கிறேன்.

அப்போது நீங்களும் உடலுழைப்பில் ஈடுபட்டீர்கள். உங்களுடைய அனுபவத்திலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்? மாவோவினுடைய அணுகுமுறை உண்மையிலேயே சரியானதுதான் என்று நினைக்கிறீர்களா?

ஃபிரட் எங்ஸ்ட் : ஆம். நிச்சயமாக. ஆனால், முக்கியமான விசயம் என்னவென்றால், முதலாளித்துவத்தில் உற்பத்தியின் நோக்கமே வேறு. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால், விவசாய எந்திரங்களின் முன்னேற்றம் வழக்கமாக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு எந்திர வடிவமைப்பு செய்யும் பொறியாளர்களால் செய்யப்படுவதில்லை. பெரும்பாலும் விவசாயிகளே அந்த எந்திரங்களுடைய பிரச்சினையைக் கண்டுபிடிக்கிறார்கள்.

உதாரணமாக, அமெரிக்காவில் இருக்கும் விவசாயிகள், தாங்களே சின்ன பட்டறை வைத்திருக்கிறார்கள். அவர்களே தங்களது எந்திரத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். எந்திர விற்பனை முகவர்கள் வந்து பார்த்து அப்படியே அந்த மாற்றத்தைத் திருடி, அதை இன்னும் கொஞ்சம் சரி செய்து கொள்வார்கள்.

அறிவு கண்டிப்பாக அனுபவத்தில் இருந்து தான் வருகிறது. அதுதான் எல்லா புதிய கருத்துக்களுக்கும் ஆதாரம். முதலாளித்துவ அறிஞர்களும் பொறியாளர்களும் அந்த அறிவை மேலும் செழுமைப் படுத்த முடியும்.

தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற, முறையான கல்வியறிவு பெறாத தொழிலாளர்களால் அந்த அளவுக்குச் சிறப்பாக அனுபவத்தைக் கோட்பாடாக மாற்ற முடியாதுதான். ஆனால், கூட்டிக் கழித்துப் பார்த்தால், தொழிலாளர்களிடம் சேகரமாயிருக்கும் அனுபவம்தான் அறிவின் முதன்மையான ஆதாரம்.

அதன் காரணமாகத்தான் மாவோ தொழிலாளர்களை மூளையுழைப்புக்குப் பழக்கப்படுத்த வேண்டும் என்றும், படிப்பாளிகளை உடலுழைப்புக்குப் பழக்கப்படுத்த வேண்டும் என்றும் சொன்னார். இந்த இரண்டையும் இணைப்பது மிக முக்கியம்.

ஆமாம், அறிவைப் பற்றிய கோட்பாடும் இதில் ஒரு காரணிதான். ஆனால், உற்பத்தியின் நோக்கம்தான் இருப்பதிலேயே முக்கியமான காரணி. அமெரிக்காவிலும் மாவோ காலத்து சீனாவிலும் என்னுடைய சொந்த அனுபவம் அதைத்தான் காட்டுகிறது.

அமெரிக்காவில், நாங்கள், தொழிலாளர்கள் என்ற முறையில், தொழில்நுட்ப மேம்பாடு குறித்த எந்த ஆலோசனையையும் நிர்வாகத்திடம் கொண்டு போகமாட்டோம். ஏனென்றால், வேலை போய் விடுமோ என்று பயம்.

ஆனால், மாவோவின் சீனாவில், உற்பத்தியின் நோக்கமே வேறு. நிர்வாகி சொன்னது தவறு என்று நினைத்தால், ஒரு தொழிலாளி எதிர்த்து கேட்க முடியும். ஒழுங்குமுறை விதிகள் இருந்தது உண்மைதான். ஆனால், நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்கிறோம் என்பதுதான் பொதுவான புரிதல்.

ஒரு நிர்வாகி வெறுமனே தன்னுடைய அறையில் உட்கார்ந்து கொண்டு, டீ குடித்துக் கொண்டு, பேப்பர் படித்துக் கொண்டு, தொழிலாளிகளிடம் ‘‘அதைச் செய் இதைச் செய்” என்று உத்தரவு மட்டும் போட்டால், ‘‘வெளியே வா, இங்கே வந்து எங்களுடன் வேலை செய்” என்று அவர்களிடம் சொல்ல முடியும். தொழிலாளர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது.

யார் நிர்வாகியாக நியமிக்கப்படுவது என்பதும் தொழிலாளர்களுடைய ஒப்புதலைப் பொறுத்தது தான். இது தேர்தலைப் போல இல்லைதான். ஆனால், தொழிலாளர்கள் ஒரு நிர்வாகியை மாற்ற விரும்பினால், அவர்களின் கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், அவர்கள் வேலை நிறுத்தம் செய்யவோ, உற்பத்தியின் வேகத்தைக் குறைக்கவோ முடியும். ஆகையால், ஒருவர் வெற்றிகரமான நிர்வாகியாக இருக்க விரும்பினால், அவர் தொழிலாளர்களின் அங்கீகாரத்தைப் பெற்றே தீரவேண்டும்.

மறுபடியும் சொல்கிறேன். இங்கே முக்கியமான விசயம் என்னவென்றால், நிர்வாகிகள் தொழிலாளர்களை வேலையை விட்டுத் துரத்தவோ, சம்பளத்தை பிடித்து வைக்கவோ முடியாது. நான் உங்களை வழிநடத்த விரும்பினால், நான் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஒப்புதலோடும் காரணத்தோடும் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

அதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் சோசலிசத்திற்கும் இடையே இருக்கும் அடிப்படை வித்தியாசம். உற்பத்திச் செயல்முறையை செழுமைப்படுத்துவதை நோக்கி மக்களை உந்துகின்ற சக்தி இதுதான்.

