உலகின் முதல் சோசலிசப் புரட்சி நடத்தப்பட்டு 104 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அன்றாடம் உலகைப் படைத்துக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைப்பாளர்களால் ஒரு பெரும் நிலப்பரப்பை ஆளமுடியும் என நிரூபிக்கப்பட்ட நாள் நவம்பர் 7,1917.
உலக பாட்டாளிவர்க்கத்தை முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மீட்டெடுக்கும் நோக்கோடு நடைபெற்ற மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சி நாளின் 104-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் புஜதொமு (மாநில ஒருங்கிணைப்புக் குழு), புமாஇமு, ம.க.இ.க. (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் அரங்கக் கூட்டங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தின. அந்நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
சென்னை :
உலகின் முதல் சோசலிச அரசை நிறுவிய மகத்தான ரசியப் புரட்சியின் 104–ம் ஆண்டு விழாவை ஒட்டி காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் ! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் என்கிற முழக்கத்தோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (இணைப்பு : மாநில ஒருங்கிணைப்புக்குழு), புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னை புறநகரில் உள்ள பட்டாபிராமில் 07.11.2021 தேதியன்று காலை கருத்தரங்கம் – கலைநிகழ்ச்சிகள் நடத்தின.
நவம்பர் புரட்சி விழா அடாத மழை பெய்த போதிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டக் குழுக்கள் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கிய விழாவில் தொழிலாளர்கள், ஜனநாயக உணர்வு கொண்டோர் வீட்டிலிருந்து சிறுவர் – சிறுமியர் பாடல்கள், ஓவியம் உள்ளிட்ட திறன்களை வெளிப்படுத்தினர்.
பு.ஜ.தொ.மு-வின் மாவட்டத் தலைவரும், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான தோழர் ஆ.கா.சிவா தலைமையில் காலை 10.30 மணியளவில் துவங்கிய விழாவில் பேசிய பு.மா.இ.மு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் கல்வியில் சோவியத் முன்னேற்றத்தையும், இதிலிருந்து இந்திய மாணவர்கள் கற்க வேண்டிய விசயங்களையும் தனது உரையில் கூறினார்.
பு.ஜ.தொ.மு-வின் முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார். கல்வி, மருத்துவம், உணவு வழங்கல், மின் துறை, போக்குவரத்து போன்ற உள்கட்டுமான அமைப்புகள், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார கட்டமைப்பு ஆகியவை கார்ப்பரேட் நலன்களுக்காக எப்படி திட்டமிட்டு பலியிடப்படுகின்றன என்பதையும், கார்ப்பரேட் பகற்கொள்ளையை மனமுவந்து ஏற்பது அல்லது நியாயப்படுத்திப் பார்ப்பது என்கிற வகையில் காவி இருள் மக்களது கண்களை மறைத்து வருவது பற்றியும் தனது சிறப்புரையில் அம்பலப்படுத்தினார்.
ரசியப் புரட்சிக்கான தேவையை உருவாக்கிய அதே சூழல்தான் இன்று உலகம் முழுவதும் இருக்கிறது என்பதை தொகுப்பாக விவரித்த தோழர், இந்திய மக்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த புரட்சிகர அமைப்புகளது தலைமையில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்ட அறைகூவல் விடுத்தார்.
சென்னை மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் எழுச்சியான பறை முழக்கத்துடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விவசாயிகளது துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறுவர்களின் நாடகம் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற சிறுவர்கள், போட்டிகளில் பங்கேற்ற தொழிலாளர்களது குடும்பத்தினர் ஆகிய அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா நன்றியுரை வழங்க, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.
விழாவின் இறுதியில் மழை ஓய்வதாக தென்பட்ட போதிலும், உழைக்கும் மக்களது மனதில் புரட்சிகர அரசியல் மழை வீச்சாக பெய்து கொண்டிருக்கிறது.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டக் குழுக்கள்
(இணைப்பு: மாநில ஒருங்கிணைப்புக்குழு)
000
தருமபுரி – பென்னாகரம் :
நவம்பர் – 7 ரஷ்ய புரட்சி நாள் விழா தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அண்ணாநகர் பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் சார்பாக, பொதுக்கூட்டம் வடிவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
விழாவிற்கு பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் சத்தியநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். நவ – 7 சிறப்பு அழைப்பாளராக தோழர் கருப்பண்ணன், விசிக தொகுதி செயலாளர்; தோழர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர். CPI (ML) விடுதலை; தோழர் பெரியண்ணன், மாவட்ட பொறுப்பாளர், ம.ஜ.இ.மு; ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர்.
