ள்ள ஓட்டு கதை கடைசியில் கள்ளக் கதையானது! தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்கார் படம் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் நொறுக்குத் தீனி பகுதியை நன்றாக கவர் செய்தது. நடிகர் விஜயின் அரசியல் வசனங்கள், சன் செய்திலேயே சர்கார் டிரைலரை மூன்று முறை காண்பித்த சன் பிக்சர்ஸ், இயக்குநர் முருகதாஸின் அடுத்த சாதனைப் படம் என்று எல்லாம் நல்லாத்தான் போய்க் கொண்டிருந்தது.

இடையில் வந்தார் வருண் என்ற ராஜேந்திரன். முருகதாஸின் சர்கார் படக்கதை தன்னுடையது என்று கொளுத்திப் போட்டார். பலரும் இது படங்கள் வெளியாகும் போது நடக்கும் விளம்பர் ஸ்டெண்ட் என்றே நினைத்தனர். ஏனெனில் இது தன்னுடைய கதை நீதிமன்றத்தில் வெல்வேன் என்று முருகதாஸ் சூளுரைத்த போது டிரைலரில் விஜய் பேசிய பன்ஞ் டயலாக்கின் சவுண்டு சற்று கம்மி என்றே சொல்லலாம்.

இதற்கு மேல் தர்ம யுத்தத்திற்கு வந்தார் எழுத்தாளர் ஜெயமோகன். யுத்தம்னா ஏதோ நாகர்கோவில் வடசேரி சந்தையில் மட்டிப் பழத்திற்காக குலை ஒன்றிற்கு பத்து ரூபாய் கம்மியாக பேசுவதற்கு நடந்த சப்தம் என்று நினைத்து விடாதீர்கள். நாகர்கோவில் மணிமேடை அருகே சுதர்சன் ஜவுளி கடை வைத்திருந்தவரும் மற்றும் மூன்று நாவல்கள் எழுதியவருமான சுந்தர ராமசாமி அவர்கள் மறைந்து போன போது நினைவின் நதியில் என்றொரு இரங்கற்பா எழுதியவர் ஜெயமோகன்.

இரங்கற்பா பெயரில் சுந்தர ராமசாமியை கதறக் கதற காமடி செய்திருப்பார்.  அதில் நாலனா பாளையங்கோடன் பழத்திற்காக சுந்தர ராமசாமி நடத்திய உளவியம் யுத்தம் இலக்கிய உலகில் பேமசாகவில்லை என்றாலும் நாம் பேமசாக்கியிருக்கிறோம். சரி விசயத்திற்கு வருவோம். தான் வசனம் எழுதிய படத்தின் கதை திருட்டுக் கதையா, யார் அவன், எவன் சொன்னான் என்று கீபோர்டோடு கோதாவில் குதித்தார் சூப்பர் ஸ்பெசல் சாதாவான ஜெயமோகன். நம்பவில்லையா?

“சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது.”

மச்சி, வெண்முரசு மகாபாரதம் தொடரை பத்தாண்டுகளாக எழுதி வெளியிடப் போவதாக அவர் அறிவித்த போது அல்லாரும் அசந்து போய் வாழ்த்தினார்களே நினைவிருக்கிறதா? பாவம் அந்த வாழ்த்தையெல்லாம் இப்போது வாபஸ் வாங்குங்கள் என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டார் ஜெயமோகன். நம்பமுடியவில்லை?

“எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே  “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம்.  ஒரு நான்கு வெண்முரசு அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும்.”

நான்கு வெண்முரசு என்றால் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள். நாற்பது வருட உழைப்பை நாற்பது நாளில் கொட்டி ஜெயமோகன் வசனம் எழுதிய படம் சர்கார் என்றால் அந்த உழைப்பின் அளவை குமரிக் ‘கடல்’ கூட கொள்ளாது.

இப்போ மெயின் ஸ்டோரிக்கு வருவோம்.

தன்னுடைய கதையை திருடி உருவான இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் என்ற ராஜேந்திரன் மனுதாக்கல் செய்தார். அதில் “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி சர்கார் என்ற தலைப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படமாக்கியுள்ளார். இந்தக் கதையை ஏற்கெனவே நான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளேன். எனவே இந்தப் படத்தின் கரு மற்றும் கதை என்னுடையது என்பதால் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான இயக்குநர் பாக்கியராஜும் இந்த திருட்டுக் கதையை திருட்டுக் கதைதான் என்று ஒத்துக் கொண்டார். அதாவது இரண்டும் ஒரேமாதி இருக்கிறது என்றார். உடனே இயக்குநர் முருகதாஸ் கள்ளவோட்டு என்ற ஒன்றை வைத்துக் கொண்டு மட்டும் என்னுடைய கதையை இன்னொருவர் சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டேன், நீதியை நீதிமன்றத்தில் வெல்வேன் என்றார்.