மாவோவின் காலத்தில், உழைக்கும் வர்க்கம் ஒருபோதும் அதிகாரத்தில் இருக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். நான் அதை மறுக்கிறேன். அன்று குழுச்சண்டைகள், ஆயுத மோதல்கள் இருந்தன என்ற உண்மையே உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தில் இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது.

ஒனுர்கன் உல்கர்: நீங்கள் உங்கள் தொழிற்சாலையில் வேலை செய்யும்போது இத்தகைய குழுச்சண்டைகளை கண்கூடாகப் பார்த்தீர்களா?

ஃபிரட் எங்ஸ்ட் : எங்கள் தொழிற்சாலையில் இல்லை. ஆனால், பல கடுமையான சண்டைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தில் ஒரு நிலக்கரிச் சுரங்கத்திற்கு போயிருந்த போது அங்கே வாக்கு வாதங்கள் நடந்தன. கைகலப்புதான் நடக்கவில்லை.

சுரங்கத் தலைமையை தாங்கிப் பிடிக்கும் மிதவாதக் குழுவும் அதை விமர்சிக்கும் எதிரணியும் ஒருவரையொருவர் விமரிசித்து பெரிய சுவரெழுத்துக்களையும், ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினர். நாங்கள் பல பேரணிகளுக்குச் சென்றோம்.

இன்று மக்கள் எப்போது பார்த்தாலும் ‘ஜனநாயக’த்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், பல சந்தர்ப்பங்களில் அது ஒரு பித்தலாட்டமாகவே இருக்கிறது. மாவோவின் சீனாவில் உயிர் துடிப்பான ஜனநாயகம் அன்றாட வாழ்க்கையில் அமலில் இருந்தது.

நீங்களே சொல்லுங்கள். மக்கள் வாக்குவாதம் செய்தார்கள்தான். அவர்களின் கருத்து சரியானது என்பதை நிறுவ கைகலப்பிலும் ஈடுபட்டார்கள்தான். உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தில் இருந்தது என்று இதற்குப் பொருளில்லை என்றால், இதற்கெல்லாம் வேறு என்னதான் பொருள்? சொல்லுங்கள் பார்ப்போம்.

ஒனுர்கன் உல்கர்: இன்று, மேற்கில் மட்டுமல்ல, சீன கல்வி நிலையங்களில்கூட மாவோயிசக் காலத்தில் அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தப்பட்டு, கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்பட்ட இளைஞர்கள் வீணடிக்கப்பட்ட தலைமுறை என்றும், மேலிடத்து அதிகாரச் சண்டைக்காகப் பலிகொடுக்கப்பட்டவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கருத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஃபிரட் எங்ஸ்ட் : நான் இதை ஏற்கவில்லை. முதலில், இது அதிகாரச் சண்டையைப் பற்றியது மட்டுமல்ல. சொல்லப்போனால், நான் முன்னர் குறிப்பட்டதைப் போல, இது சோசலிசத்தைக் கட்டமைப்பதைப் பற்றியது. முதலாளித்துவப் பாதையில் செல்ல விரும்பியவர்களுக்கிடையில் நடந்த அதிகாரச் சண்டை, எந்த பாதையில் செல்வது என்று உழைக்கும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே நடந்த உண்மையான போராட்டம் மாவோவின் காலத்தின் நடந்தவை இந்த இரண்டின் கலவை என்று மதிப்பிடுவதே சரி.

‘அனுப்பப்பட்ட’ இளைஞர்களைப் பற்றிய உங்கள் கேள்வியைப் பொருத்த வரையில், அந்தக் காலத்தில் நகரத்து இளைஞர்கள் ஓரளவு சலுகை பெற்றவர்களாக இருந்தனர். சலுகை என்றால், கிராம மக்களைவிட நகர மக்கள் அதிகமான வசதிகளை அனுபவித்தார்கள். மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழையான சீனாவை தொழில்மயமாக்கும் முயற்சியில் இது ஒரு தவிர்க்க முடியாத விளைவு.

எப்படித் தொழில்மயமாக்குவது என்பதுதான் பிரச்சினை. நமக்கு ஏதோ ஒரு வகையான புராதன மூலதனத் திரட்சி தேவை. அந்தக் காலத்தில் பிரிட்டன் செய்ததைப்போல நிலங்களை வேலியிட்டு மடக்கியும் [enclosure] விவசாயிகளை நிலத்திலிருந்து விரட்டியும் சீனாவால் இதைச் செய்ய முடியாது.

அல்லது வேறு நாடுகளை ஆக்கிரமித்துச் சுரண்டவும் முடியாது. மக்களில் பெரும்பான்மை விவசாயிகளாக இருக்கும்போது தொழில்மயமாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டுவது எப்படி? 1950 துவக்கத்தில்கூட சீன மக்களில் 80% கிராமங்களைச் சார்ந்துதான் இருந்தார்கள்.

ஆகவே, சீனா என்ன செய்திருக்க முடியும்? பெரும்பான்மை மக்களான விவசாயிகள் மீது வரி விதிக்கலாம். ஏனென்றால், மக்கட்தொகையில் அவர்கள்தான் பெரும்பான்மையினர். அல்லது தொழிற்துறை உற்பத்திப் பொருள்களுக்கு ஈடாக வேளாண் பொருட்களை சமனற்ற விதத்தில் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.

