உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 6

…அந்த அடர் காட்டில், மனிதனின் அடித்தடத்தையே காணாமல் மூன்றாவது நாள் கழிக்கையில் அலெக்ஸேய் இன்பகரமான ஒரு பொருளைக் கண்டெடுத்தான்.

சூரியனின் முதல் கிரகங்கள் தோன்றியதுமே அவன் விழித்துக்கொண்டான். குளிராலும் உள்ளார்ந்த காய்ச்சலாலும் அவன் உடல் நடுங்கிற்று. விமானி உடையின் பையில் அவன் கைக்கு ஏதோ தட்டுப்பட்டது. அது சிகரெட் பற்ற வைக்கும் கொளுவி. துப்பாக்கி தோட்டாவால் மெக்கானின் யூரா ஒரு நினைவுச் சின்னமாக அவனுக்கு செய்து கொடுத்தது. என்ன காரணத்தாலோ அலெக்ஸேய் அதைப் பற்றி அடியோடு மறந்திருந்தான். நெருப்பு மூட்டலாம், மூட்டவேண்டும் என்பதும் அவனுக்கு நினைவில்லை.

இப்போதுதான் எதன் அடியில் படுத்திருந்தானோ அந்த பிர் மரத்திலிருந்து பாசி பிடித்த சில உலர்ந்த சுள்ளிகளை ஒடித்து அவற்றை ஊசியிலைகளால் மூடி நெருப்பு மூட்டினான். மங்கிய நீலப்புகைக்கு அடியிலிருந்து மஞ்சள் தீ நாக்குகள் பளிச்சென்று மண்டியெழுந்தன. கீல் நிறைந்த உலர்ந்த கட்டை விரைவாக, குதூகலமாகத் தீப்பற்றிக் கொண்டது. தழல் ஊசியிலைகள் மீது படர்ந்தது. காற்று வீசி அதை மூண்டெரியச் செய்தது. முனகல்களும் சீழ்க்கைகளுமாகக் மும்முரமாய் எரிந்தது நெருப்பு.

நெருப்பு சடசடத்துச் சீறி, வறண்ட, இதமான வெப்பத்தைப் பரப்பியது. அலெக்ஸேய்க்கு அப்பாடா என்றிருந்தது. உடுப்பின் ‘ஜிப்பை’ நெகிழ்த்தினான், உள் சட்டைப் பையிலிருந்து கசங்கிய சில கடிதங்களை எடுத்தான். எல்லாம் ஒரே ஆளால் பிரையாசையுடன் எழுதப்பட்டிருந்தன. ஒன்றிலிருந்து அலெக்ஸேய் ஒரு நிழல் படத்தை எடுத்தான். பலவண்ணப் பூக்கள் தீட்டிய கவுன் அணிந்த ஒடிசலான இளம் பெண்ணின் படம் அது. புல் மீது மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அவள். அலெக்ஸேய் படத்தை நெடுநேரம் பார்த்துக் கொண்டிந்தான். அப்புறம் அதை ஸெல்லோபேன் காகிதத்தில் வைத்துச் சுற்றினான், கடிதத்துக்குள் செறுகினான். கடிதத்தைச் சிந்தனையுடன் சற்று நேரம் கையில் பிடித்துவிட்டு மறுபடி பைக்குள் வைத்துக் கொண்டான்.

“பரவாயில்லை, பரவாயில்லை, எல்லாம் நலமாகவே முடியும்” என்று அந்தப் பெண்ணிடமும் இல்லாமல் தனக்குத் தானேயும் இல்லாமல் சொன்னான். யோசனையில் ஆழ்ந்தவனாக “பரவாயில்லை…” என்று திரும்பக் கூறினான்.

அலெக்ஸேய் பெருமூச்செறிந்து, அணையும் தருவாயிலிருந்த நெருப்பிடம் விடை பெற்றுக்கொண்டு, மீண்டும் வழி நடக்கலாயினான். பனிக்கட்டியால் மூடப்பட்ட வெண்பனியில் ஊன்றுகோல்கள் சரக் சரக்கென்று நெறுநெறுக்க, உதடுகளைக் கடித்தவாறு நடந்தான். சில வேளைகளில் அவன் உணர்விழந்தான்.

 

இப்பொழுது பழக்கமான அங்க அசைவுகளுடன் பூட்சுகளைக் கழற்றினான், லேஞ்சித் துண்டுகளைச் சுற்று பிரித்தான், கால்களைக் கூர்ந்து நோக்கினான். அவை முன்னிலும் அதிகமாக வீங்கியிருந்தன. பாதங்கள் ரப்பரால் ஆனவை போலவும் அவற்றில் காற்று அடைக்கப்பட்டிருந்தது போலவும் தோன்றியது. அவற்றின் நிறம் முந்திய நாளைக் காட்டிலும் அதிகமாகக் கறுத்திருந்தது.

