திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை!

140
திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா

‘‘ எப்பா இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா…. உள்ள வாப்பா.. இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா….ஐய்யோ…. ஐய்யோ…எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா… ராஜா மாதிரி படிக்கும்பா எம் பொண்ணு… எப்பா ஏழை பாழைங்கண்ணா படிக்கத் கூடாதப்பா மீன் பிடிக்கிறவண்ணா போகக் கூடாதாப்பா எதுனாச்சும் நடவடிக்கை பண்ணிக் கொடுங்கப்பா’

குனிந்து குடிசைக்குள் நுழைந்தால் அதுதான் பி.காம் மாணவி திவ்யாவின் வீடு மொத்தமே பதினைந்து பதினைந்து அடி நீள அகலத்திலான குடிசை. அம்மா சாந்தி, அப்பா, பாட்டி, இரண்டு தம்பிகளோடு திவ்யா வாழும் வீடும் அதுதான். அன்றாடங் காய்ச்சிகள் ஆனாலும் சோற்றுக்கு மீதி எதுவும் இல்லை. வருகிற வருமானத்தில் வயிற்றைக் கழுவி வாழும் திவ்யாவின் தாய் சாந்திக்கு பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை………அவரே பேசுகிறார் இப்படி…,

‘‘ நாங்க பட்டினவரு கடலுக்குத்தான் போவார் அவர். சொந்தமா கட்டுமரமோ வலையோ கிடையாது கட்டுமரத்துல கூலிக்கு கடலுக்குப் போவாரு ஐம்பதும் கிடைக்கும் நூறும் கிடைக்கும் ஐநூறும் கிடைக்கும் ஆனால் அவரு குடி இப்போ கடல்ல வருமானம் இல்ல ஏண்ணா அவருக்கு கால்ல கட்டி வந்து அவுரால கடலுக்கு போக முடியல்ல அதனால் வாச்மேன் வேலை பாத்தாரு அவருக்கு 3, 500 ரூவா சம்பளம் நான் பெசண்ட்நகரில் இருக்குற ராஜாஜி பவனில் பெருக்குற வேலை பாக்குறேன் 2,500 ரூபாய் சம்பளம் . இது போக எங்கம்மா திவ்யாவோட பாட்டி இட்லி சுட்டு விக்கிறாங்க அவங்கதான் திவ்யாவோட படிப்புச் செலவை ஏத்துக் கிட்டாங்க. அவ அடையாரில் இருக்கிற அன்னை சத்தியா கல்லூரியில் பிகாம் படிக்கிறா ஒரு வருஷத்துக்கு 14,500 ரூபாய் பீசு. அதை இரண்டு தவணையா கட்டுறது திவ்யா பாட்டிதான். நான் வீட்டுச் செலவை பார்த்துப்பேன்….

அண்ணைக்கி சனிக்கிழமை  என்ன நடந்ததுண்ணா அவருக்கு கால் வலி அதிகமாயிடுச்சு பெசண்ட்நகரில் இரண்டாயிரம் ரூபாய் செலவு செஞ்சேன் செரியாகல்ல, ஸ்கேனிங் பண்ணனும்னு எட்டாயிரம் ரூபாய் கேட்டாங்க அது நம்மால முடியாதுப்பாணு ஸ்டேன்லில போனேன். அவங்க உடனே ஆபரேஷன் பண்ணணும்னு சொன்னதால அவரை அங்க ஆஸ்பத்தரில சேர்த்துட்டு இரவு எட்டரை மணிக்கு விட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்தப்போ புள்ள மொகம் வாடியிருந்தது. அதுவா வந்து அம்மா  காலேஜ்ல ஒரு பொண்ணோட மூணாயிரம் ரூபா காணாமப் போயிடுச்சும்மா. எல்லோரையும் சாதாரணமா சோதிச்சுட்டு விட்டுட்டாங்க என்னை மட்டும் தனியா ஒரு ருமுக்குள்ளாற கூட்டினு போய் டிரஸ் எல்லாம் கழட்டி நிர்வாணமாக்கி சோதனை பண்ணினாங்கம்மா சொன்னா, நாளை லீவு (ஞாயிற்றுக்கிழமை) நாள மறு நாள் நான் வந்து அவங்க கிட்டே கேக்குறம்மாண்ணேன். ஆனா எம்பொண்ணு அடுத்த மாசம் எக்சாம் வருதும்மா மார்க் டிக் பண்ணிடுவாங்கம்மாண்ணா… வாழ்வு இல்லாத போயிடும்ணு என்னைத் தடுத்துட்டா எம்பொண்ணு… எப்பா வாழ்வுண்ணா என்னணு எனக்குத் தெரியாதுப்பா ஆனா அவளுக்குத் தெரிஞ்சதுனால எனக்கு அப்படிச் சொன்னாப்பா….

நானும் மறு நா கிளம்பி ஞாயிற்றுக் கிழமை ஸ்டேன்லி ஆஸ்பிட்டல் போயிட்டேன். எம் பொண்ணு எங்கிட்ட சொன்னதோட மட்டுமில்ல இங்கிருந்து மூணாவது ஊட்லருக்குற மேத்தாங்கற பொண்ணுக்கிட்டயும் அவங்க அப்பா அம்மாகிட்டேயும் இதைச் சொல்லி அழுதிருக்கா அவங்க ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்காங்க நான் திங்கட்கிழமை வேலைக்குப் போனோன். அவள் காலேஜ் போனா ஆனா அங்க இவளைப் பார்த்த பிரண்சுங்கோ சிரிச்சிருக்காங்க … திருடி வர்றா பாருணு எம் பொண்ணைப் பார்த்து புள்ளைங்க சிரிச்சிருக்குப்பா… நான் வேலை முடிஞ்சு சாயங்காலம் ஒரு ஏழு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ தலை சரிஞ்சி எம்பொண்ணு தொங்கிட்டுருந்துச்சுப்பா……. ரொம்ப நேரமா தொங்கிட்டாப்பா எம்பொண்ணு……….. ஏம்பா அவ கிளாஸ்லயே அவ மட்டுதாம்பா ஏழ , இங்க இருந்து கூட இரண்டு பசங்க படிக்கிறாங்க ஆனா அவங்க வசதியானவங்கப்பா எம் பொண்ணு ஏழையாப் பொறந்ததால படிக்கக் கூடாதாப்பா? ……………..

அழுது அரற்றும் அந்த ஏழை மீனவத்தாய் சாந்தி தன் மகளின் மரணம் பற்றிக் கொடுக்கும் வாக்குமூலம் இதுதான்.

 

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை

…………………………………………………………………..

திவ்யா சென்னை அடையாரில் இருக்கும் எம்.ஜீ.ஆர் ஜானகி கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாவது ஆண்டு படிக்கும் மாணவி. கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் நான்கு மாணவிகளுள் அனுராதா என்னும் மாணவி மூன்றாயிரம் ரூபாய் எடுத்து வந்ததாகவும் அந்த ரூபாய் காணாமல் போக கடைசி இருக்கை மாணவிகளை அந்த இடத்திலேயே சாதாரணமாக சோதனை செய்து விட்டு திவ்யாவை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்திருக்கிறார்கள். அக்கல்லூரியைச் சார்ந்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் அவமானம் தாங்காத கடுமையான மன வேதனையடைந்த திவ்யா தன் தாயிடமும் பக்கத்து வீட்டிலும் சொல்லியிருக்கிறார். பின்னர் திங்கட்கிழமை கல்லூரி சென்றவரை நண்பர்கள் கிண்டல் செய்ய மனமுடைந்த திவ்யா தற்கொலை செய்துள்ளார். கையில் பணமும் செல்வாக்குள்ள மனிதர்களை வளைக்கும் தந்திரமும் தெரிந்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு திவ்யாவின் படுகொலை ஒரு சாட்சி.

