போலி நீதிமன்றம்: ‘குஜராத் மாடல்’-இன் மற்றுமொரு ‘சாதனை’

இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட ‘குஜராத் மாடல்’ இன்று தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனையில் நெருக்கடியில் சிக்கி அதன் யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபுஜி. இவர், சில வருடங்களுக்கு முன்பு, தான் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தைத் தனது பெயருக்குப் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று அங்குள்ள ஒரு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்த அந்த மனுவில், “சுமார் 50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால், அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த அந்த நீதிமன்றத்தின் நீதிபதியான மோரிஸ் சாமுவேல், மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை வாங்கியுள்ளார். மேலும், அந்த நீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட அந்த அரசு நிலம், பாபுஜிக்கு சொந்தமானது என்று மோரிஸ் சாமுவேல் தீர்ப்பு வழங்கி பாபுஜி பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அதன்மீது ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாபுஜி, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலை இணைத்து, அந்த அரசு நிலத்தைத் தனது பெயரில் மாற்ற வேண்டும் என அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த தீர்ப்பு நகலைப் பார்த்துச் சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர், மோரிஸ் சாமுவேல் குறித்து விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அகமதாபாத் நகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல், குஜராத்தில் வாடகை கட்டிடத்தில் போலியான நீதிமன்றத்தை 5 வருடமாக நடத்தி வந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, மோரிஸ் சாமுவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மோரிஸ் சாமுவேல், அசல் நீதிமன்றத்தைப் போலவே போலியான எழுத்தர்கள், வழக்கறிஞர்களை நியமித்து, நில விவகாரங்கள் சார்ந்த சிறப்புத் தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதனை நம்பிய பொதுமக்கள், இந்த நீதிமன்றத்தில் நில விவகாரம் தொடர்பாகப் பல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அசல் நீதிமன்றம் போல், இந்த நீதிமன்றத்தில் 500க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு விசாரணை நடத்தி மோரிஸ் சாமுவேல் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இதற்கிடையே, மனுதாரருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்க, அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாயை அபகரித்துள்ளார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றத்தை நடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மோரிஸ் சாமுவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


படிக்க: மோடியின் குஜராத் மாடலை அம்பலப்படுத்தும் நிதி ஆயோக் அறிக்கை


இதிலிருந்து என்ன சொல்ல வருகிறோம் என்று தற்போது கேள்வி எழலாம்.

இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட ‘குஜராத் மாடல்’ இன்று தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனையில் நெருக்கடியில் சிக்கி அதன் யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

காவிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இசைவாக இருந்து கொண்டு இங்கு எந்த வகையான குற்றங்களையும் அநீதிகளையும் இழைக்கலாம் என்பதற்கு ‘குஜராத் மாடல்’ ஒரு முக்கியமான சாட்சியாக உள்ளது..

காவிகளுக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்க முடியாது, பத்திரிகையில் செய்தி எழுத முடியாது, பொதுவெளியில் போராட்டம் நடத்த முடியாது, அப்படி ஏதாவது செய்தால் இந்த தேசத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கக் கூடிய ஒரு அமைப்பு முறையைக் கடந்த 10 ஆண்டுகளில் இந்த மோடி அமித்ஷா கும்பல் உருவாக்கி உள்ளது.

மோரிஸ் சாமுவேல் என்பவர் மட்டுமே தனித்து இந்த பித்தலாட்டத்தில் ஈடுபட்டார் என்பது போல அனைத்து பத்திரிகைகளும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் இந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் அரசுத் துறையில் எத்தனை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதைப் பற்றி எந்த ஊடகங்களும் பத்திரிகைகளும் பேசுவதில்லை.


சரவணன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க