டாஸ்மாக்கை மூடு எனப் போராடிய மாணவர்களை உடனடியாக எந்த நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் 02-09-2015 அன்று நடைபெற்றது!
தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டவர்களுக்கு மாவட்டநீதிமன்றங்கள் பிணை மறுத்தன. அதைத் தொடந்து உயர்நீதிமன்றத்தில் பிணை போட்டபோது நீதிபதி வைத்தியநாதன் “மேலப்பாளையூர் விவசாயிகள் ரூ 10,000 முன்பணம் (Deposit) கட்ட வேண்டும் என்றும் விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் ரூ 50,000 கட்ட வேண்டும் என்றும் இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிறுவனத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டும்” என்று உத்தரவிட்டார். இது குற்றவியல் நீதி வழக்கு நெறிகளுக்கே எதிரானது.
மாணவர்களை விடுதலை செய்யக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவனுக்கு 5 நாட்களில் எந்த நிபந்தனையும் இன்றி பிணை வழங்கும் நீதிமன்றம் சாராயத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு 30 நாட்களாகியும் பிணை வழங்காததையும், அபராதம் விதித்ததையும் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் சங்கத்தின் சார்பாக
தமிழகம் தழுவிய மாணவர்களின் இந்த போராட்டம் என்பது நியாயமானது மற்றும் பாராட்டுக்குரியது. எனவே சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் இந்த போராட்டத்தை ஆதரிப்பதோடு அவர்களோடு துணைநிற்கும்.
மாணவர்களை விடுதலை செய்யக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் சிறையில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
என தீர்மானம் இயற்றினர்.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து 02-09-2015 அன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் வாசலில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் சு. மில்ட்டன் தலைமை தாங்கினார். பெருத்திரளான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத்
முதலில் கண்டன உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத் “டாஸ்மாக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், மாணவர்களுமே. ஒரு நியாயமான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை 30 நாட்களுக்கு மேலும் சிறையில் வைத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. உண்மையில் இந்த மாணவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள். நீதிமன்றம் உடனடியாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். மக்களுக்கு எதிரான இந்த பிரச்சனையில் கட்டாயம் அனைவரும் போராட வேண்டும். வழக்குரைஞர்களாகிய நாம் மக்களோடு இணைந்து போராட வேண்டும். இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இளம் வழக்குரைஞர்களை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டாஸ்மாக்கை மூடும் வரை தொடந்து போராட வேண்டும்” என தனது கண்டன உரையை முடித்தார்.
அடுத்ததாக பேசிய மூத்த வழக்குரைஞரரும் Lawyers for Democracy என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு.விஜயகுமார் அவர்கள்
மூத்த வழக்குரைஞரரும் Lawyers for Democracy என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு.விஜயகுமார்
“மது அது குடியை கெடுக்கக் கூடிய மாபெரும் போதைப் பொருள் என்பதை இன்றைக்கு தமிழம் முழுவதும் நடக்கும் போராட்டங்கள் மூலம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு மாபெரும் இயக்கமாக இன்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டிகள் தொட்டு மாணவர்கள், பெண்கள் என அனைவரும் சுயமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறை ஒருபக்கம். காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் ஒரு பக்கம். அந்த சுயமான போராட்டங்களின் தொடர்ச்சியாக நடந்தது தான் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களின் போராட்டம். போராடிய மாணவர்களை கைது செய்த போது தாக்கியிருக்கியிருக்கிறார்கள். காவல் நிலையத்தில் தாக்கியிருக்கிறார்கள். சிறையில் வைத்து தாக்கியிருக்கிறார்கள். இதை மாவட்ட நீதிபதியும் உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார்.
இந்த அறிக்கை வந்தவுடனேயே அரசு விழித்துக்கொள்ள வேண்டாமா? உடனடியாக தாக்கிய போலீசு மீதும், சிறை அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்து ஒரு சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து அவர்களை தண்டிக்க வேண்டாமா? அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இந்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டாமா? அவர்களை உடனே பிணையில் விடுதலை செய்ய வேண்டாமா? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் முன்னால் இருக்கிறது. இந்த அறிக்கை டிவிசன் பென்ச் முன்னால் இருக்கும் போது உயர்நீதிமன்ற டிவிசன் பென்ச்க்கு ஒரு கடமை இருக்கிறது.
மனித உரிமை மீறல் என்பது வெளிப்படையாக வந்துவிட்டதற்கு பின்னால் இந்த வழக்கை விசாரிக்கின்ற டிவிசன் பென்ச் இதில் முழுமையாக அக்கறை எடுத்து சுனில் பத்திரா வழக்கில் அன்று கிருஷ்ணய்யர் 80-களிலே போட்ட உத்தரவை பின்பற்ற வேண்டும். உடனடியாக அவர்கள் மீது FIR பதிவு செய்வது, துறைரீதியான நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு அளித்து விடுதலை செய்ய வேண்டும். ஆனால் விடுதலை செய்வது என்பது ஜனநாயகபூர்வமான அலுவலகத்தில் இருந்து சென்ற நீதிபதியிடம் உள்ளது. ஆனால் அவரோ ரூ 50,000 அபராதம் விதித்ததாக தெரிகிறது. ஆனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் போது ஜாமின் மறுப்பது என்பது கூடாது. இது மக்களுக்கான போராட்டம் என்பதை நீதித்துறையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் வழக்குரைஞர் மில்டன்
நீதித்துறை என்பது சமூகத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. நீதித்துறை என்பது நாட்டிலே ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய துறை. மக்களுடைய அடிப்படை உரிமைகளை காப்பாற்ற வேண்டிய துறை. இதனை கணக்கிலே கொண்டு தமிழகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நிபந்தனையற்ற ஜாமின் அளிக்க வேண்டும். போராடியவர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள், மாணவர்கள், ஏழை, எளியோர். எந்தப் போராட்டத்திலும் பணம் படைத்தவர்கள் உள்ளே செல்வதில்லை. எனவே இந்த நீதிமன்றம் இந்தப் போராட்டத்தை கணக்கில் கொண்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக வைக்கிறோம்.
இரண்டாவது கோரிக்கை இப்போது மாவட்ட நீதிபதியின் அறிக்கை நம் கையில் இருக்கிறது. எனவே உடனடியாக FIR பதிவு செய்து உத்தரவிட்டு CBCID IG தலைமையில் விசாரணை நடத்தி மனித உரிமையை மீறிய G7 போலீசு அதிகாரிகளையும், சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும், அவர்கள் மீது உடனடியாக துறைரீதியான விசாரணை செய்யவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். இந்தப் போராட்டம் என்பது மறுபடியும் மறுபடியும் வெடிக்கும். தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்” என்பதை தமிழக அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவித்து அவர் உரையை முடித்தார்.
சென்னை வழக்குரைஞர் சங்கச் செயலாளர் வழக்குரைஞர் அறிவழகன்
அவரை தொடர்ந்து சென்னை வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலாளர் திரு. அறிவழகன் தனது உரையில் “டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் போலீசால் கைது செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வன்முறையை அப்போதே சங்கத்தின் சார்பாக கண்டித்தோம். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் மாணவர்கள், இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் கைது செய்து 30 நாட்களுக்கு மேலாக மாணவர்கள் சிறைபடுத்தப்பட்டிருப்பது என்பது கொடூரமான செயல். நேற்றைக்கு கூட்டப்பட்ட சங்க கூட்டத்திலே மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்ததோடு உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இங்கு வலியுறுத்துகிறேன்” என்று அவர் உரையை முடித்தார்.
பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் நளினி
அடுத்ததாக பேசிய பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் நளினி அவர்கள் தனது உரையில் ”இது வழக்குரைஞர்கள் கோரிக்கை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த தமிழக மக்களின் கோரிக்கை, ஆனால் அரசு ஏன் இவ்வளவு மெத்தனமாக நடந்து கொள்கிறது என தெரியவில்லை. டாஸ்மாக்கினால் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் தான் இதனால் பாதிக்கப்பட கூடியவர்களாக உள்ளனர். சாப்பாட்டிற்கு காசில்லை என்றால் கூட குடிப்பதற்கு பணத்தை செலவழிக்கிறார்கள். இதற்காக போராடிய மாணவர்களை தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூட வேண்டும்” என கூறி தனது உரையை முடித்தார்.
முழக்கத் தட்டிகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை போலீசுக் காட்டாட்சி ஜெயலலிதா தலைமையில் நடக்கிறது.
மதுவிலக்கு கோரியும், சாராயக் கடைகளை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை முதல் மனிதச்சங்கிலி வரை அமைதி வழியில் போராடும் பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் போலீசால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்படுகின்றனர். போராடுபவர்கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமையான வழக்குகள் ஏவப்படுகின்றன.
திருச்சி காந்தி மார்க்கெட் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம்
கொலை கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற எந்த பிரச்சனை பற்றியும் துளியும் கவலை படாத அரசு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் வாயை திறந்தாலே வெறிநாயாக சீறி வருகிறது.
இந்த அராஜகத்தையும் அடக்கு முறையையும் எதிர்த்து, மக்கள் தன் கையில் அதிகாரத்தை எடுத்து போராட வேண்டும். இத்தகைய அபாயகரமான சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும், அவசரமானதுமாகும்.
மூடு டாஸ்மாக்கை! அடக்கு முறையால் தடுக்க முடியாது மக்கள் போராட்டத்தை
அந்த வகையில் தான் கடந்த 3 மாத காலமாக தமிழகம் முழுக்க ‘மூடு டாஸ்மாக்கை கெடு விதிப்போம் ஆகஸ்டு 31’ என்ற அறைகூவலோடு பிரச்சாரம் செய்தோம், போராட்டம் செய்தோம். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க 31-08-2015 அன்று ‘மூடு டாஸ்மாக்கை! அடக்கு முறையால் தடுக்க முடியாதுமக்கள் போராட்டத்தை’ என்ற முழக்கத்தை முன் வைத்து மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக நடத்தப்பட்டது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் பேரணியாக சென்று சத்திரம் அண்ணாசிலை-யில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பாக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இத்தகைய பேரணி ஆரப்பாட்டத்தை தடை செய்வது என்ற நோக்கத்துடனே கான்ஸ்டபில் முதல் கமிஷனர் வரை அக்கறை காட்டினர்.
உங்கள் அதிகாரம் உங்கள் கையில் நமக்கான தேவைகளை நாமே பெற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் தான் மக்கள் அதிகாரத்தை நிறுவி உள்ளோம்
அனுமதி கேட்டு சென்ற நாள் முதல் ஆர்ப்பாட்ட தின நாள் வரை தொடர்ச்சியாக போனிலும், நேரிலும் கெஞ்சுவது பிறகு மிரட்டும் தோணியில் பேசுவது சட்டம் ஒழுங்கு துறையினர் உளவுத் துறையை குறை சொல்வது, உளவுத் துறையினர் உயர் அதிகாரிகளை குறை சொல்வது என்று சமாதானம் பேசி போராட்டத்தை நீர்த்து போக செய்ய முயற்சித்தனர்.
“தமிழகத்தில் எங்குமே பேரணிக்கு அனுமதி இல்லை திருச்சியில் மட்டும் ஏன் விடாபிடியாக அனுமதி கேட்கீறிர்கள்” எனக் கேட்ட அதிகாரியிடம், “தமிழகத்தில் எங்குமே முன்னெச்சரிக்கை கைதோ வழக்கோ இல்லாத போது திருச்சியில் மட்டும் தோழர்களை தேடி தேடிச் சென்று வழக்கு போட்டது ஏன்?” என்ற கேள்விக்கு மழுப்பலாகவே பதில் கூறினார்.
“சமீப காலமாக அரசியல் கட்சிகளுக்கு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் ஆர்பாட்ட அனுமதி உண்டு” என்று நாம் கோரி இருந்த இடத்திற்கு அனுமதி மறுத்தனர்.
“இந்த முடிவு அ.தி.மு.கவுக்கு பொருந்ததா? காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை எதிர்த்து அவர்கள் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் காவல் துறையின் வரம்பிற்குள் நடத்தப்பட்டது தானா?” என்ற கேள்விக்கு நமட்டுச் சிரிப்பும் மழுப்பல் பதிலுமே விலையாக கிடைத்தது. இறுதிவரை பேரணிக்கு அனுமதி கொடுக்காமல், நாம் பேரணிக்கு திட்டமிட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஆயுதப்படையினர், வஜ்ரா வாகனம் உள்ளிட்ட ஒரு பெரும் படையே ஆக்கிரமித்து அனுமதி மறுத்தனர்; “மீறினால் கைது செய்வோம்” என்று மிரட்டினர்.
இன்று இது மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி விட்டது.
மக்கள் அதிகாரம் தாம் நடத்தும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதாலும், இதில் வணிகர் சங்கம் விவசாயிகள் அமைப்பு, ம.தி.மு.க., புதிய தமிழகம், ஆதித்தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்ள இருப்பதாலும் போலீசாரின் அராஜகத்தை சகித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தோழர்களும் ஆதரவாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சத்திரம் பேருந்து நிலையத்திலுள்ள அண்ணாசிலை அருகில் துவங்கியது.
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ் பேசும் போது, மக்கள் அதிகாரம் அமைப்பு உருவான விதமும் அதன் தேவை பற்றியும் விளக்கினார். “இது வன்முறையை தூண்டும் அமைப்பு என்று அரசு செய்யும் விஷம பிரச்சாரம் செய்வது தவறானது. அரசு மக்களுக்கு வைத்த திட்டமான நமக்கு நாமே திட்டத்தை போல மத்திய அரசு முன் வைத்த உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தை போல, தூய்மை இந்தியா திட்டத்தை போல உங்கள் அதிகாரம் உங்கள் கையில் நமக்கான தேவைகளை நாமே பெற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் தான் மக்கள் அதிகாரத்தை நிறுவி உள்ளோம். அதன் முதல் போராட்டமாக இந்த டாஸ்மாக்கை இழுத்து மூடும் இயக்கத்தை முன் வைத்து எடுக்கப்பட்டது.
இன்று இது மக்கள் இயக்கமாக மாறத் தொடங்கி விட்டது. இது போன்று பல்வேறு மக்கள் பிரச்சனைகளை, இயற்கை வளங்கள் சுரண்டலை தொழிலாளர் விரோதப் போக்கை முறியடிக்கும் விதமாக இயக்கமாக எடுக்க உள்ளோம். அதற்கு ஜனநாயக சக்திகள் ஆதரவும் ஊக்கமும் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தி பேசினார்.
புதிய தமிழகத்தை சேர்ந்த திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமையில் முன்னணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர் மக்கள் அதிகாரம் போராட்டம் பற்றியும் டாஸ்மாக்கை இழுத்து மூடும் வரை போராடும் அவசியம் பற்றியும் இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகும் இந்த அரசு சுரணையின்றி இருப்பது பற்றியும் பேசினார். மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே இதற்கு முடிவு கிடைக்குமென உரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அடுத்து பேசிய மா.ப. சின்னத்துரை, விவசாயிகள் சங்கம், திருச்சி மாவட்ட தலைவர், “என் குடும்பம் பிள்ளை சீரழிந்து விடக்கூடாது, எனவேதான் இதை எதிர்த்து போராட வந்துள்ளேன். ஓட்டுப்பொறுக்கி அ.தி.மு.க அரசு ஓட்டுக் கேட்டு வரும் போது நான் மக்களை அடிப்பேன், ஒடுக்குவேன் என சொல்லவில்லை. இன்று அவர்களின் சுயநலத்துக்கு விளக்கமாறு தூக்கியுள்ளனர். இனி எங்களிடம் ஓட்டுக் கேட்டு வந்தால் விளக்கமாறு, செருப்பை தூக்கி விரட்டியடிப்போம்.
கலிங்கப்பட்டி, சென்னை போன்ற இடங்களில் மாணவர்களும், மக்களும் அதிகாரத்தை கையிலெடுத்து போராடியதால் தான் மூட முடிந்தது.
டாஸ்மாக்குக்கு எதிராக அனைத்து கட்சி நபர்களையும் ஒருங்கிணைத்த மக்கள் அதிகாரம் அமைப்புக்கு நன்றி. திருவரங்கம் இடைத்தேர்தலில் ரூ 150 கோடி செலவு செய்து வெற்றி பெற்றாலும் குடிக்கிற தண்ணியை கூட மக்களுக்கு கொடுக்காமல் அலைக்கழிக்கும் ஜெயலலிதா அரசு, டாஸ்மாக் கடையை மூடாது. மக்கள் போராட்டங்கள் மூலமாக தான் மூட முடியும் .
இளங்கோவனுக்கு எதிராக விளக்கமாறு செருப்பையும் தூக்கி போராடிய ஓட்டுக்கட்சிகள் ஓட்டுகேட்டு வந்தால் அவர்கள் பாணியிலேயே விரட்ட வேண்டும்.” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்து பேசினார்.
அடுத்து பேசிய M.K.கமலக்கண்ணன் திருச்சி காந்தி மாக்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் “இந்த அரசு டாஸ்மாக் கடையை மூடாது, நாம் தான் மூட வேண்டும் என கலிங்கப்பட்டி, சென்னை போன்ற இடங்களில் மாணவர்களும், மக்களும் அதிகாரத்தை கையிலெடுத்து போராடியதால் தான் மூட முடிந்தது. இது போன்ற போராட்டங்கள் தான் தீர்வாக அமையும். இதை கையில் எடுத்த மக்கள் அதிகாரம் குழுவினருக்கு நன்றி” என பேசினார்.
அடுத்து பேசிய கந்தவேல்குமார், திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, “டாஸ்மாக் விசயத்தில் தங்கள் போராட்டத்தையும் தங்கள் அமைப்புத் தோழர்கள் சிறை சென்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு பேசினார். இது போன்ற டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று பேசினார்.
மேலும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணிமாறன், திருச்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டத்தை பற்றி பேசினார். “மாணவர்கள் என்பவர்கள் வெளி உலகம் தெரியாத பச்சை பிள்ளைகள் அல்ல. பச்சமிளகாய் போல காரம் மிகுந்தவர்கள். மிளகாய் கடித்தல் என்ன விளைவுகள் ஏற்படும்? என்பது தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது என பேசி போராட அறைகூவினார்.
மேலும் ஆதிதமிழர் பேரவை, ஆதி தமிழர்க் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், புத்தனாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கவேல், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர். நிலவழகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்ட உரையாற்றினர்.
நிறைவாக பேசிய மக்கள் அதிகார மாநில தலைமை குழு உறுப்பினர் காளியப்பன் “இந்த அரசுக் கட்டமைப்பு தோற்று போய் உள்ளது. செயலிழந்து முடங்கி போயுள்ளது. இதை வீழ்த்தி முறியடிக்க வேண்டியது அவசியம். மூடு டாஸ்மாக்கை என்ற எமது முழக்கம் அரசிடம் வைத்த முழக்கமில்லை. மக்கள் தமது உரிமையை பெற போராட வேண்டுமென வலியுறுத்தி இத்தகைய முழக்கம் முன் வைக்கப்பட்டது. டாஸ்மாக்கை மூடும் வரை இந்த போராட்டம் நீடிக்கும்” என பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவினர் கலந்து கொண்டு புரட்சிகர பாடல்கள் பாடி உணர்வூட்டினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவினர் கலந்து கொண்டு புரட்சிகர பாடல்கள் பாடி உணர்வூட்டினர். இறுதியாக மக்கள் அதிகார உறுப்பினர் தோழர் ஓவியா நன்றியுரை கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
மேற்கண்ட பேச்சாளர்களை கூட்டத்திற்கு வரும் முன்னர் Q பிரிவு போலீசார் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்த அதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்; இறுதிவரை இருந்து ஆதரவு தெரிவித்தனர்.
மக்கள் அதிகாரம் என்றால் அதன் பிரதிநிதிகள் மட்டும கலந்து கொள்ளும் கூட்டமாக இருக்குமென நினைத்த போலீசுக்கு அனைத்து பிரமுகர்களும், பிற இயக்கங்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தது அரசின் அடியாள் படையான போலீசுக்கு அதிர்ச்சியளித்தது.
இது முடிவல்ல துவக்கம் தான் என்பைதை இனிவரும் காலம் நிருபிக்கும். மக்கள் அதிகாரம் தொடர்ந்து இத்தகைய பணிகளில் ஈடுபடும் என்பதை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக அமைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்: மக்கள் அதிகாரம், திருச்சி.
தொடர்புக்கு: 9445475157.
5. விழுப்புரம்
டாஸ்மாக்கை மூடு
மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையால் தடுக்க முடியாது
என்ற தலைப்பின் கீழ் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர் ஏழுமலை தலைமை தாங்கி பேசுகையில், “டாஸ்மாக்கை மூடு என்று அனைத்து கட்சிகளாலும் சொல்ல முடியாது. அதனை மக்கள் அதிகாரம் மட்டும் தான் இரண்டு மாதங்களாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த மூன்றாம் தேதி முதலே பச்சையப்பன் கல்லுரி மாணவர்கள், பு.மா.இ.மு தோழர்கள் மற்றும் மக்கள் அதிகார உறுப்பினர்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டனர். இந்தப் போராட்டத்தை காவல் துறையினர் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்திருப்பிர்கள்
தோழர் ஏழுமலை உரையாற்றும்போது
அதே போல் மேலபாளையூர் கிராமத்தில் தோழர் ராஜு தலைமையில் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராடினர். அவர்கள் மீது கடுமையான அடக்குமுறை பொய் வழக்கு போட்டு பிணையில் விட மறுக்கிறது. அதே நிலைதான் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் நீடிக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் கள்ளச்சாராயத்தை போலிசும், அரசும் தான் விற்பனை செய்தது. இப்போது டாஸ்மாக் என்ற பெயரில் அம்மா அரசே விக்கிறது.
கப்பூரை சேர்ந்த ஒரு பெரியவரிடம் நோட்டிஸ் தரும் போது “எப்பய்யா இந்த சாராயத்தை ஒழிப்பிங்க. எங்கள் ஊரில் முப்பது இளைஞர்கள் செத்து போய்டாங்க” என்று கதறினார். பல உளவு பிரிவு போலீசார் ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்கிறீர்களே, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்திப்பாருங்கள். மீத்தேன் திட்டம், ஜிண்டால் எதிர்ப்பு என பல போராட்டங்களை மக்கள் தானே நடத்தி வருகின்றனர்.
ஊடகங்களுக்கு பேட்டி
மக்கள் போராடினால் அவர்களை ஒடுக்குகிறீர்கள். எனவே நமது பிரச்னையை சாதி மத அடிப்படையில், போலிசு, சட்டம், நிதித்துறை மூலம் தீர்க்க முடியாது மக்களாகிய நாம் தான் போராடி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரமே தீர்வு” என்று கூறி தனது தலைமை உரையை முடித்தார்.
அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தோழர் சோமு பேசுகையில், “இழுத்து மூடு டாஸ்மாக்கை என்று மக்கள் போராட துவங்கி பல நாட்கள் ஆகிறது. எதிர்த்து போராடும் மக்களை மழுங்கடிக்கும் திசைதிருப்பும் செயலை தொடர்ந்து கீழ்த்தரமாக குறுக்கு புத்தியுடன் நடந்துகொள்கிறது அரசு. இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க மட்டும் அல்ல. அனைத்து தமிழ் சமூகமும் எதிர்த்து வருகிறது. ஒரு சிலர் மட்டும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தூபம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் சாராயத்தின் மூலம் மக்களை மழுங்கடிக்கிறார்கள். எனவே உடனடியாக தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்தும் வரை மக்கள் அதிகாரமும் விடுதலை சிறுத்தைகளும் இணைந்து போராடுவோம்” என்று கூறி தனது கண்டன உரையை முடித்தார்.
ஆன்மநேய ஜெய. அண்ணாமலை
அவரைத் தொடர்ந்து வள்ளலார் சன்மார்க்க கழகம் திரு.ஜெய.அண்ணாமலை பேசுகையில் “இன்றைய தினம் மக்கள் அதிகாரத்தின் சார்பாக தமிழகத்தில் ஐந்து இடங்களில் ஆர்பாட்டம் நடக்கிறது. மூடு டாஸ்மாக்கை என்று மக்கள் அதிகாரம் கெஞ்சவில்லை. உரிமையோடு போராடி வருகிறது. மனித ஒழுக்கத்தை வலியுறுத்தி வள்ளலார் சன்மார்க் சங்கமும் போராடி வருகின்றது. டாஸ்மாக்குக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். அந்த அடிப்படையில் தான் நான் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.
உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை தூக்கி எரிய போராடிக்கொண்டிருக்கும் மக்கள் அதிகாரத்தை பாராட்டுகிறேன். டாஸ்மாக் போராட்டம் யாரையும் எதிர்க்கவில்லை, மக்கள் நலம் குறித்துதான் தொடர்ந்து போராடிவருகின்றனர். இவர்களைதான் காவல்துறை ஒடுக்குகிறது. இதனை பொற்கால ஆட்சி என்கிறார்கள். இது பொற்கால ஆட்சி என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாயில்லை?
உடலுக்கு கேடு விளைவிக்கும் சாராயத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் இதுதான் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம். லஞ்சம் ஊழல் இவைகளுக்கு எதிரான அமைப்புதான் மக்கள் அதிகாரம். தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது இங்கு எதற்கும் அனுமதி இல்லை இதையும் எதிர்த்து மக்கள் அதிகாரம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறது இவர்களை எந்த ஒடுக்குமுறையாலும் தடுத்துவிட முடியாது” என்று கூறி தனது உரையை முடித்தார்.
வழக்குரைஞர் சங்கத் தலைவர் தோழர் வேலு குபேந்திரன் மயிலாடுதுறை
வழக்குரைஞர் சங்க தலைவர் தோழர் வேலு குபேந்திரன் மயிலாடுதுறை பேசுகையில், “டாஸ்மாக்கை முட வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை காவல்துறை ரவுடிகள் மாணவர்களை ஒடுக்குகிறது. டாஸ்மாக்கை மூடினால் அரசுக்கு வருமானம் வராது என சொல்கின்றனர். தாதுமணல், கிரானைட் உள்ளிட்டவற்றை முறை படுத்தினாலே நல்ல வருமானம் வரும். அவ்வாறு செய்யாமல் கொள்ளைக்கு ஆதரவாக இருக்கிறது அரசும், போலிசும்.
திரண்டிருந்த மக்கள்
விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராடினால் காவல் துறையை ஏவிவிட்டு ஒடுக்குகிறது. காரணம், தோழிகள் நடத்தும் மிடாஸ் சாராய ஆலையில் வருமானம் குறைந்துவிடும் என்பதால் தான்.
காவல் துறையினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் எங்களுக்கு எதிராக என்ன செய்கிறீர்களோ அதையே நாங்கள் பிரயோகிப்போம், இதுதான் மக்கள் அதிகாரம்.
டாஸ்மாக்குக்கு எதிராக நாங்கள் தான் போராடி வருகிறோம். ஆனால் சில கட்சிகள் இதனை பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று சொல்கிறார்கள். முதலில் அவர்கள் கட்சியில் இருக்கும் தொண்டர்களை குடிக்க விடாமல் தடுக்கட்டும்.
