Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 586

சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?

64

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் படுகொலைகள் : சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா?

“யாராவது ஒருவர் அந்தக் கொலைகாரர்கள் மீது கல்லை விட்டெறிந்திருந்தால் கூட என் கணவனைக் காப்பாற்றியிருப்பேனே” என்று கதறினாள் உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா. அந்த உடுமலை படுகொலைக் காட்சி, தமிழகத்தின் இன்றைய அரசியல் சமூக சூழ் நிலைக்கு ஒரு சாட்சி. கண் முன்னே நடக்கும் பல வகை அநீதிகளைக் கண்டும் காணாமலும், சகித்துக் கொண்டும், அங்கீகரித்துக் கொண்டும் செல்லப் பழகியிருக்கும் தமிழ்ச் சமூகம், கையில் வீச்சரிவாளேந்திய ரவுடிகள் கும்பலுக்கு எதிராக கல்லெறிந்திருக்குமா என்ன?

சங்கர்-கவுசல்யா
சாதி-தீண்டாமையை மறுத்துக் காதல் மணம் புரிந்துகொண்ட சங்கர்-கவுசல்யா தம்பதியினர் (கோப்புப் படம்)

ஒருவேளை, அது ஒரு இளம் காதல் தம்பதிகளுக்கு எதிரான சாதி ஆணவப் படுகொலை என்று தெரிந்திருந்தால், மக்கள் தலையிட்டிருப்பார்களோ என்று சிலருக்குத் தோன்றலாம். அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயமாகத் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. கோகுல் ராஜ் படுகொலை உள்ளிட்ட சாதி ஆணவப் படுகொலைகள் அனைத்திலும் இறுக்கமானதொரு மவுனம்தான் தமிழ்ச்மூகத்தின் எதிர்வினையாக இருந்து வருகிறது.

அந்தக் கண்காணிப்பு காமெராவில் படுகொலைக் காட்சி பதிவாகாமல் இருந்திருந்தால், ஒருவேளை அது ஒளிபரப்பப்படாமல் இருந்திருந்தால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்களா என்பதும் கூட சந்தேகமே. இதுவரை நடந்துள்ள சாதி ஆணவக் கொலைகளில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீசு இத்தனை சுறுசுறுப்பைக் காட்டியதில்லை. பட்டப்பகலில் நகரின் நடுவே ஒரு படுகொலையை நடத்திவிட்டு, மிகவும் அலட்சியமாக அந்தக் கொலைகாரர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் காட்சி, போலீசின் அதிகாரத்தையும், ஜெ. அரசின் யோக்கியதையையும் எள்ளி நகையாடும் வித்தில் அமைந்து விட்டதால், தனது ‘கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத்தான் போலீசார் சுறுசுறுப்பு காட்டியுள்ளனர் என்பதே உண்மை.

தன்னுடைய தந்தையும், தாயும், பாட்டியும், தாய் மாமனும்தான் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் என்றும், அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் கவுசல்யா. தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் ஆகியோரைப் போல சங்கரும் கண் மறைவாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தாலோ, கவுசல்யா தைரியமாகவும் நேர்மையாகவும் குற்றவாளிகளை அடையாளம் காட்டாமல் இருந்திருந்தாலோ கதை வேறாக இருந்திருக்கும்.

கொலையாளிகள்
சங்கரையும், கவுசல்யாவையும் துடிதுடிக்க வெட்டிப் போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பிச் செல்வதை பார்த்து நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் இழிந்த நிலை.

சாதி ஆணவக் கொலையாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் 2011-ல் வழங்கிய ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு, உயர்நீதி மன்றங்களுக்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும் வழிகாட்டியது. இருப்பினும் மத்திய சட்டக் கமிசன் அமைத்த குழு இதனை ஏற்கவில்லை. திருமணங்களைத் தடுக்கும் நோக்கத்துக்காகக் கூட்டப்படும் காப் பஞ்சாயத்துக்களைத் தடுப்பது குறித்து மட்டுமே அது பேசியது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் ஆணவக்கொலை குறித்த விவரங்களை அனுப்பக் கோரியது இந்தக் கமிசன். 22 மாநிலங்கள் அனுப்பி விட்டன. ஆனால் ஜெ. அரசு மட்டும் இதுவரை தமிழகத்தின் ஆணவக் கொலை குறித்த விவரங்களை அனுப்பவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஆணவக்கொலைகள் 81. கொல்லப்பட்டோரில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காதலித்த ஆதிக்க சாதிப் பெண்கள் என்று கூறியிருக்கிறார், எவிடென்ஸ் கதிர். இது மட்டுமல்ல; ஆண்டுக்கு சுமார் 1000 பெண்கள் தமிழகத்தில் கொலை செய்யப்படுவதாகவும், இவர்களில் 17% பேர் காதலித்த குற்றத்துக்காக கொலை செய்யப்படுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார். ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 7000. அவர்களில் 28% பேர் காதல் தொடர்பான பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறுகிறார். (https://minnambalam.com/k/1458000002)

இத்தகைய கொலைகள் சாதிக்காரர்கள் மற்றும் உறவினர்களால்தான் செய்யப்படுகின்றன என்பதால், இவற்றுக்கு சாட்சி சொல்ல யாரும் வருதில்லை. இது தீண்டாமைக் கொலைதான் என்ற போதிலும், கொல்லப்படும் பெண்கள் ஆதிக்க சாதியில் பிறந்தவர்கள் என்பதால், பதிவாகும் வழக்குகளும் தீண்டாமைக் குற்றத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை. தலித் இளைஞர்கள் கொல்லப்படும்போது அதை எதிர்த்து தலித் அமைப்புகள் குரல் கொடுப்பதால், அந்த அநீதி வெளியே தெரியவாவது செய்கிறது. பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்களின் கொலைகளைக் கேட்பாரில்லை என்று இந்த அநீதியின் கொடிய பரிமாணத்தை சுட்டிக்காட்டுகிறார் கதிர்.

கவுசல்யா
சாவின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த கவுசல்யா, சாதி ஆணவக் கொலைகாரர்களைத் துணிவோடு அடையாளம் காட்டியிருக்கிறார்.

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கெதிரான அறிக்கைகள் கூட அடங்கி, மவுனம் வலுப்பெறத் தொடங்கி விட்டது. அ.தி.மு.க. நேரடியாகவே சாதி ஆதிக்க சக்திகளுக்குத் துணை நிற்கிறது. தி.மு.க. எச்சரிக்கையாக கொலையை மட்டும் கண்டிக்கிறது. பெரியார் இயக்க வாசனையைக்கூட தமிழ் மண்ணிலிருந்து ஒழிக்கும் பொருட்டு, சாதிச் சங்கங்களை கூர் தீட்டி விடுகிறது பா.ஜ.க.

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரது கொலைகளில் வன்னியர், கவுண்டர், தேவர் என்ற தமிழகத்தின் மூன்று பெரும் ஆதிக்க சாதிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று சாதிகள் மட்டுமின்றி, பொதுவில் எல்லா ஆதிக்க சாதிகளுமே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மனோபாவத்தில் ஒன்றுபட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. ஆகையினால், சாதி கூடாது என்று தனிப்பட்ட முறையில் கருத்து கூறுவோர் கூட, சாதி ஒழிப்பைப் பேசுவதற்கான தைரியம் இல்லாமல், காதலை மதிக்குமாறு சாதி வெறியர்களிடம் ஈன சுரத்தில் வேண்டுகோள் விடுகின்றனர். ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோருகின்றனர்.

ஏற்கெனவே தீண்டாமைக் குற்றங்களுக்காகப் பதியப்படும் வழக்குகளில் 10% கூட தண்டிக்கப்படுவதில்லை. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, வன்கொடுமைச் சட்டத்தில் புதிய பிரிவுகள் சேர்க்கப்படுகின்றனவேயன்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், ஓட்டுக் கட்சிகள் மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித்துறையும் சாதிவெறியர்களுக்குத் துணை நிற்கின்றன. கயர்லாஞ்சி படுகொலை வழக்கில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரையிலான போலீசு அதிகாரிகள் தலித்துகளாக இருந்தபோதிலும், குற்றவாளிகள் தப்புவிக்கப்பட்ட கொடுமையை ஆனந்த் தெல்தும்ப்டே அம்பலப்படுத்தியிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் விஷ்ணுப்பிரியாவுக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கு நேர்கிறது.

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பிற்படுத்தப்பட்டோர் என்ற பெயரில் இட ஒதுக்கீடு பெற்று போலீசு மற்றும் அரசு பதவிகளில் அமர்கின்றவர்கள், தமக்குக் கிடைத்த அதிகாரத்தை சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவும் தலித் மக்களுக்கு எதிராகவும்தான் பயன்படுத்துகிறார்கள். இது மறுக்கவியலாத உண்மை. அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை சாதி ஒழிப்புக்கான வழியாக முன்வைத்துப் பேசுபவர்கள், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இளவரசன்-திவ்யா அல்லது சங்கர்-கவுசல்யா போன்ற எண்ணற்ற காதலர்கள், சாதி தமது வாழ்க்கைக்குப் பொருத்தமற்றது என்று நிராகரிக்கிறார்கள். அதாவது, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ‘கீழே’ சாதி மெல்ல மெல்ல அழியத்தான் செய்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர், வக்கீல், பொறியாளர், பேராசிரியர் என்ற பதவிகளைப் பெற்றவர்களும், ஓட்டுக்கட்சித் தலைவர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் ‘மேலிருந்து’ சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.

இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி – வேலைவாய்ப்பினைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் சாதிவெறியர்களில்லை என்பது போல நடிக்கின்றனர். சாதிவெறிக் கொலைகாரர்களை, மூடநம்பிக்கைக்குப் பலியான முட்டாள்களாகக் கருதி அனுதாபத்துடன் அறிவுரை கூறுகின்றனர். தமிழினவாதிகளோ, இதனை இரண்டு தமிழ்ச்சாதிகளுக்கு இடையிலான மோதல் என்பதாக திசை திருப்புகின்றனர். சமூகரீதியில் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய சாதி என்று சொல்லி இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் கிடைத்த அதிகாரத்தையும் சமூகத் தகுதியையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கப் பயன்படுத்துவதென்பது கீழ்த்தரமானதொரு கிரிமினல் குற்றம் என்று, இந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த ‘நல்லவர்கள் எனப்படுவோர் கூட கருதுவதில்லை. இதுதான் ஆதிக்க சாதி மனசாட்சியின் யோக்கியதை! அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளின் சமூக அடித்தளம் இதுதான்.

சங்கர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகன். முதல் தலைமுறைப் பட்டதாரி. தனது வாழ்க்கையையே அடமானம் வைத்துக் கடன் வாங்கி, பிள்ளையைப் படிக்க வைத்த அந்தக் குடும்பத்தின் ஏக்கம், எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தையும், அந்த இளம் தம்பதியின் காதலையும் வெட்டி வீழ்த்தி விட்டு வீரநடை போட்டிருக்கிறது தேவர் (அகமுடையார்) சாதி வெறி. கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசில் சரணடைவதற்கு ஒரு மாவீரனைப்போல அழைத்துவரப்பட்டான் யுவராஜ். இளவரசனைக் காவு கொடுத்த ‘அன்பு’மணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

இந்தச் சாதிகளில் பிறந்த எத்தனை பேர், தத்தம் சாதிகளைச் சேர்ந்த வெறியர்களை எதிர்த்து வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்? அவ்வாறு பேச மறுக்கும் யோக்கியர்களுக்கும் தன்னை யோக்கியன் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.காரனுக்கும் என்ன வேறுபாடு? முத்துக்குமாரசாமி மரணத்துக்குக் காரணமான குற்றவாளி தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி மட்டும்தானா? ‘பிழைக்கத் தெரியாத’ அந்த மனிதனின் மரணத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட பிழைக்கத் தெரிந்த அரசு ஊழியர்களுக்கு அந்தக் கொலைக் குற்றத்தில் பங்கில்லையா? ஆணவக் கொலைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் இந்தச் சமூகம் ஜெயலலிதாவின் ஆணவத்திற்குப் பணிந்து கிடப்பதில் வியப்பென்ன?

சாதி என்பது தன் இயல்பிலேயே ஒழுக்கக்கேடான, ஜனநாயக விரோதமான ஒரு நிறுவனம். சாதி வெறி தாழ்த்தப்பட்டோரை மட்டும்தான் பதம் பார்ப்பதில்லை. அரியானா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஜாட் சாதியினர் நிகழ்த்தும் வன்முறை என்பது அங்கே அன்றாட நடப்பு. லவ் ஜிகாத் என்ற பெயரில் அந்த சாதிவெறியை இந்துவெறியாக மாற்றி முஸ்லீம்களுக்கு எதிராகத் திருப்பியது பாரதிய ஜனதா. விளைவு – முசாபர்பூர் கலவரம். அதே ஜாட் சாதியினர் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க கோரி சமீபத்தில் நடத்திய போராட்டத்தில், அரியானா மாநிலமெங்கும் ஜாட் அல்லாத 30-க்கும் மேற்பட்ட மற்ற சாதியினரின் கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டன.

இந்தப் போராட்டத்தின்போது, டில்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பல இளம் தம்பதிகளைக் கடத்திச் சென்று, கணவனின் கண் முன்னாலேயே மனைவியை வல்லுறவு செய்தனர் ஜாட் சாதிவெறியர்கள். வல்லுறவுக்கு ஆளான பெண்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதிவெறிக் காலிகள் பெண்களைக் கடத்திச் செல்லும் காட்சி, உடுமலை கொலையைப் போல, நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காமெராக்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சியாக கணவனும் இருக்கிறான். ஆனால் ஜாட் சாதி வெறியர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கும் துணிவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லை.

இப்படி அரியானாவின் சமூகத்தையே அச்சுறுத்தும் ஜாட் சாதியை சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க இருக்கிறது அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

– சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

inner_design2

 

மக்கள் நலக் கூட்டணி: அம்மா எங்களை ஏன் கைவிட்டீர் ?

11

ருபது ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை அ.தி.மு.க.விலிருந்து துரத்தியபோது, அவர்களை உதிர்ந்த ரோமங்கள் எனத் திமிராக வருணித்தார் ஜெயலலிதா. அம்மாவால் கைவிடப்பட்டோர் சங்கம் என்று அழைப்பதற்குத் தகுதியான, விஜயகாந்த், வைகோ, முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அந்த மாதிரியாக ஜெயலலிதாவால் வருணிக்கப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம், வரவிருக்கும் தேர்தலில் இந்த மூன்றாவது அணி தன்னைக் காப்பாற்றுவதற்குப் பயன்படும் என்ற கணக்குதான்.

மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணி : ஜெயாவால் கைவிடப்பட்ட அட்டை கத்திகள்!

“இத்தனை காலம் தி.மு.க.,- அ.தி.மு.க., என்று மாறிமாறிக் கூட்டணி வைத்து விட்டு, இரண்டு பேரும் ஊழல் கட்சிகள் என்று இப்போதுதான் கண்டுபிடித்தது போலச் சொல்கிறீர்களே, இது அடுக்குமா?” என்ற தோரணையில் பத்திரிகையாளர்கள் பலரும் கேட்கவே, அவர்களை வாயடைக்கச் செய்யும் விதத்தில் ஒரு பதிலை எடுத்துவிட்டார் மார்க்சிஸ்டு கட்சியின் செயலர் ராமகிருஷ்ணன். இரண்டு கட்சிகளுடனும் மாறிமாறி கூட்டணி வைத்து அவர்களை எப்படியாவது திருத்த முயன்றார்களாம். ஆனால், அவர்கள் திருந்தவில்லையாம். இனி அவர்களைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்ட காரணத்தினால்தான் மூன்றாவது அணியை அமைத்திருக்கிறார்களாம். இந்தப் பதிலைக் கேட்ட பின்னரும் சிரிக்காமல், முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, அடுத்த கேள்வியைக் கேட்ட பத்திரிகையாளர்களுக்கு தனியே ஏதாவது விருதுதான் கொடுக்க வேண்டும்.

இடது, வலது கம்யூனிஸ்டு கட்சி களும், வைகோவும், திருமாவளவனும் தமிழகத்தில் ஊழலை ஒழிப்பதற்கும், தமிழக மக்களுக்கு நல்லாட்சியைத் தருவதற்காகவும்தான் நாளெல்லாம் சிந்தித்து, அரசியல் நிலைமைகளை அலசி ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டியக்கத்தையும், அதன் பிறகு மக்கள் நலக் கூட்டணியையும் அமைத்திருப்பதாகக் கூறுவது, நாக்கு அழுகிவிடக் கூடிய பொய். ஜெயாவால் கூட்டணியிலிருந்து விரட்டப்பட்ட வைகோவும் போலி கம்யூனிஸ்டுகளும், அ.தி.மு.க. கூட்டணியில் துண்டு போடும் கனவோடு தி.மு.க.விலிருந்து கழண்டு வந்த பிறகு திரிசங்கு நிலையில் நின்ற திருமாவும், தாங்கள் அடைக்கலம் புகுந்த மடத்துக்குச் சூட்டிய பெயரல்லவோ மக்கள் நலக் கூட்டணி! உண்மையைச் சொன்னால், இது ஜெயாவால் கைவிடப்பட்டவர்களின் சங்கம்!

மக்கள் நலக்கூட்டணி மாநாடு
மக்கள் நலக் கூட்டணி மதுரை நகரில் நடத்திய மாற்று அரசியல் எழுச்சி மாநாடு : மாற்றா, ஏமாற்றா?

தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நடந்த ஊழல், கொள்ளைகளில் அம்மா நடத்திய / நடத்திவரும் கொள்ளைதான் வரலாறு காணாதது. அப்படி ஊழலில் ஒரு புரட்சியே செய்திருக்கும் ஜெயாவோடு 1999 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2001 மற்றும் 2011-களில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களிலும் கூட்டணிக் கட்டிக் கொண்டவர்கள்தான் போலி கம்யூனிஸ்டுகள். 2006 தொடங்கி 2011 வரை ஜெயாவோடு கைகோர்த்திருந்தவர்தான் வைகோ.

2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்பொழுது, ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி நில ஊழல் வழக்கு உள்ளிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் இருந்தன. பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் அவர் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். தான் ஒரு கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட விவரத்தை மறைத்து, அத்தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார், ஜெயா. அது முடியாமல் போகவே, தான் பழிவாங்கப்படுவதாகக் காட்டுவதற்காகவே, சட்டத்தை மீறி நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதி களுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதியைக் காட்டி, ஜெயாவின் அனைத்து வேட்பு மனுக்களையும் தேர்தல் கமிசன் ரத்து செய்தது. உடனே, தன்னைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்க தி.மு.க. சதி செய்வதாக அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்தி, பொய்ப் பிரச்சாரத்தை நடத்தினார்.

pwa-caption-1ஜெயா மீதான ஊழல் வழக்குகளையும், ஊழல் வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதையும், வேட்பு மனுத்தாக்கலில் அவர் நடத்திய கிரிமினல் சதிகளையும் நியாயப்படுத்திக் கொண்டு, புரட்சித் தலைவியின் ஆசி பெற்ற கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடும்படி கேட்டுத் தமிழகத்தைச் சுற்றி வந்தவர்கள்தான் இன்று ஊழல் ஒழிப்பு அவதாரம் எடுத்திருக்கும் வலது, இடதுகள்.

2001 தேர்தலில் ஆட்சியைப் பிடித்த ஜெயா, ஆர்.எஸ்.எஸ். கும்பலே அசந்துபோகும்படி மதமாற்றத் தடைச் சட்டத்தையும், கிடா வெட்டும் தடைச் சட்டத்தையும் கொண்டு வந்து நடப்பது பார்ப்பன மதவெறி ஆட்சி எனக் காட்டினார். இரண்டு இலட்சம் அரசு ஊழியர்களைச் சிறைக்குள் தள்ளி, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி, நானொரு பாப்பாத்தி மட்டுமல்ல, பாசிஸ்டும்கூட என்பதைப் போலி கம்யூனிஸ்டுகளும் புரிந்துகொள்ளும்படி காட்டினார்.

2001 சட்டசபைத் தேர்தலில் ஒரு பார்ப்பன பாசிஸ்டை, ஊழல் பேர்வழியை ஆதரித்து காவடி எடுத்ததற்கு எவ்விதப் பொறுப்பும் ஏற்காத இந்த உத்தமர்கள், 2006 தேர்தலில் மதவாத அபாயம் என்று சொல்லி தி.மு.க.வோடு கூட்டணி கட்டிக் கொண்டனர். 2011 சட்டசபைத் தேர்தலில் ஊழல் எதிர்ப்பு என்ற போர்வையில் தி.மு.க.வைக் கைவிட்டு, மீண்டும் அ.தி.மு.க.வோடு கூட்டணி கட்டிக் கொண்டனர்.

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கைப் பணத்தாலும், தனது பார்ப்பன சாதி செல்வாக்காலும் ஊத்தி மூடுவதற்கு எல்லாவிதமான கிரிமினல் சதித்தனங்களையும் ஜெயா செய்துவந்தார். அத்தேர்தலில் மார்க்சிஸ்டுகளுக்கு 12 தொகுதிகளும், வலது கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 தொகுதிகளும் பம்பர் பரிசாகக் கிடைத்ததால், இந்த ஊழல் எதிர்ப்பு போராளிகள் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி மூச்சே விடவில்லை.

pwa-leaders-past-record2011 சட்டசபைத் தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்த்துக் கொள்ளப்பட்டவுடனேயே, ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடத் தயாரானார் ஜெயா. அத்தேர்தலில் வைகோ 35 தொகுதிகளைக் கேட்க, ஜெயா-சசி கும்பலோ வெறும் 6 இடங்கள் மட்டுமே தரமுடியும் என முகத்தில் அடித்தாற் போலக் கூறிவிட்டது. இன்னொருபுறம், கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.விற்கு 41 இடங்களும், போலி கம்யூனிஸ்டுகளுக்கு 22 தொகுதிகளும் ஒதுக்கி, வைகோவின் தலையில் குட்டு வைத்தார், ஜெயா. 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் என ஐந்து வருடங்களாக ஜெயாவிற்குக் கூஜா தூக்கி வந்த வைகோ, மதிப்பிழந்து, அவமானப்படுத்தப்பட்டு அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து துரத்தப்பட்டார். வேறு போக்கிடம் இல்லாத நிலையில், அச்சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார், வைகோ.

வைகோவைக் கழற்றி விட்டு போயஸ் தோட்டத்தில் ஒண்டிய தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் கேவலமான முறையில் அசிங்கப்படுத்தப்பட்டனர். கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னரே, 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலைத் தன்னிச்சையாக வெளியிட்டு இந்தக் கட்சிகளைப் பதற வைத்தார், ஜெயா. அவரது இந்த அதிரடியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அசடு வழிந்த சி.பி.ஐ., சி.பி.எம்., கட்சிகள், விஜயகாந்தின் கல்யாண மண்டபத்திற்கு ஓடினர். மானம், மரியாதையெல்லாம் பார்த்தால் நாற்காலி கிடைக்காது என்று தெளிந்து, மீண்டும் போயஸ் தோட்டத்தில் சரணடைந்து உடன்பாடு கண்டனர்.

pwa-caption-2போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டதற்கும், மீண்டும் போயஸ் தோட்டத்தின் கதவு திறக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் கல்யாண மண்டபத்திற்குப் பரிதாபத்துக்குரிய வைகோவை வரவழைத்தார்கள் இடது, வலதுகள். ஊழலுக்கு எதிரான மக்கள் நலக்கூட்டணி உருப்பெற்றுக் கொண்டிருந்த அந்தச் சூழலில், போயஸ் தோட்டத்திலிருந்து அழைப்பு வரவே, வைகோவை அங்கேயே கழற்றி விட்டுவிட்டு, வலது, இடதுகளும் விஜயகாந்தும் போயஸ் தோட்டத்துக்கு ஓடினர். போயஸ் தோட்டத்திலிருந்து மட்டும் அந்த அழைப்பு வந்திருக்கவில்லை என்றால், வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஊழல் ஒழிப்பு மக்கள் நலக் கூட்டணி அன்றே உருவாகியிருக்கும் என்பதை நாம் மறுக்கவியலாது. அன்று அந்தக் கூட்டணி உருவாகாமல் தடுத்ததில் அம்மாவின் விசுவாசி தா.பா.வின் பங்கு அளப்பரியது.

