கேள்வி: //தீதும் நன்றும் பிறர் தர வாரா? இவை எவ்வகை கருத்து? நன்மையும் தீமையும் அவர் அவர் என்று பூங்குன்றனார் சொல்லுகிறார்? ஆனால் எல்லா பிரச்சினையும் சமூகத்தில் இருந்துதான் பிறக்கிறது என்று சொல்லிக்கிறது? நாம் எப்படி பார்ப்பது?//

– பா.அருண்

அன்புள்ள அருண்,

சங்ககாலப் புலவரான கணியன் பூங்குன்றானாரின் இந்தப் பாடல் புறநானூற்றுப் பாடலில் இடம் பெற்றுள்ளது.

முழுப்பாடல்:

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)”

பொருள்:

“எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால், பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.”
(நன்றி: தமிழ் விக்கிபீடியா)

நீங்கள் சொல்வது போல நன்மை தீமைகளை நாமே உருவாக்கிக் கொள்வதில்லை, மட்டுமல்ல, அப்படி உருவாக்கவும் முடியாது. நன்மை, தீமைகளும், இன்ப துன்பங்களும் முதன்மையாக நம்மைச் சுற்றியுள்ள சமூக உறுப்பினர்களால் வருவது. வாழ்வின் அடிப்படை பிரச்சினைகளாகன உணவு, உடை, இருப்பிடம் உட்பட அனைத்தும் நமது சாமர்த்தியங்களாலேயே கிடைத்து விடுவதில்லை. அதன் பொருட்டே இந்த உலகில் ஏழ்மை, பணக்காரர்கள் என்ற வர்க்கப் பிரிவு இருப்பதோடு உலகமயச் சூழலில் அந்த வேறுபாடு அதிகரித்தும் வருகிறது.

எனில் கணியன் பூங்குன்றனார் ஏன் அப்படிச் சொல்கிறார்? அவரது காலமான சங்ககாலம் என்பது புராதன இனக்குழுச் சமூக அமைப்பில் இருந்து வர்க்க ரீதியான பிரிவினைகளோடு மாறிய காலமது. இனக்குழு தலைவர்கள் போய், இனக்குழு ஜனநாயகம் மறைந்து குறுநில மன்னர்களும், ஒடுக்கும் வர்க்கம், ஒடுக்கப்படும் வர்க்கம் என சமூகம் பிரிய ஆரம்பிக்கிறது. சொத்துடமையின் பிரிவால் தோன்றிய இந்த வளர்ச்சி சமூகத்தில் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது. திருட்டு, பொய், புறம் பேசுதல், அதிகாரத்தால் அடக்குதல், தண்டனை என்று சொத்துடமை சமூகத்தின் பண்புகள் மக்களிடையே பல்வேறு குழப்பங்களை தோற்றுவிக்கின்றன.

அந்தக் குழப்பங்களில் இருந்து மக்களை ஆற்றுப்படுத்தும் பணியினை சங்ககால இலக்கியங்கள் செய்கின்றன. அதாவது சமூகத்தால் தோன்றும் பிரச்சினையில் பாதிக்கப்படும் தனிமனிதனிடம் அந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் குறிப்பிட்ட தனிநபர்களே என்பதாக எடுத்துரைக்கின்றன. திருக்குறள் உள்ளிட்ட சங்ககால இலக்கியங்களின் வரலாற்றுக் காரணம் இப்படித்தான் இருக்கின்றது. இன்றும் இத்தகைய எண்ணங்களை இலக்கியம், சுயமுன்னேற்றம், மதம், அறநெறிகள் போன்றவற்றில் செல்வாக்கோடு இருப்பதைக் காணலாம்.

படிக்க:
♦ பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !
♦ கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?

