கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு

இதுவரை ஒரு வயது குழந்தை உட்பட 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒரு வயது குழந்தை உட்பட 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வயநாடு – முண்டக்காய் பகுதியில் இன்று (ஜூலை 30) அதிகாலை கனமழையை தொடர்ந்து 1 மணியளவில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கூடம் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் முகாமாக இருந்துள்ளது. பள்ளியின் அருகே அமைந்துள்ள வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சென்று வருவதற்கான பாலம் இடிந்து சேதமடைந்துள்ளது. அதனால் சுமார் 400 குடும்பங்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கி உள்ளதாக தெரிகிறது.

போலீசு, தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.

கனமழை மற்றும் சாலைகள் சேதம் போன்ற காரணத்தால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலைகளை விரைந்து சீர் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க