ரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயிலும் இளங்கலை விலங்கியல் துறையை சேர்ந்த 7 மாணவர்களை, மார்ச் – 19 அன்று நடைபெற்ற வேதியியல் செய்முறைத் தேர்வை எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்த 7 மாணவர்களும் செய்முறைத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 2080 கட்டவில்லை என்பதற்காக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் பெரும்பாலோனோர் கூலித்தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகளும் ஏழை மாணவர்களும்தான். தங்களது குடும்பச் சூழல்களைத் தாண்டி கல்லூரிக்கு வருவதே பெரும்பாடாக இருக்கும் சூழலில், செய்முறைத்தேர்வுக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக தடுத்து நிறுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பல்கலைக்கழக விதிகளிலோ, கல்லூரியின் விதிமுறைகளிலோ அத்தகைய உரிமையை கல்லூரி நிர்வாகத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் மாணவர்கள் வாதிட்டனர்.

இது ஏழு மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினையில்லை என்பதை உணர்ந்த சக மாணவர்கள் செய்முறைத்தேர்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக திரண்டனர். மார்ச்-20 அன்று கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.

மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை அலட்சியப்படுத்தியது கல்லூரி நிர்வாகம். இந்நிலையில் மதியம் 12.30 மணியளவில் கல்லூரிக்கு வந்த முதல்வரை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஏழு மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் வகுப்புகளுக்குத் திரும்புவதில்லை என்று உறுதியாக அறிவித்தனர்.

மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, துறை பேராசியர்களுடன் கலந்து பேசிய கல்லூரி முதல்வர், ”சிறப்புப் பிரிவில் 7 மாணவர்களும் செய்முறைத் தேர்வில் பங்கேற்க ஆவண செய்வதாக” உறுதியளித்தார். இதனையடுத்து உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.

”கல்விக்கட்டணம் செலுத்த முடியாத நிலை என்பது அந்த ஏழு மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; அது சமூகப் பிரச்சினை. நிர்வாகம் கெடுவிதிக்கும் நாட்களுக்குள் 2080 ரூபாய் கட்டவில்லையென்பதற்காக அவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிக்கும் செயலை அனுமதிக்க முடியாது” என்பதில் உறுதியாய் நின்று வென்றும் காட்டியிருக்கின்றனர், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள்.


தகவல்:
திருச்சி.
தொடர்புக்கு: 99431 76246.

♦ ♦ ♦ 

டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து கடந்த இருநாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஒதுக்கீடு செய்யாத மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராகவும்; இக்கல்வி உதவித்தொகையைப் பெற்றுதருவதற்காக எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாத கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்களான இவர்கள், இக்கல்வி உதவித்தொகையின் ஆதரவில்தான் கல்லூரி பயின்று வருகின்றனர். எதிர்வரும் பருவத்தேர்வுக்கான தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குரிய காலக்கெடு முடிவடையும் தருவாயில் கல்வி உதவித்தொகை கிடைக்க ஆவண செய்தால் மட்டுமே தங்களால் கல்வியைத் தொடர முடியும் என்ற நிலையில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் இக்கல்லூரி மாணவர்கள்.

முதல்நாள் மாணவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த கல்லூரி நிர்வாகம் மறுநாளான மார்ச்-20 அன்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ”இரண்டுநாளில் கல்வி உதவித்தொகை வந்துவிடும். அதற்கு நான் பொறுப்பு. போராட்டதைக் கைவிடுங்கள்” என்றார் கல்லூரி (பொறுப்பு) முதல்வர்.

”இத்தனை நாள் செய்யாததை, இந்த இரண்டு நாளில் எவ்வாறு செய்து முடிப்பீர்கள்? அதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேள்வியெழுப்பியதோடு, ” கல்வி உதவித்தொகை எப்போது கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கெடு தேதியை தள்ளி வைக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.

மாணவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்த கல்லூரி (பொறுப்பு) முதல்வர், வெறுமனே தமது வெற்று வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

படிக்க:
ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

”கல்வி உதவித்தொகை உடன் கிடைக்க வழி செய்ய வேண்டும்; அல்லது, கல்வி உதவித்தொகை கிடைக்கும் வரையில் பருவத்தேர்வுக்கான கட்டணம் செலுத்துவதற்கான கெடு தேதியை தள்ளி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உறுதியான போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

எஸ்.சி. – எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை  பல ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் அவலம், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல. தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளின் நிலை இதுதான்.

பல ஆண்டுகளாக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கிடைக்கப்பெறாத செய்திகளும் அதற்கெதிரான மாணவர்களின் போராட்டங்களும், மக்கள் விரோத மோடி – எடப்பாடி அரசுகளின் வெற்றுச் சவடால் விளம்பரங்களின் இரைச்சலில் கவனம் பெறாமலே கடந்து போகின்றன.


தகவல்:
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி,
கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க