முன்னாள் சாராய வியாபாரிகள், அரசியல் ரௌடிகள், விபச்சார தொழிலதிபர்கள் எல்லாம் கல்வி வள்ளல்களாக வளர்ந்து பள்ளி கல்லூரிகளை கைப்பற்றிய தனியார்மயத்தில் செல்வச்செழிப்பான பின்னணியில் பிறந்து பல லட்சம் ரூபாய்களைக் கொட்டி வளரும் மாணவிளுக்கு இது நேர்வதில்லை. முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் ஏழை மாணவிகளுக்கே இது நடக்கிறது. ஏழை என்றால் திருடுவார்கள் என்கிற மத்யமர் மனோபாவம்தான் திவ்யாவை நிர்வாணப்படுத்தத் தூண்டுகிறது. அங்கிருந்துதான் திவ்யாக்கள் மீதான கொலை வெறி உருவாகிறது.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யாவின் தற்கொலை கடிதம்

குற்றவழக்கு எண்- 265/2011 என்று எண்ணில் சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் பதிவாகியிருக்கும் வழக்கில் திவ்யா தற்கொலை என்று பதிவாகியிருக்கிறது. தற்கொலைக்கு தூண்டியதாகக் கூட இல்லை. திவயாவின்  கொலையால் ஆவேசம் அடைந்த ஊரூர் ஆல்காட் குப்பம் மீனவர்கள் திரண்டு வந்து அடையார் சாலையை மறிக்க ஒரு வழியாக ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி, ஆகிய ஆசிரியைகள் கைது செய்யப்பட்டார்கள்.இல்லை கைது செய்வதாக அந்த மக்களிடம் பாவனை செய்தது போலீஸ். நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கச் சென்ற போது ஒரே நேரத்தில் அவர்கள் நால்வருக்கும் நெஞ்சுவலி வந்து இப்போது அவர்கள் போலீஸ் பாதுகாப்போடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திவ்யாவின் கொலைக்கு நியாயம் கேட்டுப் போன மக்களிடம் நிர்வாகம் ஒரு இலட்சம் தருகிறோம் புதைத்து விடுங்கள் என்று பேரம் பேச அதற்கு சம்மதிக்காத மக்களை போலீஸ் ஒரு வழியாக திருப்பி அனுப்ப செவ்வாய்கிழமை பெசண்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டாள் அந்த பி. காம் மாணவியான திவ்யா.

திவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை
மாணவி திவ்யா – குடும்பத்தினருடன்

இந்த வழக்கில் என்ன நடக்கும்….? என்பது புரியாத புதிரல்ல அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று நான்கு நெஞ்சுவலிக்காரர்களும் கேட்பார்கள் நீதிமன்றமும் அதை அனுமதிக்கும். தனியார் மருத்துவமனையில் வாங்கும் சான்றிதழின் படியும் முதல் தகவல் அறிக்கையில் நிர்வாணச் சோதனை செய்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி ஆகியோரின் பெயரும் இல்லாததாலும் இன்னும் சில நாட்களில் அவர்கள் விடுதலையாகக்கூடும்.  கண்ணியமிக்க நமது நீதிமன்றங்களில் இருந்து 100 குழந்தைகளைக் கொன்ற கல்வி வள்ளல்களே தப்பி விடும் போது நிர்வாணச் சோதனை செய்தவர்கள் தப்புவது என்ன கடினமா?
………………….

திவ்யா இறுதியாக எழுதிய கல்லூரித் தேர்வின் டைம்டேபிள்

திவ்யாவின் குடிசையை இரண்டாகப் பிரித்து தோள் உயரத்தில் எழுப்பட்டிருக்கும் மண் சுவரில் தன் தேர்வு நாட்களை சாக்பீஸ்களால் எழுதி வைத்திருக்கிறார். சுகவீனமுற்ற திவ்யாவின் தகப்பன் ஓரமாக உறங்கிக் கொண்டிருக்கிறார். வீட்டை விட்டு வெளியில் வந்தால் அந்தக் குடிசைப் பகுதியில் பல கார்கள் நின்றிருக்க, வெள்ளுடை வேந்தர்கள் நிறைந்திருந்தார்கள். அங்கு நடந்த சம்பாஷனைகளைக் கவனித்த போது அந்த அரசியல் ரௌடிகள் திவ்யாவின் உடலுக்கு விலை பேசிக் கொண்டிருந்தார்கள்.அந்த ஏழைத் தாயின் கண்ணீருக்கு என்ன விலை தேறுமோ தெரியாது…

_________________________________________

– வினவு செய்தியாளர்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

140 மறுமொழிகள்

  1. மாணவி திவ்யா – B.Com ஒரு பச்சைப் படுகொலை !…

    மாணவி திவ்யா தற்கொலை – இது தாம்பா ஏ ஊடு உள்ள வாப்பா வந்து பாருப்பா…. இதோ இங்க தாம்பா இந்த கொம்புல தாம்பா எம்பொண்ணு தொங்குனா….ஐய்யோ…எவ்ளோ நேரமா தொங்கிச்சுணு தெரியல்ல நாக்கெல்லாம் பூண்டுகினு சரிஞ்சி மேனிக்கு தொங்கினிருந்துப்பா…….

  2. உண்மை குற்றவாளிகள் மிகவும் கடுமையாக சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும்

    • சரிகா ஷாவின் துர்மரணமும், திவ்யாவின் தூக்கும் – பரிதாபத்தில் பரிணாமங்கள் ஏன்?

      ***

      திருக்குவளைக் கருணா நிதி, சாப்பாடு தேடி, திருட்டு ரயில் ஏறி வந்தார் – சென்னைக்கு.
      அன்று அவர் ‘பத்தோடு பதினொன்று’.
      யாரும் அவருக்கு எந்தவிதத்திலும் பரிதாபப் பட்டிருக்க மாட்டார்கள்.
      மாறாக அவரது வறுமையை சாடியிருப்பார்கள்.

      ஒரு உதாரணத்துக்காகவோ, அல்லது, தனது நகைச்சுவை உணர்வை தன் சக மந்திரிகளிடம் காட்டுவதர்காகவோ,
      இன்று அதே கருணா நிதி (இன்றைய சூழலில் பல்லாயிரம் கோடிகளில் ஒருவர்) ஒரு ‘மஞ்சப் பையை’ கக்கத்தில் அடக்கிக் கொண்டு, ஏழையோடு ஏழையாக, ஒரு ரூபாய் அரிசி வாங்க
      ரேஷன் கடை வரிசையில் நின்று, இந்த முறையும் அரசாங்கத்தை ஏமாற்றாமல், உண்மையிலேயே ஒரு ரூபாய் கொடுத்து
      அரிசி வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? :

      தமிழகம் கண்ணீரில் தத்தளிக்கும். தூர்தர்ஷனில் மூன்று நாட்களுக்கு துக்கப் பாட்டு. உணர்ச்சிவயப்படும் தொண்டர்கள்
      தீக்குளிப்பார்கள். தாய்மார்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறுவார்கள். விதியையும் கடவுளையும் மண் வாரித் தூற்றி
      சாபமிடுவார்கள்.

      ஏனிந்த முரண்பாடு?

