ண்மையில் யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சுதர்சன் டிவி நியூஸ் என்ற காவி ஆதரவு ஊடகத்தில் ‘பிந்தாஸ் போல்’ என்ற நிகழ்ச்சியில், ‘யு.பி.எஸ். சி ஜிகாத்’ என்ற சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வரப்போவதாக அறைகூவல் விடுக்கப்பட்டது.

ஆட்சிப் பணி அதிகாரத்தில் ஊடுருவும் பொருட்டு முஸ்லீம்கள் உருவாக்கி செயல்படுத்திக்கொண்டிருக்கும் சதித்திட்டமே ‘யு.பி.எஸ்.சி ஜிகாத்’ என நிறுவுவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். ஏற்கனவே மிக மோசமான முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்துக்கு இழிபுகழ் பெற்றது சுதர்சன் டிவி நியூஸ்.  ஆட்சி அதிகாரத்தில் உள்ள எஜமானர்களின் காலைப் பிடிப்பதில் யார் அதிக விசுவாசத்துடன் இருக்கிறார் என்ற போட்டியில் அர்னாப் கோஸ்வாமி, ரவிசங்கர் கோஷ்டிக்கு போட்டியாக, சுதர்சன் டிவியின் சுரேஷ் சவான்கே இறங்கியிருக்கிறார். அதன் விளைவாக உருவானதே யு.பி.எஸ்.சி ஜிகாத்.

சுதர்சன் டிவியின் விஷம பிரச்சாரத்தில் முஸ்லீம் போட்டியாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு, பொய்யான தரவுகள் பகிரப்பட்டன. 2009-ம் ஆண்டு ஷா ஃபைசல் என்ற காஷ்மீரி இளைஞர் ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்றதிலிருந்து, அதிலிருந்து உந்துதல் பெற்ற முஸ்லீம் இளைஞர்கள் பலர் ஆட்சிப் பணி தேர்வில் அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்கேற்கத் தொடங்கினார். ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 35 வரையான எண்ணிக்கையில் ஆட்சிப்பணி தேர்வில் முஸ்லீம்கள் தேர்வு பெற்றனர்.

படிக்க:
♦ நீதித்துறையை விமர்சிக்க அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு !
♦ இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !

மக்கள் தொகையில் 30 விழுக்காடு உள்ள முஸ்லீம்கள் ஆட்சிப் பணி அதிகாரிகளாக வெறும் 3 விழுக்காட்டினர் மட்டுமே பணிபுரியும் சூழலில், மிகப் பெரும் சதித்திட்டத்தை கண்டுபிடித்ததாக சுதர்சன் டிவி, இந்த உண்மையான புள்ளி விவரங்களை மறைத்து விஷமப் பிரச்சாரத்தை நான்கு பகுதிகள் வரை ஒளிபரப்பியது. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் முஸ்லீம் யு.பி.எஸ்.பி ஜிகாதிகளை உருவாக்குவதாக, சுதர்சன் டிவி கூவியது. உண்மையில் 2019-ஆம் ஆண்டு ஆட்சிப் பணிக்கு ஜாமியாவில் பயிற்சி பெற்றவர்களில் 16 பேர் முஸ்லீம்கள், 14 பேர் இந்துக்கள். எனவே, இந்த நிகழ்ச்சியின் நோக்கம் முற்றும் முழுதாக முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருந்த காரணத்தால் இந்த அவதூறு நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு  எதிரான மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா மற்றும் கே.எம். ஜோசப் நிகழ்ச்சியின் தொனி மற்றும் நோக்கம் குறித்து  கடும் கருத்துக்களை வெளியிட்டனர்.  நிகழ்ச்சியின் டீஸர் ஆகஸ்ட் 27 அன்று வெளியாகி சமூக ஊடகங்களில் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீதிமன்றம் சென்ற விஷம பிரச்சாரம், வழக்கறிஞர்கள், அமர்வு மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோருக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஊடகங்கள் குறித்த அடிப்படையான கேள்விகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஊடக நடத்தைகளை கட்டுப்படுத்தும் காரணிகள் ஆகியவற்றைத் தொட்டது.

“ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பு உரிமைகளின் பாதுகாவலரான இந்த நீதிமன்றத்தால் மிகுந்த வெறுப்புடன் பார்க்கப் பட வேண்டும்” என அமர்வு கூறியுள்ளது.

சுரேஷ் சவாங்கே

இந்த நிகழ்ச்சியின் டீசரில், ‘அரசு சேவையில் முஸ்லீம்கள் ஊடுருவுவதற்கான சதித்திட்டத்தை’ இந்த நிகழ்ச்சி வெளியிடும் என சேனலின் தலைவர் சுரேஷ் சாவன்கே தெரிவித்திருந்தார். செப்டம்பர் 11 அன்று, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதித்தது. அதே நாளில், , ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவிடாமல் நிறுத்திய நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒளிபரப்பை நிறுத்த மறுத்துவிட்டது.

உச்சநீதிமன்றம் இந்த நிகழ்ச்சியை “வெறித்தனமானது” எனக் கூறியதுடன், ஊடகங்களில் சுய கட்டுப்பாட்டுக்கு சில வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றது.

“முஸ்லீம்கள் ஆட்சிப் பணியில் ஊடுருவியுள்ளதாகக் கூறும் இந்த நிகழ்ச்சியின் பொருள் எவ்வளவு தெளிவற்றதாக உள்ளது என்பதைப் பாருங்கள், இது யுபிஎஸ்சியின் தேர்வுகளை எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி முன் வைக்கிறது?” என அமர்வு கூறியது.

“இத்தகைய நயவஞ்சக குற்றச்சாட்டுகள் யுபிஎஸ்சி தேர்வுகளை கேள்விக்குறிக்கு உள்ளாக்கி உள்ளன. யுபிஎஸ்சி மீது அவமதிப்பு உண்டாக்கப்பட்டுள்ளது. எந்தவொரு உண்மை அடிப்படையுமின்றி இத்தகைய குற்றச்சாட்டுகள், இதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? சுதந்திர சமூகத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளை அனுமதிக்க முடியுமா? ” என அமர்வு கேட்டது.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

பாஜக அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா மேல் நீதிமன்றத்தில் பத்திரிகையாளரின் சுதந்திரம் மிக உயர்ந்தது என்றும் எந்தவொரு ஜனநாயகத்திற்கும் “பத்திரிகைகளை கட்டுப்படுத்துவது” பேரழிவு தரும் என்றும் விசம பிரச்சாரத்தை ‘பத்திரிகை சுதந்திரமாக’ நிறுவப் பார்த்தார்.

இதற்கு, நீதிபதி ஜோசப் எந்த சுதந்திரமும் முழுமையானது அல்ல என்று குறிப்பிட்டார்.

சுதர்சன் டிவியில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான்,  இந்த நிகழ்ச்சி ‘தேசிய பாதுகாப்பு குறித்த ஒரு புலன் விசாரணை’ என அமர்வு முன் முழு பொய்யை அவிழ்த்து விட்டார்.

“உங்கள் கட்சிக்காரர் தேசத்திற்கு ஒரு அவதூறு செய்கிறார். மேலும் இந்தியாவை மாறுபட்ட கலாச்சாரத்தின் உருகும் புள்ளியாக அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். உங்கள் கட்சிக்காரர் தனது சுதந்திரத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்” என அமர்வு திவானிடம் கூறியது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அமர்வு “நாங்கள் ஊடகங்களில் ஒருவித தணிக்கை செய்ய பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஊடகங்களில் ஒருவித சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்” என கூறியது.

“பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் 19-வது பிரிவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அரசுகள் அத்தகைய வழிகாட்டுதல்களை விதிக்கும் என்று நாங்கள் கூறவில்லை” எனக் கூறிய அமர்வு, டிவி சேனல்களின் வருவாய் மாதிரியும் அவற்றின் உரிமையாளர் முறைகளும் இணையதளத்தில் பொது களத்தில் வைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவதானித்தது.

“ஊடகத்தின் உரிமை குடிமக்கள் சார்பாக மட்டுமே உள்ளது, இது ஊடகங்களின் பிரத்யேக உரிமை அல்ல” எனக் கூறி. “அச்சு ஊடகங்களைவிட மின்னணு ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாகிவிட்டன, மேலும் ஒளிபரப்புக்கு முந்தைய தடைக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை.” என்றது அமர்வு.

