மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 51 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
தாயும் நிகலாவும் ஜன்னலருகே சென்றார்கள். வெளி முற்றத்தைக் கடந்து வாசல் வழியாக அவள் சென்று மறைவதை இருவரும் கவனித்தார்கள். நிகலாய் லேசாகச் சீட்டியடித்தவாறே மேஜை முன்வந்து உட்கார்ந்து எழுதத் தொடங்கினான்.

”அவளுக்குச் செய்வதற்கு மட்டும் ஏதாவது வேலை கொடுத்துவிட்டால் போதும், உடனே அவள் மனம் தேறிவிடுவாள்” என்று ஏதோ யோசித்தவாறே கூறினாள் தாய்.

“ஆமாம்” என்றான் நிகலாய். பிறகு அவன் தாயின் பக்கமாகத் திரும்பி அன்பு ததும்பும் புன்னகையோடு பேசினான். “நீலவ்னா உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை போலிருக்கிறது. தான் காதலிக்கும் மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது.”

“ப்பூ!” என்று கையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய். “எனக்குத் தெரிந்த ஒரே உணர்ச்சியெல்லாம் – என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவார்களே என்ற பயம் ஒன்றுதான்!”

”என்றுமே நீங்கள் யாரையேனும் விரும்பியதில்லையா?”

“எனக்கு நினைவில்லை. விரும்பியதாகத்தான் நினைக்கிறேன். யாரையோ நான் விரும்பத்தான் செய்தேன். ஆனால் ஞாபகம் தான் வரவில்லை .”

அவள் அவனைப் பார்த்தாள். பிறகு எளிமையாக அமைதியான சோக உணர்ச்சியோடு பேசினாள்:

” என் புருஷன் கொடுத்த அடியிலும் உதையிலும் என் கல்யாணத்துக்கு முன்னே என் வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தனையுமே நினைவை விட்டு ஓடிப்போய்விட்டன.”

நிகலாய் மேஜைப் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். தாய் அந்த அறையைவிட்டு ஒரு கணம் வெளியே சென்றாள். அவள் திரும்பி வந்தபோது நிகலாய் அவளை அன்பு ததும்பப் பார்த்தவாறே இனிய அருமையான நினைவுகளில் திளைத்தான்.

“என்னைப் பொறுத்தவரையில் சாஷாவைப்போல் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு. நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன் – – அவள் ஓர் அதிசயமான ஆசாமி. அவளைச் சந்தித்தபோது எனக்கு இருபது வயதிருக்கும். அன்று முதலே நான் அவளைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நான் அவளை அப்போது எப்படி நேசித்தேனோ, அது போலவே இப்போதும் நேசிக்கிறேன் – என் இதயபூர்வமாக, என்றென்றும் பெருந்தன்மையோடு காதலிக்கிறேன்.”

தான் நின்ற இடத்திலிருந்தே அவனது கண்களில் தோன்றும் இனிய தெளிந்த பிரகாசத்தை அவளால் காணமுடிந்தது. அவன் தனது கைகளை நாற்காலிக்குப் பின்னால் கோத்து. தன் கைகளின் மீது தலையைச் சாய்த்திருந்தான். எங்கோ வெகு தொலைவை ஏறிட்டுப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான். அவனது பலத்த மெலிந்த உடம்பு முழுவதும் சூரிய ஒளிக்காக ஏங்கித் தவிக்கும் மலரைப்போல் ஏதோ ஒரு காட்சியைக் காணத் தவித்துக்கொண்டிருந்தது.

“நீங்கள் ஏன் அவளை மணந்து கொள்ளக்கூடாது?” என்று கேட்டாள் தாய்.

“அவளுக்குக் கல்யாணமாகி நாலு வருஷங்களாகிவிட்டது.”

“முதலிலேயே நீங்கள் ஏன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை”

அவன் ஒரு கணம் சிந்தித்தான்.

படிக்க:
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்
மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு ! – RSYF, CCCE கண்டனம் !

“எப்படியோ அது நடக்காமல் போய்விட்டது. நான் வெளியில் இருந்தால். அவள் சிறையிலாவது, தேசாந்திரத்திலாவது இருப்பாள். அவள் வெளியிலிருந்தாள், நான் சிறையில் இருந்தேன். சாஷாவின் நிலைமையைப் போலத்தான். இல்லையா? முடிவாக, அவர்கள் அவளைப் பத்து வருஷகாலம் தேசாந்திர சிட்சை விதித்து, சைபீரியாவில் எங்கோ ஒரு கோடியில் கொண்டு தள்ளிவிட்டார்கள். நானும் அவளோடு போக விரும்பினேன். ஆனால், நானும் கூச்சப்பட்டேன். அவளும் கூச்சப்பட்டாள். அங்கே போன இடத்தில் அவள் வேறொருவனைச் சந்தித்தாள். அவன் நல்லவன்; எனது தோழர்களில் ஒருவன். பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி, வெளிநாட்டுக்குச் சென்று இப்போது அங்கே வசித்துவருகிறார்கள். ஹம்!

நிகலாய் தன் மூக்குக்கண்ணாடியைக் கழற்றி அதைத் துடைத்தான் , வெளிச்சத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்துப் பார்த்தான். மீண்டும் துடைத்தான்.

