Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 651

மோடி ஆட்சியில் நீதி ஏது நீதித்துறை சுதந்திரம் ஏது?

4

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மோடி அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார்.

மே 6, 2014 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமன குழு, முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், மூத்த வழக்கறிஞர் ரோகிந்தன் நாரிமன், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

ஆர்.எம். லோதா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா

நீதிபதிகள் நியமன குழுவினர் அரசுக்கு அனுப்பும் பரிந்துரை பட்டியலை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பரிந்துரை பட்டியலில் உள்ள நீதிபதிகளின் பெயர்களில் மத்திய அரசுக்கு ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால், அதைக் குறிப்பிட்டு பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டும். நியமன குழு மீண்டும் தனது பரிந்துரையை வலியுறுத்தினால் அரசு அதை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும். எப்படி இருந்தாலும் பரிந்துரை பட்டியலை முழுமையாக ஏற்றுக் கொள்வதுதான் நடைமுறை.

மோடி அரசு இந்த நடைமுறையை தூக்கி எறிந்து, கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மட்டும் நிராகரிப்பதற்காக ‘அவரை ஏன் நிராகரிக்க வேண்டும்’ என சில பல செய்திகளை ஊடகங்களில் கசிய விட்டது. இதைத் தொடர்ந்து மோடி அரசு மற்ற 3 பேரை நீதிபதிகளாக நியமித்து ஜூன்  19-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. மேலும் கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இரகசியமாக தலைமை நீதிபதிக்கு அனுப்பாமல் ஊடகங்களுக்கு அனுப்பினார்கள். அதன் மூலம் கோபால் சுப்பிரமணியத்தை அவமானப்படுத்துவதோடு, அவரை நீதிமன்ற நியமனத்திலிருந்து துரத்தி அடிப்பதும் மோடியின் நோக்கம்.

மத்திய அரசின் பரிந்துரைப்படி ஜூன் 22-ம் தேதி ரோகிந்தன் நாரிமன், ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகிய மூன்று பேர் மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி கோபால் சுப்பிரமணியம் நீதிமன்ற நியமனத்துக்கு தனது ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதோடு சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் தான் நீதிமன்றத்தின் நண்பராக செயல்பட்டதால்தான் மோடி அரசாங்கம் தன் மீது ஏதாவது களங்கம் கற்பிக்கும்படி சி.பி.ஐக்கு வெளிப்படையாக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டினார். நீதித்துறை தனது சுயேச்சையை காத்துக் கொள்ள போராடவில்லை என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என் வெங்கடாச்சலையா உள்ளிட்ட நீதித்துறையினர், மத்திய அரசு நீதிபதி தேர்வுக் குழுவின் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பிய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா ஜூலை 1-ம் தேதி “எனக்கு தெரியாமல், எனது ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு தன்னிச்சையாக கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மட்டும் பிரித்து நிராகரித்ததற்கு நான் கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறேன்” என்றும், மத்திய அரசு ஒரு உயர்ந்த அரசியல் அமைப்பு பதவிக்கான நியமனத்தை மிகவும் அலட்சியமாக  கையாண்டிருப்பதாகவும் விமர்சித்திருக்கிறார்.

கோபால் சுப்பிரமணியம்
கோபால் சுப்பிரமணியம்

ஜூன் 28-ம் தேதி நாடு திரும்பிய நீதிபதி லோதா, கோபால் சுப்பிரமணியத்தை சந்தித்து அவரது கடிதத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கோபால் சுப்பிரமணியம் நீதிபதி பதவிக்கு தனது பெயரை பரிந்துரைப்பதை மீண்டும் நிராகரித்திருக்கிறார்.

“20 ஆண்டுகளாக நீதித்துறையின் சுதந்திரத்துக்காக நான் போராடி வந்திருக்கிறேன். இதில் விட்டுக் கொடுக்கவே முடியாது. நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று தெரிந்தால் இந்த பதவியை தூக்கி எறியும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்றும் நீதிபதி லோதா கூறியுள்ளார். நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பது இன்னும் எப்படி உணர்த்தப்பட வேண்டும் என்று கனம் நீதிபதி எதிர்பார்க்கிறார் என்று விளக்கவில்லை. ஒருவேளை கோபால் சுப்ரமணியம் இதை வெளியே தெரிவித்திருக்கா விட்டால் லோதா இதை சாதாவாக மறந்து போயிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மாறாக நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையே பறிபோயிருக்கிறது என்று கோபால் பேசிய பிறகே வேறு வழியின்றி தலைமை நீதிபதி பேசியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் மோடி அரசு மீது யாரும் அப்படி நாக் அவுட் குத்து விட முடியாது.

“வளர்ச்சி”, “திறமையான, நேர்மையான நிர்வாகம்” என்றெல்லாம் விதந்தோதி மோடி அரசை வரவேற்று, ஆதரித்த வலதுசாரி அறிவுஜீவிகள் ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என்று அடுத்தடுத்து மக்கள் மீது அரசு இறக்கும் இடிகளை, தாங்கள் கோரும் “வளர்ச்சிக்கு” தேவையானதாக நியாயப்படுத்துகிறார்கள். ஆனால் தாங்களே வியந்து போற்றும் சட்ட திட்டங்களைக் கூட மோடி தன் கால்தூசுக்கு சமமாகத்தான் மதிப்பது குறித்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். அந்த வளர்ச்சியும் இந்த மௌனமும் வேறில்லையோ?

நீதிபதி நியமன விவகாரம் மட்டுமின்றி பிரதமர் அலுவலகத்துக்கு முதன்மை செயலராக நிருபேந்திர மிஸ்ராவை நியமிப்பதற்கு அவசரச் சட்டம் மூலம் செபி சட்டத்தை திருத்தியது, ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்னதாகவே ரயில் கட்டண உயர்வை அறிவித்தது என மோடி அரசின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் எதைப் பற்றியும் இவர்களில் பலர் வாய் திறக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த மே 16-ம் தேதி கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி நாடாளுமன்ற தேர்தலில் “பாஜகவுக்கே 272+ கிடைத்த”தைத் தொடர்ந்து மோடியின் சாதனைகளைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“மோதி ஊதிப் பெருக்கிய வெறும் பலூன் என்றார்கள். கருத்துக்கணிப்புகள் பொய் என்றார்கள். கார்ப்பரேட் சதி என்றார்கள். அனைத்தையும் மோதி உடைத்தெறிந்திருக்கிறார். மோதி செய்துள்ளது ஒன்றல்ல, பல சாதனைகள்”

அந்த சாதனைகளில் முதலாவதாக அவர் பட்டியலிட்டது

1. உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ஒவ்வொரு தடையையும் உடைத்துக்கொண்டு மோதி முன்னுக்கு வந்தார். எதிர்த்த அத்வானி, சுஷ்மா போன்றவர்களை நியாயமான முறையில் தோற்கடித்து முன்னுக்கு வந்தார். பாஜகவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தன்னை ஏற்றுக்கொள்ள வைத்தார்.

நரேந்திர மோடி
வளர்ச்சி நாயகன் மோடி (படம் : நன்றி MANJUL)

இதற்கு முன்பாகவே மோடியின் வாழ்க்கை பற்றி நிலஞ்சன் முகோபாத்யாயா எழுதிய Narendra Modi: The Man, The Times மற்றும் கிங் ஷூக் நாக் எழுதிய The NAMO story, a political life என்ற இரண்டு புத்தகங்களையும் படித்திருந்ததாக பத்ரி குறிப்பிட்டிருந்தார். ‘மோடி பற்றிய தனது கருத்துக்களை மாற்ற வேண்டியிருக்குமோ’ என்று அப்போது கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இந்த நூல்களில் 1980-களில் குஜராத் மாநில ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளராக மதக் கலவரங்களை கட்டளையிட்டு ஒருங்கிணைத்து நடத்தியதிலிருந்து, 1990-களில் முரளி மனோகர் ஜோஷியின் பாரத் ஏக்தா யாத்திரையை நடத்தியதில் ஜோஷியை மதிக்காமல் கட்சியில் கோஷ்டி கட்டியது, கேஷூபாய் படேலுடன் சேர்ந்து வகேலாவை ஓரம் கட்டி கட்சியை விட்டுத் துரத்தியது, 2000-களில் கேஷூபாய் படேலிடமிருந்து முதலமைச்சர் பதவியை தனக்கு பறித்துக் கொண்டது, ஹரேன் பாண்டியாவை அரசியல் ரீதியாக தீர்த்துக் கட்டியது, கோர்தன் ஜடாஃபியாவை அழைத்து மிரட்டியது என்று மோடி மற்றும் அவரது தலைமையிலான அரசு “நியாயமான முறைகளை” பின்பற்றப் போவதில்லை என்பதை விளக்கும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

ஹரேன் பாண்டியா கொலை, இஷ்ரத் ஜகான், சோராபுதீன் ஷேக் வரை பலர் போலி மோதல்களில் கொலை என சட்ட விரோத ஆட்சி நடத்தியதிலிருந்து, பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை ஒட்டுக் கேட்க உளவுத் துறையை பயன்படுத்தியது வரை நூற்றுக் கணக்கான வழிகளில் சட்ட வழிமுறைகளை மீறியே ஆட்சி செய்திருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகின.

அதற்கு பிறகும் மே 16-ம் தேதி மோடி நல்லவர், “நியாயமான முறைகளை” பின்பற்றுபவர் என்று எழுதிய பத்ரி ஒன்று, தான் படித்தவற்றை புரிந்து கொள்வதில் குறைபாடுடையவர் அல்லது தான் நாடும் “வளர்ச்சிக்காக” இத்தகைய முறைகேடுகள் சரி என ஆதரிக்கிறார். போகட்டும் இப்போதும் கூட பத்ரி அவர்கள் மோடி எனும் மாமனிதர் பிரதமர் அலுவலக அறையில் ஒரு சுவிட்சை போட்டு இந்தியா முழுவதும் வளர்ச்சி எனும் பல்பை எரிய வைப்பார் என்று நம்புவதாகவே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படை என்ன?

தேர்தல் முடிவுகள் வெளியான அதே மே 16-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் வழக்கு குறித்து அளித்திருக்கும் ஒரு தீர்ப்பு, குஜராத்தில் போலீசு-உளவுத் துறை மூலம் அரசு பயங்கரவாத, இந்து மதவெறி பாசிச ஆட்சியை நிறுவியதன் மூலம்தான் அவர் தொடர்ந்து நான்கு முறை முதல்வராகப் பதவியில் அமர முடிந்தது; இந்த சமூக விரோத கிரிமினல்தனத்தைத் தாண்டி அவரது தேர்தல் வெற்றிகளுக்கு வேறெந்த அடிப்படையும் கிடையாது” என்பதை நிரூபித்துக் காட்டியது. அது குறித்தும் பத்ரி திருவாய் மலரவில்லை.

இப்போது பத்ரி போன்ற வலதுசாரிகள் புனிதமாக கருதும் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்திலேயே மோடி அரசு எந்த அறத்தையும், சட்டத்தையும் மதிக்காமல் புகுந்து விளையாடியிருக்கிறது. ஒரு வேளை இதுவும் மோடி அறையில் உள்ள சுவிட்சை போட்டு வளர்ச்சி லைட்டை எரிய வைக்கும் திறமையாக இருக்குமோ? இல்லை தலைமை நீதிபதி லோதி காங்கிரசின் கையாளாக இருப்பாரோ? இல்லை இது ஏதோ மறதியாக நடந்த தவறா? அல்லது இதை வைத்து மோடி அரசை விமரிசிக்க கூடாதா?

பத்ரி மட்டுமல்ல பாஜகவை பல்வேறு காரணங்களால் ஆதரிக்கும் அறிஞர் பெருமக்களும், முதலாளிகளும் நிச்சயம் வேறு காரணத்தை முன்வைப்பார்கள். அது அன்னிய முதலீடுக்கு இந்திய நாட்டை திறந்து விடும் வேகம் முந்தைய மன்மோகன் சிங் அரசைக் காட்டிலும் அதிகம் என்பதால் இந்த சில்லறை பிரச்சினைகளை எழுப்பாதீர்கள் என்பதே அவர்களது உள்ளக்கிடக்கையாக இருக்கும். முதலாளிகளின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் ஒரு தலைவன் அதற்காக அவன் காட்டும் வேகம், ஒடுக்குமுறையை இந்துத்துவத்திற்காகவும் காட்டுவது நல்லதுதானே? அப்போதுதானே இதே சட்டவிரோத முறைகளை ‘வளர்ச்சிக்காகவும்’ செய்ய முடியும்?

வளர்ச்சியும் இந்துத்துவமும் வேறு வேறா என்ன?

–    செழியன்

மேலும் படிக்க

தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !

4

ன் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியரான ராஜாவுக்கு, பிணையில் வர முடியாத பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்துள்ளது சென்னை, சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம். சன் செய்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்த அகிலா தொடுத்த பாலியல் குற்ற வழக்கில் ராஜாவுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தது. அதில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க… கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சன் செய்தியில் மறுபடியும் ராஜா சேர்ந்துவிட்டார் என்பது ஊடக உலகிலேயே இன்னும் பலருக்குத் தெரியாத செய்தி.

சன் டி.வி ராஜா
சன் டி.வி ராஜா

ராஜாவால் அகிலாவுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சினை குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜா, அகிலா இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்தது சன் டி.வி. நிர்வாகம். குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் விதமாக புகார் கொடுத்தவரை நீக்கி தனது ஆண்டைத்தனத்தை காட்டியது சன் நிறுவனம். இருப்பினும் பொதுவெளியில் பெயர் அம்பலப்பட்டதால், பணியிடத்தில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணையை சன் நிறுவனம் ஒரு பக்கம் நடத்தியது. மறுபுறம் நீதிமன்றத்தில் அகிலா கொடுத்த குற்ற வழக்கு நடந்து வந்தது. விசாகா கமிட்டி எல்லாவற்றையும் ஆற அமர விசாரித்துவிட்டு சன் நிர்வாகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துவிட்டு சென்றது. ராஜா, பதவியில் இருந்து விலகினார்.

இது குறித்து வினவில் தொடர்ந்து எழுதியிருக்கிறோம். அறியாதவர்கள் அந்த பழைய கட்டுரைகளை படித்தறியலாம்.

ஆனால் குற்ற வழக்கு முடிவடையாமல் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது இந்த வழக்கின் சுருக்கமான பின்னணி.

ராஜா சன் செய்தியில் இருந்து வெளியேறிய பிறகு ‘அந்த டி.வி.யில் சேரப்போகிறார். இந்த டி.வி.யில் சேரப்போகிறார்’ என்று அவ்வப்போது பரபரப்பான பேச்சுக்கள் அடிபடுவது உண்டு. அவர் எதிலும் சேரவில்லை. கடைசியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு மாதங்கள் முன்பாக ‘செய்தி ஆலோசகர்’ என்ற பதவி கொடுக்கப்பட்டு ராஜா மீண்டும் சன் செய்தியில் சேர்க்கப்பட்டார். பதவியின் பெயர் மாறியிருந்தாலும், அவர் முன்பு பார்த்த அதே வேலையைத்தான் பார்த்து வருகிறார். பழைய உருட்டலும், மிரட்டலும் மட்டும் குறைந்திருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் இங்கு விவகாரம் ராஜாவின் ‘சாமர்த்தி’யம் பற்றியது அல்ல. பணியிடத்தில் உள்ள பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தம் கீழ்த்தரமான நபர் என்பது ஆதாரபூர்வமாக அம்பலப்பட்டப் பின்னரும், ராஜா போன்ற பொறுக்கியை எந்த கூச்சமும் இல்லாமல் மறுபடியும் வேலையில் சேர்த்திருக்கும் சன் நிர்வாகத்தைப் பற்றியது. ஒருக்கால் ராஜா குற்றம் செய்யவில்லை என்று சன் நிர்வாகம் தனது பொய்மையை நிலைநிறுத்த வேண்டுமென்றாலும் அகிலா தொடுத்த வழக்கு முடிந்த பிறகே, அதுவும் நீதிமன்றம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்த பிறகே, அதைச் செய்ய வேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் ராஜாவை கூட்டி வந்து அழகு பார்த்தால் அதற்கு என்ன பொருள்?

இதுபற்றி யாரும் எதுவும் பேசவில்லை. எனில், சன் நிர்வாகம் ராஜாவின் அரிப்புக்கு சொரிந்துவிடும் வேலை பார்க்கிறதா? அல்லது அந்த பொறுக்கியின் பாலியல் இச்சையை தீர்த்து வைக்கும் மாமா வேலைப் பார்க்கிறதா? இல்லை அவர் யோக்கியர் என்றால் அதை நீங்களா தீர்மானிப்பது? பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த வழக்கை கூட இவர்கள் குப்பையாக மதிக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இதுவே அகிலாவின் குற்றச்சாட்டு உண்மை என்பதை ஐயமற நிரூபிக்கிறது.

பொதுவாக ஒரு நிறுவனத்தில் பெண்களை பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் ஒழுக்கமற்ற நபர்களை தலைமைப் பொறுப்பில் வைத்திருந்தால் அதன் நன்மதிப்பு சரியும். அது வியாபாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும். இது தெரிந்தும் சன் நிர்வாகம் ராஜாவை மறுபடியும் பணியில் அமர்த்தியிருக்கிறது. எந்த விளக்கமும் கூறவில்லை. ஒருவேளை ‘விசாகா கமிட்டி ராஜா மீது குற்றம் இல்லை என்று சொல்லிவிட்டது’ எனலாம்.

சன் நியூஸ்
சன் நிர்வாகம் ராஜாவின் அரிப்புக்கு சொரிந்துவிடும் வேலை பார்க்கிறதா? அல்லது அந்த பொறுக்கியின் பாலியல் இச்சையை தீர்த்து வைக்கும் மாமா வேலைப் பார்க்கிறதா?

ஆனால் விசாகா கமிட்டி என்பது கண் துடைப்பு. அந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சன் தொலைக்காட்சி நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள்தான் என்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். அதையும் தாண்டி குற்ற வழக்கு, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது இன்னும் விசாரணை மட்டத்தில்தான் இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க எந்த அடிப்படையில் இத்தகைய ‘குற்றவாளியை’ வேலைக்கு சேர்த்தது சன் நிர்வாகம்?

சன் நிர்வாகம் மட்டுமல்ல, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட இத்தகைய பேர்வழிகளை காப்பாற்றவே செய்கின்றன. நிறுவனத்தின் நன்மதிப்பை காப்பாற்ற வேண்டி நீதிமன்றத்திற்கு வெளியே இவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை ‘மிரட்டி’ ஒப்பந்தம் போட்டு வழக்கை திரும்பப் பெறுமாறு செய்கிறார்கள். எந்த நிறுவனமும் தனது மேலதிகாரி குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வாங்கித் தருவதில்லை. இந்த இலட்சணத்தில்தான் இவர்கள் பெண்கள் தினம் அது இது என்று உபதேசங்களை அள்ளிவிடுகிறார்கள்.

’ராஜா போன்ற திறமையாளர்கள் ஊர் உலகத்தில் இல்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பு சேர்த்துள்ளனர்’ என்றும் சன் நிர்வாகத்தை சொல்ல முடியாது. அப்படி ஒன்றும் அவர் மலையைப் புரட்டியவர் இல்லை. ராஜாவின் வீழ்ச்சி, இன்னொரு பொருளில் சன் நிறுவனத்தின் வீழ்ச்சி. அகிலா என்ற ஒற்றைப் பெண், சன் டி.வி. என்ற பிரமாண்ட சாம்ராஜ்ஜியத்திற்கு சவால் விட்டதை அவர்களால் நிச்சயம் சகித்துக் கொண்டிருந்திருக்க முடியாது. ஆகவே ராஜாவை மீண்டும் தலை நிமிர வைத்தாக வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அகிலா தரப்பை நீர்த்துப் போக செய்வதில் அதிக கவனம் செலுத்திய சன் டி.வி. நிர்வாகம், ராஜாவின் கிரிமினல்தனத்துக்கு துணை போன பலரையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தது. எனினும் ராஜாவின் தற்போதைய இணைவில், இந்த தர்க்கங்களை மீறிய வர்த்தகக் கூட்டுகளும், யூகிக்க முடியாத ரகசிய பேரங்களும் இருக்கக் கூடும். இல்லையேல் சேர்த்தது ஏன் என்று சன் நிர்வாகம் தனது விளக்கத்தை கூறட்டும்.

மொத்தத்தில் வாய்கிழிய ஊர் நியாயம் பேசி, தீர்ப்பு வழங்கும் இந்த ஊடகங்களின் யோக்கியதையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் நடக்கும் குற்றத்தை வேறு நிறுவன செய்தியில் காட்டக் கூடாது என்று இவர்கள் தங்களுக்குள் உடன்படிக்கை போட்டு செயல்படுகின்றனர். இந்த கூட்டுக்களவாணித்த்தனத்திற்கு ஊடக “எத்திக்ஸ்” என்று வேறு தத்துவ விளக்கம் அளிக்கின்றனர். எத்துவாளித்தனங்களெல்லாம் எத்திக்ஸ் என்றால் அந்த எத்திக்ஸ் நாசமாக போகட்டும்.

இத்துடன் டி.வி.யில் மூஞ்சி தெரிகிறது என்பதற்காக பல்லை இளித்துக்கொண்டு கருத்து சொல்வதற்காகப் போகும் காரியவாத அறிவாளிகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களெல்லாம் ஃபேஸ்புக்கில் ஊர், உலக பிரச்சினை எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வார்கள். ஆனால் ஒரு பயலும் சன் டிவியின் அயோக்கியத்தனம் குறித்து வாய் திறக்கவில்லை. இது கருத்து கந்தசாமிகளுக்கு மட்டுமல்ல, கருத்து காயத்ரிக்களுக்கும் பொருந்தும்.

பச்சமுத்து
புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பித்து ஓரளவுக்கு பெயர் வாங்கியதும் இரண்டாவது அலைவரிசையாக புதுயுகம் ஆரம்பித்தார் பச்சமுத்து

இதைவிட முக்கியமாக தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களின் சுயமரியாதையற்ற தன்மையை பரிசீலிக்க வேண்டும். சம்பளம், கவர், பரிசுப் பொருட்கள், ஓசி குடி, பஸ் பாஸ், வீட்டு மனை, குடித்துவிட்டு வண்டி ஓட்ட பர்மிட் என பல சௌகர்யங்களை அனுபவிக்கும் பத்திரிகையாளர்கள் உண்மையில் மழுங்கினிகளாக இருக்கின்றனர். எதையும் எதிர்த்துப் பேச அவர்களுக்கு நா எழுவதே இல்லை. ஜெயலலிதா நடத்தும் பிரஸ் மீட் காட்சிகளை ஜெயா டி.வி.யில் பார்த்தால் உங்களுக்கு அதிமுக தொண்டர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது.

தன்னிடம் வரும் அனைவரையும் ஓபிஎஸ்ஸாக மாற்றிவிடும் அற்புத சக்தி படைத்தவர் அம்மா என்பது ஒரு உண்மைதான் என்றாலும், இதில் பத்திரிகையாளர்களின் பணிவும் குறிப்பிடத்தகுந்தது. விஜயகாந்தை சீண்டிவிட்டு வாயைப் பிடுங்கும் இவர்கள், ஜெயலலிதாவிடம் சொன்னதை குறித்துக் கொண்டு போட்டதை தின்றுவிட்டு கிளம்பி விடுகின்றனர்.

ராஜா மீண்டும் வேலையில் சேர்ந்துள்ள இந்த நிலை குறித்து சிலரிடம் பேசியபோது, தமிழ் ஊடக உலகில் நடைபெற்று வரும் மற்றொரு அவலம் கவனத்துக்கு வந்தது. பல தொலைக்காட்சிகளில் கொத்து, கொத்தாக ஆட்களை வேலையை விட்டுத் தூக்கி வருகின்றனர். குறிப்பாக புதிய தலைமுறை குழுமத்தில் இருந்து 20 பேர், 30 பேர் என்று அனுப்பப்படுகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பித்து ஓரளவுக்கு பெயர் வாங்கியதும் இரண்டாவது அலைவரிசையாக புதுயுகம் ஆரம்பித்தார் பச்சமுத்து. அதற்காக ஏராளமானோரை வேலைக்கு எடுத்தார்கள். கிட்டத்தட்ட சென்னையின் அனைத்து முக்கியமான பத்திரிகையாளர்களும் அங்குதான் பணிபுரிந்தனர். எல்லோருக்கும் நம்ப முடியாத அளவுக்கு சம்பளம். 50 ஆயிரம், 60 ஆயிரம் என்று பயமுறுத்தும் விதமாக இருந்தது. அவர்கள் ஏற்கெனவே பெற்று வந்ததைக் காட்டிலும் இரு மடங்கு ஊதியம். அங்கு வேலை கிடைக்காதோர் அங்கு பணிபுரிகிறவர்களை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஆட்குறைப்பு இப்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. ’வேலையில் திறன் அற்றவர்களை அனுப்புகிறோம். காஸ்ட் கட்டிங்’என்று சொல்லப்பட்ட போதிலும் திறமையானவர்களும் வெளியில் அனுப்பப்பட்டு வருகின்றனர். 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் பெற்று ஓரளவு வேலையும் தெரிந்தவர்கள் தப்பித்தனர். அதைவிட அதிக சம்பளம் வாங்கியவர்களுத்தான் சிக்கல். அவர்களின் வேலைத்திறன் நன்றாகவே இருந்தாலும் வெளியேற்றப்படுகின்றனர். குறிப்பான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. முறையான விளக்கமோ இல்லை நிவாரணமோ எதுவும் இல்லை. தனிப்பட்ட நபர்களின் பேரம் பேசும் திறமையை பொறுத்து செட்டில்மெண்ட் தொகையாக 3 மாத சம்பளமோ, 4 மாத சம்பளமோ கிடைக்கிறது, அவ்வளவுதான்.

இதிலே இவர்களது திறன் என்று நாங்கள் குறிப்பிடுவது வணிக ஊடக உலகில் அவர்களே சொல்லிக் கொள்ளும் ‘எழுத்து மற்றும் பேசும்’ திறன்தான். ஊடகங்களில் மக்கள் நலனின் பாற்பட்டு காத்திரமான செய்திகளை வழங்குவது என்பது ஒரு பத்திரிகையாளனின் திறமை குறித்த பிரச்சினை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் விருப்பு வெறுப்பிற்கும் உட்பட்டதுதான். இருப்பினும் குறைந்த பட்சமாக மக்களை கவருவதற்கு இவர்களுக்கு கொஞ்சமாவது திறமை கொண்ட ஊடகவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் தேவையில்லை என்று தொலைக்காட்சிகள் நினைக்கின்றன என்றால் சானல்களை பார்க்கும் மக்களை இவர்கள் எவ்வளவு மட்டமாக பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது.

”நான் அப்ளை பண்ணலை. அவங்களாதான் கூப்பிட்டாங்க. ஆனா இப்போ வெளியில் போகச் சொல்றாங்க. நான் இனிமே எங்கே போய் வேலை தேடுறது?” என்று கேட்கிறார் வெளியேற்றப்பட்ட ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இப்படி பலர் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்த பாதுகாப்பான வேலையையும் கூட, அதிக சம்பள ஆசையால் விட்டுவிட்டு வந்துள்ளனர். இப்போது வேலை பறிபோன நிலையில் பரிதவித்து நிற்கின்றனர். சென்னையின் முக்கியமான, திறன் உள்ள பத்திரிகையாளர்களை அதிக சம்பளம் கொடுத்து இழுத்து, அவர்களின் திறமையைப் பயன்படுத்தி தனது நிறுவன பிரபலத்தை நிலைநிறுத்திவிட்டு இப்போது துரத்தி அடிக்கின்றனர். இனிமேல் அதிக சம்பளம் பெறுபவர்கள் அவர்களுக்குத் தேவை இல்லை. 8 ஆயிரம், 10 ஆயிரத்துக்கு ஆட்களை அமுக்கிப் போட்டு இரவும், பகலும் கொல்லலாம்.

வைகுண்டராஜன்
’கலாநிதிமாறன், பச்சமுத்து, எஸ்.பி.வேலாயுதம் போன்ற ஜென்டில்மென்கள் எல்லாம் டி.வி. வைத்திருக்கும்போது ஜென்டில்மெனான நான் மட்டும் இழிச்சவாயனா?’

