தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் பாசிச மோடி அரசை கண்டிக்கின்றோம்!

2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியான கட்டுரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவிக்காமலேயே அகற்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அவசரக்கால அதிகாரங்களை வழங்கியுள்ளது.

2023-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2021-இன் திருத்தப்பட்ட விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து சமூக ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ஒன்றிய பாசிச மோடி அரசு.

இந்நிலையில், தி கேரவன் பத்திரிகையின் பிப்ரவரி மாத இதழில் “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” (Screams from the Army Post) என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.

ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் இராணுவத்தினரால் செய்யப்பட்ட சித்திரவதை குறித்து கேரவன் இதழில் பத்திரிகையாளர் ஜதீந்தர் கவுர் துர் (Jatinder Kaur Tur) எழுதிய அக்கட்டுரையை 24 மணி நேரத்திற்குள் கேரவன் பத்திரிகையின் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், நீக்கத் தவறினால் முழு இணையதளமும் தடை செய்யப்படும் என்றும் தி கேரவன் பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்துள்ளது ஒன்றிய பாசிச மோடி அரசு.

இது குறித்து தி கேரவன் தனது X தள பக்கத்தில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் நோட்டீஸ் பெற்றுள்ளதாகவும், (அரசின்) இந்த உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளது. அரசு உத்தரவின் உள்ளடக்கம் குறித்து இரகசியம் காக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதழில் வெளிவந்த கட்டுரை, டிசம்பர் 22, 2023 அன்று பூஞ்ச் நகரில் அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் மூன்று ஆண்கள் கொலை செய்யப்பட்டதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. இச்செய்தி ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு,  புகாரும் அளிக்கப்பட்டது. இராணுவக் காவலில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களில் வைரலாகியிருந்தன. இதனையடுத்து தான் உள்ளூர் மக்களிடம் விசாரித்து தி கேரவன் பத்திரிக்கை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

தி கேரவன் தனது கட்டுரையில், கொலை செய்யப்பட்ட 3 ஆண்களின் குடும்பங்களுக்கு கொலை செய்யப்பட்டது குறித்து விளக்கம் ஏதும் அளிக்காமல் ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறியுள்ளது. மேலும்,  கொல்லப்பட்ட மூன்று ஆண்களும் 25 பேர் கொண்ட இராணுவத்தினால் அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டனர் என்றும் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று ஆண்களின் கொலைகள் தொடர்பாக போலீஸ், இராணுவம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை  அணுகியபோது, கேரவன் பத்திரிக்கையின் கேள்விகளுக்கு இந்த அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.


படிக்க: “தி காஷ்மீர் வாலா” சுதந்திர ஊடகம் முடக்கம்: கருத்துச் சுதந்திரத்தின் மீதான மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல்!


கடந்த ஆண்டு ஜூன் மாதம், தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே (Shahid Tantray), ஜம்மு – காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் அடக்குமுறை குறித்து ஆராய்ந்தது தொடர்பாக இரண்டு கட்டுரைகளை வெளியிட்டதற்காக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பல மாதங்களாக  ஜம்மு – காஷ்மீர் போலீசு தொடர்ந்து அச்சுறுத்தி மிரட்டல் விடுத்த சம்பவம் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியான கட்டுரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரிவிக்காமலேயே அகற்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அவசரக்கால அதிகாரங்களை வழங்கியுள்ளது. இச்சட்டத்திருத்தத்தின் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச மோடி கும்பல். இதைப் பயன்படுத்தித் தான் தி கேரவன் பத்திரிகையின் ஊடக சுதந்திரத்தை இந்த பாசிச கும்பல் தற்போது நசுக்கியுள்ளது.

பாசிச மோடி கும்பல் தனது இந்துராஷ்டிர கனவிற்காக பத்திரிகை சுதந்திரத்தை பறித்துக் கொண்டிருக்கிறது. பாசிச மோடியின் ஆட்சி ஊடகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அச்சுறுத்தலான சூழலை உருவாக்கியுள்ளது. இனி பாசிச கும்பலின் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறித்து வாயையே திறக்க முடியாத நிலை ஏற்படும். தி கேரவன் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கத் துடிக்கும் பாசிச மோடி அரசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க