2011 சட்டசபைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைந்தார் விஜயகாந்த்; போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் போட்டியிட்ட 22 தொகுதிகளில் 19-இல் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக் கூட்டணி தொடரும் என இவர்கள் கனவு கண்டு கொண்டிருந்த வேளையில் தேர்தலோடு கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார், ஜெயா. ஆனாலும், தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளுக்கு அது உறைக்கவில்லை. அக்கட்சிகளுக்கு உணர்த்தும் வாய்ப்பை உள்ளாட்சி தேர்தல் ஜெயாவிற்கு வழங்கியது.

நரேந்திர மோடி - ஜெயா
நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் ஜெயா : இயற்கைக் கூட்டாளிகள் (கோப்புப் படம்)

தே.மு.தி.க., தங்களுக்கு 4 மேயர் தொகுதியும், உள்ளாட்சிகளில் 40 சதவீத இடங்களும் ஒதுக்க வேண்டும் எனக் கனவு கண்டுகொண்டிருந்த வேளையில், அ.தி.மு.க., 10 மாநகராட்சிகளுக்கான மேயர் வேட்பாளர்களை அறிவித்து, தே.மு.தி.க.வின் கனவுக்கு முடிவு கட்டியது. இதனையடுத்து, 52 நகராட்சிகளுக்கான தலைவர் வேட்பாளர்களும் அ.தி.மு.க.வால் அறிவிக்கப்பட்டனர். இப்படிக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக விஜய்காந்தின் தே.மு.தி.க. வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டது.

இதன் பிறகும்கூட சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அம்மாவின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தன. தமிழகத்திலுள்ள 148 நகராட்சிகளில் 52 நகராட்சிகளுக்குத்தானே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவற்றுக்கு அறிவிக்கவில்லையாதலால், நமக்கு நிச்சயமாக சில எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தனர் போலி கம்யூனிஸ்டுகள். ஆனால், ஜெயாவோ அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு, போலி கம்யூனிஸ்டுகளின் மூக்கை அறுத்தார்.

pwa-caption-3அடுத்து வந்தது நாடாளுமன்ற மேலவைத் தேர்தல். தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஆறு உறுப்பினர்களுள் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என எண்ணியிருந்தது, வலது கம்யூனிஸ்டு கட்சி. தங்களுடைய மாநிலங்களவை வேட்பாளருக்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரி டில்லியிலிருந்து சென்னைக்குக் காவடி எடுத்த வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் காக்க வைத்து, பார்க்க மறுத்து, திருப்பி அனுப்பினார் ஜெயலலிதா. இதன் பிறகு டெல்லி சென்றிருந்த ஜெயாவைச் சந்தித்து ஆதரவு கேட்பதற்கு வலதுகளின் தேசியத் தலைவர்களான பரதனும் சுதாகர் ரெட்டியும் காவடி எடுத்தனர். தன்னை அவர்கள் சந்திப்பதற்கு முன்னரே, மேலவை தேர்தலுக்கான ஐந்து அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்தார் ஜெயலலிதா.

அறிவிக்கப்பட்ட ஐந்து வேட்பாளர்களுள் சரவணபெருமாள் ஒரு கிரிமினலென்று அம்பலமானதாலும், மாற்றாக ஒரு வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமளவுக்கு வாக்குகளைத் திரட்ட முடியாது என்ற காரணத்தினாலும், பிச்சைக்காரனுக்கு மிச்சம் மீதியை எறிவதைப் போல ஒரு ராஜ்யசபா இடத்தைப் போலிகளுக்கு விட்டெறிந்தார் ஜெயலலிதா. தன்னுடைய ஆசிபெற்ற தா.பாண்டியனுக்குப் பதிலாக டி.ராஜாவை நிறுத்தியதுதான் வலதுகளுக்கு கிடைத்த இந்த சிறப்பு அவமதிப்புக்கு காரணம் என்று பத்திரிகைகள் எழுதின. ஜெயலலதாவின் அவமதிப்புகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தில் அ.தி.மு.க. அடிமைகளை விஞ்சியவர்களான போலிகள் இதற்கெல்லாம் அசரவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயாவை நம்பியிருந்த போலிகள் மீண்டும் மூக்கறுபட்டனர். இத்தேர்தலையொட்டி சி.பி.எம். கட்சியின் அப்போதைய பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும், சி.பி.ஐ. கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.பி.பரதனும் போயசு தோட்டத்திற்கே வந்து சமூகத்தைப் பார்த்துவிட்டுச் சென்றனர். அதன் பிறகு அக்கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் போயசு தோட்டத்திற்குப் படையெடுத்தனர். போலி கம்யூனிஸ்டு கட்சிகள் இரண்டும் தலைக்கு நான்கு தொகுதிகளைக் கேட்க, அதற்கு ஆளுக்கு ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் என அ.தி.மு.க. சொன்னதாகப் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்த வேளையில், ஜெயா நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து இடது, வலதுகளின் ஆசையை நிராசையாக்கினார்.

pwa-caption-4இதற்குப் பிறகும் அம்மாவின் பாதங்களை இவர்கள் விடுவதாக இல்லை. இந்தத் தேர்தலில் மட்டும்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை எனக் கூறி, 2016 சட்டசபை தேர்தலுக்கு அப்பொழுதே துண்டைப் போட்டார், தா.பாண்டியன். ஒருவரால் (ஜெயாவால்) நெருக்கடிக்கு உள்ளாகிவிட்ட நிலையில், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மற்றொருவரிடம் (தி.மு.க.) கைகோர்ப்பது சரியல்ல என்று விளக்கமளித்து, நாங்கள் இன்னமும் அம்மாவின் விசுவாசிகள்தான் என்பதை உறுதிபடுத்தினார் வலது கம்யூனிஸ்டு துணைச் செயலாளர் மகேந்திரன்.

தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து என்பது போல, கடந்த ஐந்தாண்டுகளில் பதவிக்காக ஜெயாவிடம் காலடியில் சுருண்டு கிடந்தவர்கள், இன்று ஊழலை ஒழிப்பதற்காகவும் நல்லாட்சியைத் தருவதற்காகவும்தான் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியதாகத் துணிந்து கதையளக்கிறார்கள். இடையில், தி.மு.க. பக்கம் சாயலாமா என்று சி.பி.எம். தடுமாறிக் கொண்டிருந்த நிலையிலும் சி.பி.ஐ.யும், தா.பா.வும் ஜெயா விசுவாசத்தில் உறுதியாக இருந்தனர். கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினையில் சி.பி.எம்.கூட சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது, சி.பி.ஐ. கட்சி உறுப்பினர்கள் அதில் கலந்துகொள்ளாமல் தங்களின் ஜெயா விசுவாசத்தை வெளிக்காட்டியது இதனை உறுதிப்படுத்துகிறது.

ஜெயாவோடு கூட்டணி வைத்துக்கொள்ள இவர்கள் தயாராக இருந்தாலும், அதனை ஜெயா விரும்பவில்லை என்பதே உண்மை. ஓட்டுக்கட்சிகளோடு கூட்டணி வைப்பதைவிடத் தேர்தல் கமிசன், அதிகார வர்க்கம், நீதிமன்றம் ஆகியவற்றோடு கூட்டணி வைத்துக் கொள்வதுதான் ஜெயாவின் புதிய கூட்டணி ஃபார்முலா. கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கி, செலவுக்குப் பணமும் கொடுத்து வெற்றி பெற வைப்பதைவிட, பணப் பட்டுவாடா, போலி வாக்காளர்கள் என்ற உத்திரவாதமான வழிமுறைகள் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து வரலாறு படைக்கலாம் எனக் கணக்குப் போடுகிறார், அ.தி.மு.க. தலைவி.

மதவாத எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு என்ற இரண்டு மயக்கு வார்த்தைகளை மாறிமாறிப் போட்டு, தமது சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை நியாயப்படுத்துவதைப் போலி கம்யூனிஸ்டுகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதையே மாபெரும் தகுதியாக இவர்கள் காட்டிக் கொள்கின்றனர்.

ஆனால், இவர்களால் ஊழல் குற்றம் சாட்டப்படும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு காவடி எடுத்து, பிரதிபலனாக பதவி எலும்புத் துண்டுகளைப் பெற்றவர்கள் இவர்கள். தான் தனிப்பட்ட முறையில் கற்பு நெறி தவறாதவன் என்று கூறிக்கொள்ளும் ஒரு தரகனுக்கும், இவர்களுக்கும் அதிக வேறுபாடில்லை. விவகாரம் அத்தோடு முடிந்தால் பரவாயில்லை. தாங்கள் நல்லொழுக்கத்தை நிலைநாட்டப் போவதாக இவர்கள் கூறிக்கொள்வதுதான் வேடிக்கை!

அ.தி.மு.க., தி.மு.க.-வின் ஊழலுக்கு இவர்கள் துணை நின்றவர்கள் என்பது மட்டுமல்ல, அதிகார வர்க்கத்துக்கும் போலீசுக்கும் தரகு வேலை செய்வதையே அன்றாடக் கட்சிப்பணியாக கொண்டிருப்பவர்கள்தான் இக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள். இவர்கள் தலைமையில் அரசு ஊழியர்கள் மத்தியிலும் மற்றும் வங்கி, காப்பீடு, பொதுத்துறை நிறுவனங்களிலும் செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்கள், ஊழல் செய்து மாட்டிக்கொண்டுள்ள அதிகாரிகளை, ஊழியர்களைக் காப்பாற்றும் அயோக்கியத்தனத்தைத் தொழிற்சங்கக் கடமையாகவே மாற்றியிருக்கின்றன. இவர்களது ஊழல் ஒழிப்பு நாடகத்தை அம்பலப்படுத்த எண்ணுபவர்கள், இலஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை சங்கத்தை விட்டு நீக்கத்தயாரா? என்ற ஒரு கேள்வியை எழுப்புவதே போதுமானது.

தி.மு.க.வோடு கூட்டணி சேராமல், அக்கட்சியைத் தள்ளி வைத்ததற்கு 2ஜி ஊழலைக் காரணம் காட்டி வரும் யோக்கியர்களான போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்கத்தில் அந்த ஊழலுக்கு அடிக்கொள்ளியாக இருந்த காங்கிரசோடு தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளவும், அதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளவும் தயாராகி வருகின்றனர். இந்த இரட்டை அளவுகோல் குறித்து கேள்வி எழுந்தபோது, மேற்கு வங்க நிலைமை வேறு, தமிழக நிலைமை வேறு எனக் கூறி சமாளித்து வருகின்றனர். ஊழல் ஒரு பிரச்சினையே அல்ல எனத் தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சி.பி.எம். கட்சியிடம் அரசியல் நாணயத்தையும் அப்பழுக்கற்ற தன்மையையும் எதிர்பார்ப்பதற்கும் ஜெயா திருந்திவிடுவார் என எதிர்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.- இயற்கையான கூட்டாளி ஜெயாவின் அ.தி.மு.க.தான். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியவர் ஜெயா. குஜராத்தில் முசுலீம் படுகொலைகளை நடத்திய மோடியை, அந்தச் சமயத்தில் பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் புறக்கணித்தபோது, மோடியோடு நெருக்கமான நட்பு கொண்டு, அதனை இன்றுவரை தொடர்ந்து வருபவர் ஜெயா. அது மட்டுமின்றி, ஜெயா தனது இயல்பிலேயே பார்ப்பன-பாசிஸ்டு. இப்படிப்பட்ட இந்து மதவெறி சக்தியோடு கூட்டணி வைத்துக்கொண்டு, நட்பு பாராட்டிக்கொண்டு மதவாதத்தை எதிர்ப்பதாகப் போலி கம்யூனிஸ்டுகள் கூறுவது எத்தகையதொரு மோசடி, கபடத்தனம்!

மக்கள் நலக் கூட்டணியில் தருமராக உருவகப்படுத்தப்படும் விஜயகாந்தும், அர்ச்சுனனாகக் காட்டப்படும் வைகோவும் இந்து மதவெறியர்களின் பாதந்தாங்கிகள். குஜராத் முசுலீம் படுகொலையை நடத்திய மோடியை ஆர்.எஸ்.எஸ்.-க்கு அடுத்து, வெளிப்படையாகவே, அதுவும் நாடாளுமன்றத்திலேயே ஆதரித்துப் பேசியவர் வைகோ. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைப்பதற்கு ஈழத் தமிழ் மக்களின் உயிரைப் பகடைக்காயாகப் பயன் படுத்தியவர். மீண்டும் 2014-ல் மோடியைப் பதவியில் அமர்த்த வேலை செய்து விட்டு, அவர் ஈழத் தமிழின விரோதி என்ற உண்மையை அவர் பதவியில் அமர்ந்த பின்னர் கண்டுபிடித்தவர்.

விஜயகாந்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு ஆம்பிளை ஜெயா. அ.தி.மு.க.வின் ஜெராக்ஸ் பிரதிதான் தே.மு.தி.க. ஜெயாவின் இடத்தில் விஜயகாந்த், சசியின் இடத்தில் பிரேமலதா, மன்னார்குடி குடும்பத்தின் இடத்தில் பிரேமலதாவின் தம்பி சுதீஷ், அவரது அக்கா கணவர் ராமச்சந்திரன்.

வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னரே, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு மந்திரி பதவி வழங்கி விட்டார் மச்சான் சுதீஷ். வளர்ப்பு மகனாகத் தத்து எடுக்கப்பட இருப்பது யார் என்பதுதான் விடை தெரியாத புதிராக இருக்கிறது.

– திப்பு
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

 

inner_design2

யாருக்கான அரசு லெனினோடு பேசு !

0
லெனின் அவரது அறையில்

ப்ரல்-22, தோழர் லெனின் பிறந்த நாள். லெனின் பிறந்த நாள் சிறப்பே உழைக்கும் மக்களை நாம் ஏன் பிறந்தோம்? என்று சிந்தித்த வைப்பதுதான்.

லெனின்
லெனின்

1919, ஜுலை 11-ல் யா.மி. ஸ்வர்திலோவ் பல்கலைக் கழகத்தில் ‘அரசு‘ எனும் தலைப்பில் தோழர் லெனின் ஆற்றிய உரை இன்றைய நம் சிந்தனைத் தேவைக்கு நெருக்கமாக உள்ளது. தமிழாக்கமாகவும் வந்திருக்கும் ‘அரசு‘ எனும் இந்நூலை நாம் ஒவ்வொருவரும் பிறப்பின் நோக்கமறிய லெனினின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றுக் கொள்வதும் – கற்றுக் கொள்வதும் பயன் மகிழ்ச்சி ததும்பும் இனிமையாகும்.

இன்று நம்மைச் சுற்றி தேர்தல் இரைச்சல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…! என்று எல்லா ஓட்டுக் கட்சிகளுமே நா இனிக்க தேர்தல் நேரத்து தேனடைகளாகத் திரிகின்றன. நாங்கள் வெற்றி பெற்றால் எங்கள் அரசு மக்களுக்கான மாற்றங்களைக் கொண்டுவரும் என பொய்க்கால் குதிரைகளைத் தட்டிவிடுகின்றன. தங்களுக்கான அரசியல் அதிகார வரம்பினைக் கடந்து  கட்சிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பதைப் பார்த்து தேசம் கடந்த பன்னாட்டு நிதிமூலதனம் கோரைப்பல் சுரக்க சிரிக்கிறது. வாய்ப்பேச்சு வக்கணைகளைத் தாண்டி அரசு என்பது வர்க்கம் தொடர்பானது, அரசு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்கானது என்பதை வசதியாக மறைத்துவிட்டு, அரசு அனைவருக்குமானது என்பது போல புளுகித் திரிகின்றன ஓட்டுக் கட்சிகள். குறிப்பாக முதலாளித்துவ சமூக அமைப்பில் அது முதலாளி வர்க்கத்துக்கான ஆட்சியதிகார முறைகளை முற்றிலும் உறுதி செய்து கொண்ட சட்ட வரம்பினைக் கொண்டது.

வானத்தை வில்லாய் வளைப்பேன் என்று வேண்டுமானால் ஓட்டுக்கட்சிகள் வாய் வீசலாம். மற்றபடி வர்க்கத்தை வளைத்து வேறோன்றாய் மாற்றுவேன் என்பதற்கு இந்த அரசுக் கட்டமைப்பில் இடமில்லை. அரசின் இந்த வர்க்க ஆதிக்கத்தை மூடி மறைக்கத்தான் பல வண்ண தேர்தல் கட்சிக்கொடிகள். ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கு நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கிய பல்லாங்குழிகள் விளையாட்டின் புளியம் விதைகளே ஓட்டுக் கட்சிகள்.

இதை வெகுகாலத்திற்கு முன்பே வரலாற்றுத் தொடர்போடு நமக்கு அடையாளம் காட்டுகிறார். ‘அரசி‘ல்  லெனின், முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் நலனுக்காக மட்டுமே நிறுவப்பட்டுள்ள இந்த முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பை அதன் நிர்வாக இயங்கு விதிகளுக்கு உட்பட்டு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் (அது என்ன ரகசிய காப்பு பிரமாணம்? ஆளும் வர்க்கத்திற்கு கட்டுப்பட்டு இருப்பேன் என்பதன் சட்ட கைக்கட்டுதான் இது!) எடுத்துக் கொண்டு, நான் வந்தால் மக்களுக்கான சமத்துவ நீதி, சமூக நீதி ஆட்சி தருவேன் என்பது பித்தலாட்டத்தின் லட்சிய முழக்கமே.

இந்தக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு யார் ஆட்சிக்கு வந்தாலும் முதலாளித்துவ சுரண்டும் வர்க்கத்தின் அடிப்படைகளை தகர்க்க முடியாது என்பது மட்டுமல்ல அதன் நலனுக்கான தரகர்களே இவர்கள் என்பதுதான் நிலவும் இரட்டையாட்சி முறையின் இயங்கு விதி. அரசு என்பதே அனைத்து மக்களுக்குமானது என்பது ஊரறிந்த பொய் என்பது மட்டுமல்ல, அந்த இயந்திரமே ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவி, குண்டாந்தடி என்பதுதான் வரலாற்று உண்மை. இதை நான் கையில் எடுத்தால் மல்லிகைச் சென்டாக மாறிவிடும் என்பது உலக மகா அயோக்கியத்தனம். இதில் பங்குபெற நான் நீ என்று கட்சி கட்டி, கூட்டணி கட்டி கர்ஜிப்பது எல்லாம் அடிமை முறைக்கு ஆதரவான கித்தாப்புகளே !

அரசு என்பது வர்க்கம் தொடர்பானது என்பதை மூடி மறைப்பதிலிருந்து தொடங்கும் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதையை எந்த ஓட்டுக்கட்சிகளும் நம்மிடம் அரசியலாக பேசுவதில்லை.  பேசப் போவதுமில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலவும் ‘அரசு‘ எனும் தலைப்பிலான உரையில் நமக்கு புரிய வைக்கிறார் லெனின். இந்தப் புரிதலோடு நம் கையை முறுக்கும் தேர்தலைப் பரிசீலித்தால் நமக்கான அரசியல் செயல்பாடு நமக்கு புரியவரும்.

ஜனநாயகம்
ஜனநாயகம் என்பது இரண்டு ஓநாய்களும், ஒரு ஆடும் என்ன சாப்பிடலாம் என்று வாக்களிப்பு மூலம் முடிவு செய்வது. விடுதலை என்பது ஆயுதம் தரித்த ஆடு இந்த வாக்கெடுப்பை எதிர்ப்பது.

அரசியல் என்பது மோடி, சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா…. என நபர்களின் நடத்தையைப் பற்றி பேசுவது, விவாதிப்பது என்பதைத்தான் படித்த காரியக்கார ஊடக அறிவுக் கூலிகள் பரப்பி வருகின்றனர். உரையில் லெனின் சொல்வதைப் போல “அரசு என்பது பற்றிய பிரச்சனை மிக மிகச் சிக்கலும் கடினமுமான ஒன்று;  முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால் ஒருவேளை மற்ற எந்தப் பிரச்சனையையும் விட மிகுதியாகக் குழப்பிவிடப்பட்ட ஒன்றாகும்…“ என்பதுதான் இன்றும் நிலைமை. இதில் மற்ற எல்லோரையும் விட கம்யூனிசத்திற்கு எதிராகவே செங்கொடியை அசைப்பதில் கில்லாடிகளாகி விட்டார்கள் இடதும் வலதும். மார்க்சியத்தின் அடிப்படையில் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்கு வேலை செய்யும் கட்சி என்று கூறிக்கொள்வதால் மற்ற ஓட்டுக் கட்சிகளைவிட இவர்களின் மார்க்சிய விரோத போக்கை விசேசமாக கவணப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனாலும் குழப்பத்தை தெளிவிக்க அறிவியல் அணுகுமுறையில் அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி அது கடந்து வந்த சமூகக் கட்டங்களை வரலாற்று தொடர்போடு விளக்குகிறார் லெனின். ஆண்டான் அடிமை, பண்ணையடிமை, முதலாளித்துவம், சோசலிசம் என சமூக உதாரணங்களோடு அரசின் வரலாற்று வளர்ச்சி, தன்மைகளை கற்கத் தருகிறார்.

மக்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற இந்தப் போலி ஜனநாயகத் தேர்தல்தான் தீர்வு, இந்த அரசமைப்புதான் ஒரே வழி, ஓட்டு போடுவதுதான் உரிமை என தேர்தலை பெத்தெடுத்தவர்கள் போல பேசித் திரியும் எத்தர்களின் தோலை உரிக்கின்றன நூலின் பகுதிகள், “அரசு எல்லா காலங்களிலும் இருந்ததில்லை என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு இல்லாதிருந்த காலம் ஒன்றும் இருந்தது. எங்கெங்கே? எவ்வெப்போது சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றுகிறதோ, சுரண்டுவோரும் சுரண்டப்படுவோரும் தோன்றுகிறார்களோ அங்கெல்லாம் அவ்வப்போது அரசு தோன்றுகிறது“ என்பதோடு “அரசென்பது ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம்“ என்ற உண்மைகளையும் உணர்த்துகிறார் லெனின்.

“இந்த அடிப்படை வர்க்கப் பிரிவினை பற்றிய பார்வை நிலையிலிருந்து நீங்கள் அரசு என்பதை ஆராய வேண்டும்“ என லெனின் கற்றுத்தரும் அரசியல் பார்வைதான் இன்றைய நம் காலத்தின் தேவை. மக்களை தனது அரசியலுக்கு ஆள்பிடிக்க ஆளும் வர்க்கம் வற்ப்புறுத்தும் இந்தத் தேர்தல் நேரத்திலாவது மக்களுக்கான அரசியல் பேசாத, போலிக் கம்யூனிஸ்டுகள்தான் விஜயகாந்த் வாயிலிருந்து ‘அதிர்ஷ்டக் கல்லை‘ எடுத்துத் தரப் போகிறார்களாம் ! மாற்றம் பிய்த்துக் கொண்டு அடிக்கப் போகிறதாம் !