இந்த பச்சையான சுரண்டல் போக்கை எதிர்த்துக் கேட்க ஒரு நாதி இல்லை. புதிய தலைமுறையில் மட்டும் இல்லை. கேப்டன் நியூஸ் சேனலில் கூட கடும் ஆட்குறைப்பு. மொத்தமாக 25 பேரை நிறுத்திவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஜிடிவி.எஸ்.பி.வி. என்ற டி.வி.யில் கடும் பிரச்னை எழுந்தது. ஆறு மாதங்களுக்கு மேல் யாருக்கும் சம்பளம் தரவில்லை. தமிழ் ஊடக வரலாற்றில் முதன் முறையாக அதன் செய்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். எனினும் எதுவும் நடக்கவில்லை. அங்கிருந்தும் பலர் வெளியேறினார்கள்.

சமீபத்தில் ஜெயா டி.வி.யில் இருந்து சுமார் 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படி அண்மை சில மாதங்களில் மட்டும் வேலை இழந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், வேறு எந்த ஊடகத்திலும் வேலை கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். ஒருவேளை அவர்கள் தாதுமணல் திருடன் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் துவங்கப்போகும் புதிய டி.வி.யில் வேலைக்கு சேரக்கூடும். ஆமாம், அந்த கொடுமையும் நடக்கப்போகிறது. வைகுண்டம் இப்போது டி.வி.யிலும் இறங்கிவிட்டார்.

’கலாநிதிமாறன், பச்சமுத்து, எஸ்.பி.வேலாயுதம் போன்ற ஜென்டில்மென்கள் எல்லாம் டி.வி. வைத்திருக்கும்போது ஜென்டில்மெனான நான் மட்டும் இழிச்சவாயனா?’ என்று அவர் கருதியிருக்கக்கூடும். அனேகமாக இன்னும் சில ஆண்டுகளில் வைகுண்ட ராஜன் கட்சி கூட துவங்கலாம்.

இதுபோன்ற இழிவான நிலைதான் நமது சமகால தமிழ் ஊடகங்களின் உண்மை நிலையாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பல் பிடுங்கப்பட்டவர்களாக, எதிர்த்துப் பேசும் திறன் அற்றவர்களாக, ஒரு பிரச்னையை சொந்த அரசியல் கண்ணோட்டத்துடனோ மக்கள் நலனிலிருந்தோ அணுகும் ஆற்றல் அற்றவர்களாக, விழுமியங்கள் வீழ்ந்து போனவர்களாக இருக்கின்றனர். தன் சொந்த துறையில் தன் சக ஊடக பணியாளர்கள் கொத்து, கொத்தாக வேலையை விட்டுத் தூக்கப்படுவது குறித்த தகவல் கூட முழுமையாக தெரிந்திராத இவர்கள்தான் நமக்கு தகவல்களை கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

இவர்களே இப்படி என்றால், பத்திரிகையாளர்களுக்கு என்று இருக்கும் சங்கங்கள் எதைக் கிழிக்கும் என்பது அதிசயமில்லை. தமிழ்நாட்டிலேயே மிகவும் சொகுசான டாஸ்மாக் பார் எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டுமானால், சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குப் பின்பக்கம் உள்ள பிரஸ் கிளப்புக்கு வாருங்கள். தினசரி மாலையில் அங்கு உட்கார்ந்து ஒரு கும்பல் குடித்துக் கொண்டே இருக்கிறது. அது ஒன்றும் அந்த இடத்திற்கு சம்மந்தப்படாத கும்பல் அல்ல. அவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள்தான். எழுதிவிட்டு குடிக்கிறார்களா, குடித்துவிட்டு எழுதுகிறார்களா தெரியவில்லை. ஆனால் எந்நேரமும் குடி. இதுதான் அவர்களின் வேலை. இதற்கு ஒரு பிரஸ் கிளப். அதற்கு அரசாங்க இடம். கருத்துரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய ஊடகத் தூண் இப்படித்தான் சரிந்து வருகிறது.

இதனால் நாங்களெல்லாம் நேர்மையாக இல்லையா என்று சில பத்திரிகையாளர்கள் சீறலாம். அப்படி யாரும் சீறினால் அது குறித்து உண்மையில் மகிழப்போவது நாங்கள்தான். ஆனால் அந்த சீற்றம் உண்மை எனும் பட்சத்தில் சன் டிவி ராஜா குறித்தோ, இல்லை வேலை நீக்கம் செய்யும் தொலைக்காட்சிகளைப் பற்றியோ பேசவோ, எழுதவோ, போராடவோ நீங்கள் செய்யவில்லை என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.

அது வேறு இது வேறு என்று நீங்கள் சமாளிக்கலாம். ஆனால் நாளையே கூட நீங்களும் காரணமற்று வேலை நீக்கம் செய்யப்படும் பட்டியலில் இருக்கலாம். அப்போது உங்களுக்காக போராட யாரும் இருக்கமாட்டார்கள்.

இது வெறுமனே வேலை பாதுகாப்பு குறித்த சுயநலம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. பொதுநலனில் பத்திரிகையாளர்கள் எப்படி நேர்மையாக செயல்படுகிறார்களோ அதுதான் அவர்களது பணிபாதுகாப்பிலும் பிரதிபலிக்கும். இதை எப்படி செய்வது என்ற தயக்கம் இருந்தால், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!  இதன்றி நேர்மைக்கு வழியேதும் இல்லை நண்பர்களே!

திருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்

10

யுகயுகமாய்த் தொடரும் தேவாசுரப் போரின்
புதிய அத்தியாயம் எழுதப்பட்டது திருவரங்கத்தில்

தேவாசுரப் போரில் அசுரர் பங்கையும்
தேவருக்கு தாரை வார்த்த அசதியில்
பள்ளி கொண்டிருந்த
அரங்க நாதன் அறிதுயில் கலைய
அரங்கேறியது திருப்பள்ளி எழுச்சி

மூலவர் கருவறை வழிமறைக்கும்
நந்தீஸ்வர இந்து முன்னணி
ஊர்வலத்திற்கு மட்டுமில்லை
ஸ்ரீரங்கத்தில் அவாளின்
உத்திரை வீதியும் சித்திரை வீதியும் தாண்டி
உற்சவ மூர்த்திகளையே
உலா விட மறுத்தன சூத்திர வீதிகள்

அன்றுதான் முதன்முதலாக அங்கே
பார்ப்பானும் பகவானும் சண்டாளன் ஆயினர்
பஞ்சமனும் சூத்திரனும் பெண்டுகளும்
பள்ளிகொண்டானைத் தொட்டுத் துயிலெழுப்பி
பள்ளி எழுச்சி பாடினர்
பிறவிப் பயனை எய்தியே விட்டனன்
‘பிறவா யாக்கை’ப் பெம்மான் தானும்

பட்டாசு கொளுத்தி மிட்டாய் கொடுத்து
பூசுர அகம்பாவ துவம்சம் செய்த
அசுர தீபாவளி ஆரம்ப மானது

காலகால நூல்வேலி கிழித்தே
கருவறை நுழைந்தது செம்பதாகை
அம்பேத்காரும் பெரியாரும்
ஆங்கெழுந் தருளினர்

ராமஜென்ம பூமியென அனுமார்கள்
கொடியேற்றிய கரசேவைக்கு
அம்பேத்கர் பிறந்த மண்ணின்
பெரியார் பூமியின்
விடையாற்றி இது.

* * * *

அடுத்த அத்தியாயம் அசுர கானமாய்
ஆரம்ப மானது தஞ்சை மண்ணில்

மூப்பனார்கள் தோப்பனார்
முப்பாட்டனர் காலந் தொட்டே வழிவழியாய்க்
“கோத்திரஞ் சொல்லு- உன்
கோத்திரத்தின் சூத்திரம் சொல்”லெனச்
சொல்லச் சொல்லியே சூத்திரர் நுழையாமல்
அவாளை மாத்திரமே அனுமதித்த
உஞ்சி விருத்திப் பரம்பரை ஆதிக்கப்
பஞ்ச நாதீஸ்வர பரிபாலன ஐயாற்றில்
அரங்கேறியது ஓர் அசுர வியூகம்

தியாகப் பிரம்ம ஆராதனையில்
பஞ்சரத்தினக் கீர்த்தனை
மங்களம் பாடுமுன்
திக்குகளெல்லாம் திக்குமுக்காட
ஊடறுத் தொலித்தது ஒயிலாட்ட விசில் விசில்

அபயகரமருளும் உபயதாரர்
மூப்பனார்ஜீயின் முகமெல்லாம் வேர்க்க
தூரதர்சனின் கேமரா ஆங்கிள்கள்
தாறுமாறாய்ப் புறம்புறம் திரிய
அரங்கத்தில் விரிந்தன செம்பதாகைகள்

சங்கு சக்கரங் கதிகலங்கிடச்
சனாதனத்தின் குலைநடுங்கிட
கங்கை வார்குழல் ‘திங்குதிங்’கெனச்
சைவாதீனம் பதைபதைத்திட
அசுர கானம் முழங்குகின்றது
அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.

“அபச்சாரம் அபச்சாரம்
அபஸ்வரம் அபஸ்வரம்
ஆபத்து ஆபத்”தெனப்
பறைகேட் டதிர்ந்த
பூசுர அசுணங்கள் புலம்பலாயின

ஆர்ப்பாட்டத்தின் போர்ப்பரணியை
ஐயாற்றின் வீதிகளில் மட்டுமில்லை
ஐயாறப்பன் செவிப்பறையினிலும்
அறைந்தறைந்ததிர்ந்தது பறை

அவனுக்கு மட்டும் இல்லையா ஆசை?
ஏழிசையாய் இசைப்பயனாய்
நின்றவனன்றோ அவ்வீசன்!
எந்நாட்டவர்க்கும் இறைவனே எனினும்
எத்தனை நாளாய் அதையே கேட்க
‘இராம நீ சமானம் எவ’ரென மட்டும்?
தஞ்சையில் கேட்ட தமிழிசை அமுதை
‘பண்ணாய்ந்த சுந்தரேசன்’
பண்தோய்ந்த செந்தமிழை
மீண்டும் மீண்டும்
ஐயாற்றிலும் கேட்க அவனுக்கும் ஆசை

தண்டபாணித் தேசிகர் பாடிய
தமிழிசை மேடையை
அசுரகானம் புகுந்த மாசென
ஸ்ரீரங்கக் கருவறையைத்
தீட்டுக்கழித்த திமிர்த்தனமும்
தேவாதிதேவப் பழியுந் துடைத்தே
மீட்டுக் கொடுத்தது அசுரகானமே

ஐயாறப்பனும் அரங்கநாதனும்
கட்டுண்டு கிடந்தனர்
ஏழிசைச் சூழலில்

“அலமந்து சிலமந்தி
மதிலேறி முகம்பார்க்கும் திருவை யாறே !”

நெடுமை நெடுங்காலமெலாம் ஆரியத்தின் கையால்
நெஞ்சொடிக்கப்பட்ட கதை மாறி நடந்தேறும்…
புறத்தெழுந்த புதுப்பாட்டாய்ப் பொய்யழிந்த செய்தி
புதுப்பண்ணின் இசையோடு யாழ்நரம்பில் ஓடும்”

– பொதிகைச் சித்தர்
________________________________
புதிய கலாச்சாரம் மே-1997

_________________________________

குறிப்பு:

1. 1993-ம் ஆண்டில் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தியது. இந்த ஆண்டில் மே 1-ம் தேதி தமிழகம் முழுவதிலும் வந்திருந்த தோழர்கள் திருவரங்கம் கோவிலை நோக்கி முன்னேறிய போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்ப்பட்டனர். மே-24-ம் தேதியன்று தோழர்களது சிறு அணி ஒன்று கோவில் கருவறையில் நுழைந்தது. இதில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தோழர்கள், பெண்கள், பெரியார் – அம்பேத்கர் படங்களை ஏந்தி கருவறையில் நுழைந்தனர். அங்கே பார்ப்பனர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய அந்த போராட்டம் குறித்து பின்னர் விரிவாக எழுதுகிறோம்.

2. திருவையாறு தியாகையர் உற்சவத்தில், ‘தமிழில் பாடக் கூடாது, தமிழ் இசைக் கருவிகள் (பறை முதலான நாட்டுப்புறக் கருவிகள்) இசைக்கப்படக் கூடாது’ என்ற பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக, “தமிழில் பாடு, இல்லையேல் தமிழகத்தை விட்டு ஓடு” என்ற முழக்கத்தோடு 1994-ம் ஆண்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் போராடத் துவங்கியது. தமிழிசையில் இருந்து திருடப்பட்டதே கருநாடக இசை என்பதை நிறுவும் முகமாகவும், பார்ப்பனீய பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமாகவும் தமிழ் மக்கள் இசை விழா எனும் இந்தப் போராட்டம் அப்போது முதல் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இது குறித்தும் பின்னர் விரிவாக எழுதுகிறோம்.

இந்தக் கவிதை இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது.

இன்னும் எத்தனை உதவும் கரங்கள்

4

“தாய்மை, செவிலியர் என்றாலே நமக்கு ஒரு பெண்ணின் நினைவுதான் வரும். அது ஒரு ஆணிலிருந்தும் வெளிப்பட முடியும்” என்று அந்த அனுபவத்தில் தோய்ந்து பேசும் வித்யாகர், 1983-ஆம் ஆண்டு திரையரங்க வாசலில் வீசப்பட்ட ஒரு குழந்தையுடன் ஆரம்பித்த நிறுவனம் ‘உதவும் கரங்கள்’. இன்று சென்னை, கோவை நகரங்களில் ஐந்து கிளைகள் 1,700 உறுப்பினர்களுடன் வளர்ந்திருக்கும் அந்த நிறுவனம் சமூக சேவைக்கு ஆதரவளிக்க விரும்பும் மக்கள், நிறுவனங்களிடையே மிகவும் பிரபலம். மேலும் புதிதாகத் தொடங்கப்படும் சேவை அமைப்புகளைப் பதிவு செய்யப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் அரசு ‘உதவும் கரங்களு’க்கு வழங்கியுள்ளது.

உதவும் கரங்கள்“இப்படித்தான் வாழவேண்டும் என நானே திட்டமிட்டுக் கொண்டதல்ல என் வாழ்க்கை. இது அபாயகரமான, கடினமான, யாரும் நன்றி பாராட்டாத வேலை என்றாலும் யாராவது ஒருவர் செய்யவும் வேண்டும்” என்று கூறும் வித்யாகரும் ஆதரவற்ற பின்னணியிலிருந்து ஒரு முதியவரால் வளர்க்கப்பட்டவர்தான். கருநாடகத்தைத் தாயகமாகக் கொண்ட இவர் உளவியல், சமூகவியல், சமூக நலவியல், சட்டம் என சமூக சேவைக்குதவும் பல்துறைக் கல்வி முடித்தவர். அரசு தொழுநோய் மற்றும் மனநல மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் வித்யாகர் முக்கியமாக அன்னை தெரசாவின் கீழே சில மாதங்கள் பணிபுரிந்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

சென்னை அரும்பாக்கத்தில் உதவும் கரங்கள் முதலில் ஆரம்பித்த இடம் இன்று அதன் தலைமை அலுவலகமாகவும் கைக்குழந்தைகளை மட்டும் பராமரிக்கும் இல்லமாகவும் பயன்படுகிறது. அங்கேயிருந்த வரவேற்பறையில் காத்திருத்தபோது மூன்று அட்டவணைகளைப் பார்த்தோம். முதலாவதில் குழந்தைகள், சிறுவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், சாகும் நிலையில் உள்ளவர்கள், ஊனமுற்றோர், கைவிடப்பட்ட பெண்கள் என உதவும் கரங்களில் பராமரிக்கப்படுபவரின் வகைகள் மற்றும் எண்ணிக்கையும், இரண்டாவதில் உதவும் கரங்களில் உடனடித் தேவை என்ற தலைப்பில் அரிசி, பால்பவுடர், போர்வை, மருந்துகள் என பொருட்பட்டியலும், மூன்றாவதில் நன்கொடைக்காக ஒரு நபரின் தினசரிச் செலவுப் பட்டியலும் இருந்தன. கூடவே உதவும் கரங்களின் உறுப்பினர்கள் தயாரித்திருந்த கைவினைப் பொருட்களும் விற்பனைக்கிருந்தன.

இந்தக் காட்சிகளுடன் அங்கேயிருந்த அசாதாரணமான அமைதியும் சேர்ந்து நமக்குக் குழப்பத்தையும், அயர்வையும் தந்தன. ஒப்பீட்டளவில் பிரச்சினைகளின்றி சகஜமான வாழ்க்கை வாழும் நமக்கு “சாகப் போகிறவர்கள்” என்ற கணக்கும், அதிலிருந்து எழும் அநாதைகள் குறித்த சித்திரமும் உதவும் கரங்களை மகிழ்ச்சிக்குரிய இடமாக உணர்த்தவில்லை.

ஒரு குழந்தையின் வளர்ப்புக்கே உலகப் பிரச்சினை போல் சலித்துக் கொள்ளும் சமூகத்தில் எத்தனைக் குழந்தைகள், நோயாளிகள், ஆதரவற்ற பெண்கள், அன்றாடச் சாவுகள், தினசரி வரும் புதிய சோகங்கள்… அங்கேயிருந்த 20 ஆண்டு வரலாற்றை யூகித்தபோது சற்றே பயமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. முதல் பார்வையில் தோன்றிய இந்த உணர்ச்சியுடன் தொடங்கிய பயணம் உதவும் கரங்களின் திருவேற்காடு கிளையைக் கண்ட பிறகும், வித்யாகருடன் நடத்திய ஒரு விரிவான உரையாடலுக்குப் பிறகும் சற்றே தெளிவடைந்தது.

***

1983-ல் உதவும் கரங்களை ஆரம்பிக்கும் போதிருந்த மனநிலைக்கும், இப்போதிருக்கும் மனநிலைக்கும் முரண்பாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அது எப்படி இல்லாமல் போகும் என்று சலிப்புடன் திரும்பிக் கேட்டார் வித்யாகர். அது தான் விரும்பியதை விரும்பியபடி செய்ய முடியாமல் போனது, செய்து கொண்ட சமரசங்கள், அருகி வரும் தொண்டர்கள், அதிகரித்து வரும் பிரச்சினைகள் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் மட்டுமல்ல, உண்மையில் அனாதைகளை உற்பத்தி செய்யும் சமூக நிலைமைகள் மாறாமல் அவர்களில் ஒரு சிலருக்கு மறுவாழ்க்கை கொடுத்து விட முடியாது என்ற கொள்கைப் பிரச்சினையும் கூட.

“நாங்கள் தொண்டூழியம் செய்து தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக ஏழைகளைப் படைத்த இறைவனுக்கு நன்றி” எனும் தெரசாவின் பிரபலமான கூற்றை வித்யாகர் ஏற்றுக் கொள்ளவில்லை. “சமூகத்தால் பராமரிக்க முடியாதவர்கள் யாரும் இல்லை எனும் நிலை வரவேண்டும், உதவும் கரங்கள் என்னுடன் அழிந்து போகவேண்டும்” என்பதையே அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். “1983-இல் 30 அநாதைச் சிறுவர் இல்லங்கள் மட்டுமே இருந்தன. இன்று 180 சிறுவர் இல்லங்களும், 200 முதியோர் இல்லங்களும் இயங்க, சுமார் 1500 அமைப்புகள் என்னிடம் பரிந்துரைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கின்றன. இது போன்ற அமைப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன” என்று கூறும் வித்யாகர் தனது விருப்பத்திற்கு நேரெதிராக இருக்கும் யதார்த்தத்தை மறுக்கவில்லை.

உதவும் கரங்கள்இருப்பினும் இதே யதார்த்தம் வித்யாகரின் விருப்பத்தைத் தலை கீழாக நிறைவேற்றவும் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளைக் கபளீகரம் செய்யும் உலகமயமாக்கம், கோடிக்கணக்கான மக்களை வேரும் விழுதுமில்லாமல் நாதியற்றவர்களாக்கியிருக்கின்றது. இவர்கள் எல்லோரையும் சேவை நிறுவனங்கள் பராமரிக்க முடியாது என்பதை விடப் பராமரிக்க மறுப்பதில் தான் அவற்றின் குறைந்தபட்ச சேவையே தொடரமுடியும். ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற நிலை எங்கேயும் இல்லை.

அதனால்தான் அன்றாடம் ஈசலைப் போலப் பெருகி வரும் அநாதைகள், அரசு மருத்துவமனை, சீர்திருத்தப் பள்ளி, சிறை, குப்பை பொறுக்குவது முதல் ஏனைய உதிரித் தொழில்களில் ஈடுபடுவோர் சாலையோரச் சிறுவர்கள் போன்றே வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள். எனவே, எல்லாச் சேவை நிறுவனங்களும் புதியவர்களைச் சேர்ப்பதற்குப் பல கட்டுப்பாடுகளையும், வரம்புகளையும் வைத்திருக்கிறார்கள்.

மேலும் பல்வேறு காரணங்களினால் உருவாக்கப்படும் ஆதரவற்றோரை நம்பிக்கையளித்து மறுவாழ்வு கொடுப்பது என்பதும் அநாதைகளை உற்பத்தி செய்யும் சமூக வாழ்க்கையை மாற்றாமல் சாத்தியமில்லை. ஆதலால், அநாதைகளுக்கு அடிமைகளுக்குரிய வாழ்வைத் தவிர வேறு எதுவும் கொடுக்க முடிவதில்லை. கூடவே, இன்றைய சேவை நிறுவனங்கள் பிரச்சினைகள் அதிகம் இல்லாத – மனவளர்சியற்ற குழந்தைகளுக்குக் கல்வி போன்ற குறைவான எண்ணிக்கையிலிருக்கும் உட்பிரிவினரைத்தான் விரும்புகின்றனர். குற்றம் நடந்த இடம் எங்கள் ஸ்டேசன் எல்லையில் வராது என போலீசு தட்டிக் கழிப்பது போல சேவை நிறுவனங்கள் பிறரைக் கைகாட்டி விட்டுக் கதவை அடைத்து விடுகின்றன.

உதவும் கரங்களின் எதிர்காலத்திட்டங்கள் கூட புற்றுநோய் மருத்துவமனை, மனவளர்ச்சி குன்றியவருக்குச் சிறப்புக் கல்வி மையம், பிண ஊர்தி வாங்குவது, ஊரகச் சத்துணவுத் திட்டம் போன்று குறிப்பான – பிரச்சினையில்லாத பிரிவினருக்கு உதவுவதாகவோ அல்லது பணம் திரட்டினால் செய்ய முடியும் என்றோதான் இருக்கிறது. மாறாக, நூற்றுக்கணக்கான அனாதைகளைக் காப்பாற்ற பல ஊர்களில் இல்லங்கள் தொடங்குவதாக இல்லை.

முதலீடு இல்லாமல் இலாபம் கிடைக்கும் தொழிலாகச் சேவை நிறுவனங்கள் மாற்றப்பட்டதும் அவை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. ஏழைகளை உருவாக்கும் வகையில் பல நிபந்தனைகள் போட்டு ஏழை நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் உலக வங்கி, வறுமை ஒழிப்புக்கும் கொஞ்சம் பணம் ஒதுக்கத் தவறுவதில்லை. உலக அளவில் இப்படி வரும் ஏராளமான பணத்தைப் பெறுவது மட்டுமே சேவை நிறுவனங்களில் ஒரு போட்டியைத் தோற்றுவித்துள்ளது. அரசிடம் அங்கீகாரம் கோரியிருக்கும் ஒரு சேவை நிறுவனம், அரசு ஆய்வாளர் சோதிக்க வரும்போது மட்டும் 10 குழந்தைகளை 10,000 ரூபாய் வாடகைக்குக் (!) கேட்டதை வேதனையுடன் குறிப்பிட்டார் வித்யாகர்.

“துன்பப்படும் ஒரு மனிதனை கடவுளே கைவிட்டு விட்டாலும் நாங்கள் விடமாட்டோம்…” என்று உதவும் கரங்களின் விளம்பரங்கள் கூறினாலும், இங்கும் கடவுளே வந்தாலும் சேர்ந்து கொள்வது சுலபமல்ல. குப்பைத் தொட்டி, கோவில், மருத்துவமனை வளாகங்களில் வீசப்படும் பச்சைக் குழந்தைகளைக் காப்பாற்றுவதையே இந்நிறுவனம் தலையாய கடமையாகக் கொண்டுள்ளது. இதைத்தவிர ஏதோ ஒரு உறவு இருக்கும் குழந்தைகளோ, உறவில் வளர்ந்து விட்டு இடையில் வரும் சிறுவர்களோ இங்கு சேர்க்கப்படுவதில்லை. “மந்தை மாதிரி குழந்தைகளைச் சேர்க்க முடியாது. படுக்கை காலியாக இல்லையென்றால் இல்லையென்றுதான் சொல்ல முடியும்” என்று வித்யாகரும் நேர்மையாக ஒத்துக் கொள்கிறார். அதேபோன்று ஆதரவற்ற பெண்கள், மனநலமில்லாதோரும் கூட எவ்விதச் சார்பும், பிரச்சினைகளும் இல்லாதவர்களே சேர்க்கப்படுகிறார்கள்.

இன்று 1,700 பேரைக் காப்பாற்றும் உதவும் கரங்களின் இருபது வருட வளர்ச்சியில் ஆண்டுக்கு 85 பேர் மட்டும் சராசரியாக அதிகரித்திருக்கிறார்கள். எனில், இடம் மறுக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதனினும் மிக அதிகமிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. மேலும் தற்போதைய எண்ணிக்கைதான் உதவும் கரங்களின் அதிகபட்சத் தாங்குதிறன். இதைத் தாண்டி பெரிய அளவில் உதவும் கரங்களினால் உதவ முடியாது என்பதே உண்மை.

உதவும் கரங்களின் முக்கியக்கிளையான ‘சாந்திவனம்’ சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ளது. இங்கே சுமார் 800 பேர் பராமரிக்கப்படுகின்றனர். இதனருகே உதவும் கரங்களால் நடத்தப்படும் இராமகிருஷ்ணா வித்யா நிகேதன் என்ற சுமார் 1700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடமும் உள்ளது. அருகாமை கிராமங்களிலிருந்து பெரும்பான்மையான மாணவர்கள் வருகிறார்கள். உதவும் கரங்களின் 300 பிள்ளைகள் இங்கு படிக்கின்றனர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை எதிர்பார்த்துச் சென்ற நமக்கு ‘சாந்திவனத்’தின் நட்சத்திர விடுதிச் சூழ்நிலை மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

உதவும் கரங்கள்பெரிய நிறுவனங்களை நினைவுபடுத்தும் வரவேற்பறை, ஒவ்வொரு பிரிவினருக்கும் பல பெரிய கட்டிடங்கள், விசாலமான சாப்பாட்டு அறைகள், கருத்தரங்க அறை, நூலகம், கைவினைத் தொழிற்கூடங்கள், மும்மதக் கோவில்கள் அனைத்தும் அதீதச் சுத்தம் – அமைதி – அழகுடன் காணப்பட்டன.

தலைமை அலுவலகத்தில் அவசரத் தேவைகளை அரிசி, பால் பவுடர் என்று எழுதி வைத்திருந்தார்களே, இங்கு இவ்வளவு ஆடம்பரமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். அநாதைகளைப் பிச்சைக்காரர்கள் போல நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இங்கே பிள்ளைகளுக்குத் தரப்படும் பராமரிப்பு வசதி மிக அதிகம். குழந்தைகளுக்காகக் கட்டிடங்களா, அந்தக் கட்டிடங்களுக்காகக் குழந்தைகளா என்ற அளவிற்கு அங்கே அநாதைகளுக்கும் – ஆடம்பரங்களுக்கும் முரண்பாடு இருந்தது.