முழக்கமிடும் தோழர்கள்
மதுவிலக்கு கோரி மக்கள் போராடும் போது அதை நேர்மையாக அமுல் படுத்த வேண்டும். இல்லையென்றல் போயஸ் தோட்டத்தை முற்றுகை இடுவோம்.” என கண்டன உரையை முடித்தார்.
தோழர் கலை
இறுதியாக கண்டன உரை ஆற்றிய மக்கள் அதிகாரம் தோழர்.கலை “டாஸ்மாக் எதிரான இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். டாஸ்மாக்கு எதிராக போராடும் அனைத்து ஓட்டுக்கட்சிகளையும் ஒடுக்குகிறது ஜெயா அரசு; உளவுப் பிரிவு போராடும் மாணவர்களை போட்டோ எடுத்து மிரட்டி வருகிறது. ஆனால் மக்கள் போராட்டங்களை போலிசால் ஒடுக்க முடியாது.
மது அரக்கன்
“டாஸ்மாக்கை உடைத்தால் அபராதம் போடுவது, எந்த சட்டத்தில் உள்ளது. சட்டத்தை மீறுவது இந்த அரசுதானே, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை கைதுசெய்த போது அ.தி.மு.க குண்டர்கள் ரௌடித்தனம் செய்ததை காவல் துறை வேடிக்கை பார்த்தது. ஆனால் மக்களின் வாழ்வை பறிக்கும் டாஸ்மாக்கை மூடு என அமைதி வழியில் போராடினால் PPT act, 307 போன்ற கடுமையான பொய் வழக்கு போடுகிறது காவல்துறை. உரிமைக்காக போராடுகின்ற பெரும்பான்மை மக்களை ஒடுக்கி, குடிகாரர்களாக்கி மக்களை ஆளும் அருகதையை ஜெயா அரசு இழந்து விட்டது” என அரசையும், காவல் துறையையும் அம்பலபடுத்தி பேசினார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் மாணவர்கள் இளைஞர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே மது அரக்கன் வேடமணிந்த தோழர்கள், குடி கெடுக்கும் ஜெயா அரசை அம்பலப்படுத்தும் விதமாக மக்கள் கூடும் இடங்களில், குறிப்பாக பெண்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று , “நான் மது அரக்கன் வந்திருக்கேன். உங்கள் தாலியை அறுக்க போறேன். உங்கள் வாழ்வை அழிக்க வந்திருக்கேன்” என ஆக்ரோஷமாக மதுவின் கொடூரத்தை சித்தரிக்கும் வகையில் , மக்களை சிந்திக்க வைக்கும் விதமாக பேசினர்.
இளைஞர்கள், மாணவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் –ல் பதிவு செய்ய போட்டோ எடுத்துக் கொண்டார்கள், பேருந்துகளிலிருந்து இறங்கி வந்து பார்த்தார்கள் மக்கள். கடைவீதி உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் நமது கருத்து பிரச்சாரமாக கொண்டு சேர்க்கப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கையில், அருகில் உள்ள மார்க்கட்டில் உள்ள பூக்கடை வைத்து வியாபாரம் நடத்தும் இரண்டு இளைஞர்களிடம் டாஸ்மாக்கை மூடுவதைப்பற்றி கருத்து கேட்டபோது.
“டாஸ்மாக்கை மூடியே ஆகனும், இதனால என் அப்பாவ இழந்துடேன். தினமும் வருவாரு 200 ரூபாய் வாங்கிட்டு போய் குடிப்பாரு, இப்படி குடிச்சியே செத்துட்டாரு. அவரு குடிக்கலனா இந்த வெய்யிலுல பூக்கடைல வேல செய்வனா?”
முழக்கமிடும் சிறுவர்கள்
அருகில் இருந்த நண்பர், “என் ஃப்ரண்ஸ்லாம் காலேஜ் போறேன்னு சொல்லிட்டு பஸ்டாண்டுல டாஸ்மாக் பார்க்கு மேல இருக்கிற லாட்ஜில் ரூம் போட்டு குடிச்சிடு வீணா போறாங்க. இந்த டாஸ்மாக்கடைய மூடியே ஆகனும் ஏன்னா? அவரோட அப்பா செத்துபோனதுக்கும், என்னுடைய நண்பர்கள் குடிகாரர்கள் ஆகுறதுக்கும் இந்த அரசாங்கம்தான் காரணம். அதனால இந்தப் போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இருக்கும்” என்று அரசு மீது உள்ள கோபத்தை வெளிபடுத்தினார்கள்.
அதே மார்கட்டில் 65 வயது மதிக்க தக்க ஒரு பூக்கடை அம்மாவிடம் கருத்து கேட்கும்போது.
“இந்த அரசுக்கு சாராயக்கடையாலதான் வருமானம் வருதுனா? அது அசிங்கம் இல்லையா? சின்ன சின்ன பசங்கலாம் குடிச்சிட்டு வீணாபோறாங்க. என் புருசனும் குடியாலதான் செத்துபோனாரு… சாராயக் கடைய மூடனும் ….” என்று உழைக்கும் வர்க்கத்தின் கோபத்தை வெளிக்காட்டினார்.
பக்கத்து கடை தொழிலாளி ஒருவர் பேசும்போது “இந்த மார்கெட்ல சராசரியா 300 ரூபாய் சம்பாதிக்கிறாங்க அதுல குவாடர்கும் வாட்டர்கும் இன்னும் ஒரு பெக்குக்கும் சரியா போய்டும். இவங்களோட புள்ளை குட்டிலாம் வறுமைல கஷ்டபட்றாங்க! டாஸ்மாக்க மூடியே ஆகனும்.” என்று கூறினார்.
ஒரு முதியவர், “மக்கள் அதிகாரம் சட்டையும், கேப்பும், எப்போது தருவீங்க? நம்ம ஊரில் இதுபோல கூட்டம் போட்டு பேச வேண்டும்” என்று கேட்டார். அதே வேகத்தில் சிறையில் உள்ள தோழர்கள் பார்க்க சென்றுள்ளார்.
+1 மாணவன் ஒருவர், “எப்போது செயலில் இறங்க வேண்டும் எண்ணையும் கூப்பிடுங்கள், நான் சிறை செல்ல தயார் , பேச அழைத்தால் பேசவும் தயாராக உள்ளேன்.” என்று கூறினான்.
25 வயது இளைஞர், “சாராய ஒழிப்பு பாடல் தயாரித்துள்ளேன் பாட அனுமதித்தால் பாடுவேன்” என்றார்.
“பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மரபணு சிகிச்சையெல்லாம் இருந்தது” என்று புகழ்பெற்ற மருத்துவர்கள் அவையிலே ஒரு முட்டாள் பகிரங்கமாக உளறுகிறார். அதை முட்டாள்தனமென்று பதிவதற்கு கூட இங்கே ஊடகங்களுக்கு தைரியமில்லை. இன்னும் அந்தக் காலத்தில் புஷ்பக் விமானம், அணுகுண்டு, தொலைக்காட்சி அனைத்தும் இருந்ததென மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும் – தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்ஸும் நாடெங்கும் பரப்பி வருகின்றனர்.
21-ம் நூற்றாண்டிலேயே இதுதான் நிலையென்றால்18 – 19-ம் நூற்றாண்டின் சூழல் இன்னும் துயரமானது. உலகம் தோன்றிய வரலாற்றுக்கான முன்னுரையை எழுதிய கலீலியோ, மனிதகுலம் தோன்றி வந்த வரலாற்றை கண்டுபிடித்த டார்வின் இன்னபிற சாதனையாளர்களெல்லாம் இத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்டே நாம் பெருமைப்படும் அரிய கண்டுபிடிப்புகளை தேடிப்பிடித்தனர். அவைதான் இன்றைய வாழ்க்கையின் வசதிகளுக்கு அடிப்படை.
அந்த வசதிகளை இடையறாது அனுபவித்தாலும் அறிவியலை தூற்றுவதில் மதவாதிகள் சலிப்பதில்லை. பாமரர்களுக்கு அறிவியல் போய்ச் சேர்ந்து விட்டால் உலகெங்கிலும் உள்ள மதங்களின் புனிதச் சந்தை ஒரே நாளில் மூடப்பட்டுவிடும்.
அறிவியலை நேரடியாக தடை செய்வது மதங்களென்றாலும், அறிவியலின் அறிவார்ந்த கண்ணோட்டமும், சமூகப் பயன்பாடும் மக்களுக்கு போய்ச் சேரக்கூடாது என்பதில் முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் உறுதியாக இருக்கின்றனர். மக்களை கண்காணிப்பதோ, குண்டு போட்டு அழிப்பதோ இல்லை மெல்லக் கொல்லும் வாழ்வியல் பிரச்சினைகளோ அனைத்திலும் கூட அறிவியலை அவர்கள் கேடாக பயன்படுத்துகிறார்கள்.
நிகழ்காலத்தில் மதங்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடும் கருத்தியல் களத்தில் மட்டுமல்ல, ஏகாதிபத்தியங்களின் சுரண்டலை எதிர்த்து அவர்களது இணைய தளங்களை முடக்கி போடும் நடைமுறை களத்திலும் அறிவியல்தான் மக்களின் ஆயுதம். அத்தகைய உற்சாகத்தை இங்கே தொகுப்பட்டிருக்கும் கட்டுரைகள் தருமென்று நம்புகிறோம்.
7. அமெரிக்கா : சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள்!
8. மைக்ரோசாஃப்டை சுதந்திர மென்பொருள் இயக்கம் வீழ்த்துமா?
9. புராணங்கள், அறிவியல், சமூகம்
10. டார்வின் : உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஓர் அறிமுகம்
பக்கங்கள் : 80 விலை ரூ. 20.00 _______________________
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
சசி பெருமாள் ஏறியிருக்க வேண்டியது செல்போன் கோபுரமல்ல, உயர்நீதிமன்றக் கோபுரம் !
அன்பார்ந்த நண்பர்களே,
சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளியது தமிழக அரசுதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் உயர் நீதிமன்றமும் சேர்ந்துதான் அவரை மரணத்துக்குத் தள்ளியது என்ற உண்மையை யாரேனும் மறுக்க முடியுமா? சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் அவர் போராடினார். “உண்ணாமலைக் கடை டாஸ்மாக்கை அகற்ற வேண்டும்” என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து விட்டது. “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்து” என்றுதான் சசி பெருமாளும் அந்த ஊர் மக்களும் போராடினார்கள்.
தனது உத்தரவு அமலாகவில்லை என்பது நீதிமன்றத்துக்குத் தெரியாதா? தெரியும். விதியை மீறி நெடுஞ்சாலைகள், பள்ளிகள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்பது எல்லா நீதிபதிகளுக்கும் தெரியும். தனக்குத் தேவையென்றால், தானாக முன்வந்து (suo motu) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் ஒரு இடத்தில் கூட அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. இது நீதிமன்றம் தெரிந்தே செய்திருக்கும் குற்றம்.
சசி பெருமாள் உயிர் துறந்த பிறகாவது, தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதா? சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளிய அரசைக் கண்டித்து உயர்நீதிமன்றம் ஒரு வார்த்தையாவது பேசியதா? சசி பெருமாளின் மரணத்துக்குப் பின்னராவது, சட்டவிரோதமான கடைகள் அனைத்தையும் மூடுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதா? எதுவும் இல்லை. அதனால்தான் சொல்கிறோம். நீதிமன்றத்தை நம்பிக் கெட்ட சசி பெருமாள், உயர்நீதிமன்றக் கோபுரத்தின் மீது ஏறியிருந்தால், அவரைச் சாவுக்குத் தள்ளிய குற்றத்தில் உயர் நீதிமன்றம் தமிழக அரசின் கூட்டாளி என்பது அம்பலமாகியிருக்கும்.
♦ ♦ ♦ ♦
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களை கவனித்துப் பாருங்கள். பெண்கள் திரண்டு வந்து கடைகளை மறிக்கிறார்கள், பூட்டுகிறார்கள், சாணி அடிக்கிறார்கள். மாணவர்களும் இளைஞர்களும் மதுப்புட்டிகளை நொறுக்குகிறார்கள். அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தோ, நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோ ஒருக்காலும் நியாயம் கிடைக்காது என்பதுதான் இப்போராட்டங்களின் வாயிலாக மக்கள் கூறும் செய்தி.
இதனைக் கண்ட பிறகாவது நீதிமன்றம் சட்டத்தை அமல் படுத்த முயற்சிக்கிறதா? இல்லை. போராடும் மக்களுக்கு எதிராக, பொதுச்சொத்துக்கு சேதம், கொலை முயற்சி என்று போலீசு போடும் பொய் வழக்குகளை எந்த விதத்திலும் கேள்விக்குள்ளாக்காமல், அநீதி என்று தெரிந்தே அனைவரையும் சிறைக்கு அனுப்புகிறது. எந்தக் கடைகளையெல்லாம் அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதோ அந்தக் கடைகள் போலீசு பாதுகாப்புடன் நடத்தப்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இருக்கட்டும்; உயர் நீதிமன்றம் தான் போட்ட ஆணையை தானே மதிப்பதில்லை. உயர் நீதிமன்றத்துக்கு சுயமரியாதையும் இல்லை, சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கத்தின் மீதும் அதற்கு மரியாதை இல்லை.
“சட்டத்தை மீறும் உரிமை” என்பது சட்டம் ஒழுங்கின் காவலர்கள் என்று கூறப்படும் போலீசுக்கும், சட்டத்தை இயற்றும் அரசுக்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கும் மட்டும்தான் உண்டு. “குடி மக்களுக்கு மட்டும் சட்டத்தை மீறும் உரிமை கிடையாது” என்பதுதான் ‘சட்டத்தின் ஆட்சி’ குறித்து மாட்சிமை தங்கிய நீதி அரசர்கள் கொண்டிருக்கும் கருத்து. இதற்கும் மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கும் ஒரு கான்ஸ்டபிளின் கருத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
பச்சையப்பன் கல்லூரியின் வாசலிலேயே டாஸ்மாக் கடை இருக்கிறது. இந்த சட்ட மீறல் தலைமை நீதிபதிக்கு அதிர்ச்சியூட்டவில்லை. அந்தக் கடை மீது மாணவர்கள் கல்லெறிந்தால் உடனே அவர் அதிர்ச்சியடைகிறார். போராட்டக் களத்தில் கீழே விழுந்து கிடந்த ஒரு மாணவியின் வயிற்றில் ஒரு போலீசு அதிகாரி எட்டி உதைப்பதை தொலைக்காட்சியில் கண்ட அனைவரும் கண்டிக்கின்றனர். “மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று எச்சரித்த தலைமை நீதிபதிக்கு, ‘சட்டத்தைத் தனது காலில் எடுத்துக் கொண்டு’ அந்த போலீசு அதிகாரி நடத்திய தாக்குதல் தவறாகவே தெரியவில்லை.
உயர்நீதிமன்றத்தின் நிலையே இதுவென்றால் மாஜிஸ்டிரேட்டுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? இப்போதெல்லாம் போலீசு காவலுக்கும் நீதிமன்றக் காவலுக்கும் இடையில் எந்த வேறுபாடும் தெரிவதில்லை. கைதியை ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டு வந்து நிறுத்தினாலும், “இபிகோ 12345” என்று இல்லாத சட்டப்பிரிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தாலும் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு கைதிகளை ரிமாண்டுக்கு அனுப்புகிறார்கள் மாஜிஸ்டிரேட்டுகள்.
மாணவர்களுடைய காவல் 15 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படுவதை ஆட்சேபித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக்கூறி, கேஸ் டயரியைப் பரிசீலிக்குமாறு வழக்குரைஞர் கேட்டதற்கு, “போலீசை எதற்கு கேட்கவேண்டும், நானே ரிமாண்டை நீட்டிக்கிறேன்” என்று ஆணவமாகப் பேசுகிறார் கயல்விழி என்ற எழும்பூர் மாஜிஸ்டிரேட். அபத்தமும் உளறலுமாக எழுதப்பட்டிருக்கும் அந்த அம்மையாரின் ரிமாண்டு உத்தரவைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் சிபாரிசு செய்திருக்க வேண்டும். மாறாக, அந்த கேலிக்கூத்தான உத்தரவு “செல்லத்தக்கதே” என்று தீர்ப்பளிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன்.
♦ ♦ ♦ ♦
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வீதியிலும், போலீசு காவலிலும், சிறையிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உளவுத்துறை அதிகாரி ஒருவர் பெண்கள் சிறைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகளை மிரட்டியிருக்கிறார். நீதிமன்றக் காவலில் இக்குற்றங்கள் நடந்திருப்பதால், அந்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று “ஆட்கொணர்வு மனு” போட்டோம். காதல்-கள்ளக்காதல் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களில் சம்மந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து மிகுந்த ஈடுபாட்டுடன் விசாரிக்கும் உயர்நீதிமன்றம், போலீசால் துன்புறுத்தப்பட்ட மாணவ மாணவிகளை மட்டும் அழைத்து விசாரிக்க மறுத்துவிட்டது.
ஆனால் நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வுதான், மதுரை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை வரச்சொல்லி குற்றவாளிகளைப் போல அவமானப்படுத்தியது. இதை எதிர்த்த மதுரை வழக்குரைஞர்கள் “நீதிபதி சி.டி.செல்வம் கிரானைட் மாபியாவிடம் சோரம்போனதையும், சர்வதேச உப்புமா பல்கலைக் கழகத்தில் நீதிபதி தமிழ்வாணன் டாக்டர் பட்டம் பெற்றதையும் அம்பலப்படுத்தி நீதிமன்ற வாசலிலேயே முழக்கமிட்டனர். நீதித்துறை ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி, ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்தனர்.
அரசமைப்புச் சட்டத்தின் விதி 47, “மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324, “தெரிந்தே மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இத்தகைய குற்றங்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை” என்று கூறுகிறது. இவையெல்லாம் நீதிபதிகளுக்குத் தெரியாதவையல்ல. அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை விட, அரசு அதிகாரத்துடனும் ஆளும் கட்சியுடனும் அனுசரித்துப் போவதால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களின் மீதுதான் நீதிபதிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது.
அதனால்தான், “டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவுக்கு தரக்கட்டுப்பாடு இல்லை” என்று ஆதாரங்களுடன் ஒருவர் பொதுநல வழக்கு போட்டால் அதனை அலட்சியப்படுத்துகிறது உயர் நீதிமன்றம். “கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும்” என்று மனுப்போட்டால் அப்படியெல்லாம் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என்கிறார் தலைமை நீதிபதி.
ஆனால், 7 கோடி மக்களுடைய மண்டையின் மீது தலையிடுவதற்கு மட்டும் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதாம். தலைக் கவசத்தைத் திணிப்பதற்கும், அணியத் தவறுகிறவர்களுடைய வாகனங்களைப் பிடுங்குவதற்கும், இந்தத் தீர்ப்பை விமரிசித்த மதுரை வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதற்கும் நீதிபதிகள் தயங்குவதில்லை.
தங்களுடைய நேர்மையின்மையையும் கோழைத்தனத்தையும் கண்டு வழக்குரைஞர்களும் வழக்காடிகளும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள் என்று தெரிந்தும், ஆளும் கட்சியின் நிழலில் ஒண்டிக்கொண்டு, 23 ஆம் புலிகேசியைப் போல கூச்சமே இல்லாமல் கம்பீரமாக வலம் வருகிறார்கள் இந்த நீதியரசர்கள்.
♦ ♦ ♦ ♦
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட “மக்கள் அதிகாரம்” அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு நீதிபதி வைத்தியநாதன் விதித்திருக்கும் நிபந்தனைகள் குற்றவியல் நீதி வழங்கு நெறிகளுக்கே (criminal jurisprudence) எதிரானவை. பிணை பெறுவதற்கு மேலப்பாளையூர் விவசாயிகள் 10,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும், விருத்தாசலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் 50,000 ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும், இந்தத் தொகையை புகார்தாரரான டாஸ்மாக் நிர்வாகத்திடம் இப்போதே கொடுத்துவிட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி வைத்தியநாதன்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளிதானா என்பதும், இழப்பு என கூறப்படும் தொகை உண்மைதானா என்பதும் விசாரைணக்குப் பின்னர் தீர்ப்பில்தான் தெரியவரும். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்காண்டு சிறையும், 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பத்து ரூபாய் கூட டெபாசிட் விதிக்காமல் பிணை தருகிறார் தலைமை நீதிபதி தத்து. 20,000 கோடி வரி ஏய்ப்பு செய்த நோக்கியா நிறுவனம் வெறும் 200 கோடியை டெபாசிட் செய்து விட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை வேலைநீக்கம் செய்து ஆலையை மூடுவதற்குத் தோதாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.
ஆனால் சாராய பாட்டிலை உடைத்த குற்றம் நிரூபிக்கப் படுவதற்கு முன்னரே, அட்வான்சாக 50,000 ரூபாய் அபராதம் விதித்து ஒரு மாணவனுக்கு நீதி வழங்கப்படுகிறது. இது மனுநீதி அல்லாமல் வேறென்ன?
♦ ♦ ♦ ♦
பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசார், சத்தியமூர்த்தி பவன் மீது அதிமுக குண்டர்கள் கல்வீச்சு நடத்தும்போது காவல் நிற்கிறார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக நடக்கும் காலித்தனங்களை முன்னாள் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தலைமையேற்று நடத்துகிறார். அண்ணா சாலையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மறிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் காங்கிரசு அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் “அறப்போராட்டம்” என்று வருணிக்கிறார் முதலமைச்சர். அது தலைமை நீதிபதியின் காதில் விழவில்லை. “சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று மாணவர்களை எச்சரித்த தலைமை நீதிபதியின் காதுகளில், ‘சட்டத்தை வாயில் எடுத்துக் கொண்டு’ அதிமுக காலிகள் பொழியும் வசைமாரியும் விழவில்லை.
காங்கிரசு தலைவர் இளங்கோவனுக்கு எதிராக வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட ஒரு பொய்வழக்கில், அவரை மதுரையில் தங்கி கையெழுத்துப் போடச்சொல்கிறார் நீதிபதி வைத்தியநாதன். அங்கே போலீசு பாதுகாப்புடன் அவர் மீது தாக்குதல் நடக்கிறது. அதனைக் கண்டிக்காத நீதிபதி வைத்தியநாதன், “அடக்கமாக நடந்துகொள்ளுமாறு” இளங்கோவனுக்கு அறிவுரை கூறுகிறார்.
முதல்வரைப் பற்றி இளங்கோவன் பேசிய வார்த்தைகள் அதிமுகவினரிடம் அறச்சீற்றத்தை தோற்றுவித்திருக்கும் என்ற காரணத்தினால் உயர் நீதிமன்றம் அடக்கி வாசிப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். குன்ஹாவின் தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுக குண்டர்கள் அரங்கேற்றிய ரவுடித்தனத்துக்கும், நீதிபதி குன்ஹாவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும் எதிராக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஹெல்மெட் விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுவிட்டதாகத் துடிக்கும் நீதிபதிகள், ‘மதிப்பு’ என்ற சொல்லின் பொருளை ஆங்கில அகராதியைப் படித்தாவது புரிந்து கொள்வது நல்லது.
♦ ♦ ♦ ♦
அதிமுகவினர் அண்ணாசாலையை மறித்து வெறியாட்டம் போடுவதை கண்டுகொள்ளாத உயர்நீதிமன்றம், தே.மு.தி.க சாலையோரமாக நின்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமம் குறித்து ஆராய்ச்சி நடத்துகிறது. விசாரணையை கடைசி நேரம் வரை இழுத்தடித்து போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீசின் நோக்கத்தை நிறைவேற்றித் தருகிறது.
சட்டவிரோதமான டாஸ்மாக் கடைகளை மூடத் துப்பில்லாத உயர்நீதிமன்றம், நெய்வேலி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போராட்டத்தை ‘சட்டவிரோதம்’ என்று தீர்ப்பளிக்கிறது. ஸ்ரீரங்கம், ஆர்.கே நகர் இடைத்தேர்தல்கள் முதல் பச்சையப்பன் கல்லூரி வாயில் வரையில் எல்லா இடங்களிலும் அதிமுக வினரின் கிரிமினல் குற்றங்களும் போலீசின் அத்துமீறல்களும் தொலைக்காட்சி காமெராக்களின் முன் துணிச்சலாக அரங்கேற்றப்படுகின்றன. அனைத்தையும் மவுனமாக அங்கீகரிக்கிறது உயர்நீதிமன்றம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால், உயர்நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுக மகளிர் அணி அரை நிர்வாண நடனம் நடத்தியது. இன்று உயர்நீதிமன்றமே அப்படி நடனமாடுவதைக் காண்கிறோம்.
ஆற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளை வழக்குகளைக் கையாண்ட நீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார்கள். “இந்த தீர்ப்புகள் பற்றி சகாயம் குழு பரிசீலிக்க வேண்டும்” என்று முன்னாள் நீதிபதி சந்துரு நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதிய பின்னரும் நீதிபதிகள் யாருக்கும் கோபம் வந்ததாகத் தெரியவில்லை. மாறாக, “முழுதும் நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு” என்று வெளிப்படையாகவே இறங்கிவிட்டார்கள்.
மதுரையில் கடந்த மார்ச் மாதம் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ராஜா சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். ஆகஸ்டு மாதம் மதுரைக்கு வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத்துறையே ஒதுக்கப்படுகிறது. வைகுந்தராசனின் கனிம வளக்கொள்ளை தொடர்பாக பேடி குழு அளித்த பரிந்துரையை அப்படியே நிராகரித்து, வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். 9 மாதங்களாக கனிமவளத்துறை என்ற ஒரு துறையை ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே ஒதுக்கித் தந்திருப்பவர், சட்டத்தின் ஆட்சி பற்றி பெரிதும் கவலைப்படும் தலைமை நீதிபதிதான் என்பதை சொல்லத்தேவையில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜனுக்கு வழக்கறிஞராக இருந்த சோமையாஜி, இன்று அரசின் தலைமை வழக்கறிஞராகி விட்டார். ஜெயலலிதாவின் வருமானவரி வழக்கில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த நீதிபதி தட்சிணாமூர்த்திக்கும், விசுவாச உளவுத்துறை அதிகாரி ராமானுஜத்துக்கும் விதிகளை மீறி தகவல் ஆணையர் பதவி வழங்கப்படுகிறது. பாட்டில்கள் நொறுங்கும் சத்தம் கேட்டவுடன், சட்டத்தின் ஆட்சியே நொறுங்கி விட்டதாகத் துடித்துப்போகும் உயர்நீதிமன்றம், இவற்றுக்கெல்லாம் மவுனம் காக்கிறது.
♦ ♦ ♦ ♦
உயர்நீதிமன்றத்தின் ‘ஊழல் நீதிபதிகள்’ என்று அறியப்படுவோர், கனிமவளக் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் முதலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்களது தீர்ப்பை விலை பேசி விற்கிறார்கள். ‘நேர்மையான நீதிபதிகள்’ என்று கூறிக் கொள்பவர்களோ, சதாசிவத்தையும், சம்பத்தையும் போல தங்களையே நல்ல விலைக்கு விற்றுக்கொள்ள போயஸ் தோட்டத்திடம் தவமிருக்கிறார்கள்.
