ங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை என அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை உயிரோடு வாழவிடுங்கள் மீறி எங்கள் நிலம் தான் வேண்டுமென்றால் எங்கள் அனைவரையும் கொலைசெய்துவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய இடத்தை அதன்பிறகு நாங்கள் எப்படி கேட்கப் போகிறோம். ஆனால் நாங்கள் உயிருடன் இருக்கும் வரை இந்த இடத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்”‌ என‌ கண்ணீர் வடிய கூறுகின்றனர் சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள்.
2013 – 2014 ஆம் ஆண்டு I.H சேகர் என்ற நபர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெத்தேல் நகர் என்பது சதுப்பு நில‌ப்பகுதி எனவும் அந்தப் பகுதியை மக்கள் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர் என்றும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். 2015-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதுப்பு நிலப்பகுதியை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்தச் செய்தியை அறிந்த பெத்தேல் நகர் மக்கள் தங்களுடைய எல்லா ஆவணங்களையும் அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். அதை ஆய்வு செய்த கலெக்டர் இது மக்கள் வாழத் தகுந்த பகுதிதான் என 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆவணங்களை ஒப்படைத்தார். அந்த ஆய்வின்படி அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டுமென நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை முறைப்படி நடைமுறைபடுத்தாத அரசு அதிகாரிகளால் மீண்டும் 2019 ஆம் ஆண்டு இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் ‌மறுவிசாரணைக்கு வந்ததது.
படிக்க :
தூய்மைப் பணியாளர்கள் : எடப்பாடியின் துரோகத்தைத் தொடரும் ஸ்டாலின் !
அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !
வழக்கை விசாரித்த நீதிபதி உடனடியாக நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகள் அனைத்தையும் அகற்ற‌ தீர்ப்பளித்தார். எனினும் இதை அதிகாரிகள் முறைமையாக செயல்படுத்தவில்லையென நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 28, ஜனவரி 2022 அன்று சேகர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்பே ஜனவரி 26 அதிகாலை அதிகாரிகள் பெத்தேல் நகருக்குள் வந்து மூன்று நாட்களில் அனைத்து வீடுகளையும் உடனடியாக காலிசெய்யச் சொல்லி வீடுவீடாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‌அதனால் மீண்டும் ஜனவரி 31 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் பெத்தேல் நகர் பகுதி சதுப்பு நிலப் பகுதியில்லை என்றும், அது மேய்கால் பொறம்போக்கு பகுதி என்றும் தீர்ப்பளித்து இந்த வழக்கை மீண்டும் பிப்ரவரி 8,9 க்கு மாற்றி வைத்துள்ளது, உயர் நீதிமன்றம்.
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பிப்ரவரி 4 மாலை மாற்று வீடு கோரும் பெத்தேல் நகர் மக்களுக்கு உடனடியாக வேறு பகுதிகளில் வீடு கொடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது தமிழ் நாடு அரசு.
பெத்தேல் நகர் என்பது 52 தெருக்களை உள்ளடக்கிய பெரும் பகுதி. 10,000 க்கு மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர், 24 தெருக்களை உள்ளடக்கிய வடக்கு பெத்தேல் நகர், மற்றும் 25 க்கும் மேற்பட்ட தெருக்களை உள்ளடக்கிய தெற்கு பெத்தேல் நகர் என இரு பிரிவாக உள்ளது. இரண்டிற்கும் தனித்தனி ரேஷன் கடைகளும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் தொட்டிகள் என அனைத்தும் அரசால் செய்து தரப்பட்டுள்ளது.
பெத்தேல் நகரில் 5000 ரேஷன் அட்டை குடும்பங்களையும், 10000-க்கும் மேற்பட்ட மக்களையும் உடனடியாக காலிசெய்யச் சொல்வது என்பது மக்களை உயிரோடு மண்ணில் புதைப்பதற்கு சமம். ஒரு வாரத்திற்கு முன்பு எந்த அறிவிப்பும் ‌இல்லாமல் அரசு அதிகாரிகள் அங்குள்ள கடைகள் அனைத்தையும் சீல் வைத்து மின்சாரத்தை துண்டித்துள்ளனர். கல்லூரி, பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால் குடியிருப்பு பகுதிகளில் மின்சாரத்தை தூண்டிக்காமல் மூன்று மாதங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது அரசு. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தங்களுடைய அடிப்படைக்கு தேவையான பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மருந்துக் கடைகளைக் கூட மூடியுள்ளனர். மருத்து வாங்க வழியில்லாமல் தினம் 1 கிலோமீட்டர் நடந்து சென்று வருகின்றனர் மக்கள்.
அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல், வழக்கு வந்த நாள் முதல் தூங்காமல் அழுது கொண்டிருக்கிறார்கள் பெத்தேல் நகர் மக்கள்.
பெத்தேல் நகரில் நீண்ட நாட்களாக வசிக்கும் முசுலீம் பெண் ஒருவரைச் சந்தித்து பேசியபோது “நாங்கள் 15 ஆண்டுகளாக இங்கு குடியிருக்கிறோம். 2006 முதல் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வரி கட்டுகிறோம். கடந்த 4 ஆண்டுகள் எங்களிடம் அவர்கள் வரி கேட்கவில்லை. அது ஏன் என இப்போதுதான் புரிகிறது. எங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்கிறார்கள். ஆனால் அதற்கு கூட எங்களுக்கு அர்த்தம் சரியாக தெரியாது. விலை குறைவு என்பதால் தான் நாங்கள் இங்கு இடம் வாங்கினோம் இல்லை என்றால் வேறு நகர்ப்புற பகுதியில் நல்ல இடம் வாங்கியிருப்போம்.
ஒட்டப்பட்டநோட்டீஸ்
நாங்கள் வாங்கிய போது இந்த இடம் மிக மோசமான நிலையில் இருந்தது. நாங்கள் கடன் வாங்கி இந்த இடத்தை சீர்ப்படுத்தினோம். அதிகப்படியான மண் கொட்டி மேடாக்கினோம். அரசு அதிகாரிகள் சொன்னப்படி கால்வாயிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் வீடு கட்டியிருக்கிறோம். ஆனால் இப்போது நாங்கள் நன்றாக வாழப்போகிறோம் என்ற நிலைக்கு வருமுன் இந்த இடம் சதுப்பு நிலப்பகுதி என்று எங்களை வெளியேபோகச் சொல்கிறது அரசு. அப்படியென்றால் எதற்கு அரசு எங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தீர்கள். எதற்கு வீட்டு வரி வாங்குனீர்கள் எதற்கு சாலை வசதி, மின்சார இணைப்பு கொடுத்தீர்கள்?
26 நபர்களைக் கொண்ட 6 குடும்பம் ஒன்றாக வசிக்கிறோம். வெளியே போகச் சொன்னால் நாங்கள் எங்கு போவது யார் எங்கள் 6 குடும்பத்திற்கு வீடு கொடுப்பார்கள் நீங்கள் கொடுக்க போகும் வீட்டின் நிலைபற்றி எங்களுக்குத் தெரியும் அந்த குடோன் போன்ற அடைக்கப்பட்ட வீடு எங்களுக்கு தேவையில்லை. இந்த இடத்தை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
நீர்நிலைப்பகுதி என்றால் அது உங்களுக்கு எதற்கு? அனைத்து அரசு ஆவணங்களையும் வைத்திருந்த போதும் எங்களை அகதிகளாக்க பார்க்கிறீர்கள், உங்கள் சலுகைகள் எங்களுக்கு தேவையில்லை. உங்கள் பொங்கல் பரிசுகள் எங்களுக்கு வேண்டாம் எங்களுக்கு இந்த இடத்தை மட்டும் கொடுத்தால் போதும் உங்கள் சாதனைகள் எதற்கு எங்களுக்கு இந்த இடத்தை கொடுத்து வாழ விடுங்கள் அது போதும் எங்களுக்கு என்று,” நம்மிடம் கண்ணீர் வழிந்த முகத்துடன் கூறுகிறார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அலமேலு என்பவரைச் சந்தித்து பேசியபோது “10 வகையான அரசு ஆதாரங்களை நான் வைத்துள்ளேன். நேற்று வந்து இதெல்லாம் என்னால் வாங்க முடியுமா என்ன? 17 ஆண்டுகளாக நான் இங்கு தான் குடியிருக்கிறேன். பல ஆண்டுகள் அலைந்துதான் அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வாங்கினோம். இந்த இடத்தை 1.30 லட்சம் கொடுத்து வாங்கும்போது 5 அடிக்கு மேல் பள்ளம், மேடாகவும், புல், பூண்டுகள் முளைத்த காடுகளாகவும் தரிசு நிலமாகவும் இருந்தது. இதை சரிசெய்வதற்கு நாங்கள் பட்டப்பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.