நம்முடன் சுற்றிக் காட்டிய உதவும் கரங்களின் உதவியாளரோ அங்குள்ள குழந்தைகள், அறைகள் என்று உயிருள்ளவைக்கும், உயிரற்றவைக்கும் வேறுபாடு இல்லாத வேகத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டி போலப் புள்ளி விவரங்களை ஒப்பித்தார். மனிதகுலத்தின் மனச் சுமைகளை மொத்தமாய்ச் சுமப்பது போன்று காட்சியளிக்கும் அநாதைகள் இல்லத்தை ஒரு காட்சிச்சாலை போல எப்படி வருணிக்க முடியும்? ஒரு தொண்டர் நம்மை “ஃபீடிங் பார்ட்டியா, நன்கொடை தருபவர்களா?” என்று கேட்டார். அப்போது தான் புரிந்தது. அங்கு நாம் பார்த்த தோற்றங்களும், கேட்ட வார்த்தைகளும் உதவும் கரத்திற்கு நன்கொடை தரும் புரவலர்களுக்காக வடிவமைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

உதவும் கரங்களின் அன்றாடச் செலவு சுமார் ரூ 60,000 முதல் 80,000 வரை எனும்போது அதன் ஆண்டு செலவுத்திட்டம் ரூ 2 கோடியைத் தாண்டுகிறது. இவ்வளவு பெரிய தொகை இல்லாமல் நிறுவனம் இயங்காது என்ற உண்மை அந்தத் தொகையை வசூலிப்பதற்கேற்றவாறு செயல்படவேண்டும் என்று செயற்கையாய் மாறிக் கொள்கிறது. நன்கொடை திரட்டுவதற்கான முயற்சிகளை உதவும் கரங்கள் மிகுந்த முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

பெரிய நிறுவனங்களின் விளம்பர உத்தியின் தரத்துக்கு இணையாக உதவும் கரங்களின் துண்டறிக்கைகள், செய்தி ஏடுகள், வித்யாகரின் வரலாறு, குழந்தைகளின் கதைகள், பிரபலங்களின் பாராட்டு முதலியவை பல்வேறு பிரிவினரிடையே விநியோகிக்கப்படுகின்றன. ஒரு குழந்தையின் மொத்தச் செலவை ஏற்றுக் கொண்டு பெயரளவு தந்தை / தாயாக இருப்பது, ரூ 50,000 செலவில் கணினி வாங்கிக் கொடுப்பது, ஒரு வகுப்பறை கட்டுவதற்கான 1,50,000 ரூபாய் கொடுத்தால் புரவலர் பெயர் வகுப்பில் பொறிக்கப்படும் என பல நன்கொடைத் திட்டங்கள் அதில் அடக்கம்.

ஒரு துண்டறிக்கையில் குழந்தைகளின் சிறு பிராயம் மற்றும் வளர்பருவப் புகைப்படங்களைப் போட்டு, அவர்களின் பின்னணியை – குப்பைத் தொட்டியா, கள்ள உறவா, எய்ட்ஸா என்று விவரித்து உதவி செய்யக் கோருகிறார்கள். மற்றொன்றில், வித்யாகரே குப்பைத் தொட்டியில் ஒரு குழந்தையை எடுக்கும் படம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் மனம் புண்படுமே என்பதைவிட இப்படித்தான் புரவலர்களிடம் காசு வாங்க முடியும் என்பதே பரிசீலனைக்கு உரியது.

உதவும் கரங்கள்உதவும் கரங்களின் எந்த விளம்பரமும், அநாதைகளையும், அபலைகளையும் உருவாக்கிய புரவலர்களையும் உள்ளிட்ட சமூகத்தின் மீது விமரிசனம் செய்து உதவிகளைக் கடமையாய் உணருங்கள் என்று கேட்கவில்லை; தனித்தனிக் கதைகள் மூலம் உருவான அநாதைகள் மீது சற்றுக் கருணை காட்டுங்கள் என்று இறைஞ்சியோ, எங்களது தரமான சேவையைப் பார்த்தாவது உதவுங்கள் என்றோதான் கேட்கிறது. இந்த அணுகுமுறைதான் உதவும் கரங்களில் இருக்கும் அபலைகளிடம் அடிமைத்தனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், பார்க்க வரும் புரவலர்களிடம் குற்ற உணர்வுக்குப் பதில் பெருமிதக் கருணையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இதுபோக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நன்கொடை திரட்டுவதற்கென்றே அலுவலகங்கள் வைத்திருக்கும் உதவும் கரத்திற்கு வெளிநாடு இந்தியர்களிடமிருந்தும் கணிசமான பணம் வருகிறது. “உதவும் கரங்கள் தொடங்கி 15 வருடங்கள் வரை வெளி நாட்டிலிருந்து பணம் வாங்குவதில்லை என்றிருந்தேன். தற்போது அதிகரித்து வரும் தேவை, விலைவாசி உயர்வு காரணமாக வாங்கத் தொடங்கியிருக்கிறோம். எங்களைப் போன்ற சேவை நிறுவனங்கள் பல இந்தியாவின் வறுமையை வெளிநாடுகளில் விற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று ‘தவிர்க்க இயலாத’ மாற்றத்தை வித்யாகர் ஏற்றுக் கொள்கிறார். ‘சாந்திவனத்’தின் ஆடம்பரமும், அமைதியும் கூட வெளிநாட்டுப் புரவலர்களின் அழகியலுக்கேற்ப உருவாகியிருக்கலாம்.

சுய வருமானத்திற்காக உதவும் கரங்கள் உருவாக்கியிருக்கும் ஒரு வணிக நிறுவனம் ‘காயத்ரி தோட்டக்கலை’ ஆகும். பங்களாக்களுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் உள்ளரங்கு – வெளியரங்கு தோட்டம், செயற்கை ஊற்று – நீர்வீழ்ச்சி – நீச்சல் குளம் என்று இதுவும் ஐந்து நட்சத்திர விடுதிகளை அழகுபடுத்தும் மேட்டுக் குடிச் சேவையாகும். மலிவான இலவச உடலுழைப்பை உதவும் கரங்களின் உறுப்பினர்கள் – வேலை செய்வது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் – வழங்க, காயத்ரியின் தலைமை நிர்வாகிகள் ஐந்து இலக்கச் சம்பளத்தில் நவீன கார்களில் பறக்கிறார்கள்.

“நான்கு பேரிடம் கையேந்துவதை விட நாமே சம்பாதிப்பதற்கு முயன்றால் என்ன என்றுதான் ஆரம்பித்தோம்” என்கிறார் வித்யாகர். உதவும் கரங்கள் தனது சொந்தக் காலில் நிற்பதற்குக் கூடச் சாதாரண மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு தொழிலை ஆரம்பித்திருந்தால் அது ஆதரவற்றோர் மீது பெரும்பான்மை மக்கள் உணர்வுபூர்வமாக நெருங்குவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ‘காயத்திரி’யின் கதை முற்றிலும் வணிகக் கணக்கில் மேட்டுக்குடியின் ஆதாயத்தை எதிர்பார்த்து மட்டும் நடத்தப்படுகிறது. மேலும் இந்த அணுகுமுறை ஆதரவற்றோரைக் காப்பாற்றுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதைவிட, அவர்களை வைத்து நடத்தும் தொழிலின் சிக்கல்களைத் தீர்ப்பதாகவே மாறும்.

கூடவே சேவைபுரியும் தொண்டர்கள், வணிகம் புரியும் நிர்வாகிகள் என்று பிளவும் ஏற்படும். இதில் யாருக்கு மதிப்பும், அதிகாரமும் வரும் என்பதை விளக்கத் தேவையில்லை. மேலும் இத்தகைய தொழில் – வணிகம் நடத்தவேண்டும் என்ற அவசியமில்லாமலேயே எல்லாச் சேவை நிறுவனங்களிலும் குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகு நிர்வாகிகளே தலைமைக்கு வருகிறார்கள்.

உதவும் கரங்கள் ஆரம்பித்த வித்யாகரே தற்போது களப்பணிகள் மட்டும் அதிகம் பார்ப்பதாகவும், உயர் பதவிகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் ஒரு குழுவாக அமைத்து உதவும் கரங்களின் நிர்வாக வேலைகளுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்று தொழில் முறையில் இயங்கும் இக்குழுவைவிட அநாதைகளைக் கடைத்தேற்றும் களப்பணியாளர்களுக்கு முக்கியத்துவம் இருக்க வாய்ப்பில்லை. 1,700 பேர்களுக்கு உணவும் உடையும் கொடுத்துப் பராமரிப்பதற்கான நிறுவன – நிர்வாக வேலைகளின் அவசியம், அதே 1,700 பேர்களின் தனிப்பட்ட வாழ்க்கை – சிந்தனை முன்னேற்றத்தைக் கவனிக்கும் களப்பணி வேலைகளை இரண்டாம்பட்சமாக்கி விடுகிறது.

உதவும் கரங்கள்“மலரும் பூக்கள் அனைத்தும் இறைவனைச் சேர்வதில்லை. அதேபோல எல்லோரும் சேவை செய்ய முன்வருவதில்லை. இது ஒரு தவம் போன்றது” எனத் தொண்டர்களின் பற்றாக்குறையைத் தெரிவிக்கிறார் வித்யாகர். மேலும் முன்பை விட தொண்டர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார். நிறுவன வளர்ச்சிக்கு நேரெதிராக இருக்கிறது தொண்டர்கள் பற்றாக்குறை.

உதவும் கரத்திற்குத் தொண்டு செய்ய விரும்புபவர்கள், முதலில் சிறிது காலம் தங்கிப் பயிற்சி பெற வேண்டும். அதில் அவர்களது விருப்பம் உறுதியானால் தொண்டராக ஏற்கப்படுவார்கள். திருமணம் செய்து கொண்டு நீடிப்பதைப் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. தொண்டர்களின் பொறுப்புக்கேற்றவாறு ஊக்கத்தொகை உண்டு. மொத்தத்தில் தொண்டர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஊதியம் பெறும் ஊழியர்கள் என்ற நிலையை நோக்கி உதவும் கரங்கள் செல்கிறது. அப்படியும், தொண்டர்கள் தேவைப்படும் அளவில் இல்லை.

ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை ஒரு பொதுநலனுக்கு அர்ப்பணிக்க விரும்புவது பிரச்சினையில்லை. ஆனால் அந்த அர்ப்பணிப்பைத் தொடருவதுதான் பிரச்சினை. இங்கே ஒரு தொண்டரைச் சுற்றியிருக்கும் சூழல் என்ன? முடிவேயில்லாத அநாதை அபலைகளின் கண்ணீர்க் கதைகள், கதறல்கள், பொறுமையைச் சோதிக்கும் மனநோயாளிகள், அடுத்தது யாரெனக் காத்திருக்கும் பிண ஊர்தி வண்டி, இடைவெளியே இல்லாத பராமரிப்பு வேலைகள் இன்னபிறச்சூழலில் ஒரு மனிதன் உடைந்து போவதோ, கல்லாகி இறுகுவதோ, விலகிச் செல்வதோ ஆச்சரியமல்ல.

90-களில் ஆரம்பத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்காகக் ‘கருணாலயம்’ கிளையை ஆரம்பித்த போது, பல தொண்டர்கள் முன்வராத நேரத்தில், மதுரையில் அரசு வேலையை ராஜினாமா செய்து தொண்டரான சுந்தரி என்பவர் அந்த எய்ட்ஸ் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டார். அவரே இன்று உதவும் கரத்தில் இல்லை எனில் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு தொண்டர் அவரது அர்ப்பணிப்பை, அவர் மட்டுமே தக்கவைத்துக் கொள்ளப் போராடும் இந்தத் தனி மனித முயற்சி பொதுவில் வெற்றி பெற வாய்ப்பில்லை. மாறாக அவரது அர்ப்பணிப்பு, சமூக நடைமுறை பொறுப்புடன் பிணைக்கப்படும்போதே தொடரவும், போராடவும் இயலும். அநாதைகள் – அபலைகளை இரக்கமின்றி உருவாக்கும் இந்தச் சமூக அமைப்பின் மீது கோபம் கொண்டு போராடும் ஒருவரே அனாதைகளுக்கான தனிப்பட்ட தேவைகளையும் இறுதிவரை செய்ய முடியும். ஆனால் சேவை நிறுவனத் தொண்டர்களுக்கு இந்த வாய்ப்பில்லை என்பதாக தொண்டர்களாக ஆரம்பிக்கும் வாழ்க்கை விரைவில் முடிகிறது அல்லது ஊதியம் பெறும் ஊழியர் வாழ்க்கையாக மாறுகிறது.

வித்யாகரைப் பொறுத்தவரை இந்தத் தொண்டர்களின் சேவையைப் பலரறிய வைப்பதன் மூலமும், பத்திரிக்கை நேர்காணல்கள், விழாக்களில் அறிமுகப்படுத்தியும் உற்சாகப் படுத்துகிறார். இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட அவரை உற்சாகப்படுத்துவது எதுவென்ற கேள்விக்கு ‘குழந்தைகள்’ என்றார். உண்மையில் உதவும் கரங்கள் என்ற நிறுவனமே அவர் பார்த்துப் பராமரித்த குழந்தை என்பதால், அந்தக் குழந்தையை விட்டுவிட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. மற்றபடி தொண்டர்கள் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

சொந்த வாழ்க்கை வாழ முடியாத பல அபலைப் பெண்கள் உதவும் கரத்தில் பராமரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். வருடம் ஒருமுறை வீட்டிற்குச் சென்று வரும் இவர்களுக்கு இங்கே கிடைக்கும் வாழ்க்கைக்கான கைம்மாறாக அவ்வேலைகள் செய்கிறார்கள். இரண்டாவதாக உதவும் கரத்திலேயே வளர்ந்த பெண்கள் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஏனைய பராமரிப்பு வேலைகள், சமையல், கட்டிடங்கள், பொருட்களைச் சுத்தம்செய்வது, துணி துவைப்பது, குழதைகளைப் பராமரிப்பது போன்றவை இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் வயது, உடல்திறன், கல்விக்கேற்ப பிரித்துக் கொடுக்கப்படுகிறது. மேல்சாதி – மேல்தட்டு வர்க்கப் பின்னணி கொண்ட, வீட்டை விட்டு வெளியேறிய முதியவர்கள் சிலரும் அலுவலக, நிர்வாக வேலைகளைச் செய்கிறார்கள். மொத்தத்தில் வேறுவழியின்றி ஆதரவற்றோர் தம்மையே பராமரித்துக் கொள்வதுதான் உதவும் கரத்தின் யதார்த்தம்.

தொண்டர்களின் கதை இதுவென்றால் அங்கிருக்கும் ஆதரவற்றவர்களின் நிலை என்ன? ‘கோகுலத்தில்’ ஆரம்பப் பள்ளி படிக்கும் குழந்தைகள், ‘பாசமலர்களில்’ கைக்குழந்தைகள், ‘மொட்டுகள் மானசா’வில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், ‘தாயகத்தில்’ மனநிலை பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிப் பெண்கள், ‘குட்டி பாப்பாவில்’ எய்ட்ஸ் குழந்தைகள் என ஒவ்வொரு கட்டிடத்திலும் ஒவ்வொரு பிரிவினர் இருக்கின்றனர்.

குழந்தைகள் நம்மைப் பார்த்த உடனேயே எதுவும் கேட்காமல் கை குலுக்கிச் சுய அறிமுகம் செய்துவிட்டுப் போய் விடுகிறார்கள். புரவலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட செயற்கையான பழக்கம் என்பதோடு ஒவ்வொரு நாளும் பலரிடம் செய்ய வேண்டியிருப்பதால் சலிப்பும் இருக்கிறது. அனைவரும் தங்கள் பெயருடன் வித்யாகர் பெயரையும் சேர்த்துச் சொல்கிறார்கள். அப்பா என்று அழைக்கிறார்கள். அப்பா தனக்கு வாங்கிக் கொடுத்த உடை, நகை பற்றி மகிழ்கிறார்கள். இளம் பெண்களோ அப்பா தமக்கு மணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கிறார்கள்.

மற்றபடி இவர்களது வாழ்க்கை….? வசதிகள் நிறைந்த சிறை வாழ்க்கை தான். நாள் முழுவதும் பராமரிப்பு, கல்வி, விளையாட்டு, கைவினைப் பயிற்சி, நாட்டியம் என்றிருந்தாலும் வெளியுலகைப் பார்க்காத, பார்க்க முடியாத ஏக்கம் இருக்கிறது. தங்கள் வாழ்க்கை இதுதான் என்பதையும், புரவலர்கள் மூலமே வாழ்கிறாம் என்பதும் அவர்களுக்குத் தெரிகிறது. பள்ளியில் படிக்கும் ஏனைய குழந்தைகளின் பெற்றோர்களைப் பார்க்கும் உதவும் கரத்தின் குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதும் தெரியாததல்ல. ஆள் ஆரவம் அதிகம் கண்டிராத எய்ட்ஸ் குழந்தைகளோ தங்களைத் தூக்கிக் கொஞ்சுமாறு கண்கள், கைகளால் சாடைகாட்டி வற்புறுத்துகிறார்கள்.

அனாதைகளின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, தன்னம்பிக்கையையும், வாழ முடியும் என்ற உணர்வையும் எப்படித் தருகிறீர்கள் என்றதற்கு, “ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பட்டுப்பாவாடை, ஏதாவது ஒரு நகை பரிசளிக்கிறேன். இதுவரை 25 பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன். இவையெல்லாம் அவர்களுக்கு ஏனையோரைப் போல வாழ முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கும்” என்றார் வித்யாகர்.

காதலும், தாய்மையும் உயிரியல் ரீதியாகவும், குடும்பம், சமூகக்குழுக்கள் உளவியல் ரீதியாகவும் சக மனிதனை நேசிப்பதற்கு அடியெடுத்துக் கொடுக்கின்றன. இவை மறுக்கப்படுவதால்தான் அநாதைகளே உருவாகின்றனர். சேவை நிறுவனங்களின் சூழ்நிலையில் உயிருக்கும் குறைந்த பட்ச வாழ்க்கைக்கும் மட்டுமே அவர்கள் உத்தரவாதம் பெறுகின்றனர். இது காரியவாதம், உதிரித்தனம் கலந்த அடிமைத்தனத்தை உருவாக்குகின்றது. வாழ்வதற்கே அடிக்கடி நன்றிக்கடன் செலுத்த வேண்டியிருக்கும் வாழ்க்கையில் பொதுவான ஆளுமை வளர்வதற்கோ, அர்த்தமுள்ள வாழ்க்கையின் கனவுக்கோ வழியில்லை.

நகை, உடை, திருமணம் போன்றவை கடைத்தெருவை ஆசையுடன் நோக்கும் ஏழைச் சிறுமியின் இயலாமை உணர்வையே அதிகரிக்கும். உதவும் கரங்களை ஒரு பொருட்காட்சியைக் காணச் செல்லும் குதூகலத்துடன் பார்க்க நவீன கார்களில் வந்திறங்கும் மேட்டுக்குடிக் குடும்பமும், அவர்கள் தரும் ஆடம்பர – பழைய துணியும் இல்லத்துப் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அல்ல, தாழ்வுமனப்பான்மையைத்தான் தூண்டி விடுகின்றன.

இதுபோல இந்தியன் ஏர்லைன்ஸ், டி.வி.எஸ், கிளாக்ஸோ, கன்னிமரா – உட்லண்ட்ஸ் ஓட்டல்கள் இன்னபிற நிறுவனங்கள் தங்களது மீந்துபோன உணவை உதவும் கரத்திற்குத் தொடர்ச்சியாக வழங்குகிறார்கள். அன்றாடம் எளிய உணவு உண்ணும் பிள்ளைகள், இவர்களின் ஆடம்பர உணவை அவ்வப்போது ருசிக்கும் போதும் மேற்கண்ட விளைவே ஏற்படும். எனவே எளியோர் வலியோரைச் சார்ந்தும், இறைஞ்சியும் வாழவேண்டும் என்ற யதார்த்தம் வலிமையான ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டத்தை அநாதைகளுக்கு வழங்கி விடாது.

இந்த மறுவாழ்வு கொடுக்கும் பிரச்சினை, பிறவி அபலைகளை விட இடையில் அபலைகளாக மாறியவர்களுக்கு அதிகம். இல்லத்தின் கட்டுப்பாடும், எளிய வாழ்க்கையும், அடிமை மனமும் அவர்களுக்கு உறுத்துகின்றது. பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்த வந்த பெண்கள் இங்கு இருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை பிடிக்காமல், உதவும் கரங்கள் தந்த மறுவாழ்வு வசதிகளை விரும்பாமல் திரும்பிச் சென்றதை வித்யாகரே நினைவு கூர்கிறார்.

இனி உதவும் கரத்திற்கு ஆதரவளிக்கும் புரவலர்களைப் பார்க்கலாம். “எங்களுக்குப் பண உதவி செய்பவரின் நோக்கத்தையோ, பின்னணியையோ மதிப்பீடு செய்ய முடியாது” என்று எச்சரிக்கையுடன் பேசுகிறார் வித்யாகர். ஏற்கெனவே மீந்துபோன உணவு தரும் நிறுவனங்களைப் பார்த்தோம். மேலும் இந்நிறுவனங்களில் பணியாற்றும் உயர் சம்பளப் பிரிவினர் வருமான வரி விலக்கிற்காக உதவும் கரத்திற்கு நன்கொடை தருகின்றனர். சென்னையின் வசதியான நட்சத்திர மருத்துவமனைகள் உதவும் கரங்களின் உறுப்பினர்களுக்காகச் சலுகை விலையில் சிகிச்சையளிக்கின்றன. இதே மருத்துவமனைகள்தான் பெரும்பான்மை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சையை எட்டாத உயரத்தில் வைத்திருக்கின்றன.

சென்னைக்கு வரும் பிரபலங்கள், முக்கியப் புள்ளிகள் தவறாமல் உதவும் கரங்கள் போன்ற இல்லங்களுக்கும் வருவார்கள். “உதவும் கரத்திற்கு வந்து இதயத்தைச் சிலிர்க்க வைக்கும் ஒரு அனுபவம்” என்று ஐஸ்வர்யா ராயின் விளம்பரம் அவர்களின் துண்டறிக்கையில் இருந்தது. உலக அழகிக்கும் உதவும் கரங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட போது, “நான் அவரைக் கூப்பிடவில்லை, உலக அழகியானதும், பெப்சி நிறுவனத்துடன் செய்திருக்கும் ஒப்பந்தப்படி ஒரு அநாதை இல்லத்துக்கு வரவேண்டுமாம். நான் ஒரு நிபந்தனை போட்டேன். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஒரு எய்ட்ஸ் குழந்தையைத் தூக்கி முத்தமிடுவது போல புகைப்படம் எடுக்க வேண்டும். அந்த அம்மா பம்பாயில் தனது மருத்துவர்களுடன் ஆலோசித்து தயக்கத்துடன், அரைகுறை மனதுடன் ஒப்புக் கொணடார்” என்று பிரபலங்களின் கருணையைப் போட்டுடைத்தார் வித்யாகர்.

உதவும் கரங்களுடன் நீண்டு விட்ட நமது பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம். மீண்டும் பழைய காட்சிகள்…. சாகப் போகிறவர்கள் கணக்கு, அரிசி உடனடித் தேவை, ஆடம்பரக் கட்டிடங்கள், ஹலோ அங்கிள் – குழந்தைகள் அறிமுகம், காலைச் சுற்றும் எய்ட்ஸ் குழந்தைகள், ஒரு கட்டிடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த ஊனமுற்ற சிறுமி, அப்பா திருமணம் செய்வார் என்று ஆசையுடன் சொன்ன அந்தப் பெண், வாசனைத் திரவியத்தில் குளித்து வந்த அந்த அமெரிக்க இந்தியக் குடும்பம், சுற்றுலா பாணியில் விவரித்த அந்த உதவியாளர், நேரம் செல்லச் செல்ல உதவும் கரங்களின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்து கொண்ட வித்யாகர்….

வெளியேறினோம். இந்தச் சமூக அமைப்பின் கொடுமைகளுக்குப் பயந்து கொண்டு தாங்களே கட்டிய அந்த மாபெரும் சிறையில் தங்களேயே பிணைத்துக் கொண்டு கைதிகளாக வாழும் அந்தக் குழந்தைகளை, மக்களை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. இந்த மாயச் சிறையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டிய கடமைக்காக ஈரம் கசிந்த கண்கள் மெல்ல மெல்ல சிவக்க ஆரம்பித்தது.

– செய்தியாளர்கள் உதவியுடன் இளநம்பி
______________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2004
______________________________

செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி !

1

டந்த மே 29 அன்று முகேஷ் அம்பானியின் 4 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய ரிலையன்ஸ் நிறுவனம், ராகவ் பால் எனும் தரகு முதலாளிக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்தை வாங்கியுள்ளது.

ராகவ் பால்
ராகவ் பால்

இதன் மூலம் நெட்வொர்க்-18 கட்டுப்பாட்டில் உள்ள பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி சி.என்.என்-ஐ.பி.என், வணிக தொலைக்காட்சி சி.என்.பி.சி-டிவி18, ஃபோர்ப்ஸ் இந்தியா, கலர்ஸ் தொலைக்காட்சி, ஈநாடு குழும தொலைக்காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊடகங்களை நேரடியாக தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் முகேஷ் அம்பானி.

ஊடகங்களை கைப்பற்றும் முகேஷ் அம்பானியின் முயற்சி 2008-லேயே தொடங்கியது. அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்த, ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குகளை சுமார் 2,600 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கியது. ரூபாய் 525 கோடி மதிப்பிடப்பட்டிருந்த ஈநாடு  நிறுவனம், 2007-08ம் நிதியாண்டில் 56.6 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இந்நிறுவனத்தின் பங்குகளைத்தான் ஒரு பங்குக்கு ரூ 5,28,630 விலைக்கு ரிலையன்ஸ் வாங்கியது.

நிறுவனத்தின் மதிப்பீட்டை விட 5 மடங்கு அதிக தொகை கொடுத்து ரிலையன்ஸ் அதை வாங்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், வெளியாகியிருக்கும் இந்த பரிமாற்றத்தோடு வெளியில் தெரியாத பல மறைமுக பரிமாற்றங்கள் இருக்கலாம் என்றும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்று வாசகர்கள் யாருக்காவது தெரிந்தால் அறியத் தாருங்கள்.

இந்த காரணத்தை சொல்லி ஈநாடு நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கிய இந்த பரிமாற்றம், 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் அமலாக்க பிரிவின் விசாரணையின் கீழ் வந்தது.

இந்நிலையில்தான் ரிலையன்ஸ் தன் வசமிருந்த ஈநாடு தொலைக்காட்சியின் பங்குகளை, ராகவ் பாலுக்கு சொந்தமான நெட்வொர்க்-18 நிறுவனத்துக்கு ரூ 2,053 கோடிக்கு விற்று விட்டது. ராகவ் பாலின் ஊடக நிறுவனங்கள் அப்போது நிதி இழப்புகளை சந்தித்து கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ராகவ் பால் நிறுவனங்கள் கடனிலிருந்து மீளவும், ஈநாடு தொலைக்காட்சியில் ரிலையன்சின் பங்குகளை வாங்கவும் கடனுதவியளித்தது இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை. இந்த கடனுக்கு கைமாறாக நெட்வொர்க்-18 மற்றும் டி.வி-18-ன் தகவல் உரிமங்களையும், ஈவு பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய பத்திரங்களையும் பெற்றுக்கொண்டது அந்த அறக்கட்டளை.

ஆனால், அந்த அறக்கட்டளையை இயக்குவது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸேதான். இதன் மூலம் ஈநாடு தொடர்பான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ததோடு நெட்வொர்க்18 குழுமத்தையும் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிலையன்ஸ். நெட்வொர்க்18-ன் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்களில் அம்பானிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கட்டுரைகள், செய்திகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு நிர்ப்பந்தம் கொடுத்தனர். அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்புடைய பல கட்டுரைகள் வெளியிடப்படாமல் கைவிடப்பட்டன.

இந்நிலையில்தான், இண்டிபென்டன்ட் மீடியா அறக்கட்டளை வசம் இருந்த கட்டுப்பாட்டை பயன்படுத்தி நெட்வொர்க் 18-ன் 78% பங்குகளையும், டிவி18-ன் 9% பங்குகளையும் சுமார் 4,000 கோடி ரூபாய்க்கு வாங்கி அந்நிறுவனங்களை ரிலையன்ஸ் தனது நேரடி ஆதிக்கதிதன் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முர்டோசின் ஸ்டார் குழுமத்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஏற்கனவே தனது மறைமுக கட்டுப்பாட்டில் இருந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அம்பானியின் இயற்கை எரிவாயு ஒதுக்கீடு விவகாரத்தை கொண்டு ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், நடப்பது “குரோனி கேப்பிடலிசம்” என்று விமர்சித்திருந்தார். இதை மற்ற ஊடகங்கள் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டு கொண்டிருந்த போது நெட்வொர்க்18 குழும தொலைக்காட்சிகளும் செய்தி என்ற வகையில் வெளியிடத்தான் செய்தன.

ராமோஜி ராவ்
ராமோஜி ராவ்

தனது கட்டுப்பாட்டிலிருக்கும் சேனல்களில், ரிலையன்சுக்கு எதிரான கருத்துகள் இடம் பெறுவதை கூட ரிலையன்ஸ் விரும்பவில்லை. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரங்களையும், விமர்சனங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும், அம்பானி தரப்பு வாதங்களை செய்திகளாகவும், நிகழ்ச்சிகளாகவும் முன் வைக்க வேண்டும் என்றெல்லாம் ரிலையன்ஸ் கோரியிருக்கிறது. ஆனால், அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

எனவே, தனக்குத் தேவையான ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் எந்த ஒரு திரை மறைவு அல்லது ஒளிவு மறைவும் தேவையில்லையென களத்தில் குதித்துவிட்டார் அம்பானி.