ஒரு கீழ்நிலை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது அது அந்தத் தனிநபரின் குற்றமாக முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி லஞ்சம் வாங்கிக் கொண்டு கனிமவளக் கொள்ளையை நியாயப்படுத்தி தீர்ப்பெழுதும்போது, குற்றத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டு விடுகிறது. அந்தத் தீர்ப்பைக் காட்டி சட்டபூர்வமாகவே கொள்ளையிடும் வாய்ப்பு எல்லோருக்கும் திறந்து விடப்படுகிறது.
ஏற்கெனவே, போராடும் மக்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பொய் வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்புகிறது போலீசு. குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யாமல், விசாரணைக் கைதியாக சிறை வைத்தே தண்டனை வழங்கும் போலீசின் இந்த சதிக்கு உடந்தையாக இருந்து வரும் நீதிமன்றம், இப்போது மக்களை ஒடுக்குவதற்கு போலீசுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறது. நீதிபதி வைத்தியநாதனின் தீர்ப்பு விசாரணையே இல்லாமல் தண்டனை விதிக்கும் “அட்வான்ஸ் அபராதம்” என்ற கொலைக்கருவியை போலீசின் கையில் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் காவலன் என்று கூறிக்கொள்ளும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக தமிழ் மண்ணையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சூறையாடுவதுடன், வழக்குரைஞர் தொழிலுக்குரிய மாண்பையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீதிபதிகள் நம் மீது திணிக்கும் இந்த அவமதிப்பை நாம் சகித்துக் கொள்ளப் போகிறோமா?
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு. 150-E ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை -20 கை பேசி : 94434 71003
மக்கள் அதிகாரம் தென் மாவட்டங்களின் சார்பாக மதுரையில் நடைபெற்ற மூடு டாஸ்மாக்கை ஆர்ப்பாட்டம்
மக்கள் அதிகாரம் தென் மாவட்டங்களின் சார்பாக மதுரையில் நடைபெற்ற மூடு டாஸ்மாக்கை மற்றும் காவல்துறை ஒடுக்கு முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், புதிய தமிழகம், தமிழ்ப்புலிகள் ஆகிய கட்சிகளும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு, மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சங்கம், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
டாஸ்மாக்கை திறந்து சாராயத்தை விற்க 12 மணி நேரம் சட்டவிரோதமாக அனுமதி
சுமார் 500 பேர் வரை கூடுகிற கூட்டங்களுக்கு மதுரையில் 3 இடங்களில் மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஓரளவுக்கு மக்கள் கூடுகிற இடங்களைக் கேட்டபோது அந்த இடங்களைப் போலீஸ் தர மறுத்து விட்டது. காரணம் அந்த இடங்களில் மூன்று சாராயக்கடைகள் இருக்கின்றனவாம். அது குடிமகன்களுக்கு இடையூறாக இருக்குமாம். அதனால் அங்கு அனுமதி இல்லை. ஆள் நடமாட்டம் இல்லாத அண்ணாநகரில் அனுமதி. ஒலிபெருக்கியில் ஒலி அளவு கூட இவ்வளவு தான் இருக்கவேண்டும் என்ற கண்டிசனுடன்.
முந்தின நாள் இரவு 10 மணிக்குத்தான் அனுமதி கொடுத்தது. அதுவும் 11 முதல் 12.30 மணிவரை ஒன்றரை மணி நேரம் மட்டும் தான் அனுமதி. டாஸ்மாக்கை திறந்து சாராயத்தை விற்க 12 மணி நேரம் சட்டவிரோதமாக அனுமதி. குடித்துச் சாக 24 மணிநேரமும் எந்த இடத்திலும் அனுமதி. அதை எதிர்த்தால் ஒன்றரை மணி நேரம் மட்டும் அனுமதி.
கடந்த ஒரு வாரமாக மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் வீடுகளுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் உளவுத் துறையினர் சென்று விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்துள்ளனர்
பேரணி, ஆர்ப்பாட்டம் தான் எங்களது திட்டம் என்று ஊடகங்களைக் கூட்டித் தெளிவாகச் சொல்லிவிட்ட போதும் வேண்டுமென்றே பீதியூட்டும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது காவல்துறை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலரைக் கைது செய்துள்ளது. ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை அணிதிரளவிடாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை.
மதுரை , ஒத்தக்கடைப் பகுதியில் பட்டறைத் தொழிலாளர்களைத் தூங்கவிடாமல் டார்ச்சர் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இராப் பகலாகக் காவல் காத்து மானம் கெட்டது போலீசு. மக்களிடம் நிதி வசூல் செய்யவிடாமல் தடுத்தது.
காலை 9.30 மணியளவில் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வந்த போது 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் திரண்டு இருந்தனர். அக்கம் பக்கத்து மக்களுக்கு ஏன் என்றே புரியவில்லை. பின்னர்தான் மக்களுக்குத் தெரிந்தது சாராயக்கடைகளைக் காப்பாற்ற. அதை எதிர்க்கிறவர்களை மிரட்டத்தான் இந்தப் படை என்று.
தேனி மாவட்டத்திலிருந்து 3 வேன்களில் சுமார் 100 பேர் வந்தனர். இதை மோப்பம் பிடித்த ”காவள்”துறை, வண்டிகளின் பதிவு எண்களைத் தெரிந்து கொண்டு ஆண்டிபட்டி கணவாய் சோதனைச் சாவடிக்குத் தகவல் கொடுத்து வேன்களை மடக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதைத் தெரிந்து கொண்ட மாவட்டச் செயலாளர் தோழர் மோகன் மாற்று வழியாக வந்து காவல் முகத்தில் கரி பூசினார்.
மூடு டாஸ்மாக்கை! மக்கள் போராட்டங்களை அடக்கு முறையால் தடுக்க முடியாது!பார்ப்பன பாசிஸ்டு ஜெயா அரசின் அவசரநிலை காட்டாட்சியை முறியடிப்போம் என்கிற முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்க தலைமையேற்ற தோழர் வாஞ்சிநாதன் பேசியது:-
“டாஸ்மாக்கை மூடு என்று கோரி போராடுகின்ற மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் வீடுகளுக்குச் சென்று காவல்துறை பெண்களை அச்சுறுத்துகிறது . ரேசன் கார்டை கேட்பது, புகைப்படம் எடுப்பது, புகைப்படத்தை வைத்துக்கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் போய் இவரைத் தெரியுமா? என்று தீவிரவாதிகளை, ரவுடிகளைத் தேடுவது போலத் தேடுவது என்று சட்ட விரோதமாக காவல் துறை அச்சுறுத்துகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை அளித்த நீதிபதி குன்காவை எதிர்த்து தமிழகத்தை அண்ணா திமுக காலிகள் ரணகளமாக்கினர். இதே காவல் துறை வேடிக்கை பார்த்தது. தற்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராகத் தூண்டிவிடப்பட்ட குண்டர் படை கேவலமாக வெறியாட்டம் போட்டது. அதையும் வேடிக்கை பார்த்தது இந்தக் காவல்துறை.
சாராயக்கடையை எதிர்த்துப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினரைக் காட்டு மிரண்டித்தனமாகத் தாக்கி சிறையில் தள்ளியது போலீசு. தமிழ் நாட்டிலே அறிவிக்கப்படாத அவசர நிலை காட்டாட்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது . உளவுத் துறையின் சொல்படி அமைதி வழியில் போராடுகின்ற தே.மு.தி.க போன்ற கட்சிகளையும் வன்முறையை ஏவிஒடுக்குகிறது அரசு. எனவே டாஸ்மாக்கை எதிர்க்கிற அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் அ.தி.மு.க அரசின் அராஜகத்தை முறியடிக்க முடியும்.”
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மு.திருநாவுக்கரசு
“தமிழகத்தில் அன்றாடம் வெட்டுக்குத்து, கொள்ளை, கொலை, திருட்டு, பாலியல் வல்லுறவு என்று எத்தனையோ குற்றங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. அவற்றை எல்லாம் தடுக்க வேண்டிய போலீசு அதற்கு மூல காரணமாய் இருக்கிற டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடுகிற சமூகப் போராளிகளை ஒடுக்கத் திரண்டு வந்திருக்கிறது.
மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு கைது செய்யப்பட்டு 1 மாதமாகப் பிணை மறுக்கப்பட்டு சிறையில் உள்ளார். இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கிறது கோர்ட். ஆனால் ஜெ சொத்துக் குவிப்பு வழக்கில் பொது சொத்துக்கு பலகோடி சேதம் விளைவித்த அ.தி.மு.க.வினர் மீது சின்ன நடவடிக்கையாவது உண்டா? டாஸ்மாக்கின் தீமைகளை விளக்கி துண்டு பிரசுரம் தருபவர்களைக் காவல்துறை கைது செய்கிறது.
டாஸ்மாக்கை மூடும் வரை தொடர்ந்து போராடும் உங்களோடு துணை நிற்போம்.”
பேச்சாளர்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
திமுக மாநில பொதுக்குழு உறப்பினர் வழக்கறிஞர் கருணாநிதி பேசும்போது “சாராயக்கடைக்குக் காவல் நிற்பது காவல்துறைக்கு தலை குனிவுதான். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற உங்களது நியாயமான கோரிக்கை இன்னும் 6 மாதத்தில் நிறைவேறும். தீச்சட்டி, காவடி தூக்க நேரம் ஒதுக்கும் காவல்துறை சாராயத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய குறைந்த நேரம் ஒதுக்குகிறது . அரசுக்கு ஜால்ரா போடுவதை காவல்துறை விட்டுவிடவேண்டும்” என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் நரசிம்மன் பேசியது.
“பெண்கள் தாலி அறுத்தாலும் கவலை இல்லை; வருவாய் வருகிறது என்று டாஸ்மாக்கை அரசு மூட மறுக்கிறது. சசி பெருமாள் சாவுக்கு அரசே காரணம். அவரைக் காப்பாற்ற காவல்துறை, அரசு மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பெரும்பான்மை மக்கள் டாஸ்மாக் வேண்டாம் என்றால் மூடிவிட வேண்டியது தானே!
டாஸ்மாக்கை காக்கின்ற அரசை மக்கள் தூக்கி எறிவார்கள். மக்கள் அதிகாரம் முன்கை எடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து போராடும் .”
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சசி குமார்
“அறிஞர் அண்ணா மது விலக்கில் உறுதியாக இருந்தார். தாய்மார்களின் கண்ணீருக்குக் காரணமாகி விடக்கூடாது என்றார். தமிழ் நாடு எழுத்தறிவில் முதலிடத்தில் உள்ளது என்றால் பெருமைப்படலாம். ஆனால் மது விற்பனையில் முதலிடம் வகிப்பது பெருமைக்குரியதா?”
திராவிடர் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் வேங்கை மாறன்
“கூடங்குளம் அணு உலைக்குப்பின் டாஸ்மாக்கை எதிர்த்து மக்கள் ஒன்று திரண்டு போராடுகிறார்கள். அரசு விற்றால் நல்ல சாராயம். மற்றவன் விற்றால் கள்ள சாராயமா? குடிக்கிறவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிற போலீசு இனி குடிக்காதவனை ஏன் குடிக்கவில்லை என்று கேட்பார்கள் போல் தெரிகிறது. போலீஸ் நிலையங்களின் ஒரு ஓரத்தில் சாராயக் கடையையும் வைத்துவிட்டால் வேலை சுலபமாகிவிடும்.”
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ்
“வள்ளி திருமண நாடகம் நடத்துவதற்கு விடிய விடிய நேரம் ஒதுக்கும் போலீஸ் மக்கள் நலன் காக்கும் போராட்டத்துக்கு நேரம் வரையறுக்கிறது. அதிகாரம் மக்களுக்கு என்று சுபாஷ் சந்திர போஸ் சொன்னார். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஒரு குடிமகன் கைக்குழந்தையுடன் சாராயக் கடைக்குப் போய் குடித்து விட்டு வீட்டுக்குப் போக வழி தெரியாமல் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் வீட்டைக் கண்டு பிடித்துக் கொடுக்கச் சொல்லிருக்கிறான். போலீஸ் வீட்டைக் கண்டுபிடித்துக் கொண்டுபோய் விட்டிருக்கிறது .
ஒரு புள்ளி விவரப்படி தமிழ் நாட்டில் மூன்று பேரில் ஒருவன் குடிகாரன். 10 லட்சம் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். ஆனால் கடைகளை மூட அரசு மறுக்கிறது.”
மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்பு குழு அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் அ.சீனிவாசன்
“ஒரு தெருவில் 10 சாராயக்கடை இருந்தால் மக்கள் மக்களாக இருக்க முடியாது. மக்களைக் குடிக்க வைத்துதானா சிம்மாசனத்தில் அமர வேண்டும் . மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு மக்களைக் காக்கும் அருகதை இல்லை.
ஒரு தாய் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறி தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் குழந்தை பசியால் இறந்து விட்டது. அந்தத் தாய் மீது வழக்குப்போடுகிறது காவல் துறை . யார் காரணம்? அரசின் மீது அல்லவா வழக்குப் போடவேண்டும். பள்ளி, கல்லூரி அருகே சாராயக்கடை உள்ளது. மாணவர்கள் குடிக்கிறார்கள். வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் வகுப்பில் உள்ள பெஞ்சுக்களை உடைத்து கடையில் போட்டு காசு வாங்கி குடித்து இருக்கிறார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கும் அரசு பள்ளி அருகே சாராயக் கடையைத் திறக்கிறது. ஆசிரியர்கள் குடித்து விட்டுப் பள்ளிக்கு வருகிறார்கள்
குடிக்கக்கூடாது என்று சொல்வது குற்றமா? போராடும் மாணவிகளின் கைகளைப் பிடித்து இழுக்கிறார் ஒரு போலீசு. உங்களுடைய வீட்டுப் பெண்ணை இப்படிச் செய்தால் ஒத்துக்கொள்வீர்களா? உங்கள் வீட்டில் இப்படி நடக்காதா? படித்துமக்களுக்குத் தொண்டு செய்கிறவர்களை உருவாக்காமல் குடித்துக் கும்மாளம் போடும் கூட்டத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் டாஸ்மாக்கை உடனே மூடவில்லை என்றால் குடியிலிருந்து யாரும் தப்ப முடியாது.”
மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ஏ.கே. ராமசாமி
“மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு என்று சொல்லி அதை ஏன் விற்கிறாய் ? டாஸ்மாக்கில் வருமானம் கிடைக்கிறது என்கிறது அரசு. குடிப்பவர்கள் யார்?
எல்லா அதிகாரிகளும் குடிக்கிறார்கள். நீதிபதிகளும் குடிக்கிறார்கள், லஞ்சம் வாங்குகிறார்கள், டாஸ்மாக்கில் தஞ்சம் அடைகிறார்கள்.
டாஸ்மாக்கை மூடச் சொல்லத் துப்பில்லாத நீதிமன்றம் ஹெல்மெட்டை போடச் சொல்கிறது. அதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டுள்ளது. மது பாட்டிலை வாங்கியதுமே குடித்து விடவேண்டும். உடனே பாருக்குள் போய் விடவேண்டும் . இடுப்பில் வைத்திருந்தால் குற்றம். அப்படியானால் குடித்து சாவதற்கு காரணமான அரசு மீது கொலை வழக்குப் போட வேண்டும் அல்லவா?”
சேவுகராஜா தே.மு.தி.க. வழக்கறிஞர்
“நல்ல விசயங்களைப் போராடிப் பெறுகிற அவல நிலை இங்கே உள்ளது. டாஸ்மாக் வருமானத்தில் மக்களுக்கு இலவசங்கள் தரப்படுவதாகச் சொல்கிறார்கள். அந்தப் பொருட்களை எல்லாம் பயன் படுத்த முடியாமல் குப்பையில் வீசுகிறார்கள் மக்கள். பிச்சைக்காரர்களை ஒழிக்கச் சட்டம் இருக்கிறது. ஆனால் குடிகாரர்களை , சாராயக்கடைளை ஒழிக்கச் சட்டம் இல்லை.”
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன்
“மூடு டாஸ்மாக்கை இயக்கம் கடந்த 2 மாதங்களாக நடைபெறுகிறது. சசி பெருமாள் சாவையெட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 1000 பேர் திரண்டு போராடினார்கள். ஒரு மாதமாகப் புழல் சிறையில் சித்திரவதை கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். பெண்கள் சிறைக்குள் புகுந்து சொல்லக் கூசும் வார்த்தைகளால் மிரட்டுகிறார்கள் மாணவிகளை.
இந்த அரசுக் கட்டமைப்பு நம்மை ஆளும் அருகதை இழந்து விட்டது. சட்டசபையில் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. எதற்கு சட்டசபை? உடனே அதை மூடு.”
தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் நாகை. திருவள்ளுவன்
“மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கம் எப்போது வந்ததோ அப்போதே அடக்குமுறை வந்துவிட்டது.
தேர்தல் நேரங்களில் நங்கள் மக்களின் ஊழியர்கள் என்கிறார்கள். ஆனால் மக்களுக்கு அதிகாரம் என்று சொன்னால் அடக்குகிறார்கள். கொலை செய்தவன், கற்பழித்தவன் சுதந்திரமாக நடமாடுகிறான், சாராயக்கடையை எதிர்த்தவர்கள் சிறையில் உள்ளனர். ஜெயா குற்றவாளி. முதல்வராக இருக்கிறார்.
குடிகாரர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழகம் முதலிடம். காவல்துறை போஸ்டர் கிழிப்பது, சாராயக்கடைக்குக் காவல் இருப்பது போன்ற கேவலம் இங்கே தான் நடைபெறுகிறது. இதைத்தான் வளர்ச்சியடைந்த மாநிலம் என்கிறார்கள். ஆனால் தமிழகம் குடிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றது.
மக்கள் நலனுக்கு எதிராக இருக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிதான். ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன் போல மக்கள் அடிமைகளாக இருக்க மாட்டார்கள். மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்று கனவு காண வேண்டாம். டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் தான் கருணாநிதியை மதுவிலக்கைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது, மக்கள் போராட்டம் ஜெயாவையும் மாற்றும்.”
புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் கண்டன உரையாற்றினார். தி.மு.க வழக்கறிஞர் கண்ணன், திராவிடர் கழக மாவட்டச் செயலளர் அழகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர் ராமலிங்கம் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
உளவுத் துறையின் பல பிரிவுகளில் இருந்து பலர் வீடியோ காமிராக்களைத் தூக்கிக்கொண்டு வந்து கல்யாண வீட்டில் கவரேஜ் செய்வதப் போல கண்னும் கருத்துமாகப் படம் பிடித்தனர், ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்களை. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் அதைத் தடுத்து ஒதுக்கினர்.
இதுவெல்லாம் போதாதென்று கேமரா வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தி உள்ளிருந்து கம்ப்பியூட்டர் மூலம் இயக்கி வீடியோ எடுத்தது ஒளிப்பதிவு காவல் பிரிவு. ஓ ! இப்படித்தான் காவல்துறை நவீனமானதோ? இதற்கு மேலும் காவல்துறையை நவீனப் படுத்த ஜெ. அரசு துடிக்கிறது. மத்திய அரசிடம் நிதி கேட்கிறது.
ஜெயாவை எதிர்த்து மூச்சு, சூச்சூ விடுகிறவர்களைக் கூட கண்டுபிடிப்பதற்கு வீட்டுக்கு ஒரு கேமரா, பாத் ரூம் வரை வைத்துவிடுவார் போல் தெரிகிறது. அதற்கும் டாஸ்மாக்கை நம்பலாமாயிருக்கும்!!
தகவல்:
மக்கள் அதிகாரம் மதுரை
தொடர்புக்கு:8508935536
3. தருமபுரி
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31 என்று கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சாரம், போராட்டங்கள் என்று மக்கள் அதிகாரம் அடுத்தடுத்து போராடி வந்தது. ஆகஸ்ட் 31 அன்று தருமபுரியில், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கோவை பகுதிகள் இணைந்து தருமபுரியில் நடத்தினர்.
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும் கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31
கெடுவிதிக்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 31-ல் தருமபுரியில் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசு டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பாக நின்றனர். காலை எட்டு மணிக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் நூற்றுக்கும் அதிகமான போலீசை நிறுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வரும் நான்கு வழிதடங்களிலும் தடுப்பு அரண்களை போட்டு ஆர்ப்பாட்டத்திற்கு பொது மக்கள் வராது இருக்க பீதி ஏற்படுத்தும் வேலையை செய்தனர்.
காலை 8 மணிக்கே தோழர்களை அழைத்து பல நிபந்தனைகளை விதித்தனர். தோழர்கள் 10 மணிக்கு மைக்செட் கொண்டு சென்றனர். மைக்செட்டை வாகனத்தை விட்டு இறக்க விடவில்லை; 4 மணிக்கு பிறகே இறக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
மறுபுறம் தோழர்கள் ஆர்ப்பாட்டத்திற்கான பிரச்சார வேலைகள் செய்ய தொடங்கினர். தோழர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் வேறுவழியில்லாமல் மைக்செட் வைத்துகொள்ள அனுமதித்தனர்.
கோவை, ஈரோடு, கரூர் தோழர்கள் மதியம் ஒரு மணிக்கு தருமபுரி வந்து சுமார் 2 மணிநேரம் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். சேலம் சாலையில் இருபுறத்திலும் 35 பேர் வீதம் பிரச்சாரம் செய்து நிதி திரட்டினர். அவர்கள் அனைவரும் மக்கள் அதிகாரம் டி சார்ட் தொப்பி அணிந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். இது மக்களை வெகுவாக கவர்ந்து பிரச்சாரத்தை திரும்பி பார்க்கும் வகையில் ஊர்வலம் போலவும், அமைப்பை பிரச்சாரம் செய்யும் வகையிலும், நிதிதேவையை ஈடுகட்டும் வகையிலும் இருந்தது.
அங்கு ஈ மொய்ததை போல மொய்த்த உளவு போலீசுகாரர்கள் காட்டி கொடுத்ததின் பேரில் போலீஸ் வந்தது. “கும்பலாக போக யார் அனுமதி கொடுத்தது தனித்தனியாக போங்கள்” என்று தடுத்தனர்.
“நாங்கள் கும்பலாக போக யார் அனுமதி தரவேண்டும். இது எங்கள் பேச்சுரிமை” என்று பதில் அளித்து பிரச்சாரத்தை தொடர்ந்தனர், தோழர்கள்.
திட்டமிட்டபடி 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர். பெருந்திரளான மக்கள் சுற்றி நின்று ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர்.
பத்து அடி உயரத்தில் மக்கள் அதிகாரம் பெயர் பொறித்த பேனரை பிடித்து கொண்டும், கையில் முழக்க அட்டை , கொடிகளை பிடித்துக் கொண்டும் நின்றது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.
பேச்சாளர்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலர் ராமன் (எ) எழிலன், திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் கிருஷ்ணன், தேசிய முற்போக்கு திராவிடர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிஆறுமுகம், பென்னாகரம் வழக்கறிஞர் சங்க பொருளாளர் டி.கே தேவேந்திரன், வ.உ.சி கட்டுமான தொழில்சங்க மாநில தலைவர் சிவாஜி, மக்கள் அதிகாரத்தின் கரூர் பகுதி தோழர் ராமசாமி, சென்னை பகுதி தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் தோழர் முத்துகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு இடையிலேயே மூடு டாஸ்மாக்கை மூடு என்ற மக்கள் கலை இலக்கியக் கழக பாடலை சிறுவர்கள் பாடியது, அடுத்து பெண்கள் முழக்கமிட்டது அனைவரையும் கவர்ந்தது.
கண்டன உரையாற்றியவர்கள் பலரும் மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழர்கள் செயல்பாடு பற்றி வாழ்த்தி பேசினர். டாஸ்மாக் வருமானத்தில் ஆட்சி நடத்தும் அவலநிலையை அம்பலப்படுத்தியும், பல போராட்டங்கள் செய்தும் அரசு கண்டுகொள்ளாததை பற்றியும் அம்பலப்படுத்தி பேசினர்.
குறிப்பாக தோழர் கிருஷ்ணன் பேசும் போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இருபத்தொரு வயது இளைஞன், “மச்சி மண்டபத்தில் சரக்கு ரெடியா? இல்லன்னா நான் இங்கியே இறங்கிடுவேன்” என்று மது அருந்துவதை பற்றி சர்வசாதாரணமாக பேசியதை குறிப்பிட்டார். “இந்த சமூகம் எங்கே போய்கொண்டு இருக்கிறது” என்று வேதனைப் பட்ட அவர், “ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை பார்த்ததும் புது தெம்பு வருகிறது” என்று குறிப்பிட்டார்.
நன்நெறி நல்கல் வேந்தர்க்கு கடனே என்று புறநானூற்று பாடலை குறிப்பிட்டு இந்த அரசு கடமையை செய்யாமல் அதற்கு எதிரான வேலைகள் செய்வதை அம்பலபடுத்தி பேசினார்.
கண்டன உரையாற்றியவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்போடு இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று கூறினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மக்களை ஆள அருகதை இழந்தது இந்த அரசு கட்டமைப்பை தகர்த்து விட்டு மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதே டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்று மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர்.
இவண்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு தருமபுரி தொடர்புக்கு 81485 73417
ஒசூர் அசோக் லேலாண்டின் முறைகேட்டை எதிர்த்த SMP தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
மோடி அரசு மத்தியில் தொழிலாளர் துறை சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை நவீனக் கொத்தடிமைகளாக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளோ அந்த சட்ட திருத்தங்கள் அமுலுக்கு வரும் வரை காத்திருக்கவில்லை என்பதைத்தான் அசோக் லேலாண்டில் நடக்கும் மாற்றங்கள் அடக்குமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன.
தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சாரம்
லேலாண்டின் நிர்வாகம் தொழிலாளர்களை சுரண்டுவதில் ஏற்கனவே பின்பற்றி வந்த நடைமுறை, மரபு, நிலையாணை விதிகள், தொழிற்சங்க முறைகள், விதிகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டது. பட்டவர்த்தனமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது திணிக்கிறது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் அவ்வப்போது தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சாரம் செய்து வருகிறது.
அது தொடர்பான பிரசுரத்தின் உள்ளடக்கம்
ஒசூர் அசோக் லேலாண்டின் முறைகேட்டை எதிர்த்த SMP தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
அசோக் லேலாண்டு யூனிட் 2-ல் எஸ்.எம்.பி. லைனில் உள்ள தொழிலாளர்கள் ஐ.ஆர். அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு லைனில் கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று சொல்லி, வேறு இடங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து போடுகிறது ஆலை நிர்வாகம். ஆனால், அங்கு நீண்ட நாட்களாக “ஆப்சென்ட் கவரேஜ்” ஆக பணிந்து புரிந்து வருகின்ற தொழிலாளர்களைப் போட வேண்டும் என்பதுதான் நடைமுறை. இதனை மீறி, நிர்வாகம் முறைகேடான முறையில், தொழிலாளர் ஒற்றுமையைக் கெடுக்கும் வகையில் வேறு இடங்களிலிருந்து தொழிலாளர்களைப் போடுகிறது.
