ணவன்கள் தங்களின் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் செய்தியை சில நாட்களாக பத்திரிகைகளும், பல்வேறு ஊடகங்களும் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சில ஊடகங்கள் ரசித்து வர்ணித்தும் கொண்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக பார்க்கும்போது அவை தமது “அதிர்ச்சிகளை” வெளிப்படுத்தி வருகின்றன. இதில் நாம் இரண்டு விசியங்களை பரிசீலிக்க வேண்டியது அவசியம், ஒன்று இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளானவர்களின் மனநிலை அல்லது அதற்கான அடிப்படை, இரண்டாவது இப்பிரச்சினையை இச்சமூகமும், ஊடகங்களும் அணுகும்விதும்.
முதலில் இதில் சிக்கியுள்ள தம்பதிகளின் மனநிலையை ஆராய்வோம். கேரளாவில் ஒரு மனைவி, தமது கணவன் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துகிறார் என்று போலீசிடம் புகார் தெரிவிக்கிறார். அதன் பரிமாணம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கிட்டதட்ட 1000 தம்பதிகள் வரை இதில் ஈடுபட்டுள்ளதாக செய்திகளில் தகவல்கள் வருகின்றன.
பெண்ணை தமது உடைமையாக பார்க்கும் ஒரு ஆண் எப்படி தமது மனைவியை இன்னொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துகிறான். வெறும் பணத்திற்காக என்று மட்டும் இதை கடந்துவிட முடியுமா?
படிக்க :
செல்பேசி : மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம் !
டிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா ? || மனுஷ்யபுத்திரன்
இன்று சமூகத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் நுகர்வு கலாச்சார வெறி மக்களின் மனநிலையை தீர்மானிப்பதாக உள்ளது. பலர் சொல்வதுபோல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரச்சினையின் பரிமாணத்தை கூட்டுகிறதே தவிர அவை பிரச்சினையின் அடிப்படையாக அமையவில்லை. வாட்ஸ்ஆப், ஸேர்சாட், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல செயலிகள் இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தது என்று சொல்லலாம். ஆனால் அடிப்படை இவற்றின் பின்னால் இருக்கும் நுகர்வுவெறி கலாச்சாரம் தான்.
ஏகாதிபத்தியங்களும், தரகு அதிகார முதலாளித்துவமும் தமது சந்தை நலனுக்காக, இலாபவேட்டைக்காக மக்களின் மனநிலையை தயார்செய்கின்றன. ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஜியோ தமது சந்தையைக் கைப்பற்ற, மக்களை கொள்ளையடிக்க முதலில் இலவசமாக டேட்டா சேவையை வழங்கியது. பலரையும் இதில் விழவைத்தது, பலரையும் இணையத்தளங்களில் மூழ்கவத்தது. இவ்வாறு மக்கள் நுகர்வுவெறியில், நுகர்வு போதையில் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பது ஆளும்வர்க்கத்தின் அல்லது இன்றைய பொருள் உற்பத்தியின் தவிர்க்க முடியாத விதி.
அன்றாடம் மாறிவரும் புதிய புதிய செல்போன்களை உடனடியாக மாற்ற வேண்டும், அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றில் தினந்தோறும் ஆடைகள், அழகுசாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையையும் வாங்கிக் குவிக்க வேண்டும், தேவை இருக்கிறதோ இல்லையோ வார இறுதியில் ஷாப்பிங் செல்ல வேண்டும், புதிய புதிய உணவுகளை சுவைக்க வேண்டும், எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் வரம்பற்ற நுகர்வை பண்பாடாக்குகின்றனர், அது போதையாக மாறி நுகர்வுவெறியாகிவிடுகிறது. (இவை சில உதாரணங்கள் மட்டுமே)
ஜெனிவா-வின் பாலியல் காஃபி கிளப்
இவற்றின் வரிசையில் பாலியல் கூட இயல்பான மனித தேவை என்பதையும் தாண்டி புதிது புதிதாக நுகரவேண்டும் என்கிற வெறியில் சமூகம் தள்ளப்படுகிறது. காதலாக, பண்பாடாக இருந்தவை, தமது மனிதத் தன்மையை இழந்து, ஒழுக்கம், விழுமியங்கள் அற்ற மிருக்கத்தனத்தை புகுத்தத்தொடங்குகிறது. போர்னோ இணையத்தளங்களும் இதற்கு தீனி போடுகின்றன. ஏற்கெனவே நுகர்வு போதைக்கு தள்ளப்பட்டுள்ள ஆண்களும், பெண்களும் எளிதாக பாலியல் நுகர்வுவெறிக்கும் பலியாகின்றனர்.
வெளியில் இருந்து இவற்றை பார்த்து அதிர்ச்சி அடைபவர்கள், தங்களையும் சுய பரிசீலனை செய்து கொள்ள விரும்புவதில்லை. தாம் அப்படிப்பட்டவன் அல்ல என்று தேர்த்திக்கொள்கின்றனர். ஆனால் இவர்கள் சீரழிவுகளில் சிக்கியவர்களைப்போல் இல்லையென்றாலும் தங்களையே அறியாமல் நுகர்வுவெறி பண்பாடுக்கு மாற்றப்பட்டு வருகிறோம் என்பதை உணர்வதில்லை. “தாம் அவ்வாறு இல்லை” என்பதுதான் சீரழிவில் சிக்கியவர்களுக்கும், அதற்கு ஆளாகாதவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு!