தோழர் முத்துக்குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதனையெடுத்து மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் குயில் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இதனை தொடர்ந்து சிக்கன் பிரியாணி 500 பேருக்கு தயாரித்து வழங்கப்பட்டது.
000
மாவட்டத்தின் பிற பகுதிகளில் மக்கள் அதிகாரம், புமாஇமு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பல்வேறு இடங்களில் கொடியேற்றி பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நவம்பர் 7, புரட்சி தினத்தைக் கொண்டாடினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.
000
கிருஷ்ணகிரி – அஞ்செட்டி :
நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம், நாட்ராம்பாளையம் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பாக நவம்பர் 7 புரட்சி நாள் விழா கடைபிடிக்கப்பட்டது. பகுதியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர் ராமு பகுதி ஒருங்கிணைப்புக்குழு அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் சரவணன், பகுதி ஒருங்கிணைப்பாளர் கொடியேற்றி நவம்பர் புரட்சி நாளை பற்றி உரையாற்றினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
அஞ்செட்டி பகுதி.
000
மதுரை :
மதுரையில் நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சியின் 104-ஆம் ஆண்டு விழாவில் புமாஇமு நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்த கூட்டத்திற்கு தோழர் ரவி தலைமை தாங்கினார்.
தோழர்களின் உற்சாகமான பாடலுடன் கூட்டம் துவங்கியது. ம.க.இ.க. தோழர் சங்கர் ரசியப் புரட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
அடுத்ததாக குட்டி தோழர் அர்ஜுன் “எப்போது? நம் பிரச்சனைகள் எல்லாம் தீர்வது எப்போது? நாம் புரட்சிக்காக ஒன்றுபடும் அப்போது?” என அருமையாக கவிதையை வாசித்தார். இது அனைத்து தோழர்களின் வரவேற்பையும் பெற்றது.
அடுத்ததாக பேசிய தோழர் செல்வம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? என்பதை பல்வேறு தகவல்களுடன் விளக்கிப் பேசினார்.
தோழர் சிவகாமு, காவி – கார்ப்பரேட் பாசிசத்தில் இந்த நாடு எப்படி எல்லாம் வாழ தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் எளிமையான மக்கள் மொழியிலும் பேசினார்.
மதியம் தோழர்களுக்கு மாட்டிறைச்சி உணவு வழங்கப்பட்டது.
“இளம் தோழர்களுக்கு” பகத்சிங் எழுதிய கடிதத்தை பற்றி தோழர் ராம் பேசினார். இதைத்தொடர்ந்து தோழர் கிரிஜா அவர்களின் “நாளை வெடிக்க இருக்கும் புரட்சியின் கண்ணிகளாய் நாம்” கவிதையும் அனைவரையும் ஈர்த்தது.
தோழர் ராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் கலை இலக்கியக் கழகம், அவர் பேசும்போது பாட்டாளி வர்க்கக் கட்சி பாட்டாளி வர்க்கப் பண்போடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார். நம்மிடம் உள்ள குறைகளை களைந்து கொண்டு ஒரு போல்ஷ்விக்மயமான கட்சியை கட்டுவதன் மூலமே புரட்சியை நோக்கி முன்னேற முடியும் என்பதையும் தோழர்கள் பரிசீலிக்கும் விதமாக பேசினார்.
அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கதிரவன், ரஷ்ய புரட்சி அதன் பிறகான பின்னடைவுகள் இதெல்லாம் புரட்சிக்கு எந்த முட்டுக்கட்டையும் போடப்போவதில்லை இறுதியில் கம்யூனிசமே வெல்லும் என்று அழுத்தமாக பதிவு செய்தார்.