நாங்கள் சீலையை போட்டு இந்த இடத்தை வளைத்து போடவில்லை 10000, 50000, 20000 என சிறுகச் சிறுக சேர்த்து இந்த இடத்தை வாங்கினோம், யார் கண்பட்டது என்று தெரியவில்லை, இந்த இடத்தை எடுத்துக் கொள்ள துடிக்கிறார்கள். நாங்கள் சீர் செய்த இடத்தை எடுத்துக்கொள்ள நினைக்கிறார்கள். எடுத்துக்கொள்ளட்டும் எங்களை கொலை செய்துவிட்டு எங்கள் பிணத்தின் மீது ஏறிச் சென்று இந்த இடத்தை எடுத்துச் செல்லட்டும்.
அவர்கள், இந்த இடத்தை நீர்நிலைப்பகுதி என்கிறார்கள் ஆனால் 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வரும்போது எங்கள் பகுதியில் தண்ணீர் அதிகம் வரவேயில்லை நன்றாகதான் இருந்தோம், நாங்கள் இங்கு சிறிதளவு சந்தோசமாகவும், சுகந்திரமாகவும் இருக்கிறோம். வேறு இடம் கொடுத்தால் எங்களால் எப்படி மின்சார வரி, குடிநீர் வரி, வீட்டு வாடகை என் அனைத்தையும் கட்ட முடியும்,. கருணாநிதி சொன்னார் மூன்றாண்டுகள் ஒரு இடத்தில் இருந்தால் பட்டா வழங்கலாம் என்று. ஆனால் நாங்கள் 17 ஆண்டுகளுக்கு மேல் இங்கு இருக்கிறோம் ஆனால் எங்களுக்கு பட்டா வழங்க யோசிக்கிறார்கள் அதிகாரிகள்.
பட்டா வழங்குவோம் என்றுதான் ஓட்டு வாங்கினார்கள் அதன் பிறகு அவர்கள் இந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. நாங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம் வரி மட்டும் வேணுமாம் ஆனால் நாங்கள் மட்டும் உங்களுக்கு வேணாமா? தினம் தினம் ஏன் எங்கள் உயிரை எடுத்து கொண்டிருக்கிறீர்கள். எழுதிக் கொள்ளுங்கள் நாங்கள் யாரும் இந்தமுறை ஓட்டுப் போட தயாராகயில்லை எங்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு எங்கள் பகுதிக்கு அவர்கள் வரட்டும்” என்று கோபத்துடன் கூறுகிறார் அப்பெண்மணி.
கௌரி என்ற பெண்ணைச் சந்தித்துப் பேசியபோது ”இந்த இடத்தை வாங்குவதற்கு என் தாலியை அடகு வைத்தோம். அது போதவில்லை என்று கடன் வாங்கி இந்த இடத்தை வாங்கினோம். அந்த கடனுக்கான வட்டியைக் கூட இன்று கட்டிவிட்டு வருகிறேன். வாடகை வீட்டில் இருந்ததால் உரிமையாளர் தொல்லை தாங்கவில்லை என்றுதான் இங்கு இடம் வாங்க நினைத்தோம். இந்த இடம் வாங்கும் போதே என் கணவர் மருத்து குடித்து விட்டார். இப்போது இடம் அரசு எடுத்துக் கொள்ளும் என்றால் நான் சாகவும் தயங்க மட்டேன். வேறு எங்கு போய் எங்களால் பிழைக்க முடியும்? வாங்கிய கடனே இன்னும் அடைக்க முடியவில்லை. நான் இங்குதான் பிறந்தேன். எனக்கு தெரியும் எங்கு ஏரி, குளம் இருக்கிறது என்று, இங்கு இரண்டு தனியார் பள்ளிகளும் ஒரு கிருஷ்ணர் கோவிலும் இருக்கிறது.