வரிவிதிப்பு செலவுமிக்கதாகவும் பராமரிப்பதற்குக் கடினமானதாகவும் இருந்திருக்கும்.
ஆகையால், தொழிற்துறை பொருள்களுக்கு அவற்றின் உண்மையான அடக்க விலையைக் காட்டிலும் கூடுதலான விலையும், வேளாண் பொருள்களுக்கு அடக்க விலையைவிடக் குறைவான விலையும் தீர்மானித்து அவற்றைப் பரிமாறிக் கொள்ளும் முறையை அரசு கடைபிடித்தது. இதன் மூலம் தொழில்மயமாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டிக் கொண்டது.

இந்த வழிமுறை வெற்றி பெறுவதற்கும், தொழில்துறைப் பொருள்களின் விலைகளுக்கும் விவசாயப் பொருள்களின் விலைகளுக்கும் இடையேயான ‘கத்திரிக்கோல்’ இடைவெளியைப் பயன்படுத்தி தனியார் வியாபாரிகள் கொழுப்பதைத் தடுப்பதற்கும், சீனா வேளாண் பொருள் கொள்முதலில் ஏகபோகத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த தானிய ஏகபோக கொள்முதல் முறை சரியாக வேலை செய்வதற்கு வசிப்பிட அனுமதி (permit) முறையும் தேவைப்பட்டது. நகரவாசிகள் தானியங்களைக் குறைந்த விலைக்குப் பெறுவார்களாதலால், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் வாழமுடியும். விவசாயிகளிடமிருந்து தானியங்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன; தொழிற்துறை பொருள்கள் (துணிகள் அல்லது தெர்மாஸ் ஃபிளாஸ்க், பேட்டரி விளக்குகள், வாஷ் பேசின்கள் போன்ற இலகுரக தொழில் பொருட்கள்) அதிக விலைக்கு விற்கப்பட்டன. துவக்க நிலை தொழில்மயமாக்கலுக்கு இத்தகைய சமனற்ற பரிமாற்றம் அத்தியாவசியமாக இருந்தது.

இந்த சமனற்ற முறை, ஒரு துணி ஆலைத் தொழிலாளியின் ஒரு வருட உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை, ஒரு டஜன் முதல் நூறு விவசாயிகளின் ஒரு வருட உழைப்பின் விளைபொருளுக்கு ஈடாகப் பரிமாற்றம் செய்து கொள்வதைச் சாத்தியமாக்கியது.

இதற்கான காரணம் எளிமையானது. தொழில்மயமாக்கலுக்கு நமக்குச் சுரங்கங்கள், இரும்பு, எந்திரங்கள், கட்டிடங்கள் ஆகியவை தேவை. ஆனால் இவை எதுவும் விவசாயிகளுக்குத் தேவைப்படவில்லை. ஒரு தையல் மிசினோ, நூற்பாலை எந்திரமோ செய்வதற்கு இரும்பு உருக்காலை வேண்டும், நிலக்கரி, இரும்புக்கனிமச் சுரங்கங்கள் வேண்டும்.

ஒரு நீண்ட சங்கலித்தொடராகத் தொழில்துறையைக் கட்டியமைக்க வேண்டும். அதில் வேலை செய்யும் தொழிலாளிகள் சாப்பிட வேண்டும். இந்த உணவு எங்கிருந்து வரும்? விவசாயிகளிடமிருந்துதான். இப்படித்தான் மேற்கூறிய சமனற்ற பரிமாற்றம் தொழில்மயமாக்கத்தைத் துவக்கியது. இதுதான் முக்கியமான காரணம்.

சொல்லப்போனால், இது விவசாயிகளின் நீண்டகால நலனுக்காகவும்தான். எதிர்காலத்தில் விவசாயிகள் துண்டு துக்காணி நிலத்திலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதில்லை. கடுமையான விவசாய வேலைகளிலிருந்து அவர்களைத் தொழிற்சாலைகள் விடுவிக்கும். அவர்கள் டிராக்டர்களைப் பயன்படுத்த முடியும்.

கூட்டுப்பண்ணை உருவாக்கம் விவசாயிகள் எந்திரங்கள் வாங்குவதைச் சாத்தியமாக்கியது. இது நகர்ப்புறங்களுக்குத் தானியங்களை வழங்குவதையும் எளிதாக்கியது. ஆகையால், இதுதான் ‘‘ஹூகோ” என்றழைக்கப்படும் வசிப்பிட அனுமதி முறைக்கு அடிப்படையாக அமைந்தது.

அதே நேரம், நாம் எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. நான் சொல்ல விரும்புவதைச் சரியாக வெளிப்படுத்துவதற்குச் சீன மொழியில் ‘‘ஊனாய்” என்ற ஒரு அருமையான வார்த்தை இருக்கிறது. இதன் பொருள் ‘‘படுமோசமானதொரு சூழ்நிலையில் இருப்பதற்குள் சிறந்தவொரு தெரிவு.”

