ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக்கும் இந்த மறுகாலனியாகத் திட்டங்களை கார்ப்பரேட் பாசிசத்தின் தாக்குதல்கள் என்று ஒருங்கிணைந்த முறையில் புரிந்துகொண்டு முறியடிக்கக் களமிறங்க வேண்டும்.
ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !
அடக்கி ஒடுக்கத் துடிக்கும் ஒடிசா அரசு !
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்திலுள்ள திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மீண்டுமொரு போராட்டக்களமாக மாறியுள்ளது. திங்கியா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் முதல் தள்ளாடும் வயதானவர்கள் வரை அனைவரும் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஜிண்டால் நிறுவனமும் மக்கள் போரட்டமும்
கனிமவளக் கொள்ளை நிறுவனமான ஜிண்டால் உத்கல் ஸ்டீல் (JUSL –JSW UTKAL STEEL LTD), கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 65,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த எஃகு தொழிற்சாலையை நிறுவ அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே போஸ்கோ நிறுவனத்திற்காகக் கைப்பற்றப்பட்டு (மக்களின் கடும் போராட்டத்தால் போஸ்கோ விரட்டியடிக்கப்பட்டது) மக்களிடம் ஒப்படைக்காமல் வைத்திருந்த சுமார் 1000 ஏக்கர் நிலத்தை அப்படியே ஆலை அமைப்பதற்கு ஜிண்டாலுக்குக் கொடுத்தது அரசு. மேலும் தற்போது கூடுதலாக விவசாய நிலங்களையும் கையகப்படுத்தி வருகிறது அரசு. தங்களுடைய எதிரி முன்பைவிட சாதுரியமான முறையில் மேலும் பலமுடன் வருவதை சரியாகக் கணித்த மக்கள் கிளர்ந்தெழுந்து போரடிவருகிறார்கள்.
திங்கியாவை சுற்றியுள்ள கிராமங்களைத் தங்களது இலாப வேட்டைக்காகப் பயன்படுத்த ஜிண்டால் நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. ஒரு வருடத்திற்கு சுமார் 13.2 மில்லியன் டன் மதிப்புள்ள எஃகை பிரித்தெடுக்க 900 மெகா வாட் மின்கலம் (power plant) அமைக்கவும், மேலும் ஒரு வருடத்திற்கு 10 டன் அளவு சிமெண்ட் தாயரிப்பதற்கான அரைத்தல் மற்றும் கலக்கும் தொழிற்சாலைகளை (mixing and grinding) உருவாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் இரும்பு தாது எடுக்கப்படும். அந்த இரும்பு தாதானது நீர் மற்றும் பல கனிமங்களுடன் கலந்து கிடைக்கும் என்பதனால் அதைப் பிரித்தெடுப்பதற்காக டீ ஸ்மைலிங் ஆலையை (de-sliming plant) கியோஞ்சர் மாவட்டத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்திற்கு 52 டன் மதிப்புள்ள பொருள்களைக் கையாளுவதற்கு ஜெட்டீஸ் (jetties) எனப்படும் தரை ஜடாதாரி ஆற்றில் அமையவிருக்கிறது.
12000 ஏக்கருக்கும் அதிகமான விவாசய நிலங்களும், நீர்வள ஆதாரங்களான ஆறுகளையும், வனப்பகுதியையும் அரசின் உதவியுடன் ஆக்கிரமித்து வருகிறது நாசகர ஜிண்டால். இவற்றுக்கெல்லாம் எதிராகப் போரடுவதனால் அக்கிராம மக்கள் அரசின் பலவிதமான துன்புறுத்தல்களைச் சந்தித்து வருகிறார்கள்.
ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி
இதற்கு முன்னர் இப்பகுதி மக்கள், போஸ்கோவிற்கு எதிராகப் போரடியபோது போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போராடினர். அதனைத் தற்போது ஜிண்டால் பிரதிரோத் சங்கராம் சமிதி என பெயர் மாற்றம் செய்து ஜிண்டாலுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள் அக்கிராம மக்கள். இந்த அமைப்பிற்குத் தலைவராக தேபேந்திர ஸ்வைன் (debendra swain) இருந்து வருகிறார். கூட்டமைப்பின் தலைவரான ஸ்வைனை கைது செய்ய வருகிறபோது போரட்டம் தீவிரமடைந்தது. திசம்பர் 4, நள்ளிரவு நேரத்தில் போலீஸ்படை அராஜகமாக ஸ்வைனுடைய வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றது. அப்பொழுது ஸ்வைன் அங்கு இல்லாததனால் வீட்டிலிருந்த ஸ்வைனின் மாமா மற்றும் அவரது மகள் லில்லியைக் கைது செய்துள்ளனர்.