      திருக்குவளைக் கருணா நிதி தலை காய்ந்து போய், உடல் வாடி, உழைத்த வியர்வையின் வாசத்தோடு, தமிழகத்தின் மெஜாரிட்டி மக்களில் ஒருவராக, டிக்கெட்டு வாங்க காலணாயில்லாமல், ரயிலில் அமர்ந்திருந்தார்.
      இவருக்காக கண்ணீர் விட வேண்டிய மக்கள் கண் மூடி மௌனமாய் இருந்தார்கள். விதியையும் கடவுளையும் மண் வாரித் தூற்ற வேண்டிய மக்கள், இவரை ஏளனப் பார்வை பார்த்தார்கள்.
      ஏனென்றால் அந்த மக்களைச் சுற்றியிருந்தவர்கள் இப்படித் தலை காய்ந்து போனவர்களின் நடுவிலேயே, பிறந்து, வாழ்ந்து,மடிந்துபோயிருந்தார்கள். இந்த ஊரே கோவணம் கட்டிக் கொண்டிருந்தபோது, இன்னொரு கோவணாண்டியைப் பார்த்து எவ்வாறு பரிதாபப் பட முடியும்?

      இன்று, காட்சி மாறி, அவர் அந்தஸ்தில் உயர்ந்து, மிக மிகக் குறைந்த மைனாரிட்டி (எங்கோ கேட்டது போல இருக்கிறது) மக்களில் ஒருவராக, ராஜ ராஜ சோழ பரம்பரை போலவும் சித்தரிக்கப் படுகிறார். இவர் அரிசி வாங்கினால் ஏன் மக்கள் கலங்குகிறார்கள்? நம்மில் ஒருவராகத்தானே அன்று இருந்தார் என்று யாராலும் அதை சாதராணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லையே, ஏன்? ஏனென்றால் அவர் இன்று ஆண்ட பரம்பரை / வாழ்ந்த பரம்பரை / தின்று தீர்த்த பரம்பரை. இந்த இறக்க மனோபாவம்தான் மக்களைக் குழப்புகிறது. இறக்கப்பட வைக்கிறது.

      இன்னும் சில உதாரணங்களைக் கூட எடுத்து வைக்கலாம் :

      1. செல்வி ஜெயலலிதா காது, மூக்கு, கழுத்திலெல்லாம் ஜொலித்த தங்க நகைக் கடையை கழற்றி வைத்துவிட்டு, மக்களோடு மக்களாக பரதேசிக் கோலத்தில் நின்றபோது அல்லது அவருக்கு ‘சிறைத் தண்டனை’ என்று தீர்ப்பு வந்தபோது…

      2. புரட்சிப் புயல் ராகுல் காந்தி திடுமென ஒரு குடிசையில் புகுந்து சட்டியிலிருக்கும் சப்பாத்தியை சாப்பிடும்போது…

      3. காந்தி அண்ணல் அரையாடையுடுத்தி அல்லல் பட்ட போது…

      4. எம்ஜியாருக்கு சாப்பிடும்போது புரைஏறினால்…

      5. நேரு மாமாவின் சட்டையிலிருக்கும் ரோஜா கீழே விழும்போது…

      ***

      அன்று, சரிகா ஷாவின் மரணத்தால், மீடியாக்கள் கொதித்தெழுந்து, தமிழக மக்கள் புரண்டு புரண்டு அழுது, போலிசார் உடனடி நடவடிக்கையெடுத்து, நீதி மன்றம் உடனடித் தீர்ப்பு எழுதி, எல்லாம் சரியாகத்தானே நடந்தது?

      ஆனால், அதே கொத்தெழுதலும், கண்ணீரும், நடவடிக்கையும், நீதியும், இன்று – இந்த திவ்யா மரணத்தில், மறுக்கப்படுவது ஏன்?

      ஏனென்றால் திவ்யா தலை காய்ந்து, ஏழ்மையில் வீழ்ந்து, தமிழகத்து மெஜாரிட்டியில் ஒருவராகக் கிடந்தாள்!

      ***

  3. திவ்யா போன்ற ஏழைகள் இந்த உலகில் பிறப்பதற்கு, படைப்பின் கதாநாயகன் கடவுள்தானே! ஆதலால் இது கடவுள் செய்தது.பாவம் மனிதர்கள் என்ன செய்யமுடியும்.

    இதற்கெல்லாம் தீர்வு கம்யூனிசம் என்று சொன்னால் அது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது,தீவிரவாதம் என்று சொல்வார்கள்.

    • ஒரு இளம்பெண்ணின் அவலமான சாவில் உங்கள் கேடுகெட்ட அரசியலுக்கு ஆதாயம் தேடாதீர்கள், மனம் பதறுகிறது. அப்புறம் அவள் உடலுக்கு விலை பேசும் வெள்ளை வேட்டி சட்டை மாமாக்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இருக்காது.

      ஏழை பாழைகளின் சோகத்தை தனதாக வரிந்தெடுப்பது மனிதத்தன்மை. ஆனால் இதெற்கெல்லாம் தீர்வு கம்யுனிசம் தான் என்று சந்திலே சிந்து பாடுவது மிகவும் கேவலமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் சரி, இதற்கு முன்னாலும் சரி, கம்யுனிசம் எதையும் புடுங்கியதில்லை, இனிமேலும் எதையும் புடுங்கப் போவதுமில்லை. தெருமுனை டீக்கடைகளில் நடத்தும் உங்கள் வெட்டிப் பேச்சுகளால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

      புலி வருது, இயேசு வருகிறார், கல்கி வருகிறார், அல்லா சொர்க்கம் தருகிறார், புரட்சி வருது – எல்லாமே ஒன்றுதான் – வெட்டி அரட்டை.

      • புலி வருது, இயேசு வருகிறார், கல்கி வருகிறார், அல்லா சொர்க்கம் தருகிறார், புரட்சி வருது – எல்லாமே ஒன்றுதான் – வெட்டி அரட்டை.//

        அய்யா தோடா வந்துட்ராரூ வலது மாமா!

        ஒருதர் ஏழையாக பிறப்பதற்கும்,ஒருத்தர் பணக்காரராக பிறப்பதற்கும் சம்மந்தம் இல்லையா? ஒரு பணக்காரனுக்கு வரும் பிரச்சனைகளும்,ஒரு ஏழைக்கு வரும் பிரச்சனைகளுக்கும் வித்தியாசம் இல்லையா. ஏன் கடவுள் வழிபாடுவதில் கூட சாதியைப்பார்க்குற மிருகவெறி பிடித்தவர்கள் வாழ்கின்ற நாடு தானே இது. திவ்யாவை எடுத்துக்கொள்ளுங்கள்,ஏழ்மைதானே அந்த பெண்ணுக்கு சாவை கொடுத்து இருக்கிறது. இது பொருளாதார பிரச்சனை இல்லையா? சாதியின் படிநிலைகளில் பிரச்சனை இல்லையா?அதிகார தீமிர் இல்லையா. நீ தான் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, ஏழைகளின் இறப்புக்கு தனிமனிதர்கள் மட்டும் தான் காரணம் என்று உன் கம்யூனிச எதிர்ப்புகளை சொல்கிறாய்.ஏழைகளின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கம்யுனிசம் தான் இதுதான் சாதி,மத பிரசனைகளுக்கு தீர்வு.பிறகு புரட்சியைப்பற்றி சொல்கிறீர்! புரட்சியைப்பற்றி உனக்கு தெரியவில்லை என்றால் டுனிசியாவைப்பார்,எகிப்தைபார். அப்பவாவது புத்திவரும்.நீ என்றைக்குமே இறக்காமல் இருக்கமாட்டாய்,இறந்துக்கொண்டுதான் இருக்கிறாய்.மாற்றம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.நீ தான் உணராமல் உலரிக்கொண்டு இருக்கிறாய்

        • நீயும் கண்ணைத் திறந்து பார் – துனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் ஜனநாயகத்தை நாடிப் போராட்டம் நடத்துகிறார்கள், கம்யுநிசத்தை தேடி அல்ல.

