விவசாயத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக வேளாண்- சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக கடந்த ஆறுமாதங்களாக போராடிக் கொண்டிருக்கும் முன்னணி விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆய்வினடிப்படையில் விவசாய சங்கத் தலைவர்கள் இந்த நிதிநிலை அறிக்கை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

“திங்கள் அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மத்திய பட்ஜெட்டானது, இந்த அரசு விவசாயத்தை வலுவாக்குவதற்கு பதிலாக அதைக் கைவிடும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது” என்ற விவசாயிகளின் அச்சம் சரியானது என்பதை நிரூபித்திருக்கிறது என்று விவசாய சங்க தலைவர்கள் யோகேந்திர யாதவ், அவிக் சஹா, கவிதா குருகாந்தி, கிரன்விசா மற்றும் பிற விவசாயத் துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

”பெருமளவிலான விவசாயிகளின் போராட்டமும், அவர்களது பொருளாதார நிலைமைகள் குறித்த ஆழ்ந்த அதிருப்தியும் அதிகரித்திருக்கும் சூழலிலும் இந்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு மிக குறைவான முக்கியத்துவமே கொடுத்துள்ளது,’’ என விவசாய சங்கத் தலைவர்கள் நிதிநிலை அறிக்கை குறித்து பகுப்பாய்வு அமர்வு முடிந்தபின்னர் தெரிவித்தனர்.

படிக்க :
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பங்கு 5.1% லிருந்து 4.3% ஆகக் குறைந்துள்ளது. துல்லியமாக கூறுவதென்றால் 1.54 லட்சம் கோடியிலிருந்து 1.48 லட்சம் கோடியாக நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கிறது.

போராடிவரும் விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த புள்ளிவிவரங்களை கோடிட்டு காட்டி, “விவசாயத்தை முதன்மைத் துறை என்று குறிப்பிடுவதன் மூலம் சமீபத்திய பட்ஜெட் உரைகள் விவசாயத்திற்கு உயர் முக்கியத்துவம் கொடுப்பது போன்ற தோற்றத்தை கொடுத்து வந்த அதே நேரத்தில், விவசாயத்திற்கு சொல்லிக் கொள்ளகூடிய அளவிற்கு அறிவிப்புகள் ஏதுமில்லாத காரணத்தால் இந்த முறை, பட்ஜெட் உரையின் பிந்தைய பகுதிக்கு விவசாயம் தள்ளிவிடப்பட்டுள்ளது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் AIKSCC-ல் அங்கம் வகிக்கும் ரைத்து ஸ்வராஜ்ய வேதிகா என்ற சங்கத்தைச் சேர்ந்த கிரண்குமார் விஸ்சா, ‘’குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்துவது, விளை பொருளை எளிதாக சந்தைப்படுத்தும் உட்கட்டமைப்பு, இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்படையும் போது நல்ல முறையிலான காப்பீடு மற்றும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பட்ஜெட் எதுவும் கூறவில்லை “ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி அன்னதத்த ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA), சந்தை குறுக்கீட்டுத் திட்டம் மற்றும் விலை ஆதரவுத் திட்டம்(MIS-PSS ) ஆகிய இரண்டு திட்டங்களின் நோக்கமும் சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிபடுத்துவதுதான். ஆனால் பட்ஜெட்டில் அந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிக அளவில் குறைக்கப்பட்டு அத்திட்டதையே பொருளற்றதாக்கி விட்டது.

PM-AASHA திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, “நிதிஆண்டு – ஒதுக்கப்பட்ட தொகை” என்ற வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2019-20 – 1500 கோடி
2020-21 – 500 கோடி
2021-22 – 400 கோடி

MIS-PSS திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, “நிதிஆண்டு – ஒதுக்கப்பட்ட தொகை” என்ற வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2019-20 – 3000 கோடி
2020-21 – 2000 கோடி
2021-22 – 1501 கோடி

“குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விலை வீழ்ச்சியடைவதன் காரணமாக ஒரு ஆண்டில் ரூ. 50,000 கோடிக்கும் அதிகமாக விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். ஆட்சியாளர்களின் வெட்டிப் பேரிரைச்சலைத் தாண்டி, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்த அரசிடம் எந்த பொறுப்புணர்வும் இல்லை என்பதையே இது காட்டுகிறது” என்று குறிப்பிடும் கிரண்குமார் விஸ்சா மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“ஏன் குறைந்த பட்ச ஆதாரவிலையை உறுதிபடுத்தும் சட்ட உத்திரவாதம் பற்றி விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் அதற்கு இதுவெல்லாம்தான் கூடுதலான காரணங்கள் ஆகும். பட்ஜெட் ஆதரவு மூலமூம் சந்தை தலையீடுகளின் மூலமும் அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலையை பாதுகாக்கவில்லை என்றால், அது (MSP) அர்த்தமற்றதாகிவிடும்” என்றார்.

ஜெய் கிஸான் அந்தோலன் சங்கத்தை சேர்ந்த அவிக் சஹா, “கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட ஊரங்கு மற்றும் பொருளாதார மந்தத்தில் ‘ஆத்மநிர்பார் பாரத்’ தொகுப்பு பொருளாதார ஊக்கம் அளிக்கும் என்ற அரசின் கூற்று ஒரு பொய் என்பது விவசாயத்திலும் அதன் துணைத் தொழில்களிலும் நிரூபணமாகிவிட்டது” என்று விமர்சித்தார்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

“எக்னாமிக் சர்வேயில் அத்தியாயம் 7, தொகுதி 2-ல் வெளியிடப்பட்டதன்படி, வேளாண் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்ட்ட ஒரு லட்சம் கோடி அதற்காக செலவிடப்படவில்லை. அல்லது, கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட 15,000 கோடியும் இதற்காக செலவிடப்படவில்லை. அந்த தொகுப்பு அறிவிக்கப்பட்டு 8 மாதம் கடந்த நிலையில் ரூ 2,991 கோடி மட்டுமே துவக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, கொள்கை அனுமதியில் ஜனவரி 2021 நடுப்பகுதி வரை ஒதுக்கப்பட்டுள்ளது,’’ என்கிறார் சஹா.

விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவரும் சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற சங்கத்தின் உறுப்பினருமான யோகேந்திர யாதவ், “2022-ற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற இலக்கை அறிவித்து 5 ஆண்டுகள் ஆன பிறகு, நாம் அந்த இலக்கை சந்திப்பதற்கான இறுதி ஆண்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது வரை எந்த அளவிற்கு விவசாயிகள் வருமானம் உயர்ந்துவருகிறது; இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.”

திட்டங்களின் வளர்ச்சி ஏதாவது இருப்பின், அதை கண்காணிக்க, கடந்த சில ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த அறிக்கை தயாரித்து வைக்காததற்காக அரசாங்கத்தை யாதவ் விமர்சித்தார்.

“இந்த அரசு, அடித்தட்டு மக்களுக்கு அரசு வளங்களை வருமானங்களை பிரித்து கொடுத்து உதவி செய்து, பொருளாதார மந்தநிலையை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. பதிலாக, இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கார்ப்பரேட் இந்தியா கோரிக்கை வைத்து கேட்டுக் கொண்டிருக்கின்ற பொருளாதார சீர்த்திருத்தங்களை அமல்படுத்த உள்ளதையே, விவசாயிகளுக்கான இந்த வெற்று பட்ஜெட் காட்டுகிறது,”என்றார், யாதவ்.


தமிழாக்கம் : முத்துகுமார்
நன்றி : தி வயர்