இதனை எதிர்த்துதான் எஸ்.எம்.பி. லைனில் உள்ள 4 தொழிலாளர்கள் ஐ.ஆர். அலுவலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு நாம் துணைநிற்க வேண்டும். லேலாண்டின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் களப்போராளிகளாக மாற வேண்டும்” என பு.ஜ.தொ.மு. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. லேலாண்டின் அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்வுபெறும் எந்த ஒரு தொழிலாளியும் போராடித்தான் ஆக வேண்டும் என்பதை இந்தப் போராட்டம் நமக்கு உணர்த்துகிறது.
ஏன் இவ்வளவு அழுத்தமாக இதனை சொல்கிறோம் என்றால், லேலாண்டு என்பது நவீன நரகம். உற்பத்தி சாலை என்பதைவிட இது ஒரு கொலைக் கூடம். இது தொழிலாளர்களுக்கு பலவிதமான நோய்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் கேந்திரமாக உள்ளது. அதனால், இதன் அடக்குமுறைக்கு எதிராக களப்போராளிகளாக மாறவேண்டியது தவிர்க்க முயாதது.
லேலாண்டில் நடக்கும் இதுபோன்ற அடக்குமுறைகளை விளக்கும் வகையில் சென்ற மாதத்தில் ஆலையில் நடந்த சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
“MDV Trim லைனில்” திடீரென ஒரு வாரம் மட்டும் இரவு சிப்ட் இல்லை என மாலை 4.00 மணிக்கு அறிவிப்பு ஒட்டியது, நிர்வாகம். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த பகுதியில் “எக்ஸஸ் மேன் பவர்” எனச் சொல்லி 4 தொழிலாளர்களை மட்டும் வெல்ட் லைனுக்கு அனுப்பி விட்டது. அதாவது, “எக்ஸஸ் மேன் பவர்” என வேறு லைனுக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது, முதலில் “வில்லிங்” கேட்பதும் ஜூனியராக பார்த்து (டோக்கன் நம்பர் பார்த்து) வேறு லைனுக்கு “டிரான்ஸ்பர்” செய்வதும் தான் நடைமுறையாகும். இந்த நடைமுறையை மீறி டிரான்ஸ்பர் செய்துள்ளது நிர்வாகம். இதைத்தான் முறைகேடு என்கிறோம்.
இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் இரவு சிப்ட் துவங்கும் போது, டோக்கன் நம்பர் அடிப்படையில் தொழிலாளர்களை பிரித்து இரண்டு சிப்ட்–க்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்காமல் திடீரென 8 தொழிலாளர்கள் “சப்- அசெம்ப்ளி” உள்ளிட்ட பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுவும் முறைகேடுதான்.
மேலும், தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் நிமிட உற்பத்தி முறை திணிக்கப்பட்ட பிறகுதான் அதாவது, 2010-க்கு பிறகு, ஆலைக்குள் அனேக இடமாற்றங்கள் இவ்வாறு முறைகேடான வழியில் நடைபெற்றுள்ளன, நடைபெற்று வருகின்றன.
இதற்கெல்லாம், நிர்வாக அதிகாரிகள் தரும் விளக்கம் “உங்க யூனியன் முடிவுப்பா” என்பதுதான். இவ்வாறு நிர்வாகம் முறைகேட்டை அனுமதித்துவிட்டு விளக்கம் தருவது முதல் முறையல்ல. இவற்றைப் பார்க் கும் தொழிலாளர்கள், “இந்த சங்க நிர்வாகிகளே இப்படித்தான், தேர்தல் வரட்டும்” என ஆதங்கப்படுகின்றனர். உள்நோக்குடன் மவுனம் சாதிக்கும் சங்க செயற்குழு உறுப்பினர்களிடமும் சக தொழிலாளர்களிடமும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர்.
ஆனால், தற்செயலாக சீருடை அணியாமல் “சிப்ட்”-க்கு வரும் தொழிலாளர்களிடம் சீறும் நிர்வாகம், மேற்கண்ட முறைகேட்டை அனுமதிப்பது ஏன்? வேடிக்கை பார்ப்பது ஏன்? இங்கு தான் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் வன்மம் அடங்கியுள்ளது.
சங்க நிர்வாகிகளிடம் முறைகேட்டை பற்றி கேட்கையில் “வில்லிங்” அறிவிக்காமல் சில தொழிலாளர்களை மட்டும் டிரான்ஸ்பரில் வெளியேற்றியது சரியா? என கேட்கும் போது, “யாரும் வில்லிங் கேட்கவில்லை. உங்களுக்கு லைன் மாறணும் என்றால் அடுத்த வாய்ப்பில் அதை செய்கிறோம்” என்கிறார்கள். அதாவது, ‘அடுத்த முறைகேடு நடக்கும் உனக்கும் பங்கு தருகிறோம்’ என்று தொழிலாளர்களை சீரழிக்கிறார்கள்.
இந்த முறைகேட்டிற்கு சில தொழிலாளர்கள் எப்படி பலியாகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விசயம். தற்போதுள்ள வேலைப் பளு, அடக்கு முறை இதனை எதிர்த்து முறியடிக்க முடியாது என்ற மனநிலையில், குறுக்குவழியாக, இந்த மேற்கண்ட முறைகேடுகளுக்கு துணை போகின்றனர். ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கருத்து ஆழமாக இவர்கள் மனதில் பதிந்துள்ளது. முறைகேட்டின் பலனை சுவைத்த பிறகு நிர்வாகத்திற்கும் குறிப்பிட்ட சங்க நிர்வாகிகளுக்கும் வாழ்நாள் விசுவாசிகளாக (அடிமை) மாற வேண்டியுள்ளது. இதன் பின்னர், சர்வீசில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராகவும் சரியான நடைமுறைகள், நியாயங்கள் பற்றியும் பேச இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
தங்கள் ஓட்டுச் சீட்டு லாபத்திற்காக இந்த முறைகேட்டை சங்க நிர்வாகிகள் செய்வதாக தொழிலாளர்கள் புரிந்து வைத்துள்ளனர். சங்கத்தின் மீது ஆத்திரமடைகின்றனர். “எவன் வந்தாலும் இப்படித்தான், போன டைம் அவங்களும் இப்படித்தான் ஆடுனாங்க. இந்த முறை இவங்க அப்படி ஆடுறாங்க. ஒன்னும் பண்ண முடியாது” என்ற முடிவுக்கும் வருகின்றனர். நம்பிக்கை இழக்கின்றனர். நிர்வாகம் எதிர் பார்க்கும் மனநிலையும் இப்படித்தான் பிறக்கிறது. அதாவது, “இதுக்கு மேனேஜ்மென்டே பரவாயில்லை” என தொழிலாளர்கள் கோபத்தில் கொதிப்பதைப் பார்த்து நிர்வாகம் குதூகலிக்கிறது.
முடிவாக, நமது நிறுவனத்தில் நடக்கும் முறைகேட்டிற்கு சில தனிநபர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. ஆலையின் நிலையாணை விதிகள் என்பதைக் காட்டி போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் நிர்வாகம், முறைகேட்டை அனுமதிப்பதற்கு முக்கியமான, மையமான காரணம் சங்கத்தை ஒழித்துக் கட்டுவதுதான். இதனை கீழ்க்கண்ட விளைவுகள் மூலம் நிறைவேற்றுகிறது.
தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வது
ஒவ்வொரு தொழிலாளரையும் ஊழல்படுத்தி ஒற்றுமையைக் குலைப்பது
சக தொழிலாளியின் மீதே அவநம்பிக்கை உருவாக்கி எல்லோரையும் தனித்தனியாக பிரிப்பது
அதாவது, தொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் கட்டுப்பாடான சக்தியாக திரண்டுவிடக் கூடாது என்றும் மிக எச்சரிக்கையாக ஆலையில் ஒவ்வொரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றது நிர்வாகம்.
ஆக, முறைகேட்டை ஒர் ஆலைக்குள் நடக்கும் விசயமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது. ஏனெனில், முறைகேடும் லாபவெறியும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. முறைகேட்டை கட்டவிழ்த்து விட்டால் தான் முதலாளித்துவமே உயிர் பிழைத்து வாழ முடியும்.
லேலாண்டில் இதுவரை சொல்லி வந்த மரபுகள், நடைமுறைகள், ஆலையின் நிலையாணை விதிகள், தொழிற்சங்க விதிகள், முறைகள் போன்ற எல்லாவற்றையும் காலங்கடந்தவையாக்கி விட்டது கார்ப்பரேட் நிர்வாகம். அவற்றின் இடத்தில் பட்டவர்த்தனமான காட்டுமிராண்டித்தனமான சுரண்டலை கொண்டுவந்துள்ளது. இதுதான் லேலாண்டின் பயங்கரவாதக் கொள்கை. இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் அல்லது நெருக்கடின் வலி தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகிறது. இதன் பலனை லேலாண்டின் கார்ப்பரேட் நிர்வாகம் சுவைக்கிறது!
அரசின் எல்லா மட்டங்களிலும் மற்றும் சமூக வாழ்வின் எல்லா இடங்களிலும் நடக்கும் முறைகேடுகளையும் சீர்கேடுகளையும் பார்த்து நம்மில் பலரும் ஆதங்கப்படுகிறோம்
தாலுக்கா அலுவலகம் தொடங்கி அரசின் எல்லா மட்டங்களிலும் மற்றும் சமூக வாழ்வின் எல்லா இடங்களிலும் நடக்கும் முறைகேடுகளையும் சீர்கேடுகளையும் பார்த்து நம்மில் பலரும் ஆதங்கப்படுகிறோம்; குமுறுகிறோம். “இந்த நாடு உருப்படாது” என்று சாபம் கொடுக்கிறோம். லேலாண்டில் நடக்கும் முறைகேடுகளும் இதன் ஒருபகுதிதான்.
இந்த அரசுக் கட்டமைப்பே சீரழிந்து, அழுகி நாறுகிறது. கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாகவும் அடிமையாகவும் சீரழிந்துவிட்டது. இதனால்தான் லேலாண்டிலும் முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. எந்தச் சட்டத்தையும் கடைப்பிடிப்பதில்லை. அதுபோலத்தான், லேலாண்டு நிர்வாகம் இதுகாறும் சொல்லிவந்த நடைமுறை, மரபு, நிலையாணைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு பட்டவர்த்தனமாக தொழிலாளர்களை சுரண்டுவதும் நடக்கிறது. இந்த பயங்கரவாதத்தையே சட்டங்களாகக் கொண்டுவந்து தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து வருகிறது கார்ப்பரேட்டுகளின் அடியாளான மோடி அரசு.
ஆம், லேலாண்டு போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை நம்பி ஆலைகளையும் அதன் எடுபிடிகளை நம்பி நாட்டையும் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்க்க முடியாது. அவ்வாறு செய்தால், வறுமை, ஊழல், சீரழிவு, கொலை, கொள்ளை தொடரத்தான் செய்யும். ஆகையால், ஆலையிலும் சமூகத்திலும் பொது ஒழுங்கை உருவாக்க, மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதே தீர்வாகும்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் போராட்டத்தை ஆதரித்து நடத்தப் போகும் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்க சென்ற பொழுதே, காவல்துறை தனது வழக்கமான சீண்டலுடன் ‘உங்க தோழருங்க, உங்க அமைப்புல இருக்கற தோழர்களை தூண்டி விட்டு அனுமதி கேட்காம ஒரு ஆர்ப்பாட்டம் செய்வீங்க, அப்புறம் நல்ல புள்ள மாதிரி ஒரு ஆர்ப்பாட்டம் அனுமதி கேட்டும் பண்ணுவீங்களா..?’ என்று கேட்டார். எப்படியோ சமாளித்துவிட்டு ஒரு வாய்மொழி உத்தரவை பெற்றுக் கொண்டு வந்தோம்.
மீண்டும் ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் அழைத்து, ‘நீங்க காலைல வந்து இன்ஸ்பெக்டரை பாத்துட்டு போயிருங்க’ எனக் கூறிய போதே எரிச்சல் கூடுதலாயிருந்தது.
“சுவரொட்டியை அடித்து ஒட்டியாயிற்று. இப்போது எதற்கு கூப்பிட்டு தொலைக்கிறார்கள். ரத்து செய்து விட்டால் என்ன செய்யலாம்” என பல்வேறு குழப்பங்களுடன் சென்றோம். மீண்டும் அதே போல் பல்லவி பாடிவிட்டு, ‘செஞ்சிலுவை சங்கத்திலிருந்து கொஞ்சம் பின்புறம் நடத்திக்கங்க’ என மாற்று இடத்தை கூறினர்.
இப்போது புதிதாக அந்த பகுதி காவல் நிலையத்திற்கு வந்திருக்கும் ஆய்வாளர், “சி.ஆர்.ஐ முதலாளி புகழ்” சோதி. புதுமையை செய்கிறேன் என இவர்கள் அளித்திருக்கும் ஆர்ப்பாட்ட இடம் நேரடியாக பந்தயசாலை காவல் நிலையத்தின் வாசலே. இருபுறமும் சாலைகள் மட்டுமே. மக்களின் நேரடிப் பார்வை மிகக் குறைவு.
இப்படியெல்லாம் நிபந்தனை போட்டு குறுக்குவதற்கு நேரடியாக பந்தயசாலை காவல்நிலையத்தினுள்ளேயே வைத்துவிட்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்குமே என்கிற அளவுக்கு எரிச்சல் வந்தது. சரி, அவர்களின் இடத்துக்கே வரச் சொல்லி அவர்களே அனுமதி கொடுத்து அவர்களை திட்டச் சொல்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொள்வோம் என முடிவெடுத்து அவசர அவசரமாக வேலைகளை செய்து முடித்து ஆர்ப்பாட்டத்துக்கு ஆயத்தமானோம்.
மாலை சரியாக 5.30 க்கு பு.ஜ.தொ.மு வின் மாவட்டத் தலைவர் தோழர் குமாரவேலுவின் தலைமையில் துவங்கிய ஆர்ப்பாட்டம் தோழர் கவியரசு மற்றும் தோழர் சம்புகன் ஆகியோரின் முழக்க ஒலியில் ஆர்ப்பரித்தது.
தோழர் குமாரவேலு தனது தலைமையுரையில், “இந்த டாஸ்மாக் தான் அரசாங்கத்தோட உயிர்மூச்சு மாதிரி நடத்திக்கிட்டு இருக்காங்க, இது ஒரு சமுதாய சீர்கேடு. இன்னிக்கு ஒரு பெண் குழந்தையை அதன் தகப்பன் போய் கொஞ்ச முடியாத சூழல் பெண்ணை ஏறெடுத்து பார்க்க முடியாத சூழல் இந்த டாஸ்மாக்னால. குடி வெறியில தகப்பன் மகளை கற்பழிக்கிறான்” என்று கூறி, குடியும் இந்த டாஸ்மாக்கும் தமிழ்ச்சமூகத்தை பண்பாட்டுப் ரீதியிலான படுகுழிக்குள் தள்ளுவதை விவரித்தார். இந்த டாஸ்மாக்கினால் இதுகாறும் பயனடைந்த அரசியல்வாதிகள் இப்போது அதனை மூடக் கோரும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி மக்கள் புரட்சிகர அமைப்புகளின் பின்னால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை கூறி முடித்தார்.
கண்டன உரைக்கு முன்னர்,”மூடு டாஸ்மாக்கை !” மையக் கலைக் குழுவின் பாடலை தோழர் சரவணன் குழுவினர் பாடியது தோழர்களின் உற்சாகத்தை இன்னுமோர் மடங்கு அதிகப்படுத்தியது.
தோழர் குமாரவேலு தலைமையுரை
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி தனது கண்டனவுரையில்,
“தோழர்களுக்கு வணக்கம், இந்த பரந்துபட்ட கோவையிலே பல லட்சம் மக்கள் இருக்கிறார்கள். தத்தமது வேலைகளை முடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். இத்துணை லட்சம் மக்களில் நாம் மட்டும் ஏன் இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம். வேறு வேலையில்லாமலோ ஜாலிக்காகவோ அல்ல.
டாஸ்மாக் தீமை என்பது மக்கள் மனதில் இருக்கிறது. டாஸ்மாக்கால் பாதிக்கப்படாத ஒரு தெருவாவது ஒரு குடும்பமாவது இங்கு இருக்கிறதா..? சமூகத்தின் பெரும்பான்மையான குற்றங்களுக்கு டாஸ்மாக் காரணியாக இருக்கிறது. செயின் பறிப்பு, கற்பழிப்பு என பல்வேறு குற்றங்களுக்கு அது காரணமாக இருக்கிறது. குற்றவாளிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக டாஸ்மாக் அமைகிறது. ஆறறிவு உள்ள எவரும்; தொழிலாளியோ மாணவனோ விவசாயியோ இந்த டாஸ்மாக்கிற்கு எதிராக போராட வேண்டும். குடிப்பவனை மட்டும் பார்ப்பது குறுகிய பார்வையாகும். அதற்கப்பாலும் சமூகத்தை நாசம் செய்கிறது இந்த டாஸ்மாக்.
தோழர் விளவை ராமசாமி
ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 1000 பேர் திறந்து ஒரு மறியலை செய்கிறார்கள். தங்களது கல்லூரிக்கு அருகிலேயே இருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுகிறார்கள். தாங்கள் படிப்பதா..குடிப்பதா..? எனக் கேட்கிறார்கள். சாராயம் விற்று சர்க்கார் நடத்தும் இந்த கேடுகெட்ட அரசை சாடுகிறார்கள். அற வழியில் போராடியோரை எல்லாம் அலட்சியப்படுத்திய இந்த ஆளும் வர்க்கமே அலறும்படி இன்னும் சுருக்கமாக சொன்னால், எப்படிச் சொன்னால் அவர்களுக்கு சாராயம் விற்பவர்களுக்கு புரியுமோ அப்படிச் சொன்னார்கள். மானம் ரோஷம் உள்ள மனிதர்களாக ஆறறிவு உள்ளவர்களாக நடந்து கொண்டார்கள்.
முழக்கமிடும் தோழர்கள்
கல்லூரி அருகிலும் கோவில் அருகிலும் பள்ளி அருகிலும் மதுக் கடை இருக்கக் கூடாது என்ற சட்டத்தை அரசே மீறி ஒரு கிரிமினல் முதலாளி அளவுக்கு தரையிறங்கி சாராயம் விற்பதை எதிர்த்துப் போராடினார்கள். இவர்களை தாக்குவது யாரென்றால் காவலர்கள்,போலீசு.
ஏனையா, தருமபுரியில் ஜெயா கைதின் போது கோவை மாணவிகளை உயிரோடு எரித்த கயவர்களை பாதுகாப்பாக கொண்டு சென்ற போலீசு, இரண்டாம் இன்னிங்சில் ஜெயா கைதின் போது தமிழகத்தையே வன்முறைக்காடாக மாற்றிய அ.தி.மு.க காலிகளுக்கு பாதுகாப்புக் கொடுத்த போலீசு மதுவுக்கு எதிராக போராடிய மாணவர்களை அடிக்கிறது. என்ன ஒரு அராஜகம்!
ஏனையா, அந்த மாணவர்கள் எங்களுக்கு அது வேணும் இது வேணும் எங்க குடும்பத்துக்கும் வேண்டும் என்றா கேட்டார்கள். உன் குடும்பத்துக்கும் சேர்த்து தீமை விளைவிக்கும் டாஸ்மாக்குக்கு எதிராக போராடியதற்காக அடிக்கிறாயா…?
இப்படி தனது வீரத்தை காட்டிய ஜெயாவின் காவல் துறை சிறைக்கு அழைத்துச் சென்று பின்னர் எதுக்கப்பா பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவரது வீட்டிற்கு சென்று ஜாமீன் போட்டுக்கங்க போட்டுக்கங்க அப்டின்னு கெஞ்சினீர்களே…? வெட்கமாயில்லை. அந்த பெற்றோர் நாங்கள் அமைப்பின் வழிதான் நடப்போம் எனக் கூறிய பின்னர் முகத்தில் கரியை பூசிக் கொண்டு மீண்டும் சிறைக்கு வந்து அந்த மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றீர்களே… வீராதி வீரணுக சூராதி சூரர்களே., இப்போது யார் கோழை நீங்களா மாணவர்களா…! நீங்கள் தான்.”
குறிப்பெடுக்கும் உளவுத்துறை
தோழரின் உரையை சற்றும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த காவலர்களும் உளவுப் பிரிவினரும் தருமபுரியில் மாட்டுச் சாணத்தை நெஞ்சில் வாங்கிய கடமை தவறா காவலர்களின் முகபாவனைகளுக்கு சற்றும் மாறுதலின்றி இருண்ட முகத்துடன் சென்றனர். வழக்கமாக வீடியோ எடுக்கும் உளவுப் பிரிவினருடன் கூடவே தோழரது உரையில் சர்ச்சைக்குரிய வார்த்தை வருகிறதா எனப் கவனித்து குறிப்பெடுக்க மட்டும் தனியாக இருவரை ஒதுக்கியிருந்தனர்.
இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலர் தோழர் நித்தியானந்தன் போராடிய மாணவர்களுக்கும் கலந்து கொண்ட தோழர்களுக்கும் நன்றி நல்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை
2. சிவகிரியில் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் கடந்த 21-08-2015 வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சிறையிலடைத்து கடுமையாக தாக்கியதைக் கண்டித்தும், டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள எதிரெதிரே அமைந்திருக்கும் இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளை முற்றுகையிடுவதெனத் தீர்மானித்து காலை 10:30 மணிக்கு தோழர்கள் 25 பேர் சாராயக் கடைகளுக்கு அருகிலுள்ள சந்திப்பிலிருந்து பேனர், முழக்க அட்டைகளுடன் மக்கள் அதிகாரம் வெல்க, மூடு டாஸ்மாக்கை, எவன் வருவான் பார்ப்போம் போன்ற முழக்கங்களை விண்ணதிர முழங்கியவாறு சாராயக் கடைகளை நோக்கி திரண்டனர். முழக்கங்களைக் கேட்ட உடனே கடைகளை பூட்டி விட்டு வெளியேறினர் ஊழியர்கள். இரண்டு தோழர்கள் திரண்டு நின்றிருந்த மக்களிடமும், அருகிலுள்ள கடைக்காரர்களிடமும் பிரசுரம் வினியோகித்து போராட அழைப்பு விடுத்தனர். இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
மூக்கு வியர்த்த காவல்துறை இரண்டாவது சுற்று முழக்கங்கள் முடியுமுன்னரே வந்து சேந்தது. வந்தவுடன் அடாவடியை தொடங்கியது. “ஏன் சாலையை மறிக்கிறீர்கள்” என்று கேட்டுக் கொண்டே தோழர்களைப் பிடித்து தள்ளினார் காவல்துறை துணை ஆய்வாளர்.
“ஏன் தள்ளுகிறீர்கள்? சாலையை மறிப்பது எங்கள் நோக்கமல்ல. கடையைத்தான் முற்றுகை செய்துள்ளோம்” என்று தோழர்கள் வாக்குவாதம் செய்ய முழக்கங்கள் தொடர்ந்தன.
“அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது” என்ற காவல்துறையினரை, “அனுமதி கேட்டால் தந்து விடுவீர்களா? அ.தி.மு.க காலிகள் அனுமதி கேட்டுத்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? அவர்களை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டதும் நைச்சியமாக பேசத் தொடங்கியது.
“ஆர்ப்பாட்டம் தான் செய்து விட்டீர்களே. கலைந்து செல்லுங்கள் ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறோம்” அதை மறுத்து தோழர்கள் தொடர்ந்து முற்றுகையை நீட்டிக்கவே,
“மண்டபத்தில் வைத்திருந்து மாலையில் விட்டு விடுவோம் என்று எண்ணாதீர்கள், கைது செய்தால் ரிமாண்ட தான்” என்று மிரட்டியது.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை
கைது செய்து தாக்கிய
காவல்துறை ரவுடிகளை
கைது செய் கைது செய்
போன்ற முழக்கங்களுடன் தோழர் சமனஸ் இந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு பங்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசத் தொடங்கினார். மிரண்டு போன காவல்துறை முதற்கட்டமாக சுற்றியிலும் கூடியிருந்த மக்களை விரட்டத் தொடங்கியது. சட்டை கூட அணியாமல் துண்டு போட்ட முதியவர் ஒருவர் “சாலையில் நிற்பதற்குக் கூட உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா?” கேட்டபோது தான் நிலமையை உணர்ந்த காவல்துறை இதற்கு மேல் அனுமதித்தால் ஆபத்து என்று தோழர்களை வேனுக்குள் தள்ளத் தொடங்கியது.
தோழர்களுடன் அருகில் நின்றிருந்த மூவரையும் வேனுக்குள் தள்ளியது போலீசு. தொடக்கத்தில் ஆர்வ மேலீட்டில் மக்களும் கைது நடவடிக்கையில் கலந்து கொள்கிறார்கள் போலும் என எண்ணிய தோழர்கள், வேனுக்குள் நெருக்கமாக அமர்ந்திருந்த போது தான் தெரிந்தது அவர்கள் மூக்கு முட்ட குடித்திருக்கிறார்கள் என்பது. அவர்களை கீழே இறக்க வேண்டும் என தோழர்கள் வற்புறுத்த அவர்களும் உங்களுடன் போராடியவர்கள் தான் என்று காவல்துறை அடம்பிடித்தது. ஒருவழியாக காவல்நிலையத்துக்கு அருகில் அவர்கள் இறக்கி விடப்பட்டார்கள். இதன் மூலம் போராடியவர்களே குடித்திருந்தார்கள் என்று செய்தி பரப்பப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் தோழர்கள்.
திருமண நாள் என்பதால் மண்டபம் கிடைக்கவில்லை. காவல்நிலையத்தின் முதல் மாடியில் பயன்படுத்தப்படாத வராண்டாவில் அமர்ந்து கொள்ளுமாறு கோரியது. சுத்தப்படுத்துபவர் காலையிலும் மாலையிலும் தான் வருவார் எனவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று பழைய பேப்பர்களைத் தந்து இளித்தது காவல்துறை. அடுத்து படியிலும் வராண்டாவிலும் அமர்ந்திருந்த தோழர்களை வீடியோ கேமிராவில் படம் பிடிக்கத் தொடங்கியது. படம் பிடிக்கக் கூடாது என தோழர்கள் மறுத்தனர். ஒரு பக்கம் ஆய்வாளருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே மறுபக்கம் படம் எடுப்பது தொடர்ந்தது. காவல் நிலையத்துக்கு உள்ளிருந்தே தோழர்கள் போலீசு அராஜகம் ஒழிக என்று முழக்கமிட்டதும் காமிராவை மூடிக் கொண்டு ஒடுங்கியது.