தனிக்கட்சிகளின் பெரும்பான்மை வாதமும் –  கட்சிகளுக்கிடையே ஜனநாயக மறுப்பும், ஆட்சியில் கூட்டணி இல்லாததும்தான் நல்லாட்சிக்கு தடையாக இருப்பதாக பசப்புவதும், கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது இந்த அரசமைப்பு நிலைமைகளிலேயே ஒரு மாற்று என்பதும் உண்மையில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மாற்று அரசியல் அதிகாரத்துக்கான திரட்சியை வேரறுக்கும் வேலையாகும். இது போலி ஜனநாயகம், இதில் மக்களுக்கு அதிகாரமும், உரிமையும் இல்லை என்பதை எதிரிவர்க்கம் பொட்டில் அடித்து சொல்லும் தருணத்திலும், தங்களது தனிப்பட்ட தட்டேந்தும் ஜனநாயகத்திற்காக இந்தக் கட்டமைப்புக்கு உள்ளேயே மாற்று அரசியலை நிலைநாட்டுவோம் என்பதும், எதிரி வர்க்கத்திற்கு  சேவை செய்ய நம்மிடம் வந்து ஓட்டு கேட்பதும் எத்தகைய பித்தலாட்டம்!

மக்கள் தயாராக இல்லை, நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் நடைமுறைச் சாத்தியம் என்று வித்தகம் பேசுபவர்கள் நடைமுறையில் ஒரு சாராயக் கடைக் கூட போராடித்தான் மூட முடியும் என்று சட்டமன்றத்திற்கு வெளியே மக்கள் சாத்தியமாக்கியதை நடைமுறைப்படுத்தத் தயாராவார்களா?

puthuvai-rsyf-pseudo-democracy-ruling-class-3உழைக்கும் வர்க்கம் தனது வர்க்க நலன்களையும், அரசியல் நோக்கத்தையும் ஈடேற்றிக் கொள்ள இம்மியும் உதவாத இந்தத் தேர்தல் பாதை மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தால் ஆர்பாட்டமாக அறிவிக்கப்படும் வாக்குரிமை, ஜனநாயகம் எனும் பசப்பல்களுக்கு பின்னே இருக்கும் எதார்த்த நிலவரத்தை எங்கெல்சின் “குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்“ – நூலிலிருந்து தனது “அரசு“ பற்றிய உரையில் விரிவுபட விளக்குகிறார் லெனின், “நிலத்திலும் உற்பத்தி சாதனங்களிலும் தனிச்சொத்து நிலவும் ஒவ்வோர் அரசும், மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் ஒவ்வோர் அரசும் எவ்வளவுதான் ஜனநாயகத்தன்மை உடையதாக இருப்பினும் அது முதலாளித்துவ அரசே ஆகும். அது தொழிலாளி வர்க்கத்தையும், ஏழை குடியானவர்களையும் அடி பணிய வைப்பதற்காக முதலாளிகளால் பயன்படுத்தப்படும் இயந்திரமாகும். அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை. அரசியல் நிர்ணய சபை, நாடாளுமன்றம் என்பதெல்லாம் வெறும் வெளித்தோற்றமே.“ (குடும்பம், தனிச்சொத்து, அரசு…)

முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு உரிய முழு யோக்கியதைக் கூட இல்லாத கார்ப்பரேட்டுகளின் கட்டப் பஞ்சாயத்தான இந்த சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் போய் இவர்கள் மக்களுக்காக மாற்றம் தரப்போகிறார்களாம்.

மக்களிடம் ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் அம்பலப்பட்டுப் போன கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக கரைபடாத (இன்னும் கை வைக்க கஜானவே வரல!) விஜயகாந்தை தூக்கி வந்து ஜனநாயகத்தை வாழ வைக்க கூத்தடிக்கிறார்கள், ஒரே குட்டையில் தேறிய மட்டைகள்! விஜயகாந்தே ஏற்றுக் கொள்ளாத ஜனநாயகத்தை விஜயகாந்தே வியக்கும்படி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் தலைவர்கள் மூல உத்தி, செயல் உத்தி என்று என்னதான் தம் கட்டினாலும் வடிவங்கள் வாழ வைக்காது என்பதுதான் வரலாற்று உண்மை.

ஒரு கோடி இளம் வாக்காளர்களை குறிவைத்து ஏற்கனவே ஆள்பவர்களை அவர்கள் வெறுக்கிறார்கள், மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று ‘மாற்று‘ அரசியல் பேசும் கட்சிகள் எதை மாற்றப் போகிறார்கள்? ஆட்சியையா? அரசையா? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசின் தன்மை மாறிவிடுமா? அதன் வர்க்க இருப்பை தகர்த்து விடுவார்களா? நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்காமலேயே பல உலக வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்ளும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராக தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை தடை செய்யும் அதிகாரம் இவர்களுக்கு உண்டா?

கல்வி இலவசம், மருத்துவம் இலவசம் என்று காது குடையும் இவகளின் தேர்தல் அறிவிப்பை ‘காட்ஸ்‘ ஒப்பந்தம் ஏற்குமா? உலக நிதிமூலதனச் சங்கிலியில் இறுக்கப்பட்டிருக்கும் இந்தியாவை உலக வர்த்தகக் கழகத்தின் நாட்டாமையை, சின்னக் கவுண்டர் ஊர் விலக்கம் செய்து விடுவாரா? யார் வந்தாலும், எந்த வடிவத்தில் சுரண்டினாலும் தேசம் கடந்த பன்னாட்டு நிதிமூலதனத்தின் உத்தரவிற்கு உட்கார்ந்து எழுந்திருப்பதுதான் இவர்களின் கதி!

முதலாளி வர்க்க அதிகாரத்தை அசைக்காமல் ஆட்சி மாற்றத்தால் ஆவது என்ன? அரசு பற்றிய பார்வைதான் அரசியலின் தகுதியைத் தீர்மானிக்கிறது. ஒருபடி மேலே போய் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வடிவங்களையும் பரிசீலிக்கக் கற்றுத் தருகிறார் லெனின், “அரசு” செலுத்தும் ஆதிக்கத்தின் வடிவங்கள் வேறுபடக் கூடும். ஒருவகை வடிவம் நிலவுமிடத்தில் ஒருவிதமாகவும், வேறுவகை வடிவம் நிலவுமிடத்தில் வேறொரு விதமாகவும் மூலதனம் தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும். ஆனால், வாக்களிக்குத் தகுதிகள்… குடியரசின் ஜனநாயகத் தன்மை… எதுவானாலும் மூலதனத்தின் கரங்களில்தான் அதிகாரம் இருக்கிறது. உண்மையில் குடியர” எவ்வளவுக்கு ஜனநாயகத் தன்மை கொண்டதாக இருக்கிற@தா, அவ்வளவுக்கு முதலாளித்துவ ஆட்சி அதிக முரடாகவும், அதிக இரக்கமின்றியும் இருக்கின்றது…“ என்று லெனின் முன்னேறியதாகச் சொல்லப்படும் அமெரிக்கக் குடியரசின் சமூக நிலைமைகளையும் விளக்கிக் காட்டி எதார்த்தத்தை புரியவைக்கிறார்.

வடிவம் மாறினாலும் உள்ளடக்கம் ஒடுக்குமுறைதான் எனும்போது வாயை மாற்றிப் பேசினாலே ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நல்லாட்சி, வளர்ச்சி என்பது முதலாளித்துவ ஆவிகளின் கேலிக்கூத்தாகும். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் நகரவை மன்றங்களும் தேர்தல் அராஜகங்களால் நிரம்பி ஜனநாயகம் என்பதே கேலிக்கூத்தாகி திவாலாகிப்போன நிலையில் இருக்கிறது. போலி ஜனநாயகத்திற்குப் பதில் புதிய ஜனநாயகம் எனும் மக்கள் அதிகாரம் எல்லா மட்டங்களுக்கும் மக்களே தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் கண்காணிக்கவும் தவறு செய்தால் தகுதிநீக்கம் செய்யவுமான ஒரு புதிய அரசுக் கட்டுமானத்தை அரசியலாக மக்களிடம் முன்னெடுக்க வேண்டிய காலத்தில் ஜெயலலிதாவிற்கு பதில் விஜயகாந்த் என்று சேலையை வேட்டியாக மாற்றினாலே மாற்று என்பது ஏமாற்று அல்லாமல் வேறென்ன?

மக்கள் தயாரில்லை, மக்கள் விரும்புகிறார்கள் என்று மக்களுக்கு பின்னே செல்பவன் தலைவன் இல்லை. லெனினைப் போல மக்களுக்கு முன்னே செல்ல வேண்டும். குறிப்பான தருணத்தை நழுவவிடாமல் மக்களை அரசியல் படுத்த வேண்டும். அதுதான் மக்களுக்கான அரசியல். “அரசு எந்திரமானது எல்லோருடைய நலன்களையும் பாதுகாப்பது, அதற்காக ஏற்பட்டது எனும் முதலாளித்துவ பொய்யை உணர்வுப்பூர்வமான நயவஞ்சகரும் அறிவியல்வாதிகளும் மதகுருமார்களும் மட்டும்தான் ஆதரிக்கிறார்கள் என்றில்லை, பழைய தப்பெண்ணங்களில் உண்மையிலேயே ஒட்டிக்கொண்டு பழையை முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து சோசலிசத்திற்கு நிகழும் மாறுதலை புரிந்துகொள்ளாமல் இருக்கும் பெருந்திரளான மக்களும் அவ்வாறே செய்கிறார்கள்…“ என்று மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டிய அரசியல் கடமைகளையும் சேர்த்தே முன்னிறுத்துகிறார் லெனின்.

என்ன நாடாளுமன்றமும் சட்டமன்றமும்?, “மூலதனத்தின் பலம்தான் எல்லாம்; பங்குமார்கெட்டுதான் எல்லாம்; நாடாளுமன்றமும் தேர்தல்களும் வெறும் கயிறாடு பாவையும், கைப்பாவையும் ஆகும்.“ என்கிறார் லெனின். அதுமட்டுமல்ல, அரசும் புரட்சியும் நூலில், “ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க @வண்டும் என சில ஆண்டுகளுக்கு ஒருதரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ பாராளுமன்ற முறையின் மெய்யான சாரப்பொருள்.“ என்கிறார். மேலும், “அரசுக்குரிய மெய்யான வேலை திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது. இலாக்காக்களும் அமைச்சக செயலகங்களும் படைத் தலைமையகங்களும் இதை நடத்துகின்றன. பொதுமக்களை ஏய்ப்பதற்கென வாய்பேபச்சு பேசுவதே பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி‘” என்கிறார் லெனின். ‘அது வெஸ்டர்ன் பார்லிமென்டுங்க, நாங்க சொல்றது கேப்டன் சட்டமன்றங்க’ என்று கயிறு திரிக்கிறார்கள் இடது-வலதுகள்.  மற்ற ஓட்டுச்சீட்டு கட்சிகளைவிட புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி இப்போது புரட்சிக் கலைஞர் என்று வார்த்தையை வைத்தே வண்டி ஓட்டும் புரட்சித் தயாரிப்பாளர்கள் இடது-வலதுகள். பள்ளி விழுவதற்கு பலன் சொல்வது போல ஒவ்வொரு முதலாளித்துவ கேவலத்திற்கும் சப்பைக் கட்டி தத்துவ விளக்கம் கொடுக்கிறார்கள் இவர்கள். கேப்டன் அணி என்று சொன்னால்தான் சாதாரண மக்களுக்கும் புரியும் என்று கம்யூனிச இயக்கத்தையே கேவலப்படுத்தினாலும்… நேற்று முளைத்த தென்னந்தோப்பு சின்னத்தை எங்க சின்ன ஐயா என்று கொஞ்சும் விஜயகாந்து இடது-வலதுக்கு என்ன சின்னம்? என்று கேட்குமளவுக்கு அரசியல் அவமரியாதை செய்தாலும் தாங்கிக்கொள்ளும் ‘தடிப்புக்குப்‘ பெயர்தான் தத்துவ உறுதிபோலும்.

“சுரண்டல் நீடிக்கிற வரையில் சமத்துவம் என்பது இருக்க முடியாது. நிலப்பிரபு தொழிலாளிக்கு சமம் என்றோ, அல்லது பசித்த மனிதன் வயிறாற உண்டு கொழுத்தவனுக்கு சமம் என் றோ கூற முடியாது…“ என்று முதலாளித்துவ ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை, இருப்பை மக்களுக்கு புரியவைக்கிறார் லெனின். நாமும் புதிதாக ஒன்றை துணிந்து சொல்லலாம், விஜயகாந்தும் பிரேமலதாவும் இருக்கும்வரை இடது-வலதை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. ஏனெனில் அது அவர்களின் உரிமை!

அன்றாடம் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதையும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தடையின்றி நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் மக்களின் சார்பாக முக்கிய விவாதமாக மக்கள் பிரதிநிதிகளை பேசி விவாதிக்க, விடைகாண உரிமையில்லாத இந்தத் தேர்தல் பாதை எதை தீர்க்கப் போகிறது?

இந்த நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் பாதை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ள இந்தத் தருணத்தில் அனைத்து அதிகாரமும் மக்களுக்கு வேண்டும் என்பதற்கான அரசியலை தற்போதுள்ள தேர்தல் பாதையில் பெற முடியாது. ஏன் இவர்கள் சொல்லிக்கொள்ளும் நம்பச் சொல்லும் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே அரசின் வர்க்கச் சுரண்டலை தடுப்பதற்கான எந்த உரிமையும் இல்லை. மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் தற்போதுள்ள அரசுக் கட்டமைப்புக்கு வெளியே உள்ளது என்ற எதார்த்த நிலமையை உணர்த்துவதுதான் மக்களுக்கான அரசியல். அந்தக் கண்ணோட்டத்தில் அரசு பற்றி நாம் எவ்வளவுக்கெவ்வளவு புரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் அரசியல் பார்வை கண்ணோட்டம் விரிவடைகிறது. இதை யாரிடம் கற்றுக்கொள்வது? போலிக் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் இப்போது எந்த ஜனநாயகத்திற்காக வாக்கு கேட்கிறார்கள்? உண்மையில் இவர்கள் வாழவைக்கப் போவது யாரை? லெனினின் அரசு பற்றிய புரட்சி பற்றிய இந்நூலை கற்க கற்க உண்மையான மாற்று சமூக, அரசியல் பொருளியல் கட்டமைப்பை நிலவும் அரசுக் கட்டமைப்புக்கு வெளியேதான் உருவாக்க முடியும் என்பது புலப்படும். இது வெறும் நூல் மட்டுமா? சமகாலம் வரை சந்திக்கும் அரசு பற்றிய பிரச்சினைகளில் வழிகாட்டும் குரலாக லெனின் உங்களோடு இணைவதையும், நீங்கள் புதிய அரசியல் கண்ணோட்டத்திற்கு வருவதையும் தவிர்க்க முடியாது. தொடர்ந்து பேசுங்கள், லெனினோடும் போராடும் மக்களோடும்! கற்க கசடற கம்யூனிசம்; நிற்க அதற்குத் தக!

– துரை சண்முகம்

தமிழகமெங்கும் டாஸ்மாக் முற்றுகை – படங்கள்

1

1. விழுப்புரம் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போர் ! 270 பேர் கைது !!

மிழகத்தில் இன்று பற்றி எரியும் பிரச்சனையாக டாஸ்மாக் சாராயம் உள்ளது. மூலைமுடுக்குகளில் எல்லாம் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்கிறது என்றால் அது மூடு டாஸ்மாக்கை என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு டாஸ்மாக்கால் மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர் என்பதைத் தான் இது உணர்த்துகிறது.

குடும்பங்கள் சீரழிவு, தாய்மார்களின் தாலி அறுப்பு, மாணவர்கள் குடிபோதைக்கு ஆளாகுவது என்று தமிழ்ச் சமூகத்தையே சீரழித்து வருகிறது ஜெயா அரசு. ஒரு காலத்தில் குடிப்பதையே அவமானமாக கருதிய சமூகம், இன்று குடிப்பதையே ஒரு கலாச்சாரமாக கருதும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

“மூடு டாஸ்மாக்கை” என்று யார் போராடினாலும் அவர்களை கடுமையாக ஒடுக்குகிறார். ஊருக்கு ஊரு சாராயம் எனப்பாடிய கோவனை தேசத்துரோக வழக்கில் கைது செய்தார். பிப்ரவரி 14 அன்று திருச்சியில் நடத்திய மாநாட்டில் பேசிய 6 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்தார்.

இத்தனை படுபாதக செயலையும் செய்த பார்ப்பன ஜெயா வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக “ படிப்படியாக மதுவிலக்கு” என்று தனது இளமைக் கால தொழிலான நடிப்பை மேடைதோறும் அரங்கேற்றுகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்களும் “முதல் நாள் முதல் கையெழுத்து” என்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு பேசுகிறார்கள் என்றால் கடந்த பத்து மாதங்களாக மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டமே முக்கிய காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தி.மு.க – அ.தி.மு.க அல்ல, வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு மூடாது.  கொண்டு வருவது என்பது மக்களாகிய நாமே அதிகாரத்தை கையில் எடுத்தால் தான் டாஸ்மாக்கை மூட முடியும் என்று ஏப்ரல் 20 அன்று தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களில் உள்ள “டாஸ்மாக் தலைமை அலுவலகம்” முற்றுகை என அறிவித்திருந்தோம்.

தோழர் ராஜூ கைது
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தோழர் ராஜூ கைது

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு கடந்த பத்து நாட்களாக தீவிரமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். அன்று முதலே முன்னணியாளர்களை கண்காணிக்க வரிசையில் வந்துவிட்டனர் “ கியூ பிரிவு” போலீசார்.

பிரச்சாரத்திற்கு செல்லும் கிராமங்களில் எல்லாம் தோழர்களை வரவேற்க தொடங்கி விட்டனர் மக்கள். அந்தந்த கிராமங்களில் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் மக்கள் அதிகார தோழர்களோடு இணைந்து பிரச்சாரம் செய்வதை பார்த்த அரசு பீதியடைய தொடங்கி விட்டது.

அந்த பீதியின் உச்சகட்டம் தான் 20-ம் தேதி டாஸ்மாக் அலுவலகம் முன்பு DGP, ADGP, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300 போலீசாருக்கும் மேல் குவித்து வைத்திருந்தனர். அலுவலகம் முன்பு இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் மூடி விட்டனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், 108 ஆம்புலன்ஸ் என அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

போராட்ட செய்தி சேகரிக்க சென்ற புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள் இரண்டு பேரை போராட்டம் தொடங்கும் முன்னரே சட்டவிரோதமாக கைது செய்தனர். பிறகு மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவை விழுப்புரம் இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

சரியாக 11.00 மணியளவில் விண்ணதிரும் முழக்கங்களோடு வந்த தோழர்களை சுற்றி வளைத்தது போலிசு. அவற்றையெல்லாம் மீறி அலுவலகத்தை நோக்கி முன்னேறி சென்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்ற போலீசாருக்கும் – மக்கள் அதிகார அமைப்பு தோழர்களுக்கும் மோதல் ஏற்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்தது டாஸ்மாக் அலுவலகம்.

சுமார் 45 நிமிடம் நடந்த முற்றுகை போராட்டத்தில் 270 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து களைப்படைந்திருந்தனர் காவல்துறையினர். கைது செய்த தோழர்களை இரண்டு மண்டபத்தில் வைத்து மாலை 6.00 மணிக்கு அனைவரையும் விடுவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

அரசுக்கட்டமைப்பு தோல்வியடைந்து மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த முற்றுகை போராட்டம், தற்பொழுது அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்புக்கு மாற்று அரசு என்றால் அது மக்கள் அதிகாரம் தான் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக போர்குணத்துடன் இருந்தது. எனவே மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தில் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியம். அதற்கான தருணமும் இது தான் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

தகவல்
வினவு செய்தியாளர்கள்.

2. திருச்சி

ஜெயா அரசின் சாராய போலீசின் அடக்குமுறையும்! முறியடித்த மக்கள் அதிகாரத்தின் போராட்டமும்!

tasmac-protest-trichy-9தமிழக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களை முதல்வராக்கி அழகு பார்த்தால் ‘மதுவிலக்கு’ கொண்டுவருவதாக மக்களை ஏய்த்து வரும் சூழலில், “கடையை மூடுவதற்கு யாரையும் ஓட்டுப்போட்டு முதல்வராக்கத் தேவையில்லை. மக்கள் தங்கள் அதிகாரத்தை கையிலெடுத்தால் டாஸ்மாக் கடையை மூட முடியும்” என தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதோடு, ஏப்ரல் 20-ல் திருச்சி துவாக்குடி அருகிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தது மக்கள் அதிகாரம். அதையொட்டி, அடித்தட்டு உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசுர விநியோகம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், தலித் இயக்கங்கள், இளைஞர் மன்றம் என அனைவருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

20-04-2016 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி துவாக்குடிக்கு அருகிலுள்ள டாஸ்மாக் அலுவலகத்திலிருந்து 300 மீட்டருக்கு முன் திருச்சி, தஞ்சை, திருவாரூர், அறந்தாங்கி ஆகிய பகுதித் தோழர்களும், பொதுமக்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கூடினர். சாராயக் கிடங்கை பாதுகாக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீசாரை அதிகாலை முதலே குவித்திருந்தனர். போராட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இடைமறித்த காவல்துறை, வாகனங்களை கொண்டு வந்து போராட்டத்துக்கு அனுமதி கிடையாது, உடனடியாக வண்டியில் ஏறுங்கள் என மிரட்டினர். போலிசாரின் உதார்த்தனத்தை கண்டு மிரளாமல் தோழர்கள் முற்றுகைக்காக முன்னேறினர். பீதியடைந்த போலீசு, மொத்த காவல்துறையையும் இறக்கி ஊர்வலத்தை தடுத்து நிறுத்த பெரும்பாடுபட்டது. பேரணியை சுற்றிலும் தடுப்பரண்களை ஏற்படுத்தி, கயிறுகளை கட்டி முன்னேற விடாமல் தடுக்க முயன்றது. ஆனால், தோழர்களின் போர்க்குணமிக்க போராட்டம் தடுப்பரண்களை தகர்த்து முன்னேறியது. ஒரு கட்டத்தில் பேரணியில் வந்த மாற்றுக்கட்சியினர், பெண்கள், குழந்தைகள், பொதுமக்களின் நலன் கருதி போலிசாருடனான மோதலை தவிர்த்து கைதாகினர்.

முற்றுகையில், காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மக்களால் தான் மூட முடியும் என எழுப்பிய முழக்கங்கள் பேருந்து பயணிகள், அருகே இருந்த சாராய ஆலைக்கிடங்கு மற்றும் பிற ஆலைத் தொழிலாளர்களை கவனிக்க வைத்தது. அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்த ஒரு மணி நேரம் ஆனது. கைதான தோழர்களை வாளவந்தான் கோட்டையில் உள்ள மலர் மண்டபத்தில் அடைத்து கழிவறைக்கு போவதற்கு கூட மறுப்பது, வழக்கறிஞர்களை சந்திக்க மறுப்பது, 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவையான பால் உள்ளிட்ட ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்யாமல் பெயர், முகவரியுடன் கைரேகை பெறுவதில் குறியாக இருந்தது. இதைக் கண்டித்து காவல்துறைக்கு ஒத்துழைக்காமல் உறுதியாக போராடியதால் ஒருவர் பின் ஒருவராக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, ஏ.எஸ்.பி வந்து பேசியதில் வேறு வழியின்றி கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். பெயர், முகவரியுடன், சாதி – மத பெயர் மற்றும் நயவஞ்சகமாக கைரேகை வைக்கும்படி கோரியதை ஏற்க மறுத்து உறுதியாக போராடி முறியடித்தனர்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மா.பா சின்னதுரை
தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மா.பா சின்னதுரை

அதன் பிறகு மண்டபத்தினுள் போராட்ட அனுபவப்பகிர்வும், கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மா.பா சின்னதுரை, காவிரி நதிநீர் ஆணையம் அமைத்து காவிரி நீரை பெற்றுத்தர துப்பில்லாத அரசு டாஸ்மாக் கடையை நடத்தி சாராயத் தண்ணீரை சப்ளை செய்கிறது. விதிமீறல் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசு நம்மை வலுக்கட்டாயமாக கைது செய்கிறது என அரசையும், காவல்துறை அராஜகத்தையும் கண்டித்தார். மேலும், அதிமுக-திமுக இரண்டும் கூட்டு வைத்து கொள்ளையடிப்பதாகவும், விவசாயிகள் சங்கத்தை துவக்கிய தோழர் நாராயணசாமி தலைமையில் நடந்த போராட்டங்கள், 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் உயிரிழந்தது, தங்கள் சங்க அனுபவத்திலிருந்து போராட்டமே தீர்வு என்பதையும் விளக்கிப் பேசினார்.

ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த இராசாத்தியம்மாள், 5 வயது குழந்தையும் 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாவது ஆபாசத்தினால் அல்ல, டாஸ்மாக் போதைதான் காரணம். டாஸ்மாக்கால் பெண்கள் அடையும் துயரத்தையும், டாஸ்மாக்கை மூட பெண்களால் மட்டுமே முடியும் எனவும் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்களுக்கு துணை நிற்போம் எனவும் கூறினார்.

அரியூர் கிராமத்திலிருந்து வந்த சாந்தி, 10 – 15 வருடங்களுக்கு முன் பெண்களை திரட்டி கள்ளச் சாராயம் காய்ச்சும் ரவுடிகளை ஓட ஓட அடித்துவிரட்டியதையும், கள்ளச் சாராயம் காய்ச்சும் இடங்களுக்கே சென்று பானைகளை அடித்து நொறுக்கி போராடியதையும், நரித்தனமான, கள்ளச்சாராய ரவுடிகள் தன்னுடன் இணைந்து போராடும் பெண்களில் கந்துவட்டிக்கு கடன் வாங்கிய பெண்களை மிரட்டி பணியவைத்து அவரை தனிமைப்படுத்தியதையும், தன்னைப்பற்றிய கீழ்த்தரமான அவதூறுகளையும் சகித்துக் கொண்டு தன் கணவனின் (குடிப்பவர்) துணையுடன் சட்டப்பூர்வ வகையில் போராடியதையும் விளக்கினார். மேலும், “அன்று, நான் தனியாக போராடினேன், இன்று, இவ்வளவு பேர் போராடுகிறோம் நிச்சயம் டாஸ்மாக் கடையை மூட முடியும்” என தன் போராட்ட அனுபவத்தை பகிர்ந்தது நம்பிக்கையை உருவாக்கியது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத் தலைவர் தோழர் கோபி, தான் சீரழிவிலிருந்து மீண்டு வந்ததற்கும், இன்று காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் துணிச்சலாக பேசுவதற்கும் புரட்சிகர சங்கமும், அமைப்புகளும் தான் காரணம். “என்னையே அமைப்பு திருத்தியுள்ளது, நிச்சயம் டாஸ்மாக்கை மூட முடியும்” எனக்கூறினார்.

மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் ஜீவா, டாஸ்மாக் சீரழிவுகளை விளக்கி, பெண்களின் தாலியறுத்த ஜெயாவை அம்மா என்று அழைக்கக் கூடாது. அவரை ஏழரை நாட்டு சனியன் என அழைப்பதே பொருத்தமானது என ஆவேசமாகவும் மேலும், மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என விளக்கிப் பேசினார்.

தனுஷ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
தனுஷ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்

தனுஷ் ரசிகர்மன்ற நிர்வாகிகள், “நாங்களே குடிப்பழக்கமுள்ளவர்கள். ஆனால், அமைப்பு சொன்னது சரி என தோன்றியது போராட்டத்தில் கலந்து கொண்டோம். மேலும், தங்களை மாற்றிக்கொள்வதாகவும் இனி எல்லா போராட்டத்திலும் கலந்து கொள்வோம்” எனக்கூறினர். ரசிகர் என்றாலே விட்டேத்தியாகவும், ஊதாரித்தனமாகவும் சுற்றித்திரிபவர்கள் என்ற யதார்த்தத்துக்கு மத்தியில் இந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானது அனைவரையும் கவனிக்க வைத்தது.

மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தோழர் காளியப்பன், டாஸ்மாக் போதை பொருளாதார பாதிப்பாக மட்டும் இல்லை. வயது வித்தாயசம் இல்லாமல் குடிப்பது, அப்பா மகன் சேர்ந்து குடிப்பது, தஞ்சையில் அப்பா குடிப்பதை தட்டிக் கேட்ட மகனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது, கிராமங்களில் மாலை நேரம் வந்தாலே என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று பெண்கள் அஞ்சும் புதிய நிலைமை உருவாகியுள்ளது என டாஸ்மாக் போதை ஒரு பண்பாட்டு சீரழிவாக பரிணமித்துள்ளதையும், அரசு கட்டமைப்பு ஆள அருகதையற்று தோற்றுவிட்டது, டாஸ்மாக் பிரச்சினை மட்டுமல்ல ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் தங்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதன் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியின் இடையிடையே பாடப்பட்ட ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பாடல்கள் உற்சாகமூட்டியது. குறிப்பாக, ஜெயாவின் படிப்படியான மதுவிலக்கு நாடகத்தை அம்பலப்படுத்தி தோழர் கோவன் பாடிய போங்கு பாடலை உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். போங்கு பாடல் தோழர்கள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கிணங்க இரண்டு முறை பாடப்பட்டது. போராட்டத்தில் தோழர்கள், பொதுமக்கள், மாற்று அமைப்பினர் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். மாலை 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, பெரியார் திராவிட கழகத் தோழர்கள் உள்ளிட்டவர்கள் தோழர் காளியப்பனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இத்தகைய தொடர் போராட்டத்தின் மூலம் தான் டாஸ்மாக் கடையை மூடமுடியும்!

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம், திருச்சி

3. மதுரையில் டாஸ்மாக் மண்டல அலுவலகம் முற்றுகை மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

யாருக்காக அரசு? மூடு டாஸ்மாக்கை! பீகாரில் மதுவிலக்கு! தமிழ்நாட்டில் மதுவிலக்கு பேசினால் தேச துரோக வழக்கு! என்ற முழக்கங்களுடன் ஏப்ரல் 20 அன்று காலை 11 மணி அளவில் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா தியோட்டர்  அருகில் ஒன்று கூடினார்கள்.

அங்கே திரண்ட 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் பதாகைகள், கொடிகள் ஏந்தியபடி அப்பகுதி முழுவதும் எதிரொலிக்கும் வண்ணம் முழக்கங்கள் இட்டார்கள். மக்கள் அதிகாரம் உசிலை ஒருங்கிணப்பாளர் தோழர் குருசாமி முற்றுகைப் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசி போராட்டத்தை துவக்கி வைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அங்கிருந்து அண்ணாநகர் பகுதிக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக தோழர்கள் சென்றார்கள். அப்போது மண்டல அலுவலகத்திற்கு செல்லும் பாதையை வழிமறித்து நின்றுகொண்டு தோழர்கள் மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தார்கள் அம்மாவின் காக்கிகள். உடன் தோழர்கள் அங்கேயே முழக்கமிட்டபடி நிற்க, உடனே மக்கள் அதிகாரம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், மக்கள் கலை இலக்கிய மாநில செயற் குழு உறுப்பினர் தோழர் கதிரவன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட செயலர் லயோனல் அந்தோணிராஜ் ஆகியோர் ” பாசிச ஜெயா டாஸ்மாக் ஒழிப்பில் நடத்தும் தேர்தல் நாடகத்தையும், டாஸ்மாக் ஒழிப்பு போராளிகள் மீது அவர் கட்டவிழ்த்துள்ள அடக்குமுறைகளை அம்பலப்படுத்தியும், அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம், டாஸ்மாக்கை ஒழிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என ஜெயாவிற்கு எச்சரிக்கை விடும் வரையிலும் உரையாற்றினார்கள்.

பின் காவல்துரையின் தடுப்பை மீறி முற்றுகையிட சென்ற தோழர்களை காவல்துறை கைது செய்தது. இந்த முற்றுகை போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட உடம்பில் சாட்டையடித்து பிழைப்பு நடத்துகிற மக்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
மதுரை

4. கோவை

20-04-2016 அன்று காலை 11 மணி அளவில் கோவை மண்டல டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்துக்காக கோவை, கரூர், காங்கேயம், கோவை, கோத்தகிரி, உடுமலை பகுதியில் இருந்து திரண்ட தோழர்கள் அலுவலகத்திற்கு போக முற்பட்ட போது காவல் துறையினர் தடுத்தனர்.

செய்தியாளர்கள் பேட்டி கேட்கவே, மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஆனந்தராஜ் பேட்டி கொடுத்து விட்டு வருகிறோம் என்று காவல்துறையிடம் கூறி விட்டு பேட்டி கொடுத்தார்.

“தமிழக மக்கன் தினம் தோறும் குடிநீர் கேட்டு, மருத்துவ வசதி கேட்டு, வேலை கேட்டு, வேலைக்குத் தகுந்த ஊதியம் கேட்டு, விளைந்த பயிருக்கு உரிய விலை கேட்டு, தமிழக அரசிடம் கெஞ்சி வருகிறார்கள். அதை காதில் வாங்கிக் கொள்ளாத அரசு மக்கள் கேட்காமல் சாராயத்தை ஊருக்கு ஊர் வைத்து ஆண், பெண் அனைவரையும் குடிக்க வைத்து சிந்திக்கும் திறன் அற்றவர்களாக வாழவே வழியில்லாமல் செய்து வருகிறது.

எனவே, டாஸ்மாக்கை இழுத்து மூடக் கோரி, நாங்கள் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட வந்துள்ளோம். இது போன்ற போராட்டங்கள் தொடரும்” என்ற அறிவித்தார்.

வண்டியில் ஏறுங்கள் என்று காவல் துறையினர் கூறிய போது, “நாங்கள் எதற்கு வந்தோம், என்ன செய்தோம் என்று மக்களுக்கு தெரியாது. அரசுக்கும் தெரியாது. நாங்கள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்” என்று உறுதியாகக் கூறி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் எதிர்த்து நின்றனர். தோழர்கள் தள்ளிக் கொண்டே முன்னேறினர். காவல் துறையினர் பின்னோக்கு சென்று வண்ணம் இருந்தனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மீண்டும், “சொன்னா கேளுங்க, வண்டியில் ஏறுங்க” என்றனர் காவல் துறையினர்.

“மக்களிடம் நாங்கள் வந்த நோக்கம் பற்றி கூறியாக வேண்டும். அதற்கு அலுவலகத்தை முற்றுகையிட செல்ல வேண்டும். உங்கள் அரணை தளர்த்தி விடுங்கள்” என்று தோழர்கள் கறாராகக் கூற, சரி, சாலை மறியல் செய்யாதீர்கள், வண்டியை அங்கு திருப்பி வரச் சொல்வதாக பகுதி ஆய்வாளர் கூறினார். ஆனால் காவலர்கள் கூட்டத்தை கட்டுப்பபடுத்த முடியவில்லை. அவர்களை தள்ளி விட்டு முன்னேறி சென்று சாலையில் அமர்ந்து விட்டனர். போலீசுக்கு நெருக்கடி ஆரம்பித்தது வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஒரு சிலரை வேனில் ஏற்ற தூக்கிச் சென்றனர்.

பலர் மறுத்து வாக்குவாதம் செய்தனர். “உங்கள் வீட்டில் யாரும் குடிப்பது இல்லையா, நீங்கள் எங்களுடன் வந்து போராடக் கூடாதா. உங்களுக்கு இந்தப் பிரச்சனை வந்தால் என்ன செய்வீர்கள்” என்று போலீசை திட்ட ஆரம்பித்தனர். தொடர்ந்து தனித்தனியாக குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனிற் ஏற்றினர். இவ்வாறாக 20 நிமிடம் தொடர் போராட்டம் நடந்தது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பின்னர் தோழர்கள் மண்டபத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு புரட்சிக தப்பாட்டம், இசை நிகழ்ச்சி நடந்தது. தோழர்கள் பாட்டு, கண்டன உரை என்று மாலை 6 மணி வரை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. தோழர் ஆனந்தராஜ், தோழர் ராமசாமி, தோழர் மணிவண்ணன், கரூர், காங்கேயம் பகுதி தோழர்கள் கண்டன உரை ஆற்றினார்கள். உடுமலை பகுதி தோழர்கள் கலை நிகழ்ச்சி, நாடகம் நடத்தினார்கள். இறுதியில் கோவை மக்கள் அதிகாரம் தோழர் மூர்த்தி நன்றி கூறினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவை.

பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா ?

0

ராமன் தேசிய நாயகன் என்று ஒப்புக்கொள் கிறாயா, இல்லையா?” என்று இசுலாமிய மக்களை அச்சுறுத்தி, இந்து வெறியைத் தூண்டி அதிகார நாற்காலியில் அமர்ந்தது பாரதிய ஜனதா. இப்போது கேலிப் பொருளாகி வரும் மோடி அரசின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்கு பாரத மாதாவைத் துணைக்கு அழைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

“பாரத் மாதா கி ஜெய்” சொல்வதற்கு இளைய சமுதாயத்தைப் பயிற்றுவிக்க வேண்டுமென்று மார்ச் 3-ஆம் தேதியன்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். மார்ச் 17-ஆம் தேதியன்று மகாராட்டிர சட்டமன்றத்தில், “பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தை எழுப்பத் தயாரா?” என்று இசுலாமிய அடிப்படைவாதக் கட்சியான மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதானுக்குச் சவால் விட்டார். பா.ஜ.க. உறுப்பினர் ராம் கதம்.

bharat-matha-caption-1“ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் மகாராஷ்டிரா போன்ற முழக்கங்களை எழுப்ப நான் தயார். ஆனால், என் கழுத்தை அறுத்தாலும் நீங்கள் சொல்லும் அந்த முழக்கத்தை மட்டும் நான் எழுப்ப மாட்டேன்” என்று பதிலளித்தார் வாரிஸ் பதான். பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தை எழுப்ப மறுத்த குற்றத்துக்காக அவரைச் சட்டமன்ற உறுப்பினர் தகுதியிலிருந்து இடை நீக்கம் செய்தார் அவைத் தலைவர். இவ்விவகாரத்தில் காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சிகளும் பா.ஜ.க.வை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டைப் பெண் தெய்வமாக உருவகப்படுத்தும் இந்த முழக்கம் ஒரு வகையான உருவ வழிபாடு என்பதால், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கங்களை இசுலாமியர்கள் எழுப்ப முடியாது என்பது மஜ்லிஸ் கட்சியின் நிலைப்பாடு. இந்த முழக்கம் பார்ப்பன இந்து தேசியக் கண்ணோட்டத்திலானது. இதனை இசுலாமியர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிந்துதான் பாரதிய ஜனதா இந்த விவகாரத்தை திட்டமிட்டே கிளப்பியிருக்கிறது. (பார்க்க: பெட்டிச் செய்தி)

மார்ச் 28 அன்று அருண் ஜெட்லி பேசியிருப்பதை இப்பிரச்சினையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். “ஐதராபாத் பல்கலைக்கழகத்திலும் ஜே.என்.யு.விலும் நடைபெற்று வரும் பிரச்சினைகளைத் தூண்டுபவர்களில் முதன்மையானவர்கள் தீவிர கம்யூனிஸ்டுகள். முகத்தை மூடியபடி சில ஜிகாதிகளும் அந்த ஆர்ப்பாட்டத்தில் தென்படுகின்றனர். தீவிர இடதுசாரிகளின் அரசியலில் காங்கிரசும், நாடாளுமன்ற மிதவாத கம்யூனிஸ்டுகளும் சிக்கிக் கொண்டுவிட்டனர். முதல் சுற்று சித்தாந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம். கிட்டத்தட்ட நமது நிலையை ஆதரிக்கும் அளவுக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.”

ஒருபுறம் ஜெட்லி இப்படிப் பேசிக்கொண்டிருக்க, அதே நாளன்று மோகன் பகவத் வேறுவிதமாகப் பேசுகிறார். “பாரதம் உலகத்துக்கே வழிகாட்ட வேண்டும், ஒட்டுமொத்த உலகமும், ‘பாரத் மாதா கீ ஜே என முழங்க வேண்டும். இதுவே நம் விருப்பம். யாருடைய தொண்டைக்குள்ளும் இந்த முழக்கத்தைத் திணிப்பது நம் நோக்கமல்ல” என்கிறார். ஒரே நேரத்தில் நூறுவிதமாகப் பேசும் இந்தக் கயமையை, இனி “நாக்குமாறித்தனம்” என்று நாம் அழைக்கலாம். இனி, நடந்தது என்ன என்பதை நாம் பார்ப்போம்.

ஜே.என்.யு மாணவர்கள்
ரோஹித் வெமுலாவையும் காந்தியையும் கொன்ற கொலைகாரர்கள் எங்களுக்குத் தெசியம், தேசபக்தி குறித்து பாடம் நடத்த வேண்டாம் என்ற முழக்க அட்டைகளோடு இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்.

ஜே.என்.யு. மாணவர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கு, தேசியம், தேசப்பற்று என்பன குறித்த பரவலான விவாதத்தைக் கிளப்பி விட்டது. அப்சல் குரு தூக்கு தண்டனைக்கு எதிராக தமது கருத்தைக் கூறுவதற்கு ஒருவருக்கு உரிமையில்லையா என்று கருத்துரிமை தளத்தில் மட்டும் தொடங்கிய அந்த விவாதம், முதலில் பார்ப்பன இந்து தேசியத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. அடுத்து, தேசியம் என்ற கருத்தாக்கத்தையே பாட்டாளி வர்க்கப் பார்வையில் விமரிசித்துப் பேசுவதற்கான களத்தையும் அது உருவாக்கித் தந்தது. இந்தியா என்ற நாடு எப்போது உருவானது, தற்போதுள்ள மாநிலங்கள் அதில் எப்படி, எப்போது இணைக்கப்பட்டன என்பன போன்ற வரலாற்று விவரங்கள் எல்லாம் பொதுவெளியில், அறிவுத் துறையினர் மத்தியில் விவாதிக்கப்படும் நிலையை அது உருவாக்கி விட்டது.

ஜே.என்.யு. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரசு மற்றும் வலது, இடது கம்யூனிஸ்டுகளால் அங்கே இந்த வரலாறை மறுக்கவோ, தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை எதிர்த்துப் பேசவோ முடியவில்லை. மிதவாத இந்து தேசியத்தின் அடிப்படையிலான தங்களது வழக்கமான ஒருமைப்பாட்டு பஜனையையும் பாடமுடியவில்லை. இதைத்தான் தீவிர இடதுசாரிகளின் அரசியலில் காங்கிரசும் மிதவாத கம்யூனிஸ்டுகளும் “சிக்கிக்” கொண்டுவிட்டதாக அருண் ஜெட்லி குறிப்பிடுகிறார்.

எனவேதான், வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவரான கன்னையா குமார், “நான் அரசியல் சட்டத்தை மதிக்கிறேன். காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் அங்கே பெண்களுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்தும் வல்லுறவுக் குற்றங்களை நான் விமரிசிப்பதை யாரும் தடுக்க முடியாது” என்றெல்லாம் பேசி சமாளிக்கும் நிலை ஏற்பட்டது.

bharat-matha-madisar-maamiபார்ப்பன பாசிஸ்டுகள் தமது நடவடிக்கை மூலம் இவர்களை இக்கட்டில் தள்ளியது மட்டுமின்றி, தாங்களும் இக்கட்டில் சிக்கிக்கொண்டனர். பாரத் மாதா கி ஜெய் என்று அவர்கள்தான் தொண்டை கிழியக் கத்தினார் களேயன்றி, அந்த முழக்கத்தை வாங்கிப் போடக்கூட எந்த ஊரிலும் ஆளில்லை. ஒரு ஏழையின் பார்வையில் பா.ஜ.க.-வின் தேசபக்தியைக் கேலிக்குள்ளாக்கிய கன்னையா குமாரின் உரை, மோடியின் அரசைக் கேலிப்பொருளாக்கி விட்டது. “நாடு என்பது அதன் மக்கள்தான். இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாகவும் செயல்படும் மோடியின் அரசுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டுப்பற்றினைப் பற்றியோ பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?” என்ற கேள்விக்கு காவிக் கோழைகளால் பதிலளிக்க முடியவில்லை.

இந்த இக்கட்டிலிருந்து தப்புவதற்கும் பார்ப்பன பாசிஸ்டுகளிடம் இருந்த ஒரே ஒரு வழி, இந்தப் பிரச்சினையை முஸ்லிம் எதிர்ப்பாக மாற்றுவதுதான். மாட்டிற்கு முன்னால் சிவப்புத் துணியை ஆட்டுவதைப் போல, இசுலாமிய அடிப்படைவாதிகளைச் சீண்டுவதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறது பாரதிய ஜனதா.

bharat-matha-caption-2வாரிஸ் பதான் இடைநீக்கம் பற்றி கருத்து தெரிவித்த வலது கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா, பா.ஜ.க., மஜ்லிஸ் கட்சி ஆகிய இருவருமே மதவெறியைத் தூண்டுவதாகக் கூறியிருக்கிறார். பாரத மாதா என்ற பார்ப்பன மதவாத தேசிய பிம்பம், சிறுபான்மை மதத்தினருக்கு மட்டும் எதிரானதல்ல. ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அனைத்துக்கும், மிக முக்கியமாக உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானது. அவ்வாறிருக்க, பாரதமாதா என்ற கருத்தாக்கம் இசுலாமியர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை என்பது போலச் சித்தரிக்கும் பா.ஜ.க.-வின் நிலையை டி.ராஜாவின் கூற்று மறைமுகமாக அங்கீகரிக்கிறது. இதைத்தான் தமது வெற்றி என்று கூறுகிறார், அருண் ஜெட்லி.

பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு இது தொடர்பாக நிறைவேற்றியிருககும் தீர்மானத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். “பாரத் மாதா கி ஜெய் என்று சொல்ல மறுப்பது எங்கள் உரிமை என்று கூறுவதை ஏற்கவியலாது. நமது அரசியல் சட்டம் இந்தியாவைப் பாரதம் என்றும் சொல்கிறது. அந்த பாரதத்துக்கு வெற்றி என்று கூற மறுப்பது அரசியல் சட்டத்தை அவமதிப் பதாகும்… பாரதத்தை அவமதிக்கின்ற, அதன் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துகின்ற எந்த ஒரு முயற்சியையும் பாரதிய ஜனதா கடுமையாக எதிர்க்கும்.”

மோகன் பகவத்
பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தை முன்வைத்து முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியவெறியைத் தூண்டிவிட முயலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

பாரத் மாதா கி ஜெய் என்று சொல்ல மறுப்பவன் அரசியல் சட்டத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான தேசத்துரோகி என்று அச்சுறுத்துகிறது இத்தீர்மானம். வாஜ்பாயி அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சோலி சோரப்ஜி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இத்தீர்மானம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று கூறியிருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் “யகோவாவின் சாட்சிகள் என்ற தீவிர கிறித்தவப் பிரிவைச் சார்ந்த மாணவிகள், தேசிய கீதம் பாட மறுத்ததற்காகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வழக்கில், “பேச்சுரிமை என்பது பேசாமல் இருக்கும் உரிமையையும் உள்ளடக்கியதுதான். தேசிய கீதம் பாடப்படும்போது மரியாதைக்காக அவர்கள் எழுந்து நின்றிருக்கிறார்கள். மற்றபடி, பாட மறுப்பது அவர்களது உரிமை” என்று 1986-இல் உச்சநீதி மன்ற நீதிபதி ஓ.சின்னப்பரெட்டி அளித்திருக்கும் தீர்ப்பினைச் சுட்டிக் காட்டி, பா.ஜ.க.-வின் தீர்மானம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று பல உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் கண்டித்திருக்கின்றனர்.