அன்றைய காலகட்டத்தில் மூலதனத்தைத் திரட்டிக்கொள்வதற்கு சீனாவிடம் இருந்த சிறந்த மாற்று சமனற்ற பரிமாற்றம்தான். ஆனால், அதற்கு ஒரு பக்க விளைவும் இருந்தது. இந்த முறையின் விளைவாக நகர்ப்புறத்து மக்கள் தங்களின் உழைப்பு விவசாயிகளின் உழைப்பை விட மதிப்புக் கூடியது என்று எண்ணினார்கள். அது உண்மையில்லை. ‘சமனற்ற பரிமாற்றம்’ என்பது அரசின் தானிய ஏகபோகம் தோற்றுவித்த ஒரு விளைவு.

ஆனால், இந்த விளைவினால் நகர்ப்புற மக்கள் தங்களை உயர்வானவர்களாக எண்ணத் தொடங்கினார்கள். அவர்களுக்கு உணவு உத்திரவாதமாக கிடைத்தது. துணிகள் உத்திரவாதமாகவும் குறைந்த விலையிலும் கிடைத்தன. தானிய ரேசன் முறையின் காரணமாகக் கிராமப்புற மக்கள் விரும்பினாலும், நகரங்களுக்குக் குடிபெயர முடியாத சூழல் இருந்தது.

கிராமத்திலிருந்து தன்னிச்சையாக ஒருவர் நகரத்துக்குச் சென்றால் அவருக்கு தானியம் கிடைக்காது. அதனால் நகரத்தில் வாழமுடியாது. நகரங்களில் அங்கு குடியிருப்போருக்கு மட்டுமே தானியம் உத்திரவாதம் செய்யப்பட்டிருந்தது. எனவே, ஒருவர் கிராமத்திலிருந்து நகரத்துக்குக் குடிபெயர்வதென முடிவெடுத்தால், அவர் தனக்குரிய தானியத்தையும் கிராமத்திலிருந்து கொண்டு செல்லவேண்டும்.

இதை ‘‘மக்களின் இடப்பெயர்ச்சிச் சுதந்திரத்திற்கு எதிரான கட்டுப்பாடு” என்று முதலாளித்துவ தாராளவாதிகள் சாடுகிறார்கள். லத்தீன் அமெரிக்காவிலும், இந்தியா போன்ற குறைவளர் நாடுகளிலும் உள்ள நகர்ப்புறச் சேரிகளைப் பாருங்கள். இந்தச் ‘சுதந்திரம்’ எப்படி வேலை செய்கிறது என்று தெரியும். இந்நாடுகளில் மக்கள் சுதந்திரமாகத்தான் இடம் பெயர்கிறார்கள்!

மேற்கண்ட (சமனற்ற பரிமாற்ற) முறையின் எதிர்மறையான விளைவு என்னவென்றால், முன்னேறிய கல்வி, மருத்துவ வசதிகளும் கலை, இலக்கிய நுகர்வுக்கான வாய்ப்பும் நகரங்களில் அதிகமாக இருக்கிறது. கிராமத்தை விட நகர மக்களின் வாழ்க்கை வேகமாக முன்னேறுகிறது. இது பழைய முதலாளித்துவ சமூகத்தால் தோற்றுவிக்கப்பட்டு, சோசலிச சமூகத்திலும் தொடர்கின்ற ஒரு பிளவு.
ஆகையால், இளைஞர்களைக் கிராமங்களுக்கு அனுப்பியது பயனுள்ளதாக இருந்தது.

முதலாவதாக, இது நகர மக்கள் விவசாயிகளுக்குத் தமது நன்றிக்கடனைத் திருப்பிச்செலுத்த வழிவகுத்தது. இளைஞர்கள் தமது அறிவையும் திறனையும் கிராமத்துக்கு கொண்டு சென்றார்கள். கிராமம் எப்படி இருக்கிறது என நகரத்து இளைஞர்கள் கண்ணால் காண்பது அவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியது. ‘‘நகரத்தில் உனக்கு கிடைப்பவை உன் இயற்கையான உரிமைகள் என்று நினைத்துக் கொள்ளாதே. விவசாயிகள், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள், எப்படி வாழ்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்” என்பதே அச்செய்தி.

டெங் சியாவோ பிங் அதிகாரத்திற்கு வந்தவுடன், இளைஞர்களைக் கிராமப்புறத்திற்கு அனுப்பும் கொள்கையை ஒழித்தார். இளைஞர்கள் கலகம் செய்த காரணத்தினால்தான் டெங் அந்த கொள்கையை அகற்றினார் என இன்று கூறுகிறார்கள். ஆனால், இளைஞர்கள் ஏன் கலகம் செய்தனர் என்று மிகச் சிலரே ஆராய்கின்றனர். மாவோவின் காலத்தில் இளைஞர்கள் கிராமம் செல்வதற்கு எதிராகக் கலகம் செய்யவில்லை.

1977 டெங் நுழைவுத்தேர்வு முறையை அறிமுகப்படுத்தினார். மாணவர்களில் மேட்டுக்குடிப் பிரிவினர் (இத்தேர்வு முறையில் அதிக மதிப்பெண் பெற்று) நகர்ப்புறக் கல்லூரிகளுக்குப் போய்விட முடிந்தது. விவசாயிகளுடன் வேலை செய்து கொண்டிருக்கும் மற்ற இளைஞர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

‘‘அவர்கள் மட்டும் போய்விட்டார்கள். நாங்களெல்லாம் வாழ்நாள் முழுவதும் கிராமத்திலேயே கிடந்து சாக வேண்டுமா?” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்கள். கிராமங்களில் பணியாற்றுவது குறித்து இளைய தலைமுறையிடம் நிலவிய கருத்தொற்றுமையையும், இக்கொள்கையின் பால் அவர்கள் கொண்டிருந்த உந்துதலையும் டெங்கின் கொள்கை ஒழித்துவிட்டது.