இதனிடையே சர்கார் படத்துக்கு தடைகோரி யாராவது வழக்கு தொடர்ந்தால் தங்களது தரப்பையும் அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன இருந்தாலும் தீபாவளி பிசினஸ் அல்லவா? தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் சன் டி.வியில் ஓடிக் கொண்டிருக்கும் போது சர்கார் படமும் தியேட்டரில் ஓடியாக வேண்டும். இல்லையேல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கோ இல்லை தீபாவளிக்கோ சன் டி.வியால் எந்த பிரயோசனமுமில்லை.

இந்நிலையில் இன்று 30.10.2018 காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் பொருட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்யராஜ் இருவரும் நேரில் வந்திருந்தனர். வழக்கில் சன் பிக்சர்ஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், செங்கோல் கதையின் கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார். அதன்படி முருகதாஸ் சர்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்று ஒத்துக் கொண்டார். இதுதான் முக்கியமான கிளைமாக்ஸ். இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது என நீதிமன்றம் வழக்கை முடித்து விட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் செங்கோல் கதையை எழுதிய கதாசிரியர் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு சர்கார் பட டைட்டிலில் நன்றி தெரிவிக்க படத்தின் நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் வருண் என்கிற ராஜேந்திரனுக்கு ரூ.30 லட்சம் கொடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படத்தை வெளியிடத் தடை இல்லை என்பதோடு தீபாவளிக்கு படம் வெளியாகும் என ஊடகங்கள் அனைத்தும் ஒருசேர தெரிவிக்கின்றன.

“ஓடு தலைவா” படத்தில் “Time to lead” எனும் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்தது வரலாறு. இந்தப் படத்திற்காக ஜெயா வாசம் செய்த கொடநாட்டிற்கு அப்பா சந்திரசேகரனும், மகன் விஜயும் அலையாய் அலைந்து பத்து நாட்கள் தங்கியும் அம்மா தரிசனம் கிடைக்கவில்லை. பிறகு 2014 பாராளுமன்றத் தேர்தலில் கோவை ஏர்போர்ட்டில் மோடியை தரிசித்து துண்டு போட்டவர் விஜய். இருப்பினும் மெர்சல் படத்திற்கு எச்ச ராஜாவின் திமிரால் கிடைத்த விளம்பரம் அணில் விஜயை ஆக்ரோசமான விஜயாக மாற்றியது. அய்யா கட்சி ஆரம்பிப்பார், கோட்டையை பிடிப்பார் என்று சர்கார் பட பாட்டு வெளியீட்டு விழாவிலேயே பாட ஆரம்பித்தார்கள் பலர். இதில் சர்கார் கள்ளவோட்டு குறித்த கதை என்பதால் அரசியல் சூடு பயங்கரமாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

முருகதாஸிற்கு திருட்டுக் கதை என்பது இதில் மட்டுமல்ல, கஜினி, ஏழாம் அறிவு, கத்தி என்று கள்ளக்கதைகளின் அணிவகுப்பில்தான் அண்ணாத்தே ஃபேமசானார். இருப்பினும் முந்தைய திருட்டுக் கதை எபிசோடுகளில் அண்ணாத்தே மான்கராத்தே ஆடி ஜெயித்திருந்தார். இருப்பினும் எத்தனை நாள்தான் மானையே வைத்து ஓட்ட முடியும்?

இந்நிலையில் கதைத் திருட்டு குறித்த சர்ச்சை வந்தபோது நடிகர் விஜய் ஒதுங்கிக் கொண்டார் என்று ஊடகங்கள் சொன்ன சேதி. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகனோ தில்லானா வைத்தி போல எழுந்து விட்டார். ஒருவேளை இவரை சென்னை ஓட்டலில் தங்க வைத்து நாற்பது நாள் டீயோடு டிஸ்கசன் நடத்திய இயக்குநர் முருகதாஸ், அன்பாக கேட்டும் கூட ஜெயமோகன் கோதாவிற்கு வந்திருக்கலாம். என்ன இருந்தாலும் சிலபல இலட்ச ரூபாய் என்பது சாதாரண விசயமா என்ன? சினிமா ஜோதியில் வைட்டமின் ‘சி’ ரேங்கிற்கு வந்து விட்ட பிறகு முருகதாஸ் சொன்ன பிறகு ஜெயமோகனது மவுசும், கீபோர்டும் சும்மா இருக்குமா என்ன?

