- ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்தும்!
- வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுத் துறையினரையும்,
சி.ஏ.ஏ போராட்டத்தில் சிறைபடுத்திய இஸ்லாமியர்களையும் உடனே விடுதலை செய்யக் கோரியும்! - கருப்பர் கூட்டம் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்!
- கடவுளுக்காக சவுண்ட் விடும் பாசிச பா.ஜ.க.-வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்!
ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்நிகழ்வின் தொகுப்பு உங்களுக்காக.
***
மதுரை :
மதுரை மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, மதுரை மாநகரில் உள்ள ஓபுளா படித்துறையில் 03.08.2020 திங்கள் அன்று காலை 10.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தில் மக்கள் நல அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்பதாக நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டது. அரண்டு போன காவல்துறை 02.08.2020 ஞாயிறு அன்று இரவு நாம் அனுமதி கோராத ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக செயல்முறை ஆணையை மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருதுவிடம் அளித்தனர்.
ஆனாலும் ஊரடங்கு என்பதும், 144 தடை உத்தரவு என்பதும் கொரோனாவை கட்டுப்படுத்த அல்ல, அறிவிக்கப்படாத நெருக்கடி என்பதால் காவல்துறையின் அனுமதி மறுப்பை மீறி நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
அதன்படி 03.08.2020 திங்கள் அன்று காலை 10.30 மணி அளவில் மக்கள் அதிகாரம், வனவேங்கை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஒன்று கூடினார்கள். அங்கிருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஓபுளா படித்துறை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டபடி சென்றார்கள். போலிசு உடனே ஓடி வந்து சூழ்ந்து கொண்டது. “உங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டது” அதனால் “அனுமதிக்க முடியாது கைது செய்வோம்” என்றார் துணை கமிஷனர்.
காவல்துறையிடம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. “அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து சுகமானதைத் தொடர்ந்து. அதிமுக-வினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே மிகப் பெரிய அளவில் கும்பல் கூடி முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், 144 தடை உத்தரவு எதையும் மதிக்காமல் கொண்டாட்டம் நடத்தியது. அருகில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. கலெக்டருக்கு அவையெல்லாம் தெரியாதா?” என்று கேள்வி எழுப்பினோம். “அதை பேசாதீர்கள். அது பெரிய இடத்து விவகாரம்” என்று துணை கமிஷனர் முறுமுறுத்தார். இறுதியில் ‘ஐந்து நிமிடம் நடத்துங்கள்’ என்றார்கள்.
அதன்படி முழக்கம் போட்டுக் கொண்டிருக்கும் போதே பாதியிலேயே நிறுத்தி, “முழக்கம் போட்டது போதும், ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள். பிரச்சினையை உருவாக்கிட்டுப் போயிராதிங்க” என்று போலீசு ஆய்வாளர் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினார். மீண்டும் தோழர்கள் தலையிட்டு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முழக்கம் போடாமல் ஒருவர் மட்டும் பேசுவதற்கு அனுமதித்து கைது செய்வோம் என்றனர்.
அதை ஏற்று வனவேங்கைகள் கட்சி மாநிலத் தலைவர் தோழர் இரணியன், மத்திய மோடி அரசின் பாசிச போக்குகளுக்கு எதிராகப் போராடுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். அடுத்ததாக புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் குமரன், “ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்றவை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதுதான். அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் மோடி அரசு ஊரடங்கை எமர்ஜென்சிக்கான ஒரு முன்னோட்டமாக நடைமுறைப் படுத்துகிறது” என்று அம்பலப்படுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலர் தோழர் மணி அமுதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் விஜயகுமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் நடராசன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊரடங்கின் போதும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடம் நம்பிக்கையையும் எழுச்சிகர உணர்வையும் ஊட்டியது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு : 78268 47268.
***
தஞ்சை :
தஞ்சை இரயிலடியில் மக்கள் அதிகாரம் சார்பில் 03.08.2020 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் இராவணன் தலைமைதாங்கினார்.