நெட்வொர்க் 18-ஐ ரிலையன்ஸ் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து நெட்வொர்க்18-ன் ராகவ் பால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் அனைவரும் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர். சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தலைமை தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அவரது மனைவியும் தொகுப்பாளருமான சகாரிகா கோஷ் இருவரும் வேலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ராஜ்தீப் சர்தேசாய்
ராஜ்தீப் சர்தேசாய்

இனி தமிழ்நாட்டில் ஜெயா டிவி ஜெயலலிதா புகழ் செய்திகளையும், கலைஞர் டிவி கருணாநிதி புகழ் செய்திகளையும் ‘நேர்மையாக’ வழங்குவது போல அம்பானிக்கு சொந்தமான ஊடகங்கள் ரிலையன்சின் புகழ் பரப்பும் நிகழ்ச்சிகளை தயாரித்து இந்தியா முழுவதும் வெளியிடும். மிகவும் திறமையான தொழில்முறை ஊடகவியலாளர்கள் மூலம் அவை விளம்பரம் என்று தெரியாதபடிக்கு பார்வையாளர்களுக்கு கடை விரிக்கப்படும். சி.என்.என்-ஐ.பி.என் அம்பானி சேனல் ஆக செயல்படுவது போல எதிர்காலத்தில் பிற ஊடகங்களும் நேரடி கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் செய்திகள் தமக்குள் போட்டி போடுவதை கண்டு களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படும்.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காகவே கட்டியமைக்கப்பட்ட அரசு அமைப்பிலும் நேரடியாக முதலாளிகளின் நேரடி தலையீடு வளர்ந்து வருவதைப் போல, ஜனநாயகத்தின் 4-வது தூணான ஊடகங்களிலும் கார்ப்பரேட்டுகளின் நேரடி சாம்ராஜ்யங்கள் உருவாகி வருகின்றன.

இந்திய அரசின் பட்ஜெட் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அம்பானியின் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்று விடும் என்பது புது தில்லி பத்திரிகையாளர்களிடம் நிலவும் பிரபலமான பழமொழி. இனி தில்லி பத்திரிகையாளர்கள் எழுதும் செய்தி அம்பானியின் மேசைக்கு சென்று அனுமதி பெற வேண்டும் என்ற புது பழமொழி உருவாக வேண்டும் போலிருக்கிறது!

மேலும் படிக்க

டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்

9

“Most Himalayan villages lie in valleys, where there are small streams, some farmland, and protection from the biting winds than come through the mountain passes in winter. The houses are usually made of large stones and have sloping slate roofs so the heavy monsoon rain can run off easily. During the sunny months, the roofs are often covered with pumpkins, left there to ripen in the sun.”

– Those Three Bears by Ruskin Bond – an excerpt

சமச்சீர் கல்வி
படம் : நன்றி தி ஹிந்து

மேலே நீங்கள் படித்தது தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கான 6-ம் வகுப்பு ஆங்கில பாடநூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதி.

தமிழ்நாட்டில் வாழும் 6-ம் வகுப்பு மாணவி ஒருத்தி இந்த பத்தியை படித்து, உள்வாங்கி அது சொல்ல வருவதை புரிந்து கொள்ளவும், திருப்பி ஒப்பிக்கவும் முடிந்தால் அவளது ஆங்கில அறிவின் தரத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள்? கல்லூரியிலோ, மேல் படிப்பிலோ, எதிர்கால வேலைச் சூழலிலோ ஆங்கிலத்தில் பணி செய்ய அந்த மாணவிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

சமச்சீர் கல்வியில் 6-ம் வகுப்பில் இந்த தரத்திலான ஆங்கில பாடங்களை படிக்கும் மாணவர்களின் ஆங்கில அறிவு நவீன வாழ்க்கைக்கு தேவைப்படுமளவுக்கு இல்லை என்று கவலைப்படுகிறார்கள் லண்டன் தேம்ஸ் நதிக்கரையைச் சேர்ந்த கனவான்கள். இங்கே அவர்கள் தனியார் பள்ளி முதலாளிகளாக அறியப்படுகிறார்கள்.

சென்னை கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான டான் பாஸ்கோ மையம் நடத்திய ஆய்வு சமச்சீர் கல்வி புத்தகங்களில் ஆங்கில பாடத்தின் தரத்தை பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியதாக சொல்கிறது. ஒருவேளை டான் பாஸ்கோ தனது ஆய்வுக்கு தேர்ந்தெடுத்த பெற்றோர் தமது வாரிசுகளை ஷேக்ஸ்பியர் அல்லது ஷெல்லியின் நேரடி வாரிசுகளாக உருவாக்கி ஆங்கில மொழியின் 21-ம் நூற்றாண்டு அமர காவியங்களை படைப்பற்கு தயாரிக்க விரும்புகிறார்கள் போலும்.

டான் பாஸ்கோ
டான் பாஸ்கோ மற்றும் பிற தனியார் கல்வி வியாபாரிகளின் நோக்கம் மாணவர்களை எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு தயாரிப்பதே!

மாணவர்கள், பெற்றோர், பள்ளி தலைவர்கள் என மொத்தம் 344 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதிலும், சுமையை குறைப்பதிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பாராட்டப்பட்டாலும், எதிர்கால போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பதில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை. இதிலிருந்து டான் பாஸ்கோ மற்றும் பிற தனியார் கல்வி வியாபாரிகளின் நோக்கம் மாணவர்களை எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு தயாரிப்பதே என்பது தெளிவாகிறது.

98% பேர், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் மிகவும் சிறந்தது என்று கருத்து தெரிவித்ததாக டான் பாஸ்கோ மையத்தின் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆகிய நாளிதழ்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியானது.

“ஒவ்வொரு பிரிவிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் சிறந்தது என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்கிறார் இந்த ஆய்வை நடத்திய டான் பாஸ்கோ பள்ளியின் ரெக்டரும் செயலருமான ஃபாதர் ஜான் அலெக்சாண்டர். டான் பாஸ்கோ பள்ளி சமீபத்தில் தனது வளாகத்தில் ஒரு சி.பி.எஸ்.ஈ பள்ளியை ஆரம்பித்திருக்கிறது என்பதையும் அதனால், பெற்றோரை அந்த திசையில் திருப்பி விடும் தேவை தமக்கு இருப்பதையும் குறிப்பிட ஃபாதர் வசதியாக மறந்து விட்டிருக்கிறார்.

டான் பாஸ்கோ கலந்துரையாடல்
“சமச்சீர் கல்வி : சமமானதா, நீர்த்து போக வைப்பதா?” – கலந்துரையாடல். டான் பாஸ்கோவின் லாப வேட்டைக்கான விளம்பர தந்திரம்

ஆசிரியர் தரம் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல், கட்டுமானத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தை இணைத்தல், பாடத்திட்டத்தோடு இணைந்த நடவடிக்கைகள், வாழ்க்கையின் பல அம்சங்களுக்கு மாணவர்களை பழக்கப்படுத்துதல், வாழ்க்கை-திறன் பயிற்சி அளித்தல் “இவைதான் தனியார் பள்ளிகளை அரசுப் பள்ளிகளிலிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன” என்று தனது சந்தைப்படுத்தலை வெளிப்படையாக செய்கிறார்.

டான் பாஸ்கோ அல்லது பிற மேட்டுக்குடி தனியார் பள்ளிகளைப் போல மாதத்துக்கு ஒரு நாள் “வில்லேஜ் விசிட்”, அல்லது , “ஸ்லம் விசிட்” என்பதுதான் டான் பாஸ்கோ போன்ற கல்வியாளர்களுக்கு தெரிந்த வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் பன்முகத்தன்மையாம்.

உண்மையில், அரசுப் பள்ளியில் பல்வேறு வர்க்கப் பிரிவு மாணவர்களோடு படிப்பதுதான் ஒரு மாணவனுக்கு வாழ்க்கையின் பன்முகத்தன்மையை உணர்த்தி அவனை சிறந்த சமூக மனிதனாக உருவாக்க முடியும். மற்றபடி ஆசிரியர் தரம்/பொறுப்புணர்வு, பள்ளி உள்கட்டுமானம், தொழில்நுட்பம் போன்றவை போராடும் பெற்றோர் சங்கங்கள் மூலம் அரசு பள்ளிகளிள் சாதிக்கப்படக் கூடியவையே. தனியார் கட்டணக் கொள்ளைதான் அவற்றை சாதிக்கும் என்று பிரச்சாரம் செய்வது மோசடித்தனம், அதை நம்புவது முட்டாள்தனம்.

வாசுதேவாச்சாரியார்
வாசுதேவாச்சாரியார்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்ரீ அகோபில மட ஓரியன்டல் உயர்நிலைப்  பள்ளியின் கௌரவ செயலரும் பொருளாளருமான டாக்டர் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. ஆனால், தினசரி வாழ்ககையில் அது சாத்தியமா?” என்று கேட்டிருக்கிறார். லண்டன் தேம்ஸ் நதிக்கரை கனவான்களின் உள்ளூர் ஏஜெண்டுகளான இவர்கள் கங்கைக் கரை சனாதிகளாவார்கள்.

“சமஸ்கிருத மற்றும் ஆங்கிலக் கல்வி ஒன்றுக்கொன்று சமமானவை இல்லை. அப்படியிருக்க அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று அவர் சந்தேகப்படுகிறார். என்னடா தேம்ஸ் நதிக்கு எதிராக கங்கை முழங்குகிறதே என சந்தேகமா? சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகு ஓரியன்டல் பாடத்திட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது. பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதியினர் ஆங்கிலம் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து, முன்னுக்கு வரவேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்கள். அதேநேரம் இவர்களில் சிலர் அந்த முன்னுக்க்கு வரும் முன்னேற்றத்தின் சித்தாந்தமாக பார்ப்பனியம் இருக்க வேண்டுமென்று போராடுபவர்கள்.

அதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அம்பானியின் இணக்கம். அந்த வகையில் பாரதப்பண்பாட்டின் சம்ஸ்கிருதத்தை புறக்கணிக்கும் சமச்சீர் கல்வி தேவையா என்று சீறுகிறார் இந்த பண்டிதர். சமூக வாழ்க்கையிலேயே சமத்துவத்தை மறுப்பவர்கள் கல்வியில் மட்டும் சமத்துவத்தை ஏற்பார்களா என்ன?

பெருமளவு தனியார் பள்ளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட (ஒரு சில கிராம மற்றும் அரசுப் பள்ளிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன) இந்த ஆய்வில் பெற்றோரின் சுயநலமும் அறியாமை கலந்த மேட்டிமைத்தனமும் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. 75% மாணவர்களும் ஆசிரியர்களும் 75% சமச்சீர் கல்வி சிந்தனையை ஊக்குவிக்கிறது கருத்து கூறியிருக்க, 42% பெற்றோர் அப்படி கருதவில்லையாம்.

இந்த ஆய்வை டான் பாஸ்கோவுடன் இணைந்து நடத்தியது டேலன்ட்-ஈஸ் என்ற திறன் வளர்ச்சி (தனியார்) நிறுவனம். தங்களுடைய வணிக நோக்கத்துக்காக ஒரு ஆய்வை நடத்தி, தங்களது வருமானத்தை பெருக்கும் வகையில் பதில்களைப் பெற்று, அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்தி, அதை நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக கவர் செய்ய வைத்த டான் பாஸ்கோ பள்ளியை கல்வியாளர்கள் என்று சொல்வதா கல்வி மோசடியாளர்கள் என்று சொல்வதா? சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும், பார்ப்பனியத்தின் முகவர்களும் ஒன்றாக குரல் கொடுக்கிறார்கள். சமத்துவம் வேண்டுவோர் இரண்டையும் வீழ்த்த வேண்டும்.

மேலும் படிக்க

இளவரசன் நினைவு நாள் : நத்தம் காலனி மக்கள் மீது அரசு அடக்குமுறை

3

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

702/5, ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
தொடர்பு : 9443260164

வழக்கறிஞர். சி.ராஜு, எம்.ஏ., எம்.எல்., மாநில ஒருங்கிணைப்பாளர்,
வழக்கறிஞர். இரா.ஜானகிராமன், பி.எஸ்ஸி., பி.எல்., மாவட்ட செயலாளர், தருமபுரி.
தொடர்பு 7418534695

தேதி : 30-6-2014

பத்திரிக்கைச் செய்தி

ருமபுரி மாவட்டம் நத்தம் காலனியிலிருந்து 7 பேரை தருமபுரி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஜார்கண்டிலுள்ள நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள், பைப் வெடிகுண்டுகள் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்துள்ளனர்.  இப்படி  ஒரு அபாண்டமான, அப்பட்டமான பொய்வழக்கு போட்டு தலித் மக்களை ஒடுக்கும் போலீசை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டுமெனக் கோருவதுடன், உண்மையில் நடந்தது என்ன என்பதை தமிழக மக்களுக்கு அறியத் தருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

தருமபுரி நத்தம் காலனியில் வரும் 4-7-2014 அன்று சாதிக் கொடுமைக்கு பலியான இளவரசன் நினைவுநாளில் இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி கேட்டு ஊர்த்தலைவர்கள் மனு கொடுத்திருந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் தருமபுரி வட்டம் முழுவதும் 144 தடையுத்திரவு பிறப்பித்தது. நத்தம் காலனி ஊர் தலைவர்கள் கொடுத்த மனுவிற்கு பதிலை எழுத்து பூர்வமாக பெற்று, அனுமதி மறுக்கப்பட்டால் உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டு இளவரசன் இரங்கல் கூட்டத்தை  அமைதியாக நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கு போலீசார் கொடுத்த பரிசுதான் வெடிகுண்டு வழக்கு.

மதிகோன் பாளையம் துணை ஆய்வாளர் சதாசிவம் என்பவர் கொடுத்த புகாரில், குற்றஎண். 122/2014  இ.த.ச.பிரிவுகள் 120B,153A,153AA,U/s 25 1 (a),27 Indian arms Act, Sec4,5, of Explosive substantive act 1908 ஆகிய பிரிவுகளில் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் தற்போது கைது செய்ய பட்டவர்கள்

  1. சந்தோஷ்
  2. அதியமான்
  3. சங்கர்
  4. சக்தி
  5. துரை
  6. அசோக்
  7. திருப்பதி

ஆகியோர். மற்றவர்கள் தனிப்படை அமைத்து தேடபட்டு வருகிறார்கள். இரண்டு வீச்சரிவாள், இரண்டு நாட்டு துப்பாக்கி, மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகியவற்றை இவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக போலீசார் ஜோடித்துள்ளனர்.

இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு நத்தம் காலனி தீ வைப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணமான மதியழகன் என்பவரை தீர்த்து கட்ட இவர்கள் சதியாலோசனை செய்து அதற்காக அரக்கோணம்,சென்னை ஆகிய ஊர்களில் துடி என்ற அமைப்பின் மூலம்  நத்தம், கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய இடங்களில் இருந்து 50 பேர் ஆயுத பயிற்சி, தற்காப்பு பயிற்சி எடுத்துள்ளதாகவும் இதற்காக காளிதாஸ், சந்திரா ஆகியோர் நத்தம் காலனிக்கு அவ்வப்போது வருவார்கள் என ஒப்புதல் வாக்கு மூலமொன்றை எழுதிக் கொண்டு வழக்கை போலீசு வழக்கம் போல் பதிவு செய்துள்ளது.

இளவரசன் நினைவு இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு நத்தம் காலனி சார்பாக போலீசிடம் விண்ணப்பம் கொடுத்த பிறகு, கடந்த 27-6-2014 அன்று மதியம் சுமார் 2 மணிக்கு கிருஷ்ணாபுரம் காவல் நிலைய தனிபிரிவு காவலர் (SBCID) சிங்காரம், நத்தம் காலனியிலிருந்து சந்தோஷ், அதியமான், சங்கர் ஆகியோரை  காவல் நிலையத்திற்கு நயவஞ்சமாக பேசி அழைத்து சென்றுள்ளார். மனு தொடர்பாக பேச வேண்டியிருப்பதாக கூறி அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறார் சிங்காரம். போனவர்கள் வரவில்லை.  எங்கு வைத்திருக்கிறார்கள் எதற்காக அழைத்து செல்லப்பட்டார்கள் என்ற விபரம் ஊர் முக்கியஸ்தர்கள், மற்றும் உறவினர்கள் யாருக்கும் தெரியாது.

அன்று பென்னாகரத்தில் நடந்த விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களின் சாதி மறுப்பு புரட்சிகர திருமணத்திற்கு (மணமகன் வன்னியர் வகுப்பை சேர்ந்தவர், பெண் தலித் வகுப்பை சேர்ந்தவர்) ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். நத்தம் காலனி ஊர்தலைவர் சக்தி மற்றும் சிலரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் வழக்கறிஞர் ராஜுவிடம் (என்னிடம்)  நடந்த விபரத்தை சொல்லி முறையிட்டார்கள். நான் உடனே எஸ்பி. அஸ்ராகர்க்கிடம் செல்பேசியில் பேசியபோது ”நீங்க பேசறது சரியா கேக்கல, செல்ல சரி பண்ணுங்க” என்று கூறி அவர் என்னிடம் பேசுவதை சாதுரியமாக தவிர்த்தார். பிறகு கிருஷ்ணாபுரம் காவல் ஆய்வாளர் காந்தியிடம் பேசினேன். அவர் ”சிங்காரம் என்பவர் எங்கள் காவல்நிலையம்தான், நாங்கள் யாரையும் கைது செய்ய வில்லை, அழைத்து வரவுமில்லை, ஒருவேளை க்யூ பிரிவு போலீசார் யாரும் கைது செய்தார்களா என நான் விசாரித்து சொல்கிறேன்” என்று கூறி வைத்து விட்டார்.

ஊர் தலைவர் சக்தியிடம், “இப்போது காவல் நிலையம் செல்ல வேண்டாம். இரவு 10-30 ஆகிவிட்டது. நாளை காலை நேராக சென்று எஸ்பியிடம் பேசலாம்” என்று கூறிவிட்டு நான் புறப்பட்டேன்.

இரவு 1 மணி சுமார்  தனிப்பிரிவு காவலர் சிங்காரம் ஊர் தலைவர்களிடம் ”மதியம் அழைத்து வந்த மூன்று பேரையும் விசாரித்து விட்டோம். காவல் நிலையத்திற்கு 10 பேர் வந்து கையெழுத்து போட்டு அழைத்து செல்லுங்கள்” என தொலைபேசியில் கூறியிருக்கிறார். சிங்காரம் சொல்வது உண்மையா? என்பதை அறிந்து கொள்ள ஊர் தலைவர்கள் எஸ்.பி.அஸ்ராகர்க்கிடம் செல்லில் பேசியிருக்கின்றனர். “அவரும் ஆமாம், பி.1 போலீஸ் ஸ்டேசன்ல இருக்காங்க. போய் அழைத்து செல்லுங்கள்” என உறுதி படுத்தியிருக்கிறார்.

ரவு சுமார் 2 மணிக்கு  ஊர் தலைவர் சக்தி, துரை, அசோக், ஜெயராமன் இன்னும் பலர் காவல் நிலையம் சென்றிருக்கின்றனர். அதில்தான் “சக்தி, துரை, அசோக் ஆகியோர்களை எஸ்பி.விசாரிக்கனும் சொல்லியிருக்கார். மற்றவங்க ஊருக்கு போகலாம்” என விரட்டி விட்டது காவல் துறை.

மறு நாள் முழுவதும் நத்தம் காலனி மக்கள்  ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கைது செய்யபட்ட ஆறு பேர் எங்கு வைக்கபட்டிருக்கிறார்கள், எதற்காக கைது செய்யபட்டார்கள் என்பதை சொல்ல வேண்டும்” என கேட்டு காத்திருந்தனர்.

மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் ஜானகி ராமன், ராஜு, பாலசுப்ரமணியன் ஆகியோரும் காவல் துறை அதிகாரிகளிடம்   “ பொய் வழக்கு போடுவது என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள். கண்டிப்பா இனி நீங்க விடப்போவதில்லை. என்ன கேசு போட்டிருக்கீங்க, எங்க வைச்சிருக்கீங்க என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். எஸ்பி.அஸ்ராகர்க் நியாயமானவர் என பலர் நம்பியிருந்தனர். அவரும் அப்படித்தான்  என்பதை நிரூபித்து விட்டார்” என்று வாதிட்டனர். மேலும் எஸ்.பியிடமும் போனில் தொடர்பு கொண்டனர். “நான் மீட்டிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுகிறேன்” என அவர் தொடர்பை துண்டித்தார்.

நத்தம் காலனியில் இருந்து யார் பேசினாலும் இதே நிலைதான். மாவட்ட ஆட்சியரும் எஸ்பியும் மாலை சந்திக்கிறேன் என சொல்லியதை நம்பி மாலை வரை அமர்ந்து இருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் அடைக்க பட்டார்கள் என்ற செய்தியை தெரிந்து கொண்டு கதறி அழுதனர்.

கைது செய்யபட்ட பொடா துரையின் மனைவி செல்வி கூறியபோது,  “28-6-2014 விடியற்காலை 4 மணி சுமார்  எஸ்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பொடா  துரை என்பவரை பின்புறம் கைவிலங்கிட்டு நத்தம் காலனியில் உள்ள அவர் வீட்டுக்கு அழைத்து வந்து தூங்கிய மனைவி மக்களை எழுப்பி அரிசி, பருப்பு, துணி மணி, சாமன் செட்டு என சிறிய சேமிப்புகளை கூட எட்டி உதைத்து துவம்சம் செய்து வீட்டில் இருந்த துரையின் மகள், மனைவி ஆகியோரை கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டியது. துரையை அவர்கள் கண்முன்னே போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இளவரசன் சமாதி அருகில் உள்ள நிலத்திற்கு அழைத்து சென்றனர். துரையின் மனைவியை பார்த்து எங்கே உன் மகன் என மிரட்டினர்.  அய்யா அவன் சின்ன பையன் அவன ஒன்னும் பண்ணிடாதீங்க என காவல்துறை அதிகாரியின் காலை பிடித்துக் கொண்டு அவர் கதறினார். இரங்கல் கூட்டமா நடத்துறீங்க உங்களை எப்படி அடக்குறது என தெரியும் என போலீசார் எச்சரித்தனர். காலனி மக்கள் கூட ஆரம்பிக்கவே போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றனர்”.

அடிக்கடி தருமபுரியில்  போடப்படும் 144 தடையுத்திரவால் எந்த மக்கள் பிரச்சினைக்கும் கூட்டம் போட்டு பேச முடியாத சூழல் ஒரு புறம், நத்தம் காலனியில் இளவரசனுக்கு இரங்கல் கூட்டம் நடத்த முயன்றால் வெடிகுண்டு வழக்கு போன்ற பொய் வழக்குகள் இன்னொரு புறம் என நத்தம் காலனி தலித் மக்கள் ஒடுக்கபடுகின்றனர். ஆதிக்க சாதியினர் நடத்திய அடக்கு முறைகளை, அரசு வேறு வடிவில் நத்தம் காலனி மக்கள் மீது தொடர்கிறது.

வழக்கமாக ஜெயலலிதா அரசை விமரிசித்து அறிக்கை விடும் பா.ம.க தலைவர் ராமதாசு, தற்போது, போலீசு போட்டிருக்கும் இந்தப் பொய்வழக்கைப் பாராட்டி அறிக்கை விட்டிருப்பதிலிருந்து, சாதி அமைப்புகளுடன் தருமபுரி மாவட்ட போலீசு கூட்டணி அமைத்திருக்கிறது என்று தெரியவருகிறது. இடதுசாரி, பெரியார், அம்பேத்கர் கொள்கையில் பற்று கொண்ட எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கைது செய்யப்பட்டவர்கள்  அனைவரையும் அரசு விடுவிக்க வேண்டும். இளவரசன் முதலாம் நினைவுநாள் கூட்டத்திற்கு அனுமதி அளிப்பதுடன் அதில் கலந்து கொள்ள யாருக்கும் எந்த தடையும் காவல் துறை விதிக்க கூடாது என்றும் கோருகிறோம்.

இப்படிக்கு

சி.ராஜு
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

சென்னை போரூர் கட்டிட விபத்து – புகைப்படங்கள்

12

சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

டந்த சனிக்கிழமை (ஜூன் 27, 2014) சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில்    இதுவரை 17 தொழிலாளிகள் பலியாகியிருக்கின்றனர்.  100-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.  தப்பிப் பிழைத்தவர்களும் தமது சொற்ப உடமைகளை கட்டிட இடிபாடுகளில் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக விடப்பட்டுள்ளனர். புதையுண்டவர்களின் உறவினர்களோ என்ன ஏது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.  வினவு செய்தியாளர் குழு நேரில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில :

இடிந்து விழுந்த கட்டிட வளாகத்தின் நுழைவாயில்
இடிந்து விழுந்த கட்டிட வளாகத்தின் நுழைவாயில்
கட்டிட இடிபாடுகள்
கட்டிட இடிபாடுகள் பக்கத்து வீட்டில் விழுந்து அந்த வீட்டில் வசித்த ஒருவர் உயிரிழந்தார்.
தமிழ் செல்வன்
மதுரை திடீர் நகரைச் சேர்ந்த தமிழ் செல்வன் – கட்டிட இடிபாடுகளில் சிக்கி தப்பித்து வெளி வந்தவர்
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்
கணவரை இழந்த பெண்
கட்டிட வேலைக்குச் சென்ற கணவரை தேடும் போரூரைச் சேர்ந்த சாந்தி
அடையாள தேடல்
உள்ளே சிக்கிக் கொண்டவர்களின் புகைப்படங்களை அதிகாரிகளிடம் காட்டி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடும் உறவினர்கள்.
building-collapse-victim-13
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய விருதுநகர் பர்மாகாலனியைச் சேர்ந்த முகமது ஹாசனைத் தேடி அலையும் அவரது தந்தை
தொழிலாளர்கள்
விடை தெரியாத கேள்விகளுடன் தொழிலாளர்கள்
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி – இடிந்தது தனியார் நுகர்வு வெறிக்கான கட்டிடமானாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுப்பது அரசுப் பள்ளிதான்.
தங்குமிடம்
கிராமத்தில் வாழ்க்கை பறிக்கப்பட்டு, வசிப்பிடமாக இருந்த கட்டப்பட்டு வந்த கட்டிடமும் இடிந்து நொறுங்கிய பிறகு கிடைத்திருக்கும் புகலிடத்தின் லட்சணம்.
தொண்டு நிறுவன வல்லூறுகள்
தொண்டு நிறுவனத்தின் சின்னத்தோடு, புகைப்படக்காரர்களை கூடவே அழைத்து வந்து சாவு வீட்டிலும் விளம்பரம் தேடும் சென்னையைச் சேர்ந்த “உங்களுக்காக” தொண்டு நிறுவனம்.
பத்திரிகையாளர்
பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள்
ஃபிளாஷ் ஃபோட்டோ
நள்ளிரவில் கதறி அழும் தொழிலாளர்கள்.
நெல்லூர் சப்கலெக்டர்
தெலுங்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் – நெல்லூரிலிருந்து வந்த சப்-கலெக்டர் பெண்மணி
கட்டிட விபத்து பிக்னிக்
இடிந்த கட்டிடத்தை வேடிக்கை பார்க்க குழந்தைகளோடு வந்திருப்பவர்கள்.
வி.ஐ.பிக்கள் கார் ஊர்வலம்
வி.ஐ.பிக்கள் கார் ஊர்வலம்

சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

34

அந்த மனிதர் ஐம்பதுகளின் இறுதியில் இருந்தார். அவர் அணிந்திருந்த போலீசு சீருடை கசங்கிப் போயிருந்தது. மருட்சியான முகத்தோடு தீயணைப்பு வண்டி ஒன்றின் பின்னே குழாயைப் பற்றியவாறு தளர்வாகச் சரிந்திருந்தார். நாங்கள் மவுலிவாக்கத்தில் இருந்தோம். அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த சில மணி நேரங்களிலேயே வினவின் செய்தியாளர் குழு மவுலிவாக்கத்தை அடைந்திருந்தது. இந்தி தெரிந்த எமது தோழர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்களைத் தேடிச் சென்றிருந்தார்.

மற்றவர்கள் இடிந்து போன கட்டிடத்தை நெருங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்தக் காவலரை கட்டிடத்திற்கு சற்று அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் பின், அரையிருளில் கண்டோம்.

“சார் உள்ளே எத்தனை பேர் இன்னும் மாட்டியிருக்காங்க?”