இருந்தாலும், ‘‘கிராமம் செல்” என்ற கொள்கையைக் கண்டிப்பவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானாவர்கள் அந்த வாழ்க்கையைப் பற்றிய மறக்க முடியாத அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் வாழ்வது அவர்களுக்கு சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், அந்த நாட்களைப் பற்றிய மலரும் நினைவுகள் இருக்கவே செய்கின்றன. ‘‘அந்த இளைமைக் காலத்துக்கும் அந்த வாழ்க்கைக்கும் திரும்பவும் போக விரும்புகிறோம்” என்று பலரும் கூறுகிறார்கள்.

முதலாளித்துவ சமூகத்தில் தொழிற்சாலையில் வேலை செய்த அனுபவத்தைக் கொண்டாடும் இலக்கியங்களை நான் எங்கும் கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்க இலக்கியத்தில், இளைஞர்கள் தங்களின் தொழிற்சாலை அனுபவத்தைப் பெருமையாக பேசிக்கொள்வதை பார்க்கவே முடியாது. நானும் ஒரு அமெரிக்க தொழிற்சாலையில் 12 வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். ஆனால், மாவோவின் சீனாவில் கிடைத்த அனுபவத்தைப் போன்ற ஒன்றைப் பெற்றதில்லை.

இந்தக் கொள்கையை எதிர்ப்பவர்கள்கூட, அன்றைய அனுபவத்தை மட்டும் ஏன் மலரும் நினைவுகளாகக் கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்தை யாரும் யோசிப்பதில்லை. அதுதான் பொதுமை என்ற அம்சம். அனைவரும் சமம் என்ற உணர்வு, ஒருவருக்கொருவர் உறுதுணை என்ற உணர்வு.

ஒரு தொழிற்சாலையில் கூட்டாக அடக்குமுறையை அனுபவிப்பதுகூட ஒரு ‘கூட்டுத்துவ அனுபவம்’தான். ஆனால், அதை மீண்டும் வாழ்ந்து பார்க்க யாரும் விரும்புவதில்லை. ஆனால், எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தோம் என்ற போதிலும், ஒரு புதிய சீனத்தை உருவாக்குவதற்கு உழைத்தோம் என்ற கூட்டுத்துவ அனுபவம்தான் நினைவுகூர்வதற்கான தகுதியைப் பெறுகிறது.

-தொடரும்

இத்தொடரின் முந்தைய பாகத்துக்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

-புதிய ஜனநாயகம் மே 2018

15 மறுமொழிகள்

  1. தமிழகத்தில் இப்போது பாடத்திட்டம் மாற்றப்பட்டு புதிய பாடப் புத்தகங்கள் வண்ணப் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக உதயசந்திரன் என்னும் ஐஏஎஸ் அதிகாரி கடுமையாக உழைத்துள்ளார். அவருடன் இருந்த பாடத்திட்ட குழுவினரும் கடுமையாக உழைத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் தரமான புத்தகங்களை உருவாக்கியுள்ளார்கள். இந்த புதிய முயற்சியை பாராட்டி ஏதாவது கட்டுரை வெளியிடலாமே. சமச்சீர் கல்வி என்னும் குப்பையை பாராட்டி கட்டுரை மேல் கட்டுரை வரைந்த நீங்கள் இப்போது ஏன் தயங்குகிறீர்கள்? அரசியல் காரணம் தானே.

  2. சமச்சீர் கல்வி நல்ல கல்வி என்றால் ஏன் நமது மாணவர்கள் நீட் தேர்வில் தொண்ணூற்று ஆறு மார்க்கு மட்டும் வாங்கி பாஸ் செய்வதற்கு கூட சிரமப்படுகிறார்கள்? மற்ற மாநிலங்களிலும் ஸ்டேட் போர்டு பள்ளிக் கல்வி வாரியம் உண்டு. அவர்களுக்கெல்லாம் நீட் தேர்வு பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் நீட் பிரச்சினை என்றால் மற்ற மாநிலத்தவர் பின் பொறியால் சிரிக்கிறார்கள். தமிழகத்தின் கல்வி சீரழிவின் சூழ்நிலையை தீவிரப்படுத்தியது சமச்சீர் கல்வி தான். 2006லேயே பல கல்வியாளர்கள் இது குறித்து எச்சரித்தார்கள். மாநில பள்ளி கல்வி வாரியங்கள் தங்கள் பாடத்திட்டத்தை cbse பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் மாநில தன்மையோடு அமைக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறது. எனவே நீட் தேர்வில் cbse பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்கிறார்கள் என குற்றம் சாட்டுவது அபத்தமானது. இந்தியாவில் கல்விக் கொள்கையை தீர்மானிப்பது மத்திய அரசுதான். மாநில அரசுகள் அல்ல. இந்த விடயத்தில் மத்திய அரசை பின்பற்றுவதுதான் மாநில அரசின் கடமை. சமச்சீர் கல்வி என்ற பெயரில் இஷ்டத்துக்கு எதையோ செய்தார்கள். இன்றைய அவல நிலைக்கு அது தான் காரணம். மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகம் எப்போதும் உருப்படியான பாட நூல்களை வெளியிட்டது இல்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பு வெள்ளை சினிமா இருந்தது. பின்பு அது ஈஸ்ட்மேன் கலர் சினிமாவாக வளர்ந்தது. மேலும் வளர்ச்சி அடைந்து இப்போது அனிமேஷன் கொண்ட திரைப்படமாக உள்ளது. ஆனால் பல லட்சம் பள்ளி பிள்ளைகள் படிக்கும் தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் அச்சுத் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த இந்த காலத்திலும் கருப்பு வெள்ளை பட நிலையிலேயே உள்ளன. பாடப் புத்தகத்தை படித்தால் கைடு புத்தகம் மாதிரி அரை குறையாக உள்ளது. இந்த பிரச்சினைகளை சரி செய்வதற்கு இப்போதுதான் முயற்சி தொடங்கியுள்ளது. இந்த முயற்சி அரசியல் காரணங்களாலும் ஊழலாலும் உருப்படாமல் போகக்கூடாது.

