ழி பதிப்பகம் அரசியல் ரீதியாக தொடர்ந்து முக்கியமான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கை, எல்லா இடங்களிலுமே காணாமல் போன நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செழியனிடமிருந்த ஒரு பிரதியைப் பெற்று, அதனைப் பதிப்பித்தார் செந்தில்நாதன். தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அந்தப் பதிப்பு மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.
இப்போது மீண்டும் ஒரு முக்கியமான பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறது ஆழி. இந்தியாவில் மாநில சுயாட்சி குறித்தும் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் உள்ள உறவுகள் குறித்தும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் நிலவும் நிலைமையை மேம்படுத்துதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது பி.வி. ராஜமன்னார் குழு. அந்தக் குழு அளித்த பரிந்துரைகள், அது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதையொட்டி நடந்த விவாதங்கள் இந்தப் புத்தகத்தில் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
1969ல் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தில்லிக்கு சென்ற மு. கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “மாநில சுயாட்சி குறித்து அறிந்து விரிவான அறிக்கையை வழங்கக்கூடிய அளவில் ஒரு குழுவை அமைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
படிக்க :
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா
இதற்குப் பிறகு, 1969ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி இது குறித்த அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி. ராஜமன்னார் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆய்வுகளை நடத்தி, பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினரிடம் கேள்வித் தாளை அனுப்பி பதிலைப் பெற்று தனது அறிக்கையை தொகுத்தது. இந்த அறிக்கை 1971 மே 27ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு, இந்தப் பரிந்துரைகள் செழியன், முரசொலி மாறன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த அறிக்கையில் சாத்தியமான விஷயங்கள் தொகுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இது தொடர்பான தீர்மானம் 1974 ஏப்ரலில் சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைகளை ஏற்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டது.
இதற்குப் பிறகு, முதலமைச்சர் மு. கருணாநிதி நீண்ட உரையை ஆற்றினார். இதற்குப் பிறகு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அவ்வப்போது குறுக்கிட்டு, முதலமைச்சர் பதிலளித்தார். இவையனைத்தும் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்திற்கு ஒரு அணிந்துரையை கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அந்த அணிந்துரையில், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் மாநில அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து ஒரு விரிவான பட்டியலைத் தந்திருக்கிறார். இது தொடர்பாக தமிழில் வெளியான புத்தகங்களின் பட்டியலையும் தந்திருக்கிறார். அந்த வகையில் மிக முக்கியமான கட்டுரை அது.
இதற்கான அறிமுகவுரையை ஆழி செந்தில்நாதன் எழுதியிருக்கிறார். இப்படி ஒரு விரிவான நூலின் சாரத்தை மிகக் கச்சிதமாகத் தொகுத்து அந்த அறிமுகவுரையில் தந்திருக்கிறார் செந்தில்நாதன்.
தமிழ்நாடு வரலாற்றில் ஆர்வமுடைய யாருக்கும் இது ஒரு முக்கியமான ஆய்வு நூல். இதுபோன்ற தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட பல ஆணையங்களின் பரிந்துரைகள் புத்தகமாகக் கிடைக்கும்போது, அரசியல் விவாதங்களின் தரம் மேம்படும். அரசியல் விவாதங்களில் ஆர்வமுடையோர், பத்திரிகையாளர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம்.
1974 : மாநில சுயாட்சி
வெளியீடு: ஆழி பதிப்பகம், 5, கலைஞர் கருணாநிதி சாலை,
காவேரி ரங்கன் நகர், சாலி கிராமம், சென்னை – 93.
விலை: ரூ. 1000/-
நூல் வாங்க : 97150 89690
முகநூலில் அறிமுகம் : K.Muralidharan
disclaimer