♦ ♦ ♦

கேள்வி: //தீவிரவாதிகள் என்பவர்கள் யார்? இதில் ஏன் இஸ்லாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதிகளா? இந்தியாவில் தீவிரவாதிகள் இருக்கீறர்களா? தீவிரவாதிகள் நல்லவர்களா? கெட்டவார்களா?.//

– பா.அருண்

அன்புள்ள அருண் தீவிரவாதிகள் வேறு, பயங்கரவாதிகள் வேறு. கொள்கையில் தீவிரமாக இருந்து இயக்கம் நடத்துபவர்களை தீவிரவாதிகள் என்கின்றனர். உலகம் முழுவதும் ஆயுதப் போராட்டத்தை முன்வைத்து மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு பாடுபடும் இடதுசாரிக் குழுக்கள் இப்படியாக அழைக்கப்படுகின்றனர்.

நம்மூரில் மாவோயிஸ்டுகளை இப்படிக் கூறுகிறார்கள். பயங்கரவாதிகளைப் பொறுத்த வரை அவர்கள் தமது இனம், சாதி, மதம், நிறம் சார்ந்த ஆதிக்கத்தை முன்னிறுத்தும் வண்ணம் மற்ற இன, சாதி, மத, நிற மக்களை பயங்கரவாத செயல்களால் கொல்கின்றனர்.

சொர்க்கத்தில் அல்லா நமக்காக காத்துக் கொண்டிருக்கிறான் என்று மூளைச் சலவை செய்யப்படும் முஸ்லீம் இளைஞர்கள் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து செயல்படுகின்றனர். இத்தகைய முஸ்லீம் பயங்கரவாத குழுக்களை அமெரிக்காவே தோற்றுவித்தது.

கு – கிளாக்ஸ் கிளான் பயங்கரவாத அமைப்பு.

அதே போன்று அமெரிக்காவில் வெள்ளை நிறவெறி, கிறித்தவ மதவெறி போன்றவற்றை முன்னிறுத்தி மற்ற நாட்டவர்களை கொல்லும் கு – கிளாக்ஸ் கிளான் போன்ற இயக்கங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தீவிரமாக இயங்கி வந்தன. தற்போதும் ஆங்காங்கே இவர்களது வன்முறைகள் நடப்பதுண்டு.

ஆரிய இனத்தின் மேன்மை என்று பேசிய ஹிட்லரின் நாஜிப்படைகள் அப்படித்தான் யூத இன மக்கள் கொடூரமாக இலட்சக்கணக்கில் கொன்றனர். இந்தியாவில் இந்துமதவெறி அமைப்புக்கள் பலவும் கூட பயங்கரவாத அமைப்புக்கள் தான். ஆர்.எஸ்.எஸ்., ஹிட்லரின் நாஜிக் கட்சி போன்றவை அரசு அங்கீகாரம் பெற்றிருப்பதாலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதல்ல. தத்தமது மதம்தான் உயர்ந்தது என்று பல்வேறு மதங்களின் பெயர்களில் இப்படியான பயங்கரவாத இயக்கங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.

ரோஹங்கியா முஸ்லீம்கள் கொன்று குவிக்கும் மியன்மரின் பௌத்த பயங்கரவாதத்தில் பலிகடாக்களாக முஸ்லீம்களே இருக்கின்றனர். எனினும் உலக அளவில் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகம் இருப்பதால் அவர்கள் மட்டும்தான் பயங்கரவாதம் என்பதான தோற்றம் இருக்கிறது.

முஸ்லீம் மக்களோ, கிறித்தவ மக்களோ, இந்துக்களோ அனைவரும் தத்தமது பெயரில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும் மதம் என்ற பெயரில் சாத்வீகமாகவே தமது மதங்களின் சிறப்புத் தன்மையை நம்புகிறார்கள். இதுதான அந்தந்த மதங்களின் பயங்கரவாத குழுக்கள் ஒன்றுபடும் புள்ளியாக இருக்கிறது.

பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர் போபாலின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கோட்சே தேசபக்தர் என்கிறார். எனில் அந்த தொகுதியின் இந்துக்கள் தார்மீக அளவில் பிரக்யாவிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்றுதானே பொருள்!

படிக்க:
♦ வேட்பாளராக பயங்கரவாதி பிரக்யா சிங் : ‘ஜனநாயகத்தை’ அம்பலப்படுத்தும் பாஜக !
♦ இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?

