ந்த பதிவின் மூலம் நான் கடந்து வந்த சில உண்மை நிகழ்வுகளைக் கொண்டு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு அன்றாட வாழ்வியலையும் உயிர்களையும் பாதிக்கிறது என்று பார்ப்போம்.

இந்த பதிவில் நடந்த சம்பவங்கள் யாவும் உண்மையில் பல்வேறு கால நிலைகளில் சூழ்நிலைகளில் நிகழ்ந்தவை. இந்த பதிவில் நிகழ்வு 1 மற்றும் நிகழ்வு 2 என்று விரியும் சம்பவங்களில் சூழ்நிலை(situation) ஒன்று தான் இடம்(place of occurence) மற்றும் மனிதர்கள் வேறு.

நிகழ்வு 1
காட்சி 1

70 வயதான பாட்டி, வீட்டில் பரண் மீது ஏறி பொருட்களை அடுக்கும் போது தவறி கீழே விழுந்து விட, தலையில் வெட்டுக்காயம். மருத்துவரை சந்தித்து தையல் போடப்படுகிறது.

முதியோர் – மாதிரிப்படம்

தலையில் அடிபடும் நோயாளிகளுக்கு பொதுவாக கேட்கப்படும் அபாய அறிகுறிகள் குறித்து கேட்கப்படுகின்றன ;

காது மூக்கு பகுதிகளில் இருந்து ரத்தம் வந்ததா?

இல்லை.

தலை சுற்றல் இருக்கிறதா ?

இல்லை.

வாந்தி ?

இல்லை.

“கவலை வேண்டாம் பாட்டி.. மாத்திரைகளை எடுங்கள். நாளை வந்து கட்டு மாற்றிக்கொள்ளுங்கள். தலைசுற்றலோ..வாந்தியோ இருந்தா தான் பெரிய பிரச்சனை. இப்போது பிரச்சனை இல்லை” என்று கூறப்படுகிறது

பாட்டியும் தனது மகளுடன் சென்று விடுகிறார்.

நிகழ்வு 2
காட்சி 1

மேற்சொன்னது போன்றே 70-80 வயதுகளில் உள்ள பாட்டி, யாரும் கூட வரவில்லை. தனியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகிறார்.

இரவு கழிப்பறை சென்று வருகையில் கீழே விழுந்ததில் தலையில் பலமான அடி வாந்தி அவ்வப்போது வருகிறது. தலைசுற்றல் இருக்கிறது. ரத்த அழுத்தம் சோதிக்கப்படுகிறது – மிகவும் அதிகமாக இருப்பதாக ரத்த அழுத்தமானி காட்டுகிறது. 108 அழைக்கப்படுகிறது

நிகழ்வு 1
காட்சி 2

தையல் போடப்பட்ட அந்த பாட்டியை அவரது மகள் இரண்டு நாட்கள் கழித்து அழைத்து வருகிறார். கையில் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேன் உள்ளது.

“சார். எங்க ரிலேசன் மெடிக்கல் காலேஜ்ல வொர்க் பண்றார். பயமா இருந்துச்சு சார். அதான் ஒரு சி.டி ஸ்கேன் எடுத்து பாத்துறலாம்னு.. பாத்துட்டேன்.. ”

” ஓ..ஓகே மா.. சிடி ல ஒன்னும் இல்ல மா.. மூளை நல்லா இருக்கு.. கவலைப்படறதுக்கு ஒன்னும் இல்லை”

நிகழ்வு 2
காட்சி 2

108 அழைக்கப்பட்ட பின். அந்த பாட்டியிடம் துணைக்கு செல்ல ஆள் இருக்கிறதா? என்று கேட்கப்படுகிறது.

“நான் ஒரு அநாதி ராசா.. யாரும் இல்ல.. பெத்த புள்ளைகளும் ஊருக்கு ஒன்னா போய்ருச்சு.. அவரும் போன வருசம் தான் போய் சேந்தாரு”

108 ஆம்புலன்ஸ்“பாட்டி வேற சொந்தம் இருந்தாலும் ஓகே தான். போன் நம்பர் குடுத்தா போன் பண்ணி வரவச்சுரலாம்.. சொல்லுங்க”

“ராசா.. எனக்குனு நாதியில்ல.. இங்குனயே ஒரு கட்ட போட்டு ஒரு பாட்டில் ஏத்திவிடுயா.. நான் வீட்டுக்கு போறேன்”

” பாட்டி.. தலைல பலமா அடிபட்ருக்கு.. சிடி ஸ்கேன் எடுத்து மூளைல அடிபட்ருக்கானு பாக்கணும். சிவகங்கை பெரியாஸ்பத்திரிக்கு போகணும். ”

” அய்யோ . ராசா..அங்கலாம் வேணா.. என்கிட்ட காசு இல்ல.. முதியோர் பென்சன் 1000த்த வச்சு கஞ்சி குடிச்சுட்ருக்கேன். நீ இங்கேயே பாரு தம்பி”

நிகழ்வு 1
காட்சி 3

“ஏம்மா.. சிடி ஸ்கேன் தேவையாயிருந்தா நானே எழுதித்தந்துருப்பேனே.. எதுக்கு தேவையில்லாம ஸ்கேன்..”?

