“வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம்” என்கிற அரங்க கூட்டம் மதுரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி(மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக நடைபெற்றது. இந்த அரங்க கூட்டம் என்பது தமிழ்நாட்டில் ஆறு இடங்களில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் செப்டம்பர் 28 அன்று நடைபெற்றது.
இக்கூட்டம் மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர் ராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் ரவி, மக்கள் அதிகாரம் மாநில செய்தி தொடர்பாளர் தோழர் மருது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப்பொதுச் செயலாளர் தோழர் கணியமுதன், மனிதநேய மக்கள் கட்சி தோழர் முகமது ஹவுஸ், எக்ஸ் எம்எல்ஏ தோழர் நிஜாமுதீன், தமிழ் புலிகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் தோழர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி -அதானி பாசிச கும்பல் உழைக்கும் மக்களை பொருளாதார ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் தாக்குவதை கண்டித்து உரையாற்றினர்.
மேலும் இப்பாசிஸ்ட்களை அப்புறப்படுத்தாமல் உழைக்கும் மக்களின் வாழ்வில் விடிவில்லை என்றும் பேசினர். அதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் இப்புரட்சிகர அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என்றும் உறுதியளித்தனர். தமிழ்நாட்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காவி கும்பலை விரட்டியடிப்பதன் மூலம் இந்தியா முழுமைக்கும் காவி கார்ப்பரேட் பாசிச கும்பல்களுக்கு எதிராக களம் இறங்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இக்கூட்டம் அமைந்தது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழுக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் தோழர் சிவகாமு அவர்களின் நன்றி உரையோடு இக்கூட்டம் நிறைவடைந்தது.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
94889 02202