அலெக்ஸேய் பெருமூச்செறிந்து, அணையும் தருவாயிலிருந்த நெருப்பிடம் விடை பெற்றுக்கொண்டு, மீண்டும் வழி நடக்கலாயினான். பனிக்கட்டியால் மூடப்பட்ட வெண்பனியில் ஊன்றுகோல்கள் சரக் சரக்கென்று நெறுநெறுக்க, உதடுகளைக் கடித்தவாறு நடந்தான். சில வேளைகளில் அவன் உணர்விழந்தான்.

மாலைக் கருக்கல் வரை அவன் ஐந்து தொலைவுகளை கஷ்டத்துடன் கடந்தான். தரையில் கிடந்த பிரம்மாண்டமான, பாதி உளுத்த பிர்ச் மரக் கட்டையைச் சுற்றிலும் ஊசியிலைகளையும் சுள்ளிகளையும் குவித்து இரவில் பெரிய நெருப்பு மூட்டினான். கட்டை ஒளியின்றி வெம்மையாக கணகணத்துக் கொண்டிருந்த வரையில் வெண்பனியில் நீண்டு படுத்து உறங்கினான் அலெக்ஸேய். உயிரூட்டும் வெப்பத்தை முதலில் ஒரு விலாவிலும் பிறகு மறு விலாவிலுமாக உணர்ந்தான். இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டுப் புரண்டு கொடுத்தான். அவ்வப்போது விழித்துக்கொண்டு, சோம்பலாகத் தழல் விட்டுச் சீறியவாறு அணையும் தறுவாயிலிருந்த கட்டை மேல் சுள்ளிகளை அள்ளிப் போட்டான்.

நெருப்பு, விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளித்தது. பாசிஸ்டுகளைப் பற்றியோ, இத்தகைய இரவில் அஞ்சவே தேவையில்லை. பனிப்புயல் வீசுகையில் அடர்காட்டுக்கு உள்ளே வர அவர்கள் துணியமாட்டார்கள்.

 

நள்ளிரவில் பனிப்புயல் வீசத் தொடங்கிற்று. அலெக்ஸேயின் தலைக்கு மேலே பைன் மரங்கள் அசைந்தாடின. கலவரத்துடன் இரைந்தன, முனகின, கிரீச்சிட்டன. முள்ளாய்க் குத்தும் வெண்பனிப் படலங்கள் தரைமீது சாரி சாரியாகப் பாய்ந்தன. படபடத்துப் பொறி சிந்திய தழலுக்கு மேலே நர்த்தனம் ஆடிற்று சரசரக்கும் இருள். ஆனால் வெண்பனிச் சூறாவளி அலெக்ஸேய்க்குக் கலவரம் ஊட்டவில்லை. நெருப்பு வெப்பத்தின் காப்பில் அவன் இனிமையாக, ஆர்வத்துடன் உறங்கினான்.

நெருப்பு, விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு அளித்தது. பாசிஸ்டுகளைப் பற்றியோ, இத்தகைய இரவில் அஞ்சவே தேவையில்லை. பனிப்புயல் வீசுகையில் அடர்காட்டுக்கு உள்ளே வர அவர்கள் துணியமாட்டார்கள். இருந்தாலும், களைத்துச் சோர்ந்த உடல் புகை வெப்பத்தில் இளைப்பாறிய அதே சமயத்தில், விலங்குகளுக்குரிய எச்சரிக்கைக்கு அதற்குள் பழக்கப்பட்டுவிட்ட காதுகள் ஒவ்வோர் ஒலியையும் உற்றுக் கேட்டன. காலையாகும் முன் சூறாவளி அடங்கிவிட்டது. சந்தடியற்ற தரைக்கு மேலே இருளில் கவிந்திருந்தது அடர்ந்த வெளிர் மூடுபனி. அந்த வேளையில், பைன் மரமுடிகளின் ரீங்காரத்துக்கும் விழும் வெண்பனியின் சரசரப்புக்கும் அப்பால் அலெக்ஸேயின் காதுகளுக்கு, தொலைவிலிருந்து வந்த போர் ஓசைகள் கேட்பது போலப் பிரமை உண்டாயிற்று. வெடியதிர்ச்சிகளும், மெஷின்கள் குண்டு வெடி வரிசைகளும் துப்பாக்கி வெடிகளும் அவன் காதுக்கு எட்டின.

“போர்முனை நெருங்கிவிட்டதா என்ன? இவ்வளவு விரைவிலா?”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க