ந்தப் புகைப்படங்களைப் பகிர விரும்பவில்லை. கங்கை ஆற்றின் கரைகளில், பீகாரின் பக்சர் அருகே, நூற்றுக்கணக்கான பிணங்கள் ஒதுங்கியிருக்கின்றன எனச் செய்திகள் வருகின்றன. ஒரு டஜன் சடலங்கள் ஒதுங்கி அலையும் காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளன.

இந்தப் பிணங்கள் அருகேயுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியிலிருந்து வருகின்றன என பீகாரும், அவை பீகாரின் பிணங்கள்தான் என உத்தரப் பிரதேசமும் அடித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.  கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் நூற்றுக்கணக்கில் கங்கையில் எறியப்படுகிறார்கள் என்கிற அச்சம் இப்போது இந்தியாவை உறையச் செய்திருக்கிறது.

படிக்க :
♦ கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

ஆனால், டேமேஜ் கன்ட்ரோலில் இறங்கியுள்ள மோடி மீடியா, “இல்லை இல்லை, இது வழக்கமாக நடைபெறுவதுதானே, கேட்பாரற்றச் சடலங்களை நாங்கள் இப்படித்தானே வீசுவது வழக்கம்” என்று சமாளிக்கத் தொடங்கியுள்ளன.  மனிதத் தன்மையற்று நடந்துக் கொள்வதுதானே நமது வழக்கம் என்கிறப் பதிலைக் கொண்டே சங்கிகள் நம் வாயை அடைக்கக் கூடும். இல்லையா பின்னே!

பரிதாபத்துக்குரிய வடஇந்திய பாமர மக்களுக்கு இப்படித்தான் ராம ராஜ்ஜியம் வந்து சேர்ந்திருக்கிறது. ஜீவன் கங்கையில் கரைந்த பிறகு சடலங்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றொரு தத்துவமும் முன்வைக்கப்படலாம்.

நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை, உயிரிழப்பை தடுக்க முடியவில்லை என்பதை நாம் “புரிந்துக் கொள்ள முடிகிறது”. தில்லியின் சுடுகாடுகள் நிரம்பி வழிந்ததற்கு பின்னாலுள்ள வரம்புகளையும் “புரிந்துக் கொள்ள” முடிகிறது.

ஆனால், உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் இப்படி கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்படுகின்றன என்பதை எப்படிப் புரிந்துக் கொள்வது? வாழ்வதற்கு வழியில்லாத அந்த மக்கள், மரியாதையோடு சாகவும் வழியில்லையா?  சடலங்களை ஆற்றில் விடுவது மதம் சார்ந்த நம்பிக்கை என்கிற ஒற்றை சால்ஜாப்பில் இதை கடந்து விட முடியாது. கடக்கிறோம் என்றால், அந்த எண்ணத்தைத்தான் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.

பிரச்சனை, அந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்தாலும் நிலைமை மாறாமலிருப்பதுதான். இந்தி வட்டார மாநிலங்களில் மனிதர்களுக்கு மரியாதை என்பது இல்லவே இல்லை.

இதில் பாஜக ஆட்சிகள் நரகம் என்றால், முந்தைய ஆட்சிகள் சொர்க்கம் அல்ல. உ.பி, ம.பி, பீகார் உள்ளிட்ட  மாநிலங்களில் பொதுச் சமூகம், சிவில் சமூகம், நவீனம், நிர்வாகம், ஆட்சி என்று எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை காட்டுமிராண்டிகளாகவே (இந்த சொற்பயன்பாட்டுக்கு மன்னிக்கவும்) வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் நிறைய எழுதிவிட்டோம்.

மோடி 2014-இல் இந்த மாநிலங்களில் வெற்றிப் பெற்றதற்கு முதன்மையான காரணம் அவர் தன்னை விகாஷ் புருஷ் (வளர்ச்சியின் நாயகன்) என்று சொல்லி மக்களை நம்பவைத்ததுதான். அதற்காகத்தான் குஜராத் மாடல் பெரிதும் ஊதிப் பெருக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு குஜராத் மாடல் என்பது தமாஷானதுதான் என்றாலும், உ.பி, பீகாருக்கு அது முன்னுதாரணான மாடல்தான். அதை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், வந்தது விகாசம் அல்ல, விநாசம்.

உ.பி, பீகாரில் பாஜக/பாஜகஆதரவு ஆட்சிகள் அடிப்படையில் எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை என்பதைத் தான் இந்தக் கொடூரமான சம்பவங்கள் காட்டுகின்றன.

ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய உள்கட்டமைப்பை உருவாக்கி விட முடியாதுதான். ஆனால், வளர்ச்சியின் திசை வழியை உருவாக்கியிருக்க வேண்டும். (முன்பு) மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் கர்நாடகத்திலும் இமாச்சலிலும் ஆளும் பாஜகவினரால் அதை செய்ய முடிகிறது தானே? ஏன் உ.பியில் முடியவில்லை? பீகாரின் ஒரிஜினல் விகாஷ் புருஷனான நிதீஷ் குமார் ஏன் செயலற்று இருக்கிறார்?

ஏனென்றால், கங்கைச் சமவெளியின் சமூக அடித்தளமே வர்ணாசிரம தர்மத்தால் ஆளப் படுகிறது. பாமர மக்களுக்கு உழைப்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. எனவே, அவர்களுக்காக எந்த சமூக நலத் திட்டங்களும் வாழ்வாதார வளர்ச்சித் திட்டங்களும் தேவையில்லை. அவை, அனாவசியம் என்பது மட்டுமல்ல, அந்த சிந்தனை வருவதற்கான வாய்ப்பே அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. கோவிட் வந்திருக்கிறதா, வெளியே சொல்லாதே என்பதுதான் யோகி அரசாங்கத்தின் கட்டளை.

