அமுல் நிறுவன விழாவை ஓட்டு பிச்சை கேட்க பயன்படுத்திய மோடி;
நிறுவன இயக்குனர்கள் பகிரங்க புறக்கணிப்பு!

மோடியின் தர்பார் ஆட்சி இறுதிகாலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக சங்க பரிவாரமே கருதுகிறது போலும். ஆட்சியை தக்கவைக்க எல்லா வகையான சதி சாணக்கிய திருகுதாளங்களையும் செய்வதற்கு அமித் ஷா – மோடி கூட்டணி துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பிரதமர் என்கிற அடையாளத்தை தூக்கிச் சுமந்தபடி போகிற இடமெல்லாம் ஓட்டுப் பிச்சை கேட்டும் வேலையை செய்து கொண்டிருக்கிறார் மோடி.

அதற்கொரு சமீபத்திய உதாரணம், அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் புகழ்பெற்ற அமுல் நிறுவன விழாவை கட்சி விழாவாக மாற்றியது. நிறுவனத்தின் விழாவை கட்சி விழாவாக மாற்றி எந்த பிரதமரும் பெறாத புகழை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். ஆமாம்… முதன் முறையாக பிரதமர் பங்கேற்கும் விழாவை அமுல் நிறுவனத்தின் ஆறு இயக்குனர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை  குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் அமுல் நிறுவனத்தின் அதி நவீன சாக்லேட் தயாரிப்பு பிரிவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்றிருந்தார். விவசாயிகளுடன் நேரடியாக பிணைப்பு வைத்துள்ள அமுல் நிறுவனத்தின் விழாவை தங்களுடைய ஓட்டு பிச்சை கேட்கும் விழாவாக மாற்றிவிடலாம் என பா.ஜ.க. திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறது. வளாகமெங்கும் பா.ஜ.க. தலைவர்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதோடு, விழா மேடையில் பா.ஜ.க.வினர் ஆக்கிரமித்துக்கொண்டனர்.  இதை காலஞ்சென்ற பு.த ‘அம்மா’வின் கட்டவுட் தாக்குதலுக்கு இணையாகக் கூறலாம். லேடியும் மோடியும் கொள்கையளவில் நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விளம்ப படையெடுப்பால் எரிச்சலுற்ற அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரசிங் பர்மர் நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

“நானும் திரிபாய் சவ்தா, ஜுவசிங் சவுஹான், ராஜுசிங் பர்மர், நீதாபென் சோலன்கி, சந்துபாய் பர்மர் ஆகிய ஐந்து இயக்குநர்களும் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்குப் போகவில்லை. பிரதமர் இந்த நிகழ்ச்சி வருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என நிறுவனத்தின் தலைவரிடமும் மேலாண் இயக்குனரிடமும் தெரிவித்திருந்தேன். ஆனால், இது அரசியல் விழாவாக இருக்கக்கூடாது. ஆனால், விழாவின் முடிவில் இவர்கள் தங்களுடைய முதுகில் தாங்களே குத்திக்கொண்டதுபோல் முடித்தார்கள். இந்த நிகழ்ச்சியால் அமுல் நிறுவனத்துக்கு ஒரு பயனும் இல்லை” என்கிற ராஜேந்திர சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வாக இருக்கிறார்.  அமுல் நிறுவனத்தில் 17 பேர் அடங்கிய இயக்குனர் குழுவில் இவரும் ஒருவர்.

இந்நிறுவனத்தின் தலைவராக உள்ள ராம்சிங் பர்மர், கடந்த ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து, பா.ஜ.க.வுக்கு தாவியவர். இவரும் மற்ற இயக்குனர் குழு உறுப்பினர்களும் மோடியை வரவேற்றனர்.

கட்சி சார்புகள் இருந்தபோதும், எவரும் நிறுவனத்தின் விழாவை கட்சி சார்புள்ள விழாவாக இதுவரை கொண்டாடியதில்லை என்கிறார் ராஜேந்திரசிங்.  பா.ஜ.க.வினர் அமுல் நிறுவன விழாவை தங்களுடைய விழாவாக களவாடிக்கொண்டிக்கொண்டதாகச் சொல்கிறார் இவர்.

படிக்க:
குஜராத் கொள்ளையர்கள் !
விளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !

“அமுல் நிறுவனத்தின் துணைத் தலைவராக கடந்த 12 ஆண்டுகளாக பதவி வகித்தேன். என் அப்பாவும் துணை தலைவராக இருந்தவர். எல்லா பிரதமர்களும் அமுல் நிறுவன விழாக்களுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், அது அரசியல் விழாவாக ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. ஆனால், இப்போது அழைப்பிதழில் பா.ஜ.க. வினர் பெயரை போட்டது, நிறுவன வளாகத்தில் பா.ஜ.க. பேனர்கள் கட்டியதில் தொடங்கி பா.ஜ.க.வினர் மேடையை ஆக்கிரமித்தது வரை அனைத்தும் பா.ஜ.க. நடத்தும் விழாவாகவே முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ரூ. 10-15 கோடி வரை விவசாயிகளின் பணம் இந்த விழாவுக்காக வீணடிக்கப்பட்டிருக்கிறது.” என்கிறார் ராஜேந்திரசிங்.

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்ட இந்த விழாவை ஓட்டு பிச்சை கேட்க பயன்படுத்திக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. கும்பல். இழி நிலையிலும் கீழான இழி நிலைக்கு மோடி சென்றுகொண்டிருக்கிறார் என்பதை அந்த விவசாயிகளும்கூட நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார்கள்.

செய்தி ஆதாரம்:
Six Amul directors boycott Prime Minister Narendra Modi’s event in Anand