          மேற்படி பதிவர் திவ்யா தற்கொலைக்கு தீர்வு கம்யுநிசமே என்று போட்டுள்ளார் – இவ்விஷயத்தில் நீங்கள் ஆதாயம் தேடினால் நானும் உள்ளே வருவேன்

      • தமிழ் வலதுசாரி
        தயவு செய்து சொல்லப்பட்ட கதையில் என்ன அரசியல் ஆதாயம் தேடப்பட்டுள்ளது என்று சொல்லுங்கள்.

        மிக மோசமான ஒரு காரியம் நடந்துள்ளது. அதைக் கண்டிக்க உங்களுக்கு மனமில்லை, அதைக் கண்டிக்கிறவர்களை ஏன் கண்டிக்கிறீர்கள்.

        வலதுசாரி என்றாலே பிற்போக்குவாதிதான்.
        தமிழ் வலதுசாரி என்றால் அதிலே கேடுகெட்ட ஒரு வகையா?

        • மேற்படி பதிவர் திவ்யா தற்கொலைக்கு தீர்வு கம்யுநிசமே என்று போட்டுள்ளார், அதற்குத் தான் என் மறுமொழி. உங்கள் குட்டிச்சுவர் சித்தாந்தங்களை வைத்து நாட்டில் நடக்கும் எல்லா கொடுமைக்கும் விளக்கம் சொல்லி கம்யுநிசத்துக்கு ஜால்ர கொட்டுவீர்கள், அதை நான் சுட்டிக் காட்டினால் அது கேடுகேட்டத் தனம் – நல்ல லாஜிக்.

          முதலில் உங்கள் இயக்கத்தில் எல்லோருக்கும் மனிதாபிமானத்தை கற்றுத் தர வேண்டும், அப்புறம் தான் மற்றதெல்லாம்…

  4. இக்கட்டுரையப் படித்து அழுது விட்டேன். ஏழைகளி கண்ணீருக்கு அவர்கள் பழி வாங்க வேண்டும். பண முதலைகளை.

  5. இரண்டு இடங்களில் திவ்யாவிற்கு பதிலாக வித்யா என வருகின்றது. மாற்றவும்.

    மேலும் கைதான அந்த நான்கு பேய்களில் ஒன்றின் கணவர் ஒரு காவல்துறை அதிகாரி எனபது இங்கே குறிப்பிடத்தக்கது

  6. திவ்யா வறியவள்.
    பசியின் வடு முகத்தில்.
    “அதனால் அவள் திருடியோ”
    ஆண்டைகள் அடிமைகளைத்தான்
    சந்தேகிக்கிறார்கள்.

    சொல்லித்தரும்
    பள்ளிகள் திருடுகின்றன –
    நிர்வாண சோதனை
    இதுவை நடந்ததில்லை.

    சுடுகாட்டுக் கொட்டகையிலும்
    ஸ்பெக்ற்றம் ஊழலிலும்
    அரசு நிலத் திருட்டிலும்
    திருடியவர்களை
    யாரும் நிர்வாணப்படுத்தியதில்லை.

    திருடாத குற்றத்துக்கு
    திவ்யாவின் நிர்வாணம்
    மரணத்தைக் கொடுத்தது –
    அது திவ்யாவின் தன்மானத் தீர்ப்பு.

    பகல் வெளிச்சத்தில்
    பலகோடி மக்களுக்கு மத்தியில்
    கூச்சல் போட்டுத் திருடிய
    திருட்டுக் கும்பல் முகத்தில்
    புன் முறுவல் – ஏனென்றால்
    சி பி ஐ விசாரணையும்
    காவிக் கட்டிட கோர்ட்டுத் தீர்ப்பும்
    இவர்களை நிர்வாணப் படுத்தாது என்பது
    அவர்களுக்கு
    திருடுவதற்கு முன்பே தெரியும்.
    இதுதான் ஆளும் வர்கத்தின்
    மனசாட்சித் தீர்ப்பு..

    மக்கள் தீர்ப்பு மட்டுமே
    உண்மையான திருடர்களை
    நிர்வாணமாக்கும்!

  7. தாங்க முடியவில்லை வினவு, கண்ணீரில் திரை மறைக்கிறது….ஆனால், இதை இப்படியே விடுவதும் திவ்யாவுக்கான நீதியாக ஆகாது!

  8. இதை எவ்வளவு அடக்கி வாசித்தன ஊடகங்களும் தினசரிகளும். சரிகா ஷா போன்று சேட்டுப்பெண்களுக்கு நடந்தால் மட்டுமே தானும் பதறி நம்மையும் பதற வைக்கிறார்கள்.இதில் நிச்சயம் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது.தொண்ணூறு சதம் அடித்தட்டு மக்கள் உள்ள சமூகத்தில் இந்த அளவுதானா எதிர்வினை?

    • இங்கு எப்படி செய்திகளை பரப்ப முடியும், அனைத்து மீடியா களும் அரசியல்வாதியிடம் அல்லவே இருக்கிறது , அவர்களுக்கு விளம்பரங்கள் போடவே நேரம் இல்ல அப்புறம் எப்படி இதுக்கு லாம் நேரம் இருக்கும்

  9. //அன்றாடங் காய்ச்சிகள் ஆனாலும் சோற்றுக்கு மீதி எதுவும் இல்லை. வருகிற வருமானத்தில் வயிற்றைக் கழுவி வாழும் திவ்யாவின் தாய் சாந்திக்கு பெண் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை//

    என்ன கொடுமை..?.. ஏழைப்பிள்ளைகள் , வயிற்றுக்கு கூட இல்லாமல் படிக்க வந்தால் அவமானப்படுத்துவீங்களா?…யார் கொடுத்த துணிவு ?.. கேட்க ஆளில்லை என்ற நினைப்பா?..

    அவமானப்படுத்தியவங்களை அதே முறையில் விசாரிக்கலாமா?..

    கொதிக்கிறது…

    என் பதிவிலும் கண்டனங்கள் போட்டேன் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்..

    http://punnagaithesam.blogspot.com/2011/02/blog-post_04.html

  10. என்ன சொல்வது. என்ன எழுதுவது…………….. போன உயிர்க்கு யார் பொறுப்பு.

    மனம் வலிக்கிறது.

    பொறுக்கிதனமான பேராசிரியைகள், பணக்கார திமிரில் என் சகோதரியை ஏளனம் செய்த தறிகெட்ட சக மாணவிகள், இவற்றை பற்றி பெரிதாய் கவலை படாத ஊடகங்கள், அந்த கயவர்களை காக்க துணிந்த உயிர் காக்கும் மருத்துவ மாமுனிகள், நடவடிக்கை எடுப்பதா அல்லது சக போலீஸ்காரன் பொண்டாட்டிக்காக மூடி மழுப்புவதா என குழம்பி கொண்டிருக்கும் காவல்துறையை சொல்வதா.

    இந்த வெட்கங்கெட்ட சமூகம் உன்னையும் நீ சந்தித்த வேதனயையம் நாளை மறுத்து போகும் தங்கச்சி.

    இன்னும் எத்தனை திவ்யாக்களை இந்த வெட்கங்கெட்ட சமுதாயம் பலி வாங்குமோ…………. இறைவா

  11. அவள் காலேஜ் போனா ஆனா அங்க இவளைப் பார்த்த பிரண்சுங்கோ சிரிச்சிருக்காங்க … திருடி வர்றா பாருணு எம் பொண்ணைப் பார்த்து புள்ளைங்க சிரிச்சிருக்குப்பா…//

    இதுங்களையும் தூக்கி உள்ளே போட்டா என்ன?..

    சாடிஸ்டுகள்… :((((((.. கொலைகாரிகள்..