“தெரியலை தம்பி. ச்சே… எத்தினி ரத்தம்…இப்டி அநியாயமா சாவறதுக்காகவா இங்க வரணும். வாரம் பூரா கஷ்டப்பட்டு ஒழச்சிட்டு இன்னிக்கு பார்த்து கூலி வாங்க வந்திருக்காங்கபா… ச்சை என்ன மனுச வாழ்க்கை பாத்தியா” வறண்டு போய் கட்டிக் கொண்ட தொண்டையிலிருந்து வீசும் காற்றை எதிர் கொள்ள முடியாத திணறலுடன் வெளிப்பட்டது அவர் குரல். அதிர்ச்சியிலிருந்து மற்றவர்களைப் போல, எங்களைப் போல அவரும் மீளவில்லை.

”நீங்க உள்ளே இருந்தீங்களா?”

”ஆமாப்பா.. கண்ணால பார்க்க முடியலை. அதான் வந்துட்டேன்”

“எங்களை இடிந்த கட்டிடத்தின் கிட்டக்க எப்படியாவது கொண்டு போக முடியுமா?” கண நேரம் அவரது முகத்தில் ‘போலீசு’ தோரணை எட்டிப் பார்த்து விட்டு அகன்றது.

“அது முடியாதுப்பா.. எத்தினி ப்ரொட்டக்சன் போட்டிருக்கு பார்த்தீங்கள்ல? என் வயசுக்கு என்னாலேயே உள்ளெ சமாளிக்க முடியலை. நீயெல்லாம் பார்த்தா சின்ன வயசுக்காரனா இருக்கே. உனக்கு எதுக்குப்பா இந்த வேலை. போய்டு”

இடிந்து விழுந்த கட்டிடம்
இடிந்து விழுந்த கட்டிடம்

இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும் வயதிலிருந்த அவர் ஏராளமான மரணங்களை சந்தித்திருக்க கூடும். கொல்லப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள், தற்கொலைகள் என்று எதிர்பாராத மரணங்களும், எண்ணிறந்த சாவின் வகைகளும் அவருக்குப் புதிதல்ல. என்றாலும், மவுலிவாக்கத்தில் சனி இரவு நடந்த சம்பவம் அவரை, அவரது முழு வாழ்க்கை பணியை சுனாமி போல புரட்டிப் போட்டிருந்தது.

***************************************************

”அன்னி போயிந்தி சார்… அன்னி போயிந்தி.. மா பிள்ளாலு.. மாயெம்மா..” அழுது அழுது புண்ணாகிப் போன தொண்டையில் இருந்து கரகரப்பாக வெளிப்பட்ட அந்தக் குரலில் எந்த நம்பிக்கையும் இல்லை: அழுகையும் ஆற்றலின்றி வற்றிப் போயிருந்தது. அவர் பெயர் சஞ்சீவ ரெட்டி. ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாற்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். ஊரில் விவசாயம் பொய்த்துப் போய் பிழைக்க வழியற்றுப் போன நிலையில் உள்ளூர் ’ஆள் பிடிக்கும்’ காண்டிராக்டர் ஒருவர் மூலம் சென்னையில் கட்டுமானத் துறையில் வேலைகள் இருப்பதைக் கேள்விப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தவர் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து விட்டு ஓராண்டுக்கும் மேலாக இந்தக் கட்டிடத்தில் வேலை பார்த்து வருகிறார். மழலையாக தமிழ் பேசுகிறார்.

இடிந்து போன கட்டிடத்தின் காண்டிராக்டர், கட்டுமானப் பணிக்கு கூலியாட்களை அமர்த்தும் வேலையை இன்னொரு காண்டிராக்டருக்கு விட்டிருக்கிறார். அவர் வடமாநிலங்களிலும், ஆந்திரம், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் ’ஆள் பிடிக்கும்’ காண்டிராக்டர்கள் நெட்வொர்க் ஒன்றுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார். ‘இத்தனை உருப்படிகள் தேவை’ என்கிற தகவல் இங்கிருந்து போகும். அங்கே ’ஆள்பிடிக்கும்’ காண்டிராக்டர்களுக்கு ஆட்களைப் பிடித்து அனுப்புவதில் பெரிய சிக்கல்கள் இல்லை. உள்ளூரில் விவசாயம் முற்றாக பொய்த்துப் போன நிலையில் எந்த வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு வெளியூருக்குக் கிளம்ப மக்கள் குடும்பம் குடும்பமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது நொறுங்கிப் போய்க் கிடக்கும் கட்டிடத்தில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் சஞ்சீவ ரெட்டியின் தினக் கூலி 700 ரூபாய். ஆனால், அது மூன்று கைகள் மாறி இவருக்குக் கிடைக்கும் போது 500 ரூபாயாக சுருங்கி விடுகிறது. சில வருடங்கள் வேலை பார்த்து சம்பாதித்த காசில் ஊரில் செத்துப் போன விவசாயத்திற்கு எப்படியாவது உயிரூட்டி விடலாம் என்கிற கனவில் மொத்த குடும்பத்தையும் இங்கே சித்தாள் வேலைக்காக அழைத்து வந்துள்ளார். மனைவியும் இரண்டு பிள்ளைகளும் கூலியை பெற்றுக் கொள்ள கீழ்தளத்தில் காத்திருந்த அதே சமயம் இவர் மேல் தளம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சஞ்சீவ ரெட்டியின் மொத்த குடும்பமும் இப்போது பூமிக்கடியில். கொத்தடிமை வாழ்க்கையினூடாக அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைத்துவிடும் என்ற கனவு – இதையெல்லாம் கனவாக விளிக்க முடியுமா – நொறுங்கிய கட்டிடத்தின் ஏதோ ஒரு மூலையில் உறைந்திருக்கும்.

அவரது காலில் அரை அடி நீளத்திற்கு வெட்டுக்காயம் இருந்தது அதிலிருந்து ரத்தம் வழிந்து உறைந்து போயிருந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த போது காங்க்ரீட் தூணிலிருந்த கம்பி வெட்டியதாகச் சொல்கிறார். இப்போது தீர்ந்து போன அழுகை திடீரென்று பெருக்கெடுத்து குமுறலோடு கொட்டத் துவங்கியிருந்தது. இந்த வெள்ளப் பெருக்கில் நாங்களும் அடித்துச் செல்லப்பட்டோம். ஒரு மனிதனின் நிர்க்கதியான அவலத்தை நேருக்கு நேர் சந்திக்கின்ற தருணங்களில் ஒரு செய்தியாளனுக்குரிய விழிப்பு நிலையெல்லாம் இங்கே செல்லுபடியாவதில்லை.

இடது கையால் அடிவயிற்றை தட்டிக் காண்பித்துக் கொண்டே வலது கையால் சாப்பிடுவது போல் சைகை செய்கிறார். ‘எல்லாம் இந்த வயித்துக்காகத் தான் நடந்தது’ என்பதை சைகையால் உணர்த்துகிறார். வயிற்றுப் பாட்டை குறிக்கும் இந்த படிமம் அசட்டுக் கவிஞர்களின் தேய் வழக்காக செல்வாக்கிழந்திருந்தாலும் உயிருடன் வதைபடும் நேரத்தில் அது கூறும் பொருள் பொதிந்த குறியீட்டை விளக்குவதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை. இதயம் துளைக்கும் கவிதைகள் இப்படித்தான் கவனிப்பாரற்று இறைந்து கிடக்கிறது. மனைவியின் பெயரைச் சொல்லி ‘உன்னைக் கொன்று விட்டேனே பாவி’ என்று அரற்றுகிறார். ஆனால் கொன்றது அவரா? பழியும் பாவமும் அவருக்குரியதா?

***************************************************

நாங்கள் கட்டிடத்தின் நேர் எதிரே சாலைக்கு எதிர்புறம் நின்றிருந்தோம். மூடப்பட்ட கடை ஒன்றின் முன்புறமாக தள்ளாடிக் கொண்டிருந்த தகரக் கூரையின் கீழ் பத்துக்குப் பத்து இடத்தில் சுமார் ஐம்பது பேர்கள் வரை ஒடுங்கிக் கிடந்தார்கள். இவர்களெல்லாம் நொறுங்கிக் கிடக்கும் கட்டிடத்தின் கீழ் மாட்டிக் கொண்டிருப்பவர்களின் நெருங்கிய உறவினர்கள். செய்தி கேட்டு சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பதறி ஓடி வந்தவர்கள். அவர்களும் இந்த நகரின் மர்மமான கட்டிடங்களை கட்டுவதற்கு விதிக்கப்பட்ட அடிமைகள்தான். எல்லோரும் அடர்த்தியான தெலுங்கு பேசுகிறார்கள்.

அவர்கள் பேசிய மொழி எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் பேசிய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. ஆனாலும் எங்களுக்குள் அது தடை போடுவதாக இல்லை. துயரத்தின் மொழியை பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் மொழியியலின் ஆய்வுக்குரிய பேச்சு மொழிகள் நிபந்தனை அல்ல.

சஞ்சீவ ரெட்டி எங்களோடு பேசிக் கொண்டிருந்த போது வயதான ஒருவர் நெருங்கி வந்தார். அவர் கண்கள் ஈரக்கசிவுடன் வெறிச்சோடி இருந்தன. சஞ்சீவ ரெட்டியின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தார் ஒரு உள்ளூர்வாசி பெரியவர். தமிழில் பேசினார்.

”யோவ் ரெட்டி.. அந்த ஆண்டவன் கைவிட மாட்டான்யா. உன் பிள்ளைங்களுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் ஆயிருக்காதுய்யா. போலீசு போயிருக்கில்லே உயிரோட கொண்டாந்திருவாங்க பாரு”

சஞ்சீவ ரெட்டியின் உடல் குலுங்கத் துவங்கியது. அந்தப் பெரியவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வாயில் எச்சில் வடிய மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினார்.

பெரியவர் நம்மிடம், “நீங்க என்ன பத்திரிகையா சார்? நான் இங்க ஓட்டல்ல சர்வரா வேலை பாக்கறேன் சார். நாலரைக்கு பில்டிங் நொறுங்கிரிச்சி சார். அப்பலேர்ந்து இங்க தான் இருக்கேன். போலீசு அஞ்சி மணிக்கு மேல வந்திச்சி. மொதல்ல வந்த போலீசு டிராபிக்கை தான் பாத்தாங்க. அப்பால ஆறு மணிக்குத் தான் தண்ணி பீச்சி அடிக்கிற வண்டி வந்திச்சி. நாங்க கொஞ்ச பேரு சேர்ந்து எங்க கண்ணுக்குத் தெரிஞ்சவங்களை வெளியே இட்டாந்துட்டோம் சார். அப்பலேர்ந்து எல்லாரும் இங்க தான் இருக்காங்க ஒருத்தரும் பச்சைத் தண்ணி கூட குடிக்கலை சார்” என்றார்.

ஆந்திரத்திலிருந்து விரட்டப்பட்ட கட்டிடத் தொழிலாளியின் துயரத்தை சுமப்பதற்கு தமிழ் தொழிலாளிகள் யாரும் கேட்டுக் கொள்ளாமலே இங்கே ஓடி வந்திருந்தார்கள். ஆனால் அவர்களை இனவெறி சார்ந்து பிரிப்பதற்கு துடிக்கும் இனவாதிகளுக்கு இந்த தொழிலாளி வர்க்க தோழமை ஒரு விசயமல்ல.

நாங்கள் சஞ்சீவ ரெட்டியிடம் திரும்பினோம் “அண்ணா எதாவது சாப்பிட குடிக்க வாங்கி வரவா?” என்றோம்.

“அய்யோ… மன சாப்பாடு… உயிரு… அன்னி லோப்பல்லே உந்தி பாபு…” என்று கதறியழத் துவங்கினார். அவரது துயரத்தை குறைக்க அந்த ஓட்டல் தொழிலாளி கொடுத்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், முயற்சிகள் எங்களிடம் இல்லையோ? சாவின் கோட்டைக்குள் முழு குடும்பத்தை பறிகொடுத்தவரிடம் சாப்பிடக் கேட்பது சரியல்லதான். என்றாலும் அவரது துயரத்தை பின் தொடரும் தோழமைகளில் போலிஸ்காரர், ஓட்டல் தொழிலாளி, கடைக்காரர்கள், குடியிருப்பு மக்கள், தோழர்கள் பலரும் உண்டு. இந்த சமூகக்கூட்டிணைவு சஞ்சீவ் ரெட்டியின் இழப்பை மீட்டு வராமல் போகலாம்: இருக்கும் வாழ்க்கைக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்குமா, அதுவும் அத்தனை நிச்சயமில்லை. ஒரு தனிமனிதனை தவிக்க விடும் இந்த சமூக அமைப்பிலிருந்து மீட்பு வழிகளுக்கு இடமெங்கே?

***************************************************

நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது. தகரக் கூரையின் கீழ் ஒடுங்கி இருந்தவர்களின் அழுகுரல் மெல்ல மெல்ல தேய்ந்து உறைந்து போயிருந்தது. உணர்ச்சிகள் மரத்துப் போன நிலையில் உள்ளே மாட்டிக் கொண்டிருந்த தமது உறவினர்களின் பெயர்களை மாத்திரம் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தனர். சிலர் தளர்ந்து போய் சரிந்திருந்தனர். யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

மீட்கப்பட்ட பிணங்களை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியானது. மருத்துவமனை நிலவரத்தை அறியச் சென்ற எமது தோழர் அங்கே எந்த அனக்கமும் இல்லை என்றார்.

அங்கே நிலவிய சூழலை எப்படி விவரிப்பது என்றே புரியவில்லை. அந்த மக்களுக்கு மொழி தெரியாது என்பதோடு இது போன்ற சந்தர்ப்பங்களில் யாரிடம் போய் என்ன கேட்பது என்கிற விவரங்களும் தெரியவில்லை. அதிகாரிகளும் மக்களை அண்டவிடாமல் தடுப்பது எப்படி என்பதைக் குறித்து மட்டுமே கவலை கொண்டவர்களாக நடந்து கொண்டனர். இவர்களிடம் தகவல் தெரிவிக்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எதிர்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தால் அவர்களுக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அதற்குள், இத்தனை பிணங்கள் வந்தது அத்தனை பிணங்களைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்பது போன்ற செவிவழி வதந்திகள் அவ்வப் போது பரவிக் கொண்டிருந்தன.

கதறி அழும் கட்டிடத் தொழிலாளி
கதறி அழும் கட்டிடத் தொழிலாளி

நமக்குப் பிரியமானவர்கள் மரணத்தைத் தழுவி நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் தருணங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், தங்கள் ரத்த சொந்தங்களின் நிலை என்னவானது என்று கூட தெரியாமல் என்ன செய்யதென்றும் யாரிடம் கேட்பதென்றும் தெரியாமல் கையறு நிலையில் அல்லாடிக் கொண்டிந்த அந்த மக்களின் பரிதவிப்பு இதயத்தைப் பிசைவதாக இருந்தது.

திடீர் திடீரென்று ஆம்புலன்ஸ் வேன்கள் காதை கிழிக்கும் சப்தத்தோடு விரைந்தன. ஒவ்வொரு முறை ஆம்புலன்சுகள் விரையும் போதும், தகரக் கூரையின் கீழ் இருந்தவர்களிடம் இருந்து பெரும் குரலில் ஒப்பாரிச் சத்தம் வீறிட்டது. உள்ளே மாட்டியிருந்தவர்களின் செல்போன் எண்களை வெளியே இருந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தனர். அந்த அழைப்புகள் எல்லாம் எதிமுனையில் பதிலின்றி அணைந்து போய்க் கொண்டேயிருந்தன.

சிலர் அழுத களைப்பாலும் பசியாலும் சுருண்டு விட்டனர். நாங்கள் அருகாமையில் காவல் துறை அமைத்திருந்த தற்காலிக கட்டுப்பாட்டு அறையில், அறிவிப்புகள் செய்து கொண்டிருந்த அதிகாரியை அணுகினோம்.

“சார், இவங்க ஏதும் சாப்பிடலை. பக்கத்தில கடைகளும் இல்லை. நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னே சாப்பாட்டு பார்சல் வந்திருக்குன்னு அறிவிப்பு வெளியிட்டீங்களே, இவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா” என்று கேட்டோம்.

”ஹல்லோ.. யாரு நீ. இங்கே என்ன பண்ணிகிட்டு இருக்கே? அந்த பார்சல் எல்லாம் இங்கே ட்யூட்டியில் இருக்கிறவங்களுக்கு வந்தது. உனக்கு அக்கறைன்னா நீயே எதாவது பார்த்து செய்துக்கோ” என்று விரைப்புக் காட்டினார். இதுதான் கட்டுப்பாட்டு அறையின் ‘கருணை’ என்றால் சஞ்சீவி ரெட்டிகள் இன்னும் பல நாட்கள் அழவேண்டியிருக்கும்; அழுவார்கள்.

காவல்துறையின் ‘கருணை’ அறை சூட்டை சகிக்காமல் வெளியேறிய போது இந்த சமூகத்தை என்றாவது கட்டுப்படுத்தக் கூடிய மக்கள் தமது வேலைகளை யாரும் சொல்லாமலே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அக்கம் பக்கதிலிருந்த உள்ளூர்வாசிகள் சிலர் ரொட்டிகள் கொண்டு வந்தனர். தொழிலாளர்களில் சிலரே தங்களுக்குள் இருந்த பணத்தை சேகரித்து பழச்சாறு வாங்கி வந்திருந்தனர்.

தொழிலாளர்கள் சிலர் தங்களுக்குள் ஒழுங்குபடுத்திக் கொண்டு நிலவரத்தை எதிர் கொள்ளும் தயாரிப்பில் இருந்தனர். அதில் சிறீகாகுளத்தை அடுத்த மோதுகவலசா என்கிற கிராமத்தைச் சேர்ந்த திலீஷ்வர் ஓரளவு தமிழ் பேசினார். திலீஷ்வர் 26 வயதான இளைஞர். கடந்த பதினோரு ஆண்டுகளாக சென்னையில் தான் இருக்கிறார். சென்னையைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் கட்டுமான கூலியாக வேலை பார்த்து விட்டு தற்போது நொறுங்கிய கட்டிடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

சம்பவம் நடந்த சமயத்தில் அருகாமை கட்டிடத்தின் உள்ளே திலீஷ்வர் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது கூலி வாங்குவதற்காக நொறுங்கிப் போன கட்டிடத்தின் தரைத்தளத்திற்கு தனது அண்ணனும் அண்ணியும் சென்றார்கள் என்றார். கட்டிடம் இடிந்தது குறித்து அவரிடம் கேட்டோம்.

”அப்போ நாலரைக்கு மேல இருக்கும் சார். திடீர்னு இரும்பு உடையறா மாதிரி சத்தம் கேட்டது. நாங்க நின்ன கட்டிடம் லேசா அதிர்ந்த மாதிரி இருந்தது. வெளியே எட்டிப் பார்த்தோம். பக்கத்தில எங்க அண்ணனும் அண்ணியும் இருந்த கட்டிடம் அப்படியே கீழே இறங்கி நொறுங்கிப் போச்சு சார். இப்ப அண்ணும் அண்ணியும் அதுக்கு கீழ தான் மாட்டிக் கிடக்கிறாங்க சார். யார்ட்ட எல்லாமோ கேட்டுப் பாத்தேன் சார் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க” என்றார்.

கட்டிடத்தின் உள்ளே எத்தனை பேர் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டோம்.

“கூலி வாங்க போனவங்க மட்டும் எப்படியும் நூறு பேருக்கு மேல இருக்கணும் சார். அது தவிற சிலர் அதே கட்டிடத்தில் வேலை பார்த்துகிட்டும் இருந்தாங்க சார்”

“இந்த கட்டிடங்களில் வேலை செய்கிறவர்கள் எல்லாம் எங்கே தங்குகிறீர்கள்?”

“இதோ இப்ப இடிஞ்சி போயிருக்கே.. இதே கட்டிடத்தோட கிரவுண்ட் புளோரில தார்பாய் கட்டி அங்கேயே தான் தங்கியிருப்போம். ரெண்டு கட்டிடத்திலயும் சேர்த்து முன்னூறு பேருக்கு மேல வேலை செய்யறோம் சார். சாயந்திரம் வந்த மழை நைட்டு வந்திருந்தா மொத்தமா எல்லோரும் குளோஸ் ஆயிருப்போம் சார்” என்றார்.

திலீஷ்வருக்கு ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. பக்கத்தில் பெரிய அணைக்கட்டு ஒன்றைக் கட்டுவதற்காக அவரது விவசாய நிலத்தை பறித்திருக்கிறார்கள். அந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டும் நம்பியே வாழ்ந்தவர்கள். எல்லா விவசாய நிலமும் பறிபோன பின், மக்கள் அங்கே வாழ வழியின்றி நகரங்களுக்கு அத்துக் கூலிகளாய் போய் விட்டனர். அந்த ஒரு கிராமத்தில் இருந்து மட்டும் சுமார் 40 பேர் இந்தக் கட்டிடத்தில் கூலி வேலைக்காக வந்து அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.

***************************************************

நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. மக்கள் சாரி சாரியாக வேடிக்கை பார்க்க வந்து குவிந்தவாறே இருந்தனர்.

நாங்கள் எப்படியும் கட்டிடத்தை அடையும் வழியைக் கண்டுபிடிக்க சந்து பொந்துகளில் நுழைந்து அதன் பின்பகுதியை அடைந்தோம். இங்கும் வழியில்லை. இடிந்து விழுந்த இடத்தை காவல்துறை சுற்றி வளைத்திருந்தது. அவர்கள் அறியாமல் உள்ளே நுழைவது சாத்தியமில்லை.

கட்டிடத்தின் பின்பகுதியில் சற்றுத் தொலைவாக இருந்த குடியிருப்புப் பகுதியில் ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாகத் திரண்டிருந்தனர். எல்லோரின் முகங்களில் மரண பீதி. நொறுங்கிய கட்டிடமானது ஒரே கட்டுமான அமைப்பின் இரட்டை கோபுரத்தில் ஒன்று. அதற்கு மிக நெருக்கமாக இன்னொரு பதினோரு அடுக்கு கட்டிடம் நின்று கொண்டிருக்கிறது. மழையால் நெகிழ்ந்து போன மண்ணில் இந்தக் கட்டிடமும் இரண்டு அடி ஆழத்துக்கு உள்ளே இறங்கி விட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். எந்த நேரமும் இரண்டாவது கட்டிடம் விழலாம், விழுந்தால் தங்களது வீடுகளும் நொறுங்கிப் போகலாம் என்கிற அச்சம் அவர்களிடம் நிலவியது.

திலீஷ்வர்
திலீஷ்வர்

“இந்த இடமே ஒரு காலத்துல கழனி சார். போரூர் ஏரி இருக்கில்லே… அதோட தொடர்ச்சியா இதே இடத்துல ஒரு ரெட்டேரி இருந்தது, தாமரைக்குளம்னு சொல்லுங்க. பின்னே அதுக்கு தண்ணி வர்ற வழியெல்லாம் அடைஞ்சி கொஞ்சம் கொஞ்சமா ஏரி புறம்போக்கு நிலமாச்சு. அதுக்கு பக்கத்துல அம்பேத்கர் நகர்னு ஒரு சின்ன சேரி இருந்தது. அப்புறம் சில வருசத்துக்கு முன்னே அதை ஆக்கிரமிப்புன்னு சொல்லி விரட்டி அடிச்சாங்க. அதுக்கு பக்கத்திலேயேதான் இந்த இடம். இதுக்கெல்லாம் எங்கே யார்கிட்டே அனுமதி வாங்கினான், எதுவுமே தெரியலை சார். ஆனா, பெரியளவுல அரசியல் செல்வாக்கு உள்ளவங்க மாதிரி தெரியுது. ஏரி மண்ணுக்கு மேலே எப்படி பதினோரு அடுக்கு மாடி கட்டினான்..” நடுத்தர வயது மனிதர் ஒருவர் படபடத்தார்.

ஐ.டி நிறுவனத்தைச் சேர்ந்த குரு பிரசாத் அந்த கூட்டத்தில் இருந்தார். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் குருபிரசாத் தனது குடும்பத்தோடு கிண்டியில் தங்கி இருக்கிறார்.

“ஆறு மணிக்கு வாட்ஸப்லே ப்ரெண்டு மெசேஜ் பண்ணான் பாஸ். ரியலி ஷாக்ட் யு நோ. இதே அபார்ட்மெண்ட்லே தான் ப்ளாட் வாங்க ப்ளான் இருந்தது. கார்பெட் ஏரியா தௌசண்ட் ப்ளஸ் ஸ்கொயர் பீட் சொன்னான். நானும் வொய்பும் வந்து கூட பார்த்தோம். இண்டீரியர் எல்லாம் ரிச்சா இருந்தது. பில்டரோட ஆஃபர் கூட அட்ராக்டிவா தான் இருந்தது. பட், ஏரியா கொஞ்சம் ரிமோட்.. ட்ராபிக்.. இன்னும் பல ரீசனால அந்த ப்ளான் ட்ராப் ஆகிட்டு. தேங்க் காட். ஒருவேளை வாங்கி குடி வந்த பின்னே நடந்திருந்தா… மை குட்நெஸ், நெனச்சே பாக்க முடியலை” கையிலிருந்த சிகரெட்டை உறிஞ்சி விட்டுத் தூர எறிந்தார். கண்ணெதிர் துயரத்தை விட சொந்த வீடும், பலியாக இருந்த வாழ்க்கை கனவும் காப்பாற்றப்பட்டது அவருக்கு ஒரு ஆசுவாசத்தை தந்திருந்தது.

குருபிரசாத்தை கவர்ந்த ‘ரிச் இண்டீரியர்’, ‘ஆஃபர்’ (நொறுங்கிய கட்டிடத்தின் விளம்பர வீடியோ)

“ஆர் யூ ப்ரம் ப்ரெஸ்??”

”பிரிண்ட் இல்லை. இணைய பத்திரிகை. வினவு டாட் காம் அப்படின்னு ஒரு தளம்”

“ஐ சீ… இதெல்லாம் நல்லா எக்ஸ்போஸ் பண்ணுங்க பாஸ். ஹ்யூமன் லைஃபுக்கு ஒரு வேல்யுவே இல்லை பாத்தீங்களா. இனிமே அபார்ட்மெண்ட் ப்ளாட்னாலே அவனவன் தெறிச்சி ஓடிடுவான். யாருக்கு நம்பிக்கை வரும் சொல்லுங்க. இதுல இன்வெஸ்ட் பண்ணிட்டு உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கிறத விட தனி வீடு பெஸ்ட். ஆல்சோ… நம்ப டமில் நாட் கவர்மெண்ட் சுத்த யூஸ்லெஸ் பாஸ். இவ்ளோ நடந்திருக்கு.. பாருங்களேன் குச்சிய வச்சி ட்ராபிக்கை டைவர்ட் பண்ணிட்டு இருக்கான் நம்ப பொலீஸ் டிபார்ட்மெண்ட். இதே வேற நாடா இருந்தா இண்டர்நேஷனல் லெவல்லே இஷ்யூ பெரிசாயிருக்காது?” அடுத்த சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொண்டு நம்மிடம் பதில் எதிர்பார்த்து முகம் நோக்கினார். பதில் இல்லாததை உணர்ந்து, தானே தொடர்ந்தார்..

”இல்ல… நான் ஏன் சொல்றேன்னா.. நாளைக்கு பாருங்க பி.எம் வர்றாரு. இங்கே இத்தனை போலீசை குவிச்சி வைச்சிருக்காங்களே அப்ப அவரோட விசிட்டுக்கு பொலீஸ் ஃபோர்ஸ் கம்மி ஆய்டாதா? அதுக்கு சொல்ல வந்தேன்…”

கட்டிடம் கட்டிய தொழிலாளிகள் உயிரோடு சமாதியாக்கப்பட்டதோ, அவர்களது உறவினர்கள் அழுவதற்கு கூட ஆற்றலற்று இருப்பதோ எதுவும் அவரது இதயத்தை தீண்டக் கூட இல்லை. அமெரிக்காவில் வாழ முடியாமல் இந்தியா எனும் சுடுகாட்டில் சிக்கிக் கொண்ட அந்த கனவான், மோடிக்காக மட்டும் கவலைப்பட்டார்.

அந்தச் சூழலைக் கவ்வியிருந்த மரணத்தின் வாசம் அளித்த துயரத்திற்கு மத்தியில் ஒருவர் இப்படியும் பேசுவாரா என்று சிலருக்குத் தோன்றலாம். இங்கே குரு பிரசாத் பேசியதைத் தவிர எதையும் நாங்கள் சேர்க்கவில்லை. மேலும், தெலுங்கு பேசும் தொழிலாளிகள் பலர் உயிரோடு சமாதியாக்கப்பட்டு, உறவினர்கள் செய்வதறியாது கதறிக் கொண்டிருக்கும் பொழுது, அதே தெலுகு தேச மண்ணில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாயும் ராக்கெட்டை பார்க்க மோடி சென்றிருக்கிறார். இந்திய வல்லரசு கவுரவத்தின் பின்னே இத்தகைய நரபலிகள் தேவையாயிருப்பது இந்துத்துவத்திற்கு முரண்பாடல்ல.

