உங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா? தெரியவில்லை என்றால், தயவுசெய்து கூகுளில் தேடுங்கள். பல அதிர்ச்சிகரமான வலைப்பின்னல்களை அறிந்து கொள்ளலாம்.
இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம் வலதுசாரி அரசியல் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ.. மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை… இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான். தமிழக வலது அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு. Young Thinkers Forum–> Swarajya –> RSS – என்று இந்த வலைப்பின்னல் போகிறது.
2016-ல் தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த தொடக்கவிழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, ‘அறிவுத்துறையில் நமக்கான போர்வீரர்களை உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது.
2017 நவம்பரில் இந்த அமைப்பு மைலாபூரில் Social media conclave ஒன்றை நடத்தியது. இதை தொடங்கி வைத்தவர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்டகால தொடர்பு உள்ளவர் என்பதை இணைந்து புரிந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விருந்தினர் பட்டியல் இன்னும் சுவாரஸ்யமானது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தந்தி டி.வி.யின் அசோக வர்ஷினி, The news minute இணையதளத்தின் founder editor தன்யா ராஜேந்திரன், பாடகி சின்மயி, டி.வி.விவாதங்களில் கலந்துகொள்ளும் ஷ்யாம் சேகர், சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் பேசிய, ’ஸ்வராஜ்யா’ இணையதளத்தின் ஆசிரியர் பிரசன்னா வெங்கடேசன் எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வெளிப்படையாக பேசினார்.
“தமிழ் சமூக ஊடகத்தில் இடது சிந்தனை அதிகமாக உள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு எதிரான போக்கை வளர்க்கிறது. நியூட்ரினோ, ஹைட்ரோஹார்பன் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் போக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் உந்துதலால், தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி இலக்கு வைத்து தாக்கப்படுகிறது. இந்து ஃபோபியா வளர்த்துவிடப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று தங்கள் நோக்கத்தை திட்டவட்டமாக குறிப்பிட்டார். சுருங்கச் சொன்னால் அறிவுத்துறையில் வலதுசாரி போக்கை வளர்த்தெடுப்பது இந்த அமைப்பின் ஒற்றை நோக்கம்.
படிக்க:
♦ பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !
♦ ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !
இதன் செயல்பாடுகளை தேடிப் படித்தால் ஷ்யாம் சேகர், மாரிதாஸ், பத்ரி ஷேசாத்ரி, ரெங்கராஜ் (Ex. தந்தி டி.வி) போன்றவர்கள் இதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதை அறிய முடிகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரிய கூட்டம் இல்லை. 30 பேர், 50 பேர் வருகிறார்கள். இந்த Young Thinkers Forum-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பெரிய அளவுக்கு ஃபாலோயர்ஸ் இல்லை. இருப்பினும் பத்ரி, ஷியாம் சேகர் போன்றோர் இதன் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து கலந்துகொள்கிறார்கள்.
மாரிதாஸ் என்ற நபர், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்?’ என்ற புத்தகத்தின் வழியேதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அதற்கு முன்னால் இந்தப் பெயரை கூட யரும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்தகத்தை தன்னுடைய கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியிட்டவர் பத்ரி சேஷாத்ரி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசியவர்களில் ஒருவர் கே.டி.ராகவன். புத்தகம் போடும் அஜண்டா பத்ரிக்கு… வாழ்த்திப் பேசும் டார்கெட் ராகவனுக்கு. வதந்தி பரப்பும் அஜண்டா மாரிதாஸுக்கு. ஆகவே, மாரிதாஸை மட்டுமல்ல.. இந்த லார்டு லபக்கு தாஸ்களையும் நாம் இணைத்து புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், இந்த Young Thinkers Forum-மானது, இளையோர் நாடாளுமன்றம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்குள் ஊடுருவிச் செல்வது, பட்ஜெட் கொள்கை விளக்க கூட்டங்கள், கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீதான கூட்டம் என பரந்த வரையறையில் ஒரு கருத்துருவாக்க வேலையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ‘அம்பேத்கர் – ராமானுஜச்சார்யா விருதுகள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது. ’கக்கன் வாழ்நாள் சாதனையாளர் விருது’ என்ற பெயரில் மற்றொரு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த Young Thinkers Forum-ஐ இந்தியா முழுவதும் நடத்தி வருவது ‘இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட அமைப்பு. இந்த இந்தியா ஃபவுண்டேஷனின் ஆலோசகர்களாக செயல்பட்டு வருவோரில் முக்கியமானவர்கள் நிர்மலா சீத்தாராமன், ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர்.