உள்ளே, டாஸ்மாக் குறித்த பாதிப்புகளை தோழர்கள் நேரில் பார்த்த அனுபங்களை பரிமாறிக் கொண்டார்கள். அங்கு தோழர்களுக்கு பாதுகாவலாக போடப்பட்டிருந்த காவலர்களிடமே அ.தி.மு.க நடத்தும் போராட்டங்களை வேடிக்கை பார்ப்பதும், மக்களுக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் போல் நடத்துவதும் என முரண்பாடான விசயங்களை விவரித்ததும் பதில் கூற முடியாமல் விழித்தார்கள். எம்.ஜி.ஆர் தேவாரம் காலத்தில் சங்கம் அமைக்க காவல்துறை முயன்றபோது அவர்கள் கொடுமையாக நசுக்கப்பட்டதை சுட்டிக் காட்டியபோது, “கேரளாவில் எட்டு மணி நேரம் தான் வேலை. இங்கு தான் நேரம் காலம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம், நாங்களும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை” என தாழ்ந்த குரலில் ஒப்புக் கொண்டார்கள்.
மாலை ஆறு மணிக்கு தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் முழக்க அட்டை, பேனர் ஆகியவற்றை தர மறுத்தது போலீசு. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோழர்களிடம் கோர்ட்டில் ஒப்படைப்போம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மழுப்பினார்கள்.
காலையில் முற்றுகையிட்ட டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரம் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. இரண்டு கடைக்கும் வரும் குடிமகன்களின் பார்வையில் படுமாறு சுவற்றில் ஆணியால் அடிக்கப்பட்டிருந்த மூடு டாஸ்மாக்கை என்று கட்டளையிடும் மக்கள் அதிகாரம் பிளக்ஸ் பேனர் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது, “இது முடிவல்ல, தொடக்கம்” என்று.
“இன்றைய தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாப்பது பற்றிக் கவலைப்படும் தொழிற்சங்கங்கள் நாளைய தொழிலாளர்களின் உரிமையைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்.” சமீபத்தில் தன்னைச் சந்தித்த தொழிற்சங்கத் தலைவர்களிடம் மோடி கூறியிருக்கும் கருத்து இது. இந்த “மோடி மொழி”யின் பொருள் எல்லோருக்கும் புரிவதற்கு வாய்ப்பில்லை.
“எல்லோரையும் சமமாக நடத்துவோம்” என்று மோடி பேசினால், “சிறுபான்மை மக்களின் உரிமைகளை ரத்து செய்வோம்” என்பது அதன் பொருள். அந்த வகையில் “நாளைய தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்படுவது” என்று மோடி கூறும்போது அதன் பொருள், “இன்றைய தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்வது” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனைத் தெளிவாகக் கூறியிருக்கிறார் மோடியின் ஆலோசகரும், திட்டக் கமிசனுக்கு மாற்றாக மோடி உருவாக்கியிருக்கும் “நிதி ஆயோக்” அமைப்பின் துணைத் தலைவருமான அரவிந்த் பனகாரியா. “தொழிற்தகராறுகள், தொழிற்சங்கங்கள், அப்ரன்டீஸ்கள் நியமனம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு-இவை தொடர்பாக தற்போது இருக்கின்ற சட்டங்கள்தான் முதலீடுகள் வருவதற்குத் தடையாக இருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குவதால், திறன் குறைந்த தொழிலாளர்கள் (unskilled labour) ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை.”
மேற்கண்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் காகிதத்தில் இருப்பவைதான் என்ற போதிலும், “அமர்த்து – துரத்து” (Hire & Fire) என்ற இரண்டு சொற்களுக்கு மேல் தொழிலாளர் சட்டம் என்ற பெயரில் வேறு எதுவும் இருக்கக் கூடாது. அப்போதுதான் முதலாளிகளின் மனம் குளிரும், மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறும் என்கிறது மோடி அரசு. இதன் பொருட்டுத்தான் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் திணிக்கப்படுகின்றன.
40 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்கள் எதுவும் பொருந்தாது என்று கூறும் திருத்தம், 300 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனத்தில் கதவடைப்பை அறிவிக்க அரசு அனுமதி தேவையில்லை என்ற திருத்தம், ஒரு ஆலையில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 30% பேர் உறுப்பினரானாலன்றி தொழிற்சங்கம் தொடங்க முடியாது என்ற திருத்தம், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களாக இருந்தாலும், பெற்றோரின் தொழிலை (அதாவது குலத்தொழிலை) செய்வதற்குத் தடை இல்லை என்ற திருத்தம், தொழிற்தகராறு சட்டம், தொழிற்சங்க சட்டம், தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம் ஆகியவற்றைத் திருத்தி தொழிலுறவு மசோதா ஆகியவை கொண்டு வரப்படுகின்றன.
மேக் இன் இந்தியாவுக்கும் தொழிலாளர் உரிமைகளை ஒழித்துக் கட்டும் மோடியின் திட்டத்துக்கும் இடையிலான உறவையும், மோடி உருவாக்கப் போகிற “வல்லரசு இந்தியா” எப்படி இருக்கும் என்பதையும் அரவிந்த் பனகாரியாவின் கீழ்க்கண்ட வார்த்தைகளிலிருந்தே நாம் புரிந்து கொள்ள இயலும்.
“சீனத் தொழிலாளர்களின் ஊதியங்கள் உயர்ந்து விட்டன. சீனாவின் ஏற்றுமதி சந்தையைக் கைப்பற்ற வியத்நாமும் கம்போடியாவும் போட்டி போடுகின்றன. இன்று உலகளவிலான ஏற்றுமதி வணிகத்தில் சீனாவின் பங்கு 12%. இந்தியாவின் பங்கோ 2%-க்கும் குறைவு. இந்தியாவில் குறைந்த கூலிக்கு வேலை செய்ய பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். சீனாவிடமிருந்து 2% பங்கைக் கைப்பற்றினாலே, மேக் இன் இந்தியா வெற்றியடைந்து விடுமே” என்கிறார் பனகாரியா. (India Today, Dec 19, 2014)
“சீனத் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிப்பது, டாலருக்கு நிகரான சீன நாணயத்தின் மதிப்பு உயர்ந்திருப்பது ஆகிய காரணங்களால் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறுகின்றன. இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூலி குறைவாக இருப்பதால் மேற்கூறிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் அந்த நாடுகளை நோக்கிச் சென்றுவிடும்” என்று பதறுகிறார், உற்பத்தித்துறை போட்டிக்கான தேசிய கவுன்சிலின் உறுப்பினர் அஜய் சங்கர்.
மேலை நாடுகளுக்கு ஆண்டொன்றுககு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளின் சந்தை மதிப்பு 20,000 கோடி டாலர். இதில் சீனாவின் பங்கு 8,000 கோடி டாலர். வங்க தேசத்தின் பங்கு 2,100 கோடி டாலர். இந்தியாவின் பங்கோ சுமார் 1,300 கோடி டாலர்தான்.
2013-ல் வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள ராணா பிளாசா என்ற ஆயத்த ஆடைத் தொழிற்கூடத்தின் 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 1135 தொழிலாளர்களைப் பலிகொண்ட கொடூரம்.
ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச்சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்ற “சீனப்பாதை”யில் சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதை நோக்கித்தான் இந்தியாவைச் செலுத்துகிறது மோடி அரசு. ஆகவே, ‘மேக் இன் இந்தியா’ வின் குறியீடாக மோடி படங்காட்டும் “சிங்கம்” என்பது “வங்கம்”தான்.
அந்த வங்கதேசத்தின் ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழில் வழங்கும் வேலைவாய்ப்பின் யோக்கியதை என்ன? இதனை “எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி” இதழில் (ஜூன், 20, 2015) அனு முகமது எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
***
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சீனத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது வங்கதேசம். வால் மார்ட், கேப், டெஸ்கோ, காரஃபோர் உள்ளிட்ட எல்லாப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆயத்த ஆடைகளும் இன்று வங்க தேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1981-ல் ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் வங்கதேசம் ஈட்டியது 35 லட்சம் டாலர். தற்போது அது 2,400 கோடி டாலராக, சுமார் 7,000 மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 40 இலட்சம் பேர். அதில் பெரும்பான்மையினர் இளம் பெண்கள்.
கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலேயே கைத்தறி ஆடைகளுக்கு உலகப் பகழ் பெற்றது வங்கதேசம். டாக்கா மஸ்லின்களுடன் பிரிட்டனின் மில் துணிகள் போட்டி போட முடியாத காரணத்தினால்தான், பிரிட்டிஷ்காரர்கள் கிழக்கு வங்க நெசவாளர்களின் கட்டை விரலை வெட்டினார்கள் என்பது வரலாறு. அது காலனியாதிக்க காலம். ஆயத்த ஆடை உற்பத்தியின் அடிமையாக வங்கதேசம் மாற்றப்படுவது 1980-களில் தொடங்குகிறது.
1980-களின் துவக்கத்திலிருந்து அமலாக்கப்பட்ட கட்டுமான மறுசீரமைப்புக் கொள்கை எல்லா பின்தங்கிய நாடுகளிலும் உள்நாட்டுத் தொழில்களையும் அரசுடைமைத் தொழில்களையும் திட்டமிட்டு ஒழித்துக் கட்டியதைப் போலவே, வங்கதேசத்தின் தொழில்களையும் ஒழித்தது. – அவற்றில் முக்கியமானது சணல் ஆலைத்தொழில்.
இத்தொழில்களின் அழிவுக்குப் பின் வங்கதேச உழைப்பாளிகள் ஆயத்த ஆடைத் தொழிலுக்குள் தள்ளப்பட்டார்கள். இது அந்த நாட்டுக்கு கருணையுடன் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு அல்ல, சர்வதேச உழைப்புப் பிரிவினைத் திட்டத்தின் கீழ் ஏகாதிபத்தியங்களால் வங்கதேசத்துக்கு ஒதுக்கப்பட்டவேலை. விவசாயியின் நிலத்தைப் பறித்துக் கொண்டு அவனை அபார்ட்மென்ட் வாசலில் செக்யூரிட்டியாக நிற்க வைப்பதைப் போன்றது.
சணல், சர்க்கரை மற்றும் நூற்பாலைகளில் தொழிலாளிகளாக இருந்த போது தொழிலாளர்களுக்கு இருந்த தொழிற்சங்க உரிமைகளும் வேலை உத்திரவாதமும் ஆயத்த ஆடைத் தொழிலில் இல்லை. முன்னர் அவர்கள் பெற்று வந்த உண்மை ஊதியத்தை விடவும் மிகக் குறைவான ஊதியத்துக்கு அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. மொத்த தொழில்துறை வேலைவாய்ப்பில் 45%, மொத்த ஏற்றுமதியில் 77% ஆயத்த ஆடைத் தொழிலைத்தான் நம்பியிருக்கிறது என்ற நிலையில் நாடே சிக்கிக் கொண்டது. ஆடை ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லையேல் பட்டினியால் அழிந்துபட வேண்டும் என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டது வங்கதேசம்.
ஆயத்த ஆடைத் துறையில் பணியாற்றும் வங்கதேசத் தொழிலாளர்களின் அவல நிலையைப் பளிச்சென்று எடுத்துக் காட்டுபவை, அங்கே நடைபெறுகின்ற விபத்துக்கள். 1990 முதல் வங்க தேச ஆயத்த ஆடை நிறுவனங்களில் சுமார் 2,000 தொழிலாளர்கள், (இவர்களின் பெரும்பான்மையானவர்கள் பதின்ம வயதுப் பெண்கள்) கட்டிடம் இடிந்து விழுந்ததாலோ, தீ விபத்தினாலோ இறந்திருக்கிறார்கள். முதலாளிகளின் அடியாட்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டும், போலீசு துப்பாக்கிச் சூட்டிலும் சுமார் 1,000 பெண் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வங்கத்தின் வழியில் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து ‘வளர்ச்சி’யைச் சாதிக்க மோடி கும்பலால் ஆரவாரமாக தொடங்கப்பட்ட “மேக் இ்ன் இந்தியா” திட்டம்
2005-இல், “ஸ்பெக்ட்ரம்” என்ற ஆயத்த ஆடை நிறுவனத்தின் 9 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 100 பேர் கொல்லப்பட்டார்கள். 100 பேரைக் காணவேயில்லை. 2006-ல் டாக்காவிலும் சிட்டகாங்கிலும் நடந்த தொழிற்சாலை விபத்துக்களில் 142 பேர் கொல்லப்பட்டார்கள். 500 பேர் ஊனமானார்கள். டாக்காவில் இன்னொரு நிறுவனத்தில் தீப்பிடித்து 31 பேர் கொல்லப்பட்டார்கள். 2012-ல் வால் மார்ட், வால்ட் டிஸ்னி நிறுவனங்களுக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் தஸ்ரின் ஃபாஷன்ஸ் என்ற நிறுவனத்தில் 100 தொழிலாளிகள் எரிந்து சாம்பலானார்கள்.
இது நடந்த ஐந்தே மாதங்களில் ஏப்ரல், 2013-ல் ராணா பிளாசா என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 1,135 தொழிலாளிகள் நசுங்கிச் செத்தார்கள். இத்தனை பெரிய படுகொலை நடந்து, கொந்தளிப்பான தொழிலாளர் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியதும்தான் 20 ஆண்டுகளாக அங்கே நடக்கும் கொடுமை வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது.
அஸ்திவாரமில்லாத கட்டிடங்கள், ஆபத்தான மின்சார வயரிங்குகள், வெளியேற வழியில்லாத காற்றோட்டமில்லாத அறைகள், குறுகலான படிக்கட்டுகள் – எல்லா தொழிலகங்களுமே விதிகளுக்கு முரணான மரணக் குகைகளாக இருந்தும் அங்கே இவற்றைக் கேட்பார் யாருமில்லை.
1990 முதல் ஆண்டுதோறும் கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்கில் தொழிலாளிகள் கொல்லப்பட்ட போதிலும், நாடு முழுதும் உள்ள 50,000 தொழிற்சாலைகளை கண்காணிப்பதற்கு அங்கே நியமிக்கப்பட்டிருக்கும் ஆய்வாளர்கள் வெறும் 20 பேர்தான். பணியிடப் பாதுகாப்புக் கோரி தொழிலாளர் போராட்டம் நடக்கும் போதெல்லாம், தொழிலகப் போலீசுப் படைதான் அதிகரிக்கப் பட்டிருக்கிறதேயன்றி, தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக அந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.
***
இத்தனை கொடூரமான விபத்துகளுக்குப் பின்னரும் வங்கதேச அரசு அலட்சியம் காட்டுவதேன்? குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்திரவாதப் படுத்துவதற்குக்கூட ஆடை ஏற்றுமதி முதலாளிகள் மறுப்பது ஏன்? ஒரு ஆயத்த ஆடையின் விலையில் யாருக்கு எத்தனை விழுக்காடு செல்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால், மேற்கண்ட கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ள இயலும்.
14 அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் ஒரு “போலோ” சட்டையின் விலையில் 26.35% கச்சாப்பொருட்களுக்குப் போகிறது. கப்பலில் அனுப்பும் செலவு – 7.36%, வங்கதேச தொழிற்சாலையின் லாபம் – 4.14%, தரகுத்தொகை – 1.28%, நிர்வாகச் செலவு- 0.5%, தொழிலாளியின் ஊதியம் – 0.85%.
வால் மார்ட்டுக்கு – 59.5%. மேற்கண்ட 59.5%-ல் அமெரிக்க அரசு வசூலிக்கும் 25% வரியும் அடக்கம். மொத்தத்தில் ஒரு சட்டையின் சந்தை விலையில் 60 விழுக்காட்டை, உற்பத்தியுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஏகாதிபத்திய அரசும், அதன் தொழில் நிறுவனங்களும் விழுங்குகின்றன.
ஒரு சட்டையை அமெரிக்காவில் தயாரிப்பதென்றால் அமெரிக்கத் தொழிலாளிக்கு 7.47 டாலர் (ரூ. 478) ஊதியம் தரவேண்டியிருக்கும். அதே சட்டைக்கு வங்கதேசத் தொழிலாளிக்குத் தரப்படும் ஊதியம் 0.22 டாலர் (ரூ. 14). கொடூரமான உழைப்புச் சுரண்டல், வறுமை தோற்றுவிக்கும் சமூகச் சீர்கேடுகள், சாயப்பட்டறைகள் உள்ளிட்ட தொழில்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, நீர்வளம் அழிவது, நோய்கள் உள்ளிட்ட எல்லாத் தீமைகளும் ஏழை நாடுகளுக்கு! ஆயத்த ஆடையும் கொள்ளை இலாபமும், வரி வருவாயும் அமெரிக்காவுக்கு அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு!
அதுமட்டுமல்ல, வால்மார்ட் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் உற்பத்தி செய்யும் (வங்கதேச) நிறுவனத்துக்கு கொடுக்கும் விலையை ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கின்றன. எடுத்துக்காட்டாக, வங்கதேச உற்பத்தி நிறுவனத்தின் காற்சட்டைகளுக்கு 2000 ஆண்டில் கொடுத்த விலையை விட 40% குறைவான விலையையே 2014-ல் கொடுக்கின்றன அமெரிக்க நிறுவனங்கள்.
இப்படி விலைக் குறைப்பு செய்யப்படும்போது, தன்னுடைய லாப விகிதத்தை எந்த முதலாளியும் குறைத்துக் கொள்வதில்லை. தொழிலாளியின் ஊதியம் குறைக்கப்படுகிறது அல்லது வேலை நேரம் கூட்டப்படுகிறது. ஒரே கட்டிடத்துக்குள் மூச்சு முட்ட தொழிலாளிகள் திணிக்கப்படுகிறார்கள். காற்று, ஒளி, கழிவறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துக்குமான செலவுகள் வெட்டப்படுகின்றன. செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காமலும் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவ்வளவு ஏன், ராணா பிளாசாவில் கொல்லப்பட்ட 1,135 தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு முதலாளிகள் ஒரு ரூபாய் நிவாரணம் கூட கொடுக்கவில்லை. கொல்லப்பட்ட தொழிலாளிகளின் பெண்டு பிள்ளைகள் நிர்க்கதியாகத் தெருவில் நிற்கிறார்கள்.
தமக்கான சங்கமோ, சட்டங்களோ இல்லாத நிலையில் தொழிலாளிகள் விலங்குகளைப் போலச் சுரண்டப்படுவதும், புழு-பூச்சிகளைப் போல செத்து மடிவதும் கேள்விக்கிடமின்றி நடக்கிறது. சம்பள பாக்கி கேட்டுப் போராடும் தொழிலாளிகள் மீது கூட துப்பாக்கிச் சூடு நடத்துகிறது வங்கதேச அரசு. நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் தீ விபத்தில் சாம்பலாகியிருந்த போதிலும், அந்த நிறுவனங்களில் அடுத்த ஓரிரு நாட்களில் உற்பத்தி தடையின்றி நடக்கிறது.
ராணா பிளாசா படுகொலையைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் பரவிய போர்க்குணமிக்க போராட்டங்களுக்குப் பிறகு தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை 77% உயர்த்தி, மாதமொன்றுக்கு 4,350 ரூபாய் என்று அறிவித்திருக்கிறது ஷேக் ஹசீனா அரசு. அந்நாட்டு அரசின் கணக்குப் படியே மூன்று பேர் கொண்ட குடும்பத்தின் மாத ஊதியம் 14,875 ரூபாய்க்கு (18,000 டாகா) குறைவாக இருந்தால், அது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பமாகும். ராணா பிளாசா படுகொலைக்கு முன் அவர்கள் பெற்று வந்த மாத ஊதியம் வெறும் 2,500 ரூபாய்.
***
ஆயத்த ஆடைத்துறைத் தொழிலாளர்களின் ஊதியம் சீனாவை விட இலங்கையில் குறைவு, இலங்கையை விட பாகிஸ்தானில் குறைவு, அதைவிட இந்தியாவில் குறைவு. வங்கதேசத்திலோ இந்தியாவை விடக் குறைவு என்பதால், பல இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்துக்குத் தமது உற்பத்தியை மாற்றிக் கொண்டு விட்டன.
இச்சூழலில் மேக் இன் இந்தியா என்பதெல்லாம் வெறும்பேச்சு. பொருளாதார மந்தம் காரணமாக ஏற்றுமதி வாய்ப்புகளும் சுருங்கிவிட்டன. ஆகவே முதலீடுகளும் வராது. உள்நாட்டு சந்தையை உருவாக்கும் விதத்திலான ‘மேக் ஃபார் இந்தியா’ வைப் பற்றி சிந்திப்பதுதான் தீர்வு என்று தாராளமயக் கொள்கையாளரான ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனே உண்மை நிலையை சொல்லியிருக்கிறார்.
நிலத்தையும் காடுகளையும் பறித்து தொழில் வளர்ச்சி வரவில்லை, பகற்கொள்ளை மட்டுமே நடந்திருக்கிறது என்பது ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. அடுத்து, தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் குறைத்தால்தான் தொழில் வளரும் என்கிறார் மோடி. இது தொழிலாளி வர்க்கத்தின் உரிமை குறித்த பிரச்சினை மட்டுமல்ல. வல்லுறவுக்கு தன்னை ஒப்புக் கொடுத்தால்தான் வயிற்றை நிரப்ப முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்ணின் நிலைக்கு நம் நாட்டைத் தள்ளிவருகிறது மோடி அரசு.
வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு, ஆடைகளைக் குறைக்கச் சொல்லும் விபச்சார விடுதித் தலைவியைப் போல, பன்னாட்டு முதலாளி வர்க்கத்தைக் கவரும் பொருட்டு தமது உரிமைகளை ஒவ்வொன்றாகக் களைந்து விட்டு தொழிலாளி வர்க்கத்தை நிர்வாணமாக நிற்கச் சொல்கிறார் மோடி. இருப்பினும், இவர் இந்த நாட்டின் பிரதமர் என்றே அறியப்படுகிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்
மூடு டாஸ்மாக்கை! ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள் இணைந்து திருப்பெரும்புதூரில் 31-08-2015 காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“டாஸ்மாக்கை மூட ஆகஸ்டு 31 கெடு” என மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்திருந்ததால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் சென்னையில் அனுமதி கேட்டபோது கொடுக்கமுடியாது என கூறிய போலிசு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் அனுமதி அளித்தது. பின்னர் அந்தப் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் சத்தீஸ்குமார் என்பவரை நேரில் காவல் நிலையம் அழைத்து அவரை சூழ்ந்துகொண்ட போலீசார் அவரை கட்டாயப்படுத்தி அனுமதி மறுப்பு கடிதத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டு வெளியே விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் அனுமதி கோரி தொடர்ந்து போராடிய பின்னரே இறுதிநேரத்தில் ஆர்ப்பாட்ட அனுமதியை வழங்கினார்கள். அதிலும் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி என அறிவித்திருந்தது. இப்படி இறுதிவரை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை சீர்குலைக்க முயன்றனர். இதை முறியடித்து திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் நடத்திய போராட்டத்தால் மாதம் முழுக்க தமிழகம் கொந்தளித்திருந்தது. ஆங்காங்கே மாணவர்களை பின்பற்றி கடைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இப்போது வேறு அவர்களின் கெடு முடிவடைகிறதே கண்டிப்பாக எந்தக் கடையையாவது அடித்து நொறுக்கி விடுவார்களோ என பீதியடைந்த அரசு, இன்றும் போலிசுக்கு டாஸ்மாக் வாட்ச்மேன் வேலை அளித்திருந்தது. சென்னை முழுக்க அனைத்து டாஸ்மாக் சாராயக்கடை வாசலிலும் போலிசு படையை குவித்து வைத்திருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் வருவதற்கு முன்பாகவே வெகு சீக்கிரமாக வந்துவிட்டது போலிசு. அவர்களுடன் பாதுகாப்பிற்காக சிறப்பு அதிரடிப் படையினரை ஒரு வண்டி நிறைய அள்ளிக்கொண்டு வந்து போராட்டச்சூழலை உருவாக்கிக்கொடுத்தது போலிசு.
போலிசின் கூட்டமே துவக்கத்தில் அதிமாக காணப்பட்டது
போலிசின் கூட்டமே துவக்கத்தில் அதிமாக காணப்பட்டது. மூலைக்கு மூலை, சந்துக்கு சந்து உளவுப்போலிசு சுற்றிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் வாகனங்களில் வந்தபோது பின்தொடர்ந்து வந்து வழிமறித்து ஆர்ப்பாட்டத்திற்கு செல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். அனைவரையும் அருகிலிருந்த ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கவும் முயன்றுள்ளனர். இது தெரிந்த அங்கு சென்ற பு.மா.இ.மு சென்னை மாநகர செயலர் ராஜா போலீசாருடன் வாக்குவாதம் செய்தும், அனுமதி வாங்கி நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல மறுத்தால் இங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்த பின்பே அங்கிருந்து மாணவர்களை விடுவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்துவிட்டு அதற்கு செல்வோரை அச்சுறுத்தி தடுக்கும் சதியில் ஈடுபட்டனர். ஆனால் இவையனைத்தையும் முறியடிக்கும் வகையில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அணிதிரண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு வெள்ளையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தனி செயலர் திரு இளஞ்சேகுவேரா, திராவிட கழக மாணவரணி செயலாளர் திரு பிரின்ஸ் என்னாரெசு பெரியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பெரும்புதூர் நகர செயலர் தோழர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து தலைமை உரையாற்றிய தோழர் அமிர்தா, மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பு குழு, “டாஸ்மாக்கிற்கெதிராக போராடிய மாணவர்கள் மக்கள் மீது இந்த அரசு ஒடுக்குமுறையை செலுத்துகிறது. ஆனால் இந்த ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது. நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் அணிதிரண்டு பார்ப்பன பாசிசத்திற்கெதிராக போராடவேண்டும்” என பேசினார்.
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உரை
அவரை தொடர்ந்து திரு வெள்ளையன் பேசுகையில், “சாராயத்திற்கெதிரான இந்தப் போராட்டம் நாடு முழுக்க நடைபெற வேண்டும். ஐயா சசிபெருமாளை தமிழக அரசு திட்டமிட்டே படுகொலை செய்தது. ஈழப்போராட்டத்தில் முத்துக்குமார் மரணத்திற்கு பிறகு மாணவர்கள் கொதித்தெழுந்து போராடியது போல, ஐயா சசிபெருமாளின் மரணம் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட அலையை உருவாக்கியுள்ளது. ஆளும் அ.தி.மு.க அரசு மதுவுக்கெதிராக போராடும் மாணவர்களை, மக்களை மிகக்கொடூரமாக ஒடுக்கி வருகிறது. அதற்கெதிராக போராடும் மக்கள் அதிகாரம் அமைப்புடன் தமிழநாடு வணிகர் சங்கங்களின் பேரவை எப்போது துணை நிற்கும்” என பேசினார்.