குருபிரசாத்தின் வர்க்க கவலையின் வெளிப்பாடு அளித்த அருவெறுப்பு குமட்டிக் கொண்டு வந்தது. தலைக்கேறிய ஆத்திரத்தால் ஏதும் ரசாபாசங்கள் விளைந்து விடாமல் தவிர்க்க நாங்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்தோம்.

தமிழ் செல்வன்
கட்டிட இடிபாடுகளில் சிக்கி வெளியில் வந்த மதுரை திடீர் நகரைச் சேர்ந்த தமிழ் செல்வன்

பெருங்கொலை ஒன்றின் கோரத்தாண்டவம் நடந்து முடிந்து விட்டது. நூற்றி சொச்சம் உயிர்களின் நிலை என்னவென்பது இன்னும் தெரியவில்லை. முதலாளித்துவ பத்திரிகைகள் அடுத்த சில நாட்களுக்கு இழவையே சென்டிமென்ட் சென்சேஷனாக கொண்டாடிக் கல்லா கட்டுவார்கள். நடுப்பக்க கவர்ச்சி உடல்களின் பின்னேயிருந்து கொண்டே வாசன்கள் மற்றும் வரதராஜன்களின் கருணை தலைநீட்டும்.

கட்டிடம் கட்டிய நிறுவனம் குறித்த ‘இரகசியத்’ தகவல்களை சுவாமி வம்பானந்தா காரசாரமாக கடைவிரிப்பார். அந்த முதலாளி எந்தெந்த நட்சத்திர விடுதிகளில் கூத்தடித்தான் என்கிற விவரங்களை கழுகார் பீராய்ந்து வாசகர்களிடம் விற்றுத் தீர்ப்பார். இந்த சில நாட்களுக்கு ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் பம்மிப் பதுங்கிக் கொண்டு பச்சாதாபங்களுக்கு வழிவிடும்.

கட்டிடத்திற்கு சிஎம்டிஏ அனுமதி கொடுத்ததில் முறைகேடில்லை என்ற செய்தி ஏற்கனவே வெளியாகிவிட்டது. கட்டிடம் கட்டுவதற்கான பொருட்கள் குறித்து மட்டும் இனி விசாரிப்பார்களாம். இடியினால்தான் கட்டிடம் இடிந்து விழுந்தது, எங்கள் தரப்பில் தவறில்லை என்று முதலாளிகள் தெரிவித்திருக்கின்றனர். இதை வானியல் ஆராய்ச்சி மையமே காறித் துப்பியிருக்கிறது. போலிசார் போட்டிருக்கும் வழக்குகளின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கட்டிட முதலாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள்தான் சிறை.

எல்லாம் பெயரளவிற்கான வழக்குகள்தான். வழக்கின் விவரங்களை ஒரு சில நாட்கள் அல்லது வாரங்கள் வரைதான் ஊடகங்கள் பின் தொடர்வார்கள்; பின் மறப்பார்கள்; மறக்கடிப்பார்கள். மீண்டும் ஒரு பேரிடர் காலத்தில் அச்சடிப்பதற்காக எஞ்சிய ’அனுதாபங்களை’ இரும்புப் பெட்டிக்குள் வைத்து பூட்டி வைப்பார்கள். ஊடகங்களால் பேணி வளர்க்கப்படும் மக்களின் அரசியலற்ற அனுதாபங்களும் மெல்ல மெல்ல வடிந்து பின் நின்று போகும். மீண்டும் ஒரு சுபதினத்திலிருந்து ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ‘தாம்பரத்திற்கு மிக அருகே இருபதே லட்சத்தில் 2பி.எச்.கே ப்ளாட்டுகள்’ கிடைப்பதை தம்பட்டம் போடும்.

இதற்கிடையே பெயருக்குப் போடப்படும் வலுவற்ற வழக்குகளில் இருந்து அதிகாரிகளும் முதலாளியும் வெளியே வந்து விடுவார்கள். நீதி மன்றத்தில் கண்கள் இரண்டும் கட்டப்பட்ட அந்தப் பேதைப் பெண் ஏந்தியிருக்கும் தராசின் ஒரு தட்டில் அச்சடித்த காந்திக் காகிதப் பொதிகள் ஏற்றப்பட்டு அது அளிக்கும் விசையில் அதன் எதிர் தட்டில் கிடத்தப்படிருந்த சிறீகாகுளத்தைச் சேர்ந்த தெலுங்கு பேசிய பிணங்கள் விசிறியடிக்கப்படும். டவாலியின் கால்களுக்குக் கீழே இருக்கும் குப்பைத் தொட்டிக்குள் கிடக்கும் கசங்கிய கேஸ் கட்டுகளிடையே அந்தப் பிணங்கள் வீழ்ந்து பின் கரைந்து போகும்.

ஆனால், இந்தக் கொலைக் குற்றத்தை செய்யத் தூண்டிய ஒரு பெரும் கும்பல் எந்த சட்ட ரீதியான அல்லது அறவியல் ரீதியிலான அழுத்தங்களுக்கும் ஆட்படவே மாட்டார்கள். அவர்கள் தான் குருபிரசாத் போன்ற உயர்நடுத்தர வர்க்க அற்பர்கள். ஊருக்கு வெளியே இருபத்தி சொச்சம் லட்சங்களில் ‘சீப்பாக’ ப்ளாட்டுகளை வேட்டையாடும் இந்த வர்க்கம் தான் கொலைகார முதலாளிகளின் லாப வெறிக்கான அடிப்படையாக அமைகிறார்கள்.

இவர்கள் போன்றவர்களை திருப்தி படுத்தும் வகையில் தான் தரமற்ற நிலத்தில், தரமற்ற கட்டிடங்களை சல்லிசான விலைக்கு கட்டி அப்பாவித் தொழிலாளிகளின் உயிர்களை பலி வாங்குகிறார்கள். இந்தக் கட்டுரையை எழுதும் வேளையில் இந்த மவுலிவாக்கத்தில் இடிந்த கட்டிடத்தின் கீழ் ஒருவேளை உயிருடன் இருக்கும் ஏதாவதொரு உடலில் உயிரைத் தக்கவைப்பதற்கான இறுதிகட்டப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கலாம் – அல்லது அது இந்தக் கணத்தில் நின்றும் போயிருக்கலாம். ஆனால், நாளும் நாளும் தமிழகமெங்கும் கட்டுமானப் பணிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி விபத்துகளை எதிர் கொண்டு உயிர்களைத் தொலைக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

உலகமயமாக்கத்தின் பெயரால் செயற்கையாக பெருக்கப்படும் நகரமயமாக்கம் பொருளாதாரம் எனும் அடிப்படையிலும் நமது மக்களுக்கு பெருங்கேடு, வாழ்வாதாரம் எனும் நோக்கிலும் சீர்கேடு. இறுதியில் பெருநகரங்களின் சூதாட்ட வாழ்க்கையின் தேவைகளுக்காக கட்டப்படும் இந்த கட்டிடங்கள் இன்று மழையில் விழுந்தது போல என்றாவது ஒரு நாள் பொருளாதார நெருக்கடியில் கைவிடப்படும் அல்லது விலை இறங்கும்.

அதுவரை முகமற்ற அந்தத் தொழிலாளிகளின் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கும். அதனால் என்ன? ஆறுதலாய் வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் குமுறி அழும் சஞ்சீவ ரெட்டியின் கண்கள் உங்களை சில கணங்களேனும் தொந்தரவுக்குள்ளாக்கியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள். பார்த்த மாத்திரத்தில் எழும் கருணைக்கு ஆயுள் குறைவு என்பதால் உங்களது வார இறுதி கேளிக்கைகளுக்கு எந்த தடையுமில்லை. உலகக் கோப்பையா, பீர் பார்ட்டியா, வெள்ளிக் கிழமை சினிமா ஜமாவா…….குறையொன்றுமில்லை கொண்டாடுங்கள்!

– வினவு செய்தியாளர் குழு

அடியாள் வைத்து மிரட்டும் சேத்தியாதோப்பு SDS பள்ளி

2

 பூதங்குடி SDS மெட்ரிக் பள்ளி, கடலூர் மாவட்டம் – கட்டணக் கொள்ளை

கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்க
நீதியரசர் சிங்காரவேல் கமிட்டி உத்தரவு

வகுப்புகள் 2013-14 2014-15
எல்.கே.ஜி, யு.கேஜி ரூ 4,500 ரூ 4,950
1 முதல் 5 வரை ரூ 5,500 ரூ 6,050
6 முதல் 8 வரை ரூ 7,000 ரூ 7,700
9, 10 வகுப்பு ரூ 8,900 ரூ 9,790
11, 12 வகுப்பு ரூ 10,000 ரூ 11,000

SDS பள்ளி நிர்வாகம், மேற்கண்ட கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் 3 மடங்கு கூடுதலாக முதல் தவணை, இரண்டாம் தவணை என பெற்றோர்களை ஏமாற்றி நூதன முறையில் பல்வேறு துண்டு சீட்டு ரசீதுகளை கொடுத்து மோசடியாக வசூலித்து வருகிறார்கள். இது சட்டவிரோதம், அப்பாவி கிராமத்து பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி செயல் என்று உரிய ரசீது ஆதாரங்களுடன் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் தமிழரசன், மாவட்ட கல்வி துறை அதிகாரிகளிடமும், நீதியரசர் சிங்காரவேல் கமிட்டியிடமும் புகார் மனு அனுப்பியுள்ளார். அதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்காக போராடி வரும் தமிழரசன் அவர்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

எமது சங்கம், சேத்தியாதோப்பில் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் மாணவர்களுக்கு டி.சி. கொடுப்பேன் என பெற்றோர்களை மிரட்டுவது, அதிக பணம் கேட்டு டி.சி. தர மறுப்பது, பல மடங்கு கட்டணம் வசூலிப்பது, புத்தகம் நோட்டு தரமறுப்பது, தேர்வு எழுத விடாமல் மாணவர்களை தடுப்பது போன்ற தனியார் பள்ளிகளின் அத்துமீறல்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவும், அனைவருக்கும் தாய் மொழியில் கல்வி வழங்கவும் வலியுறுத்தி தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது.

2012-ம் ஆண்டு சிதம்பரம் வட்டாட்சியர் தலைமையில் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் SDS பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூல் செய்கிறோம் என உறுதியளித்தது. ஆனால் அதை மீறி பல மடங்கு கட்டணம் வசூலித்தது. இன்று வரை அது தொடர்கிறது. SDS பள்ளி 2013 – 2014 ஆண்டு வழங்கிய கல்வி கட்டண ரசீது முறையே

எஸ்.டி.எஸ் & இ.எஸ் டிரஸ்ட்
இன்பர்மேசன் சிலிப்
எஸ்.டி.எஸ் குரூப் ஆஃப் ஸ்கூல்
எஸ்.டி.சியோன் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்
கிளாஸ் பெர்மிட் சிலிப்

அட்டையில் வகுப்பையும் பெயரையும் குறித்து I, II டெர்ம் என விதம் விதமாக வசூலித்து வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இத்தகைய ரசீதுகளை ஆதாரமாக வைத்துதான் நீதியரசர் சிங்காரவேல் கமிட்டியிடம் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடந்தபோது பள்ளி நிர்வாகத்தை நீதிபதி கடுமையாக பேசினார். அப்போதுதான் பள்ளி நிர்வாக தரப்பில் வந்தவர்கள் கோவென அழுதனர். அதை சுவரோட்டியாக அச்சடித்து சேத்தியாதோப்பு முழுவதும் ஒட்டினோம். அனைத்து போஸ்டர்களையும் பள்ளி தாளாளர் ஆள் வைத்து கிழித்தார். மேலும் இரும்பு தடி கொடுத்து அடியாளை அனுப்பி தமிழரசன் அவர்களை மிரட்டவும் செய்தார். வடபாக்கத்தில் உள்ள அவர் மகள் வீடு, சேத்தியாதோப்பில் தமிழரசன் இல்லாத போது அவர் வீடு என ஆள் அனுப்பி பேரம் பேச முயல்வது, மிரட்டுவது என தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுக்கின்றனர். இது குறித்து பள்ளி தாளாளர் மீதும் அவர் அனுப்பிய அடியாள் மீதும் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில கல்வியை தரமாக தருவதாக சொல்லும் SDS பள்ளி ரசீதில் எழுதப்பட்டுள்ள தவறான ஆங்கில வார்த்தைகளை படித்தால் தெரியும். +2 மாணவர்களிடம் ரூ 45,000 வாங்கி கொண்டு இரவு வரை சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற முட்டாள் தனம் போல் அதிக கட்டணம் வசுலித்தால் கல்வி தரமாக சொல்லி கொடுப்பார்கள் என பெற்றோர்கள் நம்ப முடியுமா? தனியார் பள்ளி தாளாளர்களின் கட்டணக் கொள்ளைக்கு அடிபணிந்து போவது அவமானம் என்று நினைக்க வேண்டாமா? நம் பிள்ளைகளுக்காக நாம் போராடாமல் யார் போராடுவார்கள்? நமது சங்கத் தலைவர் தமிழரசன் உங்களுக்காகதானே போராடி வருகிறார். SDS பள்ளி தாளாளர் அவரை மிரட்டுவதை நாம் அனுமதிக்கலாமா? பெற்றோர்களே சிந்தியுங்கள்.

SDS பள்ளி மீது தலைவர் கோ. தமிழரசன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையிலான கமிட்டியிடம் வழக்கு தாக்கல் செய்தார். அங்கும் பள்ளி தாளாளர், அதிக கட்டணம் வசூலிக்கவில்லை என சத்தியம் செய்தார். நீதியரசர் சிங்காரவேல் கமிட்டியிலும் அதே போல் கூடுதலாக பெற்றோர்களிடம் வசூலிக்கவில்லை என அடித்து பொய் பேசுகிறார். நாம் கொடுத்த ரசீது ஆதாரங்களுக்குரிய பெற்றோர்களுக்கு மட்டும் திருப்பி கொடுக்க சொல்கிறேன் என நீதியரசர் சிங்காரவேல், தமிழரசனை கேட்டார். SDS பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக கட்டிய பணத்தை திருப்பி தர வேண்டும் என நம் சார்பில் ஆஜரான மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மூலமாக தெரிவித்தார்.

இதனால் நீதியரசர் சிங்காரவேல் அவர்கள் நமது வாதத்தை ஏற்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரிகள் சேத்தியாதோப்பு SDS பள்ளி பெற்றோர்களை நேரில் சந்தித்து கூடுதலாக பணம் வசூலிக்கபட்டுள்ளதா? என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. SDS பள்ளி பெற்றோர்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது உண்மை என்றால் அதை திருப்பி தரவேண்டும் என கமிட்டி உத்திரவிடும். SDS பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வருங்காலத்தில் அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யப்படும். SDS பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

எனவே SDS பள்ளி பெற்றோர்கள் தாங்கள் கூடுதலாக பணம் செலுத்தியதற்கான ரசீது துண்டு சீட்டு போன்ற எதுவானாலும் நமது பெற்றோர் சங்க தலைவர் தமிழரசனை தொடர்பு கொண்டு அதன் நகலை கொடுக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரி விசாரணைக்கு இந்த வாரத்தில் சேத்தியாதோப்பு வர இருக்கிறார். அவரிடம் நாம் முழு உண்மைகளையும் SDS பள்ளி தாளாளருக்கு தயங்களாமல், பயப்படாமல் சொல்ல வேண்டும். பெற்றோர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் உடனே நமது சங்க தலைவரை நேரில் தொடர்பு கொண்டு உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழரசன், தலைவர் செல்: 9965624345
பாலு மகேந்திரன், செயலாளர் செல்: 9443877062

s-thoppu-posterஅனைத்து மாணவர்களும் தரமான கல்வி பெற தனியார் பள்ளிகள் தீர்வு அல்ல. அரசு பள்ளிகளில் நமது பிள்ளைகளை சேர்ந்து அதன் தரம் உயர்த்த போராடுவதுதான் தீர்வு. சீனா, ஜப்பான், ஜெர்மனி, போன்ற பெரும்பான்மையான நாடுகளில் அந்த நாட்டு அரசுதான் கல்வியை இலவசமாக கொடுக்கிறது. தாய்மொழியில்தான் கற்பிக்கிறது. கன்னடம், தெலுங்கு போல் ஆங்கிலம் ஒரு மொழி. ஆங்கிலம் படித்தால் அறிவு வளரும் என்பது முட்டாள்தனமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில அறியாமையை வைத்துதான் தனியார் பள்ளி தாளாளர்கள் நம்மிடம் பணம் பறிக்கிறார்கள்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்க கிளையை துவங்குங்கள்.

தகவல்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
சேத்தியாதோப்பு, கடலூர் மாவட்டம்.

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் ?

1

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை பதவிநீக்கம் செய்யக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு இணைந்து ஆர்ப்பாட்டம்.

துரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனம் செல்லாது என்று 26-06-2014 அன்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வந்துவிடுவதால் கல்யாணி மதிவாணன் அனைத்து அதிகாரங்களையும் இழந்துவிடுகிறார். இதனால் ஏற்கனவே வேலைக்காக லஞ்சம் கொடுத்தவர்களுக்கு நியமன உத்தரவு அவசர அவசரமாக முன் தேதியிட்டு வழங்கப்படுவதாக தகவல் தெரியவருகிறது. மேலும் அனைத்து பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமாக நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். ஏற்கனவே நாறிப்போயுள்ள பல்கலையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையில் கல்யாணி மதிவாணன் தரப்பு உச்ச நீதிமன்றத்திற்கு போய் உள்ளது. ஆனால் கல்யாணி மதிவாணன் பொய்சொல்லி அரசை ஏமாற்றி பதவியைப் பெற்றுள்ளதால் அவர் வாதம் எடுபடாது. கல்யாணிக்கு எதிராக உத்தரவு பெற்ற பேராசிரியர்களும் உச்ச நீதிமன்றம் சென்று கல்யாணியை எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர். எந்தவகையிலும் அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், “நேற்று தானே தீர்ப்பு வந்திருக்கிறது அதற்குள் நடைவடிக்கை எடுக்க சொல்லி அரசை வலியுறுத்துவது சரியில்லை” என்று கூறினார். கல்யாணி மதிவாணனை நீக்கக் கோரி ம.உ.பா. மையம் சார்பில் சுவரொட்டி ஒட்டியவர்களை நாகமலை போலீசு கைது செய்து பதவி போன பின்பும் கல்யாணிக்கு விசுவாசம் காட்டியது. முன்தாக பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மற்றும் கல்யாணியால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியற்றவர்கள், ஊழல் வாதிகள், கிரிமினல்கள் குறுக்கு வழியில் பதவியில் அமர்ந்து கொண்டு அசிங்கபடுத்துகிறதற்கும் அவமானப்படுவதற்கும் கல்யாணி மதிவாணன் ஓர் எடுத்துக்காட்டு. எப்படியானாலும் இனி ம.கா.பல்கலையில் தகுதியற்றவர்கள் நுழையும் எண்ணம் ஏற்படக்கூடாது என்ற வகையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு

அனுப்புநர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு &
மதுரை காமராஜர் பல்கலை பாதுகாப்புக் குழு சார்பாக
ம.லயோனல் அந்தோனிராஜ் & கே.எம்.விஜய குமார்
150-இ, ஏரிக்கரை சாலை,
கே.கே.நகர்,
மதுரை-20.

பெறுநர்
உயர்திரு தலைமைச்செயலர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

வழியாக
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.

அய்யா,

பொருள் – சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை W.P.No..11350/12 & W.P.No.3318/13 நாள் 26.06.2014 வழக்குகளின் தீர்ப்புப்படி

1. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே துணைவேந்தர் பதவியிலிருந்து விலக்கவும்

2. உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் தமிழக அரசு துணைவேந்தருக்கு ஆதரவாக செயல்படக் கூடாது எனக் கோரியும்

3. மதுரை காமராஜர் பல்கலையில் தற்போது நடைபெற்றுவரும் பேராசிரியர்கள்-அலுவலகப் பணியாளர் நியமனங்களை உடனே நிறுத்த வேண்டுமெனவும் —– வலியுறுத்தி மனு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போது பணியாற்றிவரும் கல்யாணி மதிவாணன் அவர்கள் உரிய கல்வித்தகுதி இல்லாமல் அரசியல் செல்வாக்கால் மேற்படி துணைவேந்தர் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கண்டவாறு துணைவேந்தர் பதவிக்கு கல்யாணி மதிவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது அவரை, அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட W.P.No.11350/12 மற்றும் W.P.No.3318/13 வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை

கிளையின் நீதிபதிகள் வி.இராமசுப்ரமணியன்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று 26.06.2014-ல் தீர்ப்பளித்துள்ளது. மேற்படி தீர்ப்பில் UGC விதிமுறைகளின்படி 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர்கள் மட்டுமே துணைவேந்தராக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும், ஆனால் தற்போதைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் இணைப் பேராசியராக மட்டுமே சென்னை எத்திராஜூ கல்லூரியில் பணிபுரிந்துள்ளார்.ஆனால் தான் இணைப் பேராசிரியர் என்பதை மறைத்து தனது கல்வித்தகுதியை பேராசிரியர் என மோசடியாகக் குறிப்பிட்டு தேர்வுக்குழுவையும்-அரசையும் ஏமாற்றி துணைவேந்தர் பதவியைப் பெற்றுள்ளார்.ஆகவே முறைகேடான வழியில் பெறப்பட்ட கல்யாணி மதிவாணனின் நியமனம் செல்லாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அரசுப் பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக WRIT OF QUO WARRANTO வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டால், தீர்ப்பு நீதிமன்றத்தில் சொல்லப்பட்டவுடன் அமலுக்கு வந்து விடும் என்பதே சட்ட நிலை. ஆக,சட்டப்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் அவர்கள் நேற்று 26.06.2014-லேயே பதவி விலகி இருக்க வேண்டும் {அல்லது} தமிழக அரசு அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும்.ஆனால் தற்போதுவரை சட்டமுரணான நிலையே தொடர்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் மேற்படி கல்யாணி மதிவாணன் தரப்பு உச்சநீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைபெற முயற்சித்து வருகிறது.அவ்வாறு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜராகவிருக்கும் வழக்கறிஞர் மேற்படி கல்யாணி மதிவாணனுக்கு ஆதரவாக வாதிடாமல் உயர் கல்வி நிறுவனமான மதுரை காமராஜர் பல்கலையின் மாண்பினை காப்பாற்றும் பொருட்டு, நியாயத்தின் பக்கம் நின்று உண்மை நிலையினை நீதிமன்றத்தில் எடுத்தியம்ப வேண்டும்.மேலும் தமிழக அரசு சார்பில் இவ்வழக்கில் மேல்முறையீடு எதுவும் செய்யக் கூடாது.ஏனெனில் கல்யாணி மதிவாணன் தனது விண்ணப்பத்திலேயே தான் பேராசிரியர் எனக் குறிப்பிட்டு தேர்வுக்குழுவை ஏமாற்றியுள்ளார்.இதனால் உரிய கல்வித்தகுதி இருந்த ஏராளமான கல்வியாளர்கள் தேர்வு பெறாமல் போயுள்ளனர்.இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிக்கு தமிழக அரசு ஆதரவளிக்கக் கூடாது.

மேலும் தற்போது மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பேராசிரியர் – அலுவலகப் பணியாளர் என அனைத்துப் பணிகளும் ஏலம் விடப்படுகிறது. பதிவாளர் பதவியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தட்டிக் கேட்டால் பேராசியர்கள், மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். உயர்கல்வி நிலையம் ஊழல் வாதிகளின் கூடாரமாய், மாற்றப்பட்டுள்ளது. இச்சூழலில் தற்போது நடைபெற்று வரும் பணிநியமனங்களை உடனே நிறுத்த பல்கலை பதிவாளருக்கு தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கடந்த 16.05.2014 அன்று, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மீது கூலிப்படை ஏவி விடப்பட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் சீனிவாசனின் இரண்டு கைகளும் உடைக்கப்பட்டு தற்போது வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருந்து வருகிறார். பேராசிரியர் சீனிவாசனை கொலை செய்ய கூலிப்படையை ஏவியவர்கள் மீது நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.216/2014-ன் கீழ் பிரிவுகள்: 294(b), 324, 307, 109 I.P.C. –ன் படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் முதல் குற்றவாளியாக மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளார். குற்ற எண்.216/2014 வழக்கின் இதர குற்றவாளிகள் பதிவாளர் முத்து மாணிக்கம், பி.ஆர்.ஓ.அறிவழகன், செல்லத்துரை, எஸ்.வி.கே.செல்வராஜ் ஆகியோரும் தினமும் பல்கலை கழகத்திற்க்கு வந்து செல்கின்றனர். மேற்படி நபர்கள் எவரும் சட்டத்தை மதித்து இன்று வரை முன்ஜாமீன்மனு கூடத் தாக்கல் செய்யவில்லை. காவல்துறையும் மேற்படி நபர்களை கைது செய்ய மறுக்கிறது.உடனே இவர்களைக் கைது செய்ய வேண்டும்.

ஆகவே தமிழக அரசு உடனே இப்பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை W.P.No..11350/12 & W.P.No.3318/13 நாள் 26.06.2014 வழக்குகளின் தீர்ப்புப்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே துணைவேந்தர் பதவியிலிருந்து விலக்குமாறும், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் தமிழக அரசு துணைவேந்தருக்கு ஆதரவாக செயல்படக் கூடாது எனவும், மதுரை காமராஜர் பல்கலையில் தற்போது நடைபெற்றுவரும் பேராசிரியர்கள் – அலுவலகப் பணியாளர் நியமனங்களை உடனே நிறுத்த வேண்டுமெனவும் கோருகிறோம்.

மதுரை
27.06.2014
இப்படிக்கு

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை

தியாகி லீலாதரன் துரோகி வாஜ்பாய்

13

பூட்ஸ் நக்கித்துவம் என்றால் என்ன?

அது 1942-ம் வருடம். இந்தியாவெங்கும் காலனிய எதிர்ப்பு போராட்டங்கள் வீச்சாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. தேச விடுதலைப் போராட்டத்தின் குவிமுனையாக அன்று காங்கிரசு தான் நம்ப வைக்கப்பட்டது. இந்தியர்களின் விடுதலை உணர்ச்சியை நிறுவனமயமாக்கி மட்டுப்படுத்த வேண்டும் என ஆங்கிலேயர்களது ஆசியுடன் துவங்கப்பட்ட காங்கிரசை, காந்தி வழிநடத்திக் கொண்டிருந்தார். கீழ்மட்டத்தில் வெடிக்கத் தயாராக இருந்த மக்களின் கோபாவேசத்தை தணிக்க காங்கிரசு அவ்வப்போது அறிவித்த இயக்கங்களால் முடியவில்லை.

லீலாதரன்
லீலாதரன் 1998-ல்

ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், சத்தியாகிரகங்கள் என்று தொடர்ந்து காந்தி அறிவித்து வந்த போராட்டங்கள் அனைத்தும் மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பின் விளைவாக தொடர்ந்து காங்கிரசு தலைமையின் கையை மீறிச் சென்று கொண்டே இருந்தன. 42-ம் வருடம் காங்கிரசு “வெள்ளையனே வெளியேறு இயக்க”த்தை அறிவித்திருந்தது – மக்கள் அந்த அழைப்பை உளமாற நம்பினர். காந்தியே எதிர்பாராத அளவுக்கு மக்களின் எழுச்சி வெடித்துக் கிளம்பியது. இரண்டாம் உலகப்போரில் களைத்திருந்த ஆங்கிலேயர் அரசாங்கம் மக்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தது.

42-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 27-ம் நாள். வட இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் ரக்சாபந்தன் விழாவிற்கு மறு நாள் அது. அன்று தான் மக்கள் இறந்து போன முன்னோர்களை நினைவூட்டும் விதமாக அனுசரிக்கும் ‘புஜாரியா கா மேளா’ என்கிற விழாவும் நடைபெறும். ஆக்ராவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பத்தேஷ்வர் கிராமத்தில் புஜாரியா கா மேளா நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று வீரம் சொரிந்த தங்கள் முன்னோர்களின் கதைகளை ‘ஆலா’ என்கிற கதைபாடல்களாக பாடிக் கொண்டிருந்தனர்.