  3. முதலில் சமச்சீர் பாடதிட்டத்தை அதற்கு முந்தைய பாடத்திட்டத்துடன் தான் ஒப்பிட வேண்டும். முந்தைய பாடத் திட்டம் சிறப்பானதா?

    எல்லா பாடத்திட்டங்களிலுமே குறைபாடுகள் களையப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு தான் கல்வி வாரியங்கள், பாடநூல் கழகங்களும், இன்ன பிற அமைப்புகளும் உள்ளன. அப்படி குறைபாடுகளை களைந்து மேம்படுத்துதலில் ஒரு படியாக தான் சமச்சீர் பாடத்திட்டம் இருந்தது, இருக்கிறது.

    அதிலும் குறைகள் இருக்கலாம். அதை மேலும் மேம்படுத்துவது சரியானதே. அதை யாரும் குறை கூறமாட்டார்கள். குறைகளை நிவர்த்தி செய்ய NCERT பாடத்திட்டத்துடன் அதை ஒப்பிடலாம். ஆனால், சமச்சீர் பாடத்திட்டத்தை, அதன் நோக்கத்தை புழுதிவாரி தூற்றும் நோக்கத்திற்காகவே சிலர் செயல்படுகிறார்கள், செய்கிறீர்கள்.

  4. சமச்சீர் பாடத்திட்டத்திற்கும் NCERT பாடத்திட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை வேறுபாடுகள் என்னென்ன? எந்த வகையில், எந்தெந்த அம்சங்களில் சமச்சீர் பாடத்திட்டம், NCERT பாடத்திட்டத்தை விட தரம் குறைந்ததாக உள்ளது என்று இரண்டையும் ஒப்பிட்டு தரவுகள் தாருங்கள்.

    சமச்சீர் பாடத்திட்டம் குறைபாடானது என்பதற்கு நமது மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பது மட்டுமே ஆதாரமோ தரவோ ஆகாது. கல்வி, பாடத்திட்டம் குறித்த முடிவுகளுக்கு ஒப்பீடு மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் வந்தடைவதை மட்டுமே தரவுகளாக கொள்ள முடியும்.

    எந்தெந்த கல்வியாளர்கள் சமச்சீர் பாடத்திட்டத்தின் குறைபாடு குறித்து எச்சரித்தார்கள்? அவர்கள் முன்வைத்த ஒப்பீடு மற்றும் ஆய்வு தரவுகள் என்னென்ன?

    மீண்டும் கேட்கிறேன், சமச்சீர் பாடத்திட்டத்தை அதற்கு முந்தைய பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டீர்களா? சமச்சீர்-க்கு முந்தைய பாடத் திட்டம் சிறப்பானதா?

  5. அரே ஓ சம்போ ,,,,

    என்ன பெரீஸ், விட்டா பீஜீபீ காரனை மிஞ்சிடுவேள் போல இருக்கே … பொய் சொல்றதுல…

    //இந்தியாவில் கல்விக் கொள்கையை தீர்மானிப்பது மத்திய அரசுதான். மாநில அரசுகள் அல்ல. இந்த விடயத்தில் மத்திய அரசை பின்பற்றுவதுதான் மாநில அரசின் கடமை. //

    இந்தியாவில் கல்வி என்பது பொதுப்பட்டியல். மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு. பெரீசுக்கு இந்த உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ?
    போகிற போக்கில் வாயில் வடை சுடுவது போல சுட்டுக் கொண்டு போகக்கூடாது.
    சமச்சீர் கல்வியில் எந்த விசயம் சரியில்லை என்பதை குறிப்பாகப் பேச வேண்டும். சி.பி.எஸ்.ஈ- கல்வியை விட எவ்விதத்தில் அது சரியில்லாதது என்பதை குறிப்பாகக் குறிப்பிடவும். சும்மா , போற போக்குல குண்டாச்சட்டி சரியில்ல, அண்டா சரியில்லன்னு சொல்லிட்டுப் போகக் கூடாது.
    (தொடரும்)