அங்கேயுள்ள மேல்வர்ண மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கு பல வசதிகள் உள்ளன. ஆனால், சூத்திர, பஞ்சம மக்களுக்கு ஒரு துளி வசதிக் கூட இருக்காது.

இந்தியாவில் வேறு எங்கும் ஏழைகள் இல்லையா, பஞ்சம-சூத்திரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அங்கே, அந்தப் பிரிவுகளையும் தாண்டி, அவர்கள் வளரக் கூடிய அரசியல் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது. அதனால்தான் பஞ்சாபும் தமிழ்நாடும் ஆந்திரமும் குஜராத்தும் கேரளமும் இமாச்சலப் பிரதேசமும் கர்நாடகமும் ஒரிசாவும் சமூக வளர்ச்சியில் போட்டிப் போட்டு வளர்கின்றன.

அப்படியென்றால், இந்த லாலூ, மாயவதி, முலாயம் போன்றவர்கள் எல்லாம் இருபதாண்டுகள் ஆண்டார்களே, அவர்கள் என்னதான் செய்தார்கள் என்கிற கேள்வி எழலாம். ஆனால், உண்மையில் யாரிடமும் பதில் இல்லை. சாதிப் பிரதிநிதித்துவ அரசியல், சமூகநீதி அரசியலாகப் பரிணமிப்பதற்கு முன்பே வெறும் சாதி அடையாள அரசியலாக குன்றிப் போய்விட்டதா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

சுயமரியாதை அரசியலும் சமூக-ஜனநாயகப் பொருளாதார அரசியலும் உருவானதாகத் தெரியவில்லை. சாதி அடையாள அரசியல்தான் வியூகம் என்றால் அதில் இவர்களை விட அமித்ஷாதான் ஜித்தன். சோஷல் ஜஸ்டிஸா சோஷல் இஞ்சினீயரிங்கா என்றால் பாஜகதான் கில்லாடி.

அதனால்தான் எஸ்.பி, பி.எஸ்.பி, ஆர்.ஜெ.டி, ஜே.டி.யு போன்ற ஜனதா பரிவாரிய பகுஜன் கட்சிகள் கூட தங்கள் மாநிலங்களை வளர்ப்பதில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்தவில்லை. அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப் போல அங்கே தேசிய இனம் சார்ந்த ஓர்மை இல்லை என்பது மற்றுமொரு காரணம். பீகாரிக்காவது கொஞ்சமாவது உண்டு, உ.பி-யில் அதுக்கூட கிடையாது. ஏனென்றால் உ.பி, ம.பி எல்லாம் செயற்கைப் பிரதேசங்கள்.

நாம் மாநிலங்கள், ஆனால் இயல்பில் தேசங்கள். அவையோ வெறும் பிரதேசங்கள். நாம் நமது மாநிலத்தை அரசியல் அலகாக நினைக்கிறோம். அவர்கள் அவற்றை வெறும் நிர்வாக அலகுகளாக நினைக்கிறார்கள்.

இந்தியாவே தங்களுக்குத்தான் சொந்தம் என நினைக்கக் கூடிய ஒரு உத்திரப் பிரதேசக்காரனுக்கு தனக்கென ஒரு தேசிய இன அடையாளம் இல்லை என்பது இதுவரை உறைக்கவில்லை.

திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை என்பது சமூகநீதி, தேசிய இன அரசியல், சமூக-ஜனநாயகப் பொருளாதாரம் சார்ந்த மக்கள்நல ஆட்சிமுறை ஆகியவற்றை பிணைத்ததுதான். (கேரளமும் பஞ்சாபும் இதை வேறுவிதங்களில் செய்தன).

ஒரு கப்பற்படையின் வேகம் அந்த கப்பல்படைத் தொகுப்பில் செல்லும் கப்பல்களிலேயே மிகவும் மெதுவாகச் செல்லும் கப்பலின் வேகத்தைப் பொறுத்ததுதான் என்று சொல்வார்கள். இந்தியாவின் வேகம் உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தது!

பேரிடரால் ஏற்படும் துயரங்களால் வரக்கூடிய சவால்களை விட இந்தச் மனிதத் தன்மையற்ற சமூக-அரசியல் சூழலால் ஏற்படும் துயரங்கள்தான் மிகவும் வலிதருபவை. கோவிட்டால் வரக்கூடிய சமூக இடைவெளியை விட வருணாசிரமத்தால் வரக் கூடிய சமூக இடைவெளிதான் மிகவும் ஆழமானது.

படிக்க :
♦ தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

♦ கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !

இந்த மாநிலங்கள் எதை நோக்கித்தான் செல்கின்றன என்பதை யோசிக்கும் போது திகைப்பாக இருக்கிறது. பாசிச கலாச்சாரும் மதவெறியும், இறுகிப்போன சாதி அடையாளமும் ஆணாதிக்கப் பிற்போக்கு கலாச்சாரமும் பின்தங்கிய உற்பத்தி முறையும் ஒரு பக்கம். ஆனால், பெரும்பான்மைவாத (இந்தி) அரசியலின் எழுச்சி என்பது மறுபக்கம்.  நினைத்தாலே தலைச் சுற்றுகிறது. நமது தலையெழுத்தோ இவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது!

நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவாவது இந்த மாநிலங்களின் அரசியலில் தலையிட்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கே உள்ள முற்போக்கு, ஜனநாயக அரசியல் சக்திகளிடம் பேச வேண்டியிருக்கிறது.

ஆழி.செந்தில்நாதன்
முகநூலில் :
Aazhi Senthil Nathan
disclaimer