தி. க மாணவர் அணி செயலர் திரு. பிரின்ஸ் என்னாரெசு பெரியார்
அவரை தொடர்ந்து பேசிய தி. க மாணவர் அணி செயலர் திரு. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் பேசுகையில், “தமிழகத்தில் நடப்பது பாசிச ஆட்சி. சாதாரண கருத்துரிமைக்கு கூட இங்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவே இப்போது பாசிச ஆட்சிதான் நடக்கிறது. நேற்றைய தினம் கர்நாடகாவில் முற்போக்கு பேராசிரியர் ஒருவர்
கொல்லப்பட்டுள்ளார். இந்த பாசிசத்தை எதிர்க்க சிவப்பு சட்டையுடன், கருப்பு சட்டையும், நீலச் சட்டையும் இணைந்து போராட வேண்டும். அதற்கு தி.க எப்போதுமே தயாராகவே உள்ளது” என பேசி அமர்ந்தார்.
வி.சி.க தனிசெயலர் திரு. இளஞ்சேகுவேரா
அதற்கடுத்து கண்டன உரையாற்றிய வி.சி.க தனிசெயலர் திரு. இளஞ்சேகுவேரா பேசுகையில், “தமிழகத்தில் நிலவும் பாசிசத்திற்கெதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தில் பெருகி வரும் சாதி, மத அரசியலை வேருடன் அழிக்க வேண்டும். இதைப் போன்றதொரு கூட்டணி டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்கு மட்டுமல்லாது அனைத்து போராட்டங்களுக்குமாக அமைய வேண்டும். இப்போது புரட்சிகர அமைப்புகளுக்கு வேலை வந்துவிட்டது. அந்த வேலையை மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பு செய்து முடிக்கும், அதற்கு என்றும் வி.சி.க துணை நிற்கும்” என பேசி அமர்ந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பெரும்புதூர் தொகுதி செயலர் தோழர் சுப்ரமணியன்
அடுத்தபடியாக இரத்தின சுருக்கமாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பெரும்புதூர் தொகுதி செயலர் தோழர் சுப்ரமணியன், “ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது என்ற தலைப்பே இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை உணர்த்திவிட்டது. இன்றைய சூழலில் மிகவும் அவசியமான ஒரு கூட்டமிது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போது ஆதரவளிக்கும்” எனக் கூறினார்.
பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன்
இறுதியாக பேசிய பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், “இன்று தமிழகத்தில் ஒரு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. டாஸ்மாக்கிற்கெதிராக போராடும் மக்கள், மாணவர்களை மட்டுமல்லாது சாதாரண அடிப்படை உரிமைகளுக்காக போராடும் மக்களின் மீது அரசு கடும் ஒடுக்குமுறை செலுத்துகிறது. தேர்தல் பாதையில் இருக்கும் அரசியல் கட்சிகளின் போராட்டங்களை கூட பார்ப்பன பாசிச ஜெயா அரசு மிகக் கடுமையாக ஒடுக்கி வருகிறது. இத்தகைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் பார்ப்பன பாசிசத்திற்கெதிராக அணிதிரளவேண்டுமென” என்று மற்ற ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைத்தார்.
இறுதிவரை ஏதேனும் கலவரம் ஏற்படும் என்பதை போலவே பீதியூட்டிக் கொண்டிருந்தது போலிசு. உண்மையில் போலிசு மிகவும் பீதியடைந்திருந்ததால்தான் இப்படி மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தின் இடையே ஜெயாவை போன்று வேடமிட்டுக் கொண்டு சாராயத்தை மாணவர்களுக்கும், மக்களுக்கும் கொடுப்பது போன்றும், அ.தி.மு.க அடிவருடிகள் குனிந்து தரையில் விழுந்து கும்பிடுவது போன்றும், ஜெயாவால் பாதிக்கப்பட்ட தமிழக பெண்கள் தலைவிரி கோலமாக ஜெயாவை தூற்றுவது போலவும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினரால் நடித்து காட்டப்பட்டது. இந்தக் காட்சி விளக்கம் பொது மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றது. சாலையில் போவோர் வருவோரெல்லாம் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதனால் கடுப்பானது அங்கிருந்த அ.தி.மு.க.வினரை விட போலிசுதான். இதனை தடுக்க வழி தெரியாமல் உடனடியாக மேலதிகாரிகளை தொடர்பு கொண்ட போலிசு, அதன் பின்னர் அவர்களுக்குள் ஆலோசித்து ஒரு புது சட்ட நியாயத்தை கண்டறிந்தனர். அனுமதி
ஆர்ப்பாட்டத்திற்குத்தான், நாடகத்திற்கு இல்லை என கண்டறிந்து வந்து தோழர்களை நிறுத்தமாறு மிரட்டினர். ஆனால் அதற்குள்ளாக இந்த காட்சி விளக்கம் அனைவரையும் சென்றடைந்து விட்டது. பின்னர் அதில் நடித்திருந்த தோழர்களை படம் பிடித்து மிரட்டியது போலிசு.
அதேபோல் பள்ளி மாணவர்கள் சிலர் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில் சாராய பாட்டிலையும் பிடித்துக் கொண்டு படிக்கவா? குடிக்கவா? என வினவியதைப் போன்ற காட்சியும் மக்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கூட்டத்திற்கு முதலில் ஒரு வண்டி நிறைய அதிரடிப்படையினரை வைத்திருந்தனர். கூட்டம் ஆரம்பித்து சிறிது தாமதமாகவே சென்னை புமாஇமு மாணவர்கள் சுமார் 200 பேர் அளவில் படையாக முழக்கமிட்டவாறே திரண்டு வந்து கூட்டத்திற்குள் புகுந்தனர். இதைக் கண்டு பீதியடைந்த போலிசு மேலும் இரு வாகனங்கள் நிறைய அதிரடிப்படையினரை வரவழைத்து ஆளுயர கொம்புகளை தயார் செய்து வைத்துக் கொண்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை திருப்பெரும்புதூர் நகர் மக்கள் ஆர்வமாக கூடி நின்று கவனித்தனர். அதிலும் குறிப்பாக மாணவர்கள் திரளாக கலந்துகொண்டது அப்பகுதி இளைஞர்களை வெகுவாகவே ஈர்த்தது.
தகவல் மக்கள் அதிகாரம் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்
கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தலித் மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையும், பள்ளி, கல்லுரிகளில் கல்வி கற்கும் உரிமையும் ஆதிக்கச் சாதிகளால் மறுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சாதி சார்ந்த கட்சிகளின் அடையாளமிட்ட கயிறு, டாலர், ஸ்டிக்கர், கைவளையம் உள்ளிட்ட பொருட்களை அணிந்து கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு சாதி மாணவர்களும் வகுப்பறையிலும் விளையாட்டு மைதானத்திலும் பேருந்துகளிலும் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். வட தமிழகத்தில் உள்ள மாணவர்களும் பா.ம.க மற்றும் வி.சி.க என்று கட்சிகளிலும் சாதிரீதியாக பிரிந்தே உள்ளனர்.
இவர்கள் படிக்கும் பள்ளி கல்லூரிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதைப் பற்றி மாணவர்களும் கவலை கொள்வதில்லை. இந்தக் கட்சிகளும் கவலை கொள்வதில்லை. அதே நேரம் சாதி ரீதியான மோதல் மட்டும் இம்மாணவர்களின் முக்கிய நிகழ்வாக உள்ளது. அதிலும் ஆதிக்க சாதி வட்டாரத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் நிலைமை மோசமாகவே இருக்கிறது.
1. கடலூர் மாவட்டம் ராம்பாக்கம் என்னும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாதி சார்ந்த கட்சிகளின் அடையாளம் கொண்ட சொரப்பூரை சார்ந்த தலித் மாணவருக்கும் சொர்நாவூரைச் சார்ந்த வன்னிய மாணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் தலித் மாணவர் பாதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட இவர் ராம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய தலித் நண்பர்களிடம் கூறியுள்ளார். இவர்கள் சொர்நாவூரை சார்ந்த மாணவனிடம், “ஏன் இவனை அடித்தாய்” என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே ராம்பாக்கத்தில் உள்ள வன்னிய இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ராம்பாக்கத்தில் உள்ள இரு சாதிகளுக்கும் இடையே சாதிமோதல் ஏற்பட்டது. வழக்கம் போல, இதில் தலித்துக்களே பாதிப்புக்குள்ளாகினர்.
2. திருவந்திபுரம் என்ற ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு தரப்பு மாணவர்கள் வகுப்பறையில் பிரிந்தே அமர்ந்து படித்து வருகின்றனர். கடந்த வாரம் ஆதிக்கச் சாதி மாணவிகள் தலித் மாணவனை அழைத்து, “பாடம் எழுதி விட்டாயா” என்று கேட்டுள்ளனர். இதை பார்த்த ஆதிக்கசாதி மாணவர்கள், “எங்கள் சாதிப் பெண்ணிடம் உங்களுக்கு என்னடா பேச்சு” என்று தலித் மாணவரை அடித்ததற்கு அந்த மாணவர் திருப்பி அடித்துள்ளார்.
தான் அடிவாங்கியதைப் பொறுத்துக் கொள்ளாத ஆதிக்கசாதி மாணவர்கள் தங்களின் ஊருக்குள் புகுந்து, “நம்ம சாதிப் பொண்ணுங்களை சேரிப் பயலுங்க கிண்டல் செய்கிரானுங்க கேட்டா அடிக்கிறானுங்க” என்று கூறி மொத்த ஊரையும் திரட்டிவந்து கண்ணில் பட்ட தலித் மாணவர்களை எல்லாம் கொடுரமாக தாக்கினர். சில தலித் மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறையில் வைத்து பூட்டியதைக் கண்ட சாதிவெறி கும்பல் வகுப்பறையின் கதவுகளை உடைக்க முயற்சிக்கும் போது தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் ஆசிரியை தடுத்துள்ளனர். இவர்களை சாதிவெறி கும்பல் பிடித்து கீழே தள்ளியதால் மயக்கமடைந்தனர். இவ்வளவு சம்பவங்கள்நடக்கும் போது எதையுமே கண்டுகொள்ளாமல் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று போலிஸ் வேடிக்கை பார்த்து ரசித்து நின்றது.
காவல் துறையும் கல்வி துறையும் இணைந்து நடத்திய விசாரணையில் தலித் மாணவர்கள் 7 பேரும், ஆதிக்க சாதி மாணவர்கள் 3 பேரும் சாதிக் கலவரத்துக்கு காரணமானவர்கள் என்று முடிவு செய்து அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
“இந்த ஜனநாயகத்தில் பாதிக்கப் பட்டவனுக்குத்தான் அதிக தண்டனையா என்றும், பள்ளியில் சாதி கலவரம் செய்தால் பள்ளியை விட்டு வெளியேற்றுகிறார்கள். ஊரில் சாதிக் கலவரம் செய்பவர்களை ஏன் ஊரைவிட்டு விரட்டுவதில்லை” என்பது மாணவர்களின் கேள்வியாக உள்ளது.
3. விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம், பாண்டிக்குப்பம் உள்ளிடப் பகுதியில் ஆலய வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதிற்கு எதிராக போராடிய தலித் மக்கள் கொடுரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் தீர்ப்பின் முடிவான தேரை இழுக்கும் உரிமை தலித்துகளுக்கு வழங்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முயுயாத ஆதிக்கசாதியினர் தேரையே கொளுத்திவிட்டுள்ளனர்.
இப்படி பள்ளியில் மட்டுமல்ல, வழிபாட்டு உரிமையிலும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றும் முழு உரிமை கிடைக்கவில்லை. மறுபுறம் தலித் மக்களின் பிரதிநிதிகளாக சொல்லிக் கொள்கிற தலித் கட்சிகளும் கூட அம்மக்களின் சமத்துவ உரிமைகளுக்காக மற்ற உழைக்கும் மக்களோடு ஐக்கியப் பட்டு போராடாமல் சராசரி ஓட்டுக் கட்சி வழிமுறைகளையே பிரதானமான அரசியல் வழிமுறைகளாக வைத்திருக்கின்றனர். அதன்படி திருவிழா வசூல், கட்டப் பஞ்சாயத்து என்று பிழைப்புவாதத்தில் மூழ்கிவிட்டனர். இறுதியில் ஆதிக்க சாதி வெறியர்களின் அட்டூழியங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அத்தோடு பா.ம.க போன்ற சாதிவெறிக் கட்சிகளும் தமது பிரதான அடிப்படையாக சாதிவெறியை கொம்பு சீவிவிடுவதையே வைத்திருக்கின்றனர்.
எனவே திருவிழா, பள்ளி, இன்னபிற பொது இடங்களில் எந்நேரமும் சாதிக் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது. இதில் பெரும்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களும் சிறுபகுதி ஆதிக்க சாதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுதான் ஆதிக்க சாதி வெறியர்களின் ஓட்டுக் கட்சி முதலீடாக உள்ளது.
எனவே ஆதிக்க சாதிவெறியர்களை குறிவைத்து அதே சாதிகளில் உள்ள உழைக்கும் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து போராட வேண்டும்.
15072015-Bangalore- Former Lokayukta justice N Santosh Hegde with others during protest against Lokayukta justice Y Bhaskar Rao in Bengaluru on Wednesday. DC photo
கர்நாடகா லோக்ஆயுக்தாவின் தலைமை நீதிபதி பாஸ்கர் ராவ்
லோக்பாலும் லோக் ஆயுக்தாவும் ஊழலை ஒழிக்க வந்த இரட்டைக் குழல் துப்பாக்கியாக வருணிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழலும் அதிகாரமுறைகேடுகளும் அந்தச் சித்திரத்தில் சாணியை அடித்துவிட்டன. “மற்றவர்கள் ஊழல் செய்தால் லோக் ஆயுக்தாவில் முறையிடலாம்; அந்த லோக் ஆயுக்தாவிலேயே ஊழல் நடந்தால் யாரிடம் முறையிடுவது?” – எனக் கேட்டு விக்கித்து நிற்கிறார்கள் ஊழலுக்கு எதிராகப் போராடிவரும் சமூக ஆர்வலர்கள். எனினும், இந்த விவகாரத்தை இவ்வளவு எளிமையாக – அந்தத் தெய்வத்தையே விசாரிப்பது யார் என்பது போன்ற நாடகபாணி வசனத்திற்குள் சுருக்கிவிட முடியாது.
கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழலில் அந்த அமைப்பின் தலைமையே சம்பந்தப்பட்டிருப்பதுதான் இங்கே கவனங்கொள்ளத்தக்கது. அதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ், அவரது உறவினர் கிருஷ்ண ராவ், லோக் ஆயுக்தாவின் இணை கமிஷனர் (Joint Commissioner) சையது ரியாஸ், லோக் ஆயுக்தாவின் தலைமை நிலைய ஊழியரான வீ.பாஸ்கர், ஹோட்டே கிருஷ்ணா – இவர்கள்தான் லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல், அதிகாரமுறைகேடுகளின் சூத்திரதாரிகள்.
மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீதிபதி பாஸ்கர் ராவின் மகன் அஸ்வின் ராவ்
பதவி ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள்தான் இந்தக் கும்பலின் பலியாடுகள். அத்தகைய அதிகாரிகளைத் தொலைபேசி அல்லது கைபேசி வழியாகத் தொடர்புகொள்ளும் இந்தக் கும்பல், “நீங்கள் இலஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது. அதை அமுக்குவதற்கு இவ்வளவு பணம் வேண்டும்; இல்லையென்றால் மானம் மரியாதையோடு ஓய்வுபெற்றுப் போக முடியாது” என மிரட்டிப் பணம் பறித்து வந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 2013-ல்தான் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் தலைமை நீதிபதியாக பாஸ்கர் ராவ் நியமிக்கப்பட்டார். பாஸ்கர் ராவுக்கு நெருக்கமான இந்தக் கும்பல், அவர் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளிலேயே 109 அதிகாரிகளை மிரட்டி, ஏறத்தாழ 180 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் பறித்திருக்கிறது. அதிகாரிகளை மிரட்டுவதற்கு லோக் ஆயுக்தா தலைமை அலுவலகத் தொலைபேசியையும், அவர்களை மிரட்டி வரவழைத்துப் பேரம் நடத்துவதற்கான இடமாக லோக் ஆயுக்தாவின் தலைமை அலுவலகத்தையும் பயன்படுத்தி வந்திருக்கிறது, இக்கும்பல். திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்துகொண்ட பழமொழியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கோ தலையாரி வீடே அலிபாபா குகையாக இருந்திருக்கிறது.
மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவின் இணை கமிசனர் சையது ரியாஸ்.
இக்கும்பலால் மிரட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற செயற்பொறியாளர், தன்னிடம் “ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக” லோக் ஆயுக்தாவின் போலீசு கண்காணிப்பாளர் சோனியா நாரங்கிடம் வாய்வழியாகப் புகார் அளித்தார். இதனையடுத்து 23 அதிகாரிகள் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் புகார் அளித்தனர். இவற்றின் அடிப்படையில் சோனியா நாரங்க் விசாரணை நடத்தி, அஸ்வின் ராவ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார். லோக் ஆயுக்தாவின் துணை நீதிபதி ஆதி சுரேஷ் இந்த ஊழல் குறித்து ஒரு உள் விசாரணை நடத்த உத்தரவிட்டு, பத்திரிகைகளுக்கும் இந்த ஊழல் குறித்த தகவல்களை அளித்தார்.
முதற்கட்ட விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபொழுதே, அவற்றை முடமாக்கும் சதித்தனத்தில் இறங்கினார், தலைமை நீதிபதி பாஸ்கர் ராவ். லோக் ஆயுக்தா போலீசு கண்காணிப்பாளர் சோனியா நாரங்க் நடத்தும் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு லோக் ஆயுக்தா கூடுதல் போலீசு டி.ஜி.பி பி.எஸ்.மீனாவிடம் தெரிவித்த பாஸ்கர் ராவ், இந்த ஊழல் புகார்களை பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசு விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
கர்நாடகா லோக் ஆயுக்தாவில் நடந்துள்ள ஊழல் குறித்து முறையான விசாரணை கோரி லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் பெங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டம்.
இந்தத் தில்லுமுல்லுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இன்னொருபுறமோ கர்நாடகா உயர்நீதி மன்றம் லோக் ஆயுக்தா துணை நீதிபதி ஆதி சுரேஷ் உத்தரவிட்டிருந்த உள் விசாரணைக்குத் தடை விதித்தது. சமூக ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் வழக்கம் போல சி.பி.ஐ. விசாரணை கோர, அதற்கு, “லோக் ஆயுக்தா சுதந்திரமான அமைப்பு; அதனைக் கலைக்க முடியுமே தவிர, அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிட முடியாது. அதன் விதிகளிலேயே அதனை விசாரிப்பதற்கான வழிமுறைகள் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார், கர்நாடகா மாநில முதல்வர்.
ஆயிரம் இருந்தாலும் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லியாக வேண்டுமல்லவா! இந்த ஊழலை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்திருக்கிறது, கர்நாடகா அரசு. அக்குழு அஸ்வின் ராவ் உள்ளிட்ட சிலரைக் கைது செய்ததோடு, அவர்களைத் தமது காவலில் வைத்து விசாரணையை நடத்திவருகிறது. இந்த விசாரணையை ஒரு நாடகம் எனக் குற்றம் சுமத்தியிருக்கிறார், கர்நாடகா லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைமை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. “பாஸ்கர் ராவ் தனது மகனைக் காப்பாற்ற முயலுகிறார்; மற்றவர்களோ அதன் மூலம் தங்களையும் சேர்த்துக் காப்பாற்றிக் கொள்ள முயலுகிறார்கள்” எனக் குறிப்பிட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.
***
சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ. இளங்கோ பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தகவல் உரிமை ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
லோக்பால், லோக் ஆயுக்தா மட்டுமல்ல, மைய ஊழல் தடுப்பு கமிஷன் (Central Vigilance Commission), தகவல் அறியும் உரிமைச் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் (Whistle Blower Act) – என கடந்த சில ஆண்டுகளில் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு பல புதிய சட்டங்களும், புதிய அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. குடிமைச் சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் மட்டுமின்றி, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும் இத்தகைய அமைப்புகளைக் கைதட்டி வரவேற்பதோடு, நிலவுகின்ற அரசியல் கட்டமைப்புக்குள்ளேயே இவற்றின் மூலம் ஊழலையும் அதிகார முறைகேடுகளையும் ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் முயன்று வருகின்றனர். அவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மோசடியான நம்பிக்கை ஏற்கெனவே பல்லிளித்துவிட்டது என்பதற்கு கர்நாடகா லோக்ஆயுக்தாவையும் தாண்டிப் பல உதாரணங்கள் உள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிறவி ஊனம் கொண்டதாகும். இராணுவம் மற்றும் உளவுத் துறை நிறுவனங்களிடமிருந்து அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பெற முடியாதபடி அவற்றுக்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விலக்கின் மூலம் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்நிறுவனங்களில் புழுத்து நாறும் ஊழலையும் மறைத்துவிட முடியும். அதேசமயம், மற்ற துறைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இச்சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுவிடுவதும் சாத்தியமானதல்ல.
பொய்யான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் மருத்துவத்திற்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்ற விவரத்தைக் கேட்டுத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், “இது நீதிபதிகளின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும்” எனக் கூறி, அந்த விவரத்தை அளிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது. இப்படி ஒவ்வொரு துறையும் ஏதோவொரு காரணத்தைக் கூறித் தகவல்களை அளிக்க மறுப்பதும், தகவல்களுக்குப் பதிலாக வெற்றுக் காகிதக் குப்பைகளை அனுப்பி வைத்து ஏமாற்றுவதும் இந்த விவகாரத்தில் சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. மேலும், உச்சநீதி மன்றம், சி.பி.ஐ., மத்திய பணியாளர் தேர்வாணையம், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல அரசுத் துறைகளும், பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தம்மையும் விலக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளன.
இதற்கு அப்பால், தகவல் உரிமை ஆணையங்கள் அரசின் எடுபிடியாகச் செயல்பட்டு வருவதற்குத் தமிழகத் தகவல் ஆணையத்தை முன்மாதிரியாகக் குறிப்பிடலாம். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இரண்டு ஆணையர் பதவிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பாமல் காலியாக விட்டிருப்பதன் மூலம் ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறது, அ.தி.மு.க. அரசு. தகவல்களை உரிய காலத்தில் தராத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்க வேண்டும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் தமிழகத் தகவல் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீபதியோ, “அரசு அதிகாரிகள் மீது அபராதம் விதித்து அரசு கருவூலத்தை நிரப்ப நான் விரும்பவில்லை” எனக் கூறி, அதிகாரிகளின் பாதுகாவலனாகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் அதிகாரிகள் தகவல்களைத் தராமல் கிடப்பில் போடுவதற்கான வழியைத் திறந்து வைத்துள்ளார், அவர்.
மேலப்பாளையத்திலுள்ள மலை சட்டவிரோதமாக வெட்டி உடைக்கப்படுவதை அம்பலப்படுத்திய ‘குற்றத்திற்காக’ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தகவல் உரிமைச் செயற்பட்டாளர் மதியழகன்
தமிழக அரசின் விளம்பரங்களுக்காக செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்த விவரங்களைத் தருமாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ. இளங்கோ விண்ணப்பித்த மனுவிற்குப் பதில் தராமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், இது குறித்த விசாரணை தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி முன் நடந்தது. அப்பொழுது சிவ.இளங்கோ தன் முன்னே நாற்காலியில் அமர்ந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, அவர் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி அவரைக் கைது செய்ய வைத்தார், ஸ்ரீபதி. அரசிடமிருந்து தகவல் கேட்டால் கைதுதான், சிறைதான் என இதன் மூலம் எச்சரித்திருக்கிறது, தமிழக அரசு.
மைய ஊழல் தடுப்பு ஆணையத்தில் கடந்த ஜனவரி 2007 தொடங்கி செப்டம்பர் 2014 முடிய அதிகாரமுறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக 3,634 புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதில் 1,063 புகார்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதில் 78 வழக்குகளில் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் – இடமாறுதல், பதவி உயர்வும் சம்பள உயர்வும் நிறுத்திவைப்பு என்ற வகையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழலில் ஈடுபட்ட ஒரு அதிகாரி மீதுகூட கிரிமனல் குற்றவழக்கு தொடர பரிந்துரைக்கப்படவில்லை. இது, ஊழல் தடுப்பு ஆணையம் என்பது சோளக்காட்டுப் பொம்மையைவிட நகைப்புக்குரிய நிலையில் இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இப்படி புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் கேலிக்குரியதாக இருக்கின்ற அதேபொழுதில், மோடி அரசோ ஊழல் தடுப்புச் சட்டங்களில் கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது காணப்படும் வீரியத்தையும் பிடுங்கிவிடும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதார வளரச்சிக்குச் சாதகமாக அதிகாரிகளின் சுதந்திரமான செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவதற்கு, ஊழலையும், நேர்மையான பிழையையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம்-1988-ல் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென நிதியமைச்சரே பரிந்துரை செய்திருக்கிறார். இத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்து நிற்கின்றன. இதன் பொருள் இயற்கை வளங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கைமாற்றிவிடுவதில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளைச் சட்டபூர்வமாக்குவது தவிர வேறில்லை.
இதனையடுத்து, அரசு இயந்திரத்துக்குள் நடைபெறும் ஊழல்களை அம்பலப்படுத்துவோரைத் தடுக்கும் நோக்கத்தோடு இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்களைச் செய்திருக்கிறது, மோடி அரசு. இதன்படி, ஊழல் புகார்களைத் தெரிவிக்கும் இடித்துரைப்பாளர்கள் தமது பெயர், முகவரியை மறைத்துக் கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்பது கைவிடப்பட்டு, அவர்கள் தமது அடையாளத்தை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும்; ஊழல் புகார்களைத் தெரிவிப்பவர்களை அரசு அலுவல் இரகசியச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்பதும் கைவிடப்பட்டு, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தும் திருத்தங்களும் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் தேசப் பாதுகாப்பு, அந்நிய நாடுகளில் இருந்து பெறப்படும் பகிர்ந்துகொள்ள முடியாத தகவல்கள், வர்த்தக நலன்கள் ஆகியவை குறித்த புகார்களை விசாரிப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டு, இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் மேலும் நீர்த்துப் போகுமாறு திருத்தப்பட்டுள்ளது.
காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் லோக்பால் சட்டம் என்ற பஞ்சு மிட்டாய் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஊழலைச் சகித்துக்கொள்ளாத யோக்கியவானாகக் காட்டிக்கொள்ளும் மோடி அரசோ, இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செவது என்ற பெயரில் இந்த பஞ்சு மிட்டா சட்டத்தையும் முடக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாக, மைய அளவில் செயல்பட வேண்டிய லோக்பால் அமைப்பை உருவாக்குவதையும் தடுத்து வைத்திருக்கிறது.