  6. (பகுதி 2)
    மாநிலத்தின் தன்மைக்கு ஏற்ப கல்வி இருக்க வேண்டும் என்றால் எப்படி மத்திய பாடத்திட்டம் மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்க முடியும்.
    சி.பி.எஸ்.ஈ. – பாடத்திட்டம், பணம் கொடுத்து படிக்க வைக்கும் திராணியிருக்கும் மேட்டுக்குடிகளுக்கு, மேட்டுக்குடிகளால் உருவாக்கப்பட்டது. அதில் மாநில ஏழை மாணவர்களால் படிக்க முடியுமா என்றால், அது வாய்ப்பற்றது.
    பொதுவான கல்விமுறை / பாடத்திட்டம் வைக்க சாத்தியமற்ற ஒரு நாட்டில், நீட் போன்ற தேர்வு முறையே அயோக்கித்தனமானது. இந்த நாட்டின் கலாச்சாரமானது பல்வேறு தேசிய இனங்களின் கலாச்சாரத்தை உள்ளடக்கியது. இங்கு ஒரே பாடத்திட்டம் என்பது தேசிய இனங்களின் உரிமையை ஒடுக்குவதன் ஒரு பகுதியே அன்றி வேறில்லை..
    முதல் பகுதியில் நான் கேட்ட “கல்வி பொதுப்பட்டியலா, இல்லையா, ஏன் பொய் சொல்கிறீர்கள் ” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் தாங்கள் விவாதித்தால் அது நாணயமற்ற செயல்.

  7. (பாகம் -1)
    அரே ஓ சம்போ ,,,,

    என்ன பெரீஸ், விட்டா பீஜீபீ காரனை மிஞ்சிடுவேள் போல இருக்கே … பொய் சொல்றதுல…

    //இந்தியாவில் கல்விக் கொள்கையை தீர்மானிப்பது மத்திய அரசுதான். மாநில அரசுகள் அல்ல. இந்த விடயத்தில் மத்திய அரசை பின்பற்றுவதுதான் மாநில அரசின் கடமை. //

    இந்தியாவில் கல்வி என்பது பொதுப்பட்டியல். மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு. பெரீசுக்கு இந்த உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ?
    போகிற போக்கில் வாயில் வடை சுடுவது போல சுட்டுக் கொண்டு போகக்கூடாது.
    சமச்சீர் கல்வியில் எந்த விசயம் சரியில்லை என்பதை குறிப்பாகப் பேச வேண்டும். சி.பி.எஸ்.ஈ- கல்வியை விட எவ்விதத்தில் அது சரியில்லாதது என்பதை குறிப்பாகக் குறிப்பிடவும். சும்மா , போற போக்குல குண்டாச்சட்டி சரியில்ல, அண்டா சரியில்லன்னு சொல்லிட்டுப் போகக் கூடாது.

  8. பதினோராம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1100க்கு மேல் மதிப்பெண்கள் பெற முடிகிறது என்றால் அந்தப் பாடத்திட்டம் குப்பையாகத்தான் இருக்க முடியும். இந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டம் வந்ததால் பலன் அடைந்தது ஏழை பிள்ளைகள் அல்ல. நாமக்கல் ஏரியா கறிக்கோழி பள்ளிகள் தான். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு என்பதால் தான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாடத்திட்டம் அரசியல் சட்டத்தின் படி அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டமானது மொழி, பண்பாடு ஆகிய விடயங்களின் அடிப்படையில் மாறுபடலாம். ஆனால் மற்ற விடயங்களில் (குறிப்பாக அறிவியல். கணிதம் ஆகிய துறைகளில்) சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தான் அடியொற்றி இருக்க வேண்டும் என விதிமுறை இருக்கிறது. Cbse பாடத்திட்டம் என்பது வேலை நிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் மாறும் மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்டது. இன்று தில்லியில் இருக்கும் ஏழை பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. இந்தி மீடியத்தில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். சாதாரண பின்னணி கொண்ட மாணவர்கள் படிக்கும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வட இந்தியாவில் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் நாமும் உருப்படியாக எதையும் செய்யக்கூடாது. உருப்படியான எதுவும் வெளியிலிருந்து வரவும் கூடாது என செயல்பட்டதால் இங்கு தனியார் பள்ளிகளின் பாடத்திட்டமாக சிபிஎஸ்இ மாறிப் போனது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் சிறப்பானதாக கருதப்பட்டதால் நிறைய மேட்டுக்குடி தனியார் பள்ளிகள் அந்த பாடத்திட்டத்திற்கு மாறின. இதுதான் உண்மை. கேரளாவிலும் ஆந்திராவிலும் மாநில பாடத்திட்டத்தில் படிப்பதற்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பதற்கும் வேறுபாடு கிடையாது. தமிழ்நாட்டில் தான் இத்தனை பிரச்சனைகளும். இங்கே நடக்கும் கூத்தை பார்க்கும் போது கல்வி பொது பட்டியலுக்கு போனது சரி தான் என தோன்றுகிறது.

  9. //பதினோராம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1100க்கு மேல் மதிப்பெண்கள் பெற முடிகிறது என்றால் அந்தப் பாடத்திட்டம் குப்பையாகத்தான் இருக்க முடியும். ///

    இந்த நிலை சமச்சீருக்கு முன்னர் இருந்த பாடத்திட்டத்தில் இல்லையா? CBSE-ல் இல்லையா?

    மீண்டும் கேட்கிறேன், சமச்சீர்-க்கு முந்தைய பாடத் திட்டம் சமச்சீரை விட சிறப்பானதா? சமச்சீர் பாடத்திட்டத்தை அதற்கு முந்தைய பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டீர்களா?