தோழர் நதியா, புரட்சியில் பெண்களின் பங்கு, நாம் ஏன் பெண்களை பெரிய அளவில் பொது விஷயங்களில் கொண்டு வர முடியவில்லை அதற்கு என்ன தடையாக உள்ளது அதை எப்படி களைவது என்று ஆழமாக பதிவு செய்தார். எல்லோரும் தங்களை பரிசீலிக்கும் விதமாக அமைந்தது.
இறுதியாக, மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் குருசாமிஅவர்கள், போல்ஷ்விக் மயமான கட்சி கட்டுவதில் உள்ள பிரச்சனைகள், எப்படி அரசியல் சித்தாந்த ரீதியாக கலைப்புவாத கும்பல் நம்மை விட்டு ஓடிப்போனது, அரசியல் சித்தாந்த ரீதியாக நாம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு அஞ்சாத, ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்ட, பரந்துபட்ட மக்களுடன் தொடர்பு கொண்டதாக கட்சி இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி விரிவாக பல்வேறு உதாரணங்களுடன் பேசினார்.
இளம் தோழர்களின் பேச்சுகளும் கவிதைகளும் பாடல்களும் தோழர்களுக்கு உற்சாகம் ஊட்டியது. இக்கூட்டத்தில் 60 தோழர்கள் வரை கலந்து கொண்டனர்.
இறுதியாக ம.க.இ.க. தோழர் முத்தையா அவர்களின் நன்றியுரையுடன் மாலை 5.30-க்கு கூட்டம் முடிவடைந்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
000
ஓசூர் :
நவம்பர் 7, 104-ஆம் ஆண்டு ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழாவினை ஒசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாக பாகலூர் பகுதியில் திரளான மக்கள் பங்கேற்புடம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, இதே நாளில் புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கம், பாகலூர் கிளை சங்க தொடக்க விழாவையும் நடத்தியது.
கிளைச் சங்க தொடக்க விழாவிற்கு தோழர் P.ராஜா கிளைச்சங்க இணைச் செயலாளர் அவர்கள் தலைமைத் தாங்கினார். இச்சங்கத்தின் சட்ட ஆலோசகரும், மக்கள் அதிகாரம் அமைப்பின் பகுதி ஒருங்கிணைப்பாளருமான தோழர் இரவிச்சந்திரன் கொடியேற்றி, நவம்பர் புரட்சி தினத்தில் நமது சங்கத்தை தொடங்கியுள்ளோம். ரஷ்யாவில் புரட்சியை சாதித்ததுபோல் நமது நாட்டிலும் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த தொடர்ந்து போராட வேண்டும் என விளக்கி பேசினார்.
அதனை தொடர்ந்து அருகிலுள்ள தனியார் அரங்கில் விழா அரங்க கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் இரா.சங்கர் தலைமை தாங்கினார். முதன்மை நிகழ்ச்சியாக பகுதியில் இறந்த தோழர்களான தோழர் வெங்கடேசன், தோழர் இராமசாமி, தோழர் நாராயணமூர்த்தி ஆகியோரின் இழப்பு, தியாகங்களை நினைவுக்கூர்ந்து அவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தி தொடங்கப்பட்டது.
தமிழ்த்தேச குடியரசு இயக்கத்தின் தோழர் விக்னேஷ் அவர்கள் தனது உரையில், நவம்பர் புரட்சியின் அனுபவத்தையும், தொழிலாளர் வர்க்கத்தின் கடமைகளையும் விளக்கி பேசினார்.
அடுத்ததாக, திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வனவேந்தன் அவர்கள் தனது உரையில், நாம் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தை உயர்த்திப்பிடித்து செயல்படும் பகுதி தோழர்களின் வழிகாட்டலை ஏற்று செயல்பட்டு புரட்சியை சாதிக்க ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என உற்சாகமூட்டி பேசினார்.
கூட்டத்தில் “உப்பிட்டவரை” எனும் மா.க.இ.க.வின் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இறுதியாக, தேசிய பணமயமாக்கல் திட்டத்தை அம்பலப்படுத்தி சிறுவர் நாடகம் போர்க்குணத்தோடு அம்பலப்படுத்தி நடத்தப்பட்டது.
