சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு என கதறும் ஆளுநர் மாளிகை, பிஜேபி கும்பல்!

பிஜேபி கும்பலே சொந்தக் கட்சியினர் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி விட்டு, இஸ்லாமியர்கள் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்வது,  கட்சிப் பதவிக்காக தன் வீட்டு வாசலில் தானே குண்டு வீசி விட்டு அவதூறு பரப்பியது அதன் பின்னர் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு என கதறும் ஆளுநர் மாளிகை, பிஜேபி கும்பல்!

க்டோபர் 25 அன்று கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற பிரச்சாரத்தை ஆளுநர் மாளிகை மற்றும் பிஜேபி கும்பல் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது.

”கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் நடைபெறும் அவதூறு பிரச்சாரங்களால் பொதுவெளியில் ஆளுநருக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. வாய்மொழி தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம் கடந்து தற்போது பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது. ஆளுநர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்ற முடியாது” என்று ஆளுநர் மாளிகையின் துணைச் செயலாளர் கூறியுள்ளார்.

“ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாததால், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க வேண்டும் என்று பாஜக-வின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எல்.முருகன் கூறுகிறார்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ரவுடிகளையும், கிரிமினல்களையும் கட்சியில் வைத்திருக்கும் பிஜேபி-க்கு சட்டம் – ஒழுங்கு பிரச்சினை பற்றி கவலை என்பதை தமிழ்நாட்டில் யாரும் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.


படிக்க: சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கும் சங்கி ஆர்.என்.ரவி


அதேபோல் தமிழ்நாட்டு மக்களின் நலனை மையப்படுத்திய 20-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களை குப்பைக் காகிதங்களாக தூக்கி எறிந்துவிட்டு, கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும், நீட்டுக்கு எதிராகவும் போராடும் மக்களை வாய்மொழித் தாக்குதல் நடத்தி இழிவுபடுத்துகின்ற, சாதி – மத ரீதியாக அவதூறுகளை பரப்பி கலவரத்தை உருவாக்கத் துடிக்கின்ற ஆளுநர்தான் தமிழ்நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதை மக்கள் புரிந்தே வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும் ஆளுநர் ரவிதான் சென்ற இடமெல்லாம் வெறுப்புணர்வை கக்கி வருகிறார்.

ஆனாலும் ஏதாவது காரணத்தை வைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி, சட்டம் – ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அதிகாரத்தைப் பிடித்து விட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.

குறிப்பாக, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை தப்பவிட்டு விட்டதாக ஆளுநர் மாளிகை, அதன் ’எக்ஸ்’ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இது குறித்து பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அவர்கள் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. குற்றவாளியை காவல்துறை கைது செய்துவிட்டது. அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் இந்தச் செய்தி வந்துள்ளது” என்று கூறியுள்ளார். போலீசும் ஆளுநர் மாளிகையின் அவதூறை மறுத்துள்ளது. திட்டமிட்ட பொய்யை தெரிந்தே அறிக்கையாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம் பிஜேபி கும்பலே வெடிகுண்டு தாக்குதலை நடத்திவிட்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.

இதற்கு முன்பு கமலாலயத்தில் ரவுடி கருக்கா வினோத் குண்டு வீசியபோது அவனை பெயிலில் எடுத்தது பிஜேபி யைச் சார்ந்த வக்கீல்தான் என்று கூறுகின்றனர்.


படிக்க: நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!


பிஜேபி கும்பலே சொந்தக் கட்சியினர் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி விட்டு, இஸ்லாமியர்கள் செய்ததாகப் பொய்ப்பிரச்சாரம் செய்வது;  கட்சிப் பதவிக்காக தன் வீட்டு வாசலில் தானே குண்டு வீசி விட்டு அவதூறு பரப்பியது; அதன் பின்னர் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன. சமீபத்தில் கும்பகோணம் அருகில் பிஜேபி-யைச் சேர்ந்த ஸ்ரீகார்த்திகேயன் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது கையெறி குண்டுகளும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி சசிக்குமார் சொந்தக் காரணங்களுக்காக கொல்லப்பட்டபோது அதைவைத்து இந்துமுன்னணி கும்பல் கலவரம் செய்தது முக்கியமான உதாரணம். இதுபோல் எண்ணற்ற ஆதாரங்களை இந்தியா முழுக்க சொல்ல முடியும்.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினை என்று கிளப்பிவிட்டோ, பொய்யான அவதூறைப் பரப்பி கலவரம் நடத்தியோ அதிகாரத்தைப் பிடிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அடிப்படையான யுக்தி. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி எதிர்ப்புணர்வும், விழிப்புணர்வும் சங்கிக் கும்பலுக்கு தடையாகவே உள்ளது. எனவேதான் பாசிச உளவாளி ஆர்.என்.ரவியின் மூலமாக காய் நகர்த்துகிறது.

ஒருக்காலும் தமிழ்நாட்டை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் கைப்பற்றுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. ஓட ஓட விரட்டி அடிப்போம்!


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க