#WATCH | Jagatsinghpur, Odisha | Police baton-charged people in the Dhinkia village who were allegedly protesting over the proposed steel plant site in the district, today pic.twitter.com/fPQGBRMgDm
மேலும், ஸ்வைனிற்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்துப் பஞ்சாயத்து உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கியுள்ளது பஞ்சாயத்து துறை. போராடும் மக்களின் மீதும் போரட்டத்தை முன்னின்று நடத்துபவர்களின் மீதும் பல்வேறு ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியுள்ளன ஒடிசா அரசும் போலீசும். போராடும் மக்களின் ஒற்றுமையைச் சீர்க்குலைக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எவ்வித இடையூறும் வராமல் இருக்க ஒன்றிணைந்த கிராமத்தைத் தனித்தனியான மூன்று கிராமங்களாகப் பிரிக்கும் சூழ்ச்சியில் இறங்கியது ஒடிசா அரசு.
திங்கியா, மாகால, பாட்டன என்று மூன்று புதிய கிராமங்களை உருவாக்கியதற்கு எதிராகவும் அத்துமீறித் தங்களது தோட்டத்தைப் போலீஸ்படை அழிப்பதில் இருந்து தங்களையும் தமது இயற்கை ஆதாரங்களைத் தற்காத்துக் கொள்ளவும் சாலையை மறித்து மூங்கிலால் தடுப்புகளை உருவாக்கி, போலீஸ், அரசு அதிகாரிகள், ஜிண்டால் ஊழியர்கள் என எவரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை அக்கிராம மக்கள்.
ஜிண்டாலுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பின் சில மாதங்களாகவே அக்கிராமத்தைச் சுற்றிப் போலீஸ்படை குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திசம்பர் 10-ம் தேதி கூடுதலாக மூன்று படைப்பிரிவுகளை ஜகத்சிங்பூரின் எஸ்.பி அகிலேஸ்வர் சிங் தலைமையில் உருவாக்கியது. இதைக்குறித்து எஸ்.பி சிங் கூறுவது, கடந்த திசம்பர் 4-ம் தேதி பாட்னாவில் வசிக்கும் பிரபாத் ராவுட் என்பவரது வீட்டில் 2 வெடிகுண்டுகள் போடப்பட்டதாகப் புகார் ஒன்றை அவர் எங்களுக்கு அளித்தார். இது குறித்து விசாரிக்கச் சென்றபோது போலீசாரை அந்த கிராம மக்கள் கற்களை எறிந்து அடித்துள்ளார்கள் என்றும் இதனால் எதிர்பாராத விபரீதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ்படையானது அங்குக் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் குண்டு வெடித்ததற்கான எந்தவொரு தடயமும் அங்கு இருப்பதாக தெரியவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ளவர்களும் கூட குண்டு வெடித்ததுபோல் எந்தவித சத்தமும் எங்களுக்குக் கேட்கவில்லை என்றே கூறுகிறார்கள். மேலும் குண்டு எறிந்தவர்களின் மீது எந்தவித கைது நடவடிக்கையும் இல்லாமல் அதைப்பற்றி துளிகூட பொருட்படுத்தாமலும் இருப்பது, போலீஸ்படை இந்தப் போலியான புகாரின் அடிப்படையில் கிராமத்தினுள் நுழைவதற்கும் அப்பாவி மக்களின் மீது பழிப்போட்டுப் போராட்டங்களை நசுக்க நடந்தேறும் சதியாகவே இவை இருப்பது கண்கூடு.
கடந்த 2 மாதத்தில் போலீஸ்துறை போராடுபவர்கள் மீது புதியதாக 11 வழக்குகளைப் போட்டுள்ளதாக சரிதா பார்பண்டா (sarita barpanda) என்ற சட்ட ஆர்வலர் குறிப்பிடுகிறார். மேலும் உச்சநீதிமன்றம் கடந்த வாரத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் மீது போடப்பட்ட வழக்குகளில் 104 ஆண்களுக்கும், 20 பெண்களுக்கும் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்பு போஸ்கோவிற்கு எதிராகப் போராடும் மக்களின் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டுத் துன்புறுத்தியது ஒடிசா அரசு. அப்படிப் போடப்பட்ட வழக்குகளில் பல பிணையில்லாத வழக்குகளாக இன்றும் நிலவையிலுள்ளன.