  12. நீங்கல்லாம் எதுக்குடா புள்ளைங்களை படிக்க அனுப்புறீங்க என்று நேரடியாக கேட்கிறார்கள்.இந்த மக்களும் அதை கேட்பதாக தெரியவில்லை பாவம் கலைகல்லூரிக்கே அவ்வளவு தொகை தேவைப்பட்டால்,தொழிற்கல்வி எல்லாம்?அடங்கொய்யால மாவோயிஸ்டுகள் ஏன் உருவாகிறார்கள் என்று மட்டும் புரிகிறது, அதையும் இங்கே டாஸ்மாக் தடுக்கிறது.

  13. கண் கலங்குகிறது தோழர்.. அனால் எத்தனை நாள் தான் இப்படி கண் கலந்கிக்கொண்டே மட்டும் இருப்பது என்று நினைக்கும் போது நானும் ஒரு குற்றவாழி போல் உணர்கிறேன்.. இது சமந்தமாக எதுவும் போராட்டம் நீங்கள் மேற்கொள்வதாக இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும். நானும் பங்கேற்கிறேன்

  14. பெண் காவலர்கள் கூட செய்ய தயங்கும் கொடுமையை கல்லூரி பெண் பேராசிரியர்கள் செய்திருப்பது பெண் ஆசிரியர் அனைவருக்குமே பெருத்த அவமானம், அசிங்கம். ஏழைகள் என்றால் கிள்ளுகீரையா அவர்களுக்கு?

    வக்கிரம், குரூரம்..

    எத்தனை கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் இருக்கின்றன? எவை ஒன்றாவது இவர்களை கண்டிக்குமா? இவர்களை எதிர்த்து குரல் கொடுக்குமா?

    படித்த நடுத்தர மேல்தட்டு பெண்களுக்கு தானே பெண் உரிமை சங்கங்கள், கழகங்கள் எல்லாம் குரல் கொடுக்கும் ?

    ஏழை பெண்ணுக்கு யார் கொடுப்பார்?

    • கண்டிப்பாக கம்யுநிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் வராது – இந்தப் பிரச்சினையில் தேவையான பப்ளிசிட்டி கிடைத்தவுடன் நழுவி விடுவார்கள். அடுத்ததாக எந்தப் பிரச்சினையில் ஆதாயம் தேடலாம் என்று போவார்கள்.

      நாம் தான் பார்க்கப்போகிறோமே?

      • Rest in peace divya….
        அம்பிகா மரணம் , வினவு கோஷ்டி குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டதை தவிர என்ன செய்தீர்கள் ????
        அப்பாவி பெண்ணின் மரணத்தில் அரசியல் செய்ய உங்கள்ளுக்கு வெக்கமாக இல்லையா ????

    • அதுக்கு காரணம் ஒரு பேராசிரியை ன் நாயகன் காவல் துறை அதிகாரி என்பதால் என நான் நினைக்கிறேன் , அவ போச்சு ல தீ பந்தம் கொண்டு சொருகின தெரியும்

  15. ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட அத்தனை ஊழல்களிலும் லடசக்கணக்கான கோடிகளை திருடியிருப்பது பணக்காரக் கும்பல்கள் தான் என அம்பலப்பட்ட பின்பும், ஏழைதான் திருடுவான் என திமிர்த்தனம் பேசும் பொதுப்புத்தி, தன் திருட்டை மறைக்க அடுத்தவனைச் சுட்டும் அதிகார வர்க்க மனோநிலையிலிருந்து தான் பிறப்பெடுக்கிறது. தங்களால் ஒரு உயிர் போயிருக்கிறது என்பதை அறிந்த பின்னும் இல்லாத நெஞ்சுவலிக்காக மருத்துவனையில் படுத்திருக்கிறதே இந்த அதிகாரவர்க்க திமிர்த்தனம் தான் ஏழை மாணவியை துகிலுறியவும் வைத்திருக்கிறது.

    • // ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட அத்தனை ஊழல்களிலும் லடசக்கணக்கான கோடிகளை திருடியிருப்பது பணக்காரக் கும்பல்கள் தான் என அம்பலப்பட்ட பின்பும், ஏழைதான் திருடுவான் என திமிர்த்தனம் பேசும் பொதுப்புத்தி, தன் திருட்டை மறைக்க அடுத்தவனைச் சுட்டும் அதிகார வர்க்க மனோநிலையிலிருந்து தான் பிறப்பெடுக்கிறது. தங்களால் ஒரு உயிர் போயிருக்கிறது என்பதை அறிந்த பின்னும் இல்லாத நெஞ்சுவலிக்காக மருத்துவனையில் படுத்திருக்கிறதே இந்த அதிகாரவர்க்க திமிர்த்தனம் தான் ஏழை மாணவியை துகிலுறியவும் வைத்திருக்கிறது. //

      ஏழைகள் என்றால் கிள்ளுகீரையா அவர்களுக்கு?

    • எப்போதுமே ஏழை யாய் இருந்து படி படியாய் உழைச்சு முன்னும்மு வந்தவன் பண பேய் பிடிச்சு இருக்க மாட்டன் , திடீர் பணக்காரன் தான் இப்டி எல்லாத்துக்கும் விலை பேசுவான் அவனது தாய் கொடுத்த தாய் பாலுக்கும் சேர்த்து

  16. i have no courage to read this article. our Tamil society now changed as a criminal society. some powerful party people never care the Law and they do whatever they want and loot the people money. most of the people are terrified and find no way to check this criminals. even the police has no faith in the society, enforcement of law,courts
    ability they take the gun and shoot the most dreaded person in encounters,not to save the people, but to save themselves.every person in Tamil Nadu thinks they can do anything with a hope the Law have no power to punish them. to day one party glorify a person who looted the government money in lakhs of cores.the whole world is shocked to see this with unbelievable eyes.
    Here four ladies teacher mortally wounded the poor girl, the girl then committed suicide.the poor girl go the burial ground , the four teacher go to hospital to save themselves. it is only happen in Tamil Nadu. why? what ha pend to Tamil Nadu?

  17. “our Tamil society now changed as a criminal society.” இந்த வரிகளுக்கு ஆழமான பொருள் உண்டு.

    திவ்யாவை நிர்வாணச் சோதனை செய்த ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி ஆகியோர் பணக்காரர்களாக இருக்க முடியாது. ஏன் என்றால் ஒரு சாதாரண தனியார் கலைக்கல்லூரியில் ஆசிரியர்களாகப் பண்புரிவோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். ஏழைகளின் வாழ்க்கையை அறியாதவர்களாக இருக்கமுடியாது. பிறகு எப்படி இவர்கள் இப்பாதகச் செயலைச் செய்தார்கள்?

    இந்தக் கேள்விக்கு பதில்தான் “our Tamil society now changed as a criminal society.” என்கிற வரிகள். சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் மக்களிடையே போட்டி-பொறாமைகளை வளர்த்து வருகின்றன. தனக்குச் சமமாக உள்ளவர்கள் அல்லது அதற்குக் கீழே உள்ளவர்கள் சற்றே முன்னேறுவதற்கு முயற்சி செய்தாலோ அல்லது முன்னேறி விட்டாலோ பொறாமை காழ்ப்புணர்ச்சியாக மாறி எதிர் வினையாற்றும் மன நிலைக்கு மாறுகிறார்கள். இத்தகைய மனநிலையில் பலர் இருக்கவே செய்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது இவர்கள் மேற்கண்ட கொடியச் செயலை எவ்வித தயக்கமும் இன்றி செய்யத் துணிகிறார்கள். கொலை பாதகச் செயலைச் செய்வதற்கும் தயங்குவதில்லை.

    ஆசிரியர் அடித்து மாணவியின் கண் பறிபோனது, கை உடைந்தது போன்ற பல சம்பவங்கள் நடந்த வண்ணம்தான் உள்ளன. மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளைக்கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. சமீபத்தில் கிருஷ்ணா கல்லூரி நிர்வாகம் பசுமாடுகளை நஞ்சு வைத்துப் படுகொலை செய்தது. (http://hooraan.blogspot.com/2010/12/blog-post_24.html).

