ரேந்திர மோடி அரசு இரண்டாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது முதல், பல்வேறு கார்ப்பரேட் நலத் திட்டங்களுக்கு அச்சாரமிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை அடுத்ததாக நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கையில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரயில்வே துறையை நவீனப்படுத்த எந்த வகையான பெருவீத முதலீடும் செய்வதற்கான நிதி வாய்ப்பு அரசாங்கத்திடம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆகையால் சாத்தியமான இடங்களில் எல்லாம் பொதுத்துறை தனியார் கூட்டின் மூலம் இதனைச் செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்.

Nirmala Sitharamanதேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் இரயிலை இயக்குவதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அழைப்புவிடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு பிரதமமந்திரி அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இரயில் பெட்டி, எஞ்சின் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் இரயில்வேயின் ஏழு உற்பத்தி ஆலைகளையும் கார்ப்பரேட்மயப் படுத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. இது மோடி அரசாங்கத்தின் முதல் 100 நாள் திட்டத்தின் கீழ் இரயில்வே துறையில் செய்யப்பட்டிருக்கும் மிகச் சிறந்த நடவடிக்கையாகும் என பாராட்டியிருக்கின்றனர் கார்ப்பரேட் முதலாளிகள்.

இந்த கார்ப்பரேட்மயப்படுத்தலுக்காக இந்திய ரயில்வே ரயில்தட வாகன நிறுவனம் (Indian Railway Rolling Stock Company – IRRC) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்நிறுவனம் இந்த ஆலைகளை சுதந்திரமாக கட்டுப்படுத்துவதோடு, மேலாண்மையும் செலுத்தும்.

படிக்க:
♦ பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக
♦ மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

இவ்வாறு உருவாக்கபடவிருக்கும் இந்த இரயில்தட வாகன நிறுவனம்தான் உலகிலேயே மிகப்பெரிய இரயில்தட வாகன நிறுவனமாக இருக்கும் என்று கூறபடுகிறது. பம்பார்டியர், சீமன்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை விட மிகப்பெரிய நிறுவனமாக இது இருக்கும். சீனாவின் இரயில்தட வாகன நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி நிறுவனத்தை ஒத்த வழிமுறையிலேயே இந்தியாவின் ஐ.ஆர்.ஆர்.சி நிறுவனம் உருவாக்கப்படத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் சிறியதும் பெரியதுமான சுமார் 40 உற்பத்தி நிறுவனங்களை ஒன்றிணைத்துதான் சீனாவின் சி.ஆர்.ஆர்.சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம்தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய இரயில்தட வாகன நிறுவனமாகும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராக இருக்குமா என்ற கேள்விக்கு “தனியார் நிறுவனங்கள் உறுதியாக தயாராக இருப்பார்கள். ஏனெனில் இரயில் நிலையங்கள், தண்டவாளம் இடுதல், சமிஞ்ஞை (சிக்னல்) அமைப்புகள், மின்மயமாக்குதல் போன்றவையே ரயில்வேயைப் பொருத்தவரையில் பெரும் முதலீட்டைக் கோருவன. ஆனால் ரயில்களை இயக்குவது ஒப்பீட்டளவில் அவ்வளவு செலவுக்குரிய விசயம் இல்லை. ஆகவே வருமானம் சிறப்பாக வந்தால் தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக முதலீடு செய்வார்கள்” என பதிலளிக்கிறார், முதலாளித்துவ பொருளாதார நிபுணர் நீல்கந்த் மிஸ்ரா.

அதாவது பெரும்பான்மை மக்களின் நிலத்தை அரசுக்காக என அடிமாட்டு விலையில் எடுத்துக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் வரிப்பணத்தை எடுத்து தண்டவாளம் போடுவதையும், இரயில் தட மின்மயப்படுத்தலையும் அரசு செய்துமுடித்த பின்னர், முதலாளிகள் வந்து நோகாமல் ரயில்விட்டு பணம் சம்பாதிப்பார்களாம். அதுவும், இரயில்வேக்கான அடிப்படைக் கட்டுமானத்தை உருவாக்கிய இந்திய மக்களிடமிருந்து அதனை பிடுங்கிவிட்டு மீண்டும் அதே மக்களை சுரண்டிச் சம்பாதிப்பார்களாம்.

இப்படித் தனியார்மயப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கு அரசுத்தரப்பிலும், முதலாளித்துவவாதிகள் தரப்பிலும் ஒரு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதாவது இரயில்வே துறையை நவீனமயப்படுத்துவதற்கு தற்போதிருந்து 2030 வரைக்குமிடையிலான காலகட்டத்திற்கு சுமார் 50 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறதாம். ஆண்டுக்கு 1.6 லட்சம் கோடி மூலதனமிடும் சக்தி மட்டுமே இரயில்வேதுறையிடம் இருப்பதால், நவீனமயப்படுத்தும் திட்டம் பல பத்தாண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படும் நிலை ஏற்படாமல் இருக்க தனியார் மூலதனம் தேவை, என்கிறது அரசு. அதனால்தான் பொதுத்துறை – தனியார் கூட்டு நிறுவனங்களை மோடி அரசு ஊக்குவிக்கிறதாம்.

மும்பையில் பொதுத்துறை நிறுவனமான மும்பை மெட்ரோவும் அனில் அம்பானியும் இணைந்து உருவாக்கிய பொதுத்துறை – தனியார் கூட்டு நிறுவனமான “மெட்ரோ ஒன்” நிறுவனம் ரயில் டிக்கெட்டுகளின் விலையை சாமானியர்கள் பயன்படுத்த முடியாதபடிக்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் ரயில் விலைக்கு நிகராக பொதுப் பேருந்து போக்குவரத்துக் கட்டணங்களையும் உயர்த்தச் சொல்லி அம்மாநில அரசை மிரட்டிப் பணியவைத்தது நினைவிருக்கலாம்.

இந்த தனியார்மயமாக்கத்தை விரைந்து செயல்படுத்த மோடி அரசு முனைப்புடன் முயற்சித்துவருகிறது. இனி இரயில்பயணமும் ஏழைகளுக்கு மட்டுமல்ல நடுத்தரவர்க்கத்துக்கும் எட்டாக் கனிதான் !


நந்தன்

செய்தி ஆதாரம் :  இந்தியன் எக்ஸ்பிரஸ்