மேலும், பெரியவர் மற்றும் சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும் உற்சாகத்துடன் பங்கேற்ற சிறுவர்களுக்கு பு.ஜ.தொ.மு தோழர் சின்னசாமி அவர்களும், மக்கள் அதிகாரம் தோழர் முருகேசன் அவர்களும், ஓவியப் போட்டியில் கலந்த தோழர்களுக்கு திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் வனவேந்தன் அவர்களும் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.
இறுதியாக புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் கிளைத் தலைவர் தோழர் தமிழரசன் நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 100–க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் கலந்துக்கொண்டனர்.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஒசூர்.
செல் : 9788011784.
000
விருதாச்சலம் :
கடலூர் மண்டலம், விருதாச்சலம் வட்டாரம், மக்கள் அதிகார அமைப்பின் சார்பாக நவம்பர் 7-ஆம் தேதியன்று ரஷ்ய புரட்சியின் 104-ஆம் ஆண்டு விழா விஜய மாநகரத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் மாணவர்களுக்கான கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பாடல் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில், மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
மதியம் 3 மணியளவில் மக்கள் அதிகாரத்தின் வட்டார செயலாளர், தோழர் அசோக்குமார் தலைமையில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புரட்சிகரப் பாடல் பாடப்பட்டது. தோழர் மங்கையர்க்கரசி அவர்கள் இந்தியாவில் ரஷ்யப் புரட்சியை ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பற்றியும், அரசு உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகத்தையும் உடனடியாக நாம் போராட வேண்டும், நம் நாட்டில் புரட்சியை சாதிக்க அமைப்பாக திரளவேண்டும் என்பதை பற்றி விளக்கினார்.
அதன்பிறகு, தோழர் அழகரசன் சத்தியவாடி அவர்கள், இந்தியாவில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சியால் உழைக்கும் மக்களுக்கு என்னென்ன பயன்கள், என்னென்ன திட்டங்கள், எவ்வளவு காலம் நடந்தது புரட்சி, சாதாரண மக்களுக்கு அதிகாரம் எப்படி வந்தது, என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாக பேசி, இந்தியாவில் ஏன் அதை கொண்டாட வேண்டும் என்பதை விளக்கினார்.
இறுதியாக தோழர் முருகானந்தம் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர், அவர்கள் பொதுவுடமை என்றால் என்ன, தனியுடைமை என்றால் என்ன, பெண்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் உழைப்பு என்றால் என்ன? லாபம் என்றால் என்ன? முதலாளித்துவம் என்றால் என்ன? உழைப்பாளி என்றால் யார? முதலாளி என்றால் யார் ரஷ்யப் புரட்சியை போல் மிக விரைவில் இந்தியாவில் நடத்த வேண்டும் அதற்கு புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டும் என்பதை விளக்கி பேசினார்கள்.
இறுதியாக போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு ஓவியத் துறையில் துறை சார்ந்த வல்லுநர்கள் தோழர் கா.முருகன் – ஆல்பா நெட் அவர்கள் பரிசு வழங்கினார்.
அதன்பிறகு தோழர் மங்கையர்கரசி ஆசிரியர் அவர்கள் கட்டுரைப் போட்டிக்கான பரிசு வழங்கினார். பேச்சுப் போட்டிக்கு கவிதைப் போட்டிக்கு உள்ளூர் தோழர் இளங்கோவன் அவர்கள் பரிசு மற்றும் பூவனூர் பாலு அவர்கள் சிறப்பு பரிசு வழங்கினார். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருதாச்சலம்,
கடலூர் மண்டலம்.
000
கடலூர் :
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!! என்ற முழக்கத்தோடு கடலூரில் மக்கள் அதிகாரம் சார்பாக நகர அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு தோழர் ராமலிங்கம் (மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர்) தலைமை தாங்கினார்.
தனது தலைமை உரையில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்வதன் விளைவுதான் காவி – கார்ப்பரேட் பாசிசம். அதற்கு அடியாற்படையாக தலித்துகளையும், உழைக்கும் இளைஞர்களையும் (தன் கையை எடுத்து தன் கண்களை குத்திக் கொள்வது போல) வசப்படுத்திக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ்.