வழக்கமான அந்த கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறிய இளைஞர்களின் கூட்டம் ஒன்று, லீலாதரன் என்ற இளைஞனின் தலைமையில் மேடையைக் கைப்பற்றுகிறது. அவர்கள் கையில் காந்தியின் பிரகடனம் இருக்கிறது. “இன்னும் ஏன் நமது பழைய பெருமைகளைப் பாடிக் கொண்டிருக்க வேண்டும். நாம் இந்த தேசத்தின் இன்றைய நிலைமையைப் பாடுவோம்” என்று முழங்கும் அவர்கள் தேச விடுதலைப் பாடல்களைப் பாடுகிறார்கள். கூட்டம் ஆமோதித்து அவர்களோடு சேர்ந்து கொள்கிறது.

பத்தேஷ்வர் வனத்துறை அலுலவகம்
பத்தேஷ்வர் வனத்துறை அலுவலகம்

மெல்ல மெல்ல அந்தக் கூட்டத்தை தன்வசப்படுத்தும் லீலாதரன், அடுத்த கட்டமாக அதிலிருந்த சுமார் 200 பேரை அருகில் இருந்த வனத்துறை அலுவலக கட்டிடத்திற்கு வழிநடத்திச் செல்கிறான். அது அந்தப் பகுதியில் அரசின் இருப்புக்குச் சான்றளித்துக் கொண்டிருந்த ஒரே அரசாங்க கட்டிடமாகும். அந்தக் கட்டிடத்தின் உச்சியில் மூவர்ணக் கொடியைப் பறக்க விடுவதோடு அதை வெள்ளையர் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு செய்வதும் தான் லீலாதரனின் நோக்கம்.

கட்டிடத்தின் உச்சியில் ஏற படிக்கட்டுகள் இல்லை. ஆனால் மக்களின் விடுதலை உணர்ச்சிக்கு அது தடை போடுவதாகவும் இல்லை. லீலாதரனின் சகாக்கள் ஒருவர் தோள் மீது ஒருவராக ஏறி கட்டிடத்தின் கூரையை அடைகிறார்கள். மூவர்ணக் கொடி பறக்க விடப்படுகிறது. தேச விடுதலையின் ஒரு துளியை ருசித்துப் பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் எல்லோரும் ஷியாம்லால் பிரசாத் என்கிற கவிஞனின் ’ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா’ (உயரே பறக்கிறது எங்கள் கொடி) என்ற பாடலை உணர்ச்சிகரமாகப் பாடுகிறார்கள்.

தகவல் கிடைத்த உடனேயே வெள்ளை அரசாங்கத்தின் காவல் துறை நடவடிக்கையில் இறங்குகிறது. கைது நடவடிக்கைகள் துவங்குகின்றன. லீலாதரன் தலைமறைவாகிறான். கூட்டத்தில் இருந்த 37 பேர் மேல் வழக்குகள் பதிவாகிறது – அன்றைக்கே 11 பேர் கைதாகிறார்கள். ஆக்ராவுக்குத் தப்பிச் சென்ற லீலாதரன் தன்னைச் சுற்றிலும் போலீசின் கண்ணி இறுகுவதை உணர்கிறான்.

ஆக்ராவில் லீலாதரன் எதிர்பார்த்துச் சென்ற உதவி கிடைக்கவில்லை. தப்பிக்க வேறு வழியே இல்லை என்பதை அறிந்த லீலாதரன் ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பகிரங்கமாக விடுதலை முழக்கங்களை எழுப்பியவாறே தடைசெய்ப்பட்ட துண்டறிக்கைகளை விநியோகிக்கிறான் – போலீசாரால் கைது செய்யப்படுகிறான்.

அன்றைக்கு பத்தேஷ்வரில் கைதான இளைஞர்களில் இரண்டு பேர் குவாலியர் அரசின் கல்வித்துறை கண்காணிப்பாளரின் புத்திரர்கள். அவர்கள் லீலாதரனின் மேல் அரசாங்கம் வைத்த குற்றச்சாட்டை வலுப்படுத்தும் விதமாக துரோகத்தனமான ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்கிறார்கள். அந்தச் சகோதரர்களில் இளையவர் பின்னாட்களில் இந்திய அரசியலில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆளுமையாக வளர்ந்தார். அவரது வாக்குமூலம் தான் நமது விசேட கவனத்திற்குரியது.

வாஜ்பாயி வாக்குமூலம்
வாஜ்பாயி வாக்குமூலம்

கிரிமினல் நடைமுறை வழிகாட்டுதல் விதி 164-ன் கீழ் (CrPC section 164) இரண்டாம் நிலை மாஜிஸ்டிரேட்டின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட அந்த வாக்குமூலத்தின் தமிழ் வடிவம் கீழே –

தந்தை பெயர் : கவுரி ஷங்கர்
எனது சாதி : பிராமணன்
வயது – 20
தொழில் – குவாலியர் கல்லூரியின் மாணவர்
முகவரி – பத்தேஸ்வர், பி.எஸ். பாஹ், ஆக்ரா மாவட்டம்.

நீதிமன்றத்தால் “நீ தீவைப்பு மற்றும் பாதிப்புண்டாக்கும் செயல் ஏதேனும் செய்தாயா? இது குறித்து நீ என்ன சொல்ல விழைகிறாய்?” என்ற கேள்விக்கு பதிலாக கீழ் கண்ட வாக்குமூலத்தை பதிவு செய்கிறார் அந்தச் சகோதரர்களில் இளையவர்:

”ஆகஸ்டு 27, 1942 அன்றைக்கு பத்தேஸ்வர் சந்தையில் ஆலா பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது சுமாராக மதியம் 2 மணி. காக்கா எனப்படும் லீலாதரும், மாஹானும் வந்து ஆலா பாடிக் கொண்டிருந்த மக்களிடையே உரையாற்றினர். மக்களை வனச் சட்டங்களை மீறுமாறு தூண்டினர். இருநூறு பேர் வன அலுவலகத்திற்கு கூட்டமாகச் சென்றனர். நானும் எனது சகோதரனும் அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்தோம். கூட்டம் பத்தேஸ்வர் வன அலுவலகத்தை அடைந்தது. நானும் எனது சகோதரனும் கீழேயே நின்று கொண்டோம். மற்றவர்கள் மேலே சென்றனர். அங்கே இருந்தவர்களில் காக்கா மற்றும் மாஹானின் பெயர்களைத் தவிர பிறருடைய பெயர்கள் எனக்குத் தெரியாது”

”செங்கற்கள் கீழே விழுவது தெரிந்தது. யார் சுவற்றை இடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் செங்கற்கள் சுவறில் இருந்து உதிர்ந்து விழுந்தது நன்றாகத் தெரியும்”

”நானும் எனது சகோதரனும் மாய்புராவிற்கு சென்றோம். கூட்டம் எங்கள் பின்னால் வந்தது. நான் மேலே குறிப்பிட்ட நபர்கள் அந்த ஆட்டு மந்தைக் கூட்டத்தை வழிநடத்தினர். கூட்டம் பிச்கோலியை நோக்கி நகர்ந்தது. பத்து அல்லது பன்னிரண்டு பேர் வன அலுவலகத்தில் இருந்தனர். நான் சுமார் 100 யார்டுகள் தொலைவில் நின்றேன். நான் கட்டிடத்தை இடிக்க எந்த உதவியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்து எங்கள் வீடுகளுக்கு நாங்கள் திரும்பி விட்டோம்”

வாக்குமூலத்தைப் பதிவு செய்து அதில் கவுரி சங்கரின் இளைய புதல்வரிடம் ஒப்பம் பெற்றுக் கொள்ளும் மாஜிஸ்டிரேட், அதன் கீழ் தனது குறிப்பையும் பதிவு செய்கிறார். அவ்வாறு வாக்குமூல பத்திரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாஜிஸ்டிரேட்டின் குறிப்பின் தமிழ் சாராம்சம் கீழே :

”நான் கவுரி சங்கரின் புதல்வரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லையென்பதையும், கொடுக்கப்படும் வாக்குமூலம் எதுவும் அவருக்கே எதிராக கூட பயன்படுத்தப்படலாம் என்பதையும் தெரிவித்து விட்டேன். இந்த வாக்குமூலம் அவரால் சொந்த முறையில் அளிக்கப்பட்டது என்று நம்புகிறேன். எனது முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த வாக்குமூலத்தை அவரிடம் வாசித்துக் காட்டி அதில் உள்ளவை சரியானது தான் என்று அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது”

மேலே குறிப்பிட்டதைப் போல் விடுதலைப் போராட்ட இயக்கத்தைக் காட்டிக் கொடுத்த கவுரி சங்கரின் இளைய புத்திரன் பின்னாட்களில் ஓட்டுக்கட்சி அரசியலில் இணைந்து குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவராக வளர்ந்தார். அன்றைக்கு அவரால் காட்டிக் கொடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடுமையான சிறை தண்டனை பெற்ற மகத்தான விடுதலை வீரனான லீலாதரனோ சுதந்திர இந்தியாவில் எந்த அடையாளங்களும் இன்றி கரைந்து காணாமல் போனான்.

வாஜ்பாயி - புஷ்
அமெரிக்க அதிபரின் அலுவலகத்தில் வாஜ்பாயி – புஷ் : ஏகாதிபத்திய சேவையில் இந்துத்துவம்.

ஆம், அன்றைக்கு லீலாதரனையும் விடுதலை இயக்கத்தையும் காட்டிக் கொடுத்த துரோகி பின்னாட்களில் பாரதப் பிரதமரானார். அந்த எட்டப்பனின் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய். அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதற்கு என்னாலான உதவி செய்தேன், முடிந்தால் தண்டித்துப் பார் என்று ஏன் இந்த கவிஞர் ஒரு சவுடால் கவிதையாவது படிக்க முடியவில்லை? ஒருக்கால் பின்னாளில் பிரதமர் ஆவோம் என்று தெரிந்திருந்தால் அப்படி கூறியிருப்பார் என்று நம்புகிறீர்களா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இந்துமதவெறியரின் தோற்றமே ஏகாதிபத்திய சேவையின் பொருட்டுதான்.

துரோகி பட்டத்தின் பெருமைக்குரிய சொந்தக்காரர் வாஜ்பாயி மட்டுமல்ல. சொல்லப் போனால், ஒரு மாபெரும் துரோகப் பட்டாளத்தையே அரசியல் ரீதியில்  உருவாக்கும் வேலையில் அன்றைய இந்துத்துவ சக்திகள் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருந்தனர். இன்றைக்கு தேசம் தேசபக்தி என்றெல்லாம் வண்ண வண்ணமாக கதை விடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய யோக்கியதை என்ன?

”பிரிட்டிஷாரை எதிர்ப்பது தேசபக்தி என்றும் தேசியம் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தப் பிற்போக்குத்தனமான கருத்து தேச விடுதலை இயக்கத்தின் மீதும், அதன் தலைவர்கள் மீதும், மக்களின் மீதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது” – ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வால்கரின் ஞான கங்கையில் இருந்து.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க கூடாது என்பது மட்டுமல்ல, இந்தியர்கள் அதற்கு செருப்பாகவும் உழைக்க வேண்டும் என்பது தான் இந்துத்துவ இயக்கங்களின் கொள்கை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடர்ந்து நாடெங்கும் அரசு வேலைகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் வேலைகளைத் துறந்து வெள்ளை அரசை எதிர்த்து களம் காணப் புறப்பட்டுக் கொண்டிருந்த வேலையில், இந்துக்கள் யாரும் அரசுப் பணிகளில் இருந்து விலக கூடாது என்று தெளிவாக சுற்றறிக்கை அனுப்புகிறார் சாவர்கர் (Facism of Sangh parivar by Ram punyani / Refer page # 43). அதுமட்டுமின்றி, ஆங்கிலேயர் இராணுவ சேவையில் இந்துக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வலியுறுத்தி நாடெங்கும் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார் (மேற்படி நூல்)

வாஜ்பாயி
விடுதலை போராட்டத்தின் போது அஞ்சி நடுங்கி சரணடைந்த வாஜ்பாயி பிற்காலத்தில் தேசபக்தராக சித்தரிக்கப்பட்டார்.

அன்றைக்கு வெள்ளை ஏகாதிபத்தியம் 1917 சோவியத் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உலகெங்கும் இருந்த தனது காலனிய நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் ஒரு புதிய பரிமாணத்தில் உத்வேகத்தோடு நடப்பதைக் கண்டு அஞ்சியது. ஒவ்வொரு நாட்டிலும் இருந்த பிற்போக்கு சக்திகளை அந்தந்த நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களின் தலைமையில் பின்வாசல் வழியாக அமர்த்தி விடுதலை இயக்கங்களை ஊழல்படுத்தி நிறுவனமயமாக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விரும்பியது. ஏனெனில், ஒருவேளை மக்களின் அதிருப்தி அதிகரித்து தான் நாட்டை காலி செய்து விட்டுக் கிளம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், தனது பொருளாதார நலன்களையும் சுரண்டலையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல இந்தக் கையாட்கள் தனக்கு உதவிகரமாக இருப்பார்கள் என்று ஏகாதிபத்தியம் எதிர்பார்த்தது.

அந்த வகையில் இந்தியர்களின் எதிர்ப்புணர்வை காங்கிரசின் ரூபத்தில் நிறுவனமயப்படுத்தியிருந்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம். மேல்மட்ட காங்கிரசு பெருச்சாளிகள் ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாகவே இருந்தாலும், அவர்களது வெற்றுச் சவடால் விடுதலை கோஷங்கள் கீழ்மட்ட தொண்டர்களையும் மக்களையும் பற்றியது உண்மையே. எனவே காங்கிரசை மட்டும் நம்பியிராமல் தொடர்ந்து இந்தியாவை அரசியல் ரீதியில் பிளவு படுத்தி பிரித்தாள இந்து – முசுலீம் பிரிவினையைக் கையிலெடுத்தது ஆங்கிலேய ஏகாதிபத்தியம்.

காங்கிரசின் இந்துத்துவ சார்பை வைத்து ஒருபக்கம் இசுலாமியர்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவு படுத்த முசுலீம் லீகையும், அவர்களுக்கு எதிராக நிறுத்த நேரடியான இந்துத்துவவாதிகளையும் தனது கைக்கருவிகளாக பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேயர் அரசு. எனவே தான், பொதுவுடைமை இயக்கத்தை தடை செய்து அதன் தலைமையை வேட்டையாடிய வெள்ளையர் அரசாங்கம் இந்துத்துவ கைக்கூலிகளை செயல்பட அனுமதித்தது.  ஆக, ஏகாதிபத்திய சேவையும், சொந்த நாட்டு மக்களையும், தேசத்தையும் காட்டிக் கொடுப்பது தான் இந்துத்துவ இயக்கங்களின் அவதார நோக்கம்.

1942-ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வெள்ளையர்களுக்கு தங்கள் சங்கத்தின் மேல் லேசான மனவருத்தம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தது. 1943-ல், சங்க சுயம்சேவக்குகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும் கோல்வால்கர், வெள்ளை அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்பதால் தமது தொண்டர்கள் சீருடையில் ஷாகா பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் (reference from the Article written by AG Noorani, Frontline December 1, 1995).

பத்தேஷ்வரில் போலீஸ் மக்களை தாக்கிய இடம்
பத்தேஷ்வரில் போலீஸ் மக்களை தாக்கிய இடம்

வாஜ்பாயி 1939 வாக்கில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1942-ல் ஆர்.எஸ்.எஸ்சின் விசுவாசமான உறுப்பினராகவும், அரசியல் உணர்வு கொண்டவராகவும் வளர்ந்திருந்தார். எனவே ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கையின்படியே, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தனது பங்களிப்பை மறுத்ததோடு (சும்மா வேடிக்கை பார்க்கத்தான் போனேன்), போராட்டத்தை முன்னணியில் நின்று இயக்கிய தேசபக்தர்களையும் பெயர் சொல்லி குறிப்பிட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக நேரடியாக அழைக்கப்படாததால், வாஜ்பாயியை சட்டபூர்வமாக தேச துரோகி என்று அழைக்க முடியாதுதான். ஆனால், அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு அவரது வாக்குமூலத்தில் சொல்லப்பட்ட விபரங்களை ஒட்டியே இருந்ததோடு, அவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட லீலாதருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. எனவே உணர்வுரீதியாக அவர் ஒரு தேசதுரோகியாகவே வரலாற்றில் பதிவாகிறார்.

இதே வாஜ்பாயியை 1997-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்திய போது, அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர் என்றும் தியாக போராட்டத்துக்காக சிறைக்கு போனவர் என்றும் அவரது தியாக போராட்டத்தின் களம் பத்தேஷ்வர் என்றும்  கற்பனை வரலாற்றை சங்க பரிவார அமைப்புகள் பரப்ப ஆரம்பித்தன.  1997-ம் ஆண்டு வாஜ்பாயியின் வரலாற்றுக் குறிப்பில் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைக்கு போனவர் என்பது சேர்க்கப்பட்டிருந்தது. பத்தேஷ்வரில் நடந்த சம்பவங்களை மயிர் கூச்செரிய விவரிக்கும் வாஜ்பாயியின் கட்டுரை இந்தி நாளிதழ்களில் வெளியானது.

1998-ம் ஆண்டு ஃபிரண்ட்லைன் இதழ் இந்த விவகாரத்தைக் கிளறி, லீலாதரனைக் கண்டுபிடித்து பேட்டியெடுத்தது. அதைத் தவிர்த்து லீலாதரனைக் குறித்த வேறு எந்த பதிவுகளும் இல்லை. அன்றைக்குப் பதினெட்டே வயதான லீலாதரனுக்கு இப்போது உயிருடன் இருந்தால் தொண்ணூறு வயதாகியிருக்க வேண்டும் – இருக்கிறாரா என்று நமக்குத் தெரியாது. தொண்டைமான்களின் ‘சுதந்திர’ இந்தியாவில் கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு என்னவாயிற்றோ அதுவே கூட லீலாதரனுக்கும் ஆகியிருக்கலாம்.

ஃபிரண்ட்லைன் ஆய்வு செய்து கண்டறிந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் போலியானவை என்று மறுத்தது வாஜ்பாயி தரப்பு. மறுக்க முடியாத கட்டத்துக்கு வந்ததும், வாஜ்பாயியே தன்னுடைய வாக்குமூலத்தை உண்மை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார். குவாலியரில் தன் மகன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதால் அரசு ஊழியரான அவரது தந்தை தன்னை பத்தேஷ்வருக்கு அனுப்பியதாக குறிப்பிட்டு தான் யாருக்கும் எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவில்லை என்று சப்பை கட்டுகிறார். அதாவது, ஆங்கிலேய அரசு ஊழியரான தனது தந்தைக்கு பணிந்து வெளியூர் சென்றதோடு அவருக்கு விசுவாசமாக நடந்தும் கொண்டிருக்கிறார். ஆனால், தான் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், போராட்ட தலைவர்களை காட்டிக் கொடுத்தும், போராட்ட நிகழ்வுகளை விவரித்தும் தான் கொடுத்த வாக்குமூலத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. அத்தோடு வாஜ்பாயிக்கு சுதந்திர போராட்ட வீரர் பட்டம் கட்ட முயன்ற சங்க பரிவாரத்தின் முயற்சி பல்லிளித்தது.

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும், பிரதமரான பிறகும் அவர் சிறுவயதில் இந்திய இராணுவ வீரர்களுக்கு டீ கொடுத்தது முதல் அவரது வீர சாகசங்கள், நற்குணங்கள் பற்றிய கதைகள் ஊடகங்களில் அணிவகுக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக, விசாரித்து பார்த்தால் வாஜ்பாயியின் தேசபக்தி போல மோடியின் புனிதங்களும் பல்லிளித்து விடும்.

ஆர்.எஸ்.எஸ்சின் பிறப்பிலிருந்து கடைப்பிடிக்கும் ஏகாதிபத்திய அடிவருடி கொள்கைகளின் தொடர்ச்சியாகத் தான் பொதுத்துறை நிறுவனங்களை ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கவென்றே அருண் ஷோரியை அன்றைக்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராக்கியதையும், இராணுவ தளவாட உற்பத்தியில் 100% அந்நிய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு அனுமதியளிப்பதை உள்ளிட்டு பல்வேறு ஏகாதிபத்திய சேவைகளை செய்யத் துடிக்கும் இன்றைய மோடி அரசாங்கத்தின் செயல்பாட்டையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பூட்ஸ்நக்கித்துவம் பற்றிய தத்துவ விளக்கத்தை (theoritical) இதுவரை பார்த்தீர்கள் – செயல்முறை விளக்கத்தை (practical) இனிவரும் ஐந்தாண்டுகளுக்குப் பார்க்கப் போகிறீர்கள்.

–    தமிழரசன்

சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா ?

3

ச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞராக செயல்பட்டவருமான கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

மே முதல் வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழு, மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், ரோகிந்தன் நாரிமன் மற்றும் ஒடிசா மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்திருந்தது. அந்தக் நீதிபதிகள் குழுவில் நீதிபதிகள் எச் எல் தத்து, ஏ கே பட்னாயக், பல்பீர் சிங் சவுகான், தீரத் சிங் தாக்கூர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறைப்படி மத்திய உளவுத் துறை இந்நீதிபதிகளின் கடந்த காலம் குறித்து விசாரணை நடத்தி மே 15-ம் தேதி இவர்கள் மீதும் எந்த களங்கமும் இல்லை என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. பொதுவாக நீதித்துறையும், போலீசுத் துறையும் தங்களது எல்லைகளை அறிந்து கொண்டுதான் மோதிக் கொள்வார்கள். பெரிய முரண்பாடு வந்தால் விட்டும் கொடுப்பார்கள். மற்றவர்கள் யாரும் இந்த இரண்டு துறைகளை கேள்வி கேட்டால் இவர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். அந்த வகையில் உளவுத் துறை இந்த கிளீயரன்சை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் நீதிபதி நியமனத்துக்கான சடங்குகள் முடித்து வைக்கப்பட்டு கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் மத்திய அரசின் இறுதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மோடி தலைமையில் ஆட்சி அமையப் போவது உறுதியானதும், மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.

கோபால் சுப்பிரமணியன் 2
கோபால் சுப்பிரமணியம்

சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் குஜராத் அரசை குற்றவாளிக் குண்டில் ஏற்றியதில், உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற நண்பராக செயல்பட்ட கோபால் சுப்பிரமணியத்தின் பங்கு முக்கியமானது. அவ்வழக்கில் குஜராத் அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியமான துளசிராம் பிரஜாபதி குஜராத் போலீசால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மோடியின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சி.பி.ஐஆல் கைது செய்யப்பட்டார். தற்போது பிணையில் வெளிவந்து உத்திரபிரதேச பா.ஜ.க பொறுப்பாளராக மதக் கலவரங்களை நடத்திக் கொண்டிருக்கும் அவர் மீதான வழக்கு இன்றும் நடந்து வருகிறது, இனிமேல் அதுவும் விரைவில் நீர்த்துப் போக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதுதான் மோடி அரசு இவர் மீது கொண்டிருக்கும் ஜன்மப்பகைக்கு காரணம்.

கோபால் சுப்பிரமணியம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஆ ராசாவுக்கு சாதகமாக சி.பி.ஐ-யிடம் பேசியதாகவும், நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களில் அவர் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அவர் தாஜ் ஹோட்டல் நீச்சல் குளத்தை பயன்படுத்த நீரா ராடியா மூலம் அனுமதி வாங்கியதாகவும், சி.பி.ஐ அறிக்கை சமர்ப்பித்ததாக ஊடகங்களில் செய்தி கசிய விடப்பட்டது. இந்த அடிப்படையில் மோடி அரசு, கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிபதிகள் குழுவை கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த ‘குற்றங்கள்’ எதுவும் இவர்களே சொல்லிக்கொள்ளுமளவு முக்கியத்துவம் உடையவை அல்ல.

தன்னுடைய பெயர் ஊடகங்களில் அடிபடுவதை பார்த்த கோபால் சுப்பிரமணியம் தன்னை வேண்டுமென்றே அரசு பழிவாங்குவதாகவும், நீதிபதி நியமன பட்டியலில் தன் பெயரை சேர்க்க வேண்டாம் என்று அதை தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கிடையே கோபால் சுப்பிரமணியத்தை தவிர மற்ற மூன்று பேர் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு அதற்கான உத்தரவையும் வெளியிட்டது.

மோடியின் குஜராத் ஆட்சியை அம்பலப்படுத்தும்படி செயல்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்குவது என்ற நடவடிக்கையின் அடுத்த இலக்குதான் கோபால் சுப்பிரமணியம்.

ஆனால், கோபால் சுப்பிரமணியமோ மோடியையோ அமித் ஷாவையோ நேரடியாக குற்றம் சாட்டாமல் பின்வாங்குகிறார். சோராபுதீன் வழக்கில் தான் தற்செயலாகத்தான் நீதிமன்ற நண்பராக பொறுப்பேற்க நேர்ந்தது என்றும், மோடிக்கு எதிராகவோ, அமித் ஷாவுக்கு எதிராகவோ தனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்றும் உண்மையில் அமித் ஷாவுக்கு பிணை வழங்குவதை தான் ஆதரித்ததாகவும என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்திருக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை நீரா ராடியா ஒரு வழக்கில் வாதம் செய்ய அமர்த்தி அதற்கான கட்டணத்தை கொடுத்தாகவும் அதைத் தவிர வேறு தொடர்பு இல்லை என்று அவர் கூறுகிறார். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முனபு அதிகரித்து வரும் தனது உடல் எடையை குறைக்க விரும்பிய போது தாஜ் மான்சிங் ஹோட்டல் (டாடா குழுமத்துக்கு சொந்தமானது) நீச்சல் குள உறுப்பினராக்க முன் வந்ததாகவும் அந்த கட்டத்தில் நீரா ராடியா அவரை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாகவும் கூறுகிறார்.

உண்மையில், தாஜ் நீச்சல் குளமோ, நீரா ராடியாவோ, டாடாவோ மோடிக்கோ, பா.ஜ.கவுக்கோ பிரச்சனை இல்லை. டாடாவின் நானோ கார் திட்டத்துக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை வாரி இறைத்தவர் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி. அந்த டீலுக்கு தரகு வேலை பார்த்தவர் கார்ப்பரேட் தரகர் நீரா ராடியா.

என்.டி.டி.வி விவாதத்தில் கலந்து கொண்ட பா.ஜ.கவின் பேச்சாளர் சுப்பிரமணியன் சாமி, கோபால் சுப்பிரமணியம் திறமையான வழக்கறிஞராக இருக்கலாம், தனிப்பட்ட முறையில் நேர்மையானவராக இருக்கலாம், ஆனால் ராமர் சேது வழக்கில், ராமன் ஒரு கற்பனை பாத்திரம்தான் என்று நீதிமன்ற பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். அந்த அடிப்படையிலேயே அவரது நியமனத்தை நிராகரிக்கலாம் என்று கூறுகிறார். ஒருவரது திறமை, நேர்மை இவற்றுக்கு அப்பாற்பட்டு எங்கள் அரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் அவரை எப்படி நீதிபதியாக நாங்கள் அனுமதிப்போம். இது எங்கள் அரசு, நாங்கள் இப்படித்தான் நடந்து கொள்வோம் என்று மோடி அரசின் ஆதிக்கத்தை வெளிப்படையாக முன் வைக்கிறார்.

விவாதத்தில் கலந்து கொண்ட பிற மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களோ இந்த அரசியல் அடாவடியை கண்டிக்காமல், விவகாரம் ஊடகங்களில் கசிய விடப்பட்டிருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் நியமனத்துக்கான நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கக் கூடாது என்றும், உச்சநீதிமன்றம் என்ற அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் புலம்புகின்றனர்.

மோடியும், அமித் ஷாவும், சுப்பிரமணியன் சாமியும் வைப்பதுதான் சட்டம். அவர்கள் சொல்வதுதான் உண்மை. இதை ஏற்காதவர்கள் சோராபுதீன் ஷேக் சந்தித்த முடிவை சந்திக்க நேரிடும். சோராபுதீன் ஷேக் வழக்கில் நேரடி சாட்சியமான துளசிராம் பிரஜாபதி குஜராத் கொலை அரசால் போட்டுத் தள்ளப்பட்டதை அணுக்கமாக பார்த்த கோபால் சுப்பிரமணியத்துக்கு தான் நீதிபதியாக நியமனம் ஆவதற்கு மட்டுமில்லை, வழக்கறிஞராக தொடர்வதற்கே இந்த அரசு உலை வைத்து விடும் என்ற பயம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

இனி இந்தியாவின் நீதிபதிகள் பாஜக அரசுக்கு பயந்து கொண்டே தமது தீர்ப்புகளை எழுத முடியும். மோடியின் விருப்பத்திற்கு மாறாக எந்த நீதிமன்றமும் பேசமுடியாது. பாசிசம் ஆட்சிக்கு வந்தால் போலி ஜனநாயகம் கூட அமலில் இருக்காது.