“மொத்தத் திரைக்கதையின் நான்கு வெவ்வேறு வடிவங்கள் இப்போதும் என் கைவசம் உள்ளன. சொல்லப் போனால் இன்னும் ஒரு சினிமாவை வசதியாக கைவசம் உள்ள காட்சிகளில் இருந்து எடுக்கலாம். அப்படியிருந்தும் இந்த விவாதம் (சர்கார் கதையை திருட்டுக்கதை என்று) ஏன்? சமகாலத்திலிருந்து செய்திகள், அரசியல் நிகழ்வுகள் வழியாக கருக்களை எடுப்பது முதல்காரணம். நமக்கு சமகால நிகழ்வுகளே கைப்பிடி அளவுக்குத்தான். தமிழ்சினிமாவின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன்கள், சமூகப்பிரச்சினை, அடிதடித் தீர்வு என்ற ‘டெம்ப்ளேட்’ பெரும்பாலும் மாறாதது என்பது இரண்டாவது காரணம்.  அந்தச்சின்ன கருவை இந்த சட்டகத்துக்குள் சரியாக அடக்குவதுதான் இங்கே கதை என்பது.

மற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள்,பேரங்கள். இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X  வென்றவன் என்ற முடிச்சு. ‘’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா’’ நாம் எங்கே அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில். உண்மையில் இந்த ஒருவரியையே விஜயை வைத்து படமாக ஆக்கலாம். அதே டெம்ப்ளேட்டில். என்றாவது இந்த வேடிக்கையைப்பற்றி ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்.”

இந்த தத்துவ விளக்கத்தை கொஞ்சம் மொழிபெயர்ப்போம். வணிக சினிமாவின் டெம்பிளேட்டின் படி ஏழை எம்.ஜி.ஆர். பணக்கார நம்பியாரின் மகளான லதாவை காதலிப்பார், ஏழை ஹீரோ டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த ராயல் சீமாட்டியை காதலிப்பார்…… இப்படியாக உலகமே ஏழைகளால் சூழப்பட்டிருப்பதால் ஏழைகளை நாயகனாக்கி, தர்ம யுத்தத்தில் வெல்ல வைத்தால்தான் பணக்கார சினிமா நிறுவனங்கள் கல்லா கட்டமுடியும். அதன்படி இந்த டெம்பிளேட் உளவியலை வைத்து ஒரு ஏழை அசிஸ்டண்ட் இயக்குநர் பணக்கார சர்கார் படக் குழுவினரை எதிர்த்து பேசுகிறார். உடனே ஏழையென்றால் உருகும் அர்பன் நக்சல் கூட்டம் கொடி, முழக்கங்களுடன் ஆதரவு தெரிவிக்க கிளம்புகிறது. இதைத்தான் நாவல் எழுதி நாறடிப்பேன் என்கிறார் ஜெயமோகன்.

படிக்க:
அறம் தின்ற ஜெயமோகன் !
திருட்டுத் ‘தாண்டவம்’ !

சரி இனி ஜெயமோகன் இந்தப் பிரச்சினையை நாவல் எழுதும் போது திருட்டுக்தைதான் என்று கோர்ட்டிலேயே ஒத்துக் கொள்ளப்பட்ட சர்கார் படத்தின் அந்த வசனகர்த்தாவை எப்படி சித்தரிப்பார்?

தப்புக் கணக்கு போடதீர்கள். அந்த நாவலை உண்மையிலேயே வினவு மட்டும்தான் எழுத முடியும். Wait and see!

பின் குறிப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் என்பதில் ஆயிரம் அர்த்தம் உள்ளது. டைட்டிலில் மூலக்கதையாசிரியர் வருண் ராஜேந்திரனுக்கு எப்படி நன்றி கூறுவது, அவரை தொலைக்காட்சியில் சர்கார் படக்குழுவினருக்கு ஆதரவாக பேச வைப்பது என்று பல முயற்சிகள் நடந்தேறும். இதனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்று முருகதாஸும், ஜெயமோகனும் திரும்பவும் கிளம்புவார்கள். அதற்குள் படத்தின் வசூல் இலக்கு முடிந்திருக்கும். ஆகவே கள்ளக் கதை கள்ளக் கதைதான் என்பதை மறந்து விடாதீர்கள்.