வாரிஸ் பதான்
பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தைப் போட மறுத்ததற்காக மகாராஷ்டிரா சட்ட மன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான்.

“அப்படியானால் அரசியல் சட்டத்தைத் திருத்தி விட வேண்டியதுதான்” என்கிறார் பாபா ராம்தேவ். லவ் ஜிகாத், கோமாதா வழிபாடு, மாட்டுக்கறிக்கு தடை, சமஸ்கிருத திணிப்பு, சூரிய நமஸ்காரம் போன்றவற்றின் வரிசையில் இந்து தேசிய அடையாளத்தைத் திணிப்பது, மதிப்பிழந்து வரும் மோடி அரசின் மீதான மக்களின் வெறுப்பை வேறு பக்கம் திருப்பி விடுவது – இதுதான் இந்த பாரதமாதா பஜனையின் நோக்கம்.

மதிப்பிழந்து வரும் மோடி அரசுடன் பாரதமாதா பஜனையையும் ஒருங்கே மதிப்பிழக்க வைப்பதற்கான வாய்ப்பை மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் நமக்கு வழங்குகின்றன. ஐதராபாத் முதல் ஜே.என்.யு. வரை எந்த இடத்திலும் அவர்கள் எதிர்பார்த்த தேசவெறியை மக்கள் மத்தியில் உருவாக்க முடியவில்லை. இருப்பினும், பாரதமாதா என்ற சோளக்கொல்லை பொம்மையை ஆட்டினால், காங்கிரசும், வலது, இடது கம்யூனிஸ்டுகளும் பயந்து விடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார் அருண் ஜெட்லி. அவருடைய நம்பிக்கையைப் பொய்யில்லை என்று இவர்கள் நிரூபிக்கிறார்கள்.

தேசம் என்பது சாமியா, மடிசார் மாமியா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூடான், பர்மா ஆகிய நாடுகளையும் கொஞ்சம் திபெத்தையும் உள்ளடக்கிய தெற்காசியாவின் வரைபடம், அதில் கையில் காவிக் கொடியுடன் ஒரு சிங்கத்தின் மீது ஒய்யாரமாக சாய்ந்து நிற்கின்ற, ஒல்லியான ஸ்மிருதி இரானி. இந்த ‘மாமியைத்தான் ‘பாரதமாதா என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

bharat-matha-french-goddessஇதே மாமிக்கு முதுகில் நாலு கைகளை ஒட்டவைத்து, அதில் ஆயுதங்களையும் கொடுத்தால் துர்க்கையாகி விடுவாள். கையில் வீணையைக் கொடுத்து உட்காரவைத்தால் சரசுவதியாகி விடுவாள். எழுப்பி நிற்க வைத்து, கையிலிருந்து காசு கொட்டவைத்தால் இலட்சுமியாவாள். நவராத்திரி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடம் போட்ட கதைதான்.

தேசத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ கற்பனையாக உருவகப்படுத்தும் இந்த மரபு ‘ஹிந்து மரபு அல்ல என்றும், இது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம் என்றும் விளக்கியிருக்கிறார் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபிப். அன்று பண்டைய ரோம் நகரம் மற்றும் ரோமானியப் பேரரசின் உருவகமாக இருந்தது ரோமா என்ற பெண் தெய்வம். கி.பி. முதல் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தீவுகளை வெற்றி கொண்ட ரோமானியப் பேரரசு, பிரித்தானியா என்ற பெண் தெய்வத்தை அங்கே உருவாக்கியது. கையில் திரிசூலத்துடன் சிங்கத்தின் மீது சாய்ந்து நிற்கிறாள் அந்தப் பெண். இர்ஃபான் ஹபீப் இந்த மரபைச் சுட்டிக் காட்டுகிறார்.

நெடுங்காலத்துக்குப் பின்னர், 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, தேசியம் என்ற கருத்தாக்கம் பிறக்க வழிவகுக்கிறது. அதுவரை ஒரு மன்னர் குலத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியங்களில் வாழ்பவர்களாகவோ, கத்தோலிக்க, புரோட்டெஸ்டென்ட் மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவோ தங்களை அடையாளப்படுத்தி வந்த மக்கள், அவற்றைப் பின்னுக்குத் தள்ளி தேசம் என்ற புதிய அடையாளத்தினுள் வருகிறார்கள்.

bharat-matha-europeமன்னராட்சியுடன் திருச்சபையின் அதிகாரத்தையும் தூக்கியெறிகிறது பிரெஞ்சுப் புரட்சி. அப்போது பிரெஞ்சு தேசியத்தின் உருவகமானாள் பகுத்தறிவுத் தேவதை (Goddess of Reason). இந்த தேவதையின் கையில் ஆயுதமும் இல்லை, மத அடையாளமும் இல்லை. இதே போல ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளும் தேசத்தைப் பெண்ணாக (தெய்வமாக அல்ல) உருவகப்படுத்தின. இந்த எடுத்துக்காட்டுகள், உருவகங்களை அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பதற்கு நமக்கு உதவும்.

நமது நாட்டில் பாரதமாதா பிறந்த இடம் வங்கம். ஆங்கிலக் கல்விதான் இந்தியாவின் மேட்டுக்குடி அறிவுத்துறையினருக்கு தேசியம் என்ற கருத்தாக்கத்தையும், ஐரோப்பிய வரலாற்றையும் அறிமுகப்படுத்துகிறது என்பதை நாம் இங்கே நினைவில்கொள்ள வேண்டும். இசுலாமிய எதிர்ப்பு மற்றும் இந்து தேசியத்தின் கருவடிவமான பங்கிம் சந்திரரின் ‘ஆனந்தமடம் என்ற வங்காள நாவலில், பத்து கைகளுடன் பாரதமாதா பளிங்குக் கோயிலில் வீற்றிருக்கிறாள். சில பத்தாண்டுகளுக்குப் பின் தாகூரின் உறவினரான ஓவியர் அபநீந்திரநாத் தாகூர் வரைந்த ஓவியமோ, நான்கு கைகள் கொண்ட இளம் துறவியாக பாரதமாதாவைச் சித்தரிக்கிறது.

பின்னர் வந்த பாரதமாதா, பிரித்தானிய மாதாவைப் பின்பற்றி சிங்கத்தின் மீதேறுகிறாள். மாதாவின் கையில் காவிக் கொடி அல்லது தேசியக் கொடி செருகப்படுகிறது. தென்னிந்தியாவில் பல இந்துக் கடவுளர்களுக்கு உயிர் கொடுத்தவரான ஓவியர் ரவிவர்மா, பாரதமாதாவை மடிசார் மாமியாகவே சித்தரித்திருக்கிறார்.

பாரதமாதாவின் “பார்ப்பன தோற்றம் மட்டுமல்ல, இந்தியாவைப் “பாரத வர்ஷம் (வர்ஷம் – நிலப்பகுதி) என்று குறிப்பிடுவதும்கூட ஆரிய வேத-புராண மரபின் அடிப்படையிலானதுதான். இவையெல்லாம் பார்ப்பன- உயர் வருணத்தினர் இந்தியாவைத் தங்கள் உடைமையாகக் கருதும் மனோபாவத்திலிருந்து பிறந்தவை. வேதங்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் மாக்ஸ்முல்லர் என்ற ஐரோப்பிய அறிஞர் ‘அக்மார்க் ஆரிய முத்திரை வழங்கியதன் விளைவாக, பிராமணோத்தமர்களும் மேல்வருணத்தாரும் பெற்ற மனக்கிளர்ச்சிதான், பிரித்தானிய மாதாவின் வடிவத்தில் பாரதமாதாவின் கெட்-அப்பை மாற்றுவதற்கான உந்துதுலை (Inspiration) வழங்கியிருக்கும்.

விடுதலைப் போராட்ட வீரர்களில் இந்து மதத்தினருக்கு இந்த முழக்கம் உறுத்தலாகத் தெரிந்திருக்கவில்லை. அதே நேரத்தில், மதச் சாயல் கொண்ட இந்த மாதாவும் வந்தேமாதரம் முழக்கமும் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தும் என்ற விமரிசனமும் அன்றே கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், மனோன்மணியம் சுந்தரனார் ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பன மரபுக்கு எதிராகத் தமிழைத் தாயாக உருவகப்படுத்தி நிறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் இங்கே நாம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறோம். நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத் சிங், “பாரத் மாதா கி ஜெய்” என்றோ, “வந்தே மாதரம்” என்றோ முழங்கவில்லை. “இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்குகிறான். மதச் சாயல்கள் இல்லாத, அந்தப் புரட்சி முழக்கத்தை (1921-ல்) வடித்த கவிஞனின் பெயர் – மவுலானா ஹஸ்ரத் மொஹானி.

– மருதையன்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !

1

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்களிடமிருந்து கற்போம்!

ந்தியாவின் வளங்களையெல்லாம் பன்னாட்டு கம்பெனிகள் சூறையாடுவதற்கு தூக்கிக் கொடுத்தாயிற்று. இனி எஞ்சியிருக்கும் தொழிலாளர் வைப்பு நிதியையும் (PF-Provident Fund) ஒட்டச்சுரண்டி சந்தையில் அடகுவைக்கலாம் என நினைத்த மோடி அரசின் பகற்கொள்ளையை பெங்களூரு தொழிலாளிகள் போர்க்குணத்துடன் போராடி முறியடித்திருக்கின்றனர்.

கடந்த இருநாட்களாக இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் பெங்களூரு, ஆடை ஏற்றுமதி தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டத்தால் சிவந்திருக்கிறது. 20,000-க்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதித் துறை தொழிலாளர்கள் பெங்களூரு மாநகரை முற்றுகையிட்டு மோடி அரசின் பி.எஃப் திருட்டுக்கு எதிராக போராடியிருக்கின்றனர்.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
தொழிலாளர் படையின் முற்றுகையில் பெங்களூரு மாநகரம்

கடந்த மார்ச் 12-ம் தேதி பி.எப். சட்டத்தின் விதிமுறைகளைத் திருத்துவதாக மோடி அரசு அறிவித்தது. அதன்படி, தொழிலாளர்கள் 58 வயது வரை பி.எஃப். பணத்தை எடுக்க முடியாது; தொழிலாளர்களால் 7 ஆண்டுகள் வரை கோரப்பட்டாத நிதியை அரசு வேறு வகைகளில் பயன்படுத்தலாம்; ரூ 15,000-க்கு மேல் ஊதியம் வாங்கும் தொழிலாளர்களுக்கு பி.எஃப் பங்களிப்பு செய்யப்படாது போன்ற பல தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இந்தத் திருத்தம் அமைந்திருந்தது.

இந்தத் திருத்தம் தொழிலாளர்களின் பி.எஃப். சேமிப்புத் தொகையான 6 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயைத் திருடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதற்கான சதித்திட்டமாக அமைந்துள்ளது. இதனால், இத்திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் கண்டனக் குரல்களும், எதிர்ப்புகளும் வந்து கொண்டிருந்தன.

ஏற்கனவே தாங்கமுடியாத சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தியத் தொழிலாளிகள், தமது பி.எஃப் சேமிப்பில் உள்ள பணத்தை வைத்துதான் குடும்ப நிகழ்ச்சிகள், மருத்துவச் செலவுகள், கல்யாண நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்துவருகின்றனர். மேலும் தற்பொழுது நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்கள் நிரந்தர வேலையிலும் கிடையாது. 40 வயது பூர்த்தியாகும் முன்பே பல கம்பெனிகளால் ஒப்பந்தத் தொழிலாளியாக்கப்பட்டு வேலையிழந்து நிர்க்கதியாக இருக்கும் பொழுது 58 வயதில் தான் பி.எஃப் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொழிலாளர்களின் குரல்வளையை நசுக்கிக் கொல்கிற செயலாகும். மேற்படி இந்தவிதியை ஏப்ரல்-1-லிருந்து மாற்றி மே 1-க்குள் முடித்துவிட கவனமாய் இருந்த மோடி அரசின் சதிச்செயலை தொழிலாளிகள் நேரடியாக களம் கண்டு முறியடித்திருக்கின்றனர்.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
ஆயத்த ஆடைத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் பெண்கள்

பெங்களூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகளில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 18-ம் தேதி திங்கள் அன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பி.எஃப் தொடர்பான மோடி அரசின் புதிய விதிமுறைகளை எதிர்த்து பெங்களூரு-ஓசூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 80%-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.

ஷாகி ஏற்றுமதி தனியார் தொழிற்சாலையின் நான்காவது யூனிட்டைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் திங்கள் அன்று காலை 8.45 மணி அளவில் கொடிச்சிகனகள்ளியில் ஒன்று கூடி போராடியதாக தெரிவிக்கிறது பெங்களூரு மிரர் பத்திரிகை. நேரம் செல்லச் செல்ல தொழிலாளர்களின் எண்ணிக்கை 5,000, 10,000ஆகி, 20,000 வரை தொட்டிருக்கிறது. இதில் ஷாகி தனியார் ஆலைத்தொழிலாளிகள் தவிர, கே.மோகன் அண்ட் கோ எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், பொம்மனஹள்ளியில் இருக்கும் ஜாக்கி ஆலைத்தொழிலாளிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

பொம்மனஹள்ளி தவிர ஜஜ்ஜாலகிரி மற்றும் பீன்யா தொழிற்சாலைப் பகுதி, மதூர் தாலுகாவில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையை மறித்து தொழிலாளிகள் போராடினர். போராடும் தொழிலாளிகளை ஒடுக்க நினைத்த போலீசு படையை தொழிலாளிகள் கற்களுடன் எதிர்கொண்டனர். சாலை மறியல் நடந்துகொண்டிருக்கும் பொழுதே 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் படை சிங்காசந்திராவில் இருக்கும் வட்டார வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறது.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
கர்நாடகர அரசை குலைநடுங்க வைத்த போராட்டம்

போராட்டக்குழுவின் தலைமையைக் கண்டுபிடித்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைக்கலாம் என்று நினைத்த போலீசு படை, எப்படி இவ்வளவு கூட்டம் கூடியது? யார் போராட்டத்தை நடத்துவது? யாரிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என்று தெரியாமல் தொழிலாளிகள் அனைவரும் பொறுப்பேற்று நடத்தும் போராட்டத்தைக் கண்டு குலை நடுங்கி நின்றிருக்கிறது. பத்திரிகைகளோ ‘தலைவரற்ற போராட்டம் (Leaderless Protest)’ என்று வர்ணித்துவிட்டு நொறுங்கிப் போன அரசுக்கட்டமைப்பை பாதுகாக்கும் வேலையில் கனஜோராக இறங்கியிருக்கின்றன. தொழிலாளிகளின் போர்க்குணமிக்க போராட்டமோ பெங்களூரு முழுவதும் வடக்கே ஜலஹள்ளியிலும் மேற்கே நீலமங்கலா பேனர்ஹாட்டா சாலையிலும் தெற்கே ஓசூர்-ஹெப்பாகோடி சாலையிலும் வலுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 19-ம் தேதி அதிகாலை முதல் பெங்களூருவின் பல இடங்களில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் சாலையில்…

முக்கியமாக தொழிற்பேட்டைகள் நிறைந்த கொரகுஞ்ஜி பாள்யா, காரேபாவி பாள்யா, கோரமங்களா, ஆனெக்கல், கோடிசிக்கன ஹள்ளி, தும்கூர் ரோடு, ஜாலஹள்ளி கிராஸ், நீல மங்களா, பீன்யா மற்றும் ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹொசாரோடு, பொம்மனஹள்ளி, கார்வே பாள்யா, ஹெப்பகோடி என நகரின் பல இடங்களில் சுமார் இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல மொழி பேசும் இந்தத் தொழிலாளர்கள் தங்களது பி.எஃப் பணத்தை மோடி அரசு கொள்ளையடிப்பதை உணர்ந்து ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக, பெண்கள் இளம் பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் முன்னணியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் கொதிக்கும் தார்சாலையில் அமர்ந்து போராடினர்.

திங்களன்று தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியதை பார்த்த போலீசு மறுநாள் காலை முதலே, தொழிலாளர்கள் கூடவிடாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தது. முன்கூட்டியே தொழிலாளர்கள், சாலையில் நின்று கொண்டிருப்பவர்களை எல்லாம் கைது செய்து ஆட்டம் போட்டது. இருப்பினும் தொழிலாளர்கள் குவிவதை போலீசால் தடுக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக இரவும் பகலும் பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
போலீசு தடியடி நடத்தினாலும் பெண் தொழிலாளர்கள் அஞ்சாமல் தங்களது கோரிக்கையை முழக்கங்களாக உரக்க வெளிப்படுத்தினர்.

கோரகுஞ்ஜி பாள்யாவில் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் ஆலையின் முன்னே குவிந்து போராட்டம் செய்த போது அதனைத் தடுத்தது போலீசு. பெண் தொழிலாளர்களை கொஞ்சமும் இரக்கமின்றி ஆண் போலீசு தாக்கியது. போலீசு தடியடி நடத்தினாலும் பெண் தொழிலாளர்கள் அஞ்சாமல் தங்களது கோரிக்கையை முழக்கங்களாக உரக்க வெளிப்படுத்தினர். போலீசாரின் ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோடிசிக்கன அள்ளியில் காலை முதலே போலீசு குவிக்கப்பட்டு அங்கு யாரும் நிற்கக் கூடாது என அடித்து விரட்டத் தொடங்கியது. இதனை எதிர்த்துக் கேட்ட தொழிலாளர்களை சீருடை அணியாத போலீசு குண்டர்கள் தாக்கினர். இதனால், அங்கேயும் தொழிலாளர்கள் வீதியில் குவியத் தொடங்கினர்.

எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது போலீசு. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தும்கூர் ரோடு சாலையில் இருந்த கர்நாடக அரசு பேருந்துக்கு தீவைத்து எரித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக மாறியது. முற்றிலுமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதேபோல, ஜாலஹல்லி கிராஸ் பகுதியில் மாநகர பேருந்து எரிக்கப்பட்டது. கார்வே பாள்யாவில் திரண்ட தொழிலாளர்களை போலீசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பெண்கள் என்றும் பார்க்காமல் தடியடி நடத்தி தனது கொடூர முகத்தைக் காட்டிக்கொண்டது.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது போலீசு.

அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரியும் ஹெப்ப கோடி தொழிற்பேட்டையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் குவிந்தனர். இதனால், தமிழகத்திற்கான அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில், போலீசு அமைதியாக போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. இதனால், போலீசை எதிர்த்து தொழிலாளர்கள் கற்கள் வீசித் தாக்கினர். தொழிலாளர்களின் போராட்டத்தை போலீசால் அடக்க முடியவில்லை. இதன்பின்னர், கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இருப்பினும் தொழிலாளர்கள் கலைந்து செல்லாமல் வீரத்துடன் எதிர்த்துப் போராடினர்.

அன்றாடக் கூலிகள் போல கொத்தடிமைகளாக பணிபுரிகின்ற கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உதவு பி.எஃப். நிதியையும் மோடி-தத்தாத்ரேயா கும்பல் கொள்ளையடிக்க முயற்சிப்பதைக் கண்டு தொழிலாளர்கள் இந்த அளவிற்கு அணிதிரள்வார்கள் என ஆளும் வர்க்கங்களும் அரசும் எதிர்பார்க்கவில்லை. ‘அமைப்பு ரீதியாக இந்தியத் தொழிலாளர்கள் வலுவாக திரட்டப்படவில்லை, அதனால், எப்படி வேண்டுமானாலும் தொழிலாளர்களின் சட்டங்களைத் திருத்தி கொத்தடிமையாக்கி விடலாம்’ என்ற மோடி கும்பலின் சதிகளை, கனவைத் தகர்த்தெறிந்துவிட்டனர் பெங்களூரு தொழிலாளர்கள். இதன் மூலம் பி.எஃப். சட்ட விதிமுறைகள் திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் பணத்தைக் கொள்ளையடிக்க மோடி கும்பல் திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதும் கலைக்கப்பட முடியாத தொழிலாளர் போராட்டம்.

தொழிலாளர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்க முயற்சித்து தடியடி, கண்ணீர் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது, கர்நாடக காங்கிரசு அரசு. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இவ்வாறெல்லாம் அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதும் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கலைக்க முடியாமல் போன முதலமைச்சர் சித்தராமையா, “தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானதுதான், ஆனால், தொழிலாளர்கள் சட்டத்தைக் கையிலெடுப்பது தவறு, பொதுச் சொத்துக்களுக்கு தீவைப்பது தவறு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தொழிலாளர்களுக்கு எதிரான தனது திமிரை வெளிப்படுத்தினார். மேலும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை சிறைவைத்து அடக்குமுறை செலுத்தி வருகிறது கர்நாடக அரசு.

இந்நிலையில் மோடி-தத்தாத்ரேயா கும்பல் தொழிலாளின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து பி.எஃப் சட்ட விதிமுறைகள் திருத்ததை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. தொழிலாளர்களை மத ரீதியில் பிளவுபடுத்தி, நுகர்வுக் கலாச்சார போதையில் ஆழ்த்தி, அவர்களது உரிமைகளைப் பறித்து ஒட்டச் சுரண்டுவதற்காக மோடி அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் போட்ட சதித்திட்டத்தை தவிடுபொடியாக்கியுள்ளனர் பெங்களூரு தொழிலாளர்கள். இதற்கு பணிந்துதான் மோடி அரசும் தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது.

மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்கள்
தொழிலாளர் போராட்டத்திற்கு பணிந்து தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது மோடி அரசு.

பெங்களூரு தொழிலாளர் எழுச்சி, சமகாலத்தில் பல்வேறு படிப்பினைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

  1. இந்த அரசு கட்டமைப்புகளான சட்டம், காவல், நீதி, தேர்தல், பாராளுமன்றம் அனைத்தையும் தொழிலாளிகள் நம்பாமல் அவற்றை தூக்கி எறிந்துவிட்டு தன் பிரச்சனையை தாமே கையில் எடுத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த அரசு ஆள அருகதையற்று தோற்றுபோய்விட்டது என்பதுதான். இதன்படி பெங்களூரு தொழிலாளிகளின் எழுச்சி தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மூடுவது எப்படி? விவசாயிகள் தற்கொலையை எதிர்ப்பது எப்படி? கல்விக்கொள்ளையை எங்கனம் எதிர்ப்பது? தேர்தல் எனும் மாயையிலிருந்து தெளிவது எப்படி என்று நாட்டு மக்களுக்கு நடைமுறை பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
  2. தொழிலாளிகளின் பி.எஃப் பிரச்சனை பொருளாதார கோரிக்கை என்ற அளவில் மட்டுமே தான் இருந்தது என்றாலும் மோடி கும்பலின் தனியார்மய தேசவிரோத கொள்கைகளை கூட்டாக நேரிடையாக எதிர்க்கும் வடிவத்தை மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமே தங்களுக்கான விடுதலை என்பதை மக்கள் பற்றுவதற்கான பெளதீக நிலைமைகளை புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
  3. பெங்களூரு போராட்டத்தின் பெரும்பாலான தொழிலாளிகள் பெண்கள் ஆவர். பெங்களூரு ஆயத்த ஆடை தொழிற்சாலைகளின் சூழல் மட்டுமல்ல எல்லா பணியிடங்களிலும் குறைவான கூலிக்கு பெண்கள் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்ததோடு களமிறங்கி போராடியிருக்கின்றனர். பெண்களின் பங்களிப்பின்றி சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பதைக் கற்றுக்கொடுக்கிறது பெங்களூரு தொழிலாளர் எழுச்சி!
  4. ஆளும் வர்க்க ஊடகங்கள் பெங்களூரு தொழிலாளிகளின் எழுச்சியை வழக்கம் போல வன்முறை, கலவரம் என்று திசைதிருப்புகின்றன. பெங்களூருவில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தும் பெரும்பாலான ஊடகங்களில் கருத்து தெரிவித்த வாசகர்கள் தொழிலாளிகளின் போராட்டத்திற்கு ஏகோபித்த வரவேற்பை நல்கியிருக்கின்றனர். நன்றி கூறி பின்னூட்டமிடுகின்றனர். இப்படி வரவேற்பை நல்கியவர்கள் எல்லாம் பி.எஃப் விதியால் தானும் பாதிக்கப்பட்டு மேற்கொண்டு எப்படி போராடுவது என்று வழி தெரியாமல் விழிபிதுங்கியிருக்கின்றனர் என்று புரிந்துகொள்கிறோம். என்னதான் ஊடகங்கள் கலந்து கட்டி தொழிலாளிகள் மீது சேற்றை வாரியிறைத்தாலும் மக்கள் தொழிலாளிகள் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
  5. ஐ.டி நண்பர்களின் அடிமை வாழ்வைச் சுட்டிக்காட்டி, போராடிய தொழிலாளி சகோதர சகோதரிகளுக்கு நன்றி என எழுதப்படும் எழுத்துகள் மோடி கும்பலை, அவற்றிற்கு சேவகம் செய்யும் அதிகார வர்க்கத்தை கறாராக அம்பலப்படுத்துகின்றன. மேலும் இத்தகைய ஆதரவுத்தளம் பாட்டாளி வர்க்கம் தன்னை மட்டுமல்ல சமூகத்தின் அனைத்து வர்க்கங்களையும் சுரண்டலிலிருந்து விடுவிக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிய வைக்கிறது.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் நடைமுறைக்கு வந்த பின்னர் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை, சங்கம் வைக்கும் உரிமை, போராடும் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த உரிமைகளை மீண்டும் நிலைநாட்டவும் ஆலைகளைத் தொழிலாளர்களே நிர்வகிக்கும் உரிமையை நிறுவவும் வேண்டும். தொழிலாளர்கள் மட்டுமல்லாது விவசாயிகள், மாணவர்கள், சிறுதொழில் புரிவோர் என அனைத்து உழைக்கும் வர்க்கங்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.

