FoxConn நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம்!
ன்பார்ந்த தொழிலாளர்களே,
தைவான் நாட்டு பகாசுர நிறுவனமான பாக்ஸ்கான் (சுங்குவார் சத்திரம்) ஆலையின் பெண் தொழிலாளர்களது போராட்டம் வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சீனாவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் மரணத்திற்குக் காரணமான பிணந்தின்னி பாக்ஸ்கானுக்கு, இளம் பெண் தொழிலாளர்களது போராட்டத்தை நசுக்குவது பெரிய விசயமுமல்ல. புதிய விசயமுமல்ல.
பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக குறை கூலிக் கொத்தடிமைகளாக, கொட்டடியில் அடைக்கப்பட்டு கசக்கிப் பிழியப்படும் பெண் தொழிலாளர்களின் அவல நிலையை பாக்ஸ்கான் தொழிலாளர்களது போராட்டம் மீண்டும் ஒருமுறை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு ஆள் பிடிப்பது தனிக் கலை.
பாக்ஸ்கானில் வேலை செய்யும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 90 சதவிதம் பேர் உள்ளூர்காரர்கள் அல்ல. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  வந்தவர்கள். டிப்ளமோ/கல்லூரி முடித்த பெண்களை கான்டிராக்ட் தொழிலாளர்களாக வேலைக்கு எடுத்து மிகக் குறைந்த சம்பளத்திற்கு பணியமர்த்திக் கொள்கின்றனர். அந்த குறைந்த சம்பளத்திலும் “உணவு – தங்குமிடம் தருகிறோம்” என்று ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு, ஹாஸ்டல் என்ற பெயரில் கொட்டடியில் அடைத்துக் கசக்கிப் பிழிகின்றனர்.
படிக்க :
டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு
தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்
சற்றேறக் குறைய 10X10 அளவுள்ள அறையில் 20, 30 பேர் வீதம் தங்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை. தொழிலாளர்களது சம்பளத்தில் உணவுக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பது இரண்டாவது நிபந்தனை. தொழிலாளர்களது பணத்தில் தரப்படும் உணவு தரமற்றதாகவோ, கெட்டுப்போனதாகவோ இருந்தாலும் கேள்வி கேட்காமல் சாப்பிட வேண்டும். இவை எல்லாவற்றையும் குடும்பத்தில் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு சகித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள், இனிமேல் சகித்துக் கொண்டிருந்தால் வாழவே முடியாது என்கிற நிலை வந்தபோது ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
15/12/2021 அன்று, நடந்த சம்பவம்  தொழிலாளர்களது மனதில் நீறுபூத்த நெருப்பாக இருந்த கோபமும் ஆத்திரமும் வெடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது. பூந்தமல்லி வெள்ளவேடு ஐ.எம்.ஐ. விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட கெட்டுப்போன உணவினை சாப்பிட்டதால் 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, உடல்நிலை மோசமானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியே தெரியாமல் பாக்ஸ்கான் நிர்வாகம் மறைத்திருக்கிறது.
மற்ற தொழிலாளர்கள் இது குறித்துக் கேள்வி கேட்டபோது நிர்வாகம் முறையான பதில் எதுவும் சொல்லாமல் உதாசீனப்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த விடுதியில் தங்கியிருந்தவர்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்ததால் சந்தேகப்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
கோப்புப் படம்
கான்டிராக்ட் தொழிலாளர்கள்; அதுவும் பெண்கள் என்றால் எந்த வகையிலும் சுரண்டலாம், எந்த விதிமீறலும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற நிர்வாகத்தின் இறுமாப்பிற்கும், திமிருக்கும் தொழிலாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
17/12/2021 நள்ளிரவு துவங்கிய சாலை மறியல் போராட்டத்தால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிப்போனது. பெண் தொழிலாளர்கள் இத்தகைய போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தி மாநிலத்தின் ஒரு பகுதியை ஸ்தம்பிக்க வைப்பார்கள்  என்பதை  எவராலும் எதிர்பார்த்திருக்க முடியாது.
பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அரசும் அதிகாரவர்க்கமும் களமிறங்கியது. நீதி வேண்டிப் போராடிய பெண் தொழிலாளர்களது போராட்டத்தை எப்படியாவது கலைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் முதலில் பாக்ஸ்கான் நிர்வாகத்தைக் காப்பாற்ற “கையைக் கழுவாமல் சமைத்ததுதான் புட்பாய்சனுக்குக் காரணம்” எனக் கூறி பழியை சமையல்காரர் மீது போட்டார். பின்னர், யாரோ இரண்டு பெண்களை பேசவைத்து எல்லோரும் நலமுடன் இருப்பதாக நம்பவைக்க முயன்றார். இவற்றையெல்லாம் புறந்தள்ளி, பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
24 மணிநேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராடிய பெண் தொழிலாளர்களது உறுதியைக் குலைக்க போலீசு ஏவிவிடப்பட்டது. போராடிய பெண் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர், ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்டனர், போலீசின் அடாவடித்தனத்தால் அச்சுறுத்தப்பட்டனர்.
இவற்றையெல்லாம் எதிர் கொண்டு உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்த பெண் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவற்றையெல்லாம் மறைத்த பத்திரிகைகள், பாதிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள், தரமான உணவு வழங்கப்படும் என்ற அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று பெண் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டதாக செய்தி பரப்பின.