    போதாக் குறைக்கு சமூகப் பிரச்சனைகளை அலசுகிறேன் என்ற போர்வையில் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மக்களை கல் நெஞ்சக்காரர்களாக மாற்றும் வேலையை போட்டிப் போட்டுக்கொண்டு செய்து வருகின்றன.

    இது ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    சமூகப் பிரச்சனை என்று சொல்லி ஜெயலெட்சுமி, விஜயலெட்சுமி, சுதா, செல்வி போன்ற கொடியவர்களை சும்மா விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் சமூகத்தில் எங்கும் பரவியிருக்கும் இக்கொடிய குற்றமனநிலையை (criminal mind) மாற்றும் பணியைச் செய்யும் கடமையும் நமக்குள்ளது.

  18. படிக்கப்படிக்க ரத்தம் கொதிக்கிறது..

    நேற்று நோக்கியா-பாக்ஸ்கான் தொழிற்சாலையில் கொல்லப்பட்ட அம்பிகா – இன்று திவ்யா… கண்முன்னே நிகழும் இந்தக் கொடூரக் கொலைகள் ஏற்படுத்தும் உளைச்சலைவிட இந்தக் கையறு நிலை ஏற்படுத்தும் உளைச்சலே மனதைக் குத்திக்கிழிக்கிறது.

    இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா என்று எகனை பேசும் வெண்ணைகளை முகத்தோடு சேர்த்து தரையில் தேய்த்து விடலாம் என்று தோன்றுகிறது. அவர்களால் திவ்யாவின் உயிரைத் திருப்பிக் கொடுக்க முடியுமா? இந்தத் தொழிற்சாலைகளைப் பாருங்கள், செல்போன்கள் இத்தனை சிப்பா கிடைக்குமா சொல்லுங்க என்று பீத்திக் கொள்பவர்கள் அம்பிகாவின் உயிரைத் திருப்பிக் கொடுத்து விட முடியுமா?

    உலகமயத்தின் விலை அம்பிகா என்றால் பார்ப்பனியத்தின் விலை திவ்யா. சூத்திரன் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது பழைய மனுநீதி – இன்றைய நவீன மனுநீதியோ உடைகளைக் களைந்து அவமானப்படுத்தி கயிற்றில் தொங்க விடுகிறது.

    • ///உலகமயத்தின் விலை அம்பிகா என்றால் பார்ப்பனியத்தின் விலை திவ்யா. சூத்திரன் வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது பழைய மனுநீதி – இன்றைய நவீன மனுநீதியோ உடைகளைக் களைந்து அவமானப்படுத்தி கயிற்றில் தொங்க விடுகிறது///

      அவசரபடாதீங்க. அந்த நான்கு lecturersகளும் என்ன சாதி என்று இன்னும் தெரியவில்லை. ’சூத்திரர்களாக’ இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவோ மனுநீத பற்றி இங்கு பேச இன்னும் முகாந்திரம் இல்லை.

      • ////அவசரபடாதீங்க. அந்த நான்கு lecturersகளும் என்ன சாதி என்று இன்னும் தெரியவில்லை. ’சூத்திரர்களாக’ இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவோ மனுநீத பற்றி இங்கு பேச இன்னும் முகாந்திரம் இல்லை.//////

        சூத்திரன் முன்னேறி விட்டால் பாப்பான் பிட்டத்தை நக்க சென்று விடுகிறான் . அதுக்கப்புறம் இந்த நவீன பிராமணன்களை வைத்து பாப்பான் எல்லா வேலையும் கச்சிதமாக முடித்து விடுகிறான் . அதாங்க பெரியாருடைய முயற்சியில் கிடைத்த சமூக விடுதலையை ஒரு பக்கத்தில் அனுபவித்து கொண்டே அவரை பற்றி இழித்துரைக்கும் அந்த முன்னால் சூத்திரன்கள் தான் இந்த நவீன பிராமணன்கள். ஆக பாப்பானுக்கு இன்னொரு அடியாள் படை உருவாகி விட்டது .

        ம்ம்ம்ம் பெரியாரின் தொண்டர்கள் காவி காம வெறியர்களின் கோவணத்தை அல்லவா தூக்கி சுமக்கிறார்கள்

        இங்கு பாப்பான்கள் என்று நான் குருப்பிடுவது சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை மதத்தின் பெயரால் திணித்து கொண்டிருக்கும் சமூக விபச்சாரிகளை

  19. காலம் காலமாகத் தொடரும் வன்முறைகள்.
    புரிந்துகொள்ளவதும், புரிந்துகொண்டு போராடச்செய்வதும் தமது கடமை.
    முதலாளித்துவம் கொள்ளும்!
    மூலதனம் மட்டுமல்ல. முதலாளித்துவ சிந்தனையும்தான்.

    • உங்கள் போலி மனிதாபிமானம் இதிலேயே வெளிப்பட்டுவிட்டது…நான்கு கல்நெஞ்சக்கார அரக்கிகள் செய்த அநியாயத்திற்கு மொத்த சமூகத்தையும் குறை சொல்வது பைத்தியக்காரத்தனம்.

      அப்புறம் ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கொன்ற எட்டுக் கோடி உயிர்களுக்கு உலகில் உள்ள எல்லா கம்யுனிஸ்ட் கட்சிக்காரர்களையும் தூக்கிலே போட வேண்டியிருக்கும் அல்லவா ?

      • தமிழ் வலது saree//

        உன்னுடைய கம்யுனிச எதிப்பை பணத்திமீர் பிடித்த முதலாளிகளின் எதிர்ப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
        ஏழைகளுக்கு பிரசனையே இந்த போலி ஜனநாயக ஆட்சிதான். இதுதான் இந்த சமுகத்தை கேடுகெட்ட சமுகமாக வைத்து இருக்கிறது.
        ஏழ்மையை கேலிக்கிண்டல் செய்து நாள் தோரும் ஒடிக்கிவருகிறது.பின்பு அதன் மீது குறைசொல்லாமல் யார் மீது குறைசொல்லவேண்டும்.நீங்கள் என்ன அதியமானுடைய தம்பியா? அப்படியே தெரியுதுங்க.

        • திவ்யாவின் தற்கொலையில் ஆதாயம் தேட முனையும் இடது sareeக்களே –

          என் கோபமே உங்கள் போலி பிரசாரத்தின் மேல், உங்கள் மூட நம்பிக்கைகள் மேல் தான்.

          ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று சொல்லியே உள்ளே வந்து எட்டுக் கோடி பேரை கொன்று குவித்த கம்யுநிஸ்ட் ஸ்டாலின், மாவோ, போல்போட் சரித்திரங்களை ஏன் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைக்கிறீர்கள் ? உயிர் எங்கும் உயிர் தானே ?

          ரஷ்யாவிலும் சைனாவிலும் எவ்வளவோ ஏழைகள் இறந்த போது எங்கே போயிற்று இந்த பதைபதைப்பு? ஒன்றாம் நம்பர் போலிகள்…

      • ஒரு தமிழ் வலதுசாரி,
        //நான்கு கல்நெஞ்சக்கார அரக்கிகள் செய்த அநியாயத்திற்கு மொத்த சமூகத்தையும் குறை சொல்வது பைத்தியக்காரத்தனம்.//
        இந்தக் கொடுஞ்செயலை இந்த நான்கு அரக்கிகள்தான் செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த அரக்கிகளுக்குரிய மனோபாவம் எங்கிருந்து வந்தது என்பதுதான் மையமான கேள்வி? இச்சமூகத்தை ஆளுகின்ற சித்தாந்தம்தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்? அவ்வளவு ஏன் இந்த அரக்கிகளுக்குரிய் மனோபாவம் இச்சமூகத்தில் இந்த நான்கு பேர் மட்டும்தானா? வலதுசாரி எந்த ஒரு விசயத்தையும் அவதூறுக் கண்ணோட்டத்தில் பார்ப்பதைவிட விமர்சன்க் கண்னோட்டத்தில் பாருங்கள்.