  10. சமச்சீர் கல்வியை எதற்காக முந்தைய கல்வி முறையோடு ஒப்பிட வேண்டும்? அதை சிபிஎஸ்ஈ மற்றும் மற்ற மாநில பாட திட்டத்தோடு தான் ஒப்பிட வேண்டும். ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி. நாம் அகில இந்திய அளவில் மற்ற மாநிலத்தவரோடு வேலை வாய்ப்புக்கும் உயர்கல்விக்கும் போட்டியிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். மேலும் தில்லியில் இருக்கும் அதிகார மையத்திலிருந்து வெகு தொலைவில் தமிழ்நாடு உள்ளது. வடக்கின் ஆதிக்கத்தில் இருந்து தப்ப சமச்சீர் கல்வி மாதிரியான கல்வி முறை நிச்சயம் உதவாது. சமச்சீர் கல்வி முறையில் படித்தவர்கள் உயர்கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் மாநில அரசு நிறுவனங்களையே சுற்றி சுற்றி வரவேண்டும். இப்போது நீட் வடிவில் அதற்கும் பிரச்சனை வந்து விட்டது.

  11. சமச்சீர் கல்வி முந்தைய கல்வி முறையோடு ஒப்பிட வேண்டியதில்லை என்று சொல்வதன் மூலம் முந்தைய கல்வி முறையிலிருந்த குறைகளை களையவே சமச்சீர் கொண்டு வரப்பட்டது என்பதை மறைக்கிறீர்கள்.

    சமச்சீர் பாடத்திட்டத்தை, அதன் நோக்கத்தை புழுதிவாறி தூற்றும் நோக்கத்திற்காகவே நீங்கள் செயல்படுவதை இது காட்டுகிறது.

    எல்லா பாடத்திட்டங்களிலுமே குறைபாடுகள் களையப்பட வேண்டும், மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கு தான் கல்வி வாரியங்கள், பாடநூல் கழகங்களும், இன்ன பிற அமைப்புகளும் உள்ளன. அப்படி குறைபாடுகளை களைந்து மேம்படுத்துதலில் ஒரு படியாக தான் சமச்சீர் பாடத்திட்டம் இருந்தது, இருக்கிறது. அதிலும் குறைகள் இருக்கலாம். அதை மேலும் மேம்படுத்துவது சரியானதே. அதை யாரும் குறை கூறமாட்டார்கள். குறைகளை நிவர்த்தி செய்ய NCERT பாடத்திட்டத்துடன் அதை ஒப்பிடலாம்.

    சமச்சீர் கொண்டுவந்ததே தவறு என்று நிறுவ அதை NCERT பாடத்திட்டத்துடன் அதை ஒப்பிட முடியாது, கூடாது.

    உங்கள் நோக்கம் ?

  12. பதினோராம் வகுப்பு பாடத்தையே படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1100க்கு மேல் மதிப்பெண்கள் பெற முடிவது – சமச்சீர் கல்வியில் மட்டுமா இருக்கிறது?

    சமச்சீருக்கு முந்தைய பாடத்திட்டத்தில் இல்லையா?
    அல்லது CBSE-ல் இல்லையா?

    CBSE-முறையில் நாமக்கல் கறிக்கோழி பள்ளிகளைப் போன்ற தனியார் பள்ளிகள் இல்லையா? CBSE-ல் தனியார் கல்விக் கொள்ளை இல்லையா?

  13. சமச்சீர் ஆனாலும் சி.பி.எஸ்.சி ஆனாலும் அதில் பலனடைவது தனியார் பள்ளிகள் தான் என்றால், பிரச்சினை எங்கே உள்ளது? முந்தைய கல்வி முறையிலிருந்த குறைகளை களையவே சமச்சீர் கொண்டு வரப்பட்டது என்பதை திட்டமிட்டு மறைக்கிறீர்கள். சமச்சீரில் இருக்கும் குறைகள களையப்பட வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதையே காரணம் காட்டி தேசிய இன (மாநில) உரிமைகளை பறித்து கல்வியை மத்திய பொதுப்பட்டியலில் கொண்டு சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது.

  14. ”குறைகளை நிவர்த்தி செய்ய NCERT பாடத்திட்டத்துடன் அதை ஒப்பிடலாம்.”
    இதை 2006லேயே செய்திருக்க வேண்டும். மேலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக +1 மற்றும் +2 பாடத்திட்டத்தை இரு கழக ஆட்சிகளும் மாற்றவில்லை. சிபிஎஸ்ஈ-யை விடுங்கள். சமச்சீர் கல்வியின் பாடத்திட்டமானது மற்ற மாநில பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டாலும் தரம் குறைவு தான். அடிபட்டு தான் திருந்த வேண்டும் என இருந்தால் அதை யார் மாற்ற முடியும். கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மற்ற தென் மாநிலங்கள் ஏன் நீட் தேர்வை எதிர்க்கவில்லை?. அங்கே எல்லாம் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இல்லையா? ஏன் அவர்கள் தமிழகத்தின் நீட் எதிர்ப்பை ஆதரிக்கவில்லை.? ஏனெனில் இங்கே ஏழை மாணவர்களை முன்னிறுத்தி பச்சை அயோக்கியத்தனம் நடக்கிறது.சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் கொண்ட பல கறிக்கோழி பள்ளிகள் உண்டு தான். ஆனால் அவற்றில் வெறும் மனப்பாடத்தை ஊக்குவிப்பது இல்லை. பொது தேர்வில் பாஸ் கூட செய்ய முடியாது, மேலும் +1 பாடத்தையே எடுக்காமல் +2 பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்விக்கும் வக்கிரமும் அந்த முறையில் இல்லை. அப்படி மனப்பாடம் செய்யும் மாணவர்கள் பொது தேர்வில் வெற்றி பெறுவதும் கடினம்.

Leave a Reply to அக்காகி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க