தங்களது சக தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடிய பெண் தொழிலாளர்களை ஒடுக்குவதற்கு மாவட்ட நிர்வாகம், போலீசு, அமைச்சர்கள், பத்திரிகைகள்  என அனைவரும் ஓரணியில் திரண்டு பன்னாட்டு நிறுவனத்திற்கு தமது விசுவாசத்தைக் காட்டினர்.
தொழிற்சாலைக்கு உள்ளே நடந்த விபத்துக்களில் கான்டிராக்ட் தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக செத்த போதும் கூட கான்டிராக்ட் முதலாளி மீதும், அவர்களைப் பணிக்கமர்த்திய தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை என்பதைத்தான் இதுகாறும் பார்த்திருக்கிறோம். இந்த இலட்சணத்தில் “கை கழுவாமல்” சமைத்த சமையல்காரர் வேண்டுமானால் அமைச்சரின் வாக்குறுதிப்படி தண்டிக்கப்படலாம். பாக்ஸ்கான் நிர்வாகத்தையோ, கான்டிராக்ட் முதலாளிகளையோ சட்டத்தால் நெருங்கக் கூட முடியாது.
தற்காலிக வேலைகள் (Temporary jobs) அல்லது திடீர் வேலைகள் (Adhoc jobs) தவிர்த்து உற்பத்தியில் நேரடியாகப் பங்கெடுக்கும் எந்த வேலையிலும் கான்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று 1970 வருடத்து “கான்டிராக்ட் தொழிலாளர்கள் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்பு) சட்டம்” கூறுகிறது;
ஆனால் குண்டூசி முதல் கப்பல் வரை எல்லாமும் கான்டிராக்ட் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்தே உற்பத்தியாகிறது.
ஆனால், 8 மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு  என்ற எந்த உரிமையும் இல்லாத, மிகக் குறைந்த சம்பளத்திற்கு கொத்தடிமைகளாக வேலைபார்க்கும் கான்டிராக்ட் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதால் பன்னாட்டு முதலாளிகளுக்கு பன்மடங்கு இலாபம் கொழிக்கிறது.
இவ்வாறு பன்னாட்டுக் கம்பெனிகளும், அவர்களது  தரகர்களான அம்பானி, அதானி போன்ற இந்திய முதலாளிகளும் கொழுத்த இலாபத்தில் திளைப்பதற்காகவே கான்டிராக்ட் மயமாதல் நடவடிக்கை அரசு துணையோடு தீவிரமாக நடக்கிறது. கான்டிராக்ட் முறையை முறைப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டம் முதலாளியின் காலைத் தான் நக்கி வருகின்றது. பெயரளவிற்கேனும் இருக்கின்ற சட்டங்களையும் தற்போது நீக்கிவிட்டு தொழிலாளர் நலச் சட்டத்தொகுப்பு எனும் அடிமை சாசனத்தை கொண்டு வருகிறது மோடி அரசு.
படிக்க :
பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?
டி.வி.எஸ் நிர்வாகத்தின் குள்ளநரித்தனம் || சங்கம் கடந்து தொழிலாளர்களைத் திரட்டும் புஜதொமு
பாஜக மோடியை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டிருந்தாலும் தமிழக அரசும் பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படுகின்ற அரசுதான் என்பதை பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் காட்டிவிட்டது. தற்போது போராட்டம் முடக்கப்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பிவிட்டனர். ஆனால் போராட்டத்தில் முன்னணியாக இருந்த தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிர்வாகத்தால் களையெடுக்கப்படுவார்கள். பிரச்சனை நடந்த ஐ.எம்.ஐ. விடுதி மூடப்பட்டு அதிலிருந்த 3000 தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களை பாக்ஸ்கான் நிர்வாகம் இனி பணிக்கு அழைப்பது சந்தேகமே. இவற்றையெல்லாம் நம்மால் ஏன் என்று எதிர்த்துக் கூடக் கேட்க முடியாது.  ஏனென்றால் எல்லோரும் கான்டிராக்ட் தொழிலாளர்கள்.
இந்நிலை பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தனது இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து கான்டிராக்ட் தொழிலாளர்களுக்கும் இதே நிலைதான். பணிநிரந்தரம், 8 மணிநேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், பணியிட விபத்துப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்றால் தொழிலாளர்களாகிய நாமே அமைப்பாகத் திரள்வதுதான் நம்மீதான வரம்பற்ற சுரண்டல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி.
முதலாளிகளால், முதலாளிகளுக்காகவே நடக்கின்ற அரசை தூக்கியெறிந்து, நம்முடைய நலன்களுக்காக, நாமே நடத்துகின்ற அரசு ஒன்றினை அமைக்காமல் நிரந்தர விடியல் இல்லை. இதற்காக வழிநடத்தக்கூடிய, புரட்சிகர அரசியலை தாங்கி நிற்கின்ற தொழிற்சங்கமே நமக்குத் தேவை.
♦ பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தோள் கொடுப்போம்!
♦ காண்டிராக்ட் கொத்தடிமை முறைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்போம்!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி
மாநில ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு.
தொடர்புக்கு: 9003009641
முகநூல் : புதிய தொழிலாளி
இணையதளம் : www.new-democrats.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க