___________________________

பார்க்க:

Watch: Gopal Subramanium to NDTV – CBI asked to ‘Dig Up Dirt’ on Me

 

அரசுக் கல்லூரியில் கல்விக் கொள்ளையர்கள் – விரட்டிய புமாஇமு

4

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 25-6-2014 முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது ஆர்வமாக விருத்தாசலம் அதை சுற்றி உள்ள கிராமப் புறங்களிலிருந்து காலை முதல் மாணவர்கள் வரத் தொடங்கினார்கள்.

kolanjiappar-entranceஅதே நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் வாகனங்களுடன் வந்து சேர் டேபிள் போட்டுக் கொண்டு மாணவர்களை அழைத்து, “எங்கள் கல்லூரி தரம் சிறந்த்து சிறந்த பேராசிரியர்கள் கொண்டு வகுப்பு நடத்துகிறோம். அனைத்து வசதிகளும் இருக்கிறது. இங்கு பேராசிரியர்கள் பற்றாக்குறை, போதுமான வசதிகள் இல்லை” என அரசு கல்லூரிகளில் உள்ள குறைகளை கூறி கிராமப் புற மாணவர்களை தங்களுடைய கல்லூரிக்கு ஆள் சேர்க்கும் வேலை செய்து வந்தார்கள்.

இதை அறிந்த நமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் உடனே கல்லூரி வளாகத்துக்கு செல்லும் போது சி.எஸ்.எம் கலைக் கல்லூரி (எறுமனுர்) வாகனம் மூன்றும் பி.பி.ஜே கலைக் கல்லூரி (ஸ்ரீமுஷ்ணம்) வாகனம், ஜவஹர்லால் நேரு மகளிர் கலைக் கல்லூரி (உளுந்தூர்பேட்டை) வாகனம் அணிவகுத்து அரசு கல்லூரி வளாகத்துக்குள் நின்றன. அருகில் டேபிள் சேர் போட்டு கொண்டு மாணவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தனர். மேலும் கல்லூரிக்குள் டாக்டர் ராமதாஸ் கலைக் கல்லூரி (சின்னவடவாடி) மற்றும் திருவள்ளுவர் கலைக் கல்லூரி (குறிஞ்சிப்பாடி) ஆகிய கல்லூரிகள் அரசு கல்லூரி வளாகத்துக்குள்ளே அடமிஷன் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அனைத்தையும் தோழர்கள் படம் எடுத்து கொண்டு கல்லூரி முதல்வரை சந்திக்க சென்றோம். மதியம் உணவு நேரம் என்பதால் முதல்வரை சந்திக்க 30 நிமிடம் ஆகியது. முதல்வரை சந்திக்க அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றொம். கல்லூரி முதல்வரை அவருடைய அறைக்கு அழைத்து சென்று தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் வேலையை கூறி மனு ஒன்று கொடுத்தோம். உடனே, “நான் காலையிலேயே யாரும் வளாகத்துக்குள்ளே வரக் கூடாது என்று எச்சரித்தேன். வந்த சாமியானா போட்டவர்களை வெளியே போக சொன்னேன்” என்றார். உடனே தோழர்கள், “கல்லூரி வளாகத்துக்குள் 10-க்கும் மேற்பட்ட வாகனம் நிற்கின்றன, வந்து பாருங்கள்” என்று கூறினார்கள்.

“எங்களிடம் மேன் பவர் இல்லை, தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் அடாவடிக்கு என்ன செய்வது” என்று கேட்டார்.

“உடனே வளாகத்தை விட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் வெளியேற வேண்டும் ” என கூறியவுடன், “வாருங்கள் போகலாம்” என்று நமது தோழர்களையும் அழைத்து கொண்டு மற்ற பேராசிரியர்களையும் போன் செய்து அழைத்தார். வளாகத்துக்குள்ளே இருந்த ராமதாஸ் கலைக் கல்லூரி விண்ணப்ப படிவங்களை அவர்களிடமிருந்து கல்லூரி முதல்வர் கைப்பற்றி கொண்டார். கைப்பற்றி கொண்டு, “கல்லூரியை விட்டு வெளியே போய் விடுங்கள், இல்லை என்றால் நான் போலிசை கூப்பிட வேண்டிருக்கும்” என்று கூறினார்.

மற்ற பேராசிரியர்களும் அவர்களை விரட்டினார்கள். அவர்கள் தோழர்களை முறைத்து பார்த்து கொண்டே வெளியே சென்றார்கள். கல்லூரியை விட்டு வெளியே வந்து கேட்டில் நின்று கொண்டு, “இவர்களை யார் உள்ளே விட்டது. உடனே வாகனங்கள் மற்றும் சேர், டேபிள், பேனர் என அனைத்தையும் எடுத்து கொண்டு போய் விடுங்கள். இல்லை என்றால் போலிசை வரச்சொல்லட்டுமா” என்ற அதட்டி பேசினார். என்ன நடக்கிறது என தெரியாமல் தனியார் கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களை திக்கு முக்காட செய்தோம்.

kolanjiappar-frontசற்று நேரத்தில் நமது தோழர்கள் தான் இதற்கு காரணம் என்று புரிந்து கொண்ட தனியார் கல்லூரி ஆட்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள்.

“நாங்கள் கல்லூரியில் சேர்பவர்களையா தடுக்கிறோம். சீட் கிடைக்காத மாணவர்களை தான் சேர்க்கை நடத்துகிறோம்” என்று நம்மிடத்தில் ஆவேசமாக கேட்டார்கள்.

“நீங்கள் தான் ஊர் முழுக்க விளம்பரம் வைத்துள்ளீர்களே. அப்புறம் என்ன அரசு கல்லூரிக்கு வரும் மாணவர்களை அரசு கல்லூரி தரம் இல்லை என்று கூறி ஏமாற்றி சேர்க்க நினைக்கீறிர்கள்” என்று பேசியஉடன் தோழரை சுற்றி வளைத்து கொண்டனர். அச்சுறுத்தும் வண்ணம் அனைத்து கல்லூரிகளும் சேர்ந்து கொண்டு, “நாங்கள் கல்லூரிக்குள்ள வந்தா சேர்க்கிறோம். நீங்க யார்” என்று கேட்டார்கள். “நாங்கள் தனியார் மய கல்வியை ஒழிக்க வேண்டும் என்று பேராடக்கூடிய புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள். இது போன்று உங்கள் கல்லூரிக்குள் வந்தால் நீங்கள் அனுமதிப்பீர்களா” என்று கேட்டோம்.

“ஒருவர் எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது” என்று கூறினார்.

“அதற்கு என்ன? அரசு கல்லூரிக்கு வரும் மாணவர்களை காசு கொடுத்து படிக்க சொல்லுகிறீர்களா” என்று கேட்டோம்.

அதற்குள்ளே கல்லூரி முதல்வர், “இவர்களிடம் நீங்கள் பேசாதீர்கள்” என்று தோழர்களை அமைதிப்படுத்த முயன்றார்.

“எல்லா கல்லூரியும் வாகனங்களை எடுத்து கொண்டு வெளியெ போய்விடுங்கள். எனக்கு மேல் இடத்திலிருந்து பிரஷர் மேல் பிரஷர் வருகிறது. இல்லை என்றால் போலீசை கூப்பிடுற மாதிரி இருக்கும்” என்றார் முதல்வர்.

மேலும் சில பேராசிரியர்கள் நம்மிடத்தில் வந்து, “900-ம் பேர் சேர்க்க வேண்டும் ஆனால் 4100 விண்ணப்ப்கள் வந்துள்ளது. எப்படி இங்கே சேர்ப்பது” என்று கேட்டார்கள். அதற்கு, “நமது அரசு கல்லூரி உள்ளே வந்து தனியார் கல்வி நிறுவனம் மாணவர்கள சேர்ப்பதை அனுமதிக்க முடியுமா?  தனியார் முதலாளிகள் கல்வி கொள்ளை அடிப்பதை அனுமதிக்க முடியாது” என்று அவர்களிடம் விளக்கினோம்.

“அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கு அனைவருக்கும் வேலை வழங்கு என்று போராடக் கூடிய புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணி அரசு கல்லூரிக்கு வந்து தனியார் கல்வி நிறுவனங்கள் ஆள் சேர்ப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று பகிரங்கமாக அறிவித்தோம். அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தோழர்களையும் முறைத்து பார்த்து கொணடே வெளியேறினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம். கடலூர் மாவட்டம்.

ஆட்டிறைச்சி தொழிலை அலைக்கழிக்கும் பார்ப்பனியம்

107

டந்த ஜூன் 17-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இறைச்சி பறிமுதல் என்ற செய்தியை சிலர் பார்த்திருக்கலாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வந்த ரயிலில் சுகாதாரமற்ற முறையில் பேக்கிங் செய்யப்பட்டிருந்த ஆட்டிறைச்சி 3,300 கிலோ வந்திறங்கியதை, மாநகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர்கள் கைப்பற்றி, அது கெட்டுபோய்விட்டது என்று அறிவித்து, பிளீச்சிங் பவுடர் தெளித்து கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் புதைத்திருப்பதாக அந்த செய்தி தெரிவித்தது.

இறைச்சிஅவ்வப்போது இப்படி கெட்டுப்போன இறைச்சி பிடிபட்டாலும் தொடர்ந்து இப்படி ஏன் ஆட்டிறைச்சி சென்னை போன்ற நகரங்களுக்கு வந்து கொண்டேயிருக்கிறது? ஏன் இதனை அரசால் தடுக்க முடியவில்லை?

இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 63 லட்சம் டன் இறைச்சி அளவுக்கு கால்நடைகள் வெட்டப்படுகின்றன. இதில் 40-50% மட்டுமே உள்நாட்டுக்கான உணவாக பயன்படுகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் டன் வரை  எருமை மாட்டு இறைச்சி ஏற்றுமதியாகிறது. இது தவிர மொத்தமாக மாட்டு இறைச்சி என்று பார்த்தால் 18.9 லட்சம் டன் வரை 2012-13 நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனால் தான் அப்போது பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி, ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரே புரட்சி பிங்க் புரட்சி (pink revolution, இறைச்சியின் வண்ணம்) என்று கிண்டலாக அதனை குறிப்பிட்டிருந்தார். அதாவது மன்மோகன் சிங் அரசு புனிதமான பசுவை உள்ளிட்டு கால்நடைகளை கொன்று ஏற்றுமதி செய்து வருகிறது என்பதே மோடியின் காவிக் கவலை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இந்த ஏற்றுமதியின் அளவு 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடியாலும் காவிக் ‘கருணையுடன்’ கால்நடைகளை காப்பாற்றி இந்த பிங்க் புரட்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் இதனால் நாட்டுக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருவாய் ஆண்டுக்கு ரூ 21,000 கோடி ஆகும். ஒருக்கால் இந்த கால்நடைகளை தாயுள்ளத்துடன் காப்பற்ற வேண்டுமென்றாலும் அதற்கு எந்த ஸ்வயம் சேவகனும் தயாராக இருக்க மாட்டார்கள். இறைச்சி விற்பனை இல்லாமல் கால்நடை பொருளாதாரம் இல்லை.

2007 கால்நடைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 15.4 கோடி ஆடுகள் உள்ளன. ஏறக்குறைய ஒரு கோடி கிராம மக்களுக்கு ஆடு வளர்ப்புதான் ஜீவாதாரமான தொழில். நாட்டிலேயே அதிகமான ஆடுகள் (2.15 கோடிகள்) ராஜஸ்தானில் உள்ளன. அதாவது மொத்த ஆடுகளின் தொகையில் இது மாத்திரம் 14%. தமிழகத்தில் 1.07 சதவீதம் மட்டும் தான் ஆடுகள் உள்ளன. உண்மையில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் நாட்டின் பத்து சதவீத ஆடுகள் உள்ளன. இந்தியாவில் பத்து ஆண்டுகளில் ஆடுகளின் எண்ணிக்கை இரட்டிப்படைந்திருக்க, எதிர் விகிதங்களில் மேய்ச்சல் நிலம் தொடர்ச்சியாக குறைந்தும் வருகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ‘வளர்ச்சி’யால் இது அதிகரித்துள்ளது.

மாட்டிறைச்சிமற்ற மாநிலங்களில் ஆடுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 15% மட்டுமே அதிகரிக்க, ராஜஸ்தானில் மாத்திரம் 27% அதிகரிக்கிறது. விவசாயத்திற்கோ இல்லை நகரமயமாதலுக்கோ வழியில்லாத தரிசு நிலப்பரப்பு அதிகரிப்பால் இது சாத்தியமாகிறது. விவசாயத்தை விட ஆடு வளர்ப்பு கட்டுபடியாகும் நிலையில் இருப்பதால் எல்லா விவசாயிகளுமே இங்கு ஆடு வளர்ப்புக்கு மாறி வருகின்றனர். தரிசு நிலமே ராஜஸ்தானில் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகிறது. இங்கு 60 சதவீத விளைச்சல் நிலமே தரிசாக மாறி விட்டது. கடந்த 50 ஆண்டுகளில் 40 முறை வறட்சியை சந்தித்துள்ள மாநிலம் இது. மொத்தமுள்ள 2.16 கோடி ஹெக்டேர் விளைச்சல் நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நிலப்பரப்பில்தான் விவசாயம் நடக்கிறது. செயற்கை உரங்களால் நிலம் மலடு தட்டிப் போவதும், நிச்சயமற்ற பருவநிலைகளும் சேர்ந்து ஆல்வார் போன்ற வளமையான பகுதிகளில் கூட ஆட்டு பண்ணைகளையும், கால்நடை விவசாயிகளையும் தோற்றுவித்துள்ளது. ஆல்வாருக்கருகில் உள்ள பலாடி தினசரி ஆட்டுச் சந்தையில் நடக்கும் ஒருநாள் வியாபாரம் ரூ 1.5 கோடி என்கிறார்கள்.

ராஜஸ்தானின் மேற்கு பகுதியில் சிறு விவசாயிகளின் 60 சதவீத வருமானம் கால்நடை வளர்ப்பில் இருந்துதான் பெறப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கருத்தரிக்கும் கால்நடைகளை பயிர்களில் போகம் எடுப்பது போல எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறை கிடைக்கும் கன்றுகளின் எண்ணிக்கையை பொறுத்து இவர்கள் வளர்சியடைவது இருக்கிறது. ஆடுகளை இவ்வளவு உற்பத்தி செய்தாலும் இங்கு கணிசமான மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மிகவும் தீவிரமான பார்ப்பனியக் கோட்டையாக இருப்பதால் இங்கே பிற்போக்குத்தனங்களுக்கு பஞ்சமே இல்லை. இதனால் இங்கிருக்கும் இடைநிலை சாதிகளும் இதற்கு பலியாகியிருக்கின்றனர். இதுதான் பாஜக போன்ற கட்சிகள் இங்கு தங்குதடையின்றி வளர்வதையும், மன்னர் பரம்பரையை சேர்ந்த சிந்தியா குடும்பம் முதல்வர் பதவியை அலங்கரிப்பதையும், சதி, குழந்தை திருமணம் போன்ற சமூக அவலங்களும் ‘சாதனைகளாக’ இருக்கும் மாநிலத்தில் இறைச்சி உணவுக்கு ஆதரவில்லை என்பது ஒரு யதார்த்தம்.  அதனால், அசைவ உணவு பழக்கம் கொண்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கோ அது எளிதில் கிடைத்து சாப்பிடும் சூழல் இல்லை.

ஆடு வளர்ப்புமாடு வளர்ப்பில் குஜராத்தும், ஆடு வளர்ப்பில் ராஜஸ்தானும் நாட்டின் முன்னணி மாநிலங்களாக இருந்த போதிலும், அங்கு பார்ப்பனிய அடிமைத்தனமும், இடைநிலைச் சாதிகளிடையே பார்ப்பனியமயாக்கும் முயற்சியும் அவர்களை இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருந்து தூர விலக்கி வைத்துள்ளன. அங்கு உள்ள ஜைன மதங்களை சேர்ந்தவர்களது புலால் உண்ணாமையும் சேர்ந்து அங்கு வெட்டப்படும் ஆடுகளின் இறைச்சியை கட்டாய ஏற்றுமதியை நோக்கித் தள்ளுகின்றன.

ஆனால் இத்தகைய வியாபாரங்களில் ஆதிக்க, இடைநிலை சாதிகளும்,பார்ப்பனர்களும்,ஜைன மதத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பது இவர்களுக்கு பொருந்தாது போலும்.

மூன்றாவதாக அதிகபட்ச ஆடுகள் பீகார், தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் சம அளவில் இருக்கின்றன. தமிழகத்தில் நகர்மயமாதலின் தாக்கமும், பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இருப்பதால் இங்கு கணிசமாக மக்கள் இறைச்சியை அதிக அளவில் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். எனினும் கிராமப்புற விவசாயிகளைப் பொறுத்த வரையில் இறைச்சி சாப்பிடுவது ஆடம்பரம் என்ற பொருளாதார காரணத்தால் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. மற்றபடி பெரும்பாலான சிறு நகரங்கள், பேரூராட்சிகள் வரை தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், வடகிழக்கு போன்ற மாநிலங்களில் கணிசமானோர் ஆட்டிறைச்சியையும், ஓரளவு மாட்டிறைச்சியையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். கேரள, வங்கத்தில் இடதுசாரி செல்வாக்கு, வடகிழக்கில் இந்தியாவிலிருந்து வேறுபடும் பண்பாட்டு வரலாறு காரணமாக இறைச்சி நுகர்வு அதிகம் இருக்கிறது.

நாட்டிலேயே மொத்த இறைச்சி உற்பத்தியில் குறிப்பாக மாட்டு இறைச்சி உற்பத்தியில் உத்திர பிரதேசம்தான் முதலிடத்தில் உள்ளது. அதுவும் இன்னொரு இந்துத்துவா கோட்டையாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் மாட்டிறைச்சியை அதிகமாக உணவில் பயன்படுத்துபவர்களில் கேரள மக்கள்தான் இந்திய அளவில் முன்னணியில் இருக்கின்றனர். பசுவைக் கொல்வதை சில மாநிங்கள் தடை செய்துள்ளன. இதனை பாஜக மட்டுமே செய்யவில்லை. காங்கிரசும் இதில் அவர்களது பங்காளிதான். குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம் டெல்லி ராஜஸ்தான் போன்ற பிற்போக்கு மிகுந்த மாநிலங்களில் பசுவைக் கொல்ல தடை இருக்கிறது. கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் வடகிழக்கில் மாத்திரம் தான் பசுவை சில நிபந்தனைகளுக்குட்பட்டு இறைச்சிக்காக கொல்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி இருக்கிறது என்பதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். மாறாக எமனது வாகனமான எருமைக் கிடாக்களையும், மலடு தட்டிப் போன எருமை கிடாரிகளையும் பொதுவாக இறைச்சிக்காக பயன்படுத்துவது நடைமுறையில் இருக்கிறது. கருப்பாக பிறந்த காரணத்தினால் எருமைகளுக்கு பார்ப்பனிய புனித பீடத்தில் இடமில்லை.

எருமை மாடுஎன்னதான் புனிதக் கதை பேசினாலும், உலக அளவில் பசு, எருமை இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பசு, எருமைக் கறிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நல்ல மவுசு இருக்கிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகள் இயற்கையோடியைந்த முறையில் வளர்க்கப்படுவதும், அமெரிக்க மாடுகளை விட குறைவான வயதில் (ஏறக்குறைய 15 வயது) வெட்டப்படுவதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இந்திய வியாபாரிகள் சிலர் இதனை விட குறைந்த வயதிலும் மாடுகளை வெட்டி அவற்றின் இறைச்சியை ஏற்றுமதி செய்யும்போது கணிசமாக விலையை அதிகமாக பெற முடிகிறதாம்.

பொதுவாக இந்திய இறைச்சி சவுதி, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஸ்பெயின், வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கால்நடைகளின் குடல்களால் செய்யப்பட்ட பண்டங்கள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட இறைச்சி வகைகள், இறைச்சி குழம்பு, அடர் மாமிச தூள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என பலவிதமாக பாடம் செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதியாகிறது. இத்தகைய பாடம் செய்யும் வேலைகளில் சிறிய அளவில் கால்நடை வளர்ப்பவர்களால் நேரடியாக ஈடுபட முடியாத நிலைமையில் பெரிய அளவிலான மாடு வளர்ப்பு பண்ணைகள்தான் இதனை செய்கின்றன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகள் சட்டப்பூர்வமற்ற முறையில் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளிடம் போகிறார்கள். மிகவும் அடிமாட்டு விலைதான் அவர்களுக்கு கிடைக்கிறது.

இந்தியாவில் இருந்து 80 சதவீத ஆட்டிறைச்சி இசுலாமிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதியாகிறது. வெள்ளாட்டு இறைச்சி ரூ 300 க்கும், செம்மறியாட்டு இறைச்சி ரூ 200 க்கும் என்ற விலையில் தான் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. ஆனால் இந்த ஏற்றுமதியில் பெரிய அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கார விவசாயிகளாலேயே ஈடுபட முடிகிறது. பத்து ஆடுகள், இருபது ஆடுகள் எல்லாம் வைத்திருப்பவர்களால் இத்தகைய ஏற்றுமதி சாத்தியமில்லை.

விவசாய மற்றும் உணவு உற்பத்திக்கான ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் ஏற்றுமதியாகும் உணவுப்பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. வெறும் தரம், கொள்கை வகுப்புடன் மட்டும் நில்லாது பெரிய ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் 170 ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்தலுக்கான குளிரூட்டும் நிலையங்களையும் அமைத்துள்ளது. இதுபோக தனியார் வசமுள்ள இத்தகைய நிலையங்களுக்கு தலா ரூ 15 கோடி வரை மானிய உதவியும் அளித்திருக்கிறது. 11-வது (2007-12) மற்றும் 12-வது (2012-17) ஐந்தாண்டு திட்டங்களில் எருமை கிடாக்களை காப்பாற்றுவது, மற்றும் இறந்து போகும் வீட்டு விலங்குகளை கையாள்வது குறித்தெல்லாம் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவையெல்லாம் இருந்தாலும் பார்ப்பனிய செல்வாக்கினால் இறைச்சி தொழில் என்பது ஏதோ ஒரு சட்டவிரோத தொழில் போலவே இங்கு பார்க்கப்படுகிறது.

இறைச்சிஇந்த நிலையில் சிறுவிவசாயிகள் ஆட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய குளிர்சாதன வசதிகளை வட இந்திய மாநில அரசுகளும் ஏற்படுத்தித் தரவில்லை. ஒருபுறம் கோசாலைகளை அமைத்து ஜீவகாருண்யம் பேசும் இந்துத்துவா ஆட்சியாளர்களால் இம்மாநிலத்தில் இந்த இறைச்சி ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அப்படிப்பட்ட முயற்சிகள் மக்களின் வாழ்வாதார அடிப்படையான பிரச்சினையில் கைவைத்திடும் என்பதால் இம்மாநிலங்களில் பாஜக ஆட்சியாளர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். அதே நேரத்தில் இறைச்சி, பால் போன்றவற்றை பயன்படுத்தாமால் தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் தமது சாதியை பார்ப்பனர்களுக்கு இணையாக வளர்த்து விட இடைநிலை மற்றும் ஆதிக்க சாதியினர் முயன்றும் வருவதால் ஆடுகளை இறைச்சியாக்கி ஏற்றுமதி செய்வது மாத்திரம்தான் இங்கு சாத்தியமாகிறது. உள்ளூர் நுகர்வு அதிகரிக்க வழியில்லாமல் இருக்கிறது.

அதே நேரத்தில் இம்மாநிலங்களில் இருந்து அடிமாடுகளும், கூடவே அங்கிருந்து வெட்டி இறைச்சியாக மாற்றப்பட்டு கெட்டுப் போன நிலைமையில் இங்கு வருவதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம்தான் உள்ளது.

சென்னை வரும் இத்தகைய ஆட்டு இறைச்சி ஏறக்குறைய கிலோ ரூ 150க்கே சில்லறை விற்பனையில் கிடைக்கிறது. சென்னையில் உள்ளூரில் வெட்டப்படும் ஆட்டிறைச்சி ரூ 480 வரை விற்கப்படுகிறது. ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இருந்து தினந்தோறும் 4,000 கிலோ பழைய ஆட்டு இறைச்சி இங்கு வருகின்றது. ஜெய்ப்பூரில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்டிரலை அடைய இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது. குளிர்சாதன வசதியிருப்பினும் வரும் இந்த ஆட்டிறைச்சி சென்னை சென்டிரல் வருவதற்குள்ளாகவே கெட்டுப்போவதும், திறந்து பார்க்கும்போது அதில் புழுக்கள் நெளிவதும் தினசரி காணக் கிடைப்பதுதான்.

இப்படி ரயிலில் வரும் உணவுப் பொருட்களுக்கு முறையாக ரயில்வே சுகாதார அலுவலர் சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும் என்பது தான் நிபந்தனை. ஆனால் இதெல்லாம் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. ரயில்வே பார்சல் மூலமாக அனுப்பப்படும் இந்த ஆட்டிறைச்சிக்கான பெறுநர் முகவரி ஏதாவது ஒரு பெயருடன், சென்னை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். இங்குள்ள மொத்த வியாபாரியுடன் ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளும் இணைந்துதான் இந்த வலைப்பின்னல் செயல்பட்டு வருகிறது.

இப்படி வரும் இறைச்சியை பெரும்பாலும் சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக வாடிக்கையாளர்கள் வாங்குவது குறைவுதான். அதே நேரத்தில் சிறு உணவங்கள்தான் இவற்றை வாங்குகிறார்கள் என்பதும் முழு உண்மையில்லை. வரும் இறைச்சியில் பெரும்பாலானவற்றை வாங்குவது சென்னையில் உள்ள உயர்தர உணவகங்கள்தான். காரணம் இதனை கொஞ்சம் சுத்தப்படுத்திய பிறகு நீண்ட நாட்களுக்கு பதப்படுத்தும் குளிரூட்டப்பட்ட உயர் தொழில்நுட்பம் அவர்களிடம் இருக்கிறது. அடுத்து அங்கு வரும் வாடிக்கையாளர்கள், கூடுதலாக காசு கொடுத்தால் பொருள் தரமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதால் ராஜஸ்தான் கறியையை உள்ளூர் கறியோடு சேர்த்து விற்றால் யாரும் கண்டு பிடிக்க முடியாது.

இதற்கு அடுத்து இந்த கறி வாங்கப்படும் முக்கியமான இடம் டாஸ்மாக் பார்கள் என்கிறார்கள். அதாவது ஒரு இடத்தில் நம்பிக்கை என்கிற நடுத்தர வர்க்க போதையையும், இன்னொரு இடத்தில் உண்மையிலேயே போதையையும் இந்த கெட்டுப்போன இறைச்சியை விற்கும் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சாலையோர உணவகங்களிலோ பெரும்பாலும் சென்னையிலேயே வெட்டப்பட்டு மாநகராட்சி முத்திரை இட்டு வரும் செம்மறியாட்டு இறைச்சியில் கழித்துக்கட்டப்படும் எலும்புகள் மிக்க கறியை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களால் மறுநாளைக்கு கூட இறைச்சியை பத்திரப்படுத்த வசதிகள் இல்லாத காரணத்தால் உண்மையில் இங்குதான் அன்றன்று அறுக்கப்படும் ஆடுகளின் புத்தம் புதிய கறி கிடைக்கிறது. சிறு உணவங்களிலும் இதுதான் நிலைமை.

இப்படி இந்தியாவில் வளமான கால்நடை வளமும், மக்களுக்கு மலிவான விலையில் புரதச் சத்து கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆட்டிறைச்சியோ இல்லை மாட்டிறைச்சியோ மொத்த நாட்டிற்கும் கிடைத்து விடுவதில்லை. வட இந்திய மாநிலங்களில் பெரும் கால்நடை இருந்தும், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் நுகவர்வு இல்லாமல் வீணாக கெட்டுப்போக விடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் நுகர்வு அதிகம் இருந்தாலும் இங்கே போதிய அளவு இறைச்சி கிடைப்பதில்லை. அதனால்தான் இங்கு விலைகள் அதிகம் இருக்கின்றன.

பார்ப்பனியம் எனும் அமைப்பு முறை எப்படியெல்லாம் நமது நாட்டையும், மக்களையும் அலைக்கழிக்கிறது என்பதற்கு இந்த ஆட்டிறைச்சி உதாரணமே போதுமானதல்லவா?

–    கௌதமன்.