மேலும், நாட்டின் கொஞ்சநஞ்ச இறையாண்மையும் பறிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடே இன்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.  நமது நாடு மீண்டும் காலனியாக்கப்படுகிறது. இன்றைய பி.எஃப் விதிகள் திருத்தம் உட்பட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அடிக்கொள்ளியாக உள்ள மறுகாலனியாக்கத்தை நாட்டுப்பற்றுடன் எதிர்த்து முறியடிப்பது நம் அனைவரின் கடமையாகும். bengaluru-garment-workers-protest-ndlf-poster

  • தொழிலாளர்களிடமிருந்து பி.எஃப் சேமிப்பை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வசதியாக சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்தது மோடி கும்பல்!
  • இதற்கெதிராக போர்க்கோலம் பூண்டனர், பெங்களூரு தொழிலாளர்கள்!
  • துப்பாக்கிச்சூடு, தடியடி… அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர்!
  • மோடி-கார்ப்பரேட் முதலாளிகளின் சதியை முறியடித்தனர்!
  • போராடினால் மட்டுமே உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை உணர்வோம்!
  • புரட்சிகர சங்கங்களைக் கட்டியமைப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு: 94448 34519

போலி ஜனநாயகமும் தாலி ஜனநாயகமும் !

1

தேர்தலுக்கும்
திருமணத்திற்கும்
தெரிவதில்லை வித்தியாசம்
இரண்டுமே
எந்த சாதியில்
என்பதில் தொடங்குகிறது.

என்ன சொத்து இருக்கு?
எவ்வளவு கையில…
எவ்வளவு செலவு செய்வ?
என்று
வர்க்கம் பார்த்துதான்
நிச்சயிக்கப்படுகிறார்கள்
வேட்பாளர்களும்
மணமக்களும்

ஜாதகம், சாதகம்
இரண்டும் பார்த்தாலும்
மூலதனப் பொருத்தமில்லாதவர்க்கு
கட்சியிலும் சீட்டு இல்லை
கல்யாணத்திலும் சீட்டு இல்லை

பந்தக்காலு
வேட்புமனு தாக்கல்
இரண்டுமே நல்லநேரம்
ஏமாந்தவர்களுக்கு கெட்டநேரம்

பொதுக்கூட்ட மேடைக்கு
பூமி பூஜை
பொண்ணு மாப்பிள்ளைக்கு
சாமி பூஜை
கூட்டணிக் கொள்கை
குடும்பக் கொள்ளை!

“கெட்டி மேளம் கெட்டி மேளம்
ஓட்டு… ஓட்டு…”
மாட்டிக் கொண்டவர்களுக்கு
இனி பேச்சுக்கு வழியில்லை
கல் ஆனாலும் கணவன்
சாராயமானாலும் அரசு!
இரண்டுமே வாழும் கலை!

மச்சான் மோதிரத்தை
மாட்டிகிட்டு,
மாமனார் வண்டியை
ஓட்டிகிட்டு,
நகை நட்டோட
பெண்ணைக் கூட்டிகிட்டு
ஓசியில் வாழும் மாப்பிள்ளைக்கு
உறுத்துவதில்லை தகுதி

மக்கள் பணத்தை
தாட்டிக்கிட்டு
மாமூலாக கமிஷனை
வாங்கிக்கிட்டு
லஞ்சப் பணத்தை சேர்த்துக்கிட்டு
ஊழலில் வாழும் வேட்பாளர்க்கு
உறுத்துவதில்லை தொகுதி!

போலி ஜனநாயகத்திற்கு
புனிதம் கூட்ட தேர்தல் ஆணையம்,
தாலி ஜனநாயகத்திற்கு
புனிதம் கூட்ட சடங்கு சாஸ்திரம்
தேர்தலுக்கு முன்புவரை
கறக்கும் படை,
தேர்தல் நேரத்தில்
பறக்கும் படை!
திருமணத்திலும் இதுதான் நிலை!

வாழ்வைப் பறிகொடுத்த பின்புதான்
மணமக்களுக்கும் வாக்காளர்களுக்கும்
வருகிறது ஞானம்;
“தேர்தல் ஒரு அரசியல் ஊழல்,
திருமணம் ஒரு பண்பாட்டு ஊழல்”!

– துரை சண்முகம்

டாஸ்மாக் தலைமையக முற்றுகைப் போர் !

0

போர்க்களமாக மாறிய டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் !

மிழ்சமூகத்தை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக்கடையை மூடுவதற்கு தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் முழுவதும் மக்கள் களத்தில் இறங்கினால் உடனே டாஸ்மாக்கை மூட முடியும். இந்தக் கருத்துடன் டாஸ்மாக்கிற்கெதிராக தொடர்ச்சியாக போராடிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக அதன் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட மாபெரும் டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் சென்னையில் 20.04.16 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டாஸ்மாக்கை படிப்படியாக மூடுவதாக அறிவித்திருந்த ஜெயாவின் போலீசோ போராட்டக்காரர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கத் துவங்கினர். சிறுவர்கள், பெண்கள் என கூட பார்க்காமல் ஆண் போலீசார் பெண்களின் ஆடைகளை கிழித்து அடித்து தரதரவென இழுத்துக்கொண்டு சென்று கைது செய்தனர்.

 தோழர் வெற்றிவேல் செழியன்
தலைமை தாங்கிய தோழர் வெற்றிவேல் செழியன்

மற்ற தோழர்களை குண்டுக்கட்டாகவும், அடித்து இழுத்தும் சென்று வண்டியில் ஏற்றினர். முன்னதாக தலைமைதாங்கி நடத்திய வெற்றிவேல் செழியன் பேசுகையில்,”டாஸ்மாக்கை மக்களால் மட்டுமே மூடமுடியும். இன்றைக்கு ஓட்டுப் பொறுக்குவதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் டாஸ்மாக்கைப் பற்றி பேசுகின்றன. டாஸ்மாக்கை மூடும் வரை  ஓயமாட்டோம்” என உறுதிபட தெரிவித்தார்.

அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருந்த டி.சி. பிரவேஷ் குமார் மற்றும் ஏ.சி.க்களிடம் டாஸ்மாக்கை இழுத்துமூடும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என உறுதிகாட்டினர். பின்னர் அங்கு குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீசார் போராடிய ஒவ்வொரு தோழரையும் தாக்கியவாறு கைது செய்யத்துவங்கினர். இடையில் மஃப்டி உடையணிந்த போலிசு பொறுக்கி ஒருவன், கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட தோழர்களை வண்டிக்குள் புகுந்து தாக்கிவிட்டு வெளியேறினான். அவனைப் பிடித்து மற்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் விசாரிக்கையில் போலீசாரே வந்து அவனை விடுவித்தனர். எப்படி உங்கள் காவலில் இருக்கும்போது வெளியாள் வந்து அடிக்கலாம் என அவனை மேலும் விசாரிக்கும் போது பிடி கொடுக்காமல் திருடனை போல் தப்பி ஓடிவிட்டான். இப்படி ரவுடிகளை வைத்து போராடியவர்கள் மீது போலிசார் தாக்குதல் தொடுத்ததைக் கண்டு போராட்டக்குணத்தை மட்டும் ஆயுதமாக கொண்ட தோழர்கள் அஞ்சாமல் போராடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

chennai-tasmac-protest-23போலீசார் தாக்கியதில் மதுரவாயல் அரசுப்பள்ளி மாணவர் மாரிமுத்து, பு.மா.இ.மு.வை சார்ந்த கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்த மாணவி செஞ்சூரியா ஆகியோர் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியை சார்ந்த பெண் தோழர்கள் ரூபா, ஜான்சி, இலக்கியா, உமா, ஜோதி, ரத்னா ஆகியோர் கடுமையாக காயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பள்ளி மாணவர் மாரிமுத்து, பெண் தோழர்கள் ரூபா மற்றும் ஜான்சி ஆகியோர் ஏற்கனவே பச்சையப்பன் கல்லூரி டாஸ்மாக் உடைப்பு போராட்டத்தில் பங்குக்கொண்டு சிறை சென்றிருந்தவர்கள். பள்ளி மாணவர் மாரிமுத்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதி முடிவுக்காக காத்துக் கொண்டிருப்பவர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

டாஸ்மாக் போராட்டம்
ஒரேயொரு தோழரைக்கூட பணியவைக்க முடியாமல் ஒட்டுமொத்த போலீசாரும் திணறினர்.

போலீசாரின் இந்த கொடூரத்தாக்குதலுக்கு அஞ்சாமல் இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் டாஸ்மாக் கடையை மூடும் வரை நாங்கள் யாரும் கலைய மாட்டோம் என உறுதியுடன் அவர்கள் நின்று போராடியது டாஸ்மாக்கை மூடப்போவதாக அறிவித்திருந்த ஓட்டுக்கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்திருந்தது. ஒரேயொரு தோழரைக்கூட பணியவைக்க முடியாமல் ஒட்டுமொத்த போலீசாரும் திணறியதை கண்டு உறுதியான மக்கள் போராட்டத்தின் முன்பாக போலிசு அட்டைக்கத்தி என்பது நிரூபணமானது. ஹெலிகாப்டரில் பாதுகாப்பாக பறந்து கொண்டு தமிழகத்தை மீண்டும் ஆளலாம், டாஸ்மாக்கில் பணத்தை அள்ளலாம் என்று திமிரோடு பேசி வரும் ஜெயா, அவரது எடுபிடியான தமிழக போலிசு இருவரும் என்னதான் அடக்குமுறையே ஏவினாலும் டாஸ்மாக் முடப்பட்டே தீரும்! மக்கள் அதிகாரம் வென்றே தீரும்!

-வினவு செய்தியாளர்கள்,
சென்னை.

தருமபுரி டாஸ்மாக் அலுவலக முற்றுகை

20-04-2016 அன்று மதியம் 1 மணியளவில் தருமபுரி பேருந்து நிலையத்தில் டாஸ்மாக்கை முற்றுகையிடுவதற்காகவும், டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்ப பெறக்கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மக்களை திரட்டி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்த பேருந்து நிலையம் முழுவதும் டாஸ்மாக்கை பாதுகாக்கும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் உளவுத்துறை குவிந்து இருந்தனர். யாரெல்லாம் டாஸ்மாக்கை மூட வந்திருக்கும் தேசதுரோகிகள் என்று மோப்பம் பிடித்துக்கொண்டும், கணக்கு எடுத்துக்கொண்டும் டாஸ்மாக்கை பாதுகாக்கும் தேசபக்த வேலையை செய்து கொண்டிருந்தன. இந்த சூழ்நிலையில் பேரணி திட்டமிட்டவாறு தொடங்கியது. துவங்கிய உடனே உளவுத்துறை தடுப்பு வேலி அமைத்துக் கொண்டு தடுத்து நின்றது. அதனை உடைத்துக்கொண்டு முன்னேறி சென்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். வழிநெடுகிலும் முழக்கமிட்டபடியும், சாலையின் இருபுறமும் பிரசுரம் வினியோகித்துக் கொண்டும் பேரணியாக ஒரு பர்லாங்கு தூரம் வந்தனர்.

தருமபுரி 4 ரோடு சென்றடைந்ததும் காவல்துறை வேனை நிறுத்தியும் வேலி அமைத்துக் கொண்டும் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். நூற்றுக்கணக்கில் மக்கள் போராட்டத்தை கவனித்து கொண்டியிருந்தனர். காவல் துறை அதிகாரிகளோ தோழர்கள் இடத்தில் கெஞ்சியவாறு பேசினர். அதற்கு பணியாமல் தோழர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

முற்றுகை போராட்டம் மறியலாக மாறியது, நான்கு வழி சாலை மறிக்கப்பட்டது. சுமார் அரைமணிநேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. பிறகு தோழர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து குழந்தைகள் பெண்கள் உட்பட 91 பேரை மண்டபத்தில் அடைத்தது, போலீசு.

மண்டபத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டம் மற்றும் மக்கள் அதிகாரத்தின் நோக்கம் குறித்தும், அடுத்த கட்டமாக இந்த போராட்டம் தொடரும் அதற்கு அனைவரும் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என்றும் விளக்கினார். இதற்கு பிறகு சிறுவர்கள் டாஸ்மாக் எதிர்ப்பு பாடலை பாடி தோழர்களை உற்சாகப்படுத்தினர். பிறகு அன்று மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தனர்.

 

இப்போராட்டத்தில் புதியதாக கலந்து கொண்ட பெண்கள் ஆரம்பத்தில் பயப்பட்டனர். கைதுக்கு பிறகு அங்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உற்சாகமடைந்து “எப்படியாவது கடைய மூட வேண்டும் அப்போதுதான் குடும்பம் நல்லா இருக்கும்” என்று கூறி அவர்களுடைய பயத்தை மண்டபத்திலேயே தூக்கியெறிந்து அவர்களுடைய போராட்ட உணர்வை வெளிப்படுத்தினர்.

பிரச்சாரத்தின் போது கடைவீதியில் ஒருவர், “யாரு வந்தாலும் மூட மாட்டாங்க எல்லாம் தேர்தலுக்குகாக டாஸ்மாக்கை பற்றி பேசறாங்க ; மக்கள்தான் மூடணும்”, என்று மக்கள் அதிகார கருத்தை பிரதிபலித்தார். பெண் ஒருவர், “இதா பாரும்மா எங்க வீட்டுல 4 ஓட்டு இருக்குது நான் யாருக்குமே ஓட்டு போடமாட்டேன்” என்று தேர்தல், ஜனநாயகத்தின் மீதான விரக்தியை வெளிப்படுத்தினார்.

இப்படி அழுகிநாறும் இந்த அரசு கட்டமைப்பு குறித்து மக்கள் அன்றாடம் உணர்ந்து வருகின்றனர், இதற்கு மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை , இதனை மக்களிடையே உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தருமபுரி

அம்மா போங்கு – புதிய பாடல் வீடியோ !

4

“மூடு டாஸ்மாக்கை” என்ற மக்களின் கோரிக்கைக்கு, “ஓபன் தி டாஸ்மாக்” என்று திமிராகப் பதிலளித்த அம்மா, மதுவிலக்கு கோரி மாநாடு நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டிருக்கும் அம்மா, இப்போது “படிப்படியாக மதுவிலக்கு” என்று பல்டியடிக்கிறார்.

அம்மாவின் இந்த போங்காட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கோவன்.

Kovan lampoons Jayalalitha’s promise of “step by step prohibition” as “peg by peg de-addiction”! Seduce the gullible voters with false promise. File sedition cases against those who fight. This is her game. The game of a cheat. In Chennai slang, “Bongu” means, a Cheat! She is the AMMA of all cheats!

யூ.டியூபில் பார்க்க:

ஃபேஸ்புக்கில் பார்க்க:

பாடல் வரிகள்:

போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

கடைய பாதியா வடய பாதியா
டைமு பாதியா கொறக்க போறியா?

போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

ஃபுல்லு குவார்ட்டரு அப்புறம் கட்டிங்கு
டிரிங்ஸ வுடுறேன்னு சொன்னா சீட்டிங்கு

போங்கு – மச்சான் போங்கு
போங்காட்டம்…. ஆடு றீங்க

படிப்படியா கொறக்கிறதா நீங்க – அத கேக்க சொல்லோ
சிரிப்பு வருது ஏங்க
மீனை வெறுத்த பூனையா நீங்க
இதுக்கு கேட்டு டேபிள் தட்ட கேனையா நாங்க

மூடச்சொல்லி பாடினது நாங்க – அதுக்கு
கேசுமேல கேஸ போட்டுட்டீங்க
மதுவிலக்கா ஒங்க கொள்க ஏங்க – அத
கேட்டதுமே மெர்சலாயிட்டேங்க

பிராந்தி பீரு கணக்கு சொல்லுறீங்க
குமாரசாமி கணக்கு தோத்துருச்சி போங்க
உனுக்கும் எனுக்கும் பிரிச்சனை ஏங்க – தில் இருந்தா
வில்லேஜிக்கி சிங்கிளாக போங்க

ஒரு கடைய பச்சப்பாசு பசங்க
மூடசொன்னதுக்கே முப்பது நாளு சிறைங்க – சசி
பெருமாள டவரில் ஏத்திட்டீங்க – எலெக்சனுக்கா
சீன போடுறீங்க

பச்சை ரத்த கலரு ஓல்டு மாங்கு
குட்சு தமிழ்நாடே சோகமான சாங்கு
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க-அம்மா
திங்கு பண்ண அஞ்சு வருசம் ஏங்க
நாங்களே பூட்டிக்கிறோம் கொட நாடு போங்க

போங்கு – அம்மா போங்கு
போங்காட்டம்….. ஆடுறீங்க

____________________________________________

நன்கொடை
நன்கொடை

 

 

 

 

நேற்று அண்ணாயிசம் ! இன்று அண்ணியிசம் !!

3

ட்டு முதல் எஸ்.பி. வரை போலீசு என்ற நிறுவனம் முழுவதையும் அம்பலப்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி என்ற பெண். அவரைப் போல பா.ஜ.க. முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரையும் முன் எப்போதும் இல்லாத அளவில் அம்பலப்படுத்தியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

விஜயகாந்த்
விஜயகாந்த் : கழிசடை அரசியல் நாயகன்

உத்தமபுத்திரர்கள் போலவும் ஊழலின் நிழல் கூடப் படியாதவர்கள் போலவும் மக்கள் நலக் கூட்டணியினர் பம்மாத்து செய்து கொண்டிருந்தனர். திராவிட இயக்கத்துக்கு மாற்று என்று கூறி, அவர்களை உசுப்பேற்றிவிட்டுக் கொண்டிருந்தன ஊடகங்கள். விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து, வாயெல்லாம் பல்லாக தே.மு.தி.க. அலுவலகத்திலிருந்து பஞ்ச பாண்டவர்கள் பேட்டி அளித்த அந்த நிமிடத்திலிருந்து நகைச்சுவைக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.

தி.மு.க. 500 கோடிக்கு விஜயகாந்தை பேரம் பேசியது என்றார் வைகோ. இல்லை என்று அறிக்கை விட்டார் அண்ணியார். இது விஜயகாந்த் அணி என்கிறார் பிரேமலதா. இல்லை என்கிறார் நல்லகண்ணு. இது கூட்டணி இல்லை, தொகுதி உடன்பாடுதான் என்கிறார் ஒருவர். இல்லை, இப்போதே கூட்டணிதான் என்கிறார் இன்னொருவர். இப்போது கூட்டணி இல்லை, ஆட்சி அமைக்கும்போதுதான் கூட்டணி என்கிறார் வேறொருவர்.

ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி
கருப்புப் பணத்தில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தி உறுதிமொழி ஏற்கும் கருப்பு எம்.ஜி.ஆர்

ஒப்பந்தம் முடிவான மறுகணத்திலிருந்து கேப்டனைக் காணவில்லை. அண்ணி பொளந்து கட்டுகிறார். மச்சான் அமைச்சரவையை நியமிக்கிறார். விஜயகாந்தைச் சுற்றி நாங்கள் இருக்கிறோம், இனி பத்திரிகையாளர்கள் யாரும் அவரை நெருங்க முடியாது என்று பொளந்து கட்டிய போர்வாள் பேட்டியிலிருந்து தப்பி ஓடுகிறார். தப்பிக்க முடியாமல் தடுமாறுகிறார் எழுச்சித் தமிழர். பெட்ரோல் விலையைக் குறைப்பேன் டோல்கேட்டை மூடுவேன் என்ற விஜயகாந்தின் காமெடி வாக்குறுதிகளுக்கு விளக்கமளிக்க முடியாமல், அவர் கொள்கைக்கு நான் பொறுப்பல்ல, என் கொள்கைக்கு அவர் பொறுப்பல்ல; இருந்தாலும், அவர்தான் முதலமைச்சர் என்கிறார் திருமா.

அன்று எம்.ஜி.ஆர். என்ற நடிகருக்குக் கட்சியையும் கொள்கையையும் உருவாக்கிக் கொடுத்துத் தமிழகத்தின் தலையில் கொள்ளி வைத்தவர் வலது கம்யூனிஸ்டு தலைவர் கல்யாணசுந்தரம். பிறகு, அம்மாவுக்கு தா.பா. இப்போது விஜயகாந்தின் கொள்கையை பிரேமலதா உருவாக்கி விட்டார். அதற்கு விளக்கம் சொல்லும் பொறுப்பை மட்டும் நால்வரிடம் ஒப்படைத்திருக்கிறார். முன்னர் எம்.ஜி.ஆர்., கம்யூனிசம், காப்பிடலிசம் என்ற இரண்டும் கலந்து தயாரிக்கப்பட்ட தனது காக்டெய்ல் கொள்கைக்கு அண்ணாயிசம் என்று பெயரிட்டார். இன்று அது அண்ணியிசமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

ஒரே நேரத்தில் தேசியக் கட்சியான பா.ஜ.க.வுடனும், திராவிடக் கட்சியான தி.மு.க.வுடனும், முற்போக்கு முகாமான வலது, இடது கம்யூனிஸ்டுகளுடனும் பேரம் பேச வேண்டியிருக்கும் என்பதை தொலைநோக்குடன் உணர்ந்துதான், 2005-இலேயே தனது கட்சிக்கு தேசிய, முற்போக்கு, திராவிடக் கழகம் என்று விஜயகாந்த் பெயர் சூட்டியிருக்க வேண்டும். திருமாவும் தனது கூட்டணிக்கு வருவார் என்று ஒருவேளை ஊகிக்க முடிந்திருந்தால், தேசிய முற்போக்கு திராவிட தலித்தியக் கழகம் (தே.மு.தி.த.க) என்று கேப்டன் பெயர் சூட்டியிருப்பார். ஜோசியர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற ஒரு நிபந்தனையைத் தவிர, இப்படிப் பெயர் சூட்டுவதில் அவருக்கு கொள்கைரீதியாக அவருக்கு வேறு எந்த தடையும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி
கழிசடை அரசியல் தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கூட்டணி அமைத்த பூரிப்பில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.