அதற்கு மூன்றுக்கு மட்டும் எப்படி பட்டா கொடுத்தார்கள் நாங்களும் அதே பகுதிதான் எங்களுக்கு மட்டும் ஏன் பட்டா கொடுக்கவில்லை. ஓட்டுப் போடுவதற்கு மட்டுதான் நாங்கள் என்றால் அந்த வாக்காளர் அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் எங்களை உயிரோடு வாழவிடுங்கள்” என்றார் அவர்.
15 ஆண்டுகளாக பெத்தேல் நகரில் வசித்து வரும் கவிதா என்ற பெண்ணை சந்தித்து பேசிய போது ”கருணாநிதி இறந்தபோது புதைப்பதற்கு இடம் கேட்டு அவ்வளவு அழுதார் ஸ்டாலின். புதைப்பதற்கு அவருக்கு இடம் கிடைத்தவுடன் நாங்களும் சந்தோசப்பட்டோம். இறந்த நபர்க்கு இடம், நாங்கள் உயிரோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கள் இடத்தை இப்போது அரசு பிடுங்குகிறீர்கள் அப்போது நாங்கள் மனிதர்கள் இல்லையா? இனி எங்கள் இடத்தை கேட்டு போராடுவதில் தவறில்லை “ என்கிறார்.
2008 ஆம் ஆண்டு முதல் பெத்தேல் நகரில் வசித்து வரும் சுலோச்சனா என்பவரைச் சந்தித்துப் பேசியபோது “6 மணி நேரத்திற்கு மேல் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தோம். MLA, MP என் நாங்கள் தேர்ந்தெடுத்த நபர்கள் எங்களை கண்டுகொள்ளவில்லை. ஜனவரி 26 திடீரென அதிகாலை அரசு அதிகாரிகள் வந்து கடைகள் அனைத்தையும் மூடிவிட்டார்கள். மின்சாரத்தை துண்டித்துவிட்டு மீட்டர் பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டார்கள். பிள்ளைகள் படிக்க வேண்டுமென்று மூன்று மாதம் காலக்கெடு கொடுத்து மின்சாரத்தை துண்டிக்காமல் சென்றுவிட்டனர்.
மூன்று மாதத்திற்கு பிறகு பிள்ளைகளை எங்கு படிக்க வைப்பேன், என் பையன் ஒன்பதாம் வகுப்பு தான் படிக்கிறான் அவனை பத்தாம் வகுப்பு எங்கு சேர்ப்பேன், என் பொண்ணு 11 ஆம் வகுப்பு படிக்கிறாள். அவளை 12 ஆம் வகுப்பு எங்கு சேர்ப்பேன் அங்கு போனால் பள்ளி எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது, இப்போதே என் பிள்ளைகள் இந்த வீட்டை விட்டு எங்கம்மா போறோம் என்று கவலையோடு கேட்கிறார்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
எனக்கு கணவர் கூட கிடையாது எங்கு நாங்கள் போய் பிழைப்பது நான் இங்கு தான் கூலி வேலைக்கு போகிறேன் இந்த இடத்தை விட்டால் எனக்கு வாழ வழியில்லை” என்று கூறுகிறார்.
