மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு – 80 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மரணம் ! காரணம் இயற்கைப் பேரழிவல்ல ! டாட்டாவின் லாபவெறியே !

கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெட்டிமுடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை (07-08-2020) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு பணிபுரிந்த தமிழர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த உயிரிழப்பை இயற்கைப் பேரிடராகக் காட்ட கேரள அரசும், தேயிலை எஸ்டேட் உரிமையாளரான டாட்டா நிறுவனமும் முயற்சிக்கின்றன.

கடந்த ஆண்டு கடும் மழை பெய்த சமயத்திலேயே, நிலவியல் ஆய்வறிஞர்கள் மழை பொழிந்தால், அப்பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று கொடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அதற்கான முயற்சிகள் எதையும் செய்யாமல், இன்று 80 பேரின் உயிரிழப்பிற்குக் காரணமாகியுள்ளது டாட்டா நிர்வாகம்.

இந்த மரணத்திற்குக் காரணம் இயற்கைப் பேரிடர் அல்ல, மாறாக டாட்டாவின் இலாபவெறி. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஈட்டப்படும் தமது வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட தொழிலாளர்களைப் பாதுகாக்க செலவு செய்யாத முதலாளித்துவ இலாபவெறியே காரணம் !

படிக்க:
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து குறித்து பேசும் தேசிய மீடியாக்கள் எதுவும் மூணாறு பிரச்சினை குறித்து வாய் திறப்பதில்லை.

தொழிலாளர்களின் பேரழிவிற்குக் காரணமான டாட்டா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு அந்த எஸ்டேட்டையும் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் அரசே எடுத்து நடத்த வேண்டும். தனியார் இலாபவெறிக்கு அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பலியாவதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

***

“மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் மரணம் ! பெட்டிமுடி நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறிக்காக நடத்தப்பட்ட படுகொலை !” என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் வரும் 12.08.2020 அன்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்…

மத்திய அரசே ! கேரள அரசே !

  • கார்ப்பரேட் முதலாளி டாட்டாவை காப்பாற்ற முயற்சிக்காதே !
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்கு !
  • வாழ்க்கை முழுவதும் வாழ்வாதார பதுகாப்பு கொடு !

உழைக்கும் மக்களே !

  • கொலைகார கார்ப்பரேட்டுகளின் தேயிலைத் தோட்டங்களை அரசுடமையாக்க போராடுவோம் !

 

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.