” இல்ல சார்.. எங்களுக்கு ஒரே பயம் சார். அது போக மெடிக்கல் காலேஜ்ல
ஆள் இருக்காரு. சிடி ஸ்கேன் 500 ரூபாய்க்குனால உடனே எடுத்து ரிசல்ட்டும் குடுத்துட்டாங்க.. எதுக்கும் எடுத்து பாத்துறது நல்லது தான சார்”

” ஏம்மா.. ஒரு சிடி ஸ்கேன் இருபது எக்ஸ் ரேக்கு சமம்.. தேவையில்லாத கதிர் வீச்சுக்கு உடம்ப உட்படுத்துறது தப்புமா… “

” சரி சார்.. இனிமே உங்ககிட்ட கேட்டு செய்றோம்”

நிகழ்வு 2
காட்சி 3

“108 ஆம்புலன்ஸ்காரங்க கூட ஆள் இல்லனா ஏத்திட்டு போக மாட்டாங்க பாட்டி.. புரிஞ்சுக்கோங்க..”

“சாமி.. எனக்கு நெசமா ஆள் இல்லயா.. இருந்தா கூப்டமாட்டமா?”

108 வருகிறது.

ஆனால் வெளியே அதுவரை அமர்ந்திருந்த பாட்டியை காணவில்லை. ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் தேடப்பட்டும் காணவில்லை..

ஒரு சக பாட்டி;
” சார்.. அந்த பொம்பள செத்த நேரத்துக்கு முன்னாடியே கார் வந்துரும்னு கிளம்பி போய்ருச்சு சார்..”

” ஏம்மா.. நீங்க நிறுத்தக்கூடாதா.. அதுக்கு தலைல அடிபட்டுருக்கு மா..”

“எனக்கு என்ன சாமி தெரியும். சொன்னாலும் அது கேக்காது”

“சரி.. எந்த ஊரு பாட்டி அது?”

“@&#%!%÷”

நிகழ்வு 1 மற்றும் 2 இரண்டிலும் சூழ்நிலைகள் ஒன்று தான் மருத்துவரும் ஒன்று தான் முதல் நிகழ்வில் தேவையில்லாத சிடி ஸ்கேன் எடுக்கப்பட, இரண்டாவது நிகழ்வில் அத்தியாவசியமான சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை.

அந்த கிராமத்தை சேர்ந்த சுகாதார செவிலியருக்கு போன் செய்து.. அந்த பாட்டி குறித்து கூறி .. அவர் வீட்டிற்கு வந்தால் உடனே அவரை 108-ல் மருத்துவ கல்லூரிக்கு அனுப்ப சொல்லிவிட்டு அடுத்த நோயாளிகளில் மூழ்கிவிட்டேன்.

மறுநாள் பாட்டி நியாபகம் வர அந்த கிராம சுகாதார செவிலியருக்கு போன் செய்து விசாரிக்கும் போது;

” சார்.. அந்த பாட்டி வீட்டு அக்கம்பக்கத்துல உள்ளவங்க கிட்டலாம் சொல்லி வச்சு… வந்தா என்ன கூப்டுங்கனு சொல்லிட்டு வந்தேன் சார்..ஆனா”

“என்னமா ஆனா?”

” பாட்டி நைட் வீட்டுக்கு வரல சார்.. காலைல குளத்து ஓரத்துல கெடந்து பாடிய எடுத்துருக்காங்க.. அவங்களுக்கு பிள்ளைங்க யாரும் இல்ல. அதனால் யார்கிட்ட பேசுறதுனு தெரியல.. ஊர் சேர்ந்துதான் காரியம் பண்ணிட்ருக்கோம்”

“ஓ.. சரிம்மா.. நான் அங்க வர்றேன்.. போன வைங்க”

நிகழ்வு 1 மற்றும் 2 இரண்டிலும் சூழ்நிலைகள் ஒன்றுதான் மருத்துவரும் ஒன்று தான் முதல் நிகழ்வில் தேவையில்லாத சிடி ஸ்கேன் எடுக்கப்பட, இரண்டாவது நிகழ்வில் அத்தியாவசியமான சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை அதன் ஆணிவேரோடு உணர்ந்தால் அங்கு நம் சமூகத்தின் ஏற்றத்தாழ்வு விளங்கும்.

இது போன்ற பல நிகழ்வுகள் நினைவுகளாய் அலையாடுகின்றன

இறைவன் நாடினால் தொடர்ந்து பகிர்வேன்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.