“தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச RSS – BJP யை வீழ்த்த, ஜனவரி 8,9 இருநாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்!” என்ற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் சார்பாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் 08.01.2019 அன்று மாலை 4:00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் மா. சரவணன் தலைமை உரையாற்றினார். அதை தொடர்ந்து விண்ணதிர முழக்கங்கள் முழங்கப்பட்டன.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்; அதில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மோடி ஆட்சியின் கீழ் தொழிலாளர் நலன்கள் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்கள் எவ்வாறு பறிக்கப்பட்டன என்பதை விளக்கியும். சுதந்திரத்திற்கு முன்பே போராடிப்பெற்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களையும் நான்கு தொகுப்புகளாக மாற்றுவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் மோடி அரசின் நோக்கத்தையும் அம்பலப்படுத்தினார்.
நாடே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், முதலாளிகளுக்கு லாபமீட்டி தருவது ஒன்றே நாட்டின் ஒரே செயல்பாடு போலவும், மத்திய – மாநில அரசுகள் இதனை செய்து முடிக்கும் கங்கானிகளாகவும் இருக்கும் வகையில் நாட்டின் கட்டமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு ஜியோ, அனில் அம்பானிக்கு ரஃபேல், அதானிக்கு மின்சாரம், ஆலைகள் முதல் சாலைகள் வரை அனைத்தும் கார்ப்பரேட்களின் கொள்ளைக்கு திறந்துவிடப்படுவதை பட்டியல் போட்டு விளக்கினார்.
இங்கு தொழிலாளர்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் ஒடுக்கப்படுகின்றனர். மீனவர்கள் கடலை விட்டு துரத்தப்படுகின்றனர், மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகள் மூலம் கல்வியை விட்டு துரத்தப்படுகின்றனர்.
விவசாயிகள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற நாசகாரத் திட்டங்களால் விவசாயத்தில் இருந்து துரத்தப்படுகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தபோது கூட அதை திரும்பி பார்க்க மறுக்கிறது மோடி அரசு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மக்கள் 14 பேரை அருகிலிருந்து தலையிலும், மார்பிலும் சுட்டுக்கொன்றது இந்த அரசு. இந்த படுகொலை மீதான விசாரணை துவங்கும் முன்னர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எல்லா நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாக செய்து வருகின்றனர். இதிலிருந்தே தெரிகிறது இந்த அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதையும்.
மேலும் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, பெட்ரோல் டீசல் மீதான தொடர்ச்சியான விலையேற்றம் அதன் மூலமாக சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவு பாதித்துள்ளது என்பதையும் விளக்கி தன்னுடைய கண்டன உரையை நிகழ்த்தினார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் தலைவர் தோழர் சே.சரவணன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட கிளை / இணைப்பு சங்க தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பகுதியில் உள்ள கடைகளில் நிதி வசூல் செய்யப்பட்டது. அதில் குறைந்த நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து பகுதிவாழ் தரைக்கடை வியாபாரிகள் பெருந்திரளாக நிதி அளித்தனர்.
மேலும் கூட்டத்தை ஆங்காங்கே நின்று கவனித்த வண்ணம் இருந்தனர். ஆர்ப்பாட்ட பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
தகவல் :
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக ஜன.8-9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து தங்களது பங்கேற்பை செலுத்தும் வண்ணம் ஒசூர் ரயில் நிலையம் முன்பாக ஜன.8 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆலைத் தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பலரும் கலந்து கொண்டனர்.
♣ காண்ட்ராக்ட், நீம், குறிப்பிட்ட கால வேலை போன்ற கொத்தடிமை முறைகளை வாபஸ் பெறு!
♣ சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமைகளை பறிக்காதே!
♣ முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு உறுதிப்படுத்து!
♣ சுயசார்பு பொருளாதாரத்திற்கு துணை புரியும் பொதுத் துறையை தாரை வார்க்காதே!
♣ நிரந்தர தொழில்களில் ஒப்பந்த ஊழியரை ஈடுபடுத்தி பல உயிரிழப்புகள், உடலுறுப்பு இழப்புகள் ஏற்படுகிறது, தொழிலாளர் துறையே தூங்காதே!
♣ Fixed Term Employment and Neem – ஐ முழுமையாக கைவிடு!
♣ 44 தொழிலாளர் சட்டத்தையும் முடக்காதே!
♣ மக்களின் சொத்தான பொதுத் துறைகளை விற்காதே!
♣ பாசிச RSS – BJP யை வீழ்த்திடுவோம்!
தகவல்:
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784
தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட ஜனவரி 8, 9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து ஜனவரி 9 அன்று அனைத்துச் சங்கக் கூட்டமைப்பு சார்பில் வேலூர் மாவட்டம், ஆம்பூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), AITUC, CITU, LPF, HMS, SDPI, மற்றும் INTUC உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் இம்மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர், AITUC மாவட்டச் செயலாளர் தோழர் தேவதாஸ், CITU மாவட்டப் பொருளாளர் தோழர் குமார், INTUC மாவட்டத் தலைவர் தோழர் கோவிந்தசாமி, HMS மாவட்டத் தலைவர் தோழர் பெருமாள், LPF மாவட்டப் பொருளாளர் தோழர் ஞானதாஸ் மற்றும் SDPI கட்சியினர் உள்ளிட்ட பலரும் இம்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவில் பெண் தொழிலாளர்களும் இம்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பிறகு மாலை 6.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.
படிக்க:
♦ இங்கே நடப்பது மக்களாட்சி அல்ல ! கிரிமினல் கும்பல்களின் ஆட்சி !
♦ ஆண்டிராய்டில் மூழ்கும் மாணவர்களை மீட்கும் வழி – விளையாட்டு | விருதை செஸ் போட்டி
தகவல்:
வேலூர்.