விசாரணையின் போது, சில ஊடக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் குற்றவியல் விசாரணையை அமர்வு குறிப்பிட்டது. “ஊடகவியலாளர்கள் செயல்படும்போது, அவர்கள் நியாயமான கருத்துக்கு உரிமை உண்டு. குற்றவியல் விசாரணையைப் பாருங்கள், ஊடகங்கள் பெரும்பாலும் விசாரணையின் ஒரு பகுதியை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன” என அது கூறியது.

சங்கல்ப் – காவி யூ.பி.எஸ்.சி. பயிற்சி மையம்

அமர்வு சுதர்சன் டிவி வழக்கறிஞர் திவானிடம், “உங்கள் கட்சிக்காரரிடமிருந்து ஒருவித கட்டுப்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனூப் ஜி. சவுத்ரி, தில்லி உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சகம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும் கூறினார்.

அமைச்சகம் ஒளிபரப்பை அனுமதித்தது, மறுபக்கத்தை அது கேட்கவில்லை என்றும், ஒளிபரப்பு விதிகளை பின்பற்றுகிறோம் என்று சேனலின் அறிக்கையை எடுத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். ஆகஸ்ட் 28-ம் தேதி, சுதர்சன் டிவியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்ச்சி தொடர்பான குறைகளை எழுப்பிய வழக்கறிஞர் ஃபைரோஸ் இக்பால் கான் தாக்கல் செய்த மனு மீது அரசு, இந்திய பத்திரிகை கவுன்சில், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் சுதர்சன் செய்திகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை இந்த மனு எழுப்பியுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த நிகழ்ச்சியின் நான்கு பகுதிகள் ஒளிபரப்பப்பட்ட பின்னர், விழித்துக்கொண்ட நீதிமன்றம் நிகழ்ச்சியின் நோக்கம் “முஸ்லிம்களை இழிவுபடுத்துவதாகும்” என்று முதன்மைக் கருத்தை அவதானித்த பின்னர்,  “யுபிஎஸ்சி ஜிகாத்” சதித்திட்டத்தை வெளியிடுவதாக உறுதியளித்த  “பிந்தாஸ் போல்” நிகழ்ச்சியின் மீதமுள்ள பகுதிகளை ஒளிபரப்புவதை உச்ச நீதிமன்றம் தடுத்துள்ளது.

சிறுபான்மையினர் தங்களுடைய குறைந்தபட்ச உரிமைகளை பெறுவதற்காக கல்விக்கூடங்களையோ, பயிற்சிக்கூடங்களையோ நடத்துவது ‘ஜிகாதி’யாக காவி ஊடகங்கள் விசம பிரச்சாரம் செய்கின்றன. உண்மையில், ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய சித்தாந்தவாதிகளை திணிக்கு பணியை திட்டமிட்டே செய்துவருவது இந்துத்துவ காவிகள் என்பது ஆதாரத்துடன் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

த பிரிண்ட் தளத்தில் வெளியான கட்டுரை, 1968 முதல் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய சங்கல்ப் அகாடமியில் இந்த ஆண்டு மட்டும் 759 ஆட்சிப் பணி தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இந்த பயிற்சி மையத்தின் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பிரமுகர்கள் வரை பங்கேற்று பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் உடனான இணக்கத்தை தன்னுடைய இணைய பக்கத்திலும் காட்டுகிறது இந்த அகாடமி.

உண்மையில், பாசிசத்தை நடைமுறைப்படுத்தும் பணியை ஏற்பதற்காக பயிற்சி அளிக்கப்படும் இந்த யு.பி.எஸ்.சி காவிகள் குறித்து எந்த வெகுஜென ஊடகமும் கேள்வி எழுப்ப முன்வராது. அப்படி வந்தாலும் ஊடக சுதந்திரம் குறித்து மிக விரிவாக பேசிய உச்சநீதிமன்றம் டீசரைக்கூட வெளியிட விட்டிருக்காது.


கலைமதி

நன்றி:
த வயர், த பிரிண்ட்