♦ ♦ ♦

கேள்வி: //தோழர், நாம் தமிழர் கட்சியை பத்தி அக்குவேற ஆணிவேரனு பிரிச்சி சொல்லுங்க.. ஒரே கண்ப்யூசனா இருக்கு.. அவிங்கள புரிஞ்சிக்க வழிகாட்டுங்க.. ஆன் தி வேல.. மே 17 பத்தியும் கம்பேர் பண்ணேல்னா தேவல..பதிலுக்கு மரணவெய்டிங்..//

– ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

நாம் தமிழர் குறித்த வீடியோக்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் இணையத்தில் ஏராளம் இருக்கின்றன. அது போல மே 17 இயக்கம் குறித்தும் இருக்கின்றன. அவை குறித்து நீங்கள் விரிவாக படித்து கேட்டுவிட்டு என்ன சந்தேகம் என்பதை கேளுங்கள். அவற்றை அறியாமலேயே போகிற போக்கில் அவர்களைப் பற்றி நாங்கள் சொல்லி நீங்கள் அறிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

♦ ♦ ♦

கேள்வி: //முன்பு டிஜிட்டல் இந்தியா -இப்போ புதிய இந்தியா என்பதோடு- எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம்.. என்கிறாரே மோடி – அப்படியா.. எந்த விதத்தில்…?//

– எஸ். செல்வராஜன்

அன்புள்ள செல்வராஜன்,

330 இடங்களை வென்று வலுவாக ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி எங்களை நம்பாதவர்களுக்கும் சேர்த்தே பணியாற்றப் போகிறோம் என்கிறார்.

அரசியல் சாசனப்படி ஒரு பிரதமரோ, ஒரு மத்திய அரசாங்கமோ நாங்கள் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆட்சி செய்வோம் என்று சட்டப்படி கூற இயலாது.

அந்த சட்டரீதியான உண்மையை ஏதோ போனால் போகிறது என்று இரக்கப்பட்டு கூறுகிறார் மோடி. இதிலிருந்தே அவரது ஆட்சி இந்து ராஷ்டிரத்து ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது என்பது தெளிவு.

அவர் பதவி ஏற்ற பிறகு அடுத்து வந்த சில நாட்களிலேயே முஸ்லீம்கள், தலித்துக்கள் மீதான தாக்குதலாக இருக்கட்டும், அவர்களை எதிர்த்து எழுதுபவர்களை (யோகி ஆதித்யநாத் – உத்திரப்பிரதேசம்) கைது செய்வதாக இருக்கட்டும் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. சொல்லில் சமூக நல்லிணக்கம், செயலில் துவேஷம் இதுதான் மோடி அரசின் மந்திரம்.

♦ ♦ ♦

கேள்வி: //முதல் இந்து தீவிரவாதி என்ற விவாதம் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டதை மறைப்பதற்கா?//

– மனோ

அன்புள்ள மனோ,

கமலஹாசன் தற்செயலாக பேசிய இந்த விசயத்தின் பின்னே அவர் பாஜக-வின் பி டீம் என்ற பெயரை மாற்றுவதற்காக இருந்திருக்கலாம். மற்றபடி ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை விடுத்து சினிமா அரசியல்வாதிகளின் தடாலடி பேச்சுக்களை பேசுபொருளாக்குவது ஊடகங்கள்தான்.

கமலஹாசன் கட்சி ஆரம்பித்த் போதே நான் பினரயி விஜயன், அரவிந்த் கேஜ்ரிவாலை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் பார்ப்பேன் என்றவர். நான் வலதும் அல்ல, இடதும் அல்ல மையம் என்பதன் மூலம் மறைமுகமாக தான் வலது என்று நிற்பவர்.

பொதுவில் ஊழல் எதிர்ப்பு, சுத்தபத்தமான அரசியல் என்று பேசி பொழுதைக் கழிக்கிறார். அதற்குள் பிக்பாஸ் சீசன் 3 வந்துவிட்டது. இதே ஊடகங்கள் மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தையோ இன்ன பிற மக்கள் போராட்டங்களையோ கமல்ஹாசனுக்கு ஒதுக்கும் முக்கியத்தவத்தோடு காட்டாது.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்