இது மட்டுமல்லாமல் திங்கியா கிராமத்தில் உள்ள தங்களது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சஷ்மிதா மாலிக் மற்றும் அவரது 11 வயது மகளைச் சிறுமி என்றும் பாராமல் கைது செய்துள்ளது. திசம்பர் 20 அன்று, 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை மாகால என்ற பகுதியில் வெறித்தனமாக அடித்துத் தாக்கியுள்ளது போலீஸ் படை. மேலும் அங்கிருக்கும் வெற்றிலைத் தோட்டங்களையும் அழிக்க முற்பட்டுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி, பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது நிலங்களை அத்துமீறிக் கைப்பற்ற துடிக்கும் போலீசுக்கு எதிராக ஒன்றிணைந்தனர். போலீஸ்துறையோ இவர்களின் மீது கொடூரமான வன்முறையை நிகழ்த்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 8 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 11 பேரும் அடக்கம். காயமடைந்த குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் எந்தவித மருத்துவ உதவியுமில்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.
ஜிண்டால் நிறுவனத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலீஸ் எங்களை நிலங்களைவிட்டு மிக மோசமாகவும் வலுக்கட்டாயமாகவும் அடித்து வெளியேற்றுகிறது என்று ஏழு வயது குழந்தையான சுபாஸ்மிதா சட்டபத்தி (subhasmita satapathy) இன் ஆற்றுபடுத்த முடியாத அழுகையைப் பார்த்த மக்கள் பின்வாங்காமல் போராடி வருகிறார்கள். நாங்கள் ஒருபோதும் எங்கள் நிலங்களைத் தொழிற்சாலை அமைப்பதற்காக விட்டுக் கொடுக்கமாட்டோம். எங்களின் கண்முன்னே இக்காடும் கடலும் நாசமாகிவிடாமல் வருங்கால பிள்ளைகளுக்காக இவ்வளங்களை பாதுகாத்து வைக்கும் பொறுப்பு எங்களிடமுள்ளது என உணர்ச்சி ததும்ப பேசி வருகின்றனர் அம்மக்கள்.
வெகுநாட்களாக வெற்றிலைத் தோட்டமாக உருவாக்கி வளர்த்த நிலங்களைக் காட்டுப்பகுதி எனக்கூறிப் பட்டா வழங்காத ஒடிசா அரசுதான் ஜிண்டால் என்ற கார்ப்பரேட்டுக்கு மட்டும் வனப்பகுதியை அப்படியே வாரிக் கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே ஜகத்சிங்பூரின் பிராதிப் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் சுற்றியுள்ள எங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் இங்கு அமைந்தால் அழிவு நிச்சயம் எனக் கூறி அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தங்களது கிராமத்தையும் வயல்வெளிகளையும் காடுகளையும் கடலையும் நாசமாக்கவே கொண்டுவரப்பட்டுள்ள ஜிண்டால் உத்கல் ஸ்டீல் (JUSL – JSW UTKAL STEEL LTD) என்ற ஒருங்கிணைந்த எஃகு தொழிற்சாலை நிறுவனத்தை விரட்டியடிக்க, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் எதிர்த்துப் மிகப்பெரும் போரட்டத்தை அவர்கள் கையிலெடுத்துள்ளனர். அம்மக்களுக்கு இப்படிப்பட்ட போரட்டங்கள் ஒன்றும் புதியதல்ல.
போஸ்கோ நிறுவனமும் மக்கள் போராட்டமும்
2005-ம் ஆண்டு தென்கொரியா நாட்டைச் சேர்ந்த போஸ்கா என்ற நிறுவனம் 52,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான இரும்பு ஆலை ஒன்றை நிறுவ ஒடிசா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது. இந்த ஒப்பந்தம் தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையின் மிகப் பெரிய வெற்றியாக ஒடிசா அரசு மற்றும் அந்நிறுவனத்தால் பீற்றிக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ரூ.52,000 கோடி முதலீடு, இரும்புச் சுரங்கம், எஃகு ஆலை, இரும்பு ஏற்றுமதிக்கான துறைமுகம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு என ஒட்டுமொத்தமாக அம்மாநிலத்தின் ‘வளர்ச்சி’க்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் பெருமையாகக் கூறப்பட்டது. அதன்படி ஆலை அமைப்பதற்கென 4004 ஏக்கர் நிலம், அடிக்கட்டுமான வசதி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் குடியிருப்புக்கான நகரத்தை உருவாக்க 2000 ஏக்கர் நிலம், இரும்பு சுரங்கம் அமைப்பதற்கு 6177 ஏக்கர் நிலமென மொத்தம் 12000 ஏக்கர் நிலம் ஜகத்சிங்பூரில் கையகப்படுத்த திட்டம் போடப்பட்டது.