        • ஒரு திருட்டுக் குற்றம் நடந்தால் உடனே அதைச் செய்தவன் குற்றப்பரம்பரை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டது சென்ற நூற்றாண்டுப் பிரிட்டிஷ் காலப் பழக்கம். ஜமீன்தார்களும் நிலப்பிரபுக்களும் இதையே செய்து வந்தார்கள். திவ்யாவின் தற்கொலைக்கு காரணம் அவரைச் சுற்றியுள்ளவர்கள் கொண்டிருந்த குற்றம்சாட்டும் மனப்பான்மை – இது ஜமீந்தார் காலங்களின் அடையாளம், நம்மை விட்டு இன்னும் செல்லவில்லை. பரம்பரை அரசர்கள் மட்டுமே பிற மக்கள் முன்னேறுவதை வெறுத்தார்கள், bullying செய்தார்கள்.

          இதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும், தூங்குகிறாற்போல் நடிக்கிறீர்கள். சொல்லப்போனால், ஜமீந்தார்காலத்தில் எழைகளைப்பற்றி முன்முடிவுகள் கொண்டிருந்தார்கள், கம்யுநிசத்தில் வசதி படித்தவர்களைப் பற்றி முன்முடிவு கொண்டிருந்தார்கள் -இரண்டுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. கம்யுனிசம் வந்தால் ஏழை திவ்யாவிற்கு பதிலாக கொஞ்சம் வசதி படைத்த எவளோ ஒருத்தி இருப்பாள் – இரண்டுமே முன்முடிவுகளால் ஏற்படுபவை.

          முதலாளித்துவ ஜனநாயகத்தில் மட்டுமே இந்த முன்முடிவு கழிசடைகளுக்கு எதிரான நியாயங்களும் நீதிமன்றங்களும் உண்டு.

        • இங்கு படிக்கவும். என்னால் முடிந்த அளவு இந்த மனநிலை எவ்வாறு உருவாகிறது என்று எழுதியுள்ளேன்
          http://paraiyoasai.wordpress.com/10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/

      • ஒரு தமிழ் வலதுசாரி,
        ///ஒரு திருட்டுக் குற்றம் நடந்தால் உடனே அதைச் செய்தவன் குற்றப்பரம்பரை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று முன்முடிவு செய்துகொண்டது சென்ற நூற்றாண்டுப் பிரிட்டிஷ் காலப் பழக்கம்///
        நான் எழுப்பிய கேள்வி என்ன?
        “இந்த அரக்கிகளுக்குரிய மனோபாவம் எங்கிருந்து வந்தது என்பதுதான் மையமான கேள்வி? இச்சமூகத்தை ஆளுகின்ற சித்தாந்தம்தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்? அவ்வளவு ஏன் இந்த அரக்கிகளுக்குரிய் மனோபாவம் இச்சமூகத்தில் இந்த நான்கு பேர் மட்டும்தானா?”
        இதில் நான் அந்த அரக்கிகளின் பரம்பரையைப் பற்றி பேசவேயில்லையே? நீங்கள்தான் ஒரு முன்முடிவைக் கட்டிக்கொண்டு பேசுகிறீர்கள்.
        ///முதலாளித்துவ ஜனநாயகத்தில் மட்டுமே இந்த முன்முடிவு கழிசடைகளுக்கு எதிரான நியாயங்களும் நீதிமன்றங்களும் உண்டு.///
        அப்படியே இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கிவிடுங்களேன் கொஞ்சம் புண்ணியமாய் போய்விடும்.

        • திரும்பவும் படித்துப் பாருங்கள். – நானும் அவர்கள் பரம்பரையைப் பற்றிப் பேசவே இல்லையே ! இப்படி திரித்துப் பேசியே உங்கள் எல்லோருக்கும் பழக்கமாகிப் போய் விட்டது.

          நான் சொன்னது இதுதான் – “இவன்தான் திரூடியிருப்பான், அவன்தான் கொன்றிருப்பான்” என்று ஏழை மனிதரைப் பற்றிய முன்முடிவுகளோடு நீதியை அணுகுவது ஜமீந்தார்கால அணுகுமுறை. கம்யுநிசமும் அதை ரிவர்ஸ் வழியில் பின்பற்றுவதுவே. இரண்டையும் ஏறக்கட்டும் காலம் வந்துவிட்டது.

        • ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு சட்டத்தையும் நியாயத்தையும் காக்கும் கடமை உண்டு. அந்த ஆட்சி அப்படி செய்யத் தவறினால் அதை தூக்கிக் கடாசி வேறு அரசாங்கத்தை அமைக்கும் சக்தியும் மக்களுக்கு உண்டு. இந்திரா காந்தி, செயலலிதா என்று ஏகப்பட்ட உதாரணங்கள். (கம்யுனிச ஆட்சியில் ஸ்டாலின் மாவோ போன்ற ரௌடிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்த உரிமையும் சக்தியும் கிடையாது. சனியன்கள் தாங்களாக செத்துப் போனால் தான் உண்டு).

          உழைப்பை மூலதனமாகக் கொண்ட முதலாளித்துவ சமூகத்தில் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். மக்கள் இந்த கருத்தை விரும்புவதாலேயே கம்யுனிசம் மீண்டும் மீண்டும் வெறுக்கப்பட்டு தேர்தல்களில் தோற்கிறது.

          நம் நாட்டில் உண்மையான முதலாளித்துவ ஜனநாயகம் அமைய தடையாக இருப்பது இரு விஷயங்கள் – மிச்சமிருக்கும் ஜமீந்தார்கால மனப்பான்மை, ஆதிக்க சாதிகளின் மனதில் ஆழ ஊறியிருக்கும் வெறுப்பு.

          திவ்யாவைப் போன்ற குழந்தைகளுக்கு நாம் ஊட்ட வேண்டியது உழைத்து முன்னேற வேண்டிய தன்னம்பிக்கை தான். ஆனால் கம்யுநிசமோ வெறுப்பையும் வயிற்றேரிச்சலையுமே வளர்க்கிறது.

      • ஒரு தமிழ் வலதுசாரி,
        ///வலதுசாரி எந்த ஒரு விசயத்தையும் அவதூறுக் கண்ணோட்டத்தில் பார்ப்பதைவிட விமர்சன்க் கண்னோட்டத்தில் பாருங்கள்.///
        இவை நான் உங்களிடன் கேட்டுக்கொண்டவைதான். ஆனால் இதை ஒரு வலதுசாரியிடம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்பதை கவனத்தில்கொள்ள தவறிவிட்டேன். அவதூறு என்பது வலதுசாரிகளின் குணாம்சம். குதர்க்கம் என்பது அவர்களின் சித்தாந்தம். பூனைக்கும், எலிக்கும் இடையிலான உறவு என்ன வகைப்பட்டதோ, அதுதாங்க மாணவி திவ்யாவுக்கும், இந்த சமூகத்துக்கும் இடையிலான உறவு. இந்தப் பின்னணியிலிருந்துதாங்க இந்தப் படுகொலையை பார்க்க வேண்டும் என்று நாம் சொன்னால், உடனே, வலதுசாரியோ அதெல்லாம் இல்லை. முதலாளித்துவ சமூக அமைப்பில் பூனையின் நல்னும், எலியின் நலனும் வேறு வேறு அல்ல. ஆகையால் இவை இரண்டிற்கும் உள்ள முரண்பாடு என்பதே இங்கு ஒழித்துக்கட்டப்பட்ட ஒன்று என்று குதர்க்கம் பேசுவார். இது என்னுடைய அனுமானம் அல்ல. அவர் இட்ட பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும். ஆகையால் எந்த ஒரு சமூகப் பிரச்சினைக்கும அக, புற காரணிகளைக்கொண்டு தீர்வு காண்பது என்ற கண்ணோட்டமில்லாமல் எதற்கெடுத்தாலும் ‘கம்யூனிசம் ஒழிக, கம்யூனிசம் ஒழிக’ என்று கீ கொடுத்த ரோபோ மாதிரி பேசுபவரிடம் எப்படி ஒரு ஆரோக்கியமான விவாதததை நடத்த முடுயும்?

