தேர்தல் மோசடி என்பது பா.ஜ.க கையாளும் ஒரு வழிமுறை மட்டுமே

சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவாரங்களான விஷ்வ இந்து பரிஷத் (VHP), அகில பாரத்திய வித்யார்தி பரிஷத் (ABVP ), இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் மூலம் தான் பா.ஜ.க சென்றடைந்துகொண்டிருக்கிறது.

ந்தியா டுடே” பத்திரிக்கை நடத்திய “தேசத்தின் மனநிலை” என்ற கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய நிலையில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 335 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 இடங்களை விட இந்த எண்ணிக்கை (335) அதிகம் தான்.

இந்திய மக்கள் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் , சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இருப்பினும் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்ற “இந்தியா டுடே” வின் கருத்துக் கணிப்பைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.

அவ்வாறு சமூக ஊடகங்களில் பேசிய பெரும்பாலான நபர்களுடைய கருத்துகளின் சாரம் இதுதான், “மக்கள் ஓட்டுப் போட்டுதான் பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நிலை இல்லை. அவர்கள் (பா.ஜ.க) தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேறு வழிகள் வைத்திருக்கிறார்கள் “. அதாவது, தேர்தல் வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்வது போன்ற வழிகளில் தான் பா.ஜ.க அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுகிறது. இந்த கருத்துதான் பெரும்பாலான பா.ஜ.க எதிர்ப்பாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த கருத்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச இயக்கத்தை பற்றியும், அது மக்களிடையே மிக விரிவான அளவில் தாக்கம் செலுத்திக்கொண்டிருப்பதைப் பற்றியும் சிறிதும் புரிதலற்ற வகையில் கூறப்படுகிறது.

தேர்தல் களத்தில் வெவ்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி பா.ஜ.க மோசடிகள் செய்து வருவது உண்மை தான். ஆனால் தேர்தல் களத்தில் பா.ஜ.க-வின் ஆதிக்கத்திற்கு அது மட்டுமே காரணமல்ல. குறிப்பாக சொன்னால், தேர்தலில் மோசடி செய்வதை பா.ஜ.க தன்னுடைய கடைசி வாய்ப்பாகத் தான் வைத்திருக்கிறது.


படிக்க: அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்


2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குற்றம் சாட்டிய அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர், சப்யசாச்சி தாஸ் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க-வின் தேர்தல் மோசடிகள் பற்றி மிகத்தெளிவாக பதிவு செய்துள்ளார். பா.ஜ.க-விற்கு எதிரான வாக்குகள் இருக்கக்கூடிய முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதில் மோசடி நடந்திருப்பதை சப்யசாச்சி தாஸ் அம்பலப்படுத்துகிறார். இந்த மோசடி தேர்தல் ஆணையத்தின் உதவி இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இந்த மோசடிகள், பா.ஜ.க-விற்கும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கும் மிக நெருக்கமான போட்டி இருக்கும் தொகுதிகளில் தான் அதிகம் நடந்திருக்கிறது. அதாவது பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் இருவரும் வெற்றி பெறுவதற்கு சமமான வாய்ப்புள்ள தொகுதிகளில் தான் மோசடிகள் அதிகம் நடந்திருப்பதாக ஆய்வு முடிவை முன்வைக்கிறார் சப்யசாச்சி தாஸ். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஒன்றுதான், தேர்தல் மோசடிகள் என்பது பா.ஜ.கவின் பிரதான யுத்தி அல்ல.

அப்படியென்றால் பா.ஜ.க-வின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்ன? அது சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதும், மக்களின் சமூக கலாச்சார வாழ்க்கையை இந்துத்துவமயம் ஆக்குவதும் தான் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான காரணமாகும்.

சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவாரங்களான விஷ்வ இந்து பரிஷத் (VHP), அகில பாரத்திய வித்யார்தி பரிஷத் (ABVP ), இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் மூலம் தான் பா.ஜ.க சென்றடைந்துகொண்டிருக்கிறது.

