த்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல மறுத்த 16 வயது சிறுவனை கடுமையாகத் தாக்கியுள்ளனர் காவிக் குண்டர்கள். கடந்த இரண்டு வாரங்களில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கத்தின் பெயரில் நிகழும் நான்காவது தாக்குதல் சம்பவம் இது.

கடந்த வெள்ளியன்று, பாரா பகுதியில் வசிக்கும் முகமது தாஜ், கித்வாய் நகரிலுள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்துக்கொண்டு திரும்பியிருக்கிறார். தாஜின் வீட்டுக்கு அருகே, பைக்கில் வந்த சிலர் அவரை தடுத்து நிறுத்தி, ஏன் தலையில் தொப்பி அணிந்திருக்கிறாய் எனக் கேட்டுள்ளனர். ‘ஜெய் ஸ்ரீராம் சொல்’ எனவும் வற்புறுத்தியிருக்கின்றனர்.

“அவர்கள் என்னுடைய தொப்பியை தலையிலிருந்து எடுத்தனர். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்ல வற்புறுத்தி என்னை கீழே தள்ளி ரத்தக் காயம் வரும்வரை அடித்தனர்” எனக் கூறும் தாஜ், இந்தப் பகுதியில் தலையில் தொப்பி அணிய அனுமதியில்லை என அவர்கள் மிரட்டியதாகவும் சொல்கிறார்.

காவிக் குண்டர்கள் தன்னைத் தாக்கத் தொடங்கியதும், தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடியதாகவும் சில கடைக்காரர்களிடம் கெஞ்சியதாகவும் சொல்கிறார் தாஜ். இறுதியாக சிலர் உதவ முன்வந்தவுடன் குண்டர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து சிறுவன் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத காவி குண்டர்கள் மீது இருசமூகங்களுக்கிடையே பகைமையை உருவாக்குதல் பிரிவு (153ஏ)-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிக்க:
பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

’ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கமிடச்சொல்லி, ‘திருட்டு’ குற்றச்சாட்டில் 22 வயதான தப்ரேஸ் அன்சாரியை 12 மணி நேரம் அடித்தே கொன்றது காவிக் கும்பல். மும்பையில் ஒரு கார் ஓட்டுநர் இதே முழக்கத்தின் பேரில் தாக்கப்பட்டார். மேற்கு வங்கத்தில் மதராஸா ஆசிரியர் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டார்.

எந்த முழக்கத்தின் பெயரால் முசுலீம்கள் தாக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருக்கும் காவிகள் முடிவு செய்கிறார்கள். தேர்தலின்போது முழங்கி ஆரம்பித்து வைத்த வெறுப்பின் அரசியலை, தெருவுக்கு தெரு உருவாகியுள்ள காவி குண்டர்படை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டோரும் இருண்ட காலகட்டத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நாள்தோறும் நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் மூலம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.


அனிதா
செய்தி ஆதாரம்: தி வயர்.