இந்தக் குழிபறிக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்துவர, தகவல் அறியும் உரிமைச் சட்டம், இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் போன்றவை ஊழலை ஒழிப்பதைவிட, அவற்றை ஆதரித்துச் செயல்படுபவர்களைத்தான் அபாயகரமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. தகவல் உரிமை ஆர்வலர்கள் கொல்லப்படுவது இன்னமும் நாடெங்கும் தொடர்ந்து நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயற்பாட்டாளர் மதியழகன் தற்பொழுது குண்டர் சட்டத்தில் கைது செயப்பட்டிருக்கிறார். காரணம், ராசிபுரம் அருகேயுள்ள மோளப்பாளையத்திலுள்ள ஒரு மலையைச் சட்டவிரோதமாக வெட்டியெடுத்ததில் அம்மாவட்ட ஆட்சியர் வரை பலருக்கும் உள்ள பங்கை வெளிக்கொணர்ந்து, அந்தக் கொள்ளையை எதிர்த்துப் போராடியதுதான், அவர் செய்த ‘குற்றம்’. வியாபம் ஊழலை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் பாண்டேவுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பை தில்லி போலீசு விலக்கிக் கொண்டுவிட்டதால், அவர் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இருப்பதற்குள்ளேயே கர்நாடகா லோக் ஆயுக்தா அமைப்புதான் உருப்படியானது என்று பேசப்பட்டு வந்த நிலையில்தான், அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறியிருக்கிறது. இந்நிலையில் மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் லோக் ஆயுக்தாக்களின் யோக்கியதையைப் பற்றிப் பேச வேண்டிய தேவையேயில்லை. பழைய அமைப்புகள் போலவே இப்புதிய அமைப்புகளும் தமது கடமைகளை ஆற்ற மறுத்து, அதற்கு எதிராகத் திரும்பிவிட்டன. அன்னா ஹசாரேயும் ஆம் ஆத்மி கட்சியினரும் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்டு, இப்புதிய அமைப்புகள் குறித்து உருவாக்கிய பிரமையெல்லாம் தகர்ந்து தவிடுபொடியாகிவிட்டது.
இருப்பவர்களுக்குள்ளே கொஞ்சம் யோக்கியவான் என வடிகட்டிப்பட்டுதான் நீதிபதி பாஸ்கர் ராவ் கர்நாடகா லோக் ஆயுக்தாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரோ புறங்கையை நக்கிவிட்டார். ஆனாலும், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினர் லோக் ஆயுக்தா போன்ற நிறுவனங்களுக்கு இன்னும் ஆகச்சிறந்த, அப்பழுக்கற்றவர்களைத் தேடிப் பிடித்து நியமிப்பதுதான் தீர்வு எனக் கூறி, இந்தப் பொத்தலை அடைத்துவிட முயலுகிறார்கள். இந்த சூப்பர்மேன் தத்துவமெல்லாம் அந்நியன், இந்தியன் போன்ற சினிமாக்களுக்குத்தான் பொருந்திப் போகுமே தவிர, தனியார்மய யுகத்தில் நடைபெறும் ஊழலைத் தடுக்க மயிரளவிற்குக்கூடப் பயன் தராது. நம் கண் இருப்பவர்களெல்லாம் ஸ்ரீபதி, பாஸ்கர் ராவ் போன்ற பசுந்தோல் போர்த்திய புலிகள்தான். அத்திபூத்தாற் போல ‘அப்பழுக்கற்றவர்கள்’ இந்த நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டாலும், அவர்களும் கூடத் தமக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கும், தமது நடைமுறைக்கும் ஏற்கெனவே ஊழலால் நிறைந்து இருக்கும் அரசு இயந்திரத்தைதான் நம்பியிருக்க வேண்டும் எனும்பொழுது, இந்த நிறுவனங்கள் கூத்தில் கோமாளி வேடம் போடுவதைத் தாண்டி வேறு எதையும் சாதிக்க முடியாது.
இவையெல்லாம், ஊழல், அதிகார முறைகேடுகளை நிலவுகின்ற அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒழித்துவிட முடியாது என்பதையும், அதற்கு இந்த அமைப்பு முறையைச் சாராத புதிய மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டிய அவசியத்தையுமே எடுத்துக் காட்டுகின்றன.
எங்காவது பெஞ்சு தட்டும் சத்தம் கேட்டால், சட்டப்பேரவை தொடங்கிவிட்டது என்று பிறந்த குழந்தையும் நினைக்கும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. ஒண்ணு பெஞ்சை தட்டு, இல்லை ‘அம்மா’ ஆட்சியை எதிர்த்துப் பேசும் ஆளை தட்டு எனுமளவுக்கு முதல் ரவுண்டிலேயே கூச்சல் கிளம்பிள்ளது.
அம்மாவின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்’
“அது என்ன கெட்ட வார்த்தைன்னே தெரியல!” என்று சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வெளியே வந்து விளக்கம் கேட்குமளவுக்கு, அம்மாவின் உண்மை விசுவாசிகள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அங்கேயே ‘முழு உடல் பரிசோதனை’ திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்.
அபஸ்வரங்களுக்கு இடையே ‘அம்மாவுக்கே’ சிரிப்பு வரும்படி அவ்வப்போது சரத்குமார், தனியரசு, செ.கு.தமிழரசன் மற்றும் வெளிப்படையாகவே “இந்த சந்தைக் கடையில் நாங்கள் எந்த பிராண்ட்?” என்று கேட்ட தே.மு.தி.க அதிருப்தி எம.எல்.ஏவான அருண்பாண்டியன் போன்றோரின் மானாட மயிலாட கூத்து நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் ‘புரட்சித்தலைவர்’ ‘புரட்சித்தலைவியின்” படங்களிலிருந்து சூப்பர் சிங்கர் போட்டி தொடரலாம்.
‘சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனைகளை பேசவும், விவாதிக்கவும், தீர்வு காணவும் ஜனநாயகம் புழங்கும் இடம்’ என்றும், ‘மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதன் மூலம் இது மக்களும் பங்குபெறும் மக்களாட்சி’ எனவும் சொல்லப்பட்ட நீதி நெறிமுறைகள் அந்த மன்றத்திலேயே புதைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே இங்கே அவர்கள் எது பேசவும் வாய்ப்புமில்லை, உரிமையுமில்லை என மக்களைப் பார்த்து நியாயம் கேட்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உரிமைகளையே காலில் போட்டு மிதிக்கும் இந்த அரசமைப்பு மக்களின் குரலை எந்த அளவுக்கு மதிக்கும் என்பதற்கு தனியே ஆராய்ச்சி தேவை இல்லை.
தி.மு.க. , காங்கிரசு, இடது, வலது கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க., புதிய தமிழகம், ம.ம.க. என பல கட்சிகளும் தனிநபர் மசோதாவும் கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொடுத்தாலும் பேரவை விதி முறைப்படியே விதி 55-ன் படி பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மதுவிலக்கு பற்றி பேச ஜவாஹிருல்லா மனு கொடுத்தும் எல்லாம் துறைவாரியான மானியக் கோரிக்கையின் போது அம்மாவுக்கு திருஷ்டிப் பொட்டாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார் சபாநாயகர்.
அம்மாவின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்’ உறுப்பினர்களின் எல்லாக் குரலையும் ஒரே தள்ளாக தள்ளிவிடுகிறார். அம்மா உணவகம் போல இது அம்மா சட்டமன்றம். சும்மா இருப்பவர்க்குத்தான் இங்கு வேலை. அம்மா சகஸ்ரநாமங்களையும், அவிழ்த்துவிடும் 110 விதியின் கீழான மந்திரங்களையும் கேட்டுக் கொண்டிருப்பவருக்குத்தான் இங்கு இடம். சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு இங்கு யாரும் அழுத்தம் கொடுத்தால் சட்டமன்ற நடவடிக்கை பிதுக்கி வெளியே தள்ளிவிடும். எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளின் எந்தக் குரலையும் பெருந்தெய்வம் குளிர்காயும் குமுட்டி அடுப்பில் வைத்து இடிக்கும் இந்த சட்டமன்றத்தை மக்களுக்கான ஜனநாயகம் என்று எந்தக் கிறுக்கனாவது ஒத்துக்கொள்ள முடியுமா? காண்பதெல்லாம் பதினெட்டுப்பட்டி நாட்டாமையும் மரத்தடியும் சொம்பும்தான்!
அம்மா உணவகம் போல இது அம்மா சட்டமன்றம்
வெளிப்படையாக தமிழக ஊடகங்களில் ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், ஆற்றுமணல் கொள்ளை பற்றிய ஒரு உறுப்பினரின் கேள்விக்கு, “அப்படி ஒன்று தமிழகத்தில் கிடையவே கிடையாது, விதி மீறி எந்த இடத்திலும் மணல் அள்ளவே இல்லை!” என்று முதல் கிடாவை வெட்டி அம்மனுக்கு காணிக்கையாக்கியுள்ளார் ஓ.பி!
விருத்தாச்சலம் வெள்ளாறு, சேத்தியாதோப்பு பகுதி ஆறு, வேலூர் கானாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் தமிழகமெங்கும் மக்கள் ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக போராடும் போது போலீசை விட்டு மண்டையை உடைத்தவர்கள்! மக்களை மதிக்கும் மக்களாட்சியின் யோக்கியதை இதுதான்!
இன்னொரு உறுப்பினர் மின் பற்றாக்குறை பற்றி கேட்ட கேள்விக்கு, “சும்மா பொழுதை போக்க பேசக் கூடாது, சந்தேகமிருந்தால் சுவிட்சில் கையை வைத்து பாருங்கள்” என்று நத்தம் விஸ்வநாதன் அம்மாவின் கொலைவெறி ரசனைக்கு தீனி போடுவதுதான் சட்டமன்ற ஜனநாயகத்தின் மாண்பு!
இவர்தான் டாஸ்மாக்கை மூடச்சொன்னதற்கு “முதலில் இந்தியாவை நிறுத்தச் சொல்! குடிப்பவனை நிறுத்தச் சொல்! அவனை நிறுத்த சொல்! நான் நிறுத்துகிறேன்” என்று வசனம் பேசும் நாயகர்!
இவர்களே ஏற்றுக் கொண்ட ஜனநாயக நெறிப்படி கேள்விகளை எதிர்கொள்வதும் அதற்குரிய பதில் அளிப்பதும் கடமை. ஆனால் கேட்டவர்களை நக்கலடிப்பது, நாலந்தர வசனத்தால் வறுத்தெடுப்பது, நாற்காலியை விட்டே ஓட வைப்பது என்று சீரழிந்த இந்த பேய் பங்களாவில் உறுப்பினர்களுக்கே மதிப்பில்லாத போது மக்களுக்கு ஏது? இதைப்பற்றி சபாநாயகரிடம் முறையிடுவது பேயைப் பற்றி அதன் பாட்டியிடம் புகார் சொல்வது போல வேலைக்கு ஆவாதது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் அம்பானிக்கும், அதானிக்கும் அந்திய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், அரசியலில் கொள்ளையடிப்பதற்கும் மட்டுமே அதிகாரத்தை குவித்து வைத்திருக்கும் இது, மக்களைப் பொறுத்தவரை வெட்டி மன்றம் மட்டுமல்ல மக்கள் விரோத மன்றமும் ஆகும்.
சொந்த அனுபவத்தில் மக்கள் புரிந்து வைத்திருக்கும் இந்த உண்மையை இன்னும் உணராதவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைப் பாருங்கள்! கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் சட்டப் பேரவைக்கு வெளியே வந்து மைக்குக்கு நேரே “உள்ளே எதையும் பேச விடுவதில்லை, மக்கள் பிரச்சனைகளை பேச எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்று மக்களைப் பார்த்து அவர்கள் நியாயம் கேட்பதிலிருந்தே தெரியவில்லையா? உண்மையான மக்களின் அதிகாரம் இந்த அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது என்பது!.
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்கள், கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஓசூர் என பல பகுதிகளில் கைதான மக்களுக்கும் தோழர்களுக்கு பெயில் எடுப்பதற்கான தொடர் முயற்சிகளில் நமது வழக்குரைஞர்கள் தோழர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தப் போராட்டத்தில்… சில நிகழ்வுகள்!
விருத்தாசலம்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் வழக்கறிஞர் ராஜூ மற்றும் பிற தோழர்கள்
மேலப்பாலையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை மூடிய போராட்டத்தில் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்கில் வழக்கறிஞர் ராஜு உட்பட பொதுமக்கள் 12 பேர் மொத்தம் 13 போராளிகளை 21-8-2015 அன்று விருத்தாசலம் குற்றவியல் நடுவர் எண் II நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது காவல்துறை கைவிலங்கு போட முயற்சித்த போது வழக்கறிஞர் ராஜு மற்றும் பொதுமக்கள் மறுத்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் “கைவிலங்கு போட்டுதான் அழைத்துச் செல்வோம்” என்று சொன்னபோது, வழக்கறிஞர் ராஜு, “நீங்கள் எங்களுக்கு கைவிலங்கு போட்டால் நீதிமன்றத்தில் புகார் செய்வோம்” என்று கூறியுள்ளார்.
வழக்கறிஞர் ராஜூ
அதற்கு CL 632 என்ற போலீஸ் “உங்களை நாங்கள் நேராக நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால்தானே புகார் செய்வீர்கள். கடலூர் O.T. காவல்நிலையத்தில் நீங்கள் தப்பிக்க முயற்சி செய்தீர்கள் என்று F.I.R. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துதான் அழைத்துச் செல்வோம்” என்று மிரட்டியுள்ளார்.
பிறகு காவல்துறை வாகனத்தில் வரும்போது, “இரண்டுபேர் சேர்ந்து ஒரு விலங்கு போட்டுக் கொள்கிறீர்களா? அல்லது தனித்தனி விலங்கு போட்டுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டுள்ளனர். அதற்கும் நம்முடைய தோழர்கள் மறுத்துள்ளனர்.
மக்கள் அதிகார அமைப்பின் தோழர்களும், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராக கோஷம்
அதற்கு ஒரு போலீஸ், “நீங்கள் கைவிலங்கு போட மறுத்தால் அனைவரையும் விருத்தாசலம் பாலக்கரையில் இறக்கி கைவிலங்கு போட்டு நடத்தியே அழைத்துச்செல்வோம்” என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல் வழக்கறிஞர் ராஜு மற்றும் பிற தோழர்கள் கைவிலங்கு போட மறுத்து விட்டனர்.
பின்னர் விருத்தாசலம் நீதிமன்றத்தில் அழைத்து வந்த போது நீதிமன்றம் முன் மக்கள் அதிகார அமைப்பின் தோழர்களும், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராக கோஷம் போட்டனர்.
பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மூத்த வழக்கறிஞர் வே.அம்பேத்கார் தலைமையில் வழக்கறிஞர் R.புஷ்பதேவன் மற்றும் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி நீதிமன்ற காவல் அடைப்பு உத்தரவிடகூடாது என்று மனு கொடுத்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கறிஞர் ராஜுவிடமும், மற்ற பொதுமக்களிடமும் தனித்தனியாக, “உங்களுக்கு கைவிலங்கு போடச் சொல்லி மிரட்டினார்களா” எனக் கேட்டு தெரிந்துகொண்டார்.
அதன் பிறகு விருத்தாசலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து மூடிய பொய் வழக்கில் மக்கள் அதிகாரம்-தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு அவர்களை 27-8-2015 அன்று விருத்தாசலம் குற்றவியல் நடுவர் I நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது கைவிலங்கு போட முயற்சி செய்துள்ளனர். அதற்கு வழக்கறிஞர் ராஜு கைவிலங்கு போட மறுத்திருக்கிறார்.
அதற்கு எஸ்கார்டு இன்சார்ஜ் த.பழனிச்செல்வன், எஸ்.ஐ அவமரியாதையாக அநாகரிகமான முறையில் பேசியுள்ளார். நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் ராஜு, அங்கிருந்த வழக்கறிஞர்களிடம் சம்பவத்தை விளக்கினார். சம்பந்தப்பட்ட எஸ்கார்ட் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதியிடம் பெட்டிசன் மனு ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார்.
இதை அறிந்த காவல்துறை ஏட்டு ”சார், இதெல்லாம் வேண்டாம், அவர் செய்தது தப்புதான். அவரே அதை ஒப்புக்கொள்கிறார். உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறார். கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க” என்று அவர் எழுதும்போது பவ்யமாக கேட்கிறார்.
உளவுத் துறை போலீசு கண்காணிப்பு
அதற்கு வழக்கறிஞர் ராஜு, “சார் இது மூன்றாவது முறை. போனமுறையும் இப்படித்தான் உடன் இருந்தவர் சொன்னார். அதனால் சரி என்று விட்டோம். ஆனால் இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கூட வந்த கான்ஸ்டபிளை கேட்டுப் பாருங்க. என்ன திமிராக பேசினார் என்று” என்று பதிலளித்தார்.
இதையெல்லாம் கேட்டுவிட்டு, “தப்புதான் சார். அவருக்கு நீங்க யார் என்று தெரியாது, அங்கிருந்து அனுப்பரவங்க உங்கள பத்தி சொல்லி அனுப்பணும். இங்க என்றால் எங்களுக்கெல்லாம் உங்களை பற்றி நன்றாகத் தெரியும். இந்த ஒருமுறை மன்னித்து விடுங்க சார்” என்றார்.
அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ”அண்ணா நீங்க எழுதுங்க” என்று கூறினர்.
மற்றொரு வழக்கறிஞர், “வாங்க ஏட்டய்யா, டீ சாப்பிட்டு வரலாம். அவரு எழுதட்டும்” என்றார்.
ஆனால் ஏட்டய்யா நகராமல் வழக்கறிஞர் ராஜு விடம் ”சார் இந்த ஒருமுறை விட்டுடுங்க என்றார்”.
வழக்கறிஞர் ராஜு, “நீங்க யார் சார், முதலில் நான் எழுதறேன். நீதிபதியிடம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று பிறகு முடிவு செய்யலாம்” என்றார்.
அந்த பெட்டிசனில் ” நான் வழக்கறிஞர். நான் ஒரு அரசியல் கைதி. எனவே மேற்படி வழக்கில் கைதாகியுள்ள யாருக்கும் கைவிலங்கு போடக்கூடாது என உத்தரவிட வேண்டும்” எனவும், “எஸ்கார்ட் பழனிச்சாமி, S.I. ஆகியோர் முறைகேடாக நடந்து கொண்டு என்னை மிரட்டினார்கள்” என்றும், “என்னை ஒருமையில் பேசினார்கள் என்றும், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பெட்டிசனை வழக்கறிஞர் நீதிபதியிடம் சேர்த்தார்.
இதற்கிடையில் வழக்கறிஞர் ராஜுவை சிறைக்கு அழைத்துச்செல்ல மேற்சொன்ன அதிகாரிகளுடன், டி.எஸ்.பி.யும் வந்து இருந்தார்.
அவர் “All fingers art not equal. ஏதோ ஒரு கேசை பார்த்துட்டு யார் என்னன்னு தெரியாம ஒரே மாதிரி நடத்துக்கறாங்க. They are immatured” என்றார்.
அதற்கு வழக்கறிஞர் ராஜு, “என்ன சார் பேசறீங்க. 75 வயது நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் டாஸ்மாக்கை மூடு என்று சொல்லி கைதாகியிருக்கிறார். அவரிடம் போய் உன்னை கைவிலங்கு போடு, இல்லையென்றால் தப்பிக்க முயன்றதாக பொய்கேசு போட்டுதான் எல்லாரையும் கூட்டிட்டுப்போவேன் என்று திமிராகப் பேசறாங்க. நான் கேட்கறேன், பேசும்போது யார்கிட்ட பேசறோம், எங்க பேசறோம் என்று உணர்வு இல்லாமல்…. மூளையை கழட்டி வைச்சுருவாங்களா” என்றார் கோபமாக.
டி.எஸ்.பி. பதில் சொல்ல முடியாமல் அமைதி ஆனார்.
மேலும் வழக்கறிஞர் ராஜு, “இதையெல்லாம் பார்க்கும்பாது இவை எதுவுமே மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என்றார்.
உடனே டி.எஸ்.பி. “பார்த்தீங்களா? பழியை எங்களிடமே போடுறீங்க” என்றார்.
அதற்கு ராஜு, “ஆமாம் சார். அப்படித்தான் சந்தேகப்படறேன்” என்றார்.
அதன்பிறகு அவசர அவசரமாக ராஜுவை போகலாம் என்று டி.எஸ்.பி. காவல்துறை வேனில் அழைத்துச்சென்றார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே திரும்பவும் டி.எஸ்.பி.-யுடன் ஒரு ஜீப்பில் ராஜு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். என்னவென்று கேட்டபோது, நீதிபதியிடம் மறுதேதி வாங்காமலேயே அவசரமாக போய்விட்டதாக சொல்லி நீதிபதி வரசொல்லியிருக்கிறார் என்று தெரிந்தது. நீதிபதி வழக்கறிஞர் ராஜுவை நேரில் அழைத்து மறுதேதி குறிப்பிட்டு பிறகு அனுப்பி வைத்தார்.
மூடு டாஸ்மாக்கை என்று போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். அதற்கு அஞ்சாமல் மறுத்தனர் நம் தோழர்கள். உண்மையிலேயே கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்” என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பத்திரிகை செய்தி
செய்தி
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்டம்
சென்னை
பச்சையப்பா கல்லூரி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவ தோழர்களை கைதாகும் பொழுது போலீசு கடுமையாக தாக்கியதை உலகமே பார்த்து காறித்துப்பியது. சட்டவிரோதமாக காவல்நிலையத்திலும் மணல் நிரப்பிய பைப்பால் அடித்தது! அன்று இரவு மாணவர்களை ரிமாண்ட் செய்வதற்காக போலீசு நீதிபதி வீட்டிற்கு அழைத்துவந்தது!
பச்சையப்பன் கல்லூரி, பு.மா.இ.மு மாணவர்கள் போராட்டம் (கோப்புப் படம்)
ஊர் அடங்கியதும் இரவு 9.30 மணிக்கு நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். “ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்கும் வழக்கில் உரிய காரணங்கள் இல்லாமல் ரிமாண்ட் செய்யக்கூடாது” என உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினோம். நீதிபதி அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, மாணவர்களை சிறையில் அடைப்பதிலேயே காவல்துறை கண்ணும் கருத்துமாய் இருந்தது.
கைது செய்த பொழுதும், காவல்நிலையத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததை எடுத்து சொல்லியும் நீதிபதிக்கு பதைபதைப்பு வரவில்லை. இவ்வளவு மோசமாக தாக்கியிருக்கிறீர்களே என போலீசை நீதிபதி கண்டிக்கவுமில்லை.
நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த நீதிபதியை, காவல்நிலையத்தில் மாணவர்களை அடித்ததை ஒவ்வொருவராக சொல்வதை உட்கார்ந்து விரிவாக பதிவு செய்யவேண்டும் என கோரினோம். “நானும் மனுசன் தானே!” என சொல்லி, சீக்கிரம் முடிச்சுட்டு தூங்க போகணும் என ஒரு இயந்திரத்தை போல போலீசு கேட்ட கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்புவதிலேயே இருந்தார். காவல்நிலையத்தில் போலீசு அடிப்பதையெல்லாம் இவ்வளவு பெரிதுபடுத்துகிறோம் என அசுவாரசியமாய் கேட்டு பதிவு செய்தார்.
அடித்ததை பதிவு செய்யும் பொழுது மாணவர்களை நீதிபதி “வா! போ!” என ஒருமையில் அழைத்தார். “பொது நோக்கத்திற்காக போராடிய அந்த மாணவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. போலீசை போல ஏன் நடந்துகொள்கிறீர்கள்? மரியாதையாக அழையுங்கள்” என பல வழக்குரைஞர்களும் போராடிய பிறகுதான், ஏற்கனவே கேட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் உணவிற்கு அனுப்பிவைத்தார். எல்லா மாணவர்களுக்கும் வெளிக்காயங்களுக்கு மட்டும் பெயருக்கு டிஞ்சர் போட்டு, உள்நோயாளியாக அனுமதித்து விடக்கூடாது என மருத்துவர்களை டீல் செய்து, திரும்ப அழைத்துவந்தார்கள்.
நீதிபதியின் நடவடிக்கையை கவனித்த பொழுது, சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் மக்களை அடிக்கும் ஒவ்வொரு போலீசுக்கும் ஐ.ஜி நம்மள காப்பாத்துவார் என்பதை விட, “ஜட்ஜய்யா! நம்மள காப்பாத்துவார்” என்ற நம்பிக்கை எல்லா போலீசுக்கும் இருக்கும் என அப்பட்டமாக தெரிந்தது!
கொசுறு செய்தி : இரவு 9.30 மணி அளவில் நீதிபதி வீட்டிற்கு மாணவ தோழர்களை அழைத்து வந்த பொழுது, அரசை, போலீசை அம்பலப்படுத்தி முழக்கம் எழுப்பினார்கள். இதனால் பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த இன்னொரு நீதிபதி வந்து மாணவர்களையும், நம்மையும் பார்த்து “தூக்கம் கலைக்கிறீர்களே!” என விசனப்பட்டார்.
டாஸ்மாக் போராட்டம் அன்றைக்கு தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது, தூக்கம் கலைத்ததற்காக கவலைப்படுகிறார்! நாம் பலரின் ’தூக்கத்தை’ கலைக்க வேண்டியிருக்கிறது!
இன்று தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை/போலீசுக் காட்டாட்சி ஜெயலலிதா தலைமையில் நடக்கிறது.
“மூடு டாஸ்மாக்கை” – பள்ளி மாணவர்கள் போராட்டம் (கோப்புப் படம்)
மதுவிலக்கு கோரியும் சாராயக் கடைகளை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை, மனிதச் சங்கிலி வரை அமைதி வழியில் போராடும் பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் போலீசால் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கப்படுகின்றனர். போராடுபவர்கள் மீது கொலை முயற்சி போன்ற கடுமையான வழக்குகள் ஏவப்படுகின்றன.
டாஸ்மாக்கிற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மதுரை, ராஜபாளையம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உளவுத் துறையினர் மூலம் போட்டோ எடுத்து மிரட்டப்படுகின்றனர். திருச்சியில் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களை “மாவோயிஸ்டுகளைப் போல் என்கவுண்டரில் கொல்லப் போவதாக” மிரட்டுகிறது கியூ பிரிவு போலீசு. சட்டப் பேரவையில் கூட எதிர்க் கட்சிகள் மதுவிலக்கு தொடர்பாகப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது.
“மூடு டாஸ்மாக்கை, கெடுவிதிப்போம் ஆகஸ்டு 31” என மக்கள் அதிகாரம் அமைப்பு விடுத்த அறைகூவலை தமிழக மக்களும் மாணவர்களும் ஆகஸ்டு மூன்றாம் நாளே அமுல்படுத்தத் தொடங்கி விட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ விருத்தாச்சலம், கோவை, விழுப்புரம் எனத் தமிழகம் முழுவதும் பற்றிப் படந்தது. டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடக்கோரும் மக்கள் போராட்டம், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என அனைவரையும் போராட்டக் களத்தில் கொண்டு வந்து நிறுத்தி ஒரே குரலில் பேச வைத்தது.