        • திவ்யாவின் தற்கொலைக்கு சமூக புற அக காரணிகளை நான் என் தரப்பிலிருந்து தெளிவாக விளக்கி விட்டேன் – விவாதிப்பதும் விவதிக்காததும் உங்கள் விருப்பம்.

          நீங்கள் ஏன் விவாதிக்கவே மறுக்கிறீர்கள் என்பதைத் தான் நான் சுட்டிக் காட்டுகிறேன் – மாற்றுக் கருத்து என்ற விஷயத்தையே உங்கள் சித்தாந்தம் ஏற்பதில்லை.

  20. Whether the teachers are rich or poor, what they motivated to commit the atrocity. One of them is wife of the police officer. Govt should take a strong action by filing an FIR by changing the present one from suicide to murder. Let the families of the four teachers suffer then only others will get some fear in their public dealing.

  21. ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தன் அன்னையின் முன்னால் கூட நிர்வாணமாக வரமாட்டாள். மெத்தப் படித்த அந்த நான்கு ஆசிரியர்களுக்கு இதுகூடவா தெரியாது?

  22. ஏழைப்பெண் என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாமா?
    படித்து முன்னேற துடித்த இப்பெண்ணின் சாவிற்கு யார் பொறுப்பு?என்ன விலை கொடுத்தாலும் அதற்கு ஈடேது?கண்ணீருடன்.

  23. இச்செய்தியை நானும் சில இணையதளங்கள் ஊடாக படித்தேன் ! திவ்யா கேட்கும் அதே கேள்வியை எனக்கும் கேட்க தோன்றுகிறது ! எதற்கு அவளை மட்டும் நிர்வாணப்படுத்தி சோதனை.

    சென்னையில் நீடித்திருக்கும் சாதிக் கொடுமையின் ஒரு சிறு துளியே திவ்யா போன்ற பாரத்த்தின் தூண்கள் சாய்ந்துவிட்டது. ஆதிக்கச் சாதிகளின் இந்தக் கொடுமை, பேராசியர்களின் பாலியல் வங்கொடுமைகள் என பலவும் பல நேரங்களில் கமுக்கமாகிப் போய்விடுகிறது. இதனை பாதிக்கப்பட்டவரோ ! பக்கத்தில் இருப்பவரோ ! யாரும் எடுத்துரைத்து போராடவும் முனைவதில்லை. இருப்பினும் ஆல்காட் கடற்கரைக் கிராம வாசிகள் கொஞ்சமாவது போராடினார்கள். அவர்களுக்கு துணையாக யாதொன்றையும் யாம் செய்ய முடியாமல் விழி பிதிங்கி நிற்கின்றோம்.

    கல்லூரி மாணவர்களோ ! சம்பந்தப் பட்டவர்களோ ! இந்த வன்செயலை செய்த ஆசிரியர்களின் புகைப்படங்களையும் பெயரை இணையத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்யாத பெண்னே வெட்கி மரணிக்கும் போது , தவறு செய்தோர் மட்டும் முகம் மூடிக் கொண்டு திரிய வேண்டுமோ !!!

    அசிங்கம் அசிங்கம் அந்தக் கல்லூரிக்கே இது அசிங்கள் ! இதனை ஒரு issue ஆக்கக் கூட முடியாத இத்தனை இத்தனை சென்னை ஊடகங்கள் பேசமால் நேரடையாக மாமா வேலைப் பார்க்கலாம் !

    • இதுக்கு மேலேயா மாமா வேலை பார்க்க வேண்டும் ஊடகங்கள், பல வருடமாக அனைத்தும் அதை தானே செய்கின்றன.. நயன்தாரா நாளைக்கு காலை எழுந்து பல்விளக்கினால் அதை தலைப்பு செய்தியில் போடுவார்கள்..

  24. தாங்கவே முடியவில்லை. திவ்யாக்களுக்கு எதிரான இந்த வன்கொடுமைகளுக்கு முடிவே இல்லையா?

    அந்த நான்கு அராஜக ஆசிரியைகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    நாலு பேருக்கும் ஒண்ணுபோல நெஞ்சு வலியா? என்ன ஆட்டம் போடுறாங்க.

  25. Did they find out the real culprit or the cause of missing money? Was it proven that Divya stole the money? No mention about this in the article! Why should the other students laugh at her when she went to her college the next day?

    I feel that the teachers should have superficially checked everyone in the same manner. Not partially as they did for Divya! Just because Divya is from a poor family, she should not be considered as the primary culprit. For further searching, they should have informed magalir police.

  26. Dear Vinavu,
    This incident is the tears of the heart . Without my knowledge my eyes were filled with ……
    I am shocked .. stressed .. its pain in the heart…
    I am not having any words..only too much pain…really its hurting to the core.its difficult to sleep tonight.
    regards
    rv

  27. முதல் தலைமுறையாக படிக்கவந்து முடிஞ்சுபோச்சு எல்லாம்!. ஊடகங்கள் வழக்கம்போல இதை கண்டுகொள்ளாது, வெள்ளைத்தோல் வேணும் பிணங்களுக்கும் ஊடகங்கள் கண்டுகொள்ள. ஏழைகள் எனில் ‘அவர்களை’ப்போலவே மானமில்லாதவர்களாக எண்ணும் மனப்போக்கு. ஒரு அனுராதாவின் கவணக்குறைவு அப்பாவியின் உயிர்பறித்துவிட்டது.

    சில பெண்கள் கல்லூரிகளில், ஆசிரியைகள் பெண்களை கேலி செய்வது, மார்க் எடுக்கவில்லையெனில் திட்டுவது எல்லாம், லேபர் வார்டில் அழும் பெண்களைப்பார்த்து அங்கிருக்கும் நர்ஸ்கள் அடிக்கும் கமெண்ட்டுகளை ஒத்தது!. குறைந்தபட்சம் வெளியில் சொல்லக்கூடியதென்றால், “நீயெல்லாம் படிக்கலைன்னு யாரு அழுதா, கல்யாணத்தபண்ணிட்டு போக‌ வேண்டியதுதானே?” பார்ப்பதற்கு எதிர்த்து பேசிவிடுவோம் என்பதுபோல் தெரிந்தால் மட்டுமே இவர்களிடம் இருந்து தப்பமுடியும்.

    ஒரு இடத்திலாவது கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் இது குறையும். டிவிக்களால் எதையும் மக்கள் கண்டுகொல்லவதில்லை.

  28. ஏன் இந்த விவகரந்தில் கல்லூரி மாணவர்கள் strike செய்யவில்லை? தமிழ் நாடு முழுவதும் strike செய்யவேண்டாமா?

  29. கண்கள் குளமாகிவிட்டது.

    மக்களுக்கெதிரான இந்த சமூக அமைப்பை தகர்த்து புதிய சமூகத்தை படைக்கும் வேலையை விரைவு படுத்த வேண்டிய அவசியத்தை தலையில் கொட்டுகிறது.