நீட் : மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள் | பேராசிரியர் கதிரவன் உரை | காணொளி

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னையில் கடந்த அக்-27 அன்று நடைபெற்ற உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேரா. கதிரவன் ஆற்றிய உரை.

யர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கடந்த அக்-27 அன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தனர் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர்.

இக்கருத்தரங்கில், பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் பொருளாளர் பேராசிரியர் கதிரவன் உரையாற்றினார். அவர் பேசுகையில்,

”அரசு கிட்டத்தட்ட அனைத்தையும் தனியார்மயம் ஆக்கிவிட்டது. இனி புதியதாக எப்படி தனியார்மயப்படுத்துவது என்று சிந்தித்து நடைமுறைப்படுத்துகிறது அரசு.

தற்போது அனைத்து அரசு பல்கலைக்கழகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ளது. அதாவது அரசு பல்கலைக்கழகங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு ஏற்ப உயர்த்த தன்னாட்சி வழங்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு என்பது அரசு மருத்துவக் கல்லூரிகளை  தன்னாட்சிமயமாக்கி தனியார் கையில் ஒப்படைக்கும் வேலையின் ஒரு பகுதிதான். நீட் – பயிற்சி மையங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. பணம் உள்ளவன் மட்டும்தான் தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியும்.

தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவிலேயே அதிகம். இதுவரை இந்த நிறுவனங்கள் ஏழை மக்களுக்குச் சேவை செய்துவந்தன. இதனால் பயன்பெற்றவர்களுக்கு இருந்த சேவை மனப்பான்மையை ஒழுக்கவே, அனைத்தையும் வியாபாரமயமாக்குகிறார்கள்.

இதற்காகவே நீட் தேர்வுமுறை கொண்டு வரப்படுகிறது. புதியதாக ஒரு தேர்வுமுறை  கொண்டு வருவதற்கு வலுவான காரணம் கிடையாது. மருத்துவத் துறையில் மாணவர்கள் சேர்ப்பில் ஏற்கனவே இருந்த பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்த பின்பே ’நீட்’டுக்கு முந்தைய மருத்துவ ஆட்சேர்ப்பு முறை இருந்து வந்தது. இப்போது புதியதாக நீட் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?

மருத்துவக் கல்வி உட்பட, மருத்துவத்துறையை தனியார்மயமாக்குவதுதான் அதன் நோக்கம். இப்போது ஃபிட்ஜீ போன்ற பல்வேறு நிறுவனங்கள், தனியார் பள்ளிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத்தேர்வுப் பயிற்சியை வழங்குகின்றன.

சென்னையில் மட்டுமே 25 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் 25 கிளைகள் வைத்திருக்கின்றன. சுமார் 7500 மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். குறைந்த பட்சம் 75,000 முதல் 1,00,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இங்கு பயிற்சி கொடுக்க, ஐஐடி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். சாதாரண பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் வந்து பாடம் வந்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்கு கடினமான பாடத்திட்டத்தையே நீட் பாடத்திட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் இருந்து மிகக் குறைவான கேள்விகளே கேட்கப்படுகின்றன.  ஐஐடி பாடத்திட்டத்திலிருந்து கேட்கிறான். ஒரு மாணவன் இலட்சக்கணக்கில் செலவழித்துதான் மருத்துவராகப் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்படி பணம் செலவழித்து வருபவன் எப்படி சேவை மனப்பானமையோடு வேலை பார்க்க முடியும்?” என்று வினவினார்.

அவரது முழு உரையைக் காண ..

பாருங்கள் ! பகிருங்கள் !