சரஸ்வதி வித்யா பீடம் என்ற அமைப்பின் மூலம் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகள் வழியாக மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ கருத்துகள் விதைக்கப்படுகின்றன. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் என்ற பெயரில் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளை ஒழித்து இந்து மதத்திற்குள் கொண்டு வருகிறார்கள். VHP, பஜ்ரங் தள் போன்ற குண்டர் அமைப்புக்கள் லவ் ஜிஹாத், பசுப் பாதுகாப்பு, முஸ்லிம் கடைகளில் பண்டங்கள் வாங்கக்கூடாது போன்ற கோஷங்களை முன்வைத்து முஸ்லிம்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி மக்களை மத முனைவாக்கம் செய்கிறார்கள்.


படிக்க: காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்


தமிழ்நாடு போன்ற மதவெறி எடுபடாத மாநிலங்களில், சாதி சங்கங்கள், சாதிய அமைப்புகளை தங்களது கைக்குள் போட்டுக்கொண்டு பட்டியல் சமூக மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகளை நடத்துகிறார்கள். இதன் மூலம் மக்களை பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் அடைகிறார்கள். மாணவர்களின் தற்கொலையை, மதமாற்றம் செய்ய நிர்பந்தம் செய்ததால் ஏற்பட்ட தற்கொலை என்று பொய் செய்திகளை பரப்பி கலவரம் செய்ய முயற்சிப்பது, கிராமப்புறங்களில் கோவில் கட்டிக்கொடுத்து அதன் மூலம் ஆட்களை திரட்டி சாதி முனைவாக்கம் செய்வது, அப்பாவி மக்களின் பக்தியை தவறாக பயன்படுத்தி விளக்கு பூஜைகள் ஏற்பாடு செய்வது, கோவில் திருவிழாக்களை நடத்த நன்கொடை கொடுப்பது போன்ற வழிகளில் தன்னுடைய மதவாத கருத்துகளை பரப்பும் வலைப்பின்னல்களை பா.ஜ.க உருவாக்கி வருகிறது. இப்படி தான் பா.ஜ.க தனக்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்கிறது. இந்த விரிவான வேலைகளின் மூலமாகத்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சமூகத்தில் மதவாதத்தை வளர்க்கிறது.மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தளங்களிலும் வேலை செய்து தேர்தலுக்கான வாக்குகளாக பா.ஜ.க மாற்றிவருகிறது. அதன் மூலமாகத்தான் பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெறுகிறது.

இப்படி சமூகத்தின் அனைத்து தளங்களிலும் மதவெறியை பரப்ப ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அதன் பரிவாரங்களுடன் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அதே போல் சமூக மாற்றத்தை விரும்புபவர்களும், பாசிசத்தை எதிர்க்கும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும் மக்களை சித்தாந்த ரீதியாக அணி திரட்டி, அரசியல்படுத்தி போராடுவதன் மூலமாகவே பாசிச பா.ஜ.கவை வீழ்த்த முடியும். மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பரந்து விரிந்த செயல்பாடுகளை மறைத்துவிட்டு வெறுமனே தேர்தல் மோசடிகள் பற்றி மட்டும் பேசிக்கொண்டே இருப்பது, நம்முடைய செயல் முனைப்பற்ற சோம்பேறிதனத்திற்கு ஒரு காரணமாக மட்டுமே இருக்கும்.

பா.ஜ.க தேர்தல் வெற்றிகளுக்கு பிரதான காரணம் தேர்தல் மோசடிகள் தான் என்று ஒருவர் விடாப்பிடியாக நம்பினால் அவர் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. ஆகையால் பரந்துபட்ட மக்களிடம் மதவாத கருத்துகளை விதைக்கும் செயல்பாடுகள் தான் பா.ஜ.க-வின் வெற்றிக்கு காரணம் என்ற யதார்த்த உண்மையை ஜனநாயக சக்திகள் ஒப்புக்கொண்டு மக்களிடையே இடையறாது உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது. மக்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தளங்களிலும் பணி செய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க