கரிச்சான் குஞ்சு நினைவுகளும் காணாமல் போன முன்னுரையும்…

நண்பர்களே…

பொ.வேல்சாமி

.மார்க்ஸ், பொதிய வெற்பன் ஆகியவர்களின் நட்பினால் கரிச்சான் குஞ்சுவுடன் பேசி, பழகி, மகிழும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்தத் தருணத்தில் கரிச்சான் குஞ்சு அவர்கள் என் வேண்டுகோளுக்கு இணங்கி, “தேவிபிரசாத் சட்டோபாத்யாய” ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் அழகாகவும் செறிவாகவும் மொழிபெயர்த்துக் கொடுத்தார். இது தொடர்பான தகவல்களை இந்த மாதம் வெளியான “புதிய புத்தகம் பேசுது” இதழில் வந்துள்ள என்னுடைய நேர்காணலில் விரிவாக பேசியுள்ளேன். அந்தப் பேச்சை நீங்கள் படிப்பதற்காக அந்தப் பக்கங்களைக் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அந்தத் தகவல்களைக் கூறும் என்னுடைய பேட்டியில் கரிச்சான் குஞ்சு அவர்கள் அந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருந்தார் என்று கேள்விபட்டேன். ஆனால் அது நூலில் இல்லை என்பதாகக் கூறியிருந்தேன். கரிச்சான் குஞ்சு இந்நூலின் மொழிபெயர்ப்பு சார்ந்த தகவல்களை உள்ளடக்கி ஒரு முகவுரை எழுதிக் கொடுத்ததாகவும் அந்த முகவுரையை நண்பர் மார்க்ஸ் சென்னை புக்ஸ் பொறுப்பாளர் தோழர் பாலாஜியிடம் கொடுத்ததாகவும் இன்று என்னிடம் சொன்னார். பின்னர் அந்த முகவுரை நூலில் ஏன் இடம் பெறவில்லை என்று நண்பர் மார்க்ஸ், தோழர் பாலாஜியிடம் கேட்டதாகவும் அதற்கு பாலாஜி அவர்கள் இந்த நூலின் கைப்பிரதியை சரிபார்த்து தரும்படி பேராசிரியர் வீ.அரசுவிடம் வேண்டி கொடுத்ததாகவும், அந்த வேலையை முடித்துக் கொடுத்த அரசு அவர்கள் முன்னுரையை மட்டும் கடைசிவரை தராததனால் முன்னுரை இல்லாமல் நூல் வெளிவந்து விட்டது என்று தோழர் பாலாஜி கூறியிருக்கிறார்.

உலக புகழ்பெற்ற இந்நூலின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பை நீங்கள் அனைவரும் படித்து சுவைப்பதற்கு அந்த நூலின் இணைப்பை இத்துடன் தந்துள்ளேன்.

குறிப்பு : இந்நூல் இந்திய தத்துவ ஆராய்ச்சியின் நுட்பமான பகுதிகளையும் சட்டோபாத்யாய காலம்வரை இந்திய தத்துவங்களைப் பற்றி பேசிய பேராசிரியர்கள் தொடாது விட்ட பகுதிகளையும் தன்னுடைய மார்க்சிய கண்ணோட்டத்தின் வழியாக பேராசிரியர் சட்டோபாத்யாய விளக்குகிறார். எனவே இந்நூலை ஒரே ஒரு வாசிப்பில் படித்து புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். எனவே நண்பர்கள் ஒருமுறைக்கு இருமுறை நூலில் உள்ள சில ஆழமான பகுதிகளை மூன்றுமுறை கூட படிக்க வேண்டி இருக்கும் என்பதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க