போஸ்கோ ஆலை அமைவதற்காகப் பலிகொடுக்கப்படவிருந்த கிராமங்கள், ஜகத்சிங்பூர் மாவட்டக் கடலோரத்தை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் விவாசய நிலங்கள் குறிப்பாக திங்கியா, கோவிந்தபூர், கடகுஜங்கா, நுவாகாவ் போன்றவை ஆகும். இக்கிராமங்கள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாகப் பிரத்தியேகமான நில அமைப்பையும் அதற்கு ஏற்றாற்போல் விவசாயமும் செழிப்புடன் நடைபெற்றுவரும் பகுதிகளாகும். முக்கியமாக இங்கு வெற்றிலை மற்றும் திராட்சை, முந்திரித் தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன. அதோடு நெல் மற்றும் பல காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு வருகிறன்றன. குறிப்பாக வெற்றிலை மற்றும் முந்திரி பயிரிடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியின் செழிப்பிற்கு அங்குள்ள நீர்வளம் முக்கியக் காரணமாக இருக்கிறது. இதற்கு ஆதாரமாக அங்குள்ள மாகநதி, கதாஜோடி, தேவி, ஜடாதாரி போன்ற ஆறுகள் காணப்படுகின்றன. இவைமட்டுமல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட காட்டாறுகள், நீரோடைகள், அருவிகளுடன் இலட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளுடன் முற்றிலும் இயற்கை வளத்துடன் அமைந்துள்ள பகுதியாக இவை உள்ளன. இவ்வளவு செழிப்புடன் இருக்கும் கிராமங்களைத் தனது இலாப வெறிக்காக நாசமாக்கவுள்ளது இந்நிறுவனம்.
ஆலை அமையவிருந்த பகுதியில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயத்தைச் சார்ந்துள்ள 22,000 குடும்பங்களும், ஆலையின் தேவைக்காக உருவாக்கப்பட இருக்கும் துறைமுகம் அமையவிருந்த சுந்தர்கர் மாவட்டம் கந்ததர் பகுதியில் வாழ்ந்துவரும் பழங்குடியினக் குடும்பங்களும் இதனால் பாதிக்கப்படும் ஆபாயங்கள் இருந்தன.
அந்நிறுவனம் வன உரிமை சட்டத்தை மீறி அங்குள்ள காட்டுப்பகுதிகளைக் கையகப்படுத்தியதோடு அல்லாமல், ஆலைக்கு முறையான ஒப்புதல் பெறுவதற்கு முன்பே அங்குள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தியது. இத்தகைய சட்ட மீறல்களுக்குத் துணையாக நின்றது அம்மாநில அரசு.
இப்பகாசுர நிறுவனத்திடமிருந்து தங்களுடைய வாழ்வாதாரங்களான நிலத்தையும், வனப்பகுதிகளையும் காப்பாற்றுவதற்காக அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து, தீரமிக்கப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஒட்டுமொத்த கிராமமுமே பெரியவர்கள் சிறுவர்கள் என்று பாராமல் ஒன்றாக இணைந்து போரடினார்கள். போஸ்கோவுக்கு ஆதரவாக நின்று ஒடிசா அரசு தமது சொந்த மக்களின் மீது பல்வேறு கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவியது. பலரது இன்னுயிர்கள் இந்த அரசவேட்டையில் பலியாயின. இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து தங்கள் கிராமமும், இயற்கை வளங்களும் இக்கொடியவர்களிடம் சிக்கி நாசமாகிவிடக் கூடாதென்பதைத் தெளிவாக உணர்ந்த அம்மக்கள் போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி என்ற போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான கூட்டமைப்பினை உருவாக்கித் தொடர்ந்து போராடியதன் விளைவாகச் சரியாகப் பத்து ஆண்டுகள் கழித்து 2015-ல் நாசகர போஸ்கோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைவிடப்பட்டது. இது பத்தாண்டுகளாக சளைக்காமல் நடந்த மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. ஒருமதயானையை சிற்றெறும்பு வீழ்த்திய மாபெரும் கதை.
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்காக நாட்டின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கும் இத்தகைய தேசவிரோத, மக்கள்விரோத செயலுக்குப் பெயர்தான் வளர்ச்சியாம். முன்னேற்றமாம்.
போஸ்கோ, ஜிண்டால் ஆலைகள் மட்டுமல்ல எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், அணு உலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம் போன்ற தமிழகத்தையே நாசமாக்கத் துடிக்கும் திட்டங்களும் இதே வளர்ச்சி முன்னேற்றம் என்ற பெயரில்தான் கொண்டுவரப்படுகின்றன. ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக்கும் இந்த மறுகாலனியாகத் திட்டங்களை கார்ப்பரேட் பாசிசத்தின் தாக்குதல்கள் என்று ஒருங்கிணைந்த முறையில் புரிந்துகொண்டு முறியடிக்கக் களமிறங்க வேண்டும்.