“மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
***
விழுப்புரம் :
தேசிய கல்விக் கொள்கை (2019) வரைவு அறிக்கையை மோடி அரசு அறிவித்தவுடன் இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மாணவர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
எதிர்ப்பின் விளைவாக பின்வாங்கிய மோடி அரசு, கொரோனா பெருந்தொற்று நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் மக்களை முடக்கி வைத்துவிட்டு, ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் விரோத திட்டங்களை நயவஞ்சகமாக அமல்படுத்தி கொண்டுவருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த ஜூலை 29-ம் தேதியில் ஜனநாயக விரோதமான முறையில் மோடி தலைமையிலான அமைச்சரவை, இந்த புதிய கல்விக் கொள்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதுவும் நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்த கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் ஏழை, எளிய மாணவர்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு கல்வி என்பது எட்டாக்கனியாக மாறிவிடும். மேலும் சமுக நீதி போன்ற இட ஒதுக்கீடு மறுக்கப்படும். மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இந்த கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின்( RSYF) சார்பாக 05.07.2020 அன்று காலை 10.00 மணிக்கு விழுப்புரத்தில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்தபோது போலீஸ் நமது தோழர்கள், பெற்றோர்களை செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தி யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள்.
மேலும் “மூன்று நபர்களுக்கு மேல் மனு கொடுப்பதற்கு அனுமதி இல்லை” என்று தடுத்தார்கள். போலீஸின் நெருக்கடிகளையும் மீறி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் பிறகு கல்வி முதன்மை அலுவலரிடம் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற மனுவை அளித்தோம்.
இதில் பெற்றோர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம். தொடர்புக்கு : 91593 51158.
***
கடலூர் :
ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும், மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறு! என்ற முழக்கத்தை வலியுறுத்தி 05.08.2020 அன்று கடலூர், மஞ்சகுப்பம், மாவட்ட கல்வி வளாகம் மற்றும் விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலக வளாகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் மணியரசன் தலைமையிலும், விருத்தாச்சலத்தில் பு.மா.இ.மு தோழர் கணேஷ் அவரது தலைமையிலும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் :
- மத்திய அரசின் ஹிந்தி, சமஸ்கிருத மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும்.
- 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும்.
- 9-லிருந்து+2 வரை உள்ள செமஸ்டர் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
- கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
- கல்வி வணிகமயமாக்கும் நோக்கில் உள்ள இந்த புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் திரும்பப்பெற வேண்டும்.
இந்நிகழ்வில் தோழர் வெண்புறா குமார் (ஒருங்கிணைப்பாளர்) பொது நல இயக்கம் கடலூர், தோழர் பாலசுப்பிரமணியம் (ஒருங்கிணைப்பாளர்) முற்போக்கு சிந்தனையாளர் சங்கம் கடலூர், தோழர் கஜேந்திரன் (மாநில துணை செயலாளர்) தமிழ்நாடு மீனவர் பேரவை, திரு அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம். ஆகிய பொதுநல இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மற்றும்
புமாஇமு உறுப்பினர்கள் தோழர்கள் பூங்குழலி, வெங்கடேசன், ஆகாஷ், கார்த்தி, சுகதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
கடலூர். தொடர்புக்கு : 97888 08110.
***
தருமபுரி :
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, 05.08.2020 அன்று பு.மா.இ.மு. சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்ட கல்வி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர். ச. அன்பு அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் பல தோழர்கள் இணைந்து புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமுல்படுத்த கூடாது என மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
தருமபுரி.
***
மதுரை :
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து 05.08.2020 காலை 11.மணியளவில் மதுரை மாவட்ட கல்வி அலுவலரிடம் பு.மா.இ.மு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், இந்த கல்வி கொள்கையானது சமூகநீதி, இட ஒதுக்கீடு மற்றும் இயற்கை நீதிக் கோட்பாட்டை அழிக்க கூடியதாகும். குலக்கல்வியை நடைமுறை படுத்துவதாகவும்; பெரும்பான்மையான ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவை தகர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
மேலும் NEET தேர்வு மூலம் எப்படி மருத்துவக் கனவை பறித்தார்களோ! அது போல் NATIONAL TESTING AGENCY வைத்து, பட்டப்படிப்பை கூட மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொன்டு வர வழி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ஆனந்த் தலைமை வகித்தார். தோழர் சினேகா அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார் மற்றும் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், தோழமை அமைப்புகள் கலந்து கொண்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
மதுரை.
***
கரூர் :
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமுல்படுத்தாதே! சூத்திரனுக்கு கல்வி இல்லை என்னும் மனுநீதியும், காசு இல்லாதவருக்கு கல்வி இல்லை! என்ற இரண்டும் சேர்ந்து கார்ப்பரேட் – காவிகளின் நலனுக்காக தான் இந்த கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இதை உடனடியாக ரத்து செய்யக் கோரி கரூரில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போலிசின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இதற்கு புமாஇமு, அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய கல்விக் கொள்கையையும், அதை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசின் சதித்தனத்தையும் அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் – இளைஞர்கள் கரூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கரூர்.
***
திருச்சி :
தமிழகம் முழுவதும் 05.08.2020 அன்று மத்திய மோடி அரசு அமல்படுத்தவிருக்கும் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சியில், பு.மா.இ.மு-வின் மாவட்ட அமைப்பாளர் தோழர் பிருத்திவ் தலைமையில், மரக்கடைப் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் பிற அமைப்பினர் கலந்துகொண்டு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என முழக்கமிட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
ஆர்பாட்டத்தின் இறுதியாக கல்வி அலுவலரிடம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என கல்வித் துறை வாயிலாக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது. “கண்டிப்பாக உடனே முதல்வருக்கு தகவல் அனுப்புவதாக” கல்வி அலுவலர் கூறினார். இவர்கள் மனுவை அனுப்புவார்கள் என நாம் பெயரளவு நம்பலாம். ஆனால் அனைத்து மக்களும் போராடாமல் இனி நமக்கு கல்வி கிடைக்கும் என சிறிதளவு கூட நம்ப முடியாது. நம்பவும் கூடாது! புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த விடாமல் போராடுவோம்.
கல்வி நமது அடிப்படை உரிமை. அதனை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதனை கார்ப்பரேட்டுகளிடமும் காவிகளிடமும் கொடுப்பதுதான் மோடி அரசின் தன்மை. உரிமைகள் பறி போகும் போது போராட வேண்டியதும் நமது முதன்மையான கடமை!
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.