விஜயகாந்த் என்பவர் பழைய நடிகர்களைப் போல நாடகக் கம்பெனி, அதற்குப் பின் சினிமா என்று படிப்படியாக வளர்ந்தவரோ, கலையார்வமிக்க கலைஞன் என்பதால் நடிகன் ஆனவரோ அல்ல. கையில் பணம் வைத்துக்கொண்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மைனர். இன்று தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகன், இயக்குநர் ஆகியோரின் பிள்ளைகளெல்லாம் நடிகனாவதைப் போல, கையில் பணம் இருந்ததால், தானே நடிகன் ஆனவர். எம்.ஜி.ஆரைப் போன்ற அரசியல் வாசனை கொண்ட பின்புலம்கூட இல்லாதவர். பணம் இருந்ததால் கதாநாயகன். சினிமா பிரபலமும் ரசிகர் மன்றமும் இருந்ததால் அரசியல்வாதி.

ஆளும் கட்சியின் மீது உள்ள அதிருப்தியை அறுவடைசெய்து கொள்ளும் வண்ணம் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான எவனொருவனும் தலைவனாகலாம் என்பதால், விஜயகாந்தும் ஒரு தலைவன் ஆனார். ராகுகாலம் – எமகண்டம் பார்த்துத் தொடங்கப்பட்ட இந்த கோமாளிக் கட்சியில், பிழைப்புவாதிகள், சாதியத் தலைவர்கள், தி.மு.க. -அ.தி.மு.க.வில் பதவி கிடைக்காத காரியவாதிகள் உள்ளிட்டோர் உள்ளூர் தலைவர்களானார்கள். ரசிகர் மன்றம் காலாட்படையாக இருந்தது.

தி.மு.க., அ.தி.மு.க.வை வீழ்த்துவதுதான் இலட்சியம், மக்களோடும் ஆண்டவனோடும்தான் கூட்டணி என்று சவடால் அடித்துத் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், 2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பத்து சதவீத வாக்குகளைப் பெற்றதால், திடீர் அரசியல் தலைவராகிவிட்டார். தனது திராவிட இயக்க ஒழிப்புத் திட்டத்துக்கு ரஜினிகாந்தைப் பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றத்துக்கு ஆளாகியிருந்த துக்ளக் சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு விஜயகாந்த் வாராது வந்த மாமணி ஆனார்.

விஜயகாந்த் விளம்பர வித்தைகள்
அம்மா வழியில் ஆம்பள ஜெயலலிதா விஜயகாந்த் கட்சியின் சினிமா பாணி விளம்பர வித்தைகள்.

2009 தேர்தலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் விஜயகாந்தைக் கூட்டணி சேர்த்து விட்டது பார்ப்பனக் கும்பல். அதன் பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டி 14 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு இடத்தில்கூட தே.மு.தி.க. வெற்றி பெற இயலவில்லை. இப்போது விஜயகாந்தை எப்படியும் முதல்வர் ஆக்கியே தீருவது என்ற முடிவோடு, கேப்டன், அண்ணியார், மச்சான் உள்ளிட்ட மொத்தக் குடும்பத்தையும் தோளில் தூக்கித் திரிகிறது மக்கள் நலக் கூட்டணி.

தனியார் பொறியியல் கல்லூரியில் கல்விக் கொள்ளை, கல்யாண மண்டபம், பண்ணைகள் உள்ளிட்ட தனது சொத்துகளைப் பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் அரசியலில் குதிப்பது என்ற வழக்கமான திடீர்ப் பணக்கார கும்பலின் உத்தியைப் பின்பற்றும் விஜயகாந்தைத்தான், ஊழல் எதிர்ப்பு அணியின் கிங் என்றும் தாங்களெல்லாம் கிங் மேக்கர் என்றும் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அறிவித்துக் கொள்கின்றனர் மக்கள் நலக் கூட்டணியினர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.35 விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்குவோம், ரேசன் பொருட்களை வீட்டுக்கே மாதந்தோறும் கொண்டுவந்து கொடுப்போம், தனியாருடன் சேர்ந்து கூரியர் சேவை நடத்துவோம், சிறு தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடங்குவோம், தனியாருடன் சேர்ந்து அனைத்து வட்டங்களிலும் வணிக வளாகங்கள்-திரையரங்குகள் கட்டுவோம், தனியாருடன் இணைந்து கப்பல் போக்குவரத்து தொடங்குவோம், இவற்றின் மூலம் பல இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறது தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கை. ஒரு நாலாந்தர அரசியல் சினிமாவின் கதை, வசனத்தைக் காட்டிலும் இழிந்த முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் இந்தக் கும்பல் கொண்டிருக்கும் அறிவுக்குச் சான்று பகர்கிறது.

திருப்புமுனை மாநாடு
தேர்தலில் தனது கட்சியை வைத்து பேரங்கள் நடத்திச் சூதாடும் விஜயகாந்த் நடத்திய தமிழக அரசியலில் திருப்புமுனை மாநாடு.

சினிமாவில் சம்பாதித்த கருப்புப் பணத்தை வைத்து தனது பிறந்த நாளன்று நாலைந்து பேருக்கு தையல் மிசின், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஒரு நூறு பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு, அதையே அரசியலுக்கு வருவதற்கான தகுதியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு அற்பவாதியை, ஊழலை ஒழிக்க வந்த மாற்று அரசியல் சக்தி என்று கொண்டாடுகிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

ஊழலை ஒழிக்க வந்த இந்த மாற்று அரசியல் சக்தி தொடங்கும்போதே கட்சியை தனது குடும்ப கம்பெனியாகத்தான் கருதியது, கருதியும் வருகிறது. அது உண்மையும்கூட. தன்னை வைத்துதான் கட்சி என்றும் தன்னைத் தவிர மற்றவர்கள் எல்லம் பூச்சியங்கள் என்றும் கருதிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், தன் கட்சிக்காரர்கள் அனைவரையும் தன்னை வைத்து சம்பாதிக்க முயற்சிக்கும் வியாபாரிகளாகவே விஜயகாந்த் கருதுகிறார்.

அந்த வியாபாரிகளோ, தாங்கள் போட்ட முதலீட்டுக்கு இலாபத்தை எதிர்பார்க்கின்றனர். 2011- இல் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியவுடனே ஜெயலலிதாவால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால், ஐந்து காசுகூடச் சம்பாதிக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளைக் கடத்திய தே.மு.தி.க.வினர், வரும் ஐந்து ஆண்டுகளிலாவது பசுமையைக் காணமாட்டோமா என்று தவித்துக் கொண்டிருந்தனர்.

கட்சிக்காரர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட அண்ணியார், இவர்களிடம் முன்கூட்டியே பணத்தை வசூலிப்பதன் மூலம்தான் விசுவாசத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்ள இயலும் என்று முடிவெடுத்துக் கோடிக்கணக்கில் கறந்து விட்டார். தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கொண்டிருக்க, எல்லா திசைகளிலும் எல்லாரோடும் பேரம் நடத்தி, அரசியல் விபச்சாரத்தில் புதிய எல்லைகளைத் தொட்டது விஜயகாந்த் குடும்பம்.

எத்தனை நாற்காலிகள், எத்தனை பதவிகள், எத்தனை பணம் என்பதைத் தவிர, வேறு எந்த விதமான கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாத இந்த கிரிமினல் கும்பல் கடைசியாக மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பணத்தையும் பதவியையும் உதறி விட்டு தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக ஒரு ஊழலற்ற நல்லாட்சியைத் தருவதற்காகத்தான் கேப்டன் தங்களுடன் அணி சேர்ந்திருப்பதாக வெட்கமே இல்லாமல் கூறிக் கொள்கிறார்கள் வைகோவும், திருமாவும், போலி கம்யூனிஸ்டுகளும்.

ஏட்டு முதல் எஸ்.பி. வரையிலான அனைவரின் நடத்தையைப் பற்றியும் சிவகாசி ஜெயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை நாம் அறிவோம். ஆனால், சிவகாசி ஜெயலட்சுமியின் நன்னடத்தைக்குச் சம்மந்தப்பட்ட ஏட்டுகளோ எஸ்.பி.க்களோ நற்சான்றிதழ் தந்ததாகத் தெரியவில்லை. ஆனால், தே.மு.தி.க.-வுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்துக் கொண்டாடுகிறது மக்கள் நலக் கூட்டணி.

இவர்கள் தோற்றாலும் வென்றாலும் நமக்கு மகிழ்ச்சிதான். தோற்றால், இவர்களது அரசியல் மரணம் அனைவரும் காறி உமிழ்கின்ற இழிந்த சாவாக இருக்கும். வென்றால், இவர்களது வாழ்வை அசிங்கப்படுத்தும் வேலையை அண்ணியார் கவனித்துக் கொள்வார்.

– தொரட்டி
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

 

inner_design2

போயசுத் தோட்டம்: ஊழலின் தலைமைச் செயலகம் !

1

ட்டுச்சீட்டு ஜனநாயகம் கிரிமினல்மயமாவதும் பணத்தால் தீர்மானிக்கப்படுவதும் தீவிரமடைந்து, மக்கள் மத்தியில் அதன் மீதான மதிப்பும் பிரமைகளும் சல்லிக்காசு போலத் தேய்ந்துவிட்ட நிலையில், “வாக்குச்சீட்டுதான் மக்களின் கையில் உள்ள வலிமையான ஆயுதம்” என சகாயம் போன்ற நல்லவர்களும், முதலாளித்துவ அறிவுத்துறை யினரும் பலமாக உபதேசித்து வருகின்றனர். “நல்ல வேட்பாளர்களைக் கண்டுபிடித்து வாக்களிக்க வேண்டும்” என்ற வழக்கமான போதனை முதல் “வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்” என்ற தேசபக்தி “டச்” கொண்ட அறைகூவல் ஈறாகத் தேர்தல், வாக்கு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இவர்கள் நடத்தும் பிரச்சார இம்சை தாங்கமுடியாத அளவிற்குச் சென்று கொண்டிருக்கிறது.

வேளச்சேரி பீனிக்ஸ் மால்
சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரையரங்கு : ஜெயா-சசி கும்பல் இந்த ஐந்தாண்டுகளில் அடித்து வரும் கொள்ளையின் சாட்சி.

தமிழகத்தில் ஏறத்தாழ 1.08 கோடி பேர் புதிய வாக்காளர்கள் – அதாவது, 19 வயதிலிருந்து 23 வயதுக்குட்ட இளைஞர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். பதிவு பெற்ற மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 22.92 சதவீதமுள்ள இந்த விடலைகளோடு, முப்பது வயதுக்கு உட்பட்டவர்களையும் சேர்த்தால் வாக்குரிமை பெற்ற இளைஞர்களின் சதவீதம் கணிசமாக இருக்கிறது என்பதால், வாக்குச்சீட்டின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விட முடியும் என்ற ஜெபக்கூட்டம் இந்த முறை பரவலாகவும் விரிவாகவும் நடந்துவருகிறது.

வாக்குச்சீட்டின் மூலம் மாற்றத்தைக் கொண்டுவந்து விடுவது சாத்தியமென்றால், இத்தனை தேர்தல்கள் நடந்தபிறகும்கூட, ஏன் நல்ல மாற்றங்கள் எதுவும் வரவில்லை என்ற கேள்விக்கு நாம் விடை தேட வேண்டும். முக்கியமாக, இந்த அரசியல் அமைப்பு முறையில் உள்ள பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். ஆனால், டி.வி.யிலும், மேடையிலும் வாக்குச்சீட்டின் முக்கியத்துவம் குறித்து முழங்கும் அறிஞர் பெருமக்களோ, நுனிப்புல் மேய்வதைத் தாண்டி இந்த அடிப்படையான கேள்விக்குள் செல்ல மறுக்கின்றனர்.

அதானி சூரிய ஒளி மின்சார ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஜெயா முன்னிலையில் அதானி குழுமத்திடமிருந்து அதிக விலை கொடுத்து சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தான வைபவம் (கோப்புப் படம்)

கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது அப்பொழுது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. மீது ஊழல், குடும்ப ஆட்சி, நிர்வாகத் திறமையின்மை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதற்கு மாற்றாக அ.தி.மு.க.விடம் ஆட்சியதிகாரம் தரப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பிறகான இந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் காணும் நிலைமை என்ன? அம்மா ஆட்சி 40 பர்சென்ட் கமிசன் ஆட்சி எனப் பெயரெடுத்து, ஊழலில், இலஞ்சப் பணத்தில் சொத்துக்களை வாங்கி குவிப்பதில் தி.மு.க.வின் ஊழல்களைச் சுண்டைக்காய் ஆக்கிவிட்டது.

ஊழல்களின் பிரம்மாண்டம் ஒருபுறமிருக்க, மந்திரி தொடங்கி கவுன்சிலர் வரை நடத்தும் ஊழல்களெல்லாம் கண்காணிக்கப்பட்டு, கப்பம் வசூலிக்கும் மையமாக போயசு தோட்டம் விளங்குகிறது. அதாவது, அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரம் மட்டும் மையப்படுத்தப்படவில்லை, ஊழலும் மையப்படுத்தப்பட்டு, போயசு தோட்டத்தின் உத்தரவின்படியே அவை நடந்தன, நடந்து வருகின்றன.corrupt-poes-jaya

முட்டை தொடங்கி மின்சாரம் கொள்முதல் செய்வது வரை, பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி கோவில் செருப்புக் கடைக்கு டெண்டர் விடுவது வரையில் அ.தி.மு.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு திட்டமும் இலஞ்சம் இல்லாமல் நகர்ந்ததில்லை. ஜெயா-சசி கும்பல் கோரும் கமிசன் கிடைக்கவில்லையென்றால், திட்டத்தையே ரத்து செய்யும் அடாவடித்தனத்தை உடன்குடி மின் திட்டம் நமக்கு எடுத்துக் காட்டியது. கமிசன் கிடைக்கும் என்றால், அதற்காகச் சட்ட திட்டங்களை வளைக்கும் சதித்தனத்தை அதானி குழுமத்தோடு போடப்பட்ட சூரிய ஒளி மின்கொள்முதல் ஒப்பந்தம் எடுத்துக் காட்டியது.

சூரிய ஒளி பூங்கா திட்டத்தின் மூலம் 3,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யப் போவதாக அறிவித்திருந்த அ.தி.மு.க. அரசு, இதற்காக ஏலம் நடத்தி, 52 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிடமிருந்து ரூ.6.48-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்குவது என முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் அதானி குழுமத்தை உள்ளே நுழைப்பதற்காக இந்த டெண்டரே ரத்து செய்யப்பட்டு, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.7.01 என நிர்ணயிக்கப்பட்டு, அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இவையெல்லாம் கமிசன் இல்லாமல், மாநிலத்தின் நலன் கருதித்தான் நடந்ததாகச் சொல்ல முடியுமா?

அதானி குழுமத்தோடு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் தமிழக மின்வாரியத்திற்கு 25,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும்; இந்த ஒப்பந்தத்தைப் போடுவதற்கு ஒரு மெகாவாட்டிற்கு 40 இலட்ச ரூபாய் என்ற அளவில் 600 கோடி ரூபாய் கமிசன் கைமாறியிருக்கிறது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதோடு, இது குறித்து விசாரிக்குமாறு தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

corrupt-poes-caption-1

மாநிலத்தின் அவசரத் தேவைகளுக்காக அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்ற விதியை வளைத்து, இந்தச் சதியும் மோசடியும் நடந்திருப்பதாக கிசுகிசு பத்திரிகைகள் குறிப் பிடுகின்றன. இதை மறுப்பதற்கில்லை என்றாலும், கமிசன் அடிப்பதற்காகவே இப்படிபட்ட விதிகள் சந்து பொந்துகளோடு உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதை ஜெயா எடுத்துக்காட்டியிருப்பதையும் இங்கே நாம் மறவாமல் குறிப்பிட வேண்டும்.

தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கொள்கையாகவே கடைப்பிடித்துவரும் அ.தி.மு.க. அரசு, இதற்காகவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசு மின்திட்டங்களை உரிய காலத்தில் முடிக்காமல் முடக்கியது; தனது ஆட்சிக்காலத்தில் புதிய மின் திட்டங்கள் எதையும் வகுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டது. தனியாரிடம் நடத்தப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஜெயா- கும்பலுக்கு கமிசனை வாரிக் கொடுக்க, மின்வாரியமோ பெரும் நட்டத்தில் மூழ்கியது.

தி.மு.க. பதவி விலகிய சமயத்தில் மின்வாரியத்தின் நட்டம் 45,000 கோடி ரூபாயாக இருந்தது. இந்தத் தொகை அதற்கு முந்தைய அ.தி.மு.க. அரசு (2001-2006) விட்டுச் சென்ற நட்டத்தையும் உள்ளடக்கியது. மின்வாரியத்தை மீட்கப் போவதாகச் சவடால் அடித்து ஆட்சியைப் பிடித்த ஜெயாவோ, இந்த ஐந்தாண்டில் மட்டும் வாரியத்தின் நட்டத்தை முந்தையதைப் போல இன்னொரு மடங்கு அதிகரித்து, ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டத்தில் வாரியத்தை மூழ்கடித்துவிட்டார். மின் கட்டண சுமை, வாரியத்தின் நட்டம் மட்டுமின்றி, மீண்டும் மின்வெட்டு என்ற இடிகளைத்தான் தமிழக மக்களின் மீது இறக்கியிருக்கிறது, அ.தி.மு.க. ஆட்சி.

அம்மா ஆட்சியின் மிகப்பெரிய சாதனை 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டதுதான். போயசு தோட்டத்திற்கு ஒழுங்காக கமிசன் வந்து சேரவில்லை என்ற காரணத்திற்காகத்தான் அமைச்சர்கள் தூக்கியடிக்கப்பட்டார்கள் என்பது ஒவ்வொரு முறையும் அம்பலமானலும், இந்த நடவடிக்கைகளை ஜெயாவின் துணிச்சலுக்கு உதாரணமாகக் காட்டி மக்களை ஏய்த்து வந்தது, துக்ளக் சோ, தினமணி வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல்.

ஊழல் அமைச்சர்கள்
சட்டவிரோதமான முறையில் 30,000 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அ.தி.மு.க அமைச்சர்கள் (இடமிருந்து) ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியநாதன் மற்றும் பழனியப்பன்.

ஆனால், இம்முறை அப்படி ஏய்க்க முடியாதபடி ஐவரணி விவகாரம் சந்தி சிரிக்கிறது. போலீசையும் உளவுத்துறையும் ஏவிவிட்டு, ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் பாயும் நடவடிக்கைகள் இந்த ஆட்சியின் உண்மை சொரூபத்தைப் புட்டு வைக்கின்றன.

ஒரு வேட்டைக்காரன் நாயைப் பழக்கி வைத்திருப்பது முயலை அடித்துக்கொண்டு வந்து தன் காலில் போடத்தான். நாயே முயலை அடித்துச் சாப்பிட்டுவிடுமானால், வேட்டைக்காரன் நாயை வளர்ப்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என ஜெயா ஆட்சியில் அமைச்சர்களின் இடத்தை அம்பலப்படுத்துகிறார், பழ.கருப்பையா.

corrupt-poes-caption-2கமிசனையும் இலஞ்சத்தையும் வாங்கி, அதனை போயசு தோட்டத்தில் கொண்டு சேர்ப்பதுதான் அமைச்சர்களின் வேலை; அதனை எண்ணிப் பார்த்து பதுக்குவதுதான் போயசு தோட்டத்தில் நடக்கும் வேலை என்பதை பழ.கருப்பையாவின் இந்த பொழிப்புரையும், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலையும், அம்மாவுக்குத் தெரியாமல் எதுவுமே நான் செய்யவில்லை என அக்ரி கிருஷ்ண மூர்த்தி அளித்த ஒப்புதல் வாக்குமூலமும் நிறுவுகின்றன.

ரப்பர் தோட்டங்கள், எஸ்டேட்டுகள், வீட்டு மனைகள், பங்குச் சந்தை முதலீடுகள் – என விரிந்திருக்கும் இந்த ஐந்து அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு 30,000 கோடி ரூபாயைத் தொடும் எனக் கூறுகிறார், பா.ம.க. ராமதாசு. இலண்டனைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓக்லி பிராப்பர்டி, கட்டுமான கார்ப்பரேட் நிறுவனமான காஸா கிராண்ட், நியூயார்க் நகரில் விலையுயர்ந்த ஓட்டல் ஆகியவற்றில் இந்த அமைச்சர்களுள் ஒருவர் முதலீடு செய்திருப்பதாகக் கூறுகிறார், கருணாநிதி.

அந்த ஐந்து அமைச்சர்களும் சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்திருக்கிறார்கள் என்பதற்காக நடவடிக்கைகள் பாயவில்லை. தனக்குத் தெரியாமலும் தனக்குரிய கப்பத்தைக் கட்டா மலும் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள் என்பதைத்தான் கோமளவல்லியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நாற்பது திருடர்களுள் ஒருவராக வலம் வந்த ஐவரிடமே கடந்த ஐந்து வருடங்களில் இவ்வளவு சொத்துக்கள் என்றால், இந்தக் கொள்ளையர்களின் தலைவியாக இருக்கும் ஜெயா- கும்பலிடம் எத்தனை ஆயிரம் கோடி சொத்து குவிந்திருக்கும்? கற்பனை செய்யும்போதே தலை கிறுகிறுத்துப் போகிறது.

– குப்பன்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

நரகலில் நல்லரிசி தேடாதீர் !

1

“இதிகாச புராணங்களில் உள்ள நல்ல கருத்துகளை நாம் எடுத்துக் கொள்ளலாமே” என்று பெரியாரிடம் சொன்னபோது, “நரகலில் இருந்துதான் நல்லரிசியைப் பொறுக்க வேண்டுமா?” என்று அவர் திருப்பிக் கேட்டாராம். தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்பவர்கள் மக்களிடம் இந்தக் காரியத்தைத்தான் செய்யச் சொல்கிறார்கள். மக்களின் விரல் நுனியில் அதிகாரம் இருப்பதைப் போலவும் அதனைச் சரியாகப் பயன்படுத்த தவறுவதன் காரணமாகத்தான் நாட்டின் எதிர்காலத்தையும் தங்களது சொந்த எதிர்காலத்தையும் மக்கள் கெடுத்துக் கொள்வதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. “இந்த அரசமைப்பு சரியாகத்தான் இருக்கிறது. தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் நபர்கள்தான் சரியில்லை” என்பதுதான் இந்த பிரச்சாரம் கூறவரும் செய்தி.

sifting-shit-to-pick-grainsஅரசியல் கட்சிகள் மட்டுமல்ல, இந்தத் தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையம், அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை உள்ளிட்ட இந்த ஜனநாயகத்தின் உறுப்புகள் என்று கூறப்படும் அனைத்தும் கெட்டுச் சீரழிந்து நரகலாகி விட்டன. அவற்றுக்கான தகுதிகள் என்றும் கடமைகள் என்றும் கூறப்படும் எதற்கும் எள்ளளவும் பொருத்தமானவையாக அவை இல்லை. அதனால்தான் வாக்களிப்பதன் அவசியம் பற்றி வக்கணை பேசுபவர்கள், “நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று ஒரு வேட்பாளரை அவரது தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் குணநலனின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை வாக்காளர்களிடம் தள்ளி விடுகிறார்கள்.

