திரு. அருள் எழிலன் அவர்களே நீங்கள் யார் பக்கம்?
பாக்ஸ்கான் மறியல் – நாம் தமிழர், இடதுசாரிகள், சில அரசு ஊழியர்கள் பரப்பிய வதந்தி!” என்ற தலைப்பில் பத்திரிகையாளர் திரு. அருள் எழிலன் அவர்கள் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வட இந்தியாவில் மதக்கலவரங்கள் பரவுவதற்கு வதந்திகள் காரணமாக இருக்கின்றன. இங்கே தங்கள் அரசியல் மாறுபாடுகள் உள்ளவர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு வதந்திகளை பரப்புகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
மேலும், குறைந்த கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு தரமற்ற உணவுகள் கொடுக்கப்பட்டதாகவும் அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதாகவும் அது ஆலைவாயில் போராட்டமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
போராடியவர்களில் 8 பேரை போலீசார் கொண்டு சென்று கொன்று விட்டதாக வதந்தி பரவியதால் பலமணிநேரம் சாலைகள் முடங்கியதையும் குறிப்பிடுகிறார்.
படிக்க :
இயந்திரமயமாக்கம் பெயரில் தொழிலாளிகளைக் கொல்லும் ஃபாக்ஸ்கான்!
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
இடதுசாரிகள் எனப்படுவோர் இப்போதும் இந்த வதந்தியை பரப்புவதாகவும் அவர்களில் சிலர் அரசு ஊழியர்களாக இருப்பதாகவும் தெரிவித்து போலீசுக்கு போட்டு கொடுக்கின்ற வேலையையும் சிறப்பாக செய்கிறார்.
வட இந்தியாவில் நடைபெறும் பார்ப்பன பாசிச சக்திகளின் திட்டமிட்ட கலவரத்தையும் பன்னாட்டு நிறுவனமான பாக்ஸ்கான்-க்கு எதிரான பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தையும் ஒன்றாகச் சமப்படுத்துவதன் மூலம் அவர் யார் பக்கம் நிற்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
வதந்திகளை பரப்பியதாக கூறும் மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும்  என்பதுதான் அவர் வைக்கும் மறைமுகமான கோரிக்கை.
திரு அருள் எழிலன் முகநூல் பதிவு
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகத்தான் சி.ஐ.டி.யூ. தோழர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான தோழர் வளர்மதியை டிசம்பர் 18 முதல் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.
பெண் தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், இந்தப் போராட்டத்திற்கு அடிப்படை காரணம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் திமுக அரசின் அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
10 பேர் தங்கக் கூடிய அறையில் 20 பேர் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 20 பேருக்கு ஒரு கழிவறை என்றால் எப்படி அங்கே இருக்க முடியும்? இப்படி ஒரு சூழலில் நாம் இருந்திருந்தால் எப்படி ஒரு முறையான போராட்டத்தை நடத்த முடியும்? 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்ற எதுவும் முறையாக இல்லாத இந்தச் சூழலில் சமூகத்தில் முறையான பண்பாட்டையும் முறையான ஒரு போராட்டத்தையும் எதிர்பார்ப்பது தான் அறிவீனம்.
இன்று காலையில் சி.ஐ.டி.யூ.வின் தோழர்கள் பலர் போலீசார் கடுமையாக தாக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வந்திருக்கின்றன. பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாக போலீஸ் தாக்கியதாகவும் இதற்கு காரணமான மாவட்ட எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தி இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தரம் கெட்ட உணவினால் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இதுவரை விடுதிக்குத் திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இதுதான் தொடக்கப் பிரச்சனை. மையமான பிரச்சனை என்பது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டலும் பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் அவல நிலையும் தான்.
பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே இப்பிரச்சனை தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அடுத்த நடவடிக்கையை தொழிலாளர்கள் வேறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
தரமற்ற உணவு வழங்கிய விடுதி மேலாளர் அப்பொழுதே கைது செய்யப்பட்டிருந்தால் இதற்கு காரணமான பாக்ஸ்கான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் வதந்தியை பரப்பி இருந்தாலும் ஏன் இந்த பிரச்சனை எழுகிறது?
போராடும் பெண் தொழிலாளர்கள் அத்துமீறும் போலீசு
பெண் தொழிலாளர்களின் நீடித்த அந்தப் போராட்டம், தமிழக அரசிடமும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடமும் “மருத்துவமனையில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சனை ஏற்பட்டாலும் அதற்கு தாங்களே பொறுப்பு” என்று எழுதி வாங்கி இருக்கிறது. இதுதான் தமிழக தொழிலாளி வர்க்கம் கற்றுக்கொள்ள வேண்டியது ஆகும்.
போராடுகின்ற தொழிலாளர்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் என்பதும் ஒரு முறைக்குள் வரவில்லை என்பதும் பலரும் சொல்லுகின்ற குற்றச்சாட்டு.