அந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர்.காளியப்பன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச்செயலாளர் தோழர். அயனாபுரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்) மாவட்ட செயலர் தோழர்.கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகரச்செயலாளர் தோழர் என்.குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டகுழு உறுப்பினர் தோழர். சேவையா, சி. பி. ஐ (எம்.எல்,லிபரேஷன்) தோழர். கே. ராஜன், தமிழ்தேச மக்கள் முன்னணி தோழர். அருண்ஷோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சம்மேளனச் செயலர் தோழர். துரை.மதிவாணன், சமவெளி விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர்
தோழர் சு. பழனிராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜைனுலாப்தீன், ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் தோழர். நாத்திகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அனைவரும் காவி பாசிச பயங்கர வாதத்தை எதிர்த்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். தஞ்சை போலிசு மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது இவ்வார்ப்பாட்டம் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளது.
இறுதியாக ஆர்ப்பாட்டம் முடிந்தத்தை உறுதி செய்து கொண்ட இந்து முன்னணி காவி கும்பல் தங்களது வழக்கமான “ஓம்காளி ஜெய்காளி ” கோஷத்தை கைவிட்டு” இப்போதைய சீசன் கோஷமான “முருகனுக்கு அரோகரா”என்று கூவியபடியே வந்து எதிர் ஆர்ப்பாட்டம் செய்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம்
தஞ்சை.
***
விழுப்புரம் :
- ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசம்!
- வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட அறிவுத்துறையினரையும், சி.ஏ.ஏ போராட்டத்தில் சிறைபடுத்திய இஸ்லாமியர்களையும் உடனே விடுதலை செய்!
- கடவுளுக்காக சவுண்ட் விடும் பாசிச பா.ஜ.க.வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்!
என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 03.08.2020 அன்று காலை 11 மணியளவில், மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய மாநில அரசுகளின் கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.
***
குடந்தை :
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 03.08.2020 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களின் ஒரு பகுதியாக, கும்பகோணத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். ஜனநாயக சக்திகளின் கண்டன உரையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் கொரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலைப் பயன்படுத்தி, சமூகநீதிக்கு எதிரான மனுதர்மத்தை மீட்டெடுக்கும் சட்டங்களை மத்திய அரசு மக்கள் மீது திணிப்பதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை.
தொடர்புக்கு : 97892 61624.
***
விருதாச்சலம் :
கடலூர் மண்டலம் விருதாச்சலத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் கீழ்காணும் முழக்கங்களை முன்வைத்து 03.08.2020 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- ஊடகத் துறையினரை மிரட்டும், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசம்!
- சமூக செயல்பாட்டாளர் வரவர ராவ். ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டோரை விடுதலை செய்!
- CAA, NRC, NPR எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்களை விடுதலை செய்!
- கருப்பர் கூட்டம் தோழர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்!
- கடவுளுக்காக சவுண்ட் விடும் பாசிச பாஜக-வே கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு பதில் சொல்! என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்நிகழ்விற்கு மக்கள் அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் ராஜசேகர் திராவிட விடுதலைக் கழகம் தோழர் நடேசன். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணியரசன். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தோழர் ராஜேந்திரன். கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) தோழர் ராமர். இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தோழர் கோகுல் ஸ்டீபன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மாற்றுக் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தை முடக்குவதற்காக போலீசு பல்வாறு வழிமுறைகளைக் கையாண்டது. அவற்றையெல்லாம் மீறி வெற்றிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.
***
திருவாரூர் :
திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 03.08.2020 அன்று பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.
***
பாண்டிச்சேரி :
ஊடகத்துறையை மிரட்டும் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை கண்டித்து, புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 03.08.2020 அன்று காலை 11 மணி அளவில் நெல்லித்தோப்பு சிக்னல் சுப்பையா சதுக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் சாந்தகுமார் இதற்கு தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், சாய்பாபா உள்ளிட்ட அறிவுத் துறையினரை விடுதலை செய்ய வேண்டும். CAA எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்த இஸ்லாமியர்களை விடுதலை செய், கருப்பர் கூட்ட தோழர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு கருத்துரிமை, ஜனநாயகத்துக்கு எதிரான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரறுக்க சமூக ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை கட்டியமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.