ஜி.எஸ்.டி : ஏழைகள் மீது மோடி அரசு தொடுத்த தாக்குதல் !

கடந்த 2017 ஜூலை 1ம் தேதி நள்ளிரவில் கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு இந்த ஓராண்டில் நிகழ்த்திய அழிவு என்ன? யாருக்கு என்ன – எவ்வளவு பாதிப்பு?

ஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி “நள்ளிரவில் ஜி.எஸ்.டி” என்று உழைக்கும் மக்கள் மீதான அடிமைச் சங்கிலியை மாட்டி விட்டார் மோடி. அதன் ஓராண்டு நிறைவை பெரிய சாதனையாக அறிவித்து ஜூலை 1-ம் தேதியை ஜி.எஸ்.டி நாளாக மோடி அரசு கொண்டாடியிருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது என்று மார் தட்டினார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. “ஜி.எஸ்.டி வரி விதிப்பின் முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ 89,885 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த மாத சராசரியை ரூ 1 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு பாடுபடுவோம்” என்கிறது மோடி அரசு.

“ஆண்டுக்கு ரூ 12 லட்சம் கோடி வசூல் என்ற இலக்கைத் தாண்டி ரூ 13 லட்சம் கோடியை எட்டப் போகிறது. இதை பா.ஜ.க மட்டுமல்ல மக்களே கொண்டாடுகிறார்கள்” என்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இங்கு மக்கள் என்பதை பா.ஜ.கவின் புரவலர்களான முதலாளிகளும், அவர்களுக்கு சேவை செய்யும் மேட்டுக்குடிகளும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில், உழைக்கும் மக்களிடமிருந்து வரி வசூலை தீவிரப்படுத்தியது மோடி அரசை பொறுத்தவரையில் பெரிய சாதனைதான்.

GST என்பது மறைமுக வரியாகும். நாம் வாங்கும் ஒவ்வொரு ரூ 100 மதிப்பிலான பொருளுக்கும் சராசரியாக ரூ 18-ஐ வரியாக வசூலிக்கிறது அரசு. இத்தகைய மறைமுக வரி விதிப்பு உழைக்கும் ஏழை மக்கள் மீது அதிகமாகவும், பணக்காரர்கள் மீது குறைவாகவும் சுமையை ஏற்றுகிறது (பார்க்க அட்டவணையில் தரப்பட்டுள்ள உதாரணம்)

வர்க்கம்

மாத வருவாய்

மளிகை செலவு

ஜி.எஸ்.டி வரி

வருவாயில் வரி %

தொழிலாளி

ரூ 10,000

ரூ 5,000

ரூ 900

9%

நடுத்தர வர்க்கம்

ரூ 50,000

ரூ 10,000

ரூ 1,800

0.9%

பணக்கார முதலாளி

ரூ 1 கோடி

ரூ 1 லட்சம்

ரூ 18,000

0.018%

இந்த கணக்குப்படி ஒரு ஏழை தொழிலாளி கட்டும் வரியின் சதவீதம் நடுத்தர வர்க்கத்தின் வரிச் சுமையை விட 10 மடங்கு அதிகம், கோடீஸ்வர முதலாளி தொழிலாளியை விட 500 மடங்கு குறைவான சதவீதம் வரி கட்டுகிறார். இதை பெட்ரோல்/டீசல் மீதும், தொலைபேசி சேவை மீது வசூலிக்கப்படும் மறைமுக வரிக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இவ்வாறு வரவுக்கும் செலவுக்கும் போதாமல் போராடிக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்திடமிருந்து அதிக சதவீதம் வரி வசூலிப்பதுதான் ஜி.எஸ்.டி என்ற மறைமுக வரி.

இதற்கு மாறாக, தனிநபர் வருமான வரி ரூ 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு 0% ஆகவும், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானம் பெறும் ஒரு ஊழியருக்கு 5% ஆகவும், ரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டும் ஓரளவு வசதியான நபருக்கு 20% ஆகவும், ரூ 10 லட்சத்துக்கு அதிகமான வருமானத்தை குவிக்கும் முதலாளிகளுக்கு 30% ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

பணக்கார முதலாளிகள் வருமான வரியை கட்டாமல் ஏய்ப்பதன் மீதான நடுத்தர வர்க்கத்தின் கோபத்தை பயன்படுத்தி “வருமான வரியையை ரத்து செய்ய வேண்டும்” என்று சுப்பிரமணிய சுவாமி முதலான பார்ப்பன ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பணக்கார முதலாளிகளின் வரி ஏய்ப்பை தடுத்து நிறுத்தி வசூலிக்க துப்பில்லாத அரசு பணக்கார முதலாளிகள் மீதான வரியை குறைக்கவும், ரத்து செய்யவும் முன் வருகிறது; ஏழை மக்கள் வாங்கும் பொருட்கள் மீது வலுக்கட்டாயமான வரி வசூலிப்பை சுமத்துகிறது.

மேலும், கார்ப்பரேட் லாபத்தின் மீதான வரியை 30%-லிருந்து 25% ஆக குறைப்பதாக ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதி அளித்தது மோடி அரசு. அதன் படி ரூ 500 கோடி வரை ஆண்டு விற்பனை செய்யும் நிறுவனங்களின் லாபத்தின் மீதான வரி 25% ஆகக் குறைக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு ஜி.எஸ்.டி வரி வசூலில் சாதனை படைக்கும் மோடி அரசு, தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை உறிஞ்சி லாபத்தை குவிக்கும் முதலாளிகள் மீதான வரி விதிப்பை தொடர்ந்து குறைத்து வருகிறது. அதாவது, உழைக்கும் மக்களிடமிருந்து அதிக வரி வசூல், முதலாளிகளுக்கு வரிக் குறைப்பு இதுதான் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் சாதனை. ஆனால், ஜி.எஸ்.டி-யை எதிர்ப்பதாக பத்திரிகை செய்திகள் அனைத்தும், அது சிறு வியாபாரிகள், சிறு முதலாளிகளை பாதிக்கிறது என்ற ஒற்றை பரிமாணத்தில் மட்டும் கூறுகின்றன. சாதாரண உழைக்கும் மக்களிடம் அரசு அடிக்கும் கொள்ளை குறித்து ஊடகங்கள் எதுவும் வாய் திறப்பதில்லை.