தொழிலாளர்கள் பல இடங்களில் பிரித்து தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திலிருந்து வந்தவர்கள், விவரம் ஏதும் பெரிய அளவில் அறியாதவர்கள்.
தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு எரிமலையாய் வெடித்தார்கள். அவர்கள் ஆங்காங்கே தங்களுக்கு தெரிந்த செய்தியை வைத்துக் கொண்டு போராட துவங்குகிறார்கள். அந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய தமிழக அரசும் நிறுவனமும் அதை அடக்குமுறையாக கையாண்டதன் விளைவாகத்தான் சாலைகளையும் முடக்கினார்கள். முறையற்ற வகையில் அரசும் நிறுவனமும் நடந்து கொண்டதற்கு எதிர்மறையாகவே முறையற்ற போராட்டம் துவங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றம் அல்ல, கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை அவ்வளவுதான்.
தொழிற்சங்க வரலாற்றையும் தொழிற்சங்க உரிமைகளையும் கற்றுத் தேர்ந்து அந்தத் தொழிலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன்னணியில் நிற்க வேண்டிய அவசியத்தையும் தொழிலாளர்களுக்கு தொழிலாளி வர்க்க உணர்வை ஊட்டுவது தொழிற்சங்கத்தின் கடமை என்பதையும் இந்த போராட்டம் உணர்த்துகிறது.
முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு பிரச்சனை என்றால் எல்லா இடங்களுக்கும் ஓடிச்சென்று ஆதரவளித்த  மு.க. ஸ்டாலின், இங்கே வந்திருக்க வேண்டியதுதானே.
அவ்வேளையில் அவரோ பங்காரு அடிகளாருக்கு சால்வை போர்த்திக்கொண்டிருந்தார். இதைப்பற்றி அருள் எழிலன் போன்றவர்கள் ஏன் எழுதுவதில்லை.
எரிமலை வெடிப்பதற்கு ஒருபோதும் வதந்திகள் பயன்படுவதில்லை. இதெல்லாம் தெரியாதவர்கள் அல்ல, பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்? அவர்களின் நோக்கம் திமுக அரசின் மீது எவ்வித குறையும் யாரும் சொல்லிவிடக் கூடாது என்பது மட்டுமல்ல. இந்த அரசின்,  ஆளும்வர்க்கத்தின் தூண்களாகவேத்தான் இருக்கிறார்கள்.
பாசிசத்தை வீழ்த்த திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பலரும் தங்கள் வேட்டி சட்டை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு விழுந்து விழுந்து வாக்கு சேகரித்தார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்று கூறிவந்தவர்களில் சிலர் கூட தேர்தலில் பங்கேற்பதன் அவசியத்தை வலியுறுத்தி வலியுறுத்தி திமுக-வின் வாயாகவே மாறி போனார்கள்.
பாசிசம் என்றால் என்ன? அரசு என்றால் என்ன? அது யாருக்கு செயல்படும் என்பதைப் பற்றியெல்லாம் தெரியாதவர்கள். கடவுள் மீதான மூடநம்பிக்கை போல வேறுவழியில்லை என இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
கடந்த ஏழு மாத கால ஆட்சியில் மக்களின் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. திமுக-வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர்கள் எல்லாம் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
அன்றாடம் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுக அரசை எப்படி காப்பாற்றுவது என்பதையே அனுதினமும் யோசித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு,  பெண் தொழிலாளர்களின் இந்த போராட்டம் கொடுத்த அச்சமே இப்படி எல்லாம் அவர்களை சிந்திக்க வைக்கிறது.
படிக்க :
ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் ? || தோழர்கள் மருது – சுரேசு சக்தி முருகன் உரை || வீடியோ
எழும்பூர், கொளத்தூர், வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படும் மக்களின் போராட்டங்கள் அரசை நாறடிக்கச் செய்திருக்கும் இந்த சூழலில்தான், பாக்ஸ்கான் போராட்டம் எரிமலையாய் வெடித்து இருக்கிறது.
தாங்கள் தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
அதற்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக, கலவரங்கள், நாம் தமிழர் என்ற வரிசையில் இடதுசாரிகளையும் சேர்த்து தங்கள் ஆளும் வர்க்க வெறிக்காக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள்.
நெருக்கடியான காலகட்டங்களில் ஒவ்வொருவரும் யார் என்பதை வரலாறு அறிவிக்கிறது. தான் ஒரு சாதி வெறியன்தான் என்பதை கண்மணி குணசேகரன் தெரிவித்தார்.
அருள் எழிலன் அவர்களோ தான் ஆளும் வர்க்கத்துக்கானவர் என்பதை அறிவித்திருக்கிறார்.
“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” தோழர் மாவோ சொன்னது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் வர்க்கம் இருக்கிறது என்று சும்மாவா சொன்னார்கள்.

மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்.