வீரசாவர்க்கர் நினைவாக பாராளுமன்றத்தில் படத்திறப்பு விழா நடைபெற்றது. காந்தியை, கோட்சே சுடுவதற்கு மூளை சலவை செய்த சார்வாக்கரின் படத்தை திறப்பதற்கு அனுமதித்தது கொஞ்சம் கூட சினம்கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் விழாவில் கலந்து கொண்டனர்.
இன்றைக்கு பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிய இயக்கங்களும், மார்க்சிய அமைப்புகளும், ஒரு புரட்சிகர சிந்தனைக்கு மாற்றாமல் போலி ஜனநாயகத் தேர்தலில் சுழண்டு கொண்டு காலாவதியாகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணங்கள் தான் ஓட்டுக் கட்சி கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு. ஆக நாம் காட்டும் பாதை புதிய ஜனநாயகப் புரட்சி பாதை காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்” என்றார்.
வெண்புறா பொதுநல அமைப்பைச் சார்ந்த தோழர் சி.குமார் அவர்கள் தனது உரையில், மாணவர்கள் இளைஞர்களை சீரழிக்கும் போதை கலாச்சாரம் பற்றியும், இதனை கண்டுகொள்ளாத அரசு பற்றியும் தெளிவாகப் பேசினார். எந்தக் கட்சியாலும் சாதிக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வான ஜல்லிக்கட்டுப்போராட்டத்தை மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் நடத்திக்காட்டி வெற்றி பெற்றனர். அதே இளைஞர்களும் மாணவர்களும் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. காரணம் செல்போன் கஞ்சா, மது, புகையிலை, போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். அரசே திட்டமிட்டு மாணவர்களின் இளைஞர்களையும் சீரழிவு பாதைக்கு திசை திருப்பி விடுகிறது. எனவே அடுத்த நவம்பர் புரட்சி விழா கிராமப் பகுதிகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மருத்துவர் ஏழுமலை அவர்கள் தனது உரையில், இந்த அரசு கட்டமைப்பும், காவி -கார்ப்பரேட் பாசிசமும், மக்களிடம் கொரோனா பயத்தைக்காட்டி கார்ப்பரேட் மருத்துவங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்கிறது என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
மக்கள் அதிகாரம் தோழர் மூ.கார்த்திகேயன் அவர்கள் தனது உரையில், ஜாலியன் வாலாபாக் படுகொலை பகத்சிங்-ன் மாணவ பருவத்திலேயே விடுதலை தீயை மூட்டியது. தொடந்து விடுதலை போராட்ட உணர்வை இலட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தில் உருவாக்கு விதமாக தன்னையே செயல்திட்டமாக மாற்றிக்கொண்டு வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடினார். அதேபோல் நாமும் இன்று காவி – கார்ப்பரேட் அரசை எதிர்த்து உழைக்கும் மக்களை அணித்திரட்டி போராட வேண்டிய சூழலில் இருக்கின்றோம் என்பதை வலியுறுத்தி பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் திருமார்பன் அவர்கள் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். மார்க்சியத்துடன் அம்பேத்கரையும், பெரியாரையும் இணைத்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது. உணவு வழங்கப்பட்டது.
தகவல் :
(கடலூர் பகுதி)
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
9442391009
000
உளுந்தூர்பேட்டை :
நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சியின் 104-ஆம் ஆண்டு தினத்தில் உளுந்தூர்பேட்டை மக்கள் அதிகாரம் சார்பாக காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்! புதிய ஐனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் என்ற முழக்கத்தின் கீழ் பாலி பகுதியில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தோழர் வினாயகம் தலைமை தாங்கினார். தோழர் தமிழ் சுபாஷ் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் வினாயகம் ரஷ்ய புரட்சியை பற்றியும், நமது நாட்டிலும் புரட்சியை நடத்தி முடிப்போம் என சூளுரைத்தனர். இறுதியில் ஒவியம் கட்டுரை பாடல் பேச்சு கதை கவிதை சிறுவர்களுக்கு நடத்தப்பட்டு பரிசு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல, செம்மணுங்கூர் பகுதி இளைஞர்கள் சார்பில் நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
உளுந்தூர்பேட்டை
7200112838, 9791286994.
000
வேலூர் – அடுக்கம்பாறை :