சரி இப்படி சாதனை படைக்கும் வசூல் வேட்டை எதற்கு பயன்படுகிறது?

முதலாளிகளுக்கு மானியங்கள் வழங்குவதற்கும், உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் காண்டிராக்ட் மூலம் லாபம் சம்பாதிப்பதற்கான திட்டங்களுக்கும், மக்களை அடக்கி ஒடுக்குவதற்கும் இவ்வாறு வசூலிக்கப்படும் வரிப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

  • வங்கிகளுக்கு முதலாளிகள் கட்டாத வாராக்கடன்களை சரிக்கட்ட மோடி அரசு ஒதுக்கிய ரூ 2.11 லட்சம் கோடி எங்கிருந்து வந்தது? மக்களின் வரிப்பணத்தில் இருந்து வருகிறது.
  • இசுரேலிடமிருந்து ரூ 10,000 கோடி செலவில் பராக் ஏவுகணைகளை (இன்னும் பிற நாட்டு ஆயுத உற்பத்தி முதலாளிகளிடமிருந்து பல்வேறு ஆயுதத் தளவாடங்களை) வாங்குவதற்கான பணம் இதிலிருந்துதான் போகிறது.
  • தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிக்கும் போலீசுக்கும் சம்பளம் எங்கிருந்து செல்கிறது?
  • ஸ்டெர்லைட்டுக்கும் (அது போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும்) மின்சாரம், சாலை வசதி போன்ற மானியங்களுக்காக வரி வசூலை அதிகரிக்க வேண்டியிருக்கிறது.
  • சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்கான செலவு எங்கிருந்து செய்யப்படுகிறது? சென்னை மெட்ரோ ரயில், அகமதாபாத்-டெல்லி புல்லட் ரயில் என்று தனியார் நிறுவனங்களுக்கு கொட்டிக் கொடுக்கும் திட்டங்களுக்காக மக்கள் மீது வரி போட்டு கசக்கிப் பிழிகிறது மோடி அரசு.

அரசு மருத்துவமனைகளை தனியார் மயப்படுத்தி, மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுப்பதற்கு தேவைப்படும் அதிக பணத்துக்கு கூடுதல் வரி விதிப்பு தேவைப்படுகிறது. மருத்துவம் என்கிற செலவினத்தின் மீதும் வரி விதிக்கிறது. இப்படி உழைக்கும் மக்களின் கண்ணைக் குத்துவதற்காக உழைக்கும் மக்கள் மீதே வரி போட்டு வசூலிக்கிறது அரசு.

ஒட்டுமொத்தமாக, நடுத்தர மற்றும் சாமானிய மக்களிடமிருந்து வசூலிக்கும் வரியில் பெரும்பகுதி ஆளும் வர்க்கத்தின் ஆதாயத்துக்காக செலவிடப்படுகிறது. அரசுப் பள்ளி, மருத்துவமனை, குடிநீர் வினியோகம் போன்ற மக்களுக்கான சேவைகளை கைவிட்டு படிப்படியாக தனியார்மயமாக்குகிறது, அரசு.

முதலாளிக்கும் உழைத்துக் கொடுத்து, அரசுக்கும் வரி கட்டிய பிறகு, வருமானம் போதாமல் செலவுகளை சரிக்கட்ட ஓவர் டைம் பார்க்கிறது, உழைக்கும் வர்க்கம்; அதுவும் போதாமல் கந்து வட்டியில் சிக்குகிறது. முதலாளி வர்க்கமோ, தொழிலாளியிடம் கறந்த பணத்தை வைத்து ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மாளிகைகள் கட்டிக் கொள்கிறது. சில நூறு கோடி ரூபாய் செலவில் திருமண விழாக்கள் நடத்துகிறது. இந்த ஊதாரி முதலாளிகளை மக்களிடம் கறந்த வரிப்பணத்தில் குளிப்பாட்டுகிறது, அரசு.

இந்த அரசும் அதிகாரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்வாகக் குழுதான் என்பதை பலமுறை நிரூபித்து விட்டார்கள். ஆனால் முதலாளிகளுக்கான உயிர்நீர் தொழிலாளிகளின் உழைப்பில்தான் உருவாகிறது. எனவே, வரி யார் மீது எப்படி விதிக்கப்பட வேண்டும் என்று கோருவதற்கும், தீர்மானிப்பதற்கும் தொழிலாளி வர்க்கத்துக்கு முழு உரிமையும் உள்ளது.

தொழிலாளி வர்க்கம் மறைமுக வரி விதிப்பை எதிர்க்கிறது. பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் அதிகரித்துக் கொண்டே போகும் நேர்முக வரி விதிப்பின் மூலம் அரசு தனக்குத் தேவையான வருவாயை ஈட்டும்படி கோருகிறது. தொழிலாளர்களின் உழைப்பில் சுரண்டி சேர்க்கும் உபரியின் மீது வரி விதிக்கப்பட வேண்டுமே தவிர, அவர்களது கூலியின் ஒரு பகுதியை வரியாக சுரண்டக் கூடாது என்று கோருகிறது.

– பிரவீன்
புதிய தொழிலாளி ஜூலை 2018 இதழ்
நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க