கோழிகளைக் கூட கூண்டில் இருந்து திறந்து விட்டால் மாலை வருவதற்கு அதற்கு வீடு இருக்கிறது. ஆனால் எங்களுக்கு இப்போது அதுகூட இல்லை, எங்கள் வாழ்க்கை பாதியை தொலைத்துவிட்டுதான் இந்த இடத்தை வாங்கினோம் இப்போது இந்த இடம் எங்களுக்கு இல்லை என்றால் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு சாகக்கூட நாங்கள் தயங்க மட்டோம்” என்கிறார் ஒரு வயதான பெண்மணி. இந்த இடம் தான் எங்கள் வாழ்வாதாரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. இங்கு இருந்துதான் சமையல் வேலை, வீட்டு வேலை, சித்தாள் வேலை என அனைத்திற்கும் செல்கிறோம். இதையும் பிடுங்கிக் கொண்டால் நாங்கள் எங்கு செல்வோம். ஆக்கிரமிப்புப் பகுதி என்றால் சென்னை அனைத்தும் ஆக்கிரமிப்பு பகுதிகள்தான். அனைத்தையும் உங்களால் எடுக்க முடியுமா? நாங்கள் எதையும் ஆக்கிரமிக்கவில்லை முறையாகக் காசு கொடுத்துதான் வாங்கினோம். ஆவணங்கள் அனைத்தும் இருக்கிறது என்று கூறுகிறார்கள் பெத்தேல் நகர் மக்கள்.
இது நீர்நிலைப்பகுதி என்றால் நாங்கள் குடிசை அமைக்கும் போது ஏன் சொல்லவில்லை. நிலத்தை சீர்செய்து வைத்து செங்கல் வீடு கட்டி சாலை அமைத்து குடிநீர் வசதிக்காக பல முறை அலைந்து அனைத்து ஆவணங்களையும் கொடுத்து மின்சாரம் பெற்று நகரமாக உருவாக்கி வைத்துள்ளோம். இப்போது நீர்நிலைப்பகுதி உயிரினங்கள் வாழும் பகுதி என்றும் காக்கைகள், குருவிகள் அமரும் பகுதி என்று அரசு கூறுகிறது. அப்படி என்றால் அரசு கோட்டைகளில் கூடத்தான் காக்கைகள் அமர்கிறது அதை உங்களால் இடிக்க முடியுமா?.
எங்களால் பெரிய அளவில் செலவு செய்து இடம் வாங்க முடியாததால்தான் இங்கு இடம் வாங்கி வசிக்கிறோம். அதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நாங்கள் செத்துதான் போகவேண்டும்” என்று மக்கள் கோபத்தோடும், அழுகையோடும் கூறுகின்றார்கள்.
படிக்க :
நடுநிலைவாதம் – லிபரல்வாதம் என்பது என்ன? || ராஜசங்கீதன்
இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…
வேலை நாட்களில் கூட 10 மணிக்கு அலுவலகம் வராத அரசு அதிகாரிகள் ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை நாளன்று காலை 7 மணிக்கே வந்து அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். எங்களை வெளியேற்ற அப்படி என்ன அவசரம் அவர்களுக்கு என்கிறார் ஒரு பெண்.
அரசால் சதுப்புநிலம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை 1960 களில் 6000 ஹெக்டேர் இருந்த நிலப்பகுதி இப்போது 700 ஹெக்டேர்தான் இருக்கிறது பல்வேறு தனியார் நிறுவனங்களால் அது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அதை மீட்டெடுக்க எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை அரசு. மாறாக அதை பெரும் முதலாளிகளுக்கு தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. எஸ்.ஆர்.எம் போன்ற தரகு முதலாளிகள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். அதற்கெல்லாம் பட்டா உள்ளிட்ட சகல வசதிகளையும் செய்து கொடுத்தது அரசுதான். இந்த மாநகரையே தம் கரங்களால் உருவாக்கிய உழைக்கும் மக்களை மட்டும் “ஆக்கிரமிப்பாளர்கள்” என்று கூறுகிறது.
மெட்பிளஸ் என்ற கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பெரிய பெரிய காம்ப்ளக்சுகள் அனைத்தும் நீர் நிலைப்பகுதியை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் நீர் நிலைப்பகுதிகள்தான். ஆனால் அப்பாவி உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளை மட்டும் “ஆக்கிரமிப்பு” என்று கூறி திட்டமிட்டு அவர்களை அங்கிருந்து விரட்டியடித்து வருகிறது. தி.மு..வோ அ.தி.மு..வோ இதில் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்திருக்கும் எந்த அரசுக்கும் வேறுபாடில்லை.
களச் செய்தியாளர் : அகிலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க