திருப்பூரில், வீட்டுக்கருகில் உள்ள தெருக்குப்பையை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் அள்ளுவதால் நாற்றம் தாங்க முடியாமல் பெரும்பாலான வீடுகளில் மக்கள் ஜன்னலை திறப்பதே இல்லை…

மாநகராட்சி 3 வது குடிநீர் திட்டம், மேட்டுப்பாளையம் ஆற்று நீர், பவானி நீர், அமராவதி கூட்டுக்குடிநீர் என விதவிதமா பேர் வைத்து தண்ணீர் விநியோகிப்பதாக கூறினாலும் குடிக்கதண்ணீர் முறையாக விடுவதில்லை அப்படியே வந்த தண்ணீரை வாயில் குடிக்க முடியாது …. குடிப்பதுவும், சமைப்பதுவும் கேன் வாட்டர் தான்.

டாஸ்மாக் தண்ணி படுத்தும் பாடு…

எல்லாம் தனியார் தண்ணீர் (டாஸ்மாக் தண்ணியை அரசே விற்குது ) வியாபாரிகளின் பாக்கெட் நிறைந்து வழிந்தோடும் காசு ஆளும் வியாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் செல்வதால் இது பற்றி கவலை இல்லை அவர்களுக்கு.

வண்டித்தண்ணி வாங்கி சட்டி, பானை, குடம், ட்ரம்மில் வைத்திருந்தால் கொசுமருந்துன்னு மண்ணெண்ணைய் ஊற்றி விடுவதும் மறுத்தால் தண்ணீரை கொட்டிவிடுவதும் கேள்வி கேட்டால் மேலதிகாரியை போய் கேளுங்க நாங்களே நூறு நாள் சம்பளத்திற்கு அது கூட தனியாருகிட்ட வேலை பாக்குறோம் எனக்கூறும் வடநாட்டு கூலித்தொழிலாளிகளுக்கு குட்கா, பான்பராக், ஹான்ஸ் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ… ?

10 நிமிட மழைக்கே புது பேருந்து நிலையம் தாண்டி பாண்டியன் நகர் போக அரை நாள் வேண்டும். சாக்கடை நீரில் வண்டியை தள்ளிக்கிட்டு தான் கரைசேரணும்…

படிக்க:
திருப்பூர் தண்ணீர் பஞ்சத்திற்கு யார் காரணம் ? நேரடி ரிப்போர்ட்
திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

திருப்பூரைச் சுற்றியுள்ள அனைத்து ஏரி, குளங்களும் அரசு கட்டிடங்களாக உருவாவதும் அதனைச்சுற்றிய இடத்தை தனியார் ஆக்கிரமிப்பதும் மாநகராட்சி வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதாக அள்ளிவிடும் ஆளும்வர்க்கமும் திருப்பூரையும் ஒருநாள் சென்னை வெள்ளத்தில் மிதந்தது போல மிதக்க விடுவது உறுதியாகிவிட்டது.

அதிகாரிகள் பொலிரோ காரில் நகர்வலம் வந்தாலும் திருட்டு, கொள்ளை, கொலை, ஆள்கடத்தல் குறைந்தபாடில்லை…

புகார் கொடுக்க போலீஸ் நிலையம் சென்றால் வீட்டில் நாய் இல்லையா? CCTV இல்லையா? இரவில் வெளி லைட் போடலையா? தெருவில் கூர்க்கா இல்லையா?  இப்படி ”இல்லையா” கேட்டே புகார் கொடுக்க போனவரை விரட்டுவதும்…

ஏன் இன்னும் தண்ணிவரி, கட்டிடவரி, சொத்துவரி, தொழில்வரி, மாநகராட்சி வரி, வருமானவரி  கட்டவில்லைன்னு கேள்வியா கேட்கிற அதிகாரிங்கள பார்த்து நாமும் கேட்கலாம்…

ஏன் கரண்டு ஒழுங்க வரல..? தெருவிளக்க ஏன் பகலில் அணைக்கல…? சாக்கடையை, தெருக்குப்பையை ஏன்தினமும் அகற்றவில்லை..? சுத்தமான குடிநீர் எப்ப தருவ..?

மாநகராட்சி பள்ளியில் டீச்சர் ஏன் இல்ல…? ஆரம்ப சுகாதார மருத்துவர் எங்க…? டாஸ்மாக்கடையை ஏன் மூடல…?

திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் மூடப்படுதே அதுபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா..? பல நிறுவன உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்களே ஏன்னு தெரியுமா..?

இந்திய ரூபாய் மதிப்பு குறைவதால் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி தொழிலும் தள்ளாடுதே அதுபற்றி தெரியுமா..? பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி வாடகை, ஆட்டோ வாடகை அதிகரித்து சரக்கு அனுப்ப திண்டாடுவதும் அதனால் ரயில் நிலையம் சரக்கு புக்கிங்கால் நிரம்பிவழிவதும் தெரியுமா..?

சிறுவாணி, நொய்யல் ஆறு கழிவு நீராக நுரையிடன் ஓடுதே ஏன்னு சொல்லுங்க.?

இதையெல்லாம் விட்டுவிட்டாலும் … நமக்கு ஒரே கேள்வி தான் எங்க வரி பணத்த என்ன சார்..!!!? செய்றீங்க….?

உழைக்கும் மக்களே…! தொழிலாளத் தோழர்களே…!!
நீங்கள் இப்படி கேட்காவிட்டால் திருப்பூர் நமக்கில்லை.

மக்கள் அதிகாரம் படைத்தவர்களாக, எதிர்கேள்வி கேட்பவர்களாக மாறாமல் மாற்றம் வராது.

படம், செய்தி: தருமர்,  திருப்பூர்.