”அட. என் அப்பாவித் தோழா!” என்று அன்போடு கூறிக்கொண்டே தலையை அசைத்தாள் தாய். அவனுக்காக அவள் வருந்தினாள். அதே சமயம் அவளைப் பற்றிய ஏதோ ஒன்று தாய்மையின் பரிவுணர்ச்சியோடு அவளைப் புன்னகை செய்ய வைத்தது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்து மீண்டும் பேனாவை எடுத்துத் தான் பேசும் வார்த்தைகளுக்குத் தக்கபடி அதை அசைத்தாட்டிக்கொண்டே பேசினான்.

”குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது – எப்போதுமே குறைத்துவிடுகிறது. குழந்தைகள், குடும்பத்தைப் பட்டினி கிடக்காமல் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம், போதாமை. ஒரு புரட்சிக்காரன் என்றென்றும் தனது சக்தியை வளர்த்துக்கொண்டே போக வேண்டும், அப்போதுதான் அவனது நடவடிக்கைகளும் விரிவு பெறும். இன்றைய காலநிலைக்கு அது அத்தியாவசியம். நாம்தான் மற்றெல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும். ஏனெனில், பழைய உலகத்தை அழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்குச் சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமேதான். நாம் கொஞ்சம் பின் தங்கினால், சோர்வுக்கு ஆளானால், அல்லது வேறு ஏதாவது சில்லரை வெற்றியிலே மனம் செலுத்தினால் ஒரு பெருந்தவறைச் செய்யும் குற்றத்துக்கு, நமது இயக்கத்தையே காட்டிக்கொடுப்பது போன்ற மாபெரும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடுகிறோம். நமது கொள்கையை உடைத்தெறிந்து நாசமாக்காமல் நாம் வேறு யாரோடும் அணி வகுத்துச் செல்ல முடியாது; நமது இலட்சியம் சின்னஞ்சிறு சில்லரை வெற்றியல்ல, ஆனால் பரிபூரணமான மகோன்னத வெற்றி ஒன்றுமட்டும்தான் என்பதை நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாது.”

அவனது குரல் உறுதியுடன் தொனித்தது. முகம் வெளுத்தது. கண்கள் வழக்கம் போலவே நமது அமைதியும் அடக்கமும் நிறைந்த சக்தியோடு பிரகாசித்தன. மீண்டும் வெளியே மணி அடித்தது. லுத்மீலா வந்தாள். அவளது கன்னங்கள் குளிரால் கன்றிப்போயிருந்தன. அந்தக் குளிருக்குத் தாங்காத மெல்லிய கோட்டுக்குள்ளே அவளது உடம்பு நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

”அடுத்த வாரம் விசாரணை நடக்கப்போகிறது” என்று கோபத்தோடு கூறிக்கொண்டே, தனது கிழிந்து போன ரப்பர் பூட்சுகளைக் கழற்ற முனைந்தாள் அவள்.

”நிச்சயமாகத் தெரியுமா?” என்று அடுத்த அறையிலிருந்து கத்தினான் நிகலாய்..

தாய் அவளிடம் ஓடிப்போனாள். அவளது இதயத்திலே ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம் பயமா குதூகலமா என்பதை நிச்சயிக்க முடியவில்லை. லுத்மீலா அவளோடு போனாள்.

நாம்தான் மற்றெல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும். ஏனெனில், பழைய உலகத்தை அழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்குச் சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமேதான்.

“எனக்கு நிச்சயமாய்த் தெரியும். தீர்ப்பு நிர்ணயமாகிவிட்ட விஷயத்தைக் கோர்ட்டில் யாரும் மறைத்துப் பேசக் காணோம்” என்று தனது ஆழ்ந்த குரலில் கிண்டல்போலச் சொன்னாள் அவள். ”இந்தமாதிரி விஷயத்தை எப்படித்தான் விளங்கிக் கொள்கிறதோ? தனது எதிரிகளிடம் அதிகாரிகளே தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ளக்கூடும் என்று அரசு பயப்படுகிறதா? தனது சேவகர்கள் அனைவரது மனத்தையும் கலைத்துச் சீர்குலைப்பதிலேயே தன் சக்தியையும் காலத்தையும் முழுக்க முழுக்கச் செலவழித்துள்ள அரசு, அந்தச் சேவகர்களே யோக்கியர்கள் ஆவதற்குத் தயாராயிருக்கிறார்களா என்று அஞ்சுகிறது.” அலுமீலா சோபாவின் மீது உட்கார்ந்தாள்; தனது மெல்லிய கன்னங்களைக் கைகளால் தேய்த்து விட்டுக்கொண்டாள். அவளது கண்களில் ஒரே கசப்புணர்ச்சி பிரதிபலித்தது, அவளது குரலில் வரவரக் கோபம் கனன்று சிவந்தது.

“லுத்மீலா, வீணாய் ஏன் உயிரை விடுகிறீர்கள்?” என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முனைந்தான் நிகலாய். “நீங்கள் சொல்வதை அவர்கள் ஒன்றும் கேட்கப்போவதில்லை. உங்களுக்குத் தெரியாதா…”

தாய் அவளது வார்த்தைகளைக் கவனத்தோடு காதில் வாங்கிக் கொண்டாள். எனினும் அவளுக்கு அவற்றில் எதுவுமே புரியவில்லை. ஏனெனில், அவள் மனத்தில் சுற்றிச் சுற்றி மாறி மாறியெழுந்த ஒரே சிந்தனை இதுதான்.

”விசாரணை – அடுத்தவாரம் ”

ஏதோ ஓர் இனந்தெரியாத மனிதத்துவம் அற்ற சக்தி நெருங்கி வருவதாக திடீரென அவள் மனத்தில் தட்டுப்பட்டது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க