சசிகாந்த் செந்திலின் வழிமுறை எத்தகையது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: காங்கிரஸ் கட்சியில் இருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில், காங்கிரஸ்க்கான தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்து வருகிறார். ‘‘இணைந்தெழு’‘ என்ற முழக்கத்தை முன்வைத்து கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இந்த முழக்கத்தை முன்வைத்துள்ளார். இவர் மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறார், மற்ற இயக்கங்களை ஜனநாயகமாக அணுகுகிறார், இது சரியான வழிமுறையாகத் தோன்றுகிறதே?

“இணைந்தெழு” என்ற அவரது முழக்கமும் தேர்தலில் வெற்றிபெற அவர் மேற்கொண்ட வழிமுறைகளும் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் பற்றி அவரே பல ஊடகங்களில் பேட்டி அளித்திருந்தார். மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தது, காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி கமிட்டி உறுப்பினர்களை சரியாக இணைத்து செயல்படுத்தியது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தலைமைக்கும் கீழ்மட்ட தொண்டர்களுக்கும் இடையில் ஒரு “இணைப்பு” ஏற்படுத்தியது ஆகியவற்றை கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான காரணங்களாக முன்வைக்கிறார். அதேபாணியில், தெலுங்கானாவில் செயல்படுத்தியது வெற்றியளித்ததாகக் கூறுகிறார்.

கர்நாடகத்திலும், தெலுங்கானாவிலும் ஆளுங்கட்சிகளான பா.ஜ.க., பி.ஆர்.எஸ். மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ததுதான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த வெற்றியை உறுதி செய்வதற்குத்தான், இவர் கூறும் வழிமுறைகள் உதவியிருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் ஆட்சி செய்த சத்தீஸ்கர், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யாததால் இந்த வழிமுறைகள் எடுபடவில்லை.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கோஷ்டி குழப்பங்கள் பற்றியோ, காங்கிரஸ் கட்சி மக்களுக்கான ஒரு மாற்று அரசியல் திட்டத்தை முன்வைக்காமல், பா.ஜ.க.வின் வழியிலேயே கார்ப்பரேட் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறது என்பதையோ, மத்தியப்பிரதேசம் போன்ற பசுவளைய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காவி அரசியலையே பிரச்சாரம் செய்வதைப் பற்றியோ சசிகாந்த் செந்தில் பேசுவதில்லை. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வது, அதற்கான, முதலாளித்துவ விளம்பர நிறுவனங்கள் பாணியில் தேர்தல் உத்திகளை வகுப்பது, களப்பணிகளை மேற்கொள்வது போன்றவற்றையே இவர் பெரிதும் நம்புகிறார், மற்றவர்களையும் நம்பச் சொல்கிறார்.

“மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து பேசுவது என்பது நமது அரசியல். பா.ஜ.க.வின் அரசியலோ மதவாத அரசியல். நாம் நமது அரசியலைப் பேசவில்லை என்றால், மதவாத அரசியலுக்குச் செல்ல வேண்டியதாகிவிடும்” என்று கூறுகிறார். மக்கள் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க. பின்பற்றிய கொள்கைகள்தான் காரணம் என்பதை மறைத்து, பா.ஜ.க. என்ற கட்சி மட்டுமே காரணம் என்று எளிமைப்படுத்துவது பிரச்சினையின் உண்மை தன்மையை மூடி மறைப்பதாகும்.

விலையேற்றம், வறுமை, வேலையின்மை, விவசாயம்-சிறுதொழில்கள் நசிவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது போன்றவை அனைத்தும் கார்ப்பரேட் நலன் சார்ந்த, பார்ப்பன இந்துராஷ்டிரக் கொள்கைகள், திட்டங்களின் விளைவுகளாகும். இதற்கு எதிராக, மக்கள் நலன்களை முன்வைக்கின்ற, பார்ப்பன இந்துராஷ்டிரத்திற்கு எதிரான கொள்கைகள், திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும். அதுதான், உண்மையில் பாசிசத்தையும் பா.ஜ.க.வையும் வீழ்த்தும். தற்போது இருக்கும் ஜி.எஸ்.டி., ஆதார், நீட், புதிய கல்விக் கொள்கை போன்றவையெல்லாம் அப்படியே இருக்கும்; ஆனால், பா.ஜ.க.வை மட்டும் தோற்கடிக்க வேண்டும் என்று பேசுவது, அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க