கருத்துக் கணிப்பு

விஜய் நடித்த சர்கார் படத்தின் கதை திருட்டுக் கதை என்று நிரூபிக்கப்பட்டதில் அம்மணமானது யார்?

• எழுத்தாளர் ஜெயமோகன்
• இயக்குநர் முருகதாஸ்
• தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ்
• இவர்கள் மூவரும்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

4 மறுமொழிகள்

  1. இந்த கதையின் மூலம் அவமானப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகன் தான். 45 நாட்கள் ஓட்டலில் தங்கி கலந்தாலோசித்து படங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளது என்றார். இந்த திருட்டுக் கதைக்கு இவ்ளோ மெனக்கட்டு இருக்க வேண்டியதில்லை. பாவம் ஜெயமோ..!

  2. சி.பி.ஐ., சி.வி.சி., ஈ.டி., (E.D.), நீதிமன்றங்கள் ஆகிய அமைப்புகளை, நடுத்தர வர்க்கத்தால் ஒளிவட்டம் போட்டுக்காட்டப்பட்ட இந்த அமைப்புகளுக்குப் பார்ப்பனப் பாசிசக் கும்பல் அரைக்கால் காக்கி டவுசரை மாட்டிவிட்டிருப்பது, 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அயோத்தி விவகாரத்தை விவாதப் பொருளாக மாற்ற அக்கும்பல் முயலுவது போன்ற காத்திரமான விடயங்கள் குறித்துக் கருத்துக் கணிப்பு நடத்துவதற்குப் பதிலாக, சர்கார் குறித்துக் கருத்துக் கணிப்பு, கட்டுரை என வருவது வினவு எந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை என்னுள் எழுப்பியிருக்கிறது.

  3. ரகசிய உலகக்கிரிமினல்கள் திருட்டு மனைப்பத்திரம் தயாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட ஒரிஜனல் உரிமையாளரை போட்டுத்தள்ள அடியாளை பயன்படுத்துவார்கள்.
    அடியாள் சமயத்தில் தம்மைப் போட்டு கொடுத்துவிட்டால் என்ன செய்வது?
    டீலிங் பல ‘சி’ (crore)களைத்தாண்டி லெக்பீஸ் மாதிரி பெரியதாக மாட்டிக்கொண்டால் , கிரிமினல்கள் தாங்களே விரும்பி சிறைக்குள் பாதுகாப்பாய் போய்விடுவார்கள்!
    வெளியில் இருப்பவர்களை வைத்து சந்தேகம் வராமல் வேலையை முடித்து விடுவார்கள். அதே கதைதான் இங்கும் அரங்கேறியிருக்கிறது.அறம் வழுவவில்லை.
    கதையை நாங்களேதான் சொந்தமாக தயாரிக்கிறோம் என்று தயார்ப்பாளரையும் ஷீரோவையும் நம்ப வைக்க தங்களை ஓட்டலில் சிறை வைத்துக்கொண்டுள்ளனர்.
    இப்படி மாத கணக்கில் ஓட்டலில் கூத்தடித்து அந்த பில்லையும் தயாரிப்பாளரின் தலையில் கட்டியுள்ளனர். கதையின் ஷீரோ படத்தில் போடும் தன் ஜட்டியைக்கூட தயாரிப்பு செலவில் கட்டும்போது, எழுத்தாளர்கள் என்றால் சும்மாவா?
    அதுவும் உள்ளொளி, அக எழுச்சி, அற உணர்வு,உச்சபட்ச மனவெழுச்சி,இவைற்றை மொத்தமாக அணுக்கமாக உணர்ந்த நித்தியஶ்ரீ சீடரான ஜெயமோகனின் வசனம் என்றால் விளையாட்டா?

  4. ஜெயமோகன் ஓட்டை மட்டையுடன் முருகதாசுக்கு ஸ்கோர் செய்ய இறங்க, வினவின் அதிவேக பந்தில் விக்கெட் மட்டும் பறக்கவில்லை, மட்டையாளரின் டவுசரும் நார் நாராக கிழிந்து தொங்குகிறது.

Leave a Reply to மதி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க