இரண்டாவதாக, இந்த சமூகம் அல்லது ஊடகங்கள் இதை எவ்வாறு அணுகுகின்றன என்பதை பரிசீலிப்போம். அங்கொன்றும், இங்கொன்றும் என்று இருந்தது, ஏதோ டில்லி, பெங்களுரில் சிலர் இவ்வாறு ஈடுபட்டனர், சென்னை ஈ.சி.ஆர். ரிசார்ட்டுகளில் பணம் கொழுப்பெடுத்தவர்கள் செய்கிறார்கள் என்றிருந்த, ஏதோ விதிவிலக்கான பிரச்சினை இன்று சாதாரண மக்கள், பல ஆயிரக்கணக்கில் இவற்றில் ஈடுபடும் இச்செய்தி புதிய பரிமாணமாக வளர்ந்துள்ளது.
விதிவிலக்குகள் விதியாக மாறுகின்றன. பிரச்சினை எங்கோ நடக்கிறது என்றெண்ணும் போது பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிற எண்ணம், தமது வாசல் வரை வந்துவிட்டது அல்லது வந்துவிடும் எனும்போது அதிர்ச்சியில் உறையவைத்துவிடுகிறது.
இச்செய்தி கனவாக இருந்துவிடக்கூடாதா, நமது நாட்டின் பாரம்பரியம் என்ன ஆவது, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு என்ன ஆனது, கடுமையாக தண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும், ஒழுக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும், தனிமனித ஒழுக்கத்தை வீட்டில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆதங்கங்களையும், அறிவுரைகளையும் அள்ளித்தெளிக்கின்றன.
யாரோ சிலர் பணத்திற்காக இவ்வாறு செய்கின்றனர், ஏதோ சில இடங்களில்தான், கேராளாவில் தான் நடக்கிறது என்று பிரச்சினைக்குள் போகாமல், அதன் வேரை கண்டறிய விரும்பாமல் அவசர அவசரமாக கடந்துவிட துடிக்கின்றனர்.
இதை தடுக்க அரசும், போலீசும் மிகத் தீவிரம் காட்டுகின்றன. இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சமூக அமைப்பு சரியானதுதான், இவையெல்லாம் சில கரும்புள்ளிகள்தான், யாரும் கவலைப்பட வேண்டாம், தடுத்துவிடலாம், சமூகம் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என்று மக்களை நம்பவைக்க பெரும் முயற்சிகளை எடுக்கின்றன.
பொருளாதாரம், அரசியல், சமூகக் கட்டுமானங்கள், பண்பாடுகள் எல்லாம் சீரழிந்து, துர்நாற்றம் எடுத்துக்கொண்டு, மேலும் மேலும் தனக்குள்ளே அழுகிக்கொண்டிருக்கும் பிணத்தைப்போல் சமூக கட்டமைப்பு சீரழிந்து விட்டது என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவர்களிடம் குடிக்கொண்டுள்ள ஆளும்வர்க்க சிந்தனை இந்நிலையைக் கண்டு ‘உண்மையாகவே’ கண்ணீர் வடிக்கிறது என்பதுதான் அவலமான நிலை.
படிக்க :
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
பூவரசியின் கொலையும், ‘தற்கொலையும்’ !!
ஆனால் நம்மைப் பொருத்தவரையில், சில இடங்களில் நடந்துக்கொண்டிருந்த இத்தகைய குற்றங்கள், நிறுவனப்படுத்தப்படுகின்றன, மக்களின் இயல்பான சமூக பண்பாடாக மாறிக்கொண்டிருக்கின்றன, ஆணாதிக்கமும் நுகர்வுவெறியும் பெண்களை மேலும் கொடூரமான சுரண்டலுக்கு தள்ளுகின்றன என்கின்ற புதிய பரிமாணத்தைத் தாண்டி, நமக்கு அதிர்ச்சி எதுவும் புதிதாக இல்லை. அனைத்து வகையான பிற்போக்குகள், சீரழிவுகள் இன்று ஊக்கத்துடன் வளர்ந்து வருகின்றன, அந்த சங்கலியின் ஒரு கரணை இந்தப் பிரச்சினை., அவ்வளவுதான்.
மற்றபடி அழுகி நாறிக்கொண்டிருக்கும் இந்த சமூக கட்டமைப்பு கொரானா லாக்டவுன், போதை – பாலியல் பண்பாடு சீரழிவுகள், கொலை, குற்றங்கள் என மேலும் தீவிரமாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். இதற்கு ஒரே தீர்வு இந்த சமூக அமைப்பு புரட்டிப்போடுவதுதான். அதாவது நுகர்வுவெறிக்கு தள்ளும் இந்த ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி உழைக்கும் வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதுதான்.
உழைப்புதான் மிருகத்தை மனிதனாக மாற்றியது என்றால், அத்தகைய உழைப்பு அவனிடமிருந்து பிடுங்கப்பட்டு அந்நியமாக்கப்படுகிறது, மனிதன் மிருகமாக்கப்படுகிறான். ஆகவே சுரண்டலை ஒழித்து, உழைப்பு மனிதன் வாழ்வதற்கான அடிப்படையாக, இயல்பானதாக, பண்பாடாக மாறும்போதும் -சோசலிச உற்பத்தி முறை- இத்தகைய சீரழிவுகளை மனித சமூகம் தனக்குள்ளே கட்டுப்படுத்திக்கொள்ளும். அதற்கான பணியை நாம் தொடருவோம்.
கந்தசாமி