த்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகரில், காவி கும்பல் நடத்திய வெறியாட்டத்தில் காவல் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.  இந்தப் படுகொலை அரசியல் காரணங்களுக்காக திட்டமிடப்பட்டது என கூறி 83 ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் பதவி விலக கோரியிருந்தனர்.  அரசியலமைப்பை பாதுகாப்பேன் என முதலமைச்சராக பதவியேற்கும்போது உறுதிமொழி எடுத்துக்கொண்டதை காக்கத் தவறிய ஆதித்யநாத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

புலந்த்சாகர் நிகழ்வு அரசியமைப்பின் மதிப்பு முற்றிலும் சிதைந்து போயுள்ளதைக் காட்டுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “சமீப காலமாக நடந்துவரும் வெறுப்பு அரசியலின் மிக ஆபத்தான திருப்பம் இது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“இந்தியாவின் மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம், நிர்வாகத்தின் அடிப்படை கோட்பாடுகள், அரசியலமைப்பு அறம் மற்றும் மனிதாபிமான சமூக நடத்தை சீர்குலைந்துள்ளதை காட்டுகிறது. அனைத்தையும் விட வெறுப்பு அஜெண்டாவுக்குத்தான் இங்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மாநிலத்தின் முதல்வர் வெறுப்பு அஜெண்டாவின் தலைவர் போலவும் பெரும்பான்மைவாதத்தின் மேலாதிக்கவாதியாகவும் செயல்படுகிறார். ”  என ஓய்வுபெற்ற அதிகாரிகள் எழுதியுள்ள கடிதத்தில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“இந்த வன்முறைகள் எதிர்பாராமல் நடந்தவை அல்ல, கொலையும் எதிர்பாராமல் நடக்கவில்லை. இந்த வன்முறையை ஏவிவிட்ட, ஆதரவு அளித்த அரசியல் சக்திகள் யார் என்பது குறித்தும் சந்தேகம் இல்லை. தங்களுடைய பெரும்பான்மை பலத்தை  இந்த பகுதியில் வாழும் முசுலீம்களுக்குக் காட்ட வேண்டும், அவர்கள் பயத்திலேயே வாழ வேண்டும் என்பதற்காக தூண்டப்பட்ட வன்முறை இது.  பெரும்பான்மை சமூகத்தின் கலாச்சார எதேச்சதிகாரத்தை முசுலீம்கள் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பணிந்து வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த வன்முறை நடந்துள்ளது.

அரசியலமைப்பு மீதான மதிப்பு மிக வேகமாக சரிந்து வருவதைக் கண்டு, ஒரு குழுவாக உள்ள நாங்கள் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். கடந்த 18 மாதங்களில் 9 முறை இதுகுறித்து பேசியாக வேண்டும் எனக் கருதினோம்.  இந்த சீரழிவு வேகம் பயமுறுத்துகிறது, ஒவ்வொரு முறை சரிவைக் காணும் போதும், சட்டத்திற்கு புறம்பான படுகுழிக்குள் அரசியலமைப்பு மதிப்புகள் மேலும் தள்ளப்படுகின்றன” என அதிகாரிகள் எழுதிய கடிதம் கூறியது. ஆளும் முதலமைச்சர் ஒருவரை ஓய்வுபெற்ற அதிகாரிகள் மிகக் கடுமையாக விமர்சித்து, அவருடைய ராஜினாமா கோரி கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை உண்டாக்கியது.

ஆனால், சுரணையற்ற காவிகள் அதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் விதம் அவர்களுடைய மாட்டு மூளையின் தரத்தை காட்டுவதாக உள்ளது. சன்ஜய் சர்மா என்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ., கடிதம் எழுதிய 83 அதிகாரிகளையும் முட்டாள்கள் என்கிறார்.  இந்த மாட்டு மூளை முட்டாள், “21 பசுமாதாக்களின் சாவு உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?” என அதிகாரிகளைப் பார்த்து கேட்கிறது.

அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் இப்படி எழுதியிருப்பதாகவும் துணிவிருந்தால் அரசியலுக்கு வந்து தேர்தலில் அவர்கள் போட்டியிடட்டும் எனவும் சர்மா சீற்றம் கொள்கிறார்.  பசு மட்டும் கொல்லப்படாமல் இருந்தால், அங்கே வன்முறையே வெடித்திருக்காது என வன்முறையை நியாயப்படுத்த காரணம் சொல்கிறார்.

இந்த நிலையில், புலந்த்சாகர் வன்முறையை தலைமை ஏற்றுநடத்திய பஜ்ரங்தள் தலைவன் யோகேஷ் ராஜ், இன்னமும் கைது செய்யப்படவில்லை. ஆனால், மாட்டை வெட்டிய வழக்கில் துப்பு துலக்கியுள்ள போலீசு,  மூன்று பேரை கைது செய்துள்ளது.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?
ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

மாட்டு மூளை காவிகள் ஆட்சி செய்தால், மனித உயிருக்கு எந்த மதிப்பும் இருக்காது. அரசியலமைப்பு, சட்டம், ஜனநாயகம் நெறிமுறைகளை அவர்கள் துச்சமாகத்தான் மதிப்பார்கள்.  கையாலாக நிலையில் விமர்சனம் வைத்த அதிகாரிகள் நிலையில்தான் உ.பி. மக்களும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள். மோடி ஆட்சியில் நான்கு தூண்களும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் அதிகரிக்கின்றன. நம் நாடு இனியும் மதச்சார்பற்ற நாடு என சொல்ல முடியுமா என்ற கேள்வியை அதிகாரிகள் கடிதம் உறுதிப்படுத்துகிறது.

கலைமதி
நன்றி: த வயர், தி இந்து