கட்சிகள், அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை என்று எந்த நிறுவனத்தின் மீது விமரிசனம் வந்தாலும், அந்த நிறுவனத்தின் சீரழிவுக்கான காரணங்களைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக, அவற்றில் ஆங்காங்கே தென்படும் ஓரிரு நேர்மையாளர்களைக் காட்டி, நல்லவர்கள் இன்னமும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று கூறி நம்பிக்கையூட்டுகிறார்கள். இத்தகைய நல்லவர்களில் ஒருவரான பழ.கருப்பையா, “அ.தி.மு.க. என்ற கட்சி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளைக்கூட்டம் என்றும், அதில் நல்லவர்கள் யாருக்கும் வேலை இல்லை” என்றும் விளக்கித் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தில் “நல்லவர்கள்” என்று அறியப்பட்ட விஷ்ணுப்பிரியாவைப் போன்ற பலர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள்; முத்துக்குமாரசாமி போன்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; சகாயம் போன்றோர் சுடுகாட்டுக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள்; நீதித்துறையின் ஊழலைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

இதுதான் நம் மீது அதிகாரம் செலுத்துகின்ற இந்த அரசமைப்பின் யோக்கியதை. இதை மக்கள் கூடுதலாகவோ குறைவாகவோ புரிந்திருக்கின்றனர். எனவே, சமுதாயத்தையே ஊழல்படுத்துவதன் வாயிலாகத்தான் தங்களுடைய ‘கவுரவத்தை’க் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை ஆளும் வர்க்கம் புரிந்து வைத்திருக்கிறது. மற்ற யாரை விடவும் இதனைத் தெளிவாகப் புரிந்து அமல்படுத்துபவர் ஜெயலலிதா. அதனால்தான் மூன்றாவது மாடியில் நின்றபடி வெள்ளத்தை வேடிக்கை பார்த்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கி, தன்னுடைய ‘கட்சி’யில் சேர்த்துக் கொள்கிறார். வாக்கை விலை பேசி விற்பதையே ஒரு ஜனநாயக உரிமையாகக் கருதும்படியும், கூடுதல் விலை தருபவர்களை நேர்மையானவர்களாக மதிப்பிடும்படியும் மக்களைப் பயிற்றுவிக்கிறார்.

முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவர்கள், இளைஞர்கள் அரசியல், சமூக அறிவோ உணர்வோ இல்லாத காரியவாதிகளாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைக் காட்டித்தான் “100 விழுக்காடு வாக்குப்பதிவு” என்று இந்த அமைப்புக்கு மதிப்புக் கூட்டும் பணியைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

ஒருபுறம் நரகலாக முடைநாற்றம் வீசும் இந்த அரசமைப்பு, இன்னொரு புறம் ஊழல்படுத்தப்பட்டு அறியாமையில் ஆழ்த்தப்பட்டிருக்கும் மக்கள். தமது உரிமையையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொள்ளும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவதுதான், நரகலில் நல்லரிசி தேடும் இந்த அவல நிலையிலிருந்து அவர்களை விடுவிக்கும்.

– தலையங்கம்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

டார்ஜிலிங் டீயில் பிணவாடை!

0

மயமலையின் அடிவாரத்தில், பசுமையான பள்ளத்தாக்குகள் நிரம்பிய மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங், சிலிகுரி மாவட்டங்கள் பட்டினிச் சாவுகள் விழும் மரணப் பள்ளத்தாக்குகளாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இன்றுவரை அப்பகுதியில் செயல்பட்டு வந்த 20-க்கும் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டதால், அவற்றில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 150 பேர் பட்டினியால் மாண்டுள்ளனர். சுமார் ஒரு இலட்சம் பேர் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.

பட்டினி-சாவின் விளிம்பில்
தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டதால் பட்டினிக்கும் சாவின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள்

உலகப்புகழ் பெற்ற டார்ஜிலிங் டீயை ஏற்றுமதி செய்யும் எஸ்டேட் முதலாளிகள் கோடிகளில் புரள, பழங்குடியினத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களோ நாளொன்றுக்கு வெறும் 122 ரூபாயை மட்டுமே கூலியாகப் பெற்று வறுமையில் உழல்கின்றனர். தொழிற்சாலை நிர்வாகத்தால் பல பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிக் கொடுக்கப்பட்ட சிதிலமடைந்த குடியிருப்புகளில்தான் இவர்கள் குடும்பத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இலட்சக்கணக்கான தொழிலாளர் வாழும் எஸ்டேட் பகுதிகளில் அரசு நடத்தும் ஒரு ரேஷன் கடையைக்கூட நீங்கள் கண்ணில் காண முடியாது. தான் நேரடியாக நிறைவேற்ற வேண்டிய அந்தப் பொறுப்பைக்கூட எஸ்டேட் முதலாளிகளிடம் தூக்கிக் கொடுத்து வைத்திருக்கிறது, அரசு.

இதுதான் தேயிலைத் தோட்டங்களும், தொழிற்சாலைகளும் மூடப்படுவதற்கு முன்பிருந்த நிலைமை. தற்போது தோட்டங்கள் மூடப்பட்டுவிட்டதால், சம்பளம் மட்டுமல்ல; தோட்ட முதலாளிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த ரேஷன் பொருட்கள் கிடைப்பதும் நின்றுவிட்டது. இதனால் தேயிலை மலர்களையும், காட்டுக் கிழங்குகளையும் உண்டு உயிர் வாழ வேண்டிய அவலத்தைத் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்கொண்டு நிற்கின்றன. எஸ்டேட் மோட்டார்கள் நின்றுபோனதால், மலை ஊற்றுகளில் கிடைக்கும் தண்ணீர்தான் இப்பொழுது குடிநீர். ரேஷனும், குடிநீருமே இல்லாதபொழுது மின்சாரம், மருத்துவ வசதி போன்றவற்றையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்கவே முடியாது. தொடர்பட்டினி காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் காசநோய் உள்ளிட்ட உயிரைக் குடிக்கும் நோய்களின் பிடியில் சிக்கி, சாவின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

darjeeling-on-the-brink-of-starvation-1
இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் குழந்தைகள்தான்.

இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் குழந்தைகள்தான். தங்களது குழந்தைகள் தங்களோடு இருந்தால் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்பதால், தொழிலாளர்கள் தமது குழந்தைகளை சிக்கிம் போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு வீட்டு வேலை செய்ய அனுப்பி வைக்கின்றனர். அங்கு அக்குழந்தைகளுக்கு அரை வயிறு கஞ்சியாவது கிடைக்கும்; அங்கிருந்து அந்தப் பிஞ்சுகள் அனுப்பி வைக்கும் தொகையைக் கொண்டு தமது குடும்பமும் உயிர் பிழைத்துக் கொள்ளும் என்ற பரிதாபகரமான நிலைதான் தொழிலாளர்களின் குடும்பங்கள் அனைத்திலும் தற்பொழுது காணப்படுகிறது.

தொடர்ந்து பட்டினி கிடப்பதால் உடலின் உள் பாகங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயலிழந்து (Multiple Organ Disorder) தொழிலாளர்கள் மிகக் கொடிய முறையில் மரணமடைந்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில அரசின் தொழிலாளர்களுக்கான சட்டமன்ற நிலைக் குழு தொழிலாளர்களின் அகால மரணத்திற்குப் பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுதான் காரணம் என உறுதி செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உணவு பாதுகாப்புக்கான சிறப்பு ஆணையர் ஹர்ஷ் மந்தேர், தொழிலாளர்களின் இந்த அவல நிலையை நேரில் சென்று விசாரித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். ஆனால், இவ்வுண்மைகளை அப்படியே மூடி மறைத்துவிட்டு, பட்டினிச் சாவுகளே நடைபெறவில்லை என மேற்கு வங்க அரசு சாதிக்கிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 283 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 10 இலட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தேயிலைத் தோட்டத் தொழிற்சாலைகள் இதுபோல மூடப்படுவதும் மேற்கு வங்கத்திற்குப் புதிதல்ல. 2003-04 ஆண்டுகளில் 30 தோட்டங்கள் மூடப்பட்டன; 2010-11 ஆம் ஆண்டுகளில் 15 தோட்டங்கள் மூடப்பட்டன. இவ்வாறு தோட்டங்கள் மூடப்படுவதும், தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போவதும் சி.பி.எம். தலைமையில் நடந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியிலும் நடந்தது. மம்தா ஆட்சியிலும் தொடர்கிறது.

தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளுள் 12 தொழிற்சாலைகள் கௌரி பிரசாத் கோயங்காவின் டங்கன் குழுமத்திற்குச் சொந்தமானது. இந்த எஸ்டேட்டுகளைத் தவிர, அக்குழுமத்திற்கு ஆந்திர உர நிறுவனம், ரயில்வே உதிரிபாக உற்பத்தி நிறுவனம், மருந்து உற்பத்தி நிறுவனம் எனப் பல நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. இக்குழுமம் தேயிலைத் தொழிற்சாலை மூலம் கிடைத்த இலாபத்தை மற்ற தொழில்களுக்குத் திட்டமிட்டே மடைமாற்றியதன் மூலம் தேயிலைத் தொழிற்சாலைகளை நசிந்துபோகச் செய்துவிட்டு, கொழுந்து தேயிலையின் சந்தை விலை குறைந்து போனதால்தான் தங்களது நிறுவனம் நட்ட மடைந்து விட்டதாக நாடகமாடி வருகிறது.

ஜி.பி.கோயங்கா
அரசையும் தொழிலாளர்களையும் ஏமாற்றிக் கொள்ளையடித்த டங்கன் குழுமத்தின் தலைவர் ஜி.பி.கோயங்கா

இது மட்டுமின்றி, தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை அரசுக்குச் செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறது, டங்கன் குழுமம். இக்குழுமம் 2013-ஆம் ஆண்டில் மட்டும் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கி 22.5 கோடி ரூபாய். மேலும், புதிய தேயிலைச் செடிகளை நடப்போவதாக் கூறி, அரசிடமும், தேயிலை வாரியத்திடமிருந்தும் பல கோடி ரூபாய் கடன் பெற்று, அப்பணத்தையும் வேறு தொழில் களுக்கு மாற்றி அரசையும் ஏமாற்றி இருக்கிறது.

இப்படி அரசையும், தேயிலை வாரியத்தையும், தொழிலாளர்களையும் ஏமாற்றுவதும், மோசடிகளைச் செய்வதும் டங்கன் குழுமத்தில் மட்டும் நடப்பதல்ல; கிட்டத்தட்ட எல்லா தேயிலைத் தோட்டங்களிலும் இதே போன்ற திருட்டுத்தனங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த ஊழல், மோசடி, திருட்டுக் குற்றங்களுக்காகவே இத்தனியார் தொழிற்சாலைகளை அரசுடமையாக்க முடியும்.

அது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்துதான் இந்தத் தேயிலைத் தோட்டங்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான தோட்டங்களின் குத்தகைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அவை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. தேயிலைச் சட்டப்படி, தனியாரின் பிடியிலுள்ள இத்தகைய தோட்டங்களை அரசே கையகப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், மைய, மாநில அரசுகளோ இந்தத் திருட்டுக் கூட்டத்தைக் காப்பாற்றுவதையும் கைதூக்கிவிடுவதையுமே தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

பட்டினியால் சாகும் தொழிலாளர்களைக் காப்பாற்ற ஒரு ரேஷன் கடையைத் திறக்க முன்வராத அரசு, முதலாளிகளைக் காப்பாற்ற முந்திக்கொண்டு செயல்படுகிறது. தோட்ட முதலாளிகள் அழைப்பை ஏற்று கொல்கத்தாவிற்கு ஓடோடி வந்து அவர்களைச் சந்தித்த மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மோசடி பேர்வழிகளுக்கு பொதுத் துறை வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யும் தரகு வேலை பார்த்துத் திரும்பியிருக்கிறார்.

முதலாளிகளின் பைகள் நிரம்பினால், தொழிலாளர்களின் வயிறும் நிரம்பிவிடும் என்ற இந்த நயவஞ்சகக் கதையை நம்மை நம்பவும் சொல்லி, இதுதான் வளர்ச்சி என்ற திருநாமத்தையும் அதற்குச் சூட்டியிருக்கிறது, இந்தியக் ‘குடியரசு! தொழிலாளர்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற முன்வராத அரசிற்கு, அவர்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வக்கற்ற அரசிற்கு, நம்மை ஆள்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?

– அழகு
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

தூத்துக்குடி : தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டதற்காக கைது !

4

boycott-election-posterதேர்தல் பணிகள் கண்காணிப்பு பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் புகாரின் போரில் தூத்துக்குடியில் தேர்தல் ஆணையத்தை விமர்சனத்திற்குள்ளாக்கும் விதத்தில் லித்தோ போஸ்டர் ஒட்டிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஆதரவாளர் தோழர் குமார் என்பவர் 15-04-2016 அன்று காலை 5-10 மணியளவில் கைது செய்யபட்டுள்ளார்.

  • நல்லவர்களை தேர்வு செய்யச் சொல்லும் தேர்தல் ஆணையமே! நல்லவர்கள் யார்? நல்ல கட்சி எது? சொல்ல முடியுமா?
  • வேட்பாளர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று தெரியும்; யாருக்கு தேவை விழிப்புணர்வு? தேர்தல் ஆணையத்திற்கா? மக்களுக்கா?
  • நேற்றுவரை இலஞ்சத்தில் ஊறித்திளைத்தவர்கள் தான் தேர்தல் அதிகாரிகள்! பறக்கும் படை! இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியுமா?
  • தேர்தலுக்காக கோடி கோடியாய் அமைச்சர்கள் குவித்து வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்யமுடியுமா?

இந்த வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி கார்னரில் 15-04-2016 காலை சுமார் 5.10 மணியளவில் ஒட்டிக் கொண்டிருந்த தோழர் குமாரை பறக்கும் படையைச் சேர்ந்த தாசில்தார் ராமசுப்பு குழுவினர் காவல்துறையுடன் வந்து போஸ்டர் ஒட்ட விடாமல் தடுத்துள்ளனர்.

அவர்கள் நமது தோழரிடம் “என்ன போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்” எனக் கேட்கவும் தோழர் குமார், “தேர்தல் ஆணையம் செயல்பாடு பற்றி எமது அமைப்பின் போஸ்டர்” என்று கூறியுள்ளார்.

போஸ்டரை படித்து பார்த்த பறக்கும் படையினர் “நீங்கள் ஏன் இப்படி வாசகங்கள் அடங்கிய ஒட்டுகிறீர்கள்” என்று மிரட்டி உள்ளனர்.

அதற்கு நமது தோழர், “ஆமாம், உண்மையைத்தான் நாங்கள் எழுதியுள்ளோம். எங்கள் கருத்தை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் பொய் இருந்தால் எந்த வகையில் என்று கூற முடியுமா?” எனக் கேட்கவும்,

தேர்தல் பணம்
நேற்றுவரை இலஞ்சத்தில் ஊறித்திளைத்தவர்கள் தான் தேர்தல் அதிகாரிகள்! பறக்கும் படை! இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியுமா? (கோப்புப் படம்)

பறக்கும் படையினர் “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எங்களுக்கென்று மேலதிகாரிகள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் சொற்படிதான் நடக்க வேண்டி இருக்கும், தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது இது மாதிரியான போஸ்டர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் நீங்கள் மேற்கொண்டு போஸ்டர்களை ஒட்டக் கூடாது, இங்கேயே இருங்கள். நாங்கள் மேலதிகாரியிடம் கேட்டுவிட்டு என்ன செய்யலாம் என்று சொல்கிறோம்” எனக் கூறிவிட்டு தாசில்தார் செல்போனில் சுவரொட்டியை படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.

15 நிமிடத்திற்கும் மேலாக யார் யாருக்கோ செல்போனில் பேசியுள்ளார். பின்னர் நமது தோழரிடம், “தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சென்று விசாரிக்க வேண்டும்” என்று நைச்சியமாக பேசி கூட்டிச்சென்றுள்ளனர்.

வடபாகம் காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்ற பறக்கும் படையினர் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்து என்பவரிடம் தோழரை ஒப்படைத்துள்ளனர். பின்னர் தேர்தல் அதிகாரியான தாசில்தார் ராமசுப்பு கொடுத்த எழுத்துமூல புகாரின் பேரில் தோழர் மீது குற்ற வழக்கு எண். 397/2016 பிரிவுகள், 127A (1) RP Act (Representation of people act 1951) 3 of TNPPOPD Act (Tamilnadu Prevention of Public open places disfigurement Act) மற்றும் 7(1) CLA Act (Criminal law amentment Act)-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முற்பகல் 12.10-க்கு ஆஜர்படுத்தினார்கள்.

கைது செய்யப்பட்ட தோழர் குமார் உடனே ஜாமினில் வரக்கூடாது என்பதற்காக உடனடியாக பிணையில் வர முடியாத 7(1) CLA Act வேண்டுமென்று தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தியதாக PRPC தூத்துக்குடி மாவட்டத் தலைவரும் வழக்கறிஞருமான அரிராகவனின் இருசக்கர வாகனத்தையும் இந்ந வழக்கில் சேர்த்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். தோழரை பிணையில் எடுப்பதற்கு PRPC வழக்கறிஞர்கள் ஆஜராகி பிணை மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரி தாசில்தார் ராமசுப்பு அவரது புகார் மனுவில், இந்த போஸ்டரை படிக்கும் விஷமிகள் அரசு சொத்துக்களை சேதப்படுத்தவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஏதுவாகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பொதுமக்களை தூண்டும் விதமாக வாசகங்கள் அடங்கிய போஸ்டர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்தமுறை சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஆயிரக்கணக்கான வழக்குகளையும் இந்த தேர்தலுக்காக நூற்றுகணக்கான வழக்குகளையும் தற்போது வரை பதிவு செய்துவரும் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஒருவரை கூட கைது செய்யவில்லை. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் அரசியல்வாதிகள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் எல்லாம் பிணையில் வரக்கூடிய சாதாரண வழக்குகளாகும். ஆனால் மக்கள் இயக்கங்கள் புரட்சிக்கர அமைப்பை சேர்ந்த தோழர்களின் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் உடனடியாக பிணையில் வரமுடியாத சில பிரிவுகளையும் சேர்த்தே பொய்யாக பதிவுசெய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

நமது சுவரொட்டியை காவல் துறையினரும் அரசு மற்றும் நீதித்துறை அலுவலர்களும் அவருடைய பணிக்கு அப்பாற்பட்டு ஆதரித்து தோழர் குமாரிடமும் PRPC வழக்கறிஞர்களிடமும் பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் வழமையாக கூறுவதுபோல நாங்கள் அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் அரசு உத்தரவுபடிதான் நடந்துகொள்ள முடியுமென்று கூறியுள்ளனர்.

100 சதவீதம் மக்கள் ஓட்டுபோட அரசு கருத்து சொல்லும்போது அதில் மக்கள் கருத்து சொல்லக்கூடாதா? மாணவர்களையும், மகளிர் சுயஉதவி குழுக்களையும் பேனர், போஸ்டர், பிட்நோட்டிஸ் என்று சகலத்தையும் கட்டாய ஓட்டு பதிவுக்கு பயன்படுத்தும்போது மக்கள் இயக்கங்கள் அதில் கருத்து சொல்ல போஸ்டர், பிட் நோட்டீஸ்களை பயன்படுத்தக் கூடாதா? அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஊழல் வாதிகள் ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலில் இவர்களின் தேர்தல் விதிக்கு விரோதமான செயல்களை கட்டுப்படுத்த நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் நடவடிக்கை எடுக்கிறது என்று படித்தவர் முதல் பாமரர் வரை நம்பவைக்கப்படுவதை நமது இந்த போஸ்டர் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி வாயிலான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சாட்சியாகும்.

தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று அரசு பொய்வழக்கு போட்டு மிரட்டுவதை போல தேர்தல் ஆணையமும் இயக்கங்கள் அமைப்புகள் மீது அரசாங்கம் போலவே கையாளுகிறது. தமிழக அரசு பாழடைந்த ஓட்டை உடைசல் பஸ்களுக்கு 1 to 1, Point to point, EEE மற்றும் Ultra Deluxe என்று பெயர் வைப்பதை போல இந்திய அரசும் லஞ்சபேர்வழிகள், ஊழல் அதிகாரிகள் போன்றோரை வைத்து தேர்தல் ஆணையம் என்று பெயர் வைத்து தேர்தல் அதிகாரிகளை நேர்மையானவர்கள் என்று நம்ப வைக்க அரும்பாடுபடுகிறது.

வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு கட்சி தலைவர்கள், இயக்கங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அலுவலர்களின் பாரபட்சமான செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். இப்படிப்பட்ட செய்திகள் நாளேடுகளில் பரவலாக காணக்கிடைக்கின்றன. தேர்தல் ஆணையத்தை இதுமாதிரி விமர்சனம், கேள்வி கேட்பவர்களை எல்லாம் சிறையில் தள்ளிவிட்டு அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாகவும் ஜனநாயகத்தை மக்கள் மதித்து அதிகமான சதவீதம் ஓட்டு பதிவு நடந்ததாக பொதுமக்களை நம்ப வைப்பதற்காக மேற்கண்ட அடக்குமுறைகளை அரசு கையாளுகிறது.

இதிலிருந்தே தெரியவில்லையா! யாருக்காக தேர்தல்? யாருக்காக தேர்தல் ஆணையம்? இந்த நடைமுறையில் எங்கே இருக்கிறது ஜனநாயகம்? எங்கே இருக்கிறது கருத்துரிமை?

தேர்தல் ஆணையத்தின் போலி ஜனநாயக வெற்று கூச்சலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.

தகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி மாவட்டக்கிளை

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016 மின்னிதழ் : தேர்தல் தீர்வாகுமா ?

4

puthiya-jananayagam-april-2016

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி : டாஸ்மாக் ஜனநாயகத்தை எதிர்க்கும் தேசத்துரோகிகள்!

2. நரகலில் நல்லரிசி தேடாதீர்!

3. போயசு தோட்டம் : ஊழலின் தலைமைச் செயலகம்!
தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயா, ஊழலில் யாரும் எட்டவே முடியாத உச்சத்தைத் தொட்டு விட்டார்.

4. தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன?
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சம்பபடுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பார்ப்பனக் கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.

5. மக்கள் நலக் கூட்டணி : அம்மா, அம்மா! எங்களை ஏன் கைவிட்டீர்?
மக்கள் நலக்கூட்டணி, அ.தி.மு.க.வின் பி டீம் என அழைக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை வை.கோ, போலி கம்யூனிஸ்டுகளின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.

6. நேற்று அண்ணாயிசம்! இன்று அண்ணியிசம்!
எத்தனை நாற்காலிகள், எத்தனை பதவிகள், எத்தனை பணம் என்பதைத் தவிர, வேறு எந்தவிதமான கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாத பிழைப்புவாதிகளின் கூடாரம்தான் பிரேமலதா இயக்கும் விஜயகாந்தின் தே.மு.தி.க.

7. தோற்றுப்போனது அரசுக் கட்டமைவு! தேர்தல் தீர்வைத் தராது!!
தேர்தலுக்குத் தேர்தல் மாறிமாறி வாக்களித்து ஆட்சிகளை மாற்றிய பிறகும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனும்பொழுது, இந்தச் செக்கு மாட்டுப் பாதையைப் பொதுமக்கள் ஏன் சுற்றிச் சுற்றி வர வேண்டும்?

8. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் படுகொலைகள் : சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா?
சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ‘கீழே’ சாதி மெல்ல மெல்ல அழியத்தான் செய்கிறது. ஆனால், இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் ‘மேலிருந்து’ சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.

9. டார்ஜிலிங் டீயில் பிணவாடை!
மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் டீயை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் சட்டவிரோதமான முறையில் மூடப்படுவதால், கடந்த ஓராண்டுக்குள் 150 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால், அதனால் ஏற்பட்ட கொடிய நோயால் மாண்டு போனார்கள்.

10. பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா?
மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

தேசம் என்பது சாமியா, மடிசார் மாமியா?

11. அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்!
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி “அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.

13. திருடன் திருந்துவான்: போலீசு திருந்துமா?

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.