ஜெயலலிதா அரசோ ஒட்டு மொத்த தமிழகத்தின் டாஸ்மாக் எதிர்ப்பையும் துச்சமாகக் கருதி, போராடும் மக்கள் மீது கொடிய அடக்குமுறையை ஏவி விடுகிறது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போர்க்குணமான போராட்டத்தைக் கண்டு தனது மாமூல் வசூல் பறிபோய்விடும் என்று ஆத்திரமடைந்து, கல்லூரி மாணவர்களை போலீசு நிலையத்தில் தாக்கியதோடு, சிறையிலும் சித்திரவதை செய்தது. விசாரணை செய்த நீதிபதியும் போலீசின் சித்திரவதையை உறுதி செய்துள்ளார். அதோடு சட்ட விரோதமாக பெண்கள் சிறைக்குள் சென்று மாணவிகளை மிரட்டி, ஆபாசமாகவும் பேசியுள்ளது உளவுத்துறை போலீசு.
மதுவிலக்குக் கோரி அறவழியில் போராடிய சசிபெருமாளை ஜெயா அரசு தனது அலட்சியத்தால் கொலை செய்தது. அதையும் தாண்டி சசிபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் புளுகிக் கொச்சைப்படுத்தியது; டாஸ்மாக் எதிர்ப்பு மட்டுமல்ல, குடிநீர், சாலை, குடியிருப்பு என அடிப்படை உரிமைகளுக்கான எல்லாப் போராட்டங்களையும் போலீசை ஏவிக் கொலைவெறியோடு ஒடுக்குகிறது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் போராடும் பெண்கள் (கோப்புப் படம்)
டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடியதால் சிறை வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ உள்ளிட்ட தோழர்களையும் பிணையில் விடக் கடுமையாக எதிர்த்து வருகிறது, ஜெயா அரசு. சட்ட விரோதமாகக் காவல் நீட்டிப்பு செய்கிறார்கள், நீதிபதிகள். வழக்கறிஞர்கள் “சட்டப்படி நடக்குமாறு” கேட்டால், “போலீசு சொல்வதைத்தான் கேட்பேன்” என்கிறார்கள், நீதிபதிகள். வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் முன்பே, பிணையில் விடுவதற்கே அழிக்கப்பட்ட சாராயத்துக்கு நட்ட ஈடாக முன்பணம் கட்டும்படி உத்தரவு போடுகிறார்கள். போலீசும் நீதித்துறையும் வேறு வேறல்ல ஒன்றுதான் என்பதோடு, இவை மக்களுக்கு எதிரானதாகவும் மாறிவிட்டதையே நடந்து வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
புரட்சிகர அமைப்புகள் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவிவிடும் ஜெயா அரசு, எதிர்க்கட்சிகளையும், போராடும் அமைப்புகளையும் கூட விட்டு வைப்பதில்லை. வைகோ, விஜயகாந்த், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தி.மு.க-வினர், பத்திரிகையாளர்கள் என அனைவர் மீதும் தொடர்ந்து பல பொய்வழக்கு, அவதூறு வழக்குகளைப் போடுகிறது.
குறிப்பாக, காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறை, ஆளும் அ.தி.மு.க.வினரால் ஏவப்படுகிறது. அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன், அ.தி.மு.க எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், மேயர்கள் ஜெயலலிதாவின் ஆசியோடு நேரடியாக வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது தடியடியோ, வழக்கோ, கைதோ – எந்த நடவடிக்கையுமே இல்லை என்பதுடன், ஆளுங்கட்சி நடத்தும் வன்முறைக்கு போலீசும் உளவுத்துறையும், பாதுகாப்புக் கொடுத்து வழி நடத்துகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக ஆளும் கட்சி – உளவுத்துறை – போலீசு ஆட்சிதான் நடைபெறுகிறது. இவ்வாறாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு, மத்தியில் உள்ள மோடி அரசும் துணை நிற்கிறது.
இன்னொருபுறம், தமிழகம் இன்று குற்றங்களின் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காத கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வன்முறை, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிவெறியர்களின் தாக்குதல் முதலியவை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவை எதையும் குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாத ஜெயலலிதா, டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடினால் மேலும் கடுமையாக ஒடுக்குவேன் என்று கொக்கரிக்கிறார்.
இந்தச் சம்பவங்கள் அரசுக் கட்டமைப்பு, மக்களை ஆளும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டதையும், பாசிசத்தை நோக்கிச் செல்வதையும், எதிர்ப்பே இல்லாத ஏகபோக ஆட்சியை நிறுவ எத்தனிப்பதையும் பளிச்செனக் காட்டுகின்றன. இத்தகைய அபாயகரமான அரசியல் சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும், அவசரமானதுமாகும்.
அ.தி.மு.க அரசின் அடக்குமுறை மற்றும் டாஸ்மாக்கிற்கு எதிரான போர்க்குரலாக, வரும் ஆகஸ்டு – 31 அன்று சென்னை, மதுரை, தருமபுரி, விழுப்புரம், திருச்சி ஆகிய 5 மையங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அனைத்துக் கட்சிகள், மக்கள் இயக்கங்களை இணைத்து, “மூடு டாஸ்மாக்கை! அடக்குமுறையால் தடுக்க முடியாது!” என்ற முழக்கத்தை முன்வைத்து மாபெரும் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.
இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்பதோடு, முழு மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பல்வேறு முறைகளில் போராட்டத்தைத் தொடர உங்களை அறைகூவி அழைக்கிறோம்.
குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!
தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!
மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது!
அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு! இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!!
மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது!
ஆர்ப்பாட்டம்
31-08-2015 மாலை 4 மணி
BSNL தந்தி அலுவலகம் எதிரில், தருமபுரி.
தலைமை: தோழர் முத்துக்குமார், மக்கள் அதிகாரம்.
கண்டன உரையாற்றுவோர்:
தோழர் கிருஷ்ணன், முன்னாள் தருமபுரி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம். திரு T.K.தேவேந்திரன், வழக்கறிஞர், பென்னாகரம் வழக்கறிஞர் சங்கப் பொருளாளர். தோழர் சிவாஜி, தலைவர், அனைத்து அருந்ததியினர் மக்கள் கூட்டமைப்பு. திரு B.M.ரமேஷ், B.A., B.L., தருமபுரி நகரச் செயலாளர், தே.மு.தி.க. திரு ஜெயபிரகாஷ், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர், ம.தி.மு.க. தோழர் ராமன் என்கிற எழிலன், தருமபுரி மாவட்டச் செயலாளர், வி.சி.க. திரு.நவநீதன், மதுவை ஒழிக்கப் போராடிய தியாகி சசிபெருமாளின் இளைய மகன். தோழர்.விளவை ராமசாமி, மக்கள் அதிகாரம்.
கலைநிகழ்ச்சி: “மக்கள் அதிகாரமே தீர்வு”
நன்றியுரை : தோழர் அருண், மக்கள் அதிகாரம்.
தகவல் மக்கள் அதிகாரம், தமிழ்நாடு. உள்ளூர் தொடர்புக்கு: 81485 73417
____________________________
2. மதுரை
தகவல் : மக்கள் அதிகாரம், மதுரை
______________________
3. சென்னை ஸ்ரீபெரும்புதூர்
குடிகெடுக்கும் டாஸ்மாக் வேண்டாம் என்று சொல்வதற்கு கூட தமிழகத்தில் கருத்துரிமை மறுக்கப்படுகின்றது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களையும் மக்களையும் சிறைப்படுத்தியும் அவர்களை கிரிமினல்கள் போல சித்தரவதை செய்தும் தமிழக அரசு கடுமையாக ஒடுக்கி வருகின்றது. டாஸ்மாக் பிரச்சினை மட்டுமல்ல, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் எதற்காகவும் கவலைப்படாத அரசு, மக்களின் போராட்டங்களை தீவிரமாக ஒடுக்கி வருகின்றது. இந்த சம்பவங்கள் அரசுக் கட்டமைப்பு, மக்களை ஆளும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டதையும், பாசிசத்தை நோக்கி செல்வதையும், எதிர்ப்பே இல்லாத ஏகபோக ஆட்சியை நிறுவ எத்தணிப்பதையுமே காட்டுகின்றன. இந்த அபாயகரமான அரசியல் சூழலில் அனைத்து ஜனநாயக சக்திகளும், முற்போக்கு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாசிச ஜெயா அரசின் ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமாகும். இந்த அபாய அரசியல் சூழலை முறியடிக்கும் விதத்திலும் ஒடுக்குமுறையால் மக்கள் போராட்டங்களை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்கள், தொழிலாளார்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் வகையில் 31.08.2015 அன்று காலை 11 மணிக்கு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஆர்ப்பாட்டம்.
மூடு டாஸ்மாக்கை ! மக்கள் போராட்டங்களை ஒடுக்குமுறையால் தடுக்க முடியாது ! ஆர்ப்பாட்டம் ஸ்ரீபெரும்புதூர்
31.08.2015 – காலை 11 மணி
தலைமை :
தோழர் அமிர்தா, தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்
சுதிர் ஷர்மா – பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் இவரொரு சாதாரண ஆர்.எஸ்.எஸ். அனுதாபி. அம்மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திவரும் சரசுவதி சிஷு மந்திர் என்ற பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தவர். சுதிர் ஷர்மாவின் தந்தை கூட்டுறவு பால் சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றிக்கொண்டே, மாலை நேரத்தில் வீடுவீடாகச் சென்று பால் ஊற்றிக் கிடைத்த வருமானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றியவர். ஆனால், இன்று சுதிர் ஷர்மாவின் அந்தஸ்தே வேறு. 20,000 கோடி ரூபாய் மதிப்புமிக்க நிறுவனங்களின் அதிபர் அவர். சுரங்கம், கல்வி என அவரது தொழில் சாம்ராஜ்யம் பரந்து கிடக்கிறது.
சுதிர் ஷர்மாவின் “நல்ல காலம் (அச்சே தின்)” 2003-ல், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த பிறகு தொடங்கியது. அந்த ஆண்டில்தான் சுதிர் ஷர்மா தான் பார்த்துவந்த வேலைகளையெல்லாம் உதறிவிட்டு, மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசில் சுரங்கம் மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக இருந்த இலட்சுமிகாந்த் ஷர்மாவிடம் தனி உதவியாளராகச் சேர்ந்தார். அதன் பிறகு, மத்தியப் பிரதேசத்துக்கு வந்துவிட்டுத் திரும்பும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கும் ‘தொண்டில்’ சுதிர் ஷர்மாதான் நம்பர் 1 ஆகத் திகழ்ந்தார்.
மத்திய அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான், பா.ஜ.க.வின் தேசியத் துணைத் தலைவர் பிரபாத் ஜா, அவரது இரு மகன்களான ஆர்.எஸ்.எஸ். கூடுதல் பொதுச் செயலர் சுரேஷ் சோனி, பா.ஜ.க. எம்.பி. அனில் தவே ஆகியோருக்கும் சுதிர் ஷர்மாவிற்கு இடையே கொடுக்கல் வாங்கல் இருக்கும் அளவிற்கு நெருக்கமுண்டு. இவர்கள் மட்டுமல்ல, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சௌஹான் குடும்பத்தினரோடும் சுதிர் ஷர்மாவிற்கு நெருக்கம் இருந்திருக்கிறது. இப்படி கடந்த பத்தாண்டுகளில் கிடுகிடுவென வளர்ச்சியடைந்த சுதிர் ஷர்மா இன்று வியாபம் ஊழல் வழக்கில் கைது செயப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஜகதீஷ் சாகர் – இந்தூரைச் சேர்ந்த அலோபதி மருத்துவர். இவரது வீட்டில் நோயாளிகளின் கூட்டத்தைவிட, மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தரச் சொல்லி, கையில் பணக்கட்டுகளோடு காத்திருக்கும் கூட்டம்தான் அதிகமிருக்கும். இவரது விரல் அசைந்தால் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்; அரசுத் துறைகளில் வேலை கிடைக்கும். அதற்கு ஏற்ப ஒரு வலைப்பின்னலையே உருவாக்கி இயக்கி வந்தவர்தான் ஜகதீஷ் சாகர்.
வியாபம் ஊழலின் சூத்திரதாரிகள் : ம.பி மாநில முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் இலட்சுமிகாந்த் ஷர்மா (இடது) மற்றும் அவரது முன்னாள் உதவியாளரும் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியுமான சுதிர் ஷர்மா.
இவருக்குப் போட்டியாக இன்னொரு வலைப்பின்னலை இயக்கி வந்தவன் சஞ்ஜீவ் ஷில்ப்கர். வியாபம் ஊழலின் முக்கிய புள்ளிகளான இருவரும் கைது செயப்பட்டுள்ளனர்.
நம்ரதா தமோர் – வியாபம் ஊழல் வழியாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நம்ரதாவின் உயிரற்ற உடல் இருப்புப் பாதை அருகே 2012-ஆம் ஆண்டு ஜனவரியில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டாலும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை மூடியது, ம.பி. போலீசு.
அக்ஷய் சிங் – ஆஜ் தக் இந்தி மொழி தொலைக்காட்சியின் செய்தியாளரான இவர், நம்ரதா கொலை குறித்து அவரது பெற்றோரை பேட்டியெடுத்து திரும்பும் வழியிலேயே வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் இறந்து போனார்.
வியாபம் ஊழலை விரிவாக்கி, நிறுவனமயமாக்கிய பெருமை கொண்ட ம.பி முதல்வர் சிவராஜ் சௌஹான்.
1000-க்கும் மேற்பட்டவர்கள் ஆள்மாறாட்டம், விடைத்தாளைத் திருத்துவது போன்ற மோசடியான வழிமுறைகளின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். ஏறத்தாழ 1,40,000 பேர் பல்வேறு மோசடிகளின் மூலம் அரசு வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள். ம.பி. அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், தனியார் மருத்துவக் கல்வி அதிபர்கள், தனியார் தனிப்பயிற்சி நிலைய அதிபர்கள், பெரு வியாபாரிகள், அரசு ஒப்பந்ததாரர்கள் என ஒரு பெரிய கும்பலே இந்த ஊழலை இயக்கிப் பலன் அடைந்திருக்கிறது. ஏறத்தாழ 9,000 கோடி ரூபாய் வரை இலஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஊழல் அம்பலமாகி விசாரணை தொடங்கிய பின், ஊழலோடு தொடர்புடைய 50-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்து போனார்கள். மருத்துவ மாணவர்கள், இடைத்தரகர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் எனப் பலரும் இறந்து போனவர்களில் அடக்கம். இதுதான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து, இன்று நாடுதழுவிய அளவில் விவாதிக்கப்படும் வியாபம் ஊழலின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம். சுதிர் ஷர்மாவும், ஜகதீஷ் சாகரும், நம்ரதா தாமோரும், அக்ஷ சிங்கும் ‘பாரதத்தையே’ சற்று உலுக்கிப் போட்ட இந்த ஊழல் புராணத்தின் கதாபாத்திரங்கள்.
வியாபம் ஊழல் இரண்டு விஷயங்களை மிகவும் துலக்கமாக நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது. முதலாவதாக, அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தாமே வரையறுத்துக் கொண்ட தமது கடமைக்கு எதிராகத் திரும்பி, மக்கள் விரோத அமைப்பாக மாறியிருக்கும் கட்டமைப்பு நெருக்கடிக்கு எடுப்பான உதாரணமாக வியாபம் ஊழல் விளங்குகிறது. இரண்டாவதாக, இப்படி எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்ட நிறுவனங்களை ஆளும் உரிமை இந்து மதவெறிக் கும்பலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கையில் சிக்கும்பொழுது, அது எவ்வளவு தூரத்துக்கு அபாயகரமானதாகவும், முதுகுத்தண்டையே சில்லிட வைக்கும் கிரிமினல்தனமானதாகவும் மாறும் என்பதையும் வியாபம் ஊழல் நமக்குப் புரிய வைத்திருக்கிறது.
***
“இலஞ்சம் கொடுத்தும், ஆள் மாறாட்டம் செய்தும், விடைத்தாள்களைச் சட்டவிரோதமாகத் திருத்தியும் அரசுப் பணிகளிலும், தொழில் படிப்புகளிலும் சேருவது மற்ற மாநிலங்களில் நடைபெறவில்லையா” என்று மடக்குகிறார்கள், ஆர்.எஸ்.எஸ். சார்பாகப் பேசும் அறிவாளிகள். உண்மைதான்; தமிழகத்தில் தொகுதி-1 வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பணி நியமனம் சமீபத்தில் கேள்விக்குள்ளானது. அவர்களது விடைத்தாள்கள் மோசடியான முறைகளில் திருத்தப்பட்டு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அம்பலமாகி, அவர்களது நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்களைக் காட்டி அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செயப்பட்டனர். இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வில் மோசடிகள் நடந்திருப்பது அம்பலமாகி, அத்தேர்வு ரத்து செயப்பட்டது. இப்படி மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மோசடிகள் நடப்பது நாடெங்கும் பரவலாகக் காணப்பட்டாலும், வியாபம் ஊழலோடு ஒப்பிடும்பொழுது இவையெல்லாம் பாச்சாக்கள் அல்லது ஜுஜுபிக்கள்.
வியாபம் ஊழலை ம.பி முழுவதும் விரிவாக்குவதற்கு ஏற்ற கிரிமினல் வலைப்பின்னலை உருவாக்கி இயக்கி வந்த ஜகதீஷ் சாகர் (இடது) மற்றும் சஞ்ஜிவ் ஷில்ப்கர்.
பீகார் மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்களது உறவினர்களே பள்ளிக்கூட கட்டிடத்தில் ஏறி பிட்டைத் தூக்கிப் போடும் காட்சி சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகியது. இதனையொட்டி பொது அறம் இந்தளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதே என்று அழுகாச்சி விவாதங்கள் தொலைக்காட்சிகளில் நடந்தன. மண்டலை ஆதரிக்கும் பிற்பட்ட சாதிக் கூட்டணி ஆளும் பீகாரில் நடந்த அந்த முறைகேடு ஒருவகையில் பாமரத்தனமானது. ஆனால், இப்படியான முறைகேட்டை பார்ப்பன பாசிசக் கும்பல் தலைமையேற்று நடத்தினால், அது எந்தளவிற்கு ஹை-டெக்காகவும், கிரிமினல்தனம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை வியாபம் ஊழல் எடுத்துக் காட்டியிருக்கிறது.
ஒரு தொழில்முறை நேர்த்தியோடும், மாநிலம் தழுவிய அளவில் தரகர் வலைப்பின்னலை அமைத்துக் கொண்டும், மோசடிகளுக்குத் தக்கவாறு “ரேட்டை” நிர்ணயித்துக் கொண்டும் பா.ஜ.க. அரசின் ஆதரவோடு நடத்தப்பட்டிருப்பதுதான் வியாபம் ஊழல். போட்டித் தேர்வுகளை நடத்தி தொழில் படிப்புகளுக்கும் அரசுப் பணிகளுக்கும் ஆட்களை நியாயமான முறையில் தேர்ந்தெடுக்க உருவாக்கப்பட்ட “வியாபம்” என்ற அரசுக் கட்டமைப்பே, கோடிகளுக்கும் இலட்சங்களுக்கும் சீட்டுக்களை விற்கும் ஏஜெண்டாக மாறிப் போன அயோக்கியத்தனம்தான் வியாபம் ஊழல். இந்த ஊழலை அம்பலப்படுத்த துணிந்தவர்களையும், இந்த ஊழலுக்குச் சாட்சியங்களாக இருப்பவர்களையும் அடுத்தடுத்துக் கொன்றொழிப்பதன் மூலம் இந்த ஊழலை அடியோடு மறைத்துவிட முயலுவதோடு, இந்தக் கொலைகள் மூலம் ஊழலில் சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களைக் காப்பாற்ற முயலுகின்ற அதிபயங்கர சதியாகவும் வியாபம் ஊழல் பரிமாணம் எடுத்திருக்கிறது.
***
மத்தியப் பிரதேச தொழில் தேர்வு வாரியம் என்பதன் (இந்தி மொழி) சுருக்கம்தான் வியாபம். இது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்துக்கு நிகரானது. வியாபம் 1970-களில் ஒரு சுயேச்சையான, சுயநிதி கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டு, முதலில் மருத்துவ படிப்புக்கும், பின்னர் பொறியியல் படிப்புக்கும், 40 அரசுத் துறைகளுக்கும் ஆளெடுப்பதற்கான நுழைவு/போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு அதனிடம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டது. 1990-களின் பின் இந்நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டாலும், மத்தியப் பிரேதசத்தில் 2003-ல் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்ட பிறகுதான், இந்த ஊழலும், முறைகேடுகளும் அசாதாரண முறையில் விரிவாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டது.
வியாபம் முறைகேடு தடங்கலின்றி நடைபெறுவதை மேற்பார்வையிட்டு வந்த தேர்வுக் கண்காணிப்பாளர் பங்கஜ் திரிவேதி (இடது) மற்றும் நிதின் மொஹிந்திரா.
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக சிவராஜ் சிங் சௌஹான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 2007-ல் வியாபம் தொடர்பாக ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். இதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், அனைத்து அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அதிகாரம் கொண்ட ஒரே அமைப்பாக வியாபம் மாற்றியமைக்கப்பட்டது. இச்சட்டத் திருத்தத்துக்குப் பிறகான காலக்கட்டத்தில்தான் (2007 முதல் 2013 வரை) வியாபம் ஊழல் அதன் உச்சத்தை எட்டியது. இதேகாலக் கட்டத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகியது தற்செயலானதல்ல. அதேபோல இந்த ஊழலின் தலைமையாக ஷர்மாக்கள், திரிவேதிகள், மிஷ்ராக்கள் என்ற பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதும் தற்செயலானதல்ல.
உயர் கல்வி அமைச்சர் இலட்சுமிகாந்த் ஷர்மாவின் தனி உதவியாளராகச் சேர்ந்த சுதிர் ஷர்மா, வியாபம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளும் மோசடிகளும் எவ்விதத் தடங்கலின்றி நடப்பதற்கு ஏற்றவாறு அதன் அதிகாரக் கட்டமைப்புக்குள் தனது தலையாட்டிகளை அமர வைத்தார். இத்திட்டத்தின்படி கல்லூரி விரிவுரையாளர் என்பதைத் தாண்டி வேறெந்த சிறப்பான தகுதிகளுமற்ற இந்தூரைச் சேர்ந்த பங்கஜ் திரிவேதி வியாபமின் தலைமை தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் எந்தெந்த வழிகளில் முறைகேடுகளைச் செவது என்பதற்கான மூளையாகச் செயல்பட்ட திரிவேதி, இதற்கு ஏற்ப வியாபமில் தனக்கு வேண்டப்பட்டவர்களை கீழ் அதிகாரிகளாக நியமித்துக் கொண்டார். இவரால் வியாபமின் கணினித் துறையில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிதின் மொஹிந்திரா, அஜய் சென் ஆகிய இருவரும்தான் இலஞ்சம் கொடுத்த மாணவர்களின் விடைத்தாள்களைச் சட்டவிரோதமாகத் திருத்தியும், ஆள் மாறாட்டம் செவதற்கு ஏற்ப தேர்வு எண்களில் முறைகேடுகளைச் செய்தும் இந்த மோசடிகளைத் தடங்கலின்றி நடத்திச் சென்றனர். சி.கே.மிஷ்ரா என்ற மற்றொரு அதிகாரி வியாபமிற்கும் இடைத்தரகர்களுக்கும் இடையேயான பாலமாகச் செயல்பட்டார்.
கழுத்து நெறித்து கொல்லப்பட்ட வியாபம் ஊழலின் சாட்சிகளுள் ஒருவரும் மருத்துவ மாணவியுமான நம்ரதா தமோர் (இடது) மற்றும் நம்ரதா கொலையை விசாரித்துத் திரும்பும் பொழுது மர்மமான முறையில் இறந்து போன பத்திரிகையாளர் அக்ஷய் சிங்
இலட்சுமிகாந்த் ஷர்மா, சுதிர் ஷர்மா, பங்கஜ் திரிவேதி என மேல்மட்டத்தில் மட்டுமின்றி, கீழேயும் ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. இந்தூரைச் சேர்ந்த அலோபதி மருத்துவர் ஜகதீஷ் சாகரும், சஞ்ஜீவ் ஷில்ப்கரும் அரசியல்வாதிகள், மருத்துவர்கள், வியாபாரிகள், அரசு ஒப்பந்ததாரர்களைக் கொண்ட வலைப்பின்னலை இயக்கும் பொறுப்பில் இருந்தனர். இந்தக் கீழ்மட்ட வலைப்பின்னல் “மார்கெட்டிங் பிரிவு”,- அதாவது இலஞ்சம் கொடுப்பதற்குத் தயாராக உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து, சலித்துத் தேர்ந்தெடுப்பது என்றும், போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்துவதற்கான பிரிவு என்றும் இரு பிரிவுகளாகச் செயல்பட்டது. இந்த ஊழலில் பல கோடி ரூபாய் பெறுமான பணப்புழக்கம் ஏற்பட்டதற்கு ஏற்ப இந்தக் கீழ்மட்ட வலைப்பின்னலின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது.
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்துவதுதான் வியாபம் ஊழலின் பணம் காச்சி மரமாக இருந்திருக்கிறது. எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வில் மோசடிகள் செவதற்கு மட்டும் 15 இலட்சம் முதல் 35 இலட்ச ரூபாய் வரையும், மருத்துவ மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் செவதற்கு 40 இலட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையும் இலஞ்சம் பெறப்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்த ஊழலை விசாரித்து வந்த சிறப்பு அதிரடிப் படை, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதற்கு 80 இலட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை இலஞ்சம் பெறப்பட்டிருப்பதாக ம.பி. உயர்நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் மோசடிகள் நடத்தப்பட்ட விதம் பார்ப்பன-பாசிசக் கும்பலின் கிரிமினல்தனத்தைப் புட்டு வைக்கிறது. இம்மோசடி, “முன்னாபாய் ஸ்டைல், ஆள்மாறாட்டம், ரயில் இன்ஜின்-பெட்டி முறை, விடைத்தாளைத் திருத்துவது” என நான்கு வழிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. மாஃபியா கும்பல் ஸ்கெட்ச் போட்டு எதிரியின் கதையை முடிப்பது போல, ஸ்கெட்ச் போட்டு இந்த நான்கு வழிகள் மூலம் நுழைவுத் தேர்வு மோசடியை நடத்தி வந்திருக்கிறது, பார்ப்பன-பாசிச கும்பல். இலஞ்சத்தின் அளவுக்கு ஏற்ப இந்நான்கு வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு வழிகள் குறித்தும், இதனால் பலனடைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் தொடங்கி சௌஹான் வரையிலான பா.ஜ.க. தலைவர்கள் குறித்தும்; இந்த ஊழலைத் திட்டமிட்டு நடத்திய இந்துமதவெறிக் கும்பலுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள், தனியார் தனிப்பயிற்சி நிறுவன அதிபர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும், இந்த ஊழல் அம்பலமான பிறகு அதனை மூடிமறைக்க சௌஹான் அரசு எடுத்த முயற்சிகள் குறித்தும், இந்த ஊழலின் முக்கிய சாட்சிகளான இலஞ்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும், அம்மாணவர்களுக்கும் மேல்மட்ட அதிகார கும்பலுக்கும் பாலமாக இருக்கும் இடைத்தரகர்களும் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொன்றொழிக்கப்பட்டு வருவது குறித்தும் அடுத்த இதழில் காண்போம்.