இதைப்போலவே, ‘விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற மற்றொரு Forum வழியேவும் இதேவேலையை செய்து வருகின்றனர். இதன் ஆலோசகர்களில் ஒருவர் குருமூர்த்தி. இந்த அமைப்பு வழியாகதான் 2011-ல் ‘ஊழலுக்கு எதிரான பொது மேடை’ என அன்னா ஹசாரே முன்னிருத்தப்பட்டார். அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளே வந்தார். சுப்ரமணியன் சாமி, கிரண்பேடி என்று பலர் அதில் அணிதிரண்டனர். ஊழல் மட்டுமே நாட்டின் முதனை பிரச்னை என்ற பிரசாரம் நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டு பா.ஜ.க. ஆட்சியையும் பிடித்தது.
தற்போது இவர்கள் தென்னிந்திய ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகத்தை manipulate செய்யும் வேலைத் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில் பாரம்பரிய ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. சமூக ஊடகம்தான் சவாலானதாக இருக்கிறது என்பதால் அதை குறி வைத்துள்ளனர்.
இதற்கான அடியாள்படையில் மாரிதாஸ், ரெங்கராஜ் போன்றோர் முன்னே நிற்பவர்கள் என்றால், பத்ரி சேஷாத்ரி, ஷ்யாம் சேகர், பானு கோம்ஸ் போன்றோர் பின்னால் நிற்கிறார்கள். மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இவர்கள் செயல்படுகின்றனர். இப்போதே எச்சரிக்கை அடைந்து வினையாற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும்.
நாம் பெரியார் மண், பெரியார் மண் என்று வாய்ப்பேச்சில் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, அவன் அந்த மண்ணுக்கும் கீழாக குழி பறித்துக் கொண்டிருக்கிறான். இதை முதலில் உணர வேண்டும்.
நன்றி : ஃபேஸ்புக்கில் – ஊடக கண்காணிப்பு
ஆசிரியர் தேர்வு வாரிய ஊழலை வெளி கொணர இயலுமா?
ஆவணங்கள் என் வசம் உள்ளது
மிக்க நன்றி
ஆழ்ந்த சமூக பொருப்பு டன் ஊடகங்களை புலனாய்வு செய்து விபரங்களை வெளியிடுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள கண்காணிப்பு பதிவு போற்றதக்கதே எனினும் இதனை வெளியிடுவதில் தகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய தந்திரவுக்தியில் கமிட்டி வட்டார அளவில் உஷார் படுத்தவேண்டுமே ஒழிய, இப்படி வெளியிடுவதன் மூலம் வலுவான நிர்வாக பொருப்பிலுள்ள கிரண்பேடி மாஃபோய் போன்ற வகையறாக்கள் ஆளும் அரசு பதவிகளை ஏதாவது ஒரு வகையில் தக்கவைத்துக் கொண்டே இந்துத்துவா வழியில் சமூகத்தை வென்றெடுக்கும் மடைமாற்ற களப்பணி ஆற்றிவரும் இவ்வதிகார அமைப்பு , வரலாறு தொட்டு பொருளாதார வளர்ச்சியின் உச்ச நிலையை அடைந்துள்ளவர்களின் மீதான கண்காணிப்பு ரகசிய போக்கிலே இருக்கவேண்டும், முற்போக்காளர்கள் பல்வேறு இன்னல் நெருக்கடிளுக்கு ஆளாகியுள்ள சமூக சூழலில், நமது இணையதளம் ஒன்றே புரட்சியை எப்படியாயினும் சாதிப்போம் என்ற நம்பிக்கை ஊட்டி ஆசுவாசப் படுத்துவதாய் உள்ளது,இதனை மேலும் முன்னேடுத்து செல்ல தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய கடமை உள்ளது என்பதினை நினைவுறுத்துகிறோம்…!!!
மாரிதாஸ் ஆதாரங்களை முன்வைத்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவரை கண்டபடி வசை பாடுவது சரியல்ல. பெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுத்தது, வைக்கம் வீரர் பட்டம் கிடைத்தது ஆகியவற்றின் பின்னணியில் இருக்கும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். திமுகவின் தற்போதைய தலைவர் மிசா சட்டத்தின் கீழ் எதற்காக கைதானார் என்பதையும் கோடிட்டுக் காட்டினார். கருணாநிதி எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு தான் எதிர்க்க ஆரம்பித்தார். அதற்கான காரணங்களையும் மாரிதாஸ் பட்டியலிட்டார். இதற்கெல்லாம் பதில் சொல்ல திராணியில்லாமல் மாரிதாசை பிராடு, மொள்ளமாரி என வசைபாடுவது சரியல்ல.
மக்கள் அறிவோம்.. மோடியோ, ஸ்டாலினோ கொடிய நஞ்சு கொண்டவர்களை முதலில் அடிப்போம்.. மக்கள் விரோதிகள் யாராயிருந்தாலும் நேருக்கு நேர் எதிர்ப்பதே வினவு அறிந்த ஊடக தர்மம். மாரிதாஸ் போன்ற கைக்கூலிகளை, தேவை முடிந்தவுடன் RSS குப்பைக் கிடங்கில் கிடப்பார்..இவருக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க முடியாது.தேவையுமில்லை.
– மருது பாண்டியன்-
பத்திரிகையாளர்
போடி நாயக்கனூர்